கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Little Children - திரைப்படம்

Friday, January 12, 2007

lt1

உறவுகள்; முகிழும்போது அழகாகவும், நாட்கள் செல்லச் செல்ல அது சுவராசியமற்றுப் போவதன் அவஸ்தையையும் Little Children படத்தில் இயல்பான நிகழ்வுகளின் மூலம் காட்சிப்படுத்தியுள்ளார்கள். படத்தைப் பார்த்துக்கொண்டு போகும் எவருக்கும் மனித விழுமியங்களின் பெறுமதி எத்தகையென்ற கேள்விகள் எழும்பத்தான் செய்யும். Children என்ற ஏற்கனவே வெளிவந்த நாவலைத் தழுவி, Little Children ஐ படமாக்கியுள்ளார்கள். கதை நம் அநேகருக்குப் பரீட்சயமாய் இருக்கக்கூடிய பூங்கா, நீச்சல் தடாகம், விளையாட்டுத்திடல் போன்றவற்றைச் சுற்றி நிகழ்கின்றது.

மாஸுஸட்டில் நகரில் மசாசூஸெட்ஸ் மாநிலத்தின் நகரொன்றில், நன்றாக உணவூட்டப்பட்டு, நன்றாக பராமரிக்கப்பட்டு ஹார்வெர்ட் வளாகம் செல்லும் கனவுகளுடன் குழந்தைகளை வளர்க்கும் ஒரு புறநகர்ப்பகுதியில் கதை ஆரம்பிக்கின்றது. நகரில் பல பெண்கள் வேலைக்குச் செல்லாமல் குழந்தைகளை வளர்ப்பது மட்டுமே அவர்களின் முக்கிய வாழ்வின் பகுதியாக இருக்கின்றது. இவ்வாறு இருக்கும் பெண்களுடன் சாராவும் பூங்காவுக்கு தனது மகளுடன் வருகின்றார். சாரா மற்றப்பெண்களைப்போல எல்லாவற்றிலும் perfect யாய் இருக்கமுடியாது அவஸ்தைப்படும் ஒரு இல்லத்தரசி.

அந்தப்பூங்காவுக்கு - லோயருக்கான bar exam-ல் தொடர்ந்து தோற்றுக்கொண்டு வீட்டில் வேலையற்று இருக்கும் பிரட் தனது மகனுடன் அடிக்கடி வருகின்றார். அவருடன் -அறிமுகஞ்செய்து கொள்ளாமல்- தங்களுக்குள் அவரை the prom king என்று அழைத்து பிற பெண்கள் இரசித்துக்கொண்டிருப்பதை சாரா கண்டு வியப்படைகின்றார். ஒரு கட்டத்தில் அந்தப்பெண்களில் ஒருவர் சாராவிடம் தொலைபேசி நம்பரை எடுத்தால் இவ்வளவு பணம் தருகின்றேன் என்று பெட் கட்டுகின்றார்.

lt2

இவ்வாறு விளையாட்டில் ஆரம்பித்த அறிமுகம் பிறகு இருவரின் தனிமையாலும் நெருக்கம் கூடுகின்றது. சாரா ஆங்கில இலக்கியத்தில் மாஸ்ரர்ஸ் செய்துவிட்டு தனது கனவுகள் கருக குழந்தையுடன் வீட்டுப் பெண்ணானவர். அவரின் கணவரோ இன்ரநெட்டில் ஃபோர்னோ படங்கள் பார்த்து தன்னைத் திருப்படுத்துபவர். பிரட்டின் மனைவி ஒரு பிரபலயம் பெற்ற ஆவணப்பட இயக்குநனராய் இருக்கின்றார். சாராவுக்கு சலித்துப்போன -ஒரேநேர்கோட்டில் நகரும் - வாழ்க்கை முறையில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியாக பிரட்டின் உறவு இருக்கின்றது. குழந்தைகளைக் கவனிப்பதற்காய் நட்பாகின்றோம் என்றபடியே Adultery(பிறன்மனை விழைதல்?) சாராவுக்கும் பிரட்டிற்குமிடையில் நிகழ்கின்றது.

இதற்கிடையில் இன்னொரு கிளைக்கதையாக, குழந்தைகளை பாலியல் சேட்டைகளுக்கு ஆளாக்கிய ரொனி என்பவர் சிறையிலிருந்து வர அந்நகர் பீதியுறத்தொடங்குகின்றது. ஒரு முன்னாள் பொலிஸ், பெற்றோருக்கான நலன்புரிச்சங்கம் அமைத்து, ரொனியை பின் தொடர்ந்தும், தொந்தரவு செய்தும் கொண்டிருக்கின்றார், ரொனி தன்பாட்டில் தனது தாயாருடன் வாழ விரும்பும்போதும். குழந்தைகளில் பாலியல் சேட்டை செய்தவரின் சிறைவாசத்திற்குப் பின்பான வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை இந்தப்படம் இயன்றளவு யதார்த்தமாய் காட்ட முயற்சிக்கின்றது. இப்படியே தனது மகன் இருந்தால் எல்லோரும் தன் மகனை ஒதுக்கிவைத்துவிடுவார்கள் என்று நினைத்து தனது மகனுக்கு ரொனியின் தாயார் டேட்டிங் செய்ய ஒரு பெண்ணை சம்மதிக்க வைக்கின்றார். எனினும் நினைத்த மாதிரி அந்த டேட்டிங் வெற்றிபெறாமல் ஒரு சந்திப்போடு குலைந்துவிடுகின்றது.

இதற்கிடையில் சாரா, பெண்கள் புத்தகம் வாசிக்கும் ஒரு கிளப்பில் புத்தகமொன்றை (Madame Bovary ?) பெண்களுடன் விவாதிக்கின்றார். அந்தப்புத்தகத்தின் கதையில் வரும் பெண்ணைப் பற்றிய சித்தரிப்புக்களும், சாராவின் adulteryயும் ஒரே சந்தர்ப்பத்தில் மாறி மாறி காட்சிப்படுத்தப்படும். புத்தக வசனங்களும், சாராவின் intimacy யுமென ஒரு கவிதைக்கு நிகர்த்து அழகாக அது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். புத்தக விவாத்தின்போது சாராவின் தோழியொருவர், நாவலில் வரும் பெண் செய்தது பெருந்துரோகம் என்கின்றார். சாரா அதை மறுத்து, its not cheating, its the hunger...hunger for alternative ...-சந்தோசத்தை தேடும் தப்பித்தல்- என்று விடாது விவாதிக்கின்றார். தொடர்ந்து நிகழும் adultery யில் பிரட்டின் மனைவியிற்கு சாரா-பிரட் உறவின்மீது சந்தேகம் வருகின்றது. இதற்கிடையில் ரொனியைக் கண்காணிக்கின்றேன் என்று முன்னாள் போலிஸ் போய் ஒரு சர்ச்சையில் ஈடுபட்டு, தனது மகனைத் தொந்தரவுசெய்யவேண்டாம் என்று மகனுக்காய் வாதிடும் ரொனியின் தாயைக் கோபத்தில் கீழே தள்ளிவிடுகின்றார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவ்விரவே ரொனியின் வயது முதிர்ந்த தாய் காலமாகின்றார். ரொனி தன்னை இதுவரை காலமும் கவனமாய்ப் பார்த்துகொண்டிருந்த தன் தாய் இறந்துவிட்டாரே என்று கதறத்தொடங்குகின்றார்.

அதேநாளிலேயே, சாராவும் பிரட்டும் தங்கள் வீடுகளை விட்டு ஓடி (துணைகளைப் புறக்கணித்து) வேறு நகருக்குச் சென்று சேர்ந்து வாழ்வதென முடிவெடுக்கின்றார்கள். சாரா தனது குழந்தையுடன் - தானும் பிரட்டும் முதன்முதலில் சந்திதத பூங்காவுக்கு- இரவு நேரம் வீட்டைவிட்டு ஓடி வருகின்றார். அதேசமயம் தனது தாய் கொல்லப்பட்டுவிட்டார் என்ற பதைபதைப்பில் கத்தியொன்றுடன் வருகின்ற ரொனி, சாராவையும் அவரது குழந்தையையும் காண்கின்றார்.

lt3

படம் மிக இயல்பாய்- சிலவேளைகளில் அலுப்புத்தட்டுவதுமாதிரியும்- ஆறுதலாய் நகர்கின்றது. அடிக்கடி சடுதியான திருப்பங்கள் நடக்கும் என்று மனநிலையில் இந்தப்படத்தைப் பார்க்க விரும்புவர்கள் இந்தப்படத்தைப் பார்க்காது இருப்பதுதான் நல்லது. இங்கே சாரா - பிரட்டின் adultery குறித்து விதந்தோ அல்லது அதற்கான காரணங்களை அதிகம் நியாயப்படுத்தியோ இந்தப்படம் விரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான -நமக்குத் தெரிந்த சுற்றாடலில்- எத்தனையோ விடயங்கள் நமது அறிதல்களுக்கும் பகுத்தாய்ந்து பார்ப்பதற்கும் அப்பாற்பட்டு நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன என்பதைத்தான் நெறியாள்கையாளர் பார்ப்பவரிடையே முக்கிய செய்தியாக சொல்ல விரும்புகின்றார் என்று நினைக்கின்றேன். இந்த உறவு (adultery) எத்தனை காலம் வரை நீடிக்கப்போகின்றதோ என்று பார்ப்பவரிடையே கேள்வி எழுவது இயல்பானது. எனினும் திரையில் வரும் பாத்திரங்கள் அவ்வாறான பிரக்ஞை எதுவுமின்றி தமக்கான அலுப்பான யதார்த்ததிலிருந்து உடனடியாக தப்புகின்ற நிகழ்காலத்தையே முதன்மையாக கொள்கின்றன. அதனால்தான் சிலவேளைகளில் கவனம் இல்லாமல் கூட தமக்கிடையிலான உறவை பொது இடங்களில் கூட சாராவும்- பிரட்டும் வெளிப்படத் தவறவில்லை என்பதை நெறியாள்கையாளர் சூசகமாய் காட்சிப்படுத்துகின்றார்.

இது சில மனிதர்களின் வெட்டப்பட்ட வாழ்வியலின் சிறுதுண்டு. காலம் குறித்த மிகுந்த கவனத்துடன் எடுக்கப்பட்டிருகின்றது. திரும்பத் திரும்ப குறிப்பிட்ட பின்னணியில் கதை மாறி மாறி நகர்ந்தபடி இருக்கின்றது. அடிக்கடி சாரா பிரட்டிடம், இப்படியேன் உன் அன்பான/அழகான மனைவியிற்கு துரோகம் செய்துகொண்டிருக்கின்றாய் என்று ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பது, சாராவால் கூட இந்த adulteryஐ முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதாகவும் புரிந்துகொள்ளலாம்.

அதேசமயம், பாலியல் சேட்டை செய்து தண்டனை பெற்ற ஒரு நபரை (ரொனியை) மீண்டும் மீண்டும் குற்றவாளிக்குவதற்கு சமூகம் எவ்வாறான அழுத்தங்களை கொடுத்துக்கொண்டிருக்கின்றன என்பது மிக நுட்பமாய் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ரொனியைக் கண்காணிக்கின்றேன் என்று வெளிக்கிடும் முன்னாள் பொலிஸ் கூட, கடமை நேரத்தின்போது யாரையோ தவறாக சுட்டுக்கொன்று பதவி பறிக்கப்பட்டவர் என்பது ஒரு irony தான். சாதாரண திரைப்படங்களுக்குரிய திருப்பங்கள் எதுவுமே இல்லாது,இறுதி முடிவு கூட இயல்பாய் முடிகின்றது. ஆனால், மனித உறவுகளின் சிக்கலானதும் அழுத்தமானதுமான நிலை குறித்து எமக்குள்ளேதான் கேள்விகள் நிரம்பத் தொடங்குகின்றன.

(2)
Kate Winslet எனக்குப் பிடித்த நடிகைளில் ஒருவர். இந்தப்படத்திலும் அருமையாக நடித்துள்ளார். சில நாட்களுக்குமுன் ரொரண்டோ வந்த அவரிடம் நேர்காணல் செய்யப்பட்டபோது, இந்தப்படத்தில் நடிப்பதற்காய் தான் நாவலை வாசித்து அந்த பாத்திரத்தை முழுதாய் தனக்குள் உள்வாங்கிவிட்டுத்தான் நடித்தேன் என்று குறிப்பிட்டிருந்தார். அந்தப்பாத்திரம் (சாரா) குறித்து என்ன கருத்து உங்களுக்கிருகின்றது என்று கேட்கப்பட்டபோது, அவ்வாறான ஒரு அலுப்பூட்டக்கூடிய வாழ்வை நான் தேர்ந்தெடுக்கமாட்டேன் என்றாலும், அவ்வாறு சந்தர்ப்ப சூழ்நிலைக்குள் சிக்கியிருக்கும் பெண்கள் திரைப்படத்தில் காட்டப்பட்டது மாதிரித்தான் யதார்த்தத்திலிருந்து தப்பிக்க அநேகமாய் முயல்கின்றனர் என்பதையும் மறுக்கமுடியாது எனவும் கூறியிருந்தார். சாராவின் குழந்தையாக நடித்த சிறுமியும் மிக நன்றாக நடித்திருப்பார். பலரால் சிலாகிக்கப்பட்ட, In the bedroom என்ற படத்தை எடுத்த Todd Field ன் இரண்டாவது படம் இது.

5 comments:

பிச்சைப்பாத்திரம் said...

thanks for the intro.

1/13/2007 12:01:00 AM
-/பெயரிலி. said...

டிஜே
விரிவான படப்பார்வை. நன்றி. விழியமாக வருகையிலே பார்த்துக்கொண்டாலாச்சு.
மாஸுஸட்டில் நகரில்? இதுக்கு ஒரு நாய்க்கடி கடிக்கவேணும். ;-)

1/13/2007 01:02:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி சுரேஷ் கண்ணன்.
....
/மாஸுஸட்டில் நகரில்? /?
பெயரிலி, எழுத்துப்பிழையா இல்லை வேறெதுவா என்று முழிக்கின்றேன் :-(?

1/14/2007 09:46:00 AM
-/பெயரிலி. said...

டிசே
'மசாசூஸெட்டில் நகரில்' என்று எழுதியிருந்தீர்கள்; மசாசூஸெட்ஸ் மாநிலமாச்சே என்று சொன்னேன். மசாசூஸெட்ஸ் மாநிலத்தின் நகரெனச் சொல்ல வந்தீர்களென நினைக்கிறேன்

1/16/2007 04:04:00 PM
இளங்கோ-டிசே said...

பொஸ்ரனுக்கு வந்துகூட எனக்கு உந்த மயக்கம் தீரவில்லை போல :-(. திருந்த்தத்திற்கு நன்றி பெயரிலி.

1/17/2007 09:01:00 AM