கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இன்னும் தீராச்சோகம்

Wednesday, May 09, 2018

சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவரோடு கதைத்துக்கொண்டிருந்தபோது, அவர் வெளிநாட்டுக்குப் புறப்பட்ட பயணம் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். பல்வேறு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குள்ளால் உரிய ஆவணங்களின்றி அது நிகழ்ந்திருந்தது. ஒருமுறை ரஷ்யா எல்லையிற்குப் போய், தனியொருவராக போலந்து எல்லைக்குள் உள்ளூர்வாசியின் உதவியுடன் கடந்திருக்கின்றார். அவருடைய கெட்டகாலம். எல்லை பாயும் இடத்தில் இராணுவம் பதுங்கியிருந்திருக்கின்றது. வழமைபோல அவர்களின் கடமையைச் செவ்வனே செய்து, திருப்ப அவர்கள் வந்த எல்லைக்குள்ளால் அவரையும் இன்னொரு ரஷ்யரையும் 'நாடு' கடத்தியிருக்கின்றனர். 
ஏதோ பெரும் கைதிகளைப் பரிமாற்றம் செய்வதுபோல, எல்லையில் இராணுவ மரியாதையெல்லாம் நிகழ்ந்து, ஷம்பெயின் போத்தல்கள் இரண்டு பக்கத்திலும் உடைக்கப்பட்டு அவர்கள் திருப்பவும் ரஷ்யாவிற்குள் அனுப்பட்டிருந்தனர். இந்த மரியாதை நிமித்தங்கள் நிகழும்போது, வாகனத்தோடு கைச்சங்கிலி கட்டப்பட்டிருந்த இரஷ்யர் தப்புவதற்கான முயற்சியையும் செய்திருக்கின்றார். ஷம்பெயின் போத்தல்களை உடைத்து மரியாதையைக் காப்பாற்றும் அரசுக்கள், நண்பர்களைப் போன்ற எளிய மனிதர்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது வேறுவிடயம். அதிகாரங்கள் ஏற்படுத்திய எல்லைகளைக் கடந்து மனிதாபிமானம் குறித்து யோசிக்க எந்த அரசும் தயாராகவேயில்லை. இதே நண்பர் ஜரோப்பாவிலிருந்து கனடாவிற்கு எல்லை தாண்டியது, கதையாய் எழுதக்கூடியவளவிற்கு சுவாரசியமானது.
பொ.கருணாகரமூர்த்தியினது 'பெர்லின் நினைவுகளிலும்' இந்த எல்லை கடத்தல்கள் வருகின்றன. ஏன் கருணாகரமூர்த்திகூட அன்றைய கிழக்கு-மேற்கு ஜேர்மனி பிரிவினைகளால் பல்வேறு முறை மேற்கு ஜேர்மனிக்குப் போக வெளிக்கிட்டு திருப்பி அனுப்பப்படுவதைப் பற்றி எழுதியிருக்கின்றார். புதிய கலாசாரம், வித்தியாசமான காலநிலை மட்டுமின்றி அதுவரை அறிந்தேயிராத மொழி பேசும் நாட்டில் தமது கால்களை அகதிகள்/குடிவரவாளர் ஊன்றுவது எவ்வளவு கடினமாயிருக்கும் என்பது நாம் கற்பனைகளில் கூட எண்ணிப்பார்க்கமுடியாதவை. அதிலும் அன்றைய காலக்கட்டத்தில் ஜேர்மனிய இனவாத அரசு, குடிவரவாளர்க்கு வேலை கொடுக்கக்கூடாது என்று புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வரும்போது, இவ்வாறு எல்லை கடந்தவர்களின் நிலைமை இன்னும் மோசமாகப் போகின்றது. அரசே ஓர் இனவாதியாக இருக்கும்போது, அதன் அமைப்பை மீறி வாழும் வீடற்றவர்கள்/அராஜவாதிகள் (anarchists) எப்படி குடிவரவாளர்கள்/அகதிகள்/வேறுநிறதோல் கொண்டவர்கள் மீது கரிசனையாக இருக்கின்றார்கள் என்பதையும் கருணாகரமூர்த்தி இதில் கவனப்படுத்தத் தவறவில்லை.
இதையெல்லாம் இன்னொரு நண்பனோடு பகிர்ந்துகொண்டிருக்கையில், அவன்தனது எல்லை கடத்தல்களில் நனவிடை தோயத்தொடங்கினான். என் சமவயதொத்த நண்பன். நான் 16வயதில் கனடாவிற்கு வந்ததைப் போல, அவன் தன் பதினான்காவது வயதில் எல்லை கடந்தவன். அவனது பயணங்கள் வேறுவகையானது. மாதக்கணக்கில் சிங்கப்பூர், மலேசியா, ஹொங்கொங், ஜப்பான் என பல்வேறு நாடுகளுக்கு அலைபாய்ந்த கதை.
ஹொங்கொங்கிலிருந்து ஜப்பானுக்கு எல்லாம் அவ்வளவு பாதுகாப்பற்ற படகுகளில் கடல் பாய்ந்த கதையது. பின்னர் ஒரு பெண்மணியின் பாஸ்போட்டில் மூன்று பிள்ளைகளில் ஒருவராக அமெரிக்காவின் எல்லைக்குள் புகுந்தவன். ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு ஏஜென்சிகள் என கைமாறலும், ஏற்கனவே இருப்பவர்களின் கதைகள் இன்னும் அச்சமூட்டலும் என்பது மட்டுமின்றி சில ஏஜென்சிக்காரர்கள் கூட்டிக்கொண்டு வருகின்ற பெண்கள் மீது 'பாய்ந்த' காட்சிகளென அவனின் சொற்களில் சொல்வதென்றால் 'பிஞ்சிலே வெம்பிய' கதைகள் அவை.
இவர்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் தப்பிவந்து தமது வாக்குமூலங்களைச் சொல்ல முயன்றவர்கள். ஆனால் இன்னொருபுறத்தில் எல்லைகளைக் கடக்காது, இடையிலே பயணங்களை முடித்தவர்களின் கதைகள் நிறைய இருக்கின்றன. அந்த எண்ணிக்கை கூட சரியாக ஆவணப்படுத்தாது சமுத்திரங்களும், பனிப்பாலைகளும், வெற்று நிலங்களும் மட்டுமே அவர்களின் கதைளையும் கடைசிமூச்சின் கணங்களையும் அறியும்.
இன்றும் கனடா, ஆஸ்திரேலியாவிற்கென எப்போதும் உடையக்கூடிய கப்பலில் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல பல்வேறு மக்கள் எல்லைகளைக் கடக்கப் புறப்பட்டபடியே இருக்கின்றார்கள். தமது உயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு எல்லாவற்றையும் விட்டது விட்டபடி வெளிக்கிடும் இவர்களிடமிருக்கும் இறுதி நம்பிக்கையும் அதே உயிராகவும் இருப்பதுதான் எத்தகை அவலமானது.

(May 09, 2016)

0 comments: