கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மெக்ஸிக்கோ - செல்வரஞ்சினி

Thursday, September 03, 2020

வாழ்வியலின் எண்ணற்ற பிரச்சனைகளில் மனம் ஆழ்ந்து அமிழும் போதெல்லாம் காதலின் மெல்லுணர்வுகள் மட்டுமே கைதூக்கி கரைசேர்த்து விடுகின்றன. அல்லாடும் மனதை ஹீலியம் நிரப்பிய பலூனாக காற்று வெளியிடை அழைத்துச் செல்கின்றன.அப்படி ஒரு எண்ணப் பயணத்தை எனக்குள் விதைத்தவள் மெக்ஸிகோவின் அவள். படர்க்கையில் விளிக்கப் பட்டாலும் கூட படைப்பின் முன்னிலையில் விஸ்வரூபம் எடுப்பவள் அவள்தான்.


உலகில் ரசிப்புக்கு உரிய எதனையும் அதன் சோகத்தின் பக்கங்களோடும், எதிர்மறை எண்ணங்களோடும் எதிர்கொள்ளும் கதைசொல்லியான அவன் வளர்புப்பிராணிபோல வெறுமை ஒன்றையே கூட வைத்திருந்தாலும் கூட , பயணங்களிலும் வாசிப்பிலும் தன்னை மறந்தும் மறவாமலும் தேடலை விரும்புகின்றவன். அவனால் அதிகம் நேசிக்கப்பட்டவர்கள் ஆளுமையின் வசீகரமும், இயல்பாகவே மனஉறுதியும் கொண்ட இரு பெண்கள். இவர்களே தமது உரையாடல்களின் மூலம் வாசகருடன் நெருக்கமாகும் கதைமாந்தர்.


பெண்கள் மென்மையானவர்கள் மட்டுமல்ல, சந்தர்ப்பங்களைப் பொறுத்து எதிர்நிற்பவரை வீழ்த்தும் சாகசமும் வல்லமையும் படைத்தவர்கள் என்கிறார் இளங்கோ.உண்மைதான். இயற்கையையும், வாழ்க்கையையும் புரிந்து கொள்ளும் விதமும் , "இந்தக்_கணத்து_வாழ்வு_அழகானது" எனவே நிகழ்காலத்தில் வாழ்ந்து மகிழ் கொள்ளுங்கள் என்கிற அவர்களது அற்புதமான வெளிப்பாடும் ஒரு பெண்ணாக எனக்கும் பெருமிதத்தினை அளிக்கின்றன. அதே சமயம் இனிதான வாழ்வியல் இன்பங்களை எல்லாம் எமது ஆக்கிரமிப்பு எண்ணங்களாலும், உணர்வுகளினாலுமே சிக்கலாக்கிக் கொள்கிறோம் என்ற பேருண்மையானது வாசகருக்கு மனத்தெளிவினையும் தந்து நிற்பது சிறப்பானது.


பதினாறாவது பக்கத்தில் கடலில் அவளால் வீசப்பட்ட வலையில் மீனாகப் போனதென்னவோ கதைசொல்லியான ஆண்மகன்தான்.ஆனால் கதையில் ஆசிரியரது எழுத்து வன்மையெனும் மாயவலையில் சிக்கியது வாசகராக நானும்தான்.ஒரு ஆணால் எழுதப்பட்ட இந்த படைப்பு ஆணின் தன்முனைப்பையும், ஆதிக்கத்தையும் முன்னிறுத்துவதை விட பெண்மையின் கம்பீரத்தையும், கருணையையும் வெளிக்காட்டும் ஒன்றாக இருப்பது மனதுக்கு இதமானது. 


மெக்ஸிக்கோவின் இயற்கை வனப்பும், றொறண்டோ பனியின் கனதியும், தாயகத்தின் கடந்தகால கசப்பான நினைவுகளும், புத்தர்பெருமானின் தத்துவ முத்துக்களும், மாயன்களின் வாழ்க்கை வனப்பும் கதையின் பாதை எங்கும் ஆங்காங்கே சிதறிச் சிரித்துக் கொண்டிருக்கிறன. இது போதாதென்று புன்னகை தரும் இளங்கோவின் இதமான நகைச்சுவை மலர்களும், வரையறை தாண்டாத எழுத்தில் காதலின் காமரசங்களும் ஆங்காங்கே சிலிர்க்க வைக்கின்றன.காதல் என்பதே வாழ்வாக வேண்டுமா அன்றி வாழ்வின் பகுதியாக வேண்டுமா என்ற கேள்வி கதையின் இறுதியில் எழுவது தவிர்க்க முடியாதது.


கதையை வாசிக்கும் போது மனதைக் கவர்ந்த பல வரிகளுக்கு பென்சிலால் மெலிதாக அடிக்கோடு இட்டுக் கொண்டே வந்தேன். பக்கங்கள் செல்லச்செல்ல கோடுகளும் கூடிக்கொண்டே சென்றன. இறுதி அத்தியாயங்களை நெருங்கிய போது வலிதான எண்ணங்கள் தந்த திக்பிரமையுடன் இயல்பாகவே கோடிடுவதைக் கைகள் நிறுத்திக் கொண்டன. 


நிஜம் எது நிழல் எது என்ற மயக்கத்தில் மனது மரத்துப் போன அந்தக் கணங்களில். "நெஞ்சுக்குள்_பெய்திடும்_மாமழை..." என்ற பாடல் வரிகள் அலைகளாய் மனதில் ஆர்ப்பரிக்கத் தொடங்கின. இதன் அர்த்தம் என்னவென்று கதையை முதலில் இருந்து இறுதிவரை அர்ப்பணிப்போடும், உள்ளார்ந்த அன்பின் வழிநின்றும் வாசித்தவர்களுக்குப் புரியும். வாழ்த்துக்கள் இளங்கோ. அருமை.


அடிக்கோடிட்ட_அழகிய_வரிகளில்_மிகச்சில


தற்செயல்களின் அழகியல் தருணங்கள்......


காதல் ஒரு சாம்பல் பறவை........


இலையுதிர் காலமென்பது இலைகள் மலர்களாகும் இன்னொரு வசந்த காலம்.........


பனியில் உறைந்த நதி ஒன்று உறைநிலை விலத்தி வசந்தத்தில் பாயத் தொடங்குவது போல......


விழுவதும் எழுவதும் வாழ்க்கையில் இயல்பு.ஆனால் நான் ஒரே இடத்தில் விழுந்து விழுந்து கொண்டிருக்கிறேன்.......


ஒருகாதல் எப்படி முகிழ்கிறதோ அது போலவே எந்தப்புள்ளியில் அது முற்றுப் பெறுகிறது என்பதை எளிதாக அறிய முடியுமா........?


பிரியும் நாளோடு பிரிதல் நிகழ்ந்து முடிந்து விடுவதில்லை......


இந்த உலகில் அனைவராலும் கைவிடப்பட்டு இனி எதுவுமேயில்லை என்ற விரக்தியில் நிற்கும் ஒருவருக்கு ஒரேயொரு அணைப்பு போதும்.அது கொடுக்கும் கதகதப்பில் வாழ்வதற்கான நம்பிக்கை மீண்டும் துளிர்க்கும்........


எவ்வளவு காயங்கள் வாழ்வில் வந்தாலும் பெண்கள் இல்லாத வாழ்வு சாத்தியப்படாதென ஆசீர்வாதிக்கப் பட்டிருக்கிறேன்.........


எத்தனையோ மழைத்துளிகளுக்கிடையிலும் அவள் கூந்தலில் இருந்து இறங்கி என் நெஞ்சு நனைத்த துளியை எனக்குரிய துளியெனப் பத்திரப் படுத்திக் கொண்டேன்


மனம் நெய்யப் போகும் எல்லாப் புதிர்களில் இருந்தும் என்னைக் காப்பாற்றுபவளாக அவள் இருப்பாள்.....

........................................

0 comments: