இன்று ஓரு சுவாரசியமான செய்தியை வாசித்தேன்.

டிரம்பின் செல்வாக்கால் கனடாவில் மத்திய மாகாணங்களில் ஒன்றான அல்பேர்ட்டா கனடாவில்  இருந்து பிரிந்து போவதற்கான 'தில்லுமுல்லு'களைச் செய்து கொண்டிருக்கின்றது. இன்னொருவகையில் கனடாவில் இருந்து பிரிந்து அமெரிக்காவின் ஒரு மாநிலமாக (annex) மாறுவது அவர்களின் விருப்பு எனச் சொல்லலாம். ஏற்கனவே டிரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக அறிவித்து அவ்வப்போது அதகளம் செய்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்த விடயத்தை வைத்து, எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம் கணக்காய் கனடாவில் வசிக்காத, பலர் முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் ஊடாகப் பணம் சம்பாதிக்கின்றனர் எனச் சொல்கின்றார்கள். அதாவது இந்த தனிநாட்டுப் பிரச்சினையில் முன்னணியில் நிற்கும் சமூகவலைத்தளங்களில் இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இருப்பவர்கள் தங்களைக் கனடியர்களாகக் காட்டிக் கொண்டு இந்த 'எரிகிற விடயங்களில்' தாங்களும் பங்கேற்பதாகச் சொல்லி பணம் சம்பாதிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.

Uploaded Image


இந்தச் செய்தியில் இந்தோனேசியாவில் நூடில்ஸ் விற்கின்ற ஒரு பெண்மணி, கனடாவில் இருப்பதாகவும், அல்பேர்டாவின் பிரிவினைக்காக தெருவில் நின்று பிரச்சாரம் செய்தபோது தனக்கு கல்லெறியப்பட்டதாகவும் அல்பேர்டாவில் நடந்த  ஓர் சம்பவத்தை இன்னும் தீவிரமாக்கி சமூகவலைத்தளத்தில் போட, அவருக்கு ஆயிரக்கணக்கில் 'லைக்கிட்டு' ஆதரவளிக்கின்றனர் என்பதை ஆதாரத்தோடு இந்தச் செய்தி நிரூபிக்கின்றது.

கனடாவில், முகநூல் பக்கங்களில் செய்தி நிறுவங்களின் செய்திகளைப் பகிர முடியாத தடை இருப்பதால், இங்கே அந்தச் செய்தியைப் பகிர முடியவில்லை. இதன் முழுச்செய்தி அறிய விரும்புவர்கள் 'Facebook is paying people overseas promoting Alberta separatism' என்ற தலைப்பில் கூகிளிட்டுத் தேடினால் அதை வாசிக்கலாம். அதன் உபதலைப்பு இது CBC uncovers 14 accounts from India, Pakistan, Indonesia posting on popular Alberta separatist groups.

ஆக, இன்று செய்திகளின் உண்மைத்தன்மை என்பதே கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது என்பதோடு, ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையை உலகில் எங்கோ தொலைவில் இருப்பவர் கூட தீர்மானிக்க முடியும் என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம். இது ஒரு சாதாரண மனிதரைப் பற்றிய செய்தி. இவர்களைப் போன்றோர் முகநூல் கொடுக்கும் சிறுதொகைப் பணத்துக்காக இந்த விடயங்களைச் செய்கின்றார்கள். ஆகையால் இஃதொரு பெரிய விடயமில்லை.

ஆனால் இப்படி ஒரு சாதாரண மனிதரே ஒரு செய்தியின் narrativeஐ மாற்றமுடியுமென்றால், அரசுக்கள்/பெருநிறுவனங்கள் உள்ளிட்ட அதிகாரம் மிகுந்தவர்கள் எதையெல்லாம் சமகாலத்தில் செய்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கத்தான் அதிக அச்சம் வருகின்றது.

***