கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Youth

Sunday, January 21, 2018

சுவிஸின் அல்ப்ஸ் மலையினருகில்  ஆடம்பர வசதிகளுடம் இருக்கும் ஹொட்டலில் இத்திரைப்படத்தின் கதை முழுதும் நிகழ்கிறது. ஒருகாலத்தில் பிரசித்தி பெற்றிருந்த இசையமைப்பாளர்,  இப்போது இசையிலிருந்து முற்றாக ஓய்வெடுத்துவிட்டு இருக்கின்றார். அவரை ஒரு நிகழ்வில், அவரது பிரசித்தி பெற்ற பாடலை  இசைக்கவேண்டுமென இங்கிலாந்து மகாராணி வேண்டிக் கேட்டும் மறுத்துவிடுகின்றார். எனினும் இசை நிகழ்விற்கான இசைவை வேண்டி தொடர்ந்து  இராணியின் தொடர்பாளர்கள் வந்து அவரைத் தொந்தரவுபடுத்தியபடி இருக்கின்றனர்.

இந்த இசையமைப்பாளரின் நண்பரும் இதே ஹொட்டலில் தங்கி இருக்கின்றார். அவர், தனது அடுத்த படத்திற்கான கதையை தனது குழுவோடு உருவாக்கிக்கொண்டிருக்கின்றார். இந்த இருவரும் வாழ்வின் அந்திக்காலத்தில் இருக்கின்றனர். அடிக்கடி வராத சிறுநீரை ஒருபொழுது கழித்துவிட்டாலே, அது பெரும் பேசுபொருளாக இருக்குமளவிற்கு இருவர்க்கும் முதுமை நெருக்கினாலும், வாழ்வின் மீது இன்னும் இழந்துவிடாத நம்பிக்கையோடு இருக்கின்றார்கள்.

இவர்களோடு இந்த இசைக்கோர்ப்பாளரின் மகளும் தங்கிநிற்கின்றார். அந்தப் பெண் திருமணம் செய்திருப்பது, இந்த இயக்குநரின் மகனை. எனினும் இந்தப் பெண்ணின் கணவன், எனக்கு வேறொரு பெண்ணோடு காதல் இருக்கின்றதென ஒரு பாப்- பாடகியோடு போய்விடுகின்றான். மகளுக்கு இந்தச் சிக்கலோடு, தனது தந்தை இசை மீதான பித்தால் தன் சிறுவயதில் தன்னையும் தனது தாயையும் ஒழுங்காய்க் கவனிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டுகின்றார்.

யக்குநர் தனது திரைப்படத்துக்கான கதையை ஒருவாறாக முடித்துவிட்டு, அவருக்குப் பிடித்தமான ஒரு நடிகையை நடிக்க அழைக்கின்றார். அவரோ 'நீ ஒருகாலத்தில் அருமையான படங்களை எடுத்தவன், ஆனால் அண்மையில் எடுத்த திரைப்படங்கள் எல்லாம் குப்பைப் படங்கள். உனக்கு இருக்கும் நல்லபெயரைக் காப்பாற்றவேண்டுமென்றால் இனி திரைப்படங்களை எடுப்பதை நிறுத்து' என ஒரு நண்பருக்குச்  அறிவுரை சொல்வது போலக் கூறிவிட்டுச் சென்றுவிடுகின்றார்.
இதற்கிடையில் இன்னொரு நடிகன், தனது அடுத்த பாத்திரத்திற்கு தன்னை மாற்றுவதற்காய் இந்த ஹொட்டலில் வந்து நிற்கின்றான். அவன் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், ஒரு ரோபோட்டுக்கு பின்னணிக் குரல் கொடுத்ததை மட்டும் நினைவுபடுத்தி, காணும் எல்லோரும் பாராட்ட அவனுக்கு எல்லோர்மீதும் வெறுப்பு வருகின்றது. அவனது அடுத்த படத்தில் அவனுக்குரிய கதாபாத்திரம் ஹிட்லருடையது.

அதேபோன்று மிஸ்.யூனிவேர்ஸ் பட்டம் வென்ற அழகி ஒருத்தியும் இங்கே வருகின்றார். அழகிகள் ஒன்றும் அவ்வளவு அறிவில்லாதவர்கள் என்கின்ற இந்த ஆண்களின் வாதத்தை அவர் உடைத்தெறிகிறார். அந்த அழகி பற்றிக் குறைவாக மதிப்பிடும் இந்த இசையமைப்பாளரும், நெறியாளரும், அவள் நிர்வாணமாகக் குளிக்கும்போது பார்த்து இரசிக்கையில், யாரோ அவர்களைப் பார்க்க ஹொட்டலுக்கு வந்திருப்பதாய்ச் செய்தி வருகின்றது. அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய இவர்கள், நாங்கள் முதுமையில் நின்று, நமது வாழ்க்கையில் இறுதி அழகிய துளியை ருசித்துக்கொண்டிருக்கின்றோம் என்கின்றார்கள்.  அது தெரியாமல், ஏன் எங்களைக் குழப்புகின்றீர்கள் எனவும் கோபிக்கின்றார்கள்.

இசைப்பதை நிறுத்திவிட்டாலும், இசையமைப்பாளரால் காற்றில், பசுவின் மணியில், சொக்கிலேட் பேப்பர் கசக்கலில் எனத் தன் இசையை விடமுடியாதவராக இசை அவரைத் தொடர்ந்தபடி இருக்கின்றது. மகள், குற்றப்பத்திரிகை வாசித்த தந்தையை ஒருவகையில் பின்னர் விளங்கிக்கொள்கின்றார். நடிகர், தன் ஹிட்லர் பாத்திரமுள்ள படத்தை கைவிட்டு சாதாரணமனிதர்களை கதைகளைச் சொல்லும் படங்களில் இனி நடிக்கப்போகின்றேன் என்கின்றார்.

இதில் சித்தரிக்கப்படும், ஒருகாலத்தில் உதைபந்தாட்டத்தில் உலகின் கவனத்தை திருப்பி, இப்போது உடல் பருமன் கூடி நடக்கவே சிரமப்படும் மரடோனா, எந்த வார்த்தையும் பேசாது இறுதியில் அந்தரத்தில் மிதக்கும் திபெத்திய புத்தபிக்கு போன்றோர் நமக்கு வாழ்க்கையில் சிலவற்றை மறைமுகமாகச் சொல்ல முயல்கின்றனர். தனது திரைப்படத்துக்கான கதையை முடித்துவிட்டேனென மகிழும் நெறியாளர், தன் நண்பரின் அறையின் பல்கணியினூடாகத் தற்கொலை செய்கின்றார்.

சையமைப்பாளர், எவரினதோ பராமரிப்பிலிருக்கும் தனது நோயுற்ற மனைவியைத் தேடி வெனிஸிற்குப் போகின்றார்.
ஹொட்டலில் இவர்கள் அனைவரும் சந்தித்தாலும், இவர்கள் எல்லோரினதும் வாழ்க்கைப் பாதையும் ஹொட்டலில் தங்கிநிற்கும்போது வேறொரு திசையில் மாறுகின்றது. எதைச் சாதித்தாலும், மனித மனம் வெறுமையை நோக்கித்தான் நகர்கின்றதா? அல்லது வெறுமைதான் வாழ்க்கையின் சாரமாக இருக்கின்றதா? அனைத்துமே கிடைத்ததுபோல வெளிப்பார்வைக்கும் தோற்றமளிக்கும் எல்லோருமே எதையோ இழந்துவிட்டதைத் தேடுவதுபோலத்தான் தமக்குள் தேடிக்கொண்டிருக்கின்றார்களா? நாம் காணும் எந்தக் காட்சி உண்மையானது அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் எந்தப் பாதை நமக்கு ஆசுவாசத்தைத் தரக்கூடியதாக இருக்கும்? இப்படி எண்ணற்ற கேள்விகளை இப்படம் முடிந்தபின்னும் உருவாக்கிக்கொண்டிருக்கின்றது.

நிறைய வருத்தங்கள் தனக்கு இருக்கிறது என நினைத்துக்கொள்ளும் இசையமைப்பாளரைப் பரிசோதிக்கும் ஒரு வைத்தியர், இதுவரை நீங்கள் எண்ணிய எந்த நோயும் உங்களுக்கு இல்லையென இறுதியில் கூறுகின்றார். இதுவரை நோயை ஒரு துணையாக வைத்திருக்கும் அவருக்கு இப்போது என்ன செய்வதென்று திகைப்பாக இருக்கின்றது. இனியான நாட்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது எனக் கேட்க, வைத்தியர் சொல்கிறார், 'உங்களுக்கு (மீண்டும்) இளமை தரப்பட்டிருக்கின்றது, எதுவுமே நீங்கள் விரும்பியபடி செய்யலாம்' என்று.

நாமும் ஒருவகையில் இந்த இசையமைப்பாளரைப் போன்றவர்கள்தான். நாம் செய்யவிரும்பியதைச் செய்ய விரும்பாது ஏதேதோ காரணங்களைச் சாட்டாகச் சொல்லிக்கொண்டிருப்போம். நாம் நமக்கு இடைஞ்சல்கள் என நினைத்தவை இல்லாமற்போனபின்னும் நமக்குப் பிடித்தவற்றைச் செய்வோமா என நம்மிடம் கேட்டால் சந்தேகமாகத்தான் அதற்கான பதிலைச் சொல்பவர்களாக இருப்போமாக்கும்.

இறுதியில் இசையமைப்பாளர் மீண்டும் இசையைக் கோர்க்கச் செய்கின்றார். வாத்தியங்களினூடு இசை புகுந்து அசைவதைப் போல வாழ்க்கை தன் இயல்பில் நகர்கிறது.

(நன்றி: 'பிரதிபிம்பம்')

0 comments: