இறுதியில் எழுதிய பதிவான (மழைக்காலத் தனிமை - 04) இற்கு ராஜேஷ் அருமையான பின்னூட்டமொன்றை எழுதியிருந்தார். அதை இங்கே தனியே பதிந்து விடுகின்றேன். அந்தப் பதிவை எழுதி முடிக்கும்போது கிட்டத்தட்ட காலை மூன்று மணி. எனினும் நான் நினைத்ததை எழுத முடிந்ததா என்ற சந்தேகம் இருந்தது. இந்தக் காலையில் இதை வாசிக்கும்போது சிறு நிறைவு. மிக்க நன்றி ராஜேஷ்.
*******************
“நான் மிகச் சரியாக உங்களை என் சகனாக கண்டடைந்தேன்..நீங்கள், நான் தொகுக்க முயலாத, (உண்மையில் விரும்பாத) என் சில அக அனுபவங்களை எளிதாக வார்த்தைகளாக்குகிறீர்கள், மேலதிகமாக உங்களுக்கு ஒரு பரந்த தத்துவ மற்றும் இலக்கிய வாசிப்புத் தளமும், பயணமும், தீராத மெய்த் தேடலும் உள்ளது, மேலும் மிகவும் அச்சுறுத்தும் அல்லது வாழ்விலிருந்து கசப்பும், நொய்மையும் மட்டுமே எஞ்சும் ஒரு பின்புலம் கொண்டவராகிலும், வாழ்வின் மீது இன்னும் தீராத காதலும் கொண்டவராக உங்களைப் பார்க்கும் பொழுது சமயங்களில் எனக்கு அன்பு கலந்த பொறாமையுணர்வும் எழுகிறது.
மேலும், முகநூல் போன்ற எந்த உள்ளார்ந்த தனிநபர் அனுபவமும் மலினப்பட்டுவிடும் அவசர கதி ஊடகங்களில், யாதொன்று குறித்தும் அலட்டிக் கொள்ளாமல் உங்கள் மனதை முன் வைக்கும் திடம் நிச்சயம் என்னை பொறாமை கொள்ளச் செய்கிறது.
மனம், எண்ணம், வெறுமை, சுயம் போன்றவற்றை மிகச் சிரமப்பட்டு மறக்க விழைபவன் என்ற வகையில், நியாயமாக நான் உங்களை வாசிப்பதைத் தவிர்க்க வேண்டும்.ஏனோ, மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.
குறிப்பாக நீங்கள் இன்று குறிப்பிட்ட Eckart Tolle யுடைய Power of Now புத்தகத்திலிருந்த அவரது அனுபவம், இந்த தவிப்பும், தனிமையும் கொண்டு ஒரு குருவைத் தேடி, கண்டடைந்தும் அவர்களிடம் தம் கேள்வியை முழுமையாகக் கூட முன் வைக்க முடியாமல் மருகும் பல Seekers அவர்களது அனுபவங்களை படிக்கும் பொழுதும் பார்க்கும் பொழுதும், சாமத்தில் தேம்பும் சிசுவுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும் போன்ற சுய பச்சாதாபத்தை அடைந்திருக்கிறேன்.
இது ஒரு சுழல், ஒரு வழிப்பாதை, நீங்கள் ஒன்று கண்டடைய வேண்டும், அல்லது அதன் யத்தனத்தில் காணாமல் போக வேண்டும்.இடையில் எஞ்சும் அனுபவங்களை எழுதி வைத்தால், யாருக்காவது உதவக் கூடும்.
நான் எதேச்சையாகக் கண்டடைந்த Wayne wirs என்ற நாடோடி வெகு நாட்கள் என்னை அலைக்கழித்தார்.
மெல்ல மெல்ல அத்வைதம் அல்லது Non Duality குறித்து அறிந்து கொண்டேன்.ரமணர் எனக்கு நெருக்கமாக இருந்தார்..ஒரு மாபெரும் தொடர்ச்சியை அவர் உருவாக்கியிருந்தார் என பின் அறிந்து கொண்டேன்.ஓஷோ ரமணர் குறித்து ஏதோ ஒரு உரையில் குறிப்பிட்டிருந்தார். ஆன்மீகத்தை ஏதோ ஒரு மலையுச்சி மூடு மந்திரமாக அன்றி, இயல்பான வாழ்கை முறையாக பகிர்ந்து கொள்ளும் பல விழிப்புணர்வு பெற்ற ஞானிகள் இக்காலத்திலும் இருக்கவே செய்கின்றனர்.
இப்பொழுது மனம் கொஞ்சம் ஓய்வில் இருக்கிறது.ஒருவகையில் இது கற்றதை மறக்கும் கால இடைவெளி, அந்த பேய் திரும்பும் நாள் குறித்த அச்சம் இன்னமும் இருக்கிறது..அது என்னை அல்லது நானென நான் நம்பிக் கொண்டிருக்கும் எதையும் இழப்பது குறித்த அச்சம்.
ஞானமடைந்த இருவர் சந்தித்துக் கொண்டால், அவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என அவ்வப்போது நினைப்பேன்..
சமீபத்தில் எம்.டி.எம்மின் ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொள்ளும் கவிதைத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மற்றொரு அச்சமூட்டும் அழகான தொகுப்பு.”
******
(Jan 05, 2025)
0 comments:
Post a Comment