கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

என்னுடைய பின்-நவீனத்துவ புரிதல்கள்

Wednesday, February 21, 2007

(அல்லது பின்-நவீனத்துவமும் எனக்குப் பிடிக்கப்போகும் சனியும்)

தமிழ்ச்சூழலில் காலத்துக்காலம் பலவேறு இசங்கள் தீவிரமாய் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. காலத்தின் நீட்சியில் சில தங்கியும் பல உதிர்ந்தும் போயுமிருக்கின்றன. structuralism (அமைப்பியல்), existentialism(என்ன தமிழில்? இருத்தலியம்), magical realism (மாய/மாந்திரீக யதார்த்தம்), post-modernism (பின்-நவீனத்துவம்) போன்றவை அவற்றில் சில. இன்றையகாலத்தில் பின்நவீனத்துவம் தீவிரமாய் விவாதிக்கப்பட்டும், அதனூடாக மூடப்பட்ட இருண்ட பக்கங்களின் தாழ்ப்பாள்கள் திறக்கப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. பின்நவீனத்துவத்தை ஒரு சாரார் ஏற்றுக்கொண்டும், இன்னொருசாரார் அது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபடியும் தமிழ்ச்சூழலில் இருக்கின்றனர்.

இக்கட்டுரை(?) தகவல்களின் அடிப்படையில் எழுதப்படப்போவதில்லை. ழாக் டெரிடாவையும், ஸர்த்தரையும், நீட்சேயையும் தேடிக்கொண்டு போகப்போவதுமில்லை(உண்மையைச் சொல்வதனால் இவர்கள் எழுதிய எந்த மூலநூலையும் நான் வாசித்ததுமில்லை). என்னுடைய வாசிப்பு மற்றும் அனுபவங்களினூடாக நான் புரிந்துகொள்பவற்றை இயன்றளவு எளிமையாக பகிர்ந்துகொள்கின்றேன். தவறுகள் முழுமனதோடு ஏற்றுக்கொள்ளப்படும்; திருத்தங்கள் வரவேற்கப்படும்.

2000 ஆண்டளவில் பின்நவீனத்துவம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் எனக்கு பரீட்சயமாயிருக்கவில்லை. வளாகத்தில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த காலம் அல்லது அப்படி பாசாங்கு செய்துகொண்டிருந்த நேரம். சக்கரவர்த்தியின் நேர்காணலொன்று இங்குள்ள 'முழக்கம்' பத்திரிகையில் வெளிவந்திருந்தது. அதற்கான எதிர்வினையில்தான் முதன்முதலில் பின்நவீனத்துவம் குறித்து எனது சந்தேகங்களை முன்வைத்திருந்தேன். நேர்காணலில் சக்கரவர்த்தி 'கட்டவிழ்ப்பு' என்ற சொல்லை முன்வைத்து சில்வற்றை உரையாடியதாய் நினைவு. அந்தக் கடிதத்தில் நான் கூறியது இதுதான், 'சமூகக் கட்டமைப்பை (structure of society) உடைப்பதற்கு முன் மீள நிர்மாணிப்பதற்கான காரணிகள் தென்படவேண்டும். இல்லாவிடின் அதைவிட ஆபத்தான சீரழிவுகளைத்தான் சமூகம் சந்திக்கவேண்டியிருக்கும்....' என்றவாறு எனது அக்கடிதம் நீளும். அன்றையபொழுதுகளில் பின்நவீனத்துவம் குறித்த எதுவுமே எனக்குத் தெரியாது. இது ஒரு சாதாரண வாசக மனநிலையில் சிந்தித்த விடயம். இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால், அமெரிக்கா ஈராக்கில் நுழைந்தபோது பெரும்பானமையான மக்கள் 'கொடுங்கோலன்' சதாம் ஹுசைனிலிருந்து விடுதலை என்று கொண்டாடியிருந்தனர். அதே மக்கள்தான், நாங்கள் சதாமின் ஆட்சியில் இவ்வளவு கொடுமையான சூழ்நிலையில் இருக்கவில்லை என்று இப்போது கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆக, சதாமைவிட இன்னொரு நல்லவர் வரப்போகின்றார் என்று தீர்க்கமாய் தெரியாதவிடத்தில், அகற்றுவது ஆபத்தாய் அல்லவா இருக்குமென சிந்தனை அப்படியொரு திசையில் விரிந்திருந்தது. ஆனால் இந்தச்சிந்தனையை ஒரு பின்நவீனத்துவவாதி(?) இலகுவாய் நிராகரிப்பார். எனெனில் கட்டவிழ்ப்பு என்ற சொல் இவ்வாறான அர்த்தத்தைக் கொள்வதல்ல.

''அரசியல் என்பது வெறும் காத்திருப்பு அல்ல. கட்டவிழ்ப்பு என்பது எதோ ஒருவகையில் இடதுசாரி அரசியலுக்குப் பயன்படவேண்டும் என்கிறார் டெரிடா. தனது கட்டவிழ்ப்பு மார்க்சியப் பராம்பரியத்திற்குப் புறநடை அல்ல எனவும் அவர் கருதுகிறார். மேற்குறித்த புரிதல்களின் அடிப்படையில் நீதிக்காகவும், சனநாயகத்துக்காகவும் எடுக்கப்பட்ட முடிவே நமது அரசியலை ஆற்றுப்படுத்த வேண்டும். இங்கு நீதியில்லை, சனநாயகம் இல்லை என்கிற புரிதலே, புரிதலின் அடிப்படையிலான நமது இருப்பே, செயல்களே நீதி, சன்நாயகம் ஆகியவற்றிற்கான காத்திருப்பு ஆகும். பழைய மொழியின் கட்டமைப்பில் சிக்கி அரசியல் இழந்து நிற்கும் நமது இடதுசாரி அரசியலை மறு அரசியலாக்கம் செய்வதே கட்டவிழ்ப்பின் இன்றைய பணியாகும். அதுவே இன்றைய அரசியலைச் செயலுக்கு உந்தும். எனவே சனநாயகம்/நீதி குறித்த இன்றைய மொழியை நாம் அழிக்க வேண்டும். எல்லா அரசியலையும் மீள் அரசியலாக்கம் செய்ய வேண்டும். எல்லா மதிப்பீடுகளையும் மறு மதிப்பீக்குள்ளாக்க வேண்டும்' என்று 'கறுப்பு' தொகுப்பின் கட்டுரையொன்றில் அ.மார்க்ஸ் கூறுகின்றார்.

பின்நவீனத்துவம் ஒரு கருதுகோள்(?) (condition). இன்னும் எளிமையாக்கினால் மார்க்ஸிசத்தின் போதாமைகளை/இடைவெளிகளை நிரப்புவதற்காய் தோன்றியது என்றும் கூறுலாம் (எல்லா இடங்களிலும் பிரயோகிக்கமுடியாது). பின்நவீனத்துவம் மார்க்ஸிசம் போல தீர்க்கமான வரைபுகளை முன்வைப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. எனெனில் அது தன்னளவில் சிதைவுகளை ஏற்றுக்கொள்வதோடு, சட்டகங்களை நிராகரிக்கின்றது. உதாரணத்திற்கு விக்கிபீடியாவை எடுத்துக்கொள்வோம். ஒருவர் ஒரு விடயம் எழுதும்போது, பிறகு வரும் பலர் அதில் பல திருத்தங்களை செய்து கொண்டிருக்க்கின்றார்கள். எனவே முதலாவதை அடிப்படையாக வைத்து -அவற்றைச் சிதைத்தபடி- திருத்தங்கள் செய்யப்படுகின்றன. பின்நவீனத்துவம் இதை 'மறுவாசிப்பு செய்தல்' என்கின்றது (please note that the above example is not a good example of this word, i just simplified it). அதே சமயம் இப்படி பலர் ஒரு பிரதியை வாசிக்கும்போது பலவேறு வாசிப்புக்கள் வரச்செய்கின்றன. எனவே எது உண்மை என்ற குழப்பம் வருகின்றது. பின்நவீனத்துவம் முடிந்த உண்மை என்ற ஒன்றே இல்லையென்று நிராகரிப்பதோடு பல உண்மைகள் (பேருண்மைகள்?) என்ற கதையாடலை முன்வைக்கின்றது.

(2)
பின்நவீனத்துவம் என்றால் என்னவென ஆறேழு வருடத்துக்கு முன் -என் வாசிப்பையும் எழுத்தையும் ஊக்குவித்துக்கொண்டிருந்த- நண்பரொருவரிடம் கேட்டிருந்தேன். 'எல்லாவற்றையும் சந்தேகிக்க வேண்டும்' என்று பின்நவீனத்துவம் கூறுகின்றது என்றார். பிறகு வேறொரு நண்பருடன் மின்னஞ்சல் வழியே நிகழ்ந்த -பெரியார், திராவிடம், etc- விவாதத்தின்போது, நண்பர் 'ஆசிரியர் இறந்துவிட்டார்' என்ற சொல்லை பாவித்தார் (நீட்சே தான் கடவுள் இறந்துவிட்டார் என்ற வாதத்தை முதன்முதலில் முன்வைத்தவர்). 'பிரதியைப் பார்; பிரதி எழுதியவரைப் பார்க்காதே' என்பதுதான் இதன் அர்த்தம். ஒரு நல்ல பெண்ணியப்பிரதியைக்கூட தனது மனைவியை வதைத்துக்கொண்டிருக்கும் ஒருவன் எழுதக்கூடும் என்ற கருத்தாக்கத்தை நண்பர் முன்வைத்து உரையாடியபோது, நான் அறம் சம்பந்தமான திசையில் சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஒருவன் தன் மனைவியைச் சிதைத்துக்கொண்டுதான் இப்படியொரு நல்லபிரதியை எழுதியிருக்கின்றான் என்றால் எனது பார்வைகளை மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும்; அந்தப்பின்புலத்தில்தான் என்னால் பிரதியை அணுகமுடியும் என்ற வகையில் நான் உரையாடிக்கொண்டிருந்தேன். நணபர் அப்படியில்லை -ஆசிரியர் இறந்துவிட்டார்- என்று வகையில் பாரென்று மற்றொரு திசையில் விவாதிப்படியிருந்தார். இன்றும் என்னால் தீர்க்கமான முடிவுக்கு வரமுடியாத ஒரு முக்கியபுள்ளி இது.

பின்நவீனத்துவம் உண்மை என்பது ஒன்றே ஒன்று என்பதை ஏற்றுக்கொள்வதேயில்லை. உண்மைகள் பல என்கின்றது. உதாரணத்திற்கு, சி.புஸ்பராஜா எழுதிய 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலை எடுத்துக்கொள்வோம். சி.புஸ்பராஜா தனக்குத் தெரிந்த 'உண்மையை' கூறுகின்றார். சி.புஸ்பராஜாவை வாசித்த ஒரு வாசகருக்கு தமிழரசன் சத்தியக்கடதாசியில் எழுதுகின்ற எதிர்வினை வேறொரு 'உண்மையை'த் தருகின்றது. அதேபோன்று சாத்திரி என்பவர் 'ஒரு பேப்பரில்' எழுதுகின்ற தொடரை வாசிக்கும்போது வேறொரு 'உண்மை' துலங்குகின்றது. இதை எழுதுகின்ற மூவரும் தாங்கள் உண்மையைத்தான் எழுதுகின்றோம் என்கின்றார்கள். ஆனால் இவற்றை வாசிப்பவருக்கு ஒரு சம்பவத்திற்கே பலவிதமான கோணங்களில் உண்மைகள் இருப்பது புரிகின்றது. எனவே இதைத்தான் பின்நவீனத்துவம் பல உண்மைகள் இருக்கின்றன என்று கூறுகின்றது; ஒரேயொரு உண்மை என்பதை நிராகரிகின்றது.

பெருங்கதையாடல்கள், சிறுகதையாடல்கள் என்பது பின்நவீனத்தில் அதிகம் புழங்கும் வார்த்தைகள். பெருங்கதையாடல்கள் கட்டமைத்ததற்கு ஒரு உதாரணமாய், எனக்கு சிறுவயதில் ஆறுமுகநாவலர் சைவத்தை கட்டமைக்க வந்த ஒரு தேவதூதராக கற்பிக்கப்பட்டது. யாழ் இந்துக்கல்லூரியில் படிப்பவர்க்கு இப்பவும் அப்படித்தான் அவர் கட்டியமைக்கப்படுகின்றார் (படித்த சொற்பகாலத்தில் அதைக் கண்டிருக்கின்றேன்). இப்பெருங்கதையாடல்களை -ஆறுமுகநாவலர் சாதித்திமிர் பிடித்தவர்- என்ற சிறுகதையாடல்கள் அதை கட்டவிழ்ப்பு செய்கின்றன. ஆறுமுகநாவலர் பற்றி இதுவரை சொல்லப்பட்ட கருத்துக்களை மீள் அரசியலாக்கும்செய்யும்படி இச்சிறுகதையாடல்கள் கோரி நிற்கின்றன. இதற்கு இன்னொரு அருமையான உதாரணமாய் இப்போது வாசித்துக்கொண்டிருக்கின்ற ந.முத்துமோகனின் 'இந்திய தத்துவங்களின் அரசியல்' நூலிருந்து சிறு பகுதியைத் தரலாம்.

'...மேற்குறித்த பகுப்பில் ஆரியர் வருகைக்கு முந்திய சிந்துவெளி நாகரீகம் குறித்த தகவல்களெல்லாம் அடையாளமின்றி முழுவதும் அழித்தொழிக்கப்படுகின்றன. வேதங்களிலிருந்துதான் எல்லாமே தொடங்கின என்பது போன்ற மாயச் சித்திரம் உருவாக்கப்படுகின்றது. சிந்துவெளி நாகரீகத்தில் முறைப்படுத்தப்பட்ட தத்துவங்கள் தோன்றவில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அந்தப் பண்பாடு எங்கே போய்த்தொலைந்தது? தத்துவம் என்பதைவிட பண்பாடு என்பது அதிக அடிப்படையான யதார்த்தம் அல்லவா? சிந்து வெளி நதிக்கரையிலும் இன்றைய ஆப்கானிஸ்தானிலிருந்து உத்திரப்பிரதேசத்தின் மேற்குக் கரையோரம் வரை பரவிக்கிடந்த அந்த நாகரீகத்திற்கு என்ன ஆயிற்று? இத்தனை அகலமாகப் பரவிக்கிடந்த ஒரு பண்பாடு எந்தத் தடயமும் இன்றி செத்து ஒழிந்து போய்விடுமா? சமணர்கள் 24 தீர்த்தங்கரர்கள் என ஒரு வரலாற்றைக் கூறுகின்றார்களே, அதனை முழுவதும் புறக்கணிப்பது எப்படி? வைதீகம்/ அவைதீகம் என்ற பகுப்பு இக்கேள்விகளுக்கெல்லாம் எந்தப் பதிலையும் தராது.'

ஆக, வேதங்கள்/ஆகமங்கள் என்று கூறப்பட்ட பெருங்கதையாடல் மீது ஆரியர்களின் வருகைக்கு முன்னர் வாழ்ந்தவர்களின் பண்பாட்டுக்கு என்ன நடந்தது என்ற சிறுகதையாடல் மூலம் ந.முத்துமோகன் குறுக்கீடு செய்கின்றார்.

இனி பின் நவீனத்துவம் பெண்ணியம், தலித்தியம் போன்றவற்றிற்கு எப்படி உறுதுணை புரிகின்றது என்று பார்க்கலாம். தலித்துக்களை ஒடுக்கிய ஆதிக்கச்சாதிக்காரகள் அனைவரும் பெருங்கதையாடல்களின் மூலம் தமது இருப்பை நிலைநிறுத்தியிருக்கின்றார்கள். தலித்துக்கள் தமது சிறுகதையாடல்கள் மூலம் -கேள்விகள் எழுப்புவதன் மூலம்- பெருங்கதையாடல்களை சிதைக்கின்றார்கள். ஆதிக்கசக்திகளின் அரசியலை மீள் வாசிப்புச் செய்து தமக்கான அரசியலை தலித்துக்கள் உருவாக்கிக் கொள்கின்றார்கள். பெருங்கதையாடல் எது என்பதற்கு உலகமயமாதல் நல்லதொரு உதாரணம். அது பல்வேறு இனங்களின் மொழியை கலாச்சாரத்தை, பண்பாட்டுக்கோலங்களை தனக்குள் விழுங்கிக்கொள்கின்றது. ஒரே மொழி, ஒரே கடவுள், ஒரே ஜனாதிபதி எதிர்காலத்தில் பூமி முழுவதுக்குமாய் இருக்கும் சாத்தியங்களை ஒற்றைத்தன்மையை) இந்த உலகமயமாதல் உருவாக்குகின்றது (உலகமயமாதலால் எல்லாவற்றிலும் பாதகமே என்பதில் எனக்கு உடன்பாடுமில்லை). பின்நவீனத்துவம் பன்மைத் தன்மையை வரவேற்கின்றது. ஒவ்வொரு மனிதரும் தனது பண்பாட்டுடன், தனக்கான மொழியுடன் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றது. ஆகவே உலகமயமாதல் நோக்கி கடும் விமர்சனங்களை -மார்க்சிசம் போல- பின்நவீனத்துவம் முன்வைக்கின்றது.

பெண்ணியநோக்கில் பார்க்கும்போது, பின் நவீனத்துவம் கூறும் 'ஆசிரியர் இற்ந்துவிட்டார்' என்ற கருத்தாக்கம் மிகப்பெரும் சுதந்திரத்தை பெண்களுக்குக் கொடுக்கின்றது. இன்றைய தமிழ்ச்சூழலில் பெண்கள் எதை எழுதினாலும் அது அவர்களின் சொந்தக்கதை என்று வைத்து கிழிகிழியென்று கிழித்தும், கிசுகிசுக்களை உருவாக்கும் நம் சமூகத்தில் பெண் படைப்பாளிகளுக்கு 'பிரதியை மட்டும் பார்; அதற்குப்பின்னாலுள்ள எங்களைப் பார்க்காதே' என்று தீர்க்கமான மொழியில் பேசும் வெளியை பின்நவீனத்துவம் வழங்குகின்றது. அதே போன்று தலித்துக்களுக்கு வழங்குவதைப் போல இதுவரை சொல்லப்பட்ட ஆணாதிக்கப்பெருங்கதையாடல்களை தகர்க்கின்ற இன்னொரு வெளியையும் பின்நவீனத்துவம் பெண்ணியத்துக்கு தருகின்றது.

அண்மையில் 'வைகறை'யில் சுமதி ரூபன்(கறுப்பி), சா.கந்தசாமி பற்றிய ஒரு பதிவை எழுதியிருந்தார். சா.கந்தசாமி ரொரண்டோ வந்தபோது அவரது வைகறை நேர்காணலையும், இலக்கியக்கூட்டத்தில் பேசிய பேச்சையும் கேட்டு அவரைப் பற்றி கடும் விமர்சனம் இருந்தது என்கின்றார். ஆனால் பின் சா.கந்தசாமியின் 'அவன் அதுவானது'(?) என்ற நாவலை வாசித்தபோது அவரா இதை எழுதியது என்ற வியப்பு வருகின்றது என்கின்றார் சுமதி ரூபன். அதேபோன்று உயிர்மையில், அ.முத்துலிங்கம் அயர்லாந்து எழுத்தாளர் ஒருவரின் படைப்புக்களை வாசித்து அவரில் பெருமதிப்பு வைத்திருந்ததாய் கூறுகின்றார். எனினும் அவரை நேரில் சந்தித்தபோது படைப்புகளில் இருந்ததற்கு எதிர்மாறான விம்பம் தனக்கு கிடைத்தது என்றும்... இனி அந்த எழுத்தாளரை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்தால் எதிர்த்திசையில் பயணிப்பேன் எனவும், ஆனால் அவரின் படைப்புக்களை வாசிப்பதை நிறுத்தமாட்டேன் என்றும் கூறுகின்றார். சுமதி ரூபனும், அ.முத்துலிங்கமும் இதற்கு என்ன அர்த்தத்தில் கருத்துக் கூறுவார்களோ தெரியாது, ஆனால் பின்நவீனத்துவத்தை விளங்கிக்கொள்கின்ற ஒருவர் இதை - ஆசிரியர் இறந்துவிட்டார் - என்பதைத்தான் இவர்கள் கூறுகின்றார்கள் என்று இலகுவாய் கூறிவிட்டு நகர்வார்.

(3)
கட்டவிழ்ப்பு அல்லது ஒப்பாரி

பின் நவீனத்துவத்துவத்தின் மிகவும் சுருங்கிய வடிவம் என்பது 'எதையும் சந்தேகித்தல்' என்பதற்கிணங்க, இன்று சத்தியக்கடதாசியில் ஏற்றப்பட்ட தமிழரசனின் அனுமான் வாலாய் நீளும் (கவனிக்க: பின்நவீனத்துவம் எள்ளல்/பகிடி செய்வதை மிகவும் வரவேற்கின்றது) கட்டுரையை வாசித்துக்கொண்டிருந்தேன். அது இன்னொரு மார்க்சியருக்காய் எழுதப்பட்டதுபோன்ற தோற்றத்தைத் தருகின்றது. இருவரும் தாங்கள்தான் மார்க்சிசத்தை கரைத்துக்குடித்தவர்கள் என்றவகையில் ஒருவர் இன்னொருவருக்கென மாறிமாறி பாடம் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். 'என்னுடையது மட்டுமே மார்க்சிசம் வேறொருவரும் பேசக்கூடாது' என்று சொந்தங்கொண்டாடி 'பாசிசம்' நோக்கி இவர்கள் இருவரும் நகராத வரை எதையும் பேசிக்கொள்ளட்டும். 'பாசிசம்' இது வித்தியாசங்களை மறுக்கின்றது. ஒரு வகையிலான மொழியையும், ஒரு குறிப்பிட்ட வகையிலான சிந்தனை முறையையும் மட்டுமே நிறுவனப்படுத்துவதில் அது வெற்றி கண்டுவருகின்றது என்கின்றார் அ.மார்க்ஸ் (கறுப்புத் தொகுதி). எனது கேள்வி என்னவென்றால், மார்க்சிசம் மட்டுமே ஒரேயொருவழியென்று தமிழ்ச்சூழலில் அடம்பிடிப்பவர்கள் ஒருகாலத்தில் அதிகாரம் கையில் கிடைத்தவுடன் பாசிசவாதிகளாய் ஆகமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? (கடந்த காலம் உதாரணம் ஸ்ராலின்?) .

சரி கேள்விக்கு வருவோம். தமிழரசன் இதுவரை உலகில் எந்தத் தேசியப்போராட்டங்களும் வெற்றி பெற்றதில்லை என்கின்றார். நான் என்னுடைய மூளையை 'விருத்தி' செய்யும் நோக்கில் இறக்கியிருந்த மார்க்சிசம் சம்பந்தமான நூல்களை வாசித்துக்கொண்டிருந்தபோது... 'மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை' நூலில் (ப 78) வியட்நாமில் நடந்த மக்களின் போராட்டம் ஒரு தேசியப்போராட்டம் என்று கூறுகின்றார் ஜோர்ஜ் தொம்ஸன்(மொழிபெயர்ப்பு: எஸ்.வி.ஆர்). அது மட்டுமில்லாது மா சேதுங் அமெரிக்காவில் நடந்த கறுப்பினத்தவர்களின் போராட்டத்தை அது ஒரு தேசியப்போராட்டமும் வர்க்கப்போராட்டமும் என்கின்றார். அத்துடன் மல்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் கறுப்பு தேசியத்தை வலியுறுத்தியிருக்கின்றார்கள் என்று வாசித்திருக்கின்றேன். ஏதோ ஒருவகையில் கறுப்பின மக்களை உயர்த்தியதில் கறுப்புத் தேசியம் மிகப்பெரும் பங்களித்ததுள்ளது என்று கடந்தகால வரலாறு கூறுகின்றது.

எனவே எமக்கேற்றவாறு 'தேசிய'ப்பெருங்கதையாடல்களை திரித்தல் நியாயமா என்று எல்லாம் தமிழரசனைக் கேட்கமாட்டேன். எனெனில் முன்பு விருப்புடன் தமிழரசனை (சி.புஸ்பராஜாவிவின் நூலிற்கான எதிர்வினைவரை) வாசித்து வந்த என்னை, 'நாங்கள் (தமிழர்கள்) எல்லோரும் சிறிலங்கா அரசின் பக்கம் சேரவேண்டும்' என்று ஒரு கட்டுரையில் மிகப்பெரும் குத்துக்கரணத்தை நிலவைத் தொட்டுவிட்டு நிலத்தில் தமிழரசன் அடித்தபோது, 'அய்யா நீங்கள் தான் எங்களை இரட்சிக்கவந்த கடவுள்' என்று மெய்சிலிர்க்க விழுந்துவிட்டேன். நான் ஒரு பின்நவீனத்துவவாதி(?) இல்லையென்றபடியால் கடவுள் இறந்துவிட்டார் என்ற நீட்சேயை யாரும் சாட்சிக்கு அழைக்கவும் முடியாது.

இன்னும் எந்த இசமும் கலக்காத ஒரு கேள்வி உண்டு. அருமைத்தோழர் ஏன் தேசியவாதிகள் கொழும்பில் தமிழர்கள் குடியேறுவதை விமர்சிப்பதில்லை என்று வினாவுகின்றார் (சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இதைப்பற்றி ஏன் பேசுவதில்லை என்று தமிழரசுக்கட்சியினரை நோக்கி கேள்விகேட்கின்றார்). தமிழரசு கட்சிகளை விடுவோம். நானொரு தேசியவாதியும் அல்ல; அதற்காய் தேசியவாதத்தை எல்லாப்பொழுதிலும் அ.மார்க்ஸ் போன்றவர்கள் போல நிராகரிப்பவனுமலல்ல. நீ தமிழன் என்று சிங்களப்பெருங்கதையாடல் என் இருப்பின் மீது வன்முறையைத் திணிக்கும்போது நான் தமிழன்தான் நீ என்ன செய்வாய் என்று எதிர்ப்பைக்காட்ட எனக்குத் தேசியம் தேவைப்படுகின்றது. மற்றும்படி சாதியை மறுப்பவன், இனத்தையும் மொழியையும் கட்டிக்காத்துக்கொண்டிருக்கமுடியாது. அவற்றையும் மறுதலிக்கத்தான் வேண்டும். அதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.

என்னுடைய எளியகேள்வி என்ன என்றால், நாங்கள் எங்கள் ஊரை விட்டு 90களின் ஆரம்பத்திலேயே -முஸ்லிம்களை துரத்தியடித்த சொற்பகாலத்திலேயே- அகதிகளாய் அலையத்தொடங்கிவிட்டோம். சிங்களக்குடியேற்றங்களை செய்த அரசு என்ன செயதது? சனத்துக்கு காணியும், வீடும் இலவசமாய்க் கொடுத்ததுதானே (அதற்காய் அந்த ஏழ்மையான சனங்களை கீழிறக்குவது என்று அர்த்தமல்ல). அப்படியெனில் கொழும்பில் இருக்கும் தமிழ் சனத்துக்கு எல்லாம் வாங்கோ வாங்கோ என்று அழைத்து அரசாங்கம் வீடும் காணியும் சும்மாவோ கொடுத்தது? தீவுச்சனம் பலவந்தமாய் எழுப்பப்பட்டபோது 'காற்றுவெளிக்கிராமம்' பாட சு.வி என்றொரு கவிஞராவது இருந்தார். எங்களுக்கு அந்தக்கொடுப்பினை கூட இல்லையே தலைவா? எப்போதோ பூர்வீக நிலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட எங்களுக்கு அலரி மாளிகையில் எல்லாம் வேண்டாம்; காலி முகத்திடலில் ஒரு குடிசை போடவாவது ஒரு துண்டு நிலம் சிங்களப் பேரின்வாத அரசிடம் வாங்கித்தாருங்கள். பிறகு மகிந்த மாத்தையாவுக்கு நானும் கால் கழுவி... வேண்டுமெனில் நக்கிக்கொண்டிருக்கின்றேன் (பார்க்க: எனது நாய் பற்றிய கிறுக்கல்; நாயானால் நக்கத்தானே வேண்டும்).

முஸ்லிம்களை யாழிலிருந்து துரத்தியடிக்கப்பட்டதற்கு நாங்கள் நேர்மையான விவாதங்களை உருவாக்கவேண்டியதுபோல, அமபாறையிலிருந்தும், கிழக்கின் எல்லைக்கிராமங்களிலிருந்தும் அப்புறத்தப்பட்ட தமிழ்மக்களுக்கும், 'சமாதான காலம்' வந்தும்கூட ஊரைப் பார்க்கமுடியாது உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அடக்கப்பட்ட -எங்களைப்போன்றவர்களின் குலைக்கப்பட்ட வாழ்வு குறித்தும்- நேர்மையாகப் பேசப்படவேண்டும் ஆனால் தேசியர்கள் ஒருபக்கத்தை மறைத்து உரையாடுவதைப்போல எதிர்த்தேசியர் (அல்லது நவீன தேவதூதர்கள்) இன்னொரு பக்கத்தை லாகவமாய் மறைத்தபடி உரையாடுவது கண்கூடு. ஒன்றை மறைத்து இன்னொன்றைப் பேசுவது நியாயமாகாது. இப்படிப்பேசினால்தான் தமிழ்நாட்டுப்பத்திரிகைகள் நேர்காணல் கண்டு படமும் போட்டும் வரவேற்பார்களா என்ற என் நெடுநாள் -சிறுகதையாடலை- இங்கே முன்வைக்கின்றேன்.

புலிகளின் இன்றைய இருப்பு - இவ்வளவு கடுமையான வீழ்ச்சிகள், விமர்சனங்களுடன் - புலிகள் இன்னும் தாக்குப்பிடிப்பதற்கு சிங்களப்பேரினவாதம் மட்டுமே காரணம் என்பது புரியவில்லையா தோழரே? உங்களின் வார்த்தைகளில் கூறுவதால் புலிகளின் பாசிஸத்தை உடைத்து அவர்களின் இருப்பை இல்லாமற்செய்ய..... மிக எளிதான ஒரு வழி இருக்கின்றது. அது சிங்களப்பேரினவாதத்தை தமிழர்களையும் தனது மக்களாய் ஏற்றுக்கொள்ளச்செய்வது. தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகளை சிங்கள அரசு வழங்கும்போது மக்களே புலிகளை இல்லாமற்செய்து சிங்கள அரசோடு இணைந்துவிடுவார்கள். இந்த எளிய புரிதல் கூட இல்லாமல் தோழரே உங்களைப்போன்றவர்கள் வர்க்கப்புரட்சிக்கனவுகள் பேசிக்கொண்டிருப்பததால் என்ன பயன்? புலிகள் ஒழிக்கப்பட்டாலும் தமிழரின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இன்னொரு இயக்கம் உருவாகும். அது வரலாற்று நியதி.

பேரினவாதம் தமிழருக்கு எல்லா இடத்திலையும் அடிக்கும்போது ஏன் இன்னும் கொழும்பில் கைவைக்கவில்லை என்பதற்கும் உந்தப் பெருங்கதையாடலில் வரும் உலகமயமாதல்தான் காரணம். கொழும்பில் தமிழருக்கு கைவைத்தால், வெளிநாட்டு தூதரங்களுக்குத் தெரிந்துவிடும் வெளிநாட்டு பத்திரிகைகள் பெரிதாக்கிவிடும் எல்லோ. பிறகு கடனுதவி என்று சிங்கள அரசுக்கு -weapons வாங்கக்கொடுக்கின்ற பிச்சைக்காசை- எங்கடை பிக் பிரதர்ஸ் எல்லோரும் கொடுக்கமாட்டினம் எல்லோ... தலைவா தலைவா! சித்தாந்தப் பெருங்கதையாடல்களை நிறுவமுன்னர் யதார்த்தச் சூழ்நிலைகளையும் 'ஞானக்கண்'ணாலாவது பார்க்குக.

.....ஆக இவ்வாறாக பின்நவீனத்துவம் -ஒரு பிரதியை- கட்டவிழ்ப்பும் சிறுகதையாடலும் நக்கலும் நையாண்டியுமாய் விரும்பிய எதையும் செய்யும் சுதந்திரத்தை தருகின்றது என்க.

(4)
பின்நவீனத்துவம் பன்மைத்தன்மையை முக்கியமாய் வலியுறுத்துகின்றது. எல்லோருடைய தனித்துவங்களும் இருப்பும், இயல்பாய் பேணவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. வாசிக்கும் உங்களுக்கு இன்னும் குழப்பம் கூடலாம் அல்லது இது தனியொருவனின் புலம்பல் என்று கூடத்தோன்றலாம். ஆனால் பின்நவீனத்துவம் அந்த தனியொருவனி/ளின் புலம்பலைக்கூட கவனத்தில் எடுத்துக்கொள்ளத்தான் சொல்கின்றது. பிறகு அதை மறுவாசிப்பு செய்யச் சொல்கின்றது. அதிகாரத்தின் குறிப்புகள் இருந்தால் அரசியல் நீக்கம் செய்து மீள் அரசியலை கட்டியமைக்கக்கோருகின்றது.

நான் வாசித்தவளவில் பெரியாரை தமிழ்ச்சூழலின் மிகச்சிறந்த பின் நவீனத்துவவாதியாகச் சொல்லமுடியும் (அதாவது தத்துவம் என்றரீதியில் பின்நவீனத்துவத்தை அணுகி அதனால் பின்நவீனத்துவவாதி என்று கூறவரவில்லை, அப்படியெதுவும் பின்நவீனத்துவத்தில் இல்லை). பெரியார் எல்லாவற்றை நோக்கியும் கேள்விகள் எழுப்பினார். பலவற்றை மறுவாசிப்பு செய்வதற்கான புள்ளிகளைத் தமிழ்ச்சூழலில் ஆரம்பித்துவைத்தவரும் அவரே. உதாரணத்திற்கு 'தமிழ் ஒரு நீசபாசை' என்று பெரியார் கூறியதற்கு பெரியாரிய எதிரிகள பலவித வியாக்கியானங்களை செய்வதை (வலைப்பதிவிலும்தான்) காண்கின்றோம். பெரியார் நீசபாசை என்று கூறியது தமிழ்மொழி தன்னளவில் புராணங்களையும், இதிகாசங்களையும், வேதங்களையும் போற்றிக்கொண்டிருப்பதோடு, அதனூடாக தாழ்த்தப்பட்டவர்களை, பெண்களை இன்னும் ஒடுக்கிக்கொண்டிருக்கின்றது என்ற நோக்கிலேதான். ஆகவே தமிழ்மொழியில் உள்ளவற்றை மறுவாசிப்பு செய்து மீள் அரசியலாக்கம் செய்யத்தான் பெரியார் இதன்மூலம் கூறவிரும்பினார் என்று
பின்நவீனத்தினூடு வாசிப்புச் செய்யலாம்.

இறுதியாய் ஒரு எளிய பின்நவீனத்துவ (?) உதாரணத்தைக் கூறி முடிக்கின்றேன். கனடா குறித்து எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் இது ஒரு பல்கலாசார நாடு (multicultural country) என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.. ஒவ்வொரு சமூகமும் தனது மொழி, கலாசாரம் போன்றவற்றோடு இருப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை. சிலவேளைகளில் இவற்றைப்பேணக்கூட நிதி உதவி செய்கின்றது. அந்தவகையில் பன்மைத்தன்மையை வரவேற்கின்றது என்று வரவேற்கலாம். ஆனால் அதேசமயம் இங்கிருந்த பூர்வீகக்குடிகளுக்கு அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்ற சிறுகதையாடலின் மூலம் அரசின் இன்னொருமுகத்தையும் நாம் கட்டவிழ்க்கலாம். இவ்வாறான சிறுகதையாடல்களின் மூலம் விவாதத்தை உருவாக்கி கனடிய அரசின் கொள்கைகளை மீள் அரசியலாக்கம் செய்யும் நிர்ப்பந்தத்தை கனடிய மக்கள் கொடுக்கலாம்.

(பின்-நவீனத்துவம் குறித்து எனது அரைகுறையான புரிதல்களோடு எழுதப்போகின்றேன் - என்னை உடைபதற்கு பெரும் ஆளுமைகள் காத்துக்கொண்டிருக்கக்கூடும் என்ற என் 'பெரும்பயத்தை' முன்வைத்தபோது, 'எதையென்றாலும் உனக்குச்சரியென்றுபடுவதை எழுது என்று உற்சாகப்படுத்திய' - என்னுடடைய பல 'பெருங்கதையாடலகளை' தனது சிறுகதையாடல்களால் கட்டவிழ்க்கும்- பிரிய தோழிக்கு)

22 comments:

Anonymous said...

existentialism - இருத்தலியம்

2/22/2007 12:40:00 PM
வித்யாசாகரன் (Vidyasakaran) said...

டிசே,
நல்ல பதிவு. நன்றிகள்.
பின் நவீனத்துவத்தின் சட்டகங்களை மறுக்கும் கூறு, பெருங்கதையாடலுக்கெதிரான உணர்வைப் பல சிறுகதையாடல்களாக நீர்த்துப் போகச் செய்கிறது என்று பாலபாரதியின் ஒரு பதிவில் வாசித்தேன். (பின் நவீனத்துவம் பெருங்கதையாடலுக்கான எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்காக வலிந்து பரப்பப்பட்டது என்று அக்கட்டுரையில் இருந்த தொனி என்னால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் நம்பிக்கை ஒன்றுக்கும் உதவாது) இன்னொரு புதிய பெருங்கதையாடல் உருவாவதைத் தடுக்கும் வகையில் அது சரியே என்றாலும், அந்தக் குற்றச்சாட்டு பற்றி உங்கள் கருத்து என்ன?
அப்புறம், பின் நவீனத்துவத்துக்கும், இருத்தலியலுக்குமான தொடர்பு, வேறுபாடு பற்றியும் எழுதுங்களேன். நான் (கொஞ்சமாக) வாசித்த வரையில் எனக்குப் பெரிய வேறுபாடுகள் தோன்றவில்லை. இணையத்தில் தேட வேண்டும்.

2/22/2007 02:15:00 PM
Voice on Wings said...

மிகச் சிறப்பான கட்டுரை. பல தகவல்களை அறிய முடிந்தது, நன்றி. மேலும்,

//சாதியை மறுப்பவன், இனத்தையும் மொழியையும் கட்டிக்காத்துக்கொண்டிருக்கமுடியாது. அவற்றையும் மறுதலிக்கத்தான் வேண்டும். அதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.//

நான் உறுதியாக நம்பும் ஒரு கருத்தை நீங்களும் வெளிப்படுத்தியது கண்டு மகிழ்ச்சி.

2/22/2007 02:20:00 PM
சயந்தன் said...

உதைப் பற்றி நானும் வசந்தனும் ஒரு கலந்துரையாடலை செய்து முடிச்சிருக்கிறம். வலையில போடுற முயற்சிகள் நடக்குது

2/22/2007 02:35:00 PM
அற்புதன் said...

டிசே,

உமக்கு விளங்கினதை எழுதினதுக்கு நன்றி. நீர் எழுதினதில எனக்கு விளங்கினதச் சொல்லுறன்.விளங்காதைக் கேக்கிறன்.

நீர் சொன்னவற்றை முதலில தொக்குக்கிறன் இவை சரியா எண்டு சொல்ல வேணும்,

1) பின் நவீனத்துவம் என்பது எல்லா வற்றையும் கேள்வி கேட்க வேண்டும் எண்டு சொல்லுது.

எனக்குத் தெரின்ச்சவரை அப்படி முதன் முதற் சொன்னது 'பின் நவீனத்துவம்' அல்ல, அதற்குப் பெயர் அறிவியற் பார்வை எண்டு.ஏன் எங்கட வள்ளுவரும் அப்பவே சொல்லி இருக்கிறார் , 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு எண்டு'.அப்ப வள்ளுவரும் பின் நவீனத்துவரோ?

நான் நினச்சன் ஒரு குறிப்பிட்ட காலத்தில உருவான கோட்பாடு தான் பின் நவீனத்துவம் எண்டு,அதாவது நவீனதுவத்துக்கு பின்னால் வந்தது எண்டு.பிரான்சில இருக்கிற சில பேர் தான் இந்தக் குறிப்பிட்ட காலம் தான் பின் நவீனத்துவம் எண்டு முன் மொழின்சவை எண்டு.அப்ப இது எங்கோ உதைக்குது அல்லோ.

2) மற்றது இந்தப் பெருங் கதையாடலும் சிறு கதையாடலும்.இதுவும் பெரியார் செய்தார் எண்டு சொல்லுறீர்.அப்ப நல்லது,பெரியாரும் உந்தப் பின் நவீனத்துவம் எண்ட கோட்பாடு வந்த பின்னேயா அப்படிச் செய்தவர்? அப்படி இல்லாட்டி அவர் ஏன் அப்படிச் செய்தார்? இது ஒரு சில மனிதரிடமிருக்கும் இயல்பு தானே? மனிதர்களில் சிலர் இருக்கும் கோட்பாட்டை விமர்சிப்பார்கள் அதற்கு எதிராகாக் கிழர்ந்து எழுவார்கள்.மனித நாகரீகம் முன் நேறியது மனிதன் மந்தைக் கூட்டம் அல்லாத படியால்.ஆகவே இந்தப்பெருங் கதைகளும் சிறு கதையாடலும் எப்பவுமே இருக்கும் ஒரு விடயம்.இதற்கு பின் நவீனத்துவம் எண்டு ஒரு லேபிள் ஒட்ட வேண்டியதன் அவசியம் என்னவோ?

3) அடுத்தது இந்த பன் முகத் தன்மையைப் பேணல்.இதில முதலில பன் முகத்தன்மை எண்டா என்ன?
ஒரு இடத்தில் சொல்லுறீர் உந்தத் தேசியம் என்பது பொதுமைப் படுத்து எண்டு இன்னொரு இடத்தில சொல்லுறீர் தேசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று.எனக்கு நீர் குழம்பி இருப்பதாகப் படுகிறது.முதலில் பன் முகம் ஒன்று இருக்க வேண்டும் என்றால் வேறு பாடுகள் இருக்க வேண்டும்.வேறு பாடுகளை அடையாளம் செய்வது தேசியம்.
பின் நவீனத்துவம் இதில என்ன சொல்லுது எண்டு எனக்கு ஒண்டுமா விளங்கேல்ல.பெண்ணியம்,தலித்தியம் என்பவை சம்பந்தமாக பின் நவீனத்துவம் என்ன சொல்லுது.இந்த வேறு பாடுகள் களையப்பட வேண்டும் எண்டு சொல்லுதா இல்லை இவை பாதுகாக்கப்பட வேண்டும் எண்டு சொல்லுதா?

4) அடுத்தாதாக ஆண் பெண்,உயர் சாதி கீழ்ச் சாதி இந்த வேறுபாடுகள் களையப்பட வேண்டும் எண்டு சொல்லுது எண்டால்,அது எவ்வாறு சாத்தியம் எண்டு பின் நவீனத்துவம் சொல்லுது?

5) இந்த வேறு பாடுகளுக்கு என்ன அடிப்படை, எது மூலாதாரம் எண்டு பின் நவீனத்துவம் சொல்லுது?

உமது பதிவுக்கு நன்றி.பின் நவீனத்துவம் என்பது ஒரு குழப்பமான சிந்தனைகளின் கலவை என்பது இன்னும் எனது கருத்தாக இருக்கின்றது.இன்னும் இன்னும் கேள்விகளே என்னிடம் இருக்கின்றன.பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டை உம்மிடம் ஏற்படுதியதற்கு மன்னிக்கவும்,ஏனெனில் வேறு எவரும் இதுவரை எனக்கு இவை பற்றி உருப்படியான பதில்களை அளிக்க வில்லை.

2/22/2007 02:47:00 PM
பூனைக்குட்டி said...

அருமையான பதிவு டிசே. என்னைப் பொறுத்தவரை நான் புரிந்துகொண்டிருக்கும் பின்நவீனத்துவத்தை. கீழே ரமேஷ் பிரேமின் வார்த்தைகளாகக் காணலாம்.

"ஒருமுகப்பட்ட, தெளிவான, தொடர்பொழுங்குடைய என்பதை விட; அறம் உடைய, வேறுபாடுகளை மதிக்கக்கூடிய பல கோட்பாடுகளை, அணுகுமுறைகளை பின்நவீனத்துவச் சிந்தனை வழங்கமுடியும். மேற்குலகின் அழிவும் அதிகாரமும் பரவிய சூழ்நிலையில் பின்நவீனத்துவம் மறுப்பை விரக்தியை முன்வைக்கலாம். ஆனால் இந்தியா போன்ற நிலப்பரப்பில் பன்மை பண்பாடுகள் உடைய தேசியக் களத்தில் பின்நவீனத்துவம் வேறு வகைப்பட்டது. தனக்கேயான புரிதல் முறைகளை, அறங்களை வகுக்க அது தொடக்கப்புள்ளிகளை அடையாளம் காட்டுகிறது.

மற்றவற்றை கீழாக மதிக்கும், மற்றவற்றை அழித்து தன்னை நிலைநிறுத்தும் பாசிசத்திற்கு எதிரான மனநிலையை உருவாக்கும் ஒரு சூழல் தான் இந்திய பின்நவீனத்திற்கான அடிப்படை."

இவை ரமேஷ் பிரேமின் பேச்சு - மறுபேச்சில் இருந்து சுட்ட வரிகள். அந்தப்புத்தகம் படித்திருக்கிறீர்களா டிசே.

-------------------

//இன்றைய தமிழ்ச்சூழலில் பெண்கள் எதை எழுதினாலும் அது அவர்களின் சொந்தக்கதை என்று வைத்து கிழிகிழியென்று கிழித்தும், கிசுகிசுக்களை உருவாக்கும் நம் சமூகத்தில் பெண் படைப்பாளிகளுக்கு 'பிரதியை மட்டும் பார்; அதற்குப்பின்னாலுள்ள எங்களைப் பார்க்காதே' //

Wait a minite, wait a minite டிசே நீங்களா இதை எழுதியது... பிரமாதம் அவ்வளவு தான்.

2/22/2007 02:57:00 PM
Anonymous said...

/இன்னும் கேள்விகளே என்னிடம் இருக்கின்றன.பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டை உம்மிடம் ஏற்படுதியதற்கு மன்னிக்கவும்/

அற்புதம். சில பின்நவீனத்துக்காரர்கள் இதைத்தான் பின்நவீனத்துவத்தத்துவமாகச் சொன்னதும் உண்டு. அவ்வகையிலே நீங்கள் பின்னவீனத்துவக்காரர் ஆகின்றீர்கள்.:)

டிசேயின் பதிவு முற்பகுதி நன்றாகவே விளக்கமுயன்றது. பின்நவீனத்துவம் என்றால், ஒற்றைப்படையாகவும் ஒருநாட்காலையிலே ஒரு துறையிலே தோன்றியதாகவும் கருதப்படும் மாயையை அறுத்திருக்கின்றார்.

2/22/2007 04:04:00 PM
அற்புதன் said...

//அற்புதம். சில பின்நவீனத்துக்காரர்கள் இதைத்தான் பின்நவீனத்துவத்தத்துவமாகச் சொன்னதும் உண்டு. அவ்வகையிலே நீங்கள் பின்னவீனத்துவக்காரர் ஆகின்றீர்கள்.:)//

இப்படியெண்டா சாதரணமாகவே மனிசர் யோசிக்கிறது பேசுறது எழுதுறது எல்லாம் பின் நவீனத்துவம் எண்டுவியள் போல.:-)

2/22/2007 06:06:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி நண்பர்களே.
....
வித்யாசாகரன் & அற்புதன்: உங்கள் கேள்விகளுக்கு நேரங்கிடைக்கும்போது எனக்குத் தெரிந்ததை எழுதுகின்றேன். எனினும் நானும் உங்களைப்போலவே பின்நவீனத்துவம் குறித்த பல கேள்விகளுடன் இருக்கின்றேன் என்பதை முன்னரே கூறிவிடுகின்றேன்.
....
மோகன்தாஸ்: நீங்கள் குறிப்பிடும் ரமேஷ்-பிரேமின் கட்டுரைத் தொகுப்பை நானும் நெடுங்காலமாய்த் தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்னமும் கிடைத்தபாடில்லை :-(.

2/22/2007 10:49:00 PM
Thangamani said...

நல்லதொரு முயற்சி டிஜே. நன்றி.

2/22/2007 11:12:00 PM
செல்வநாயகி said...

டிசே,

நிறைய உழைத்து நன்கு எழுதிய பதிவு. ஆனால் படித்து முடித்தவுடன் ஒரு மூட்டை கேள்விகளும், குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன:))
இப்போது எதையும் உங்களிடம் கேட்கமாட்டேன். அற்புதன் கேள்விகளுக்கு நீங்கள் சொல்லும் பதிலில் எனக்கான விடைகள் ஏதேனும் தென்பட்டாலும் விளங்கிக்கொள்வேன்:)) ஆனாலும் நீங்கள், அற்புதன், வசந்தன், சயந்தன் எல்லோரின் பின்நவீனத்துவ வகுப்புகளுக்கும் தவறாது வந்துவிடலாமென இருக்கிறேன்:))

2/23/2007 12:03:00 AM
வசந்தன்(Vasanthan) said...

உங்கள் கட்டுரையிலிருந்து நான் விளங்கிக்கொண்ட வகையில் இந்தக் கருத்தியலை உருவாக்கிவிட்டு யாரும் எழுதவில்லை.
ஏற்கனவே இருந்த ஒன்றுக்கு இப்படிப் பெயர் வைத்துள்ளார்கள்.
அப்படியானால் ஏன் 'பின்-நவீனத்துவம்' என்ற பேர் வந்தது? பெயரின் வெளிப்பாடு, அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ஒன்று என்றல்லவா வருகிறது?

ஏற்கனவே இருந்த ஒன்று என்பது காலத்தால் வரையறை செய்யமுடியாதது என்றே படுகிறது. அற்புதன் சொன்னதுபோல் வள்ளுவர்கூட பொருந்துகிறார்.
ஆனால் இந்தக் கருத்தியலுக்கு பிறந்தநாள் கொண்டாடுமளவுக்குத் துல்லியமாக காலம் கணித்தும் சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே? நீங்கள் முன்பு இட்ட சுரேஷின் கருத்துப்படி 37 ஓ 38 வயசு ஆகுதெண்டு வந்ததே?
_________________________________
பின்னூட்டமிடுவோரின் பெயர்கள் ஏன் இன்னொருமுறை எதிரொலிக்கிறது?
இதற்கும் இக்கோட்பாட்டுக்கும் ஏதாவது தொடர்புண்டா?

2/23/2007 07:42:00 AM
இளங்கோ-டிசே said...

வித்யாசாகரன், உங்கள் கேள்வியை வாசிக்கும்போது எந்த விதத்தில் இந்தக் கேள்வியைக்கேட்கின்றீர்கள் என்று எனக்கு தெளிவின்மை வருகின்றது. அது ஒரு புறம் இருக்கட்டும். துடைப்பானின் (?) அந்தக்கட்டுரையை வாசிக்கும்போது, ஒடுக்குமுறைகளுக்கு எதிராய் அணிதிரண்டு போராடுவதை பின்நவீனத்துவம் மறுக்கின்றதா என்ற கேள்வி கேட்கின்றீர்கள் என்று விளங்கிக்கொள்கின்றேன். பின்நவீனத்துவம் ஒரு பெரும்அணியாகத் திரண்டு போராடுவதை தடுப்பது (சிறுகுழுக்களாய் போராடுவதை ஊக்குவிக்கின்றது) என்பது...அப்படி அணிதிரளும்போது அது அமைப்பாக மாறி, பிறகு அது ஒரு அதிகாரமையமாகப் போய்விடும் என்பதைத்தான் சுட்டுகின்றது என்று நினைக்கின்றேன். ஆகவே பெருங்கதையாடல்களுக்கு எதிராய் பெரும்அணியாக போராடுவதை தடுக்கின்றது என்று ஒரு அர்த்தம் வருவதைத் தடுக்கவும் முடியாது. பார்த்தீர்களென்றால், பின்நவீனத்துவத்தை வளர்த்தவர்களோ அல்லது இன்று பேசிக்கொண்டிருக்கும் தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்த இருக்கும் நாங்களோ ஆயுத ஒடுக்குமுறை/இன்னபிற மிலேச்சத்தனங்களுக்கிடையில் இருந்து இதைப்பேசிக்கொண்டிருக்கவில்லை. ஈழத்திலோ, அல்லது இன்னபிற ஆயுதப்போராட்டங்கள் நடக்கும் நாட்டிலோ இதைச் சொல்லிக்கொண்டிருக்கமுடியாது. சிறுசிறு குழுக்களாய்ப் போராட்டிக்கொண்டிருந்தல் யதார்த்தில் சாத்தியப்படாது; விரைவில் இருந்த சுவடுகளின்றி ஒழிக்கப்படுவார்கள். அதேசமயம் அதிகாரம் ஓரிடத்கில் குவிவதையும் இவ்வ்கையில் தடுத்தல் கடினம்.
....
இருத்தலியத்திற்கும், பின்நவீனத்திற்கும் கோட்பாட்டு ரீதியில் ஒற்றுமை/வேற்றுமைகள் குறித்து அதிகம் தெரியாது. இருத்தலிய படைப்புகள் என்று கூறப்பட்ட சில புனைவுகளை வாசித்திருக்கின்றேனே தவிர...அதற்கப்பால் என் புரிதல் பூச்சியமே.

2/23/2007 09:43:00 AM
இளங்கோ-டிசே said...

குறிப்பிடமறந்தது: deconstruction என்ற சொல்லிற்கு கட்டவிழ்ப்பு போல கட்டுடைப்பு என்ற சொல்லும் தமிழ்ச்சூழலில் பாவிக்கப்படுகின்றது. சக்கரவர்த்தி கட்டுடைப்பு என்ற சொல்லைத்தான் தனது நேர்காணலில் பாவித்ததாய் நினைவு.

2/23/2007 10:03:00 AM
இளங்கோ-டிசே said...

அற்புதன் உங்களின் பல கேள்விகளுக்கு எனக்கும் பதில்கள் தெரியவில்லை. நானும் தேடிக்கொண்டிருக்கின்றேன் :-(. எல்லோரும் என்னிடம் கேள்விகள் கேட்டால் நான் என்ன ஜயா செய்வேன் :-(?

தத்துவங்களில் பெரிய நம்பிக்கையில்லை. முக்கியமானது தத்துவங்களை வாசிக்க/விளங்கிக் கொள்வதற்குள் என் ஆயுட்காலம் முடிந்துவிடும் என்ற பயத்தால்தான் தத்துவங்களின் மூலநூற்களைத் தேடியெல்லாம் போவதில்லை. புத்தரையும், பவுத்தத்தையும் அறிந்துகொள்ள மிகவும் விருப்புள்ளது;ஆனால் தத்துவம் என்றவகையில் பயமுறுத்துகின்றது (தத்துவங்களில் நுழைவதைவிட வெளியே விரியும் வாழ்வுதான் என்னளவில் முக்கியமானது என்றும் எடுத்துக்கொள்ளலாம்).
.........
விரும்பி வாசிக்கும் நூல்களில் எதையாவது புதிதாய்க் கூறும்போது, அது என்ன என்று கொஞ்சம் அறிந்துகொள்வதோடு, நின்றுவிடுவது எனது அறிதலின் புள்ளிகள். ஏன் பின் நவீனத்துவம் மனிதாபிமானம்/அறம் போன்றவற்றைக்கூட பெருங்கதையாடல்களுக்குள் அடக்குகின்றது என்று வாசித்திருக்கின்றேன். அந்தப்புள்ளிகளைப்போல உடன்படமுடியாத பல முரண்பாடான புள்ளிகள் பின்நவீனத்துவத்தில் எனக்கும் உண்டு.
........
உங்களின் கேள்விகளில் சில்வற்றிற்கு என் வாசிப்பினடிப்படையில் சிலதைக் கூறலாம என்று நினைக்கின்றேன். முதலில் தத்துவம் என்றவகையில் பின்நவீனத்துவ்த்தைச் சேர்க்கமுடியாது. உலகமயமாதல்/ஏகாதிபத்தியம் போன்றவற்றிற்கு எதிராய் வைத்து உரையாடுவதற்கு இன்றும் மார்க்சிசம் மட்டுமே தெளிவான பதில்களுடன் இருக்கின்றது. பின்நவீனத்துவம் ஒரு நீட்சியே தவிர, அது தனக்குரிய வரையறுக்கப்பட்ட கொள்கைகள் எதுவுமே கொண்டிருக்கவில்லை. தமிழில் அ.மார்க்ஸ் மற்றும் சிலருடைய கட்டுரைகளை வாசித்தபோதும் மிகவும் குழப்பமான வாசிப்பே எனக்குக் கிடைக்கின்றது. பாம்பாட்டிச்சித்தன் தனது கட்டுரையில் கூறியதுபோல, விளங்காதுவிடின் விளங்காது போகட்டுமே, வாழ்க்கையில் எல்லாம் விளங்கிக்கொண்டிருக்கின்றதா என்ன? என்ற வகையில்தான் நானும் இவற்றை வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.
.....
உண்மைதான் (கவனிக்க இது எனது உண்மை :-). பின்நவீனத்துவம் கூறும் பலபுள்ளிகளை எவரோ இதற்குமுன் எழுப்பியுள்ளார்கள். உதாரணத்திற்கு பன்மைத்தன்மையை பற்றி பின்நவீனத்துவம் மட்டுமில்லை, -மார்க்சிசப்புத்தகங்கள் சிலவற்றை வாசித்தவளவில்- அவையும் இவற்றைக்கூறுகின்றன. பின்நவீனத்துவம் இன்னும்
விரிந்ததளத்தில் கோருகின்றது அவ்வளவே. அறிவியல், பெரியார், etc எல்லோரும் ஏற்கனவே பின்நவீனத்துவம் கூறும் பலதை செய்திருக்கின்றார்கள். அதுதான் மேலே குறிப்பிட்டேன், பின்நவீனத்துவம் ஒன்றின் நீட்சியே தவிர அது தனக்குரிய தனித்துவங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை என்று. இன்னும் கூறப்போனால் பின் நவீனத்துவத்திற்கும் modern physicsற்கும் நெருங்கிய தொடர்புகள் என்று கூறுகின்றார்கள். அதற்குள்தான் relativity theory, quauntum theory எல்லாம் வருகின்றது. ஆனால் வாசித்தவளவில் எனக்கு அந்தப்பகுதி துப்பரவாய் விளங்கவில்லை :-(.
................
தேசியம் என்பது ஒற்றைத்தன்மையை வலிறுத்துகின்றது.... எனது மொழி, எனது இனம் என்ற ஒற்றைத்தன்மைகள் நீளும். எனவே அதை நிராகரிக்கின்றது பின்நவீனத்துவம் (பன்மைகளை வரவேற்றல்). அதாவது பின்நவீனத்துவம், தேசியம் பாசிசத்தை நோக்கி நகரும்புள்ளியை நோக்கி இடையீடு செய்கின்றது அதேசமயம் இயல்பாய் தனது மொழி, கலாச்சாரம், பண்பாட்டுக்கோலங்களுடன் மற்ற இனங்களின் மொழி, கலாசாரம், பண்பாட்டுக்கோலங்களில் அத்துமீறாதபடி மதித்தபடி இருக்கச்சொல்கின்றது. தமிழில் கோவை ஞானி முன்வைத்த தமிழ்த்தேசியத்துடன் எனக்கு ஒருகாலத்தில் உடன்பாடாயிருந்தது... அவர் அத்தேசியத்திற்குள் பெண்ணியம், தலித்தியம், சூழலியம் போன்ற பலவற்றை உள்ளடக்கியிருந்தார். ஆனால் தேசியம் என்பது ஒரளவுக்கு மேலே விரிவுற முடியாததுமாயிருப்பதும், பாசிசதை நோக்கி நீளும் சாத்தியங்கள் நிறைய இருப்பதாலும் அதில் இப்போது எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை. அதேசமயம் எனது மொழி, இனம், நிறம் போன்றவற்றை நிராகரித்து இன்னொருவன் என்மீது தனது தேசியத்தை திணிக்க்கின்றான் என்றால் நான் எனது தேசியம்பற்றி உரத்து உரையாடவேண்டிய அவசியமும் இருக்கின்றது என்பதையும் குறிப்பிடவேண்டும்.
............

மற்றக்கேள்விகளுக்கு வேறு நண்பர்கள் பதிலளிக்கக்கூடும் என்ற நம்பிக்கையுடன் நானும் உங்களுடன் சேர்ந்து காத்திருக்கின்றேன்.

2/23/2007 02:34:00 PM
இளங்கோ-டிசே said...

செல்வநாயகி, தங்கமணி நன்றி.
.......
/இந்தக் கருத்தியலை உருவாக்கிவிட்டு யாரும் எழுதவில்லை.
ஏற்கனவே இருந்த ஒன்றுக்கு இப்படிப் பெயர் வைத்துள்ளார்கள்.
அப்படியானால் ஏன் 'பின்-நவீனத்துவம்' என்ற பேர் வந்தது? பெயரின் வெளிப்பாடு, அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ஒன்று என்றல்லவா வருகிறது?/
மேலைத்தேயத்தில் ஒவ்வொரு இசங்கள் ஒவ்வொரு காலத்தில் இருந்து வருகின்றதுதானே. நவீனத்துவம் ஒருகாலத்தில் தீவிரமாய் பேசப்பட்டது. அதன்போதாமைகளின்போது அடுத்தபுள்ளிகளுக்கு நகர்ந்தபின் நவீனத்துக்கு அடுத்து/பின் post-modernism என்றளவில் பெயரிட்டிருக்கலாம். பிறகு காலத்தின் பின்னடுக்குகளில் ஒத்தபுள்ளிகளைத் தேடிதேடிச் சேகரித்திருக்கலாம் (இது எனது வாசிப்பு, தவறாகவுமிருக்கலாம்). காரணப்பெயர் எல்லாம் இருக்கவேண்டுமா என்ன :-)? நீங்கள் கூறுவ்துபோல காலவரையறை எல்லாம் செய்யமுடியாது என்றுதான் நினைக்கின்றேன். எம்.ஜி.சுரேஷ் (அல்லது க்டற்கரய்) அப்படி எழுதியது அபத்தம்தான். அவர்கள் ழாக் டெரிடாவிலிருந்து ஆரம்பிக்கின்றார்கள். இன்னொருவர் நீட்சேயின் காலத்திலிருந்து என்று கூறினாலும் இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை.

உதாரணத்திற்கு கலப்புத்திருமணங்கள் பெரியார் காலத்தில் தீவிரமாயிருந்தது. ஆனால அதற்கு முன்னர் அயோத்திதாசரும் இவ்வாறான கலப்புத்திருமணங்களை செய்வித்திருக்கின்றார் என்று 'அயோத்திதாசர் ஆய்வுகள்' நூலில் கூறப்படுகின்றது. எனவே கலப்புத்திருமணங்களுக்கு வயசு பெரியாரின் காலத்திலிருந்து ஆரம்பிக்கின்றது என்றால் அபத்தமல்லவா? இவ்வாறான விடயங்களுக்கு எல்லாம் தெளிவான காலவறையைச் செய்யமுடியாது.
......
/பின்னூட்டமிடுவோரின் பெயர்கள் ஏன் இன்னொருமுறை எதிரொலிக்கிறது?
இதற்கும் இக்கோட்பாட்டுக்கும் ஏதாவது தொடர்புண்டா?/
இது கோட்பாட்டுப் பிரச்சினையல்ல; code பிரச்சினை. எனினும் உமது எள்ளல் தொனிக்காய் நீரும் இன்றுமுதல் பின் நவீனத்துவவாதி 'ஆவி'ராக.

2/23/2007 03:10:00 PM
அற்புதன் said...

டிசே பதில்களுக்கு நன்றி,

இருக்கும் நேரத்தில் வாழும் காலத்தில் கொச்சம் இசம் ,கொச்சம் வாசிப்பு, சுற்றம், இனம், சனம் நாடு ,நாண்பர்கள் என்று தான் வாழ்க்கை போகிறது.இதில் இசங்களை மூலாதாரம் தேடிப் படிப்பதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவர் செயல் என்று மதிப்பிற்குரிய ஆய்வாளர் கும்பரோ பூஜே சொன்னதுடன் ஒருங்குபடுகிறேன். நான் உதைப் பற்றி எழுத வந்தது இதை எழுத்து வியாபாரமாக சிலர் நடத்துவதில் இருந்து. நீர் முதலில் போட்ட பேட்டியில் ஸ்ரொடிஞசரின் பூனை பற்றிக் கூறிய போது தான் எனக்கு இது ஒரு பம்மாத்து எண்டு பொறி தட்டியது.ஏனெனில் குவாந்தம் மெக்கானிசம் பல்கலைக்கழகத்தில் எமக்கு வேதியியல் மூன்றில் இருந்தது.அப்போது இது வெகு சுவாரசியமானதாக இருந்ததால் இது பற்றிக் கனக்க அப்போது வாசித் திருந்தேன்(பல வருடங்களின் முன்).இப்போது அவ்வளவாக நாபகம் இல்லை என்றாலும் ,வித்தியாசம் என்ன என்று தெரியும் அளவு இருந்த படியால் தான் அப்படி உணர்ந்திருக்க முடியும். பிறகு இணயத்தில் இது சம்பந்தாமக வாசித்தன் விழைவி தான் நான் இட்ட அவசரப் பதிவு.இது பற்றி இன்னும் படிக்க வேண்டும், 'பின் நவீனத்தைத் துகில் உரித்தல்' என்னும் ஆங்கிலக் கட்டுரையைத் தழுவி ஒரு பதிவு விரிவாகப் போடும் எண்ணம் இருக்கிறது. நேரம் வேணும்,இப்போது இல்லை.

/முதலில் தத்துவம் என்றவகையில் பின்நவீனத்துவ்த்தைச் சேர்க்கமுடியாது. /

அப்படியாயின் இதை எந்த வகையில் சேர்க்கலாம் என்று நினைகிறீர்கள்?எனக்கு இது ஒருவகை அலையாக, லேபிளாக,fad ஆகத் தெரிகிறது.அறிவுஜீவித் தனமாகத் தெரிவதற்கான சொல்லாடல்களின் கலவை, போலியான தத்துவார்த்த உளறல்.(பார்க்க:'Intelectual imposters')

இந்த பின் நவீனதுவக் கதையாடல் பிரான்சில் இருந்து அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கும் பிரித்தானியப் பல்கலைக்கழகங்களுக்குள்ளும் நுழைந்ததாகவும், இப்போது இது வெகுவாகவே அம்பலபடுத்தப்பட்டு வழக்கொழிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.இப்போது தான் தமிழ்ச் சூழலுக்கு வந்திருக்கிறது,இன்னும் ஒரு சில வருடங்களில் இங்கும் அம்பலப்படுத்தப்பட்டு வழக்கொழியும் என்றே நான் நம்புகிறேன்.

//உலகமயமாதல்/ஏகாதிபத்தியம் போன்றவற்றிற்கு எதிராய் வைத்து உரையாடுவதற்கு இன்றும் மார்க்சிசம் மட்டுமே தெளிவான பதில்களுடன் இருக்கின்றது. பின்நவீனத்துவம் ஒரு நீட்சியே தவிர, அது தனக்குரிய வரையறுக்கப்பட்ட கொள்கைகள் எதுவுமே கொண்டிருக்கவில்லை. //

நீங்கள் மாக்சியம் பற்றிக் கூறியதுடன் ஒருங்கு படுகிறேன்.ஆனால் பின் நவீனத்துவம் மாக்சியத்தின் நீட்சி என்பது எப்படி என்று விளக்குவீர்களா? எனக்கு
அப்படி ஒன்றுமே தெரியவில்லை.மேலும் இது வரையறுக்கப்பட்ட கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை என்று சொல்லி விட்டு எப்படி தெளிவான வரையறுக்கப்பட கோட்பாடான மாக்சியத்தின் நீட்சி என்பீர்கள்? முரண்பாடாக இல்லையா?

//பின்நவீனத்துவம் ஒன்றின் நீட்சியே தவிர அது தனக்குரிய தனித்துவங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை என்று//

மீண்டும் மீண்டும் விட்ட இடத்திற்கே வருகிறோம்.பின் நவீனத்துவம் தனித்துவமான ஒன்று அல்ல என்றால் ஏன் அதை ஒரு கோட்பாடு என்று பெயர் சொல்லி அழைக்க வேண்டும்.ஒன்றும் இல்லாததை எவ்வாறு பெயரிட்டு அடையாளப் படுத்துவீர்கள்.பின் நவீனத்துவம் கடவுள் போல என்று சொல்ல வருகிறீர்களா? ஒருத்தரும் கண்ணால பார்த்ததில்லை ஆன,விழுந்து பிரண்டு கும்புடுவினம்,அதன் அருமை பெருமை பற்றி பக்கம் பக்கமா பாட்டு எழுதுவினம், பல்வேறு வடிவங்களில படம் கீறுவினம்.:-)

//தேசியம் என்பது ஒற்றைத்தன்மையை வலிறுத்துகின்றது.... எனது மொழி, எனது இனம் என்ற ஒற்றைத்தன்மைகள் நீளும். எனவே அதை நிராகரிக்கின்றது பின்நவீனத்துவம் (பன்மைகளை வரவேற்றல்). அதாவது பின்நவீனத்துவம், தேசியம் பாசிசத்தை நோக்கி நகரும்புள்ளியை நோக்கி இடையீடு செய்கின்றது அதேசமயம் இயல்பாய் தனது மொழி, கலாச்சாரம், பண்பாட்டுக்கோலங்களுடன் மற்ற இனங்களின் மொழி, கலாசாரம், பண்பாட்டுக்கோலங்களில் அத்துமீறாதபடி மதித்தபடி இருக்கச்சொல்கின்றது. தமிழில் கோவை ஞானி முன்வைத்த தமிழ்த்தேசியத்துடன் எனக்கு ஒருகாலத்தில் உடன்பாடாயிருந்தது... அவர் அத்தேசியத்திற்குள் பெண்ணியம், தலித்தியம், சூழலியம் போன்ற பலவற்றை உள்ளடக்கியிருந்தார். ஆனால் தேசியம் என்பது ஒரளவுக்கு மேலே விரிவுற முடியாததுமாயிருப்பதும், பாசிசதை நோக்கி நீளும் சாத்தியங்கள் நிறைய இருப்பதாலும் அதில் இப்போது எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை. //

தலைப்பில் இருந்து சற்று விலகினாலும் இதுவும் ஒருமுக்கியமான விடயம் என்பதால் எழுத வேண்டி உள்ளது. நீங்கள் அல்லது பின்னவீனத்துவம் கூறும் பன்மைக்குள் 'பல் தேசியம் வரவில்லையா'.தேசியம் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட மக்கட் கூட்டத்தினர் தம்மை மற்றவர்களிடம் இருந்து வேறு படுத்தி அடையாளம் இடுவது தானே?இந்த வேறு படுதலை எவ்வாறு ஒற்றைத் தன்மை என்று கூறுவீர்கள்.ஒரு தேசியம் இன்னொரு தேசிய இனத்தின் மீது தனது அடையாளதைத் திணுக்கும் போது தான் அது பாசிசமாக ஒற்றைத் தன்மை உடையதாக மாறுகிறது.திணிக்கப்படும் அடையாளத்திற்கு எதிராகக் கிழர்ந்தெழும் மக்களின் போராட்டம் என்பது எதிர்த் தேசிய அரசியலாக வெளிப்படுகிறது.உலகம் தேசங்களால் ஆனது.உலக ஒழுக்கு என்பது இந்தத் தேசங்களின் தேசிய அரசியிலால் நிகழ்வது.தேசங்களுக்கிடையேயான உறவு என்பதே ஒரு மக்கட் கூட்டதினரின் இருப்பை அதன் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது.உலகம் மனிதர்கள் எல்லாரும் ஒருவரே என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருந்தால் நீங்கள் சொல்வதைப்போல் தேசியம் என்பது தேவயற்றதாக இருக்கும்.ஆனால் உலகம் தேசங்களால்,தேசிய அரசியலால் கட்டமைக்கட்டுள்ளது.

ஆகவே இங்கே பின் நவீனத்துவம் ஏன் தேசியத்தை நிராகரிக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை?உலகத் தொழிலாழர்களை ஒன்றுபடச் சொன்ன மாக்சும்,லெனினும் தேசிய விடுதலைப் போராட்டங்களையும்,தேசிய இனங்களின் சுய நிர்ணயத்தையும் ஆதரித்தது இதனாலையே.ஆகவே இங்கே எவ்வாறு தேசியம் என்பது பாசிசத்தை நோக்கிச் செல்வதாக நீங்கள் நினைகிறீர்கள் என்பதுவும் எனக்கு விளங்கவில்லை.

மேலும் நீங்கள் வித்தியாசாகருனுக்கு வழங்கிய பதில்களில் இருக்கும் சில விடயங்கள்.

சிறு சிறு குழுக்களாகப் போராட வேண்டும் என்பது.பெருங் குழுக்களாகப் போராடினால் அதுவே நிறுவனமாகி விடும் என்று.இது சிறு பிள்ளைத்தனமானதாக எனக்குப் படுகிறது.ஆங்காங்கே உலகில் நடக்கும் சிறு சிறு மோதல்களால் இந்த உலகை மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா.உதாரணத்திற்கு கெரில்லாத் தாக்குதல் முறையில் அமைந்திருந்த ஆரம்பகாலத் தாக்குதல்கள் மூலம் தமீழத்தை வென்றெடுக்க முடியும் என்று நினைகிறீர்களா? இது எந்த வகையிலும் எந்தப் போராட்டத்திற்கும் சாத்தியபாடானது இல்லை.உலகில் எங்கும் இவ்வாறான சிறு குழுக்களின் போராட்டங்கள் வெற்றி பெற்றதில்லை.

இங்கே நிறுவனப் படுவதற்கு எதிரானதாக இருக்கும் பின் நவீனதுவத்தால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.ஒரு நிறுவனப்படுத்தலோ ஒருங்கு படுத்தலோ இன்றி பலம் பெற முடியாது.பலம் பெற்றாலையே போராட்டம் வெற்றி பெறும்.பின் நவீனக் கதையாடலில் சொல்லப்படும் கட்டுடைப்பு அதுவாக நிகழப்போவதில்லை.தமிழில் எனக்கு நாபகம் வரும் பழமொழிகளான 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதுவும்','தனி மரம் தோப்பாகாது என்பதுவும் ' நடைமுறைத் தத்துவங்கள்.

தத்துவங்கள் அற்ற நடை முறையும், நடை முறையற்ற தத்துவங்களும் குப்பையிலே என்பது தான் நான் எனது அனுபவத்தில் கண்ட உண்மை.

2/23/2007 04:39:00 PM
Anonymous said...

இங்கே நிறுவனப் படுவதற்கு எதிரானதாக இருக்கும் பின் நவீனதுவத்தால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.ஒரு நிறுவனப்படுத்தலோ ஒருங்கு படுத்தலோ இன்றி பலம் பெற முடியாது.பலம் பெற்றாலையே போராட்டம் வெற்றி பெறும்.பின் நவீனக் கதையாடலில் சொல்லப்படும் கட்டுடைப்பு அதுவாக நிகழப்போவதில்லை.,


சபாஸ் அண்ணா விசில் அடிச்சுகிறோம்

அற்புதன் ரசிகர் மன்றம்
HAMILTON
ONTARIO
CANADA

2/23/2007 06:01:00 PM
இளங்கோ-டிசே said...

அற்புதன், ஒன்றையே திருப்பத் திருப்பப் பேசிக்கொண்டிருப்பது போன்ற அலுப்பு வருகின்றது. சிலவேளைகளின் உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கமுடியாது இருப்பதற்கு காரணம் எனது அறிதல்களின் போதாமையாக இருக்கலாம்.
........
நான் பின்நவீனத்துவத்தை ஒரு முழுமையான தத்துவமாய்ப் பார்க்கமுடியாது என்று நினைத்துக்கொண்டிருப்பதற்கு அது மார்க்ஸ்-ஏங்கல்ஸின் தெளிவான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை போன்ற எதையும் பொதுவெளியில் வைப்பதில்லை. மார்க்சிசம் குறித்து உரையாடும்போது நாம் மார்க்ஸ் -ஏங்கல்ஸின் அறிக்கைகளை வைத்து தெளிவாக உரையாடலாம். அப்படி பின்நவீனத்துவம் தெளிவாக எதையும் வைக்கின்றததாய் நான் வாசித்ததில்லை. நீங்கள் ஒருவரிடம் இதுதானே பின் நவீனத்துவச் சிந்தனை என்று உரையாடத்தொடங்க, அவர் அதுவில்லையென வேறொரு திசையில் உரையாடுகின்ற வெளியைக்கூட பின் நவீனத்துவம் வழங்குகின்றது என்றவகையில் புரிந்து வைத்திருக்கின்றேன். எனெனில் அது மொழியின் எல்லைக்குள் நின்று பேசமுடியாது என்று மொழியைக்கூட நிராகரிக்கின்றது. இதெல்லாம் சுத்துமாத்து மாதிரி இருக்கின்றதே என்று கேட்டால் கூட, உங்களுக்குரிய 'உண்மை'யைநான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இவ்வளவுதான் நான் வாசித்து புரிந்துகொண்டது. ஏதாவது நீங்கள் ஆங்கிலம்/தமிழில் வாசித்து எனக்கு மேலும் விளங்கப்படுத்துவீர்கள் என்றால் நன்றியுடையவனாக இருப்பேன்.
..........
எப்போதும் எனக்கு கோட்பாடுகளில் இருந்து வாழ்க்கையோட்டத்திற்கு ஒத்த திசையில் செல்லும் குறிப்புகளை எடுத்துக்கொள்வதுதான் விருப்புடையது. அந்தவகையில் பின்நவீனத்துவத்தில் எனக்குப் பிடித்த/விளங்கியது போலத்தோன்றியதை மேலே பதிவாக்கியிருக்கின்றேன். அவ்வளவுதான். எனினும் கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படட்டும். எல்லோருக்கும் நல்லதே.
......
அற்புதன், திரும்பத் திரும்ப குழம்புகின்றீர்களே...குழப்புகின்றீர்களே. ஹிட்லரும் தேசியம்தானே பேசினார்...என்னவானார்? அவருக்கு ஏன் தேசியம் தேவைப்பட்டது? ஜேர்மனியை வேறு நாடு ஏதாவது வந்து ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததா?அதனால்தான் சொன்னேன், தேசியத்தின் கூறுகள் ஒருகாலத்தில் பாசிசமாய் நீட்சியடையக்கூடிய வகையில் இருக்கின்றது என்று. இன்னொரு உதாரணம் இன்று அமெரிக்காவில் தேசியம் கொடிகட்டிப்பறந்துகொண்டிருக்கின்றது என்ற நுண்ணிய புரிதல் நம்மெல்லோருக்கும் இருக்கின்றது அல்லவா? இத்தகை விமர்சனங்கள்/அழிவுகளைப் பார்த்தபின்னும் அமெரிக்க மக்கள், ஜோர்ஜ் புஷ்சை மீண்டும் இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்க வைத்தது...அமெரிக்கத் தேசியம்தானே?
......
/சிறு சிறு குழுக்களாகப் போராட வேண்டும் என்பது.பெருங் குழுக்களாகப் போராடினால் அதுவே நிறுவனமாகி விடும் என்று.இது சிறு பிள்ளைத்தனமானதாக எனக்குப் படுகிறது.ஆங்காங்கே உலகில் நடக்கும் சிறு சிறு மோதல்களால் இந்த உலகை மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா.உதாரணத்திற்கு கெரில்லாத் தாக்குதல் முறையில் அமைந்திருந்த ஆரம்பகாலத் தாக்குதல்கள் மூலம் தமீழத்தை வென்றெடுக்க முடியும் என்று நினைகிறீர்களா? இது எந்த வகையிலும் எந்தப் போராட்டத்திற்கும் சாத்தியபாடானது இல்லை.உலகில் எங்கும் இவ்வாறான சிறு குழுக்களின் போராட்டங்கள் வெற்றி பெற்றதில்லை./

திரும்ப, நான் மேலே எழுதியதை ஒருமுறை நிதானமாய் வாசியுங்கள்...

பின்நவீனத்துவத்தை வளர்த்தவர்களோ அல்லது இன்று பேசிக்கொண்டிருக்கும் தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்த இருக்கும் நாங்களோ ஆயுத ஒடுக்குமுறை/இன்னபிற மிலேச்சத்தனங்களுக்கிடையில் இருந்து இதைப்பேசிக்கொண்டிருக்கவில்லை. ஈழத்திலோ, அல்லது இன்னபிற ஆயுதப்போராட்டங்கள் நடக்கும் நாட்டிலோ இதைச் சொல்லிக்கொண்டிருக்கமுடியாது. சிறுசிறு குழுக்களாய்ப் போராடிக்கொண்டிருந்தல் யதார்த்தில் சாத்தியப்படாது; விரைவில் இருந்த சுவடுகளின்றி ஒழிக்கப்படுவார்கள். அதேசமயம் அதிகாரம் ஓரிடத்தில் குவிவதையும் இவ்வகையில் தடுத்தல் கடினம்.

கருணா அம்மன் புலிகளிடமிருந்து பிரியும்போது -அபத்தமோ இல்லையோ- என்னத்தை முன்வைத்தார் என்று யோசித்துப்பாருங்கள். அதிகாரம் ஒரிடத்தில் குவிந்திருக்கின்றது என்று அம்மான் சொன்னாரில்லையா?
......
/இங்கே நிறுவனப் படுவதற்கு எதிரானதாக இருக்கும் பின் நவீனதுவத்தால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.ஒரு நிறுவனப்படுத்தலோ ஒருங்கு படுத்தலோ இன்றி பலம் பெற முடியாது.பலம் பெற்றாலையே போராட்டம் வெற்றி பெறும்.பின் நவீனக் கதையாடலில் சொல்லப்படும் கட்டுடைப்பு அதுவாக நிகழப்போவதில்லை.தமிழில் எனக்கு நாபகம் வரும் பழமொழிகளான 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதுவும்','தனி மரம் தோப்பாகாது என்பதுவும் ' நடைமுறைத் தத்துவங்கள்.

தத்துவங்கள் அற்ற நடை முறையும், நடைமுறையற்ற தத்துவங்களும் குப்பையிலே என்பது தான் நான் எனது அனுபவத்தில் கண்ட உண்மை/

நன்றி. இது உங்கள் புரிதல். இதில் சிலதில் உடன்பாடும் பலதில் முரண்பாடும் எனக்குண்டு.

அந்தவகையில்தான், எம் தமிழ்ச்சூழலுக்கேற்றவாறு சிந்தித்த/களத்தில் நின்ற பெரியார், மார்க்ஸைவிட என்னை அதிகம் வசீகரிக்கின்றார் என்பதை தேவையற்ற ஒருகுறிப்பாய் வைக்கின்றேன்.
.......
இனி பின்னூட்டமாய்க்கூட இந்தப்பதிவு குறித்து எழுதக்கூடிய கொள்ளளவு எதுவும் என்னிடமில்லையென்றே நினைக்கின்றேன். அநாமதேய நண்பர் ஒருவர் (வேறொரு அர்த்தத்தில் கூறியிருந்தாலும்) கூறியதுபோல,'பின்நவீனத்துவம் என்றால், ஒற்றைப்படையாகவும் ஒருநாட்காலையிலே' விளங்கவேண்டும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கவும் முடியாதுதானே (பின் நவீனத்துவம் மட்டுமல்ல, எல்லா இசங்களையும்தான்). அந்தவகையில், இவையெல்லாம் விளங்கவில்லையென உடனேயே நிராகரிக்காது, தொடர்ந்து பின்நவீனத்துவத்துவம் உட்பட மற்ற இசங்களையும் வாசித்து மேலும் விளங்கிக்கொள்ள முயல்வேன். நன்றி.

2/23/2007 09:41:00 PM
அற்புதன் said...

ஏற்கனவே கூறிய விடயங்களைத் தவிர்த்து ஒரு சில விடயங்களை மட்டும் கூற விரும்புகிறேன்.

//அப்படி பின்நவீனத்துவம் தெளிவாக எதையும் வைக்கின்றதாய் நான் வாசித்ததில்லை. நீங்கள் ஒருவரிடம் இருந்துதானே பின் நவீனத்துவச் சிந்தனை என்று உரையாடத்தொடங்க, அவர் அதுவில்லையென வேறொரு திசையில் உரையாடுகின்ற வெளியைக்கூட பின் நவீனத்துவம் வழங்குகின்றது என்றவகையில் புரிந்து வைத்திருக்கின்றேன்.//

இதை ஒரு வெளி என நான் நினைக்கவில்லை.தெளிவான நிலையை உடைய ஒரு கோட்பாட்டிற்கு எதிராகாத் தெளிவான எதிர்வினைகளை முன்வைக்கலாம், ஆனால் உருமாறும் ,தெளிவற்ற ஒரு சித்தாந்ததிற்கு எதிரான எதிர்வினைகளை முன் வைக்க முடியாது.பின் நவீனதுவத்தைக் தூக்கிப்பிடிப்பவர்களுக்கு இந்த வெளி தான் எதிர்வினைகளுக்குப் பதில் சொல்ல முடியாத தருணங்களில் ஒரு தற்காப்பாக இருக்கிறது.மேலும் எல்லாச் சிந்தாந்தங்களையும் விமர்சிக்கும் வெளியை அவை வழங்குகின்றனவோ இல்லையோ, மாக்சிசம் முதல் எல்லாச் சித்தாந்தங்களும் விமர்சிக்கப்பட்டுக் கொண்டு தான் வந்துள்ளன,வருகின்றன.

//ஹிட்லரும் தேசியம்தானே பேசினார்...என்னவானார்? அவருக்கு ஏன் தேசியம் தேவைப்பட்டது? ஜேர்மனியை வேறு நாடு ஏதாவது வந்து ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததா?அதனால்தான் சொன்னேன், தேசியத்தின் கூறுகள் ஒருகாலத்தில் பாசிசமாய் நீட்சியடையக்கூடிய வகையில் இருக்கின்றது என்று. இன்னொரு உதாரணம் இன்று அமெரிக்காவில் தேசியம் கொடிகட்டிப்பறந்துகொண்டிருக்கின்றது என்ற நுண்ணிய புரிதல் நம்மெல்லோருக்கும் இருக்கின்றது அல்லவா? இத்தகை விமர்சனங்கள்/அழிவுகளைப் பார்த்தபின்னும் அமெரிக்க மக்கள், ஜோர்ஜ் புஷ்சை மீண்டும் இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்க வைத்தது...அமெரிக்கத் தேசியம்தானே?//

ஸ்டாலின் மாக்சிசம் பேசினார், இன்ன பிற பலரும் பல சித்தாந்தங்களைப் பேசினர், அதற்காக அவர்கள் தாம் பின்பற்றுவதாகக் கூறிய சித்தாந்ததில் தவறு உள்ளதா அல்லது அதன் பிரயோகத்தில் தவறு உள்ளதா என்பது பரீசலிக்கப்பட வேண்டிய ஒரு விடயம்.

நான் தேசியம் பற்றி எழுதியதை மீண்டும் சுட்டிக் காட்ட வேண்டி உள்ளது.உலகம் தேசங்களால் ஆனது, தம்மை ஒரு தேசியமாக உணரும் மக்கள் தங்கள் சுதந்திரத்தை இருப்பை நிலை நாட்ட ஒரு தேசமாகி தமது சுதந்திரத்தை,இருப்பை நிலை நாட்டுவதைத் தவிர வேறு வழியில்லை, அதனாலையே தேசிய சுய நிர்ணயமும்,தேசிய விடுதலையும் அவசியம் ஆகிறது.தேசங்கள் அற்ற ஒரு உலகத்தில் தேசியங்கள் தேவை அற்றனவையாக இருக்கலாம்.உலகின் மீது தனது தேசிய(சொந்த) நலங்களை திணிக்க முயலும் அமெரிக்க அரசையோ அல்லது கிட்லரின் பாசிச அரசையோ எதிர்க்க தேசிய விடுதலை என்பதுவும், தேசங்களின் சுய நிர்ணயம் என்பதுவும் அவசியமாக இருக்கிறது .இங்கே தேசியத்தின் பெயரால் எழும் திணிப்பே பாசிசமாக இருக்கிறது.அமெரிக்கவை எதிர்த்து இராக்கிய மக்கள் நிகழ்த்துவது தேசிய விடுதலைப் போரே.கிட்லரை எதிர்த்து ஐரோப்பாவின் மற்ற நாடுகள் நிகழ்த்தியதும் தேச மீட்புப் போரே. தேசமாக ஒரு தேசியமாக உணரும் நிலையில் இருந்து இந்தத் திணிப்பிற்கு எதிராக எழும் எதிர் நிலைத் தேசியம் பாசிசம் அல்ல, அது தேசிய இனங்களின் சுய நிர்ணயம். பன் முகத் தன்மையை வலியுறுத்தும் பின் நவீனத்துவம் பல் தேசியங்களையும் அதன் பால் நிகழ்த்தப்படும் சுயனிர்ணய அடிப்படையிலான தேசிய விடுதலைப் போராட்டத்ங்களிற்கும் எவ்வகையில் ஒரு எதிர் நிலையை எடுக்க முடியும் என்பதை நீங்கள் இன்னுமும் விளக்கவில்லை.

2/24/2007 04:26:00 AM
வசந்தன்(Vasanthan) said...

"ஆசிரியன் செத்துவிட்டான்" என்பதற்கான மாற்று விளக்கமொன்றை உங்களிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.
பெட்டிக்கடை சத்யா தனது சுடர் பதிவில் இதே சொற்றொடரைச் சொல்லி, இன்றைய தமி்ழ்வலைப்பதிவுச் சூழலையும் இதனுடன் ஒப்பிட்டிருந்தார். ஆனால் அதில் இச்சொற்றொடருக்கான அவரின் விளக்கம் வேறுமாதிரியிருந்ததாக நினைவு.
படைப்புக்களைத் திருத்தும் - தணிக்கை செய்யும் பத்திரிகை ஆசிரியனே செத்துவிட்டான் என்றும் அப்படி எந்த அழுத்தமுமற்ற முழுமையான சுதந்திரத்தை வலைப்பதிவுகள் அளிப்பதாகவும் அவர் தன் விளக்கத்தில் சொல்லியிருந்தார் என்று நினைக்கிறேன்.
பெட்டிக்கடையின் விளக்கப்படி பார்த்தால் வலைப்பதிவுகள் அச்சொற்றொடரை நிரூபிப்பவையே.

ஆனால் நீங்கள் சொல்லும் விளக்கப்படி பார்த்தால் தமிழ்வலைப்பதிவுகள் அதற்கு எதிர்வளமாகவே இயங்குகின்றன. பிரதியைவிட பின்புலமே அதிகம் ஆராயப்படுகிறது; விமர்சிக்கப்படுகிறது. பின்-நவீனத்துவவாதிகளாக தம்மைச் சொல்லிக்கொள்பவர்களும் இதில் முன்னணியில் நிற்கிறார்கள் என்றுதான் சொல்வேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் அனுமதியில்லாமலே என்னைப் பின்-நவீனத்துவவாதியாக்கி விட்டியள்.
உந்தக் கோட்பாடு - தத்துவங்கள் பற்றி என்னட்ட விளக்கம் கேட்காதவரைக்கும் எனக்குப் பிரச்சினையில்லை.

2/24/2007 09:44:00 PM
இளங்கோ-டிசே said...

வசந்தன் & அற்புதன் பின்னூட்டங்களுக்கு நன்றி.

2/27/2007 06:45:00 AM