கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நாகலிங்கப்பூ குறிப்புகள்

Wednesday, November 05, 2014

Haider (ஹதர்)

விஷால் பாரத்வாஜிற்கு ஷேக்‌ஷ்பியர் மீது பித்து இருப்பதை அவரின் கடந்தகாலத் திரைப்படங்களில் பார்க்கமுடியும். ஹதர் எனப்படும் இப்படம் 'ஹம்லட்'டின் பாதிப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கேன் காஷ்மீர் மக்களின் பின்னணி தேவைப்பட்டது என்பது இன்னும் புரியவில்லை. 'சுதந்திரம் என்பது பழிக்குப் பழி வாங்குவதில் அல்ல, வன்முறையைத் தாண்டி இருக்கிறது' எனச் சொல்லப்படுவதும் நல்லதொரு செய்திதான். ஆனால் சிக்கல் என்னவென்றால், ஒடுக்கப்படும் சமூகம்/இனம் மீதுதான் எல்லோரும் அறிவுரை மழைகளைப் பொழிகிறார்களே தவிர, ஒடுக்கும் அரசு/சமூகம் மீது மென்மையாகக் கூட ஏன் எதுவும் கூறத் தயங்குகின்றார்கள் என்பதுதான் புரியவில்லை.

இந்தத் திரைப்படம், மிகவும் 'சென்டிவ்வான' காஷ்மீர் சிக்கல்களை தெளிவாகச் சொல்லாது, குறிப்பிட்ட சில குடும்பங்களுக்குள் சுருங்கியதை ஒருபுறம் விட்டுவிடுவோம். கொல்லப்படும் உடலங்களும், பெருகும் இரத்தமும், துப்பாக்கிச் சூடுகளும் - இவற்றை- மிக வெளிப்படையாக வைக்கும் திரைப்படங்கள் என்னை நெருக்கமுறச் செய்வதில்லை. மிகவும் அந்தரத்தோடு அவற்றை கடந்துவிடவே என்னுடைய போர்க்கால அனுபவங்கள் எப்போதும் நினைவூட்டிக்கொண்டிருக்கும். இந்தப்படத்திலிருக்கும் அதீத வன்முறையான பல இடங்களை அவ்வாறே தாண்டியிருக்கின்றேன்.

இந்தப் படத்தில் விஷால் அப்பாவி முஸ்லிம்கள் காஷ்மீரில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவதை வெளிப்படையாகக் காட்டியிருக்கின்றார். அவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா அல்லது இல்லையா எனத்தேடுகின்றவர்களின் துயரமும் ஓரளவிற்குச் சொல்லப்படுகின்றது. கைதுசெய்யப்படுபவர்கள் பற்றிய விபரம் உரிய முறையில் அவர்களின் குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தவேண்டும் என ஐ.நா வலியுறுத்துவதையும், அதில் கையெழுத்திட்டிருக்கின்ற இந்தியா மீறிக்கொண்டிருப்பதையும் காட்டுகின்றார். அதுமட்டுமின்றி எப்படி ஒன்றுமே தெரியாத அப்பாவிகளின் நகங்கள் பிடுங்கப்படுவதை, நிர்வாணமாக்கி மின்சார ஷொக் கொடுக்கப்படுவதை, ஆண்மை முற்றாகச் சிதைக்கப்படுவதை - இந்தியா இராணுவத்தின் உண்மையான முகத்தை- நேரடியாகக் காட்டியிருப்பதை வரவேற்றாக வேண்டும், காஷ்மீர் இயல்புநிலைக்கு வருவதற்கு அங்கே பெருமளவாய்க் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவத்தை அகற்றுதல் முக்கியமானது என ஒரு குரல் கூறுவதும் கவனிக்கத்தக்கது.

இந்தியா இராணுவத்தின் முற்றுகைகளும், ஆண்களை/சிறுவர்களை அடையாள அட்டைகளுடன் ஊர்களின் பொதுவெளியில் கூடச்சொல்வது, அவ்வாறு வந்தவர்களை தலையாட்டிகளின் முன் நிறுத்துவதும், கைதுசெய்வதுமென... அப்படியே எனக்கு ஈழத்தின் இந்திய இராணுவகாலத்தை முன்னிறுத்தியது. எல்லா இடங்களிலும் உடல் பரிசோதனை நிகழ்த்தப்படுவதைக் கூட விஷால் ஒரு பாத்திரம் மூலம் தத்ரூபமாய்க் காட்டியிருப்பார். ஒருவர் தன் வீட்டிற்குள் நுழையாது வெளியிலே நிறைய மணித்தியாலமாய் நின்றுகொண்டிருப்பார். தாய் அவரை உள்ளே வாருங்கள் எனச்சொன்னாலும் வரவேமாட்டார். இதைப் பார்க்கும் தெருவில் ஒருவர், அந்த ஆணிடம் வந்து அடையாள அட்டையைக் கேட்டுவிட்டு, உடல் பரிசோதனையை செய்வார். இவையிரண்டும் முடிந்தவுடன் அந்த ஆண் வீட்டிற்குள் தன்பாட்டில் சென்றுவிடுவார். எப்படி இப்படி பரிசோதனைகளுக்கு மனிதர்கள் உட்படுத்தப்பட்டு, அது ஒருவித மனவியாதியாகி/சாதாரணமாகி விட்டிருக்கின்றது என ஒருவகையான எள்ளலில் இங்கே கூறப்படுகிறது.

மேலும், எப்படி இந்திய இராணுவத்தால், காஷ்மீரில் போராடும் இயக்கங்களுக்கு எதிரான முஸ்லிம் அமைப்புக்கள் வளர்த்தெடுக்கப்பட்டு, அவர்கள் சாதாரண பொதுமக்களை கொலைசெய்வதை இந்த 'தீவிரவாத' இயக்கங்களே செய்கின்றன என ஊடகங்களினூடு பொதுமக்களுக்கு செய்தியை தவறாக வழங்குகின்றன என்பதையெல்லாம் வெளிப்படையாக விஷால் வைப்பதைப் பாராட்டத்தான் வேண்டும்.

காஷ்மீர் போராட்டத்தை எதிர்க்கும் பெரும்பான்மையான அரசு/இராணுவம் சார்பானவர்கள் வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு பாகிஸ்தானே இந்த இயக்கங்களுக்கு ஆதரவும் ஆயுதமும் அளிக்கிறது என்பது. அந்த மக்களின் ஆதரவில்லாமல், எந்த ஒரு இயக்கமும் இயங்குதல் எளிதல்ல என்பது ஒருபுறமிருக்க, சரி அதையே உண்மையாக எடுத்தால் கூட, ஏன் கடந்தகாலங்களில் இதே இந்திய அரசு ஈழத்தில் தோன்றிய இயக்கங்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்ததென தம் அரசை நோக்கி இவர்கள் கேள்வி கேட்பதேயில்லை. சரி, ஈழத்தில் தமிழ்மக்கள் ஒடுக்குமுறையிலிருந்து விடுபடத்தான் ஆயுதங்களை இந்திய அரசு கொடுத்திருக்கின்றதென்று சொன்னால்கூட, ஏன் பல்வேறு இயக்கங்களை வளர்த்தது என்பது (இலங்கையரசோடு போரிடமட்டுமின்றி, தங்களை மீறி வளர்ந்தால், அவர்களுக்குள் சண்டைபிடிக்க எளிதாகவும்) பற்றியும் யோசித்தாகவேண்டும்.

இறுதியில் இந்தப்படம் ஹம்லட்டின் உளவியல் பிரச்சினைகளுக்குள் போனதும், முஸ்லிம்களின் வெவ்வேறுதரப்புக்களை எதிர்த்தரப்புக்களாகக் காட்டுவதாயும் சுருங்கிவிட்டாலும், ஏதோ ஒருவகையில் இந்திய இராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காஷ்மீரையும், அந்தமக்கள் அனுபவிக்கும் வேதனைகளையும் ஒரளவிற்குக் காட்டுவதை மறுத்துவிடமுடியாது.


 அம்ருதா பத்திரிகை

'அம்ருதா' இதழோடு எப்படித் தொடர்பு ஏற்பட்டதெனச் சரியாக நினைவினில்லை. அநேகமாய் 'காலம்' இதழில் வந்துகொண்டிருந்த படைப்புக்களினூடாக 'அம்ருதா'வின் நண்பர்கள் என்னைக் கண்டடைந்திருக்கக் கூடுமென நினைக்கின்றேன். 'அம்ருதா'விற்கு ஆக்கங்கள் அனுப்பச் சொல்லிக் கேட்டனர். அவ்வப்போது 'அம்ருதா'விற்கு படைப்புக்களைக் கொடுத்துக்கொண்டிருந்தபோது, 'அம்ருதா'வின் நண்பரொருவர் தொடர்/பத்தி எழுத அழைப்பு விடுத்தார். நான் விரும்பியபோது எழுதுபவனே தவிர தொடர்ச்சியாக எழுதுபவன் அல்ல என்பதால் சம்மதஞ் சொல்லத் தயக்கமாயிருந்தது. எனினும் தற்கால ஈழ/புலம்பெயர் படைப்புக்கள் குறித்து தமிழக வாசகர்களுக்கு அறிமுகஞ்செய்ய நல்லதொரு சந்தர்ப்பம் இது என்பதால் தவறவிடக்கூடாதென பின்னர் முடிவு செய்திருந்தேன்.

'வன்னி யுத்தம்' (அப்பு), 'அகாலம்' (புஷ்பராணி), 'பாலைகள் நூறு' (இரவி) என தனிப்பட்ட நூற்களை மட்டுமில்லாது 'கவிதைகளில் நகரும் வரலாறு', 'சில அரசியல் பிரதிகள்' என்பவற்றிலும் பல ஈழ/புலம்பெயர்ந்தவர்களின் படைப்புக்களை முன்வைத்து எழுதியிருக்கின்றேன். மேலும் ஈழத்துக்குப் போனபோது அங்கே தசாப்தங்களுக்கு மேலாய் கைவிடப்பட்டிருந்த என் கிராமம் பற்றியும், ஈழத்தில் சந்தித்த நண்பர்கள் பற்றியும் எழுத முடிந்திருந்தது. இந்தத் தொடரில்தான், பலர் தங்களுக்குப் பிடித்ததாய்க் கூறிய வான்கோவின் ஓவியங்களை ஆம்ஸ்டடாமில் நேரில் பார்த்த பரவசத்தில் 'வர்ணங்களில் தெறிக்கும் வாழ்க்கை'யினையும் எழுதினேன்.

இணையத்தைத் தவிர இலங்கையிலிருப்பவர்களை நேரடியாக அணுகமுடியாத சூழலில் - முக்கியமாய் வன்னி யுத்தம் போன்றவற்றை வெளிப்படையாக விற்கவே முடியாத ஈழத்துச்சூழலில்- ஏதோ ஒருவகையில் இலங்கையிலிருப்பவர்களையும் 'அம்ருதா'வினூடு நெருங்க முடிந்திருந்தது. 'சில அரசியல் பிரதிகள்' மீண்டும் இலங்கையில் ஒரு சஞ்சிகையில் மீள்பிரசுரமானதைத் தற்செயலாய்ப் பார்க்கவும் நேர்ந்தது.

சென்ற வருடங்கூட மெக்ஸிக்கோ போய், மாயாக்களின் கலாசாரத்தை நேரில் பார்த்து வந்த திளைப்பில் மிகப்பெரிய் பயணக்கட்டுரை (ஏழெட்டுப் பக்கங்களுக்கு மேல் வரும்) எழுதி அனுப்பியபோது, எவ்விதத் தயக்கமோ, வெட்டலோ இன்றி அப்படியே 'அம்ருதா' பிரசுரித்தது. எனக்கே பிறகு அந்த இதழின் பெரும் பகுதியை எடுத்துவிட்டேன் என்ற குற்றவுணர்வு சஞ்சிகையைப் பார்த்தபோது வந்தது. அந்தளவிற்கு என் மீது நம்பிக்கையும், எதையும் எழுதலாம், வெட்டமாட்டோம் என்று மிகப்பெரும் சுதந்திரத்தையும் அம்ருதா தந்திருக்கின்றது. 'அம்ருதா'வில் மிகப் பிடித்த இன்னொரு விடயம் என்னவென்றால், நிறைய ஈழ/புலம்பெயர் படைப்பாளிகளின் படைப்புக்களைத் தொடர்ச்சியாக வெளியிடுவது.

அச்சு ஊடகம் என்றவகையில் இங்கே 'வைகறை' பத்திரிகையிற்குப் பிறகு எனது ஆக்கங்கள் நிறைய வெளிவந்தது 'அம்ருதா'வில் என்றே நினைக்கின்றேன்.

ஒரு சஞ்சிகை தொடர்ச்சியாக வெளிவருவது அவ்வளவு எளிதல்ல. 'அம்ருதா' இப்போது 100வது சஞ்சிகையையாக மலர்ந்திருக்கின்றது.

மிகுந்த மகிழ்ச்சி, 'அம்ருதா' நண்பர்களுக்கு வாழ்த்து!


நேற்று எலிஸபெத் தனது நண்பர் ரிச்சர்ட் பற்றிப் பகிர்ந்திருந்தார். Eat, Pray, Love நூலை வாசித்ததவர்களுக்கு ரிச்சர்ட்டை எலிஸபெத் இந்தியாவிலுள்ள ஆச்சிரமத்தில் சந்திப்பது பற்றிய பகுதிகள் நினைவிருக்கக் கூடும். எலிஸபெத்தின் கடந்தகாலத்தில் உறைந்துவிட்ட மனதை ரிச்சர்ட்டே சற்று அதட்டிக் கதைத்து நிகழ்காலத்திற்குக் கொண்டுவருவார். பிறகான காலத்தில் எலிஸபத்தும் ரிச்சர்ட்டும் அமெரிக்காவில் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது அவர்கள் கிராமப்புறமாய்க் காரில் போகும்போது, சனநடமாட்டமற்ற ஒரு வீட்டை உடைத்து உள் நுழைகின்றனர். எலிஸபெத் 2ம் மாடியிற்குப் போவதற்கான ஏணியைப் பிடித்துக்கொண்டிருக்க, ரிச்சர்ட் வீட்டிற்குள் நுழைந்து ஒவ்வொரு யன்னலினூடாகவும் குழந்தை போல மகிழ்ச்சியாக எட்டிப் பார்த்தார் என -இப்போது இறந்துவிட்ட- ரிச்சர்ட்டை எலிஸபெத் நினைவுகூர்கின்றார்.

இதேமாதிரி வீடுகளிற்குள் களவாக நுழைந்து பார்ப்பதை கொண்டாட்டமானதாய் ஒரு திரைப்படத்தில் (பெயர் மறந்துவிட்டது) பார்த்தது நினைவுக்கு வருகின்றது. ஒரு ஆணும் பெண்ணும் தற்செயலாய் எங்கோ ஓரிடத்தில் சந்தித்து நட்பாகின்றனர். பின்னர் இருவரும் வெவ்வேறு நகர்களுக்கு road trip செல்கின்றனர். ஒவ்வொரு புதிய நகரிலும் காணும் ஒரு குடும்பத்தைத் தெரிவுசெய்து, அவர்கள் வசிக்கும் வீடுகளை நோட்டம் விட்டு, பிறகு அந்தந்தக் குடும்பங்கள் வெளியே போகும்போது வீடுகளை நுட்பமாய் உடைத்து உள்நுழைவார்கள். அங்கேயே பல்வேறு தோற்றங்களுடன் வேடமிட்டு கலவியும் செய்கின்றனர் . ஓரிருமுறை வீட்டின் சொந்தக்காரர்கள் திரும்பிவர அரைகுறையில் எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடித்தப்புவார்கள். அதிலொரு காட்சியில் முதிய தம்பதிகள் திரும்பிவர இவர்கள் அரைநிர்வாணமாய் நிற்கும் காட்சியைப் பார்த்து அவர்கள் திடுக்கிடுவதை இப்போதும் நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கக்கூடியது.

ஹருகி முரகாமியின் புதிய கதையான Scheherazade ல் இப்படி வீடுடைத்து உள்ளே நுழையும் கள்ளப் பழக்கம் பற்றியே அதிகம் விபரிக்கப்படுகின்றது. தன் பதின்மங்களில் ஒரு இளைஞன் மீது காதல்கொண்டு Scheherazade அவனது வீடு எப்படியிருக்குமென ஒருநாள் பாடசாலை நேரத்தில் அவன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைகின்றார்.

அவ்வாறு நுழைந்து வெளியே வரும்போது ஏதாவது ஒருபொருளை அந்தப் பையனின் நினைவாக ஒவ்வொருமுறையும் எடுத்தும் கொண்டுவருவார். ஒருகட்டத்தில் அப்படி வீட்டிற்குள் அத்துமீறி நுழைவது இவருக்கு நிறுத்தவே முடியாத விளையாட்டாய் ஆகிவிடும். அதேசமயம் தான் அந்தப் பையனின் வீட்டுக்குள் நுழைவதை அவன் அறியவேண்டும் என்பதற்காய் சில பொருட்களை நுட்பமாய் விட்டுவிட்டும் வருவார். ஒருகட்டத்தில் தான் இப்படி அத்துமீறி நுழைவது கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸால் மாட்டவேண்டிவருமோ என்ற பயமும் Scheherazadeற்கு வருகின்றது. இந்த தொடர்ச்சியான நிகழ்வு எப்படி பின்னர் நிறுத்தப்படுகிறது என்பதை முரகாமி சுவாரசியமாகச் சொல்லியிருப்பார்.

இதேபோன்றுதானோ உலகில் செல்வந்தர்களாகவும்/செல்வாக்கு உள்ளவர்களாகவும் இருப்பவர்கள் சிலவேளைகளில் கடைகளில் பொருடகளைத் திருடச்செய்வதை அறியும்போது நினைப்பதுண்டு. பெறுமதியான எந்தப் பொருட்களை வாங்க பணமிருந்தும் ஏன் மிகச்சாதாரண பொருட்களை திருடுகிறார்கள், பிறகு பிடிபடுகின்றார்கள் என்று யோசிப்பதுண்டு. அது ஒரு குறுகுறுப்பான அவ்வளவு எளிதில் நிறுத்தமுடியாத செயல் போலும். அது ஒருவகையான "வியாதி' எனச் சொல்பவர்களும் உண்டு.

ஒரே ஒழுங்கில் எல்லாவற்றையும் வாழ விரும்புவர்களுக்கோ அல்லது சட்டம்/ஒழுக்கத்திற்குக் கட்டுப்படுபவர்களுக்கோ இவ்வாறான விடயங்களை அவ்வளவு எளிதாக விளங்கிக்கொள்ளவும் முடியாது.

அம்பையின் 'ஒரு கறுப்புச் சிலந்தியுடன், ஓர் இரவு'

Wednesday, October 29, 2014

டைப்பாளிகள் பலரை முதலில் அவர்களின் படைப்புக்களை வாசித்து அறிமுகமாகித்தான், பின் அவர்கள் யாரெனத் தேடிப் பார்த்திருக்கின்றேன். விதிவிலக்காய் அம்பையை அறிந்துகொண்டது, தொண்ணூறுகளின் பிற்பகுதியில் வாசித்த காலச்சுவடின் நேர்காணல் ஒன்றின் மூலமாக. முன்னட்டையே இல்லாத காலச்சுவடை கண்டதும் வாசித்ததும் ஒரு தற்செயலான நிகழ்வு. ஆனால் முதன்முதலாக வாசித்த காலச்சுவடும், அம்பையின் நேர்காணலும் அதுவரை இருந்த வாசிப்பின் திசையை மாற்றியிருக்கின்றது. இப்படி ஒருவர் வெளிப்படையாகவும், விமர்சன பூர்வமாகவும் எல்லாவற்றையும் உடைத்துப் போடமுடியுமா என யோசிக்க வைத்த நேர்காணலது.

அப்போது பதின்மவயதுகளிலிருந்த எனக்கு அம்பை ஏதோ இருபதுகளில் இருப்பவரைப் போன்ற உற்சாகமுடையவராகத் தெரிந்தார். அவர் அப்போதே 50களில் இருந்திருக்கிறார் என்பதைப் பின்னர் அறிந்தாலும், நகுலனைப் போல அவர் ஒரு இளமையானவராகவே எனக்குள் இன்றுமிருக்கின்றார். அம்பையின் இறுதியாய் வந்த 'ஒரு கறுப்புச் சிலந்தியுடன், ஓர் இரவு' தொகுப்பை வாசிக்கும்போது அதே உற்சாகத்தையும், அவருக்குப் பின் வந்த/வரும் எந்தத் தலைமுறையும் நெருக்கங்கொள்ளும் கதைகளையுந்தான் எழுதியிருக்கின்றார் என்பதைக் கண்டுகொண்டேன்.

முரகாமியின் எந்த நாவலை வாசித்தாலும், அதில் வரும் பாத்திரங்களுக்கு எவ்வளவு வயதாயிருந்தாலும், அவர்களின் பதின்மப்பருவங்களை எங்கோ ஓரிடத்தில் முரகாமி தொட்டுச் செல்லாமல் கடந்து சென்றிருக்கமாட்டார். அதற்கு இறுதியாய் வந்த 'Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage' என்ற நாவலில் கூட, கதையில் Tsukuru Tazaki, 36 வயதாக இருந்தாலும், நாவலைத் தொடங்கும்போது sukuruயின் பதின்மமும், 20களில் தற்கொலையிற்கு த்யாராகும் மனோநிலையை விபரிப்பதுடனேயேதான் நாவல் தொடங்குகின்றது. அவ்வாறே அம்பையின் கதையை வாசிக்கும்போது, அதில் வரும் பாத்திரங்கள் எத்தகைய வயதுகளில் இருந்தாலும் -என்றுமே வயதுபோகாத- ஒரு இளம்பெண் கதைகளிற்குள் மறைந்தும் மறையாத மாதிரி இருப்பதை அவதானிக்க முடியும்.

இந்தத் தொகுப்பில் 'பயணம் - XX' என்ற இலக்கமிட்ட கதைகளே நிறைய இருக்கின்றன. இப்படி 'பயணம்' என தலைப்பிடப்பட்டு கடந்த தொகுப்பில் வந்த கதைகளின் நீட்சிதான் இதுவெனினும், ஒவ்வொரு பயணங்களும் வெவ்வேறு கதைகளைக் கூறுகின்றன. பாரிஸிற்குப் போய் மரபுவாதிகளிடம் சிக்குப்படுகின்ற இராவணன் கோட்டை என்றாலென்ன, 'திருவள்ளுவர்' சிலையுடன் நெருக்கம் கொள்கின்ற இங்கிலாந்துக் கதையாயிருந்தாலென்ன எல்லாமே பயணித்தலின் குறுக்குவெட்டு முகங்களே.

இந்தியாவிற்குள் பயணிக்கும்போது நிகழ்பவை சில சிரிப்பைத் தருகின்றன என்றால பல பதற்றங்களை ஏற்படுத்துகின்றன. பயணிப்பதில் பெண்களுக்கு இருக்கும் சிக்கல்கள் பற்றி பலர் நிறைய எழுதியிருக்கின்றனர்/ விவாதிருக்கின்றனர். ஒரு கதையில் வரும் பாத்திரம் நடுத்தரவயதுகளில் இருந்தாலும், இந்த வயதில் ஜூன்ஸ் அணிந்து பயணித்தாலும் ஆண்களின் கண்கள் எப்படி உற்றுப் பார்க்கும் என நினைத்து, ஜூன்ஸ் அணிவதைத் தவிர்க்கும்போதே, அம்பை இளம் பெண்களுக்கு இருக்கும் இடைஞ்சல்களை -ஆடையின் அரசியலை- மிக எளிதாக வாசிப்பவருக்குச் சொல்லிவிடுகின்றார்.

டெல்கியில் படிக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய இன்னொரு கதையில், அந்தப் பெண் டெல்கியிற்கு ரெயினில் பயணிக்கும்போது இன்னொரு பெண்ணைச் சந்திக்கின்றார். இந்த -மற்ற- பெண், தன் ஊரில் குடும்பத்தினர் பிடிக்காத யாரையோ ஒருவரைக் கல்யாணங் கட்டித்தரப்போகின்றனர் என்பதற்காய் வீட்டை விட்டு எவ்வித தயாரிப்புமின்றி ஓடிவருகின்றவர். ஆனால் டெல்கியைப் பற்றி ஒன்றுமே அறியாத இந்தப் பெண் எப்படி டெல்கியில் தப்பிப்பிழைக்க முடியும் என டெல்கி யூனிவசிட்டியில் படிக்கும இந்தப்பெண் பதற்றமடைகிறார். கடந்த வருடங்களில் படித்துக்கொண்டிருக்கும் அவரை நடந்துபோகும்போதே துப்பட்டாவைப் பிடித்து இழுத்து சில்மிஷம் செய்ய முயன்றிருக்கின்றனர். இன்னொரு நாள் ஆண் நண்பனோடு இரவில் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவனைத் தாக்கிவிட்டு இவரை நெருங்கமுயன்றபோது அருந்தப்பில் தப்பியவர். வேறொருநாள், வாகனத்தில் பயணம் போனபோது, ஒரு குழு அரைநிர்வாணமாய்ப் பெண்ணை சிதைத்து அவரை எங்கோ புதைக்கப் போய்க் கொண்டிருந்ததை கண்டுமிருக்கின்றார். அவரைக் காப்பாற்றவில்லையே என்ற குற்றவுணர்வு மட்டுமில்லை, அப்படி சிதைக்கப்பட்ட பெண்ணைப் பற்றி அடுத்தநாள் எந்தப் பத்திரிகையில் செய்தி வரவில்லை என்பதையும் அறிந்து, இப்படி அடையாளந்தெரியாது எத்தனை பெண்களின் உயிர்கள் பாலியலிற்காய் காவுகொள்ளப்பட்டிருக்கும் என்று நினைத்தும் கவலைப்படுகின்றார்.

வ்வாறான ஒரு பெருநகரிற்கு எவரையும் தெரியாது ஊரிலிருந்து தப்பிவந்து விட்டேன் என நினைக்கும் பெண் எவரின் துணையின்றி வாழமுடியுமா என இந்த வளாகப்பெண் அந்தரப்படுகின்றார். ஒருகட்டத்தில் 'தயவுசெய்து திரும்பிப் போய்விடு, இது நீ நினைக்கின்ற நகரமல்ல, இதே ரெயினிலேயே திரும்பிச் சென்றுவிடு' என்று வற்புறுத்துகின்றார். படிக்கும் இந்தப் பெண்ணே தனியே வீட்டைப் போவதே அவ்வளவு பாதுகாப்பானதல்ல என்பதால் அவரின் மாமா ஒருவரே கூட்டிப்போக ரெயில்வே ஸ்ரேசனில் வந்து நிற்கிறார். ஆனால் வீட்டை விட்டு ஓடிவந்த பெண் திரும்பிப் போகாது, பெருநகரிற்குள் -எங்கே போவதெனக் கூட தெரியாது- நுழையத் தொடங்குகின்றார். இறுதியில், கதை சொல்பவர் தன் உடல் சில்லிடுகின்றது என்கிறார். அதற்கு டெல்கி குளிர் மட்டுமே காரணமில்லை என்பதோடு கதை முடிகின்றது. நமக்குள்ளே இப்படி டெல்கி என்ற பெருநகருக்குள் வந்து விழுந்துவிட்ட அந்த மற்றப்பெண்ணுக்கு என்ன நிக்ழப்போகின்றது என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் எழுகின்றன.

இன்னொரு வடஇந்தியப் பயணத்தில், ஒரு முதியவர் ரெயினுக்குள் தண்ணீர் தாகத்தில் தவிக்கிறார். அந்தப் பெட்டி முழுதும் அவருக்குத் தெரிந்தவர்களே இருக்கின்றார்கள். அவர்களே அனைவரும் இவரை விட சாதியின் படிமுறைகளில் வேறுநிலைகளில் இருப்பார்கள். எனவே பயணிக்கும் இந்தப்பெண்ணிடம் தண்ணீர் கேட்கிறார். கதைசொல்லி தண்ணீரைக் கொடுத்தாலும், அந்த முதியவர் இவரின் என்ன சாதி எனக்கேட்கின்றபோது நான் உங்கள் சாதியல்ல என்கிறார். திரும்பத் திரும்ப சாதி என்ன என முதியவர் கேட்டாலும், இந்தப் பெண், தான் என்ன சாதியென்பதைச் சொல்லவேமாட்டார். இதனால் முதியவர் தண்ணீரை வாங்கிக் குடிக்காது தாகத்துடன் அடுத்த ஸ்டேசனில் இருக்கும் பைப்பில் தண்ணீரைக் குடிக்கிறார். பின்னர் அந்த முதியவர் இரெயினுக்குள் சாப்பிட்டுவிட்டு வெற்றிலை/பாக்குப் போடும்போது பாக்கு தொண்டைக்குள் சிக்குபட்டு மூச்சிவிடத் திணறத்தொடங்குவார். தண்ணீரை அவசரத்திற்கு இந்தப் பெண் குடுக்கும்போது, தண்ணீர் இதற்கு வேலை செய்யாது, எனச் சொல்லிவிட்டு, இன்னொருவருவர் அவர் உடலைத் வளைத்துப் பிடித்து, ஒருமாதிரியாக பாக்கை எடுத்துவிடுவார். இந்த முதியவரின் சிந்திய பாக்குச் சாறை அந்த நபரே சுத்தமும் செய்துவிட்டு, அந்த முதியவரிடம், பாத்ரூம் சுத்தமாய்த்தானிருக்கிறது, நீங்கள் போய்க் குளிக்கலாம் என்கிறார். உதவிய மனிதர் தலித் என்பதால், இப்படித் தொட்டுக் காப்பாற்றியதால், அவருக்குத் 'தீட்டு' வந்திருக்கும் என்பதை நன்கு அறிந்தவர் அவர்.

அந்த தலித், தானொரு வைத்தியர் எனவும், நீங்கள் ஒரு தலித்தில்லை எனத் தெரியும், பிறகும் ஏன் சாதியைச் சொல்லி தண்ணீர் கொடுக்க மறுத்தீர்கள் எனக் கேட்பார். இந்தப் பெண், 'அந்த முதியவருக்கு இவ்வளவு சாதிவெறி இருக்கும்போது, என்னால் இப்படித்தான் இருக்க முடியும்' என்கிறார். அப்போது அந்த தலித் டாக்டர், 'உங்களுக்கு சாதி அடையாளத்தை மறுக்கும் தெரிவிருக்கிறது, ஆனால் எங்களால் அப்படி முடியாது' எனச்சொல்வது கதையின் மிகக் கூர்மையான இடம். அது மட்டுமின்றி கதையின் முடிவில் அந்த முதியவர் துவாயை எடுத்துக்கொண்டு 'தீட்டு' க்கழிக்க பாத்ரூமைப் போவதுகூட, ஒருவரின் உயிரைத் தலித் காப்பாற்றினால் கூட, அவர்களால் எந்த்ப்பொழுதில் சாதிப்பெருமிதத்திலிருந்து வெளியேறிவிடமாட்டார்கள் என யதார்த்தை அறைந்து சொல்கின்ற இடம்.

ம்பையின் பல கதைகள் எனக்கு நெருக்கமானதற்கு, பெரும்பாலான கதைகள் தமிழ்பேசும் சூழலிற்கு வெளியே நிகழ்பவை என்பதும் ஒரு காரணம். வாழும் சூழல் எப்படியிருந்தாலும் அந்த இடத்தில் தமிழ்மனம் எப்படி இயங்கிக்கொண்டிருக்கும் என்பதை சினிமாப் பாடல்களாலோ தமிழிசைப் பாடல்களாலோ மெல்லியதாய்த் தொட்டுக்காட்டிக்கொண்டேயிருப்பார். மேலும் அம்பையின் பெண் பாத்திரங்களை தமக்கான விடுதலையின் வெளியைத் தேடுபவர்களாய் இருந்தாலும், அவர்கள் சந்திக்கும் ஆண்கள் எவ்வளவு மோசமானவர்களாய் இருந்தாலும் அவர்கள் மீது காழ்புணர்வைக் கொட்டுவதில்லை என்பதையும் குறிப்பிடவேண்டும். தனக்கான சொந்தக்காலில் நிற்கும் பெண் தனக்கான ஒரு உலகைச் சிருஷ்டிததுக்கொள்ளவும், அங்கே வாழவும் தலைப்படுகின்றபோது அவர்களுக்கு ஆண்கள் ஒருபெரும் பொருட்டாய் இருப்பதுமில்லை.

'நிலவைக் காட்டிய பெண்' எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று. வளாக நாட்களில் தன்னோடு ஒத்த இரசனைகளுள்ள நண்பனோடு ஒரு பெண் நெருக்கமாகின்றார். அந்தப் பெண்ணை கறுப்பானவள் என்று பிறர் கேலிசெய்யப்படும்போது, இந்தப் பெண்ணைக் காப்பாற்றுபவனாக அவனேயிருக்கின்றான. ஒருமுறை இருவருக்கும் ஜரோப்பாவில்(வெவ்வேறு நகரங்களில்) சில மாதங்கள் தங்கிப்படிக்கும் வாய்ப்பு வரும்போது, உடலாலும் நெருக்கமாகின்றனர். திரும்பி வரும்போது அந்தப் பெண் தான் கர்ப்பமடைந்திருக்கின்றேன் எனச்சொல்லி, இந்தியா போனதும் திருமணம் செய்வோம் என்கின்றாள். 'நான் உன்னைத் திருமணம் செய்வதென்று நினைக்கவேயில்லை. உனது நிறத்தை நீயே பார்த்ததில்லையா?' என அவளின் அடியாழம்வரை சென்று வேதனை செய்கின்றான். இந்தியா திரும்பும் பெண், மிகவும் கஷ்டப்பட்டு அபோர்ஷன் செய்கின்றாள். அபோர்ஷனிற்கு வெளிநாட்டிலிருந்து காசனுப்பிய அவனை ஓரிடத்திற்கு கூப்பிட்டு, இந்தக் காசிற்கா நான் என்னை உன்னிடந்தந்தேனென செருப்பெடுத்து அடிக்கிறாள்.

காலம் நகர்கின்றது. இந்தப் பெண் பேராசிரியை ஆகிவிட்டார் மட்டுமில்லை, இப்படித் தன் மகன் செய்தான் என்பதை அறிகின்ற அந்த ஆணின் தாயோடு நெருக்மும் ஆகிவிட்டார். 'நீ அபோர்ஷன் செய்தது உன் தெரிவு. ஆனால் இப்படி உதவியில்லாது எங்கோ தொலைவில் போய் நின்று செய்யும்போதாவது என்னிடம் சொல்லியிருக்கலாம். நான் உனக்குத் துணையாயிருந்திருப்பேன்' என்கிறார் அந்த ஆணின் அம்மா. ஆனால் இந்தப் பெண்ணுக்கு தான் பிரியமாய் வளர்க்க விரும்பிய இரட்டைப் பிள்ளைகளை இப்படியான நிலைக்குப் போகச் செய்துவிட்டேன் என்கின்ற கவலையிருக்கிறது. அதை எப்படிக் கலைந்து தன் 'தாளத்தை' நிதானமாக்கின்றார் என்பதை அம்பை இந்தக் கதையில் அற்புதமாக எழுதியிருப்பார். அந்த ஆண் அப்படிச் செய்துவிட்டான் என்ற வேதனை அந்தச் சந்தர்ப்பத்தில் மட்டுமே இருக்கின்றது. அது குறித்த எந்த நிந்தித்தலும் பிறகு கதையில் எங்குமேயில்லை. எனெனில் இப்போது அந்தப் பெண் தனக்கான உலகில் வாழத்தொடங்கிவிட்டாள். ஆணின் இருப்பு அவளின் வாழ்வோ இருக்கிறதோ இல்லையோ அவர் முன்னர்போல வேதனைப்படப்போவதில்லை. இதுவும் சேர்ந்ததுதான் வாழ்க்கையென புரிந்துகொள்வதில் பெண்களைப் போல பல ஆண்களால் இருக்கமுடிவதில்லை.

இதைத்தான் இன்னொரு கதையான, 'ஒரு கறுப்புச் சிலந்தியுடன், ஓர் இரவில், குடும்பம் நெருக்குகிறதென, மூன்று வயதுப்பிள்ளையுடன் தன்னை விட்டுவிட்டுப்போன துணையை, ஒரு பெண் நினைத்துப் பார்க்கின்ற கதையும் வேறுவிதமாய்க் கூறுகின்றது. 'நீ ஏன் என்னை விட்டுப்போனாய், உனக்குப் பிறகு நான் சந்தித்த எந்த ஆணும் உன்னைப் போல இருந்ததில்லையே. ஒரு கறுப்புச் சிலந்தியைப் போலவாது என்னுடன் கூடவே இருந்திருக்கலாமே' என உடல்வலி மிகுந்த இரவில் தன் துணையை சிலந்தியாக உருவகித்துப் பார்க்கின்ற வித்தியாசமான கதை.

பெண்களுக்கு இருக்கும் துயரங்களையும், திணறல்களையும், தடுப்புச்சுவர்களைப் பற்றி அம்பையின் கதைகள் கூறினாலும், அவை ஒருபோதும் ஆண் வெறுப்பை எந்த இடத்திலும் ஊதிப் பெருக்குவதில்லை. இந்த உலகமும், இந்த ஆண்களும் எவ்வளவு சிக்கலாகவும், மோசமாகவும் இருந்தாலும் அதைத்தாண்டி பெண்களை வாழ உற்சாகப்படுத்துகின்ற குரல்களை அம்பையின் பல கதைகளில் காணலாம். பெண்களின் இருத்தலை இன்னும் சற்று உள்முகமாய் நிதானமாய் பார்க்கக் கோருகின்ற கதைகளில் இருந்து நம்மால் த்ப்பிப்போக முடியாது, கரைந்து நெகிழத்தான் முடிகிறது

(Oct 03, 2014)

ரொபர்டோ பாலனோ (Roberto Bolano)

Monday, October 20, 2014

1.
பெரும்பாலான படைப்பாளிகளைப் போல ரொபர்டோ பாலனோ, அவரின் மறைவின் பின்னே கண்டுபிடிக்கப்பட்டவர். அவரின் படைப்புக்களை வாசித்த மோகத்தில் பலர் அவர் வாழ்ந்த வாழ்வு எப்படியானது என்று தேடிக்கொண்டிருக்கின்றனர். அது இன்னும் மூடப்பட்ட பக்கங்களாய் இருக்கும்போது ரொபர்டோ இன்னுமின்னும் மர்ம்ம நிறைந்த ஒருவராய் தோற்றங்களை மாற்றியபடியிருக்கின்றார். அது மட்டுமின்றி அவரின் புனைவுகளின் வழி அவரின் குணாதிசயங்களைத் தேடுபவர்கள் கண்டுகொள்ளும் விம்பங்களையும் ரொபர்டோ அடிக்கடி குலைத்தபடியுமிருக்கின்றார்.

இப்போது கிடைக்கும் ஒரளவு தகவல்களின்படி 1953ல் சிலியில் டிரக் டிரைவருக்கும், ஆசிரியை ஒருவருக்கும் மகனாய்ப் பிறந்த ரொபர்டோ தன் பதினைந்தாவது வயதில் மெக்சிக்கோவிற்கு குடும்பத்தினருடன் புலம்பெயர்கின்றார். டைஸ்லக்‌ஷியாவால் பாதிக்கப்பட்டிருந்த ரொபர்டோ, கற்பித்தலை கேட்கவோ அல்லது கிரகிக்கவோ முடியாது திணறிக்கொண்டிருந்த மாணவனாய் இருந்தாரென அவரின் ஆசிரியர்களால் குறிப்பிட்டிருக்கின்றனர். மெக்சிக்கோவில் உயர்பாடசாலைக் கற்றலை உதறித்தள்ளிவிட்டு, பத்திரிகையாளராக தன்னை மாற்றிக்கொண்ட ரொபர்டோ, அங்கே கவிஞர்களுக்கான சிறு அமைப்பைக் கட்டியெழுப்பியிருக்கின்றார்.

தீவிர மார்க்சியவாதியான (டிரொஸ்கியவாதி) ரொபர்டோ பின்னாட்களில் மெக்ஸிக்கோவில் இருந்து சிலியிற்கு பினோச்சோவின் சர்வாதிகார அமைப்பிற்கு எதிராகப் போராடத் தன் தாய் நாட்டிற்குப் போகின்றார். அரசிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ரொபர்டோ கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கவும்படுகின்றார். அங்கே சிறைக்காவலர்களாய் வேலை செய்யும் அவரின் பழைய இரண்டு பாடசாலை நண்பர்களால் காப்பாற்றப்பட்டு சிலியை விட்டுத் தப்பியோடுகின்றார். இந்த நிகழ்வு குறித்து -இப்படி ரொபர்டோ சிலியிற்கு போய் தப்பி வந்தது- நிகழ்ந்ததா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படாது விவாதங்கள் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த தப்பித்தலில்போது இடையில் எல் சல்வடோர் சென்று அங்கே கவிஞர்களோடும், போராளிகளோடும் நட்பு கொண்டார் எனவும் கூறப்படுகின்றது.

தனது 24 வயதில் ஸ்பெயின் போகின்ற ரொபர்டோ, பார்சிலோனாவின் பல்வேறு கடலோர நகரங்களில் வாழ்கிறார். அவ்வாறான ஒரு நகரத்திலேயே (Barnes) அவர் தனது துணையான லோபஸைச் சந்தித்து கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாய் -இறக்கும்வரை- தனது துணையோடும் பிள்ளைகளோடும் Barnesலேயே வாழ்கிறார். அவரின் அநேக படைப்புக்கள் பல்வேறு பதிப்பகங்களினாலும், ஏஜெண்டுகளாலும் நிராகரிக்கப்பட்டபோதும் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருந்திருக்கின்றார். அவரது துணை அவர் எழுதுவதற்கான சூழலை தொடர்ந்து எவ்விதத் தொந்தரவிற்கும் உள்ளாகாது கொடுத்திருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தக்கது. எனினும் ரொபர்டோவின் இறுதி வருடங்களில் அவர் தன் துணையை விட்டு தனித்து வாழ்ந்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.

2.
ஏன் எனக்கு ரொபர்டோ மிக நெருக்கமானவராக ஆகிப்போகின்றார் என யோசித்துப் பார்க்கின்றேன். அவரைப் போன்ற பதின்ம வயதுகளிலேயே எனது புலம்பெயர்வு நிகழ்ந்து மட்டுமில்லை, அநேகமான புலம்பெயர்ந்தவர்கள் செய்யும் தொழில்களான கோப்பை கழுவுதல், குப்பை அள்ளுதல், கழிவறைகள் சுத்தம் செய்தல் போன்ற சாதாரண தொழில்களையே ரொபர்டோ தொடர்ந்து செய்துமிருக்கின்றார் என்பதும் ரொபர்டோவை நான் நெருங்கியதற்கான காரணங்களில் சிலவாய் இருந்திருக்கலாம்.. மேலும் ஒதுக்குபுறமான வாழ்வை வாழ்ந்தவர் என்றபடியாலும், எந்த நிலப்பரப்போடும் அதிகம் நெருக்கம் கொள்ளாத மனோநிலையாலும், சிலி நாட்டைச் சேர்ந்த பாப்லோ நெரூடாவிலிருந்து, இஸபெல் அலெண்டே வரை எல்லோரையும் விமர்சனங்களால் அடித்துத் துவைத்துமிருக்கின்றார். ஆகவே தன்னை எங்கும் பொருத்திக்கொள்ளாத அல்லது எவரையும் பின் தொடர விரும்பாத ஒருவரை இந்த்ச் சமூகம் அவ்வளவு எளிதாய் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதும் இயல்புதானில்லையா?

ரொபர்டோவின் எழுத்துக்களை வைத்து, அவர் ஒரு பெரும் குடிகாரனாகவும், போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்திருக்கலாம் என்று கட்டியெழுப்பட்ட விம்பத்தை அவரைப் பற்றி இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் ஆய்வுகள், அப்படியில்லையெனத் தெரிவிக்கின்றன. அது மட்டுமில்லாது அவர் தன்னை எப்போதும் கவிஞனாகவே நினைத்துக்கொண்டவர், அவரின் குடும்ப நிலையிற்காகவே பிற்காலத்தில் நாவலாசிரியராக மாறினார் எனக் கூறப்பட்டதைக் கூட, அப்படியல்ல அவருக்கும் நாவலாசிரிய்ராகும் கனவு நீண்டகாலமாய் இருந்தது என்பதை இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ள அவரின் தொடக்ககாலக் குறிப்பேடுகள் சில நிரூபிக்கின்றன.

3.
ரொபர்டோவின் படைப்புக்களை வாசித்து நெருக்கம் கொண்ட பலர் இப்போது ரொபர்டோ வாழ்ந்த பார்சிலோனாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றபடி இருக்கின்றனர். அப்படி அங்கே போய், ரொபர்டோவின் நீண்டகால வீடீயோ கடை நண்பருடன் உரையாடும் லிஸா எமக்கு இன்னொருவிதமான ரொபர்டோவைக் காண்பிக்கின்றார். எப்போதும், எங்கேயும் புத்தகங்களை வாசித்துக்கொண்டிருக்கும் ஒருவரையே, ரொபர்டோவிவின் நண்பர் மட்டுமில்லை வேறு பலரும் நினைவு கொள்கின்றனர். தோள்வரை நீளும் தலைமயிரும், அடர்த்தியான கண்ணாடியும் அணிந்த ரொபர்டோவேயே அவர்கள் தங்கள் ஞாபகங்ளினூடாக மீண்டும் நிகழிற்குக் கொண்டுவருகின்றனர். மகனை பாடசாலையில் இருந்து அழைத்து வரக் காத்திருக்கும்போதுகூட ரொபர்டோ புத்தகங்களை வாசிக்கும் ஒருவராக மட்டுமின்றி, சிலவேளைகளில் சினிமா தியேட்டருக்குள்ளும் நூலை வாசிக்கும் தீவிரமான ஒருவராக இருந்திருக்கின்றாரென அவரோடு ஒரு தசாப்தகாலததிற்கு மேலாய்ப் பழகிய நண்பர் நினைவுகூருகின்றார்.

மேலும், ரொபர்டோ ஒரு பெருங்குடியாளனோ அல்லது போதைமருந்து அடிமையோ அல்லவென குறிப்பிடும் அந்த நண்பர், ஆனால் இவ்வாறானவர்களின் வாழ்க்கையை அவதானிப்பதற்காய் மணித்தியாலக்கணக்கில் பார்களில் நேரத்தை ரொபர்டோ செலவழித்திருக்கின்றார் எனச் சொல்கின்றார். மற்றவர்கள் உரையாடுவதை அமைதியாக எப்போதும் கேட்க விரும்பும் ரொபர்டோவுடன் பின்னாட்களில் போதையிற்கு அடிமையான நிறையப் பேர் நண்பர்களாய் ஆகியும் இருக்கின்றனர். அவர்களின் கதைகளைக் கேட்ட்கும்போது நிறைய கோப்பியும், சிகரெட்டும் அருந்தும் ரொபர்ட்டோவைத்தான் தனக்குத் தெரியும் என்கிறார் அந்த நண்பர்.

இவ்வாறாக ரொபர்டோவைத் தேடிப்போகும் லிஸா, அவரின் நாவல்கள் மெக்சிக்கோவையோ, சிலியையோ பின்புலங்களாய்க் கொண்டவையாக இருநதாலும், அந்த நாவல்களில் அவர் தொலைந்துபோன கனவுகளையும், கடந்து போன வாழ்வையும் எழுதினாலும், அவர் அந்த நாவல்களின் சித்தரித்தவைகள், தான் ஸ்பெயினில் வாழ்ந்துகொண்டிருந்த நிலப்பரப்புக்களையும் வாழ்ந்த வாழ்வையுந்தான் என்கின்றார். இது ஒருவகையில் புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளிகள் உணர்கின்ற யதார்த்தமும் கூடத்தான்.

சிலவேளைகளில் நாம் நமது தாயகத்தைப் பற்றி எழுதும்போது, நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தேசத்தின் கதையைத்தான் எழுதிக்கொண்டிருக்கின்றோமோ என்ற தோற்ற மயக்கம் ஏற்படுவதும் இயல்புதானல்லவா? ஆனால் ரொபர்டோவிற்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் ரொபர்டோ சிலியை விட்டுப் பிரிந்தபின் ஸ்பானிஷ் பேசக்கூடிய நிறைய நாடுகள் தென்னமரிக்காவில் நிறைய இருந்தன. இறுதியாய் அவர் வாழத் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஸ்பெயினிலும் அவரை அவ்வளவு அந்நியப்படுத்தப்படாத அவரின் தாய்மொழியைப் பேசும் வாழும் மக்களின் நிலப்பரப்பில் வாழ முடிந்தது என்பதே.

கடந்த வருடம் ஒரு எழுத்தாள நண்பருக்கு புலம்பெயர்ந்திருந்து எழுதுவதில் வரும் சலிப்பைப் பற்றி ஒரு கடிதத்தில் நான் குறிப்பிட்டபோது, அவர் முதன்மையாகக் குறிப்பிட்டது, 'உங்களுக்கு உங்கள் மொழி பேசும் மக்கள் திரளிடையே வாழ முடியாதது பெரும் இழப்பு' என்றிருந்தார். கசப்பானது என்றாலும் அதுதான் உண்மை.

4
ரொபர்டோவின் நண்பரான விடீயோ கடைக்காரர், தானும் ரொபர்டோவின் மணிக்கணக்கில் அரசியல்,இலக்கியம், திரைப்படங்கள், பெண்கள் பற்றிப் பேசுக்கொண்டிருப்போம் என்கின்றார். படைப்பாளியாக இருந்தபோதும் எப்போதும் தன்னை யாரேனும் அளவுக்கதிகமாய்ப் பாராட்டினால் அவர்களை விலத்தி வரவே ரொபர்டோ விரும்பியிருக்கின்றார் எனவும், அதே சமயம் எழுத்தாளர்களுடன் எப்போது அளாவளாவ பிரியப்பட்டவராக இருந்திருக்கின்றார் எனவும் சொல்கின்றார். தாங்கள் வூடி அலனின் படங்கள் உள்ளிட்ட நிறையப் படங்களை விவாதித்ததாகவும், ரொபர்டோவிற்கு டேவிட் லிஞ்ச், நைட் ஷியாமளன் போன்றவர்களின் திரைப்படங்கள் அதிகம் பிடிக்கும் எனவும் குறிப்பிடுகின்றார்.

ரொபர்டோவின் படைப்புக்களை ஆய்வு செய்தும், அவர் யார் என்பது பற்றியும் நிறையப் புத்தகங்கள் இப்போது வரத்தொடங்கிவிட்டன. அதுமட்டுமின்றி இன்னமும் பிரசுரிக்கப்படாது ரொபர்டோவின் கையெழுத்துப் பிரதிகளாக இருந்தவைகளும் பிரசுரங்களுக்குத் தயாராகியும் கொண்டிருக்கின்றன. அண்மையில் ரொபர்டோவை இறுதியாய் நேர்காணல் செய்தவர், ரொபர்டோவிற்கு பிற்காலத்தில் ஒரு காதலி இருந்திருக்கின்றார் என்றும், அந்தப் பெண்ணையும் கவனத்தில் கொள்ளவேண்டுமென புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றார்.

எதுவென்றாலும் புதுவகையான எழுத்தை அறிமுகப்படுத்தும் ரொபர்டோ போன்றவர்களை அவரின் வாசகர்கள் கொண்டாடவே செய்வார்கள்.அதுபோலவே அவரைப் பற்றிய புதிர்களும் அவரைப் பற்றிய வசீகரத்தை இன்னும் அதிகரித்தபடியே இருக்கும். இறந்தபின்னும் ஆயிரம் பொன் என்பது யானைகளுக்கு மட்டுமில்லை, ரொபடர்டோ, வான்கோ போன்ற படைப்பாளி/ஓவியர்களுக்கும் பொருந்தும் போலும். ஆனால் இதையெல்லாவற்றையும் விட இந்தப் புகழ், பெயர் என்பவற்றைப் பொருட்படுத்தாது, தாங்கள் வாழும் காலத்தில் நிராகரிக்கப்பட்டிருந்தபோதும், தாம் விரும்பியதை எதன் பொருட்டும் கைவிடாது செய்துகொண்டிருந்தார்களே, அதைத்தான் ரொபட்டோவிடமிருந்தும், வான்கோவிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

(நன்றி: 'அம்ருதா', புரட்டாதி, 2014)


ஏற்கனவே எழுதியவையும்/ எழுதுவதற்கு உதவியவையும்:

(1) https://www.facebook.com/photo.php?fbid=10152513264238186&set=a.135912858185.111205.645983185&type=1&theater
(2) http://www.newyorker.com/magazine/2013/04/22/mexican-manifesto
(3) http://www.newyorker.com/magazine/2012/01/23/labyrinth-2
(4) http://www.salon.com/2013/06/24/myths_and_legends_of_roberto_bolano_exposed_in_new_exhibit_partner
(5) http://www.independent.co.uk/arts-entertainment/books/features/fame-after-death-why-roberto-bolao-became-a-literary-superstar-posthumously-8706107.html

நித்தியகல்யாணிப்பூ குறிப்புகள்

Wednesday, October 15, 2014

 1.
நேற்று மழைநாளோடு வாசித்து முடித்த நாவல், ஜீ.முருகனின் 'மரம்'. எனக்குப் பிடித்த (விரும்பிய அளவு நாட்களைக் கழிக்கவேண்டுமென பிரியப்படும்) திருவண்ணமலையைச் சுற்றி நடக்கின்ற கதையென்பதால் அங்கேயே போய்விட்டதென்ற உணர்வுடன் வாசித்துக்கொண்டிருந்தேன். கவிஞர்/ஓவியர்களின் வாழ்வைத் தொட்டு செல்வதோடு, நீட்ஷேயும், டால்ஸ்டாயும் பயமுறுத்தாமல்/நுட்பமாகப் பயன்படுத்தப்பட்டதால் இன்னுமின்னும் நாவல் ஈர்த்துக்கொண்டிருந்தது.

தனது துணைவியும் கவிஞருமான சந்திராவின் எல்லாத் 'துரோகங்களை'யும் மறந்துவிட்டு, டால்ஸ்டாயின் ஒரு பாத்திரம்போல மண்டியிட்டு அழவேண்டுமென கண்ணன் விரும்புவார்... "அது அவளுடைய துரோகங்களுக்கு உரிய பதிலீடாக,, பகை உணர்வையெல்லாம் அன்பாக மாற்றக்கூடிய உலைகளமாக அது இருக்கும்' எனவும் நம்புவார். டாஸ்டாய் எழுத நினைத்தும், மனிதன் கடவுளாக மாறும் தருணங்கள் இதுவேயெனவும் மேலும் யோசிப்பார். ஆனால் அவர் தன் துணையை நேரில் சந்திக்கும்போதெல்லாம், சராசரிக்கும் கீழான மனிதராகவே மாறிவிடுகின்றார். 'கிரஸ்லர் சோனட்டாவில் வரும் கணவனைப் போல கத்தியை எடுத்து அவளது வயிற்றில் சொருகும்' ஆசை'யே அவருக்குப் பெருகுகிறது. எமது அன்பானவர்களாக மாறும் விருப்பையும், பிறரை மன்னிக்க விரும்பும் மனோபாவத்தையும் எவை குலைத்துக்கொண்டேயிருக்கின்றன? ஏன் நம்மால் அவ்வளவு எளிதாக அப்படியாக மாறமுடியாதிருக்கின்றது எனத் தொடர்ந்து யோசிக்கவைக்கும் இவ்வாறான பாத்திரங்களே நாவல் முழுதும் நம்மைத் தொந்தரவுபடுத்தியபடியே இருக்கின்றன.

மாலையில் வாசிக்கத்தொடங்கியது அயோத்திதாச பண்டிதரைப் பற்றி டி.தருமராஜன் எழுதிய 'நான் பூர்வ பெளத்தன்'. அந்த முன்னுரையை கவனித்தாகவேண்டும். முக்கியமாய் ஒவ்வொருவரும் எழுதுவதற்குப் பல்வேறுகாரணங்கள் இருக்கக்கூடுமெனப் பட்டியலிட்டு, ஒரு தலித் எழுதத் தொடங்கும்போது, அவருக்கு முன்னாலுள்ள சவால், 'இதுவரை எழுதப்பட்டிருக்கும் அத்தனை அவதூறுகளுக்கும் எதிராக எழுதுவதே' என சொல்லப்பட்டிருப்பது எத்தகைய உண்மையான வார்த்தைகள். முக்கியமாய் பல்வேறுவிதமான மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு 1880களில், தமது கோரிக்கைகளை பிரிட்ஷாருக்கு அனுப்பும் மாநாட்டில், அயோத்திதாச பண்டிதர் ஒரு கோரிக்கையை வைக்கின்றார்.

சைவர்களாகவும், வைணவர்களாகவும் இருக்கும் பறையர்களை கோயில்களுக்குச் செல்ல வழிபட அனுமதிக்கவேண்டும். அந்தக் கோரிக்கை பிரிட்டிஷ்காரருக்குப் போகாமாலே, உயர்சாதியினரால், சிவனும் விஷ்ணுவும் எங்களுக்குரிய கடவுள்கள், உங்களுக்கென்றுதானே சுடலைமாடன்களும், காட்டாண்டிகளும்' இருக்கின்றதெனக் கூறி நிராகரிக்கின்றனர். ஆனால் அதேகாலகட்டத்திலேயே, இந்தியாவில் முதன்முதலாக குடிசன மதிப்பீடு செய்யப்படும்போது, சிவனையோ, விஷ்ணுவையோ இன்னபிற பெருந்தெய்வங்களை வழிபடாது தனக்குரிய குல/நாட்டார் தெய்வங்களை வழிபட்ட மக்களை ஆங்கிலேயோரோடு நின்ற உயர்சாதியினர் 'இந்துக்கள்' என்ற வகைக்குள் அடக்கச் சொல்கின்றனர்.

அயோத்திதாச பண்டிதரே இவ்வாறே பெருந்தெய்வங்களுக்கு வெளியே நின்ற ஒதுக்கப்பட்ட சாதிகளையும், பழங்குடிகளையும், 'ஆதித்தமிழர்' என்ற வகைக்குள் சேர்க்கச் சொல்லிக் குரல் கொடுக்கின்றார். எனினும் அவரின் குரல் செவிமடுக்கப்படாது, எல்லோரும் இந்துக்களாகவே சேர்க்கப்படுகின்றனர். இன்றும் சமஸ்கிருதமயமாக்கலில் நாட்டார் தெயவங்கள் பெருந்தெய்வங்களாக கலக்கப்படும் சூழலில் தலித்துக்கள் சமமான மனிதர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டா இவையெல்லாம் நடக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் எல்லாச் சூட்சுமமும் நமக்கு விளங்கும்.

 2.
நீங்கள் ................ அனுப்பியபொழுதில் தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வு பற்றிய நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் எப்படி உங்களால் காமத்தைக் கடந்து போக முடியவில்லை என்பதுபோல தஸ்தயேஸ்கியை வாசித்தபோது அவரால் ஏன் எந்தக் காலத்திலும் நிம்மதியாகவோ மகிழ்ச்சியாகவோ இருக்க முடியவில்லை, எப்போதும் தளும்பிக்கொண்டிருந்தார் என யோசித்துக்கொண்டிருக்கின்றேன். இத்தனைக்கும் மரணத்தை மிக அருகில் கண்டபின், இது மீளுயிர்ப்பு என விளங்கி வைத்திருக்கின்ற தஸதயேவ்ஸ்கியால் பிறகான காலங்களில் மகிழ்ச்சியைக் கண்டடைய முடியவே இல்லை.

அவர் தன்னை யாரென்று கண்டடையக்கூடுமென்றா அல்லது காமத்தின் மூலம் எதையாவது அடையக்கூடுமென்றா பெண்களைத் தேடிப் போயிருக்கின்றார் எனவும் தெரியவில்லை. ஆனால் அவரின் வாழ்வில் நிறையப் பெண்கள் வந்திருக்கின்றனர். எனக்கு மிக ஆச்சரியமென்னவென்றால் அவர் அன்னாவோடாவது மகிழ்ச்சியாக இருந்திருப்பாரென்றால், அன்னா பிற்காலத்தில் எழுதிய நினைவுகளின் தொகுப்பில் கூட தஸ்தயேவ்ஸ்கி துயரம் நிறைந்த ஒருவராக இருந்திருக்கின்றார் என்பதைத்தான் அடையாளங்காண முடிகின்றது. 'நான் தனியே இருக்கின்றேன், தனித்திருக்கின்றேன்' என்றே அடிக்கடி அன்னாவிடம் குறிப்பிடுகின்றார். அன்னாவின் முதற்குழந்தை சொற்ப மாதங்களில் இறந்துபோகின்றபோது 'மகிழ்ச்சியற்ற இந்த மனிதர் ஒரு பெண்ணைப் போல விசும்பி விசும்பி அழுதததைப் பார்த்தபோது என்னால் கூட சகிக்கமுடியாதிருந்தது' என்றே அன்னா எழுதியிருக்கின்றார்.

ஆனால் இவ்வளவிற்கும் அப்பால், மிகுந்த வலதுசாரித்தன்மையுடைய, ஜரோப்பாக் கலாசாரத்தையே (அன்றையகாலத்தில் மொஸ்கோ, பீட்டர்ஸ்பேர்க் என்ற இரண்டு வேறுபட்ட கலாசார வாழ்வு இருந்தன) வெறுக்கின்ற தஸ்தயேவ்ஸ்கியா இவ்வளவு அருமையான புத்தகங்களை எழுதியிருக்கின்றார் என்பதுதான் வியப்பளிக்கின்றது. இவ்வளவு துயரங்களுக்கும் பதற்றங்களுக்குமிடையில் இருந்து கொண்டு இப்படி எழுதமுடிகின்றதென்றால் அவருடைய மகிழ்ச்சியோ/நிறைவோ எழுதுவதில் மட்டுமே இருந்திருக்கின்றதெனப் புரிந்துகொள்கின்றேன்.

நீங்கள் காமத்தைக் கடக்கமுடியாதிருக்கின்றதென எழுதியதை வாசிக்கும்போது, ஜெயமோகன் ஓரிடத்தில் எழுதியது ஞாபகம் வருகின்றது. 'காமம் ஒரு நீலியைப் போல உங்களை தன் கண்களைப் பார் பாரென்று கேட்டுக்கொண்டேயிருப்பாள். நீங்கள் விழிகளை நிமிர்ந்து பார்த்தீர்களோ அப்படியே காமத்தோடு என்றுமே போராடிக்கொண்டிருக்கவேண்டும். ஆனால் நான் நீலியை நிமிர்ந்து பார்க்காது கடந்து போய்க்கொண்டிருக்கின்றேன்' என்றெழுதியிருந்ததாய் ஞாபகம். அதை வாசித்தபோது, இல்லை நான் காமத்தை அப்படிக் கடக்கப் போவதில்லை. நீலியின் கண்களை நிமிர்ந்து பார்ப்பேன். அதனோடு போராடியே தாண்டிச் செல்வேன் என நினைத்துக்கொண்டதுண்டு....

(நண்பரொருவருக்கு எழுதிய கடிதத்திலிருந்து...)

3.
னந்தவிகடன் கையில் கிடைக்கும்போதெல்லாம், தவறாது வாசிப்பது அ.முத்துலிங்கத்தின் 'கடவுள் தோன்றிய இடம்' தொடர்கதையும், ப்ரியா தம்பியின் 'பேசாத பேச்செல்லாம்' தொடரும் . ப்ர்யா தம்பியின் தொடரோடு, விகடனில் அதே வாரங்களில் வரும் பிறவற்றை ஒப்பிடுவது இன்னும் சுவாரசியமாக இருக்கும். பெண்களுக்குப் பொதுவாய் வெளிப்படையாய்/இயல்பாய்க் காதலைச் சொல்லும் ஆண்களைப் பிடிக்கும் என்று ஒரு தொடரில் எழுத, அதே இதழில் வா.மு.கோமு காதலை இறுதிவரை சொல்லாத ஆணை, ஒரு பெண்ணுக்கு அதிகம் பிடிப்பதாய்க் கதை எழுதியிருப்பார். இப்படி இரண்டு வேறுவிதமான உலகங்கள் உருண்டு கொண்டிருக்கின்றன என்பதை வாசிப்பது கூட சுவாரசியமானது.

இந்தமுறை ப்ரியா தம்பி, சினிமாவில் சித்தரிக்கும் 'க்ளிஷே' பெண்களுக்கும், யதார்த்ததில் இருக்கும் பெண்களுக்கும் இடையிலான வித்தியாசங்களையும், ஆனால் பெரும்பான்மையான ஆண்கள் எப்படி தன் நடைமுறைவாழ்வில், சினிமாவில் இருந்து பெண் கதாபாத்திரங்களை, தமக்குத் தெரிந்த பெண்களோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் என்பதையும் விரிவாக எழுதியிருப்பார். அதில் 'இங்கிலிஷ் விங்கிலீஷ்' படத்தில் சிறிதேவி செய்யும் பாத்திரத்தை வியந்து எழுதியிருப்பார். அந்தப் படத்தைப் பார்த்த தருணத்தில் நானும் இப்படியான ஒரு நிலையில், பெண் பாத்திரம் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது எனவே நினைத்திருந்தேன். ஆனால் ஒரு தோழி 'இறுதியில் பார்த்தால் எவ்வளவுதான், தன்முயற்சியில் முன்னேறிய சிறிதேவியும், குடும்பத்திற்கு கட்டுபட்டு தன் திறமைகளை மறைக்கும் ஒரு பெண்ணைப் போலவே காட்டப்பட்டிருப்பார். இப்படிக் காட்டுவதே ஆண்களுக்குப் பிடித்தமானது' என்று ஒரு புள்ளியைத் தொட்டுக்காட்டியிருந்தார்.

ப்ரியா தம்பியியும் இதற்கு முன் வாரங்களில், எப்படி பிஎஜ்டி படித்த பெண்கள் எல்லாம், திருமணம் என்று வந்தவுடன் எல்லாவற்றையும் கைவிட்டு குடும்பப் பெண்களாகிவிடும் அபத்தத்தைக் குறிப்பிட்டதாய் நினைவு. எனவே இங்கிலீஷ் விங்கிலீஷ் எப்படி முடிக்கப்படுகிறது என்பது குறித்தும் நாம் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது என நினைக்கிறேன். இதையெல்லாவற்றையும் விட, இந்த வாரத் தொடருக்கு ஓவியர் வரைந்த படம் பற்றியது. ப்ரியா தம்பியின் தொடர் எப்படி ஆண்களின் புரிதல்கள் தவறென்று சொல்ல முயற்சிக்கிறதோ, அதை மறுதலிப்பதாய் இந்த ஓவியம் இருக்கின்றது. என் விளங்கிக்கொள்ளலில் இந்த ஓவியம், பெண்கள் இடப்பக்கத்தில் இருப்பது போல இருக்கின்றார்கள், ஆனால் திரைப்படங்கள் படச்சுருளில் இருப்பது போலச் சித்தரிக்கின்றதாக எடுத்துக்கொள்கிறேன். ஆனால் இப்படி உள்ளே அணிவதைக்கூட அப்பட்டமாய்த் தெரிவது போல ஓவியம் வரைவதே, தொடரில் எழுதப்பட்டிருக்கின்ற எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போய் விடுகின்றது. இதை அந்தத் தொடரை எழுதுகின்ற ப்ரியா தம்பியோ, விகடன் ஆசிரியர்களோ கவனத்தில் கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது. இப்படித்தான் முன்பும் ப்ரியா தம்பியின் சிறுகதையிற்கும் ஏதோ அபத்தமான ஒரு ஓவியம் வரையப்பட்டிருந்தது நினைவில் வருகின்றது.

குங்குமத்தில் அசோகமித்திரன் எழுதும் தொடரையும் விடாமல் வாசிப்பதுண்டு. இம்முறை யு.அனந்தமூர்த்தி பற்றி எழுதியிருக்கின்றார். எல்லாவற்றையும் உடைத்துப் பார்க்க விரும்பிய ஆனந்தமூர்த்தி தன் வாழ்வில் பராம்பரியத்தைக் கைவிடாமல் இருந்தவர் எனக்குறிப்பிட்டு, அவரின் மகனொருவர் வேறொரு மதத்தைச் சேர்ந்த பெண்ணை மணம் செய்தபோது, அனந்தமூர்த்தி மகனிற்கு அன்றைய காலை உபநயனம் செய்தார் என அசோகமித்திரன் குறிப்பிடுகின்றார். எழுத்தைத் தாண்டிய அனந்தமூர்த்தி ஒரு மரபுவாதியாக இருந்திருக்கக்கூடும். பெரும் இடதுசாரித் தலைவர்களாய் இருந்தவர்களே இறுதியில் பூநூல் சடங்குகளுக்குள் பாய்ந்தவர்கள் என்பதைத்தானே கடந்தகாலம் நமக்குக் கற்றுத்தந்திருக்கின்றது.

ஆனால் அசோகமித்திரனின் இந்தத் தொடரை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம். அவருக்கு மார்க்சியவாதிகளோடு இருந்த நட்பைப் பற்றி. சோவியத்து இதழ் வந்தபோது தி.க.சியை அடிக்கடி சந்தித்தபடி இருந்ததைக் குறிப்பிடுகின்றார். தான் அயோவா சென்று எழுத்தாளர் பட்டறையில் கலந்துகொண்டதற்கு கைலாசபதியே முக்கிய காரணம் என்கின்றார். அனந்தமூர்த்தியோடு நட்பாய் இருந்தையும் விரிவாக எழுதுகின்றார். அசோகமித்திரனைப் பற்றியெழுதும் எவரும் இவற்றைக் குறிப்பிடுவதில்லை. மார்க்சியர்கள் அவர்களவில்/அவர்களின் கொள்கையில்பால் விமர்சிக்கப்படவேண்டியவர்களே. ஆனால் அவர்கள் தமது சட்டகங்களை மீறி பிறரை வரவேற்றிருக்கின்றார்கள் என்பதையும் கவனித்தாகவேண்டும். இன்றும் புதிதாக வரும் இளம் எழுத்தாளர்கள் பலர் இடதுசாரிப் பின்னணியில் இருந்து வந்திருக்கின்றோம் என்பதைக் குறிப்பிட்டும் இருக்கின்றார்கள். பிறகு அதற்குள் இருக்கின்றார்களா, மீறிப்போகின்றார்களா, விமர்சிக்கின்றார்களா என்பது அடுத்த நிலையில் வருவது. முதலடியிற்கு எப்போது மார்க்சியம் கைகொடுத்திருக்கின்றது, தன் சட்டகத்திற்குள் இல்லாதவர்களையும் அரவணைத்திருக்கின்றது என்பதை நாம் தவறவிட்டுவிட முடியாது.

அசோகமித்திரன் அயோவா போயிருக்காவிட்டால், எனக்குப் பிடித்த 'ஒற்றன்' உருவாகியே இருக்க முடியாது. ஒருவகையில் அசோகமித்திரனுக்கு மட்டுமில்லை கைலாசபதியிற்கும் நன்றி சொல்லத்தானே வேண்டும்.

நான், ஜெஸி மற்றும் நீங்கள்

Wednesday, October 08, 2014


நீங்கள் முன்பு படித்த வளாகத்திற்கு, பின் எப்போதாவது போனதுண்டா? ஒருகாலத்தில் உங்களுக்கு நெருக்கமாயிருந்த இடங்கள் அந்நியமாகிப் போயிருப்பதை உணர்ந்திருக்கின்றீர்களா? அல்லது புதிய மாணவர்களின் மலர்ச்சியான முகங்களைப் பார்த்தபின், இன்னும் கொஞ்சக் காலம் வளாகத்தில் இருந்து படித்திருக்கலாமோ என்று யோசித்திருக்கின்றீர்களா? கடந்த காலம் விட்டுச் சென்ற சுவடுகள் அழியாமல் இருப்பதும், ஆனால் அதை பின் தொடர்ந்து போக முடியாதென யதார்த்தம் உணர்த்தவும், என்ன செய்வதென்று திகைக்கவும் செய்கின்ற ஒருவராக நீங்கள் இருந்திருக்கின்றீர்களா? அப்படியாயின் நீங்கள் உங்களை ஜெஸியில் அடையாளங கண்டுகொள்ள முடியும்.



