கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Cézanne and I

Wednesday, January 17, 2018

பாரிஸில் Musée d'Orsay சென்றபோது அதன் முன்றலில் பால் ஸிஸானின் 'Boy in the Red Vest' வரவேற்றுக்கொண்டிருந்தது. உள்ளே ஸிஸான் வரைந்த மனித உருவங்களின் கண்காட்சி போய்க்கொண்டிருந்தது. பிக்காஸோவினால், ஓவியம் வரைவதில் 'எங்களுக்கெல்லாம் தந்தையைப் போன்றவர்' என்றும், 'எனது ஒரேயொரு குரு அவரே' என்றும் ஸிஸான் மனதாரப் புகழாராம் சூட்டப்பட்டவருமாவார்.

ஸிஸான் நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்தபோதும், அவரது காலத்தில் அதிகம் கவனிக்கப்படாத ஒரு ஓவியராகவே இருந்திருக்கின்றார். பாரிஸின் மதிப்பு வாய்ந்த ஓவியக்கண்காட்சிக் கூடத்தில் அவரது ஓவியங்கள் ஒவ்வொருமுறையும் தகுதி வாய்ந்தவில்லையென  நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. இன்று அவர் பிரான்ஸின் ஓவியக்கலையின் முன்னோடிகளில் ஒருவராக மாறி, கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

'Cézanne and I' என்கின்ற திரைப்படமானது ஓவியரான ஸிஸானுக்கும், எழுத்தாளரான எமிலி ஸோலாவிற்கும் இடையிலான நட்பைப் பற்றிப் பேசுகின்றது. இவர்கள் இருவரும் பாடசாலை நண்பர்கள். எமிலி மிக வறுமையான குடும்பத்திலும், ஸிஸான் செழிப்பான குடும்பத்திலும் பிறந்தவர்கள். இவர்கள் இருவரும் ஓவியம்/எழுத்து மீதிருந்த பித்தின் காரணமாக, பின்னர் பாரிஸிற்கு குடிபெயர்ந்து செல்கின்றார்கள். காலம் ஸிஸாணை ஒரு தோற்ற ஓவியனாகவும்,ஸோலாவை பிரபல்யம் வாய்ந்த எழுத்தாளனாகவும் மாற்றிவிடுகின்றது. இப்போது வறுமையும் செழிப்பும் மாறி இருவருக்கிடையில் நுழைந்துவிடுகின்றது.

ஸோலாவின் ஆடம்பர வீட்டில் நிகழும் இரவு விருந்துகளில், அன்றைய கால பிரபல ஓவியர்கள் கலந்துகொள்கின்றார்கள். ஸிஸான் மட்டும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியவராக, பிறரோடு எப்போதும் சச்சரவுகளில் ஈடுபடுகின்றவராக, எவராலும் நேசிக்க முடியாத ஒருவராக மாறிவிடுகின்றார். ஆனால் எமிலி மட்டும் அவரை அரவணைத்துக்கொள்கின்றார். ஸிஸான் ஒரு சிறந்த ஓவியன், அதியற்புத ஓவியங்களை ஒருநாள் வரைவான் என அவர் நம்புகின்றார்.

Emile Zola and Paul Cezanne
ஓவியர்களையும், தனது வீட்டில் நடக்கும் விருந்துகளையும் முன்வைத்து ஸோலா 'மாஸ்டர் பீஸ்' என்கின்ற நாவலை எழுதுகின்றார். அதிலும் கூட 'என்னைப் பற்றி தவறாகவே எழுதியிருக்கின்றாய்' என ஸோலாவிடம் ஸிஸான் சண்டைபிடிக்கின்றார். இவ்வாறாக அவ்வப்போது சர்ச்சை செய்வதும், 'நீயென்னைப் புரிந்து கொள்ளவில்லை' என விலத்திப் போகின்றதுமாகவும் இவர்களுக்கிடையிலான உறவு இருக்கின்றது.
இறுதிக்காலங்களில், ஒருவர் மற்றவரைச் சந்திக்க விரும்பாத, ஒரு பெரும் இடைவெளியுள்ள உறவாக அது மாறிவிடுகின்றது. பழைய காலங்களுக்கு இருவரும் போக விரும்பினாலும் அவர்கள் அதற்குள் நுழைய முடியாத் துயரத்தோடு அவர்களுக்கான காலம் முடிந்துவிடுகின்றது. ஸோலா ஒரு நாள் நித்திரையின்போது காபன்மொனொக்சைட் வாயுவின் காரணமாக இறந்துபோகின்றார். அது இயல்பாய் நடந்ததா அல்லது திட்டமிட்ட ஒரு கொலையா என்ற சந்தேகம் இன்றுவரை எழுப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது.

யதார்த்தவாதக் கதைகளை ஸோலா எழுதியபோதும் அதிகமான பொழுதுகளில் அதிகாரத்திற்கு எதிராகக் குரலை எழுப்பியபடி இருந்தபடியால் அவருக்கு நிறைய எதிரிகளும் அன்றைய காலத்தில் இருந்திருக்கின்றனர். குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு தீவொன்று அனுப்பப்பட்ட ஒருவருக்காய், அது தவறென்று ஒரு பத்திரிகையில் குரல் கொடுத்த காரணத்தால், ஸோலாவிற்கு வழங்கப்பட்ட அதியுயர் விருதை அன்றையகால பிரான்சு அரசு திருப்பி வாங்கியுமிருக்கின்றது. ஏழ்மையிலிருந்து வந்த ஸோலா பின்னர் வசதியான வாழ்வு வாழ்ந்தபோதும் அவர் விளிம்புநிலையில் இருந்த மனிதர்களின் பக்கமே நிற்க விரும்பியிருக்கின்றார் என்பது இந்நிகழ்வின் மூலம் நமக்குப் புலப்படுகின்றது.

 Musée d'Orsay, Paris
ஸிஸானுக்கும், ஸோலாவிற்கும் இடையிலான நட்பைப் பற்றியது இத்திரைப்படமாயினும், அன்றையகால ஓவியர்களான Edouard Manet போன்ற பலர் வருகின்றனர். எந்த ஓவியரை முதன்மைப்படுத்தி ஒரு திரைப்படம் வருகின்றதோ அதில் வரும் மற்ற ஓவியர்கள் இரண்டாந்தர பாத்திரங்களாகி விடுவதும், அவ்வாறு அவர்கள் ஆகிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதும் கூட ஒருவகையில் சுவாரசியமானது. இவ்வாறு 'பீட்' காலகட்டத்தை முன்வைத்து, வெளிவந்த திரைப்படங்களான On the Road(ஜாக் கீராவக்), Kill Your Darlings (வில்லியம் பாரோஸ் & அலன் கின்ஸ்பேர்க்), Owl (அலன் கின்ஸ்பேர்க்) போன்றவற்றை ஒருகாலகட்டத்தில் சேர்த்துப் பார்த்திருக்கின்றேன். ஒரு திரைப்படத்தில் எவர் முக்கிய பாத்திரமாக இருக்கின்றாரோ அவர் தனக்கான அதிக நியாயங்களைக் கொண்டிருப்பதையும், மற்றவர்கள் சற்று எதிரிடையாக மாறுவதைப் பார்ப்பதும், இன்னொரு திரைப்படத்தில் அந்தப் பாத்திரம் முக்கியமற்றுப் போவதையும் அவதானிப்பதும் ஒரு சுவாரசியமான விளையாட்டாக இருந்தது.
இப்படி 'Cézanne and I' திரைப்படத்தைப் போல அதே காலகட்டத்துப் பிற படைப்பாளிகள் பற்றி வந்த நூல்களையோ அல்லது திரைப்படங்களைப் பார்ப்பது கூட வித்தியாசமான இருக்குமென நினைத்துக்கொண்டேன்.

எல்லாப் படைப்பாளிகளும் தமது சமகாலக் கலைஞர்களோடு நட்புப் பேணவும், தமக்கிடையில் விவாதிக்கவும், அன்பைப் பகிர்ந்துகொள்ளவுமே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் காலமும் சூழலும் அவர்களுக்கிடையில் விரிசலை ஏதோ ஒருவகையில் கொண்டுவருகின்றது. பின்னர் அவர்கள் அந்த இனிமையான காலங்களை தமக்கான தனிமையில் இருந்து ஸோலாவும், ஸிஸானும் போல நனவிடைதோய்ந்தபடி பெரும்பாலும் வாழ்ந்தும் முடித்துவிடுகின்றனர் என்பதுதான் சோகமானது.

(நன்றி: 'அம்ருதா' - தை, 2018)

0 comments: