கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பூவசரம்பூ குறிப்புகள்

Friday, December 05, 2014

Birdman

Alejandro González Inárritu இம்முறையும் ஏமாற்றவில்லை. இது Amores Perros, 21 grams, Babel வகைப் படமல்ல. Biutifull வகையிற்கு ஒரளவு அருகில் வரக்கூடிய படம். ஆனால் Biutiful அதிக மனவழுத்ததிற்கு கொண்டுபோகும், மகிழ்ச்சியிற்கான சிறு இடத்தையும் தராத படம். Birdman சிரித்துப் பார்க்கக்கூடிய படம். எனினும் அதற்குப் பின்னால் இருக்கும் துயரத்தையும் மனவழுத்தத்தையும் நேர்த்தியாய்க் கொண்டுவருகின்றது.

ஒருகாலத்தில் super hero படங்களில் நடித்து, புகழ் மங்கிய காலத்தில் Broadwayயிற்கு வருகின்ற ஒரு முன்னாள் திரைப்பட நடிகரின் கதை. நாடக மேடையிற்காய் அவர் ரேமண்ட் கார்வரின் 'What We Talk About When We Talk About Love' கதையை எடுத்து இயக்கவும் நடிக்கவும் செய்கிறார். மனைவியைப் பிரிந்தவர்; மகள் rehab லிருந்து திரும்பி வருகின்றார்; மேலும் இவரின் நாடகத்திற்குள் தற்செயலாய் நுழையும் இன்னொரு நபர் அதற்கான எல்லாப் புகழையும் எடுத்துக்கொள்கிறார் என அனைத்தையும் அந்தரமாய் எதிர்கொள்ளவேண்டிய ஒருவரின் வாழ்க்கையைப் பின் தொடரும் திரைப்படம். இசையும், ஒளிப்பதிவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. எந்த வகையில் கமராக் கோணங்கள் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாமறியாமலே வெவ்வேறு சூழலிற்கு காட்சிகளுக்கு நகர்த்தப்படுவது ஒருவகையான வித்தைதான்.

வணிகச் சினிமாவையும், மில்லியன்கணக்கில் லாபம் ஈட்டும் super hero திரைப்படங்களையும் இது ஒருவகையில் கேலி செய்கின்றது. அது மட்டுமின்றி இன்றைய நவீன தொழில்நுட்ப ஃபேஸ்புக், ட்வீற்றர் போன்றவற்றைத் தெரியாத/அணுகாத ஒரு சமூகத்திற்கு இனியான எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதையும், பிறகு ஒரு தற்செயலான -முட்டாள்சம்பவத்தினால்- எப்படி இந்த நடிகர் சமூக ஊடகங்களில் பிரபல்யம் ஆகின்றார் என்பதையும் அதற்கேயுரிய அபத்தங்களுடன் நம்முன்னே வைக்கப்படுகின்றது.

யதார்த்த்தை மீறிய இலத்தீன் அமெரிக்கர்களைப் பாதிப்புச் செய்யும் மாய யதார்த்தமும் இந்தப் படத்தில் கலந்திருக்கின்றது. ஆகவேதான் தற்கொலை என நாம் நினைப்பதைச் சடுதியாய் மாற்றி பறப்பதாய்க் காட்டமுடிகின்றது. இறுதிக்காட்சியில் கூட என்ன நடந்திருக்குமென நமக்குக் காட்டாது 'பறவைமனிதனின்' மகள் எதையோ பார்த்துப் புன்னகைப்பது கூட ஒரு முடிவுறாத சிறுகதை போன்று நம்மை இன்னுமின்னும் அத்திரைப்படத்தைப் பற்றிச் சிந்திக்க வைக்கின்ற புள்ளியே.


The Tiger Vanquished (LTTE's story)

எம்.ஆர். நாராயண் சுவாமியின் The Tiger Vanquished நூலை வாசித்துக்கொண்டிருக்கின்றேன். நாராயண் சுவாமி நல்லாய்க் கதை சொல்லக்கூடியவர் என நினைக்கின்றேன், ஏதோ எல்லாவற்றையும் அருகிலிருந்து பார்த்தமாதிரி, என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதைக் கூறும்போது அப்படி நினைக்காமல் வேறெப்படி நினைக்க முடியும். இப்படி 'நன்றாகக் கதை' சொல்லக்கூடிய இன்னொருவர் டி.பி.எஸ்.ஜெயராஜ். தனக்கு கிடைத்த 'சோஸ்களை'க் கூட ஒழுங்காய்த் தராது டிபிஎஸும் அருகிலிருந்து பார்த்தமாதிரி எழுதுவார். அதனால்தான் நிறையப் பேர் சுவாரசியமாக இவர்களை வாசிக்கின்றார்கள் என்பது வேறுவிடயம். டிபிஎஸின் அநேக கட்டுரைகளில் விபரிக்கப்படும் பல சம்பவங்களை ஏற்கனவே வேறு யாராவது எழுதியிருப்பதைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் டிபிஎஸ் அதைப் பற்றிய எல்லாம் கவலைப்படாது ஏதோ தனக்கு மட்டுமே கிடைத்த தகவல் என்கின்றமாதிரி எழுதிக்கொண்டு போவார்.

