கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

லீனா மணிமேகலையின் 'பலிபீடம்'

Thursday, December 01, 2005

பலிபீடமும், லீனா மணிமேகலை பற்றிய சில குறிப்புக்களும்

சில திரைப்படங்களைப் பார்க்கும்போது அதனோடு ஒன்றிப்போனாலும் படம் முடிந்தவுடன் இயல்புநிலைக்கு வந்துவிடமுடியும். சில படங்கள் குளத்தில் எறிந்த கல்லைப்போல படம் முடிந்தபின்னும் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும். ஒரு பொழுது இயலாமையும் அடுத்தகணம் கோபமுமாய் உணர்வுநிலைகள் மாற மாற, பார்த்து முடித்த ஆவணப்படம் 'பலிபீடம்'. லீனா மணிமேகலை இயக்கிய, நாயக்கர் சாதியினரில் ஒரு உபபிரிவான கம்பளத்து நாயக்கர்களின் வாழ்வில் நசுங்கிப்போகின்ற பெண்களின் கொடூரவாழ்க்கையை இது பதிவுசெய்கின்றது.

பெருமிதம், கெளரவம் என்ற இன்னபிறவற்றைக் கலாச்சார வேலிகளாய் அமைத்து பெண்களையும், சிறார்களையும் போகப்பொருளாகவும் பண்டமாற்றாகவும் உருசித்துப் பார்த்து தமது ஆணாதிக்க மேலாண்மையை ஆழமாய்ப்பதித்தபடி அலைகின்றார்கள் இந்தச் சமூகத்து ஆண்கள். பெண்கள் என்ன எதற்கு என்று அறியாமலேயே சிறுவயதிலேயே திருமணஞ்செய்து வைக்கப்படுகின்றார்கள். பத்து பன்னிரண்டு வயதுப் பெண்களைத் திருமணஞ்செய்பவர்கள் எல்லாம் நாற்பது ஜம்பது வயதுக்கு மேற்பட்ட 'பெடியன்களாய்' இருக்கின்றார்கள். ஒரு ஆண் எத்தனை திருமணமுஞ்செய்யலாம் என்ற விரிந்த சுதந்திரத்துடனும், பெண் ஒரு திருமணத்துக்குப்பின், எந்ததிருமணமும் செய்யாது தனித்து இருக்கவேண்டும் என்றும் கட்டுப்பாடுடனும் இருக்கிறது அந்தச்சமூகம். பிள்ளைகள் கிடைக்காதவரை ஒரு ஆண் எத்தனை திருமணமுஞ்செய்துகொள்ளலாம்/'வைத்துக்கொள்ளலாம்' என்பது ஆண்களுக்கு கிடைக்கும் மிகப்பெரும் 'வரம்'. படத்தில் 45 வயது 'குமர்ப்பெடியன்' 16 வயதில் ஒரு பெண்ணைக் கட்டிவிட்டு, மூன்று வருடங்களுக்குப் பிறகு, இன்னொரு 16 வயதுப்பிள்ளையைக்கண்டுவிட்டேன் அதையும் விரைவில் திருமணஞ்செய்யவேண்டும் என்று அங்கலாய்க்கின்றார் (60 வயதுக் 'குமர்ப்பெடியன், 25வயதுப் பெண்ணை திருமணம் செய்திருத்தல் என்று இன்னபிற பெருமைமிகு பல செய்திகள் படத்தில் இருக்கின்றன). 'இப்படி உங்கள் மாமா சொல்கின்றாரே நீங்கள் ஒன்று கூறமாட்டீர்களா?' என்று அந்தப்பெண்ணிடம் கேட்கும்போது, 'படிச்சிருந்தால் எதையாவது கேட்கலாம். நாங்கள் தானே எதையும் படிக்கலை. அவங்கள் செய்யிறதை செய்யட்டும்' என்று அந்தப்பதின்மவயதுப்பெண் கூறும்போது மனது கனக்கிறது.

File0001

உண்மையான பெடியன்களாய் இருக்கும் இளைஞர்களுக்கும் இப்படி கிழடுகள் சிறுபெண்களைக் கல்யாணம் செயவது குதூகலமாத்தான் இருக்கிறது. பதின்மவயதுப்பெண்களை (சிலவேளைகளில் பருவமடையாத சிறுமிகளைக்கூட) கல்யாணங்கட்டும் கிழடுகள் விரைவில் மண்டையைப் போடுதல் இயல்பு என்பதால், அந்தப்பெண்களை 'வைத்துக்கொள்வது', விரும்பியநேரம் போய் சல்லாபித்து விட்டு வருவது என்று இந்த இளைஞர்களுக்கும் சமுகத்தில் நிறைந்த வசதிகள்தான் இருக்கிறது. அதனால்தான் ஒருமுறை மட்டுந்தான் பெண் திருமணஞ்செய்யலாம் என்ற நல்லதொரு சட்டத்தை கடுமையாக்கி வைத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு ஆணுக்கும் (சிலருக்கு நான்கு, ஜந்து என்று) ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிமார்கள் இருக்கின்றார்கள்.

அந்தச்சமூகத்தில் பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கு படிக்க அனுப்புவதே அரிதாகவிருக்கிறது. அப்படிப் படித்தாலும் வயதுக்கு வரும்மட்டுந்தான் பாடசாலைக்குப் போகமுடியும். இந்தப்படத்தில் பேசுகின்ற பெண்கள் அனைவரும் படிக்க விரும்புகின்ற ஆசையை ஒரு கானல் கனவாய் தங்கள் வசம் வைத்திருந்து பெருமூச்சுக்களாய் வெளிப்படுத்துகின்றார்கள். இத்தனை ஒடுக்குமுறைக்கு இடையிலும் சில பெண்கள் சாதித்திமிர் (ஆண்களிலிருந்து அப்படியே உள்வாங்கி) பேசுகின்றார்கள். 'எங்கள் சாதிக்கு என்று ஒரு 'இது' (என்ன இழவோ) இருக்கிறது. வெளியிடங்களுக்குப் போனால் வேறொருத்தர் கையால் தருவதைச் சாப்பிடமாட்டோம். பொலிஸ் கூட எங்களை ஜெயில்லுக்குள் போடாது. யார் வந்தாலும் அங்கினக்க எல்லாவற்றையும் வைத்துவிட்டு வெறுங்காலோடு இங்கனக்க வரவேண்டும்' என்கின்றனர். மேலும் 'பள்ளரோ பறையரோ எங்கள் பக்கம் எட்டிப்பார்க்கவிடமாட்டோம்' என மிகப்பெருமிதமாய்க் கூறுகின்றார்கள். 'ஏன்?' என்று கேட்க, 'உயர்சாதி, தாழ்ந்த சாதி என்று ஒரு வழக்கிருக்கிறது அல்லவா? அதையெல்லாம் சும்மா விட்டுத்தந்திர முடியுமா?' என்கிறனர். இன்னும் கொடுமையாக இருப்பது பெண்களுக்கு உதிரப்பெருக்கு ஏற்படுகின்றசமயத்தில் ஊருக்கு வெளிப்புறமாய் ஒரு வெளியில் அந்தப்பெண் ஜந்தாறு நாள்களுக்கு மேல் வெயிலில் தனித்திருக்கவேண்டும். எந்தக்காரணம் கொண்டு ஊருக்குள் போகமுடியாது. உணவை அந்தப்பெண்ணின் குடும்ப உறவுப்பெண்கள் கொண்டுவந்து அதற்கென இருக்கும் பாத்திரங்களில் கொட்டிவிட்டு மட்டும் போவார்கள்.

படத்தில் காட்சிப்படுத்தப்பட்டதை, ஆணாதிக்கத் திமிரோடு பேசப்படும் வார்த்தைகளை இங்கே எவ்வளவு வலிந்து பதிந்தாலும் படத்தைப் பார்ப்பதுபோல துளியும் வராது. ஒவ்வொரு காட்சியும் பெரும் அதிர்வை, இப்படியும் நடக்கும் ஒரு ஊர் இருக்கிறதா என்று கோபப்படவைக்கின்றதாய் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது எனக்குத் தோன்றியது. இந்த ஆவணப்படம் முழுதும் பெண்களை ஏதோ குடித்துவிட்டு எறியும் பொப் கான்களைப் போல உறிஞ்சியும் பிறகு வீசியெறிந்துகொண்டும் ஆண்கள் போய்க் கொண்டேயிருக்கின்றார்கள். இந்தச்ச்மூகத்தில் 'தெய்வமும் பெண்தான் பலிபீடமும் பெண்தான்' என்ற லீனாவின் குரல் பின்னணியில் கூறியது இன்னமும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.



அந்தச்சமூகத்தின் அழுக்குகளைக்காட்டியதுடன் விடாமல், அந்தச்சமூகம் மாறுவதற்கான, சிறிதாய் அரும்பும் நம்பிக்கைத் துளிர்களையும் லீனா காட்சிப்படுத்துகின்றார். ஜம்பது வயதுக்கிழவனை தனது பதினான்கு வயதில் திருமணஞ்செய்து இரண்டு பிள்ளைகளைப் பெற்ற பெண் (பிள்ளைகள் அந்தக் கிழவனுக்குப் பிறந்தது அல்ல), எவரது துணையுமின்றி தானே உழைத்து தன் பிள்ளைகளைக் காப்பாற்றி வருகின்றார். எந்தப்பொழுதிலும் தனக்கு நடந்ததை தனதுபிள்ளைகளுக்குச் செய்யமாட்டேன் என்றும், அவர்களின் விரும்புக்கு மட்டும் அவர்களது வாழ்வை தெரிவுசெய்யவிடுவேன் என்று நம்பிக்கையாகக் கூறுகின்றார். இன்னொரு பெண், சிறுவயதிலேயே கட்டிக்கொடுத்த கணவன் இறக்க, 'விதவைகள்' மாதிரி வெள்ளைச்சேலை, தாலி மெட்டி எதுவுமின்றி இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டதை எதிர்த்து, (ஊர் ஒதுக்கிவைக்க)வேறு ஒரு ஆணுடனும், பிள்ளைகளுடனும் அயலிலுள்ள இன்னொரு கிராமத்தில் வசித்துவருகின்றார். எனினும் தனது கிராமத்திலிருக்கும் தாயைப் பார்த்தலோ, ஊர்த்திருவிழாவில் பங்குபற்றுதலோ , இனி ஒருபொழுதும் தனக்கு வாய்க்காது என்பதைக் (ஊர்க்கட்டுப்பாடு) கண்ணீருடன் கூறுகின்றார். மேலும் தங்களுக்கு நிலமாய் இருந்த பெருஞ்சொத்தையும் அந்த ஊர் ஆண்கள் அபகரித்து தங்களை ஏதிலிகளாய்க் கைவிட்டதையும், தனது தாய் கஞ்சிக்குடிப்பதற்காய் தற்சமயம் ஊரில் மாடு மேய்த்துக்கொண்டிருக்கின்றார் என்றும் கூறுகின்றார். எனினும் தனது பிள்ளைகளுக்கு சிறுவயதில் திருமணஞ்செய்து வைக்கமாட்டேன் என்பதில் ம்ட்டும் உறுதியாக நிற்கின்றார்.

லீனா கூறுவதுமாதிரி, 'மாற்றங்கள் வலியானது ஆனால் வலிமையானதும் கூட' என்பதே உண்மை. அந்தக்கிராமத்துப் பெண்கள் தாங்கள் விரும்பியதைப் பேசவும் தெரிவுசெய்யவும் முடிகின்ற பொழுதுகள் விடிகின்றபோதுதான் அங்கே மனிதர்கள் வாழ்கின்றார்கள் என்று கூறமுடியும். ஆனால் படத்தைப் பார்க்கும் ஒருவருக்கு அதற்காய் அந்தப்பெண்கள் அல்லறுற வேண்டிய காலங்கள் வருடங்களில் அல்ல; தசாபதங்களைத் தாண்டியும் இருக்கப்போகின்றது போலத் தோன்றுவதுதான் மிகவும் கொடூரமானது.

(2)
இப்படியொரு படத்தை லீனா எடுத்திருக்கின்றாரென்றால் அதற்காய் அவர் கஷ்டப்பட்டுத்தான் உழைத்திருக்கவேண்டும். கிட்டத்தட்ட ஒருவருடமாய் இந்த ப்ரொஜக்யுடன் ஜந்தாறு தடவைக்கும் மேலாக அந்தக்கிராமத்துக்குள் அலைந்திருக்கிறார். ஒருமுறை தனது படச்சுருள்கள் எரியூட்டப்பட்டதாகவும், இன்னொருமுறை தான் கிட்டத்தட்ட அந்த சமூகத்து ஆண்களால் சிறைவைக்கப்ப்பட்ட நிலைக்கு வந்ததாகவும் இன்னும் பல கஷ்டங்களை அனுபவித்ததாகவும் குறிப்பிட்டார். இப்படியான இறுகிப்போன ஒரு சமூகத்திலிருந்து இவ்வளவு விட்யங்களை தோண்டி எடுத்ததே பெரியவிடயம்போலத்தான் எனக்குத் தோன்றுகின்றது. இந்தப்ப்படம் எடுப்பதற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டு தனது ஊர்மக்கள் எதுவும் பேசமாட்டர்ர்கள் என்று ஊர் ராஜநாயக்கர் மறுத்தாலும், பிறகு அவருக்கு கொஞ்சம் ஜஸ் வைத்துத்தான் (படத்தில் அவரது சாதிப்பெருமையை பேச விடப்படும் இடத்தைப்பார்த்தால் தெரியும்) இது சாத்தியமானது என்றார். இதுவரை வெளியுலகத்துக்கு அவ்வளவாய்த் தெரியாத ஒரு பிரச்சினையை லீனாவும் இந்தப்படத்தோடு சம்பந்தப்பட்ட அவரது நண்பர்களும் வெளிக்கொணர்ந்தமைக்காய் நிச்சயம் பாராட்டுதலுக்குரியவர்களே,

(3)
தமிழகத்திலிருந்து யாராவது கலை இலக்கியவாதி விமானம் ஏறினால், எனக்கு இங்கே சனி பிடிக்கத்தொடங்கிவிடும். பலரை நேரில் சந்திக்கையில், இவர்களை அவர்களின் படைப்புக்களை மட்டும் வாசித்துவிட்டு சும்மாயிருந்திருக்கலாம் என்று எண்ணந்தான் அதிகமுறை வந்ததுண்டு. அதற்கு மாறாய், நல்லதொரு அனுபவமாய் லீனாவுடன் இயல்பாய் உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்தது. ஆரம்பத்திலேயே எனக்கு 'உங்கள் கவிதைகளில் அவ்வளவு ஆர்வமில்லை, நீங்கள் எடுக்கும் ஆவணப்படங்களே என்னைக் கவர்கின்ற விடயம்' என்றுதான் அவரிடம் கூறி உரையாடத் தொடங்கினேன். 'தீர்ந்து போயிருந்தது காதல்' என்ற குறும்படம் எனக்குப்பிடித்ததையும் 'மறக்காமல்' அவரிடம் குறிப்பிட்டேன். அது தனது கவிதை நூல் வெளியீட்டுக்காய், ஒரு கவிதையை விஷ¤வலாய்க் காட்டினால் எப்படியிருக்கும் என்று முயற்சித்துப்பார்க்க அதை எடுத்ததென்றும், தனக்கு தனது கவிதைகளை படமாக எடுப்பதில் ஆர்வமில்லையெனவும் கலந்துரையாடலில் லீனா கூறினார்.



லீனா இடதுசாரிப் பின்புலத்தில் இருந்து வந்தவர் (அவரது தந்தை, தாத்தா போன்றோர் தீவிர இடதுசாரிகள் என்று தனிப்பட்ட உரையாடலில் கூறியது நினைவு). மாணவர் பருவத்திலேயே மாணவர் அமைப்புக்கள் போன்றவற்றில் இணைந்து களப்பணியாற்றியிருக்கின்றார். தெரு நாடங்களில் நடிக்கத்தொடங்கி அந்த அனுபவம் இன்று ஆவணப்படங்களை (மாத்தம்மா, பறை,விட்டுவிடுதலையாகி, அலைகளைக் கடந்து, Connecting Lines மற்றும் பலிபீடம்) இயக்கவும், குறும்படங்களில் நடிக்கவும் (வெள்ளைப்பூனை, செல்லம்மா, தீர்ந்து போயிருந்தது காதல்) அவரைக் கொண்டுவந்திருக்கின்றது. லீனாவில் எனக்குப் பிடித்த விடயம், எதையும் மறைக்காமல் தனக்குச் சரியென்றுபடுவதை வெளிப்படையாக முன்வைத்த மனப்பாங்கு.

'பறை', 'பலிபீடம்' ஆகிய படங்கள் ரொறண்டோவில் திரையிடப்பட்டு கேள்விக்கான நேரத்தில், 'நீங்கள் இப்படியான சர்ச்சைக்குரிய படங்களை எடுத்து இந்தியாவின் வறுமையை/சுரண்டல்களை வெளிநாட்டு மக்களுக்கு விற்பதான குற்றச்சாட்டு இருக்கின்றதே?' என்று கேட்கப்பட்டபோது, 'யதார்த்தத்தில் இருக்கும் கொடூரமான பிரச்சினைகளை ஏன் வெளியில் காட்டுவதற்கு நாம் தயங்கவேண்டும்? என்று எதிர்க்கேள்வியாய் லீனா கேட்டிருந்தார். அதேபோன்று, வெள்ளைப்பூனையில் சில காட்சிகளில் நடிக்கும்போது அல்லது அதை பொதுப்பார்வைக்கு திரையிடும்போது ஏதாவது அசெளகரியத்தை உணர்ந்தீர்களா என்று கேட்கப்பட்டபோது, 'இல்லை அப்படி எந்தவகையான அசெளகரியத்தையும் உணரவில்லை' என்று பதிலளித்தது, எவரது வற்புறுத்தலுமின்றி தனக்குப் பிடித்ததைத்தான் செய்வேன் என்ற இன்னொரு குரல் அதற்குள் மறைந்துகிடந்துபோல எனக்குத் தோன்றியது. அவ்வாறான ஒரு நிலையக் கடந்துவர அவர் எவ்வளவு தடைகளைத் தாண்டியிருக்கவேண்டும் என்பதையும் சற்று யோசித்துப்பார்க்கலாம். எனெனில் இன்னும் வெள்ளைப்பூனை தமிழகத்தில் திரையிடப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நண்பர் வட்டத்துக்கு திரையிடப்பட்டு எதிர்மறையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதால் இயக்குநனர் பிற இடங்களில் அதைத் திரையிடத் தயங்கிவிட்டார் என்றும், அப்படி ஒரு சர்ச்சைக்குரிய விம்பம் வந்துவிட்டால் தமிழகத்தில் குறும்படங்கள் எடுப்பதே கடினமாயிருக்கும் என்றும் லீனா குறிப்பிட்டார்.

(4)
பெண்ணியம், பெண் கவிஞர்கள் குறித்து அவருடைய பார்வை எப்படிப்பட்டதென என் தனிப்பட்ட உரையாடலில் அவரிடம் வினாவியிருந்தேன். மிக நிதானமாய் அவை குறித்து அவர் கலந்துரையாடியது இதமாயிருந்தது. லீனா வெளியிடும் 'திரை'யின் முதலாவது இதழ் அந்தசமயம் என் கைவசம் இருந்தது. பாலு மகேந்திராவின் பேட்டியுள்ள பக்கங்களைத் தட்டிக்கொண்டே, 'பாலுமகேந்திராவின் வாழ்க்கையும் நீங்கள் எடுத்த பலிபீடத்தைப் போல நாகரிகம் போர்த்திய இன்னொரு முகம் தான்' என்று நான் சொன்னதையும் புன்னகைத்தபடியே கேட்டுக்கொண்டிருந்தார்.




லீனா மணிமேகலை குறித்து சில சர்ச்சைகள் இருக்கின்றன என்று ஆழமும் விரிவும் இல்லாமல் கேள்விப்பட்டிருக்கின்றேன். எல்லோருக்குள்ளும் இருக்கும் அரசியலைப் போல லீனா நாளை தனது அரசியலை வெளிப்படையாக முன்வைக்கும்போது, எனது கருத்துக்களோடு அவரது விவாதப்புள்ளிகள் முரண்படுகையில் நானும் எதிர் நிலையில் நின்று பேசவும்கூடும். ஆனால் அது லீனா என்று நான் இப்போது வியந்து
கொண்டிருக்கும் ஆளுமை பற்றிய எனது எண்ணத்தில் அவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்றே நம்புகின்றேன்.

37 comments:

கறுப்பி said...

good review DJ thanks

12/01/2005 10:14:00 PM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Thanks for sharing this with us DJ.

Looking forward to seeing those films..

-Mathy

12/01/2005 10:35:00 PM
ரவி ஸ்ரீநிவாஸ் said...

Good. DJ is as usual frank and forthright in acknowledging his
doubts and questions instead of
trying to prove that he is a fantastic critic.

12/01/2005 10:45:00 PM
Anonymous said...

பதிந்தது:Aruvi

நல்ல பதிவு டிசே லீனாவின் ஆளுமை என்னையும் வியக்க வைத்தது

1.12.2005

12/01/2005 11:03:00 PM
G.Ragavan said...

படிக்கும் பொழுதே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே......பார்த்தால் எப்படி இருக்கும்.....இந்தக் கொடுமைகள் எல்லாம் மாற வேண்டும்.

12/02/2005 01:10:00 AM
ஒரு பொடிச்சி said...

//அந்தக்கிராமத்துப் பெண்கள் தாங்கள் விரும்பியதைப் பேசவும் தெரிவுசெய்யவும் வேண்டிய பொழுதுகள் வருகின்றபோதுதான் அங்கே மனிதர்கள் வாழ்கின்றார்கள் என்று கூறமுடியும். ஆனால் படத்தைப் பார்க்கும் ஒருவருக்கு அதற்காய் அந்தப்பெண்கள் அல்லறுற வேண்டிய காலங்கள் வருடங்களில் அல்ல; தசாப்தங்களைத் தாண்டியும் இருக்கப்போகின்றது போலத் தோன்றுவதுதான் மிகவும் கொடூரமானது. //
பலிபீடம் என்கிற இந்தப் படத்தில லீனா மையமாய் focus பண்ணாத ஒரு விசயம் (நான் படத்தை பிழையாக விளங்கிக்கொள்ளவில்லை என்றால்): -45/60 வயது ஆண்கள் சிறு பெண்களை மணப்பதுபோல- ஆண் குழந்தைகளை/சிறுவர்களை பெண்களும் (இந்தக் கிராமத்தில்) திருமணம் செய்துகொள்கிறார்கள் என்கிற செய்தி. 12, 13 வயதுப் பிள்ளைகளை அவர்களிலும் வயதான பெண்கள் திருமணம் செய்துகொள்வது என்பதும் இருக்கிறது. அதுபோல, கணவன் (60 தோ 70தோ) இறந்தபிறகு, பெண் திருமணம் செய்யக் கூடாது; ஆனால் (இளைஞர்களுடனோ வேறு ஆண்களுடனோ) உறவு வைத்துக்கொள்ளலாம்.

சென்சிற்றிவ்வான விசயங்கள விடுவோம் (பெண்ணின் மாதப்போக்கு நேரம் அவளக் காட்டில் தனியே விடுவது,பெண் விரும்பிய ஆணை இரண்டாம் தரம் 'திருமணம்' செய்ய முடியாமை).
இவற்றை விட்டால்,
(1) ஒரு கணவனை இழந்த பெண்ணை இன்னொரு உறவு வைத்துக்கொள்வதை இன்னமும் (இனியும்) அனுமதிக்காத 'நகர' 'நாகரீகமடைந்த' சமூகங்களை வைத்துக்கொண்டு மேலுள்ள இந்த இரண்டையும் மாபாதகங்களாய் பார்ப்பது என்னமாதிரியானது?
(2) எங்களைப் போன்ற 'மனிதர்கள் வாழ்கிற' நகரங்களில் இருக்கிற incest ஓ குழந்தைப் பாலியல் தொழில்களோ தராத என்ன அதிர்வை இந்த 'மனிதர்கள் வாழாத சமூகம்' எங்களுக்குத் தருகிறது?
************
ஒரு வயது போன கிழவியிடம் "(மகளிற்கு) இவ்வளவு சின்னப் பையனைக் கட்டிவைக்கிறிங்களே, தப்பா தெரியல்லியா" (இதை ஒத்தது கேள்வி. ஞாபகத்தில் இருந்து எழுதுகிறேன்) என்பதான கேள்வியை நகரத்து உயர்மட்ட 'சுதந்திரஜீவி'யான லீனா கேட்பது - என் பார்வையில் ஒரு வன்முறைதான். தொலைக்காட்சிகளை, வீடியோக்களை கொண்டு வந்து செய்யிற வன்முறை (நான் அந்தக் கிழவியாய் இருந்தால் திட்டி இருப்பேன்).
அமெரிக்க(!) பழங்குடிகளது reserve ஒன்றிற்குப் போய், அச்சமூகத்தை 'மதிப்பிட்டு' 'வெள்ளைக்கார கல்வி'யை அங்குள்ள ஒவ்வொரு சிறாரும் பெறவேண்டுமென நினைக்கிற ஒரு வெள்ளைத்தனத்திற்கும், லீனா போய் அந்த சமூகத்து சிறுவசிறுமியரை நினைத்து "Education ஒவ்வொரு சிறுவரதும் உரிமை, அதை இந்த ஆணீய (கவனிக்கவேண்டியது: ஆண்களது கல்வியும் அச் சமூத்தில் மறுக்கப்படுதா என்பது தெரியவில்லை!) 'கொடிய சமூகம்' மறுக்கிறது" என narrative (லீனா) சொல்வதும் என்னைப் பொறுத்தவரை வித்தியாசங் கிடையாது; இரண்டும் ஒன்றுதான். இந்த இடத்தில் தோழி சொன்னாள்: "அப்போ (நகரங்களிலுள்ள) குழந்தைத் தொழிலாளர்கள்?!"

அவர் அந்தக் கிழவியிடம் இரண்டுதடவை திருப்பித் திருப்பி இக்கேள்வியைக் கேக்கிறார். தன்வாழ்நாள் பூராவும் அந்த சம்பிரதாயங்களை (Normal ஆன விசயமாய், தங்கட வாழ்வின் ஒரு பகுதியாய்) நம்பின அந்தக் கிழவியின் கண்களில் அச்சமும் கண்ணீரும் எட்டிப் பார்க்கிறது - இது பார்க்க மிகவும் சிரமமான காட்சியாய் இருந்தது ("இந்தச்சமூகத்தில் 'தெய்வமும் பெண்தான் பலிபீடமும் பெண்தான்" என்ற குரலிற்குப் பதில், இதை எழுதும்போதும், எனக்குக் கேட்கிற லீனாவின் குரல் அதுதான்). படம் முடிந்தபிறகும் மனசை உறுத்தியது.

இந்தப் படத்தைப் பார்த்தபிறகு - இந்த ஜாதி பின்புலங்கள் தெரிந்தால், அனேகமாய் 'வீட்டு வேலைக்காக' திருமணம்செய்யப்படுகிற சிறு பெண்கள் (உதவிக்கு ஆண்இல்லை என்று செய்யப்படுகிற சிறுவர்கள்), அங்கே பாலியல் வன்முறை உண்டா (அங்கு இருக்கக்கூடிய அது நகரத்திலும் அதிகம் என்று சொன்னால் சிரிப்புத்தான் வரும்) என அவர்களது உளவியலை அறியவே விருப்பமாயுள்ளது.
லீனாவின் படம் அவற்றை அறிகிற ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. அந்த 'மனிதர்கள்' (எனக்கு அவர்கள் மனிதர்களாகத் தெரிகிறார்கள், நகரத்தில் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு மறைவிடங்களில் சிறுவர்களிலும்/கிடைக்கிற பெண்களிலும்/ஏழை பாலியல் தொழிலாளிகளிலும் பாயக் காத்திருக்கிற எத்தனையோ அறிவுசீவி, சாதாரண ஆண்களை விடவும், எவ்வளவோ(ஓ)படி மேலானவர்கள்தான் இந்த ஆண்கள் தென்படுகிறார்கள், தனது சமூக நியமத்தை 'புரியாத' லீனாவின் தொடரான கேள்விகளில் கண்கள் புரியாமல் தயங்க வீம்பாய் "16 வயதில் ஒரு பெண்ணைக் கட்டிவிட்டு, மூன்று வருடங்களுக்குப் பிறகு, இன்னொரு 16 வயதுப்பிள்ளையைக்கண்டுவிட்டேன் அதையும் விரைவில் திருமணஞ்செய்யவேண்டும்" என்று "சொன்ன" அந்த 45 வயது 'பெடியன்' உட்பட. அவர்களைக் 'குற்றக்கூண்டில்' நிறுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.) - அது அவர்கள் சமூகத்தில் ஏற்கப்பட்ட, நம்பப்படுகிற, நம்பவைக்கப்பட்ட ஒன்று. இதுக்குள் 'நுழைகிற' அந்நிய ஆட்கள் முன்அனுமானங்களுடன், 'தங்களது' ஒழுக்க மதிப்பிடல்களுடன் இறங்கக்கூடாது. சமூக சேவர்கள், counselors, தம் சக மனிதர்களை மதிக்கவேண்டிய மனிதர்கள் எல்லாருக்குமுரிய முக்கிய விதி இது: "மற்றவர்களை மதிப்பிடாதே ஏனெனில் நீ அவர்களிலும் பார்க்க உயர்ந்தவர் கிடையாது." (உயர்ந்தவர் என நினைத்தால் அது 'பாரபட்சமான' தன்நம்பிக்கையிலாற்பட்ட பார்வையையே தரும்).

அதனால் இந்த உங்கள் விமர்சனம் இது தாற தொனி இது ஒரு வெள்ளைத்தனமாக பார்வை என்பது எனது அபிப்பிராயம்.
*****************
இங்கே இறுதியாய் ஒன்றைச் சொல்லோணும்: இவ் விமர்சனங்களைத் தூண்டுவதும் இந்த சமூகத்தைப் பற்றின -/+ அருட்டல்களை உருவாக்குவதும், லீனா போன்றவர்கள் இத்தகைய படத்தை எடுப்பதாலும், எடுக்க ஆர்வப்படுவதாலுமே முன்னெடுக்கப்படுகிறது. லீனாவின் இவற்றிலுள்ள ஆர்வம், energy, இவையைக் குறைக்க அல்ல இதை எழுதுகிறேன். இப்படியான படங்களை எடுப்பது எவ்வளவு 'கவனமாகக்' கையாளப்படவேண்டியது என்பதைக் கூறவே. அத்துடன் லீனா போன்ற ஆர்வம் மிகுந்த ஒருவரால் இத்தகைய விமர்சனத்திற்கு உரிய உரையாடல்களைத் தொடர முடியுமெனவே நினைக்கிறேன்.

12/02/2005 01:33:00 AM
இளங்கோ-டிசே said...

கறுப்பி, மதி, இரவி, அருவி, இராகவன் மற்றும் பொடிச்சி உங்களின் பின்னூடங்களுக்கு நன்றி.

12/02/2005 08:26:00 AM
Anonymous said...

நல்ல பதிவு டிஜே,

பலிபீடம் பற்றி பெட்டை முன்வைக்கும் கருத்துகளுடன் ஒன்றியே எனது பார்வையும் இருக்கிறது.
குறிப்பாக கனடாவின் முதற் குடிகளை 'முன்னேற்றுவதாக' கூறிக் கொண்டு வெள்ளை-ஐரோப்பிய மதிப்பீடுகளை முதற்குடிகள் மீது செலுத்தி அவர்களின் 'கூட்டு அடையாளங்களை' அழித்ததும்/ அழிக்க முற்பட்டது ஒருவகை காலாச்சார வன்முறையே. அதன் விளைவுகள்தான் முதற் குடிகளின் பிள்ளைகளை பெற்றொரிடம் பிரித்து விடுதிப் பள்ளிகளில் சேர்த்ததும், அவர்களுக்கு ஆங்கிலத்தில் (பிரென்ச்?) உரையாடவும் வற்புறித்தியதும், ஐரோப்பிய வாழ்வுப் பழக்கவழக்கங்களை திணித்ததும். இந்த கலாச்சார வன்முறைகளின் விளைந்த அவலங்களை இப்போதும் நாம் பார்கலாம். ஆகவே, நாம் வைத்திருக்கும் மதிப்பீடுகள் அறிதியானதும் சரியானதும் என்று கூற முடியாது. அவை எப்போதும் பரிசீலைனைக்கு உரியவையே.

நான் பார்த்தளவில் லீனா எங்களில் பலரைப் போலவே தனிமனித சுதந்திரத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார். அவர் இந்த விவரணத்தில் காட்ட முற்பட்டது ஒரு சமூகத்தின் கலாச்சார (கூட்டு) மதிப்பீடுகளால் தனி மனித சுதந்திரம் பாதிக்கப் படுகிறது என்பதே. நீங்கள் கூறிவாறு பலவிடங்களில் அதனைத் துல்லியமாக காட்டியிருக்கிறார். கனடாவின் முதற்குடிகளின் றிசேர்வ்களிலும் அடக்கு முறைகள் இருக்கின்றன. (எந்த சமூகத்தில் இல்லை?) இவை தனி மனித சுதந்திரத்தைப் பாதிகின்றன. ஒப்பீட்டளவில் மட்டுமே தனிமனித சுதந்திரம் சமூகத்துக்கு சமூகம் வித்தியாசப்படும்.

ஆக, இங்கு பிரச்சனை கூட்டு அடையாளம் வ்ச் தனியடையாளம். இந்த இரண்டில் எந்த கருத்தாக்கமும் அதன் தீவர எல்லைகளை அடையும்போது மனிதர் பாதிக்கப் படுகிறனர். இவைகளுக்கிடையிலான ஒரு சம நிலையைக் கண்டுபிடிப்பதே இங்கு இருக்கும் சவால்.

-தர்சன்

12/02/2005 11:41:00 AM
மு. மயூரன் said...

தகவலுக்கு மிகவும் நன்றி டீ சே.
இவ்வாறான முயற்சிகள் எமக்கு இங்கே பார்க்கக்கிடைப்பதில்லை.
பொடிச்சியின் எதிர்வினையோடு பெரிதும் ஒத்துப்போகிறேன்.

12/02/2005 11:50:00 AM
இளங்கோ-டிசே said...

பொடிச்சி, உங்கள் விரிவான பார்வைக்கு மிகவும் நன்றி. ஒரு கருத்தின்மீது வெவ்வேறு பார்வைகளால் இடையீடு செய்யலாம் என்பதுதானே விமர்சனத்துக்குரிய தனித்துவமான அழகு.
....
////இவ் விமர்சனங்களைத் தூண்டுவதும் இந்த சமூகத்தைப் பற்றின -/+ அருட்டல்களை உருவாக்குவதும், லீனா போன்றவர்கள் இத்தகைய படத்தை எடுப்பதாலும், எடுக்க ஆர்வப்படுவதாலுமே முன்னெடுக்கப்படுகிறது. லீனாவின் இவற்றிலுள்ள ஆர்வம், energy, இவையைக் குறைக்க அல்ல இதை எழுதுகிறேன். இப்படியான படங்களை எடுப்பது எவ்வளவு 'கவனமாகக்' கையாளப்படவேண்டியது என்பதைக் கூறவே. அத்துடன் லீனா போன்ற ஆர்வம் மிகுந்த ஒருவரால் இத்தகைய விமர்சனத்திற்கு உரிய உரையாடல்களைத் தொடர முடியுமெனவே நினைக்கிறேன். //
பொடிச்சி, லீனாவின் படைப்புக்கள் மீதான எனது பார்வையும் இவற்றிலிருந்துதான் ஆரம்பிக்கின்றது. எழுதுபவர்கள்/பேசுபவர்களை விட களத்தில் செயற்படுபவர்கள் மீது எனக்கு என்றும் தீராத ஆர்வமுண்டு. என்னால் அப்படியிருக்கமுடியாததால் அல்லது 'அமைப்புக்கள்' என்று கூறப்படுபவையுடன் இணைந்து செயற்படமுடியாத காரணங்களால், இவ்வாறான ஒரு எண்ணம் எனக்குள் தங்கிவிட்டிருக்கலாம். அதுவே லீனா போன்றவர்களின் படைப்புக்கள் மீது நீங்கள் முன்வைக்கும் கறாரான பார்வையை வைக்க முடியாமல் என்னைத் தடுத்திருக்கவும் கூடும்.
நிற்க.

//(1) ஒரு கணவனை இழந்த பெண்ணை இன்னொரு உறவு வைத்துக்கொள்வதை இன்னமும் (இனியும்) அனுமதிக்காத 'நகர' 'நாகரீகமடைந்த' சமூகங்களை வைத்துக்கொண்டு மேலுள்ள இந்த இரண்டையும் மாபாதகங்களாய் பார்ப்பது என்னமாதிரியானது?
(2) எங்களைப் போன்ற 'மனிதர்கள் வாழ்கிற' நகரங்களில் இருக்கிற இன்cஎச்ட் ஓ குழந்தைப் பாலியல் தொழில்களோ தராத என்ன அதிர்வை இந்த 'மனிதர்கள் வாழாத சமூகம்' எங்களுக்குத் தருகிறது?//
பொடிச்சி, நீங்கள் கூறுவதைப் புரிந்துகொண்டாலும், ஆகக்குறைந்தது இவை எனக்குத் தனிப்பட்ட அதிர்வுகளைத் தருகின்றது/தந்துகொண்டேயிருக்கின்றன. அண்மையில் ஒரு பன்னிரண்டோ பதின்மூன்றோ வயதுச் சிறுமியை மூன்று அல்லது நானகு வயதில் இருந்த பையனிடம் உறவுகொள்ளவைக்கப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோ விவகாரத்திலிருந்து, நண்பொருவரிடம் கதைத்துக்கொண்டிருந்தபோது இங்கே நடைபெறும் (எமது சமூகத்தில்) சிறுவர்/சிறுமிகள் பாலியல் வன்முறைவரை அனைத்துமே என்னைப் பாதித்தபடியேதான் இருக்கின்றது. அவ்வாறான ஒரு விடயத்தை எழுதவோ விமர்சிக்கவோ போகின்றபொழுது அல்லது அதை யாராவது எழுதும்போதோ, 'நாங்களும் மனிதர்கள் அல்ல' என்று எழுதுவதில் எனக்கு எந்தத்தயக்கமும் இருக்காது என்றே நம்புகின்றேன்.

//அந்தக்கிராமத்துப் பெண்கள் தாங்கள் விரும்பியதைப் பேசவும் தெரிவுசெய்யவும் வேண்டிய பொழுதுகள் வருகின்றபோதுதான் அங்கே மனிதர்கள் வாழ்கின்றார்கள் என்று கூறமுடியும்//
இவ்வாறு கூறும்போது நான்/நாம் மனிதர்களாக வாழ்கின்றோம் என்று அர்த்தம் வருவதாகச்சொல்லவில்லை. நிச்சயம் நீங்கள் குறிப்பிட்டமாதிரி, அந்தக்கிராமத்து மக்கள் இன்னும் நீங்கள் இருந்து வருகின்ற நகரங்களில் 'குழந்தைப்பாலியல் தொழிலாளர்கள்/ குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கின்றார்களே நீங்களும் மனிதர்கள் இல்லையென்று கூறினால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். யார் யார் மனிதர்களாய் இருக்கின்றோம் இல்லையென்பதல்ல முக்கிய பிரச்சினை. இவ்வாறான அநீதிகளுக்காய் என்னவிதமான கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கின்றோம் என்பதுதான் எனக்கு முக்கியமானது. ஆகவேதான் கூறுகின்றேன், எழுதுபவர்கள்/பேசுபவர்களைவிட எனக்கு எப்போதும் களத்தில் நின்று சிறுதுரும்பையாவது அசைக்கவிரும்புகின்றவர்கள் மீது அதிக மதிப்பு இருக்கின்றது என்று. என்றோ ஒருநாள் யாரோ ஒருவர்/பலர் கேள்விகள் கேட்கத்தொடங்கியதால்தானே எத்தனையோ விடயங்கள் கேள்விக்குட்படுத்தி சமூகத்திலிருந்து இல்லாமற்செய்யப்பட்டிருக்கின்றது.
அவ்வாறே, அதிர்வுகளை/கோபங்களைக் கொண்ட பலர் நிச்சயம் இருப்பார்கள் என்றே நம்புகின்றேன்.

//ஒரு வயது போன கிழவியிடம் "(மகளிற்கு) இவ்வளவு சின்னப் பையனைக் கட்டிவைக்கிறிங்களே, தப்பா தெரியல்லியா" (இதை ஒத்தது கேள்வி. ஞாபகத்தில் இருந்து எழுதுகிறேன்) என்பதான கேள்வியை நகரத்து உயர்மட்ட 'சுதந்திரஜீவி'யான லீனா கேட்பது - என் பார்வையில் ஒரு வன்முறைதான். தொலைக்காட்சிகளை, வீடியோக்களை கொண்டு வந்து செய்யிற வன்முறை (நான் அந்தக் கிழவியாய் இருந்தால் திட்டி இருப்பேன்).
அமெரிக்க(!) பழங்குடிகளது ரெசெர்வெ ஒன்றிற்குப் போய், அச்சமூகத்தை 'மதிப்பிட்டு' 'வெள்ளைக்கார கல்வி'யை அங்குள்ள ஒவ்வொரு சிறாரும் பெறவேண்டுமென நினைக்கிற ஒரு வெள்ளைத்தனத்திற்கும், லீனா போய் அந்த சமூகத்து சிறுவசிறுமியரை நினைத்து "ஏடுcஅடிஒன் ஒவ்வொரு சிறுவரதும் உரிமை, அதை இந்த ஆணீய (கவனிக்கவேண்டியது: ஆண்களது கல்வியும் அச் சமூத்தில் மறுக்கப்படுதா என்பது தெரியவில்லை!) 'கொடிய சமூகம்' மறுக்கிறது" என நர்ரடிவெ (லீனா) சொல்வதும் என்னைப் பொறுத்தவரை வித்தியாசங் கிடையாது; இரண்டும் ஒன்றுதான். இந்த இடத்தில் தோழி சொன்னாள்: "அப்போ (நகரங்களிலுள்ள) குழந்தைத் தொழிலாளர்கள்?!"//

இப்படியான ஒரு பார்வை ஆரம்பத்தில் அந்தப்படத்தைப் பார்க்கும்போது எனக்கும் வந்தது. பிள்ளைகளைப் படிப்பிக்கவேண்டும் என்று விரும்பியதில்லையா? என்று ஒரு பெண்ணிடம் கேட்கப்படுகின்றபோது, 'எங்களுக்கு உழைத்து வாழ்வதற்கு கையில் தெம்பும், வாயில் சொல்லும் இருக்கிறது....இதை விட என்ன வேண்டும்? ஒன்றுமில்லாத நீங்கள் வேண்டுமென்றால் படித்து பத்தாயிரம் ரூபாய் சம்பாதியுங்கள். ஆனால் நாங்கள் எங்களின் நிலத்தில் கடலை போட்டு அந்தப் பணத்தை சம்பாதிக்கின்றோம்' என்று தமது வாழ்வு முறையைக் கல்வி கொண்டு குறுக்கிடுவதை, கேள்விக்கு உட்படுத்துகின்றார்.

ஆனால் படம் நீள நீள அனேக பெண்கள் படிக்க மிகவும் பிரியப்படுவதாய்த்தான் கூறுகின்றார்கள். மேலும் சொத்து அதிகாரம் என்பவை ஆண்களிடம் இருக்கின்றபோது, பெண்களுக்கான சொந்த தெரிவுக்கான சுதந்திரத்திற்கு கல்விதான் எனக்கு மாற்று வழியாகத் தெரிந்தது. (லீனாவும், எனக்கு இந்தப்பெண்கள் பி.எஸ்சி படித்துவிட்டு கிராமத்துக்கு வந்து இப்போது செய்கின்ற எந்தவேலையைச் செய்தாலும் பரவாயில்லை. ஆனால் அது அவர்களின் சொந்தத் தெரிவாக எவரும் வற்புறுத்தாததாய் இருக்கவேண்டும் என்பதே தனது விருப்பு என்றும் எமது கல்விமுறையையும் கலந்துரையாடலில் கேள்விக்கு உட்படுத்தினார்).

பழங்குடி மக்களில் வெள்ளைத் திமிர் இடையீடு செய்வதை/செய்ததை இங்கே ஒப்பிடமுடியுமா என்ற தயக்கமிருக்கிறது. அங்கே ஒரு சுதந்திரமான உறவுமுறைகளுடன் சந்தோசமாய் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த மக்கள் மீதுதான் கலாசாரம் என்ற விதத்தில் ஆக்கிரமிப்புக்கள் நடந்திருக்கின்றது. இந்தப்படத்தில் கதைக்கும் வயது முதிர்ந்த ஊர்ப்பெரியவர் கதையைப் பார்த்தாலே அவரது ஆங்கில வார்த்தைகள் சிலவறறையும் கலந்துதான் கதைக்கின்றார். ஆகவே இவர்கள் ஒருபுறம் நவீனத்துவத்துடன் தொடர்புகொண்டபடி இன்னொருபுறம் பெண்கள் விசயத்தின் மிகவும் இறுக்கமாகிக்கொண்டேயிருக்கின்றார்கள் (இன்னொரு அவதானித்த விடயம் ஜக்கம்மா திருவிழாவில் விழாவுக்கு வர்ணனை செய்யும் ஆண்கள் அரசியல்கட்சிகளைப்போல அழகான தமிழில் பேசுவது). அத்தோடு, இந்தப்படத்தில் காட்டப்படுகின்ற பெண்களில் அனேகர் தாங்கள் ஒடுக்கப்படுகின்றோம் என்ற பிரக்ஞையுடன், எதையுமே அசைத்துப்பார்க்கமுடியாத இயலாமையுடன் இருப்பதுபோலத்தான் படத்தைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது

நீங்கள குறிப்பிட்ட அந்தப் பெண்மணி கூட, 'எனக்கு வசதி வந்தால் இதிலிருந்து விடுபடவேதான் (சிறுவயதில் திருமணஞ்செய்து கொடுப்பதில்)விரும்புவேன்' என்றுதான் கூறுகின்றார். மற்றும்படி நீங்கள் கூறிய மாதிரி, லீனா தொடர்ந்து அந்தப்பெண்மணியைக் கேள்விகளால் துளைத்தபோது எனக்கும் உறுத்தவே செய்தது.

//இந்த இடத்தில் தோழி சொன்னாள்: "அப்போ (நகரங்களிலுள்ள) குழந்தைத் தொழிலாளர்கள்?!"//
இது எல்லாவற்றையும் ஒரேயிடத்தில் அடக்கவேண்டும் என்ற எண்ணத்தால் வந்த கருத்துப்போல எனக்குத் தோன்றுகின்றது. அதைப் பேசிவிட்டுத்தான் இதையும் பேசவேண்டும் என்று எதிர்பார்பபது கூட ஒருவிதமான வாசக வன்முறைதான். ஆகக்குறைந்து குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி தொடர்ந்து பேசப்பட்டுக்கொண்டேதான் (விளைவுகள் உருப்படியாக இல்லாவிட்டாலும்) இருக்கின்றது. லீனாவுக்கும் அவைகுறித்த பிரக்ஞை இருக்குமென்றே நானும் நம்புகின்றேன். அதற்கு தீர்வு கண்டுவிட்டுத்தான் பிறகு இதைப் பற்றி பேசவேண்டும் என்பது சற்று கோணலாய்த்தான் தெரிகிறது. (புலிகள் X எதிர்தரப்பு செய்யும் கொலைகள் பற்றிப்பேசுகிற உங்களிடம் இங்கு நடக்கும் இளைஞர் வன்முறைக்கு முதலில் தீர்வைக் கூறிவிட்டு, பிறகு அந்தவிடயங்களைப்பற்றி பிறகு பேசுங்கள் என்பதுபோலத்தான் இருக்கும்). மேலும் லீனா தெளிவாகக் கூறுகின்றார்; எனது நோக்கு தீர்வுகளைச் சொல்வதல்ல. தொடர்ந்து இவ்வாறான அநீதிகளுக்காய் கேள்விகள் எழுப்பிக்கொண்டேயிருப்பதுதான் எனது விருப்பு என்று (அதைத்தான அனேக படைப்பிலக்கியவாதிகளும் கூறிக்கொண்டிருக்கின்றார்கள்).

//இந்தப் படத்தைப் பார்த்தபிறகு - இந்த ஜாதி பின்புலங்கள் தெரிந்தால், அனேகமாய் 'வீட்டு வேலைக்காக' திருமணம்செய்யப்படுகிற சிறு பெண்கள் (உதவிக்கு ஆண்இல்லை என்று செய்யப்படுகிற சிறுவர்கள்), அங்கே பாலியல் வன்முறை உண்டா (அங்கு இருக்கக்கூடிய அது நகரத்திலும் அதிகம் என்று சொன்னால் சிரிப்புத்தான் வரும்) என அவர்களது உளவியலை அறியவே விருப்பமாயுள்ளது.
லீனாவின் படம் அவற்றை அறிகிற ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. அந்த 'மனிதர்கள்' (எனக்கு அவர்கள் மனிதர்களாகத் தெரிகிறார்கள், நகரத்தில் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு மறைவிடங்களில் சிறுவர்களிலும்/கிடைக்கிற பெண்களிலும்/ஏழை பாலியல் தொழிலாளிகளிலும் பாயக் காத்திருக்கிற எத்தனையோ அறிவுசீவி, சாதாரண ஆண்களை விடவும், எவ்வளவோ(ஓ)படி மேலானவர்கள்தான் இந்த ஆண்கள் தென்படுகிறார்கள், தனது சமூக நியமத்தை 'புரியாத' லீனாவின் தொடரான கேள்விகளில் கண்கள் புரியாமல் தயங்க வீம்பாய் "16 வயதில் ஒரு பெண்ணைக் கட்டிவிட்டு, மூன்று வருடங்களுக்குப் பிறகு, இன்னொரு 16 வயதுப்பிள்ளையைக்கண்டுவிட்டேன் அதையும் விரைவில் திருமணஞ்செய்யவேண்டும்" என்று "சொன்ன" அந்த 45 வயது 'பெடியன்' உட்பட. அவர்களைக் 'குற்றக்கூண்டில்' நிறுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.) - அது அவர்கள் சமூகத்தில் ஏற்கப்பட்ட, நம்பப்படுகிற, நம்பவைக்கப்பட்ட ஒன்று. இதுக்குள் 'நுழைகிற' அந்நிய ஆட்கள் முன்அனுமானங்களுடன், 'தங்களது' ஒழுக்க மதிப்பிடல்களுடன் இறங்கக்கூடாது. சமூக சேவர்கள், counselors, தம் சக மனிதர்களை மதிக்கவேண்டிய மனிதர்கள் எல்லாருக்குமுரிய முக்கிய விதி இது: "மற்றவர்களை மதிப்பிடாதே ஏனெனில் நீ அவர்களிலும் பார்க்க உயர்ந்தவர் கிடையாது." (உயர்ந்தவர் என நினைத்தால் அது 'பாரபட்சமான' தன்நம்பிக்கையிலாற்பட்ட பார்வையையே தரும்). //

இதில் மாற்றுக்கருத்துக்கு எதுவுமில்லை. அப்படியே ஏற்றுக்கொள்கின்றேன். அதே சமயம், அந்தப்பெண்களின் மனோநிலை பற்றிய உங்கள் கருத்துக்களைப் பற்றியும் அறிய ஆவல்? அல்லது நகரத்தில் நமது நாகரீகக்கனவானகள் இப்படியிருக்கின்றார்களே, அப்படியே அந்த ஆண்களுக்கும் இருக்கட்டும் என்றால், அந்தப்பெண்களின் வெளி பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? எங்கேயெனினும் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருப்பது பெண்கள்தானே?

...
//அதனால் இந்த உங்கள் விமர்சனம் இது தாற தொனி இது ஒரு வெள்ளைத்தனமாக பார்வை என்பது எனது அபிப்பிராயம்.//
இதை நீங்கள் என்மீது வைக்கும் விமர்சனமாய் ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை. சிலவேளைகளில் படைப்புகளால் பாதிப்படைந்து அதை மூன்றாம் மனிதராய் வெளியிலிருந்து பார்க்கமுடியாத பார்வையின் நிமிர்த்தம் இப்படியொரு வெள்ளைப்பார்வை விமர்சனத்தை எழுதியிருக்கலாம் என்பதை எனது பார்வையாக முன்வைக்கின்றேன். நன்றி.
...
இதை அவசரமான ஒருபொழுதில் எழுதுகின்றேன். ஆறுதலாக நேரம் வாய்ப்பின் இது குறித்து தொடர்ந்து உரையாட ஆர்வமாகவே இருக்கின்றேன்.

(மேலே காலையில் எழுதியதால் நிரம்பப்பிழைகளும் சொல்லவந்த கருத்துக்களை எழுதுகையில் குழப்பமும் இருந்ததால் திருத்தி மீண்டும் பின்னூட்டத்தில் இடுகின்றேன்)

12/02/2005 06:14:00 PM
Anonymous said...

டிஜே, ஒரு பொடிச்சி இருவரின் குறிப்புகளும் இரு கோணங்களிலே படத்தினை விபரிக்கின்றன. நன்றி. ஒரு பொடிச்சியின் வினா நியாயமானதாகவிருக்கலாம்; ஆனால், ஓர் இயக்குநர் ஒரே படத்திலேயே இரு கருத்துகளையும் அடக்கிக் காட்ட முயற்சிக்க முடியாதென்றே படுகிறது. அப்படியாக மணிமேகலை செய்திருப்பாரானால், படம் திசைகெட்டு அலைந்திருப்பதாக முடிந்திருக்கலாம். (படம் பார்க்காமலே கருத்து எழுதியதை மன்னித்துக்கொள்ளுங்கள்)

12/02/2005 06:42:00 PM
Anonymous said...

இப்படத்தில் நகரவாழ்க்கையோ, அதன் நாகரீகமோ தூய்மையானதென்று சொல்ப்பட்டதா? (அல்லது அந்தக் கருத்துவரும்படி ஏதாவது இருந்ததா?)
இல்லாத பட்சத்தில் பொடிச்சியின் சிலகருத்துக்கள் தேவையற்றவை. முடிந்தால் இன்னொரு படம் நகரத்தின் ஒடுக்குமுறைகளையும் சிக்கல்களையும் விவரித்து எடுக்கலாம். அதையும் லீனா தான் செய்ய வேணுமெண்டு எதிர்பார்க்கிறதும் ஒருவித வன்முறைதான்.

வாதத்தில் எதிராளியை மடக்க முதலவதாகத் தெரிவுசெய்யப்படும் ஆயுதம் (மிக வலிமையானதும் கூட) இன்னொரு விசயத்தைத் தொடர்புபடுத்தி அதில் எதிராளியின் சம்பந்தப்படாமையைச் சொல்வது. "இதைக்கதைக்கும் நீ, அதைப்பற்றிக் கதைத்தாயா?", இப்போது எதிர்க்கும் நீ, அப்போது எதிர்த்தாயா?" என்பதுபோன்ற கருத்துக்கள். வேறோரிடத்தில் வோறோர் மாதிரிக் கருத்துச் சொல்லி பின் இப்போது மாறிப்பேசினாலாவது பரவாயில்லை. கருத்தே சொல்லாமல், சம்பந்தப்படாமலேயே இருந்துவிட்டநிலையில் இப்படிக் கேட்பது சரிதானா?

12/02/2005 10:12:00 PM
ஒரு பொடிச்சி said...

//இது எல்லாவற்றையும் ஒரேயிடத்தில் அடக்கவேண்டும் என்ற எண்ணத்தால் வந்த கருத்துப்போல எனக்குத் தோன்றுகின்றது. அதைப் பேசிவிட்டுத்தான் இதையும் பேசவேண்டும் என்று எதிர்பார்பபது கூட ஒருவிதமான வாசக வன்முறைதான். ஆகக்குறைந்து குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி தொடர்ந்து பேசப்பட்டுக்கொண்டேதான் (விளைவுகள் உருப்படியாக இல்லாவிட்டாலும்) இருக்கின்றது. .. அதற்கு தீர்வு கண்டுவிட்டுத்தான் பிறகு இதைப் பற்றி பேசவேண்டும் என்பது சற்று கோணலாய்த்தான் தெரிகிறது. (புலிகள் X எதிர்தரப்பு செய்யும் கொலைகள் பற்றிப்பேசுகிற உங்களிடம் இங்கு நடக்கும் இளைஞர் வன்முறைக்கு முதலில் தீர்வைக் கூறிவிட்டு, பிறகு அந்தவிடயங்களைப்பற்றி பிறகு பேசுங்கள் என்பதுபோலத்தான் இருக்கும்).//

இல்ல, அந்த அர்தத்தத்தில நான் எழுதேல்ல நீங்க குறிப்பிடுற உதாரணமும் புரியவில்லையானாலும்,
நான் எழுதியதை எப்படி புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளமுடிகிறது.
பொதுவா விடுதலைப்புலிகள், (இப்போ தமிழ்த் தேசியம் திருமா ராமதாஸ்),
இப்படியான தலைப்புகளில் பேசுகிறபோது மற்றப் பக்கம், பேசாததையிட்ட முறைப்படும் கருத்துக்கள் வரும்-
இந்த இயக்கம் செய்ததக் கூறுகிறவர் ஏன் பிற இயக்கங்கள் செய்ததச் சொல்லேல்ல, இத்தியாதி, என்று.
அந்தவிதமான வாதத்தில்/கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது; அதனால, லீனா இப்படி இப்படி எடுக்கவேணுமென்று சொல்வதிலோ இத இத எடுக்கலாம் என்பதிலோ - என்னிடம் பரிந்துரைப்புகளும் இல்ல. எதிர்பார்ப்புக்களும் இல்ல. அதில்ல விசயம்.

மேலே எழுதியுள்ளது, அனேகமாய் அந்தப் படம் பார்த்தபிறகு எனக்கு தோன்றியவை.
இந்த படம் அதிர்வுகள் தந்தது என்பது உண்மைதான்.
அது குறித்து, எனக்கெழுந்த கேள்வி: "எங்கள (என்னையும் சேர்த்து) இந்தப் படம் ஏன் பாதித்தது?"
எதியோப்பியாவில் 10,11,12 வயதில் சிறுமிகளை ஆண்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள்... அவர்களது சிறுவம் களவாடப்படுகிறது (இந்தப் படத்திலே போலவே!). இதை ஒத்த நிகழ்வுகள் பின்தங்கிய நாடுகளின் பல பிரதேசங்களில் உண்டு. இதை ஓப்றா வின்ஃறி தொலைக்காட்சிக்காக படம் பிடிக்கிறா. தனது நிகழ்ச்சியில் "அமெரிக்காவில் பிறந்ததற்காக பெண்கள் நீங்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படவேண்டும்" என ஒரு கருத்தை உதிர்க்கிறார். இது குறித்த ஒரு விமர்சனமா (1) உன்னோட நாட்டுப் பெண்களுடைய நிலமை அப்பிடி என்ன திறமா இருக்கிறது என்று ஒருவருக்கு தோன்றும்; அல்லது (2) அப்படித் தோன்றாது (பதிலாய் "ஊண்மைதான் நாங்கள் அமெரிக்காவில் பிறந்ததற்கு அதிர்டசாலிகள்" எனத் தோன்றலாம்).
இதில உள்ள உளவியல் எனக்கு முக்கியமாப் படுது.
நகரத்தில உள்ள அடக்குமுறைகள் எல்லாம் எங்களுக்குப் பழகிப்போயிட்டுது. அத நாங்கள் தகவமைச்சுக் கொண்டாச்சு. இப்ப 'புதிய' சூழல் அது எங்களப் பாதிக்குது - இந்த அரசியலைத்தான் லீனாவின் படங் குறித்தும் குறிப்பிட விரும்பிறேன் - ஒரு 'விமர்சனமாக' ("சகல சுதந்திரங்களையும் கொண்டுள்ள சுதந்திரஜீவியான பெண்ணாய்" என்பதை ஒத்ததான தன்குரல் இப் படத்தில் லீனாவின் குரலில் பின்னணியில் வருகிறது). இதைக் குறிப்பிடுவதுற்கு, குழந்தை/பாலியல் தொழிலாளர்கள் புறக்காரணங்கள்தானே ஒழிய, அவை, லீனா அடுத்து எடுக்கவேண்டிய ஏலவே எடுத்திருக்கவேண்டிய படங்களின் கருக்களாகவேண்டியவர் அல்லர்.
ஒரு படத்தப் பார்த்தபிறகு அது எழுப்பிற வினைகள்/எதிர்வினைகள் முக்கியமானவை. மேலஉள்ள ஒரு அநாமதேயர் கூறியமாதிரி வேறவேறான பார்வையே இது; -சமூகம் சார்ந்த, இதிலுள்ள குறைபாடுகளைக் குறிப்பிட்டிராத இடத்தே- டீ.ஜே.இன் பார்வைக்கு முழுமையாய் எதிரான ஒரு கருத்தை கொண்டிருந்தததால் அந்தக் கருத்தை இங்கே எழுதத் தோன்றியது. அவ்வளவே.
இதில, (ஒரு பொடியன்) இது முறையா சரியா எனக் கேட்கிற அளவுக்கு "பிரச்சினை" என்னவென்று விளங்கவில்லை.
பொதுவாகவே யாருக்கும் 'தேவை'ப்படும் என எழுதுவதில்லை; அதனால், படத்தின் 'உள்' சொல்லப்பட்ட சட்டகத்துள்ளேதான் விமர்சகர் நின்றாகவேண்டுமென்று சட்டமேதும் இல்லை. ஆனால்
//வேறோரிடத்தில் வோறோர் மாதிரிக் கருத்துச் சொல்லி பின் இப்போது மாறிப்பேசினாலாவது பரவாயில்லை. கருத்தே சொல்லாமல்இ சம்பந்தப்படாமலேயே இருந்துவிட்டநிலையில் இப்படிக் கேட்பது சரிதானா?/
இது என்ன??? லீனா பற்றியதென்றால், அவர் எப்பப்ப என்ன கருத்துச் சொன்னார் எனத் தேடியெல்லாம் எழுதவில்லை; அவரது படங்களிற்கான எனது பார்வையையே எழுதினேன். இன்னார் என்பது படைப்பிற்கு அடுத்ததாக ஆர்வம் தாற விடயமே! ஒரு பாதிக்கிற புனைவுக்குப் போல இத்தகைய படங்கள் பற்றியும் (அப் படம் பேசியது தாண்டியும்!) சிந்திக்கவும் எழுதவும் எனக்கு நிறைய இருப்பதாய் நினைக்கிறேன். அதுதான் படைப்பாளிகளுக்கு உதவும் என்பது எனது நம்பிக்கை.
மற்றது, 'பலீபீடம்' ஆவணப் படம் என்கிற ரீதியிலும் சரியா வரேல்ல என்றுதான் நினைக்கிறேன்; 'விநோதமான' உலகத்துள் நுழைகிற அதிரச்சியைத் தவிர. ஆனால் 'பறை' மிகவும் பாதித்தது. 'மாத்தம்மா'வும் இரண்டொரு வருடங்களிற்குமுன் பார்த்தபோது பாதித்தது (இப்போது மீண்டும் பார்க்கையில் 'விமர்சனங்கள்' இருக்கலாம்; தங்கமணி இதுகுறித்து சுந்தரவடிவேலின் வலைப்பதிவில் எழுதியிருந்தார். ஆனா அந்தப் படமும் முக்கியமானதே).
அந்த சமூகத்தில் பிறக்காத, அந்த சமூகத்து நம்பிக்கைகளை சுமக்காத, அந்த சமூகத்து பெண்ணாய் /மனிதராய் வாழாத 'மூன்றாம் ஆளாய் 'வெளியிலிருந்து பார்க்கிறபோது' அவர்களது நியாயங்களை எனது மதிப்பீடுகளூடாகப் பார்க்காமலிருப்பதே எனது நிலைப்பாடு.
//அதே சமயம், அந்தப்பெண்களின் மனோநிலை பற்றிய உங்கள் கருத்துக்களைப் பற்றியும் அறிய ஆவல்? அல்லது நகரத்தில் நமது நாகரீகக்கனவானகள் இப்படியிருக்கின்றார்களே, அப்படியே அந்த ஆண்களுக்கும் இருக்கட்டும் என்றால், அந்தப்பெண்களின் வெளி பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? எங்கேயெனினும் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருப்பது பெண்கள்தானே?//
குறிப்பிட்ட இப் படத்தில் ஆண் குழந்தைகள் கட்டி வைபடுவதைப் பற்றியும் (ஒரு காட்சி மட்டும்!) வருகிறது.
அவர்களும் பாதிக்கப்படவே செய்கிறார்க்ள.
இதைப் பற்றி பிறிதொரு இடத்தில விரிவாக எழுதவேண்டுமென்பதாலும்தான் மேலே இன்னு...ம் நீளமாய் எழதவில்லை! அதில் வேறு படங்களையும் முன்வைத்து விரிவாக எழுதலாம் என நினைக்கிறேன். நிச்சயமாக லீனாவிற்கு அதை அனுப்பியும் வைப்பேன்; அதற்கான அவரது கருத்தையும் அறிய ஆவலாய் இருப்பேன்.
நன்றி.

12/03/2005 01:25:00 AM
இளங்கோ-டிசே said...

கருத்துக்களுக்கு நன்றி பொடிச்சி. இவ்வாறு தொடர்ந்து எதிரெதிர் கருத்துக்களுடன், தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாது உரையாடமுடிகின்றது என்பது நிறைவுதருகின்றது. மேலும் நான் படம் பார்த்து/எழுதி முடிக்கின்றவரை தெரியாத கோணத்தை உங்களது பின்னூட்டங்கள் சிந்திக்கவைக்கின்றது. அதற்கும் நன்றி.
...
//புலிகள் X எதிர்தரப்பு செய்யும் கொலைகள் பற்றிப்பேசுகிற உங்களிடம் இங்கு நடக்கும் இளைஞர் வன்முறைக்கு முதலில் தீர்வைக் கூறிவிட்டு, பிறகு அந்தவிடயங்களைப்பற்றி பிறகு பேசுங்கள் என்பதுபோலத்தான் இருக்கும்).//
இந்த உதாரணத்தை நான் குறிப்பிட விளைந்தது, நீ இருக்கும் சூழலின் (குழந்தைத் தொழிலாளர்)விமர்சிக்காமல், தொலைவிலிருக்கும் விடயங்களை விமர்சிப்பதில் என்ன நியாயம்?' என்ற கருத்து வருவதுமாதிரி எனக்கு உங்களது முதலாவது பின்னூட்டம் தெரிந்தது. அதனால் இங்கிருக்கும் பிரச்சினையைப் (இளைஞர் வன்முறைக்கொலைகள்) பேசாமல் ஏன் தொலைவிலிருக்கும் (both புலிகள் X எதிர்த்தரப்பு செய்யும் கொலைகள் ...I didn't mean that you're taking only one side)பிரச்சினையைப் பேசுகின்றாய்?' என்று ஒருவர் இலகுவாய் வினாவமுடியும் என்பதையே குறிப்பிட விளைந்தேன்.
//அதனால, லீனா இப்படி இப்படி எடுக்கவேணுமென்று சொல்வதிலோ இத இத எடுக்கலாம் என்பதிலோ - என்னிடம் பரிந்துரைப்புகளும் இல்ல. எதிர்பார்ப்புக்களும் இல்ல. அதில்ல விசயம். //
நீங்கள் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று தெளிவுபடுத்தியிருக்கின்றீர்கள். நன்றி.
...
//இதைப் பற்றி பிறிதொரு இடத்தில விரிவாக எழுதவேண்டுமென்பதாலும்தான் மேலே இன்னு...ம் நீளமாய் எழதவில்லை! அதில் வேறு படங்களையும் முன்வைத்து விரிவாக எழுதலாம் என நினைக்கிறேன். நிச்சயமாக லீனாவிற்கு அதை அனுப்பியும் வைப்பேன்; அதற்கான அவரது கருத்தையும் அறிய ஆவலாய் இருப்பேன். //
நல்ல விடயம். அத்துடன் நீங்கள் குறிப்பிடுகின்ற சின்னப்பெடியங்களும் சிறுவயதில் திருமணஞ்செய்து வைக்கப்படுகின்றார்கள் என்பதுவும் முக்கிய அவதானம். நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

12/03/2005 01:52:00 AM
இளங்கோ-டிசே said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.
....
தர்சன், நீங்கள் குறிப்பிடும்,
//ஆக, இங்கு பிரச்சனை கூட்டு அடையாளம் வ்ச் தனியடையாளம். இந்த இரண்டில் எந்த கருத்தாக்கமும் அதன் தீவர எல்லைகளை அடையும்போது மனிதர் பாதிக்கப் படுகிறனர். இவைகளுக்கிடையிலான ஒரு சம நிலையைக் கண்டுபிடிப்பதே இங்கு இருக்கும் சவால்.//
இந்த விடயம் கூட விவாதிக்கப்படவேண்டிய முக்கியவிடயம்போலத்தான் எனக்கும் தோன்றுகின்றது.

12/03/2005 01:56:00 AM
Anonymous said...

ஐயோ பொடிச்சி,
நீங்கள் சொன்னது பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டதைப்போல (அதையும் நீங்கள் சொல்லித்தான் எனக்கு விளங்கினது) நான் சொன்னதும் ஆகிவிட்டதாக நினைக்கிறேன். நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் வசனம் லீனாவைக் குறித்ததன்று. இந்த வாதத்தோடு சம்பத்தப்பட்டதன்று.

பொதுவாகவே எதிராளியை மடக்கப் பயன்படுத்தப்படும் முறைபற்றி (இதைச் சொல்லும் நீ அதைப்பற்றிச் சொன்னாயா?)த் தான் குறிப்பிட்டேன். மற்றும்படி இங்கே நடக்கும் வாதத்துக்கும் என்னுடைய பின்னூட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதை இத்தால் உறுதிப்படுத்துகிறேன்.

12/03/2005 05:03:00 AM
ரவி ஸ்ரீநிவாஸ் said...

This sort of cultural relativism
can be used to justify any
violence and status quo. Are not those children entitled to decide about their future.Should tradition
and custom be used to deny them
every right.Podichi may even
justify sati and female infanticide by taking a relativist position.

12/03/2005 09:02:00 AM
இளங்கோ-டிசே said...

சாரா,
நான் குறும்படங்களுக்கான திரையிடலில் சில படங்களையும், லீனாவின் சந்திப்பிலும் சில படங்களையும் பார்த்தேன்/வாங்கினேன்.
....
நீங்களிருக்கும் இடத்தில் எங்கே பெறலாம் என்று தெரியவில்லை.
இயலுமாயின் இந்த மின்னஞ்சலுக்கு ஒரு கடிதம் தட்டிவிடவும்.
leenamanimekalai at kanavuppattarai dot com

மேலதிகத் தகவல் தேவையெனில் இங்கே சென்று பார்க்கவும்
www.kanavuppattarai.com

12/03/2005 08:35:00 PM
சுந்தரவடிவேல் said...

பொடிச்சி சொல்கிற (தை நான் புரிந்து கொண்ட) மாதிரி, வெளிக் கலாச்சாரத்துக் காரரொருவர், ஒரு மூடப் பட்ட (அல்லது மாற்றாக 'வசதி'க்கேற்ப சற்றே திறக்கப்பட்ட) சமூகத்துள் சென்று 'அயல்' சமூக நடைமுறைகளின் மேல் நின்று கேள்வி எழுப்புவது ஒரு வித வன்முறையே. படத்தில் ஓரிடத்தில் சுதந்திரமான நான் vs சுதந்திரமற்ற இவள் என்ற தொனி தென்பட்டதும் உண்மையே. படத்தின் முழுமையிலும் இத்தொனி இல்லை. தொன்மை, கலாச்சாரம் என்ற பெயரில் இறுகிப் போயிருக்கும் கட்டுமானங்கள் தகர்வதை அச்சமூகப் பெண்களும் விரும்பியே ஏற்கிறார்கள், அல்லது ஏற்கவே விரும்புகிறார்கள். ஆனால் அவர்களது விருப்பத்துக்கும் 'வெள்ளைக்காரத்தனமான' கனவுகளுக்கும் எந்தப் போக்கிடமும் இல்லாமற் போய்விடுகிறது. மிகவும் அண்டைய சமூகத்திலிருந்து அவர்களுக்குத் தேர்வு செய்யும் உரிமையோ, சுதந்திரமோ இருப்பதாகத் தெரியவில்லை என்பதைப் படம் சொல்கிறது. ரவி ஸ்ரீனிவாஸ் சொல்லியிருப்பது கவனிக்கப் பட வேண்டியது. ஊடுருவலும் ஒப்பிடலும் இல்லாது போயிருப்பின் சதியை 'ஒழி'த்திருக்க முடியாதல்லவா? ஆனால் அதே நேரத்தில் எந்த அளவுக்கு ஒரு கலாச்சாரம் இன்னொரு கலாச்சாரத்துக்குள் ஊடுருவலாம் என்பதற்குத் தனிமனிதரின் ஏற்பையே அளவாகக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
சமூக நடைமுறைகள் நிரவப் பட முடியாதவை. சீனாக்காரன் சப்புக்கொட்டி, ஓசைப்பட உறிஞ்சிச் சாப்பிடுவதை இரண்டு ஐரோப்பியர்கள் புறம்பேசியதைக் கண்டு கோபம் வருகிறது. நீங்கள் உங்கள் ஐரோப்பீய 'நாகரீகத்தை' ஆசியனிடம் எதிர்பார்ப்பது ஒரு வன்முறை என்றேன். இதைப் போலவே அந்தக் கிராமத்து நடைமுறைகள் 'நம்மால்' விமர்சிக்கப் படுவதாகக் கொள்ளலாம். அந்தக் கிராமத்துப் பெண்ணொருத்தி புகைப்படப் பெட்டியுடன் நகரச் சேரிகளையும் நடைபாதைச் சீரழிவுகளையும் புகுந்து படமெடுத்துக் கொண்டு போய்த் தன் கிராமத்தில் காட்டுவாளாயின் எப்படியிருக்குமென்று யோசிக்கிறேன். அதே தொனியில்தான் மேலே உரையாடலில் குறிப்பிடப்பட்ட அந்தப் பெண்ணும் சொல்வாள் 'எங்களுக்குக் கை இருக்கு உழைச்சுப் பிழைக்க, நாங்க ஏன் படிக்கனும், ஆயிரத்துக்கு ஒருத்தர்ட்ட வேலைக்குப் போகணும்?' என்று. அந்தப் பெண்ணே சாதீயத்தையும் தலையில் தூக்கி வைத்திருப்பாள் என்பது உபரிச் செய்தி. அது அவள்.
முடிவாகச் சொல்ல என்னிடமும் எதுவுமில்லை. ஸர்வம் விஷ்ணும் ஜகத் :) எல்லா நிலைமைகளும்,எல்லாக் காலங்களும், எல்லா வஸ்துக்களும் ஒன்றுக்கொன்று சமானமானவையே. நீரும் கழுதையும் சமானந்தானா? ஆம். சொல்றது பாரதி. ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி ஹி ஹி :)
நல்ல உரையாடலை ஏற்படுத்தியிருக்கும் லீனாவின் படத்துக்கும், இப் பதிவுக்கும் நன்றி.

12/05/2005 04:57:00 AM
ROSAVASANTH said...

//ரவி ஸ்ரீனிவாஸ் சொல்லியிருப்பது கவனிக்கப் பட வேண்டியது. ஊடுருவலும் ஒப்பிடலும் இல்லாது போயிருப்பின் சதியை 'ஒழி'த்திருக்க முடியாதல்லவா? //

அப்படித்தான் ரவி ஸ்ரீனிவாஸ் சொன்னாரா?

12/05/2005 06:28:00 AM
சுந்தரவடிவேல் said...

ரோசாவசந்த், அதை இப்படி அர்த்தங் கொண்டிருப்பதில் என்ன பிரச்சினை என்று புரியவில்லை!

12/05/2005 08:42:00 AM
SnackDragon said...

//This sort of cultural relativism
can be used to justify any
violence and status quo. //
இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட வாதம் என்று படுகிறது. ரவி சொன்னது, இந்த வகையான கலாச்சார ஒப்பீடுகளால் எந்த பிற்போக்குத்தனத்தையும் நியாப்படுத்தமுடியும் என்பதாக நான் புரிந்து கொள்கிறேன்.

அது தவிர, நான் பொடிச்சிக்கு சொல்ல நினைப்பது,
எதோடு எதை ஒப்பீடு செய்கிறோம் என்பதுதான் முக்கியமானது இங்கே. பெரும்பாலோனரின் வாழ்வுடன் சிறுபான்மையினரை ஒப்பிடும்போது கலாச்சாராக்கூறுகள் அழிந்து போகின்றவா அல்லது
மேன்மை நோக்கிப் பயணிக்கிறோமா என்பதும் அந்த ஒப்பீட்டின் அளவிலே நிகழும். கலாச்சாரம் வளர்ந்ததுவே பழைய , புதியனவற்றையும் இன்ன பிறவற்றையும் உள்வாங்கிதான் எனும்போது, இற்றைய முன்னேற்றங்களை உள்வாங்கிக்கொள்ள நாமே தடையாகலாமா?
அரசாங்கமோ அல்லது பிறர் தருகின்ற உரிமைகளோ மறுக்கப்படுகின்றன என்பதை நீங்கள் எதனால் யோசிக்காமல் உள்ளீர்கள் என்று நின்னைக்க எனக்கு ஆச்சரியமாய் உள்ளன. அப்படியே இந்த வாதத்தை நீட்டனால், நீங்கள் சொல்வது குலக்கல்வி வரைக்கும் கொண்டுபோய் விடும். எதைக்கொண்டு மறுப்பீர்கள்?
அய்யகோ!
நரிக்குறவர்களை அப்படியே இன்னும் தெற்கு நோக்கிப் போய்கொண்டிருக்கச்சொல்லலாம். மீனவர்களை படிப்பதை நிறுத்திவிடச்சொல்லலாம். நம்மவர்களோ, மேற்கில் பிறக்காவிடினும்
ரேட்டிங்(dating) செய்து கொண்டு ஒப்பீடல்களைப்பற்றிக் கதைக்கலாம்.

12/05/2005 09:17:00 AM
SnackDragon said...

//அமெரிக்காவில் பிறந்ததற்காக பெண்கள் நீங்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படவேண்டும்" என ஒரு கருத்தை உதிர்க்கிறார். இது குறித்த ஒரு விமர்சனமா (1) உன்னோட நாட்டுப் பெண்களுடைய நிலமை அப்பிடி என்ன திறமா இருக்கிறது என்று ஒருவருக்கு தோன்றும்; அல்லது (2) அப்படித் தோன்றாது (பதிலாய் "ஊண்மைதான் நாங்கள் அமெரிக்காவில் பிறந்ததற்கு அதிர்டசாலிகள்" எனத் தோன்றலாம்).
இதில உள்ள உளவியல் எனக்கு முக்கியமாப் படுது. //

இது எனக்கும் முக்கியமாத்தான் படுது. ஆனாலும் இப்படி
/நகரத்தில உள்ள அடக்குமுறைகள் எல்லாம் எங்களுக்குப் பழகிப்போயிட்டுது. அத நாங்கள் தகவமைச்சுக் கொண்டாச்சு. இப்ப 'புதிய' சூழல் அது எங்களப் பாதிக்குது - இந்த அரசியலைத்தான் லீனாவின் படங் குறித்தும் குறிப்பிட விரும்பிறேன் /
அரசியல் என்று சொல்ல முடியாதெண்டு நினைக்கறன். ஏனெனில் அவர(கள்) பார்வையில் அது முன்னேற்றம் என்று படுது. அதில் ஏதேனும் இன்னொரு மோட்டிவோ , சுயநலாமோ இருப்பதாகப் படவில்லை. வேறு காரணம் இருந்தால் பொடிச்சி விளக்கலாம். :-)

12/05/2005 09:32:00 AM
SnackDragon said...
This comment has been removed by a blog administrator.
இளங்கோ-டிசே said...

//படத்தில் ஓரிடத்தில் சுதந்திரமான நான் vs சுதந்திரமற்ற இவள் என்ற தொனி தென்பட்டதும் உண்மையே//
படத்தில் period timeல் ஒரு பெண் ஊருக்கு வெளியே இருப்பதைக்காட்டும்போது, 'சுதந்திரம்,பொருளாதாரம், நாகரிகம் என்பவற்றை அனுபவிக்கும் நான், இவற்றில் எதையும் அனுபவிக்கமுடியாத இந்தப்பெண்....எங்களுக்கிடையில் இருக்கும் கண்ணாடிப் பாறையை உடைக்கப்போவது யார்?' என்று (எனது நினைவில் இருப்பதை எழுதுகின்றேன்) லீனா narrativeவாய் சொல்வதாய் வரும். இதில் 'நாகரிகம்' என்பது எதுவென்பதோ அல்லது இவை கிடைப்பதால் உண்மையான சந்தோசம்/நிம்மதியாய் வாழ்கின்றோமா என்பது ஒருபுறம் இருந்தாலும், லீனா எழுப்ப விரும்புவது, தர்சன் குறிப்பிட்ட மாதிரி தனிமனித சுதந்திரம் எதிர் கூட்டுச் சுதந்திரம் என்ற அடிப்படையில், தனிமனித சுதந்திரத்தை என்றுதான் நினைக்கின்றேன். இந்த விடயத்தில் எனக்குள் இன்னொரு கேள்வி எழும்புகின்றது, ஒரு சமூகத்தில் குறுக்கிடுதல் என்கின்றபோது, இதேயே தலித்துக்களை ஒடுக்கும் ஆதிக்கச் சக்தியினரும் மூன்றாம் மனிதராய் நாங்கள் அவர்களைக் கேள்விக்குட்படுத்தும்போது, எம்மை நோக்கி இதே கேள்விகளை கேட்பதறகான் வாய்ப்பு இருக்கின்றதோ என்று எண்ண வைக்கிறது (கிட்டத்தட்ட இதைத்தான் இரவியும் கூறுகின்றார் என்று நான் புரிந்துகொண்டேன்). ஒரு சமூகத்தில் குறுக்கிடுதல் என்பதற்கு என்னவிதமான அளவீடுகள் அல்லது நியாய/அநியாங்கள் உள்ளன என்பதில் மிகவும் குழப்பாய் உள்ளது :-(.

12/05/2005 10:08:00 AM
கறுப்பி said...

Sara I have all of her works for sale. If you want I can give them to you. I have all the books from Kanavupaddarai as well. leena left them with me for sale. If anybody interested pls let me know.
thamilachi2003@yahoo.ca

12/05/2005 10:24:00 AM
இளங்கோ-டிசே said...

சுந்தரவடிவேல்,ரோசாவசந்த, கார்த்திக் பின்னூட்டங்களுக்கு நன்றி. கறுப்பி தகவலுக்கு நன்றி.

12/06/2005 01:12:00 AM
Karunah said...

Dear DJ!

Could you pse mail me Jeevan's
( Montreal) new e-mail ID immediately?

Tks.

12/06/2005 01:37:00 AM
ROSAVASANTH said...

சுவ, அப்படி சொன்னதாக புரிந்துதில் ஒரே ஒரு பிரச்ச்னைதான் இருக்கிறது. அது, அவர் அப்படி சொல்லவில்லை.

மாறாக ஒரு விவாதத்தின் நடுவே வழக்கம் போல ஒரு காக்காய் எச்சம் விட்டுவிட்டு சென்றார். வெறும் காக்காய் எச்சம் என்றால் துடைத்துவிட்டு போகலாம். இந்த எச்சம் விவாத மனப்பான்மையுடன், பரிசீலனைக்குரிய சாத்தியங்களுடன் கருத்துக்களை முன்வைப்பவரை 'சதியை கூட நியாயபடுத்துவார்' என்று சொல்கிறது.

எனக்கும் பொடிச்சியின் கருத்துகளுடன் முரண்பாடு உண்டு. ஆனால் அவர் சொன்னவை விவாதத்துக்கு உரியவை. ஒரேயடியாய் மற்ற கலாச்சார்ம் பற்றி யாரும் பேசக்கூடாது என்று சொல்லவும் முடியாது, அதே நேரம் அப்படி பேசுவதில் வன்முறையே இல்லை என்றும் சொல்லமுடியாது. உதாரணங்களு ஏற்ப இது மாறுமடும். தீ மிதிப்ப்பதை ஒரு அரசாங்கம் தடை செய்வதை நான் கடுமையாய் எதிர்பேன். ஆனால் சதி விஷயத்தில் அப்படி பேச முடியாது. இது குறித்து எனது கருத்துக்க்களை ஆங்காங்கே சொல்லியிருக்கிறேன். ஆனால் அதுவல்ல இப்போது சொல்ல்வந்தது. எனக்கும் கருத்துக்கள் இருக்கின்றன. அதை விரிவாய் சொல்லும் அளவிற்கு நேரம், சந்தர்ப்பம் இல்லாத போது மௌனம் காக்கிறேன்.

ரவி எச்சம் விட்டது கூட பெரிய பிரச்சனை இலை. அதை ரொம்ப நாகரீகமாக மாற்றி, 'அதுவும் கவனிக்க தக்கது' என்பதுதான் எரிச்சல் தருகிறது. ஆமென்!

12/06/2005 03:33:00 AM
ROSAVASANTH said...

//இதேயே தலித்துக்களை ஒடுக்கும் ஆதிக்கச் சக்தியினரும் மூன்றாம் மனிதராய் நாங்கள் அவர்களைக் கேள்விக்குட்படுத்தும்போது, எம்மை நோக்கி இதே கேள்விகளை கேட்பதறகான் வாய்ப்பு இருக்கின்றதோ என்று எண்ண வைக்கிறது (கிட்டத்தட்ட இதைத்தான் இரவியும் கூறுகின்றார் என்று நான் புரிந்துகொண்டேன்).//
ஸூப்பர். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் உம்பர்டோ ஈகோ, எட்வர்ட் சையது, அஷீஷ் நந்தி இவர்கள் வண்டி வண்டியாய் எழுதியுள்ளதை எல்லாம் ரவி தனது ஒரு பின்னூட்டத்தில் சொல்லியுள்ளதாக தோன்றுகிறது. ஒருவேளை தவறூ இருந்தால் சுட்டி காட்டுங்கள்.

12/06/2005 03:51:00 AM
இளங்கோ-டிசே said...

//Could you pse mail me Jeevan's
( Montreal) new e-mail ID immediately?//
Karunah, I have lost his contact few years back. Even the e-mails, i have sent for Jeevan, were bounced me back (I think his internet service also was canelled). I tried to keep in touch with him through other Toronto friends, but they said the same thing. May be, Jeevan is having a hibernate life in order to get peace :-).

12/06/2005 09:52:00 AM
இளங்கோ-டிசே said...

//This sort of cultural relativism
can be used to justify any
violence and status quo. Are not those children entitled to decide about their future.Should tradition
and custom be used to deny them
every right.//
இரவி கூறிய இதை வாசித்தபோது,
//இதேயே தலித்துக்களை ஒடுக்கும் ஆதிக்கச் சக்தியினரும் மூன்றாம் மனிதராய் நாங்கள் அவர்களைக் கேள்விக்குட்படுத்தும்போது, எம்மை நோக்கி இதே கேள்விகளை கேட்பதறகான் வாய்ப்பு இருக்கின்றதோ என்று எண்ண வைக்கிறது //
இந்தக் கோணத்திலும் யோசிக்கலாம் என்று (கவனிக்க நான் தான் புரிந்துகொண்டேன் என்று கூறியுள்ளேன்) எண்ணதோன்றியது. எனவே நான் எனக்குப் புரிந்தவளவில், எங்கேயிருந்து நான் இதை யோசிக்கத் தொடங்கியிருக்கின்றேன் என்று இரவி கூறியதை reference யாய்க் குறிப்பிட்டேன். மேலும், இரவியும் அப்படியொரு கேள்வியை, தான் எழுதியதின் நீட்சியாய் எழுப்ப விரும்பியிருக்கலாம் என்று என்னளவில் புரிந்துகொண்டேன். நன்றி.

12/06/2005 09:59:00 AM
ரவி ஸ்ரீநிவாஸ் said...

நான் இங்கு இட்டது ஒரு குறிப்பு மட்டுமே. அதை இட்டபோது விரிவாக எழுத இயலாத நிலையில்
இருந்ததால் ஒரு எதிர்வினையாக அதை இட்டேன். இதை இன்னும் விரிவாக விளக்கங்களுடன் வேறொரு சந்தர்ப்பத்தில் எழுத முயல்கிறேன். லீனா இயக்கிய படத்தினை நான் பார்க்கவில்லை என்பதையும் இங்கு தெளிவாக்கிவிடுகிறேன். பால்ய விவாக தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதை இந்து தேசியவாதிகளால் எதிர்க்கப்பட்டது. திலகர் போன்றவர்கள் பெண்ணுரிமை,திருமணம்
போன்றவற்றில் மிகவும் பிற்போக்கான நிலைப்பாட்ட்டினை எடுத்தனர். சதியை தடுக்கக் கூடாது என்று விடுக்கபட்ட விண்ணப்பத்தினை ராதா குமாரின் டூயிங் கிஸ்டரி நூலில் காணலாம். அவ்விண்ணப்பம் இணையத்தில் இருக்கிறது. இப்போது பால்ய விவாக தடுப்பு சட்டத்திலிருந்து
முஸ்லீம்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அகில இந்திய முஸ்லீம்
தனியார் சட்ட வாரியம் கோரியுள்ளது. இது போன்றவற்றில் மதம்,பண்பாடு போன்ற பெயர்களில்
சில நடைமுறைகள் நியாயப்படுத்தப்படுவதையும், சீர்திருத்தம் அல்லது மாற்றம் என்பது அந்நியர் தலையீடு என்று சித்தரிக்கப்படுவதையும் காண முடியும். ஆங்கிலேய அரசின் நோக்கம்
இவர்கள் பெண்ணுரிமை மறுப்பாளர்கள், பழமைவாதிகள் என்று இந்து தேசியவாதிகளை உலகிற்கு
அடையாளப்படுத்துவதுமாகும். இன்னும் விரிவாக அறிய லதா மணி, ரத்னா கபூர்,ஜானகி நாயர்,
பார்த்தா சட்டர்ஜி எழுதியுள்ளவற்றைப் படியுங்கள். சதி குறித்து நந்தி எழுதியிருக்கிறார். அதை
விட லதா மணியின் ஆய்வு இன்னும் விரிவானது, மிகவும் முக்கியமானதுபின்னூட்டங்களை அடியொற்றி ஒரு விவாதத்தில் ஈடுபட எனக்கு நேரமில்லை என்பதால் இகுறிப்புடன் நிறுத்திக் கொள்கிறேன்.ஒரு எளிமைப்படுத்தப்பட்ட எதிரெதிர் நிலைவாதங்களாக மட்டும் இது போன்ற சர்ச்சைகளை நான் புரிந்து கொள்ள விரும்பவில்லை. மனித உரிமைகள் குறித்த விவாதங்களில் ஆசிய விழுமியங்கள் என்ற வாதத்தின் மூலம் மேற்கத்திய மனித உரிமைகள் ஆசியாவிற்கு பொருத்தமற்றவை என்று
வாதிடப்பட்டதையும், மேற்கத்திய மனித உரிமைகள் அதீத தனி நபர் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டவை, அதை அனைத்துப் பண்பாடுகளுக்கும், கலாச்சரங்களுக்கும்
பொருத்தமானவை என்று கொள்ளக் கூடாது என்ற வாதமும் இருக்கிறது என்பதை இங்கு சுட்டிக்
காட்ட விரும்புகிறேன். இது போல் சீனாவிற்கான ஜனநாயகம் என்பதை சீனர்கள்தான் முடிவு செய்யமுடியும், மேற்கத்திய பல கட்சி கொண்ட பாராளுமன்ற மாதிரியை புகுத்த முற்பட வேண்டாம்
என்ற எச்சரிக்கைகளையும் இங்கு குறிப்பிடலாம்

12/06/2005 10:16:00 AM
ரவி ஸ்ரீநிவாஸ் said...

radha kumar - doing history

12/06/2005 10:18:00 AM
ரவி ஸ்ரீநிவாஸ் said...

http://chnm.gmu.edu/wwh/p/104.html

Sati:
Petition, Orthodox Hindus
The debates that led to the Company’s prohibition of sati stimulated elite orthodox Hindus to form organizations such as the Dharma Society to protect what they deemed traditional Hindu practices. Orthodox Hindus staunchly argued that custom as well as Hindu scriptures supported self-immolation by Hindu widows as their sacred duty. Further they claimed that Hindu widows were willing participants in sati because of their devotion to their deceased husbands and the promised spiritual rewards for themselves and their marital and natal families. These supporters of sati viewed Lord Bentinck’s Regulation of 4 December 1829 as an attack of the British imperial government in India on Hindu religion and undue governmental interference in the realm of religious practice and family life. Their arguments raise key questions about the legitimacy of government control of social practices and customs that people claim are integral to their religious beliefs.

See: Sati

“The Petition of the Orthodox Hindu community of Calcutta against the Suttee Regulation.” 14 January 1830. In J. K. Majumdar, ed. Raja Rammohun Roy and Progressive Movements in India: A Selection from Records, 1775-1845. Calcutta: Art Press, 1941.


The Petition of the orthodox Hindu community of Calcutta against the Suttee Regulation, together with a paper of Authorities, and the Reply of the Governor-General thereto. (January 14, 1830).

To The Right Hon. Lord William Cavendish Bentinck, &c.

My Lord: We, the undersigned, beg leave respectfully to submit the following petition to your Lordship in Council, in consequence of having heard that certain persons, taking upon themselves to represent the opinons and feelings of the Hindoo inhabitants of Calcutta, have misrepresented these opinions and feelings, and that your Lordship in Council is about to pass a resolution, founded on such erroneous statements, to put a stop to the practice of performing suttees, an interference with the religion and customs of the Hindoos, which we most earnestly deprecate, and cannot view without the most serious alarm.

With the most profound respect for your Lordship in Council, we, the under-signed Hindoo inhabitants of the city of Calcutta, beg leave to approach you in order to state such circumstances as appear to us necessary to draw the attention of government fully to the measure in contemplation, and the light in which it will be regarded by the greater part of the more respectable Hindoo population of the Company’s territories, who are earnest in the belief, as well as in the profession of their religion.

From time immemorial the Hindoo religion has been established, and in proportion to its antiquity has been its influence over the minds of its followers. In no religion has apostacy been more rare, and none has resisted more success-fully the fierce spirit of proselytism which animated the first Mahomedan conquerors.

That the Hindoo religion is founded, like all religions, on usage as well as precept, and one when immemorial is held equally sacred with the other. Under the sanction of immemorial usage as well as precept, Hindoo widows perform, of their own accord and pleasure, and for the benefit of their husbands’ souls and for their own, the sacrifice of self-immolation called suttee, which is not merely a sacred duty but a high privilege to her who sincerely believes in the doctrines of their religion; and we humbly submit that any interference with a persuasion of so high and self-annihilating a nature, is not only an unjust and intolerant dictation in matters of conscience, but is likely wholly to fail in procuring the end proposed.

Even under the first Mussulman conquerors of Hindostan, and certainly since this country came under the Mogul Government, notwithstanding the fanaticism and intolerance of their religion, no interference with the practice of suttee was ever attempted. Since that period, and for nearly a century, the power of the British government has been established in Bengal, Behar, and Orissa, and none of the governors-general, or their councils, have hitherto interfered in any manner to the prejudice of the Hindoo religion or customs; and we submit, that by various Acts of the Parliament of Great Britain, under the authority of which the Hon. Company itself exists, our religion and Laws, usages and customs, such as they have existed from time immemorial, are inviolably secured to us.

We learn with surprise and grief, that while this is confessed on all hands, the abolition of the practice of suttee is attempted to be defended on the ground that there is no positive law or precept enjoining it: a doctrine derived from a number of Hindoos, who have apostatized from the religion of their forefathers, who have defiled themselves by eating and drinking forbidden things in the society of Europeans, and are endeavouring to deceive your Lordship in Council by assertions that there is no law regarding suttee practices, and that all Hindoos of intelligence and education are ready to assent to the abolition contemplated, on the ground that the practice of suttee is not authorized by the laws fundamentally established and acknowledged by all Hindoos as sacred. But we humbly submit that in a question so delicate as the interpretation of our sacred books, and the authority of our religious usages, none but pundits and brahmins, and teachers of holy lives, and known learning and authority, ought to be consulted; and we are satisfied, and flatter ourselves with the hope, that your Lordship in Council will not regard the assertion of men who have neither any faith nor care for the memory of their ancestors or their religion: and that of your Lordship in Council will assume to yourself the difficult and delicate task of regulating the conscience of a whole people, and deciding what it ought to believe, and what it ought to reject, on the authority of its own sacred writers, that such a task will be undertaken only after anxious and strict inquiry, and patient consultation with men known and reverenced for their attachment to the Hindoo religion, the authority of their lives, and their knowledge of the sacred books which contain its doctrines ; and if such an examination should be made, we are confident that your Lordship in Council will find our statements to be correct, and will learn that the measure will be regarded with honor and dismay throughout the Company’s dominions, as the signal of an universal attack upon all we revere

12/06/2005 10:59:00 AM
Anonymous said...

நல்ல பதிவு டிசே..
கிட்டத் தட்ட ஒரு வருடத்திற்குப் பின் இந்தப் பதிவை உயிர்ப்பித்து எனக்கும் வாசிக்க வாய்ப்பளித்த அனானி phentermine-க்கு என் நன்றிகள் :)))

1/05/2007 01:22:00 AM
இளங்கோ-டிசே said...

பொன்ஸ், பின்னூட்டத்துக்கு நன்றி. இந்தப்பதிவுக்கு மட்டும் தினந்தோறும் spam பின்னூட்டங்கள் வந்துகொண்டிருக்கும். அடிக்கடி அழித்துக்கொண்டிருந்தாலும் இப்படி சிலது உள்ளே நுழைந்துவிடுகின்றன. உங்கள் சார்பிலும் நானும் அந்த அநானி நண்பருக்கு நன்றி கூறி அதை அழித்துவிடுகின்றேன் :-).

1/05/2007 02:55:00 PM