கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 01

Tuesday, August 25, 2026

 

தியானம் செய்வதை அவ்வப்போது நிகழ்த்திக் கொண்டிருந்தாலும், பத்து நாள் விபாஸனாவிற்குப் போவது என்பது எனக்கு சற்றுப் பயத்தைத் தந்து கொண்டிருந்தது. கடந்தகாலங்களில் சிலமுறை இப்படிப் போக முயன்றபோது எனக்குள் இருந்த தயக்கம்/வேலை நெருக்கடி போன்றவைகளால் அது சாத்தியப்படாமல் போயிருந்தது.

எல்லாவற்றுக்கும் அது நிகழ ஒரு காலம் தேவைப்படுகின்றது என்பது போல, நான் விபாஸனாவுக்குப் போகவும் ஒரு அழைப்பு(calling) தேவையாக இருக்கிறது என்று அமைதியாக இருந்தேன். இங்கே விபாஸனாவுக்குப் போக மூன்று மாதங்களுக்கு முன் பதிவு செய்ய வேண்டும். அப்படிச் செய்தாலும், பதிவு செய்யும் கொஞ்ச நேரத்துக்குள் இடங்கள் முழுதும் நிரப்பப்பட்டு விடும். 



நான் இம்முறையும் பதிவு செய்தபோது, 'இடங்கள் நிரம்பிவிட்டன, உங்களைக் காத்திருப்போர் பட்டியலில் (waiting list) வைத்திருக்கின்றோம்' என்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. சரி, இம்முறையும் எனக்கான 'அழைப்பு' இல்லை என்று அமைதியாகிவிட்டிருந்தேன்.


திடீரென்று விபாஸனா தொடங்குவதற்கு ஐந்து நாட்களுக்கு முன், ஓர் இடம் இருக்கின்றது உங்களுக்கு இணைய விருப்பமா என்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. எனது பிறந்தநாள் காலப்பகுதியில் அந்த பத்து நாட்கள் வருவதால், அது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. அடிக்கடி இந்தப் பிறப்பின் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதுக்கு ஏதேனும் விபாஸனா தியானம் ஆறுதலைத் தரக்கூடும் என்று நினைத்தேன்.

ஜூலை 22 - ஓகஸ்ட் 02 வரையும் விபாஸனாவில் இணைந்து கொண்டேன். இப்படி பத்து நாட்கள் போவதை ஓர் ஆனந்தமான நிலை என்று பொய் சொல்லமாட்டேன். ஒருவிதமான பதற்றமும் பரவசமும் கலந்த நிலையில் இருந்தேன் மட்டும் எனத்தான் சொல்ல முடியும்.

இந்தப் பதற்றத்துக்கு ஒரு காரணம் விபாஸானாவின் சில அடிப்படை விதிகள்.

(1) பத்து நாளும் அலைபேசி பாவிக்கக்கூடாது.

சரி அலைபேசி இல்லாவிட்டாலும், புத்தகங்களை வாசித்தோ, ஜேர்னலை எழுதியோ பொழுதை எப்படியேனும் கழித்துவிடக்கூடிய 'ஆசாமி' நான் என்றாலும், அவை எதற்கும் கூட அனுமதி இல்லை. மேலும் எந்தவகையான இசை கேட்டலோ, இசை வாத்தியங்களை இசைப்பதோ முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தது. வாசிப்பும் இல்லை, எழுத்தும் இல்லை, இசையும் இல்லை என்றால் என்னைப் போன்றோர் எப்படி ஒரு நாளைக் கழித்துவிட முடியும்?

ஒருவகையில் பார்த்தால், இப்படி வெளியுலகத்தோடு தொடர்பு கொள்வதுதான் தடை செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் எப்படியோ எழுபது எண்பது பேர்கள் வருவார்கள், அவர்களோடு கூடிப் பேசி கொஞ்சி விளையாடலாம் என்றால் அடுத்த விதி இப்படி இருந்தது.

(2) பத்து நாட்களும் நீங்கள் எவரோடும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் (Noble Silence).

பேசாமல் மட்டுமில்லை, சைகையில் பேசுவதோ, துண்டுப்பேப்பரில் எழுதி கருத்துக்களைப் பரிமாறுவதற்கோ இங்கே துப்பரவிற்கு இடமில்லை.

அதாவது எண்பது பேர் உலாவுகின்ற இடத்தில் நீங்கள் இருந்தாலும், நீங்கள் உங்கள் தனித்த உலகில்தான் இருக்க வேண்டும். எந்த தொடர்பாடலும் சக தியானிப்பவர்களோடு இந்த பத்து நாட்களில்  வைக்க முடியாது.

*

இந்த இரண்டு கடும் விதிகளை கடவுளே(?) என்று கடைப்பிடித்தாலும் அடுத்த விதிதான் என்னை அதிகம் பயமுறுத்தியது. இந்த மூன்றாம் விதியின் காரணமாக என்னால் ஒருபோதும் பத்துநாட்கள் நின்று தாக்குப் பிடிக்க முடியாது என்றுதான் உள்மனம் சொல்லிக் கொண்டிருந்தது. அது;

(3) மதியம் பன்னிரண்டு மணிக்கு பிறகு எந்த உணவையும் எடுத்துக் கொள்ள முடியாது (காலை மற்றும் மதியம் அவர்கள் தரும் உணவு மட்டும்).

நான் பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் குணமுடைய ஒருவன். குறித்த நேரத்தில் நான் சாப்பிடாவிட்டால் ஏதோ எரிமலையை விழுங்கிய கோபக்காரன் போலத்தான் நடந்து கொள்ளத் தொடங்குவேன். அதுவும் தியானம் இரவு 9 மணி வரை இருக்கும்போது, எப்படி ஒரு மனிதன்  மதியம் பன்னிரண்டு மணிக்குப் பிறகு சாப்பிடாமல் தாக்குப்பிடிப்பான்?

இந்த மூன்றாம் விதியால் புத்தர் என்னை பரிநிர்வாணப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றாரா அல்லது  பட்டினி கிடந்து சாகடிக்கத்தான் மறைமுகமாகத் திட்டமிடுகின்றாரா என்ற யோசனைதான் வந்தது.

இன்னும் வேறு சில விதிகள் இருந்தாலும் இத்தோடு விதிகளை நிறுத்திக் கொள்வோம்.

ஏனெனில் இந்த விதிகள் அனைத்தையும் 10 நாட்கள் தாங்கிப் பிடித்த ஒருவனாகத்தான் நான் இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கின்றேன் என்பதால் மற்ற விதிகள் அனைத்தையும் பஞ்சைப் போல பறந்து போகக்கூடியவை என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும்.

***

(இன்னும் வரும்)

 

0 comments: