கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

'புளியடி' சாமுவேல்

Saturday, April 18, 2026

 

நான் இங்கிலாந்துக்குப் போவதற்கு ஒரு காரணம் இருந்தது. ஆனால் ஏன் இலங்கைக்கு மீண்டும் வரத் துடித்தேன் என்பதற்கு என்ன காரணம் என்று இப்போதும் யோசித்துக் குழம்புவதுண்டு. சட்டம் படிப்பதற்காக இங்கிலாந்துக்குப் போனபோது எனக்கு இருபத்து மூன்று வயது. இருபதுகளுக்கு உரிய எல்லாக் குறும்புகளும் எனக்குள் அப்போது பொங்கிப் பிரவாகித்தபடி இருந்தது. சட்டப் பாடங்களைப் படிப்பதைவிட பெண்களை இரசிப்பதும், புத்தகங்களை வாசிப்பதும் எனக்கு மிகப் பிடித்தமாக இருந்தது.


சட்டத்தைப் படித்துக் கொண்டிருந்தபோதே எனக்கு ஒரு புத்தகக் கடையில் வேலை கிடைத்திருந்தது. அப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கதைகளை ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியிருந்தேன். அவை இங்கிலாந்தில் வெளியாகிய சிறுபத்திரிகைகளில் பிரசுரமாகவும் தொடங்கியது. 
 

ஒரு சனிக்கிழமை, நான் புத்தகக் கடையில் தனியே வேலை செய்து கொண்டிருந்தபோது இளம்பெண் ஒருத்தி புத்தகம் வாங்க வந்தாள். நடையில் ஒருவித அலட்சியமும், பார்வையில் ஒருவித குறுகுறுப்பும் அவள் வசம் இருந்தது. அப்படி வந்தவள், சமகாலத்து சிறந்த சிறுகதைப் புத்தகம் ஒன்றைத் தரும்படி கேட்டாள். நான் நிறையப் புத்தகங்களை புத்தக அடுக்குகளில் இருந்து எடுத்துக் கொடுத்தபடியிருந்தேன். அவளோ ஒவ்வொரு புத்தகத்தையும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி நிராகரித்துக் கொண்டிருந்தாள். இறுதியில் எனக்குப் பிடித்த ஹெமிங்வேயின் கதைத் தொகுப்பையே வேண்டாம் என்று அவள் மறுத்தபோது எரிச்சல் எனக்குக் தலைக்கேறி விட்டது. 'உனக்கெல்லாம் வாசிப்பு ஒரு கேடா?' என்று அவள் ஒரு வாடிக்கையாளர் என்பதைக் கூட மறந்து கோபத்தில் கத்திவிட்டேன்.

அப்போதுதான் அவள் உண்மையான காரணத்தைச் சொன்னாள்; 'நான் உங்களின் சில கதைகளை சஞ்சிகைகளில் வாசித்திருந்தேன், அதனால்தான் உங்களைத் தேடி இங்கே வந்தேன்'. நான் அவளை என் அலுவலக அறைக்குள் வந்து அமரும்படி சொல்லிவிட்டு, பக்கத்துக் கடையில் அருந்துவதற்கு எங்கள் இருவருக்கும் சூடான கோப்பிகளை எடுத்து வந்தேன். அந்தக் கஃபேயில் இருந்த பெண், 'என்ன இந்தச் சனிக்கிழமையும் ஒரு பெண்ணோடா?' என்று கொஞ்சம் எள்ளலாகக் கேட்டாள். நானோ 'எல்லாச் சனிக்கிழமைகளும் இப்படி ஆசிர்வதிக்கப்படுவதில்லை, பொறாமை வேண்டாமே' என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு வந்தேன்.

வந்திருந்தவள் என் கதைகளைப் பற்றி உரையாட ஆவலாகவும், நான் அவளை வாசிக்க விருப்பமுடையவனாகவும் இருந்தேன். அரை மணித்தியாலத்துக்குள்ளேயே அவளின் சம்மதத்துடன் புத்தக அடுக்கின் மறைப்பில் அவளைச் சாய்த்து முத்தமிட்டு, நான் சிறந்ததொரு குறுங்கதையை அக்கணமே எழுதி முடித்தேன். இது எமக்கிடையே மட்டும் எழுதப்பட்ட அந்தரங்கமான காவியம். அவளே எனது இலண்டன் காதலியாக பின்னாளில் மாறியிருந்தாள். இந்த அனுபவத்தை எப்படியாவது பதிவு செய்ய வேண்டுமென்று விரும்பியபோதுதான் நான் எழுதியது ‘திரு.மூன்’ என்கின்ற குறுநாவல்.

*

இங்கிலாந்திலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் திரும்ப வந்து எங்கள் பூர்வீக வீட்டில் நான் வசித்ததை அனைவரும் அறிந்திருப்பீர்கள். எனக்கு இங்கிலாந்திலேயே நன்றாக மது அருந்தும் பழக்கம் வந்துவிட்டது. பகல்வேளையில் யாரேனும்  யாழ் மத்தியகல்லூரி மாணவனின் சைக்கிளை எடுத்துக்கொண்டு போய் பாரில் ஒரு ஷொட் எடுக்காவிட்டால் ஏதோ சூரியனுக்கு கோபம் வந்து என்னை எரித்துவிடுவது போல உடல் பரபரக்கத் தொடங்கிவிடும். அதனால் நான் ஒருபோதும் சூரியனைக் கோபப்படுத்தியதில்லை. 

மாலை நேரங்களில் நான், ஏ.ஜே.கனகரட்ன, டொமினிக் ஜீவா என எல்லோரும் பறங்கித் தெருவிலுள்ள பிரீமியர் கஃபேயில் சந்தித்துப் பேசுவோம். உங்களுக்குத் தெரிந்திருக்கும் நான் இங்கிலாந்தில் இருந்தபோது ஒரு வெள்ளைக்காரப் பெண்ணை விரும்பியிருந்தேன் என்று. அன்று இலண்டனில் ஜேர்மன் விமானங்கள் குண்டுவீசும் அலறல்களுக்கிடையிலும் நாங்கள் நேசித்துக் கொண்டிருந்தோம். ஒருமுறை நாங்கள் தங்கியிருந்த அடுக்குமனைக்கு அருகில் குண்டு விழுந்தபோது பெற்ற அனுபவத்தை 'அபாயச்சத்தம்' என்ற கதையில் எழுதியிருந்தேன்.

என்னதான் என்னை இலண்டனுக்கு பெற்றோர் அனுப்பி சட்டம் படிக்க வைத்தாலும், அவர்களுக்கு கொழுத்த சீதனத்தோடு நானொரு தமிழ்ப் பெண்ணைக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று ஒரு கனவிருந்தது. இலண்டன் பெண்ணுடனான எனது காதல் வீட்டுக்குத் தெரிந்தவுடன், அவர்கள் எனக்குச் சொல்லாது நேராகவே என் காதலிக்கு கடிதம் அனுப்பி தங்கள் விருப்பமின்மையைத் தெரிவித்துவிட்டார்கள். அவளும் இதற்குப் பிறகு சரி வராது என்று என்னுடனான உறவை முறித்துவிட்டாள்.

இரண்டாம் உலக மகாயுத்தம் முடிந்து, கொஞ்சம் அமைதியும் வந்தபின் நான் இங்கிலாந்திலேயே வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கலாம். அந்தக் காலத்தில் என் கதைகள் நிறையச் சஞ்சிகைகளில் அங்கே வெளிவரத் தொடங்கியிருந்தன. என்னைவிட ஐந்து வயது மூத்தவரான கவிஞர் எம்.ஜே.தம்பிமுத்துவும் அப்போது இங்கிலாந்தில் பிரபல்யமாக இருந்தார். கவிதைக்கென்று ஒரு சஞ்சிகையை இங்கிலாந்தில் அவர் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

தம்பிமுத்துவுக்குக் கிடைக்காத ஓர் ஆசிர்வாதம் எனக்கு அப்போது கிடைத்திருந்தது. வர்ஜீனா வூல்ஃப், அவரின் கணவர் லெனாட் வூல்ஃப் ஆகியோரின் நட்புத்தான் அது. அவர்கள் தொடங்கிய 'ப்ளூம்ஸ்பெரி' இலக்கிய அமைப்பிலும் நான் இருந்திருக்கின்றேன். அந்தக் காலத்தில் பிரிட்டனின் அடிமைத்தனம், கீழைத்தேய காலனித்துவ நீக்கம் குறித்தெல்லாம் நாங்கள் நாட்கணக்காய் மது அருந்தியபடி, சிகரெட் புகைத்தபடி விவாதித்திருக்கின்றோம். அப்போதுதான் எனக்கு இந்தியாவின் முல்க் ராஜ் ஆனந்த் நல்லதொரு நண்பரானார். இவையெல்லாம் இந்தியாவும், இலங்கையும் பிரிட்டன்காரர்களிடமிருந்து விடுதலை பெறமுன்னர் நிகழ்ந்த சம்பவங்கள்.

சிலவேளைகளில் என் கதைகளை வர்ஜீனா வூல்ஃப் எடிட் செய்து கூடத் தருவார். ஆனால் நான் பங்குபற்றிய ப்ளூம்ஸ்பெரி அமைப்புப் பற்றி ஒருமுறை என்னிடம் யாரோ ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, 'இந்த அமைப்பு முற்போக்கானது. இது காலனித்துவ நீக்கல் பற்றிய ஆரம்ப உரையாடலுக்கு ஏற்ற அமைப்புத்தான். ஆனால் இந்த அறிவுஜீவிகளால் நீண்ட தொலைவுக்குப் பயணித்துப் போகமுடியாது' என்று சொன்னேன். இப்படிப் பேசியது வர்ஜினியாவுக்கும் அவரின் கணவருக்கும் அவ்வளவு பிடிக்கவில்லை என்பது தெரியும். அதற்காக உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா என்ன?

ஒருமுறை நான், எஸ்.பொ, ஏஜே என பறங்கித் தெருவில் இருக்கும் பிரீமியர் பாரில் மதுவருந்திக் கொண்டிருந்தபோது, எஸ்.பொ, ஏஜேவைப் பார்த்து, 'எப்போது நீங்கள் திருமணம் செய்யப் போகின்றீர்கள்?' எனக் கேட்டார். அதற்கு ஏஜே 'சாமுவேலைப் போன்ற ஒருவனே இந்த யாழ்ப்பாணச் சமூகத்துக்குப் போதும், நானும் யாரையேனும் கல்யாணம் செய்து மற்றவர் வாழ்வை பாழாக்கக் கூடாது' என்று என்னைச் சுட்டி நகைச்சுவையாகச் சொன்னார். நான் ஏஜேவைப் பார்த்து, ‘ஏஜே நீங்கள் ஏதோ ஒரு காதல்  தோல்வியால்தான் திருமணம் வேண்டாமென்று சொல்கின்றீர்கள் என்கின்றார்களே, உண்மையா? எனக் கேட்டேன். ஏஜே தன் இளந்தாடி நனைக்க பியரை அருந்திவிட்டு மெளனத்தின் ஆழத்துக்குப் போயிருந்தார்.

பதினான்கு வருடங்கள் இலண்டனில் கழித்துவிட்டு, எனது முப்பத்தேழாவது வயதில் நான் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பியிருந்தேன். எனக்குக் கல்யாணமோ என் நாற்பந்தைந்து வயதுக்குப் பிற்பாடுதான் நடந்தது. இதைப் பார்த்துவிட்டுத்தான் ஏஜே அப்படிச் சொல்லியிருக்க வேண்டும். எனக்கும் ஏஜேவுக்கும் ஒரு இருபது வயதுகள் வித்தியாசமாவது இருக்கும். ஆனால் நாங்கள் வயது வித்தியாசம் இல்லாமல் மிக நெருக்கமான நண்பர்களைப் போலப் பழகினோம்.

உங்களுக்கு முன் ஒரு விடயத்தை ஒத்துக்கொள்வதில் எனக்கு அவமானமில்லை. எனக்கு பெண்களைப் பார்த்து இரசிப்பதென்றால் கொள்ளைப் பிரியம். எனது மச்சான் கூட நகைச்சுவையாக பெண்களை இரசிப்பதைத் தவிர்ப்பதற்காக இவனை நாங்கள் அடிக்கடி வீட்டுக்குள் மறைத்து வைத்திருப்போம் என்று சொல்வான். அந்தளவுக்கு நான் அந்த விடயத்தில் பலவீனமாக இருந்தேன். எனக்கே இது அவ்வளவு நல்லதில்லை என்று தெரிந்தாலும் இதில் இருந்து வெளியேற முடிந்ததில்லை. ஒரு மலரை அதைத் தொந்தரவுபடுத்தாது அப்படியே இரசிப்பதில் என்ன தவறிருக்கின்றதோ தெரியவில்லை.

எனக்கு எழுதுவதும் வாசிப்பதும் என்னிடமிருந்து பிரிக்கமுடியாத கர்ணனின் கவசகுண்டலம் மாதிரி இருந்தது. அதனால் எனக்கு வக்கீல் வேலைக்குப் போவதில் அவ்வளவாக விருப்பம் இருக்கவில்லை. மேலும் பகல் வேளைகளிலே நன்றாக மதுவை அருந்திவிட்டு எப்படி நீதிமன்றத்துக்குப் போவது? ஒருநாள் ஏதோ ஒரு சின்ன குற்றத்துக்காக நான் ஒரு வழக்கறிஞர் என்றும் பார்க்காது என்னைக் குற்றவாளிக் கூட்டில் ஏற்றிவிட்டனர். அதற்கு முன்னர்தான் கொஞ்சம் ‘பிறிமியர் பார்’ பக்கம் எட்டிப் பார்த்துவிட்டு வந்திருந்தேன்.

தீர்ப்பு வழங்கும் நீதிபதி வந்துவிட்டார். 'நீங்கள் செய்த குற்றம் என்ன?' என்று கேட்டபோது நான் ஷேக்ஸ்பியரின், வெனிஸ் நகரத்து வணிகனில் வரும், போர்ட்டரின் தனிமையுரையை 'The quality of mercy is not strain’d, /It droppeth as the gentle rain from heaven..” என முழுமையாகச் சொல்லத் தொடங்க, நீதிபதி தலையில் அடித்தபடி யார் இவன் என்று என்னைப் பார்த்துக் கேட்டார். நீதிமன்றத்தில் எனது வரலாற்றை மட்டுமில்லை, நீதிபதியாக இருந்த என் தந்தையாரின் பூர்வீகமும் சொல்லப்பட, 'அந்த நல்ல மனுசனுக்கு இப்படியொரு மகனா?' என்று அதிர்ச்சியடைந்தபடி, இன்னொருமுறை நீதிமன்றப் படி ஏறக்கூடாதென்று எச்சரித்து அனுப்பி வைத்திருந்தார்.


*

பார்வதி என்கின்ற ஓர் இந்துப்பிள்ளை புளியடிப் பாடசாலை விடுதியில் தங்கிப் படிக்கத் தொடங்குவார். அந்தப் பிள்ளைக்கு ஜீசஸின் உருவப்படத்தை விடுதி வார்டன் அங்கேதான் முதன்முதலில் அறிமுகப்படுத்துவார். 'ஜீசஸ் பாவிகளாகிய எங்களை இரட்சிப்பதற்கென உதித்தவர். எங்களைப் பாவங்களிலிருந்து மீட்பதற்காக அவர் சிலுவையில் மரித்தவர்' என்று சொல்லிவிட்டு, ''குழந்தையின் உலகந்தான் கடவுளின் ராஜ்ஜியம் என்று வார்டன் பார்வதியிடம் கூறுவார்.

அத்தோடு நிற்காமல் ஜீசஸிடந்தான் நீ இனி எப்போதும் போகவேண்டும், உனக்கு அவர்தான் அடைக்கலம் தருவாரென்று அந்த வார்டன் சொல்லியும் கொடுப்பார். பார்வதிக்கு எல்லாமே குழப்பமாக இருக்கும். ஒருவரிடம் அடைக்கலம் அடையவேண்டுமென்றால் அவரை நான் நேரில் சந்திக்க வேண்டுமே, எப்போது ஜீசஸ் பாடசாலைக்கு வருவார் என்று அந்தப் பிள்ளை அப்பாவித்தனமாய்க் கேட்கும். 'இதென்ன முட்டாள்தனம், ஒரு கிறிஸ்தவப் பிள்ளைக்கு இதெல்லாம் நன்கு தெரியும். நீ நல்லவிதமாக உனது பெற்றோரால் வளர்க்கப்படவில்லை' என்று வார்டன் திட்டுவார்.

பிள்ளைக்கு அதற்குப் பிறகும் சந்தேகம் தீராது. 'வார்டன் அக்கா, ஜீசஸ் கடவுளென்றால், அவரின் மனைவிகள் எங்கே? படத்தில் அவர்களைக் காணவில்லையே?' என்று அந்தப் பிள்ளை கேட்கும். 'என்னுடைய கர்த்தாவே, இப்படி கேட்டு மிகப்பெரும் தெய்வநிந்தனையை நீ செய்துவிட்டாய்' என்று அந்த வார்டன் ஜீசஸின் உருவப்படத்தின் முன் மண்டியிட்டு பாவமன்னிப்புக் கேட்கத் தொடங்குவார். இந்தக் கதையில் உள்ளோடும் நகைச்சுவை எனக்கு மிகப் பிடிக்கும் என்று ஒருநாள் எஸ்.பொ என்னுடைய 'முள்' கதையைச் சிலாகித்துப்  பேசினார்.

அந்தக் கதையின் தொடர்ச்சியில், 'நான் என்ன தவறு செய்தேனென்று தெரியவில்லையே, உங்கள் கடவுளுக்கு எத்தனை மனைவிகள் இருக்கின்றார்களென்று கேட்டது அவ்வளவு பெரும் குற்றமா? இதனை ஏன் கேட்டேனென்றால் எங்கள் கடவுளுக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றார்கள்' என்று அந்தப் பிள்ளை கேட்கும். அதற்கு விடுதி வார்டன் 'அது எந்தக் கடவுள்?' என்று வினாவுவார். 'வேறு யார்? எங்களின் முருகப் பெருமான்தான்' என்று அந்தப் பிள்ளை சொல்வதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும், இதில் சாமுவல் இரண்டு மதங்களையும் விமர்சனத்துக்குள்ளாக்கின்றார் என்று ஏஜே இந்தக் கதையை விவரித்துப் பேசியதும் எனக்கு நன்கு நினைவில் இருக்கின்றது.

எஸ்.பொவும், ஏஜேவும் என் கதைகளை என் முன்னிலையில் விதந்து பாராட்டியது கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், அவர்களின் எழுத்துக்கள் மீது ஆழ்ந்த மதிப்பு இருந்ததால், இதைவிட எந்த புகழாரமும் என் எழுத்துக்குத் தேவையில்லை என்ற மிதப்பு, அவர்கள் பேசியபோது எனக்குள் செம்மதுவைப் போல ஊறியது என்பதுவும் உண்மைதான்.

இலங்கை ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை அடையாத காலத்தில், இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது இங்கிலாந்தில் நான் வசித்திருந்தேன். அங்கிருந்து வெள்ளைக்காரர்கள் பார்த்த காலனித்துவ இலங்கையையோ அல்லது இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் 'நாசூக்காய்’ சொன்ன உயர்குடிகளின் கதைகளையோ ஒருபோதும் நான் எழுத விரும்பவில்லை. இப்போது பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் விதந்து பேசிக் கொண்டிருக்கும் என் கதையான ''தேர்ந்த ஒப்பாரி வைப்பவர்களில்’ ஆதிக்கச்சாதியின் திமிரைத்தான் அப்போதே கேள்வி கேட்டு எழுதியிருந்திருப்பேன்.

ஒருமுறை இளங்கோ கூட கேட்டான். 'நான் ஒன்பதாம் வகுப்பில் ஆங்கில இலக்கியம் படிக்கும்போது ஆர்.கே.நாராயணனின் 'தக்கூரின் கிணறு' என்றொரு கதையை பாடப்புத்தகத்தில் படித்தேன். அதைவிட நெருக்கமான, நமது மண்ணில் நிகழும் சாதிக் கொடுமையை இந்த "தேர்ந்த ஒப்பாரி வைப்பவர்கள்" கதை தருகின்றதே, ஏன் இவர்கள் இதைச் சேர்க்கவில்லை' என்று கேட்டான். ‘இந்தக் கதையைப் பாடத்தில் வைத்தால், யாழ்ப்பாணத்தவர்களின் பெருமையை நினைத்து நாடு முழுதும் சிரித்துவிடுமே, அந்த அவமானத்தில் என் கதையைச் சேர்க்கவில்லையோ தெரியாது' என்று சொல்லிப் புன்னகைத்தேன்.

இளங்கோ, எனது எழுத்து வாழ்க்கை இரண்டு தமிழ் எழுத்தாளர்களைத் தனக்கு நினைவுபடுத்துகிறது என்பான். நான் எழுதிய முப்பது கதைகளால், ஒருவகையில் தமிழில் இருபத்து நான்கு கதைகளை மட்டுமே எழுதிய மெளனி தனக்கு ஞாபகத்துக்கு வருகின்றதென்பான் அவன். அதுபோலவே தனது சொந்த நாடு திரும்பியபின் சிறந்த இரண்டு படைப்புக்களை எழுதிவிட்டு பிறகு வேறெதுவும் எழுதாது மறைந்து போன ப.சிங்காரத்தைப் போல, நானும் யாழ்ப்பாணம் திரும்பி கொஞ்சக் காலம் எழுதிவிட்டு பின்னர் ஒன்றுமே எழுதாமல் உறங்குநிலைக்குப் போனதும் ஒன்றெனப் போல இருக்கின்றது என்பான்.

உண்மையில் எனக்கு தமிழில் அவ்வளவான விரிந்த வாசிப்பு இல்லை. ஒருமுறை வாசகர் ஒருவரோடு நான் மதுவருந்திக் கொண்டிருந்தபோது, 'நீங்கள் திருவள்ளுவரைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?' எனக் கேட்டேன். பிறகு 'தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்/தோன்றலின் தோன்றாமை நன்று' என்ற குறளைச் சொல்லி பொருள் என்னவெனக் கேட்டேன். அதன் பொருளை அந்த வாசகர் விரித்துச் சொன்னபோது, நான் 'இக்குறள் நாஸிசத்தை அல்லவா பிரச்சாரம் செய்கிறது. ஹிட்லருக்கும், வள்ளுவருக்கும் இந்த விடயத்தில் பெரிதாக வித்தியாசமில்லை' என்று சொன்னேன். அந்த வாசகருக்கு அது அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் நான் இரண்டாம் உலகமகாயுத்தத்தை நேரடியாக இங்கிலாந்திலிருந்து பார்த்தவன். ஒரு தனிப்பட்ட மனிதனான ஹிட்லரின் பேராசையால் எத்தனை இலட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக இறந்திருக்கின்றார்கள். புகழ் என்பதே மாயை. அது ஒருவரின் தன்முனைப்பை இன்னுமின்னும் உச்சத்தில் கொண்டுபோய் இறுதியில் பாதாளத்தில் தள்ளிவிடும் என்பதற்கு வரலாற்றில் எத்தனையோ பேர் உதாரணங்களாக இருக்கின்றனர் அல்லவா?

இந்த வாசகரை நான் முதன்முதலில் சந்தித்ததும் நினைவில் இருக்கிறது. ஏஜேயும், ஜீவாவும் பக்கத்தில் இருக்க, ஒரு சுவரில் காலை வைத்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். ஜீவாதான், வருகின்றவர் சாமுவேல், காலை ஒழுங்காக எடுத்து விட்டிட்டு, சிகரெட்டைத் தூர எறி என்று சொல்லியிருக்கின்றார். இவன் வேண்டா வெறுப்பாக இரண்டையும் செய்வதை நான் தூரத்தில் வரும்போதே அவதானித்தேன். எனக்கு வெளியில் எங்கு போவதென்றாலும் நேர்த்தியாக ஆடை அணிந்து போகவேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். அதிலும் யாழ்ப்பாண வெக்கைக்கு தொடர்பேயில்லாத ஒரு ஸ்காப்ஃவை என் கழுத்தில் சுற்றிக் கொண்டுதான் வெளிக்கிடுவேன்.

அன்று யாழ் நகரசபை முன்றலில் ஏதோ கார்னிவல் நடப்பதாய் விளம்பரம் வந்திருந்தது. நாங்கள் அனைவரும் இதற்காகத்தான் போய்க் கொண்டிருந்தோம். அந்த மக்கள் திரளுக்குள் தொலைந்துபோகாமல் நாங்கள் ஓரமாக நடைபாதையின் அருகில் ஒதுங்கி நின்றோம். நான் வழமை போல, போகின்ற, வருகின்ற பெண்களை கண்களால் ஆராதித்தபடி இருந்தேன்.  சட்டென்று, 'புனிதரோ, அல்லாதவரோ அவர்களுக்கும் ஓர் இதயம் இருக்கின்றது என்கின்ற விசுவாசம் நம்மவர்களுக்கு இருக்குமானால் அழகினை இரசிப்பதில் தவறொன்றுமில்லை' என்று சொன்னேன். 'உண்மைதான், அப்படி இரசிக்கலாம், ஆனால் அது பெண்களுக்கு இடைஞ்சல் கொடுப்பதாக இருக்கக் கூடாது' என்று அந்த வாசகர் சொன்னார். 'ஆ, அதேதான், சரியாகச் சொன்னீர்கள், நீங்கள்தான் என்னை நன்றாகப் புரிந்துகொண்ட வாசகர்' என்று அவரின் முதுகைத் தட்டி நான் பாராட்டினேன்.

*

எனது கடைசி பத்து வருடங்கள் மிகக் கடுமையாக இருந்தது. நான் குணப்படுத்த முடியாத ஒரு நோயோடு போராட வேண்டியிருந்தது. ஏஜே தனித்து வாழ்ந்ததால், அவரை எப்படி கிருஷ்ணகுமார்  குடும்பம் கைவிடாது காத்து நின்றதோ, அப்படிதான் என்னையும் என் மனைவி வைத்துக் காப்பாற்றினார். நான் திருமணம் ஆனவுடன் யாழ் நகரை விட்டு இன்னொரு தொலைவான நகருக்கு இடம்பெயர்ந்திருந்தேன். எங்கள் பூர்விக வேம்படிப் பாடசாலை அருகில் இருந்த -  என் கதைகளில் எதற்கு வீண் பிரச்சினை என்று இதைப் புளியடிப் பாடசாலை என்று மாற்றியிருப்பேன் - வீட்டை விட்டு, மனைவி கட்டிய வீட்டில் நாங்கள் புதுமனை புகுந்திருந்தோம். அங்கே நண்பர்கள் வருவது குறைவாக இருக்கும். பக்கத்தில் நிம்மதியாக இருந்து மது அருந்துவதற்குப் பெரிதாக நல்லதொரு பாரும் இருக்கவில்லை.

அத்தோடு என் கண்களின் பார்வையும் மங்கி ஒருவித இருளுக்குள் நான் அமிழத் தொடங்கியிருந்தேன். பார்வையை முற்றாக இழக்க முன்னர், எப்படியாவது என் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பை வெளியிட வேண்டுமென்று தொகுக்கப்படாத கதைகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டிருந்தேன்.

என் உடல்நிலை அறிந்து ஏஜேயும் ஜீவாவும் ஒருநாள் வந்திருந்தனர். இரண்டாவது தொகுப்பை வெளியிட இரண்டு பேரும் தங்களால் இயன்றளவு உதவுவதாக உறுதியளித்தனர். என் மனைவியும் அதை விரைவில் வெளியிடவேண்டும் என்று விரும்பியிருந்தார். புத்தகச் செலவை எப்படியேனும் மனைவி ஏற்றுக்கொள்கின்றேன் என்றபோதும், நான் தான் ஜீவாவிடம், 'இந்த வீட்டுக்காக வாங்கிய கடனை மட்டுமில்லை எனக்கான மருத்துவச் செலவுகளையும் அவள்தான் அடைத்துக் கொண்டிருக்கின்றாள், பாவம் அவள்' என்று சொன்னேன். கடைசியில் என் புதுக் கதைகளின் தொகுப்பு வந்தபோது, அதை என் மனைவிக்குத்தான் சமர்ப்பித்திருந்தேன்.

ஒருமுறை கொழும்பிலிருந்து வெளிவரும் ஏதோ ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் யாரோ  என்னைப் பற்றி எழுதியபோது, 'சாமுவேலுக்கு இப்போது கிறுக்குப் பிடித்துவிட்டது' என்று எழுதியிருந்தார்கள். நான் அதை வாசித்தவுடன் சிரித்துவிட்டேன். 'இப்போதுதான் கிறுக்குப் பிடித்தது என்பது தவறு, எப்போதுமே நான் கிறுக்கன்' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். இல்லாவிட்டால் ஒருவன் இங்கிலாந்தில் சட்டத்தில் பட்டம் பெற்றபோதும், எழுத்துத்தான் வாழ்க்கையில் பெரும் விடுதலை என்று எல்லாவற்றையும் துறந்து எழுதப் போயிருப்பானா? நல்லதொரு வாழ்க்கை வேண்டுமென்றால் இங்கிலாந்திலேயே தங்கியிருக்க மாட்டேனா. இலங்கைக்கு வந்த பிறகாவது ஒழுங்காக வழக்கறிஞராகப் பணியாற்றி மற்றவர்களைப் போல ஓர் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்திருக்க மாட்டேனா என்ன?

ஆனால் பாருங்கள். நானொரு வழக்கறிஞராகவோ, இல்லை அத்தொழிலில் தேர்ந்த என் தந்தையைப் போல ஒரு நீதிபதியாகக் கூட வந்திருக்கலாம். அப்படி வந்திருந்தால் நீங்கள் என்னை நினைவில் வைத்திருப்பீர்களா? நான் இறந்து ஒரு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொருத்தன் என்னை ஞாபகம் வைத்து ஒரு கதையை நனவிடை உத்தியில் எழுதிக் கொண்டிருப்பானா?

எழுத்துத்தானே என்னை இன்னும் உயிர்ப்புடன் காலத்தோடு கரைந்துபோகாது வைத்திருக்கின்றது. அதில் நான் தோற்றுப்போனவனாக, தொடர்ச்சியாக எழுதாதவனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் முப்பது கதைகள் மட்டும் எழுதிய ஒருவனை இந்தச் சமூகம் மறக்காமல் அவன் பிறந்த நூறாண்டுக்குப் பிறகு ஞாபகத்தில் வைத்திருப்பது வியப்பானதுதானே.

இறுதியில் என் நேசத்துக்குரிய ஏஜே எனக்காக எழுதிய அஞ்சலி வார்த்தைகளோடு முடிக்கலாமென நினைக்கின்றேன். 'சாமுவேல் செய்த தவறு அவர் தாயகம் திரும்பி வந்ததுதான் என்று நான் சிலவேளைகளில் நினைப்பதுண்டு. ஆனால் தன்னல நோக்கோடு பார்க்கையில் அத்'தவறு' எங்களுக்கு எவ்வளவு ஆதாயமாயிற்று' என்று சொல்லியிருப்பார். ஏஜே ஒரு புனிதமான, யாரையும் காயப்படுத்தாத ஆத்மா. அவனின் இந்தச் சொற்ப வார்த்தைகள் நான் கல்லறைக்குள் நிம்மதியாக உறங்கப் போதும்.

என் கதைகளில் இலங்கையைப் பின்னணியாக வைத்த கதைகளை விட, இங்கிலாந்தைப் பின்புலமாக வைத்து எழுதிய கதைகள்தான் தனக்கு அதிகம் பிடிக்கும் என்கின்ற இளங்கோவிடம், 'சாமுவேலிடம் உனக்கு அதிகம் பிடித்தது' என்னவெனக் கேட்டால், உடனேயே 'வேறென்ன, பெண்களை ஆறவமர இரசிக்கும் அவரின் அந்த அழகியல்தான் என்னை அதிகம் கவர்ந்தது’ என்று ஒருகணம் கூட தயங்காமல் சொல்வான். என்னை இவ்வாறாக நினைவு கொண்டால் கூட போதுமானதுதான்.

சிலவேளைகளில் இந்த வாழ்க்கை என்பது சின்னஞ்சிறு அழகிய தருணங்களின் கலவையால் காவியச் சுவையின் உச்சத்தை அடையக் கூடியது என்பதைக் கண்டிருப்பீர்கள். அதைத்தான் என் எழுத்துக்களின் உள்ளே ஓடும் நதியாக மறைத்தும் வைத்திருந்திருக்கின்றேன். ஒரு காடோ காதலோ எந்தக் கணத்தில் முழுதாக மலர்கின்றது என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அந்த முகிழ்தல் என்பது ஓர் அற்புதம். நம் அகமெங்கும் அந்த உணர்வுப்பிரகாரம் இதழ்களாய் விரிக்கும் அனுபவத்துக்காகத்தான் நாங்கள் மனிதராகப் பிறந்து வருகின்றோமோ என்று கூட நான் சிலவேளைகளில் நினைப்பதுண்டு.

அரை நூற்றாண்டுக்கு முன்பாக இவ்வுலக வாழ்விலிருந்து நீங்கிப் போன ஒருவனின் கதையை அல்லவா நீங்கள் இப்போது வாசித்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் வாழ்க்கையில் அகமகிழும் தருணங்கள் இன்னுமின்னும் நிறையட்டும். நீங்கள் வாழ்கின்ற நிலத்து மழையாகவோ அல்லது பனியாகவோ என் ஆசிர்வாதங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன். நனைய மறந்துவிடாதீர்கள். அந்தத் துளிகளில் இருப்பவை என்னைப் போன்று வாழ்ந்து முடித்தவர்களின் சின்னஞ்சிறு ஞாபகங்கள்.

***

நன்றி: 'காலம்' இதழ் - 63
ஓவியம்: Soorya TK

 

0 comments: