கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

'வடு' - வீழ்ச்சி': பகிர்வுக்குறிப்புகள்

Monday, July 30, 2007

-இரண்டு புதினங்களை முன்வைத்து-

நாம் இன்று மிக மோசமான அரசியல் சூழ்நிலைகளுக்குள் சிக்கியிருக்கின்றோம். சென்ற நூற்றாண்டில் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கு நம்பிக்கை தந்த புரட்சிகள் கூட இந்த நூற்றாண்டில் ஏகாதிபத்தியங்களின் உலகமயமாக்கங்களால் பொடிப்பொடியாக தகர்க்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் காலங்காலமாய் இருந்துவரும் ஒடுக்கப்பட்டவர்களின் துயரமோ இன்னும் தனது எல்லைகளை விரிவுபடுத்தியபடியிருக்கின்றது. நம்பிக்கை தரும் ஒளிக்கீற்று எதுவும் அண்மையில் தென்படாதபோதும் தமது வாழ்க்கையை ஒடுக்கப்பட்டவர்கள் பதிவுசெய்துகொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான பதிவுகளில் ஒளித்து வைக்கப்படும் தீக்குச்சியளவு வெடிமருந்திலிருந்து தமது அடுத்த சந்ததி பெரும் ஒளிப்பந்தங்களை ஏந்திக்கொண்டு தமது சந்ததிகளை எல்லாவிதமான ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுபடச்செய்வார்கள் என்ற நம்பிக்கையை தமது எழுத்துக்களில் புதைத்துவைக்கின்றார்கள். அவ்வாறு மேலாதிக்கச் சாதிகளால் ஒடுக்கப்படும் ஒரு தலித்தின் சுயசரிதையை கே. ஏ.குணசேகரனின் வடுவும், காலனித்துவத்தால் ஒடுக்கப்படும் மக்கள் கூட்டத்தின் உட்கட்ட வாழ்வியலை சினுவா ஆச்சுபேயின் வீழ்ச்சியும் (No Longer at Ease) வாசகர்களுக்கு விரித்து வைக்கின்றது.

2.
கே.ஏ.குணசேகரனின் வடு ஒரு சுயசரிதை நாவல். மராட்டி, கன்னடம் போன்றவற்றில் மிக வீரியமாய் பதிவுசெய்யப்பட்ட தலித் சுயசரிதை நாவல்கள் போன்றல்லாது மிகக்குறைவாகவே தமிழில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப் புதினத்தில் கே.ஏ.குணசேகரனின் பதினம்வயதுவரை மட்டுமே எழுதப்பட்டுள்ளது. அவர் இதில், 'இடதுசாரி இயக்கங்களோடு என்னை ஈடுபடுத்திக்கொண்டு, கலைப்பயணம் மேற்கொண்ட காலம் தொட்டு இன்றுவரை என் வாழ்நாளில் நடந்த சம்பவங்களை இதில் இடம்பெறவில்லை' என்று முன்னுரையில் குறிப்பிடுகின்றார். அதையும் பதிவு செய்யும்போது இன்னும் வீரியமான தலித் ஒருவரின் வாழ்வு தொகுக்கப்படும் சாத்தியம் உண்டு. ஒரு சிறுவனாய் -அவர் பகுத்தறிந்து ஆராய முடியாத வயதிலேயே- எப்படி சாதிப்பேய் தனக்குள் புகுத்தப்படுகின்றது என்பதை வெகு நுட்பமாய் குணசேகரன் வடுவில் பதிவு செய்கின்றார். இதிலே குணசேகரனும் அவரது உறவினர்களும் ஆதிக்கசாதியால் அடிவாங்கிய சம்பவங்களையும், நிலத்தில் அவர்களின் காலில் விழுந்து கும்பிட்ட நிகழ்வுகளும் எண்ணிக்கையில் நீண்டவை. ஒவ்வொரு சம்பவங்களையும் குணசேகரன் விபரிக்கும்போது, இங்கேயும் அவர் அடிவாங்கிவிடுவாரோ அல்லது இவரது எதிர்ப்புக்காய் ஆதிக்கச்சாதியினரிடம் அவரது தாத்தா காலில் வீழ்ந்து கும்பிடப்போகின்றாரோ என்ற பதட்டம் ஒவ்வொருமுறையும் வாசிப்பவருக்கு வந்துகொண்டேயிருக்கும். தமது கிராமம் முஸ்லிம் சமூகத்தால் அதிகம் சூழப்பட்டதால் அவ்வளவு சாதியின் வீரியம் தெரியாமல் வளர்ந்திருந்தாலும் ஊரைவிட்டுபோகும்போது எப்படி சாதிப்பேய் தங்களை ஆட்டுவித்தது என்பதை குணசேகரன் வேதனையோடு பதிவுசெய்கின்றார். இன்னும் அவரது அண்ணா முறையான ஒருவரை அவரது தகப்பனும் சித்தப்பாவும் கஷ்டப்பட்டு படிக்கவைத்து வைத்தியராக ஆக்கும்போது, அவர் வேலைசெய்யும் நகரில் சிகிச்சை பெறும்போது மட்டும் ஒரளவு மதிப்புக்கொடுத்துவிட்டு ஊருக்கு வரும்போது அவ்வைத்தியரை ஒருமையில் அழைத்து நக்கலடித்து மதிப்புக்கொடுக்காத ஊரின் ஆதிக்கச்சாதியினர் பற்றிக்கூறும்போது, பொருளாதார ஏற்றத்தால்கூட இந்தச் சாதிப்பேய் அழிந்துவிடாது என்பது நமக்கு உறைக்கத்தான் செய்கின்றது. மேலும் தலித்துக்களின் குடியிருப்புக்களை நோக்கிச் செல்லும் பாதைகளைக்கூட் ஆதிக்கச் சாதிகள் எப்படி வழிமறித்து பயணிக்கவிடாது அழிச்சாட்சியம் செய்கின்றார்கள் என்பதைப் பார்க்கும்போது நமக்கு ஒடுக்குபவர்கள் மீது வெறுப்பு வராதிருந்தால் மனிதர்களாய் இருக்கமுடியாது. ஆசிரியப்பணியில் இருக்கும் இருவர் திருமணம் செய்து மாட்டுவண்டியில் வரும்போது கூட, கீழே இறங்கி நடந்துதான் தமது தெருக்களால் போகவேண்டும் என்று சண்டைக்குத் தயாராகும் ஆதிக்கசாதியின்ரைப் பார்க்கும்போது நாம் எந்த நூற்றாண்டில் வசித்துக்கொண்டிருக்கின்றோம் என்று யோசிக்கவேண்டியிருக்கின்றது. ஆதிக்கச் சாதியில் பிறந்த சிறுவர்கள் கூட வயது வந்த தலித்துக்களை பெயர் சொல்லி அழைப்பதும், ஒருமையில் அழைத்து நக்கலடிப்பதும் மிகச்சாதாரணமாய் இருக்கிறது.

ஒரு சம்பவத்தில், கதைசொல்லியை ஒரு ஆதிக்கச்சாதிப் பையன் வேண்டுமென்று அடித்துவிட்டு 'பறப்பயலே' என்று திட்டிவிட்டு ஓடிவிடுகின்றான். வந்த கோபத்தில் திருப்ப அவனைத் துரத்திச்சென்று ஆதிக்கச்சாதி பையனின் வீட்டடியில் வைத்து கதைசொல்லி திருப்பி அடித்துவிடுகின்றான். இப்படியொரு சம்பவம் நடந்தால் ஆதிககச்சாதிப்ப்பேய்கள் சும்மாயிருக்குமா?

'சாதி தெரியாம வந்து வூட்டுக்குள்ள நொழைச்சிருக்கான்னா அந்தப் பயலுக்கு என்ன திமிரு இருக்கும். எங்க? அவனைக் கையையும் காலையும் கட்டித் தூக்கிட்டுப் போகணும்'ன்னு சத்தம் போட்டாங்க. எனக்கு திக் திக்குன்னு இருந்திச்சு. காலனி ஆளுகளும் வாசல் முன்னாடிக் கூட்டமாக் கூடிட்டாங்க. அப்பாடா ஒருவழியா அமைதியாக திருப்பிப் போனாங்க. அவன் அடிச்சதப் பத்தியாரும் பெரிசாப் பேசல. சாதி தெரியாம தெருவுக்குள்ள பறையன் போனதும் வூடு நொழைஞ்சதையும்தான் எல்லோரும் பெருசாகப் பேசினாக' (ப 52) என்கின்றார்.

இதேமாதிரி இன்னொரு இடத்தில், கதைசொல்லியின் வீட்டில் இருந்த மரஞ்செடிகளிலிருந்து 'பூவையும் பிஞ்சையும் இலையோட ஏன் அத்துபோடுற?' என்று ஆதிக்கச்சாதிப்பையனிடம் திரும்பிக் கேட்கும்போது அவன் கதைசொல்லியை அறைந்துவிட்டு ஓடிப்போய் நாலைஞ்சு பெரிய ஆட்களோடு திரும்பி வருகின்றான். நிலைமை விபரீதமாய்ப் போவதைக் கண்ட கதைசொல்லியின் தாத்தா, 'அவங்களைக் கும்பிட்டு, 'அய்யா! அய்யா! டவுன்ல இருந்து வந்த புள்ள, அதுக்கு நம்ம ஊரு வெவரம்லாம் புரியாது, தெரியாதுங்க.மன்னிச்சு விட்டுங்க அய்யா. அய்யா'ன்னு நெடுஞ்சாண்கெடையா விழுந்து கும்பிட்டாரு'(ப 80).

இப்படித்தான் பல சம்பவங்கள் இறுதியில் எதுவுமே செய்யமுடியாது அடிபணிவதோடு போய்விடுகின்றது. சிறுவர்களின் வயதிலே இப்படியான சாதிக்கொடுமைகள் அடையாளப்படுத்தப்படும்போது இப்படி வளர்கின்ற சிறுவர்கள் பின்னாட்களில் என்னவாறு இருப்பார்கள் நாம் கட்டங்கட்டி விபரிக்கத்தேவையில்லை. நகரங்களுக்கு நகர்வதுதான் ஒரளவு சாதியின் கொடுமையைக் குறைக்கும் என்றும் தனது அனுபவத்தினூடு குணசேகரன் குறிப்பிடவும் தவறவில்லை (பெரியாரும் இதை வலியுறுத்துகின்றார்). ஆனால் இவ்வாறான முடிவு தற்காலிக முடிவாய் இருக்குமே தவிர ஒரு நிரந்தரமான தீர்வாய் இருக்காது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவும் வேண்டும். அதேசமயம் நாட்டார் தெய்வங்களை இந்துத்துவத்திற்கு எதிராய் முன்வைக்கும் அவசியம் இருப்பினும், நாட்டார் தெய்வ வழிபாடுகள் கூட இன்னொருவிதத்தில் சாதியைக் கட்டிக்காத்துக்கொண்டிருக்கும் அபாயம் உள்ளதென்ற நுண்ணரசியலையும் நான் விளங்கிக் கொள்ளவேண்டும். சாதியின் நுண்ணரசியலை வெவ்வேறு தத்துவங்கள்/அரசியல் படிப்புகள் மூலம் நாம் விளங்கிக்கொள்ள முடியும் என்றாலும், நம்மிலிருந்து நாம் சாதியின் கூறுகளை விடுபடச்செய்வதென்பது நம் ஒவ்வொருத்தரின் அகத்திலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். ஒவ்வொரு சிறு சிறுசெயல்களிலிருந்தும் சாதிய நீக்கம் செய்யவேண்டியிருக்கின்றது. ஆனால் யதார்த்தமோ (புலம்பெயர்சூழலில்கூட) ஜீன்களிலிருந்து கடத்தப்படுவதைப்போல, பெற்றோர் உறவுகளிடமிருந்து இங்கே பிறக்கும் பிள்ளைகளிடம் கூட சாதி அட்சரம் தவறாது பரப்பப்பட்டுக்கொண்டிருப்பதுதான் அவலமானது; அபாயகரமானது.

3.
சினுவா ஆச்சுபேயின் வீழ்ச்சி (No Longer at Ease) நாவல் காலனியத்துவத்தை கேள்விக்குட்ப்படுத்துவதில் ஆரம்பித்து, பின் அடிமைப்பட்டிருக்கும் சமூகத்தின் உள்கட்டுமானத்தைக் குறித்து அதிகம் கவலைப்படுவதுடன் முடிகின்றது. ஒடுக்கப்படும் ஒரு சமூகம் தன்னை ஒடுக்கும் சமூகத்தை நோக்கி கேள்விகள் எழுப்புகின்ற அதேவேளை தன்னையும் சுயவிமர்சனம் செய்கின்ற இடத்தையும் எவரும் மறுத்துவிடமுடியாது. நைஜீரியாவின் ஒக்கொங்கோ சமூகத்தைச் சேர்ந்த ஓபியின் பார்வையிலேயே இந்த நாவல் கூறப்படுகின்றது. காலனித்துவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து இங்கிலாந்து சென்று படிப்பதற்காய் ஒபியை அந்தச்சமூக மக்கள் தங்கள் சொந்தப்பணத்தைச் சேர்ந்து அனுப்புகின்றார்கள். அங்கே படிப்பை முடித்துவரும் ஒபிக்கு மீண்டும் தனது சொந்தமக்களோடு ஒட்டமுடியாத அவதி மிக நுட்பமாய் இந்த நாவலில் பதிவு செய்யப்படுகின்றது (அமெரிக்கப்பூர்வீககுடிகளுக்கு தாங்கள் கல்வியறிவு புகட்டுகின்றோம் என்று வெள்ளையினத்தவர் அழைத்து படிப்பித்து விவிலியத்தையும் கொடுத்து -தமது பூர்வீகதொழிலோடும் மக்களோடும் ஒட்டமுடியாத- பூர்வீககுடிகளின் ஒரு புதிய தலைமுறையினர் தோன்றியதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்). இங்கிலாந்திலிருந்து திரும்பி வருகின்ற ஒபிக்கு பல்வேறு சிக்கல்கள் வருகின்றன. ஊழலும் இலஞ்சமும் நிரம்பியிருக்கும் நைஜீரியா அரச அமைப்போடு ஒத்துப்போகமுடியாத அவதி ஒபிக்கு வருகின்றது. மேலும் ஒபி தனது சமூகத்தை (சாதியை) சேராத ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைப் பெண்ணைக் காதலித்துக்கொண்டிருப்பதால் ஒபியின் சமூகம் அந்தக்காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. மேலும் தன்னை புரிந்துகொள்வார்கள் என்று நினைகின்ற அவரது பெற்றோர் கூட ஒபியின் காதலை நிராகரிக்கின்றார்கள்.

இப்படி ஒபியை தாங்கள் கஷ்டப்பட்டு பணஞ்சேகரித்து படிக்கவைத்ததால் தமது சமூகத்திற்கு பலவேறு வழிகளில் ஒபி உதவுவார் என்று அவரது சமூகம் அவரில் வைக்கும் நம்பிக்கையையும், ஒபி தானொரு நேர்மையாளராய் இருக்கும் விருப்புக்கேற்ப (இலஞ்சம் வாங்காத, சிபார்சு செய்யாத குணங்களால்) அதையும் செய்யமுடியாது போகின்றது. இறுதியில் ஒபியின் காதல் நிறைவேறாது, தனது காதலியின் வயிற்றில் வளரும் குழந்தையை -காதலின் முறிவால்- கருச்சிதைவு செய்யவேண்டிய நிலை ஒபிக்கு வருகின்றது. அதன் நீட்சியில், தாம் மிகவும் நேசிக்கும் தாய் இறந்தும்கூட -இன்னொரு நகரில் வேலை செய்யும் ஒபியால்- தாயின் இறுதிச்சடங்கைப் பார்க்க விரும்பதாதவளவுக்கு தனது கிராமத்தின் மீது அதிக வெறுப்பு வளர்கின்றது. தாய், காதலி எல்லோரும் போய்விட்டதால் தன்னைச் சுற்றிய இறுக்கமான் இழைகள் அகற்றபட்டு, தானொரு செட்டை கழட்டி மீண்டும் புத்துயிரான பாம்பு என ஒபி நினைக்கின்றார். ஆனால் இதுவரை இலஞ்சம் வாங்காத, புலமைப்பரிசில் சிபார்சுகடிதத்திற்கு வரும் பெண்களை கட்டிலுக்கு அழைக்காத ஒபி என்ற நேர்மையாளன், காலப்போக்கில் இல்லாமற் சிதைந்து போகின்றார். புலமைப்பரிசிலுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் பெண்களுக்கு சிபார்சுக்கடிதம் கொடுப்பதற்காய் அவர்களின் உடல்கள் ஒபிக்க காணிக்கை செய்யப்படுகின்றது. அவ்வாறு காணிக்கை செய்யமுடியாத ஆண்களிடம்/பெண்களிடமும் நிறைய இலஞ்சம் வாங்குகின்றார். எல்லாம் ஒருநாள் முடிவுக்கு வரவேண்டும் என்பதுபோல ஒருநாள் இலஞ்சம் வாங்கும்போது ஒபி கைதாகின்றார். எப்படியிருந்த ஒபி இப்படியாகப் போய்விட்டாரே என்று எல்லோரும் வியக்கும்படியாக் ஒபி ஜெயிலுக்குப் போவதுடன் புதினம் முடிகின்றது.

இந்நாவலை வாசித்து முடியும்போது, இந்தப் படிப்பு, வசதி போன்றவற்றால் என்ன பயன் என்ற வாழ்வின் அபத்தமான் கேள்வி நம்முன் வந்து விழுவதை நாம் தவிர்க்கமுடியாது. இன்றும் காலனித்துவம் முடிந்தபின்னும், காலனித்துவம் எப்படி மூன்றாம் உலக நாடுகளின் தனது கண்காணிப்பை வைத்திருக்கின்றது என்பதை உய்த்துணர அவ்வளவு கஷ்டப்படத்தேவையில்லை. ஒருகாலத்தில் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் இப்போது எப்படி உலகமயமாக்கங்கள் மூலம் ஒவ்வொரு சமூகத்தின் வாழ்வைச் சீரழிக்கின்றார்கள் என்பதைச் சொல்லத்தேவையில்லை. (வேண்டும் என்றால் John Perkins எழுதிய Confessions of an Economic Hit Man என்று 2004ல் வந்த நூலைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம்). இதனால்தான் நாமின்று NGO என்றும் இன்னபிற பெயர்களிலும் நம் நாடுகளிலும் வந்திறங்கும் 'கருணைபொங்கும்' அமைப்புக்கள் மீது சந்தேகப்படவேண்டியிருக்கின்றது. மிக நுட்பமாய் அவர்கள் நமது சமூகத்தில், கலாசாரத்தில் ஊடுருவும் புள்ளிகள் குறித்து அதிக கேள்விகள் எழுப்பவேண்டியுமிருக்கின்றது.

4.
வடு, ஒரு தலித்தின் பார்வையில் எழுதப்பட்ட சுயசரிதை என்றாலும் அது நம்மைப்போன்ற பலர் அனுபவித்துணரமுடியாத ஒரு உலகத்தை அறிமுகப்படுத்துகின்றது. பதின்மவயதோடு இச்சுயசரிதை முடிவது ஒருவிதத்தில் பலவீனம் என்றும் சொல்லவேண்டும். என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் தலித்துக்கள்/ ஒடுக்கப்பட்ட பெண்கள் போன்றோரை தன்னுடைய சிறகுகளால் அடைக்கலம் கொடுக்கும் இடதுசாரிகளை நாம் நன்றியுடன் இத்தருணத்தில் நினைவுகூரவேண்டும். ஆனால் அதேசமயம் அடைக்கலம் கொடுக்கப்பட்ட குஞ்சுகள் சிறகுகள் வளர்ந்து தமக்கான் சொந்தப்பாதையைத் தேர்ந்தெடுத்து பறக்கத் தொடங்கும்போது கையசைத்து விடைகொடுக்கவேண்டுமே தவிர துரோகிகள்/எதிரிகள் என்ற அடையாளப்படுத்துவதை இடதுசாரிகள் தவிர்ப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும். இதே சமயத்தில், குணசேகரன் போன்ற ஒரு தலித் ஏன் காலச்சுவடை தனது பதிப்பாளாராகத் தேர்ந்தெடுத்தார் என்று நாம் கேள்வி எழுப்புவதையும் தவிர்க்கமுடியாது. இதுவரை குணசேகரனின் புத்தகங்கள் எதுவுமே காலச்சுவடால் வராதபோது இந்த சுயசரிதையை எழுதிவிட்டு தான் காலச்சுவடுக்கே பிரசுரிக்க முதலில் அனுப்பினேன் என்று ஒருவித 'பெருமிதத்துடன்' குணசேகரன் குறிப்பிடுவதன் அரசியல் குறித்தும் நாம் கேள்விகேட்கவேண்டியிருக்கின்றது (தலித்துக்கள்/விளிம்புநிலைமனிதர்கள் மீது அக்கறையெடுத்து புத்தகம் போடும் பிற பதிப்பகங்கள் குணசேகரனின் கண்களில் தென்படாதது பெரும் வியப்புத்தான்).

சினுவா ஆச்சுபேயின் நாவலை தமிழில் கே.மகாலிங்கம் நல்லதொருவிதமாய் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். ஆனால் தலைப்பை இப்படிச் சுருக்கவேண்டுமா என்ற கேள்வியும் உண்டு. அது மொழிபெயர்ப்பு என்பதாய் அன்றி மொழித்தழுவலாய் போய்விடும் அபாயமுண்டு. ஏற்கனவே மொழிபெயர்த்த 'சிதைவு'களுக்கும் (Things Fall Apart) இவ்வாறான சர்ச்சை வந்ததை மகாலிங்கம் அறியாதவரல்ல அல்லது அந்த விமர்சனத்துக்காய் ஒரு எதிரொலியாகத்தான் இதையும் செய்தாரா என்பதும் தெரியவில்லை. எதுவெனினும் நல்லதொரு மொழிபெயர்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது என்பதற்காய் இவ்வாறான சின்னச்சின்ன விடயங்கள் குறித்து மறந்துவிடலாம். ஆனால் வழமைபோல இங்கேயும் ஜெயமோகன் முன்னுரையில் அரசியல் செய்வதை நாம் அவ்வளவு இல்குவாய் கடந்துபோக முடியாது....'சினுவா ஆச்செபியின் நாவல் கிட்டத்தட்ட ஒரு இந்திய-தமிழ் நாவல் மாதிரியே உள்ளது' (ஏன் ஈழ-தமிழ் நாவலாய் இருக்கமுடியாது?)என்பதில் ஜெயமோகன் எதனைக் கூறவருகின்றார்? ஏன் அவரால் இதையொரு தமிழ் நாவல் என்றோ மூன்றாமுலக நாடுகளின் நாவல் என்றோ பொதுவாய்ச் சொல்லமுடியவில்லை? இந்தியா என்ற அடையாளம் ஏன் இங்கு தேவைப்படுகின்றது? இந்நாவல் இந்தியா, இலங்கை மட்டுமில்லை; காலனியத்துவத்தால் பாதிக்கப்பட்ட எல்லா மூன்றாமுலக நாடுகளுக்கும் பொருத்தமானதே. அதைவிட அடுத்த வரியில் ஜெயமோகன் சொல்லவருவதுதான் அவர் எந்தப்புள்ளியில் நிற்கின்றார் என்பது புரியவரும். 'இங்குள்ள ஊழல், சாதிய ஏற்றத்தாழ்வு, சிவப்பு நாடா அனைத்துமே அங்கும் உள்ளன'. இதை இன்னொரு வாசிப்பாய், இந்தியாவில் மட்டுமில்லை நைஜீரியா போன்ற ஆபிரிக்கா நாடுகளில் கூட சாதி இருக்கின்றது என்று எங்களை நியாயப்படுத்துவது போன்ற வாசிப்பு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. எங்கோ ஒரு விவாதத்தில் இந்தியா (ஈழம்) போன்றவற்றில் இருக்கும் சாதியக்கொடுமைகளை விபரித்தபோது படித்த சில அறிவுஜீவிகள் ஆபிரிக்கா நாடுகளிலும் சாதி இருக்கின்றன என்று புலம்பியபடி ஓடிவந்தது நினைவுக்கு வருகின்றது. ஒன்றைப் பற்றிப்பேசும்போது அதைப்பற்றி மட்டும் முதலில் பேசுங்கள், எங்களுக்குள் சாதி இருந்தால் அதை எப்படி அரசியல் நீக்கம் செய்வது என்று பேசுவதைவிட்டுவிட்டு, அங்கேயுமிருக்கின்றது அதனால் நாங்கள் -மட்டும்- அவ்வளவு கெட்டவர்களல்ல என்ற தொனியில் வரும் உரையாடல்கள் அலுப்பையல்ல, கோபத்தை வரச்செய்பவை.

நாம் நவீன உலகில் எல்லா வசதிகளோடும் எல்லோரையும் மதித்தபடி இருக்கின்றோம் என்று நமக்குள் கூறியபடி இருக்கின்றோம். ஆனால் இவ்வாறான புதினங்கள் நாம் நினைத்துக்கொள்கின்ற அனைத்தையும் அதிர்வுக்குட்படுத்துகின்றது. மேலும் சாதியைப் பற்றியோ அல்லது ஏகாதிபத்தியம் பற்றியோ நாம் உரையாடும்போது யார் அதிகம் பதட்டம் அடைகின்றார்களோ அவர்களே இன்னும் இந்த அடையாளங்களில் தங்களை தேக்கிவைத்துக்கொள்ள விரும்புகின்றார்கள் என்பதை இலகுவில் கண்டுபிடித்துவிடவும் முடியும். நாம் நம்மிலிருந்து சாதியை இல்லாமற்செய்ய மிகுந்த சகிப்புத்தன்மையும் விசாலமான மனமுமே வேண்டும், மேலும் வர்க்க அழிப்பாலும், படிப்பாலும், பொருளாதார ஏற்றங்களாலும், சாதி முற்றாக அழிந்துவிடும் என்று கூறுபவர்களை நோக்கி நாம் புன்னகையை வீசியபடி எம்மை நாமே சுயவிமர்சனத்திற்கு உட்படுத்துவதே நியாயமாகவிருக்கும்; அதுவே நாமின்னும் மனிதத்தன்மையுடன் வாழ்கின்றோம் என்பதைச் சாட்சிப்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.

(ஆபிரிக்காக் கலாசாரத்தின் மீது பெருவிருப்புக்கொண்டவளுக்கு)

19 comments:

இளங்கோ-டிசே said...

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
இத்தளத்திலிருந்து ஏதேனும் ஆக்கத்தை அச்சில் வெளிவரும் பத்திரிகை/சஞ்சிகைகளில் வெளியிடும்போது தயவுசெய்து ஒருவரி மின்னஞ்சலில் தெரிவித்துவிட்டாவது பிரசுரிக்கவும். சில நண்பர்களுக்கு இத்தளத்திலிருந்து எடுத்து பிரசுரிக்கும் அனுமதி கொடுக்கும்போது, சிலவேளை அதே ஆக்கங்கள் அனுமதியில்லாமலே வேறு இடங்களிலும் பிரசுரமாகிவிடுகின்றன. இதனால் ஏற்படும் தேவையற்ற விளக்கங்கள்/சர்ச்சைகள் என்பவற்றைத் தவிர்க்கவிரும்புவதால் தயவு செய்து ஒருவரியிலாவது தெரியப்படுத்திவிட்டு பிரசுரியுங்கள். நன்றி.

7/31/2007 10:11:00 AM
Anonymous said...

பலே கில்லாடி நீங்கள், நீங்களே போடக் கொடுத்துவிட்டு அதென்ன ஒரு ஜம்பம். எழுத்தாளனாவதற்கான தகுதியில் இதுவும் ஒன்றன்றோ?

7/31/2007 10:49:00 AM
இளங்கோ-டிசே said...

அநாமதேய நண்பர், எந்த சம்பவம் என்று விரிவாகச் சொல்லமுடியுமா? இதற்குக்கூட உங்கள் பெயரை மறைத்தா சொல்லவேண்டும்? மற்றும்படி எதுவெனினும் துணிவோடும் வெளிப்படையாகவும் என்னை முன்வைத்து பேச எப்பவும் தயார் என்க.

7/31/2007 10:53:00 PM
Ayyanar Viswanath said...

பகிர்தல்களுக்கு நன்றி

சாதி என்கிற அடையாளத்தை அழிக்க கூடியது சாத்தியமா எனத் தெரியவில்லை டிசே.. இதைப் போன்ற வலிகளுடன் இன்னும் எத்தனை புதினங்கள் எழுதப்படுமோ என பயப்பட வேண்டியிருக்கிறது..அடுத்த வீட்டின் கதவுகளுக்கு கூட கேட்காமல் எத்தனை மெளனக்குரல்கள் இன்னும் விசும்பிக்கொண்டிருக்கிறதெனத் தெரியவில்லை.

ஜெயமோகன் வரிகளை நீங்கள் அடித்திருக்கத் தேவையில்லை டிசே

8/02/2007 01:01:00 AM
இளங்கோ-டிசே said...

/இதைப் போன்ற வலிகளுடன் இன்னும் எத்தனை புதினங்கள் எழுதப்படுமோ என பயப்பட வேண்டியிருக்கிறது..அடுத்த வீட்டின் கதவுகளுக்கு கூட கேட்காமல் எத்தனை மெளனக்குரல்கள் இன்னும் விசும்பிக்கொண்டிருக்கிறதெனத் தெரியவில்லை./

இந்தப்பதட்டந்தான் அய்யனார் என்னையும் தொற்றிக்கொள்கின்றது.

/ஜெயமோகன் வரிகளை நீங்கள் அடித்திருக்கத் தேவையில்லை/

ஜெயமோகன் பற்றிய வரிகளை அடித்தற்கு இந்தப்பதிவை எழுதியபின் -வாசித்த- ஒரு தோழியோடு நிகழ்ந்த உரையாடல்.... எனக்கும் ஒருசில படைப்பாளிகளை மட்டும் அதிகம் நுண்ணிய கவனிப்போடு விமர்சிக்கின்றோமோ என்ற சுயவிமர்சனத்தால் - அந்தப்பகுதி தேவையில்லையென- அடித்திருந்தேன். அண்மையில்கூட ஜெயமோகன் படைப்பொன்றை வாசித்துவிட்டு சற்றுப் பாராட்டியிருந்தார் என்று நண்பரொருவர் சொல்லக் கேட்டிருந்தேன். விவாதிக்க வ்ந்தாலும் திட்டுகின்றான்; சும்மாயிருந்தாலும் திட்டுகின்றான்; பாராட்டினாலும் திட்டுகின்றான் என்று அவர் நினைக்கக்கூடுமெனினும்..., அதற்காயெல்லாம் அமைதியாக இருந்துவிடமுடியுமா என்ன :-)?

8/03/2007 03:23:00 PM
Anonymous said...

யார் யாருக்கு நீங்கள் பிரசுரிக்கக் கொடுத்தீர்கள்? யார் உங்கள் அனுமதியில்லாது எடுத்துப் பிரசுரித்தார்கள் என்று ஒரு வரி சொல்லி விடுங்கள். உங்கள் சவாலுக்கு நான் என் பெயரைச் சொல்லி விடுகின்றேன்.

8/04/2007 10:14:00 PM
இளங்கோ-டிசே said...

அநாமதேய தோழரே, கனடாவில் இருந்துகொண்டே கண்ணாமூச்சியா :-)? சரி, இந்த ஆட்டத்தை எல்லாம் 'திண்ணை' காலத்திலிருந்து நானும் பழகியிருக்கின்றேன். வாருங்கள் சதுரங்கப்பலகையை விரித்துவைத்து காய்களை நகர்த்துவோம்.
......
பெயரையும், சம்பவத்தையும் கூறும் குறைந்தபட்சம் அறமில்லாது உரையாடத்தொடங்கும் உங்களது அநாமதேயப்பின்னூட்டங்கள் அலுப்புத் தருவது ஒருபுறம் இருக்கட்டும். ஏன் நான் இந்தச்சந்தர்ப்பத்தில் உங்கள் பெயரையும், சம்பவத்தையும் கேட்கின்றேன் என்றால், இதுவரை அப்படி அனுமதி கொடுக்காமல் பிரசுரிக்கப்பட்ட படைப்புக்களுக்காய், அதைப் பிரசுரித்த சில நண்பர்களோடு எனது விசனத்தை நேரடியாகத் தெரிவித்துமிருக்கின்றேன். எனவே அவர்களின் பெயர்களை வெளிப்படையாக முன்வைத்தல் என்பது அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை இல்லாமற்செய்வது போலாகும். எனவே உங்கள் பெயரையும், சம்பவத்தையும் நீங்கள் கூறும்போது எவர்/எந்தச்சஞ்சிகை இதனோடு சம்பந்தப்பட்டிருக்கும் எனக்கும் தெரியவரும். ஆகவே நானும் அதுகுறித்து வெளிப்படையாக உரையாடமுடியும் என்ற காரணத்தினால் மட்டுமே, உங்கள் பெயரைக் கேட்கின்றேன்.

இந்தப்பிரச்சினை, சிலவருடங்களுக்கு முன்பே பிரான்சிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் வரும் பத்திரிகை/சஞ்சிகையிலிருந்தே ஆரம்பித்து அது அண்மைக்காலம் வரை நடந்துகொண்டுதானிருக்கின்றது. நீங்கள் உங்கள் பெயரையும், விமர்சிக்க விரும்பும் சம்பவத்தையும் முன்வைத்து உரையாடுங்கள். நானும் எனக்குத் தெரிந்த தகவல்களை முன்வைத்து வெளிப்படையாக உரையாடுகின்றேன். அதேபோன்று உரையாடலின்போது என்பக்கம் பிழையிருந்தால் நான் வெளிப்படையாகவே மன்னிப்பும் கேட்டுக்கொள்கின்றேன்.(மன்னிப்புக் கேட்க என் ஈகோ இடந்தராது என்ற எண்ணமெல்லாம் எனக்கில்லை).

ஏதோ இதைச்சொல்வதால்/உரையாடுவதால் நாமென்ன கொலைசெய்யப்படும் சூழலிலா இருக்கின்றோம்? ஏனய்யா கிசுகிசுமாதிரி எழுதி என் பொறுமையையும், பின்னூட்டங்களை வாசிப்பவர்களின் நேரத்தையும் வீணடிக்கின்றீர்கள்?
.............


பி.கு: இனியும் நீங்கள் அநாமதேயமாக வந்து -பெயரையும் சம்பவத்தையும் கூறாது- கிளிப்பிள்ளை மாதிரி அழுது அணுங்கிக்கொண்டிருக்கப்போகின்றீர்கள் என்றால் அவ்வாறான பின்னூட்டங்களை யோசித்தே பிரசுரிப்பேன். நன்றி.

8/04/2007 10:59:00 PM
Anonymous said...

பொதுவாகவே எழுத்தாளர்கள் எல்லோருக்கும் இருக்கக் கூடிய ஆசை தான் உங்களதும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தன்னுடைய படைப்பு அதிகமானவர்களைச் சென்றடைய வேண்டும் என்கிற உங்கள் எதிர்பார்ப்பைப் புரிந்து கொள்வதில் ஒரு சங்கடமுமில்லை. ஆனால் நீங்கள் பொத்தாம்பொதுவாகப் போட்ட பிற்குறிப்புத் தான் உதைக்கிறது. அவர்கள் உங்கள் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்ற முயற்சிக்கும் உங்கள் நல்லெண்ணம் நியாயமானது தான். ஆனால் நீங்கள் பொத்தாம் பொதுவாக எழுதிய குறிப்பு பின்வரும் இரண்டு தரப்பினரைப் பாதிக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலாவது நீங்களே பிரசுரிக்குமாறு கேட்டு அனுப்பி பிரசுரித்தவர்களை.
இரண்டாவது உங்களிடம் முன்னனுமதி கேட்டு எடுத்துப் பிரசுரித்தவர்களை.

இந்த இரண்டு தரப்பாரும் தான் முதலில் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை.

ஆனால் இந்த இரண்டு தரப்பாரையும் நீங்கள் நடுத்தெருவில் விட்டு விட்டு உங்களுடைய அனுமதி கேட்காமல் பிரசுரித்தவர்களைக் (அப்படி யாரேனும் இருக்கும் பட்சத்தில்) காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள். அதனால் தான் நான் அவ்வாறு எழுதினேன். சரி நீங்கள் காப்பாற்ற விரும்புபவரைக் காப்பாற்றுங்கள். அது உங்கள் விருப்பம். அதாவது யார் யார் உங்களைக் கேட்காமலே பிரசுரித்தாhகள் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம். ஆனால் குறைந்த பட்சம் இன்னார் இன்னாருக்கு நான் அனுப்பினேன். இன்னார் இன்னார் அனுமதி கேட்டுப் பிரசுரித்தார்கள் என்றாவது சொல்லுங்களேன். உங்களுடைய பொத்தாம் பொதுவான குறிப்பால் களங்கப்பட்டுப் போய் நிற்கும் பத்திரிகை சஞ்சிகை ஆசிரியர்களையாவது காப்பாற்ற.

பிற்குறிப்பு: படைப்பாளிகள் ஆகிய நீங்கள் எல்லாம் உயர்ந்தவர்கள். இம்மாதிரியான சாமான்யர்களுடைய கேள்விகள் உங்களுக்கு அலுப்பையும் எரிச்சலையும் தான் தரும் என்பதை உணர முடிகிறது. படைப்பாளிகளாகிய உங்களுக்கு இருக்கும் வேலைப்பளுவைப் போல இந்த சாமான்யர்களுக்கும் சாமான்யமான வேலைப்பளுக்கள் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இதனைப்பிரசுரிப்பதும் பிரசுரிக்காது விடுவதும் உங்களுடைய ஜனநாயகம் பற்றிய புரிதல் பற்றியது. உங்களுடைய உரிமையில் நான் தலையிடப் போவதில்லை. ஆனால் நான் குறிப்பிட்ட இரண்டு தரப்பாருக்குமான நீதி உங்கள் கையில் இருக்கிறது. சட்டத்தின் முன் குற்றவாளிகள் வேண்டுமானால் தப்பிக்கலாம். ஆனால் நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாதல்லவா?

இதை அதிகம் நீட்ட எனக்கு விருப்பமில்லை. இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

8/05/2007 12:09:00 PM
இளங்கோ-டிசே said...

