கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எழுதி அனுப்பாத கடிதம்

Monday, May 07, 2018

'காலம்' ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு,
தாங்கள் எழுதிவரும் 'பாரிஸ் அனுபவங்களை' நாம் தொடர்ந்து வாசித்து வருகின்றோம். அண்மையில் பொன்மலர் அன்ரி (உங்களுக்கு அக்கா என்றால், எமக்கு அன்ரிதானே) அவர்கள் பற்றி எழுதிய பதிவில், அண்ணன் தம்பிமார் ஒன்றாய் பத்துபேரிருக்கும் ஒரே அப்பார்ட்மெண்டில் வசித்துவந்தாலும், நீலப்படம் ஓடும்போது அண்ணன் பார்க்கும்போது, தம்பி அறையில் இருக்கமாட்டான், அவ்வாறே தம்பி பார்க்கும்போது, அண்ணன் வெளியில் போய்விடுவான் என்று எழுதப்படாத 'ஒரு விதி' இருந்ததாக நுட்பமாய் அவதானித்து எழுதுகின்றீர்கள்.

முன்னர் கூட, ஒரு பதிவில் பாரிஸில் நிர்வாண விடுதியிற்குப் போனதுபற்றியும், எல்லாவற்றையும் இரசித்துப் பார்த்தபின், கொடுப்பதற்கு காசில்லாது அங்கிருந்த பவுண்சர்களால் வெளியே வீசியெறியப்பட்டதையும் கூட விபரித்திருக்கின்றீர்கள்.
இவ்வாறு வாழ்க்கையை அதன் எல்லாப் பக்கங்களோடும் அனுபவித்து இரசித்துவிட்டு, எங்களைப் போன்றவர்கள் 'வராது வந்த மாமணியை'ப்போல எப்போதாவது பக்கத்திலிருக்கும் கரீபியன் தீவுகளுக்குப் போய், அங்கிருக்கும் அணங்குகளோடு ஒன்றிரண்டு புகைப்படங்கள் எடுத்துப்போடும்போதுமட்டும் 'என்னடா அங்கே செய்கின்றீர்கள், வரவர கெட்டுப் போகின்றீர்கள், கெதியாய் கனடா வந்து சேருங்கள்' என்று மட்டும் மறக்காமல் அறிவுரை கூறுகின்றீர்களே, இது நியாயமா?
இதையெல்லாம் ஏன் எம்மைப்போன்றவர்கள் செய்கின்றோம் என நீங்கள் எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா? உங்களைப் போன்ற முன்னோடிகளுக்கு கடலளவு அனுபவங்கள் இருக்கும்போது, பின் தொடர்ந்து வரும் எங்களுக்கு அதில் குளமளவு கூட இல்லையென்றால் பிறகு எப்படி உங்களின் வாரிசுகளென எம்மை அழைத்துக்கொள்ளமுடியும்? இப்படியான எங்கள் கஷ்டம் புரிந்தால் நீங்கள், ஒருவாரம் இடம் பார்க்கச் செல்லும் எம்மை ஒரு மாதம் ஆறுதலாக இருந்துவிட்டு வாருங்கள் என்றல்லவா -சாபத்திற்குப் பதிலாக- வாழ்த்துச் சொல்லி அனுப்பவேண்டும்.
மேலும் இயல்விருதுக்காய் வரும் ஜெயமோகனையும், அவரது துணைவியாரையும் இங்கே அழைப்பதற்கு, 'காலம்' இதழ்கள் விற்று வந்த ஒரு பகுதியையும் நீங்கள் அர்ப்பணித்திருப்பதாய் அண்மையில் ஒரு கதை கேள்விப்பட்டோம். அது கதையா, நிஜமா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
ஏன் நீங்கள் 'காலம்' இதழில் எழுதும் எங்களைப் போன்றோரில் ஒருவரை ஒவ்வொருவருடமும் குலுக்கல்முறையில் தேர்ந்தெடுத்து -இலங்கையிற்கோ இந்தியாவிற்கோ இல்லாவிட்டாலும்- பக்கத்திலிருக்கும் கியூபாவிற்கோ, ஜமாக்காவிற்கோ அனுப்பக்கூடாது. எவ்வளவு காலந்தான் நாங்கள் ஸ்காபரோவிற்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டிருப்பது?

ஜெயமோகன் இந்தியாவிலிருந்து கனடாவிற்கு மூன்று முறை வந்துவிட்டார், எங்களைப் போன்றவர்கள் நீங்கள் வசித்த பாரிஸைக்கூட இதுவரை ஒருமுறைகூட பார்க்க முடிந்ததில்லையே? அது எவ்வளவு துயரமான விடயம் என்பதை அறியாதவரா நீங்கள்? இந்தியாவிலிருப்பவர்களை இங்கே அழைப்பதற்கு அ.மு போன்ற பல புரவலர்கள் இருக்கின்றார்கள். எம்மைப் போன்றவர்களை எங்கேனும் அனுப்ப உங்களைவிட்டால் வேறு யார் இருக்கிறார்கள் என்பதை உங்களின் வாரிசுகளாகத் துடிக்கும் எம்பொருட்டு என்றேனும் சிந்தித்ததுண்டா?
ஆகக்குறைந்தது, இப்போது பல தேசங்களுக்கு அலைந்து திரிந்தால்தான், பிற்காலத்தில் உங்களைப் போன்று எழுத எங்களுக்கு ஏதாவது விடயங்கள் அகப்படும். இல்லாவிட்டால், பிறகு நமது எதிரிகள் நாம் எதையும் எழுதாமல் இருக்கும்போது, 'பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும்' என்று நமக்குப் பிடித்தமான கம்பன் கூறியதையே வைத்து எம்மைக் கேலி செய்வார்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா? அது எவ்வளவு அவமானமாய் பிறகு எங்களுக்கு ஆகிவிடும்.
இறுதியாய், இம்முறை 'காலம்' சார்பாக எங்களில் ஒருவரை கரீபியன் தீவுகளுக்கு அனுப்பவேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றோம். இல்லாவிட்டால் ஜெயமோகன் இங்கே வந்து இறங்கும்போது ஏர்போட்டில் கறுப்புக்கொடி காட்டுவதாய்த் தீர்மானித்திருக்கின்றோம். இப்படிக்கு, 'காலத்தின்' வாரிசுகள் (Apr 17, 2015)

0 comments: