கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

காசித்தும்பைப்பூ குறிப்புகள்

Tuesday, December 23, 2014

நஞ்சுண்டகாடு

அண்மையில் தமிழில் வந்திருப்பதில் தவறவிடாது வாசிக்கவேண்டிய ஒரு நாவல் இது. 2004ல் எழுதிமுடிக்கப்பட்டு பிரசுரமாவதற்கு இருமுறை தடைகளைச் சந்தித்து இப்போது (2014) பிரசுரமாயிருக்கிறது.

போரை நீண்ட சகாப்தங்களாய் ஈழத்தமிழர் சந்தித்தபோதும், ஏன் அழுத்தமான பதிவுகள் இன்னும் வரவில்லை என எழும் கேள்விகளுக்குப் பதிலாய், ஒரு நம்பிக்கைக் கீற்றைத் தருவதைப் போல 'நஞ்சுண்டகாடு' வந்திருக்கின்றது. இது போர்/இயக்கம் பற்றிய கதையென்றபோதும் ஒரு மினிமுகாம் தாக்குதல் மட்டும் சில பந்திகளால் நிரப்பப்பட்டு மிகுதி அனைத்துப் பக்கங்களிலும் போராளிகள்/மக்களின் மனங்கள் மிக நெருக்கமாய்ப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

அண்மைக்காலமாய்ப் ஈழப்போராட்டம் சார்ந்து எழுதப்படும் புனைவுகளில் அளவுக்கதிகமாய் நகைச்சுவை/எள்ளல் பாவிக்கப்படுவது சிலவேளைகளில் கூறவரும் விடயங்களை நீர்த்துப்போகச் செய்வதாய் இருப்பதை நாம் அவதானித்திருக்கக்கூடும். ஆனால் இந்நாவலில் நம்மையறியாமலே புன்னகை செய்துவிடச் செய்யும் இடங்களிலிருந்தாலும் அது நாவலிற்குள் துருத்தித் தெரிவதில்லை. பயிற்சி முகாங்களில் ஒருவரையொருவர் சந்தேகித்தபடியும், கோள்மூட்டியபடியும் இருப்பவர்கள் பின்னர் எப்படி தங்களுக்குள் நெருக்கமாகின்றார்கள் என்பதை மிக இயல்பாய்ச் சித்தரிக்கின்றது. இவ்வளவு நுணுக்கமாய் இயற்கையையும், போராட்டமென்று கூட்டுமனப்பான்மை வந்தாலும் ஒவ்வொரு மனித மனங்களுக்குள் நிகழும் அந்தரங்கமான உரையாடல்களையும் -குணாவின் முதல்நாவல் இது என்றுணாரா வண்ணம்- இதில் அருமையாக வளர்த்துச் செல்கின்றார்.

இந்த நாவல் நடைபெறும் காலகட்டம் (என் வாசிப்பின்படி) புலிகள் ஆனையிறவு முகாம் மீது முதன்முறை தாக்குதல் நடத்தித் தோல்வியடைந்த 'ஆகாய-கடல்-வெளி'யை அண்டித் தொடங்கி, யாழ் பெரும் இடம்பெயர்வு, சமாதானக்காலம் எனறு மூன்று வெவ்வேறு கட்டங்களைத் தொட்டு நிற்கின்றது. குணா கவியழகன் 2009ம் வரை இறுதி ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடியும்வரை நின்றதோடு, முள்வேலி தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி தற்போது வெளிநாடொன்றில் வாழ்வதாகக் கூறப்படுகின்றது. புனைவின் மொழி மிக இயல்பாய்க் கைவரப்பெற்றிருக்கும் குணா, தான் கடந்துவந்த பாதைகளை இன்னும் விரிவாக இனிவருங்காலங்களில் எழுதுவாரென நம்புகின்றேன்.

ஒரேயிரவில் என்னை எங்கும் அசையவிடாது, மனதின் ஆழங்களை ஊடுருவி நெகிழவைத்த 'நஞ்சுண்ட காட்டை' இந்த ஆண்டில் வெளிவந்த முக்கிய படைப்புக்களில் ஒன்று எனச் சொல்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை.


இரண்டு இழப்புக்கள்

-எம்.எஸ.எஸ்.பாண்டியன்

எம்.எஸ்.பாண்டியனை முதன்முதலாகவும் இறுதியாகவும் சந்தித்தது, ரொறொண்டோவில் நடந்த தமிழியல் மாநாட்டில். அவர் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார். "Nation Impossible"  என்ற தலைப்பில் பேசியிருந்தார். காலையிலிருந்து பல்வேறு அமர்வுகளில் அம்ர்ந்திருந்ததால் பாண்டியனின் உரையை ஆழ்ந்து கவனிக்க முடியாது போயிருந்தது. மேலும், பிறரை விட அறிவுசார் புலமையாளர்களை மிகுந்த சந்தேகத்துடன் பார்க்கும் என்னியல்பால் அன்றையகாலத்தில் பாண்டியனை நெருங்க அணுகவும் முடியவில்லை.

ஆனால் பிறகு வெளியரங்கில் தேவகாந்த்ன், எஸ்.வி.ராஜதுரையின் இல்லத்தில் பாண்டியனை நக்சலட்டுக்கள் தீவிரமாய் இயங்கிய காலங்களில் அடிக்கடி சந்தித்த அனுபவங்களைப் பகிர்ந்தபோது சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். பாண்டியனின் தனிப்பட்ட கட்டுரைகளை அவ்வப்போது வாசித்தபோதும் அவர் எழுதிய மூன்று புத்தகங்களில் எதையும் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் அவர் திராவிட இயக்கங்களின் தீவிர பற்றுள்ளவராக இருந்தபோதும், அண்ணாத்துரை(?) பற்றி மோசமாய் சித்தரித்துக் கார்ட்டூன் வரையப்பட்டபோது கருத்துச் சுதந்திரத்திற்காய் காட்டூனிஸ்ட் பக்கம் நின்றதும், அண்மையில் டெல்கி பல்கலைக்கழகத்தில் ஏ.கே.ராமானுஜத்தின் ராமாயாணக் கட்டுரை நீக்கப்பட்டபோது, அதற்குத் தனது எதிர்ப்பை அழுத்தமாய்ப் பதிவு செயததுமென அவரை இன்னும் நெருங்கமாய்ப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் வாய்த்திருந்தன.

இப்போது எஸ்.வி.ஆரின் அஞ்சலிக் குறிப்பை வாசிக்கும்போது, அவர் தாம்பரம் கல்லூரியில் சேரும்வரை ஆங்கிலத்தை முறையாகக் கற்றவரில்லை; பின்னரே தன் முயற்சியில் சிறந்த ஆங்கிலப் புலமையாளராக மாறினார் என்பதை அறிய நேர்ந்தது. ஆங்கில மோகம் கொண்டவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு குறிப்பு இது. ஒருவர் தன் வேர்களை தனது தாய்மொழியில் அறியாமல், இன்னொரு மொழியினூடாக ஆழமாக அறியவோ ஆய்வு செய்யவோ முடியாது. இன்னொரு மொழி நமக்குத் தேவையானபோது நம்மை வந்தடையச் செய்யும். நமது தாய்மொழியைக் கைவிட்டுத்தான் இன்னொரு மொழியைக் கற்கவேண்டும் என்கின்ற எந்த அவசியமுமில்லை. ஆகவே எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இந்த்விடயத்தில் நமக்கு நல்லதொரு உதாரணமாய் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கின்றார்.

மேலும், ராஜன்குறையின் இந்தக் குறிப்பில் "உண்மையில் கல்விப்புலம் சாராது சிந்தனையாளர்களாகவும், ஆய்வாளர்களாகவும் இருப்பவர்கள்மீது அவர் மிகுந்த மரியாதையும், பிரியமும் கொண்டிருந்தார். அதை வெளிப்படுத்தாது பல சமயம் அத்தகையோரிடம் கறாராக பேசுவதாக காட்டிக்கொள்வார்; உண்மை என்னவென்பது அருகிலிருந்து தொடர்ந்து அவதானித்த என் போன்றோருக்கே தெரியும்" எனக் குறிப்பிடும்போது பாண்டியனை இன்னும் நெருக்கமாய் உணர்கின்றேன். பட்டம் பெற்று பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளராய் நுழைந்தவுடனேயே சுயம்புவாய்த் தோன்றிய மாற்கு மாஸ்ரரையும், அவரின் பாதிப்பில் உருவாகிய தனித்துவமான ஓவியர்களையும் நிராகரித்த ஓரு 'அறிவுசார் புலமையாளரையும்' எம்.எஸ்.எஸ்.பாண்டியனைச் சந்தித்த அதே தமிழியல் மாநாட்டிலேயே நானும் சந்தித்திருக்கின்றேன் என்பதால் பாண்டியன் பலருக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கின்றார், இனியும் இருப்பார் என்பது இதமாயிருக்கின்றது.

-ருத்ரைய்யா

'அவள் அப்படித்தான்' திரைப்படம் நான் பிறப்பதற்கு முன்னரே வெளிவந்த படம். ஆனால் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தபோதும் அவ்வளவு நெருக்கமாகவும் புதுமையாகவும் இருப்பது என்பதுதானே இன்னும் முக்கியமானது.

சில வருடங்களுக்கு முன் நணபரொருவரினூடு ஒரு தோழி அறிமுகமானார். அந்தத் தோழியோடு சிலதடவைகள் பொழுதைக் கழித்தபோதும், ஒருநாள் தற்செயலாய் அவரின் last name அறிந்தபின்னர், ஏதோ நினைவு வர, உங்கள் தந்தையின் பெயர் ருத்ரைய்யா என்றிருக்கின்றதே. நீங்கள் 'அவள் அப்படித்தான்' இயக்கிய ருத்ரைய்யாவின் மகளா என அவரிடம் சும்மா கேட்டேன். ஆனால் நிஜத்திலே அவர் ருத்ரைய்யாவின் மகள் என்றபோது எனக்கு வந்த பரவசத்தை விபரித்துவிட முடியாது. தன் தந்தையின் பெயரால் அறிமுகமாவதை விரும்பாததாலோ என்னவொ அவர் அப்படி அறிமுகப்படுத்திக் கொள்ளாவிட்டாலும், நானாக அவரைக் கண்டுபிடித்ததில் எனக்குச் சிறு பெருமிதம் அன்று இருந்திருந்தது. பிறகு என் நண்பர்களுக்கு எல்லாம் அதே பரவசத்துடன் இந்தத் தோழியை அறிமுகப்படுத்தினேன். அவரின் வீட்டிலும்/வெளியிலும் சென்று விருந்துண்பதிலிருந்து, ரொறண்டோ தமிழ் திரைப்பட விழாவிற்கு நடுவர்களாய் சேர்ந்து சிறந்த படங்களைத் தெரிவுசெயவதிலிருந்து, நாம் நடத்திய 'சுடருள் இருள்' நிகழ்வுகளிற்கு வருவது வரை என நெருக்கமாயிருந்தோம்..

அப்படி அவர் நெருக்கமாயிருந்தபோதும், அன்றையகாலங்களில் என்னுடன் நெருக்கமாயிருந்த நண்பரிடம் அவர் ருத்ரைய்யாவின் மகள் என்று அடிக்கடி பரவசப்பட்டபடி கதைத்துக்கொண்டிருப்பேன். நண்பரோ எத்தனைமுறைதான் இதையே திரும்பச் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பாய் என அலுத்துக்கொள்ளுமளவிற்கு 'அவள் அப்படித்தான்' மீது மோகத்தில் இருக்கும் ஒருவன் நான்.

ருத்ரைய்யா தொடர்ந்து படங்கள் செய்வதற்கென சில திரைப்படக்கதைகளுடன் இருந்தார் என அவரின் மகள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இப்போது சமயவேல் எழுதிய இந்தக் குறிப்பில் "அவள் அப்படித்தான்" வெற்றிக்குப் பிறகு அவரது எதிரிகள் அதிகரித்தார்கள். "சீரியஸ் சினிமா" தமிழில் வரக்கூடாது என்று ஒரு கூட்டம் தமிழ்த் திரையுலகில் அன்றிலிருந்து இன்று வரை அலைந்து கொண்டிருக்கிறது. அவரது அடுத்த படத்தைத் தொடங்க முடியாத சதிகாரர்கள் தீவிரமாக உழைத்தார்கள். அவரை இயங்கவிடாமல் முடக்கினார்கள்." என்பதில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. இல்லாவிட்டால் ஏன் ருத்ரைய்யா தன் திரைப்படக் கதைகளை இறுதிவரைப் படமாய் எடுக்கமுடியாது தவிக்கவேண்டியிருந்தது.

ஒருவகையில் இது ருத்ரைய்யாவிற்கான இழப்பல்ல, நம்மைப் போன்ற திரைப்பட இரசிகர்களுக்கான இழப்பாய்த்தான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கின்றது. இவ்வாறு நல்ல படங்கள் வர அனுமதிக்கா தமிழ்த் திரைப்படச்சூழலைச் சபிப்பதைவிட வேறெதைத்தான் செய்யமுடியும்?

ஆனாலும் என்ன, ஈழத்து இலக்கியச் சூழல் குறித்து எழுதும்போதெல்லாம், 'தொடர்ச்சியாக எழுதுவதல்ல முக்கியம், குறைவாய் எழுதினாலும் நிறைவாய் எழுதினாலே, அந்தப் படைப்பாளிகளை நினைவில் என்றென்றைக்குமாய் வைத்திருக்கும் மரபொன்று எங்களுக்கு இருக்கின்றதென்று' அடிக்கடி நினைவுபடுத்தியிருக்கின்றேன். அவ்வாறே ருத்ரைய்யா இரண்டு படங்களோடு நிறுத்திக்கொண்டாலும், அவரை என்றும் நினைவு கொள்ள 'அவள் அப்படித்தான்' எங்களிடையே இருப்பாள்.

தந்தையின் இழப்பில் தவிக்கும் தோழிக்கு என் ஆறுதல்கள்.


காவியத்தலைவன்

கதையின் சில பாத்திரங்களின் சாயல்களை ஏற்கனவே தெரிந்ததாலோ என்னவோ ஏற்கனவே தெரிந்த கதையைப் பார்ப்பது போன்ற உணர்வே இருந்தது. இறுதிமுடிவைக் கூட இப்படித்தான் முடியும் என்று ஊகித்திருந்தேன். வசந்தபாலனும் ஜெயமோகனும் சேரும் படங்களென்றால் இப்படி மனதை அழ/அழுத்த வைப்பார்கள் என்பதால் அவ்வாறு நினைத்திருந்தேனோ தெரியவில்லை. நாசர் இருக்கும்வரை படம் சுவாரசியமாகப் போனது. 'இருவர்' படத்தின் அரசியல் பற்றி எவ்வளவோ பேசலாம் என்றாலும், அந்த 'இருவருக்கிடையிலான' பொறாமை/போட்டி என்பது வெகு இயல்பாய்க் காட்டப்பட்டிருப்பதாய் நினைவு. இங்கே இரு நடிகர்களுக்குள் தம்மை முன்னிறுத்த விரும்பும் விழைவுகளில் ஒருவரை மட்டும் வழமையான 'வில்லன்' பாத்திரத்திற்குள் அடக்கிவிடும்போது வழமையான 'நாயக-வில்லன்' பாத்திரங்களிற்குள் சிக்கிவிட்டதாய்த் தோன்றியது.

உண்மையில் ராஜபாட் பாத்திரம் ஏற்கக்கூடிய/ அல்லது அதை தன் லட்சியமாகக் கொள்ளும் ஒருவரை விலத்தி, குரு தன்னை அந்த வேசம் கட்டச்சொல்லும்போதே, அதை ஏற்கும் பாத்திரத்திற்கு அது குறித்த அற/மனப்போராட்டம் நிகழ்ந்திருக்கும். ஆசான் சொன்ன சொல்லைத் தட்டக்கூடாதென்று அவர் கூறியதை சிரமேற்கொண்டாலும், தன்னைச் சகோதரனாக (அல்லது தான் சகோதரனாக நினைக்கும்) பாத்திரம் குறித்தும் சற்றேனும் யோசித்திருக்குமல்லவா? ஆனால் படத்தில் எந்தக் காட்சிகளும் அவ்வாறு இல்லை.

ஜெயமோகன் இது குறித்து எழுதியதை வாசித்தபோது அது தெருக்கூத்திலிருந்து வரும் மிகையுணர்ச்சி நடிப்பு X யதார்த்த நடிப்பு என்கின்ற இரு வேறுபட்ட நடிப்பிலிருந்தே இவ்விரு முக்கிய பாத்திரங்களும் உருவாக்கப்பட்டன என்று அறிந்தாலும், படத்தில் அதை அவ்வாறு உணரும்படியாக காளியின் பாத்திரம் இல்லை. ஒரேயிடத்தில் மட்டும் 'கர்ணமோட்சம்' நிகழும்போது மட்டும், நாடகம் முடிந்தபின் ஒரு காட்சியாக அர்ஜூனனின் உள்ளக்கிடக்கை விரியும்போதே கொஞ்சம் தொட்டுச் செல்கின்றது.

ஜெயமோகனின் 'சம்பாஸணை'யில் 'அம்மா, வேண்டுமென்றால் உன்னை அம்மாவாக்கின்றேன்' என்று நொடிநேர கிளுகிளுப்பிற்காய் ஒரு பாத்திரம் பேசுவதைச் சகித்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு ஆணின் மீது எவ்வளவு மையலிருந்தாலும் 'உங்களின் குழந்தையிற்குத் தாயாவதே என் பாக்கியம்' என்றெல்லாம் அதி நாடகீயமான வசனமிருக்கும்போது, பெர்னாட் ஷாவிடம் ஒரு அழகி கேட்டார் என்ற ஒரு 'நகைச்சுவை'யே நினைவிற்கு வருகின்றது. அன்றையகாலத்தில் இப்படிப் பேசியிருக்கலாம் என்றாலும், இன்றையகாலத்திலாவது ஒரு ஆண்/பெண் மீதான காதல் என்பது இறுதியில் குழந்தை பெறுவதில்தான் இருக்கிறது என்பதையாவது மாற்றி யோசிக்கவேண்டாமா? அதைவிட சகிக்கமுடியாதது இலக்கியம் அறிந்த இவர்களே 'பொட்டை' போன்ற வசனங்களைச் சேர்த்திருப்பது.

வசந்தபாலனின் 'வெயில்' எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று. 'அங்காடித்தெரு' ஒரே அழுகையான/துயரம் தொடர்ச்சியாக சூழ்ந்துகொண்டிருப்பதை அளவுக்கதிகமாய் திகட்டத் திகட்டத் தந்த படமென எழுதியிருக்கின்றேன். 'அரவானை' அது திரைப்படமாக்கிய விதத்தை விட, அது 'காவல்கோட்டத்தோடு' எவ்வளவு ஒத்தியியைகிறது/விலகுகிறது எனப் பார்ப்பதே என்னளவில் சுவாரசியமாயிருந்ததெனக் கூறினேன். வரலாற்றுப் படங்களை எடுப்பது என்பது எவ்வளவு கடினமென்றும், அதற்கான அவ்வளவு 'வியாபாரச்சூழல்' இல்லையென்றபோதும் அந்த ஆபத்தான பாதையையே வசந்தபாலன் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது நன்கு புரிந்தாலும், இவ்விரு படங்களிலும் பார்ப்பவர்களை உள்ளிழுக்கும் எதுவோ இல்லாமற்போகின்ற திரைக்கதை இருக்கின்றதை அவர் கண்டுகொள்ளவேண்டும்.

எனக்கு இப்படத்தில் பிடித்திருந்த விடயம் பெண் பாத்திரங்கள். இரு பெண் பாத்திரங்களும் மிக இயல்பாய்ச் செய்கின்றார்கள். மேலும் கதையின் போக்கிற்குத் துருத்தித்தெரியாது premarital sex ஐ இயல்பாய்க் கொண்டு சென்றிருக்கின்றார்கள். ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலித்தவன்/ அவளோடு நெருங்கிப்பழகியவன் என்பதை நன்கறிந்தும், தன்னைத் தொடர்ந்து காதலிக்கும் இன்னொரு ஆணையும் உதாசீனம் செய்து, ஒரு பெருங்குடிகாரனை அவ்வளவு ஆழ்ந்து நேசிக்க ஒரு பெண்ணுக்கு நிச்சயம் பல்வேறு காரணங்கள் இருந்திருக்கும். அதனூடாக வேதிகாவின் பாத்திரத்தை செழுமைப்படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்,

எவ்வளவோ அபத்தமான படங்கள் வரும்போது இவ்வளவு நுணுகிப் பார்க்கவேண்டுமா எனக் கேள்வி எழுதலும் இயல்பு. ஆனால் வசந்தபாலன் நிறைய வாசிப்பவராகவும், தமிழின் கவனிக்கத்தக்க எழுத்தாளர்களை தன் திரைப்படங்களில் பயன்படுத்திக் கொள்கின்றவராகவும் இருப்பதால் எதையாவது இன்னும் வித்தியாசமாக -பார்ப்பவர்களும்- எதிர்பார்ப்பதும் இயல்பே.

இவ்வாறு கூறுவதால் 'காவியத்தலைவன்' மோசமான படம் என்பதல்ல அர்த்தம். வசந்தபாலன் மீது இன்னும் நம்பிக்கை வைத்து எப்போது திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்த்து முதல்நாள் காட்சி பார்க்கும் ஒருவரின் எதிர்பார்ப்புக்களை அவ்வளவு நிறைவேற்றவில்லை எனவே கூறவருகின்றேன். மேலும் தம் படைப்புக்களினூடாக வீழ்ந்தும், எழுந்தும் செல்லாத கலைஞர்கள் என்றும் எவருமில்லை.

2 comments:

கரிகாலன் said...

ருத்திரையா என்பது அவரின் இயற்பெயர் இல்லை என் நினைக்கிறேன் சினிமாவுக்காக வைத்த பெயர்

12/23/2014 12:45:00 PM
இளங்கோ-டிசே said...

கரிகாலன், அவரின் இயற்பெயர் ருத்ரைய்யாதான். அவரின் பால்யகால நண்பர் நல்லுச்சாமி அப்படித்தான் சொல்கின்றார்.

"...ருத்ரய்யாவின் பெயர் ‘அவள் அப்படித்தான்’ பூஜைவரை ஆறுமுகம். அவரை ஆறுமுகம் என்றுதான் கூப்பிடுவோம். படத்திற்கு விளம்பரம் கொடுத்தபோது தனது பெயரை ருத்ரய்யா என மாற்றிக்கொண்டார் ஆறுமுகம். ருத்ரய்யா என்னும் பெயரே அவருடைய பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் ஆகும். ஆனால் பள்ளியில் உடன் படித்த நண்பர்கள் அனைவரும் அந்தப் பெயரைக் கிண்டல் செய்ததால் அழுது அடம்பிடித்து தன் பெயரை ஆறுமுகம் என மாற்றியிருந்தார். படம் இயக்க வந்த பின்னர் மீண்டும் ருத்ரய்யாவானார்."
http://www.kalachuvadu.com/issue-180/page48.asp

12/23/2014 04:21:00 PM