அநாமதேய நண்பரே, மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதென்பது 'அறிவுஜீவிகளைத்தவிர' வேறொருவருக்கும் வராது (அவர்களில் ஒருவராய் நீங்களும் இருப்பீர்கள் எனவே நம்புகின்றேன்). இறுதியாய் எழுதிய பின்னூட்டத்தை வாசிக்கும்போது நான் எது குறித்தோ எழுத(பார்க்க: என் முதற்பின்னூட்டம்) நீங்கள் வேறு எதையெதையோ பற்றி உரையாடியபடி இப்போது இன்னொரு பின்னூட்டத்தை -வழமைபோல- பெயரை மறைத்தபடி எழுதியிருக்கின்றீர்கள். இவ்வளவு நீண்ட பின்னூட்டம் எழுதும் உங்களுக்கு வெளிப்படையாகப் பெயரை வைக்கவோ அல்லது சம்பவத்தை விலாவரியாக் கூறவோ இன்னுமே 'அறம்' வராதபோது அது அறிவுஜீவிகளுக்கு மட்டுமேயுரியது -சாமான்யர்கள் இப்படித் தந்திரமாய் இருக்கமாட்டார்கள்-என்று கூறினால் ஒப்புக்கொள்வீர்களா தெரியவில்லை. நீங்கள் சாடைமாடையாகக் கூறுபவற்றை வைத்துப்பார்க்கும்போது எந்த விடயத்தைக் கூறுகின்றீர்கள் என்பது ஒரளவுக்குப் புரிகின்றது. இரு பத்திரிகைகளுக்காய்,நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு நீலிக்கண்ணீரெல்லாம் விடவேண்டாம். அதுகுறித்து தொடர்பான இருபத்திரிகை ஆசிரியர்களிடம் உரையாடியுள்ளேன்/உரையாடப்பட்டுள்ளது. உங்களுக்கு என்மீது தனிப்பட்ட எரிச்சல்/பொறாமை/கோபம் இருப்பின் நேரடியாகவே தெரியப்படுத்தலாம்; அதைவிடுத்து, உங்களை -நான் நினைக்காத திசையில் நின்றெல்லாம்- தாழ்த்தி உரையாடத்தேவையில்லை. சமமாகவே நின்று உரையாடுவோம்; எவரும் எவர்க்கும் தாழ்த்தியுமில்லை;உயர்த்தியுமில்லை. மற்றும்படி உங்களை யாரென்று ஊகிப்பது அவ்வளவு கஷ்டமுமில்லை :-).

---------
வந்திருந்த இரண்டு பின்னூட்டங்கள் மட்டிறுத்தப்பட்டுள்ளன. ஒன்று; தொல்லைகொடுத்து தன்னை நீதிபதியாக ஆக்க விரும்பும் அருமை அநாமதேயத் தோழர் ஒருவருடையது. மற்றது தனது வலைப்பதிவுப் பெயரோடு- தானும் இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடுமோ- என்று நினைத்து வந்த இன்னொரு தோழரின் பின்னூட்டம்.

பெயருள்ள தோழர்; இப்போதைக்கு என்னை மன்னிக்கவும் :-). ஆகக்குறைந்தது இந்த அநாமதேயத்தின் சதுரங்க ஆட்டத்தை முடிக்கும்வரையாவது உங்களின் பின்னூட்டத்தை பிரசுரிக்காமல் இருக்க தயவுசெய்து அனுமதியுங்கள்.

8/05/2007 04:18:00 PM
Anonymous said...

என்னுடைய கடிதத்தின் சாரத்தையே திரித்து உங்களுடைய 'அறத்தை' நிலை நாட்டி விட்டீர்கள். நீங்கள் வெற்றி பெற்றவராகிறீர்கள். நான் மனிதர்களைப் புரிந்து கொண்டவனாகிறேன். ஆனால் இனிமேல் இது தொடர்பில் நீங்கள் அவதானமாயிருக்க எனது பின்னூட்டங்கள் உதவியிருக்கும் என நம்புகிறேன்.

நன்றி

8/05/2007 10:29:00 PM
Anonymous said...

உங்கள் புத்தக அறிமுகங்கள் வலைப்பதிவுச் சூழலில் புதிய புத்தகங்களைத் தேடுபவர்களுக்குப் பிரயோசனமானவை.

ஜெயமோகன் 'இந்தியத் தமிழ் நாவல் போல் இருக்கிறது' என்று சொன்னது இந்தியத் தமிழ் நாவல்கள் பற்றிய ஜெயமோகனின் பார்வையிலிருந்து உருவானது என்றே நினைக்கிறேன். இந்தியத் தமிழ் நாவல்கள் மீது ஜெயமோகனுக்கு அவ்வளவு நல்லபிப்பிராயம் இருப்பதாக நான் உணரவில்லை. அவற்றைப் போல கதைசொல்லலில் மிகவும் தட்டையாக இருப்பதாகவே அவர் இந்நாவலையும் உணர்கிறார் போலும்.

மற்றையது ஜெயமோகனின் எல்லாக் கருத்துக்களுடனும் உடன்படுபவனல்ல நான் எனினும் ஜெயமோகன் எழுதியுள்ளதாக நீங்கள் குறிப்பிட்டுள்ள பந்தியில் அவர் சொல்லியுள்ளது நியாயம் என்றே படுகிறது. எங்களிடையே உள்ள பலவீனங்களைப் பற்றிப் பேசுகிற போது எங்களிடமுள்ளதைவிட வேறிடங்களில் அதிகமாக இருக்கிறது என்று அமைதிப்படுபவர்களும் இருக்கிறார்கள் தானே. அதனைத் தானே ஜெயமோகன் சுட்டிக் காட்டுகிறார். அதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை.

அதனை எழுதிவிட்டு ஏன் அழித்து விட்டிருக்கிறீர்கள். அதுவும் புரியவில்லை.

யாரோ ஒரு அநாமதேய நண்பர் எழுதும் பின்னூட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். வலைப்பக்கங்களில் அநாமதேயம் என்பது சாதாரணம். அதற்கு மதிப்பக் கொடுத்து எவ்வளவோ பதில்களும் எழுதப்பட்டுள்ளன. இங்கு எழுதுபவர்கள் முக்கியமல்ல. எழுதும் விடயங்கள் முக்கியம் என்கிற ஆசிரியனை விட்டு பிரதி பற்றிப் பேசுகிற ஒரு முறைமை ஏற்புடமையாகி நெடுங்காலமாகி விட்டது.

அந்த அடிப்படையில் அந்த அநாமதேய நண்பர் கேட்டது போல நீங்கள் யார் யாருக்குப் பிரசுரிக்கக் கொடுத்தீர்கள் என்பதைக் குறிப்பிட்டு விட்டால் அவருடைய பிரச்சினை தீர்ந்து விடும். இதனை வீணாக இவ்வளவு இழுக்கத் தேவையில்லை. இவ்வளவு பதில் எழுதும் நேரத்தில் இன்னுமொரு புத்தகத்தைப் பற்றி நீங்கள் எழுதிவிடலாம்.

8/05/2007 11:32:00 PM
இளங்கோ-டிசே said...

இனிமேலும் 'நீட்டிக்கவிரும்பவில்லை' என்று அநாமதேயத் தோழர் கூறிவிட்டு, இன்னும் தொடர்ந்து வந்து அறிவுரை கூறிக்கொண்டேடேடே... பின்னூட்டங்கள் எழுதிக்கொண்டே நிற்கிறார். நானுமின்னும் 'சாதாரண மனிதனாய்' இருப்பதால் தான் உங்களுக்கான 'வெளி'யை வழங்க ஆயத்தமாகின்றேன் என்று தொடர்ந்து அலம்பியபடி இருக்கின்றேன் என்பது புரியவில்லையா தோழரே? ஆனால் நண்பர்தான் பெயரையோ, சம்பவத்தையோ வெளிப்படையாக முன்வைத்து உரையாடத்தயங்கிக்கொண்டே நிற்கின்றார். இது குறித்து என்னுடைய கேள்விகள் எளிமையானவை. நான் புரிந்துகொண்டளவில், அண்மையில் நடந்த சம்பத்தைத்தான் நீங்கள் விமர்சிக்க விரும்புகின்றீர்கள் என்றால், நான் இது குறித்து இரு ஆசிரியர்களோடும் உரையாடியிருக்கின்றேன்/றோம். அந்த இரண்டு ஆசிரியர்களும் எனது விளக்கங்களுக்குப் பிறகு தாங்கள் இதுகுறித்து பெரிதாய் எதுவுமே நினைக்கவில்லை என்று தெளிவாகக் கூறியபின்னும், எப்படி இப்படியொரு முன்றாந்தரப்பு ஆசாமி-என்னால் அந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் நெருக்கடிவந்துவிட்டது; நான் தான் அதற்குக் காரணம் என்று சுட்டுவிரல் காட்டும்- அழுகுணி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்க முடிகின்றது என்பதை அறியவே விரும்புகின்றேன். அதற்குள் நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது அது இது என்று ஏதோ பெரிய விடயங்களைக் கூறிக்கொண்டிருக்கின்றீர்களே.... @#$% தோழரே, ஒரு நிரபராதி தண்டிக்கப்படவோ என்னால் எவரும் பாதிக்கபபடக்கூடாது என்று நானும் உங்களைவிட அதிகம் அக்கறைகொண்டிருக்கின்றேன் என்பதால்தான், இப்போதுகூட என்னையறியாமல் எவரும் பாதிக்கப்பட்டிருந்தால் அது குறித்து அறிய ஆவலாக இருக்கின்றேன் என்று உண்மையாகவே அறியும் ஆவலில் உங்களிடம் உரையாடிக்கொண்டிருக்கின்றேன். அல்லாதுவிட்டால் இரு பத்திரிகை ஆசிரியர்களிடம் விளக்கமும் கொடுத்து அவர்கள் விளங்கிக்கொண்டபின்னும் ஏன் நான் உங்களோடு கெஞ்சி மன்றாடிக்கொண்டிருக்கவேண்டும்? தயவுசெய்து நிரபராதிகளைப் பற்றி உரையாடும் நீங்கள் இதையும் புரிந்துகொள்ளுங்கள்...ஒருவனை அவன் சம்பந்தப்படாத விசயத்திற்காய் வைத்து ஏதோ கொலைக்குற்றஞ்செய்தவன்ரீதியில் குற்றஞ்சாட்டிக்கொண்டிப்பது எந்த வகையான அறமாயிருக்கக் கூடும் என்று. இதற்கு மேலும் என்னிடம் எழுதவோ அல்லது உங்கள் விபரங்களையும் பெயரையும் வெளியிடுங்களென உங்களிடம் கெஞ்சவோ என்னால் முடியாது. ஆனால் உங்களதும்-எனதும் இந்த சுவிங்கப்பிரச்சினையால் எனது நண்பர்கள் சிலரும் பாதிக்கப்பட்டு கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் எனக்குச் சோர்வைத் தருகின்றது. சாதாரண மனிதர்களாக இருப்பவர்களுக்கு/வாழ விரும்புபவர்களுக்கு மட்டுமே அந்தக் கவலையை உணர்ந்துகொள்ளமுடியும். நன்றி.

8/05/2007 11:41:00 PM
Anonymous said...

நான் ஒரு பின்னூட்டம் அனுப்பியிருந்தேனே பிரசுரமாகவில்லையே

8/06/2007 12:44:00 PM
இளங்கோ-டிசே said...

அநாமிகன்: ஜெயமோகன் குறித்த உங்கள் கருத்துக்கள் பற்றிய என் பார்வையை பின்னொருபொழுதில் எழுத முயல்கின்றேன்.
.....
மற்றது எனக்கும் அநாமதேய நண்பரொவருக்கும் நடக்கும் சதுரங்க ஆட்டத்தில் வேறெவரையும் இப்போதைக்கு சேர்த்துக்கொள்வதாய் எண்ணமில்லை. ஏற்கனவே இது குறித்து வந்த வேறு சில நண்பர்களின் பின்னூட்டங்களும் மட்டிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த அநாமதேயம் நீங்களாக இருக்கும்பட்சம் தவிர்த்து, இது குறித்து உங்களோடு உரையாட விருப்பவில்லை. புரிந்துகொள்வீர்களென நினைக்கிறேன். நன்றி.
..........
பரீட்சையொன்று இருக்கின்றது. முடிந்தபின் வேண்டுமென்றால் நீங்கள் துணைக்க்ழைத்த பின் - நவீனத்துவக் கூற்றுக்களை மட்டும் தனியேயெடுத்து ஆறுதலாக விவாதிப்போம் :-).

8/07/2007 03:51:00 PM
Anonymous said...

பரவாயில்லை. உங்கள் பிரச்சினையை முடித்தபிறகு எழுதுங்கள்.

8/08/2007 07:57:00 AM
இளங்கோ-டிசே said...

அநாமதேய நண்பருக்கு,
உங்களோடான சதுரங்க ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவரலாம் என்று நினைக்கின்றேன். அதற்கான காரணங்களை இப்பின்னூட்டத்தின் இறுதியில் சொல்கின்றேன். இப்போது இயன்றளவு கோர்வையாக எழுதமுயல்கின்றேன்.

எனது பதிவில் போட்டப்பட்ட முத்ற்பின்னுட்டமான....
/இத்தளத்திலிருந்து ஏதேனும் ஆக்கத்தை அச்சில் வெளிவரும் பத்திரிகை/சஞ்சிகைகளில் வெளியிடும்போது தயவுசெய்து ஒருவரி மின்னஞ்சலில் தெரிவித்துவிட்டாவது பிரசுரிக்கவும். சில நண்பர்களுக்கு இத்தளத்திலிருந்து எடுத்து பிரசுரிக்கும் அனுமதி கொடுக்கும்போது, சிலவேளை அதே ஆக்கங்கள் அனுமதியில்லாமலே வேறு இடங்களிலும் பிரசுரமாகிவிடுகின்றன. இதனால் ஏற்படும் தேவையற்ற விளக்கங்கள்/சர்ச்சைகள் என்பவற்றைத் தவிர்க்கவிரும்புவதால் தயவு செய்து ஒருவரியிலாவது தெரியப்படுத்திவிட்டு பிரசுரியுங்கள். நன்றி./

இந்தப்பின்னூட்டம், தனிப்பட்ட ஒரு சம்பவத்தை முன்வைத்து எழுதப்பட்டதல்ல. அண்மையில் நடந்த சில சம்பவங்களை முன்வைத்தே எனக்கு வந்த சோர்வை அதில் எழுதியிருந்தேன். அந்த வகையில்தான் எந்தச்சம்பவம் என்ற தெளிவில்லாததால்தான் எந்தச்சம்பவம் என்று தெளிவாக கூறுங்கள் அதை முன்வைத்து நானும் வெளிப்படையாக உரையாட ஆயத்தமாகின்றேன் என்று மேலே கூறியிருந்தேன் (ஆனால் அதைக்கூட முன்வைக்க முடியாது உங்களுக்கு தடுப்பது எதுவென நானறியேன் பராபரமே). ஒரளவு இப்போது உங்கள் பின்னூட்டம் வந்த இடம் சார்ந்தும் தொனி சார்ந்தும் பார்க்கும்போது எந்தச் சம்பவத்தை என்று ஊகின்றேன் (கவனிக்க ஊகிக்கின்றேன் மட்டுமே ).

ரோர்ச்சைத் தேடி அல்லது ஒளியைத்தேடி ஒரு ப்ளாஷ்பாக்
(எச்சரிக்கை: வாசிக்கும் சிலருக்கு அலுப்பில் தலைமயிர் தானாகவே உதிரவும்கூடும்)

எப்போதும் எதை எழுதினாலும் எனது விருப்பு வலைப்பதிவுகளில் முதலாய்ப் பதிவாய்ப் போடுவதையே விரும்புவேன் (யோசித்துப்பார்க்கும்போது, நான் இன்று எழுதும் தமிழ் எனக்கு இணையத்தால் மட்டுமே வந்தது என்ற நெருக்கமாய் இருக்கக்கூடும்;இணையம் இல்லாது விடின் எனது தமிழை நான் என்றோ தொலைத்திருப்பேன்). பத்திரிகைகளில் ஆக்கங்களைப் பிரசுரிக்கும் நண்பர்கள் சிலர் கூட, தங்களுக்கு அனுப்பிவிட்டு அங்கே பிரசுரமானதன்பின் வலைப்பதிவில் போடு என்றபோதும் தொடர்ந்து அதை மறுதலித்தே வந்திருக்கின்றேன். உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைக் கூறுகின்றேன். ஒரு நிகழ்வு குறித்து தனக்கு எழுதித்தரும்படி ஒரு பத்திரிகை ஆசிரியர் கேட்டிருந்தார். கேட்டவுடன் எழுதிக்கொடுக்கும் பழக்கம் எனக்கிருப்பதில்லையென்றாலும், என்னையும் அந்த நிகழ்வு பாதித்ததால் எழுதிவிட்டு, பத்திரிகை ஆசிரியர் தனிப்பட்டு கேட்டிருக்கின்றாரே என்ற நினைப்பில் எனது அரைகுறைத் தமிழைத் திருத்தித்தாருஙகள் என என் தோழர் ஒருவரையும் ஆக்கினைப்படுத்தி திருத்தம்/மெய்ப்பார்ப்பு அவரைக்கொண்டு பார்த்து அந்த ஆக்கத்தை சஞ்சிகைக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் என்ன செய்தேன்? வழமைபோல அவருக்கு அதை அனுப்பும்போது என்னுடைய வலைப்பதிவிலும் அதை பிரசுரத்திருந்தேன். பத்திரிகை ஆசிரியர், எனது வலைப்பதிவை பார்த்தபின், -ஏற்கனவே வலைப்பதிவில் வந்துவிட்டது-அதை பிரசுரிக்க முடியாது என்று கூறிவிட்டார். எனது நண்பரின் நேரத்தையும் உழைப்பையும் வீணாக்கிவிட்டேன் என்பதைத் தவிர எனக்கு அதிலொரு மனக்கஷ்டமும் இல்லை. அந்த் ஆசிரியரின் ஆதங்கமும் புரிந்துகொள்ளக்கூடியதே.

இரண்டு நாள் பொறுத்திருக்கமுடியாதா என்று எவரும் கேடகவும்கூடும். உண்மைதான். ஆனால் என்னால் அப்படிப்பழகியிருக்கமுடியவில்லை. அவ்வளவே. பின்னாட்களில்- இவனை எல்லாம் இப்படிச் சொல்லித்திருத்தமுடியாது என்று நினைத்தோ என்னவோ- வலைப்பதிவுகளில் முதலில் பிரசுரிக்கின்றேன் என்றறிந்தும் எனது ஆக்கங்களை சில நண்பர்கள் அச்சுப் பிரசுரத்தில் வரும் சஞ்சிகைகளில் பிரசுரித்தார்கள்/பிரசுரித்துக்கொண்டிருக்கின்றார்கள். அதுவல்ல் விசயம். இதையேன் சொல்கின்றேன் என்றால், நீங்கள், நான் எனது ஆக்கம் பல பேரைச் சென்றடையவேண்டும் என்ற பேராசை உடையவன் என்றவிதத்தில் ஒரு குற்றச்சாட்டைத் தெரிவித்திருந்தீர்கள்...அதற்காய்த்தான்இந்த உதாரணத்தைச் சொன்னேன். பாருங்கள், நானொரு பதிவை இடும்போது ஒரு நூறு, நூற்று ஐம்பது பேர் எனது வலைப்பதிவுக்கு வருகின்றார்கள் என்று கவுண்டர் சொல்கின்றது. நான் வந்து எனது தளத்தில் குதியங்குத்துவதை விட்டுவிட்டால் நூற்றுக்கும் குறைவாய்த்தான் நண்பர்கள் வருகின்றார்கள் என்றெடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால் இதையே நான் வலைப்பதிவில் பிரசுரிக்காமல் எனக்குத் தெரிந்த சில சஞ்சிகைகளுக்கு அனுபினால் (குறைந்தது ஜயாயிரம் பிரதிகளுக்கு மேலே அச்சடிக்கின்றார்கள்) ஒரு ஐயாயிரம் பேரையாவது போய்ச்சேர்ந்து நானுமொரு mass hero (or zero) ஆகமுடியுந்தானே. அதையேன் செய்யாமல் விட்டுவிட்டு இப்படியேன் அடம்பிடித்துக்கொண்டிருக்கின்றேன் என்று இப்போதுதான் உங்கள் குற்றச்சாடைப் பார்க்கும்போது எனக்கும் உறைக்கிறது. திருந்த முயற்சிக்கின்றேன் :-).

(2) இனி நீங்கள் கூறும் விடயத்திற்கு (ஊகிக்கின்றேன் அதுவாய்த்தானிருக்கும் என்று) வருகின்றேன். அதற்குமுன், உங்களுக்கு என் நேர்மையில் கேள்வி கேட்கவேண்யிருப்பின் சில மாதங்களுக்கு முன் கூட பல சந்தர்ப்பங்கள் வந்திருந்தனவே;.. தவறவிட்டுவிட்டீர்களே.. சில தடவைகள் எனது ஆக்கங்கள் ஒரே வாரத்தில் இருவேறு சஞ்சிகைகளில் கூட வந்திருந்தனவே.(அதைப்பிறகு பேசுவோம்; ஆனால் நான் அந்தச் சம்பவத்தை முன்வைத்தே எனது முதலாவது பின்னூட்டத்தை எழுதியிருந்தேன்). சரி உங்கள் குற்றச்சாட்டுக்கு (ஊகஞ்செய்து) வருகின்றேன். ஒரு திரைப்படத்தை பற்றி ஒரு ஆக்கத்தை வலைப்பதிவில் எழுதியிருந்தேன். பிறகு அதையொரு -இவனெல்லாம் வலைப்பதிவில் முதலில் போடாமல் தனக்கு அனுப்பமாட்டான் என்று தெரிந்த- ஒரு சஞ்சிகைக்கும் அனுப்பியிருந்தேன். அது பிரசுரமாயுமிருந்தது. இந்தச்சமயத்தில் வேறொரு நாட்டிலிருக்கும் நண்பரொருவர், அந்த நாட்டிலிருக்கும் தனது நண்பர் ஒருவர் பத்திரிகைக்கு ஆக்கம் வேண்டும் என்று கேட்க, என் மீதிருக்கும் பிரியத்தில் எனது வலைப்பதிலிருந்து ஜந்தோ ஆறோ ஆக்கங்களை அனுப்பியிருக்கின்றார் (அவருக்குத் தெரிந்திருக்கவில்லை; வலைப்பதிவிலிருக்கும் சில ஆக்கங்கள் சில சஞ்சிகைகளில் பிரசுர்மானது என்பது). அதிலொன்று அங்கு வரும் சஞ்சிகையில் பிரசுரிமாயிருக்கிறது. அந்த ஆக்கமும் நானிங்கே அனுமதி கொடுத்துப் பிரசுரமாயிருந்த ஆக்கமும் ஒன்றாகவிருந்திருக்கின்றது. (இங்கே இப்படியொரு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டதை அறிந்து, இந்தச்சம்பவமாய் இருக்கும் என்று நினைத்து ஒரு நீண்ட பின்னூட்டத்தை எனக்கு அந்த நண்பர் அனுப்பியிருக்கின்றார். அதன் நகல் அந்த ஆசிரியருக்கும் அனுப்பிவைத்துள்ளதாய் தெரிவித்திருக்கின்றார். அதில் சஞ்சிகைகளின் பெயரைக் குறிப்பிட்டும், அளவுக்கதிகமாய் வருந்தி மன்னிப்புக் கேட்டதாலும் நான் பிரசுரிக்கவில்லை. எனதின் பொருட்டு எனக்கு நெருக்கமானவர்களை வேதனைப்படுத்த விருப்பமில்லை. அத்தோடு அப்படி தவறு நடந்திருந்தால், அனைத்தையும் நானே ஏற்றுக்கொள்கின்றேன் என்று கூறி அவரது பின்னூட்டத்தை மட்டுறுத்தியுள்ளேன். இது இங்கே தேவையுமில்லாத குறிப்பும் கூட) இன்றுவரை எனக்கு அந்தப் பத்திரிகை வடிவமைப்பு எப்படியிருக்கும் என்பதோ இன்னபிற விடயங்களோ தெரியாது. எனக்கு அந்த சஞ்சிகை கிடைப்பதுமில்லை. அத்துடன் அந்த சஞ்சிகை ஆசிரியர்களோடு எனக்கு நேரடித்தொடர்புகளுமில்லை.

மற்றும்படி இந்த இரு ஆசிரிய்ர்களோடும் (நான் ஒருவரோடும் தோழர் மற்றவரோடும்) உரையாடியிருக்கின்றோம். அவர்கள் எங்கள் நிலையைப் புரிந்துமிருக்கின்றார்கள். அந்த ஆசிரியர்கள் நான் மன்னிப்புக்கேட்கவேண்டும் என்று கேட்டால் மன்னிப்புக்கேட்கவும் தயாரே (கவனிக்க அந்த இரு ஆசிரியர்களிடம் மட்டுமே)

(3)
/அதிகமானவர்களைச் சென்றடைய வேண்டும் என்கிற உங்கள் எதிர்பார்ப்பைப் புரிந்து கொள்வதில் ஒரு சங்கடமுமில்லை. ஆனால் நீங்கள் பொத்தாம்பொதுவாகப் போட்ட பிற்குறிப்புத் தான் உதைக்கிறது. அவர்கள் உங்கள் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்ற முயற்சிக்கும் உங்கள் நல்லெண்ணம் நியாயமானது தான். ஆனால் நீங்கள் பொத்தாம் பொதுவாக எழுதிய குறிப்பு பின்வரும் இரண்டு தரப்பினரைப் பாதிக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலாவது நீங்களே பிரசுரிக்குமாறு கேட்டு அனுப்பி பிரசுரித்தவர்களை.
இரண்டாவது உங்களிடம் முன்னனுமதி கேட்டு எடுத்துப் பிரசுரித்தவர்களை.

இந்த இரண்டு தரப்பாரும் தான் முதலில் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை.
..........
.......
உங்களுடைய பொத்தாம் பொதுவான குறிப்பால் களங்கப்பட்டுப் போய் நிற்கும் பத்திரிகை சஞ்சிகை ஆசிரியர்களையாவது காப்பாற்ற. /

அதனால்தானே நண்பரே, அந்த இரு சஞ்சிகைகள் குறித்துக்கூட குறிப்பிடாமல் கவனமாய் உரையாடிக்கொண்டிருக்கின்றேன்...புரியவில்லையா?

சரி இனி விடயத்திற்கு வருவோம். இப்போது நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்...

இறுதியில் நீங்கள் கூறிய வார்த்தைகள்தான் உங்களுக்கு அது சாதாரண வார்த்தையாக இருந்தாலும் என்னையது பதட்டப்படுத்தியது. இதன் நிமித்தம் இன்னொரு நாட்டிலிருக்கும் என் நண்பர் ஊடாக அந்த நாட்டு சஞ்சிகை ஆசிரியரையும், நேரடியாக பிரசுரிக்க அனுமதி கொடுத்த ஆசியரையும் நானும் தொடர்புகொண்டேன்/கொண்டோம்.. நீங்கள் மேலே எழுதிய குற்றச்சாடை -'களங்கப்பட்டுப் போய் நிற்கும் பத்திரிகை சஞ்சிகை ஆசிரியர்களையாவது காப்பாற்ற...'- நேரடியாகவே கேட்டு இதனால் இப்படி நெருக்கடி வந்துவிட்டதா என்று அவரிடம் வினாவியிருந்தேன். இரண்டு ஆசிரியர்களும் தஙகளுக்கு அப்படியெதுவும் ஏற்படவில்லையென்று கூறியதல்லலாமல், இந்த விடயம் யார் யாருக்கு தெரியும்/அல்லது யார் 'அக்கறைப்படுகின்றார்கள்' என்ற சில விடயங்களையும் தந்திருந்தார்கள் (நானும் கேட்டிருந்தேன்). நண்பர் தொடர்புகொண்ட மற்ற ஆசிரியரும், 'இப்படிக்கூட இதில் அரசியல் செய்கின்றார்களா?' என்று சிரித்தபடி வினாவியது ஒருபுறம் இருக்கட்டும். அத்துடன் நான் உரையாடிய ஆசிரியர், இதொரு பெரிய பிரச்சினையுமில்லை, தனக்கும் அந்த -மற்ற- ஆசிரியருக்கும் இடையே நேரடித் தொடர்புகளும் உண்டு. இன்னும் தாங்கள் மாறி மாறி தங்கள் பத்திரிகையில் வரும் ஆக்கங்களை பிரசுரிக்கின்றோம். நீ இது குறித்து இவ்வளவு கவலைப்படத்தேவையுமில்லை எனக்கூறியிருந்தார். அதுவல்ல முக்கியவிடயம். நண்பரே ஏனிப்படி எனது ஆக்கத்தால் 'களங்கப்பட்டுப் போய் நிற்கும் பத்திரிகை சஞ்சிகை ஆசிரியர்கள என்றொரு பொய்யை அவிழ்த்திவிடவேண்டும்? இது தனிப்பட்ட காழ்ப்புணச்சியன்றி வேறெதுவாய் இருக்கமுடியும்?

(4) உங்கள் எண்ணத்தில் குறுக்கீடு செய்யவிருப்பமில்லாதுவிட்டாலும், எதோ நானொரு பெரியவன் என்ற ரீதியில் நீங்கள் உரையாடுவது உண்மையில் அலுப்பையே -உங்கள் குற்றச்சாட்டைவிடவும்- தருகின்றது. எங்கேனும் நான் உரையாடும் ஒருவரை தாழ்த்திவைத்துக் கதைத்திருக்கின்றேன் என்றால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கின்றேன். அதைவிட்டுவிட்டு நான் ஏதோ ஒளிவட்டத்துடன் உரையாடிக்கொண்டிருக்கின்றேன் என்றெல்லாம் நீங்கள் கூறுவதை நானெப்படி எடுத்துக்கொள்வது? எனது நேரத்தையும், பின்னூடம் வாசிப்பவர்களின் நேரத்தையும் வீணாக்காதீர்கள் என்று சொன்னது நீங்கள் நேரடியாகக் குற்றச்சாட்டை வையுங்கள் என்ற அர்த்ததிலேயே தவிர வேறு எந்த அர்த்தத்திலுமல்ல. அப்படியில்லாதவிடத்தில் இப்படி ஓடிப்பிடித்துதான் நாங்கள் இருவரும் நாளும் பொழுதும் விளையாடிக்கொண்டிருப்போம். இப்போதுகூட இதை வாசிக்கும் உங்களையும் என்னையும் தவிர மூன்றாவது நபருக்கு இதொரு அலுப்பையே தரும் என்றே நினைக்கின்றேன்.

இப்போது ஆரம்பத்தில் சொன்ன காரணத்திற்கு வருகின்றேன்.... ஏன் இவ்வளவு நாட்கழித்து எழுதுகின்றேன் என்றால்...
நீங்கள் ஒரு இராணுவ இரகசியத்தை வெளியிடத்தயங்கும் ஒருவரைப்போல உரையாடிக்கொண்டிருக்கும்போது நானென்ன செய்யமுடியும்..? மற்றநாட்டு புல(நாய்)வாளன் போல ஆகத்தானே வேண்டியிருக்கும்!. ஆகவே, உங்கள் ஜபியை வைத்து உங்கள் இடம், மற்றும் சில நண்பர்களோடான உரையாடலின் மூலம் நீங்கள் எவராயிருக்குமெனக் கண்டுபிடிக்க முயன்றேன். அவ்வளவே. என்மீது தேவையில்லாத பொய்களையெல்லாம் அவிழ்த்துவிட முற்பகையில்லாது வேறெதுவுங் காரணங்களிருக்காதுதானே :-).

(5) இப்போது கூட அந்த இரு ஆசிரியர்களும் இந்த விடயங்கள் குறித்து தங்கள் பெயர், சஞ்சிகைகளின் பெயரை எழுதலாம் என்று அனுமதி தந்தபோதும் அதை வெளிப்படையாக முன்வக்காது மறைத்தேன் எழுதுகின்றேன். (அநாமிகன் போன்ற நண்பர்களும் ஏன் இவ்வளவு அலட்டுகின்றான்; நேரே சொல்லியிருக்கலாம் என்று அலுப்படைவது புரியத்தான் செய்கின்றது). நானும் எழுதியிருக்கலாந்தான். நான் நாளை எழுதுவதை விட்டுவிட்டுப்போய்விடக்கூடும். ஆனால் இந்த பத்திரிகை நண்பர்கள் தொடர்ந்து தமது அரசியல்; பொருளாதார நெருக்கடிகளில் நின்று தமது சஞ்சிகைகளை ந்டத்தப்போகின்றவரகள். எதற்கு என் பொருட்டு அவர்கள் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு பாவச்சுமையைச் சுமக்கவேண்டும்? ஏன் இங்கே நடந்த சம்பவத்தைப் பார்த்து கவலையுடன் தன்னையே முழுப்பொறுப்பாக்கி விலாவரியாக தனது பெயருடன் எழுதிய தோழரின் பின்னூட்டத்தைக் கூட அனுமதிக்கவில்லையென்றால், எனதின் பொருட்டு எவரும் என்னிடம் மன்னிப்போ, தாழ்ந்தோ போகவேண்டியதில்லை என்பதால் மட்டுமே (பின்னூட்டத்தை விடாததால் அவர் கோபிப்பார் என்று தெரிந்தாலும்)

இதற்கு மேலும் எழுதச்சொல்லிக்கேட்பீர்கள் என்றால் -அநாமிகன் கூறியதுமாதிரி - ஒரு நாவலை எழுதிவிடுவது எனக்கு இலகுவாகிப்போய்விடும். அந்தக்கொடுமையை மட்டும் செய்துவிடாதீர்கள். சிறுகதையென்று எழுதியதைப் பார்த்துவிட்டு, தம்பி நீ கதைகள் எழுதாதிருப்பதே தமிழ் கூறும் நல்லுலகத்திற்குச் செய்யும் நன்றிக்கடனாய் இருக்கும் என்று எனது தமக்கையார் பதின்மத்தில் கூறியது இப்போது ஏனோ நினைவில் வந்து தொலைக்கிறது.

இதற்கு மேலும் நான் பேச எதுவும் இருப்பதாய் தோன்றவில்லை. மற்றது வடிகட்டப்பட்டிருந்த அநாமதேய நண்பரின் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. மட்டிறுத்தியதிற்குக் காரணம் அப்போதாவது கோபம் வந்து, அறவுணர்வில் விபரங்களை வெளிப்படையாக வைப்பார் என்று பார்க்கும் ஆவல்தான்.
----------------------------------

//யாரோ ஒரு அநாமதேய நண்பர் எழுதும் பின்னூட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். வலைப்பக்கங்களில் அநாமதேயம் என்பது சாதாரணம். அதற்கு மதிப்பக் கொடுத்து எவ்வளவோ பதில்களும் எழுதப்பட்டுள்ளன. இங்கு எழுதுபவர்கள் முக்கியமல்ல. எழுதும் விடயங்கள் முக்கியம் என்கிற ஆசிரியனை விட்டு பிரதி பற்றிப் பேசுகிற ஒரு முறைமை ஏற்புடமையாகி நெடுங்காலமாகி விட்டது. //

அநாமிகன், இதை ஏற்றுக்கொள்கின்றேன். அதனால்தான் இந்த அநாமதேய நண்பருக்கும் என்னால் இயன்றவரை பொறுமையாகப் பதிலளித்திருக்கின்றேன். ஆசிரியரைவிட்டு பிரதியைப்பற்றி பேசுகின்ற முறைமை ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதுதான். ஆனால் இவர் எந்தப் பிரதியின் உள்ளடக்கத்தைப்தைப்பற்றி (content) பேசுகின்றார் என்பதையே தெளிவாக முன்வைக்காது அல்லவா உரையாடுகின்றார். எந்த text என்ன content என்ன என்று தெரிந்தால்தானே நாங்களும் தெளிவாக உரையாடமுடியும். இல்லாதுவிட்டால் இப்படி தேவையில்லாத பொய்யை எல்லாம் அவிழ்த்துவிடுகின்ற (என்னால் இரு ஆசிரியர்களுக்கும் நெருக்கடிவந்துவிட்டது என்று...) ஒருவர், நான் இதைப்பற்றியா உரையாடுகின்றீர்கள் என்று எதையாவது விபரங்களுடன் எழுதப்போக இல்லை, அதுவில்லையென ஆட்டத்தை மாற்றமாட்டாரென்பதை எப்படி நம்புவது? மற்றது, /ஆசிரியனை விட்டு பிரதி பற்றிப் பேசுகிற ஒரு முறைமை ஏற்புடமையாகி நெடுங்காலமாகி விட்டது. / என்றால், ஆசிரியர் தனது பிரதி குறித்து வருகின்ற குற்றச்சாட்டுகளுக்கு, எனது பிரதி என்க்குச் சொந்தமில்லையென மவுனமாய் இருக்கவும் முடியுமல்லவா? சும்மா பகிடிக்குதான் சொன்னேன் :-).
---------------------------------

8/10/2007 12:28:00 PM
இளங்கோ-டிசே said...

ஒரு தெளிவிற்காய்: எனது முதற்பின்னூட்டம். ../நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
இத்தளத்திலிருந்து ஏதேனும் ஆக்கத்தை..../
என்பது நான் மேலே குறிப்பிடும் இந்த இரு சஞ்சிகளைகளை முன்வைத்து எழுதியதல்ல. அது வேறு சம்பவங்களை வைத்தே எழுதப்பட்டிருந்தது.. நான் ஒரு சஞ்சிகைக்கு பிரசுரிக்க அனுமதி கொடுத்தபோது இன்னொரு சஞ்சிகைக்காரர்கள் -அனுமதியில்லாது- எடுத்துப் பிரசுரித்திருந்தார்கள். என்ன செய்வது...என் விதி! அப்படி அனும்தி எடுக்காது பிரசுரித்தவர்களும் எனக்குத் தெரிந்த நண்பர்களாய் இருந்துவிட்டார்கள்.. அப்படிச் சில த்டவைகள் நடப்பதைப் பார்த்து அவர்களோடு நேரடியாக உரையாடி எனது விசனத்தை தெரிவித்துமிருக்கின்றேன். வலைப்பதிவில் வந்து ஆக்கத்தை எடுத்துப்போடும் நீங்கள் சில் வரிகளாவது மின்னஞ்சலிலோ அல்லது பின்னூட்டத்திலோ தெரியப்படுத்தியிருக்கலாம் என்று நேரடியாகக் கூறியுமிருந்தேன். அவர்களது வாழ்க்கை இன்னபிற நெருக்கடிகளை அவர்கள் தரப்பில் முன்வைத்திருந்தார்கள். ஆக்ககுறைந்தது நன்றி: ... இங்கிருந்து எடுத்தோம் என்றாவது போடச் சொல்லியிருந்தேன். இல்லாதுவிடின் நான் அனுமதி கொடுத்த பத்திரிகை ஆசிரியர் நான் தான் இரண்டு சஞ்சிகைகளுக்கும் அனுமதிகொடுத்தேன் என்று என்மீது கோபப்படக்கூடுமெனவும் சொல்லியிருந்தேன். ஆனால் அவர்கள் அதுகுறித்து அவ்வளவு அக்கறையில்லாது இன்னும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் அலுப்பிலேயேதான் --நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் - எனது பின்னூட்டதில் பதிவு செய்திருந்தேன். அவ்வளவே.

8/10/2007 03:27:00 PM
பிச்சைப்பாத்திரம் said...

பகிர்தலுக்கு நன்றி டிசே.

குணசேகரனின் 'வடு' நாவலைப் பற்றி எழுதும் போது 'கதை சொல்லி' எனும் வார்த்தைப் பிரயோகத்தை உபபேயாகித்திருக்கிறீர்கள். இது அவரின் சுயசரிதை. புதினமோ, சிறுகதையோ அல்ல. எனவே 'நூலாசிரியர்' என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நான் கருதுகிறேன். என்ன சொல்கிறீர்கள்? :-)

9/06/2007 03:52:00 AM
இளங்கோ-டிசே said...

தவறுதான். குறிப்பிட்டுக்காட்டியதற்கு நன்றி சுரேஷ் கண்ணன்.

10/05/2007 09:34:00 AM