கலைத்துறையில் பட்டம் பெற்றுவிட்டு, இன்னொரு வளாகத்தில் புதிய மாணவர்களைச் சேர்க்கும் துறையில் ஜெஸி வேலை செய்துகொண்டிருக்கின்றார். வாழ்க்கையும் அவ்வளவு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. சேர்ந்து வாழ்ந்த காதலி பிரிந்து போகின்றார், ஆடைகளைத் துவைக்கச் செல்லும் இடத்தில் யாரோ ஒருவர் அனைத்து ஆடைகளையும் களவாடியும் செல்கின்றார். வாழ்க்கை என்பது ஆச்சரியங்களினால் மட்டுமில்லை, எதிர்பாராத நெருக்கடிகளினாலும் சூழ்ந்ததென சோர்ந்து போயிருக்கும் ஜெஸியிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.
அவருக்குக் கற்பித்த, மார்க்சியத்தில் ஈடுபாடுடைய பேராசிரியர் கற்பித்தலிருந்து ஓய்வுபெறப் போகின்றார் எனவும், தனது பிரிவு உபசார விழாவில் ஜெஸியும் கலந்துகொள்ளவேண்டுமென அழைப்பு விடுகின்றார். விழாவில் கலந்துகொள்ள அவ்வளவு பிரியப்படாதபோதும், வாழ்வின் தினசரி நெருக்கடியிலிருந்து தப்பிவிடலாமென்பதால் தான் படித்த வளாகத்திற்கு நீண்ட காலங்களுக்குப் பிறகு ஜெஸி போவதற்குச் சம்மதிக்கின்றார்.
பதின்மம் மெல்லியதாகக் கரைந்து முடிகின்ற ஒருகாலத்தில் வளாகம் சென்றிருக்கின்றீர்களா? அப்படியானால் என்னோடும், என்னை அடையாளங் கண்டுகொள்கின்ற ஜெஸியோடும் சேர்ந்து சற்று வாருங்கள். ஜெஸியைப் போலவே மீண்டும் நீண்ட காலங்களுக்குப் பின் வளாகம் செல்லும் உங்களையும் அந்தச் சூழல் வசீகரிக்கவே செய்யும். வாழ்வில் கசப்பான காலங்களைச் சந்தித்திருந்தாலும் வாழவு இன்னும் சலிக்காது உயிர்ப்புடன் இருப்பதைப் போல, உங்களுக்கு வளாகம் எவ்வகையான நினைவுகளைத் தந்திருந்தாலும், நீங்கள் நுழையும்போது உங்களையறியாது goosebumps களைத் தருவதை இப்போது உணர்கின்றீர்களல்லவா?
ஜெஸி வளாகத்திற்குள் நுழையும்போதே ஒரு பதினமராகிவிடுகின்றார். வழி நெடுக இருக்கும் பெஞ்சுகளில் ஏறிக்குதிக்கிறார். கடந்து போகும் அனைவரையும் பார்த்துப் புன்னகைக்கின்றார். உற்சாகமிகுதியில் புல்வெளியில் படுத்துக் கிடந்தபடி திறந்த வானத்தை மனம் நிறைந்து இரசிக்கிறார். இனி ஜெஸியைப் பிரித்துப் பார்க்கவே முடியாது. நீங்கள், நான், ஜெஸி எல்லோரும் கிட்டத்தட்ட ஒருவராகப் போய்விடுகின்றோம்.
நாம் இப்போது எமக்குப் பிடித்த பேராசிரியரைச் சந்திக்கின்றோம். பிரிவுபசார நிகழ்வில் பேராசிரியரின் நண்பர்களுடன் அளாவுகின்றோம். அங்கே தற்செயலாக அந்த நண்பர் ஒருவரின் மகளையும் சந்திக்கின்றீர்கள். அவளுக்கு நீங்கள் எப்படியும் பெயரிட்டுக் கொள்ளல்லாம். எளிதாக இருப்பதற்கு ஸிபி என அவளை அழைத்துக் கொள்கின்றேன். ஆரமப அறிமுகத்திற்குப் பிறகு அவளை நீங்கள் சந்திக்கும் எத்தனையோ பெண்களில் ஒருவரென மறந்தும் விடுகின்றீர்கள்.
இடையில் நீங்கள் நீளுமொருவிரவில் ஒரு வித்தியாசமான மனிதனை வளாகத்துப் பெஞ்சில் சந்திக்கின்றீர்கள். அவன் உங்களுக்கு விநோதமானவாத் தெரிந்தாலும், அவனை உங்களுக்குப் பிடித்துவிடுகின்றது. அவன் எளிதில் உங்களுடைய அலுப்பான வாழ்க்கையைக் கண்டுகொண்டதில் இன்னும் ஆச்சரியமடைகின்றீர்கள். இந்த இரவு இப்படியே முடிந்துவிடக்கூடாதென, இசை அதிரும் மாணவர்களின் கொண்டாடத்திற்குக் கூட்டிச் செல்கிறான். மகிழ்ச்சியாயிருக்கும் மாணவர்களிடையே உங்களை ஒருவராகப் பொருத்திக் கொள்ள முடியாதிருக்கின்றது. நீங்கள் அங்கிருந்து விடைபெற விரும்புகின்றீர்கள்.
அப்போது தற்செயலாய் ஸிபியை மீண்டும் சந்திக்கின்றீர்கள். அவளுக்கு உங்கள் வரவு ஆச்சரியமாயிருக்கின்றது. இவ்வாறான இடங்களிற்குரிய ஆடையை நீங்கள் அணிந்திருக்கவில்லையெனக் கூறிவிட்டு, உங்கள் கழுத்துப் பட்டியை நெகிழ்த்துவிடுகின்றாள். நெகிழ்ந்தது உங்கள் கழுத்துப்பட்டி மட்டுமல்ல, நீங்கள் இறுக்கி மூடியிருந்த இதயத்தின் வாசல்களுமே. எனினும் வெளியே போகவே இன்னும் விரும்புகின்றீர்கள்.விநோதமான உங்கள் நண்பன், ஸிபியிற்கு உங்கள் மீது ஏதோ ஈர்ப்பு இருக்கிறதெனச் சொல்லி, நீங்கள் சுதாகரிப்பதற்குள்ளேயே, ஸிபியுடன் அடுத்தநாள் காலை தேநீர் அருந்துவதற்கான சந்திப்பையும் ஏற்பாடு செய்துவிடுகின்றான்.
ஸிபியைச் சந்திக்கக் காத்திருக்கின்றீர்கள். இடையில், நீங்கள் வளாக காலத்தில் வாசித்த பெரும்புத்தகம் ஒன்றை வாசிக்கும் ஒருவனைக் கண்டு நெருக்கம் கொள்கின்றீர்கள். ஸிபி உற்சாகமாய் வருகின்றாள். தேநீருடன், அவளுடன் சேர்ந்து நடக்கத் தொடங்குகின்றீர்கள். உங்களுக்குப் பரிட்சயமான இடங்களுக்குச் செல்லும்போது உங்கள் கடந்தகால நினைவுகளை ஸிபியுடன் உற்சாகத்துடன் பகிர்ந்துகொள்கின்றீர்கள். ஸிபி இரண்டாமாண்டு மாணவி என்றாலும் அறிவுக்கூர்மையுடைய பெண். உங்களுக்கு நிகராக எல்லாவற்றையும் கதைக்க, நீங்கள் இன்னும் நெருக்கத்தை உணர்கின்றீர்கள். அவளுக்குப் பிடித்தமான நாடக மேடையில், அவள் தன் நினைவுகளைப் பகிர்கிறாள். மகிழ்ச்சியின் விளிம்பில் உங்களை முத்தமிட விரும்புகின்றாள். உங்களுக்கு அச்சமாயிருக்கின்றது. உங்கள் தயக்கத்தைப் புரிந்துகொண்ட ஸிபி நெற்றியிலும், கன்னங்களிலும் முத்தமிட அனுமதி கேட்கின்றாள்.
வளாகததிற்குள் இருந்த கொஞ்சநாட்களிற்குள் இந்த வாழ்க்கை இவ்வளவு அழகானதா என்று தோன்றுகின்றது. அதற்கு ஸிபிதான் முக்கிய காரணம் என்பதையும் நினைவுபடுத்தத் தேவையும் இல்லை. ஸிபியிடமும், வளாகத்திடமிருந்தும் விடைபெற்றுக் கொள்கின்றீர்கள். ஸிபி, உங்களுக்குக் கடிதம் எழுதச் சொல்கிறாள். கடிதம் என்பது மின்னஞ்சல்களோ, ரெக்ஸ் மெஸேஜ் போன்ற நவீன தொழில்நுட்பத்தினால் விளைந்தவற்றையல்ல அவள் குறிப்பிடுவது. கையால், மை நிறைந்து எழுதபட்ட எழுததுக்கள் என நினைவுபடுத்துகின்றாள். அதுமட்டுமில்லாது செவ்வியல் மற்றும் ஓபரா இசைகளை அறிமுகப்படுத்துகின்றாள். எப்படி உரிய முறையில் கேட்பது எனவும் கற்றுத் தருகின்றாள். எழுதும் கடிதங்களினால் மட்டுமே நீங்களிருவரும் தொடர்பில் இருக்கின்றீர்கள்.

ஸிபியின் கடிதங்கள் இப்போதும் உங்களின் வாழ்க்கையின் ஒருபகுதியாகிவிட்டது. கலை என்பது எப்படி வாழ்க்கையை இன்னொரு தளத்திற்குக் கொண்டு செல்லும் என்பதை நகர நெருக்கடி வாழ்க்கையிற்குள் இருந்தபோதும் தெளிவாக உணர்ந்துகொள்கின்றீர்கள். நகரத்தில் தனித்திருந்தாலும், வெளியில் காணும் எல்லோரையும் பார்த்து முகம் மலர்ந்து சிரிக்கின்றீர்கள். அவர்கள் பதிலாய்த் தரும் சிரிப்பில் ஸிபியை நினைவு கூருகின்றீர்கள்.

இப்போது சட்டென்று இந்த உறவு எங்கே போய் முடியப்போகின்றதென்று யோசிக்கத் தொடங்குகின்றீர்கள். 19 வயதில் இருக்கும் பெண்ணோடு 30களில் இருக்கும் உங்களுக்கான வயது வித்தியாசம் நெருடலைத் தருகின்றது. வெவ்வேறு காலங்களில் நீங்களும் அவளும் என்ன வய்தில் இருப்பீர்களென தாளில் எழுதியெழுதிப் பார்க்கின்றீர்கள்.நீங்கள் 80களில் இருக்கும்போது அவளுக்கு 70 வயதாக இருக்குமென நினைத்து அந்த நினைவுகளை சற்று ஒதுக்கி வைக்கின்றீர்கள்.

ஒருநாள் ஸிபி உங்களை நேரில் காணவேண்டும் என்று ஆசைப்படுகின்றாள். உங்களை அவளின் கடிதங்கள் நெகிழ்த்தியதுபோல, அவளையும் நீங்கள் எழுதியவை மலர வைத்திருக்குமல்லவா? உங்களுக்கு அவள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்ற தயக்கம் இருக்கிறது. நிறைய யோசித்தபின், வருவது வரட்டுமென ஸிபியைச் சந்திக்க, நீங்கள் படித்த வளாகத்திற்குச் செல்கின்றீர்கள். உங்கள் எதிர்பாராத வருகை ஸிபியை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

அவளது மாணவ அறையில் நீங்கள் இருவரும் இருந்து நிறையக் கதைக்கின்றீர்கள். தற்செயலாய் ஸிபி vampire வகை Twilight நாவல்களைப் படிப்பதைப் பார்த்து ஆச்சரியப்படும் நீங்கள் ஸிபியோடு ஒரு விவாதத்தைத் தொடங்குகின்றீர்கள். இவ்வளவு அறிவுக்கூர்மையுள்ள ஸிபி இவ்வாறான நாவல்களை வாசிப்பாள் என்பதை நம்பமுடியாதிருக்கின்றது. ‘இதையேன் வாசிக்கிறாய்?’ என்று கேட்கின்றீர்கள். ‘வாசிக்கும் எல்லாவற்றுக்கும் ஏதாவது காரணம் இருக்கவேண்டியிருக்கா, பிடித்திருக்கிறது வாசிக்கிறேன்’ எனகிறாள் ஸிபி. நீங்கள் தொடர்ந்து அது வாசிப்பதற்குரிய நாவலே இல்லை என விவாதிக்கின்றீர்கள். ‘நாவலை வாசிக்காமல், அது குறித்துக் கருத்துச் சொல்வது தவறு, உனக்குப் பிடிக்காதவை எல்லாவற்றையும் எரிக்கச் சொல்லிவிடுவாய் போலிருக்கிறது, இவ்வாறு விவாதிப்பதே ஆபத்து’ என்கிறாள்.

உங்களை ஏதோ ஒருவகையில் ஸிபி தீண்டிவிடுகிறாள். நான் இந்த நாவல்களை வாசிக்கும்வரை உன்னோடு பேசப்போவதில்லையென நாவலையெடுத்துக்கொண்டு போய் வாசிக்கத் தொடங்குகின்றீர்கள். அடுத்த நாள் ஸிபியைச் சந்தித்து, ‘வாசித்து முடித்துவிட்டேன், இதுவே நான் ஆங்கிலத்தில் வாசித்த மிக மோசமான நாவல் ‘என்கின்றீர்கள். ‘அப்படியாயின் மற்றமொழிகளில் இதைவிட மோசமான நாவல்கள் இருக்கின்றதா’ எனத் துடுக்குத்தனமாய் ஸிபி கேட்கிறாள். ‘தெரியவில்லை, ஆனால் இந்த நாவலை மற்ற நாவல்களில் மொழிபெயர்க்கும்போது இதுவே அந்தந்த மொழிகளிலும் மோசமான நாவலாய் இருக்கும் என்பது உறுதி’ என பதிலிறுக்கின்றீர்கள். இங்கேதான் நீங்கள் ஒரு வளாகத்து மாணவர் இல்லையென்பதையும், அதேபோல் நீங்கள் ஒரு முதிர்ச்சியடைந்த ஒரு ஆணாக மாறவில்லை என்பதையும் காலம் உங்களுக்குச் சுட்டி நிற்கின்றது.

அன்றிரவு ஸிபி தன்னோடு தங்கியிருந்த தோழியை வெளியே அனுப்பிவிட்டு, உங்களை தன் அறைக்கு அழைக்கிறாள். எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, ‘இதுதான் எனக்கு முதன்முறை என்னைக் கவனமாகக் கையாளு’ என்கின்றாள். உங்களுக்கு ஸிபி மீது நட்பை மீறிய காதல் இருக்கிறது. ஏன் காமம் கூட அவ்வப்போது தலைதூக்கிப் பார்ப்பதுண்டு. ஆனால் இத்தனை வயது வித்தியாசமுள்ள பெண்ணோடு, உறவுக்குப் போவது நெருடலாயிருக்கின்றது. நீங்கள் ஏதேதோ காரணங்கள் சொல்லித் தவிர்க்கப் பார்க்கின்றீர்கள். ‘எனக்கு எல்லாம் தெரியும், நான் நிறைய யோசித்தே மனமுவந்து என்னைத் தருகின்றேன்’ என்கிறாள் ஸிபி. நீங்கள் அவளை வேறு வழியில் திசை திருப்ப முயல்கின்றீர்கள். ஸிபியிற்கு தன் ஆசை நிராகரிப்பட்டதால் கோபம் வருகின்றது. இனி என்னைச் சந்திக்காதேயென உங்களை அறையை விட்டு வெளியே போகச் சொல்கின்றாள்..

ங்களுக்கு இந்த இரவு மிக நீண்ட இன்னொரு துயர் மிகுந்த இரவாய்ப் போய்விடுகின்றது. பாரிற்குப் போய் நிறைய மதுவை அருந்துகின்றீர்கள். அங்கே உங்களுக்கு ஆங்கில இலக்கியம் படிப்பித்த, புத்தகங்கள் மீது காதல் வரச் செய்த உங்கள் ஆங்கிலப் பேராசிரியையைச் சந்திக்கின்றீர்கள். அவருக்கும் அன்றைய இரவு நிம்மதியற்றதாக இருந்திருக்கும் போலும். இரவிரவாய் நிறையக் கதைத்து, பேராசிரியையின் வீட்டுப் படுக்கையறை வரை போகச் செய்கின்றது. நீங்கள் அவரோடு நெருக்கமாய் இருந்த பொழுதில், ‘நீங்கள்தான் கவிதையை இந்தளவிற்கு வாழ்வோடு நெருக்கம் கொள்ளமுடியும்’ என சொல்லித் தந்தவர் என நெகிழ்கின்றீர்கள். அவர், ‘கவிதையும் வாழ்க்கையையும் ஒன்றென முட்டாள்தனமாய் ஒப்பிட்டுக்கொள்ளாதே’ என் இன்னொரு பாடத்தைக் கற்பித்து விடியமுன்னரே தன் வீட்டை விட்டுத் துரத்திவிடுகின்றார்.

நீங்கள் இப்போது மீண்டும் உங்களின் அலுப்பான வாழ்க்கையிற்குள் நுழைந்துவிட்டீர்கள். இடையில் ஸிபியோடு சந்தித்த இன்னொரு மாணவனின் தற்கொலையைக் காப்பாற்ற படித்த வளாகத்திற்குச் செல்கின்றீர்கள். அவனுக்கு, ‘புத்திசாலியாக இருப்பதால் இளமையில் சாகலாம் என்று நினைக்காதே, வயது முதிர்ந்து கூட இயற்கையாகச் சாகலாம்’ என்று அறிவுரை கூறுகின்றீர்கள். நீங்கள் வளாக காலத்தில் கனதியான புத்தகங்களை வாசித்ததுபோல, வாசிக்கும் அவனிடம் இன்னும் மனச்சிக்கல்களை ஏற்படுத்தும் புத்தகங்களை பிடுத்தெறிந்துவிட்டு, மனதை இன்னொருபக்கம் திருப்பக்கூடிய, vampire வகை நூற்களை வாசிக்கச் சொல்கின்றீர்கள். ஆனால் இம்முறை நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான ஸிபியைச் சந்திக்கவே இல்லை.

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நீங்கள் திரும்பவும் புத்தக உலகிற்குள் மூழ்கின்றீர்கள். உங்களின் புத்தக வாசிப்பு, புத்தகக் கடையில் வாசிக்கும் பெண்ணொருத்தியுடன் நட்பைக் கொண்டு வருகிறது. புத்தகங்கள் எப்போதும் எங்களை வேறு உலகில் எங்களையறியாமலே வாழ வைக்கின்றன. புத்தகங்களுடன் எனக்குரிய உலகிற்குள் இருந்துவிட்டேன். இப்போதுதான் கொஞ்சம் வெளி வாழ்க்கையிற்கும், வெளி மனிதர்களோடும் பழக முயற்சிக்கின்றேன்’ எனத் தன் தவிப்பைச் சொல்லும் அனா உங்களுக்குரிய நெருக்கமான அலைவரிசையில் இருப்பதைக் கண்டுகொள்கின்றீரகள்.

பிறகான காலங்களில் உங்களுக்குரிய காதலை அனாவால் மட்டுமே தரமுடியுமென்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். ஆனால் ஸிபியின்றி, அனாவின் அருமையை உணர்ந்திருக்க முடியாது என்பதும் உங்களுக்கும் நன்கு தெரிகிறது. ஸிபி உங்கள் வாழ்வில் வந்ததை நினைவுகூருமுகமாகவும், அவள் தந்த அழகிய நாட்களுக்கு நன்றி செலுத்தவும் அவளுக்கு vampire வகையான ‘டிராகுலா’ புத்தகத்தை அனுப்பி வைக்கின்றீர்கள்.

ஸிபி அந்த நூலைப் பார்த்து மகிழ்ச்சியடையும் தருணத்தில் உங்களுக்கான இன்னொரு நாள் அழகாகின்றது. நீங்கள் ஸிபியையோ அல்லது ஸிபி உங்களையோ மறப்பது அவ்வளவு எளிதன்று. எனெனில் எதையும் எதிர்பார்க்காத காதல் என்பது அடியாழங்களில் புதையுண்டு போகாது என்றுமே உயிர்ப்புடன் இருப்பதுதானில்லையா?

( Liberal Arts திரைப்பட பாதிப்பில் எழுதியது)
நன்றி: எனில்

அன்னாவும், ஸோஃபியாவும், நம் வாசிப்புக்களும்...

Tuesday, September 23, 2014

1.
தஸ்தயேவ்ஸ்கியின் அன்னாவையும், டால்ஸ்டாயின் ஸோஃபியாவையும் புரிந்துகொள்வது என்பது மிகவும் சிக்கலானது. அதேபோன்று தஸதயேவ்ஸ்கியும், டால்ஸ்டாயும் மதிப்பிடும்போது அவர்கள் வாழ்ந்த காலத்தையும், அதன் பின்னணிகளையும் விளங்கிக் கொள்ளுதல் அவசியமாகும். படைப்பாளிகளைப் போல, அவர்களின் துணைகளினூடாக வரும் 'கதைகளும்'  வாசகர்களைச் சலனமடையச் செய்கின்றன. இவற்றில் பல படைப்பாளிகளுக்கு ஏற்கனவே இருக்கும் 'திருவுரு'க்களை மேலும் செதுக்குகின்றன. சில அவர்கள் மேல் ஏற்றப்பட்ட விம்பங்களைச் சிதைக்கவும் செய்கின்றன.

படைப்பாளிகள் நமது அகவுலகத்தில் தத்தம் படைப்புக்களினூடாக நெருக்கம் கொள்கின்றனர். அதேவேளை இந்த நெருக்கமானது, படைப்பின் உச்சத்தினூடாக நிகழ்த்திக்காட்டப்படுகின்றதே தவிர, ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்துகொள்வதனால் உண்டானதல்ல என்பதைப் பலர் மறந்தே போய்விடுகின்றனர். படைப்பாளி என்பவர் கூட, படைப்பின்போது வேறொரு மனிதராக மாறிவிடக்கூடியவராக இருப்பினும், பின்னர் நம்மைப் போன்ற சாதாரண மனிதராக வந்துவிடக்கூடிய ஒருவரே. ஆகவே அந்தப் படைப்பாளி சாதாரண மனிதர் செய்யக்கூடிய எல்லாத் தவறுகளையும் செய்யும்போதோ, தனது பிழைகளை அவர்  திருத்தத்தெரியாது திகைக்கும்போதோ, நாம் வேறொருவிதமான விம்பத்தை அவருக்குக் கொடுக்கக்கூடியவராக ஆகிவிடுகின்றோம்.

எவ்வகைக் கலையானாலும், படைப்பு மனம் ஒருவரை குழந்தையாகவோ, மனம் சிதறச்செய்கின்றதாகவோ அல்லது நாம் கற்பனை செய்து பார்க்கமுடியாத நிலைகளுக்கோ உருமாற்றம் செய்யவும்கூடும். ஆனால் படைப்பினூடாகத் தரிசிக்கும் அந்த நிலையிலேயே, நாம் படைப்பாளிகளைச் சந்திக்கும்போதோ அல்லது அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அறியும்போதோ இருக்கவேண்டும் என்றெதிர்ப்பார்ப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.


2.
'படைப்பை பார், படைப்பாளியைப் பாராதே'  என்பது எவ்வளவு முக்கியம் வாய்ந்த சொல்லாடல். ஆனால் நம் தமிழ்ச்சூழலில் அதை கேலிக்குரியதாக்கிய பெருமை, இதன் உண்மையான அர்த்தத்தை விளங்காதவர்களால் மட்டுமில்லை, இதை முன்னிலைப்படுத்திய சிலராலும் நிகழ்ந்திருக்கின்றது என்பதே அவலமானது.  'படைபைப் பார், படைப்பாளியைப் பாராதே' என்பது எழுதியவர் மற்றும் வாசிப்பவருக்கு ஒரு படைப்பை முன்வைத்து  எத்தகைய பெரும் சுதந்திரத்தைத் தருகின்றது என அநேகர் எண்ணிப் பார்ப்பதேயில்லை. படைப்பை எழுதியபின்னர், அது படைப்பாளிக்குச் சொந்தமில்லை. அதை முன்வைத்து எவ்வகையான வாசிப்பையும் வாசகர் செய்வதற்கான ஒரு வெளி திறந்துவிடப்படுகின்றது. வாசகர், தனக்குரிய வாசிப்பில் அந்தப் பிரதியை எவ்வகையாகவும் புரிந்துகொள்ளமுடியும். அதை படைப்பாளி, இது நானெழுதிய படைப்பு இப்படித்தான் விளங்கிக்கொள்ளவேண்டும் என்று எந்தவகையிலும் கட்டாயப்படுத்தமுடியாது. அவ்வாறு ஒரு படைப்பாளி தன் படைப்புக் குறித்து விளக்கந் தந்தாலும், அந்தப்படைப்பை எழுதியவர் என்றவகையில் உரிமைகோரி எதையும் கூறமுடியாது. அவரும் இன்னொரு வாசகராகவே கருத்துச் சொல்லமுடியும்.

உதாரணத்திற்கு ஜெயமோகன் 'அறம்' வரிசைக் கதைகள் எழுதியபோது, அழகாய் வளர்த்தெடுக்கப்படும் 'சோற்றுக்கணக்கு' கதையில் வரும் முஸ்லிம் பாத்திரத்திற்கு சாதியைத் திணித்திருக்கத் தேவையில்லை என என் வாசிப்பை முன்வைத்திருந்தேன். அதற்கு ஜெயமோகன் 'ஈழ எழுத்தாளருக்கு...' என்ற தலைப்பில் ஏன் சாதியை அங்கே தான் கொண்டுவருகின்றேன் என்பதற்கான விளக்கங்களோடு, வழமையாய் விரித்தெழுதும் அவரின் பழக்கத்தினால் 'சிங்களவர்களையே புரிந்துகொள்ளமுடியாத காழ்ப்புணர்வு கண்டவன்' என்பதுவரை என்னை இழுத்திருப்பார். இலக்கியம் சார்ந்து வரும் சர்ச்சைகளில் பிறரைச் சீண்டிப் பார்ப்பதும் ஒருவகை 'அறமே' என்பதால் அவை குறித்துக் குறையேதுமில்லை.

ஆனால் நான் ஜெயமோகன் தன் படைப்புக்குறித்துச் சொல்வதை அவரும் இந்தக்கதைகளின் ஒரு வாசகர் என்றவகையிலேயே பார்ப்பேனே தவிர, அவர் அந்தக் கதைகளை எழுதியவர் என்றவகையில் எந்த உரிமையும்  அவருக்குக் கொடுக்கப்போவதில்லை. அதாவது அவர் இந்தக்கதையை எழுதியவர் என்பதால், அவர் கூறும் பார்வையில்தான் இந்தக் கதையை வாசிக்கவேண்டும் என்கின்ற எந்த உரிமையும் அவருக்கு இல்லை என்பதையே மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

ஒரு புனைவை வாசிப்பதன் மூலம் ஒருவர் தனக்கான சொந்தப் பிரதியை உருவாக்கிக்கொள்ள முடியும். அந்தச் சுதந்திரத்தன்மையை படைப்பாளியால் கூட  மறுக்க முடியாது. அந்தவகையிலேயே திரைப்படங்களையும் நமக்கான பார்வையில் புரிந்துகொள்ள முடியும்.  ஒரு இயக்குநர் அறிந்தோ/அறியாமலே வைக்கும் காட்சிகளைக் கொண்டே, நாம் நம் பார்வையினால் வேறுபட்ட ஒரு படமாய் அதை வளர்த்தெடுக்க முடியும். இது ஜிகர்தண்டாவிற்கு எம்டிஎம் எழுதிய பார்வையிலும் பார்க்கலாம். ராஜன்குறையின் 'கதாநாயகனின் மரணம்' திரைப்படஞ் சம்பந்தமான தொகுப்பில் இன்னும் ஆழமாய் அவதானிக்கலாம்.

அது மட்டுமின்றி, 'நான் நீங்கள் நினைக்கும் அர்த்தங்களில் இவற்றையெல்லாம் எழுதவில்லை' என அண்மையில் காலச்சுவடில் வெளிவந்த அசோகமித்திரனின் குரலைத் தவிர்த்துவிட்டு, 'தண்ணீர்' நமது வாசிப்பில் ஒரு குறியீட்டு நாவலாய்த் தெரிந்தால் அப்படியே நாம் வாசித்தும்/வரித்தும் கொள்ளலாம். எம்.ஜி.சுரேஷ் பல்வேறு வகைமையான நாவல்களை எழுதுகின்றேன் என ஒவ்வொரு நாவல்களுக்கும் பின்னட்டைக் குறிப்பு எழுதி விளம்பரப்படுத்தியது எவ்வளவு அபத்தமோ, அவ்வாறே அசோகமிததிரன் தனது படைப்புக்களில் நீங்கள் நினைக்கும் வகையில் தான் எழுதவில்லை என்றவுடன் எமது வாசிப்புக்களைக் கைவிடுவதும் என்க.

ஆக தமிழ்ச்சூழலில் 'படைப்பைப் பார், படைப்பாளியைப் பார்க்காதே' என்பதோடு மேலதிகமாய் 'உங்களுக்கான பார்வையை உருவாக்கும்போது அதில் படைப்பாளி குறுக்கீடு செய்தால் கூட, உங்களுக்கான வாசிப்பை எந்தவகையிலும் கைவிடத்தேவையில்லை' என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறவேண்டியிருக்கின்றது.

சர்ச்சைகளும் சமாதானமும் இலக்கியத்தில் மூக்கும் சளியும் என்பதால், பின்னாளில் ஜெயமோகன் நானெழுதிய கதையிற்கு ஒரு குறிப்பு எழுதியிருப்பார். 'கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்?' என்ற தலைப்பை, 'விளையாட்டுக் கண்ணன் மீது பித்தான கோபிகை என்ற பொருளில் போடப்பட்டிருக்கும் தலைப்பும் அழகு' எனக் குறிப்பிடுவார். நான் கதையின் பாத்திரத்திற்கு 'கோபிகா' எனத் தெரிவு செய்ததற்கு என்னளவில் ஒரு காரணம் இருந்தாலும், அது ஜெயமோகன் கூறும் அர்த்தத்தில் அல்ல. ஆனால் நான் அதைக் குறிப்பிட்டு ஜெயமோகனின் வாசிப்பில் குறுக்கீடு செய்யமுடியாது. அவர் வாசிப்பில் உருவாக்கிய பிரதியிற்கு அப்படியொரு அர்த்தம் இருக்கும்போது அதில் நான் இடையீடு செய்து, இப்படித்தான் வாசிக்கவேண்டுமென கோருதல் ஒருவகை வன்முறை. படைப்பு எழுதி முடிந்தகணத்திலேயே 'படைப்பாளி இறந்துவிட்டார்'. இனி இருப்பது வாசிப்பவர்களின் பிரதி மட்டுமே.


3.
மீண்டும் படைப்பாளிகளின் துணைகளுக்கு வருகின்றேன். அன்னாவினதும், சோபியாவாவினதும் சுய அனுபவங்களினூடாக வரும் கதைகள் தஸ்தயேவ்ஸ்கியினதும், டால்ஸ்டாயினதும் திருவுருக்களை அசைத்துப் பார்க்கின்றன. ஆனால், நாம் மறந்தது என்னவெனில், நமக்குத் தெரிந்த தஸ்தயேவ்ஸ்கியும்,டால்ஸ்டாயும், கரம்ஸோவ் சகோதரர்கள், புத்துயிர்ப்பு, அன்னா கரினீனா, போரும் சமாதானமும், குற்றமும் தண்டனையும் போன்றவற்றினால் அறிமுகமானவர்களே தவிர, சாதாரண தனிப்பட்ட வாழ்வினால் அறிமுகமானவர்கள் அல்ல. உயர உயரப் பறந்தாலும், பறவைகள் நிலத்திற்கு என்றேனும் வந்தாக வேண்டும் என்பதுபோல, படைப்பு வெளியில் எங்கெங்கோ சுதந்திரமான அலைந்த மனிதர்களின் கால்கள் நிலத்தில் பாவும்போது நாம் கட்டிவைத்த விம்பங்கள் உடைதலும் இயல்பே.

கலைஞர்கள் பெரும்பாலானோர் வாழ்வு அப்படியொன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருப்பதுமில்லை. துயரங்களும், தத்தளிப்புக்களும் இவற்றின் நீட்சியில் தம் சுயமழித்தலும் அநேகரின் வாழ்வில் இயல்பாயிருந்திருக்கின்றது. தஸ்தயேவ்ஸ்கியினதும், டால்ஸ்டாயினதும் மட்டுமில்லை, வேர்ஜீனியா வூல்ப்விலிருந்து சில்வியா பிளாத் என நீண்டு நம் தமிழ்ச்சூழலில் ஜி.நாகராஜன், ஆத்மநாம், சிவரமணி எனக் குறிப்பிடுவதற்கு நிறைய உதாரணங்களிருக்கின்றன. 

நாம் தஸ்தயேவ்ஸ்கியினதும், டால்ஸ்டாயினதும் தனிப்பட்ட வாழ்வை அவதானிப்பதாயின் அவர்களுக்குக் கிடைத்த துணைகளான சோபியாவும், அன்னாவும் இவர்கள் இருவரினதும் படைப்புக்களால் ஈர்க்கப்பட்டோ அல்லது இந்தப் படைப்புக்கள் மீது மதிப்பு வைத்தோ துணைகளானவர்கள். அவர்களினாலேயே இவ்வாறு ஒருவகையான விமர்சனம் வைக்கப்படுகின்றதென்றால், சிலவேளைகளில் சாதாரண 'லெளதீக' விடயங்களில் ஆசைப்படுகின்ற துணைகள் இவர்களுக்குக் கிடைத்திருந்தால் எவ்வாறிருந்திருக்கும் என யோசித்துப் பார்க்கவும் வேண்டியிருக்கின்றது. அவ்வாறு கிடைக்கும் துணைகளோடு போராடிப் போராடியே சிலவேளைகளில் தஸ்தயேவ்ஸ்கியினதோ, டால்ஸ்டாயினதோ சிறந்த படைப்புக்கள் எழுதப்படாது, நாம் இவற்றை இழந்திருக்கவும் கூடும்.

ஜெயமோகன் இப்போது வாஸந்தியிற்கு எழுதிய எதிர்வினையிலும்  நான் ஜெயமோகனோடு உடன்படுகின்ற புள்ளிகளே அதிகம் இருக்கின்றன. வாஸந்தியின் கட்டுரை மிக எளிமையாக ஒருவரை அடித்துத் துவைக்கவேண்டுமென்பதற்காய் எழுதியது என்பதை உடனேயே வாசித்துப் புரிந்துகொள்ளமுடியும். டால்ஸ்டாய் ஆன்மீகத்தைத் தேடியவர் எனினும் 80வயதிலும் உடலுறவு வைத்துக்கொண்டவர் என வாஸந்தி குறிப்பிடும்போதே 'ஆன்மீகத்தின்' எளிய புரிதலுக்கு அப்பால் வாஸந்தியால் நகரவே முடியவில்லை என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

ஆனால் ஜெயமோகனோடு பெரும்பாலும் உடன்படுகின்ற எனக்கும் கேள்விகளுண்டு. சோபியாவின் குரலும் கேட்கப்படவேண்டும் என்பதற்காய் வாஸந்தி டால்ஸ்டாயை கீழிறக்குவது போல, ஏன் ஜெயமோகனும் டால்ஸ்டாயை மேன்நிலையாக்கம் செய்வதற்காய் சோபியாவைக் கீழிறக்கவேண்டும் என்பதே. டால்ஸ்டாய் தன்னளவில் தனித்து நிற்கமுடிவதுபோல,  வெவ்வேறு தளங்களாய் இருந்தாலும், சோபியாவும் தன்னளவில் தனித்து நிற்கக்கூடிய ஒருவரே என்பதை ஏன் மறுதலிக்கவேண்டும். சிலவேளை ஒரு பெண்ணுக்குரிய/தாய்க்குரிய 'கடமை'களைச் செய்ய வேண்டிய அவசியமோ, டால்ஸ்டாயோடு வாழவோ வேண்டியிராத சந்தர்ப்பத்திலோ, சோபியா ஒரு தனிப்பட்ட ஆளுமையாக உயர்ந்திருக்கலாம் என்பதை ஏன் நாம் மறுக்கவேண்டும்?

நாம் ஒருபோதும் டால்ஸ்டாயினதோ, தஸ்தயேவ்ஸ்கியினதோ படைப்புக்களையோ (படைப்புக்கள் என்ற சமதளத்தில் இருந்தபோது கூட) ஒப்பிட்டு ஒன்றையொன்று கீழிறக்குவதில்லை. அவையவை தம்மளவில் தனித்துவமானவை என்று எடுத்துக்கொண்டே, விமர்சனங்கள் இருந்தாலும் அந்தப் பிரதியிற்குள் நின்றே கருத்துக்களை முன்வைக்கின்றோம். அதேபோன்று டால்ஸ்டாயையும், சோபியாவையும் ஒரே தராசில் வைத்து நாம் ஒப்பிடத்தேவையில்லை அல்லது ஒருவரைத் தாழ்த்துவதன் மூலம் இன்னொருவரை உயர்த்தத் தேவையில்லை.

இப்படியும் யோசித்துப் பார்க்கலாம். காலங்காலமாய் சோபியா, அன்னா என படைப்பாளிகளுக்கு உரிய துணைகளாக எத்தனையோ பெண்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் இவ்வாறு டால்ஸ்டாய் போலவோ, தஸ்தயேவ்ஸ்கி போலவோ, எழுத விரும்பும் பெண்களுக்கு  எத்தனை ஆண்கள் உறுதுணையாக இருந்திருக்கின்றோம் என எண்ணிப் பார்த்திருக்கின்றோமா? இத்தனைக்கும் பெண் படைப்பாளிகள் சமூகம் 'பெண்'ணிற்கு எனக் கூறப்படும் 'கடமை'களைச் செய்யவேண்டிய் அழுத்தத்தின் மேல் நின்றே எழுதுகின்றார்கள். மேலும், குடும்பமாகி குழந்தைகள் பெறும்போது தாய்மை எனும் பெருஞ்சுமையை விரும்பியோ/விரும்பாமலோ ஏற்றுக்கொண்டே எழுதவும் வேண்டியிருக்கின்றது. அதுவும் சில நூற்றாண்டுகள் முந்திய காலத்தில் நிறையக் குழந்தைகளைப் பெற்றும், அவை இடைநடுவில் இறக்கவும் பார்த்துக்கொண்டிருந்த சோபியாவினதும், அன்னாவினதும் அகவுலகங்களையும் விளங்கிக்கொண்டே, அவர்கள் தஸ்தயேவ்ஸ்கி மீதோ, டால்ஸ்டாய் மீதோ வைக்கும் விமர்சனங்களையும் பார்க்கவேண்டியிருக்கின்றது.

எங்களுக்கு தாஸ்தயேவ்ஸ்கி மீதும் டால்ஸ்டாய் மீதும் அளப்பரிய காதல் இருக்கலாம். ஆனால் அதற்காய் சோபியாவினதும் அன்னாவினதும் குரல்களை முற்றாக உதறித்தள்ளிவிட்டுத்தான் இவர்களை நேசிக்கவேண்டும் என்கின்ற எந்த அவசியமுமில்லை.

இந்த வாழ்வையும் மனிதர்களையும் ஆழமாய் நேசிக்கக் கற்றுத்தரும் டால்ஸ்டாயையும், தஸ்தயேவ்ஸ்கியும், தமது துணைகளின் குரல்கள் -அவர்களை மதிப்பிறக்கும் தொனியாக இருந்தாலும் கூட- அதையும் நிதானமாய்க் கேட்க வேண்டும் என்பதையுந்தானே சொல்லித்தரப் பிரியப்பட்டிருப்பார்கள்.
................

(2014)

பிரிய அடேல்

Thursday, September 18, 2014

நீ அந்தப் பெருமரத்தின் அருகிலிருக்கும் பெஞ்சில் உட்கார்ந்திருந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிகிறது. சூரிய ஒளி பிரகாசமாகத் தெறிக்கிறது. இலைகள் சிறகுகள் விரித்த சிறுபறவைகள் போல உதிர்ந்து கொண்டிருக்கின்றன. இயற்கையின் அழகோடு ஒன்றிக்க முடியாமல் நீ உன் உணர்ச்சிகளோடு போராடிக் கொண்டிருக்கிறாய். உனதிந்த அப்பாவித்தனத்தை ஏன் காலம் இவ்வளவு விரைவாகப் பறித்துப் போகிறது.  அவ்வளவு எளிதில் எவரையும் கடந்துவிடச் செய்யாத உனது அழகான விழிகளில் ஏன் இவ்வளவு துயரம் ததும்பிக் கிடக்கிறது.

அடேல், உனது அடையாளங்களைத் தேடியலைந்த பதின்மவாழ்க்கையை நீ மட்டுமில்லை, நாமெல்லோருமே வளர்ந்துவிடும்போது தொலைத்து விடுகிறோம் அல்லவா? உனது அவ்வளவு சீர்செய்யப்படாத கேசமென்பது கூட நீ யாரென்பதை அடையாளப்படுத்துகிற ஓரு விடயமில்லையா? நீ பாடசாலை அமைப்பை வெறுத்தபடி, ஆனால் நிறையக் கற்றுக்கொள்வதற்கு அதைத் தவிர வேறெந்த சிறந்த அமைப்புமில்லை என்பதையும் புரிந்து வைத்திருக்கிறாய். உனக்கிருக்கும் ஆகப்பெரும் கனவு, சிறு பிள்ளைகளுக்கு ஆசிரியராக ஆவது அல்லவா? பாடசாலை அமைப்பின் அபத்தத்தை நன்குணர்ந்த உன்னிடம் கற்கும் பிள்ளைகளுக்கு அழகான ஓர் உலகை கையளிப்பாய் என்றெழும் நம்பிக்கையில், உன் கரங்களை மிருதுவாய்ப் பற்றவேண்டும் போலத் தோன்றுகிறது.

ம் எல்லோரினதும் - முக்கியமாய் பதின்மவயதுகளில்- மிகப்பெரும் மூச்சுத்திணறல் என்னவென்றால் எமது அடையாளம் எது என்பது. மேலும் இயல்பாய் எழும் பாலியல் சார்ந்து, எந்த அடையாளத்திற்குள் எம்மை நிலை நிறுத்துவது என்பதும் கூட. பதிமன்ங்களில் எதிர்ப்பால் ஈர்ப்பென்பதே சிக்கலான ஓன்றாகப் பார்க்கப்படும்போது, தற்பால் உறவோ, இருபால் உறவோ இயல்பாய் ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் எவ்வளவு நீண்ட தூரம் பயணிக்கவேண்டியிருக்கிறது.

ஆண்களை எளிதாய் வசீகரிக்ககூடியவளாய் இருந்தாலும், உனக்கு எதிர்ப்பால் உறவு பொருத்தமானதில்லையென உணர்கிறாய். உன்னுடலைப் பரிசோதனைக் களமாய் அதற்காய் திறந்து வைத்துதும் அதை எளிதாய்ப் புரிந்துகொள்கிறாய். உனக்கான பாலியல்பு சார்ந்து நீ தேடலைத் தொடர்கிறாய். உன்னை விட வயது கூடிய எம்மாவைக் கண்டுகொள்கிறாய். உங்களின் உக்கிரமான காமம் எல்லோரையும் சரசரவென்று பற்ற வைத்துக்கொள்ளக் கூடியது. எம்மா ஓரு ஓவியையாக இருந்தும், அவளது நட்புகள் மிக உயர்ந்த அறிவுஜீவி மட்டத்தில் இருந்தபோதும், நீ அவளின் உயர்வில் உன் மகிழ்ச்சியைக் காண்கிறாய். எம்மாவினதும், அவளின் நட்புக்களினதும் அறிவார்ந்த உரையாடல்கள் உனக்கு அலுப்பைத் தருகின்றன. நீ அதை விரும்பி ஏற்றுக்கொண்டவளில்லை; அது உனக்குரியதல்ல எனவும் கண்டுகொள்கிறாய். எனினும் இவையெல்லாம்  எம்மாவின் மீதிருக்கும் காதலிற்கும் காமத்திற்கும் முன் ஒரு பொருட்டேயல்ல என்பதையும் நீ நன்குணர்ர்ந்தவள்.

எம்மா, உன் தொழில் சார்ந்தில்லாது வேறு விடயங்களிலும் உன்னைக் கவனஞ் செலுத்தச் சொல்கிறாள். உனக்குரிய வாசிக்கும், எழுதும் திறமையைக் கண்டு, கதைகளை எழுதச் சொல்கிறாள். நீயோ அவை என் அந்தரங்திற்குரியது என்கிறாய். என்றாலும் எம்மாவின் மீதிருக்கும் நேசத்தினால், எழுத முயற்சிக்கின்றேன் என்கிறாய்.

உனது உலகும் கனவுகளும் எளிமையானது. எம்மாவோடு மனது நிறையக் காதல் செய்வது. சிறுவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியை ஒருவராக ஆவது.

எந்தக் கணத்தில் உனக்கும் எம்மாவிற்கும் இடையில் விரிசல் வந்ததெனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. எம்மா வீட்டிற்கு வரத் தாமதமாகும் பொழுதுகளில் தனிமை உன்னை இராட்சத நிழலாகச் சூழகிறது. யாரெனும் ஓருவர் உனக்கு மனம் விட்டுப் பேச, வெறுமையை விரட்டத் தேவையாயிருக்கிறது. உனது சக ஆண் ஆசிரியரோடு பொழுதுகளைக் கழிக்கிறாய். அது சிலவேளைகளில் உடல் சார்ந்து பகிரும் பொழுதுகளாகவும் ஆகிவிடுகின்றன. நீ உன் தனிமையை விரட்ட உன்னுடலை மீண்டும் பரிசோதனைக் கள்மாக்கிறாய். அது முற்றுமுழுதான பகிரல் இல்லை என்பதும், ஆணுடலால் உனக்கு விரும்பிய நிறைவு கிடைக்காதென்பதும் நீயறிவாய். ஆனால் உனக்கு வேறு வழிகளேயில்லை. எனெனில் நீ தனிமையை இன்னொரு துணையாக உன் பதின்மங்களிலிருந்தே தேர்ந்தெடுத்தவள்.

எம்மா, உனது இருபால் உறவைக் கண்டுகொள்கிறாள். கோபம் மிகக் கொண்டு உன்னை வீட்டிலிருந்து வெளியே போகச் சொல்கிறாள். 'நான் என் தனிமையின் பொருட்டு தவறுகள் செய்துவிட்டேன், என்னை மன்னி...என் காதல் என்பது எப்போதும் உன்னோடு'தான் எனக் கெஞ்சுகிறாய். 'என்னை வெளியே போகச் சொல்லாதே, என்னால் உன்னை விட்டும் எங்கும் போகமுடியாது' எனவும் மன்றாடுகிறாய். ஆனால் எல்லா மன்னிப்புக்கோரல்களும் காற்றில் கரைந்து போகின்றன. நீ வழியற்றவளாய் வெளியே துரத்தப்படுகிறாய்.

ப்போது வருடங்கள் பல கழிந்துவிட்டன. நீ விரும்பியமாதிரி ஆசிரியையாகியும் விட்டாய். இன்னமும் தனித்தே இருக்கிறாய். இடையில் சில உறவுகள்/நட்புகள் வாய்த்தாலும் எதுவும் எம்மாவுடன் வாய்த்ததைப் போல காமமும் காதலும் நிறைந்ததாய் இல்லை.. எனவே அவர்களோடு தொடர்ந்து வாழ்வில் பயணிக்கத் தயங்கி எல்லோரையும் இடைநடுவிலேயே வெட்டியும் விடுகிறாய். வழமை போல நீ விரும்பியோ/விரும்பாமலோ தனிமை உன்னை மீண்டும் நெருக்கமானதாய்த் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.

நீண்டகாலப் பிரிவின் பின், ஒருமுறை எம்மாவைச் சந்திக்கிறாய். எம்மா இப்போது வேறொரு தளத்தில் இருக்கிறாள். அவளுக்கென்று துணையும், குடும்பமும் வாய்த்துவிட்டன.

உன்னிடம் இப்போதும் அதே அப்பாவித்தனமும், கடந்த காலத்தை அப்படியே நிகழ்காலத்திற்கு இழுத்துக் கட்டிக்கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையுமிருக்கிறது.

காதலும், காமமும் பொங்கி வழிகிறது. 'நீதான் எனது எல்லாம்' என எம்மாவிடம் சொல்லப் பிரியப்படுகிறாய். அதை ஒருவகையில் எம்மாவிற்கு உணர்த்தவும் செய்கிறாய். ஆனால் எம்மா தனக்கு ஏற்கனவே ஒரு குடும்பமிருப்பதை நினைவுபடுத்துகிறாள். என்றாலும், என் வாழ்வில் உன்னோடிருந்த காலங்களை என்றைக்குமாய் மறக்கமுடியாது, அவ்வளவு இனிமையானது' எனக் கூறி எம்மா உன்னிடமிருந்து என்றென்றைக்குமாய் விடைபெறுகிறாள்.

நீ பதின்மத்திலிருந்த அதே பெண்தான். விழிகள் முழுதும் கண்ணீர் ததும்பி வழிகிறது. அழுவதைத் தவிர இந்த குரூர உலகிலிருந்து தப்புவதற்கு  வழிகள் எதுவுமேயில்லையென மழை பெய்தால் போல அழுகிறாய். உன் கண்ணீர்த்துளிகள் நம் எல்லோரினதும் நெஞ்சை நிரப்பி விடுகின்றன. இரவுகளுக்கெல்லாம் இன்னும் கனம் கூடிவிடுகின்றன. இவ்வளவு வெகுளியான பெண்ணிற்கு அவள் விரும்பியமாதிரியான ஒரு வாழ்க்கை கிடைக்க விடாத காலத்தின் மீது நமக்கும் கோபம் வருகிறது.

பிரிய அடேல், துயரத்தின் நிமித்தம் நடுங்கும் கரங்களோடு நீ பற்ற வைக்கும் சிகரெட்டுக்களைப் போலத்தான் நம் பலரின் வாழ்வும் தினமும் அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்கின்றன. அளவிறநது பொங்கும் நேசத்தை, நாம் பிரியம் வைக்கும் மனிதர்கள் மீது அப்படியே காட்ட முடியாது தடுக்கும் கண்ணுக்குப் புலப்படாத சக்திகள்தான் என்ன? எல்லா அவமானங்களையும் தாண்டி, சந்தித்த தலைக்குனிதல்களையும் மீறி நீ யாசித்தது, மிக எளிமையான ஓரேயொரு விடயம், காதல் மட்டுமே. ஆனால் அதுவே உனக்கு விரும்பியமாதிரி கையளிக்கபடாது போனதுதான் எவ்வளவு துயரமானது. அது மட்டுமின்றி, உனது தவறுகளைக் கூட மன்னிக்க எம்மாவினால் முடியாதபோது, எல்லாவற்றின்மீது சாபம் போடவே மனது விரும்புகிறது.

அடேல் நீ இப்போதும் அந்தப் பெருமரத்தின் பெஞ்சில், உடலைக் குறுக்கிப் படுத்துக்கொண்டு பரந்த வானத்தை வெறித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் நான் உனக்கு உதிருமிலைகளை அல்ல, வசந்தகாலத்துப் பசிய இலைகளையும் வர்ணமயமான பூக்களையுமே பிரியங்களோடு தரவிரும்புகிறேன்.

உன் கண்ணீரின் அர்த்தம் விளங்கியவர்கள் இந்த உலகில் இல்லாமலா போய்விடுவார்கள். ஒழுங்காய் வாராப்படாது, தான்தோன்றித்தனமாய் விடப்படும் உன் கேசத்தை அழகெனவும், அதில் தன் முகம் புதைக்கவும் ஒருவர் வருவதை யாரால்தான் தடுக்கமுடியும்?

எவ்வாறாயினும் உன்னில் இருக்கும் அப்பாவித்தனத்தை என்றென்றைக்குமாய் கைவிட்டுவிடாதே. மேலும் செய்த தவறுகள் குறித்தும் அதிகம் கவலைப்படாதே. கடந்துபோனவை கடந்தவைதானல்ல்வா? நம்மால் என்னதான் இனிச் செய்யமுடியும்?  மேலும், நமது தவறுகளே நாம் ஓரிடத்தில் தேங்கியிருக்கவில்லை என்பதை இன்னொருவிதமாய் நமக்கு நிரூபிப்பவை. எனவே பிறர் உன்னை மன்னிக்க மறுத்தாலும் உன்னை நீயே மன்னிக்கக் பழகிக்கொள்.அது போதும்.

கதகதப்பான நிறமென நீலத்தைப் பெயரிட்டுக்கொள்ளலாம்.. ஆனால் வாழ்க்கை என்பது வர்ணங்கள் பலவின் கூட்டுக்கலவையினால் உருவாவது.

சாம்பல் வர்ணத்தை (உன்) அப்பாவித்தனத்தின் நிறமாய் நான் பெயரிட்டுக்கொள்கிறேன்.

ஆம், சாம்பல் வெகுளித்தனத்தின் வர்ணம் என்பேன்.


(Jul 09,2014)
('Blue is the warmest colour' திரைப்படம் பார்த்த பாதிப்பிலெழுதியது)

(நன்றி: 'எனில்' இணைய சஞ்சிகை)

'அம்ருதா' இதழில் வந்தவை...

Tuesday, September 16, 2014

கனவுகளைக் கனவுகள் எனவும் சொல்லலாம்

மார்க‌ழியின் மாலையொன்றில
ச‌ந்தித்த‌போது அது எதுவாக இருந்த‌தென்ப‌து
நினைவினிலில்லை;
கெதியாய் இருள்மூடி ப‌னிபொழிந்த‌ மூன்று ம‌ணியாக‌
இருந்திருக்கூடுமென்றபோது....
நான் - நினைவூட்ட‌லின் வ‌ன்முறை குறித்தும்
நீ - நினைவில் வைத்திருக்க‌வேண்டிய‌ வ‌ர‌லாற்றின் அவ‌சிய‌ம் ப‌ற்றியும்
விவாதித்த‌ப‌டி ப‌னிமூடிய‌ குளிராடையைத் த‌ள‌ர்த்திய‌ப‌டியிருந்தோம்
இக்க‌ண‌த்தை நினைவில் வைத்திருப்ப‌தைப் போன்று
முன்னே பின்னே நக‌ர்ந்த‌ ந‌க‌ரும் கால‌த்தை
நினைவு நூல‌க‌த்தின் அக‌ர‌வ‌ரிசையில் தேடியெடுக்க‌
ஏன் எவ‌ரும் துல்லிய‌மாக‌ எழுத‌வைக்க‌வில்லையென்ற‌ப‌டி
தேநீருட‌ன் சான்ட்விட்சுக்கான‌ காய்க‌ளை வெட்ட‌த்தொட‌ங்கினோம்

இன்ன‌வின்ன‌ வேலைக‌ளை இவ‌ரிவ‌ர் செய்ய‌வேண்டுமென்ற‌
எந்த‌க்க‌ட்ட‌ளையையும் ம‌வுன‌ம் க‌ற்பிக்காத‌தை
ந‌ம‌க்குரிய‌ நேச‌மென‌ப் பெய‌ரிட்ட‌ழைக்க‌லாம்
அன்றைய‌ இர‌வுண‌விற்கான‌ கோழியை வெட்டி
Ovenக்குள் வேகவைத்த‌ பொழுதிற்கிடையில்
*ஒற்ற‌னில் அமெரிக்கா வ‌ந்த‌ கதைசொல்லியின் அனுப‌வ‌த்தையும்
இறுதியின் எல்லோரையும் என்றென்றைக்குமாய் பிரிந்துபோகும்
அவ‌னின் மெல்லிய‌ துய‌ரையும் ப‌கிர்ந்த‌போது
ப‌னியைப்போல‌ நான் உருக‌க்கூடிய‌வ‌னாக‌யிருந்தேன்
நீராயென் வெறுமைக‌ளை நீ நிர‌ப்ப‌க்கூடிய‌வ‌ளாயிருந்தாய்

கால‌மெனும் நான்காவ‌து ப‌ரிமாண‌ம்
தெப்ப‌மாய் மித‌க்க‌த் தொட‌ங்கிய‌போது
நாம் எம‌க்கான‌ துடுப்புக்க‌ளைத் த‌வ‌ற‌விட்டு
ந‌தி வ‌ற்றுமென‌க் காத்திருந்தோம்
இப்போது குளிராடையைத் த‌ள‌ர்த்துவ‌த‌ற்கோ
கையுறையைக் க‌ழ‌ற்றி விர‌ல்க‌ளைக் கோர்ப்ப‌த‌ற்கோ நேர‌மின்றி
ந‌ம‌க்கான‌ க‌ன‌வுக‌ளுக்குள் த‌னித்து நீந்துவ‌தைத்த‌விர‌ வேறு வ‌ழியில்லை
மார்க‌ழி மாலையொன்றில் நாம் ச‌ந்திந்த‌போது
அது எதுவாக‌ இருந்த‌தோ அது இப்போதும் அவ்வாறே இருக்க‌வும்கூடும்
நாம்தான் எதுவெதுவாக‌வோ மாறிவிட்டோம் என்ப‌தைத் த‌விர‌.

* அசோக‌மித்திர‌ன் எழுதிய‌ நாவ‌ல்
--------------------------------------

பறக்கும் நூலகம்

குளிர்காலத்தில்
புத்தகசாலைக்குள் நுழையும் நீங்கள்
பக்கங்களில் தன்னைத் தொலைத்த
வெளிர்நீல ஆடையணிந்த ஒருத்தியைக் காணக்கூடும்
அவளின் கவனத்தை ஈர்த்தொரு புன்னகையைப்பெறும்
முயற்சியில் தோற்றுக்கொண்டிருக்கையில்
சலிப்பில் ஏதேனுமொரு சஞ்சிகையைப் புரட்டிக்கொண்டு
வெளியில் பொழியும் கடும்பனியைத் திட்டுவதுபோல
உங்களை நீங்களே நிதானமாய் நிர்வாணமாக்கவும் முடியும்

புத்தகக்கடையில் வேலை செய்யும் ஆணை/பெண்ணை
மோகித்துக்கொண்டிருப்பவள்/ன்
பலநூறு புத்தகங்களை
ஒரேநேரத்தில் வாசித்துவிடுபவனாய்/ளாய் இருக்கலாம்

தொடைகளுக்குள் பறக்கத்துடிக்கும் வண்ணத்துப்பூச்சியை
மறைத்து வைத்திருந்தவளின் உச்சந்தலையில்
ஆரம்பிக்கும் முத்தத்திலிருந்து
மலரத்தொடங்குகின்றது
வாசிக்கமுடியா வர்ணங்களில் கனவுகளின் நூலகம்.
-----------------------

வாதை

மூச்சுவிடமுடியாது நீருக்குள் அமிழ்ந்ததுபோல
கழுத்தை நெருக்கும் சுருக்குக் கயிறாய்
வார்த்தைகள் வார்த்தைகள்

ஒவ்வொருவரின் நியாயங்களும்
அழகாய்த்தானிருக்கின்றன
தவறுகளேயிருப்பதேயில்லை

கமபளிப்போர்வைக்குள்
வெப்பந்தேடி அலைந்துழல்கையில்
கால்விரல்களில் படியும்
பிரிவின் வாதைகள்

எல்லாவற்றையும் செரிக்க
எல்லோரையும் நேசிக்க
இப்பனிக்காலம் கற்றுத்தருவதைப்போல
போகாதேயென்று
ஒரு வார்த்தையால் தடுத்து நிறுத்தியிருக்கலாம்

வாசிப்பு
என்னை மோசமாய்த் தோற்கடிக்கும் காலத்தில்
நீ விட்டுச்சென்ற
கண்ணீர்த்துளியில் சுருக்கிட்டு
தற்கொலை செய்வேன்.

(நன்றி: 'அம்ருதா' - மே மாத இதழ்)

எருக்கம்பூ குறிப்புகள்

Friday, September 12, 2014

பகிர்ந்தமையிற்கு நன்றி (Thanks for Sharing)  

நாம் வாழ்க்கையில் எதற்கோ நம்மையறியாமல் அடிமையாகிவிடுகின்றோம். ஆனால் அந்தப் போதையிலிருந்து (addiction) வெளிவருதல், சிலவேளைகளில் நாம் விரும்பினால் கூட அவ்வளவு எளிதாக நிகழ்ந்து விடுவதில்லை. மதுவருந்தல், போதைப்பொருள் பாவித்தல் போன்றவற்றை துருத்திக்கொண்டு தெரியும் போதையான விடயங்கள் என்றாலும், தமிழ்ச் சமூகத்தில் அரசியல் பேசுவதில் கூட பலருக்கு ஒருவகை addiction இருக்கிறதென நினைப்பதுண்டு.

'பகிர்ந்தமையிற்கு நன்றி' என்கின்ற இத்திரைப்படம் பாலுறவிற்குப் போதையாகின்றவர்களைப் பின் தொடர்ந்து பார்க்கின்றது. இவ்வாறு பாலுறவிற்குப் போதையாகின்றவர்கள், தமது நிலைமை விளங்கி தமது கதைகளைக் கூறி போதையிலிருந்து விடுபடுவதற்கான கவுன்சிலிங் பெறுகின்றார்கள். ஒருவர் பாலுறவில் அதீத நாட்டங்காரணமாய் தான் வேலை செய்யும் வைத்தியசாலை மருத்துவரையே இரகசியமாக விடீயோ எடுத்து மாட்டுப்படுகிறார். இன்னொருவர் பாலியல் சார்ந்து எல்லாப் போதையிலிருந்தும், ஐந்து வருடங்களாக விலகி இவ்வாறான போதையிலிருப்பவர்க்கு ஆலோசனை வழங்கி உதவியும் புரிகின்றார்.

ஆனால் இவ்வகையான போதையிலிருந்து விலகினாலும் அது எப்போதும் மீண்டும் பற்றக்கூடிய தீயைப் போல ஐந்து வருடங்களாக ஒழுங்காக இருந்தவரும் மீண்டும் பாலின்பப் போதையிற்கு அடிமையாகின்றார். வாழ்வில் அடுத்த காலடியென நினைத்து காதலில் விழும்போது, இவ்வாறான பாலியல் போதையிற்கு அடிமையானவர்களை காதலிப்பவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதால் முதலில் ஒளிக்கிறார். பிறகு ஒருகட்டத்தில் உண்மையைப் பேசும்போது காதலி -புற்றுநோயால் மார்பகத்தை இழந்த cancer survivor என்றாலும்- இந்தப் போதை விடயத்தை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாதிருக்கின்றது.

எல்லோருடைய வாழ்வும் மீண்டும் தலைகீழாகிறது. ஆனால் இவ்வாறான போதையிற்கு அடிமையானவர்கள் தாங்களாகவே ஒரு சிறு சமூகமாய் இருந்து பிரச்சினைகளில் மாட்டுப்படுபவர்களுக்கு மாறி மாறி உதவி செய்கின்றனர். வெளிச்சமூகம் அவர்களைப் புரிந்து கொள்ள மறுத்தாலும் இச்சிறு சமூகம் அவர்களைத் தாங்கிக்கொள்கிறது/புரிந்துகொள்கின்றது. அவர்களின் வாழ்வு இவ்வாறான ஒரு குறுகிய வட்டத்தில் தொடர்ந்து நகர்ந்து போகின்றது.

இந்தப் படம் அவ்வளவு சிறப்பான படம் என்றில்லாதுவிட்டாலும், போதையிற்கு அடிமையாகின்றவர்களைப் பற்றியும் அவர்களின் நாளாந்த வாழ்க்கை பற்றியும் யோசிக்க வைக்கிறது. அவர்கன் போதையின் அடிமையிலிருந்து மீண்டு வரும்போது கூட, இந்தப் பொதுச்சமூகம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றது என்பதையும் கவனப்படுத்துகிறது.

தவறுகள் செய்யாத வாழ்க்கையென்பது நம் எவருக்கும் வாய்த்துவிடுவதில்லை. நாமறிந்தோ அல்லது அறியாமலோ செய்யும் தவறுகளுக்கே நாம் எப்போதும் மன்னிப்பை யாசிப்பவர்களாக இருக்கின்றோம். அவ்வாறு மன்னிப்புக்களை எதிர்பார்க்கும் நாம் இவ்வாறான போதைகளிற்கு அடிமையானவர்களையும் சற்று அரவணைத்துக்கொள்ளலாம். ஆகக்குறைந்து அவர்களும் நம்மைப் போன்று ஒரு இயல்புவாழ்க்கையைத்தான் யாசித்துக்கொண்டிருப்பார்கள் என்பதையாவது, அவர்களைக் கேலி செய்யாது நம் மனதில் இருத்திக்கொள்ளலாம்


ராஜீவ்காந்தி சாலை

ளவிற்கு அதிகமான பரபரப்புக்களும், விளம்பரங்களும் ஒரு படைப்பிற்கோ/படைப்பாளியிற்கோ எத்தகைய மேலதிக மதிப்பையும் வழங்கிவிடாது என்றும் நம்பும் ஒருவன் நான். 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வெளிவந்தபோது, நாவலின் உள்ளடக்கம் குறித்து எதுவும் அதிகம் பேசாமலே அதற்கு வழங்கப்பட்ட 'வெளிச்சம்' , அந்நாவலை வாசித்துப் பார்ப்பதற்குத் தயக்கத்தைத் தந்திருந்ததால் -சில மாதங்களுக்கு முன்னும் விற்பனையிற்கு இருந்தபோதும்- அதை வாங்காமல் நகர்ந்திருக்கின்றேன்.

இப்போது அதை ஆறுதலாக வாசித்துப் பார்க்கையில், விநாயகமுருகனின் முதலாவது நாவல் என்றவகையில் கவனிக்கப்படவேண்டிய ஒரு நாவலாகவே தோன்றுகின்றது. நவீன காலத்தின் சிதறிய மனங்களை தகவல் தொழில்நுட்பப் பின்னணியில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், அந்த 'வளர்ச்சி'யில் உள்ளும் புறமும் தொடர்புபட்ட மனிதர்களின் வாழ்வு பதியப்பட்டிருக்கின்றது.

இன்றைய தகவல் தொழில்நுட்பம் உலகையே உள்ளங்கையில் கொண்டுவந்திருக்கின்றது போன்ற பாவனையைத் தந்தாலும், மனித வாழ்வை இன்னுமின்னும் சிக்கலாக்கி, பல நூறு சில்லுகளாய் மனங்களை உடைத்து, ஒவ்வொருரையும் தனித்தனித் தீவுகளாகவே பெரும்பாலும் ஆக்கியிருக்கின்றது. இந்நாவலும் ஐரி(/டி) துறையில் உச்சத்திலிருப்பவர்களிலிருந்து, இதற்காய் நிலங்களை இழந்து சேரியில் வாழும் மனிதர்கள் வரை எல்லோரையும் ஊடுருவிப் பார்க்கின்றது.

பணத்திற்காகவும், அதன் நிமித்தம் வரும் வசதிகளுக்க்காகவும் பெரும்பான்மையான மனிதர்கள் இந்நாவலில் ஓடிக் கொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் விரும்பிய சிலவற்றை அடைந்தபின்னும் இன்னுமின்னும் ஆசைகள் பெருகப் பெருக எதெதெற்கோ தொடர்ந்தும் அலைந்துகொண்டேயிருக்கின்றார்கள். இலட்சங்களில் உழைத்தால் கூட, இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு எதையும்/எவரையும் திருப்திப்படுத்தமுடியாதென இன்னுமின்னும் தேடப்போய் தங்களைத் தொலைத்தும் கொள்கிறார்கள்.

மனிதர்கள் மனம் பிறழ்கிறார்கள், சுமூகமான உறவுகள் சிதைகின்றன, மாடிகளிலிருந்து குதித்து அடிக்கடி தற்கொலை செய்கின்றனர். வெளிநாட்டு நிறுவனங்களுக்காய்ச் செய்யும் ஒவ்வொரு ப்ரஜெக்ட்டைப் போல, இவ்வாறாக இறந்துபோகும் மனிதர்களையும் எளிதில் மறந்துவிட்டு அடுத்து என்னவென அலைபாய்கின்றார்கள்.எந்த நேரத்திலும் சிதையும் மனோநிலையுள்ள மனிதர்களாய் தாங்களும் ஆகிவிடக்கூடும் என்ற நினைப்பை ஒத்திவைத்துவிட்டு வேலைக்குள் இன்னும் மூழ்குகிறார்கள்.

ஐரி நிறுவனங்கள் பற்றி அவ்வளவு பரிட்சயமில்லாதவர்களுக்கு இவ்வளவு இருட்டு நிறைந்த உலகமா அது என இந்நாவலை வாசிக்கும் ஒருவரை அச்சமூட்டக்கூடும். ஆனால் இன்றைய மெய்நிகர் உலகில் இந்நாவலில் குறிப்பிடுபவை எங்கேயும் எந்தச் சூழலிலும் நடைபெறுபவையே/நடைபெறக்கூடியவையே.

இந்நாவலிற்குள் இருக்கும் பெரும் பலவீனம் என்னவென்றால். நாவலின் எந்தக் கதாபாத்திரங்களுக்குள்ளும் ஆழமாய் இறங்கிச் செய்யவில்லை என்பதே. நாவல் முழுதும் தொடர்ந்து வரும் ப்ரணவ் செய்யும் தற்கொலை கூட ஏன் மனதை அவ்வளவாய்ப் பாதிக்கவில்லை என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. ஐரி துறையில் நீண்டகாலம் இருக்கும் பிரணவிற்கு ஆகக்குறைந்தது அது இயங்கும் சூழல் தெரியும் என நாவலில் தெளிவாகக் கூறப்படும்போது, சடுதியாக வேலையிழத்தலோ அல்லது மனைவியின் பிற ஆண் மீதான உறவோ , இவ்வாறான ஒரு முடிவை எடுக்க வழிவகுக்கச் செய்யுமா என்கின்ற சந்தேகம் வாசிப்பவருக்கு வரக்கூடும்.

அதுபோலவே தற்கொலை செய்யும் இரண்டு (காதல்?) சோடிகளின் தற்கொலைகளும் இருக்கின்றன. கணவன் இருக்கின்றபோதும், எல்லோருக்கும் பொதுவாய்த் தெரியக்கூடியதாய் வேலைத்தளத்தில் உள்ள ஆணோடு நெருங்கிப் பழகவும், அமெரிக்கா ஆன்சைட் போகின்றபோது அங்கு சந்திக்கும் கறுப்பின சக வேலையிட ஆணோடு உறவு கொள்கின்ற ஒரு பெண், எப்படி தற்கொலையை உடனே தேர்ந்தெடுப்பார் எனறும் கேள்விகள் வருகின்றன. ஏதோ ஒருவகையில் துணிச்சலும், எல்லாவற்றையும் சந்திக்கக்கூடிய தைரியமுள்ள ஒரு பெண் உடனே இப்படி தற்கொலையிற்கு முயல்வாரா என நாவலின் போக்கில் நின்று யோசித்துப் பார்த்தால், அவரின் முடிவில் பெரிதாய் பாதிப்பே வருவதில்லை. ஜெயமோகனோ (அல்லது யாரோ) முன்பு ஓரிடத்தில் எழுதியதுதான் நினைவிற்கு வருகின்றது, யதார்த்தத்தில் மரணம் தெருவில் வாகனம் அடித்துவிட்டாற்போல சடுதியாய் வரலாம். ஆனால் எழுத்தில் வைக்கும்போது அதற்கான காரணங்களை முன்வைத்தே எழுதவேண்டும். இல்லாவிட்டால் எத்தகைய பாதிப்பும் வாசிப்பவருக்கு வரப்போவதில்லை என்று. அவ்வாறே இந்நாவலில் பல பாத்திரங்களின் முடிவுகளும் எதையோ தவறவிட்டதாய் அந்தரத்தில் தொங்கி நிற்கின்றன.

காமத்தை, அது 'வழிதவறிய' உறவாய் இருந்தால் கூட, அருமையாக விபரித்துச் சொல்லக்கூடிய இடங்களையெல்லாம், நாவல் போர்னோ வகையாய் விபரித்தபடி போகின்றது. 'தகாத' உறவாய் இருந்தால் கூட, அந்த குற்றவுணர்வை மீறிப் பொங்கும் காமத்தை, காமத்திற்காய் எல்லாவற்றையும் துறந்துவிடத் தயாராகும் மனித மனத்தின் விந்தைகளை எல்லாம் எழுத்தில் வைக்காமல் தவறவிடப்பட்டிருக்கின்றன. மேலும் காமம் என்பது காமத்தை அப்படியே என்ன நடந்திருக்கும் என்பதைச் சொல்வதுமல்ல. உதாரணத்திற்கு 'என் பெயர் சிவப்பில்' காமத்தை விபரிக்கும் பக்கங்களை விரல் விட்டு எண்ண்விடலாம் (ஒன்றிரண்டு இடங்கள் மட்டுமே). ஆனால் நாவல் முழுதுமே காமம் மெல்லிய நீரோடையாய் ததும்பியபடி இருப்பதை வாசிப்பவர்கள் உணரும்படி ஒரான் பாமுக் எழுதியிருப்பார். ஆகக்குறைந்தது விநாயமுருகன் இந்நாவலில் அப்படி எழுதமுடியாமல் விட்டால் கூட, எரோட்டிக்கா வகை எழுத்து நோக்கியாவது நகர்ந்திருக்கலாம்.

நாவல் முழுதும் ஆண் பாத்திரங்களே தொடர்ந்து பேசியபடியிருக்கின்றன. எல்லாப் பெண் பாத்திரங்களும் வரும் ஆண் பாத்திரங்களுக்கு ஊடாக அறிமுகப்படுத்தப்படுகின்றனவே தவிர, அவை தம் கதையை/வாழ்வை சொந்தக் குரலில் கூறும் சாத்தியங்களே இல்லாமற் செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் பிராமணர்கள்/மலையாளிகள் மீது பொதுப்படையாக வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களைத் தவிர்த்திருக்கலாம் (கவனிக்க, விமர்சனம் வைப்பதைக் கூறவில்லை).

இவை, நாவலில் வரும் எதிர்மறையான விடயங்கள் என்றாலும், இவற்றை வைத்து நாவலை நிராகரிக்க வேண்டியதில்லை. விநாயமுருகனின் முதல் நாவல் என்றவகையில் இன்னும் நிறையப் பயணிக்கப் போகின்றவரின் முதலடியென இந்நாவலை வரவேற்கலாம்.


பிறகு (With You, Without You)

த்திரைப்படம். மட்டுமில்லை படத்தின் பிறகான பிரசன்னாவோடான உரையாடலும் இன்னும் திரைப்படத்தோடு ஒன்றிக்க வைத்தது. கடந்தகால வன்முறையின் வரலாற்றை மறந்து (அல்லது உதறித்தள்ளி விட்டு) இனங்களுக்கிடையிலான மேலோட்டமான மீளிணக்கம் எப்படி தோல்வியுறும் என்பதை தனிப்பட்ட மனிதர்களுக்கிடையிலான உறவின் மூலம் மிக ஆழமாக பிரசன்னா இத்திரைப்படத்தில் தந்திருக்கின்றார்.

மிகக் குறைந்த பாத்திரங்களோடும், ஒரு குறுகிய பின்னணி நிலவியலோடும், மிகச் சொற்ப உரையாடல்களோடும் எப்படி மனதைப் பிசையுமொரு படத்தைத் தரலாம் என்பதற்கு இதொரு இன்னொரு உதாரணம். சிக்கலான படிமங்களோடும், எல்லாவற்றையும் 'சொல்லிவிடும்' எத்தனிப்புக்களுமின்றி பல்வேறு இடங்களில் விடப்படுகின்ற வெளியிலிருந்தும் பார்வையாளர் தமக்கான ஒரு பிரதியை(படைப்பை) உருவாக்கிக்கொள்ளும் சுதந்திரமும் தரப்பட்டிருக்கின்றது என்பது என்னளவில் முக்கியமானது. எவற்றிலிருந்தும் நாம் தப்பிவிடமுடியும் ஆனால் நமது மனச்சாட்சிகளிடமிருந்து என்றைக்குமாய்த் தப்பிவிடமுடியாது என்பதை ஒரு பெரும்பான்மை இனத்திடமிருந்து வரும் தெளிவான குரல் கவனிக்கத்தக்கது.

சிலரின் படைப்புகளைப் பார்த்து/வாசித்துவிட்டு அவர்களோடு உரையாடினால், இதைவிட அவர்களைச் சந்திக்காது விட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என யோசிப்போம். எனக்கு இந்தப் படத்தைப்போலவே பிரசன்னாவோடு நிகழ்த்திய உரையாடலும் அதிக நெருக்கத்தைத் தந்தது. இன்று அறியப்பட்ட நெறியாள்கையாளராக இருந்தாலும், நாம் சுட்டும் தவறுகள்(விமர்சனம்) போன்றவற்றை மிகப் பணிவாகக் கேட்டும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பிரசன்னாவில் பிடித்த இன்னொரு விடயம். இவர்களும் இவர்களின் படைப்புக்களுமே இன்னும் தாம் இன்னொரு இனத்தின் மீது நிகழ்த்திய வன்முறையை அறியாத (அல்லது அறிய விரும்பாத) பெரும்பான்மையினத்தவரின் மனச்சாட்சிகளை அசைக்க நம் முன் வைக்கப்படும் நம்பிக்கைக் கீற்றுக்கள் என நம்புகிறேன்.

"With you Without you" - What a movie. I am not only very impressed by the movie but also the conversation with the director. This movie again reminds us that there is no real reconciliation without knowing the history of violence between two ethnic communities in Sri Lanka. This movie have lots of metaphors and as well as leave enough space to audience to think beyond the movie. It is very hard to create a movie with handful of characters and a fixed small landscape, but this movie also impress us with less dialogues. I am also very moved with the conservation with Prasanna. Yet he is known director everywhere, he is very humble to hear audience's point of views. Thanks Prasanna Vithanage, Though there is long way to travel to resolve our ethnic conflicts, but you give a ray of hope that there are still few sinhalese people worrying (or in other words feeling guilty) of what happened to Tamil people in Sri Lanka.