கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வர்ணங்களை உதிர்க்கும் வண்ணத்துப்பூச்சிகள்

Monday, December 08, 2014

-சுகுமாரனின் 'வெல்லிங்டன்' குறித்த வாசிப்பனுபவம்-

ரு ஊரைக் கடந்து போகையில் நாம் அதனை நினைவுகொள்ள எத்தனையோ விடயங்கள் இருக்கலாம். ஆனால் நாம் பார்க்காத, கடக்காத ஓர் இடத்தை நெருக்கமாக உணர சிலவேளைகளில் ஒரு புத்தகமே போதுமாயிருக்கும். அவ்வாறு நாம் விலகியோ/விலத்தியோ போக முடியாதவளவிற்கு 'வெல்லிங்டன்' என்கின்ற தான் சிறுவயதுகளில் வசித்த ஊரை இந்தப் புதினத்தில் மிக நுட்பமாகக் கட்டியெழுப்பியிருக்கின்றார் சுகுமாரன். சிறுவர்கள் வயதுக்கு வரும் நாவல்களிற்கு சாலிஞ்சரின் "Catcher in the Rye'ல் இருந்து அண்மையில் வெளிவந்த மைக்கல் ஒண்டாச்சியின் 'Cat's Table' வரை நிறைய உதாரணங்களைக் காட்ட முடியும். வெல்லிங்டன் உருவாகிய வரலாற்றை ஆங்கிலேயரின் குறிப்புக்களிலிருந்து தொடங்கி, அங்கே விஸ்தரிக்கப்படுகின்ற இராணுவ முகாங்களால் எவ்வாறு மக்கள் வெளியேற்றப்படுகின்றார்கள் என்பதையும், காடுகளும் மலைகளும் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதையும் சிறுவன் பாபுவின் பார்வையினூடு வெளிக்கொணரப்படுகின்றது.

மனிதர்கள் எங்கு போனாலும் 'மனிதர்களாகவே' இருக்கின்றார்கள். அன்பாய் வாழப் பிரியப்படுகின்றார்கள், பிடித்த யாரோடோ ஓடிப்போகின்றார்கள், பிறன்மனை தேடி அலைகின்றார்கள், சிறுவர்கள் மீது வன்முறை செலுத்துகின்றார்கள், மற்றவர்களுக்குக் கிடைப்பது தங்களுக்கு வாய்க்கவில்லையென பொறாமைப்படுகின்றார்கள், காதலுக்குத் துரோகம் செய்கின்றார்கள், துயரத்தின் மிகுதியின் வாழமுடியாது தற்கொலை செய்யவும் துணிகின்றார்கள். நாவலை வாசித்து முடிக்கும்போது நீங்களும் வெலிங்டனுக்குள், இன்னும் வாழ்ந்திருக்கலாமே என்று ஒரு பாத்திரமாக நிச்சயம் மாறியிருப்பீர்கள். சரஸ்வதி ரீச்சர் ஊரை விட்டு முற்றுமுழுதாக விலகும்போது ஏன் கண்கள் ஈரமாயின என்பதற்கு இப்போதும் சரியான காரணத்தைச் சொல்லத் தெரியவில்லை. பாபுவிற்கு பிரியமான, காமத்தின் முதல் அரும்பை கிளர்த்திய சக்குக்காவைப் போல, யாரேனும் ஒருவரைத் தாண்டாது நம்மில் அநேகர் வந்திருக்கவே முடியாது.

இந்த நாவலைப் போலவே, இந்த நாவல் எழுதியது பற்றி சுகுமாரன் எழுதிய பின்னுரையும் முக்கியமானது. நாவலை எழுதத் தொடங்கிய காலம்,  ஆரம்ப காலத்தில் எழுதியவை பிடிக்காமல் போனது, நாவலிற்கான மொழி கைவராமல் ஒரு தற்கொலையிற்கான மனதைப் போல சோர்ந்து நின்றது, பிறகு எழுதியதை நிறைய வெட்டியெறிந்துவிட்டு வேறொரு திசையில் எழுதிப்போனது, நாவலிற்கு ஆதாரமாய் வாசித்த நூற்கள், ஒருகட்டத்தில் நாவலை அதன்போக்கிலே போகவிட்டு, அதனைப் பின் தொடர்ந்து போனது என்று எழுதுகின்ற சுகுமாரனின் குறிப்புகள், நாவல்கள் எழுதப் பிரியப்படும் எந்த ஒருவருக்கும் மிகவும் பயன்படக்கூடியவை.

சுகுமாரன் பாபுவினூடாக முன்வைக்கும் அக்காக்கள் பலரின் வாழ்க்கை, எனக்கும் நெருக்கமானது. சிறுவன்களுக்கும் அக்காக்களுக்கும் உறவை, சிலவேளைகளில் அம்மாக்களால் கூட அறிந்து கொள்ளவோ/ விளங்கிக்கொள்ளவோ முடியாத அந்தரங்கங்களை உடையது. அக்காக்கள் காட்டும் அல்லது அவர்களின் பார்வையினூடு விரியும் ஒரு உலகைக் காணும் சிறுவன்கள் ஏதோ ஒருவகையில் வித்தியாசமான பருவத்தை பதினமங்களில் அடைகின்றார்கள். ஊரில் இருந்தபோது மட்டுமின்றி பிறகு இடம்பெயர்ந்து அலைந்தபோதும் நான் வெவ்வேறான அக்காக்களில் அரவணைப்பிற்குள்ளே இருந்திருக்கின்றேன். பதினமங்களை அடைந்தபோது, என் வயதொத்த பெண்களை விட, அக்காக்கள் போன்ற அனுபவங்களுள்ள பெண்களைத் தேடியே அலைந்திருக்கின்றேன், அது ஏனென்று நினைக்கும்போது சற்று வியப்பே வருகின்றது.

வெல்லிங்டனை வாசிக்கும்போது அந்த நிலப்பரப்பிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. அதன்பிறகு நாமும் ஒரு சாட்சியாக மாறும்போது நம்மால் நாவலின் பலத்தைப் பாராட்ட மட்டுமில்லை, பலவீனங்களைக் கூட புரிந்து ஏற்றுக்கொள்ள முடிகின்றது. நம்மை அதன் நிலப்பரப்பிற்குள்/பின்னணியிற்குள் அழைத்துச் செல்லாத நாவல் எத்தகைய சிறப்பாக இருந்தாலும், நாம் அதற்கு அந்நியராகிப் போய் முற்றுமுழுதாக அதனோடு ஒட்டிக்கொள்ள முடியாது போய்விடுகிறது. ஏன் வெலிங்டனோ, பூனையின் மேசையோ, சடங்கோ, காடோ, யாமமோ எனக்கு மிக நெருக்கமாய் இருக்கிறதென்று யோசிக்கும்போது, அவை தமக்கான நிலப்பரப்பை வாசிப்பவரிடையே ஆழமாய் உள்ளிறக்கியவை என்பது ஒரு முக்கிய காரணமென நினைக்கின்றேன்

நிறைய நண்பர்களோடு அலையும் பாபு, நண்பர்கள் ஒவ்வொருவராய் ஊர் விட்டு நீங்கி வேறு நகர்களுக்குப் போகின்றபோது, தனிமையில் உளைந்தலைகின்றார். பின்னர் தனிமையை தனக்குப் பிடித்தமான ஒன்றாக ஆக்கி, நெருக்கமும் கொள்கின்றார். அவ்வாறு பழக்கப்படுத்திக்கொண்டதாலேயே சரஸ்வதி ரீச்சர் ஊர் நீங்கிப் போகும்போதோ, கெளரி அக்கா வேலை நிமித்தம் செல்லும்போதோ துயரத்துடன் அந்நிகழ்வுகள் தரும் வெறுமையைத் தாங்கிக்கொள்ள முடிகின்றது. இவ்வாறு அனுபவங்கள் நமக்கு பல பாடங்களைக் கற்பிக்கும்போது, நாம் அவற்றைக் கடக்கையில் வளர்ந்த மனிதர்களாக ஆகிவிடுகின்றோம் அல்லவா?  இதை மிக நேர்த்தியாக சுகுமாரன் இந்நாவலில் கொண்டு வருகின்றார். இங்கேதான் சிறுவனான பாபு, வளர்ந்தவனாகி விடுகின்றான் என்பதையும் வாசிக்கும் நாங்கள் கண்டுகொள்கின்றோம்.

சுகுமாரன் இந்த நாவலெழுதிய வரலாற்றைச் சொல்லும்போது, மார்க்வெஸின் 'தனிமையின் நூறு ஆண்டுகள்' பாதிப்பு இதில் தன்னையறியாமலே வந்திருக்கின்றது எனச் சொல்லி மார்க்வெஸின் நாவலில் ஒரு பாத்திரம் அறிமுகமாகும்போதெல்லாம் மஞ்சள்நிற வண்ணத்துப்பூச்சி பறக்கின்றமாதிரி, தனது நாவலில் வரும் பாத்திரமான மம்மது வரும்போதும் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கின்றன என்கின்றார். ஒருநாள் மாலையில் வெலிங்டனை வாசித்துக்கொண்டிருந்தபோது, நாவல் மீதான பித்தத்தில் நள்ளிரவு தாண்டி இரவுணவைக் கூட சாப்பிடாது தொடர்ந்து வாசித்து முடித்தபோது, இடையில் என்னறைக்குள் ஒரு வெள்ளை நிற வண்ணத்துப்பூச்சி வந்து பறந்துகொண்டிருந்தது தற்செயலானது என்றாலும் மறக்கமுடியாத தருணந்தான் அதுவும்.

ஒரு கவிஞராக அறிமுகமாகி, தனது 50களில் முதல் நாவலென்றாலும் முக்கியமான புனைவை எழுதிய சுகுமாரன், நாம் எழுத விரும்பும் கதையை எப்போதேனும் எழுதிவிட முடியும் என்று நம்பிக்கை தந்திருக்கின்றார். இந்தக் கணத்தில் என்னோடு நாவல் வாசிப்பில் கூடவே பறந்த வண்ணத்துப்பூச்சியிடம் சுகுமாரனிற்கான என் கதகதப்பான நேசத்தை நன்றியுடன் அனுப்பிவைக்கின்றேன்.

(நன்றி: 'காலம்' - இதழ் 45)

0 comments: