கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 115

Wednesday, October 29, 2025


கலைகளுக்குப் பங்களிப்பவர்கள்


பசுமை விகடன் போன்றவற்றில் இயற்கை விவசாயம் செய்பவர்களை மிகைப்படுத்தி எழுதுவார்கள். அதுவும் ஐடி போன்ற தொழில்நுட்பத் துறைசார்ந்தவர்கள் இயற்கை விவசாயத்துக்குப் போகும்போது இன்னும் அதிகம் மிதந்தேத்துவார்கள்.. ஒரு இலட்சம், இரண்டு லட்சம்  சம்பளத்தைக் கைவிட்டு விவசாயத்துக்கு வந்தவர்கள் இவர்கள் என்று எழுதி வாசிக்கும் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவார்கள்.

 

அவ்வாறான ஓர் 'அதிர்ச்சி'யை ஏற்படுத்தும் காலம் இலக்கியத்திலும் இப்போது வந்துவிட்டதோ என்று சஞ்சலம் எழுகின்றது. எழுத்து/இலக்கியம் என்பவற்றுக்காக பலர் தமது துறைசார்ந்த வேலையை விட்டு வந்திருக்கின்றார்கள். ஆனால் அதற்காக எவரும் நாம் இலக்கியத்துக்காக இவற்றையெல்லாம் இழந்து 'தியாகி'களாக வந்திருக்கின்றோம் என்று பிரகடனப்படுத்தியதில்லை. அது ஊர் ஊராய் அலைந்து சஞ்சிகை விற்ற சி.சு.செல்லப்பாவா இருந்தாலென்ன,  ஒருவகை விட்டேந்தி வாழ்க்கை வாழ்ந்த க.நா.சுப்ரமணியனாலென்ன, அப்படி எவரும் தமக்கு ஓர் இலக்கிய தியாகிப்பட்டம் தரவேண்டும் என்று வாசகரிகளிடம் கோரியதில்லை.

 

அசோகமித்திரன் கூட, ஜெமினி ஸ்டூடியோவில் இருந்து வேலையைத் துறந்தபின், ஒரு முறையான ஊதியம் கிடைக்கும் தொழிலில் போய் அமர்ந்தவரில்லை. அவர் நினைத்திருந்தால் அவருக்குரிய அனுபவம்/திரைப்படத் துறை சார்ந்த நெருக்கத்தின் நிமித்தம் ஆகக்குறைந்தது ஒழுங்காய் மாதம் மாதம் சம்பளம் கிடைக்கும் வேலையில் போய் இருந்திருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இத்தனைக்கும் அவர் பிரமிள் போன்று தனித்து வாழும் வாழ்க்கையை இலக்கியத்தின் பொருட்டுத் தேர்ந்தெடுத்துவருமில்லை. அசோகமித்திரனுக்கு மனைவி, பிள்ளைகள் என்று பார்த்துக்கொள்ளவேண்டிய குடும்பச்சுமை இருந்தது.

 

ஆக மேற்குறிப்பிட்ட இவர்கள் உள்ளிட்ட இன்னும் பலரும்,  எழுத்தை ஏன் தமது வாழ்நாளின் ஆதாரசுருதியாகக் கொண்டார்கள் என்றால் அவர்களுக்கு இலக்கியம் அவ்வளவு பிடித்திருந்தது. வேறு துறைசார்ந்து அவர்களுக்கு புலமைத்துவம் இருந்தும் அவர்களை எழுத்து  ஆழமான வேர்களால் பின்னிப்பிணைத்திருந்தது. அவ்வாறு எழுத்து அவர்களுக்கு 'அருளப்பட்டபோது' அவர்கள் ஏனைய லெளதீகப் பிரச்சினைகளோடும் மரியாதையுடன்  இலக்கியத்தை வாரி அணைத்துக் கொண்டார்கள்.

 

அதிலும் பிரமிள் இவர்கள் அனைவரையும் விட இன்னும் அதி தீவிர நிலைக்குச் சென்றவர். அசோகமித்திரன், க.நா.சு போன்றவர்களுக்கு பூர்வீகச் சொத்து கொஞ்சமாவது இருந்திருக்கும் (ஆகக்குறைந்தது வாழ்வதற்கு ஓர் வீடாவது). பிரமிளுக்கு அதுவும் இல்லை. இலங்கையில் திருகோணமலையில் தனது தாயின் வீட்டை விற்றுவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்து, எந்தத் தொழிலும் செய்யாது எழுத்தை மட்டும் நம்பி வாழ்ந்த பிரமிளை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அதுமட்டுமில்லை இலக்கியத்தின் முன் எந்தச் சமரசமும் இல்லை என்று அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள்/உதவியவர்கள் என்று எல்லோரையும் விமர்சனங்களால் அடித்து நொறுக்கியவர் .

 

அதன் நிமித்தம் வசதி குறைந்த இடத்தில், ஒழுங்கான உணவில்லாது கூட வாழ்ந்தவர் பிரமிள். ஆனாலும் ஒருபோதும் நான் இப்படியிருந்து எழுதுகின்றேன், ஆகவே தமிழன்னை என்னை ஓர் தியாகியாக நினைக்க வேண்டும் என்று தமிழின் முன்னோ அவரின் வாசகர்கள் முன்னோ இறைஞ்சியவரில்லை. ஒருவகையில் அதுவே இன்றும் பிரமிளை கம்பீரமான எழுத்தாளராகத் துலங்க வைக்கின்றது.

 

இவ்வாறானவர்கள்தான் நமக்கு எழுத்தில் முன்னோடியாக இருக்கின்றார்கள்.  இலங்கையில் கூட மு.தளையசிங்கம், மு.பொன்னம்பலம் போன்றவர்கள் அப்படியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. அண்மையில் மு.தளையசிங்கத்தின் சகோதரர் மு.பொன்னம்பலம் காலமானபோது, அவருக்காக எழுதப்பட்ட ஒரு குறிப்பில், மு.பொன்னம்பலம் கூட பெரும்பாலும் நண்பர்களின் உதவியுடந்தான் நெடுங்காலம் தனது வாழ்க்கையை வாழ்ந்ததாக அறிந்தபோது வியப்பாக இருந்தது. ஏனெனில் அவரின் கடைசி மகனும், நானும் கொழும்பில் ஓர் பாடசாலையில் ஒன்றாகக் கொஞ்சக் காலம் கல்விகற்றிருக்கின்றோம்.

 

இன்று பல ஆளுமைகளின் பிள்ளைகள் தமது தந்தையர் மீது விமர்சனம் வைக்கும்போது (காந்தியின் மகனில் இருந்து அண்மைக்கால பேராசிரியர் வசந்திதேவியின் மகன்வரை), அசோகமித்திரனின் பிள்ளைகளோ அல்லது மு.பொன்னம்பலத்தின் பிள்ளைகளோ பொதுவெளியில் வந்து தம் பெற்றோரை திட்டவில்லை. ஒருவகையில் இப்படி எழுத்தின் விருப்பம் சார்ந்து முழுநேர எழுத்தாளர்களாக இருந்தபோதும், இவர்களில் பெரும்பாலானோர் பிள்ளைகளை நன்றாக வளர்த்திருக்கின்றார்கள் என்பது நமக்குத் தெளிவாகின்றது.

 

இப்படியெல்லாம் நமக்கு நிறைய எழுத்தாளர்கள் உதாரணங்களாக வாழ்ந்து காட்டிப் போனபோது சில எழுத்தாளர்கள் இந்த 'பசுமை விகடன் ஐடி இயற்கை விவசாயிகள்' போல தேவையில்லாது எழுத்தாளர்கள்/எழுத்தை glorify செய்வதைப் பார்க்கச் சலிப்பாக இருக்கின்றது. இத்தனைக்கும் ஓர் எழுத்தாளர் மாதமொருமுறை தனது (வளர்ப்பு) மகனைத் திட்டி எழுதுகின்றார். இன்னொரு எழுத்தாளரோ, என் மகன் உழைக்கவே தேவையில்லை, அவனுக்காக வாழ்நாளுக்கான பணத்தை நான் சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றேன்' என்று அறைகூவல் விடுகின்றார். இவர்களைப் போன்றவர்கள்தான் எழுத்தை அதியற்புதமாகவும், எழுதிக்கொண்டிருப்பவர்கள் உன்னதமானவர்கள் போலவும் நம்மை நம்ப வைக்கக் கஷ்டப்படுகின்றார்கள்.

 

மேலும் நாகார்ஜூனன், தமிழவன், எம்.டி.எம் போன்றவர்கள் தமது எழுத்தின் 'பேரெழுச்சி'களால் காணாமற் போய் இப்போது திரும்பி வந்து கொண்டிருக்கின்றார்கள் என்று இன்னொருபக்கம் சிணுங்கவும் செய்கின்றார்கள். இவர்கள் தொடர்ந்து எழுதி இவர்களின் வளர்ச்சி இந்த 30 வருடங்களில் விஸ்வரூபம் எடுத்துவிட்டதென்றால், ஏன் மீளத் திரும்பும் உதிரிகளைக் கண்டு இவர்கள் அச்சமுற வேண்டும்?

 

ப்படியெனில் 60களின் பிற்பகுதியில்  'அக்கா' என்கின்ற ஒரு சிறுகதைத் தொகுப்போடு உறங்குநிலைக்குப் போய், பின்னர் ஓய்வூதியம் எடுத்துகொண்டு 30 ஆண்டுகளின் பின் எழுத வந்த அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களை இவர்கள் எப்படி மதிப்பார்கள். அ.முத்துலிங்கத்தோடு முரண்பட என்னைப் போன்றவர்களுக்கு ஒரு நூறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவர் மீள வந்தபோது அருமையாகத்தானே எழுதத் தொடங்கினார். முப்பது வருடங்களாக ஒருவர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதோ, அல்லது முப்பது வருட உறங்குநிலைக்குப் பிறகு ஒருவர் வந்து எழுதுவதையோ குறித்து ஒரு வாசகர் அக்கறைப்படப்போவதில்லை. என்ன ஒருவர்  எழுதுகிறார்/எழுதிக்கொண்டிருக்கின்றார் என்பதே வாசகர்க்கு மட்டுமில்லை, தமிழின் எதிர்காலத்துக்கும் முக்கியமானது.

 

மேலும் இன்று தமிழில் தாமேதான் மூன்று முக்கியமானவர்கள் என்று தங்களை முன்வைப்பவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. இந்த மூன்று பேரும், தமிழில் புதுத்திணையாக வந்த இணையத்தைச் சரியாகப் பயன்படுத்தியவர்கள் ஆவார். அதனால்தான் இவர்களின் எழுத்து இந்தளவுக்கு பரவலாகப் போய்ச் சேர்ந்திருக்கின்றதே தவிர, இவர்களுக்கு நிகராக எழுதும் பலர் -இலைமறை காயாக- சமகாலத்தில் இருக்கின்றார்கள் என்பதுதான் நிஜம். கடந்த பத்து/இருபது ஆண்டுகளில் இவர்கள் தமிழ்ச்சூழலில் என்னவிதமான புதுப்பாய்ச்சல்களை நிகழ்த்திக்காட்டினார்கள் என்று நாம் அவதானித்தாலே நமக்கு இவர்களின் எழுத்தின் பலவீனமான பக்கங்களும் விளங்கும்.

 

இதற்குள் நாகார்ஜூனன், தமிழவனைப் போன்றவர்களை நிராகரிக்கும் இவர்களுக்கு இருக்கும் 'துணிச்சல்' என்னவென்பதையும் நாம் அறிவோம். இவர்கள் எவரும் அருகில் ஈழப்போர் உக்கிரமாக நடக்கும்போது நாகார்ஜூனன் தமிழவன் போல இவர்கள் உரத்தகுரலில் எழுதியவர்களோ/பேசியவர்களோ இல்லை. அதிலும் ஒருவர் ஈழப்போராட்டத்தின் இறுதிக்காலத்தில் ஆஸ்திரேலியாவுக்குப் போனபோது இந்த யுத்தம் குறித்து உங்களுக்குக் கருத்துச் சொல்ல எதுவுமில்லையா? என்று வினாவ, 'நான் அரசூழியன் எந்தக் கருத்தையும் சொன்னாலும் என் பணிக்கு ஆபத்து' என்று தனது 'வீரத்தை'க் காட்டியவர். இன்னொருவரோ இலத்தீன் அமெரிக்கப்போராட்டங்கள் குறித்து மாய்ந்து மாய்ந்து எழுதுவார். ஆனால் ஈழப்போராட்டம் குறித்து மெளனத்தைக் காப்பார். ஆனால் ஈழத்தில் போர் முடிந்து மக்கள் இன்னும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பமுடியாது பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கும்போது, இலங்கையில் நாய்களால் பிரச்சினையென உலகின் அதிமுக்கிய பிரச்சினையை எழுதி தன் இருப்பை 'அறிவுஜீவி'த்தனமாகத் தன்னை நிரூபிப்பார். முப்பது ஆண்டுகளாக யுத்தம் தின்ற மண்ணில் இவர்களுக்கு நாய்களைத் தவிர பேசுவதற்கு வேறு விடயங்களே இல்லை என்றளவுக்கு அந்தளவுக்கு 'மனிதாபிமானி'கள்.

 

நாகார்ஜூனன், எம்டிஎம் போன்றவர்களின் மீள்வரவால் இப்படிப் பதற்றப்படும்போது, நாகார்ஜூனன் தான் எழுதிய அனைத்தையும் அழித்துவிட்டு (மறைத்துவிட்டு) மீளவும் உறங்குநிலைக்குப் போனவர் என்பதை ஏன் இவர்கள் சொல்வதில்லை. ஆகக்குறைந்தது நாகார்ஜூனன் ஒருபோதும் தன் எழுத்தையோ/பெயரையோ வாசகருக்கும் விற்கும் எந்த எத்தனமும் செய்ய விரும்பவில்லை என்பதைத்தானே, அவர் இணையத்தளத்தில் எழுதிய எல்லாவற்றையும் மறைத்துவிட்டுச் செல்வதன் மூலம் கூறாமல் நமக்குக் கூறியிருக்கின்றார். இத்தனைக்கும் என்னைப் போன்றவர்கள் நாகார்ஜூனன், தமிழவன் போன்றவர்களிடம் இருந்து கோட்பாடு/தத்துவம்/பிறமொழிப் படைப்புகள் குறித்து எத்தனையோ நிறையக் கற்றிருக்கின்றோம்.மேலும் இன்றைக்கு தமிழில் விமர்சனம் என்பது செத்துவிட்டது போன்ற தோற்றத்தைத் தரும்போது நமக்கு நாகார்ஜூனன், தமிழவன், எஸ்வி.ராஜதுரை, ராஜ் கெளதமன், அ.மார்க்ஸ், எம்.டி.எம், ரமேஷ்-பிரேம் உள்ளிட்டவர்களின் எழுத்துக்களும் இன்றில்லாவிட்டால், எங்கிருந்து திறனாய்வின் அடிப்படைகளையோ/அல்புனைவு எழுத்துவகைமையை தமிழில் அறிந்து கொண்டிருக்கமுடியும். மேற்குறிப்பிட்டவர்கள் மீது நமக்கு விமர்சனங்களும் ஏற்பும் என எல்லா விடயங்களும் இருக்கின்றது. அதையும் எழுத்தின் ஒரு சாராம்சமாக எடுத்துக்கொண்டு முரண்பாடுகளோடு உவத்தல்/காய்த்தலின்றி உரையாடலாம் என்றுதானே இவர்கள் நமக்குச் சொல்லித் தருகின்றார்கள்.

 

சில வருடங்களுக்கு முன் அ.மார்க்ஸ் இலங்கை வந்தபோது, நிகழ்வுக்கு வந்த  இந்த நாய்ச்சிக்கல்காரர் அ.மார்க்ஸை தூற்றோ தூற்றென வன்மத்துடன் கரித்து எழுதிக் கொண்டிருந்தார். நான் அ.மார்க்ஸை நேரடியாகச் சந்தித்தபோது உங்களுக்கும் இந்த நாய்ச்சிக்கல்காரருக்கும் அப்படி என்னதான்  பிரச்சினையென நேராகவே கேட்டேன். அ.மார்க்ஸ் சிரித்தபடி நீங்கள் இதை அவரிடந்தான் கேட்கவேண்டும் என்று அந்த விடயத்தை நாசூக்காய் முடித்துவிட்டார். இதைத்தானே இலக்கியம் கற்றுத்தரவேண்டும்?

 

வர்களைப் போல பாவனை காட்டாது, தமிழில் எழுத்தும் வாழ்க்கையும் வேறு வேறு இல்லையென அசலாக வாழ்ந்தவர்கள் நிறையப் பேர்கள் இருக்கின்றார்கள். தமிழில் தலித்திய முன்னோடி எனச் சொல்லப்படுகின்ற கே.டானியலுக்கு எழுத்தைப் போல, போராட்டமும் முக்கியமானதே. அதற்காக அவர் களங்களில் நின்றிருக்கின்றார், அதிகாரத்திடம் அடிவாங்கியிருக்கின்றார், சிறை  சென்றிருக்கின்றார்.

 

இன்னொருவர் மு.தளையசிங்கம். மெய்யுள், பிரபஞ்ச யதார்த்தம் என்று புதிய தடங்களில் சிந்தித்ததோடு மட்டுமின்றி, சர்வோதயம் என்று காந்தியச் சிந்தனைகளின் நீட்சியில் இயக்கம் தொடங்கி சமூகக் களங்களில் போராடியவர். இன்றைக்கு அவர் எழுதியவை ஆயிரம் பக்கங்களைத் தாண்டி நம்முன்னே மறுவாசிப்புக்காய்க் காத்திருக்கின்றது. இத்தனைக்கும் தம் ஊர் கிணற்றில், தலித்துக்களை தண்ணீர் அள்ள அனுமதியளிக்கவில்லை என்பதற்காக சாதிவெறியர்களோடு போராடி சிறைக்குச் சென்று அங்கு பொலிஸ்காரர்களால் மோசமாகத் தாக்கப்பட்டவர். மிக இளவயதில் (38) இறந்த தளையசிங்கத்தின் இறப்பில் அவர் மீது பொலிஸ் நடத்திய தாக்குதலும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்திருக்கின்றது.

 

ஆக இப்படி எழுத்தும் வாழ்வும் வெவ்வேறானதல்ல என்று நமக்கு முன்னோடியாகப் பலர் வாழ்ந்து காட்டிவிட்டுப் போனதன்பிறகும், தமிழ்ச் சமூகத்தில் எழுத்துப் போராளிகளாகவும், இலக்கியத்துக்காக வாழ்வை அர்ப்பணித்துவிட்டோம் என்றும் நம் சமகாலத்தில் சில எழுத்தாளர்கள் எழுதும்போது நமக்கு சிரிப்பு வருவது ஒருபுறமிருக்கட்டும், அவர்களுக்கு இப்படியெல்லாம் எழுதுகின்றோமே எனக் கொஞ்சமாவது வெட்கம் வராதா என்ன?

 

*******

(நன்றி: ஓவியம்- பிருந்தாஜினி)

கார்காலக் குறிப்புகள் - 114

Saturday, October 25, 2025

 

 1.

நண்பர் என் புத்தக சேகரத்திலிருந்து எம்.டி.முத்துக்குமாரசாமியின் 'மைத்ரேயி மற்றும் பிற கதைகள்' தொகுப்பை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தார். சில கதைகளை வாசித்தபின், 'என்ன, உனது ஆள் நன்றாக எழுதுகின்றார்' என்று சொன்னார். அதன்பிறகு இருவரும் நேரடியான யதார்த்தவாதக் கதைகள் நமக்கு எவ்வளவு அலுப்பூட்டுகின்றது என்பது பற்றிப் பேசிக் கொள்ளத் தொடங்கினோம். அதை விட்டு விலகி எம்டிஎம் எழுதியதால்தான் நம்மிருவரையும் இத்தொகுப்பு வசீகரித்திருந்தது.

'மைத்ரேயி' தொகுப்பு எம்டிஎம் 30 வருடங்களுக்கு முன் எழுதிய கதைகளிலிருந்து சமகாலத்தில் எழுதியவற்றின் ஒரு தொகுப்பு. இது எனக்குப் பிடித்த தொகுப்பாயினும், என் கண்களுக்கு எப்போதும் எட்டக்கூடிய மிகச்சிறந்த நூல்களில் ஒன்றென வைத்திருக்கும் எம்டிஎம்மின் 'நிலவெளி என்னும் ரகசிய துணை'யைச் சொல்வதுண்டு. அது ஓர் அற்புதமான அல்புனைவுத் தொகுப்பு.



எம்டிஎம் தமிழாக்கிய 'ரோஜாவின் பெயரை' நான் இன்னும் வாசிக்கவில்லை. ஆனால் எம்டிஎம்மின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பவன் என்றவகையில் அவர் தனது அதியுச்ச உழைப்பை உம்பர்த்தோ எக்கோவின் நூலுக்குக் கொடுத்திருப்பார் என்றே நம்புகின்றேன். படைப்பாளியாகவும், விமர்சகராகவும் இருக்கும் எம்டிஎம்மைப் போன்ற ஒருவர் அவ்வளவு எளிதில் ஒரு நூலைக் கீழிறக்கும் வேலையை செய்யப் போவதுமில்லை.


எம்டிஎம் ஓர் உறங்குநிலையிலிருந்து மீண்டும் வருகை தந்தபின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாய் தமிழ்ச்சூழலில் உற்சாகமாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றார். ஏதோ இப்போது சர்ச்சையில் சிக்கிய 'ரோஜாவின் பெயர்' மொழிபெயர்ப்பு நூலோடுதான் தமிழில் மீள்வருகையை  எம்டிஎம் நிகழ்த்தியதாக எழுதப்படும் பதிவுகள் அலுப்பூட்டக்கூடியவை. இன்னொருவகையில் இவ்வாறு எழுதுபவர்கள் எவ்வாறு சமகாலச்சூழலின் வாசிப்பிலிருந்து பின் தங்கி நிற்கின்றார்கள் என்பதை அறிவதற்கு நமக்கொரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கின்றது என்பதாக நாம் ஆறுதற்பட்டுக் கொள்ளலாம்.

2.

நான் எப்போது உம்பர்த்தோ எக்கோவை முதன்முதலில் அறிந்துகொண்டேன் என்று ஞாபகத்தில் இல்லை. ஆனால் நண்பர் ஒருவரோடு பழகத் தொடங்கியபோதுதான் எக்கோ எங்களின் உரையாடல்களுக்குள் வந்தார். நண்பர், ரமேஷ்-பிரேமின் 'கதையும் கட்டுக்கதையும்'' நூலின் மூலமாகவே எக்கோவை அறிந்துகொண்டார். அத்தோடு நம்புவதற்குச் சற்றுக் கடினம் என்றாலும் அவரது பதின்மம் முடிவதற்குள்ளேயே எக்கோவின் 'The Name of the Rose', 'Baudolino' போன்ற நூல்களை வாசித்து முடித்திருந்தார். பிறகு நானும் அவருமாகச் சேர்ந்து 'Foucault's Pendulum', 'The Mysterious Flame of Queen Loana', 'The Prague Cemetery' போன்றவற்றை வாங்கி வாசித்திருக்கின்றோம். ஒருவர் ஒரு நாவலை வாசித்துவிட்டால், அவரிடமிருந்து அது குறித்து கற்கலாம்/அறியலாம் என்பதால் நான் அநேகமாக அவர் வாசிக்கத் தொடங்காத எக்கோவின் நாவல்களை வாசிப்பேன்.

பின்னர் எல்லா உறவுகளையும் போல எமது உறவு தேய்ந்து இல்லாதபோனபோதும் நான் தனித்து எக்கோவின் நூல்களை வாங்கி வாசித்திருக்கின்றேன். அதன் நீட்சியில்தான் எக்கோவின் இறுதி நாவலான ' Numero Zero' வாசித்ததோடல்லாது ஒரு விரிவான வாசிப்பையும் அன்றைய பொழுதில் (2015?) எழுதியிருந்தேன்.

இவ்வாறாக எக்கோ புனைவுகளால் தமிழ்ச்சூழலில் பிரபல்யமாக இருந்தாலும், எக்கோ எழுதிய அல்புனைவுகள்தான் அவரின் புனைவுகளை விட மிக அதிகம்.  எக்கோ எழுதிய நாவல்கள் ஏழுதான்; ஆனால் அவரின் அல்புனைவு நூல்கள் எப்படியும் 20களைத் தாண்டும் என நினைக்கின்றேன். அப்படி வாசித்தவற்றில் சில 'How to Travel with a Salmon & Other Essays', ' On Ugliness', 'On Literature'. வாழ்க்கையில் ஒரு பெரும் துயரத்தைக் கடந்துகொண்டிருக்கையில் ஒருபொழுது தனித்துப் பயணித்தபோது கையில் கொண்டு சென்றது எக்கோவின் 'Confessions of a Young Novelist'. அதுபோலவே இப்போது தமிழில் எக்கோவை முன்னிட்டு சர்ச்சைகள் போகும்போது அதில் நுழையாமல் மனதைத் திரும்ப 'Six Walks in the Fictional Woods ' என்ற எக்கோ ஒரு பல்கலைக்கழகத்தில் கொடுத்த உரைகளின் தொடரை வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.

இந்நூல் நிச்சயம் தமிழாக்க வேண்டியது. அந்தளவுக்கு புனைவுகளின் வகைமைகளை மட்டுமில்லை எப்படி வாசகர்கள் ஒரு நூலை வாசிக்கின்றனர்,  எழுத்தின்/வாசிப்பின் போதாமை என்று பல்வேறு கோணங்களை ஆராயும் எக்கோ, ஒருவகையில் எழுத்தாளருக்கும் படைப்பாளிக்குமான இடைவெளியை எப்படி குறைப்பது என்பது பற்றியும் நமக்குச் சொல்லித் தருகின்றார்.

அதில் ஓரிடத்தில் தாமஸ் மான், காஃப்காவின் 'Metamorphosis' ஐ, அல்பேர்ட் ஜன்ஸ்டீனிடம் வாசிக்கக் கொடுக்கும்போது, ஐன்ஸ்டீன் 'இந்த நூலின் சொல்லுமளவுக்கு மனிதமூளை அவ்வளவு சிக்கலானது' என்று சொல்லி நூலை திரும்பிக் கொடுத்துவிடுவார் என்பதைப் பற்றி எக்கோ குறிப்பிடுகின்றார். ஆக உலகில் அதிசிறந்த IQ கொண்ட அறிவுகொண்டவர்களால் கூட ஒரு படைப்பாளியின் உலகினுள்(மூளைக்குள்) சிலவேளைகளில் நுழையக் கடினமாக இருக்கலாம் என்பதை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம். அதுபோலவே எக்கோவினது நூலோ அல்லது தமிழ் மொழிபெயர்ப்போ கூட எல்லோர்க்கும் உரியதல்ல என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள ஏன் தயங்குகின்றோம் என்பதுதான் புரியவில்லை.

ஏன், மேலே நான் வாசித்ததாக குறிப்பிட்ட நூல்களை முழுமையாகவோ அல்லது எக்கோ கூற விரும்பிய அர்த்தங்களில் சரியாக விளங்கிக் கொண்டேன் என்றோ நான் சொல்லப் போவதில்லை. ஆனால் எக்கோவின் எந்த நூலை வாசித்தாலும் நான் அறிந்துகொள்ள புதுவிடயங்களும், நான் இதுவரை யோசிக்காத வழிகளில் அவர் ஒரு திறப்பைச் செய்கின்றவராகவும் இருப்பதால் எக்கோவை நான் தொடர்ந்து வாசிக்க ஆர்வமுடையவனாக இருக்கின்றேன்.

உதாரணத்துக்கு எக்கோவின் 'On Ugliness' வாசிக்கும்போது, இந்த 'அசிங்கம்' என்பவை எப்படி எங்களுக்குள் மத்தியகால ஐரோப்பிய காலத்திலிருந்து திணிக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றது என்பது பற்றிய ஆரம்பப்புள்ளிகளையாவது சிந்திக்கத் தொடங்குவோம். அதுபோலவே எக்கோவின் 'The Mysterious Flame of Queen Loana' என்னை வசீகரிக்கும் அவரது ஒரு நாவல். அதில் ஒரு புத்தகக்கடைக்காரர் சட்டென்று அவரின் நினைவை முழுதாக இழந்துவிட்டு, பின்னர் நினைவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெறுவார். அந்த மீள் நினைவை எக்கோ அந்த நபரின் சிறுவயது காட்டூன் புத்தகங்கள் இன்னபிற சிறுவர் நூல்களினூடாகக் கட்டியெழுப்புவார். அதில் நகைச்சுவைக்கும் குறையிருக்காது. அவரின் புத்தகக் கடையில் ஒரு இளம்பெண் உதவியாளராக இருப்பார். திருமணமாகிய இந்தப் புத்தகக்கடைக்காரருக்கு நினைவுகள் இழந்து மீண்டதில், இந்தப் பெண்ணோடு உடல்சார்ந்த உறவு இருந்ததா இல்லையா என்றெல்லாம் அவருக்கு வரும் குழப்பங்களும், நடத்தைகளும் சிரிப்பை வரவழைப்பவை.

3.

என் (கடந்தகால) நண்பருக்கு ஐரோப்பிய மத்தியகாலத்தின் மீதும், கத்தோலிக்க மதம்/திருச்சபை குறித்தும் பரந்த வாசிப்பும், அறிந்துகொள்ளும் ஆர்வமும் மிகுந்து இருந்தது. அவருக்கு எக்கோ ஒரு முக்கிய நூலாசிரியராக நான் அவரையறிந்த காலங்களில் இருந்தார்.  என்னுடைய ஆர்வம் இவற்றில் குறைவு. எனக்கு மிலான் குந்தேரா போன்றவர்கள் வசீகரித்த அளவுக்கு உம்பர்த்தோ எக்கோ போன்றவர்கள் நெருக்கமானவர்களில்லை. அதற்கு என் வாசிப்பின் போதாமைதான் ஒரு காரணமாக இருக்கும்.

இன்றைக்கு எக்கோவின் மொழிபெயர்ப்பை வைத்து, எக்கோவையே மிதிக்க ஒரு கோஷ்டி வருவதைப் பார்க்க வியப்பாக இருக்கின்றது. இவர்கள் எக்கோ எழுதிய நூல்களில் அரைவாசியாவது வாசித்திருப்பார்களா? ஒரு நூலை முன்வைத்து ஒரு எழுத்தாளரை நிராகரிக்கும் அதிகாரத்தை யார் இவர்களுக்கு வழங்கியது. அதிலும் ஏதோ கல்லூரிக்காலத்தில் வாசித்துவிட்டு இது கிறிஸ்தவ இறைஞானத்தை நோக்கியே போகவில்லை, பொலபொலவென்று உதிர்ந்து விழும் நாவல், ego trip இற்கு அழைத்துச் செல்லும் புனைவு என்றெல்லாம் 'எல்லாம் தெரிந்த ஞானி'யாக அறுதியிட்ட உண்மையாக ஒருவர்  எழுத தமிழில் வாசகர்கள் எதைச் சொன்னாலும் கேட்பார்கள் என்கின்ற ஆணவத்தைத் தவிர வேறென்னவாக இருக்கும்.

அதுவும் இன்னொரு பதிவில் துப்பறியும் நாவல்கள் என்று 'ரோஜாவின் பெயரோடு (மறைமுகமாக), ரொபர்தோ பொலானோவின் 2666, Savage Detectives போனவற்றை ஒப்பீடு செய்வது என்னவொரு கொடுமை. மத்தியகாலத்தில் நடக்கும் ஒரு நாவலைக் கொண்டுவந்து, எப்படி சமகாலத்தைப் பின்னணியாக வைத்து  எழுதிய 2666, Savage Detectives  ஒப்பிட முடியும் என்கின்ற எளிய விடயம் கூடத் தெரியாமலா ஒருவர் இருப்பார்? பொலானோவின் இந்த நாவல்களை எக்கோ எழுதிய இறுதி நாவலான 'Numero Zero' உடன் ஒப்பிட்டிருந்தால் கூட ஒரளவுக்குப் பரவாயில்லை. 'Numero Zero'  இரண்டாம் உலகப் பின்னணியில் எழுதப்பட்ட ஒரு துப்பறியும் நாவலாகும்.

இப்படியான அபத்தங்களைப் பார்க்கும்போது எனக்குப் பிடித்த ரொபர்தோ பொலானோ கூடப் பிடிக்காமல் இனிப் போய்விடுவாரோ  என்று அச்சமாக இருக்கிறது. நல்லவேளையாக பொலானோவின் படைப்புக்கள் பற்றி ஒரு  வாசிப்பை எழுதி 'எழுத்தென்னும் மாயக்கம்பளத்தில்' சேர்த்திருப்பதால் பொலானோவை நானும் 'நாளை நீங்களெல்லாம் ஓர் எழுத்தாளரா உங்களை நான் நிராகரிக்கின்றேன்' என்று நம் தமிழ் 'அறிவுஜீவி'களோடு சேர்ந்து நின்று திட்டினாலும், ஒரு  கடந்தகாலச் சாட்சியாக அந்த நூல் நின்று என் மனச்சாட்சியை உறுத்துமென நினைக்கின்றேன்

உண்மை எது புனைவு எது என்ற கோடுகளை அழிக்கும் நாவல்கள் இவையென பட்டியலிட்டு எக்கோவை நிராகரிக்கும் 'எல்லாம் அறிந்த வல்லவரே' தயவுசெய்து எக்கோவினது 'Baudolino' வை நிதானமாக வாசித்துப் பாருங்கள்.  அது என்னைப் போன்ற எளிய வாசகனுக்குக் கூட மத்தியகால ஐரோப்பாவின் வரலாறு என நம்பிக்கொண்டிருந்தவற்றை/கற்பித்தவற்றை கட்டவிழ்த்துப் பார்ப்பதைத் தானே வாசிப்பவர்க்குச் சொல்லித் தருகின்றது. இதைவிட வரலாற்றை எப்படிக் கட்டுடைக்க வேண்டுமென நினைக்கின்றீர்கள்.

எனக்கு வரும்  திகைப்பென்னவென்றால் வாசித்த கொஞ்சத்தை வைத்து எப்படி இவர்கள் தந்தகோபுரத்தில் ஏறி நின்று,  நமக்கு மட்டுமில்லை, எக்கோவிற்கே துணிச்சலாகப் பிரசங்கம் செய்கின்றார்கள் என்பதுதான்!

**********

பனிக்காலத் தனிமை - 11

Saturday, October 18, 2025

 

மெரிக்காவில் ஸென்னைப் பரவலாக்கிய ஒருவராகிய சூஸிகி ரோஸி சான் பிரான்ஸிற்கோவிற்கு வரும்போது அவருக்கு 55 வயதாகியிருந்தது. சூஸிகி ரோஸியின் குழந்தைப் பருவம் வறுமைக்குள் கழிந்தது. தனது சிறுவயதில் வளர்ந்த தலைமயிரைக் கூட சலூனுக்குச் சென்று வெட்ட முடியாத காரணத்தால், தனது தந்தையார் தனது தலையை நன்றாக மழித்துவிடுவார் என்றும் அதனால் பாடசாலையில் தனது மொட்டைத்தலையை எள்ளல் செய்தபடி சக மாணவர்கள் இருப்பார்கள் எனவும், இதனால் தனது பாடசாலைப் பருவம் மகிழ்ச்சியாக இருந்ததில்லை எனவும் ரோஸி சொல்லியிருக்கின்றார்.

சூஸிகி ரோஸியின் தந்தையார் ஒரு புத்த மடலாயத்திற்குப் பொறுப்பானவராக இருந்தவர் . ஆனால் அன்றைய மெஜி பேரரசர் (Emperor Meiji) பெளத்த மடாலயங்கள் அனைத்தையும் ஷின்டோ (Shinto) மடலாயங்களாக மாற்றி அரசின் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்திருந்தார். ஒருவகையில் வேறிடத்தில் இருந்த பெளத்தம் வேண்டாம், ஜப்பானிய பூர்வீக மதங்களுக்குத் திரும்பவேண்டும் என்ற நோக்கில் இப்படி அனைத்தும் ஷின்டோவாக மாற்றப்பட்டுக் கொண்டிருந்தன.

சூஸிகி ரோஸி தனது 13 வயதில் தந்தையிடம் அனுமதி கேட்டு இன்னொரு பெளத்த மடலாயத்தில் சென்று சேர்கின்றார். ரோஸி ஆசிரியராக ஸென்னைக் கற்பிக்கும் நிலைக்கு வந்தபோது அவர் அமெரிக்காவுக்குச் செல்ல விரும்புகின்றார். அவருக்கு ஜப்பானில் பெளத்தம் அதன் அசலான நிலைமையிலிருந்து மாறிவிட்டதாகத் தோன்றுகின்றது. புதிய நிலப்பரப்பில், பெளத்தம் குறித்து எவ்வித முன்முடிவுகளும் இல்லாத இடத்தில் ஸென்னை கற்பிப்பது சிறந்ததென முடிவு செய்கின்றார்.
ஆனால் ரோஸியின் ஆசிரியர் அவரது இந்த முடிவுக்கு சம்மதிக்கவில்லை.

பின்னர் அவர் தனது ஐம்பதுகளில் (1959இல்) அமெரிக்காவுக்கு ஒரு ஜப்பானிய மடலாயத்துக்கு குருவாக வருகின்றார். அங்கும் அது ஒரு மதகுருவாக இருந்தாலும் அவரது கனவான ஸென்னை அதன் மூலத்தில் சொல்லிக் கொடுப்பது என்பதற்காக காலையிலும் மாலையிலும் 'சடங்குகளுக்கு' வெளியே சொல்லித் தர, பின்னர் சூஸிகி ரோஸி ஒரு முக்கிய ஸென் ஆசிரியராக மாறியது வரலாறு.

சூஸிகி ரோஸி 'ஏன் அமெரிக்காவுக்கு வந்தேன்?' என்று உரையாடியிருக்கின்றார். இத்தனைக்கும் ரோஸி அமெரிக்காவுக்கு வந்து உயிரோடு இருந்த ஆண்டுகள் 12 ஆண்டுகள் மட்டுமே. ஸென் வரலாறுகள் இது ஒரு சொற்பகாலம். ஆனால் ரோஸி தனக்குப் பின் குறிப்பிட்ட மாணவர்களை உருவாக்கியதோடல்லாது, அநேக ஸென் மடலாயங்கள் போல, மாஸ்டர்கள் இறந்துபோக காலத்தில் கரைந்துபோகாது இன்றும் சூஸிகி ரோஸியை நினைவுபடுத்தியபடி பல நூறு மாணவர்களின் அவர்களின் தலைமுறைகளும் வந்தபடி இருக்கின்றன.

ஒன்றுமே இல்லாது வந்த சூஸிகி ரோஸி அவர் இறந்துபோனபோது மூன்று வெவ்வேறு மடாலயங்களைத் தொடங்குமளவுக்கு அவரது மாணவர்களை வளர்த்துவிட்டிருந்தார். சூஸிகி ரோஸி அமெரிக்கா வந்த இரண்டு வருடங்களில் அவரது மனைவி அமெரிக்காவுக்கு வருகின்றார். சூஸிகி ரோஸி காலையில் மாணவர்களோடு இருந்து தியானம் செய்வது முடிந்தவுடன் உடனேயே மடலாயத்தில் செய்யவேண்டிய வேலைகளுக்காக உடையை மாற்றிவிட்டு அந்நிலத்தில் ஏதாவது செய்யத் தொடங்கிவிடுவார் என்று மனைவி குறிப்பிடுகின்றார்.

அதுபோலவே இரவுணவைச் சாப்பிட்டுவிட்டு தன்னோடு கொஞ்ச நேரப் பொழுதைக் கழியுங்கள் என்றாலும் எனக்கு இந்த அமெரிக்காவில் ஸென்னை பரப்பும் விருப்பம் இருக்கின்றதெனச் சொல்லி வாரம் ஒரு முறை நடக்கும் ஆங்கில தம்ம உரைக்குத் தயாராக தனது அறைக்குச் சென்று விடுவார் எனச் சொல்கின்றார்.

ன்றைய அநேக ஜப்பானிய ஸென் ஆசிரியர்களைப் போல சூஸிகி ரோஸிக்கு ஆங்கிலம் அவ்வளவு தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் உரையாற்ற கடும் உழைப்பைக் கொடுத்திருக்கின்றார். சிலவேளைகளில் இப்படி வாரம் முழுதும் தயாரித்த உரையைக் கேட்க, ஆரம்ப காலகட்டத்தில் மூன்று/நான்கு மாணவர்கள்தான் வந்தபடி இருந்திருக்கின்றார்கள். இப்படி கடுமையாக உரையைத் தயார் செய்ததற்கு ஒரு பத்துப்பேர் வந்தால் கூட பரவாயில்லை என்று தான் ரோஸியிடம் கேட்டதாக ரோஸியின் மனைவி குறிப்பிட்டிருக்கின்றார். அதற்கு ரோஸி, ஒருவரா இல்லை ஆயிரம் பேரா , அது எனக்கு பொருட்டில்லை; நான் இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன் எனச் சொல்லியிருக்கின்றார்.

இவ்வாறு தொடர்ச்சியான கடும் உழைப்பில்தான் சூஸிகி ரோஸி தனது மாணவர்களை உருவாக்கியிருந்தார். அதேபோல அவர் நம்பிக்கையீனங்களையும் தனக்குள் உருவாக்காது, அவரின் வாழ்க்கையில் அறிந்த ஸென்னைத் தீவிரமாக நம்பியிருக்கின்றார். அவரது கடைசிக்கால உரையில் கூட ரோஸி, நான் இன்னும் கூட பெளத்தத்தை ஆழ அறிவுப்புலத்தில் வைத்து வாசித்திருக்கலாம், இன்னும் கூட நேரம் தியானத்தில் அமர்ந்திருக்கலாம்; ஆனால் நாளாந்த வேலைகளில் நேரத்தைச் செலவிட்டுவிட்டேன். ஆனால் எனது மாணவர்கள் மீது நம்பிக்கை இருக்கின்றது. அவர்கள் என்னை அறிவுப்புலத்திலும் தியானத்திலும் விஞ்சிப்போவார்கள். என் வயதொத்தவர்கள் (60களில் இருப்பவர்கள்) என் மாணவர்களைத்தான் அதிகம் நம்புவோம். நீங்கள் ஏதோ ஒருவகையில் சாதித்துக் காட்டுவீர்கள்' என்றிருக்கின்றார்.

அந்த நம்பிக்கையை வீணடிக்காது அவரின் சிறந்த மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களாக வெளிவந்திருக்கின்றார்கள். அவர்கள் வெவ்வேறு திசைகளுக்குச் சென்று ஸென்னை அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள். அதைவிட நிறையப் புத்தகங்களை ஸென் பற்றியும், அவர்களின் ஆசிரியரான சூஸிகி ரோஸி பற்றியும் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். சூஸிகி ரோஸியின் நேரடி மாணவர்களுக்கே இப்போது 80 வயதுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இந்த 80 வயது ஆசிரியர்களின் அடுத்த தலைமுறை மாணவர்கள் கூட தமது ஆசிரியர்களினூடாக சூஸிகி ரோஸியை நினைவுபடுத்தியபடி இருக்கின்றார்கள். ஒரு நீண்ட தலைமுறை இப்போது சூஸிகி ரோஸிக்கு உருவாகிவிட்டிருக்கின்றது.

சூஸிகி ரோஸியை வாழ்வைப் பார்க்கும் நாங்கள் நம்பும் ஓரு விடயத்தை எவ்வளவு உழைப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என யோசித்துப் பார்க்கின்றேன். அதுவும் ஈழத்தமிழர்களாகிய நாம் இதை இன்னும் ஆழமாக சிந்தித்துப் பார்க்கலாம். ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆனபின்னும் ஒரு grassroots இயக்கத்தையும் எந்த நம்பிக்கை/அரசியல் சார்ந்தும் நம்மால் வளர்த்தெடுக்க முடியவில்லை.

இத்தனைக்கும் பல்வேறு அரசியல்/ஆன்மீக நம்பிக்கையாளர்கள் புலம்பெயர்ந்த தேசம் உள்ளிட்ட பல இடங்களில் இருக்கின்றார்கள். நாம் எல்லோரையும் ஏன் இப்படி தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் உழைக்கவில்லை என்று கேட்க முடியாது. ஆனால் இவ்வாறு சமூகத்தில் செயற்பாட்டாளர்களாக இருப்பவர்கள் அல்லது சொல்லிக் கொள்பவர்கள் ஏன் ஒரு சிறு காலடியைக் கூட உருப்படியாக வைக்க முடியவில்லை என்று அவரவர்கள் சுயவிமர்சனம் செய்யவேண்டும்.

சூஸிகி ரோஸி 1950களில் அமெரிக்காவுக்கு வரும்போது அவருக்கு எந்தப் பின்புலமும் இல்லை. ஆங்கிலம் கூட ஒழுங்காய்த் தெரியாது. முற்றிலும் புதிய நிலப்பரப்பு மட்டுமில்லை, மனிதர்களும் கூட புதியவர்கள். என்கின்றபோது 12 ஆண்டுகளிலேயே மிகச் சிறந்த மாணவர்களையும், ஸென் மடாலயங்களையும் உருவாக்க முடிந்தது. அதுமட்டுமின்றி அவருக்குப் பின்னும் அது உயிர்வாழும் விதைகளையும் ஊன்ற முடிந்திருக்கின்றது. இத்தனைக்கும் ரோஸி தனது ஸென் உரைகளையும், தியானத்தையும் கற்பித்தபோது வந்த மாணவர்கள் நான்கைந்து பேரே.  

ஸென் என்றோ ஒருநாள் அமெரிக்காவில் பரவும் என்கின்ற அந்த மாபெரும் நம்பிக்கை, தொடக்ககால மாணவர்கள் ஒருசில  என்றாலும் அவர்களை அரவணைத்த விதம் இன்றைக்கு சூஸிகி ரோஸியின் மூலம் ஸென் மாபெரும் ஆலமரமாக வேரை மட்டுமில்லை விழுதுகளையும் விட்டு பரவியிருக்கின்றது.

மே
லும் சூஸிகி ரோஸி  ஒருவருக்கு வயது கூட ஒரு பொருட்டேயல்ல என்று நிரூபித்துமிருக்கின்றார். இன்றைக்கு 80களில் ஆயுதப்போராட்டத்தில் பங்காற்றியவர்கள் உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் முடிந்தபோது பங்கேற்றவர்கள் உள்ளிட்ட அனைவரின்முன் நீங்கள் உண்மையிலே தமிழ்ச் சமூகத்திடம்  கொடுக்க உங்களிடம் எதை வைத்திருக்கின்றீர்கள் என்பதையும், உங்களை அதற்காக எவ்வளவு தயார்ப்படுத்தி நிகழ்காலத்தோடு நிற்க முடிகின்றதா என ஒவ்வொருவரும் தம்மைத்தாமே கேட்க வேண்டும். அவ்வாறில்லாதுவிட்டால் அவை வெறும் வெற்று வார்த்தைகளாக/ வீணான நம்பிக்கைகளாக, தரிசு நிலத்து விதைகளாகவே நீங்கள் விதைக்கும்/பேசும் எதுவும் இருக்கும் என்பதாக அமையும் அவலச்சூழலுக்குள் நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதை உணரவேண்டும்.

சூஸிகி ரோஸி, அமெரிக்காவிற்கு வந்த புதிதில் அருகிலிருக்கும் கடையில் ரெட்டிஷ்களை சூப்புக்காக வாங்குவாராம். இவர் எப்போதும் பழைய/ வாடிய ரெட்டிஷ்களை வாங்குவதைப் பார்க்கும் கடைக்காரர், புதிதை தேர்ந்தெடுக்கலாமே என்று கேட்பாராம். அதற்கு, புதியதை வாங்க எவரும் வருவார்கள், வாடியதை ஒருவரும் வாங்கமாட்டார்கள் என வாங்கிச் செல்வராம் ரோஸி. அதுபோலவே சூஸிகி ரோஸி தனது கடைசிக்காலத்தில் ஒரு அறுவைச் சிகிச்சையைச் செய்தபின்னும், ஓய்வெடுக்காமல் அவரது தோட்டத்தில் எதையாவது வெட்டிக் கொட்டிக் கொண்டிருப்பாராம். இதைப் பார்த்த அவரது மனைவி, இப்படியே வேலை செய்தால், உங்கள் ஆயுள் சுருங்கிவிடும் என்று கத்துவராம். அதற்கு சூஸிகி, நான் என் ஆயுளைச் சுருக்காமல் விட்டால்,  எனது மாணவர்கள் வளரமாட்டார்கள் (If i dont cut my life short, my students will not grow) என்று பதிலளிப்பாராம்.

சூஸிகி ரோஸியை தொடக்க காலத்தில் நினைவுபடுத்தும் அவரது பலர் மாணவர்கள் அவர் நன்றாகப் புகைப்பவராகவும், வாரவிறுதிகளில் பார்க்கும் ஜப்பானிய Rom-Com திரைப்படங்களுக்கே கண்ணீர் விடுபவராகவும் இருந்தவர் எனக் குறிப்பிடுகின்றனர். ஒரு ஸென் ஆசிரியரை, அதுவும் அமெரிக்காவில் ஸென்னை பரவலாக்கிய ஒரு ஆசிரியரை இப்படி நம்மால் கற்பனை செய்யமுடிகின்றதா? ஆனால் இப்படியெல்லாம் இருந்தபோதும், அவரின் முதன்மை நோக்கான ஸென்னை அமெரிக்க மண்ணில் விதைப்பது என்ற விடயத்தில் ஒருபோதும் சமரசம் செய்யாது அவரின் இறுதிக்காலம் வரை முயன்றிருக்கின்றார். அதுவே அவரது ஸென், அதுவே அவரது தம்மம்.

*******

இளங்கோவின் 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்'

Friday, October 17, 2025

நூல் அறிமுகக் குறிப்பு. -அரசி விக்னேஸ்வரன்


பிந்திய இரண்டாயிரங்களில்   இணையப் பாவனை வளர்ந்து Blog மூலம் தமது எழுத்து, வாசிப்பு உலகை இளம் தலைமுறையினர் வளர்த்துக்கொண்ட ஆரம்ப காலங்களில் இருந்து இன்றுவரை தொடர்ந்து எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் இருப்பவர் இளங்கோ. கவிதை, சிறுகதை, நாவல் என புனைவு இலக்கியத்திலும் திரைப்பட விமர்சனம், பயணக்கட்டுரைகள் என்றவகையில் அபுனைவு எழுத்திலும் கால்பதித்திருப்பவர். தனக்கேயுரிய மொழிநடையுடன் அவர் எழுதும் முகப்புத்தகப் பதிவுகள் கூட சுவாரசியமான வாசிப்புக்குகந்தவை.  அவரது எட்டாவது புத்தகமும் இரண்டாவது சிறுகதைத் தொகுதியுமான "நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்" என்ற நூல் கடந்த ஜூலை பத்தொன்பதாம் திகதி மாலை ரோறொன்றோவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

 

இந்தப்புத்தகம் 2011 முதல் 2024 வரையான 13 வருட காலப்பகுதிக்குள் இளங்கோ எழுதிய பத்து சிறுகதைகளின் தொகுப்பாக சென்னை டிஸ்கவரி பப்ளிகேஷன் வெளியீட்டில் வெளிவந்துள்ளது. புத்தக வெளியீட்டு நிகழ்வில் இளங்கோ தனது புதிய வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவருக்கு முதலில் எனது வாழ்த்துக்கள்.  புத்தகத்தின் உள்ளடக்கத்தினுள் புகமுன்னர் எனக்கு இருந்த விமர்சனம் என்னவெனில் இந்தப் புத்தகத்துக்கு ஏன் எந்த முன்னுரையும் எழுத்திச் சேர்க்கப்படவில்லை என்பதுதான். புத்தகத்தின் பின் அட்டையில் பா.அ. ஐயகரன் அவர்களின் ஒரு சின்னக் குறிப்பு மட்டும் இடம்பெற்றிருக்கிறது. 


இந்தப் புத்தகத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக இளங்கோ பல இதழ்களில் எழுதி வெளியிட்ட கதைகள் இருக்கின்றன. ஆனால் அவை காலக் கிரமத்தில் புத்தகத்தில் இடம்பெறவில்லை. எந்த அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன என்பதும் தெளிவற்று இருந்தது. உள்ளடக்கப் பக்கத்தில் கதைகள் எழுதப்பட்ட ஆண்டுகளையும் சேர்த்திருக்கலாம். இவற்றில் மிகப்பழைய கதை எது என்பதை உறுதிப்படுத்துவதற்கு எல்லாக் கதைகளையும் நான் இருமுறை புரட்டிப் பார்க்கவேண்டியிருந்தது.


முதல் வாசிப்பில் இளங்கோவின் புத்தகம் எனக்கு ஒரு சுவாரசியமான  இலகுவான வாசிப்புக்கு உகந்த ஒன்றாகவே பட்டது. ஆனால் வாசித்து முடித்தபின்னர் யோசிக்க யோசிக்க அர்த்தங்கள் புலப்படும் தன்மை கொண்ட கதைகளைக் கொண்டிருந்தது. புத்தக வெளியீடன்று உரையாற்றிய மைதிலி தயாநிதி அவர்கள் பின் நவீனத்துவப் பார்வையுடன் இக்கதைகளை ஆராய்ந்திருந்தார். வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் தனித்துவமான வாசிப்பனுவத்தையும் அர்த்தப்படுத்தல்களையும் இக்கதைகள் கோரி நிற்பதைப்  புரிந்து கொள்ள முடிந்தது. 


புத்தகத்தின் தலைப்பே ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைகின்றது. இலங்கை அரசியல் பின்புலத்தில் இருந்து யோசிக்கும் பலருக்கு புத்தர் என்பவர் அதிகாரத்தினதும்  ஆக்கிரமிப்பினதும் குறியீடாகத் தெரியலாம்.   மனைவியையும் குழந்தையை யும் விட்டு சந்நியாசியாகிய அவருக்கும் முத்தத்திற்கும்  என்ன சம்பந்தம் என்றும் சிலர் நினைக்கலாம். கதைசொல்லி தேடும் அமைதி, திருப்தி அல்லது பூரணம் என்பதற்கு கதைசொல்லி அவரைக் குறியீடாக்குகிறான். தலைப்புக் கதை அதற்கு நல்ல உதாரணம். புத்தர் கதைசொல்லியை ஒரு அவதானியாக பார்த்துக்கொண்டிருக்கிறார். அல்லது அவர் தன்னைப் பார்ததுக்கொண்டிருக்க வேண்டும் என்று கதைசொல்லி அவாப்படுகிறான். வெளியில் தெரியாத அவன் மன ஓட்டங்களுக்கு புத்தர் சாட்சியாகிறார். அவன் வாழ் க்கையின் அர்த்தத்தைக்  காதல் , காமத்தினூடு கண்டடைகிறபோது புத்தரை அங்கே கண்டடைகிறான்.  இளங்கோவின் கதைகளில் புத்தர் மட்டுமல்ல, இடையிடையே வைரவர், இயேசுநாதர், யோகர் சுவாமி, சோக்கிரடீஸ், காஃப்கா, எனப் பலரும் கதைசொல்லியின் எண்ண ஓட்டத்தினூடு வந்து போகிறார்கள். 


முதல் வாசிப்பில் என்னைக் கவர்ந்த விடயம் இளங்கோவின் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் வரும் கதைசொல்லியின் தன்மை. அவன் புறஉலகில் சஞ்சரிப்பது கனவு போல இருக்கும் அளவுக்கு அக உலகில் அதிகம் சஞ்சரிப்பவனாக இருக்கிறான். மாநகரவாசியாகவும் தளைகள் அற்றவனாகவும் எல்லாவற்றிலும் இருந்து விலகியவனுமாக இருக்கிறான். இந்த "அந்நியனை"த்தான் "விளிம்பு நிலை மனிதனாக" மைதிலி தயாநிதி அவர்கள் நோக்கினார்கள். 


ஆனால் எனக்கு அவன் நினைத்த நேரம் நினைத்த முடிவை எடுக்ககூடிய, முகம் தெரியாத ஒரு பெண்ணோடு திட்டமிடாத ஒரு தாய்லாந்துப் பயணத்துக்கு ஒரே நாளில் கிளம்பிவிடக்கூடிய அல்லது வேலைக்கு லீவு போட்டுவிட்டு கால் போன போக்கில் நடந்து வழியில் உணவகத்தில் உணவருந்தி ஏற்கனவே பிரிந்த பழைய காதலியுடன் இரவு விடுதியில் தாங்கிவரக்கூடிய, ஒரு எதிர்பார்ப்புகளுக்கும் வரைமுறைகளுக்கும் அப்பாற்பட்ட  வாழ்வை வாழ்பவனாகத்  தெரிந்தான். அந்தக் கதைசொல்லியின் மனவோட்டத்தினூடு பயணிப்பதும் அவனது பார்வைக்குள்ளால் நகரங்களையும் இயற்கையையும் தரிசிப்பதும் நல்ல வாசிப்பனுபவமாக இருந்தது.


இந்தப் புத்தகத்தில் ஒரு சில கதைகள் மொழி பெயர்ப்புக் கதைகளாக இருந்திருக்கலாம் என்று தோன்றுமளவுக்கு இலங்கை அல்லது புலம்பெயந்த தமிழ்க்  கதாபாத்திரங்களை அல்லது பழக்கமான இடங்களை குறிப்பிடாமலேயே அமைந்திருந்தன. ஆனால் ஒரு சில கதைகள் போர், இலங்கை அரசியல் என்பவற்றை நேரடியாகவே தொட்டிருக்கின்றன. 



தொகுப்பின் முதலாவது கதை "அரசன் அன்று கொன்றால் லியனகே நின்று கொல்வார்". இக்கதையில் கதாநாயகன் ஒரு  சிங்கள இளைஞனாக இருக்கிறான். அரசியல் போராட்டம், ஆயுதப்போராட்டம் எல்லாம் தோற்ற நிலையில் பேனாவால் போர்தொடுத்த ஊடகவியலாளர்கள் எல்லாரும் காணாமல் போய்க்கொண்டிருந்த வேளையில் எல்லாருக்கும் இருந்த ஆற்றாமையை இந்தக்கதை தொடுகிறது. குற்றவாளிக்கு இருக்கும் குற்றவுணர்சசியை வைத்தே ஒருவகை பழிவாங்கலை நடாத்திகாட்டுகிறது எதிர்பாராத திருப்பத்தினைக் கொண்ட இந்தக் கதை. 


"வெள்ளவாய்க்கால் வைரவர்" என்னும் இன்னொரு கதை இந்திய இராணுவக் காலத்தில் அமைந்து, ஒரு சிறுவனைக் கதைசொல்லியாகக் கொண்டிருக்கிறது. இந்தக் கதை ஒரு சிறுவனால் சொல்லப்படுவது போல் அநேகமான இடகங்களில் இருந்தாலும் சில இடங்களில் அவன் வளர்ந்தபின் சொல்வதுபோல, இளங்கோவின் வழமையான கதைசொல்லி எட்டிப்பார்க்கும் இடங்களில் அமைகிறது. இந்தக் கதையும் காவல் தெய்வமான வைரவரைக் கூடக் காக்க முடியாத, அநியாயங்கள் நடப்பதை பார்த்தும் மௌனியாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தின் ஆற்றாமையையம் அது ஏற்படுத்தக்கூடிய ஆழமான மனவடுவினையும் துலக்குகிறது. 


இந்தத் தொகுப்பில் எல்லாக் கதைகளிலும் இழையோடும் இன்னொரு கருப்பொருள் காதல். ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அது நிறைவேறாத அல்லது நிலைக்காத காதலாகவே அமைகிறது. "முள்ளிவாய்க்கால்" என்னும் கதையில்  பதின்ம வயதில்  மலர்ந்து பின் யுத்த காலத்தையும் இறுதிப்போரையும் தாண்டி  கடைசிவரை ஒருவருக்கொருவர் சொல்லப்படாமலேயே போய்விட்டாலும் வாசகர்களின் மனதில் பதிந்து விடக்கூடிய ஒரு காதலுக்கு இளங்கோவின் கதைசொல்லி சாட்சியாகிறான். 


தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசப்பட வேண்டியதென நான் நம்பும் அதிகம் புரிந்துகொள்ளப்படாத  உளவியல் நோய்க்கூறுகளையும்  சில கதைகள் தொட்டுச்செல்கின்றன. "ஏகாந்தம் என்பதும் உனது பெயர்" கதையில் "Bipolar disorder " இனால் பாதிக்கப்பட்ட கதைசொல்லி அது தன்னை எப்படிப்  பாதிக்கிறது என்பதை அவனே மனதுக்குள் கவனித்துக்கொண்டு இருப்பதும் அதற்கு ஒரு உதாரணம். பராமரிக்கப்படாத உளவியல் சிக்கல்கள் எவ்வளவு துரத்துக்கு ஒருவரை இட்டுச்செல்லக்கூடும் என்பதை "உறைந்த நதி" கதை எமக்கு உறைக்க வைக்கிறது. 


தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளைப் பற்றியும் எழுதுவதற்கு நிறைய இருப்பினும் இக்கதைகள்  வாசகர்களின் தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தையும் கோருபவை  என்பதால் வாசிப்பு ஆர்வமுள்ளவர்கள் வாசிக்க வேண்டும், இளங்கோ தொடர்ந்தும் எழுதி தமிழ் இலக்கிய உலகிற்கு அவர் கொண்டுவந்திருக்கும் ஒரு தனித்துவமான இடத்தை இன்னும் விஸ்தரிக்க வேண்டும் என்ற அவாவுடன் இந்தக் குறிப்பை முடித்துக்கொள்கிறேன்.

 

*******


('அம்ருதா' ஐப்பசி இதழில் வெளிவந்தது; கனடாவில் நடைபெற்ற 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்' நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றியதன் சுருக்கிய எழுத்து வடிவம்)


மக்னோலியாப்பூ குறிப்புகள்

Tuesday, September 30, 2025

 

'Calm in the Storm (Zen Ways to Cultivate Stability in an Anxious World)' நூல் வெளிவந்த அன்றே வாங்கியிருந்தேன். இது எனது ஆசிரியரான தாயின் நேரடி மாணவரான  Brother Phab Huu, ஓரு பத்திரிகையாளராருடன் சேர்ந்து எழுதியது. இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக  Podcast செய்து வருகின்றனர். விரைவில் நூறாவது Podcast வரப்போகின்றது. நடைமுறை வாழ்க்கையில் ஸென்னை எப்படி பழக்கப்படுத்திக் கொள்வது என்று நேரடியாகப் பேசுவதால் இவர்களின் பேச்சுக்கள் சுவாரசியமானவை. ஆகவே நிறைய பலவீனமுள்ள தருணங்களை/மனிதர்களை இவர்களின் பேச்சுக்களினூடாக அறிந்துகொள்ளும்போது, நமது வாழ்க்கையின் பிரதிபலிப்பைப் பார்க்கலாம்.


ஒரு நூலை அது வரமுன்னர் pre-order செய்து நான் வாங்குவதென்பது அரிது. கடைசியாக அப்படி வாங்கியது அருந்ததி ரோயின் The Ministry of Utmost Happiness என நினைக்கின்றேன். 'Calm in the Storm' இல், பெரும்பாலும் அவர்களின் உரைகளிலிருந்தே எழுத்தாக்கி இருக்கின்றனர். இந்த உரைகளை நான் விடாது கேட்பவன் என்பதால் எளிதில் அதைக் கண்டு கொள்ள முடிந்தது. இந்த நூலை வாங்கியது என்பது அவர்களிடமிருந்து நிறையப் பெற்றதற்கு  இது நான் அவர்களுக்கு நன்றி செலுத்தும் முறை என்பேன். 


நாம் எத்தனையோ அரிய விடயங்களைப் பிறரிடமிருந்து பெற்றுக் கொள்கின்றோம், ஆனால் அவர்களுக்கு அதைச் சொல்லவோ/நன்றி செலுத்தவோ முடியவதில்லை. அதை வேறுவிதமாகத்தான் செய்ய வேண்டியிருக்கின்றது.


நண்பரொருவர் நான்கு பெண்கள் இலங்கையில் ஒரு சிறு குழுவைத் தொடங்கி, தொடர்ந்து பல்வேறு வகையில் சமூகத்தில் இயங்கிக் கொண்டிருப்பதைச் சொன்னார். அவரவர்க்கு இருக்கும் நாளாந்த அல்லாடல்களுக்கிடையில் அவ்வளவு உற்சாகமாக அவர்கள் செயற்படுகின்றார்கள் என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் இனியான காலங்களில் சிறுசிறு குழுக்களாலேயே சமூகத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று நம்புவன் நான். ஆகவே இவ்வாறான அமைப்புக்களின் தொடக்கமும், செயற்பாடுகளும் மனதுக்கு இதமளிப்பவையாக இருக்கின்றன. அவர்களது அமைப்பு 'Everystory Sri Lanka'. இன்ஸ்டாவில் தேடினால் எளிதில் கிடைப்பார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்!


*

ன்று நல்லூர் முருகன் கோயிலில் தேர்த்திருவிழா நடந்து முடிந்திருக்கின்றது. நானறிய யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரேயொரு தீவிர முருகன் பக்தன் நமது வடகோவையாராகத்தான் இருக்கும். ஏனென்றால் அவர் நல்லூர் திருவிழா தொடங்கிய முதல் நாளிலிருந்து 25ம் திருவிழா முடியும்வரை விரதம் இருப்பார்; ஆனால் ஒருநாளும் நல்லூர்க் கோயில் பக்கம் எட்டியே பார்க்கமாட்டார். 


வடிவேல் ஒரு திரைப்படத்தில் ஒரு கோட்டை வரைந்துவிட்டு, நீ  கோட்டுக்கு அந்தப் பக்கத்தில் நின்று கதைக்க வேண்டும், நான் இந்தப் பக்கத்தில் நின்று கதைப்பேன். பேச்சு பேச்சாக இருக்கவேண்டும், என்ன நடந்தாலும் கோட்டைத் தாண்டக்கூடாது என்று வில்லனுக்கு சூளுரைப்பது போல, வடகோவையாருக்கும், முருகனுக்கும் ஏதோ ஒரு சபதம் இருக்கும்போல. இல்லாவிட்டால் திருவிழாக் காலங்களில் கடும் விரதமிருந்து விட்டு கோயில் பக்கம் எட்டிப்பார்க்காமல் யாராவது இருப்பார்களா என்ன? சிலவேளைகளில் மனதிலே கோயில் கட்டிய பூசலார் நாயனாரின் பரம்பரையில் வந்தவராக இவர் இருப்பாரோ தெரியவில்லை.


அவர் ஒரு தீவிர நல்லூர் முருகப் பக்தன் போலக் காட்டிக்கொண்டாலும், நள்ளிரவு 'ஏகாந்த' வேளைகளில் மனந்திறந்து பேசும்போது, 'டேய் நான் எங்கை பக்தியோடு விரதம் இருக்கிறனடா, இப்படிச் செய்வது என்னுடைய detox இற்கு,  வருடம் முழுவதும்  ஊர்வன நகர்வன, பறப்பன, கடலுக்குள் பாய்வது என்று அனைத்தையும்  கணக்கில்லாது  நன்றாக விழுங்கிவிட்டு, 25 நாட்கள் விரதம் இருந்தால் உடல் நல்ல cleansing ஆகிவிடும், அதற்குத்தான் இப்படி விரதம் என்ற பெயரில் பட்டினி கிடக்கின்றேன்' என்று உண்மையை உளறிவிடுவார்.


நல்லூர் முருகனின் தேர்த்திருவிழாவை ஏதோ ஒரு யூ-டியுப்பில் பார்த்துக் கொண்டிருந்த அம்மா, நல்லூரில் ஒரு தேர்தான் போகின்றது என்றார். நான் நல்லூர்க்கோயில் திருவிழாவுக்கு மட்டுமில்லை; சாதாரண நாளில் கூட நல்லூர் கோயிலுக்குள்ளே போனதில்லை (அது எதற்காக என்று தெரிய விருப்பம் இருப்பவர்கள் 'நான் கம்பராமாயணம் படித்த கதை' என்ற எனது ஆக்கத்தை வாசிக்கவும்). எனவே நல்லூரில் தேர்த்திருவிழாவுக்கு ஒரு தேர் மட்டுந்தான் இழுப்பார்கள் என்பதை நான் இதுவரை கவ்னித்திருக்கவில்லை.


ஏனென்றால் என் சிறுவயதில் இருந்து நான் திருவிழா கொண்டாடிய கோயில் என்றால் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில். இந்த நல்லூர்க்கந்தன் போல ஒற்றைத் தேர் இழுக்கும் கஞ்சத்தனம் எல்லாம் மாவிட்டபுரம் கந்தனுக்கு இல்லை. அவரின் தேர்த்திருவிழாவில் கம்பீரமாக 5 தேர்களை இழுப்பார்கள். அதுவும் அந்தப் பெருந்தெருவில் ஐந்து தேர்களும் பவனி வருவது என் சிறுவயதுக் காலங்களில் விழிகள் விரிக்கப் பார்க்கும் வியப்பான விடயம்.


நல்லூர்க் கந்தனுக்கு ஐந்து தேர்கள் மட்டுமில்லை, நல்லூர்ப் பக்கமாய்  தேர்த்திருவிழாவன்று பறவைக்காவடி வருகின்ற சிலமனையும் நான் அவ்வளவாய்ப் பார்க்கவில்லை. இங்கே கனடாவில் மொன்றியலில் மலையில் அமைந்திருக்கும் வல்-மொறின் முருகன் கோயில் தேர்த்திருவிழாவுக்கு போனால் கூட நம்மவர்களின் பறவைக்காவடியைப் பார்க்கலாம். 


பறவைக்காவடிகள் என்றாலே அது சந்நிதி என்று அம்மா சொன்னார். அவர் சின்னப்பிள்ளையாக இருக்கும்போது ஒருநாள் முந்தியே அவரின் தாயோடு போய் சந்நிதியில் தங்கி நின்று இந்தப் பறவைக்காவடிகளை எல்லாம் பார்ப்பார் எனச் சொன்னார்.


ஐந்து தேர்கள் இல்லாத நல்லூர்க் கந்தனைத்தான் எங்கள் யாழ்ப்பாணத்தின் அடையாளம்/பெருமை என்று படங்காட்டுகின்றீர்களே, இதெல்லாம் நியாயமா யாழ்ப்பாணிகளே?


இந்தப் போர் மட்டும் நடக்காது, எங்களைப் போன்றவர்களைப் பனித்தேசத்துக்குத் துரத்தியிருக்காவிட்டால், மாவிட்டபுரம் கந்தன்தான் எங்கள் யாழ்ப்பாணத்தின் அடையாளம் என்று இந்நேரத்துக்கு 'ஹர்த்தாலு'க்கு அழைப்பு விடுத்து கதவடைப்புச் செய்திருப்போம்!


*

யாழ்ப்பாணத்தில் இப்போது நடக்கும் புத்தகக் கண்காட்சியில் 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' சிறுகதைத் தொகுப்புக் கிடைக்கின்றது. நண்பர் மதுராங்கி அங்கு வாங்கியதாக இந்தப் புகைப்படத்தை அனுப்பியிருந்தார். யாழில் என் புத்தகங்களை வாங்கவென 10 வாசகர்கள்தான் இருப்பார்கள். ஏற்கனவே 'கலைமுகம்' இதழின் ஆசிரியரான எமில் இந்நூலை வாங்கியதாகச் சொல்லியிருந்தார். மற்ற நண்பர்கள் அவர்களின் Sleeper cells ஐ களைந்துவிட்டு களத்தில் இறங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.


நிற்க.


இம்முறை 'எழுநா'வும் தனது அரங்கை  இப்புத்தகக் கண்காட்சியில் அமைத்துள்ளது. இந்த ஆண்டுக்கான 25 புத்தகங்களை வெளியிடும் திட்டத்தில் இதுவரை வெளிவந்துவிட்ட 20 நூல்களை நீங்கள் அங்கே பெற்றுக் கொள்ளலாம். உள்ளூர் மக்கள் மட்டுமில்லை, வருடந்தவறாது நல்லூர்க் கந்தனுக்காக அலையலையாகச் செல்லும் புலம்பெயர்ந்தவர்களும் 'எழுநா'வின் இந்த நூல்களை தமக்காக வாங்கலாம் அல்லது வாங்கி வாசிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம். மகிழ்ச்சி என்பது ஒருபோதும் பிறர்க்குக் கொடுக்க கொடுக்க  குறைவதில்லை; மேலும் மேலும் கூடிக்கூடிச் செல்லும் என்று ஆசான் புத்தர் கூறியதுபோல, புத்தகங்களை வாசிப்பதால் நமது உலகம் இன்னுமின்னும் விசாலமடைகிறது என்பதற்கிணங்க இவ்வாறான புத்தகக் கண்காட்சிக்கு, கோயிலுக்கும், திரையரங்குக்கும் செல்வது மாதிரி குடும்பமாகச் சென்று வரலாம். 

 
அறிவைப் பெறாது (பாடப் புத்தக அறிவைச் சொல்லவில்லை), 'வாய் வீச்சில் வீரராக' ஈழத்தமிழ்ச் சமூகம் இருப்பதை தினம் தினம் அரசியல்வாதிகளிலிருந்து, 'அறிவுஜீவிகள்' எனச் சொல்லப்படுவர்கள் வரை பார்க்கின்றோம்; ஆகக் குறைந்தது நாங்கள் இவ்வாறான 'கோமாளி'களாக மாறாதிருக்க நமக்கு முன்னாலிருக்கும் நல்ல தேர்வு புத்தகங்களைத் தேடித் தேடி வாசிப்பதேயாகும்.


ஆகவே இவ்வாறான புத்தகக் கண்காட்சிகளுக்கு உற்சாகமாகச் சென்று வாருங்கள்!


***


(Aug, 2025)

கார்காலக் குறிப்புகள் - 113

Tuesday, September 23, 2025

 

நான் கனடாவிற்கு வந்து உயர்கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்த காலங்களில் இங்கே இரண்டு பெரிய தமிழ் வன்முறைக் குழுக்கள் (Gangs)இருந்தன. இலங்கையின் இரண்டு பிரதேசங்களைக் கொண்டு அவை இயங்கினாலும், அதில் பிரதேசவாதம் இல்லாது வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த இளைஞர்கள் இருந்தார்கள். நான் வசித்துக் கொண்டிருந்த பகுதியில்தான் ஒரு குழுவின் செயற்பாடுகள் இருக்கும். அதில் ஒரு கேந்திர நிலையமாக  கோப்பிக் கடை இருந்தது. அந்த கோப்பிக் கடையைத்தாண்டித்தான் நான் ஒவ்வொருநாளும் பாடசாலைக்குப் போக வேண்டியிருக்கும். அன்று அந்தக் கடையைச் சுற்றியிருந்த அடுக்கங்களில் நிறையத் தமிழர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

அந்தக் கோப்பிக் கடையை மையமாக நிறையச் சூட்டுச் சம்பவங்கள் நடக்கும். அந்தச் சம்பவங்களைப் பற்றி அதைவிட நிறையக் கதைகள் கற்பனைகளோடு பேசப்படும். எனவே இவையெல்லாம் எங்கள் பாடசாலையிலும் எதிரொலிக்காது விடுமா என்ன?


எங்கள் பாடசாலையில் இருந்தும் பலர் இப்படி வன்முறைக் குழுக்களோடு ஜக்கியமானார்கள். ஆனால் எங்கள் பாடசாலையில் சண்டைகள் இந்தப் பெரும் குழுக்களால் நிகழ்ந்ததில்லை.  பெரும் மன்னர்கள் இருக்க குறுநில மன்னர்கள் புஜத்தைக் காட்டுவதைப் போல இவர்கள் ஏதேனும் சின்னக்குழுக்களோடு சண்டைபிடித்து விட்டுவர பாடசாலையில் மற்றக்குழு வந்து சேர சண்டை நடக்கும். பெரும்பாலும் ஆயுதங்களில்லாது சண்டை நடக்கும். துப்பாக்கிகள் எங்கள் பாடசாலையில் சீறியதில்லை. ஒருமுறை கத்திச் சண்டை நடக்க, ஒரு அப்பாவியான நண்பன் இதைத் தடுக்கப் போக அவனுக்குக் கத்திக்குத்து விழுந்திருந்தது.

அன்று சண்டைக்குக் காரணமானவன், நான் பின்னர் பல்கலைக்கழகத்துப் போன காலங்களில், பெரிய 'பிஸ்தா'வாக மாறி, இந்த நாட்டில் இருக்க முடியாத வன்முறையாளன் எனத் திருப்பவும் இலங்கைக்கு திருப்பியனுப்பட்டான். இப்போதும் இலங்கையில்தான் அவன் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.

இந்த பெரும் குழுக்களில் இருந்த இன்னொருவரும் எங்களுக்கு முன்னரான வகுப்புக்களில் படித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தால் அவர் இந்த குழுக்களில் இருக்கின்றாரா என்றே நம்ப முடியாதவளவுக்கு 'நோஞ்சனாக' இருப்பார். என்னைப் போன்றவர்களோடு அவ்வளவு அன்பாகவும் நடந்து கொண்டிருப்பார். அந்தக் காலங்களில் இந்தக் குழுச்சண்டையால் சில அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்கள் இந்தச் சண்டைகள் நடக்கும்போது இடைநடுவில் மாட்டிய பாவப்பட்டவர்களாக இருப்பார்கள்.

சிலவேளைகளில் இலக்கு வைத்தவர்கள் வேறு இருக்க, இவர்கள் தவறாக அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டிருப்பார்கள். அப்படி அன்றைய காலத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட -எந்தக் குழுவிலோ/வன்முறையிலோ ஈடுபடாத- ஒரு இளைஞனின் கொலையில் மேலே குறிப்பிட்ட இந்த 'நோஞ்சான்' தான் துப்பாக்கி triggerஐ  இழுத்தார் என்று ஒரு கதையை 20 வருடங்களின் பின் கேள்விப்பட்டேன்.

எனது சகோதரர் ஒரு கிரிக்கெட் அணியில் விளையாடிக் கொண்டிருந்தார். என்னையும் அவர் இழுத்துக் கொண்டு விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் செல்வார். அன்று விளையாடிய சில இளைஞர்கள் இந்தக் குழுவோடு தொடர்பில் இருந்தார்கள். அன்று ஒருவர் ஒரு பழைய காரை வைத்திருப்பதென்பதே பெரிய விடயம். அண்ணா தனது பழைய காரில் விளையாடும் இரண்டு மூன்றுபேரை ஏற்றிக்கொண்டு வருவார். ஒருமுறை எங்களோடு காரில் வந்தவர் வெள்ளை டவலுக்குள் எதையோ சுற்றி வைத்துக்கொண்டு வந்தார். அந்த டவல் அப்படியே காருக்குள் இருக்க நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். இடைநடுவில் மற்றக் குழு இவர்களைத் தேடி கிரவுண்டை நோக்கி வருகின்றது என்று மைதானம் அமளிப்பட்டது.

அப்போதுதான் எங்களோடு காரில் வந்தவர், 'அவங்கள் வரட்டும், எதற்கும் ரெடியென்றுதான் சாமானோடு வந்திறங்கினேன்' என்று சொல்லத்தான் அவர் டவலுக்குள் சுற்றிக்கொண்டு வந்து துப்பாக்கி என்பது விளங்கியது. என் சகோதரருக்கும், எனக்கும் பயம் வந்துவிட்டது. இவங்கள் சுடுபடப்போகின்றாங்கள் என்பதைவிட, பொலிஸ் வந்துவிட்டால் எங்களின் ஆட்டம் அவ்வளவுதான்.

நல்லவேளையாக எந்த அசம்பாவிதமும் நடக்காமல் அன்றைய நாள் முடிந்தது. அதற்குப் பிறகு நான் கிரிக்கெட்டுக்காகப் போகும்போது ஏறும் நபர்கள் கையில் என்ன வைத்திருக்கின்றோம் என்பதில் அவதானமாக இருந்தோம். இப்படி எதற்கும் தயாராக 'வீரம் விளைந்தவர்கள்' ஒருபுறம் என்றால், இன்னொரு இடத்தில் படங்காட்டுபவர்களுக்கும் குறையில்லாது இருக்கும். இந்த வன்முறை குழுக்களோடு சம்பந்தப்பட்ட ஒருவர் எப்போதும் 'பீலா' காட்டிக் கொண்டிருப்பவர்கள். எங்கள் பக்கமாய் மற்றக்குழு வந்து வாணவேடிக்கை காட்டிவிட்டுப் போக, எங்கள் பக்கக் குழு 'அசெம்பிள்' ஆகி அவர்களைத் துரத்திக்கொண்டு போவதாய் 'ரீல்'ஸ் காட்டும். அதில் முன்னணியில் இருப்பவர் இவர். அதாவது துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு படங்காட்ட வருவார். இவர் இருந்த குழுக்காரரே, 'இவன் சண்டை நடக்கும்போது எங்கையோ ஒளிந்துகிடப்பான், ஆனால் எல்லாம் முடிந்தபின் துவக்கோடு படங்காட்ட வந்துவிடுவான்' என்று நக்கலடிக்குமளவுக்கு இவர் அவ்வளவு பிரபல்யம்.

ஆனால் என்ன பரிதாபம் என்றால், இப்படி படங்காட்டி ஒரு நாள் இருந்தபோது, பொலிஸ் இவரைத் துப்பாக்கியோடு சிறைக்குள் போட்டிருந்தது. இவர் இப்போது என்ன செய்கின்றார் என்று கேட்கக்கூடாது. அவர் இன்று மில்லியன்கணக்கில் பணம்புரளும் ஒரு முக்கிய வணிகர் . ஆக இன்று படங்காட்டிக் கொண்டிருக்கும் யூ-டியூப்பர்ஸ்க்கு இவரொரு முன்னோடி/influencer என்றும் சொல்லலாம்.

*

ந்தக் காலப்பகுதியிலே நான் எழுத வந்தவன் என்பதால், என் கவிதைகளில் பெரும்பாலும் இந்த வன்முறை பேசுபொருளாக இருந்திருக்கின்றது. கவிதைகள் மட்டுமில்லை, என் முதல் சிறுகதை கூட இந்த வன்முறையைப் பேசுவதாகவே எழுதப்பட்டது. 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதைத் தொகுப்பை வாசிப்பவர்கள் இதன் சுவடுகளை பல கவிதைகளில் எளிதாகப் பார்க்க முடியும்.

அன்று எங்களோடு ஒருவன் உயர்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். நாங்கள் ஆண்களும், பெண்களுமென ஏழெட்டுப் பேர்களைக் கொண்ட குழுவாக அன்றிருந்தோம். வன்முறைக்கும் எமக்கும் எந்தத் தொடர்புகளுமில்லை.  அப்போதுதான் கனடாவுக்குள் காலடி வைத்தவர்கள் என்ற ஒற்றைக் காரணமே எங்கள் அனைவரையும் ஒன்றிணைத்திருந்தது.

இவனுக்கு வயது மூத்த சகோதரர்களும் எங்களோடு படித்துக் கொண்டிருந்தனர். இவர் மிக அப்பாவியானவன். உயரத்திலும், வயதிலும் (2 வயது) எல்லோரையும் விட குறைவானவாக இருந்தான். எனவே எப்போதும் இளைய சகோதரன் போன்ற வாஞ்சை அவனோடு எமக்கு இருக்கும்.

நான் பல்கலைக்கழகத்துக்குச் சென்றதோடு அவனடோன தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மேலும் காதல் என்ற பெருங்கடல் நட்பை ஒரு சிறுகுளமாக ஆக்கியதால், நண்பர்களோடு நேரம் செலவளிக்காமல் பின்னர் போய்விட்டது. நெடும் வருடங்களின் இந்தச் சகோதரர்களிடையே சண்டை எனக் கேள்விப்பட்டேன்.

ஒன்றாக சினிமாத் தியேட்டர்கள் நடத்தி வந்தவர்களிடம் இருந்து இவன் தனித்து படங்களை வாடகைத் தியேட்டர்களை திரையிடச் செய்திருக்கின்றான். அதனால் கோபமடைந்த மற்றச் சகோதர்கள் இவன் திரையிட்ட அரங்குகளின் திரைகளைக் கிழித்தும், பார்வையாளர்களுக்கு பெப்பர் ஸ்பிரே செய்து குழப்பி படங்களைத் திரையிடாது தடுத்தார்கள் எனவும் கேள்விப்பட்டேன். சகோதர்களிடையே இப்படி ஒரு கடும் வன்மம் உருவாகுமா என்று திகைப்பாக இருந்தது.

அப்படி ஒரு monopoly யாக திரையிடப்படுவதை கையகப்படுத்திய எங்கள் நண்பனின் சகோதர்கள் பிறகு வெவ்வேறு வியாபாரங்களிலும் கால்களை ஆழப்பதிக்க, மீண்டும் குழுக்களிடையே வன்முறை என்ற செய்திகள் வரத் தொடங்கின. இந்நகரத்தில் இப்போது நடக்கும் சம்பவங்களோடு இவர்களைத் தொடர்புபடுத்தி செய்திகள் நிஜமும்/கற்பனையுமாக சிறகடித்துப் பறக்கத் தொடங்குகின்றன. ஏன் இந்த நகரில் குறிப்பிட்ட திரையரங்குகளை விட வேறெங்கும் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படாது இருக்கின்றதென்பதற்கான, ஊற்றுக்கள் கூட இங்கேயிருந்துதான் ஆரம்பிக்கின்றன.

இப்படியாக பாடசாலை காலத்திலிருந்தே வன்முறையோடு Thugs Life ஐ பார்த்து வளர்ந்த என்னைப் பார்த்துத்தான், இன்னமும் பெண்களின் காலடியில்தான் தனது உலகம் சுழல்வதாக வாழ்கின்றான் என்று இந்தச் சமூகம் சபிக்கின்றது என்பது எவ்வளவு அவலமானது!

*****

(Jun 02, 2025)

கார்காலக் குறிப்புகள் - 112

Sunday, September 21, 2025

 

சில வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில் நான் அலைந்து கொண்டிருந்தேன். அப்போது சுவிஸில் சூரிச் பல்கலைக்கழகத்தில் புகைப்படக் கண்காட்சியொன்று நடைபெறுவதை அறிந்து அங்கே போயிருந்தேன். அது ஈழத்தில் இறுதியுத்தம் நடைபெற்றபோது அமரதாஸ் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி. வளாகத்தில் திறந்தவெளி அரங்கின் மையத்தில் அவை  காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

என்னால் ஒருபோதும் போர்க்கால அழிவுகளின் புகைப்படங்களை நிதானமாகப் பார்க்க முடிவதில்லை. இந்தப் புகைப்படங்கள் இயன்றளவு கோரத்தை மறைக்கும் கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களாக இருந்தபோதும் அவற்றில் இருந்து விலகிப் போகவே விரும்பினேன். ஆகவே உயர்ந்துபோய்க்கொண்டிருந்த படிக்கட்டுக்களில் அமர்ந்திருந்து புகைப்படங்களை அல்ல, அவற்றைப் பார்க்கும் மனிதர்களின் உணர்ச்சிநிலைகளை அவதானித்துக் கொண்டிருந்தேன்.

அமரதாஸ் எனக்கு அறிமுகமான நண்பர் என்கின்றபோதும், அவருக்கு என் வரவை அறிவிக்காதே சென்றிருந்தேன். நான் சென்றிருந்த நேரம் அமரதாஸ் இருக்கவில்லை. இப்படி புகைப்படக் கண்காட்சிக்குச் சென்றேன் என இன்னொரு நண்பரான புகைப்படக் கலைஞரான ஜெயந்தனிடம் சொன்னபோது அவர் அங்கே நடைபெற்ற ஒரு சம்பவத்தைச் சொன்னார்.

இதற்கு முன் நடந்த இவ்வாறான புகைப்படக் கண்காட்சியில் இது நடந்திருக்கின்றது. புகைப்படங்களை காட்சிப்படுத்திய ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரு மூதாட்டி வந்து கொண்டு போய்க்கொண்டிருந்தார். அவர் ஏன் தினம் வருகின்றார் என்று பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு வியப்பாக இருந்திருக்கின்றது. விசாரித்தபோது, யுத்தத்தில் காணாமற்போய் விட்ட தனது மகன் இந்தப் புகைப்படங்களில் இருக்கின்றாரா எனத் தேடியிருக்கின்றார்.

இத்தனை காலத்துக்குப் பிறகு மகன் உயிரோடு இருக்கமாட்டார் என்று அவரின் உள்மனது அறிந்திருக்கக் கூடும். ஆனால் அவர் தனது மகனைத் தேடிக் கொண்டிருக்கின்றார். சிலவேளைகளில் போரின் நிமித்தம் அனைத்தையும் தொலைத்து தனது மகனின் புகைப்படம் எதுவும் கூட அவரின் கையில் இறுதியில் எஞ்சாமலும் போயிருக்கலாம். ஆகவே நிஜத்தை மீண்டும் நினைவில் கொண்டுவர வந்திருக்கலாம். இன்னொருவகையில் இவ்வாறு புகைப்படங்களைப் பார்த்து ஒருவகையான ஆற்றுப்படுத்தலை அவர் செய்வதாகக் கூட இருக்கலாம். அதாவது தனியொருத்தியின் துயரமாக அல்லாது, ஒரு கூட்டுச் சமூகத்தின் இழப்பாக தன் துயரத்தைக் கரைத்துவிட அவர் முயன்றிருக்கலாம்.

அமரதாஸின் இந்த புகைப்படங்கள் பின்னர்  தொகுக்கப்பட்டு ஒரு புகைப்பட நூலாக 'Through The Fire Zones' என்ற பெயரில் வந்திருக்கின்றது. அந்தப் புகைப்படங்களைப் பற்றிய ஒரு சர்ச்சையும் அந்தக் காலங்களில் எழும்பியிருக்கின்றது. அதை இப்போதைக்கு விடுவோம்.



நேற்று இப்படியான, இறுதி யுத்தங்களின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொகுக்கப்பட்ட 'போரின் சாட்சியம்' என்ற நூல் வெளியீடு இங்கே நடைபெற்றது. இந்த நூலை சுரேன் கார்த்திகேசு என்று யுத்தகாலங்களில் ஊடகவியலாளராக இருந்தவர் வெளியிட்டிருக்கின்றார். மேலும் புகைப்படங்களுக்கு அவற்றோடு சம்பந்தப்பட்ட அனுபவங்களையும் எழுத்தாகவும் பதிந்திருக்கின்றார்.

இந்த நிகழ்வில் உருப்படியாக பேசிய ஒருவரென்றால் பா.அ.ஜயகரன் என்று சொல்வேன். நூலின் தலைப்பு 'போரின் சாட்சியம்' என்றால், ஒருவர் சாட்சியம் சொல்ல வந்தால், அதற்குக் குறுக்கு விசாரணைகள் இருக்கவும் செய்யும், அதையும் கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதன் மூலம், நாம் நமக்கிழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரும்போது, நமது கரங்களில் படிந்திருக்கும் இரத்தக்கறைகளை நோக்கியும் பார்வையைச் செலுத்தவேண்டும் என்பது மறைமுகமான உணர்த்தலாக இருந்தது. மேலும் அறம் என்பது, தன்னைப் போன்றவர்கள் ஏன் நம்மவர்கள் அனுராதபுரத்தில் சிங்கள மக்களைக் கொலை செய்கின்றார்கள், சுழிபுரத்தில் இளைஞர்களைக் கொன்று புதைக்கின்றனர் என்று அன்று எழுப்பிய கேள்விகளைப் போன்று இருக்கவேண்டும் என்று ஒருசார்பாகவே பேச்சுக்கள் போய்க்கொண்டிருந்த அந்தச் சபையில் ஜயகரனின் கேள்விகள் முக்கியமானவை. அதேவேளை இந்த நூலுக்கு இருக்கும் பெறுமதியின் கனத்தையும் குறைக்காது அவரது பேச்சு காத்திரமாக அமைந்திருந்தது.

எனக்கு இந்த நூலாசிரியரைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. முகநூலில் நண்பரும் இல்லை. ஆனால்  ஒருகாலத்தில் ஏதோ ஒரு சர்ச்சையின் நிமித்தம் இவர் பெயரும் அமரதாஸைப்போல அடிபட்டதாகக் கொஞ்சம்  நினைவிருக்கிறது. நிகழ்வில், சுரேன் ஈழத்தில் இறுதி யுத்தம் நடைபெற்றபின் கனடாவுக்கு வந்த கப்பலில் இருந்த ஒருவரெனச் சொன்னார்கள். இற்றைக்கு 15 வருடங்களான பின்னும், இன்னும் அவரின் அகதி நிலைக்கோரிக்கை  ஏற்காது ஓர் ஏதிலியாக இருக்கின்ற அவலமும் இருக்கின்றது. அன்றைய காலங்களில் இரண்டு கப்பல்களில் வந்தவர்களில் 60% இற்கு மேலானவர்கள் அகதி நிலை கனடாவில் அங்கீகரிக்காத துயரத்தோடு இங்கே வாழ்ந்தபடி இருக்கின்றார்கள் என்பது இன்னும் துயரமானது. இந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு சாரோன் பாலா 'Boat People' என்கின்ற கவனிக்கத்ததொரு புதினத்தை எழுதியிருக்கின்றார்.

இப்போது சுரேனின் முகநூலை, இப்பதிவை எழுதுவதற்கு முன்னர் சும்மா எட்டிப் பார்த்தேன். கனடாவின் வலதுசாரி எதிர்க்கட்சித்தலைவரின் ( Sun Sea கப்பல் வந்த நினைவின் நிகழ்வொன்றுக்கான) செய்தியைப் பகிர்ந்திருக்கின்றார். ஆனால் இதே வலதுசாரி மிதவாத அரசுதான்  அன்று கப்பலில் சுரேன் போன்றவர்கள்  வந்தபோது ஆட்சியதிகாரத்தில் இருந்தது. அப்படி இவர்கள் ஏதிலிகளாகக் கனடாவுக்குள் வந்தபோது பொதுவெளியில் போர்க்குற்றவாளிகள் என்று குற்றஞ்சாட்டி அவர்களைப் புறக்கணித்துமிருந்தது.

அதுமட்டுமில்லாது ஒருவர் கனடாவின் நில/நீர் எல்லைகளுக்குள் வந்து அகதியென தன்னை அறிவித்தால் அவர்களை எவ்விதக் கேள்விகளுமில்லாது அகதியென ஏற்றுக்கொள்ளவேண்டுமிருந்த கனடாச் சட்டங்களையெல்லாம், இந்தக் கப்பலில் நிமித்தம் வந்தர்களை முன்னிட்டு Bill C-31 என்ற அகதிகளுக்கெதிரான  புதிய சட்டத்தை  அன்றைய வலதுசாரி அரசு இயற்றியுமிருந்தது. இப்படி பல அநீதிகளைச் செய்த இந்த மிதவாத அரசிடமிருந்துதான் ஒரு வாழ்த்துச் செய்தியைப் பெற்றிருக்கின்றார் சுரேன்.  அப்படியாயின் இவரைப் போன்றவர்கள் -அதுவும் ஊடகவியலாளராக இருப்பவர்கள்- பெற்றிருக்கும்  உண்மையான அரசியல் அறிவு என்பதுதான் என்ன?

மற்றும்படி இந்த நூல் ஈழத்தில் இறுதிக்காலத்தில் நடந்தவற்றைப் பதிவாக்கின்ற முக்கியமான ஆவணம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சுவிஸில் கறுப்பு வெள்ளை புகைப்படங்களைப் பார்ப்பதையே தவிர்த்த நான், இதில் வர்ணங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்ற நூலை நிதானமாக இருந்து புரட்டப்போவதில்லை. இந்த நூலை வாங்கி வந்திருந்தாலும் அது குறித்த பதற்றத்தினால், வீட்டுக்கு வந்திருந்த அண்ணாவிடமே நீங்கள் கொண்டுபோய் வாசியுங்களென உடனேயே கொடுத்துவிட்டேன். இவ்வளவு பாரங்களை என்னால் சுமக்க முடியாதென்கின்றபோது நேரடியாக இந்தச் சம்பவங்களைப் பார்த்த சுரேன் போன்றவர்களின் உளவடுக்கள் ஆற ஒரு வாழ்க்கைக் காலம் போதுமா தெரியவில்லை.

இந்த நிகழ்வுக்குப் போகமுன்னர் முள்ளிவாய்க்காலின் கடைசிநாள் வரை இருந்து தப்பி வந்த ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு அப்போது பதின்மம். அவரிடம் போர் குறித்த நினைவுகளை நான் ஒருபோதும் கேட்பதில்லை. சிலவேளைகளில் நான் ஈழப்போர் குறித்த நூல்களை வாசித்துவிட்டு அவரிடம் பகிரும்போது அவர் தன் நினைவுகளை இயல்பாகப் பகிரத் தொடங்குவார். அவர் நந்திக்கடலைக் கடந்துவந்தபோது அவரது கால்களில் தட்டுப்பட்ட உடல்கள் இன்னமும் கனவில் வந்தபடி இருக்கின்றதென்றார். தினம் 40-50 சாவுகளை நேரடியாகப் பார்த்தவள் என்றவகையில், இப்போது யாரும் விபத்தில் நான்கைந்து பேர் இறந்திருக்கின்றார்கள் என்று சொன்னால்கூட அது தனக்கு உறைப்பதில்லை என்றும், அதையிட்டுக் கவலையுறாத தன்னைப் பார்த்து மற்றவர்கள் அதிர்ச்சியடைவதையும் சொல்லிக் கொண்டிருந்தார். பல வருட கால நட்பென்றாலும், இன்னமும் என்னிடம் கூடப் பகிரமுடியாப் பல கதைகள் அவரிடம் இருக்கின்றன என்பதையும் நான் அறிவேன்.

நாம் எல்லா நேரமும் மெளனமாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதற்காக எந்நேரமும் அரசியல் சரி/பிழைகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கவும்  தேவை இல்லை. எந்தத் தரப்பாயினும் உணர்ச்சியரசியலைவிட்டு அருகிலிருப்பவர்களைக் கொஞ்சம் பரிவுடன் பார்க்கவும், அவர்கள் சொல்வதை பொறுமையாகக் கேட்கவும் முதலில் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

*********

(Aug 30, 2025)

கார்காலக் குறிப்புகள் - 111

Saturday, September 13, 2025

 

ருமுறை தமிழக எழுத்தாளர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, தனது படைப்பொன்றின் பெயரைக் குறிப்பிட்டு, இதையே என் வாசகர்கள் தன் படைப்புக்களில் Magnum Opus என்று குறிப்பிடுகின்றனர் எனச் சொன்னார். எனக்கு அவரது படைப்புக்களில் சிறுகதைகள் பிடித்தவளவுக்கு நாவல்கள் கவர்ந்ததில்லை. ஒரு குறிப்பிட்ட சூழலுக்குள்ளேயே கிட்டத்தட்ட ஒரேமாதிரியான பாத்திரங்களைப் படைக்கின்றார் என்று ஒரு வாசகராக எனக்கு விமர்சனம் இருந்தாலும், சில எழுத்தாளர்கள் தாம் எழுதும் அனைத்துப் படைப்புக்களும் சிறந்ததே என்கின்ற அதீதமான obsessed உடன் இருக்கும்போது, இதுதான் தன் சிறந்த படைப்பு என்று அவர் தரம் பிரித்துச் சொன்ன விதம் பிடித்திருந்தது.

ஒரு எழுத்தாளர் நிறைய நூல்களை பிரசுரித்தாலும், அவர்களுக்கு மிகப்பிடித்த படைப்பு என்று ஒரு சிலவேனும் அவர்களின் அந்தரங்கத்திலாவது இருக்கும். ஆனால் அதைவிட வாசகர்கள் தமக்குப் பிடித்த எழுத்தாளரின் படைப்புக்களில் சிறந்ததென  Magnum Opus என ஒன்றை வைத்திருப்பார்கள். ப.சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி', எஸ்.பொவின் 'சடங்கு', சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சில குறிப்புகள்' என்று எனக்குச் சொல்லிக் கொள்ள நீண்டதொரு -Magnum Opus- பட்டியல் இருக்கின்றது.

அவ்வாறே ஒரு படைப்பாளி/கள் பிடித்துவிட்டால் ஒவ்வொரு வகைமையிலுமே பிடித்த படைப்புக்கள் ஒரு வாசகருக்கு இருக்கும். உதாரணத்துக்கு நான் ரமேஷ்-பிரேம் இரட்டையர்களாக இருந்து எழுதிக் கொண்டிருந்த காலத்திலே அவர்களின் தீவிர வாசகன். நாவலுக்கு அவர்களின் 'சொல் என்றொரு சொல்', கவிதைக்கு 'சக்கரவாளக்கோட்டம்', சிறுகதைகளுக்கு 'மகாமுனி' என்றொரு பட்டியல் என்னளவில் வைத்திருக்கின்றேன்.


நமது சூழலில் Magnum Opus என்ற சொல்லைவிட, classic என்ற வார்த்தைதான் அதிகம் சித்திரவதை அடைந்திருக்க வேண்டும். ஒரு படைப்பு, செவ்வியல் என்ற வடிவத்தை, அதற்கான காலத்தையும், அந்த வகைமையில் அடையும் முக்கியத்தையும் கொண்டு செவ்வியலாவது இயல்பானதாகும். சமகாலத்தில் ஒரு படைப்பு வெளிவரும்போதோ 'செவ்வியல்' என்ற அடைமொழி கொடுத்து வெளியிடும் அபத்தம் நம் தமிழ்ச்சூழலில் மட்டுமே நடைபெறக்கூடியதென நினைக்கின்றேன். கடந்தகாலத்தை எழுதுவதால் மட்டுமே 'செவ்வியல்' தன்மை அடைந்துவிடுமென்றால், சாண்டியல்யன், கல்கி போன்றோர் தமது கல்லறைகளிலிருந்து எழுந்து வந்து 'எம் படைப்புக்கள் செவ்வியல் இல்லையா' என்று நியாயம் கேட்கமாட்டார்களா என்ன?

கடந்த பத்தாண்டுகளில் வந்த நாவல்களை அட்டவணைப்படுத்திய குணா கந்தசாமி, அவற்றை முன்வைத்து சமகால நாவல்களைப் பற்றிய குறிப்புகளை பெங்களூருவில் நடந்த இலக்கிய நிகழ்வில் வாசித்திருக்கின்றார். அதில் கடந்த 10/20 வருடங்களில் ஏன் தமிழில் Magnum Opus  எனச் சொல்லக்கூடிய நாவலொன்றும் வரவில்லையென்பதற்கு சில காரணங்களை முன்வைக்கின்றார். அவர் சொல்வதில் இந்தப் பகுதி முக்கியமானதாக எனக்குப்பட்டது;

"தமிழில் விமர்சனத்துறையையும் இணைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது இன்றைய தமிழ் இலக்கிய விமர்சனத்தில் கறார்த்தன்மை குறைவாகவும் மதிப்பீடுகள் இளக்கமானவையாகவும் மாறிவிட்டன. பெரும்பாலும் நாம் படைப்புகளை நிராகரிப்பதில்லை, இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம் என்று சொல்லப்பழகிவிட்டோம்.சிற்றிதழ் இயக்கத்துக்கு நேர்ந்துவிட்ட தளர்வின் விளைவு இது. சென்ற தலைமுறையின் வலுவான நாவல்கள் பலவற்றுக்கு தமிழ்ச் சிற்றிதழ் மரபும் சமரசமற்ற விமர்சன இயக்கமும் பங்களித்தன என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மை" என்கிறார்.

அதாவது விமர்சனத்துறையும், சிற்றிதழ் மரபும் முன்வைத்த கறார்த்தன்மை கிட்டத்தட்ட இப்போது தமிழில் மறைந்துவிட்டது என்று சொல்வதை நாம் கவனித்தாகவேண்டும்.  கடந்தகாலத்துக்கு மட்டுமில்லை கடந்தகால நினைவேக்கத்துக்கும் போவதில் எனக்கு அவ்வளவு பிரியமில்லைத்தான். அன்றைய சிற்றிதழ் இலக்கியத்தின் தீவிரத்தன்மையை, இன்றைய சமூக ஊடகப் பரம்பல்/உலகமயமாக்கலுக்கு எதிராக மீண்டும் கட்டியெழுப்புவது என்பதும் கடினமானது.

ஆனால் விமர்சனத்துறையைக் கறாராகத் தமிழில் மீண்டும் கொண்டுவரமுடியும். மனிதர்கள் பகுத்தறியும் தன்மை உடையவர்கள் என்பதால் இயல்பிலே நாமெல்லோரும் விமர்சகர்கள்தான். பல்வேறு துறைசார்ந்து இன்னும் Critical Studies பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட கல்விப்புலங்களில் இருக்கின்றது.

தமிழில் மேலே சொன்ன சமகால 'செவ்வியல்' போன்ற அபத்தங்கள் இருப்பதுபோல, ஒருபக்கம் புகழ்ச்சியை மட்டும் அல்லது மறுபக்கம் காழ்ப்புணர்வை மட்டுமே கொண்டதாக பல விமர்சனங்கள்/விமர்சகர்கள் இருக்கின்றனர். நமக்கு சிலரின் அரசியல் இன்ன்பிற விடயங்கள் பிடிக்காது இருக்கலாம். அதற்காக அவர்களின் படைப்புக்களை முற்றாக நிராகரிக்க முடியாது. அவ்வாறு செய்பவர்கள் கலையின் நிச்சலமான அடியாழத்திற்கு ஒருபோதும் சென்றடைய முடியாது.



ழப்போராட்டத்தை முன்வைத்து தமிழில் அல்லாது எழுதப்பட்ட புதினங்களைப் பற்றிய என் வாசிப்பை 'எழுநா' விரைவில் வெளியிட இருக்கின்றது.  அந்த நூலுக்கான திருத்தங்களைச் செய்ய 'எழுநா' ஒருவரை அணுகியிருந்தது. அவர் எனக்கும் நண்பரென்பதால், 'உனது நூலை ஓருநாளிலே இரண்டு முறை திருத்தங்களைச் செய்து கொடுத்தேன்; அவ்வளவு சுவாரசியமாக இருந்தது' என்றார். மற்றப் புத்தகங்களுக்கு நிறைய நாள் திருத்தங்கள் செய்ய எடுக்கும் நண்பர் இதை ஒரு நாளிலே செய்துகொண்டிருந்ததால் 'எழுநா' நண்பர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கின்றது. அதுவல்ல விடயம்.

அதில் அனுக் அருட்பிரகாசத்தின் படைப்புக்களை பற்றி எழுதியதை வாசித்த அவருக்கு அனுக்கைச் சந்திக்க வேண்டும் போலத் தோன்றியிருக்கின்றது. அனுக்கின் 'வடக்கிற்கான பயணம்' நாவலில் வரும் கதாபாத்திரம் கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்குப் போவது போன்று தனக்கு அனுக்கோடு உரையாடியபடி ஓர் ரெயின் பயணம் செய்யவேண்டும் போல இருக்கின்றது என்றார். ஆக இவ்வாறு வாசிக்கும் ஒருவரை நமக்குப் பிடிக்கும்  படைப்பாளியை நோக்கி ஈர்க்கக்கூடியதாக எழுதுகின்றோம் என அறியும்போது வருவது ஒருவகைப் பரவசமே.

நான் இந்த மகிழ்வை பெரும்பாலும் புனைவுகளிலே அடைகின்றவன் என்றாலும், அவ்வாறில்லாது அல்புனைவுகளில் அசோகமித்திரன், சாருநிவேதிதா (இப்போதில்லை, தொடக்ககால கோணல் பக்கங்கள்), உமா வரதராஜன் உள்ளிட்ட பலரின் பத்தி எழுத்துக்களில் உணர்ந்திருக்கின்றேன். அதிலும் முக்கியமாக முருகேச பாண்டியனின் 'இலக்கிய நண்பர்கள்' என்ற நூல் என் வாசிப்பின் தொடக்க காலத்தில் தந்த பரவசம் இப்போது நினைவில் நீங்காத இருக்கின்றது. அதுபோல சிலவருடங்களுக்கு முன் வாசித்த வ.அ.இராசரத்தினத்தின் 'இலக்கிய நினைவுகள்' என்கின்ற ஈழ எழுத்தாளுமைகளை இராசரத்தினம் சந்தித்த அனுபவங்களைப் பற்றிய நூலும் எனக்குப் பிடித்தமானது. இவை என்னைப் பொறுத்தவரை அவர்களின் magnum opus.

ஆக, ஒவ்வொரு படைப்பாளியும் இந்த classic, magnum opus போன்ற வெறும் அடைமொழிகளுக்குள் தமது படைப்புக்கள் நுழைவதைப் பற்றி அதிகம் யோசிக்காது, எழுதுவதை நேர்மையாகவும், விருப்பத்துடனும், மொழியின் வசீகரத்தில் மட்டுமில்லாது அதை வாசகரின் மனதில் விரித்துச் செல்லும் ஆழத்துக்குச் செல்வதற்குமாக தமது எழுத்தை குவிப்பது நல்லதாக இருக்கும். மேலும் இன்னொன்று ஒருவர் ஒரு படைப்பை எழுதி வெளியிட்டுவிட்டால் அதில் obsessed ஆகி, அதையே தொங்கிப்பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. ஏன் இது classic ஆகவில்லை,  ஏன் இதை  எவரும் என் படைப்புக்களில் magnum opus என்று  சொல்லவில்லை என பதற்றப்படக் கூடாது. அது இறுதியில் அவர்களுக்கு மட்டுமில்லை, அவர்களின் படைப்புக்களை வாசிக்கும் நமக்கும் சித்திரவதை தரகூடிய ஒரு துயரச் செயலாக மாறிவிடும் அபாயமிருக்கின்றது.

*****





கார்காலக் குறிப்புகள் - 110

Thursday, September 04, 2025

 

 
னது ஸென் ஆசிரியரான தாயிடம், யாரோ ஒருவர் 'நீங்கள் அமைதியையா அல்லது பெளத்தத்தையா, எதை முதலில் தேர்ந்தெடுப்பீர்கள்' எனக் கேட்கும்போது, தாய் எவ்வித சலனமுமின்றி அமைதியைத் தான் தெரிவு செய்வேன் என உறுதியாகக் கூறியிருக்கின்றார். கேள்வி கேட்டவரோ, தாய் சிறுவயதில் புத்த மடலாயத்தில் இருந்து வந்தவர் என்பதோடு, புத்தரை நெடுங்காலமாகத் தீவிரமாகப் பின்பற்றி, பெளத்தத்தோடு இரண்டறக் கலந்தவர் என்பதை அறிந்தவர்.  ஆகவே தாய் இப்படி பெளத்தத்தைத் தவிர்த்து அமைதியைத் தெரிவுசெய்வேன் என்று கூறியது அவருக்கு வியப்பாக இருந்தது.

இப்படி அமைதியைத்தான் தேர்ந்தெடுப்பேன் என்று சொன்னதன் பிறகு, தாய் அதற்கு ஒரு விளக்கம் கொடுக்கின்றார். மனதின் அமைதியை அடைவதுதான் பெளத்ததின் அடிநாதம்.  அமைதி இல்லாத பெளத்தம் என்பது பெளத்தமே அல்ல. அசலான பெளத்தம் என்பது மனதின் அமைதியை மட்டுமில்லாமல், புறவுலகிற்கான அகிம்சையையும் போதிப்பது. அவ்வாறான பெளத்தத்தில் பயிற்சியின் மூலம் அமைதியைக் கொண்டுவருவதே முக்கிய கூறாக இருக்கின்றது என்று தாய் பதிலளிப்பார்.

நான் சென்று கொண்டிருக்கும் மடலாயத்தில் தியானம் நடந்து கொண்டிருக்கும்போது வந்திருப்பவர்கள் அடிக்கடி எழுந்து செல்வார்கள். வெளியே யாரேனும் கதவைத் திறக்கும் பூட்டும் சத்தங்கள் கேட்கும். சிலவேளை காலை கறுவாத் தேநீரோ, மதியத்து சுவையான உணவோ சுவையின் நரம்புகளை அருட்டி மனதோடு விளையாடும். இவ்வாறு கவனக்கலைப்பான்கள் பல நிகழ்ந்து கொண்டிருக்கும். இதைவிட நம் மனம் பல நூற்றுக்கணக்கான எண்ணங்களில் சிக்கித் திணறி நம்மை மேலும் அலைக்கழிக்கும்.

இந்தளவுக்குப் பிறகும் தியானத்தின் மூலம் அமைதி வருகையில், இடைவெளியில் யாரோ ஒருவர் இன்னொருவரைப் பற்றி 'கோள்' சொல்லிக் கொண்டிருப்பார்; வேறொருவர் இன்றைக்கு தந்த மதியவுணவு அவ்வளவு உருசியில்லையென மற்றவருக்கு முறைப்பாடு செய்து கொண்டிருப்பார். இது போதாதென்று, ஒரு முழுநாள் தியானம் என்றால், நான்கைந்து புத்தபிக்குகள் வந்து தம்ம உரைகளையோ, பாளியில் எழுதப்பட்டவற்றுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் கொடுக்கும்போதோ சிலவேளைகளில் நமது மனதுக்கு உவப்பில்லாதவற்றைச் சொல்வார்கள். அப்போது எழும் எரிச்சலும், கோபமும் இருக்கின்றதே, அதை அடக்காமலோ, கடந்துபோகாமலோ, இது ஏன் இப்படி எழுகின்றது என்று மனதோடு 'அறுவைச் சிகிச்சை' செய்யவும் வேண்டியிருக்கும்.


ருமுறை ஒரு மாணவர், ஸென் ஆசிரியர் பாங்கியிடம், 'ஆசிரியரே என்னிடம் அடக்கமுடியாத கோபம் இருக்கின்றது, அதை  எப்படி நான் குணப்படுத்துவது?' என்று கேட்பார். அதற்கு பாங்கி, 'உன்னிடம் ஏதோ ஒன்று விசித்திரமாக இருக்கின்றது. சரி, அதைக் காட்டு' என்று கேட்பார். 'என்னால் இப்போது காட்டமுடியாது' என்று மாணவர் சொல்ல, பாங்கி 'எப்போது உன்னால் அதைக் காட்ட முடியும்' என்று வினாவுகிறார். 'அது (கோபம்)  எதிர்பார்க்காதபோது எழுகின்றபோது மட்டுமே காட்டமுடியும்' என்று மாணவர் சொல்வார்.  

அதற்கு பாங்கி, 'அப்படியெனில் அது உன்னுடைய உண்மையான  குணாதிசயம் அல்ல. அப்படி அசலான உன் குணமாக இருந்தால், நீ எப்போது வேண்டுமானாலும் எனக்குக் காட்டியிருக்க முடியும். நீ பிறக்கும்போது அதனோடு பிறந்தவன் அல்ல. உனது பெற்றோரும் இதை உனக்குத் தந்தவர்களும் அல்ல. ஆகவே இதைப் பற்றி யோசி' என்கின்றார் பாங்கி.

இதன் நீட்சியில் வருவது, புத்த குணாதிசயம் (Buddha-Nature). நாமெல்லோரும் இப்படியான புத்த குணாதிசயத்தோடு வருபவர்கள். அப்படியெனில் ஒரு முக்கியமான கேள்வி பலரிடமிருந்து வரும். நாம் இயல்பிலே புத்த குணாதிசயத்தோடு இருப்பவர்கள் என்றால் ஏன் நாம் கஷ்டப்பட்டு தியானம் அது இதுவென்று செய்யவேண்டும் என்று. நம்மிடம் இது இருக்கின்றது என்று அறியாமல் இருப்பவர்கள் நாம் என்று ஸென் சொல்கின்றது. அதை எளிதாக தூசு படிந்த கண்ணாடியிற்கு அவ்வப்போது ஸென் ஒப்பிடும். தூசி படிந்த கண்ணாடி நம்மைப் பிரதிபலிக்கும். நமது அசலைப் பார்க்க தூசி படிந்த கண்ணாடியைத் துடைக்க வேண்டியிருக்கின்றது. அவ்வாறு துடைத்தல்தான் தியானம். அப்போது நமது சிறிய மனது அமைதியடைகின்றது. சிறிய மனது அமைதியாக புத்த குணாதிசயம் என்கின்ற பெரிய மனது செயற்படத்தொடங்குகின்றது. நம் சிறிய மனதும், புத்த குணாதிசயமும் ஒன்றிணையும்போது நமக்கு விழிப்படைவதன் சுவை தெரியத் தொடங்குகின்றது. ஆனால் அதுவே 'பரிநிர்வாணமடைதல்' என்று நம்பவும் இந்தச் சிறிய மனது நம்மை முயற்சிக்கத் செய்யும்.

அதுவல்ல பரிநிர்வாணமடைதல். ஒரு பாலைவனத்தில் பாதை தொலைந்து போய் அலையும்போது சிலவேளைகளில் சிறு தண்ணீர் ஊற்றைக் காணும்போது மனது மகிழ்ச்சியில் திளைக்கும். ஆனால் நீங்கள் அந்தத் நீரூற்றில் தங்கிவிடமுடியாது. நீங்கள் அடைய வேண்டிய பாதை வேறெங்கோ இருக்கின்றது. எனவே தொடர்ந்து நடக்கவேண்டும். அவ்வாறே தியானத்தின்போது அவ்வப்போது நீரூற்றுக்களைப் போல இதமான விழிப்புகள் ஏற்பட்டாலும், நீங்கள் போகவேண்டிய பரிநிர்வாணம் என்கின்ற பாதை நெடியது. தொடர்ந்து தியானம் செய்துகொண்டிருங்கள் என்கின்றது ஸென்.

கோபம் எங்களுடைய புத்த குணாதிசயம் அல்ல என்றாலும் நாம் கோபம் என்கின்ற உணர்ச்சி நிலைக்கு எளிதில் ஆளாகக் கூடியவர்கள். பலர் 'பரிநிர்வாணமடைதல்' என்பதை நாங்களாகக் கற்பனை செய்துகொண்ட சொர்க்கமாக எமக்குள்ளே வைத்திருக்கின்றோம். உண்மையில் அது அப்படி அல்ல. பரிநிர்வாணமடைந்தவர்கள் கோபம் அடையமாட்டார்கள் என்றெல்லாம் நம்பத்தேவையில்லை. அவர்களுக்கும் கோபம் என்கின்ற உணர்ச்சி வரும். ஆனால் விழிப்படைந்தபின் வரும் கோபம் என்பதை ஒருவர் கையாள்வது என்பது மட்டுமே வேறுவிதமாக இருக்கும். அதாவது கோபம் என்பது ஓர் உணர்வே என்கின்ற தெளிவு வந்து, அந்த உணர்ச்சியிலிருந்து சட்டென்று தன்னைத் துண்டித்துக்கொள்ளும் மனநிலை அவருக்கு வாய்த்திருக்கும்.

ஆசிரியர் பாங்கி சொன்னதுபோல, கோபம் என்பது ஒருவரின் புத்த குணாதிசயம் அல்ல, அதை எளிதில் பிரித்துப் பார்க்க முடியும். அதனோடு ஒன்றிணைந்து அதற்கு மேலும் எண்ணெய் ஊற்றி எரிக்கவேண்டும் என்கின்ற உணர்வு வராதபோது, நாம் அந்த உணர்விலிருந்து எளிதில் விடுபட்டு, வெளியில் நின்று அந்த உணர்ச்சியைப் பார்க்கின்றவர்களாக ஆகிவிடுகின்றோம்.


னக்குத் தெரிந்த நண்பரொருவர் உறவுச்சிக்கலின் ஆழத்தில் இப்போது இருக்கின்றார். அவரைப் போன்ற நிலையில் நான் 10 வருடங்களுக்கு முன் இருந்தவன். எனவே அந்த துயரமும், கையாலாகத்தனமும், தவறிழைப்புக்களும், மன்றாடல்களும், குறைகூறல்களும் எனக்குப் புதியவை அல்ல. இன்று அந்நிலையிலிருந்து மீண்டு, வேறொருவராக நான் அந்தக் காலங்களைப் பார்க்கும்போது ஒரு புன்னகை வந்தாலும், அன்றைய காலங்களில் மிகக் கஷ்டப்பட்டிருக்கின்றேன்; ஒருபோதுமே கடக்கமுடியாத காலத்தில் சிக்கி மூச்சுத்திணறுவதாய் என் மனம் கற்பனை செய்திருக்கின்றது. ஆனால் கோபத்தைப் போலத்தான், அந்த உணர்வுகளும் என் அசலான உணர்ச்சிகள் அல்ல என்று பின்னர் புரிந்தது.

இல்லாவிட்டால் இப்போது நினைத்தாலும், அதே கோபம், வெறுமை, இழப்பெல்லாம் ஒருசேர வந்திருக்கவேண்டுமே; அப்படியில்லாது அந்த உறவின் இனிய நினைவுகள் மட்டுமே இன்று எஞ்சியிருக்கின்றன. எப்போதாவது அந்த கடிய காலம் அருட்டும்போது, சேற்றில் மலர்வதுதான் தாமரை, சேறில்லாமல் எப்படி தாமரையில்லையோ, அப்படியே துயரத்தின் படிப்பினைகள் இல்லாது காதலின் அருமை புரிவதில்லை என்று என் புதிய காதலை அரவணைத்துக் கொள்வேன்.

நண்பரே, உங்கள் மனதிலும் புதிய தாமரை மலரட்டும். நாம் உறவின் நிமித்தம் ஒருபோதும் மன்னிக்கமாட்டோம் என்று சபதமிட்டுச் சொல்கின்ற நம் காதலிகளின் மனங்களிலும் இதே அழகிய தாமரைகள் விரியட்டும். அவர்களின் வாழ்வும் செழிக்கட்டும்!

*****


(Aug, 2025)

கார்காலக் குறிப்புகள் - 109

Monday, September 01, 2025

 

ங்கிருக்கும் ஒரு புத்த மடாலயத்தில் சில வருடங்களுக்கு முன் ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தது. அந்த மடாலயத்துக்கு எனது மச்சான் ஒருவர்  தொடர்ச்சியாக சென்று கொண்டிருந்தவர். அவர் சிலாபத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் சிங்களப் பாடசாலையில் படித்தவர். அவருக்குத் தமிழ் எழுத/வாசிக்கத் தெரியாது.

அந்த மடாலயத்தில் இருந்த ஒரு புத்த பிக்குவுக்கு, மடாலயத்துக்கு வந்து போய்க் கொண்டிருந்த ஒரு பெண்ணோடு காதல் மலர்ந்திருந்தது. ஒருநாள் துறவங்கி உள்ளிட்ட எல்லாவற்றையும் களைந்துவிட்டு, அந்தப் பெண்ணோடு அருகிலிருந்த அமெரிக்காவுக்குப் போய்விட்டார் என்று சொன்னார்.

உண்மையில் பிரமச்சாரியத்தில் இருப்பதென்பது மிகக் கடினம். அதுவும் பிரச்சினையில்லா பிரமச்சாரியத்தில் இருப்பது என்பது இன்னும் சிக்கலானது. எனது ஆசிரியரான தாயினது பிளம் விலேஜ் இந்தப் பிரமாச்சரியத்தில் மிகவும் இறுக்கமான விதிகளைக் கொண்டது. இத்தனைக்கும் பிரான்சிலிருக்கும் மடாலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் நிரந்தரமாக வசித்தபடி இருக்கின்றனர். தாயினது வழிவந்தவர்கள் தொடர்ச்சியாக இந்த பிரம்மாச்சாரிய வாழ்வு குறித்தும்,  அவர்களுக்குள் எழும் sexual enerngy குறித்தும் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு இயன்றளவு பதில் சொல்லியபடி இருக்கின்றனர்.

இப்படி தாயுட்டபட பல புத்த பிரிவுகளில், நிர்வாணம் அடைவதற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக பிரம்மாச்சரியம் இருந்தாலும், அமெரிக்காவுக்கு ஸென் பெளத்தம் வந்தபோது அது வேறுவகையாக இருந்தது. அதனால்தான் அது எளிதில் அமெரிக்காவுக்குள் நுழையுவும், பரவவும் முடிந்தது.

பெளத்தத்திற்கும் அழகும் தனித்துவம் என்னவென்றால் அது அந்த நிலப்பரப்புக்குரிய பெளத்தமாக மாறிவிடுவதாகும். அதனுடைய அடிநாதமாகிய சாரம்சாம்சத்தைக் கைவிடாது, மிகுதி அனைத்தையும் அது மாறுவதை ஏற்றுக்கொள்கின்றது. அதனால்தான் பெளத்தம் இந்தியாவில் தோன்றினாலும், பின்னர் சீனாவுக்கோ, ஜப்பானுக்கோ, வியட்நாமுக்கோ, திபெத்துக்கோ, ஏன் இலங்கைக்குப் போனபோதோ அது அந்த மண்ணுக்குரிய பெளத்தமாக மாறியிருக்கின்றது. அவ்வாறு அது மாறியபடியால்தான் மூல பெளத்தம் இந்தியாவில் செல்வாக்கிழந்து போனபோதும், புத்தருக்குப் பிறகான 2600 ஆண்டுகளிலும் பல்வேறு நிலப்பரப்புக்களில் உயிர்ப்புடன் இருக்கின்றது. ஒருவகையில் பின்னாளில் நமது மார்க்சியர்களில் ஒருபகுதியினர், 'மண்ணுக்கேற்ற மார்க்சியம்' என்று பேசத் தொடங்கியதை, பெளத்தம் அது எப்போதோ 'மண்ணுக்கேற்ற பெளத்தம்' என்று  கைகொள்ளத் தொடங்கிவிட்டதெனச் சொல்லலாம்.

அமெரிக்காவிற்கு பெளத்தம்/ஸென் வந்தபோது அது ஏன் மாறுபட்டதாக இருந்ததென்றால், அமெரிக்காவுக்கு 50/60களில் வந்த ஸென் ஆசிரியர்கள் பெரும்பாலும் திருமணமானவர்களாக இருந்தார்கள். அமெரிக்காவில் 50களின் பிற்பகுதியில் வந்து, ஒரு பெரும் ஸென் மரபை ஏற்படுத்தியவராகக்  கருதப்படுகின்ற  Shunryū Suzuki இற்கு  (அவரின் மாணவர்களால் Suzuki Roshi என்று அழைக்கப்படுகின்றவர்) மனைவி, பிள்ளைகள் இருந்தனர். சூஸூகி ரோஸி அமெரிக்காவில் வாழ்ந்த காலம் 12 ஆண்டுகள் மட்டுமே, ஆனால் அதற்குள் சிறப்பான அடுத்த தலைமுறை மாணவர்களை உருவாக்கியிருந்தார். அவரின்  'Zen mind, beginner's mind' மிக முக்கியமான நூல்.  நான் அவரின் மற்ற நூலான 'Zen is right now' உள்ளிட்ட அவரின் நேரடிய மாணவர்களாகிய Jakusho Kwong, Sojun Mel Weitsman போன்றோரின் நூல்களையும் வாசித்திருக்கின்றேன்.

எல்லா ஆசிரியர்களுக்கும், மடாலயங்களுக்கும் நிகழ்வதைப் போல சூஸுகி ரோஸியின் மரணத்துக்குப் பின்னும் பல சர்ச்சைகள் நிகழ்ந்தன. நான் அதற்குள் இப்போது அதிகம் போகப் போவதில்லை. என்னை நேரடியாகத் தத்துவங்களை/கொள்கைகளை/வழிகாட்டுதல்களைக் கூறும் நூல்கள் அதிகம் ஈர்ப்பதில்லை. எனக்கு இவற்றை யாரேனும் ஒரு கதைபோல, முக்கியமாக தமது சொந்த அனுபவங்களினூடாகச் சொல்லும்போதே அதிகம் கவரும். உதாரணத்துக்கு சூஸூகியின் மாணவரான Sojun Mel Weitsman எழுதிய 'Seeing One Thing Through' எனக்குப் பிடித்தமைக்கு, ஸோஜூன் அதன் முதல் பகுதியில் அவர் 60களில் தியானத்துக்குள் நுழைந்ததைப் பற்றியும், தனது ஆசிரியரான சூஸூகியுடனான அனுபவங்களை விபரித்தமையும் மிக முக்கியமானது.

ஒரு ஸென் மடமும், தியானப் பயிற்சியும் புதிதாகத் தொடங்கும்போது அது அவ்வளவு அற்புதமாக இருக்கின்றது. சூஸூகி ரோஸியை ஒரு மரபான ஜப்பான் மடலாயத்தினரே அமெரிக்காவுக்கு அழைக்கின்றனர். ஆனால் ரோஸியின் வழிமுறையோ வேறுவிதமானது. ஆகவே மரபான மடலாயத்தின் வழிபாட்டு நேரங்களைத் தவிர்த்து, விடிகாலை 5 மணிக்கு தியானத்தைத் தொடங்குகின்றார். அதற்கு பலர் வரத்தொடங்க அதை மாலை நேரத்துக்கும் செய்யத் தொடங்குகின்றார். இந்தச் ஸென்னைத் தேடி விருப்புடன் வந்தவர்கள் அந்தக்காலத்தில் ஹிப்பிகளாக இருந்த பலர். அலங்கோலமான கோலத்துடனும், ஒழுங்காய்க் குளியல்களும் இல்லாமலும் வந்தவர்களை எப்படி ரோஸி discriminate செய்யாமல் அரவணைத்துக் கொண்டார் என்பதை அவரது மாணவர் அழகாக விபரிக்கின்றார்.

இதற்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னரே, இவர்களுக்கென சொந்த இடம் கிடைத்து அது இன்னும் வளர்ச்சியடைகின்றது. என்னை அதிகம் கவர்ந்த விடயம் என்னவென்றால், எவ்வித எதிர்பார்ப்போ, எந்த உறுதிமொழியோ இல்லாது எப்படி ஓர் ஆசிரியருடன் நம்பிக்கையுடன் ஒரு குறிப்பிட்ட மாணவர்கள் வந்து சேர்ந்தார்கள் என்பதுதான். தியானத்தின் மூலம் எதுவும் அடையவோ, மாயங்கள் நடைபெறவோ சாத்தியமில்லை என்கின்றபோது அப்படி ஒரு தலைமுறை தன் வாழ்க்கையை கொடுத்திருக்கின்றது என்பது இப்போது நமக்குத் திகைப்பாக இருக்கக்கூடும்.
 
ரோஸி எப்படி ஹிப்பிகள் உள்ளிட்ட எவரையும் வித்தியாசம் பார்க்காமல் அரவணைத்தாரோ, அப்படியே அவரிடையே இருந்த மாணவர்களிடையே இருந்த உடல்சார்ந்த உறவுகளையும் உள்ளபடியே ஏற்றுக்கொண்டவர். அங்கும் அவர் எவ்வித discriminate செய்யாது இருந்தவர். அதனாலேயே அந்தத் தலைமுறையில் தியானத்திற்கும், விழிப்படைவதற்கும் வந்த பலர் காதலர்களாகவும், இணையர்களாகவும் பின்னர் மாறியிருந்தனர்.

ஆனால் இப்படி சர்ச்சைகள் இல்லாது இருந்த ரோஸியின் மடாலயம் அவரின்  மரணத்தின் பின் அதை நடத்திய Richard Bakerயின் பெண் சகவாசத்தால் சிக்கலுக்குள்ளானது. ரோஸி அவரின் வாழ்க்கைக் காலத்தில் Dharma transmission செய்ய ஒரேயொரு நபர் ரிச்சர்ட் ஆவார். Dharma transmission செய்யப்பட்டாலே ஒருவர் ஆசிரியராகும் தகுதியை அடைவார். அது அவ்வளவு எளிதல்ல. ஒருவர் ஒரு புத்த மரபின் நீட்சியென (lineage) கொள்ள, அவரை அந்த மரபின் ஆசிரியர்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். குருவுடன் உடனுறைந்து பத்து/பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் இது சாத்தியமாகக் கூடியது.

*

வ்வாறு பெண்கள் விடயத்தில் பலவீனமாகப் போகும் புத்த துறவிகள் பற்றி யோசித்தபோது, இது இப்போதல்ல புத்தரின் காலத்திலிருந்தே நடக்கின்றதென்பது புரிந்தது. புத்தர் தனது சீடர்களாக இருந்த ஆனந்தா உள்ளிட்டவர்களை பிட்சை கேட்டு ஊர்களுக்கு அனுப்புவார். அவர்களுக்குக் கிடைக்கும் தானம் எதுவாயினும் அதை விருப்பு வெறுப்பின்றி ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை தனது சீடர்கள் பழகிக்கொள்ளவேண்டும் என்றும் புத்தர் விரும்பியிருந்தார். இவ்வாறு ஒருமுறை பிட்சைக்குப் போன ஆனந்தா, ஒரு தாசியின் வீட்டுக்குப் போகின்றார். அந்த தாசி ஆனந்தாவின் மனதை மாற்றி படுக்கையறைக்குள் அழைத்துக்கொண்டு போய்விடுகின்றார். இதையறிந்த புத்தர், தனது இன்னொரு மாணவரான மஞ்சுசிறியை அனுப்பிவைக்கின்றார். அவர் ஒருமாதிரியாக ஆனந்தாவை மீட்டு வருகின்றார்.

அப்படி மீட்டுக்கொண்டு வரப்பட்ட ஆனந்தா அவமானத்தில் குன்றி நின்றபோதே, புத்தர் அவரின் பிரபல்யம் வாய்ந்த 'சுரங்காம சூத்திரத்தை' (Surangama Sutra) உபதேசிக்கின்றார்.  இந்த 'சுரங்காம சூத்திரத்தை' முன்வைத்து, தன் அனுபவங்களையும் சேர்த்து ரோஸி, ஸோஜனின் வழிவந்த ரொபர்ட்  ரோஸன்பம் 'That Is Not Your Mind!' என்ற பெயரில் ஒரு சுவாரசியமான புத்தகத்தை எழுதியிருக்கின்றார். நமது சங்கப்பாடல்களை ஒருவர் வரிவரியாகப் பிரித்து சுவாரசியமாக விளங்கப்படுத்துவதைப் போன்று இந்த நீள் சூத்திரத்தை ரொபர்ட் அலசுகிறார்.

இத்தனைக்கும் ரொபர்ட் ஒரு Neuropsychologist ஆவார். இதில் கலாநிதிப் பட்டம் பெற்றபின் இந்தியாவிலிருக்கும் National Institute of Mental Health and Neuroscience தொடக்கத்தில் பணிபுரிந்தவர். அவருக்கு நல்ல வேலை, மனைவி, குழந்தைகள் என்று இனிதாக எல்லாம் அமைந்தபோதும், மகிழ்ச்சியின் வெற்றிடம் இருந்தது. இதன்பின்னரே அமெரிக்காவுக்குத் திரும்பி, ஸோயூனின் மடாலயத்தில் சேர்கிறார். இதற்கு முன்னர் யோகா பழகியிருந்தபோதும், நல்லதொரு நெடுந்தொலைவு ஓட்டக்காரராக இருந்தபோதும், 5 நாள் தொடர் தியானப்பயிற்சியின்போது அவர் பட்ட கஷ்டங்களை விபரிக்கும்போது, தியானத்தின் ஆரம்பநிலையில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கே, நாம் தனியர்கள் இல்லை என்று கொஞ்சம் நிம்மதி வரும்.

*

இவ்வாறு ஆசிரியர்களாவும், மாணவர்களாகவும் தமது வழியில் தீவிரமாக இருந்தபோதும், பெண்கள் விடயத்தில் பலவீனமாக இருந்ததை புத்தர் காலத்தில் இருந்து, அண்மையில் புத்த அங்கியைக் கழற்றிவிட்டு தனக்குப் பிடித்த பெண்ணோடு வாழத்துணிந்த துறவி வரை சொல்லிவிட்டு, இலக்கியப் பக்கம் போகாமல் இருக்கமுடியுமா என்ன?

அங்கேயும் நிறைய எழுத்துவகைகள் இருக்கின்றன. ஆனால் என் ஆசிரியரான எஸ்.பொவின் 'சுவடு' கதையை ('அவா' தொகுப்பு) வாசித்தவர்க்கு இந்தத் துறவிகளின் பெண் ஈர்ப்பு நன்கு தெரிந்திருக்கும். ஒரு புத்த மடாலயத்தில் இருந்த விலகி வந்த ஒருவனுக்கு திருமணம் நடக்க இருக்கின்றது. அவன் தனது முதல் திருமண அழைப்பிதழை யாருக்குக் கொடுக்கவேண்டும் என்று நினைக்கின்றபோது தனது குருவை நினைத்துக்கொள்கின்றான். அது அவன் தியானம் பழகிய குருவல்ல. ஒரு பெண். அவளை அவன் 'குருத்தினி' என்று அழைத்து நனவிடை தோய்கின்றான்.

அவன் புத்தமடாலயத்தில் இருக்கும்போது ஒரு பெண்ணோடு பழக்கம் வருகின்றது. அவள் பாலியல் தொழிலைச் செய்கின்ற பெண். இவன் எவ்வளவு உறுதியாக இருக்கின்றபோதும் அவள் இவனின் 'பிரம்மச்சாரிய' மனதை கலைத்துவிடுகின்றான். அவனோடு உறவு கொள்கின்றபோது அவள் சொல்கின்றாள், உன் குருவே என்னைத் தேடி வருகின்ற ஒரு 'வாடிக்கையாளர்'தான் என்று. அத்தோடு அவனது துறவுக் கனவு கலைந்து சாதாரண மனிதனாகிவிடுகின்றான். இப்போது அவனுக்குத் திருமணம் நடக்கப்போகின்றது. அந்தப் பெண்ணை நன்றியுடன் நினைத்துக் கொள்வதாகக் கதை நீண்டு முடியும்.

இப்போதெல்லாம் நான் போகும் புத்த மடாலயத்தில், பிரமச்சாரிய துறவிகள் பெண்களுடன் பேசுவதைப் பார்க்கும்போது எனது மனம் பதறுகிறது. எந்தத் துறவி எந்தப் பெண்ணில் மயங்கி துறவியங்கியைக் களையப்போகின்றார் என்று என் கள்ளமனது அந்தரிக்கின்றது. நான் தியானத்தின் மூலம் நிர்வாணமடைவது ஒருபுறமிருக்கட்டும், இந்தத் பெண்களிடமிருந்து துறவிகளைக் காப்பாற்றி கரைசேர்க்கும் 'கடமை'யை நான் விழிப்பாகச் செய்ய வேண்டியிருக்கின்றது. இதுதான் எனக்கு புத்தர் வழங்கவிருக்கும் 'தம்மமாக'வும் இருக்கக் கூடும்.  

பெயரில் மட்டுந்தான் எனக்கு ஒரு பழந்துறவின் பெயர், நினைப்பெல்லாம் எப்போதும் பெண்கள்தான்..!

****


(Aug 2025)