எம்.ஆர்.நாராயண் சுவாமி ஒரு பத்திரிகையாளர் என்றாலும், அவர் றோவோடு நெருங்கிய தொடர்புள்ள ஒருவராக இருக்கலாம் என்பதற்கான புள்ளிகளையும் இதில் அவரையறியாமலே தருகின்றார். இந்தியாவில் நிறையப் பத்திரிகையாளர்கள் இப்படி இருக்கின்றார்கள் அல்லது பின்னால் றோவால் உள்வாங்கப்படுகின்றார்கள் என்பதும் அவ்வளவு பரம இரகசியம் அல்ல.

ஈழப் போராட்டம் குறித்து புனைவுகள் எழுதப்படவேண்டும்; அதையெவரும் மறுக்கப்போவதுமில்லை. அதேபோலவே வரலாற்றுத் தரவுகளோடு ஆய்வுரீதியான கட்டுரைகளும் இன்னும் அவசியமாய்த் தேவைப்படுகின்றன. இல்லாவிட்டால் மீண்டும் ஒரே வட்டத்திற்குள் நுழைந்துவிடும் அபாயம் ஈழம் சார்ந்து இன்னமும் இருக்கின்றது. புலிகளை ஒரு 'தீவிரவாத இயக்கமாய்' கட்டமைத்து நாராயண் சுவாமி எழுதுவதில் பிரச்சினையில்லை. ஆனால் புலிகள் அவ்வாறு ஆக்கப்பட்டுவிட்டால் இந்திய இராணுவமோ அல்லது இலங்கை இராணுவமோ 'நல்லவர்களாக/தியாகிகளாக' மறுஜென்மம் எடுத்துவிடுவார்கள் என்று நாராயண் சுவாமி போன்றவர்கள் நம்புவதை நினைக்கத்தான் சற்று வியப்பாய் இருக்கிறது.

நாராயண் சுவாமியிற்கு இந்திய/இலங்கை அரசுக்களின் மீது அபரிதமான அன்பிருந்தால் கூட சிலவேளைகளில் உண்மையைக் கூறிவிடுகின்றார். புலிகளுக்கும் - இலங்கை அரசுக்கும் இடையிலான (நோர்வே) சமாதானப் பேச்சுக்களை முதலில் ஆரம்பித்ததே இந்தியாவின் றோதான் என்ற முக்கிய உண்மையை இந்த நூலில் குறிப்பிடுகின்றார்,. ஒரு நாட்டிற்குள் நடக்கும் உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பது என்றால் அல்லது சமாதானத்தைக் கொண்டுவருவது என்றால் ஒரு அரசல்லாவா தன்னை வெளிப்படையாக முன்வைத்து வெளிவரவேண்டும். ஆனால் ஒரு நாட்டின் உளவுப்பிரிவான றோதான் உள்ளே இருந்து சமாதான நடவடிக்கையைத் தொடங்குகின்றனர் என்றால் நாம் யோசிக்கவேண்டும் அல்லவா? மேலும் அன்றைய காலகட்டத்தில் புலிகள் இலங்கை இராணுவத்தினருக்கு நிகரான அமைப்பாக போர்க்களங்களில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டிருந்த காலமும் கூட என்பதைக் கவனித்தாக வேண்டும்.

அதுமட்டுமில்லாது, சந்திரிக்கா அரசாங்கம் புலிகள் மீது தாம் சார்பாக இருக்கக்கூடும் என்று நினைக்கக்கூடும் என்பதால், றோ அதேகாலகட்டத்தில் இலங்கை அதிரடிப்படையினரை அழைத்து இந்தியாவில் பயிற்சி கொடுத்திருக்கின்றனர் என்பதையும் நாராயண சுவாமி குறிப்பிடுகின்றார்.

ஆக றோ(இந்தியா) ஒருகாலத்தில் தன் இயல்பில் தொடங்கிய தமிழ் போராட்டக் குழுக்களை இந்தியாவிற்கு அழைத்து பயிற்சியும், ஆயுதங்களும் கொடுத்து, இலங்கையிற்குப் போய் மற்றவர்களையும் அழியுங்கள் உங்களையும் அழியுங்கள் எனக் கற்றுக்கொடுத்தனர். பிறகு சமாதானக் காலத்திலும், சிங்களவர்க்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து, இப்போது சமாதான காலம் என்றாலும் விரைவில் உங்களுக்கு நாங்கள் வேறொரு வேலை தருகின்றோம் எனச் சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள் போலும்.

ஈழப்போராட்டத்தின் இறுதிக்கட்டங்களில் மட்டுமல்ல, ஜேவிபி கிளர்ச்சிகளின்போதெல்லாம் இலங்கை அரசுக்கு இந்திய அரசு உதவிய கடந்தகாலங்கள் எல்லாம் உண்டல்லவா?

இதையெல்லாம் நாராயண் சுவாமி போன்றவர்கள் விவரித்து எழுதமாட்டார்கள். அதற்கு அவர்களின் 'பத்திரிகா தர்மம்' மட்டும் அல்ல, இந்தியத் தேசியப் பெருமிதமும் கைகொடுக்காது என்பதே உண்மை.


சிலநாட்களுக்கு முன்னர் தோழியொருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது ராஜம் கிருஷ்ணனின் மரணத்தைப் பற்றிய பேச்சு வந்தது. ராஜம் கிருஷ்ணனின் இறுதிக்காலத் தனிமையையும், வேதனையையும் போலத்தான் நமக்கும் நிகழ்ந்துவிடுமா எனக் கதைத்துக்கொண்டிருந்தோம். தனிமையிலே கழியக்கூடிய சாத்தியமுள்ள நம்முடைய முதுமையில் யார் வந்து நம்மைப் பார்ப்பார்கள் என்று கூறிவிட்டு தோழி, தன் சகோதரிகளின் குழந்தைகள் வந்து பார்க்ககூடும் என்றார். நானும் இப்போது என்னோடு நெருக்கமாய் இருக்கின்ற அண்ணாக்களின் பிள்ளைகள் வந்து பார்க்கக்கூடுமென நினைத்துக்கொண்டேன். ஆனால் அவர்கள் இங்குள்ள கலாசாரத்திற்குள் பிறந்து வளர்ந்ததால் இப்படி எதிர்ப்பார்ப்பது கூட சரியானதோ தெரியவில்லை என அந்தத் தோழியிடம் கூறினேன்.

இப்போது அம்பை, சு.கிருஷ்ணமூர்த்தியின் மறைவைப் பற்றி 'அஞ்சலி: பாதையின் முடிவு' எழுதியிருப்பதை வாசித்தேன். அதில் "குடும்பம் இல்லாத எழுத்தாளர்கள், குடும்பத்திலிருந்து வெளியே வந்தவர்கள், முதுமையிலும் உற்சாகமாக இயங்கிக்கொண்டிருப்பவர்கள், நோயுற்ற எழுத்தாளர்கள் இவர்கள் தங்கக்கூடிய ஆரோக்கியமான சூழல் உடைய இடம் ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. வெளிநாட்டுக் கலைஞர் ஒருவரை ஒருமுறை சந்தித்தபோது கலைஞரான அவர், அன்னையைக் கலைஞர்களுக்கான ஓர் இல்லத்தில் சேர்த்திருப்பதாகக் கூறினார். ஓவியர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் என்று பலரும் இருக்கும் இல்லம் அது என்றார். அப்போது அந்தமாதிரி ஓர் இல்லம் இங்கு அமைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. முதுமையைக் கழிப்பதற்கான இல்லம் இல்லை. முதுமையை அனுபவிக்கும் இல்லம்; முதுமையைக் கொண்டாடும் இல்லம். இளவயதினர் வந்துபோகும் இல்லம். "
 பற்றி எழுதியிருப்பார். ஆகக்குறைந்தது என்னைப் போன்றவர்கள் முதுமையிற்குள் நகருவதற்குள்- அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஆனால் இது குறித்து சுந்தர ராமசாமி அம்பையிடம் கேட்ட கேள்வியும் நான் தொடர்ந்து சொல்லிவருவதுதான். எனக்கும் எழுதுவது பிடிக்கும். பிற எல்லாவற்றையும் விட இதில் ஈடுபடும்போது மிகுந்த அமைதி அடைகின்றதும் உண்மையே ஆனால் அதற்காய் எழுத்தைச் சிறப்புச் சலுகையாக்குவதை அல்லது அவ்வாறு ஆக்குபவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை. ("சுராவிடம் ஒருமுறை இதுபற்றிப் பேசியபோது, எழுத்தாளர்கள் எந்த வகையில் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் இத்தகைய சிறப்புச் சலுகைகள் பெற என்ற கேள்வியை எழுப்பினார். அது சரியான கேள்விதான். எழுதுவது என்பது எந்த வகையிலும் தனிச் சிறப்பு உள்ள ஒன்றில்லைதான். ")

இங்கும் நம்மிடையே இருக்கும் நண்பர் ஒருவரும் அடிக்கடி கம்யூன் தொடங்குவது குறித்து பேசிக்கொண்டிருப்பார். அம்பை விரும்புவதைப் போல எழுத்தாளர்களுக்கென ஒரு இல்லம் அமைக்காதுவிட்டால் கூட, நான் முதுமையடைவதற்குள் நமக்குப் பிடித்தமாதிரி ஒரு கம்யூனாவது இருந்தால் எவ்வளவு நிம்மதியாயிருக்கும்.


சென்ற வாரம் முன்பு படித்த ஒரு பாடசாலையின் நிகழ்விற்குச் சென்றிருந்தேன். கனடா வந்த புதிதில் அடிக்கடி அங்கே முகத்தைக் காட்டிக்கொண்டிருந்தாலும், பின்னர் எல்லா 'அமைப்பு'க்களிற்கும் இருக்கும் அதிகாரப் போட்டியில் இங்குமிருப்பதைப் பார்த்து வெறுத்துப்போய், 'ஞானம் பிறக்க புத்தனுக்கு ஒரு போதிமரம் போதும்/ இந்த வயசுப்போனதுகள் தெளிய/ எத்தனை போதிமரங்கள் தேவை' என எழுதிக்கொடுத்திருந்தேன். என்னதான் இருந்தாலும் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பண்பு இருப்பதால், அதையும் அன்றைய ஆண்டு மலரில் பிரசுரித்திருந்தார்கள்.

அமைப்பாய் இல்லாதபோது, தனிப்பட்டு பலர் நல்ல நண்பர்களாகவே இருக்கின்றார்கள். எப்போதாவது அவர்கள் அழைக்கும்போது கலைவிழா நிகழ்வுகளுக்குப் போவதுண்டு. ஆனால் அங்கேயும் அரங்கத்திற்கு வெளியே ஏதாவது வேலை செய்யவோ இல்லை இடைவேளையில் சாப்பாடு கொடுப்பதற்கு பொறுப்பாகவோ அனுப்பிவிடுவார்கள் என்பதால் ஒருபொழுதும் நிகழ்ச்சிகளை ஒழுங்காய்ப் பார்க்க முடிந்ததில்லை.

நிறைய மனிதர்கள் கூடும் இடங்கள் எனக்கு எப்போதும் அந்தரத்தைத் தந்துகொண்டிருப்பவை. மால்களில் சில கடைகளுக்குப் போனவுடனேயே தலைசுற்றும் நிலை வந்துவிடும் விசித்திரதன்மை எனக்கு இருக்கிறது. இம்முறை கலை நிகழ்விற்கு அண்ணாவின் பிள்ளைகளான எழிலும், நிலாவும் நிகழ்ச்சிகள் செய்வதால் போகலாமென்றிருந்தேன். போனாலும் எங்கேயாவது பிறர் கண்ணில்படாமல் ஒளிந்துவிடவேண்டும் என்று நினைத்திருந்தேன். மண்டபத்தில் பல்கணி இருக்கைகள் இருந்ததால் அங்கே எளிதாய்ப் பதுங்கிவிட முடிந்தது.

ஏற்கனவே 15வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்குப் பாடல் போட்டிகள் நடத்தபட்டு, அவர்களில் 6 பேர் தெரிவுசெய்யப்பட்டு, ஒவ்வொருவரும் ஒரு கீர்த்தனையும், ஒரு சினிமாப்பாட்டும் பாடினார்கள். மிக நல்லாய்ப் பிள்ளைகள் பாடினார்கள். சினிமாப் பாடல்களில் நிறைய ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை (மார்கழித் திங்கள் அல்லவா, 'வெள்ளைப் பூ') பாடியதால் எனக்கு இன்னும் பிடித்திருந்தது. நன்றாகத் தமிழை உச்சரித்துப் பாடியது மகிழ்ச்சியளித்திருந்தது.

நடன நிகழ்ச்சிகளும் நடந்தது. அப்போது என்னோடு இங்கே உயர்கல்லூரியில் படித்த தோழியையும் சந்திக்க முடிந்திருந்தது. அவர் எங்கள் பாடசாலையில் பல்கலாச்சார நிகழ்வுகள் நடக்கும்போது நடனமாடுவார். அரங்கில் என்னோடு இருந்து பார்க்கும் தோழிகள், ஆகா எவ்வளவு அழகாய் கண்ணை உருட்டி ஆடுகின்றார் என வியப்பார்கள். எனக்குத் தூரப்பார்வை பிரச்சினையென்பதால் இவ்வாறான 'நுண்ணிய தளங்கள்' எல்லாம் புலப்படுவதில்லை. அந்த நடனமாடும் தோழியை பார்வையாளராய்ப் பார்த்தபோது, நமக்கான காலங்கள் போய்விட்டது அல்லவா எனக் கூறவேண்டும் போலத்தோன்றியது. இன்னொரு பெண் என்னை அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு என்னை இலங்கையிலோ, கனடாவிலோ அல்லது இடைநடுவிலோ தெரிந்திருக்கக் கூடும். எனக்குத் தெரிந்தும் தெரியாமலும் நிறைய 'சம்பவங்கள்' நிகழ்ந்திருப்பதால் அவரை நெருங்கிக் கதைக்கவும் பயமாயிருந்தது.

நாடகம் தொடங்கியபோது, வயிற்றுக்கு உண்டியிடுவதில் நேரத்தை நிறையக் கழித்ததால் இடைநடுவிலேயே பார்க்கத்தொடங்கினேன். இரண்டு பேர் நிறையக் காலம் காதலித்து திருமணம் செய்கின்றார்கள். திருமணத்தின்பின் பெண் தன் நாயோடு நிறைய நேரம் செலவளிக்கிறார் என ஆணும், கணனியோடு எந்தநேரமும் துணைவர் இருக்கிறார் என பெண்ணும் சண்டை பிடித்து, பிறரால் சமரச முயற்சி செய்யப்பட்டும் பிரிந்து போகின்றார்கள்.

சில வருடங்களின் பின் அந்த ஆண் வேறொரு திருமணம் செய்துகொள்கின்றார். பெண்ணோ தன் குழந்தையோடு வாழுவதே தனக்குப் போதுமென இருந்துகொள்கிறார். இருவரும் ஓரிடத்தில் சந்திக்கும்போது தங்களால் பழைய காதலிலிருந்து விடுபடமுடியவில்லை, அது எவ்வளவு அருமையாக இருந்ததென நினைப்பதுடன் நாடகம் முடிகின்றது.

நல்லதொரு நாடகமே. ஆனால் அதில் ஒரு பாத்திரம் என்னதான் நடந்தாலும் சேர்ந்திருப்பதுதான் எங்கள் தமிழ் கலாசாரம் என நிறைய அறிவுரை கூறுவார்.அதற்குப்பிறகு நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கிய ஒரு வானொலி அறிவிப்பாளரும் எங்களுக்கு கலாசாரம் முக்கியம், அதற்கு தமிழ்மொழியை அறிந்துகொள்வது முக்கியம் என மேலும் கருத்துரை வழங்கினார். தமிழ் மொழியை அறிவது நல்லவிடயந்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழ்க் கலாசாரத்தில்தானே களவொழுக்கம், காந்தர்வமணம் என நிறைய இருக்கின்றனவே. நமது விருப்பங்களுக்கு ஏற்ப நடந்தால் அது நம் கலாசாரம். நம் விருப்பங்களுக்கு அப்பால் நிகழ்ந்தால், அது நம் கலாசாரம் அல்ல.

எல்லா மொழிகளுக்கும், கலாசாரங்களுக்கும் இருப்பதுபோலத்தான் நம்மிடமும் எல்லாமே இருக்கின்றன. நாமெவரையும் விட தாழ்ந்தவருமில்லை. அதேபோல் எவரை விட உயர்ந்தவருமில்லை என்பதோடு, இதையும் சொல்லிக்கொள்ளலாம், 'தீதும் நன்றும் பிறர் தர வாரா'.

( படங்கள்: நன்றி: கூகிள் தேடல்)

0 comments: