கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இலங்கைக் குறிப்புகள் - 03

Monday, January 15, 2018

1.
நானும், ஹஸீனும் அக்கரைப்பற்றிலிருந்து எஸ்.எல்.எம். ஹனீபாவைப் பார்ப்பதற்கு பஸ்ஸில் ஏறினோம். இடையில் விபுலானந்தர் அழகியல் கல்லூரியில் ஜெய்சங்கரைச் சந்திப்பதென்றும் தீர்மானித்திருந்தோம். எனினும் இன்னொரு நண்பரைச் சுகம் விசாரித்துவிட்டு பஸ் ஏறவேண்டியதால், ஜெய்சங்கரோடு சந்திப்பதற்கான நேரத்தைத் தவறவிட்டிருந்தோம். இடையில் காத்தான்குடியில் இறங்கி மதியவுணவைச் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் எங்களை ஆசுவாசப்படுத்திவிட்டு ஓட்டமாவடியிற்குப் புறப்பட்டோம்.

ஹனீபா என்கின்ற இளமை ததும்பும் அருமை நண்பர் எமக்காய் முக்கிய சந்தியொன்றில் காத்திருந்தார். முதன்முதலில் சந்திக்கும் மகிழ்ச்சியில் அவரை ஆரத்தழுவினேன். அன்று மாலையே ஓட்டமாவடி அறபாத்தின் 'வாடிவீட்டு'க்குப்போய் நமது பிரம்மச்சாரிய வாழ்வை மீண்டும் வாழ்ந்து பார்ப்பது என்பது ஹனீபாவின் ஏற்பாடு. அறபாத் தன் காரில் வந்து எங்களை அழைத்துப் போகும்வரை, நாங்கள் ஒரு கடைக்குள் கடிக்க/கொறிக்கப் போயிருந்தோம்.

அங்கே வருகின்றவர்கள், போகின்றவர்கள் எல்லாம் ஹனீபாவிடம் சுகம் விசாரித்தபடி இருந்தனர். அந்தளவிற்கு படைப்பாளியாக மட்டுமில்லாது அந்த மக்களோடும் ஒரு நெருங்கிய நபராக ஹனீபா இருந்தார். இது நமது தமிழ் இலக்கியவாதிகள் பலருக்குக் கிடைக்காத ஒரு நல்லூழ் எனத்தான் சொல்லவேண்டும். கடையை வைத்துக்கொண்டிருப்பவரே, 'மாமா(?) எங்கள் வீட்டில் ஒரு புதுமரம் காய் காய்க்கின்றது என்னவென்று தெரியவில்லை. எப்படிக் கண்டுபிடிக்கிறது' எனக்கேட்டுக்கொண்டிருந்தார். இரண்டு பேரும் அந்த மர்மத்தை அவிழ்ப்பதில் போட்டிபோட்டுத் தோற்று அடுத்த நாள் அந்த மரத்தின் கிளையை நேரே கொண்டுவருவது, பிறகு கண்டுபிடிக்கலாம் என்ற முடிவுக்கு இறுதியில் வந்திருந்தனர். அவ்வாறு ஹனீபாவிற்கு ஊரிலிருக்கும் மனிதர்களை மட்டுமில்லை, உலகிலிருக்கும் மரங்கள் பற்றியும் நல்ல அறிமுகம் இருந்தது.

ஹனீபா தொடர்ந்தும் கடைக்குள் இருந்தால், தெருவால் கடந்து போகின்ற மதினிமார்களுக்கும் ஏதாவது உதவிகள் செய்யப்போய் எங்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்று நான் அஞ்சிக்கொண்டிருந்த நேரத்தில், நல்லவேளையாக அறபாத் வந்து எங்களைக் காப்பாற்றினார். வாடிவீடு எங்களுக்காய்க் காத்திருந்தது. அங்கும் ஹனீபா அறபாத் நட்டு வைத்திருந்த மாங்கன்றுகளுக்கும், கொய்யாக்களுக்கும் எப்படி அதை ஆரோக்கியமாய் வளர்ப்பதென்று ஆலோசனை கூறிக்கொண்டிருந்தார்.

