கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 147

Monday, April 13, 2026

 

பத்து வருடங்களுக்கு முன் எம்.டி.முத்துக்குமாரசுவாமியின் (எம்.டி.எம்)'நிலவொளி எனும் இரகசிய துணை'  வெளிவந்திருந்தது. அந்தத் தொகுப்பிலிருக்கும் கட்டுரைகள் சிலதைச் சேர்த்தும், வேறு புதிய பலதைச் சேர்த்தும் அண்மையில் வெளிவந்த தொகுப்புதான் எம்.டி.எம்மின் 'காட்டிலோர் பொந்தினில் வைத்தேன்'. இதில் நாற்பது கலை இலக்கிய கட்டுரைகள் இருக்கின்றன. திரைப்படங்கள் சார்ந்த ஒரு சில  கட்டுரைகளைத் தவிர்த்துப் பார்த்தால் மிகுதி அனைத்தும் எழுத்தாளர்களையும், அவர்களின் முக்கிய நூல்களையும் அறிமுகப்படுத்தும்/உசாவும் ஆக்கங்களென இத்தொகுப்பைச் சொல்லலாம்.

இன்றைக்கு தமிழில் முன்னெப்போதும் இல்லாதவளவுக்கு மொழிபெயர்ப்பு நூல்கள் வருகின்றபோதும், அவை பெரும்பாலும் புனைவு சார்ந்தே இருக்கின்றன. மேலும் தமிழ்ச் சிற்றிதழ் மரபு கிட்டத்தட்டவே மறைந்துபோய்விட்ட காலத்தில் சமகாலத்தில் உலக இலக்கியப்பரப்பில் நிகழும் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் ஆழமான கட்டுரைகள் அரிதாகவே வாசிக்கக் கிடைக்கின்றன. அப்படி எழுதப்படும் கட்டுரைகளையும் பெரும்பாலும் ஒற்றைப்படையாக 'இரசனை விமர்சனத்துக்குள்'  கொண்டுவந்து வரும் எத்தனங்களே இருக்கின்றன.


இந்த ஆபத்தை எம்.டி.எம், பாரதியார் குறித்த ஓர் உரையாடலில் '‘இரசனை விமர்சனம் என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அரசியலை அப்படியே இலக்கியத்திற்குள் கொண்டு வருகிற விமர்சன முறையாகும்’ என்று 'நிலவொளி எனும் இரகசிய துணை'யிலே எச்சரித்திருக்கின்றார். இந்த இரசனை விமர்சனம் மட்டுமில்லை,  வழக்கொழிந்த இலக்கிய விமர்சன முறைகளையும் தமிழுக்கு இப்போதுதான் புதிதாய்க் கண்டுபிடித்த பாவனையில் எழுதுகின்றனர். அதில் நம் 'இரசனை விமர்சனக் குழு' கண்டுபிடித்த ஒருவர் ஹெரால்ட் ப்ளூம்.
 

 
'யூத மத நூல்களில் கொடுக்கப்பட்ட மேதைகளுக்கான குணநலன்களை வைத்து ஷேக்ஸ்பியரும் மற்றவர்களும் மேதைகள் என ப்ளூம் விளக்குகிறாராம். பாயிண்ட் 1, பாயிண்ட் 2 என box checking  வேலையைச் செய்திருக்கிறார் ப்ளூம். ஷேக்ஸ்பியரின் மேதமை என்ன என்பது ப்ளூம் லிஸ்ட் இல்லாமலேயே நமக்குத் தெரியாதா என்ன? ப்ளூம் ஒரு கற்றுச் சொல்லி, சார்த்தர் அசல் சிந்தனையாளர். அசல் சிந்தனையாளர்கள் சிந்தனை முறையையே மாற்றுகிறார்கள்;புதுப்பிக்கிறார்கள். கற்றுச்சொல்லிகள் தண்டி தண்டியான புத்தகங்களினால் கலாசார மேலாண்மையை நிறுவுகிறார்கள் (ப. 94).' என எம்.டி.எம் எழுதுகின்றார்.

இதை அவர் எங்கே எழுதிச் செல்கின்றார் என்பதையும் பார்க்க வேண்டும். 'சார்த்தரின் No Exit நாடகத்தில் வரும்  Other is Hell ஏன் மிகவும் பிற்போக்கானது' என்ற கட்டுரையில் அதை விமர்சித்துவிட்டுத்தான் சார்த்தரின் மேதமையை அவரின் தத்துவச் சறுக்கலுக்கிடையில் வைத்து எம்.டி.எம் மதிப்பிடுகிறார். அப்படி சார்த்தர் சில இடங்களில் சறுக்கியிருந்தாலும், இந்த ஜெரால்ட் ப்ளூம் போன்றவர்களைப் போலவன்றி சார்த்தர் அசல் சிந்தனையாளரே என்று நிரூபிக்கவும் எம்.டி.எம் செய்கின்றார். இதைத்தான் அசலான வாசிப்புகளும், மதிப்பாய்வும் செய்யும்.

*

இந்த நூலிலிருக்கும் நாற்பது கட்டுரைகளில் முதன்மைப் படைப்பாளிகளைத் தவிர்த்து, எம்.டி.எம் அவற்றில் 'உப பாத்திரங்களாக' குறிப்பிடும் பிற எழுத்தாளர்களின் படைப்புக்களையும் நாம் தேடி நமது வாசிப்பை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் (நாம் இந்தளவு காலமாக எழுதுகின்றோம், இந்தளவு புத்தகங்களை வெளியிட்டிருக்கின்றோம்) ஒருபுறம் பிரகடனங்களை  வெளியிட்டு தம்மைத்தானே  சிறந்த எழுத்தாளர்கள் அறிவித்துக்கொள்ளும் புகழ் விரும்பிகளும், இன்னொருபுறம் தமது ஆசான்களின் நீண்டகால உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அசட்டைசெய்து தாங்களும் ஆசான்களாகிவிட்டோமென 'இந்த இலக்கியம் என் இரத்தத்தையே பலி கேட்கிறது' என அலட்டும் (முக்கியமாக யாழ்ப்பாண/புலம்பெயர்) கத்துக்குட்டிகளுக்கும் இடையில், நீண்ட வரலாறுடைய தமிழ் இலக்கியம் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. உலக இலக்கியப் பரிட்சயம் சிறிதும் இல்லாது, ஒரு சிலர் சொல்வதையே மனப்பாடம் செய்து கிணற்றுத்தவளைகளாக இருக்கும் இவர்களைப் பார்க்க உண்மையிலே கவலையாகத்தான் இருக்கிறது.  

பரவாயில்லை இன்னும் கற்றுக்கொள்ளவும், தன்முனைப்பின் உணர்கொம்புகளைச் சுருட்டிக் கொள்ளவும் சந்தர்ப்பம் இருக்கின்றது என்பதற்குத்தான், இப்படி 'காட்டிலோர் பொந்தினில் வைத்தேன்' போன்ற அல்புனைவு நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன, தயவுசெய்து கவனியுங்கள் எனச் சொல்கிறேன்.  உலக இலக்கியம் எங்கோ போய்க்கொண்டிருக்கும்போது நீங்கள் எவ்வளவு கட்டுப்பெட்டித்தனமாக 'இரசனை விமர்சனம்' மட்டுமே போதுமென இலக்கியத்தை அதன் வழிமட்டும் வாசிப்பது நியாயமா என்று கொஞ்சம் பரிசீலனை செய்யுங்களென அவர்களிடம் மன்றாட வேண்டியிருக்கின்றது.

இந்த நூலில் புத்தகங்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் எவ்வளவு முக்கியமானதோ அந்தளவுக்கு திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகளும் வசீகரிப்பவை. நோர்வேஜிய நெறியாளாரான யோக்கிம் திரீயரின் 'The worst person in the world' திரைப்படத்தின் கட்டுரையில் எம்.டி.எம் பலமுறை சென்றிருந்தும் பிடிக்காத நோர்வே இந்தப் படத்தின் மூலம் வேறொரு பார்வையைத் தந்ததென்று ஆராய்கிறார். அதுபோல அப்பாஸ் கியரோஸ்டாமியின் 'The wind will carry us' குறித்த கட்டுரையை வாசித்தபோது, ஏற்கனவெ இத்திரைப்படத்தைப் பார்த்தபோதும், மீண்டும் இக்கட்டுரை நினைவுபடுத்தும் ஈரான்/குர்டிஷ் நிலப்பரப்பைப் பார்க்கும் உந்துதல் வந்து அத்திரைப்படத்தை மீளவும்  நான் பார்க்கத் தொடங்கியிருந்தேன்.

ஏற்கனவே வாசித்திருந்த கோபே அப்பேயின் 'மணற்குன்றுகளின் பெண்', ஜூலியா கிறிஸ்தவாவின் கவித்துவ மொழியில் புரட்சி' , காவபட்டாவின் 'நாவல்களை முன்வைத்து' போன்றவற்றை இன்னொருமுறை வாசித்தபோதும், அவை புத்துணர்ச்சி தருகின்ற ஆக்கங்களாகவே எனக்கு இருந்தன.

காஃப்காவின் பாதிப்பு எப்படி மார்க்வெஸின் படைப்புக்களில் இருந்தது என்பதை 'காலராக் காலத்தில் காதல்' நாவலை முன்வைத்து எம்.டி.எம் எழுதியிருப்பது கவனத்துக்குரியது. அதன் முடிவில் 'மார்க்வெஸின் நாவல்கள் தமிழுக்கு அறிமுகமாகி முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட பின்பு இப்போது பின்னோக்கிப் பார்க்கும் நான் காஃப்காவின் செல்வாக்கு மார்க்வெஸின் மேல் இருந்தது நமக்கு அறிமுக நிலையிலே தெரிய வந்திருந்தால் தமிழிலக்கியத்தின் போக்கு வேறு திசையில் சென்றிருக்குமோ என வியக்கின்றேன் (ப 41)' என எம்.டி.எம் எழுதியிருப்பது சுவாரசியமான உரையாடலுக்குரியது.

நானும் ஒரான் பாமுக்கின் அல்புனைவுக் கட்டுரைகளை வாசித்தபோது அவருக்கு ரஷ்ய பேரிலக்கியங்கள் (முக்கியமாக தால்ஸ்தயேவ்ஸ்கி) மீது பெரு மதிப்பிலிருந்தாலும், அவர் எப்படி அதன் பாதிப்புக்களிலிருந்து துருக்கிக்குரியதான தனித்துவமான நாவல்களை உருவாக்கினார் என்று வியப்பதுண்டு. நாம் தமிழில் ரஷ்யப் பேரிலக்கியங்களைப் பேசியவளவுக்கு அப்படி தமிழ்ச்சூழலுக்குரிய தனித்துவமான பேரிலக்கியங்களை அதன் பாதிப்பில் இருந்து கூட, உலக இலக்கியப் பரப்பில் வைத்துப் பேச  ஏன் இன்னும் உருவாக்கவில்லை என்று யோசித்திருக்கிறேன்.

எம்.டி.எம் எழுதிய 'நிலவொளி எனும் இரகசிய துணை' நூல் எனக்கு மிகப்பிடித்தமான நூல்களில் ஒன்றெனவும், எப்போது மனம் சோர்வுற்றாலும் அதை எடுத்து வாசிப்பதற்காக அருகிலேயே வைத்திருப்பேன் எனவும் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றேன். அதன் இன்னொரு நீட்சித்த வடிவமென 'காட்டிலோர் பொந்தினில் வைத்தேனை'யும்' நான் நினைவில் வைத்திருக்க இதில் அரிய பல ஆக்கங்கள் இருக்கின்றன என்பது மகிழ்ச்சி தருகின்றது.

***

 

0 comments: