ஒவ்வொருவருடைய வாழ்வும் அவரவர்கள் வாழ்கின்ற காலத்தையும், இருக்கின்ற சமூகங்களையும் பொறுத்து வேறுபடக்கூடியது. எல்லா நிலப்பரப்புகளுக்கும் நம்மால் எப்படி பயணிக்க முடியாதோ, அவ்வாறே நம்மால் எல்லோருடைய வாழ்வையும் வாழ்ந்து பார்க்கவும் முடியாது. ஆனால் எம்மால் வெவ்வேறு வாழ்க்கை முறைகளையும், கலாசாரப் பின்புலங்களையும் வேறுவகைகளால் விளங்கிக்கொள்ள முயற்சிக்க முடியும். அதற்கு நம் எல்லோருக்கும் விசாலமாய் சிந்திக்கும் மனோநிலையும், தெரியாததை தெரிந்து கொள்ளும் ஆர்வமும், இவற்றுக்கு அப்பால் முன் முடிவுகள் எதையும் எடுக்காத சகிப்புத்தன்மையும் அவசியமாகின்றன.
Aimee & Jaguar என்கின்ற இத்திரைப்படம் இரண்டாம் உலகப்போரின்போது நடக்கின்ற கதை. ஹிட்லரின் நாஸிப்படைகள், அமெரிக்காவினதும் அதன் நேசப்படைகளினதும் தாக்குதல்களினால் தோல்வியுற்றுக் கொண்டிருக்கின்ற காலகட்டம்; விமானக்குண்டுகள் அகோரமாக ஜேர்மனிய நகரங்களில் விழுந்து வெடிக்கின்றன. வெல்வதற்கான சந்தர்ப்பம் இன்னமும் உள்ளதென அதீத நம்பிக்கை கொள்கின்ற நாஸிப்படையினர் எல்லைகளில் நின்று சண்டைபிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் குறுகிய விடுமுறையில் போர்முனையிலிருந்து திரும்பி வரும் லிலியின் கணவன், லிலி-பெலிசியின் உறவைக் கண்டுபிடிக்கின்றார். எனினும் நான்கு குழந்தைகளுடன் இருக்கும் லிலி தன்னுடன் திரும்பிவருவார் என்று கணவன் நம்புகின்றபோது, லிலி தனக்கு விவாகரத்துத் தரும்படி கணவனிடம் வேண்டுகின்றார்.
விவாகரத்துப் பெற்ற பெற்ற லிலியுடன் பெலிசி சேர்ந்து குடும்பப் பொறுப்புக்களை எடுக்கும்போது, ஹிட்லரைக் கொல்வதற்கென உட்கட்டமைப்புக்குள் நிகழ்ந்த Valkyrieதிட்டம் நிகழ்ந்து தோல்வியில் முடிகின்றது (இந்தக் கொலைத்திட்டத்தை வைத்து, அண்மையில் Tom Cruise நடித்து சொதப்பிய படம் நினைவுக்கு வருகிறது) . அதன்பின் நிகழ்கின்ற படுமோசமான களையெடுப்பில், தாங்களும் அகப்படப்போகின்றோம் என்று அஞ்சி -தலைமறைவாய் வாழும் -பெலிசியின் நண்பர்கள் ஜேர்மனியை விட்டு வெளியேறுகின்றனர். தங்களுடன் கூடவே வர வற்புறுத்தியும் பெலிசி, தன் காதலியான லிலியை விட்டு வரமாட்டேனென மறுக்கின்றார்.
இந்தப்பொழுதிலேயே லிலியிடம், பெலிசி தான் தலைமறைவாய் வாழுமொரு யூத இனத்தைச் சேர்ந்தவர் என்ற உண்மையைக் கூறுகின்றார். யூதர்களைத் தேடி அழிக்கும் நாஸிகளின் பதற்றமான காலகட்டத்தில் பெலிசியை லிலி ஏற்றுக்கொள்வதோடு தனது காதலியைத் தனது பெற்றோர்களிடமும் அறிமுகப்படுத்துகின்றார். ஓரினப்பால் துணையாக மட்டுமின்றி, ஒரு யூதராகவும் இருக்கும் பெலிசியை, லிலியின் பெற்றோர் தயக்கத்துடன் ஏற்றுக்கொள்கின்றனர்.
இறுதியில் பெலிசியின் கொல்லப்பட்ட தோழியிடம் கண்டெடுத்த தடயங்களை வைத்து பெலிசியை லிலியின் வீட்டில் வைத்து நாஸிகள் கைது செய்கின்றார். சிறையிலிருக்கும் பெலிசியை அவ்வப்போது லிலி சந்தித்தாலும் அவரால பெலிசியை விடுதலை செய்யமுடியாதிருக்கின்றது பின்னர் போலந்திலிருந்த ஒரு சித்திரவதை முகாமில் எவ்விதச் சாட்சியங்களுமின்றி பெலிசி காணாமற்போய்விடுகின்றார்(கொல்லப்பட்டுவிடுகின்றார்).
பின்னாளில் தனது முதிய வயதில் லிலி தனது பால்யகாலத் தோழியொருவரை முதியோர் இல்லமொன்றில் சந்திக்கும்போதே இந்தக் கடந்தகால நினைவுகள் கிளறப்படுகின்றன. லிலியின் தோழி, பெலிசி கைதுசெய்யப்பட்டு காணாமற்போனதன் பிறகு, எவ்வாறு லிலியின் வாழ்வு கழிந்ததென வினாவுகிறார். பெலிசி கைதுசெய்யப்பட்டதன் பிறகு தான் எந்தப் புதிய உறவுக்குள்ளும் போகவில்லை என்கின்ற லிலி, பெலிசியோடு இருந்த காலங்களே உண்மையான காதலோடு இருந்த காலங்களெனக் கூறி நனவிடை தோய்வதோடு படம் முடிவடைகிறது.
இப்படம் போரின் பதற்றங்களை மட்டுமில்லாது போர்க்கால அழிவுகளையும் காட்சிப்படுத்துகின்றது. ஒரு காலத்தில் தேசியத்தின் பேரால் வெறியூட்டப்பட்ட மக்கள், அழிவுகள் தம் வீட்டு வாசல்களில் வந்துகொண்டிருப்பதைத் துயரத்துடன் பார்த்தபடி இருப்பது மனதில் தைக்கும்படியாக காட்டப்பட்டிருக்கின்றது. ஒருகாட்சியில் குழந்தைகளை மிருகக்காட்சிச்சாலைக்குக் கூட்டிச் செல்லப்படும்போது அங்கே மிருகக்காட்சிசாலையென்றிருப்பது குண்டுத்தாக்குதலில் சிதிலமாகிப்போன ஒரு கட்டட்டத்தொகுதி மட்டுமே. குண்டுகள் தொடர்ச்சியாக வீழ்ந்துகொண்டிருக்க, மனிதர்கள் உடலங்களைச் சர்வசாதரணமாக -வேற்றுக்கிரகவாசிகள் மாதிரி- தாண்டியபடி நடமாடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இவ்வாறாக தோல்வியின் விளிம்பில் நாஸிகள் நின்றபோதும் தமது அதிகாரத்தைக் கைவிடாது யூதர்களை அரச இயந்திரம் வேட்டையாடியபடியே இருக்கின்றது என்பதும் காட்டப்படுகின்றது. அதேபோன்று எல்லாமே கைநழுவிப்போய்விட்டாலும் ஹிடலரின் தேசியத்தின் மீது கடைசிவரை நம்பிக்கையிழக்காது போர்முனைக்குப் போய் இறக்கின்ற லிலியின் கணவனைப் போன்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.


தமிழ் சூழல் சார்ந்து ஓரினப்பால் குறித்து மிகக் குறைவான உரையாடல்களே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ஓரினப்பால் குறித்து தமிழில் படங்கள் ஏதாவது வந்திருக்கின்றதா எனப் பார்க்கும்போது, சுமதி ரூபன் திரைக்கதை எழுதி, ரூபன் இயக்கிய You 2 என்ற (30-45 நிமிடங்கள்) ஓடக்கூடிய ஒரு குறும்படமே வந்திருக்கின்றதெனத் தோன்றுகின்றது. அந்தப் படத்தில் நடிப்பதற்கும் நடிகைகள் தேட தான் மிகவும் கடினப்பட்டதாய் சுமதி எங்கோ ஓரிடத்தில் கூறியதும் நினைவினிலுண்டு. நடிகைகள் இல்லாது போனபோது திரைக்கதை எழுதிய சுமதியே அதிலொரு பாத்திரம் ஏற்கவேண்டியும் இருந்திருக்கின்றது. You 2 என்கின்ற இக்குறும்படத்தின் கதை, குழந்தைகளுள்ள ஒரு பெண் தனது கணவனின் வன்முறையால் பாதிக்கப்பட்டு இன்னொரு தோழியின் வீட்டில் வீட்டில் சென்று வாழத்தொடங்குகின்றார். கணவனை கண்கண்ட தெயவம் என நம்புகின்ற -குடும்ப வன்முறையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட- பெண் கணவனிடம் மீண்டும் போக விரும்புகின்றவராய் தொடக்கத்தில் இருக்கின்றார்.
இவ்வாறான நீட்சியில் இரு தோழிகளுக்குமிடையில் ஒரினப்பால் உறவு முகிழ்கின்றது. ஆனால் அந்த ஓரினப்பால் உறவில் கூட ஏற்றத்தாழ்வுகள் இணைகளுக்குக்கிடையில் வருவதையே 'நீயும் கூடவா' என்று அந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் நினைப்பதாய் படம் முடிக்கப்பட்டிருக்கும். அற்புதமான ஒளிப்பதிவாலும், ஆக அலட்டலில்லாது சூட்சுமமாய் தோழிகளிடையே வரும் உறவைக் காட்டிய இந்தப்படம் குறித்து இதுவரை ஆக்கப்பூர்வமான உரையாடல்கள நிகழவேயில்லையென்பது நம் காலத்தைய சோகம். ஓரினப்பால் பற்றிய சரியான புரிந்துணர்வுககளோ இல்லா நம் சமூகத்தில், லெஸ்பியன் உறவுகளிலும் அதிகாரம் நுண்ணியதளத்தில் செயற்படுகின்றது என்பதை இப்போது காட்சிப்படுத்துவது அவசியமா என்று இப்படத்தை முன்வைத்து சில கேள்விகள் இருப்பினும், எதையும் எந்தக் காலத்திலும் எடுக்கும் சுதந்திரம் ஒரு படைப்பாளிக்கு இருக்கிறதென்பதையும் மறுக்கமுடியாது.
4.

இந்தக் கதை, ஹிட்லரின் காலத்தில் நிகழ்ந்த ஒரு உண்மைக்கதையாகும். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளின்பின் இந்தக்கதையை எரிக்கா பிஷர் என்பவர் நூலாக எழுத, பின்னர் இப்படமாக எடுக்கப்பட்டிருக்கின்றது. உண்மைகள் எப்போதும் அடியாழங்களில் உறங்கிக்கொண்டிருக்காது. ஒருநாள் உண்மைகள் வெளியே வரும்போது அதிகாரத்திலிருந்து தமக்கான வரலாற்றை எழுதியவர்களை மீண்டும் புதைகுழிகளிலிருந்து தோண்டியெடுத்து, கேள்விகளின் கணைகளால் நிர்வாணமாக்கப்படுவதும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.
கறுப்பு வெள்ளைப் படங்கள்: அசல் லிலி மற்றும் பெலிசி
(நன்றி: காலம்' , இதழ்-33 )
4 comments:
excellent intro. thanks dj
11/03/2009 09:57:00 AMThanks for your comment,Suresh Kannan.
11/04/2009 11:47:00 AMமிகச் சிறப்பாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள் டிசே..!
11/19/2009 12:54:00 PMமிக்க நன்றி..!
நன்றி உண்மைத்தமிழன்.
11/20/2009 11:14:00 AM....
பின்னூட்டம் எழுதாவிட்டாலும் கூட, உங்களின் பல பதிவுகளை சுவாரசியத்துடன் வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.
Post a Comment