ப்படியே நாங்கள் கதைத்துக்கொண்டிருக்கையில் மலர்ச்செல்வன், சஃரி போன்ற நண்பர்களும் வந்து இணைந்தனர். பஸ்சில் நீண்ட நேரம் வந்த களைப்பிற்கு அங்கேயிருந்த கிணற்றில் தண்ணீரள்ளிக் குளிக்க, சொர்க்கமாய் இருந்தது. மலர்ச்செல்வன் போன்ற நண்பர்கள் பிறகு விடைபெற்றுச் செல்ல, அறபாத்தும் எங்களுக்கான இரவுணவை வாங்கிவரப் போக, நானும் ஹஸீனும், ஹனீபாவும் இருந்து இலக்கியம், இன்னபிற என கதைத்துக்கொண்டிருந்தோம்.

எல்லாவற்றையும் விட, இலக்கியம் தரும் முக்கிய ஓர் அனுகூலம் என்னவென்றால், நாம் அவரவர்களுடைய வயதைக் கடந்து, சமவயது ஒத்தவர்களாக நினைத்துக் கதைக்கலாம், விவாதிக்கலாம் என்பது. அதுவும் ஹனீபா போன்று எங்களைவிட இளமையான எண்ணங்களுடன் இருப்பவர்களுடன் கதைப்பது என்றால் இன்னும் சுவாரசியமாகும். கி.ராவும், களனியூரானும் தொகுத்த 'மறைவாய்ச் சொன்ன கதைகள்' போல ஹனீபா அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்த கதைகளுக்கு நானொரு 'தாசனாகி'ப் போய்க்கொண்டிருந்தேன். அதுமட்டுமில்லை ஹனீபாவிற்கு இருக்கும் அரசியல், இலக்கிய அனுபவங்கள் என்பவை நெடும் வரலாறு கொண்டவை என்றபடியால் இன்னும் சுவாரசியமாக அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.

இரவுணவையும் சாப்பிட்டுவிட்டு, ஹனீபா சாய்மணைக் கட்டிலில் இருந்தபடி அவர் எழுத விரும்பும் புனைவைச் சொல்லிக்கொண்டிருந்தார். அந்தப் புனைவில் யானைகள் ஒரு முக்கிய பாத்திரம் என்பதாலோ அல்லது என்னவோ, சாய்மணைக் கதிரையில் இருந்த ஹனீபாவை நான் வைக்கம் முகமது பஷீர் போல கற்பனை செய்துகொன்டிருந்தேன். எப்படியெனினும் அவரது இந்தக்கதையை எழுத வைத்துவிடவேண்டும் என்ற துடிப்புடன் ஹஸீன் அதற்கான குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தார். நான் அதை எனது தொலைபேசியினூடு காணொளியாக பதிவாக்கிக் கொண்டிருந்தேன். இரவு இன்னும் இளமையாக எங்களுக்கிடையில் ஓடிவிளையாடிக் கொண்டிருந்தது.

2.
னீபாவின் பிரசித்திபெற்ற 'மக்கத்துச் சால்வை' கதையை அநேகமானவர்கள் வாசித்திருப்போம். அவரின் முதலாவது தொகுப்பும் அதன் பெயரிலேயே 1992ல் வெளியானது. ஹனீபாவின் கதைகளை உதிரிகளாக வாசித்திருந்தாலும், அவரின் முழுக் கதைகளையும் 'அவளும் ஒரு பாற்கடல்' என்ற புதிய தொகுப்பிலேயே வாசித்திருந்தேன். 'மக்கத்துச் சால்வை'யில் இருக்கும் 15 கதைகளோடு, மேலும் 10 புதிய கதைகளை இணைத்து இத்தொகுப்பு வெளிவந்திருந்தது.

தான் எழுதிய கதைகளில் எல்லோரும் 'மக்கத்துச் சால்வை' பிடிக்கும் என்கின்றபோது தனக்கு 'மருமக்கள் தாயம் பிடிக்கும்' என்றார் ஹனீபா. மருமக்கள் தாயத்தில் ஒரு முஸ்லிம் பெண்மணி, தமிழ் இயக்கமொன்றுக்கு அடைக்கலமும் தேநீரும் கொடுத்து பராமரிப்பவர். அவர் ஊரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, உடல்நலமின்றி இடம்பெயரும்போது எல்லோரும் கைவிட்டபோதும் இயக்கப்பொடியள் வந்து தனக்கு உதவுவார்கள் என நினைக்கின்றார். அவர்களும் அவரைக் கவனிக்காது சாதாரணமாய் ஜீப்பில் கடந்துபோகின்றதோடு கதை முடிகையில் தமிழ் - முஸ்லிம்களுக்கான பிளவின் முதல் சமிக்ஞை காட்டப்படுகின்றது, மருமக்கள் தாயத்தில்.

நான் ஹனீபாவின் முதல் கதையை என்னுடைய 16 வயதில் வாசித்திருக்கின்றேன், அது 'வெள்ளைக் காகம்' என்ற தலைப்பில் சரிநிகரில் வந்த கதை. சந்திரிக்காவின் ஆட்சிக்காலமும், அவர் சமாதானத்துக்காய் கொண்டுவந்திருந்த இயக்கத்தின் பெயர் வெண்புறா இயக்கம் என்பதாலும், வெள்ளைக்காகத்தை வெண்புறாவோடு தொடர்புபடுத்தி (என் அன்றைய வாசிப்பு அறிவுக்கேற்ப) சமாதானத்தைக் கிண்டலடித்த கதையாக தொடர்புபடுத்தி என் தமிழாசிரியரான அ.இரவியிடம்  இதுபற்றிக் கதைத்தபோது, அவர் இதுவொரு முஸ்லிம் தலைவரை எள்ளல் செய்யும் கதையெனத் திருத்தியது நினைவு இருக்கிறது. அன்று சரிநிகரில் அது ஹனீபா என்ற பெயரிலா அல்லது வேறு புனைபெயரிலா வந்தது என்பது ஞாபகமில்லை. அவ்வாறு விருப்புடன் வாசித்த ஒருவரை மீண்டும் நெடுங்காலத்தின் பின் அவரைத் தேடிச்சென்று அதைச் சிலாகிப்பது என்பதுதான் எத்தனை அழகானது.

லக்கியத்தால் என்ன பிரயோசம் என்றுதான் பலர் கேட்பார்கள். அதில் முக்கியமானது இப்படி வயது வித்தியாசமில்லாது ஆளுமையும் அனுபவமும் உள்ளவர்கள், எங்களை ஈர்ப்பார்கள் என்பதும் ஒன்று. இலக்கியம் எங்கள் எல்லோரையும் ஒரே தளத்தில் வைக்கும். இதை வேறு எதுவும் எங்களுக்கு அவ்வளவு இலகுவில் தராது. வாசிப்பு என்பதே வயதை, இடத்தை கடந்து ஹனீபா போன்றோர்களுடன் எங்களை நட்புப் பேணவும், அவரைத் தேடிப்போய்ப் பார்க்கவும் வைக்கின்றது.

இன்னும் ஒன்று உள்ளது. இன்றைய காலத்தில் தமிழ்- முஸ்லிம் உறவானது மிகவும் இறுக்கமான கட்டத்தில் இருக்கின்றது. அரசியலினூடாக செல்வதை விட, கலை- இலக்கியத்தினூடாக இந்த உறவின் இறுக்கத்தைத் தளர்த்த முடியும் என்று நம்புகின்றவன் நான். ஈழத்தில் வாழ்ந்த காலங்களில் எனக்கு எந்த முஸ்லிம் நண்பர்களும் இருந்ததில்லை. 13 அல்லது 14 வயதில் புலிகள் எங்கள் பாடசாலையில் ஒரு பிரச்சாரக் கூட்டம் வைத்த பேசியபொழுதில், 'முஸ்லிம்களை ஏன் வெளியேற்றினீர்கள்?' என துண்டெழுதிக் கேட்டதைத் தவிர வேறு எதுவும் முஸ்லிம் சமூகம் சார்ந்து எனக்கு எதுவும் நினைவினில்லை. பிற எந்த தனிப்பட்ட அனுபவங்களுமில்லை.

அவ்வாறான ஒருவனுக்கு, இன்று முஸ்லிம்களிலும் நண்பர்கள் இருப்பதும், அவர்களும் என்னை 'மற்றதாக' உணரவைக்காமல் பழகுவதும் என்பது இந்த வாசிப்பினூடாகவே எனக்குச் சாத்தியமாயிற்று. இன்று மிகப்பெரும் பிளவு தமிழ்-முஸ்லிம் சமூகத்திற்குள் வந்துவிட்டாலும், ஹனீபா, ஹஸீன் போன்றவர்கள் எவ்வளவு உண்மையான அக்கறையோடு தமிழ் மக்கள் மீதும் இருக்கின்றார்கள் என்பதை நேரே பார்த்திருக்கின்றேன். அதேபோல அவர்கள் ஒருபோதும் முஸ்லிம்கள் தமிழ்மக்களுக்குச் செய்த சில பாதிப்புக்களையும் மறைத்ததுமில்லை. ஹஸீனோடு அக்கரைப்பற்றில் அலைந்த திரிந்தபொழுதுகளிலெல்லாம், முன்னர் இருந்த தமிழ் மக்களின் இடங்கள் இப்போது இல்லையென வரலாற்றை உள்ளபடி எனக்குக் காட்டிக்கொண்டிருந்தார். கைவிடப் பட்ட ஒரு இந்துக்கோயிலின் சிதைபாடுகள் உட்பட.

3.
னீபா இரவு நேரத்திற்கான தொழுகையைச் செய்யப்போகின்றேன் என்றார். பிறகு தொழுகை முடிந்து, வெக்கை அதிகமாய் இருந்ததால் நாம் எல்லோரும் வெளி விறாந்தையில் பாயைப் போட்டு கதைத்தபடி தூங்கத்தொடங்கியிருந்தோம். காலையில் அருகிலிருந்த பள்ளிவாசலில் பாங்கொலி கேட்டு நான் விழித்தபோது ஹனீபா ஏற்கனவே எழும்பி தொழுகையைச் செய்துகொண்டிருந்தார். பள்ளியில் தொழுகையொலி முடிக்கின்றபோது ஏதோ ஒரு கோயிலில் இருந்து அம்மன் பாடல்கள் ஒலிக்கத்தொடங்கியது. நாம் மனிதர்களை, மதங்களைத் தாண்டி புரிந்துகொள்ள இந்தக் காலையைவிட ஒரு அருமையான சந்தர்ப்பம் இருக்காது போல எனக்குள் தோன்றியது.

அக்கரைப்பற்றில் மூன்று நாள்கள் தங்கி நின்ற நான், அடுத்த நாள் கொழும்பு போவதாகத் தீர்மானித்திருந்தேன். ஹனீபாவும் ஹஸீனும் என்னை இலங்கைப் போக்குவரத்து பஸ்ஸில் ஒன்றில் ஏற்றிவிட என்னோடு வந்து பெருந்தெருவில் காத்து நின்றனர். பஸ் வர ஏறியமர்ந்தேன். அவர்கள் இருவரும் புள்ளிகளாய்க் கொஞ்சம் கொஞ்சமாய் மறையத்தொடங்கினார்கள். அருமையான மனிதர்களையும், அனுபவங்களையும் எனக்குள் சேகரமாகிவிட்ட கதகதப்புடன், நான் அவர்கள் தந்த நூல்களில் ஒன்றை எடுத்து விரித்து வாசிக்கத் தொடங்கியிருந்தேன்.

(Dec 25, 2017)

0 comments: