இன்று முழுநாளும் தியானம் செய்வதற்கான நன்னாளாக அமைந்திருந்தது. காலை எட்டு மணிக்கு தியான வகுப்புத் தொடங்கியது. தியானத்தை கூட்டாகச் செய்வது, தனித்துச் செய்வதைப் போலனற்றி, வேறு வகை அனுபவத்தைத் தரக்கூடியது.
முதல் தியான அமர்வு 'வழிகாட்டும் தியானமாக' (Guided meditation) தொடங்கினாலும், பின்னர் ஆசிரியர் நம்மை அமைதியில் விட்டுவிட்டது பிடித்திருந்தது. அடுத்து காலைச் சிற்றுண்டிக்காக அரை மணித்தியாலம் இடைவெளி விட்டு, இரண்டாவது அமர்வு தியானம் தொடங்கியது. இந்தத் தியான வேளையில் முதலில் கொஞ்சம் புத்த சூத்திரங்களை பாலியிலும், அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் ஆசிரியர் சொல்லிச் செல்ல நாங்கள் அவரைப் பின் தொடர்ந்தோம்.
தியானத்தின்போது நாம் duality இற்குள் சிக்கி எதையும் discrimination செய்யாமல் இருப்பது முக்கியமானது. அதாவது non -dualism ஆக இருப்பது அவ்வளவு அவசியமானது. இந்த dualityஐ சில விடயங்களில் கொஞ்சம் அவதானித்துக் கடந்து போக முடிந்தது எனக்குப் புதிய பாடமாக அமைந்திருந்தது.
புத்தரின் போதனைகளை 'மந்திர உச்சாடானம்' செய்யும் <புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி> எனக்கு சிறுவயதில் ஒரு எதிர்ப்பின் அரசியலாக அறிமுகமானது. ஈழத்தில் இருக்கும்வரை, புத்தரைப் பின்பற்றுவர்கள் செய்த அட்டூழியங்களால், புத்தர் எனக்கு வெகு தொலைதூரத்திலேயே இருந்தவர். கொழும்பு போன்ற பல்லின மக்கள் வாழும் இடத்தில் இருந்தபோது விகாரைகளில் ஓதப்படும் இந்த வார்த்தைகள், <இதையேதான் சிங்கள இராணுவமும் ஓதிவிட்டு தமிழர்களைப் பிறகு கொல்லச் செல்வார்கள்> என்பதாக ஆழ்மனதில் தங்கியிருந்தது. ஆதனால் இந்த புத்தம்/தம்மம்/சங்கம் சரணம் கச்சாமியோடு என்னால் ஒருபோதும் ஒட்டமுடிந்ததில்லை.
ஆனால் இந்தப் போதனைகளை discrimination செய்யாது பார்க்கவேண்டுமென்ற ஓர் தெளிவு இன்று எனக்குள் வந்ததை அவதானித்தபோது சற்று வியப்பாயிருந்தது. அது தியானத்தில் இருந்தன் நீட்சியா அல்லது வேறெதுவா தெரியவில்லை. ஆனால் இந்த உச்சாடானத்தை பின்னர் அதன் இயல்பிலே -எவ்வித வெறுப்புமின்றி- அவதானிக்கத் தொடங்கியிருந்தேன்.
அதுபோல, இந்த விகாரையில் மாமிசம், கடலுணவு போன்றவற்றை மதிய உணவில் சேர்ப்பார்கள். வழமையாக நமது கோயில்கள், புனித நாட்களில் மரக்கறிச் சாப்பாடுகளைச் சாப்பிட்டு வந்த பழக்கத்தால், இம்முறை மதியவுணவில் கோழியையும், இறாலையும் விலத்துவோம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் அதையும் அதன் இயல்பிலே அங்கே தரப்பட்டது எதையும் விலத்தக்கூடாது என்று கடைசி நேரத்திலே மனம் முடிவு செய்து மாமிசத்தையும் சேர்த்துக் கொண்டது.
மனம் என்று எளிமைக்காய்ச் சொன்னாலும், இந்த இரண்டு விடயங்களையும் மனதைத் தாண்டிய ஓர் 'மனம்' எடுத்தது என்று சொல்லலாம். சிலர் இதை ஆழ்மனதினதோ அல்லது பிரக்ஞையினதோ தெறிப்போ என்றும் சொல்லவும் கூடும்.
மாலை நேர தியான வகுப்புக்கு இன்னொரு ஆசிரியர் வந்திருந்தார். அவர் எங்களோடு உரையாடுவதில் ஆர்வமாக இருந்தார். இப்போது விளாசி எரிந்து கொண்டிருக்கும் கலிபோர்ணியா தீயைப் பற்றிய கடைசி நிலவரத்தைக் கேட்டறிந்து விட்டு, தீயைப் பற்றிய புத்தரின் கதையொன்று உள்ளதென்று சொல்லத் தொடங்கினார்.
புத்தரின் சீடர்கள் இருந்த மடாலயம் ஒன்றைச் சுற்றி தீ மூண்டபோது, புத்தர் அதை தடுத்து நிறுத்துகின்றார். பின்னர் புத்தர் தன் சீடர்களிடம், 'இது எனது சக்தியினால் நிறுத்தப்பட்டது என்று நீங்கள் நினைக்கலாம். அது என்னால் நிகழ்த்தப்பட்டதில்லை. இந்தத் தீ ஒரு சிறு குருவியின் ( baby quail) புண்ணியத்தால் நிறுத்தப்பட்டது என்றொரு கதையைச் சொல்கின்றார்.
இதற்கு முற்பிறப்பில் சிறுகுருவி பறக்கமுடியாது கூட்டில் இருக்கும்போது, பெருந்தீ காட்டில் மூள்கின்றது. எல்லாப் பறவைகளும் பறந்துபோனபின்னும் இந்தக் குட்டிக் குருவியின் பெற்றோர் அதனோடே இருக்கின்றனர். கடைசிக்கட்டத்தில் தீயின் உக்கிரம் தாங்கமுடியாது இனி இயலாது என்று அந்தப் பெற்றோரும் பறந்துவிடுகின்றனர். இந்தக் குருவிக்கு சிறகிருந்தும் பறக்க முடியாது. கால் இருந்தும் நடக்க முடியாது. அப்போது அது loving-kindness இன் மூலம், என் பெற்றோர் எனக்காக கூடும் கட்டி, இறுதி வரை எனக்காக இந்தத் தீயின்போது இருந்தார்கள் என்று உளம் குவித்து பெற்றோர் மீது நல்ல விதைகளை தூவிவிட்டுச் செல்கின்றது. இந்த குருவி இவ்வாறாக பல்வேறு பிறப்புக்களின்போது நல்ல விதைகளைத் தூவியபடி அவை மிகப்பெருமளாவில் சேகரம் ஆகின்றது. இந்த விடயத்தை புத்தர் அவர் போதிசத்துவராக இருந்த ஒரு பிறப்பில் அறிகின்றார்.
அந்தக் குருவி மாண்ட இடத்தில் நல்விதைகள் குவிந்துவிட்டது. அதனால் அந்த இடத்தை இனி ஒருபோதும் தீயால் தீண்டமுடியாமல் இருக்கின்றது. அங்கேதான் இப்போது இந்த மடாலாயம் அமைந்திருக்கின்றது, அதனால்தான் சுற்றியெங்கும் தீ பரவி அழிவைச் செய்த, இந்த இடத்தில் மட்டும் தீ பற்றாமல் அணைந்துவிட்டது.
புத்தரின் 'அதிசயமான சக்தி'யால் தீ நின்றது என்று நினைத்த சிஷ்யர்களுக்கு அசலான உண்மையைப் புத்தர் உரைத்தார் என்று இந்த ஆசிரியர் எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஆகவே நாங்களும் தீயால் பாதிக்கபட்ட மக்களுக்காக நமது நல்ல விதைகளை தியானத்தாலும், பாடலாலும் அனுப்பிவைப்போம் என்று எங்களைப் பிரார்த்தனைக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது என் (dualism) மனம் மீண்டும் குறுக்கிடத் தொடங்கியது. கலிபோர்னியாவில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர், அவர்களுக்காகப் பிரார்த்திப்பதில் பிரச்சினையில்லை, அதுபோல நாங்கள் ஏன் பாலஸ்தீனத்தில் போரில் பாதிக்கப்படும் மக்களுக்காகவும் ஏன் நாம் இந்த நல்விதைகளைத் தூவக்கூடாதென்ற கேள்வி எழுந்தது. முன்பு ஒரு காலம் என்றால் வாயை இப்படியெல்லாம் மூடிக் கொண்டிருக்கமாட்டேன்.
இப்படியான ஒரு தியான வகுப்பில் தொடுபுழாவில் இருந்தபோது அந்த ஆசிரியரை இந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு முழுவகுப்பையுமே அதற்கான பதிலென்ன என்று சொல்லக் கேட்டு அந்த வகுப்பு முழுதையும் கேள்விகளால் 'பாழாக்கியவன் நான்.
இங்கே அப்படியொரு குறுக்கிடும் மனோநிலை எனக்குள் எழுந்து அதேவேகத்தில் பின்னர் கரைந்து போவதையும் கண்டேன். மற்றவர்கள் கலிபோர்ணியாவுக்காகவிற்காக தியானத்தைச் செய்யட்டும், நான் எனக்குப் பிடித்தமாதிரி பாலஸ்தீனர்களுக்காக தியானத்தைச் செய்யலாந்தானே என்று மனம் அமைதியடைந்தது.
இந்தப் பிரார்த்தனை முடிந்தபின், ஆசிரியர் எங்களை நடக்கும் தியானத்துக்காக (Walking Meditation) வெளியில் போய் நடந்துவிட்டு வாருங்களெனச் சொன்னார். பனி கொட்டி நிலம் முழுவதும் வெள்ளையாக இருந்தது. என்றாலும் 'குளிர் அவ்வளவாக இல்லை, ஒரு குறுகிய தூரத்துக்குள் நடந்தபடி பாளியில் இருக்கும் loving - kindness சுலோகத்தைச் சொல்லியபடி நடக்கும் தியானத்தைச் செய்யுங்கள்' என்றார் ஆசிரியர். மனதைக் காலடிகளில் குவித்தபடி 3000 அடிகளுக்கு மேலாக நடந்துவிட்டு வர, அடுத்து ஒரு மணித்தியாலம் இறுதி தியான அமர்வு நடந்து முடிந்தது.
இறுதியில் இந்த நாளை நீங்கள் வித்தியாசமான நாளாகத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று மகிழ்ச்சியடையுங்கள். எத்தனை பேர் இந்த முழுநாளை தியானத்துக்காக ஒதுக்கியிருப்பார்கள், உங்களுக்கு இப்படி அமைந்தது நல்லூழே, இந்நாளை உங்கள் வாழ்வில் முக்கிய நாளாக என்றேனும் நினைத்துக் கொள்வீர்கள். அமைதியும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் அமையட்டுமென தியானத்தை இந்த ஆசிரியர் முடித்து வாழ்த்தி எங்களை அனுப்பி வைத்தார்.
இந்த நாளில் நீ எதை அடைந்தாய் என்று ஒருவர் கேட்டால், நான் எதையுமே அடையவில்லை என்றுதான் சொல்வேன். ஆனால் இந்த நாளில் நான் நிகழுக்கு மிக அண்மையில் இருந்தேன். மனம் அமைதியில் இருக்கின்றேன் என்று உணராமலே ஓர்வகை அமைதியால் நிறைந்திருப்பதை அவதானிக்க முடிந்திருந்தது.
இன்றைய நிசப்தங்கள் நிரம்பிய உலகில் ஒருநாள் அமைதியாகக் கழிந்தது என்பது கூட ஒருவகையில் ஆசிர்வாதம் அல்லவா?
அந்த ஆசிர்வாதத்தை இந்த நாள் அள்ளிச் சொரிய நான் மனம் நிறைந்து பெற்றேன் என்க!
*************
(Jan 12, 2025)
0 comments:
Post a Comment