கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Anthony Bourdain

Tuesday, December 04, 2018



ண்மையைச் சொல்லப்போனால் Anthony Bourdainஐ அவ்வளவாக நான் பின் தொடர்ந்ததில்லை. அதில் முக்கியமானது, எனக்கு சி.என் .என் தொலைக்காட்சி பிடிப்பதில்லை என்பது ஒருகாரணம். சிஎன்என்னிலேயே அவரது பிரபல்யமான 'Parts Unknown' வந்திருந்தது. அவர் கடந்தவருடம் இலங்கையிற்குப் போனது, அதைப் பற்றிய கட்டுரையொன்றை வாசித்ததிலிருந்துதான் அவரை ஒரளவு பின் தொடரத்தொடங்கியவன். இப்போது அவரது சடுதியான மரணத்தின்போது, நான் இணையத்தில் பின் தொடரும் அநேக 'பயணிகள்' தங்களின் பயணங்களுக்கானதும், தெரு உணவுகளைத் தேடித்தேடிச் சாப்பிடுவதற்கானதுமான முக்கிய புள்ளியாக இருந்தவர் Bourdain என்று எழுதுவதை வாசிக்கும்போது, Bourdainஐ முன்னரே அறிந்திருக்கலாம் போலத் தோன்றுகின்றது.
Bourdain தன்னையொரு பத்திரிகையாளராகச் சொல்வதில்லை. அவர் ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கின்ற உணவை அறிவதில்/ருசிப்பதில்தான் முக்கியம் கொடுக்கின்றார் என்கின்றபோதும், அதனூடு அந்த நாடுகளின்/நகரங்களின் கலாசாரங்கள், அங்கிருக்கும் சமகால முரண்பாடுகள், கடந்தகால வரலாறுகள் என்பவற்றையும் தனது நிகழ்ச்சி மூலம் அறியத்தருகின்றார். ஒருவகையில் அரசியலைப் பற்றிப் பேசவில்லை என்ற தொனியோடு, அரசியலை அவர் பயணிக்கும் இடங்களின் மக்களைக்கொண்டு உணவு அருந்துவதோடு பேச வைக்கின்றார். மேலும் அவர் ஆடம்பர உணவு இடங்களில் சாப்பிடுவதுமில்லை, தெருக்களில் விற்கப்படும் உணவுகளையும், பராம்பரியமாக வீடுகளில் சமைக்கப்படும் உணவுகளையும் எமக்குக் கொண்டுவந்து காட்டுகின்றார். அந்த வகையில்தான் Bourdain பிறரை விட முக்கியமானவராகின்றார் என நினைக்கின்றேன்.
Bourdain இலங்கையிற்குக் கடந்தவருடம் 2017 இரண்டாம் தடவையாகச் செல்கின்றார். முதன்முதலாகப் போனபோது 2008(?) இருந்த நிலைமைகளுக்கும் இப்போதும் இருக்கும் சூழல்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை விபரிக்கின்றார். அதேவேளை போர் முடிந்தவுடன் எல்லாம் இயல்பாகிவிட்டதென்பதை அந்தந்த மக்களின் மூலமாக கேள்விக்குட்படுத்துகின்றார். முக்கியமாக சிங்கள் நாடக நெறியாளரின் நாடகத்தினூடும், அவரோடான உரையாடலினூடாகவும் இலங்கையின் இன்றைய நிலைமையை ஊடறுத்துப்பார்க்கின்றார். 'சமாதானம் வந்துவிட்டது' என்று சொன்னாலும், இன்னும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதிப்புக்களை, கண்காணிப்பு உலகை இந்த நாடகம் பார்வையாளருக்குக் கொண்டு செல்கின்றது.' Island of Short Memoriesல் இறுதியில் சமாதானம் வந்தது' என்று முடிகின்ற நாடகத்தில், போர் முடிந்தபின் வெற்றி பெற்றவரோ அல்லது தோல்வி அடைந்தவரோ இறுதியில் ஓரே நிலைக்கே போய்விடுகின்றனர். அங்கிருந்தே நம்பிக்கைக்கான ஊற்றுக்கள் திறக்கப்படவேண்டும் எனச் சொல்லப்படுகின்றது.
Bourdain பிறகு 10 மணித்தியாலப் பயணத்தில் யாழ்ப்பாணம் போகின்றார். போரின் வடுக்கள் காட்டப்படுகின்றது. துணைகளை இழந்த பெண்களினதும், பெற்றோரை இழந்த பிள்ளைகளினதும் இடத்திற்குப் பயணிக்கின்றார். அவர்களைப் பற்றியும், அவர்களது எதிர்காலம் பற்றியும் கேட்கின்றார். காளி கோயில் ஒன்றின் முன் சாப்பிட்டுக்கொண்டு காளியின் அர்த்தம் குறித்தும், கோயிலில் எடுக்கப்படும் தூக்குக்காவடி, பறவைக்காவடி, அதற்கு இசைக்கப்படும் இசை பற்றியெல்லாம் விபரங்களையெல்லாம் நம்மோடு பகிர்கிறார். கொடும் போரின் பாதிப்புக்களோடு வந்த மக்கள் இன்னும் தமது கலாசாரத்தை விட்டுக்கொடுக்காது, தமது இழப்பின் வலிகளை இங்கே ஆற்றிக்கொள்கின்றனர் எனவும் அவரும் அங்கே சொல்லப்படுகின்றது.
ஒரு வைத்தியரின் வீட்டில் யாழ்ப்பாணத்தின் அடையாளமான நண்டுக்கறி செய்வது விபரமாகக் காட்டப்படுகின்றது. Bourdain போகும் ஒவ்வொரு இடத்திலும் இந்த போரில்லாக் காலம் எப்படி இருக்கின்றது எனக் கேட்கின்றார். யாழில் ஒலிக்கும் ஒவ்வொரு குரலும், சமாதானம் பிடித்திருக்கின்றது, ஆனால் நீண்டதூரம் போகவேண்டியிருக்கிறதென்றும், 30 ஆண்டுகால போரை நிகழ்த்திய அரசை அவ்வளவு எளிதில் மக்கள் மறக்கவோ, அதில் எளிதில் நம்பிக்கைகொள்ளவோ மாட்டார்கள் எனச் சொல்கின்றார்கள். பின்னர் அவர் குருநகர்(?) கடற்கரையில் மீன் விற்கும் இடத்திற்குச் சென்று அங்கே மாலையில் மீனை கிறில் செய்து பிறரோடு சாப்பிடுகின்றார். மீனவர்கள் போர்க்காலத்தில் பட்ட கஷ்டங்களும் உணவோடு பேசப்படுகின்றது.
இறுதியில் Bourdain அமெரிக்க மக்கள் இலங்கையைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? என்று ஒரு காரணத்தைக் கூறும்படி சிங்கள் நாடக இயக்குநரிடம் கேட்கின்றார். அந்த பெண்ணோ, ஏன் அமெரிக்க மக்கள் இலங்கையைப் பற்றி கவலைப்படவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இலங்கையராகிய நாம் இலங்கையைப் பற்றிக் கவலைப்படவேண்டும். அதுவே எனக்கு முக்கியம் என்கின்றார்.
Bourdain மிகப் பிரபல்யம் வாய்ந்த ஒருவர். இறுதியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த பிரான்சில் Bourdain தற்கொலையை நாடியிருக்கின்றார். பிரபல்யத்திற்கும், புகழுக்கும், தனி மனித அல்லாடல்களுக்கும் இடையில் எவ்விதத் தொடர்புகளுமில்லை என்பதும், நமக்கருகில் இருக்கும் அரிய மனிதர்களைக் கூட நொடிப்பொழுதில் நாம் தொலைத்துவிடக்கூடுமென்பதற்கு Bourdain ஓர் உதாரணம்.

(Jun 11, 2018)

0 comments: