கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 15

Tuesday, August 01, 2023

 

'ஒரு அறிவுஜீவியின் பகல்நேர வேடம்'

1.


நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, இன்னொரு வளாகத்தில் கற்கும் சகமாணவியைப் பற்றிய செய்தியொன்று அப்போது பத்திரிகையில் வெளிவந்திருந்தது. அவர் சட்டக்கல்லூரி மாணவர். கல்விச் செலவுக்காக நிர்வாண விடுதியில் நடனம் ஆடிக் கொண்டிருப்பதாய் அதில் சொல்லியிருப்பார். அவர் வெளிப்படையாக தனது புகைப்படத்துடன் தன்னை அந்தப் பத்திரிகையில் முன்வைத்தது எனக்கு ஒருபக்கம் அதிர்ச்சியாகவும், இன்னொருபக்கம் வியப்பாகவும் இருந்தது. பிறகான காலத்தில் வளாகங்களில் படித்த சில பெண்கள் தங்களுக்கு sugar daddyக்கள் இருக்கின்றார்கள் என்று வாக்குமூலம் கொடுத்த செய்திகளை வாசித்தெல்லாம் எளிதாகக் கடந்து வந்திருக்கின்றேன். சமூகம்/வறுமை/குடும்பப் பொறுப்பு/தனிப்பட்ட விருப்பு என்று எத்தனையோ காரணங்கள் பின்னிப்பிணைந்து இதன் பின்னணியில் இருப்பதை இவை குறித்த ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தால் நமக்குப் புலப்படும்.

கே.மீராவின் ‘அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்நாவலில், ஒரு சட்டத்துறை மாணவியான ராதிகா வாசகர்க்கு அறிமுகப்படுத்தப்படுகின்றார். அவரின் சிக்கலான பின்னணி இங்கே விபரிக்கப்படுகின்றது. ராதிகா எப்போது நினைத்தாலும் அவரைப் பைத்தியம் வைக்கச் செய்யும் பத்து வயது நினைவொன்று அவருக்குள் உண்டு. சித்திரம் வரைதலில் ஆர்வமுள்ள ராதிகாவை, அவர் பத்து வயதில் இருக்கும் அவரின் தந்தை இன்னொரு ஊருக்கு ஓவியப்போட்டிக்காய் அழைத்துச் செல்கின்றார். போட்டி முடிந்து வரும் ராதிகாவை தெருவின் மூலையில் நிற்கச் சொல்லிவிட்டு, தந்தை சிறுநீர் கழிக்கச் சென்றுவிட்டு வருவதாகச் சொல்கிறார். ஆனால் அவர் பாருக்குச் சென்று குடித்து, அந்த ஊரின் பிரபல்யமான பரத்தையான பார்வதியைத் தேடிப் போகின்றார். அந்தவேளையில் நிகழும் பொலிஸ் சுற்றிவளைப்பால், ராதிகாவின் தந்தையைப் பொலிஸ் பிடித்துக்கொண்டு போகின்றது. தனித்து தெருவில் பரிதவித்து நிற்கும் பத்துவயதுச் சிறுமியை ஒரு மரம்வெட்டி தன் வீட்டுக்குக் கூட்டிச் செல்கின்றான். கஞ்சியும் மரவள்ளியும் சாப்பிடக் கொடுத்துவிட்டு, ராதிகா அரைத்தூக்கத்தில் இருக்கும்போது அந்த மனிதன் பாலியல் வன்புணர்வைச் செய்கின்றான்.

பிறகான காலத்தில் தகப்பன் ராதிகாவுக்கு இவ்வாறு நிகழ்ந்தது அறிந்து பைத்தியமாகின்றார். அவரால் வேலை செய்ய முடியாததால், ராதிகாவையும், அவளின் தம்பியையும், நோயுற்ற கணவனையும் காப்பாற்ற ராதிகாவின் தாய் இன்னொரு ஊருக்கு வேலைக்குப் போகின்றார். ராதிகா சட்டம் இரண்டாமாண்டு படிக்கும்போது தாய் சடுதியாக இறந்து போகின்றார். தாய் செய்துகொண்டிருந்த பொறுப்பு அனைத்தும் இப்போது ராதிகாவின் தலைமீது விழுகின்றது. தம்பி, தந்தை எல்லோரையும் காப்பாற்றவேண்டிய பாரிய சுமை. தாயின் மரணத்துக்குப் பின்னரே தாய் செய்துகொண்டிருந்தது பாலியல் தொழில் என்பது தெரிகின்றது. ராதிகாவும் தொடர்ந்து படிப்பதற்காகவும், குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவும் தாய் செய்த அதே தொழிலுக்குச் செல்கின்றார்.

அங்கேதான் முதன்முதலில் கிறிஸ்டியைச் சந்திக்கின்றார். ராதிகாவின் முதல் வாடிக்கையாளர் கிறிஸ்டி, ஆனால் அவ்வளவு மூர்க்கமாக அவன் ராதிகாவோடு நடந்துகொள்கின்றான். அடுத்த செமஸ்டரில் சட்டக்கல்லூரியில் கிறிஸ்டியை மீண்டும் காண்கின்றாள். கிறிஸ்டி அதே கல்லூரியில் பெரிய இயக்கமொன்று நடத்துபவனாக இருக்கின்றான். திரைப்பட விழா நடத்த பணம் கேட்க ராதிகாவிடம் வருகின்றான். உன்னை எங்கையோ பார்த்திருக்கின்றேன் என்று கிறிஸ்டி ராதிகாவிடம் சொல்கின்றான். அவனுக்கு இப்போது ராதிகா யாரென்பது நினைவுக்கு வருகின்றது. தன்னிடம் கொடுப்பதற்கு பணமில்லை என ராதிகா சொல்கின்றபோது ஒரு வேசியின் ஒழுக்கம்எனத் திட்டுகின்றான். அதற்கு ராதிகா, ‘ஒரு அறிவுஜீவியின் பகல்நேர மரியாதை வேடம்எனச் சுள்ளெனப் பதிலளிக்கின்றாள்.

ராதிகாவால், பரத்தையான பார்வதியைப் போல ஆக முடியாதென்பது அவளுக்குத் தெரிகின்றது. சட்டப்படிப்பைக் கைவிட்டு வீட்டு வேலைகளுக்குப் போகத் தொடங்குகின்றாள். கல்லூரிக்கு வருவதை நிறுத்திய ராதிகாவைத் தேடி, கிறிஸ்டி வருகின்றான். நீ எப்படியெனினும் படிக்கவேண்டும் என்று ராதிகாவைத் தொடர்ந்து படிக்க வைக்கின்றான்.



2.


இப்போது ராதிகா ஒரு வழக்கறிஞர். அவள் அஜித் என்கின்ற அவளின் தகுதிக்குப் பொருத்தமில்லாத ஒருவரைத் திருமணம் செய்துவிட்டாள். 1989இல் சட்டக்கல்லூரியில் படித்த அப்பாவியான ராதிகா இப்போது கதை நிகழும் காலமான 2005இல் இல்லை. அவளைத் தேடி கிறிஸ்டி ஒரு விசித்திரமான வழக்கைப் பதிவுசெய்யவேண்டுமென வருகின்றான்.

பழைய நினைவுகள் ராதிகாவிற்குள் ஊற்றெடுக்கின்றன. கிறிஸ்டி அவளின் நேசத்துக்குரிய காதலனாகவும் இருந்திருக்கின்றான். அப்போது எவருடனும் பகிரமுடியாத சிறுவயது துர்நினைவை பத்து வருடங்களின் பின் ராதிகா கிறிஸ்டியோடு மட்டுமே பகிர்ந்துகொள்கின்றாள். நான் அன்று ஒரு மரம் போல குளிர்ந்து மரத்துப் போனேன்என்று அத்துர்நினைவின் ஒரு துளியும் மறக்காது ராதிகா நினைவுகூர்கின்றாள்.

கிறிஸ்டி நல்லதொரு காதலனாக இருக்கின்றான்; ஆனால் அவனுக்குள்ளும் மூர்க்கமான ஓர் ஆண் ஒளிந்திருக்கின்றான். காதலும் காமமுமாக கிறங்கிய வாழ்வில், ஓர் நாள் ராதிகா கருவுருகிறாள். எவ்வளவு சொன்னாலும் கிறிஸ்டி ஒரு குழந்தைக்குத் தன்னால் தந்தையாக முடியாது என்று அடம்பிடிக்கின்றான். நீ எது சொன்னாலும் எனக்குக் குழந்தை வேண்டும் என்கின்ற ராதிகாவை விட்டுப் பிரிகின்ற கிறிஸ்டி, ஒருநாள் சடுதியாகத் தோன்றி ஒரு மலைப்பிரதேசத தேவாலயத்தில் அவளை மணம் முடித்துக் கொள்கின்றான். ஆனால் திரும்பிவருகையில் கிறிஸ்டி மூர்க்கமாகி ராதிகாவின் ஆடைகளைக் கிழித்து மோசமாக புணர்கின்றான். அவன் ரம்பம் போல எனக்குள் நுழைந்தான்என்கின்ற மாதிரியான மோசமான அனுபவம் ராதிகாவுக்கு நிகழ்கின்றது. அத்தோடு ராதிகாவை விட்டுப் போனவந்தான் இப்போது நீண்டகாலத்தின் பின் திரும்பியிருக்கின்றான்.

இந்த கிறிஸ்டி முற்றிய உளவியல் பிரச்சினைக்குரியவன். அதற்கு சிகிச்சையும் பெறுகின்றவன். ஓர் எழுத்தாளனாகி விட்ட கிறிஸ்டியின் கதைகளின் முழுத்தொகுப்பை ஒரு பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது. அந்தப் பெருந்தொகுப்பை ராதிகாவுக்குக் கொண்டுவந்து கிறிஸ்டி கொடுக்கின்றான். அதன் முதற்பக்கத்திலேயே என் ராதிகாவுக்கு, எங்கள் காதலுக்கு, எங்களின் திருமண நாளுக்குஎன சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்றது. இன்னொரு நாவல், ‘ராதிகாவின் கருவில் முளைத்த என் மகன் 2ம் அரிஸ்டாட்டிலுக்குசமர்ப்பணம் செய்யப்பட்டிருகின்றது. ராதிகாவுக்கு உலகே சுற்றுகின்றது. என்ன செய்வதென்ற அதிர்ச்சியில் அனைத்து நூல்களையும் வெறியுடன் கிழித்து எறிந்து தீயில் போட்டெரிக்கிறாள்.

கிறிஸ்டி தன்னை மோசமாகப் புணர்ந்து கைவிட்டு சென்றதன்பின்னே, இனி அவனைப் போல இந்தக் குழந்தையும் வேண்டாமென கருக்கலைப்பு செய்கின்றாள் ராதிகா. இதற்கான அனைத்து அவமானங்களையும் தாண்டித்தான் பின்னர் அஜித்திடம் எல்லாவற்றையும் சொல்லி அவனை திருமணமும் செய்கின்றாள்.

கிறிஸ்டி உளவியல் சிக்கலுக்கு ஆழமாகிப் போய்விட்டவன். தன் ஞானஸ்தான பெயரைப் பாதிரியாரும் தேவாலயமும் மாற்றச் சதி செய்கின்றார்கள் என்றும் அதற்கு வழக்குப் பதிவு செய்யும்படியுமாக ராதிகாவை வற்புறுத்துகின்றாள். அவனை ராதிகா எந்தளவுக்கு வெறுக்கின்றாளோ, அந்தளவுக்கு ஏதோ ஒருபக்கத்தில் மனம்பிறழ்ந்த கிறிஸ்டி மீது ராதிகாவுக்கு சொல்லமுடியாத பிரியமும் இருக்கின்றது.

கிறிஸ்டியின் சகோதரர்களை அழைத்து அவனுக்கு உரிய வைத்தியம் பார்க்கமுடியாதா எனக் கேட்கின்றாள். கிறிஸ்டி சட்டக்கல்லூரியின் கடைசிப் பரிட்சையும் எழுதாமல் மூன்றாண்டுகளாக இந்தியாவின் வடக்கில் அழைந்து கிட்டத்தட்ட முழுப்பைத்தியமாக இருந்தபோது கண்டெடுத்து கூட்டிக்கொண்டு வந்தோம் என்று கிறிஸ்டியின் சகோதரர்கள் கூறுகின்றார்கள். ஒரு அந்தரங்கமான பொழுதில் ராதிகாவுடன் இருக்கும்போது, தான் இயேசு கிறிஸ்துவைப் போல ராதிகாவுக்குச் செய்த பாவங்களுக்காக சிலுவை சுமக்க அந்த மூன்று வருடங்களும் சென்றேன் என்கின்றான்.

ராதிகாவின் வாழ்வில் தொடர்ந்து துயரங்களே வழித்துணைக்கு வந்தபடி இருக்கின்றன. ஆனாலும் அதற்குள்ளும் வாழ்ந்தபடி இருக்கின்றாள். அவள் சந்தித்த ஆண்களெல்லாம் தகப்பனைப் போல, கிறிஸ்டியைப் போல, கையாலகாத கணவன் அஜித்தைப் போலத்தான் இருக்கின்றனர். அவள் தேடுகின்ற நேசமோ, கருணையோ அவள் எதிர்பார்க்கின்றமாதிரிக் கிடைக்காதபோதும் இந்த ஆண்களை அரவணைத்தே கொள்கின்றாள். இறுதியில் கிறிஸ்டியைத் தேடி ராதிகா போகின்றாள். அது அவளுக்குத் தப்பமுடியாத பெருந்துயரைக் கொடுப்பதுடன் நாவல் முடிகின்றது.

மீராவின் பெண்பாத்திரங்கள் எப்போதும் சிக்கலானவை. இவ்வாறான protagonistகளை ஆண்களால் ஒருபோதும் படைக்கமுடியாது என்பதை மீராவின் நாவல்கள் ஒவ்வொன்றையும் வாசிக்கும்போது உணர்வதுண்டு. சிறுவயதில் பெருந்துயர் அனுபவித்து, இளமையில் காதலன் எனப்பட்டவனால் கைவிடப்பட்டு, பின்னர் ஒருவனைத் திருமணம் செய்து நிறைவான வாழ்வில்லாதுவிட்டாலும் ஒரளவு நிம்மதியான வாழ்வு வாழும் ராதிகா, அந்தப் பைத்தியக்கார எழுத்தாளனான கிறிஸ்டி மீது ஏன் இவ்வளவு நேசத்துடன் இருக்கின்றாள், ஏன் அவனின் கைவிடல்களையும், வன்முறையையும் மறந்து ஒவ்வொருபொழுதும் அவன் மீது வசீகரிக்கப்படுகின்றாள் என்பதுதான் புதிர். அதுவே நம் சிலருக்கு வாழ்க்கையும் ஆகின்றது. எவர் மீதும் அதிக குற்றம் சாட்டாது, இந்த கருணையற்றவர்களின் வன்முறைகளின் மேல் நின்று வாழ்கின்ற ராதிகா என்கின்ற பெண்ணொருத்தியின் கதையில், அவளை எப்படிப் புரிந்துகொள்வதென்ற திகைப்பும், நெகிழ்வும், அச்சமும் ஒருசேர வருவதால், நமக்கும் இந்நாவல் நெருக்கமானதாகின்றது.

*******************


'அந்த மரத்தையும் மரத்தையும் மறந்தேன் நான்' - கே.ஆர். மீரா, தமிழில் சிற்பி பாலசுப்பிரமணியம்.


(May 08, 2023)

3 comments:

செந்திலான் said...
This comment has been removed by the author.
Senthil said...

Excellent Elango, I login to facebook for this kind of write ups..

8/03/2023 09:59:00 PM
இளங்கோ-டிசே said...

Thank you Senthil!

8/08/2023 05:39:00 PM