கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மதிப்பீடுகளின் வீழ்ச்சி

Monday, January 22, 2018

ண்பரொருவரின் (அனோஜன்) முகநூல் பக்கத்தினூடு ஜெயமோகனின் விஷ்ணுபுரம் விருது (2017) உரையைக் கேட்கும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. ஜெயமோகன் இயல்பாய் இல்லாததுபோல அவரது உடல்மொழி பேச்சில் இருந்தது. எனக்குத் தெரிந்த ஜெமோ வழமையாக இப்படி அவ்வளவு நாடகீயத்தனத்தோடு உரையாற்றுபவரில்லை. சிலவேளை சினிமாப் பிசாசு அவரை இன்றைய காலங்களில் விழுங்கிக்கொண்டு இருக்கின்றதோ தெரியாது. இலங்கைப் பாஷை பேசுகின்றேன் என்று எங்கள் தமிழை இப்படிக் கொன்றிருக்கவும் தேவையில்லை. விருது விழாவிற்கு வந்தவர்கள் ஜெயமோகனின் நடிப்பைப் பார்க்கவா வந்தார்கள்? பேச்சைத்தானே கேட்க வந்திருப்பார்கள். ஒழுங்காய் இயல்பாய் பேசியிருக்கலாம்.
சரி, நான் சொல்ல வந்த விடயம் வேறு. ஜெயமோகன், 'காலம்' செல்வத்தின் 'எழுதித்தீராப் பக்கங்களில்' இருந்து சில பகுதிகளை அங்கே பகிர்ந்திருக்கின்றார். அந்த மகிழ்ச்சியைப் பகிரத்தான் இது. நிறைய எழுதவேண்டும், எப்போதும் எழுதிக்கொண்டிருக்க வேண்டும் வகையைச் சேர்ந்தவர் ஜெமோ. அதற்கு மாறான ஒரு எழுத்து முறையைத்தான் நான் தொடர்ந்து முன்வைத்து வருகின்றவன். குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதினால் போதும். அதுதான் எங்கள் ஈழ எழுத்து எங்களுக்கு கற்றுத்தந்திருக்கின்றது என பல இடங்களில் எழுதியிருக்கின்றேன். செல்வமும் குறைவாகவே எழுதுகின்றவர். ஆனால் அதை நேர்த்தியாக எழுதி இருப்பதால்தான் 'எழுதித் தீராப் பக்கங்கள்' முக்கியமான ஒரு படைப்பாக நம்மிடையே இருக்கின்றது. ஜெமோ அவர் விரும்பியோ அல்லது விரும்பாமலோ செல்வத்தை நினைவுபடுத்தியதற்கு -அவருக்கு மலேசியாவில் 2006ல் அடிவிழாததற்கு ஏதோ நல்லூழ் என்றமாதிரி- இது எங்களின் நல்லூழ் என நினைக்கின்றேன்.
இல்லாவிட்டால் கனடா என்றவுடன் நிறைய எழுதிய/எப்போதும் எழுதிக்கொண்டிருக்கும் அ.முத்துலிங்கம் அல்லவா ஜெமோவிற்கு நினைவிற்கு வந்திருக்கவேண்டும். ஆனால் செல்வம் ஜெமோவிற்கு நினைவிற்கு வருவதற்கு எது காரணம் என்றால் குறைவாக எழுதினாலும் எவரும் அசட்டை செய்து கடக்கமுடியாது செல்வமும், அவரின் 'எழுதித் தீராப் பக்கங்களும்' இருக்கின்றது என்பதால்தான்.
மற்றது ஜெமோ, சுந்தர ராமசாமி 2000களின் தொடக்கத்தில் ரொறொண்டோ வந்து இனித் தமிழ் கனடாவில் இருக்காது என்பதை 'கலைஞனின் தூர நோக்காய்' கண்டடைந்ததைச் சொல்லி வியப்படைகின்றார். தமிழ் அடுத்த தலைமுறைக்குச் செல்லாது என்பதற்கு கலைஞனாக இருக்கவே தேவையில்லை. ஒரு சாதாரண மனிதராகவே எவராலும் புறச்சுழலை வைத்து எளிதாக எதிர்வுகூறமுடியும். ஆனால் இன்றும் தமிழ் ஏதோ ஒருவகையில் எங்களில் ஊடாடிக்கொண்டு தானிருக்கின்றது. 
ன்று புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து பலநூற்றுக்கணக்கான பத்திரிகைகள்/சஞ்சிகைகள் வந்தது என்பது உண்மை. ஆனால் எத்தனை பத்திரிகைகள் இலக்கியம் பேசியது என்பதும் முக்கியமான கேள்வி. இன்றும் கனடாவில் ஏறக்குறைய 10 தமிழ்ப் பத்திரிகைகள் வந்துகொண்டிருக்கின்றன. எதிலுமே இலக்கியம் இல்லை. உரையாடுவதற்கான வெளிகள் இல்லை. மற்றும்படி வெளிவரும் சிறுபத்திரிகைகளின் அளவு குறைந்திருக்கின்றன என்பதென்னவோ உண்மைதான். அன்றைக்கு அரசியலிலும், இலக்கியத்திலும் துடிப்பாய் இருந்த ஒரு பரம்பரை இன்று ஒதுங்கிவிட்டது.
அதுசரி தமிழகத்தில் கூட எத்தனை சஞ்சிகைகள் தீவிர இலக்கியம் பேசிக்கொண்டு இப்போது வெளிவருகின்றன. சிறுபத்திரிகை என்பதே ஏதோ ஒருகட்டத்தில் அதன் ஆயுளை முடித்துக்கொண்டு உறங்குநிலைக்குப் போவதுதானே. ஆனால் இலக்கியம் என்பது அன்று சிறுகுழுவாலே பேசப்பட்டதுபோல இன்றும் ஏதோ ஒருவகையில் - இணையத்தில்- என்றாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் பேசப்பட்டுக்கொண்டுதானே இருக்கின்றது.
ஏற்கனவே கூறியதுபோல, நாங்கள் குறைய எழுதிக்கொண்டிருப்பவர்கள். ஆனால் ஏதோ ஒருவகையில் நமது சுவடுகளையும் இங்கே பதித்துக்கொண்டுதானிருக்கின்றோம். அது தமிழில் மட்டுமில்லாது அந்தந்த நாடுகளில் பேசும் மொழியில் கூட நமது 'தமிழ்க்கதை'களைப் பலர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். இன்றைக்கு மான் 'புக்கர் பரிசு' வென்ற அரவிந்த் அடிகாவின் புதிய நாவலோடு போட்டியிட்டு, தனது முதல் நாவலாயினும் அதை நேர்த்தியாக எழுதி அனுக் அருட்பிரகாசம் தென்னாசியா நாவல் வகையில் பரிசு வென்றிருக்கின்றார். அதை நாம் கொண்டாட அல்லவா வேண்டும்?
2015 ஆவணி கோடைகாலத்தில் நள்ளிரவு தாண்டினாலும் அதன் அருமையான கதைசொல்லலில் கிறங்கி ஒரே அமர்வில் வாசித்து முடித்த ஷோபாசக்தியின் 'Box கதைப் புத்தகம்' நாவலைத் தாண்டி, (ஏறக்குறைய இரண்டரை வருடங்களான பின்னும்) தமிழகத்தில் இருந்து எந்த ஒரு நாவலும் வரவில்லை என்பதை என் வாசிப்பின் மீதிருக்கும் நம்பிக்கையில் வைத்துச் சொல்வேன். அதைத்தாண்டியே இன்னும் போகமுடியாது, பேசுவது என்னவோ தாங்கள் மட்டுமே இலக்கியம் வளர்க்கின்றோம் என்றால் என்னைப் போன்றவர்களுக்கு விசர் வராதா என்ன?
'Box கதைப் புத்தகத்திற்கு அடுத்த நிலையில் என் வாசிப்பில் வைத்திருக்கும் குணா கவியழகனின் 'அப்பால் ஒரு நிலத்திற்கோ' அல்லது ஜெமோவும் ஒரு முக்கிய நாவலாகச் சொன்ன சயந்தனின் 'ஆதிரை'க்குக் கூட நிகராக, தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் எந்த நாவல் வந்திருக்கின்றது எனச் சொன்னால் நானும் மகிழ்ச்சியடைவேன். இன்றைக்கும் ஜெமோ தனது தளத்தினூடாகவும், தன் விஷ்ணுபுர வாசகர் வட்டத்தினாலும் எவ்வளவு கஷ்டப்பட்டு முயன்றுகொண்டிருந்தாலும் அவரின் வளையத்திற்குள் இருந்து வந்த எந்தப் படைப்பாளி இதுவரை சாதித்திருக்கின்றார்?இலக்கியம் என்பது அடித்து கனியவைப்பதல்ல, அது தானாய் அவரவர்களிடத்தே கனிவதுதான் என்று ஜெமோவிற்குத் தெரியாது இருக்குமா என்ன?

(Dec 21, 2017)

0 comments: