கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பனிக்காலத் தனிமை - 04

Monday, January 27, 2025


1. 


ல வருடங்களுக்கு முன் தியானத்துக்காக ஸென் நிலையம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். காலையில் தியானப்பயிற்சியை ஓர் ஆசிரியர் தந்துகொண்டிருந்தார். ஒரு எண்ணத்துக்கும் இன்னொரு எண்ணத்துக்குமான இடைவெளியைக் கவனிப்பதன் அவசியம் பற்றி அவர் தியான வகுப்பின் பின்னரான கேள்வி-பதிலில் சொல்லிக் கொண்டிருந்தார். இலட்சக்கணக்கில் மின்னல்களாய் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை 'உறையவைத்தால்', எழுதுவதில் விருப்பமிருக்கும் என்னால் எப்படி எழுதமுடியும் என்று அப்போது திகைப்பாக இருந்தது. அதை அவரிடம் கேட்கவும் செய்தேன். ஓரு படைப்பாளி வாசித்து, நினைவில் வைத்து, அலசி ஆராய்ந்து என்று, எண்ணங்களோடுதானே எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கவேண்டும் என்று அப்போது நினைத்தேன்.

நாம் எண்ணம் (thought) என்று நினைக்கும் ஒன்றுக்கு அப்பால் ஆழமான சுயமொன்று (self) இருக்கின்றது. அதை அறிந்துகொள்ளல் அவ்வளவு எளிதுமல்ல. எண்ணங்களின் கூட்டுத்தொகைதான் சுயமென்று தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது.

நமக்குள் எண்ணம் ஒன்று உதிக்கும்போது, நாம் அந்த எண்ணத்தை மட்டும் கவனிப்பதில்லை. அத்துடன் அந்த எண்ணத்தை கவனிக்கும் இன்னொருவராகவும் (watcher) இருப்பதைச் சிலவேளைகளில் பார்த்திருப்போம். இங்கேதான் பிரக்ஞையின் (consciousness) புதிய பரிணாமம் வந்து சேர்கின்றது.

நீங்கள் உங்கள் எண்ணத்தை உற்றுக் கவனிக்கும்போது, பிரக்ஞையின் இருப்பை உணர்ந்திருக்கலாம். பிரக்ஞையானது, எண்ணத்தை விட, இன்னும் ஆழமான ஓரிடத்திலோ அல்லது அதற்கு அப்பாலோ இருக்கும்.

மேலும் கடந்த காலத்துக்கும், எதிர் காலத்துக்கு அலைந்து கொண்டிருக்கும் எண்ணங்களே, எங்களை நிகழ்காலத்தில் இருக்க முடியாது செய்கின்றன. ஆனால் இந்த எண்ணம் தோன்றும்போது, நாம் பிரக்ஞையின் இருப்பை அதேகணத்தில் உணர்ந்தால், எண்ணமானது தனது வலுவை இழக்கின்றது.

அப்படி எண்ணமானது வலுவிழக்கும்போது, நமது உளவோட்டத்தில் (mental stream) தொடர்ச்சியில்லாது போகின்றது. அப்போது நாம் முதன்முறையாக மனமில்லாத (no-mind) இடைவெளியை உணர்கின்றோம். முதலில் இந்த இடைவெளி எண்ணங்களிடையே சிறியதாக இருக்கக்கூடும். பின்னர் தியானம் போன்ற பயிற்சிகளின் மூலம் அந்த இடைவெளியை இன்னும் அதிகரித்தும் செல்லலாம். இந்த 'மனமற்ற' இடைவெளியில் நிசப்தமும் அமைதியும் உங்களுக்குள் ஊடுருவதை உணரமுடியும்.

இதை இவ்வாறு வார்த்தைகளில் எளிதில் சொல்லிவிட முடியும். ஆனால் இதை உணர்வதற்கான அல்லது தெளிவதற்கான பயணம் என்பது நீண்டது.

2.

பு
த்தரின் சூன்யம் என்பது பலவிதங்களில் புரிந்து கொள்ளமுடியும். மேற்கில் ஸென் வந்தபோது வெறுமையும், சூனியமும் ஒன்றைப் போல பல இடங்களில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது. சூன்யம் என்பது எதுவோ, ஆனால் நிச்சயம் வெறுமையோ/வெற்றிடமோ அல்ல. புத்தர் ஞானமடைதலை துன்பத்திலிருந்து விடுதலை (no suffering) என்று சொன்னவர். ஆனால் துன்பத்திலிருந்து விடுதலையான பின் அந்த நிலை எப்படியென்று அவர் வெளிப்படையாகச் சொல்லியவரல்ல. அந்த இடத்தில் -புத்தர் எப்படி இறப்பின் பின் என்ன நடக்கும் எனக் கேட்கும்போது அமைதி காத்தாரோ- அப்படியே துன்பத்திலிருந்து விடுதலையடைந்த பின் அது எப்படியிருக்கும் என்பது குறித்தும் அமைதி காத்தவர். அந்த நிலை புத்தரால் விபரிக்க முடியாதது என்றல்ல அர்த்தம்.

துன்பத்திலிருந்து விடுதலை என்பதை என்னவென்பதை நீங்களே உங்கள் இயல்பிலே அறியுங்கள் என்றே அது குறித்துப் பேசாது அமைதி காத்தவர். இல்லாவிட்டால் நாங்கள் எப்படி புத்தரை திருவுருவாக்கி, அவரில் அடையாளங்களையும்/குறியீடுகளையும் சுமத்தி கடவுளாக்கிவிட்டோமோ, அப்படியே 'ஞானமடைதலும்' வெறும் வெற்று வார்த்தைகளுக்குள் எவ்வித அர்த்தமோ/விடுதலையோ தராது சொற்களிலும்/பேச்சிலும் அர்த்தமில்லாது உறைந்து போயிருக்கும்.

இவ்வாறு எண்ணங்களை அவதானிக்கும் ஒரு கவனிப்பாளராக (watcher) மாறி, நமது பிரக்ஞையை அறிவதைப் போல, இன்னொரு விதமாகவும் நாம் இந்த எண்ணங்களிலிருந்து விடுதலை அடையவும் முடியும். அது நாம் தொடர்ந்து நிகழில் இருந்து கொண்டிருப்பது. அப்படி நிகழில் இருக்குந்தோறும் நாம் மனதில் ஒரு இடைவெளியை எண்ணங்களிடையே உருவாக்க முடியும். இதற்கான முக்கிய ஒரு பாதையாக தியானம் இருக்கின்றது. எந்த ஒரு வேலையைச் செய்தாலும் வேறு எந்த எண்ணமும் இல்லாது நிகழிலேயே திருப்ப திருப்ப இருப்பது.

மனமானது நம்மைக் காப்பாற்றும் ஒரு இயந்திரம் எனச் சொல்லலாம். அது மற்ற மனங்களைத் தாக்குவது, தற்காப்புச் செய்வது என்பதோடு (தகவல்களை) பல இடங்களில் இருந்து சேர்த்து, பின்னர் சேமித்து வைத்து அலசி ஆராயச் செய்கின்றது. அது ஒருவகையில் நல்லது, ஆனால் அது சிருஷ்டிகரமானது அல்ல.

எண்ணங்களின் இடைவெளியை காண்பதென்பது, சிந்திப்பதை நிறுத்தி வைப்பது போல் ஆகாதா என்றொரு கேள்வி நமக்குள் எழக்கூடும். எப்படி நான் தியான வகுப்பிற்குப் போனபோது எண்ணங்கள் இல்லாது எழுத முடியுமா என்று எனக்குச் சந்தேகம் வந்ததோ, அது போல உங்களுக்கும் தோன்றலாம். எண்ணமானது நம்மை எப்போதும் ஆக்கிரமித்திருப்பதால்தான் நமக்கு பல பிரச்சினைகள் வருகின்றன. பிரக்ஞையை நாம் உணரும்போது, எண்ணமானது அதன் ஒரு பகுதியாகின்றது.

எண்ணமானது ஒருபோதும் பிரக்ஞையாவது இல்லை ஆனால் பிரக்ஞையின் ஒரு பகுதியாக எண்ணம் மாறக்கூடியது. ஆகவே நாம் விழிப்புடன் இருக்கும்போது, பிரக்ஞையின் மூலம் எண்ணங்களை வேண்டியபோது மட்டும் 'பயன்படுத்தி'க் கொள்ளலாம். மற்ற நேரங்களில் எப்போதும் அலட்டிக் கொண்டிருக்கும் எண்ணங்களை 'சற்று அமைதியாய் இரும் பிள்ளாய்' என ஓரு மூலையில் வைத்துக் கொள்ளலாம்.

இப்படி எழுதுவதெல்லாம் குழப்பமானது என்பதும் எனக்குப் புரிகிறது. அதைவிட புத்தரைக் கடவுளாக்கி வணங்கும் பெளத்தர்களில் பெரும்பாலானோர் கூட, புத்தரைப் போல தங்களால் இந்தப் பிறப்பில் ஞானமடைதல் முடியாது என்றுதான் நம்புகின்றார்கள் எனச் சொல்லப்படுகின்றது. ஒருவகையில் இது புத்தர் கற்பித்தவற்றைக்கு நேரெதிர் திசையில் செல்வதைப் போன்றது.

மதம் என்ற கற்பிதம் மனிதரால் உருவாக்கப்பட்டது என்பதை உணராததால்தான் ஒவ்வொரு மதமும் தானே சிறந்ததெனச் சொல்லி சர்ச்சரவுகளில் ஈடுபடுகின்றது. இவற்றையெல்லாம் கண்டு வெறுத்துத்தான் நீட்ஷே போன்றவர்கள் கடவுள் இறந்துவிட்டார் என்று அறிவித்து புதிய பாதைகளைத் தேட முனைந்திருந்தார்கள்.

எல்லா அசலான கலைஞர்களும், படைப்பாளிகளும், அவர்கள் உணர்ந்தோ அல்லது உணராமலோ இந்த மனதைத்தாண்டிய, மனமில்லாத (no mind) வெற்றிடத்தில் வந்த அமைதியை உணர்ந்திருப்பார்கள். அதுவே அவர்களது சிறந்த படைப்புக்களைச் சிருஷ்டிக்க வைத்திருக்கவும் கூடும். பல எழுத்தாளர்கள் தமது எழுத்துக்கள் தம்மையறியாமல் எழுதிச் சென்றது என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.


உண்மையில் அவர்கள் அந்த சிருஷ்டியில் இருக்கும்போது, எண்ணங்களின் உலகிற்கு அப்பாலான மனமற்ற வெளியில் (no mind) அலைந்திருக்கின்றனர். அதுவே அவர்களின் மாபெரும் படைப்புக்களை உருவாக்க உதவியிருக்கின்றது. மிகச் சிறந்த உதாரணமாக இளையராஜாவிடம் எப்படி இந்த இசையை அமைத்தீர்களென்று பலர் அவரிடம் வியந்து கேட்கும்போது, அவர் சொல்கின்ற பதில் அவர் அந்த 'மனமற்ற வெளி'யில் அலைந்தபோது உருவாக்கிய இசைக்கோர்ப்புகள் என்பதை நாம் எளிதில் உணரமுடியும். அதை ஏதோ ஒருவகையில் அவரும் அனுபவிப்பதால்தான் ஒரு வெளிநாட்டு நிகழ்வொன்றில், நான் நாளை இல்லாமல் போனாலும் என் பாடல்கள் உங்களுக்காக ஒலிக்கும் என்று சொல்லிவிட்டு, சட்டென்று இனி எனக்கு இன்னொரு பிறப்பு இல்லை என்றும் தெளிவாகச் சொல்கின்றார்.

தன்னிலை உணர்தல் (self realization) இந்த வாழ்க்கைக் காலத்தில் நிகழுமா, நிகழாதா என்பதைவிட, அப்படி நம்மை உணரும் சாத்தியம் எப்போதேனும் இருக்கலாமென்ற சுவாரசியத்துடன், இந்தப் பயணத்தைச் செய்து பார்த்தல் எனக்குப் பிடித்தமானது என்பதையும் இந்தக்கணத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.



3.

 
ருவருக்கு முப்பதாவது பிறந்தநாள் வருகின்றது. அதுவரை அவர் மிகுந்த பதகளிப்புடன் வாழ்ந்து வருகின்றார். அத்தோடு அவருக்கு அடிக்கடி தற்கொலை செய்யும் எண்ணங்களும் வந்து கொண்டிருக்கின்றன. ஒருநாள் காலையில் எழும்பும்போது இந்த வாழ்வின் வெறுமை அவரைத் துரத்தியடிக்கின்றது. அவர் இனி வாழ்வது அர்த்தமில்லை என்று நினைக்கின்றார். அந்நியமாதலின் பெரும் அவஸ்தையை அன்று அவர் உணர்கின்றார்.

'என்னால் இனி ஒருபோதும் என்னுடன் வாழ முடியாது' ('I cannot live with myself any longer') என்கின்ற எண்ணம் திருப்பத் திருப்ப அவரின் மனதில் சொல்லப்படுகின்றது. அப்போது அவருக்குள் எங்கிருந்தோ ஓர் எதிர்பாராத சிந்தனை வருகின்றது. இப்படி ஒரு குரல் சொல்லிக் கொண்டிருந்தால், 'நான் ஒருவரா அல்லது இருவரா? நான் என்னோடு வாழ முடியாது என்று சொன்னால், நிச்சயமாக அது நான் ஒருவரல்ல, இருவர்' என நினைக்கின்றார். 'நான்' (I) மற்றும் 'சுயம்' (Self) இங்கே இருப்பின், யாரோ ஒன்றுதான் அசல் என்று மேலும் யோசிக்கின்றார்.

இந்த 'தன்னிலை உணர்ந்த' அந்தப் பொழுதில் தனது மனது நிறுத்தப்பட்டதை அவர் அவதானிக்கின்றார். 'நான் அவ்வளவு விழிப்புடன் இருந்தேன், எந்த எண்ணமும் எனக்கு அப்போது இருக்கவில்லை' என்கின்றார். அந்த நேரத்தில் ஒரு வித்தியாசமான சக்தி தன்னுடலில் மெதுவாக ஆரம்பித்து வேகமடைவதை அவர் பார்க்கின்றார். அது என்னை மிகவும் அச்சுறுத்தியது. என் உடல் அதிர்வில் நடுநடுங்கத் தொடங்கியது. அப்போது 'ஒன்றையும் எதிர்க்காதே' என்கின்ற வார்த்தைகளைத் திருப்பத் திருப்பக் கேட்டேன், அது யாரோ என் நெஞ்சுக்குள் இருந்து பேசுவதைப் போல இருந்தது. நான் ஒரு பெரும் வெற்றிடத்தால் உறிஞ்சப்படுவதை உணர்ந்தேன். அந்த வெற்றிடமானது வெளியில் இருந்தது அல்ல, எனக்குள் இருந்த வெற்றிடத்தாலேயே நான் இழுக்கப்பட்டேன். சட்டென்று எனது எல்லாப் பயங்களும் இல்லாது போயின. நான் அந்த வெற்றிடத்திற்குள் என்னை விழ அனுமதித்தேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று எந்த நினைவும் தனக்கு இல்லை என்கின்றார்.

பிறகு சுயநினைவு வந்தபோது, நான் பறவைகளின் கீச்சிடலைக் கேட்டேன். ஆனால் அப்படியொரு குரலை நான் இதுவரைக்கும் கேட்டதில்லை. நான் அப்போதும் கண்ணை மூடியபடியே இருந்தேன். எனக்கு ஒரு வைடூழியத்தின் காட்சி தோன்றியது. ஏதோ வைரம் சத்தம் போட்டதுபோல அந்தப் பறவைகளின் குரல் கேட்டது.

அந்த நாளில் மட்டுமில்லை, பிறகு கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் இப்படியான மனோநிலையில் நானிருந்தேன். எல்லாமே மிகத் துல்லியமாகத் தெரிந்தன, கேட்டன. எந்தத் தொந்தரவுமில்லாது அந்தக் காலங்களில் நான் அமைதியையும், பேரின்பத்தையும் அனுபவித்தேன். அதன்பிறகு அந்த அனுபவம் இல்லாது போயிருக்கலாம் அல்லது அதுவே என் இயல்பான நிலையாக இப்போது மாறியுமிருக்கலாம் என்கின்றார்.

இப்படிச் சொல்கின்றவர் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அவ்வளவு மகிழ்ச்சியுடன் பூங்காவின் பெஞ்சுகளில் இருந்து காலத்தைக் கழித்தேன் என்கின்றார். எனக்கு இந்த உலகில் எதுவுமே அப்போது தேவையாக இருக்கவும் இல்லை. அந்த வெறுமனே வேடிக்கை பார்த்த அந்த 2 வருடங்களில், எனக்கு எந்த உறவும் இல்லை, எந்த வேலையும் இல்லை, எந்த வீடும் இல்லை, சமூகம் சொல்லும் எந்த அடையாளமும் எனக்கிருக்கவில்லை, ஆனாலும் மகிழ்ச்சியாக இருந்தேன்' என்கின்றார்.

தனக்குள் ஏதோ ஒரு வித்தியாசமான மாற்றம் நடந்தது என்பதை அறிந்தபோதும், அது என்னவென்று விளங்கிக்கொள்ள பல வருடங்கள் ஆனது என்றும், அதை தனது ஆன்மீக ஆசிரியர்களும், ஆன்மீகப் பிரதிகளும் பின்னர் விளங்கப்படுத்தின/ர் என்கின்றார். இவ்வாறு சொல்கின்றவரே இன்று முக்கியமான ஒரு ஆன்மீக ஆசிரியராக இருக்கும் Eckhart Tolle. அவர் தற்போது கனடாவின் கிழக்குப் பகுதியான வன்கூவரில் வசித்துக் கொண்டிருக்கின்றார்.

இவர் சொல்லும் அனுபவத்துக்கு நிகரானதை விசிறி சாமியார் என அழைக்கப்படும் யோகி ராம்சுரத்குமாரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தபோதும் அறிந்திருக்கின்றேன். விசிறி சாமியாருக்கு ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடித்துவிட்டதென்று அவரை வைத்தியசாலையில் கூட அவரின் குடும்பத்தினர் அனுமதித்திருக்கின்றனர். நம்மைப் போன்றவர்கள் பிறந்த நாடுகளில் 'விழிப்பு' வந்தவுடன் அலைவதைப் போல, மேற்கில் 'தன்னிலை உணர்தல்' நிகழ்ந்தாலும் பரதேசிகளாக அலையமுடியாது. அதனால்தான் இரண்டு வருடமாக பூங்காக்களில் இருந்து இந்த அனுபவத்தை தன்னியல்பிலே எச்கார்ட் அனுபவித்தாரோ தெரியவில்லை.

இது ஒருவரின் அனுபவம். அவரின் பாதையில் அல்லது அவருக்கு சட்டென்று (ஸென் ஆசிரியர்கள் பலருக்கு நிகழ்ந்ததுபோல) தன்னிலை உணர்தல் போல நமக்கும் நடந்துவிடும் என்று நம்பத் தொடங்கினால் அதை போல அபத்தம் இல்லை. இவ்வாறானவர்களின் அனுபவம்/ வாழ்க்கை எல்லாம் நமக்கும் இவை சாத்தியம் என்பதற்காகவே நினைவில் வைத்திருக்கலாமே தவிர, நாம் ஒவ்வொருவரும் நடக்கவேண்டிய பாதை நமக்கு மட்டுமே உரியது. அதனால்தான் புத்தர் துயரங்கள் முடிந்த நிலை எப்படியிருக்கும் என்பது குறித்து எதுவும் பேசாது அமைதி காத்தவர்.

ஒரு எண்ணமும் அதற்கு அடுத்த எண்ணமும் தோன்றும் இடைவெளியைக் கவனிப்பதிலிருந்து எல்லாமே ஆரம்பிக்கின்றது. அப்படி ஒரு எண்ணத்தைக் கவனித்து அனுப்பினாலும், அடுத்த எண்ணம் பின் வீட்டால் நுழையவும் செய்யும். அதையும் 'ஓ.. இது இன்னொரு எண்ணத்தின் சித்து விளையாட்டு' என்று கவனிக்கத் தெரிந்தால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகத் தொடங்கிவிடுவோம், வாழ்க்கை குறித்த தேவையற்ற பயங்களும் குறையத் தொடங்கிவிடும் என நினைப்பதும் இந்த மனம் செய்யும் குறளி வித்தையா அல்லது அதைத்தாண்டிய வேறு எதுவோ?

***************

(எழுத உதவிய நூல் 'The Power of Now')

 

கார்காலக் குறிப்புகள் - 67

Friday, January 24, 2025

 

பேருந்தில், புகையிரதத்தில், புல்வெளியில் புத்தகங்களை வாசிக்கும் பெண்கள் அவ்வளவு அழகாக இருக்கின்றார்கள். அவர்கள் புத்தகங்களில் அமிழ்ந்தபடி அவ்வப்போது சரிந்துவீழும் தலைமயிரை நீவிவிடும்போது நீர்வண்ண ஓவியங்களைப் போல மாறிவிடுகின்றார்கள். அவர்களுக்கு முன்னால் மயில்கள் தோகை விரிப்பதையும், அன்னங்கள் நீந்துவதையும், மான்கள் துள்ளிக்குதிப்பதையும் காண்கின்றேன். நகரம் என்னும் கட்டடக் குவியல்களினிடையே மூச்சுத்திணறும் எனக்குள் ஒரு பெருங் காட்டை வளர்த்து, புத்தகங்களை வாசிக்கும் அவர்களே என்னை நீலவானில் சிறகடிக்க வைக்கின்றார்கள்.

எந்த புத்தகத்தை அவர்கள் வாசிக்கின்றார்கள் என்பதை அறியும் ஆவலை விட, அவர்கள் இப்போது என்ன வகையான உலகில் மிதந்து கொண்டிருப்பார்களென்பதே என் கற்பனையின் நதியிலோடும். ஒரு நூலிற்குள் அவர்கள் அமிழ்ந்து விட்டார்களென்றால், அவர்களையறியாமல் தவழும் புன்னகையிலும், கண்ணிமைகளின் அசைவிலும் எளிதில் கண்டுகொள்ள முடியும். அந்த வாசிப்புப் போதையில் இருந்து அவர்கள் அவ்வளவு எளிதில் இறங்கி நிலத்தில் கால் பாவமாட்டார்கள், தமக்கான தரிப்பிடங்கள் வந்தாலன்றி!

புத்தகங்களை வாசிக்கும் பெண்ணை நேசிக்கும் ஒருவன் அந்தப் பெண்ணை மட்டுமில்லை, அவளோடு சேர்ந்து அவன் இதுவரை அறியாத உலகையும் தரிசிக்கின்றான். அப்போது அவள் மாயக்கம்பளத்தில் அவனை ஏற்றி, மந்திரவாதிகள் மறைத்து வைத்திருக்கும் ஏழு கடல்களையும் ஏழு மலைகளையும் தாண்டி ஒரு இருண்ட குகையில் சிறு சுடரில் ஒளிரும் வாசித்தபடியிருக்கும் அருமருந்தன்ன கிளியொன்றைக் காட்டுகின்றாள். அந்த 'வாராது வந்த மாமணி'க் கிளியைக் கண்டவர்களால் பிறகு புத்தகங்களை நேசிக்காமல் இருக்கவும் முடியாது

புத்தகங்களை வாசிக்கும் பெண்ணொருத்தியைக் காதலிப்பவன், இடையில் பிரிவைச் சந்தித்தாலும், அந்தப் பெண்ணை சுடுசொல் பேசி, ஆழுள்ளத்தால் ஒருபோதும் வெறுக்க முடியாது. அவள் அழைத்துச் செல்ல புத்துலகங்களின் நிமித்தம் ஆராதிப்பவனாக மட்டுமின்றி, அவளின் மீதி வாழ்வையும் ஆசிர்வதிப்பவனாகவும் மாறிவிடுகின்றான்.


புத்தகங்களை வாசிக்கும் பெண்களே இவ்வுலகின் பேரழகிகளென உறுதியாக நம்பும் ஒருவனை நானறிவேன். அவனது ஒவ்வொரு காதலிகளும் புத்தகங்களின் வாசிப்பாலே அவனுக்கு அறிமுகமானவர்கள். பலருக்கு பாடல்களின் மூலம் அவர்களின் கடந்த காதல்களின் நினைவுகள் வருவதைப் போல, இவனுக்கு தன் காதலிகள், அவர்களுக்கு மிகப் பிடித்த புத்தகங்களினூடாக நனவிடை தோய்தலில் இனிபவர்கள் எனச் சொல்வான்.

ஒரு காதலிக்கு வாசிப்பதில் இருக்கும் ஆர்வம், வாசித்ததை எழுதுவதற்குஇருப்பதில்லை. அவள் வாசித்த புத்தகங்களைப் பற்றிய அனுபவத்தைச் சொல்லச் சொல்ல அவன் தட்டச்சு செய்திருக்கின்றான். தஸ்தயேவ்ஸ்கி கூட அன்னாவை தொடக்கத்தில் சம்பளம் கொடுக்கும் ஊழியக்காரியாக வீட்டுக்கு அழைத்து வாழ்க்கைத் துணையாக்கியவர், எனக்கோ அந்தக் கொடுப்பினை கூட இல்லை என்று சலித்தபடி தட்டச்சுச் செய்வான். அதற்கான ஊதியத்தை அவள் பின்னர் தன் விலைமதிப்பற்ற முத்தங்களால் நிகர் செய்வாள்.

இன்னொருத்தியோ நான் எவ்வளவு முக்கியமான நூலை உனக்காக வாசித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றேன். முட்டாளே உனக்கு கொஞ்சம் கூட ரொமான்டிக்கா இருக்க தெரியாதா, தூங்கிவிட்டாயே என்று வாசித்த புத்தகத்தாலேயே அவனுக்கு அடித்ததிருக்கின்றாள். அவள் அப்போது வாசித்துக் காட்டிக் கொண்டிருந்த புத்தகம், Fifty Shades of Grey.

வேறொருத்தியோ தன் உடலை புத்தகங்களால் மட்டும் மூடி, இந்தப் புத்தகங்களின் கதையைச் சரியாகச் சொன்னால் தனது உடலைத் திறக்கும் மர்மத் தாழ்ப்பாள்கள் திறக்கும் என்று சுவாரசியமான வேறொரு பயணத்துக்கு அவனை அழைத்துச் சென்றிருக்கின்றாள்.

புத்தகங்கள் என்ன பிராண வாயுவா? அவையில்லாது உங்களால் வாழ முடியாதா என வாசிக்கும் எந்தப் பெண்ணிடம் அசட்டுத்தனமாய் வினாவாததால்தான் பெண்களில் பலர் அவனுக்கு நெருங்கிய தோழிகளாகவும் ஆகியிருக்கின்றனர் என அவன் சொல்லியிருக்கின்றான்.


நான் இப்போது இவளுக்கு இதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். எழுதிய படைப்பாளியும், அதில் சம்பந்தப்பட்ட பெரும்பாலானவர்களும் மறைந்துவிட்டது மட்டுமில்லை காலம் கூட எங்கையோ நகர்ந்துவிட்டது. ஆனால் மூன்று தசாப்தங்களுக்கு முன் எழுதப்பட்ட ஒரு புத்தகத்திலிருந்து கடந்தகால வரலாறு விரிகின்றது என்கின்றேன். வாழும் மனிதர்கள் அழிவார்கள், அவர்கள் நம்பிய மாபெரும் கனவுகள் கலையலாம்., ஆனால் நம் கைகளில் இருக்கும் புத்தகத்திலிருந்து கடந்தகாலத்து வாழ்வின் பாடல்கள் உயிர்த்தபடியிருக்கின்றார்கள் என்றேன்.

மேலும், இந்நூலோடு சம்பந்தப்பட்ட பல விடயங்களோடு அதை வாசித்த என் பதின்மத்திலிருந்து நானும் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்டிருக்கின்றேன் என இவளிடம் வியந்து கொண்டிருந்தேன். வாசித்த அந்தப் புத்தகம், அந்தப் படைப்பாளி சாவெய்திய காலத்தில் அதே நிலத்தில் இருந்தது, இந்தக் கதையோடு சம்பந்தப்பட்ட முக்கிய ஒருவரைச் சந்தித்தது, 20 வருடங்களுக்கு பின் இந்நூலை மொழிபெயர்ப்பப் போகின்றவருடன் பழகியதென, இப்போது ஆறுதலாக இருந்து இந்த ஒவ்வொரு கண்ணியையும் இணைத்துப் பார்க்க அவ்வளவு வியப்பாக இருக்கின்றது என்றேன்.

சிலவேளைகளில் நாம் சில விடயங்களுக்காக நம்மையறியாமலே தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்போம் (chosen one). இப்போது இந்த புள்ளிகளை எல்லாம் காலத்தின் வெவ்வேறு அடுக்குகளில் வைத்து இணைத்துப் பார்க்கும்போது நீ இந்தப் புத்தகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் போலத் தெரிகிறாய் என்றாள்.

ஒரு புத்தகம் நம்மைத் தேர்ந்தெடுக்குமா தெரியாது. ஆனால் அப்படித் தேர்ந்தெடுத்தால் அது அழைத்துச் செல்லும் பாதைகள் என்பது முடிவுறா புதிர் வட்டங்களாய் திகைக்கவே வைக்கும்.

இப்போது, 'புத்தகங்களை வாசிக்கும் பெண்களை மட்டுமே நேசிக்க முடியும்' என்று சொன்னவனை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது.

அந்தப் பெண்களுக்கு, புத்தகங்களைப் போல அவனும் அப்போது சிறந்த தெரிவுகளில் ஒன்றாக (அல்லது chosen one ஆக) இருந்திருக்கக் கூடும். மேலும் சுவாரசியமாக ஒரு புத்தகத்தைப் போல, அவன் இருந்தவரை அவனை அவர்கள் ஆழமாக நேசிக்கவும் செய்திருக்கக் கூடும்.

எல்லாப் புத்தகங்களும் என்றைக்குமாக வாசிப்பில் நீடித்து நிலைப்பவையும் அல்ல. அப்படி காலம் முழுதும், பெண்களுக்கு பிடித்த ஒரேயொரு புத்தகமாக ஒருவன் மாறுவது என்பது அரிதாக நிகழக்கூடிய ஓர் அதிசயம்.

அதனாலேயே அந்த அதிசயங்களை நிகழ்த்தக்கூடியவர்களை, 'புத்தகம் வாசிக்கும் பேரழகிகள்' என்று நானும் சொல்லிக் கொள்ளப் பிரியப்படுகின்றேன்.

**************

ஓவியம்: இயல்

(Jan 10, 2024)

 

 

பனிக்காலத் தனிமை - 03

Thursday, January 23, 2025

 

ஸென் மரபை ஒரளவு பின் தொடர்பவர்க்கு அது தனக்கான சில வழிமுறைகளை இறுக்கமாக வைத்திருப்பதை அறிவார்கள். அப்படியிருந்தும் அங்கிருந்து விதிவிலக்கான பலர் தோன்றியிருக்கின்றனர். இதில் ஜப்பானில் தோன்றிய ஸென் துறவியான இக்யூ ஸோயுன் சுவாரசியமான ஒருவர். அவர் அன்றைய ஜப்பானிய அரசனுக்கு முறைதவறிப் பிறந்தவர் எனச் சொல்லப்படுகின்றது. இதனால் அவரின் தாயார் ஸோயுனை ஸென் மடலாயத்தில் அவரின் ஐந்து வயதில் ஒப்படைத்துவிட்டுப் போய்விடுகின்றார்.

ஸோயுன் ஸென் மரபுக்குள் கட்டுப்படாத குழப்படிக்கார ஒருவராக மாறுகின்றார். அவரின் பதின்மங்களில் இந்த மடலாயங்கள் பெண்கள் பற்றியும், உடலுறவு குறித்தும் வைத்திருந்த கருத்துக்களை எதிர்க்கின்றார். மேலும் அன்றைய காலங்களில் இப்படி ஸென் கட்டுக்கோப்பாகவும், அதைப் பின்பற்றுவர்கள் இறுக்கமான பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று சொல்லும் ஸென் ஆசிரியர்களின் சிலர் மடலாயங்களின் கடைகோடியில் இரகசியக் காதலிகளை வைத்து உடல்சார்ந்து உறவில் ஈடுபடுவது ஸோயுனுக்கு உவப்பில்லாது இருக்கின்றது.

ஸோயுனைப் பொருத்தவரை இயல்பான ஸென் வாழ்க்கையென்பது மது, தியானம் மட்டுமின்றி பெண்களோடும், ஆண்களோடும் உடலுறவு என்பதாக இருக்கின்றது. ஸென்னில் எதையும் discriminate செய்யக்கூடாதென்பது அடிப்படையான விதிகளில் ஒன்று. அதையதை அப்படியே பார்ப்பதும், ஏற்றுக்கொள்வதும்தான் ஸென் என்கின்றபோது ஏன் இந்த ஸென் ஆசிரியர்கள் இரட்டை வாழ்க்கையை வாழ்கின்றார்கள் என்று எரிச்சலுற்று ஒரு நாடோடி ஸென் ஆசிரியராக ஸோயுன் பிற்காலத்தில் மாறுகின்றார்.

ஸோயுன் ஞானமடைந்து ஒரு ஸென் ஆசிரியராக ஆனபோது அவரின் சீடர்களான பிக்குகள் மட்டுமில்லை, பாலியல் தொழிலாளர்கள், குற்றவாளிகள், கவிஞர்கள், ஓவியர்கள் என்று பலவகைப்பட்டவர்கள் இருந்திருக்கின்றனர்.

இவ்வாறு ஞானமடைவதற்கு முன், அவர் பல்வேறு ஸென் குருக்களிடம் கற்றிருக்கின்றார். கற்கும் இடமெங்கும் முரண்பட்டு வெளியேறும் ஸோயுன் இறுதியின் தனித்து இருக்கும் ஸென் ஆசிரியரான கீனோவிடம் சென்று சேர்கின்றார். கீனோவுக்கு இவர் மட்டுமே ஒரு சீடன். ஸோயுன் இவரோடு இருக்கும்போது ஞானமடைகின்றார்.

குருவோ, இவரைத் தன்னுடைய ஸென் பரம்பரையைக் கொண்டு செல்லவேண்டுமென விரும்புகின்றார். இவரோ ஞானமடைந்ததற்காகக் கொடுத்த தாளை எரித்துவிட்டு மடலாய வாழ்விலிருந்து விடுபட்டு ஒரு நாடோடி ஸென் ஆசிரியராக மாறுகின்றார்.

ஸோயுன் அன்றைய மத்தியகால ஜப்பானுடைய மிகச்சிறந்த புல்லாங்குழல் கலைஞரென மதிப்பிடப்படுகின்றார். அது மட்டுமின்றி ஜப்பானிய தேநீர்க்கலையை மாற்றியமைத்ததோடு, ஒரு கவிஞராக இருந்து பல ஓவியக்கலைஞர்களில் செல்வாக்குச் செலுத்திய ஒருவரெனவும் நினைவு கூரப்படுகின்றார். இவரின் இந்த அலைந்து திரியும் வாழ்க்கை, அவருக்கு 'பைத்தியக்கார மேகம்' (Crazy cloud) என்கின்ற பட்டப்பெயரையும் அவருக்குக் கொடுத்திருந்தது.

ஸோயுன் என்ற பெயரையுடையவர் ஞானமடைந்தபோதே இக்யூ என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கின்றது. இக்யூ என்பதை 'இடைநிறுத்தல்' அல்லது 'அமைதியடைதல்' ( One Pause) என்று அர்த்தம் கொள்ளலாம். இவ்வாறு அலையும் நாடோடியாக இருந்த இக்யூ இதுவரை எவரும் ஸென்னைக் கற்பிக்காத இடங்களுக்குச் செல்வேன் என்று கூறி, பாலியல் தொழில் செய்யப்படும் இடங்களுக்கும், மதுபான விடுதிகளுக்கும் சென்று, அன்றைய காலத்தைய மரபான் ஸென் மடலாயங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தவர்.

அதுமட்டுமின்றி ஸென் மடலாயங்கள் மிக இறுக்கமாகப் பின்பற்றிய பிரமச்சாரியத்தைத் தகர்ந்தெறிந்தவர். கவிதைகள் எழுதும் ஆற்றல் இருந்த இக்யூ அப்படி explicit ஆக உடல் குறித்தும் உடலுறவு குறித்தும் எழுதியிருக்கின்றார்.

'
ஒரு மனிதனின் வேர்' என்கின்ற கவிதை இப்படியாக இருக்கும்.

"
எட்டு அங்குல உறுதி. இது எனது விருப்பமான பொருள்;
நான் இரவில் தனியே இருப்பேன் என்றால், நான் அதை முற்றுமுழுதாக அள்ளிக்கொள்வேன் -
ஒரு அழகான பெண்ணால் நீண்டகாலமாகத் தொடாமல் இது இருக்கின்றது,
என்னுடைய உள்ளாடைக்குள், ஒரு முழுதான பிரபஞ்சம் உள்ளது!"

என்கின்றது அந்தக் கவிதை.

இன்னொரு கவிதையான ' ஒரு பெண்ணின் முயங்கல்' இல்,

'
இதற்கு அசலான வாய் உள்ளது, ஆனால் இருந்தும் பேசமுடியாது
இது மகத்தான வட்டத்தில் மயிர்களால் சூழப்பட்டிருக்கிறது.
ஐம்புல உயிரிகள் முற்றுமுழுதாக இதற்குள் தொலைந்து போவார்கள்
ஆனால் பத்தாயிரம் உலகங்களிலுள்ள அனைத்துப் புத்தர்களினதும் பிறப்பிடமாகவும் இது இருக்கின்றது.'

என்று எழுதியிருக்கின்றார்.

இவ்வாறு உடல்களின் மீது பித்துப்பிடித்திருந்த இக்யூ அவரின் இறுதிக்காலத்தில் மோரி என்கின்ற இளம்பெண்ணின் மீது உக்கிரமான காதல் கொள்கின்றார். மோரியோடு சேர்ந்து வாழ்ந்தே இக்யூ இறுதியில் காலமாகியும் போகின்றார். மோரிக்காக உற்சாகம் ததும்பும் நிறைய காதல் கவிதைகளை இக்யூ எழுதியிருக்கின்றார்.

'
சீமாட்டி மோரிக்கு ஆழ்ந்த செய்ந்நன்றியுடன்"
******
'
மரங்கள் இலைகள் உதிர்க்கையில் நீ எனக்கு ஒரு புதிய வசந்தத்தைக் கொண்டு வந்தாய்.
நீண்ட பசுமைத் துளிர்கள், மலர்ச்சியான பூக்கள், புத்துணர்வான உறுதிமொழி.
மோரி, நான் எப்போதாவது உனக்கான நன்றியை மறப்பேன் என்றால்,
என்றென்றைக்குமாக என்னை நரகத்தில் எரிய விடு.'

ஸென் ஆனது எப்போதும் இயல்பான மனிதராக நம்மை இருக்கச் சொல்லி அடிக்கடி நினைவூட்டுவது. நாங்கள் தவறுகளைச் செயதிருக்கலாம், கோபப்பட்டிருக்கலாம், பதற்றங்களோடு இருந்திருக்கலாம், ஏன் முட்டாள்தனமான செயல்களைச் செய்தும் இருக்கலாம். அதேவேளை ஸென்னைப் பின் தொடர்பவர்களாக இருந்தால், இவற்றையெல்லாம் தியானத்தின்போது நேரடியாகச் சந்தித்து, நாங்கள் இதிலிருந்து விடுபட்டு சுதந்திரத்தையும் பெறமுடியும் என்பதுதான் ஸென்.

ஒருவகையில் இக்யூவின் வாழ்க்கை நமக்கு சித்தர்களின் வாழ்க்கையை நினைவுபடுத்துகின்றது. மரபான முறைமைகளிலிருந்து வெளியேறிய கலகவாதிகளாக மட்டுமின்றி அலைபவர்களாகவும் அவர்களில் பலர் இருந்திருக்கின்றனர். மேலும் பின்னரான காலத்தில் தோன்றிய ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் எப்படி நிறுவனங்களையும், நிறுவனமயப்படுத்துவதையும் விட்டு வெளியேறி நமக்கு ஞானமடையும் பாதைகளைக் காட்டினார்களோ அப்படியே இக்யூவும் மடாலயத்தை விட்டு விலகிய ஒருவராக முன்னொருகாலத்தில் இருந்திருக்கின்றார்.

இக்யூவிடம் நூற்றுக்கணக்கான சீடர்கள் இருந்தாலும் அவர்கள் எவரையும் தனது பரம்பரையைப் பின் தொடர வேண்டுமென என முன்னிறுத்தியது இல்லை. இதனால் இக்யூவிற்குப் பின் அவரின் தலைமுறை என்ற சீடர் பரம்பரை ஒன்று வரலாற்றில் இருக்கவில்லை.

இக்யூ காலமாவதற்கு முன்னர், 'எனது மரணத்தின்பின் உங்களில் சிலர் தியானம் செய்வதற்காக காடுகளையும், மலைகளையும் தேடிச் செல்லக்கூடும், மற்றவர்கள் மதுவருந்தியும், பெண்களின் நெருக்கத்தில் மகிழ்ந்து கொள்ளவும் கூடும். இந்த இரண்டு வகையான ஸென்னும் எனக்கு உவப்பானதே, ஆனால் யாரேனும் மதகுருவாக மாறி, 'ஸென் ஒழுக்கமான பாதை' என உளறினால், நான் எவருக்கும் இப்படிச் சொல்ல அனுமதி கொடுக்கவில்லை என்பதோடு, இப்படி யாரேனும் உளறினால் தயவு செய்து அவர்களை உடனே துரத்தி விடுங்கள்' என்று தனது மாணவர்களிடம் சொல்லியிருக்கின்றார்.

வாழும் காலத்தில் மட்டுமில்லை, மரணத்தைக் கூட , ஸென் காலங்காலமாக கற்பித்திருந்தத அதன் சட்டகங்களைத் தாண்டிப் பார்க்கச் சொன்னவர் இக்யூ.

சிலவேளைகளில் 'என்னை நீங்கள் தெருவில் சந்தித்தால் கொன்றுவிடவேண்டும்' எனச் சொன்ன புத்தர், இக்யூவைப் பார்த்து நான் கூறியதைப் புரிந்துகொண்ட ஓர் அசலான ஞானி இவன் என்று அவரை அரவணைத்து இருக்கக்கூடும். மேலும் ஞானமடைந்தவர்கள் ஒருபோதும் மீண்டும் தோன்றுவதில்லை என்பது ஸென் கூறும் எளிய உண்மையல்லவா?

*********

(
எழுத உதவிய நூல்: 'Zen in the age of anxiety')


பனிக்காலத் தனிமை - 02

Thursday, January 16, 2025

 

ரடி பின்னே வைப்பதென்பது ஒரு அடி முன்னே செல்வதற்கானது
**********************

தாவோயிஸத்தில் ஓர் உரையாடல் தாவோவைப் பற்றி ஆசிரியர் மாணவருக்கிடையில் நிகழ்ந்திருக்கும்.

மாணவர்: தாவோ என்றால் என்ன?
ஆசிரியர்: சாதாரண மனமே தாவோ.
மாணவர்: அப்படியெனில், நாங்கள் அதை நோக்கிப் போகவேண்டுமா அல்லது போகத் தேவையில்லையா?
ஆசிரியர்: நீங்கள் அதை நோக்கிச் சென்றீர்களென்றால், அது உங்களை விட்டு விலகிப் போய்விடும்.
மாணவர்: நாங்கள் முயற்சிக்கவே இல்லையென்றால், பிறகு அதுதான் தாவோ என்பதை, எப்படி அறிவது?
என அந்த உரையாடல் மேலும் நீளும்.

இப்படி தாவோவை அறிவதற்கு எதனையோ இலக்காக வைத்து அதை அடையவேண்டும் என்று இந்த மாணவர் கேட்பது போல, நாமும் எமது வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலக்குகளை நிர்ணயம் செய்து அதை அடைய முயன்றிருப்போம்.  அத்துடன், எமக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில், நாம் எமக்கான இலக்குகளைத் தயார்ப்படுத்தி, அதற்காக கடுமையாக முயற்சிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்படும்போது, எவ்வித குறிக்கோள்களும் இல்லாது ஒரு வாழ்வை வாழ்வதென்பது மிகுந்த அபத்தமாக அல்லவா தெரியும்?

ஆனால் ஸென் நம்மை மாற்றிச் சிந்திக்கச் சொல்கின்றது. ஒன்றை அடைவதற்காய் நீங்கள் எங்கும் செல்லவேண்டியதில்லை என்று ஒவ்வொருபொழுதும் ஞாபகப்படுத்துகிறது. ஸென்னின் அடிப்படைப் பயிற்சியே நமக்குள்ளே இருக்கும் இடைவெளிகளையும், நமக்கும் மற்றவருக்கும் இருக்கும் இடைவெளிகளையும் குறைப்பதாகும் (It is about closing gaps, the gaps between yourself and your Self, between you and me).

இறுதியில் அந்த தாவோ ஆசிரியர், 'தாவோ ஒருபோதும் எதுவென்று அறிவதையோ அல்லது எதுவென்று அறியாதிருப்பதையோ தனக்குரியதாகக் கொள்வதில்லை' என்கின்றார்.

அப்படியெனில் தாவோ என்பது என்னதான் என்று எமக்கு இப்போது இன்னும் குழப்பம் கூடுகின்றது. இதையிதைச் செய்தால் அல்லது இப்படியிப்படிப் போனால் உங்கள் இலக்குகள் அடையப்பட்டுவிடும் என்றோ அல்லது அறிந்துவிடலாமோ என்றோ தாவோயிஸமோ/ஸென்னோ சொல்வதில்லை.

உங்களால் ஒவ்வொரு கணத்திலும் மூழ்கமுடியுமென்றால், நீங்கள் தேடும் புதையல் இங்கேயே இருக்கின்றது. நீங்கள் இதற்காக எங்கேயும் போகத்தேவையில்லை, உங்களுக்கான பொக்கிஷம் உங்கள் வெறும் காலுக்கு அடியில் இருக்கின்றது என்று ஸென் சொல்லும்.

இது உங்களுக்கு பாவ்லோ கொய்லோ எழுதிய 'இரசவாதி'யை (Alchemist) ஞாபகப்படுத்தலாம். அதாவது 'புதையலை' ஒரு பொருளாக/செல்வமாகக் கொண்டீர்கள் எனில்!

ஸ்பெயினின் ஆண்டலூசியாவில் இருந்து எகிப்துக்கு புதையலைத் தேடிச் செல்லும் சாந்தியாகோ இறுதியில் அந்தப் புதையலை எங்கே கண்டடைகின்றான் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

ஸென் சொல்லும் நாம் தேடும் 'பொக்கிஷம்' பொருளை அடிப்படையானதல்ல என்பது உங்களுக்குப் புரியும். இதையே எனது ஆசிரியான தாய், 'I've arrived, I'm home' என்று நாம் தியானம் செய்கையில் மனம் அலைவுறும் ஒவ்வொரு தருணமும் சொல்லி நம்மை நினைவூட்டிக் கொள்ளச் சொல்வார்.

'நூற்றுக்கணக்கான மலர்கள் வசந்தகாலத்திலும், நிலவு இலையுதிர்காலத்திலும், மென்குளிர் காற்று கோடையிலும், பனி குளிர்காலத்திலும் இருக்கும்போது, உங்கள் மனதை எந்த ஒரு மேகமும் மூடவில்லையெனில், உங்களுக்கு அதுவே மிகச் சிறந்த பருவம்' என்கின்ற ஒரு கவிதை ஸென் பிரதிகளில் இருக்கின்றது.

அதாவது நீங்க எந்த குறிக்கோள்களையோ, அவை அடையும் எல்லைகளையோ உங்களுக்குள் இழுத்து அடைத்து வைத்திருக்கவில்லையெனில், அந்த நாள் மிக நல்ல நாளாக ஆகிவிடுகின்றது.

ஒருநாளில் அதற்கான குறிக்கோள் இல்லாது எப்படி இருப்பது? என்று நீங்கள் கேட்கலாம். அப்படியிருப்பது நமக்கு அச்சமும் ஊட்டக்கூடும். சரி வேண்டுமானால் ஒரு நாளுக்கான இலக்குகளை வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் அதை எப்போதும் காவிக் கொண்டிருக்கத் தேவையில்லை என ஸென் நமக்கு இன்னொருவகையான சுதந்திரத்தைத் தருகிறது. அத்துடன் எந்தவகையான இலக்காயினும் தன்னியல்பிலே நடந்து நிறைவேறிவிடும். நீங்கள் அதை உங்கள் மனதுக்குள் ஒவ்வொரு பொழுதும் திட்டமிட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை என்கின்றது.

எங்களில் பலர் காலையில் எழுந்தவுடனேயே, அப்படியே 'வேலைக்குச் செல்லும்' மனநிலைக்குச் சென்றுவிடுவோம். அது அவ்வளவு நல்லதில்லை, உங்களை கொஞ்சம் நிதானமாக்குங்கள் எனச் ஸென் சொல்கிறது. உதாரணத்துக்கு நாங்கள் சில நாட்களோ/வாரங்களோ வேலையிலிருந்து விடுமுறை எடுத்துப் போகும்போது, நாங்கள் விடுமுறை முடிந்து மீள வரும்போது நிறைய வேலை சேர்ந்திருக்குமே, நிறைய மின்னஞ்சல்கள் திறக்கப்படாமல் இருக்குமே, நிறைய முக்கிய தொலைபேசி அழைப்புக்களைத் தவறவிட்டிருப்போமே எனப் பதற்றம் வந்தால், நாம் எங்கோ தவறிழைத்துக் கொண்டிருக்கின்றோம் என்று அர்த்தமாகும்.

நாங்கள் ஒவ்வொரு நொடியையும் அதை இழக்கவிடாது வாழ்ந்து கொண்டிருப்போம் என்றால், இப்படி இவற்றைத் 'தவறவிடுகின்றோம்' என்று எண்ணமுடியும்? விடுமுறைக்காகச் சென்றாலும் நாம் வேலை என்கின்ற கடந்தகாலத்திலும், திரும்பி வரும்போது என்னவெல்லாம் செய்ய இருக்கும் என நினைத்து எதிர்காலத்திலும் இருக்கின்றோமோ தவிர நாம் இந்தக் கணத்தில் இல்லை என்றுதானே பொருள். அப்படியெனில் நாம் உண்மையில் விடுமுறையில்தான் போயிருக்கின்றோமா எனக் கேட்க வேண்டியிருக்கும்.

ஸென் எங்கள் மனதுக்கு மட்டுமில்லை, எமது உடலுக்கும் கவனத்தைக் கொடுக்கச் சொல்கின்றது. எமது மனம் தன்னியல்பிலே பல்வேறுபட்ட எண்ணங்களாலும், தேவையற்ற முணுமுணுப்புக்களாலும் நிறைந்திருப்பது. இந்த இரைச்சல் எப்போது அமைதியடைகின்றது அல்லது நம் கவனத்தில் இருந்து இல்லாது போகின்றது? நமக்குப் பிடித்த ஒரு விளையாட்டை விளையாடும்போதோ, ஒரு நடனத்தை ஆடும்போதோ அல்லது ஒரு நல்ல புத்தகத்தையோ வாசிக்கும்போதோ நாம் ஒரு பயிற்சியைச் செய்து பார்க்கலாம். அதாவது நாம் அந்தச் செயற்பாட்டில் இரண்டறக் கலந்திருக்கின்றோமா அல்லது அடுத்து என்ன செய்வது/நிகழும் என்று எம் 'மனம்' சிந்திக்கின்றதா என்று அவதானிக்கலாம். உங்கள் கைகளும், கால்களும் எங்கேயிருக்கின்றன என்று எப்போதும் யோசித்துக் கொண்டா இருக்கின்றீர்கள்? இல்லைத்தானே!

தாவோ அதைத்தான் எளிமையாக, ஆனால் பூடகமாகச் சொல்கிறது. 'சாதாரண மனமே தாவோ' என்கின்றது. அதுவே பாதை. எந்த ஒன்றையும் நீங்கள் அடையவோ, எதனோடும் ஒப்பிடவோ, எவரோடும் போட்டியிடவோ தேவையில்லை என்கின்றது.

இன்னொருவகையில் நீங்கள் உங்கள் அளவில் முழுமையானவர். அந்த முழுமையை நீங்கள் உணர்கின்றபோது நீங்கள் ஞானமடைகின்ற நிலையை அடைகின்றீர்கள். புத்தரும், நீங்கள் யாரென்று அறியாத அளவுக்கு உங்களுக்குள் நிறைய தூசி பெரும்படையாகச் சேர்ந்துவிட்டது, அந்தத் தூசியைத் துடைத்து நீங்கள் யாரென்ற கண்ணாடியைப் பாருங்கள் என்றுதான் சொல்கின்றார்.

நாம் எதையும் அடையவோ அல்லது எதனோடும் போட்டி போடத் தேவையில்லை என்றாலும், நமக்குள்ளிருக்கும் 'பசித்த பேய்கள்' எம்மை எளிதில் விடாது. எங்களை இன்னும் இலக்குகளில் கவனம் குவிக்கவும், வெற்றிகளின் மீது வெறிபிடித்து அலையவும், இதன் நிமித்தம் இன்னும் கடினமாக உழைக்கவும் இந்தப் பேய்கள் உந்தித் தள்ளும். உங்களால் அவ்வளவு இலகுவில் இந்த பசிப்பேய்களிடமிருந்து தப்பிவிடமுடியாது.

அது இன்னும் நிறைய மணித்தியாலங்கள் வேலை செய், நிறையப் பணத்தை ஈட்டு என்று எங்களைத் துரத்தும். அப்படி எல்லாவற்றையும் செய்தால் கூட ஏதோ ஒன்று எமது வாழ்க்கையில் கிடைக்காமல் இருக்கின்றதே என்கின்ற வெறுமையில் நெஞ்சம் அவ்வப்போது எடைகூடிப் போகும்.

ஆகவே கொஞ்சம் உங்களை நிறுத்தி நிதானியுங்கள். பசிப்பேய்களோடு நண்பர்களாகி உரையாடுங்கள். உனக்காக எந்த நேரமும் தீனியிட்டுக் கொண்டிருக்க முடியாது என்று இந்தப் பேய்களை நீங்கள் தியானத்தில் அமரும்போது அழையுங்கள். அவற்றைக் கொஞ்சம் அமைதிப்படுத்துங்கள்.

ஒரு நாள், மேலதிக மணித்தியாலங்கள் வேலை செய்யாமலோ அல்லது அரைநாளில் விடுப்பு எடுத்து நீங்கள் வீடு திரும்பும்போது, உழைக்கும் பணத்தில் கொஞ்சத்தை இழக்கலாம். ஆனால் அதேசமயம் அந்த நேரத்தை உங்களுக்காகவும், உங்களுக்குப் பிரியமானவர்களுடன் செலவழிப்பதாகவும் அமையக்கூடும். ஆகவே ஓரடி பின்னால் எடுத்து வைப்பதென்பது, ஓரடி முன்னே வைப்பதற்காகவும் இருக்கும். பல பொழுதுகளில் எதையோ இழந்துதான் எதையோ பெறவேண்டியிருக்கின்றது. ஆனால் நாம் பெறுபவை நமக்கு அதிகம் நிம்மதியையும், மனநிறைவையும் தந்தால், நமக்கு இழந்தவைகள் ஒரு பொருடாக இருக்கப் போவதில்லையல்லவா.

****************

(எழுத உதவிய நூல்: "The Book of Householder Koans')

 

யுவான் ரூல்ஃபோ (Juan Rulfo)

Monday, January 13, 2025

 

 1. பெத்ரோ பராமோ (திரைப்படம்)

காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் தொடக்கத்தில் சில நூல்களை எழுதிவிட்டு எழுத்தின் உறங்குநிலைக்குப் போகின்றார். அப்போதுதான் மெக்ஸிக்கோவில் அவர் யுவான் ரூல்ஃபோவின் (Juan Rulfo),  ‘பெத்ரோ பராமோ’ நூலை வாசிக்கின்றார். இந்நூலின் ஈர்ப்பினால் மார்க்வெஸ் அந்த நாவலை ஓர் இரவில் இரண்டுமுறை வாசிக்கின்றார். பிற்காலத்தில் என்னால் முன்னுரை தொடக்கம் இந்நாவலின் இறுதிப் பக்கங்கள்வரை அப்படியோ ஒப்புவிக்க முடியும் என்று மார்க்வெஸ் குறிப்பிட்டிருக்கின்றார். அந்தளவுக்கு மார்க்வெஸ் இந்த நாவலுக்குள் மூழ்கியவர். இந்த நாவல் கொடுத்த பெரும் ஈர்ப்பினால்தான், மார்க்வெஸ் தனது 'நூற்றாண்டு காலத் தனிமை'யை எழுதுகின்றார்.

யுவான் ரூல்ஃபோ 'பெத்ரோ பராமோ'வை 1955 இல் எழுதிவிட்டார். நாவலின் கதைசொல்லியான யுவான் , இறந்துவிட்ட தனது தாய் சொன்னதிற்கு இணங்க, அவரது தந்தையைத் தேடி கோமாலா நகருக்குச் செல்கின்றார். இதுவரை நேரில் பார்த்திராத தனது தந்தையான பெத்ரோவை யுவான் பல்வேறு பாத்திரங்களினூடாக அறிகின்றார். பெத்ரோ இப்போது உயிருடன் இல்லை. அவரின் கதை சொல்பவர்களில் பெரும்பாலானோர் கூட இறந்துவிட்டனர். காலமாகியவர்கள் எப்படி கதை சொல்கின்றார்கள், எவ்வாறு யுவனின் வாழ்க்கையில் குறுக்கிடுகின்றார்கள் என்பதுதான் இந்த நாவலின் சுவாரசியமான பகுதிகளாகும்.

இதையே இலத்தீன் அமெரிக்காவில் இருந்து முகிழ்ந்த 'மாய யதார்த்த' கதை சொல்லல் முறைக்கான முதல் புதினம் எனச் சொல்கிறார்கள். இது 120 பக்கங்களுக்குள்ளே அடக்கி விடக்கூடிய ஒரு புனைவு. ஆனால் இவ்வளவு குறுகிய பக்கங்களில் கிட்டத்தட்ட அன்றைய கால மெக்ஸிக்கோவின் நிலவியல், அரசியல், கலாசாரம், புரட்சி எனப் பல விடயங்களைத் தொட்டுச் செல்கின்றது. பெத்ரோ பராமோ வன்முறையின் மூலம் ஒரு நிலச்சுவாந்தர் ஆகின்றார். அவர் காதல் செய்யும் பெண்களும் அவருக்கு ஒரு பொருட்டேயல்ல. அதனால் எண்ணற்ற பெண்களோடு மோகிக்கின்றார். அவர்களை எளிதில் கைவிட்டு தன் வாழ்க்கையில் நகர்ந்தபடியும் இருக்கின்றார்.

இந்த நாவலின் கதைசொல்லியான யுவானே ஒரு தற்செயலான நிகழ்வால் பெத்ரோவிற்குப் பிறக்கின்றவர். மதத்திற்கு எதிரான புரட்சியும், பிறகு அந்தப் புரட்சிக்கெதிரான தேவாலயங்களின் போராட்டமும், நிலப்பிரத்துவ இறுதிக்கட்டமும், அதிகாரம் எதுவுமற்ற பெண்களின் நிலையும் என பல்வேறு நிகழ்வுகளை பெத்ரோ பராமோ நமக்குக் காட்சிகளாக விரித்துக் காட்டுகின்றது.

இவ்வாறான ஒரு நேர்கோட்டுத் தன்மையில்லாத எழுத்தில் கடந்தகால நினைவுகளும், பேய்களும்,  பாதாள உலகும், கல்லறைக்குள் இருப்பவர்களும் பேசும் ஒரு நாவலைக் காட்சித் திரையாகக் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் 'பெத்ரோ பராமோ' திரைப்படத்தில் அவ்வளவு நேர்த்தியாக - மாய யதார்த்தமும் குலைந்துவிடாது- கொண்டு வந்திருக்கின்றனர். பெத்ரோ பராமோ ஒரு துன்பியல் முடிவை நோக்கிச் செல்கின்ற நாயகனின் கதை என ஓர் எளிமைக்காகச் சொல்லலாம். மார்க்வெஸ்ஸின் 'கொலாராக் காலத்தில் காதல்' நாவலில் வருகின்ற நாயகன் 80வயதுவரை தனது முதல் காதலுக்காகக் காத்திருப்பதைப் போல, 'பெத்ரோ பராமோ'வில் பெத்ரோ தனது பதின்மக் காதலியான சூசனாவுக்காய்க் காத்திருக்கின்றான். அவள் கிட்டத்தட்ட 30 வருடங்களின் பின் பெத்ரோவிடம் திரும்புகின்றபோது அவள் இளமையில் பெத்ரோவை விட்டுச் சென்ற சூசனா அல்ல. அவள் வேறொருத்தியாக,கண்களுக்குத் தெரியாத உருவங்களோடு (இறந்துவிட்ட கணவனோடு) உரையாடும் ஒருத்தியாக இருக்கின்றாள்.

அவளின் வரவோடு பெத்ரோவின் வீழ்ச்சி ஆரம்பிக்கின்றது. தனது காதலி சூசனா இறக்கும்போது அந்தத் துக்கத்தை அசட்டை செய்து, இந்த நகர் தன்பாட்டில் விழாக் கொண்டாட்டத்தில் திளைக்கின்றதா என பெத்ரோ கோபமுறுகின்றான். அத்தோடு அவன் அந்த ஊரைக் கைவிடத் தொடங்குகின்றான்.

பாழாய்ப்போன ஊரிலிருந்து மறைந்துவிட்ட அந்த ஊரவர்கள் யுவானின் தந்தையை யுவானுக்கு நினைவுபடுத்துவதற்காய் மீண்டும் அந்த நகரிலிருந்து எழுகின்றார்கள். இவர்கள் அசலான மனிதர்கள்தானா என ஒவ்வொருத்தரையும் பார்த்து யுவான் திகைத்து அவர்களைக் கரம்பற்ற விழைகின்றபோது அவர்கள் இறந்துவிட்ட மனிதர்கள் என்பதை அறிகின்றான்.

இறுதியில் கதைசொல்லியான யாவனே காலமாகிவிட்ட ஒருவனாக நமக்குத் தெரிகின்றான். அப்படியாயின் நாம் பெத்ரோ பராமோவில் இறந்துபோன ஆவிகளின் கதைகளைத்தானா கேட்டிருக்கின்றோம்? அவர்களோடுதான் இவ்வளவு நேரமும் உலாவிக் கொண்டிருந்தோமா எனத் திகைக்கவும் செய்கின்றோம்.



2. யுவான் ரூல்ஃபோவுடன் நூறு வருடங்கள் (ஆவணப்படம்)


‘பெத்ரோ பராமோ’ திரைப்படத்தைப் பார்த்தபின், யுவான் ரூல்ஃபோ பற்றிய 'One Hundred Years with Juan Rulfo' என்கின்ற ஆவணப்படமொன்றைப் பார்த்தேன். யுவான் அவரது வாழ்க்கைக்காலத்தில் இரண்டே இரண்டு நூல்களை மட்டுமே வெளியிட்டவர். அவை தமிழிலும் ஏற்கனவே 'பெத்ரோ பரோமா' (குறுநாவல்) எனவும் 'எரியும் சமவெளி' (சிறுகதைகள்) எனவும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஆவணப்படம் யுவான் எழுத்தாளர் என்பதற்கு அப்பால் எவ்வாறு மெக்ஸிக்கோவில் வாழ்ந்தார் என்பதை ஒரளவு அடையாளம் காட்ட விழைகின்றது எனச் சொல்லலாம்.

யுவான் மிகச்சிறந்த ஒரு புகைப்படக் கலைஞர். அவர் புகைப்படங்களுக்காய் மெக்ஸிக்கோவின் பல்வேறு நிலப்பரப்புக்களைத் தேடி அலைந்திருக்கின்றார். அத்தோடு அவர் மிகத் துல்லியமாக மெக்ஸிக்கோவின் புவியல் வரைபடத்தை (Map) வரைந்தும் வைத்திருக்கின்றார். இந்த ஆவணப்படத்தில் யுவானின் நண்பரொருவர் அந்த வரைபடம் அவ்வளவு நேர்த்தியாக மெக்ஸிக்கன் அரசு வெளியிட்ட வரைபடத்தை விட இருந்தது. ஆனால் அரசு யுவானின் வரைபடத்தை வெளியிட அனுமதிக்க விரும்பவில்லை என்கின்றார்.

யுவான் தனது பெற்றோரை அவரது பத்து வயதுக்குள் இழந்துவிடுகின்றார். தந்தை 1920களில் நடந்த மெக்ஸிக்கன் உள்ளூர் யுத்தத்தில் இறந்திருக்கின்றார். இதன் பின்னர் யுவான் அவரின் தாத்தா-பாட்டிகளோடு வளந்தவர். அத்தோடு பதின்மத்தில் அவர் ஒரு பாடசாலைக்கு, ஹொஸ்டலில் தங்கிப்படிக்க அனுப்பப்படுகின்றார். அது கிட்டத்தட்ட ஒரு ஜெயில் அனுபவம் போன்றதென யுவான் ஒரு நேர்காணலில் கூறுகின்றார்.

யுவான் பின்னர் ஒரு டயர் நிறுவனத்தில் வேலை செய்கின்றார். அதன் நிமித்தம் மெக்ஸிக்கோவின் பல்வேறு நிலப்பரப்புகளுக்கு பயணித்திருக்கின்றார். இந்த வேலையில் அவருக்காகக் கொடுக்கப்பட்ட காரில் ஒரு ரேடியோ போட்டுத்தரவேண்டும் என்று கேட்டதை நிறுவனம் மறுத்ததால் அந்த வேலையை இராஜினாமாய்ச் செய்தார் என்கின்ற ஒரு சுவையான கதையும் இருக்கின்றது.

யுவானின் எழுத்து உச்சத்தில் இருந்தது அவர் சில வருடங்கள் எழுத்துக்கான நிதியைப் பெற்றிருந்தான காலமான 1952-54களெனச் சொல்லலாம். இந்த இரண்டு ஆண்டுகளில்தான் அவர் தனது இரு நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவ்விரு நூல்களின் புகழ் யுவானை அவரது வாழ்வின் இறுதிக்காலம் வரை அடுத்த புத்தகங்களை எப்போது எழுதுவார் என எல்லோரையும் தொடர்ந்து கேட்க வைத்திருக்கின்றது. ஒருபொழுது மெக்ஸிக்கன் ஜனாதிபதியே யுவானிடம் ஒரு விருந்தில் இதை நேரடியாகக் கேட்கின்றார் என்றளவுக்கு இந்தத் தொந்தரவு அவரைத் தொடர்ந்து துரத்தியிருக்கின்றது. இறுதியில் அவரது சக எழுத்தாளர் ஒருவர், தயவு செய்து யுவானை அவரின் போக்கில் விட்டுவிடுங்கள், அடுத்து ஒன்றை எழுதுங்கள் எனக்கேட்டு சித்திரவதைப்படுத்தாதீர்கள்' என்ற ஒரு கட்டுரையை பத்திரிகையொன்றில் எழுதுகின்றார். யுவான் மெக்ஸிக்கோ இலக்கியத்துக்காய் இரண்டு படைப்புக்களைத் தந்திருக்கின்றார் அதுவே போதும் என்று அந்தக் கட்டுரை முடியும்.

யுவான் ஏன் தொடர்ந்து எதையும் பிரசுரிக்கவில்லை என்பதற்கான காரணத்தை, அவர் கொடுத்த சொற்ப நேர்காணல்களில் கூட தெளிவாகச் சொல்லவில்லை. ஆனால் அந்த நேர்காணல்களில் தான் பிரசுரிக்கவில்லையே தவிர, எழுதாமல் இருக்கவில்லை என்று அர்த்தமில்லை என்று கூறுகின்றார். யுவான் பிரசுரித்த இந்த இரண்டு படைப்புக்களுக்கு முன் கூட, மெக்ஸிக்கோவைப் பின்புலமாகக் கொண்ட ஒரு பெரும் நாவலை சில வருடங்களாக எழுதியிருக்கின்றார். ஆனால் அவருக்கு அது திருப்தியைக் கொடுக்காததால் முற்றாக அழித்திருக்கின்றார். இதைப் பற்றி ஒரு நேர்காணலில் கேட்கும்போது, ‘அது குறித்து கவலை ஏதுமில்லை, அவ்வளவு மோசமான நாவல்' என்று அந்தப் பதிலை எளிதில் முடித்துவிடுகின்றார்.

இந்த ஆவணப்படத்தில் பெரும்பகுதி அவர் எடுத்த புகைப்படங்களின் நிலப்பரப்பைத் தேடிப் போகின்ற பயணமாக இருக்கின்றது. இதில் யுவானின் மகன்களில் ஒருவரும் இருக்கின்றார். யுவான் மிகக்கடினமான மலையில் ஏறி காட்சிதரும் இடத்தைத் தேடி இந்த ஆவணப்படக்குழு ஏறுகின்றது. இந்தக் காலத்திலேயே அவ்வளவு கடினமாக இருக்கும் மலையில் அன்று யுவான் ஏறியிருக்கின்றார், அதைப் புகைப்படமாக்கியிருக்கின்றார் என்பது வியப்பாக இருக்கின்றது.

யுவான் தொடர்ச்சியாக எழுதவில்லையே தவிர அவர் மெக்ஸிக்கோவின் மிக முக்கியமான இன்னொரு பகுதியை ஆவணமாக்கியிருக்கின்றார். மெக்ஸிக்கோவின் பூர்வீகக்குடிகளின் 200இற்கு மேற்பட்ட நூல்களை எடிட்டராக இருந்து தொகுத்துக் கொடுத்திருக்கின்றார். மானுடவியல் அன்று அவ்வளவு மதிப்பு வாய்ந்த துறையாக இல்லாதபொழுதுகளில் யுவான் செய்த இந்த தொகுப்புக்கள் அவ்வளவு முக்கியம் வாய்ந்தவையாகும்.

யுவான் இப்படி தன் வாழ்நாள் காலத்தை பூர்வீகக்குடிகளோடு இணைத்துக்கொண்டு சென்றதற்கு அவரின் வேலை நிமித்தம் ஒரு ஆற்றைத் தடுத்து அணைக்கட்டு கட்டப்பட்டபோது அந்த ஆற்றோடு வாழ்ந்த பூர்வீகக்குடிகளின் கிராமங்கள் அழித்துச் செல்லப்படுவதைப் பார்த்தது ஒரு முக்கிய காரணம் என்கின்றனர். இவ்வாறு ஓர் அழிவைப் பார்த்துவிட்டு ஒரு படைப்பாளி அந்த மக்களுக்காய் தனது வாழ்வின் பெரும்பகுதியைக் கொடுப்பது என்பது விதந்துரைக்கப்பட வேண்டியதல்லவா?

யுவான் தனது 69 வயதில் 1986இல் காலமாகியவர். அவரின் மரணத்தின் பின் 'The Golden Cockerel' என்றொரு நூல் வெளிவந்திருகின்றது. எப்போதும் ஒரு படைப்பாளி இறந்தபின் வெளிவருவது அவர்களின் விருப்பத்துக்குரியவையா என்ற கேள்வி இருக்கின்றது. மார்க்வெஸ் இறந்தபின் அவர் பிரசுரிக்க விரும்பாத 'Until August' அண்மையில் வெளிவந்ததை நாமறிவோம். அவ்வாறே ரொபர்தோ பொலானாவோவின் '2666', 'The Salvage Detectives' போன்றவை வெளிவந்து புகழ்டைந்தபின், அவரின் கணணியில் சேகரமாக இருந்த எல்லா படைப்புக்களும் வெளிவரத் தொடங்கின. எனவே ஒரு படைப்பாளியின் இறப்பின் பின் வெளிவருவதை அவர்களின் பிற படைப்புக்களோடு வைத்து ஒப்பிடமுடியுமா போன்ற சந்தேகங்களும் இருக்கின்றன.

எனக்கு இன்றுவரை தொடர்ச்சியாக எழுதுவதும் வாசிப்பதும் பிடிக்கும். அதேவேளை சில எழுத்தாளர்கள் ஓரிரு சிறந்த படைப்புக்கள் எழுதிவிட்டு உறங்குநிலைக்குப் போனாலும் அவர்களையும் மிகவும் பிடிக்கும். ஆங்கிலத்தில் ஹார்ப்பர் லீ எழுதிய 'To Kill a Mockingbird’, தமிழில் 'புயலிலே ஒரு தோணி' எழுதிய பா.சிங்காரம் என்று எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. ஈழச்சூழலிலும் கிட்டத்தட்ட 30 வருடங்களுகளாகியும், எந்தத் தொகுப்பும் வெளியிடாத ரஞ்சகுமாரின் 'மோகவாசல்', அருளரின் 'லங்காராணி', கோவிந்தனின் 'புதியதொரு உலகம்' என்று எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன.

யுவான் ரூல்ஃபோ இரண்டே இரண்டு நூல்களைத்தான் எழுதினார் என்றாலும், அவை எழுதப்பட்டு 75 ஆண்டுகளாகின்றபோதும் இன்னும் நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம். மேலும் இந்தப் படைப்புக்கள் தனியே மெக்ஸிக்கோவின் அடையாளமாக இல்லாது, முழு இலத்தீன் அமெரிக்க இலக்கியத்துக்குமான முன்னோடியாகவும் ஆகியிருக்கின்றது. யுவானின் 'பெத்ரோ பராமோ'வின் புனைவு மொழியால் எண்ணற்ற இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் மட்டுமில்லை, ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் எழுதும் எழுத்தாளர்கள் பலரும் ஈர்க்கப்பட்டிருக்கின்றார்கள். இதைத் தவிர ஒரு படைப்பாளிக்கு மிகச்சிறந்த அங்கீகாரம் கிடைக்கப்போவதில்லை. அந்தவகையில் மிகச் சொற்பமாக எழுதிய யுவான் ரூல்ஃபோ ஆசிர்வதிக்கப்பட்டவர்.

*************

(நன்றி: 'அம்ருதா' - தை/2025)



கார்காலக் குறிப்புகள் - 66

Sunday, January 05, 2025

ஓவியம்: சின்மயா

 

னக்கு அச்சில் வருவது எதுவாகினும் அவ்வளவு பிடிக்கும். அது பத்திரிகையோ, சஞ்சிகையையோ அல்லது புத்தகமாக இருந்தால் கூட, அச்சில் பார்க்கக் கிடைத்தால் அப்படியொரு சந்தோசம் வந்துவிடும். சிறுவயதுகளில் அச்சில் வரும் பத்திரிகைகளைப் பல்வேறு வடிவங்களில் படித்திருக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத் தடை இருந்து பொருட்கள் வராத தொண்ணூறுகளில் அங்கு வெளிவந்த பத்திரிகை மாட்டுத்தாள் எனப்படும் பேப்பரில் கூட வந்திருக்கின்றது. புரியாதவர்க்கு விளங்கவேண்டும் என்றால் மடிக்கவே முடியாத பைல்களைப் போல அந்தப் பக்கங்கள் இருக்கும். வழமையான பத்திரிகைப் பேப்பரில் அதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கவே முடியாது. அவ்வளவு கடினமான தாளாக அது இருக்கும்.

அப்படி மடிக்கமுடியாத தாள்களில் வெளிவந்த காலத்தில் வளைகுடா யுத்தத்தின் ஒவ்வொரு நாள் செய்திகளையும் வாசித்தது நினைவுக்கு இருக்கின்றது. போர் என்பது நாளாந்த வாழ்வில் normalized செய்யப்பட்டு விட்டிருந்ததால், நாள் 01, 02 என்று அன்று குவைத்தை ஆக்கிரமித்த ஈராக்கிற்கு எதிரான போரை அவ்வளவு 'சுவாரசியத்துடன்' வாசித்திருக்கின்றோம். 'என்னதான் இருந்தாலும் சதாம் ஹூசைன் அமெரிக்கக்காரனோடு இவ்வளவு நாட்களாக எதிர்த்து நின்று சண்டை பிடிக்கின்றானே' என்று 40 நாட்களுக்கு மேல் நீண்ட அந்தச் சண்டையைப் பற்றி நண்பர்களிடையே வியந்து பேசியிருக்கின்றோம்.

பின்னர் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து அயல் கிராமமான அளவெட்டிக்குப் போய்ச் சேர்ந்ததபோது இன்னொரு அதிஷ்டம் வாய்த்தது. அந்த ஊரின் ஒரு பகுதியில் விற்கப்படும் பத்திரிகைகள் நாங்கள் நின்ற வீட்டிற்குத்தான் முதன்முதலில் வரும். பக்கத்தில் வசித்த ஒரு வயதான தாத்தா 'உதயன்', 'ஈழநாதம்' போன்ற பத்திரிகைகளை விற்பவராக இருந்தார்.

நாங்கள் இருந்த வீடு (வீட்டுச் சொந்தக்காரர்களுடன் வீட்டின் ஒரு பகுதியை நாங்கள் பகிர்ந்து கொண்டோம்) முக்கிய தெருவில் இருந்ததால், அங்கே பேப்பர் கட்டுக்களைப் போடுவார்கள். பிறகு அந்த ஐயா எடுத்து நாங்கள் இருந்த வீட்டு வாசலில் வைத்து விற்கத் தொடங்குவார். பத்திரிகைகள் விடிகாலையில் வந்துவிடும். நாங்கள் மெதுவாக அந்தக் கட்டிலிருந்து பேப்பர்களை உருவி பல்லு விளக்கிக் கொண்டே வாசிக்கத் தொடங்கிவிடுவோம். பின்னர் நான் பாடசாலைக்குப் போகும்போது அன்றைய நாளின் செய்தியை முதலில் அறிந்த ஒருவனாக நண்பர்களிடையே இருப்பேன்.

மேலும் யுத்தகாலம் என்பதால் போர் சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டுமின்றி, உலகத்தை அறியும் ஒரேயொரு ஊடகமாக பத்திரிகைகளே அன்று எமக்கு இருந்தன. கொஞ்சம் வசதி படைத்தவர்கள் சைக்கிள் டைனமோக்களைச் சுற்றி இலங்கை அரசின் செய்திகள்/பிபிஸி/வெரித்தாஸ் போன்ற வானொலிச் செய்திகளைக் கேட்பார்கள்.

சாதாரண மின்கலங்கள் (Batteries) கூட யாழுக்கு வராத அளவுக்கு பொருளாதாரத் தடை இருந்தது. அதுமட்டுமின்றி அத்தியாவசியமான அரிசி/சீனி/சர்க்கரை/பருப்பு போன்றவை கூட ஏதேனும் கப்பல் வந்தால் மட்டுந்தான் கூட்டுறவுச்சங்கங்களில் மூலம் பகிர்ந்தளிக்கப்படும். போரின் காரணமாக யாழிலிருந்து இலங்கையின் மற்றப்பகுதிகளுக்குப் போகும் தரைவழிப்பாதை தடைசெய்யப்ப்பட்ட காலமது. இரகசியமாக சில பாதைகள் கடலினூடாக திறக்கப்பட்டாலும், அது இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. பொதுமக்கள் பாவிக்கமுடியாது; ஆபத்தானதுங்கூட.

 

ப்போது இருந்து யோசிக்கும்போது இப்படியெல்லாம் நாம் வாழ்ந்திருக்கின்றோமா என்று திகைப்பாக இருந்தாலும், அப்போது கைகளுக்குக் கிடைத்த வளங்கள் அனைத்தையும் வைத்து உயிர் பிழைத்திருக்கின்றோம் போலும். இதுவே இப்படியென்றால் பின்னர் ஈழப்போர் -02, ஈழப்போர்-03 என்று நீண்டு இறுதியுத்தமான முள்ளிவாய்க்கால் வரை மூடுண்ட பகுதிகளில் வாழ்ந்தவர்களின் துயர அனுபவங்கள் என்னைப் போன்றவர்களால் கற்பனையே செய்து பார்க்க முடியாதது.

யாழில் நான் வாழ்ந்த இந்தக் காலத்தில்தான் நாம் நினைத்துப் பார்க்காத பல்வேறு கண்டுபிடிப்புக்கள் அங்கே நிகழ்ந்திருக்கின்றன. பெற்றோல் என்பவை தடைசெய்யப்பட்டவை என்றாலும், விவசாயத்துக்கும்/விளக்குகளுக்கும் அனுப்பப்படும் மண்ணெண்ணெய்யை வைத்து யாழில் அனைத்து வாகனங்கள் இயங்கத் தொடங்கின. மோட்டார்சைக்கிளையும், கார்களையும் உற்பத்தி செய்த நிறுவனங்களே கற்பனை செய்து பார்த்திருக்காதவை இது. அதுபோலவே வீட்டில் இந்த மண்ணெய்யை சிக்கனப்படுத்த வேண்டுமென்று 'ஜாம் போத்தல் விளக்குகள்' கண்டுபிடிக்கப்பட்டன. அதாவது ஜாம் வரும் குட்டிப் போத்தலில் கம்பியைக் கொழுவி அதில் திரியைச் செருகி எரிப்பது. அங்கே எண்ணெய் துளித்துளியாகத்தான் போகும். அந்த சிக்கன விளக்குகளில் எங்களில் பெரும்பாலானோர் இரவுகளில் படித்தோம்.

இதைவிட இன்னொரு கண்டுபிடிப்பாக சவர்க்காரத் (soap) தட்டுப்பாட்டால், பனம்பழத்தில் எமது ஆடைகளைத் தோய்ப்பது. பனம்பழத்தை எடுத்து ஒரளவு சாறு எடுத்து முடித்தபின் கொஞ்சம் அதன் முடிகளெல்லாம் வெள்ளையாக வரும்போது பனம்பனத்தை எடுத்து எங்கள் வெள்ளையாடைகளில் வைத்து தேய்ப்போம். பனம்பழ வாசத்தோடு பாடசாலை போகும் நாட்களில் நல்லவேளையாக எந்த மாடும் மோப்பம் பிடித்து எங்களோடு முட்டி மோதவில்லை.

அளவெட்டியில் இப்படி விடிகாலையில் பத்திரிகைகளைச் சுடச்சுட வாசிக்கும்போது, சிலவேளை மாலையில் விஷேட பதிப்புக்களும் வந்து சேரும். இயக்கம் எங்கேனும் வெற்றிகரமாகத் தாக்குதல்களை நடத்தினால் மாலையில் நான்கு பக்கங்களிலாவது ஒரு விசேட பதிப்பு வரும். எதாவது முகாங்களை அழித்து வென்றதையோ/ மினி முகாங்களைத் தகர்த்ததையோ/இலங்கை இராணுவத்தின் முன்னேற்றதை தடுத்து நிறுத்தியதையோ/ கடலில் கப்பல்களைத் தகர்த்ததைப் பற்றியோ அந்த செய்திகள் இருக்கும்.

யாழிலிருந்து வெளியேறி கொழும்பில் இருந்த காலங்களில் ஞாயிறுகளில் கட்டாயம் வீரகேசரியும், Sunday Times உம் எடுத்து வாசிப்போம். பதின்மத்தின் ஆரம்பத்தில் பெரிதாக என்னத்தை, சினிமாவைத் தவிர வாசிக்கப் போகின்றோம். அப்போது 'காதல் இளவரசனாக' பிரசாந்த் இருந்தார். அவர் வீரகேசரியின் சினிமாப் பக்கங்களில் எப்போதும் தான் இருக்கவேண்டுமென பணம் கொடுத்தாரோ என்னவோ தெரியாது, அவரைப் பற்றிய செய்திகளும், அவர் யாரேனும் இரசிகருக்கு எழுதும் கடிதங்களும் நிறைய வந்தபடி இருக்கும். இதனாலேயே பிரசாந்தைப் பிடிக்காது போனது வேறு விடயம்.

ஆங்கிலத்தை எழுத்துக் கூட்டி வாசிக்கும் அறிவே அன்று எனக்கு இருந்தாலும் Sunday Times இல் 'தராக்கி' சிவராமும், இக்பால் அத்தாஸும் எழுதும் போர் பற்றிய கட்டுரைகளை எழுத்துக் கூட்டி வாசித்து விளங்கிக் கொள்வேன். போரை ஏதோ நேரில் நின்று எழுதுவது மாதிரி அவ்வளவு சுவாரசியமாக இருவரும் எழுதுவார்கள். ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் போர் குறித்த அனுபவங்களும், வாசிப்பும் இருந்ததால், இவர்கள் எழுதுவதை - சிலவேளைகளில் கடின ஆங்கிலம் புரியாவிட்டாலும் - இடைவெளி நிரப்பி என்னால் விளங்கிக்கொள்ள முடிந்தது.

 

ந்தக் காலத்தில் இவற்றைவிட வேறு இரண்டு அச்சுப் பத்திரிகைகள் என் வாசிப்பை மாற்றியமைத்தவை எனச் சொல்லலாம். அது அப்போது வெளிவந்துகொண்டிருந்த 'தினமுரசு'ம், 'சரிநிகரும்'. தினமுரசு ஒரு சிறந்த வெகுசனப் பத்திரிகைக்கு மிகச் சிறந்த உதாரணம். 'சரிநிகர்' அன்று வாசிக்கக் கடினமாக இருப்பினும் நமது சிறுபத்திரிகைகளை நினைவுபடுத்துவது.

தினமுரசு நடிகைகளாலும், இன்னபிற வெகுசன நபர்களாலும் முன்பக்கத்தை நிரப்பி உள்ளே அழைத்துச் செல்ல, சரிநிகர் 'பாவப்பட்டவர்கள்' போல மிக அலுப்பான முன்பக்க தலையங்களோடு கறுப்பு/வெள்ளையிலும், ஈழமோகத்தின் சிலேடைக் கவிதைகளோடும் வெளிவந்தபடி இருந்தன. இவை இரண்டையும் வாசித்து எனது பதின்மங்களை - புத்தர் கூறிய மத்தியபாதையாக - என் வாசிப்பை அமைத்துக் கொண்டேன். இந்த 'மத்தியபாதை' வாசிப்பு பின்னர் நான் எழுதவந்தபோது என்னை மறைமுகமாகவேனும் பாதித்திருக்குமென நினைக்கின்றேன்.

'தினமுரசில்' நடுப்பக்கத்தில் கிளுகிளுப்பான நடுப்பக்க சினிமாச் செய்திகளுக்குக் குறையிருக்காது. அங்கிருந்து என் வாசிப்புத் தொடங்கி, பிறகு அதன் ஆசிரியராக இருந்த அற்புதன் (ரமேஷ்) எழுதும் 'அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை' என்ற தொடருக்குள் நுழைந்துவிடுவேன். அவ்வளவு சுவாரசியமாக அதை அவர் அப்போது எழுதிக் கொண்டிருந்தார். ஒருவகையில் இலங்கை அரசியலை முதன்முதலாக நான் விரிவாக வாசிக்கத் தொடங்கியது இந்தத் தொடர்மூலந்தான் எனச் சொல்வேன். அதே தினமுரசில் மக்ஸிம் கார்க்கியின் 'தாய்', இடி அமீன், கார்லோஸ் (போதைப்பொருட்கடத்தல்காரர்) போன்ற பல தொடர்களை வாசித்திருக்கின்றேன். தினமுரசில் வெவ்வேறு பக்கங்களை அற்புதந்தான் எழுதியிருக்கின்றார் என்று பின்னர் கேள்விப்பட்டேன். அற்புதன் அவர் சார்ந்த இயக்கத்தாலேயே பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆகக் குறைந்தது ரமேஷின் 'அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை' தொடர் நூலாக்கம் பெறவேண்டும். இன்றைக்கு வாசித்தால், அதன் தகவல் தவறுகள், நடந்த உண்மைகளுக்கு எதிராக அவரெடுத்த சில சார்ப்புப் பிழைகள் போன்றவற்றை அடையாளங்கண்டு கொள்ளமுடியுமெனினும், அன்றிருந்த என்னைப் போன்ற 15/16 வயதுக்காரனுக்கு அந்தத் தொடர் முக்கியமானது.

சரிநிகரில் வந்த அரசியல் கட்டுரைகள் என்னைப் பெரிதும் ஈர்க்காதுவிட்டாலும் (இப்போதும் அரசியல் கட்டுரைகள் பக்கம் அவ்வளவாகப் போவதில்லை என்பதும் வியப்புத்தான்), அங்கிருந்துதான் அதுவரை வாசித்திராத சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றை வாசித்து எழுத்தின் புதிய திசைகளை கண்டடைந்தேன். இல்லாவிட்டால் வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான் போன்றவர்களோடு மட்டுமே தேங்கி நின்றிருப்பேன். ஆனால் அப்போது கூட இலக்கியம் வேறு 'கிரஷ்' வேறு என்று கற்றுத் தேர்ந்திருந்தேன். எனக்கு அப்போது மேத்தாவைப் பிடிக்குமென்றாலும், தோழியொருவரின் பிறந்தநாளுக்கு அவருக்குப் பிடிக்குமென்பதற்காக வைரமுத்துவின் தொகுப்பொன்றைக் தேடி வாங்கிப் பரிசளித்திருந்தேன்.

இப்படி அச்சுப் பத்திரிகைகள் பிடிக்குமென்பதால்தான் என்னவோ கடவுள் நான் கனடா வந்தபோது என்னைப் பேப்பர் போடும் வேலைக்கு அனுப்பிவிட்டிருக்கின்றார் போலும். கனடா வந்த தொடக்க காலத்தில் வீடுகளுக்குப் பேப்பர் போடும் வேலையைச் செய்திருக்கின்றேன். பத்திரிகைகளின் புது அச்சுமையின் வாசத்துக்கு மயங்காதவர் யாருமுண்டா என்ன? இந்தப் பத்திரிகைகளை சேகரிப்பதற்காய் ஒரு திறந்தவெளியில் காத்திருப்போம். அன்றைய நாளின் செய்திகளை வாசிக்கும் முதல்நபர் அந்தப் பத்திரிகையை விநியோகிப்பவர் அல்லவா? என்ன பனிக்காலத்தில், கைகள் விறைக்க மூச்சுத் திணற ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று போடுவதைப் போல நரகம் வேறொன்றும் இல்லை.

இதை எழுதிக்கொண்டிருக்கும்போது இங்கே 15Cm இற்கு மேலே பனிகொட்டி நிலம் முழுவதும் பனியாகக் கிடக்கின்றது. யாரோ ஒருவர் இன்னும் சில மணித்தியாலங்களில் மறுநாளுக்கான பத்திரிகையைப் போடுவதற்காக விடிகாலையில் பனி நிலத்தை உழுது போய்க்கொண்டிருப்பார் என்பதைப் பெருமூச்சுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

இவ்வாறு அச்சுப்பத்திரிகைகளை பற்றி நினைத்துப் பார்க்க, இலங்கையில் அண்மையில் வெளிவரும் 'ஒருவன்' பத்திரிகையில் நான் எழுதியதை எடுத்துப் பதிப்பித்திருக்கின்றோம் என்று சொன்னதும் ஒரு காரணம். வாரமொன்றுக்கு 24 பக்கங்களில் வருகின்ற பத்திரிகை அதுவென நினைக்கின்றேன். ஒருவகையில் அன்றைய 'தினமுரசின்' சுருங்கிய வடிவம் எனச் சொல்லலாம். இயன்றவரை எல்லா வகை செய்திகளையும்/வகைமைகளையும் உள்ளடக்க முயல்கின்றனர்.

இதற்கு முன்னர் ஓரிரு பக்கங்களை இலக்கியத்துக்கென ஒதுக்கி உமா வரதராஜன் பொறுப்பாக இருந்த 'பிரதிபிம்பத்தில்' அவ்வப்போது நானெழுதிய காலங்கள் நினைவுக்கு வருகின்றது. எந்த வகை அச்சுப் பத்திரிகையாயினும் கிடைக்கக்கூடிய பக்கங்களில் இலக்கிய அறிமுகத்தைக் கொண்டுவருவது மகிழ்ச்சி தரக்கூடியது. எனக்கு மென்பிரதியாக அனுப்பப்பட்ட இரண்டு பிரதிகளில் ஏ.ஜே.கனகரட்ன, கே.கணேஷ் போன்ற எம் முன்னோடிகளை அறிமுகப்படுத்தி அதில் எழுதப்படுவதைப் பார்க்க இதமாக இருந்தது. ஏனெனில் இவ்வாறான வெகுசன பத்திரிகைளின் ஊடாக(வும்) இலக்கியத்திற்கு வந்தவன் நான். இந்த அச்சுப்பத்திரிகைளின் இலக்கியம் குறித்த சுருக்கமான அறிமுகங்களிலிருந்து, இந்தத் தலைமுறையிலிருந்தும் பலர் இலக்கியம் நோக்கி வருவார்களென்று மிகுந்த நம்பிக்கை கொள்கின்றேன்.

*****************

(Dec, 2024) 

கார்காலக் குறிப்புகள் - 65

Saturday, January 04, 2025

 
மிழில் ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்கள் மீளவும் தமிழாக்கம் செய்யப்படுவதுண்டு. ஒரு மொழிபெயர்ப்பை மீறி இன்னொரு மொழிபெயர்ப்பு அந்தப் படைப்பை செழுமையாக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனினும் இன்னும் எத்தனையோ நூல்கள் தமிழாக்கம் செய்யப்பட வேண்டியிருக்கும்போது அவை குறித்து கவனம் செலுத்தலாமேயென்று யோசிப்பதுண்டு. அதேயளவு கவலை, சிலவேளைகளில் தமிழாக்கம் செய்யப்பட்ட நல்ல படைப்புக்கள் கவனிக்காமல் இருக்கின்றபோதும் எழுவதுண்டு.

அவ்வாறு ஒரு படைப்பு Lara Fargus எழுதிய My Sister Chaos. இது தமிழில் 'இழப்பின் வரைபடம்' என்று அனிருத்தன் வாசுதேவனால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது. எவ்வளவுதான் நூலின் உள்ளடக்கத்துக்கு பொருத்தமான தமிழ் தலைப்பாக இருந்தாலும், இயன்றளவு மூலநூலின் தலைப்புக்கு நிகராக இருப்பதே நூலின் ஆசிரியருக்கு நாம் கொடுக்கின்ற மதிப்பாக இருக்கும். இவ்வாறு பல மொழியாக்கங்கள் நூலின் தலைப்பை விட்டு விலகி தமிழாக்கம் செய்யப்படுவது ஏனென்றும் விளங்குவதில்லை. இதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அனிருத்தன் மிகச் சிறப்பாக இதைத் தமிழாக்கியிருக்கின்றார் எனச் சொல்லவேண்டும்.

இந்த நாவல் இரட்டைச் சகோதரிகளின் பார்வையில் சொல்லப்படுகின்றது. போர் நிலத்தில் இருந்து தப்பியோடி வந்த பெண்கள். ஒருவர் வரைபடக் கலைஞராகவும், இன்னொருவர் ஓவியராகவும் அவர்களின் தாயகத்தில் இருக்கின்றனர். போர் எல்லாவற்றையும் அடித்துப் புரட்டிப் போட்டுவிடுகின்றது. வரைபடக் கலைஞர் நாட்டைவிட்டு தப்பியோடி வரும்போது அவர் பணியில் இருந்த வரைபடங்களை ஒரு யுஎஸ்பியில் பதிவு செய்து கொண்டு வருகின்றார்.

இவ்வாறு தப்பி வந்தவருக்கு அவரின் தாய் போருக்குள் சிக்குக்குப்பட்டது பிறகு தெரிகிறது. நாட்டுக்குள் நுழைவது கடினம் என்றாலும் ஓர் ஆபத்தான சாகசத்தைத் தாயாரைக் காப்பாற்றுவதற்காகச் செய்கின்றார். இறுதியில் தாய் காணாமற்போனவர்களின் பட்டியலுக்குள் அடங்கிவிடுகின்றார். இந்தத் துயரத்தோடு மீளவும் இந்த வரைபடக் கலைஞர் அகதியாக அடைக்கலம் புகுந்த நாட்டில் ஒரு வேலையைத் தேடி தனக்கான வாடகை வீட்டில் தனித்து வசித்து வருகின்றார். வீட்டில் அவர் ஒரு வரைபடத்தை மிகத் துல்லியமாக வரையத் தொடங்குகின்றார்.

அப்போதுதான் அவரது மற்ற சகோதரி இவரைத் தேடி வருகின்றார். இவருக்கோ அந்தச் சகோதரி தன்னைப் போரின் இடைநடுவில் விட்டுவிட்டுப் போனவர் என்கின்ற பெருங்கோபம் இருக்கின்றது. எனவே அந்த ஓவியச் சகோதரியை இவர் தனது வீட்டுக்குள் அனுமதிக்க விரும்பவில்லை. என்கின்றபோதும் அந்த ஓவியச்சகோதரி ஓர் அழையா விருந்தாளியாக இவரோடு தங்கிக் கொள்கின்றார்.

ந்த ஓவியச் சகோதரிக்கும் ஓர் கதையுண்டு. அவர் வீட்டிலிருந்து தன் பதின்மங்களிலேயே ஓடிப்போனவர். போர் நடந்தபோது அவர் தனது காதலியுடனும், அவரின் மகளோடும் தப்பி வருகின்றார். வருகின்ற பாதையில் அந்தக் காதலியையும், அவரின் மகனையும் இராணுவம், இவர் அவர்களுக்காய் உணவு தேடச் சென்றபோது பிடித்துவிடுகின்றது. அவர்களும் காணாமற் போய்விடுகின்றனர். தனது காதலியையும், பிள்ளையையும் விசாரிக்க இராணுவத்திடம் போகும் அவரையும் சந்தேகத்தில் கைதுசெய்து .வன்புணர்வு' முகாமிற்கு அனுப்பிவிடுகின்றது. ஒருகட்டத்தில் அங்கிருந்து தப்பி வருகின்றபோது காணாமற்போனவர்களைப் பதிவு செய்து வைத்திருக்கும் கோப்போடு ஓடிவந்துவிடுகின்றார்.

அந்தக் கோப்பில் அவரது காதலியும், காதலியின் மகனும் அடையாளமிடப்பட்டிருக்கும் இடத்திலிருந்து அவர்கள் எப்படி கைதுசெய்யப்ப்பட்டிருப்பார்கள், எங்கே கொண்டு செல்லப்பட்டிருப்பார்கள், என்ன நடந்திருக்கும் என்பதை இந்த ஓவியச்சகோதரி வரைபடங்களின் புள்ளிகளை வாசிக்கத் தெரிந்த சகோதரியோடு சேர்ந்து மர்மங்களை அவிழ்க்கின்றார். இறுதியில் அவர்கள் வந்தடையும் உண்மை மிகத் துயரமானது. எதனாலும் ஆற்றுப்படுத்த முடியாதது.

இது ஒருபக்கமாய் நடக்க, ஆக்கிரமிக்கும் இராணுவம், இந்தச் சகோதரிகளின் நாட்டின் வரைபடங்களை மாற்றியமைக்க, இந்த வரைபடக்கலைஞரான சகோதரி ஆக்கிரமிக்க முன்னர் இருந்த தனது தாயகத்தின் எல்லைகளுள்ள வரைபடத்தை உருவாக்க முயல்கின்றார். அதன் உச்சத்தில் அவர் செய்துவரும் தொழிலையும் இழக்கின்றார்.

இந்த நாவலில் எங்கே போர் நடக்கின்றதென்பதையோ அல்லது எந்த நாட்டுக்கு அகதியாகச் சென்றார்கள் என்பதோ சொல்லப்படுவதில்லை. அதுபோல காணாமற்போனவர்களின் துயரத்தையும், வன்புணரப்பட்டவர்களின் வேதனையையும், போரின் சீரழிவுகளையும் நாம் அது பொஸ்னியா-சேர்பியாவாகோ, சிரியாகவோ, பாலஸ்தீனமாகவோ ஏன் ஈழமாகக் கூடப் பொருத்திப் பார்க்கலாம் என்பதே இந்த நாவலின் சிறப்பு.

ஓரிடத்தில் ஒரு சகோதரி 'நீ ஒருபோதும் போர் நடந்தபோது உனக்கு என்ன நடந்தது என்று சொல்லவில்லையே?' என வினாவுகின்றார். அதற்கு ஓவியச் சகோதரி, 'உனக்கு என்ன நடந்ததோ அதுவே எனக்கும் நடந்தது' என்கின்றார். அது சகோதரியாக இருந்தாலென்ன, பெண்ணாக இருந்தாலென்ன ஒருவர் போரின் நிமித்தம் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கின்றார் என்பதைக்கூட வெளிப்படையாகப் பேசமுடியா மிகப் பெரும் மெளனத்தை நாம் பார்க்கின்றோம்.

யுத்ததிற்குள் இருந்து வந்தவர்களாலேயே போரின் எல்லாப் பரிமாணங்களையும் விபரிக்க முடியாதென்கின்றபோது, போரினால் சிறுதுளியும் தீண்டப்படாதவர்கள் யுத்தங்கள் குறித்துப் பேசும்போது எவ்வளவு அவதானமாக இருக்கவேண்டும் என்பதை வாசிப்பவர்க்கு நினைவூட்டிச் சொல்கின்ற புதினமாகவும் இது இருக்கிறது.


*************


(Dec, 2024)


கார்காலக் குறிப்புகள் - 64

-நினைவோ ஒரு பறவை- 


நேற்றிரவு இன்னொருமுறை தியாகராஜன் குமாரராஜாவின் 'நினைவோ ஒரு பறவை'யைப் பார்த்திருந்தேன். பார்க்கும் கணந்தோறும் புதிய அறிதல்களைத் தரும் எந்தப் படைப்பும் சலிப்பதில்லை. 'நினைவோ ஒரு பறவை' ஓர் எளிய காதல் பிரிவுக்கதை போலத் தோற்றமளிக்கக்க் கூடியவை. ஆனால் அதை ஒவ்வொரு காட்சியாகப் பிரித்தும்/இணைத்தும் பார்க்கும்போது அது வியப்பைத் தரக்கூடியது. அத்தோடு இதன் நெறியாள்கையோடு, ஒளிப்பதிவும், கலையும், இசையும் ஒவ்வொரு சட்டகத்திலும்(frame) குறிப்பிட்டுப் பேசக்கூடியவளவுக்கு மிகுந்த சாத்தியங்களுடையது.

இளையராஜாவின் பாடல்களையும், பின்னணி இசையையும் கேட்டுப் பாருங்கள். காதலின் உக்கிரமான கட்டங்களுக்கும், நெகிழ்வுறும் அனுபவங்களுக்கும் அழைத்துச் செல்லும் (இணையத்தில் தேடினால் 23 நிமிட 'நினைவோ ஒரு பறவை' இசை கிடைக்கும்). அதுபோலவே ஒளிப்பதிவும், கலையும். ஒரு மினிமலிஸ்ட் போல பொருட்கள் (முக்கியமாக சாமின் வீடு) வைக்கப்பட்டிருக்கும்; அதிலிருந்து ஒளிப்பதிவு எவ்வளவு நேர்த்தியாக குறைந்த ஒளியில் நமக்கு பின்னணியை மட்டுமில்லை, கதாபாத்திரங்களில் உணர்வுகளையும் அவ்வளவு அழகுபடுத்திக் காட்டுகின்றன.

இதில் இணைகள் முயங்கும் ஓர் காட்சியில் வரும் ராஜாவின் பின்னணி இசையை உன்னித்துக் கேளுங்கள். அந்த இசைத்துண்டுக்கு 'காமத்துப் பால்' எனப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. கிராமபோன் சுழலத் தொடங்குவதில் அந்தக் காட்சி ஆரம்பிக்கின்றது. காட்சிகள் எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக உச்சம் பெறுகின்றதோ, அதனோடு முயங்கி பின்னணி இசையும் உன்னதமான கணங்களை அடைந்து நம்மை வேறு விதமான உலகிற்கு அழைத்துச் செல்வதை உணருவோம். ஸ்டான்லி குப்ரிக்கின் 'Eyes Wide Shut' இன், அதன் முக்கிய பாத்திரங்கள் இரகசிய இரவு விருத்துக்கு நுழையும் காட்சியில் வெளிப்படையாக வீட்டின் பல்வேறு பகுதியில் முயங்கிக்கொண்டிருக்கும் காட்சி வரும்போது, தமிழ்ப் பாட்டு ஒலிக்கத் தொடங்கும். இதில் முதலில் பகவத்கீதையின் சமஸ்கிருத சுலோகம் பாடப்பட்டு அதனால் எழுந்த எதிர்ப்பினால், பின்னர் மாணிக்கம் யோகேஸ்வரனால் தமிழ்ப்பாட்டு பாடப்பட்டுச் சேர்க்கப்பட்டிருக்கும். மாணிக்கம் யோகேஸ்வரன் ஒரு ஈழத்தமிழர்; கர்னாடக சங்கீதத்தில் பாண்டித்தியமும், புகழும் பெற்றவர் (சென்னையில் மாணிக்கத்தின் இசைக்கச்சேரி இம்மாதம் நடைபெறப்போவதாய் எம்டிஎம்மின் பதிவொன்றில் வாசித்தேன்). இந்த ''Eyes Wide Shut' காட்சியில் இளையராஜா பின்னணி இசையைச் செய்திருப்பாரென்றால் எப்படியிருந்திருக்குமென நினைத்திருந்தேன். அப்படியொரு இளமையான காதல் உணர்வை 'நினைவோ ஒரு பறவை'யில் கொடுத்திருக்கின்றார்.

இந்தப் படத்தின் காட்சிகளின் ஆழங்களை அறிந்துகொள்ள தியாகராஜன் கொடுத்திருக்கும் பிற படங்களின் References ஐ விளங்கிக்கொள்வது அவசியமாகும். அதேவேளை இந்த References/குறியீடுகள் அறியாமலும் பார்க்கும் ஒருவர் தனக்கான திரைப்படத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியும். இந்தப் படத்தைப் பலர் 'decode' செய்தும், இன்னும் சொல்வதற்கு நிறைய விடயங்கள் இருப்பதுதான் சுவாரசியமானது.

சாதாரண மனோநிலையுடன் இதைப் பார்ப்பவர், எந்தக் காட்சியில் நாயகி சாம் டாட்டூவோடு வருகின்றார்/வருவதில்லை என்பது அக்கறையிருக்கவோ அல்லது கற்றாளை எப்போது பச்சையத்தோடு செழித்தும்/ எப்போது உலர்ந்தும் இருக்கின்றன என்பதைக் கூட உன்னிப்பாகக் கவனிக்காது விடலாம். எது உண்மையில் நடந்தது/எது சாம் தன் மனதில் நிகழ்த்திப் பார்த்தது/எது 'எழுதப்பட்ட அந்தப்பிரதியில்' இருப்பது என்கின்ற எண்ணற்ற மர்மச்சுழலில் விழுத்தக்கூடிய பிரதியாக இது இருக்கின்றது. மேலும் சாம் காதல் பிரிவின் பின் போகின்ற உளவியல் ஆலோசகரே, காதல் ததும்பி வழிகின்ற பொழுதில் ஏன் ஒரு சோதிடக்காரப் பெண்மணியாக வந்து அவர்களின் துயரமான எதிர்காலம் குறித்து தன்னியல்பிலே குறி சொல்கிறார் என்பதும் சுவாரசியமானது.

இந்தக் கதைக்கான உசாத்துணைகளாக 'The eternal sunshine of the spotless mind', 'The Matrix' எனப் பல திரைப்படங்களின் காட்சிகளை இணைத்துப் பார்த்துக் கொண்டு பார்க்கலாம். இப்படைப்பின் தொடக்கத்திலேயே முழுக்கதைக்கான Synopsis ஓர் உரையாடல்/காட்சியில் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

சாமின் வீட்டில் ஒர் அருமையான முயங்குதலின் பின், இதுதான் நமக்கான கடைசிச் சந்திப்பு என்று மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான விடைபெறல் நடக்கின்றது. அப்போது கே ஆடை அணிந்து சாமின் வீட்டிலிருந்து புறப்படும்போது, 'இனிச் சந்திக்கப் போவதில்லை, இன்னொருமுறை முயங்குவோமா' என சாம் கேயைப் பார்த்துக் கேட்கின்றார். பிரியும்போது எப்போதும் மிகச் சிறந்ததைக் கொண்டு செல்லவேண்டும், எனக்கு இந்த முயங்கலே மிகச் சிறப்பானது, இதனோடு போகின்றேன் போதும்' என்கின்றார் கே. 'உண்மையில் இதுதான் காரணமா, இல்லை உன்னால் இன்னொரு முறை உடனே முயங்க முடியாததா காரணம்?' என்று சாம் கேட்கின்றார். இங்கேதான் தியாகராஜன் என்கின்ற அசல் படைப்பாளி முன்னுக்கு வருகின்றார். இப்படி சாம் கேட்டதும், காட்சி அப்படியே கேயில் சில நொடிகள் உறைந்து நின்று அவனின் முகபாவனையைப் பார்க்கின்றது. 'எனது ஆண்மைக்கே இவள் அறைகூவல் விடுகின்றாள், இதோ இரண்டாம் முறை முயங்குகின்றேன்' என கே போகாமல், 'உண்மை, அதுவும் ஒரு காரணந்தான்' என மெல்லியதாகச் சொல்லிவிட்டு மிக நிதானமாக சாமின் வீட்டை விட்டு கே நகர்கின்றான். Norm ஆன தமிழ்த்திரைப்பட காட்சிகளை எள்ளல் செய்து உதறித்தள்ளுகின்ற ஓரிடம் இது.

இதேவேளை தனது திரைப்படங்களுக்கு விளக்கம் சொல்கின்ற அபத்தங்களையெல்லாம் தியாகராஜன் குமாரராஜா ஒருபோதும் செய்யாததைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். தமது திரைப்படங்களை promote செய்கின்றோம் என்று புறப்பட்டு தமது படைப்புக்களை நீர்க்கச் செய்த எத்தனையோ சம்பவங்களைப் பார்த்திருக்கின்றோம். அண்மைக்கால உதாரணங்களில் ஒன்று-'கொட்டுக்காளி'.

அதேவேளை தியாகராஜன் தன்னடக்கத்தோடு இவ்வாறு பொதுவெளியில் இருப்பதால் அதை 'பாவனை' என்று நம்பக்கூடிய சமூக ஊடகங்களின் காலத்தில் வாழ்கின்றோம் என்பதையும் மறந்துவிடக் கூடாது. அப்படி நினைக்கக்கூடியவர்களுக்கு, பெருமாள் முருகன் அண்மையில் எழுதிய கட்டுரையான 'பிள்ளைக் கிறுக்கலை' வாசிக்கப் பரிந்துரைக்கின்றேன்.

ஒரு மணித்தியாலப் படம், அதுவும் ஒரு வருடத்திற்கு முன் Modern Chennai Love இல் ஒரு பகுதியாக வந்தது, இப்போதும் இவ்வளவை யோசிக்க வைக்கின்றது/எழுத வைக்கின்றது என்பது சற்று ஆச்சரியமானதுதான். ஒரு படைப்பாளி உங்களை வியக்கவும், நெகிழவும் வைக்கின்றபோது, அந்தப் படைப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது அந்தளவு பரவசம் தரக்கூடியதல்லவா?

******************


(Dec 21, 2024)

மழைக்காலத் தனிமை

Thursday, January 02, 2025

 -Rain (Winter) Retreat-


புத்தரைப் பின் தொடர்பவர்க்கு Rain retreat என்ன என்பது தெரிந்திருக்கும். புத்தரின் காலத்தில் மழைக்காலத்தில் மூன்றோ/நான்கோ மாதங்கள் இந்தப் பருவத்தில் ஓரிடத்தில் புத்தரின் சீடர்கள் தங்கச் செய்வார்கள். இந்தக் காலத்தில் வெளியே செல்வது அவ்வளவு எளிதில்லை என்பதால் முற்றுமுழுதாக தியானத்துக்கும், அகத்தை ஆழப்பார்ப்பதற்கும் இந்தப் பொழுதுகளைப் பயன்படுத்துவார்கள். புத்தர் காலத்திலிருந்து இன்றைவரைக்கும் தேரவாத/மகாயான/வஜ்ரவாத என அனைத்துப் பிரிவினரும் ஆசியாவின் பல்வேறு நாடுகளில் இந்த மழைக்கால retreatஐ செய்து வருகின்றார்கள்.

மேற்குலகிற்கு பெளத்தம் பரவியபோது இந்த Rain retreat, பனிக்காலத்துக்குரியதாக அநேக இடங்களில் மாறியது. அநேகமாக நவம்பரில் தொடங்கி, பெப்ரவரியில் இந்த 'Rain retreat' நடப்பதுண்டு. புத்த மடாலயத்தில் ஒருவர் நீண்டகாலமாக தங்கி பிக்குவாக மாறியிருந்தால், யாரேனும் அவர்களிடம் எவ்வளவு காலம் இங்கே இருக்கின்றீர்கள் எனக் கேட்டால், அவர்கள் இத்தனை வருடங்களென நேரடியாகச் சொல்வதில்லை, நாம் இத்தனை Rain retreat எடுத்திருக்கின்றோம் எனச் சொல்வதே ஒரு மரபாக இருக்கின்றது. அந்தளவுக்கு புத்தர் சம்பந்தமான இடங்களில் இந்த Rain retreat என்பது முக்கியமாக இருக்கின்றது.

இன்றிலிருந்து கனடா போன்ற நாடுகளில் பனிக்காலம் தொடங்குகின்றது. ஒவ்வொரு பருவமும் மூன்று மாதங்களுக்குரியது என்பதால், பங்குனி இறுதிவரையும் பனிக்காலம் இருக்கும். அதற்குப் பிறகு வருவது வசந்தகாலம்.

இம்முறை பனிக்காலத்தை எனக்குரிய Rain retreat ஆக வாசிப்பிலும்/எழுத்திலும் செய்து பார்க்கலாமென விரும்புகின்றேன். இந்தக் காலத்தில் அதிகம் எனது ஸென் ஆசிரியரான தாயையும், அவரைப் பின்பற்றுவர்களின் பிரதிகளையும் வாசித்து, சுருக்கமாக நேரங்கிடைக்கும்போதெல்லாம் இங்கே பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கின்றேன்.

இப்படியான ஒரு பனிக்காலத்தில்தான் (தை மாதத்தில்) எனது ஆசிரியரான தாய் இவ்வுலகிலிருந்து இல்லாது போனார். அப்போது எனது ஆசிரியரான தாய் குறித்து எழுதியதை - அவர் குறித்து இதுவரை அறியாதவர்கள் இங்கே சென்று வாசிக்கலாம் (http://djthamilan.blogspot.com/2022/04/thich-nhat-hanh.html ). அவ்வப்போது தாய் பற்றி எழுதுவதைப் பார்த்து, நண்பர் 'அகநாழிகை' வாசுதேவன், தாய் பற்றி விரிவாக எழுதுங்கள், ஒரு நூலாகவே கொண்டு செய்யலாம்' என்று சொன்னதும் நினைவிலுண்டு.



தாய் கற்பித்தவற்றை, எனக்குள் முழுமையாக உள்வாங்கி அந்த அறிதலின் மூலம் ஆழமாகச் செல்ல நிறையக் காலம் எடுக்குமென நினைக்கின்றேன். என்றேனும் ஒருநாள் அவ்வாறு எனக்குள் நிகழும் மாற்றங்களைப் பார்த்து மனம் நிறைந்து, அப்படியான ஒரு நூலை தாய் பற்றி எழுதினால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

ஆக, இனி வரும் மூன்று மாதங்களுக்கு நான் வாசிக்கும் நூல்களிலிருந்து வரும் அறிதல்களிலிருந்து சிறு சிறு விடயங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கின்றேன்.

தற்சமயம் தாயின் முதன்மையான மாணவரான Brother Phap Hai எழுதிய"Nothing to It: Ten ways to be at home with yourself", Eve Marko & Wendy Nako எழுதிய 'The Book of Householder Koans', Tim Burkett எழுதிய 'Zen in the age of anxiety' ஐயும் சமாந்திரமாக வாசிக்கத் தொடங்கியுள்ளேன். இவற்றில் இருந்து எதையாவது பகிரத் தோன்றினால் இவை பேசுவதன் சாராம்சத்தையோ அல்லது சில பகுதிகளைத் தமிழாக்கவோ செய்வதிலிருந்து எனது மழைக்கால retreat ஐத் தொடங்கலாமென நினைக்கின்றேன்.

புத்தரோடு சம்பந்தப்பட்ட எல்லாமே collectiveவாக ஆனது. என் ஆசிரியரான தாயும் இனியான காலத்தில் collective buddhas தோன்ற வேண்டியது அவசியமென தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தவர். நாங்களும் கூட்டாக உரையாடிக் கொள்ளலாம்.

****************

 

(Dec 21, 2024)