கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 145

Saturday, April 11, 2026

 

பா.திருச்செந்தாழையின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரேதம்' 2008இல் வந்தபோது அன்றையகாலங்களில் அதை வாசித்து ஒரு சிறுகுறிப்பை எழுதியிருக்கின்றேன். என் நினைவு சரியாக இருக்குமெனில் அதன் முன்னுரையில் வாசித்து எழுத ஓர் அமைதியான சூழ்நிலையும், எதிர்காலம் குறித்து அச்சப்படுத்தாத ஓர் குடும்பமும் அமைந்தால் நன்றாக இருக்குமென்று திருச்செந்தாழை கவலைப்பட்டு எழுதியதாக ஞாபகம் இருக்கிறது. திருச்செந்தாழையின் முதல் தொகுப்பு பலரால் கவனப்படுத்தப்பட்ட ஒரு தொகுப்பு. தொடக்கநிலை எழுத்தாளர் ஒருவருக்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்காத வரவேற்பு திருச்செந்தாழைக்குக் கிடைத்தபோதும் அவரின் அடுத்த தொகுப்பான 'விலாஸம்' வர கிட்டத்தட்ட 14 வருடங்கள் எடுத்திருந்தன.  



இந்த இடைவெளியை தமிழ்ச்சூழலில் இருந்து எழுதும் பலருக்கு ஏன் நிகழ்கின்றது என்று புரிந்துகொள்ள முடிந்தாலும் இது பெரும் உறங்குநிலைக் காலம்தான். ஆனாலும் திருச்செந்தாழையின் இரண்டாம் தொகுப்பான 'விலாஸம்' வந்தபோது அதற்குரிய வரவேற்பைத் தமிழ்ச்சூழலில் கொடுத்திருக்கின்றது. இப்போது 'நெருப்பில் வளர்ந்தவை' என்கின்ற திருச்செந்தாழையின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கின்றது.

திருச்செந்தாழையின் கதைகளில் அவர் பரபரப்பு தரும் கதைகளையோ அல்லது இறுதியில் அதிர்ச்சி தரும் முடிவுகளையோ எளிதில் தவிர்த்துவிடுகின்றார். மிக நிதானமாகவே தனது கதைகளை உருவாக்கியபடி, ஒரு சூழலை நமக்கு விரிவாக தர முயற்சிக்கின்றார். ஒருவகையில் நான் திருச்செந்தாழையின் கதைகளை 'கணங்களை உறையவைக்கும் மாயஜாலம்' எனச் சொல்வேன்.

ஏன் இந்த உறையவைக்கும் கணங்கள்  எப்போது மாயஜாலமாகின்றது என்றால் அவர் அதை கவித்துவ மொழியில் விரித்துச் சொல்லும்போதாகும்.  பலமாக இருக்கும் அதுவே சிலவேளைகளில் பலவீனமாகப் போகும் அபாயம் இருந்தாலும் அதுவே திருச்செந்தாழையின் தனித்துவமாக அமைகின்றது. கவித்துவ மொழியாக இருப்பதால் அது நீண்ட வாக்கியங்களாகவும் பல கதைகளில் இயல்பாக வந்துவிடுகின்றது. 'வருகை' கதையில் 'சிறியதும் பெரியதுமான எண்ணற்ற கடைகள் மஞ்சள் குண்டுபல்புகளுக்குக் கீழே விழித்துக் கொள்கிற யானைக்கல் பழமண்டியின் உலகம் வெற்றிலைக் கறை படிந்த சிரிப்புகளை, நிதானிக்கக் கூட நேரமில்லாத முகத்தைக் கிழித்துவிடுவதுபோலப் பழங்களும் கிழங்குகளும் நிலக்கடலையும் நிறைந்த மூடைகளைத் தூக்கி உரசி விரைகின்ற சுமைகளால் ஆனது' என திருச்செந்தாழை எழுதிச் செல்கின்றார். ஒருவகையில் இது ஆங்கிலத்தில் எழுதும் அனுக் அருட்பிரகாசத்தின் எழுத்து நடையை நினைவுபடுத்தியது. அவரும் இவ்வாறு நீண்ட வாக்கியங்களால் புனைவுகளை எழுத விரும்புகின்ற ஒருவர்

இன்னொரு இடத்தில் 'கண்ணாடியால் தங்களை வேய்ந்து எண்ணிலா கட்டிடங்கள் எழுந்து நின்றாலும், எதிர்பாராது எப்போதேனும் மின்சாரம் போய்ச் சட்டெனச் சூழ்ந்து கொளிற இருளில், சரசரவெனப் பல நூற்றாண்டுகள் பின் நகர்ந்து தனது புராதனமான முகத்தோடு கோயில் கோபுரங்கள் நிழலுருவாக எழுந்து வருகிற மதுரையின் தொன்மைக்குள் வைகை மட்டுமே காலத்தில் தொலைந்தவள்' என்று எழுதப்பட்டிருக்கும்.

இவ்வாறான நீண்ட வாக்கியங்களின் அழகென்பது கவித்துவத்தோடு அதற்குள் பல விடயங்களை/நிகழ்வுகளைப் புகுத்துவதென்பது. அதேவேளை இந்த நீண்டவாக்கியங்களால் சிலவேளைகளில் Lost in translation மாதிரி, வாசகர்கள் சொல்லவந்ததன்  முக்கிய விடயத்தை தவறவிட்டு காட்சிப் படிமங்களில் மட்டும்  சிக்கி விடுவதாக அமைந்துவிடவும் கூடும்.

'நெருப்பில் வளர்பவை' கதைத் தொகுப்பின் கதைகளை விரித்து சொல்லப்போவதில்லை. அவை புத்துணர்ச்சி தருகின்ற கதை மொழி. திருச்செந்தாழை இந்தக் கதைகள் மீது சாதாரண மனிதர்களையே உலாவ விடுகின்றார். அம்மானிடர் மனம் பிறழ்ந்தவர்களாகவோ, திருமணம் தாண்டிய உறவுகளில் திளைப்பவர்களாகவோ, வியாபாரத்தில் நொடித்துப் போனவர்களாக இருந்தாலும், அவர்களுக்கென்று அமைந்துவிட்ட வாழ்க்கையை, அவர்களின் சூழலுக்குள் நின்று எவ்வித தீர்ப்புக்களையும் அவசரமாக வழங்கிவிடாது நிதானமாகப் பார்க்க நம்மை அழைக்கின்றார்.

அப்பாவுக்கு இருக்கும் இன்னொரு உறவை அறிந்தும் அறியாமலும் விளங்கிக் கொள்ளும் ஒரு சிறுவனின் கதையைச் சொல்லும் 'அப்பா' கதையும், 'வியாபாரத்தில் தோற்றுப்போய் மனைவியின் குடும்பத்தில் மதிப்பற்றிருக்கும் மருமகனை ஏதோ ஒருவகையில் புரிந்துகொள்ளும் மாமியைப் பற்றிய 'ஒரு பிடி வெளிச்சமும்', தகப்பன் இறந்துபோக அந்தக் கடைக்கு வியாபாரம் சொல்லிக்கொடுக்க வரும் திருமணமானவன் மீது சோதிக்கு வரும் உறவு குறித்து விபரிக்கும் 'நிறைசூலி'யும்,  இரண்டு பிள்ளைகளைப் பெற்று நன்றாக இருந்து தாயிற்கு சட்டென்று மனப்பிறழ்வு வந்து அவர் அடிக்கடி வீட்டை விட்டு ஓடுவதும் திரும்பலுமாக இருக்க அவரைப் புரிந்து கொள்ளும் லோகுவின் அவனின் இரண்டு பிள்ளைகளைப் பற்றிச் சொல்லும் 'வருகை'யும், மலமள்ளிப் பிழைக்கும் பூம்பிடாகை பாட்டியின் பேர்த்தி எப்படி அவமானங்களைத் தாங்கி தன்னையே நெருப்பாக்கி பிறர் தன்னை எவ்விதத்திலும் தீண்டவிடாதிருக்கும் 'சாம்பலில் கனல்வது'ம் இத்தொகுப்பில் என்னை அதிகம் கவர்ந்த கதைகள்.

இந்தவருடம் வெளிவந்த சிறுகதைத் தொகுப்புக்களில் இதை முதன்மையான ஒன்றாக மட்டுமில்லை, தமிழ் இலக்கிய உலகு பெருமைகொள்ளக்கூடிய ஒரு படைப்பாகவும் இதை முன்மொழிவேன்.



***

 


0 comments: