கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஆட்டுக்குட்டிகளும் உதிர்ந்த சில இலைகளும்

Friday, June 29, 2007

நன்றி: 'காலம்' ஜூன் 2007 (இதழ் 25 )

ப்போதுதான் கோடை முடிந்து இலையுதிர்காலம் ஆரம்பித்திருந்தது. ஆக வெக்கையோ, குளிரோ இல்லா மிதமான காலநிலை அந்தப் பருவத்திற்கு ஒருவித அழகைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இவன் வகுப்பறைக்குள் இருந்து, மழை பொழியத்தொடங்கிய பின்னேரப்பொழுதை இரசிக்கத் தொடங்கியிருந்தான். மெல்லிய சாம்பல்நிற வானப்பின்னணியில் இலைகள் உதிர்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கையில் மனது களிமண்ணைப் போல நெகிழத்தொடங்கியிருந்தது. இவனுக்கு இன்னும் ஒரு மாதம் கடந்தால் பதினைந்து வயது ஆரம்பிக்க இருந்தது. அன்று பாடசாலை முடிந்து பஸ்ஸைப் பிடிக்க சற்றுத் தாமதமாகியதால், வழமையாக பஸ் நிறுத்தத்தில் நிற்கும் நண்பர்களும் போய்விட்டிருந்தனர். பஸ் வர இனி எத்தனை நிமிடங்களாகும் என்று அட்டவணையைப் பார்த்துச் சலித்து தெருவை வெறிக்கத்தொடங்குகையில்தான் அவளும் பஸ்ஸிற்காய் வருவதைக் கண்டான். அவள் இவனை விட இரண்டு வகுப்பு மேலே படித்துக்கொண்டிருந்தாள். இவனைக் கண்டதும், ‘Boi, do you have (an) extra ticket?’ என்று வினாவ, ‘நான் ரிக்கெட் தாறன்; ஆனால் கொஞ்சநேரம் நீ என்னை அணைத்துக் கொள்ளவேண்டும்’ என்றான் இவன். இந்த வயதுக்குரிய குறும்பு இப்படித்தான் கேட்கும் என்று நினைத்தாளோ என்னவோ இவனை அணைத்துக்கொள்ளத் தொடங்கினாள். அணைத்தபடியிருக்கையில் பஸ் தொலைவில் வருவதைக் கண்டதும், ‘என்னிடம் மீதமிருக்கும் மூன்று ரிக்கெட்டுக்களையும் தாறன். ஆனால் நீ எனக்கு ஒரு முத்தம் தரவேண்டும்’ என்று அவளது காதுக்குள் கிசுகிசுத்தான். பஸ் கிட்ட நெருங்கும்போது அவனுக்கொரு முத்தமொன்றைக் கொடுத்துவிட்டு ஒரேயொரு ரிக்கெட்டை மட்டும் வாங்கிக்கொண்டு பஸ்சினுள் ஏறினாள். அவள் இறங்கும் இடம் வந்தபோது, ‘உனது ரெலிபோன் நம்பரைத் தரமாட்டியா?’ என்று இவன் கேட்க, ‘Baby boi, you’re close to my little brother’s age. don’t ever think of dating me. If you keep botherin’ me, I kick your butt’ என்று சிரித்தபடி அவனை விலத்திப் போயிருந்தாள். என்றென்றைக்குமாய் நினைவுகொள்ள, இவன் பெற்ற முதலாவது முத்தமாய் அது இருந்தது.

பதினாறு வயதாகும்போது குடிக்க ஆரம்பித்திருந்தான். இவனது நண்பர்கள் வட்டத்தில், குடிக்க விரும்பாதவர்களை ஒதுக்கி வைப்பதைப் பார்த்து இவனும் குடிக்க ஆரம்பித்தான். அத்தோடு இவனுக்கும் குடித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆசையும் ஏற்கனவே இருந்தது என்பதுவும் உண்மை. பதினெட்டு வயதுக்குப் பிறகுதான் குடிக்க முடியும் என்று அரசாங்கம் கூறினாலும், இவனுக்கும் இவனது நண்பர்களுக்கும் பழக்கமான அண்ணாமார்களின் மூலம் குடிவகைகளின் விநியோகம் தடங்கலின்றி நடந்தது. அதற்கு இவன்கள் அந்த அண்ணாமாருக்குச் செய்யவேண்டியது, அப்படியும் இப்படியுமாய் அலைபாயத்துடிக்கும் இவன்கள் வயதொத்த பெண்களின் தொலைபேசி இலக்கங்களை வாங்கிக் கொடுக்கவேண்டும். புகைக்கவும் குடிக்கவும் தெரிந்த பதின்மவயதுப் பையன்களைத்தான் பெண்களுக்கு அதிகம் பிடிக்கும் என்று ஏனையோரைப் போல இவனும் நம்பினான். புகைபிடித்து புகையை ஸ்ரைலாக வாய்க்குள்ளிருந்து விடுவதைப் படம் எடுத்துக் காட்டி, ‘girl it’s really wicked’ என்று பிற பெண்கள் ஆச்சரியமாய்க் கூறுவதைக் கேட்பதுதான் இவன் படித்த பாடசாலைப் பெண்களில் அப்போது பிரபல்யமாய் இருந்தது. அத்தோடு தங்களுக்கும் சிகரெட் தாவென்று கேட்கும் பெண்களுடன் தொடர்ந்து உரையாடி வார்த்தைகளால் வளையம் போட்டு கழுத்தை இறுக்கி கோழிக்குஞ்சைப் போல அமுக்குவதும் சுலபமாயிருந்தது. ஆனால் இவன், முதன்முதலில் சுற்றித்திரிந்த பெண்ணுக்கும் இவனுக்குமிடையில் கிட்டத்தட்ட நான்கு வயது வித்தியாசமிருக்கும். இவன் உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, அந்தப்பெண் வளாகத்தில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தாள். படிப்பதற்காய் அரசாங்கம் கடனாய்க் கொடுத்த உதவிப்பணத்தில் பெரும்பகுதியை அவள் இவனுக்காகவே செலவுசெய்வாள். புதுப்புது பிராண்ட் நேம்களுடன் ஆடைகளும், சப்பாத்துக்களும் அணிந்து வருவதைப் பார்த்து அவனது நண்பர்கள் பொறாமைப்பட்டாலும், தான் தன்னைவிட நான்குவயது கூடிய பெண்ணுடன் டேட்டிங் செய்வதைக் கவனமாக மறைத்துக்கொண்டிருந்தான். கொஞ்ச காலத்துக்குப் பிறகு அந்தப்பெண்ணுக்கு அவளோடு வளாகத்தில் படித்த பெடியன் ஒருவனோடு காதல் வர இவனிடம் நேரடியாகச் சொல்லியே உறவைத் துண்டித்தாள். இவன் கெட்ட கெட்ட வார்த்தைகளால் எல்லாம் திட்டி, இவ்வளவு காலமும் தன்னோடு திரிந்ததற்கு நன்றியாய் ‘b****’ என்று நாமமும் சூட்டி அனுப்பி வைத்தான். இவனுக்கு அவளது நேசம் இல்லாமற் போகின்றதே என்பதைவிட, தனது செலவுக்கு காசு இனி வராதே என்ற கவலைதான் அதிகம் மனதில் நிரம்பியிருந்தது.

ஒரு நாள் இவனும், இவனது நண்பனும், நண்பனின் கேர்ள் பிரண்டும் கிளப் ஒன்றுக்குப் போயிருந்தனர். அப்போது வெளியே நல்லாய் பனி கொட்டிக்கொண்டிருந்தது. கிறிஸ்மஸ் வருவதற்கு இன்னும் சில நாட்களே இருந்தபடியால் எல்லா இடங்களிலும் கொண்டாட்டத்தின் களை கட்டியிருந்தது. சனங்களும் கிறிஸ்மஸ் வந்தால் இருக்கின்ற எல்லாப் பிரச்சினைகளும் தங்களைவிட்டுப் போய்விடும் என்ற மாதிரியான மென்டாலிட்டியோடுதான் இருப்பினம். கிறிஸ்மஸ் முடிந்து புதுவருடமும் பிறந்துவிட்டால் யதார்த்த உலகுக்கு வந்து பெருமூச்சு விட்டபடி அடுத்த கிறிஸ்மஸை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கத் தொடங்குவார்கள். பாலன் பிறந்துகொண்டும், வளர்ந்து கொண்டும் சிலுவையில் அறையப்பட்டும், உயிர்த்து எழுந்துகொண்டும்தான் இருக்கிறார். இது பத்தாது என்று ரூபாக் போன்றவர்கள் கறுப்பு ஜீசஸ் வேண்டுமென்று பாடல்களில் பாடிக்கொண்டு இருந்தமை சிலவேளைகளில் இவனுக்கு எரிச்சலாயிருந்தாலும், கறுப்பு ஜீசஸை புனிதமாக்காமல் தன்னை மாதிரி பலவீனங்களுடன் உள்ள மனிதராய் அடையாளப்படுத்தியது பிடித்துமிருந்தது.

டான்ஸ் கிளப்புகளுக்குப் போவதென்றால் இரவு பதினொரு மணிக்குப் பிறகுதான் வெளிக்கிடவேண்டும். பன்னிரண்டு மணிக்கு டான்ஸ் ஹோல் நிரம்பத் தொடங்கிவிடும். ஒரு மணிக்கு டான்ஸ் உச்சம்பிடிக்கும். இரண்டு மணிக்கு கிளப்பை மூடவேண்டும் என்பது சட்டம் இட்ட நிபந்தனை. ஆனால் எவரும் அதைப் பெரிதாக எடுப்பதில்லை. சிலவேளை இரண்டு மணிக்கு பொலிஸ் வந்து கதவடியில் நிற்கும். ஆனால் ஆடுகின்ற பெண்களைப் பார்த்து மயங்கியோ கிறங்கியோ என்னவோ தெரியாது, இழுத்து மூடு என்று ஒற்றைக்காலில் நின்று அவர்கள் அதட்டமாட்டார்கள். பெண் என்றால் பேயும் இரங்கும் என்று தமிழ் வகுப்பு ஒன்றில் படித்தது இவனுக்கு நினைவில் உண்டு. ஆனால் பொலிஸும் வாயைப் பிளந்து நிற்கும் என்பதை கிளப்புகளுக்குப் போகத்தொடங்கிய பிறகுதான் அறிந்துகொண்டான். ஒரு மணிக்கு டான்ஸ் ஹோல் நிரம்புகிறதென்றால், ஒன்றரைக்கு ஆட்டம் highற்குப் போகும். ‘..grind with me baby’ போன்ற வரிகள் உள்ள பாடல்கள் உச்சஸ்தாயியில் ஒலிக்கத் தொடங்கும். குடிவெறியில் பலபேருக்கு என்ன நடக்கிறதென்றோ அல்லது என்ன செய்துகொண்டிருக்கின்றோம் என்றோ தெரிவதில்லை. அதுவும் கஞ்சாவைக் கொஞ்சம் இழுத்திருந்தால் நிலைமை பற்றி எதுவுமே விபரிக்க வேண்டியதில்லை. ஹை ஹீல்ஸைப் போட்டுக்கொண்டும் கீழே வழுக்கி விழாமல் எப்படி இசையின் இலயத்துக்கேற்ப பெண்கள் நடனமாடுகின்றார்கள் என்பது இவனுக்கு எப்போதும் ஒரு அதிசய விசயமாய்த்தான் இருக்கும்.

வனது நண்பனுக்கும், அவனது காதலிக்கும் அண்மைக்காலமாய் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறதென்று இவனுக்குச் சாடைமாடையாய்த் தெரியும். ஆனால் பிரண்ட் அவனாய்க் கூறும்வரை எதையும் கேட்பதில்லை என்று இவன் வாளாவிருந்தான். இவனது நண்பன், சில மாதங்களுக்கு முன் தான் அப்போது புதிதாய் மார்க்கெட்டுக்கு வந்த கமரா போன் ஒன்றை கன காசு செலவழித்து, தனது காதலிக்கு வாங்கிக் கொடுத்திருந்தான். நல்ல எக்ஸ்பென்சிவ்வான பொருட்கள் வாங்கிக்கொடுத்தால் பெண்கள் காலைச் சுற்றிக் கிடப்பார்கள் என்றுதான் இவனைப் போன்றவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். அன்றிரவு டான்ஸ் கிளப்பில் நடந்த சம்பவம் அவனது நண்பனின் வாழ்க்கையை அடியோடு மாற்றிவிட்டது. இப்படி அடிக்கடி டான்ஸ் கிளப்புக்கு வந்து நண்பனின் காதலிக்கு, அங்கே வருகின்ற ஒரு பெடியனோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவள் இவனது நண்பனின் உறவை முற்றாகத் துண்டித்துவிட்டுப் போயிருக்கலாம். அவள் விசர் மாதிரி, இவங்களோடு கிளப்புக்கு வந்துவிட்டு, இரவு டான்ஸ் உச்சத்தை அடையும்போது அந்தப் புதுப்பெடியனோடு சேர்ந்து ஆடத்தொடங்கிவிட்டாள். ஆட்டம் என்றால் சும்மா ஆட்டமல்ல. அதுவும் வேண்டும் என்று இவனின் நண்பனைப் பார்ப்பதும், பிறகு ஏதோ அவனைப் பற்றி நக்கலாய்ச் சொல்லிச் சிரிப்பதும் என்று அவள் செய்தது இவனது நண்பனை இன்னும் கூட கோபப்படுத்திவிட்டது. அன்று நல்லாய் இவங்கள் குடித்துமிருந்தார்கள்.

நண்பன் அந்தப் பெடியனுக்கருகில் போய் சடாரென்று ஒரு உதை கொடுத்தான். அந்தப்பெடியனும் இதை எதிர்பார்க்கவில்லை, வயிற்றைப் பிடித்துக்கொண்டு இருந்துவிட்டான். ஆனால் அவனோடு அவனுடைய நாலைந்து நண்பர்கள் வந்திருந்தனர். அவர்கள் இவனது நண்பனுக்கு அடிப்பதற்காய் சுற்றி வர, கிளப் பவுண்ஸர்கள் வந்து தடுத்துவிட்டார்கள். இவனுக்கு அந்த நேரத்திலும் புத்தி நன்றாக ஓடியது. இனி இந்தப் பெட்டை நண்பனிடம் வரமாட்டாள் என்பது தெளிவாய்ப் புரிந்ததால், அவள் மேசையில் வைத்துவிட்டுப் போயிருந்த புது போனைச் சுருட்டிக்கொண்டு நண்பனுடன் வெளியே வந்துவிட்டான். நண்பனோ அந்தப்பெடியனுக்கு இன்னும் இரண்டு உதைகொடுக்காமல் வீட்டை போய்ச்சேருவதில்லை என்பதில் உறுதியாய் இருந்தான். ‘நாங்கள் ரெண்டுபேர்; அவங்களிலை நாலைந்து பேர் நிற்கின்றாங்கள், சமாளிக்க முடியாதடா’ என்றான் இவன். அத்தோடு நல்லவெறியில் நின்றதால், வலுவாய் நின்று அடிபடவும் முடியாது என்பது இவனுக்குத் தெரியும்.

இவங்கள் இப்படி விவாதித்துக் கொண்டிருக்கையில் அவளையும் கூட்டிக்கொண்டு அவங்கள் வெளியே வந்துவிட்டாங்கள். இவனது நண்பன் கார்க்கதவைத் திறந்துகொண்டு ஆவேசமாய் அந்தப்பெடியனை அடிக்க ஓடத்தொடங்கினான். ‘இப்ப போகாதையடா அவங்கள் சாத்திப்போடுவாங்கள்’ என்று இவன் கத்தினான். அவங்கள் ஐந்துபேர். சுற்றி வளைத்து சரமாரியாக அடிக்கத் தொடங்கினாங்கள். கழுத்தில் மொத்த சைஸ்ஸில் போட்டிருந்த வெள்ளிச் செயினைக் கையில் சுற்றிக்கொண்டு மாறி மாறி அடித்தார்கள். இவனுக்கு முகத்தில் பயங்கர அடி. பற்கள் எல்லாம் உதிர்ந்து போகின்றமாதிரி வலித்தது. ஆனால் இவனது நண்பனுக்கு இடம் வலம் என்று எதுவும் பார்க்காமல் ஸ்நோவுக்குள் புதையப் புதைய அடித்தார்கள். அடி தாங்காமல் நண்பன் சுருண்டு விழுந்துவிட்டான். அவங்களும் இவன் மயங்கிவிட்டான் என்று அவளையும் கூட்டிக்கொண்டு போய் காரில் ஏறும்போது, ஏதோ வெறி வந்தமாதிரி இவனது நண்பன் தனது காரின் பின் கதவைத் திறந்து கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு போய் அந்தப்பெடியனின் இடுப்பில் குத்தி இழுத்துவிட்டான். இரத்தம் குபுகுபுவென்று பெருக்கத் தொடங்கிவிட்டது. ‘if anyone wanna f*** me, step up yoo’ என்று அவன் இரத்தம் படிந்த கத்தியைப் பிடித்துக்கொண்டு கத்தியதைப் பார்க்கும்போது இவனுக்கே பயமாயிருந்தது. எல்லோரும் பீதியில் உறைந்து போகத் தொடங்கினார்கள். விபரீதத்தை உணர்ந்து முதலில் சுதாகரித்துக்கொண்டது இவன்தான். நண்பனைப் பார்த்து, ‘டேய் பொலிஸ் வரமுன்னம் இந்த இடத்தை விட்டுப்போயிடு, என்னை யார் இதைச் செய்தது என்று பொலிஸ் கேட்டால் தெரியாது என்று சொல்லிவிடுவன்’ என்று இவன் கூறினான். இவனுக்குத் தெரியும் இவ்வளவு நடந்தாலும் கடைசிவரை அவனது காதலி இவனைக் காட்டிக்கொடுக்கமாட்டாள் என்று. குத்து வாங்கிய பெடியன் தப்புவது கஷ்டம்போல மூச்சுத் திணறி மூர்ச்சையாகத் தொடங்கினான். ஆனால் இவனது நண்பன் அந்த இடத்தை விட்டுப்போகமாட்டேன் என்று பிடிவாதமாய் இருந்தான். ‘அவளும் என்னைவிட்டுப் போய்விட்டாள், இனி என்ன வாழ்க்கை தனக்குத் தேவையாயிருக்கிறது’ என்று விரக்தியாய் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு நின்றான். பிறகு பொலிஸ் வந்து நண்பனைப் பிடித்துக்கொண்டு போய் ஜெயிலுக்குள்ளை போட்டது.

குத்தப்பட்ட பெடியன் அதிர்ஷ்டவசமாய்த் தப்பியதால், சில வருடங்களுக்குப் பின் ஜெயிலில் இருந்து இவனது நண்பன் வெளியே வந்தான். கொஞ்ச மாதங்களுக்குப்பின் நண்பனுக்கு அருமையானதொரு பெண் காதலியாகக் கிடைத்திருந்தாள். ஆனால் நண்பனோ குடியில் மூழ்க ஆரம்பித்திருந்தான். அதோடு ஜெயிலுக்குள் கிடைத்த சகவாசத்தால் potற்கும் அடிமையாகிவிட்டிருந்தான். நண்பனின் காதலி, இவனிடம் வந்து ‘அவனை போதை மருந்து எடுக்கவேண்டாமென்று அட்வைஸ் செய்யடா’ என்று கெஞ்சுவாள். நண்பனும் கொஞ்ச நாளைக்கு ஓமென்று இருப்பான்; பிறகு தன்னாலை முடியலைடா என்று பழைய பழக்கத்தை மீண்டும் ஆரம்பித்துவிடுவான். ஒருநாள் over doseஆகிப் போய் இளவயதிலேயே இறந்தும் போனான். நண்பனின் இறுதிச்சடங்கின்போது அவனது காதலி கதறி அழுததைப் பார்த்தபோது இவனுக்குத் தனது நண்பன் அவளுக்காகவேனும் உயிரோடு திரும்பி வரமாட்டானோ என்று நினைக்கத்தோன்றியது. பிறகு அந்தப்பெண் இவனோடு கொஞ்சக்காலம் திரிந்தாள். இவன் எப்படி தன்னை சுதந்திரமானவனாய் காட்டிக் கொண்டாலும், அடிமனசில் கன்னி கலையாத, காதலில் ஒருபோதும் விழாத பெண்ணே துணையாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தான். மேலும் உயர்சாதிப் பெட்டையாக இருந்தால் சொந்தக்காரர்களாலும் பிரச்சினை எதுவும் வராது என்பதும் இவனுக்கு நன்றாகவே தெரியும்.

ந்தப் பெண்ணொடு அவன் பள்ளிக்கூடத்திலை நடந்த multicutlure festivalலில்தான் முதன்முதலாய்க் கதைக்கத் தொடங்கினான். அதற்கு முதல் சிலபொழுது வகுப்புக்களுக்கிடையில் சந்தித்திருந்தாலும் ஒருபோதும் நேருக்கு நேர் உரையாடியதில்லை. அவளுக்கு இவன் வேட்டி கட்ட கஷ்டப்பட்டுக் கொண்டு திரிந்ததைப் பார்க்க, சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. அத்தோடு அவளுக்கு கண்டறியாத தமிழ்க் கலாச்சார அடையாளங்கள் புதிதும் கூட. அவள் ஸ்பானியப் பின்புலத்தில் வந்தவள். ஆனால் அவள் அதிகம் தமிழ் கேர்ல்ஸோடுதான் திரிகின்றவள். அவள்தான் இவனுக்கு வேட்டியைச் சுற்றிக் கட்ட உதவி செய்திருந்தாள். நல்லவேளையாக உள்ளுக்குள்ளை டெனிம் ஜீன்ஸ் போட்டிருந்தான். மானம் காப்பதற்கு மட்டுமில்லை, அந்தக் குளிர்காலத்திலை வேட்டியைக் கட்டிக்கொண்டு வெளியே போனால் அப்படியே ஒரு சிலையைப் போல உறைந்துவிட வேண்டிவரும் என்ற பயமுந்தான் காரணம். வேட்டி கட்ட உதவிசெய்தபடி, அவள் தனக்கும் சாறி கட்டிப்பார்க்க விருப்பம் இருக்கிறதென்று சொன்னாள். அத்தோடு தங்களின் கலாச்சாரத்திலும் சாறிக்கு நிகரான ஒருவித ஆடை இருப்பதாயும் கிராமப்புறங்களில் அநேக பெண்கள் அதைத்தான் அணிவார்கள் என்றும் கூறினாள். இவனும், ‘சாறி கட்டுவது பெரிய பிரச்சினையில்லை, ஆனால் இன்னொரு மனித உடலையும் காவுகின்ற பாவனையுடன்தான் நீ நடமாடவேண்டி வரும்’ என்று எச்சரித்தான். இப்படி அந்த multicultural dayயில் ஆரம்பித்த பழக்கம் வகுப்புக்களில், வகுப்பு இடைவேளைகளில், மதியவுணவு வேளைகளில் என்று சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது.

எப்போதும் வெள்ளை, பழுப்பு நிறத் தோல் கொண்டவர்கள் உயர்ந்தரக வாழ்க்கை வாழ்பவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த இவனுக்கு அவளும் தன்னைப் போன்ற ஒரு குக்கிராமத்திலிருந்து வறிய பின்னணியில் வந்திருந்ததை அறிந்தபோது வியப்பாயிருந்தது. அவனுக்கு புரியாவிட்டாலும், ஸ்பானிஷ் மொழி மீது இவனுக்கு ஒருவித நெருக்கம் வரத்தொடங்கியிருந்தது. பிறகு அவளுக்காகவும், மொழியின் வசீகரத்துக்காகவும் இவனும் அவளுடன் சேர்ந்து பாடசாலையில் நடந்த ஸ்பானிஷ் வகுப்புக்குப் போகத் தொடங்கியிருந்தான். இவன் இதுவரை சந்தித்த பெண்களிடம் இருந்து தனித்துவமாய் அவள் இருப்பதாய் உணரத் தொடங்கினான். புத்தகங்களின் மீது அளவு கடந்த பிரியம் அவள் கொண்டிருப்பதைப் பார்க்க இவனுக்கு இன்னும் ஆச்சரியமாயிருந்தது. அதுவும் அவள் வயதொத்த பெண்கள் ரீனேஜ் ரொமாண்ஸ் நாவல்கள் வாசிக்கையில் இவள் இலத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க நாவல்களை வாசிப்பவளாயிருந்தது இன்னும் வியப்பாயிருந்தது. இவனுக்கு பாடப்புத்தகங்கள் மட்டுமல்ல, மற்றப் புத்தகங்களை வாசிப்பது என்பது கூட வேப்பங்காய்ச் சுவையாக இருந்தது. லைபிரரிகளுக்கு எந்தத் திசையில் வாசல்கள் இருக்குமென்பதையே அறிய விரும்பாதவனாய்த்தான் இவ்வளவு காலமும் இவன் இருந்தான். அவளோடு பழகத் தொடங்கியபின் chapters, coles என்று புத்தகக் கடைகளுக்குப் போய் புத்தகங்கள் அவளுக்காய் வாங்கிக் கொடுக்கத் தொடங்கினான். ஒருமுறை ‘Lutesong and Lament’ என்ற தமிழாக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை இவன் வாங்கி வந்து அவளுக்குக் கொடுத்தபோது, ‘நீயும் வாசித்துப் பாரேன்’ என்று அவள் சொன்னபோது, ‘இதிலை என்ன இருக்கிறது என்று வாசித்துவிட்டு நீ சொல் அது காணும், அதற்கு அப்பால் என்னைக் கஷ்டப்படுத்தாதே’ என்றான்.

அவள் தனது தாயோடும், தங்கையோடும், step-dadயோடும்தான் வசித்துக்கொண்டிருந்தாள். தாய்க்கு இவள் இப்படி புத்தகங்கள் வாசிப்பது துண்டறப் பிடிப்பதில்லை. இரவில் மட்டுமில்லை, எல்லாப் பொழுதிலும் இந்த இந்த நேரத்துக்கு இவற்றைச் செய்யவேண்டும் என்ற தாயின் அட்டவணையைத் தவறாது பின்பற்றவேண்டும், இல்லாவிட்டால் தாயிடம் பேச்சுவாங்கித் தாங்காது என்றாள். இவளுக்கு புத்தகங்கள் வாசிப்பதில் அலாதிப்பிரியம் என்பதால், படுக்கைப் போர்வைக்குள் சின்ன ரோச் லைட்டை எரியவிட்டு வாசிப்பதாயும், சிலவேளைகளில் எல்லா லைட்டுகளையும் அணைத்துவிட்டு கொம்பியூட்டர் மொனிற்ரர் வெளிச்சத்தில் வாசிப்பதாயும் இவனிடம் கூறியிருந்தாள். நல்லாய் வகுப்புக்களில் மார்க்ஸ் எடுத்துக்கொண்டிருந்தவள் பிறகு வந்த தவணைகளில் மார்க்ஸ் குறைய எடுக்கத் தொடங்கியிருந்தாள். இவன் என்ன காரணம் என்று கேட்டபோது முதலில் ஒன்றுமில்லை என்றாள். பிறகு உருக்கிக் கேட்டபோது தனது வீட்டுப் பிரச்சினையைக் கூறத் தொடங்கினாள்.


அவளது வளர்ப்புத்தந்தை ஒரு தந்தையைப் போல பழகுவதில்லை எனவும், தன்னைப் பலதடவைகள் தொட முயன்றதாகவும், சமையலறையில் வேலை செய்யும்போது தனக்கு உதவி செய்வதுபோல தன்னிடம் நெருங்க முயல்வதாகவும் கூறினாள். ‘நீ இதை உனது அம்மாவிடம் கூறலாந்தானே?’ என்று இவன் கேட்க, ‘அவாவுக்கு அவர் நல்ல மனுஷன் என்று நினைப்பு. தான் எது சொன்னாலும் செவி கொடுத்துக் கேட்பதில்லை. தான் ஏதோ மனப்பீதியில் திரிவதாய் அவர் அதை அலட்சியம் செய்துவிடுகின்றார்’ என்றாள். அத்தோடு அவளது வளர்ப்புத்தந்தைக்கும், தாயிற்கும் ஒரேநேரத்தில் வேலை நேரம் இருப்பதில்லை என்பதால் இவள் தனித்து நிற்கும்போது abuse செய்ய முயல்வாராம். பல சமயங்களில் அவர் தன்னுடைய அறைக்குள் வந்தால், உடனே ஓடிப்போய் பாத்ரூம் கதவை இழுத்து மூடிவிட்டு அதற்குள் அழுதபடி இருந்தாய் சொன்னாள். இவன், ‘அப்ப நான் பொலிஸுக்கு இதை அடித்துச் சொல்லட்டா?’ என்று கேட்க, ‘நான் செத்தாப்பிறகு அதைச் செய்’ என்று வெடுக்கென்று பேசினாள். ‘அவரைப் பொலீஸ் பிடித்துக்கொண்டு போனால், அம்மா தன்னைச் சும்மா விடமாட்டார்… தன்னோடு சேர்க்கவும் மாட்டார். இதைவிட அவலமான வாழ்வைத் தெருக்களில் வாழவேண்டிய நிலைதான் தனக்கு வருமென்றாள். ‘சரி, அதற்கும் உனது பரீட்சை பெறுபேறுகள் குறைவதற்கும் என்ன தொடர்பு?’ என்று வினாவியபோது, ‘அம்மாவுக்கு நான் நல்லாய்ப் படித்து வெளிவரவேண்டும் என்பதுதான் ஆசை. அவாவின் ஆசைக்கு அடிபணிந்து கொடுக்கக்கூடாது என்பதற்காய்த்தான் வீம்பாய் படிக்காமல் குறைய மார்க்ஸ் எடுக்கிறேன்’ என்றாள். ‘விசரி, நீ இப்படி படிக்காமல் இருந்தால் உன்னுடைய எதிர்காலம் அல்லவா சீரழிந்து போகப்போகிறது. அதோடு நீயொரு டிப்ளோமாவை எடுத்தாயென்றால், இலகுவாய் வீட்டைவிட்டு வெளியே போய் ரெசிடண்டில் இருந்துகொண்டு மேற்கொண்டு வளாகத்தில் படிக்கமுடியும், பிறகு ஒருத்தரின் தொல்லையும் இருக்காது அல்லவா?’ என்றான் இவன். அவள் இதைப் பெரிதாய்க் கவனத்தில் எடுத்துக்கொள்ளாதது இவனுக்கு கொஞ்சம் கோபமாயும் நிறையக் கவலையாகவும் இருந்தது.

அவன் அவளை முத்தமிடும் அநேக பொழுதுகளில் ஒருவித வாசனை அவள் வாயிலிருந்து வருவதை அவதானித்திருந்தான். கிட்டத்தட்ட தமிழாக்களில் பருப்புக்கறி சாப்பிட்டால் உள்ளி வாசத்துடன் எப்படி வாய் மணக்குமோ அப்படி ஸ்பானிய ஸ்பைசி உணவொன்றின் வாசம்தான் அது. ஆரம்பத்தில் weirdயாய் இருந்தாலும், பிறகு அந்த வாசம் அவனுக்கும் பிடித்துப் போய்விட்டது. ஆனால் அவன் ஒவ்வொருமுறையு முத்தமிட்டபிறகும் ‘ewww’ என்று உதட்டைச் சுழிப்பான். அவளும் ’sorry, sorry! chewing gum போட மறந்துவிட்டேன்’ என்று கெஞ்சியபடி இவனது தலையைக் கோதிவிடுவாள். இந்த அழகையும் அவளது சின்னப் பதட்டத்தையும் இரசிப்பதற்காகவே, பிறகு முத்தமிடும்போது வாசம் வராதபோதும் வேண்டுமென்றே இவன் உதட்டைச் சுழிக்கப்பழகியிருந்தான்.

ருநாள், தனது வீட்டில் தாய் வேலைக்குப் போய்விட்டார்; வளர்ப்புத் தந்தையும் உறவினர் யாரையோ சந்திக்க இன்னொரு நகருக்குச் சென்றுவிட்டார்; வீட்டை வா, எங்கள் கலாச்சாரத்து உணவை உனக்குச் சமைத்துப் பரிமாறவேண்டும் என்றாள். ‘சரி நான் வாறன், ஆனால் பிறகு தமிழாக்களின் உணவை உனக்குச் சமைத்துத் தரவேண்டும் என்று என்னிடம் கேட்காமல் இருக்கவேண்டும்’ என்றான். ‘சரி சரி பயப்பிடாதே, எந்தச் சமூகத்திலும் இந்த ஆண்கள் சோம்பறிகள்தானே, இது எங்களுக்குத் தெரியாதா என்ன?’ என்று நக்கலடித்தாள். நல்ல சுவையான ஸ்பானிய உணவுகளைச் சமைத்திருந்தவள், வீட்டின் பின்புறத்தில் பூத்திருந்த பூக்களைக் கொண்டு அழகாய் சாப்பாட்டு மேசையை அலங்கரித்துமிருந்தாள். தெளிவான ஸ்ரியோ ஸிஸ்டத்தில் அதிகம் அதிராத ஸ்பானிய இசை பரவியபடி இருந்தது. ஒரே விதமான தமிழ்ச் சமையலை நுகர்ந்த இவன் மூக்குக்குள் அவள் சமைத்த உணவு வகைகள் நறுமணத்தைப் போல இறங்கிக்கொண்டிருந்தன. அறுசுவை உணவுகள் மட்டுமல்லாது, ஒரு பிரியத்துக்குரிய பெண்ணின் அன்பை உள்வாங்கி இரசிக்கும் எந்தப்பொழுதும் அருமையாய்த்தானிருக்கும் போல என்று இவன் தனக்குள் நினைத்துக்கொண்டான்.

உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டென்பதால், அவள் ஸோபாவிலும், இவன் அவள் மடியில் தலையைச் சாய்த்தபடியுமிருக்க teenage crushesஐ நகைச்சுவையாக எடுத்த ஒரு படத்தை இருவருமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட இருவரும் உறக்க நிலைக்குப் போயிருப்பார்கள். தடதடவென்று யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. இவன் நினைத்தான், சரி இண்டைக்கு எங்கடைபாடு அவ்வளவுதான் என்று. அவள் அந்த நேரத்திலும் பதட்டப்படாமல், ‘கெதியாய் ஸூவைப் போட்டுக்கொண்டு பின்பக்கம் உள்ள பேஸ்மெண்ட் கதவைத் திறந்து ஓடிப்போய்விடு’ என்றாள். இவனுக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டநிலையில் பின்பக்க வாசலால் ஓடியது மட்டும்தான் நினைவிலிருந்தது. ஒரு பஸ் ஸ்ராண்டை அடைந்தபிறகுதான் இவனுக்கு மூச்சுவிடும் சத்தமே கேட்டது. அங்கே நின்று கொண்டு ஒரு இருபத்தைந்து சதம் போட்டு அவளுக்கு ரெலிபோன் அடித்தான். தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையெனவும், அவளது வளர்ப்புத் தந்தைதான் கார் ரயர் பழுதாகி இடைநடுவில் பயணத்தை நிறுத்திவிட்டுத் திரும்பி வந்திருக்கின்றார் என்றாள். ‘விசரா, ஓடுகின்ற வேகத்தில் உன்னுடைய ஸ்வெட்டரை விட்டுவிட்டு போய்விட்டாய், நல்லவேளை நான் அதை எடுத்து எனது ரூமுக்குள் வைத்துவிட்டேன்’ என்றபோதுதான் இவனுக்கு குளிருக்குள் ஸ்வெட்டர் இல்லாது நிற்பது தெரியவந்தது. ‘அது சரி, இந்த நாற்றம் பிடித்த ஸ்வெட்டரை எத்தனை நாட்களாய்த் தோய்க்காமல் போட்டுக்கொண்டு திரிகிறாய்?' என்று கேட்டுவிட்டு, சரி, நான் அதை வடிவாய் தோய்த்துவிட்டு நாளை கொண்டுவந்து தருகிறேன்’ என்று அவள் சொல்ல, இவன், ‘இன்னும் கனக்க உடுப்புக்கள் இப்படித்தான் வீட்டில் தோய்க்காமல் கிடக்கிறது, அதையும் கொண்டுவந்து தரட்டா?’ என்று கேட்க, அவள் கெட்ட வார்த்தை ஒன்றால் திட்டிவிட்டு போனை வைத்தாள்.

அப்போதுதான் கோடைகாலம் ஆரம்பித்து கொஞ்ச வாரங்கள் ஆகியிருந்தன. அந்தத் தவணைக்கான இறுதிப்பரீட்சைகள் ஆரம்பிக்க சில நாட்களே இருந்தநிலையில், அவள் உப்பிய கன்னங்களோடு தலைமயிரைக் கூடச் சரியாக வாராமல் வகுப்புக்கு வந்திருந்தாள். ‘உனக்கு என்ன நடந்தது?’ என்று இவன் அவளைப் பார்த்துக் கேட்க, பொலபொலவென்று வகுப்புக்குள்ளேயே அழத்தொடங்கிவிட்டாள். மெல்லியதாய் நெஞ்சில் அணைத்துக்கொண்டு அழுது முடியட்டும் என்று இவன் காத்திருந்தான். பிறகு வகுப்புக்கு வெளியே கூட்டிக்கொண்டுபோய் ‘என்ன நடந்தது என்று சொல்?’ என்றான். தனது ரூமுக்குள் நித்திரையில் ஆழ்ந்திருந்தபோது வளர்ப்புத் தந்தை தன்னை முத்தமிட்டதாகவும், தான் திடுக்குற்றெழுந்து திமிறியபோது தனது கன்னங்களில் அறைந்ததாகவும், இப்படிச் செய்தால் பொலீசுக்கு சொல்லிவிடுவேன் என்று தான் சொல்ல, உனக்கு கனக்கப் பெடியங்களோடு தொடர்பிருக்கிறது; அதைக் கண்டுபிடித்து கண்டிக்கத்தான் இப்படி ஒரு பொய்யைத் தன்மேல் சுமத்துக்கிறாள் என்று பொலிசுக்கும், இவளது தாயுக்கும் கூறுவேன் என்று வளர்ப்புத் தந்தை பயமுறுத்தியதாகவும் கூறினாள். ‘சரி, நீ பொலீஸுக்கு இந்த விடயத்தைக் கூறினாயா?’ என்று இவன் கேட்க, ‘என்னால் எப்படி அவர் இவ்வளவு சொன்னபிறகும் அதைச் செய்யமுடியும்?’ என்று சின்னப்பிள்ளை போல அவள் திரும்பிக்கேட்க, இவன் ஆத்திரத்தில் ‘f*** you’ என்று பேசிவிட்டு அவளை அநாதரவாய் விட்டுவிட்டுப் போய்விட்டான். பிறகு அவளது நிலையில் நின்று பார்க்க அவளின் கையாலாகாத நிலை புரிந்து திரும்பிப்போய் அவளிடம் கூறினான், ‘ok, இனி உனக்கு ஒரு பிரச்சினையும் வளர்ப்புத்தந்தையால் வராது, கவலைப்படாதே' என்றான். ‘போலீசுக்கு இதைச் சொல்லப்போகின்றியா?’ என்று அவள் கேட்க, ‘இல்லை, இதனால் உனக்கு எந்தப்பிரச்சினையும் வராது என்னை நம்பு’ என்று சொன்னானே தவிர, அவள் எவ்வளவு கேட்டும் இவன் என்ன செய்யப்போகின்றான் என்று கூறவில்லை.


மதியவுணவு இடைவேளையின்போது அவளுக்குச் சொல்லாமல், இவன் அவளது வீட்டுக்குப்போனான். இவனுக்குத் தெரியும், அந்த நேரத்தில் வீட்டில் அவளது வளர்ப்புத் தந்தை நிற்பார் என்று. அவர் வீட்டுக் கதவைத் திறக்க, இவன் அவரை வெளியே இழுத்து விழுத்தி, கொண்டுபோன பேஸ்போல் மட்டையால் சரமாரியாக அடித்தான். மண்டை உடைந்து இரத்தம் வடிய மனுஷன் அலறத்தொடங்கினார். ‘இனியும் அவளைத் தொடமுயன்றாய் என்றால் உன்னைக் கொல்லாமல் விடமாட்டன்’ என்று தூசணத்தால் திரும்பிக் கத்திவிட்டு பாடசாலைக்குப் போயிருந்தான்.

அன்றிரவே இவனைத் தேடி பொலீஸ் வீட்டுக்கு வந்தது. வளர்ப்புத் தந்தை இவன் மீது குற்றச்சாட்டைக் கொடுத்திருக்கின்றார். அவளும் பயத்தில் இவனது பெயரைச் சொல்லியிருக்கிறாள். ஜெயிலில் இரண்டரை வருடம் இருக்கவேண்டும் எனத் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. பதினெட்டு வயது நிரம்பாததால் முதல் வருடம் வேறிடத்திலும், பதினெட்டு வயது வந்தவுடன் வேறொரு இடத்துக்கும் மாற்றப்பட்டான். ஜெயிலில் இவன் இருக்கும்போதுதான், ஏன் இறந்துபோன தனது நண்பன் பிறகு போதை மருந்துக்கு அடிமையாகி இறந்துபோனான் என்ற உண்மைக் காரணத்தை அறியக்கூடியதாக இருந்தது. அங்கேயிருந்த இவனைவிட வயதில் இரண்டு மடங்கு கூடிய thugs களும், Gangsters களும் ஒரு குட்டி ராஜ்ஜியத்தையே நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களை மீறி எதுவும் செய்யமுடியாது. வன்முறை என்பது அவர்களுக்கு விளையாட்டுப் போல இருந்தது. தினமும் யாரையாவது கொழுவ வைத்து அடிபடச்செய்து இரசிப்பார்கள். சிலவேளைகளில் இரவு நேரத்தில் தூக்கத்திலிருக்கும் இவனது காற்சட்டைகளுக்குள் கைகளை நுழைத்தோ அல்லது தங்களது பின்பக்கங்களை வைத்துத் தேய்த்துக்கொண்டோ இருப்பார்கள். முரண்டு பிடித்தால் இரத்தம் வரும்வரை அடிப்பதை நிறுத்தாமல் விடமாட்டார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால் சில பொலிசார் இதைத் தெரிந்துகொண்டும் அமைதியாக இருந்ததுதான். இப்படி தனிமையுடனும், சித்திரவதைகளுடனும் இருந்தால் நிச்சயம் பைத்தியம் பிடித்துவிடும் போல இவனுக்குத் தோன்றியது. அதுவே இவனைப் புத்தகங்களை வாசிக்கத் தூண்டியது. புத்தகங்களை வாசிக்க வாசிக்க, ஏன் அவள் தன்னைப் புத்தகங்களில் தொலைத்துக் கொண்டிருந்தாள் என்ற காரணம் இவனுக்குப் புரியத்தொடங்கியது. புத்தகங்கள் சிலவேளைகளில் கற்பனா உலகத்தைச் சிருட்டித்தாலும், யதார்த்தத்திலிருந்து தப்புவதற்கு அவை இலகுவான வழியைத் திறந்துகாட்டியபடி இருந்தது இவனுக்குப் பிடித்திருந்தது. அங்கேதான் கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்பானிஷ் மொழியையும், பிரெஞ்ச் மொழியையும் அறிந்துகொள்ளத் தொடங்கினான். ஆங்கிலத்தை விட அவை எவ்வளவோ செழுமையும் அழகும் நிறைந்தவை என்பதை உணரத்தொடங்க, அவளை நினைத்துக் கவிதைகளும் இவன் எழுதத் தொடங்கினான். என்றாலும் இவ்வளவு சம்பவங்கள் நடந்தும் தன்னைத் தேடி அவள் ஒருதடவை கூட வரவில்லை என்பது இவனுக்கு உறுத்தலாய் இருந்தது. அவ்வப்போது வரும் நண்பர்களிடம் அவளை பற்றி விசாரிக்கும்போது, அவளது குடும்பத்தினர் வீடுமாறிப் போனதால் பாடசாலைக்கு அவள் வருவதில்லை எனவும் தங்களால் அவளைத் தொடர்புகொள்ள முடியாதிருக்கின்றது என்றும் கூறினார்கள். இரண்டரை வருடங்களாய் இருந்த சிறைத்தண்டனை இவனது ‘நன்னடத்தை' காரணமாக இரண்டு வருடங்களுக்குள் முடிந்திருந்தது.

வன் ஜெயிலில் இருந்து, வீடு போய் ஒருவாரம் இருக்கும். அவள் தொலைபேசியில் அழைத்தாள். தான் ‘நாளை இந்த பஸ் ரெமினலில் வந்து நிற்பேன், அங்கை வந்து என்னைச் சந்தி. இப்போது முந்நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள வேறு ஒரு நகரத்தில் இருப்பதால் என்னால் எல்லாவற்றையும் கதைக்க முடியாது’ என்றாள். ‘சரி நான் நாளை வருகின்றேன், உனக்கு இப்போது எந்தபிரச்சினையும் இல்லையா?’ என்று கேட்டபோது அவள் ‘இல்லை’ என்றாள்.

அடுத்த நாள் காலையில், அவள் பஸ் ரெமினலில் இரண்டு ட்ரெவலிங் பைகளுடன், ஒரு சிறிய தோற்பையுடனும் வந்திறங்கினாள். ‘இனி நான் உன்னோடு தங்கப்போகின்றேன்’ என்றாள். ‘என்னோடயா?’ என்று இவன் சற்று ஆச்சரியமாய்க் கேட்டான். ‘ஏன் உனது அம்மாவுக்கு என்னைப் பிடிக்காதா?’ என்று திரும்பிக் கேட்டாள். ‘இல்லை, அம்மாவுக்கு ஒரு பிள்ளையாய் என்னைப் பெற்றதற்கு எவ்வளவு கஷ்டம் கொடுக்கமுடியுமோ அவ்வளவும் கொடுத்துவிட்டேன். இவ்வளவு நடந்தபிறகும் என்னை ஏற்றுக்கொண்டவர் அவர். உன்னை ஏற்றுக்கொள்வதில் அவர் தயங்கமாட்டார்’ என்றான். ‘பிறகேன் யோசிக்கிறாய்?’ என்று அவள் கேட்க, ‘இல்லை, உனது வளர்ப்புத் தந்தையும் அம்மாவும் என்ன செய்வார்களோ தெரியாது' என்றபோது, ‘ஓ.. உனக்குப் பிறகு நடந்த கதை தெரியாது என்ன, சொல்லுறன் கேள்' என்றாள்.

உன்னைப் பொலிஸ் பிடித்துக்கொண்டுபோன சில நாள்களுக்குள் எனது வளர்ப்புத் தந்தை இந்த நகரத்தில் இருக்கமுடியாது, வேறொரு நகருக்குப் போவோம் என்று வெளிக்கிட்டுவிட்டார். ஏனென்றால் அவருக்குத் தெரியும், உன்னை ஜெயிலுக்குள் பொலிஸ் போட்டுவிட்டால், உனது நண்பர்கள் தன்னைச் சும்மா விடமாட்டார்கள் என்று. ஆனால் மற்ற நகரத்துக்குப் போனாபிறகும் அவருடைய சேட்டைகள் தொடர நான் பொலிசுக்கு அடித்துச் சொல்லிவிட்டேன். அவர்கள் அவர் மீது கேஸ் பதிவு செய்து என்னோடு இனி அவர் தங்க முடியாது என்று கூறிவிட்டார்கள். அம்மாவுக்கு இதனால் என் மீது சரியான கோபம். நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, இப்படி வீட்டுப்பிரச்சினைகளால் வீட்டைவிட்டு போகின்றவர்களுக்கு அடைக்கலம் தரும் ஷெல்ட்டருக்குப் போய்விட்டேன். இன்னொரு நகரத்துக்குள் நின்றதால் என்னால் உன்னைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அத்தோடு நான் தங்கிநின்ற ஷெல்ட்டருக்குப் பொறுப்பான பெண்மணிக்கு உனது பிரச்சினையும் தெரியும். எனவே நீ ஜெயிலுக்குள் இருக்கும்வரை உன்னோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தார்கள். ‘பரவாயில்லை, நீ என்னைத் தொடர்பு கொள்ளாததில் எந்தப் பிரச்சினையுமில்லை. உனது வளர்ப்புத் தந்தையின் சித்திரவதைகளில் இருந்து நீ தப்பியிருந்தது எனக்கு நிம்மதியைத் தருகின்றது’ என்றான் இவன். பிறகு அவள், ‘எனது பொறுப்பதிகாரியின் மூலம், உனக்கு எப்போது சிறைத்தண்டணை முடிகிறதோ அப்போது எனக்குத் தெரியப்படுத்தச் சொன்னேன். அவர்களும் இப்போது தெரிவித்திருந்தார்கள். அத்தோடு எனக்கு பதினெட்டு வயதும் முடிந்துவிட்டதால் ஷெல்ட்டர் பொறுப்பதிகாரி எனக்கு விருப்பமான முடிவை எடுக்க அனுமதி தந்தார்' என்றாள்.

இப்போது மெல்லியதாய்க் குளிரத் தொடங்கியிருநது. இலைகள் எல்லாம் மஞ்சளும் சிவப்புமாய் பழுக்கத் தொடங்கியிருந்தன. பாடசாலையில் இருந்தபோது பழுப்பு நிற வானத்துடன் இலைகள் உதிர்ந்து கொண்டிருந்ததை குழந்தை மனசுடன் இரசித்துக்கொண்டிருந்தது இவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. அவளை அணைக்கவேண்டும்போல, ‘எவரது வன்முறையும் இல்லாது இயல்பாய் நீ வாழ துணையாயிருப்பேன்’ என்று சொல்லவேண்டும் போலத் தோன்றியது. அவளுக்கும் புரிந்ததோ என்னவோ, அவனை இழுத்து முத்தம் கொடுக்கத் தொடங்கினாள். இடைநடுவில் ‘ewww’ என்று இவன் உதட்டைச் சுழிக்க, ‘Don’t be lying boi, I didnt even eat spanish dishes for a while’ என்று இவனது நெஞ்சில் மெல்லியதாய் அடிகள் கொடுத்தாள். இனி தான், double shift அடித்தென்றாலும் கொஞ்சம் பணத்தைச் சேமித்து, அவள் சிறுவயதில் விளையாடித்திரிந்த சொந்தத் தேசத்துக்கு அழைத்துக்கொண்டு போகவேண்டுமென்ற ஆசை இவனில் பெருகத் தொடங்கியது. அங்கே போனால், களங்கமில்லாத அவளது சிறுவயது நினைவுகள், பதின்மங்களில் பெற்ற காயங்களை, கடல் அலைகளைப் போல கழுவிக்கொண்டு போகக்கூடுமென்றும் நம்பினான்.

உதிர்ந்துகொண்டிருந்த ஒரு மேப்பிள் இலை அவளது தலைமயிரில் சிக்கிக்கொள்ள அதை எடுத்துவிட்டபடி இவன் சொன்னான், ‘உனக்குத் தெரியுமா? நான் இப்போது நல்லாய்ப் புத்தகங்கள் வாசிக்கிறனான். ஏன் கவிதைகள் கூட உனக்காய் எழுதியிருக்கின்றேன்’ என்று. அவள் இவனது விரல்களைக் கோர்த்தபடி, ‘எனக்குத் தெரியும், நீ எப்ப என்னை நேசிக்கத் தொடங்குகின்றாயோ அப்போதே புத்தகங்களில் அமிழத் தொடங்குவாய்’ என்றாள் புன்னகைத்தபடி.

(2005)

xx/xx/20xx

Thursday, June 28, 2007

உன்னை உன்னிலிருந்தும் மற்றதுகளிலிருந்தும் விடுவிடுக்க நீ தொடர்ந்து உளறிக்கொண்டோ, கிறுக்கிக்கொண்டோ இருக்கவேண்டும். சுவரை வெறித்துக்கொண்டோ, நெடுந்தெருவில் காலபோன போக்கிலோ நடந்துகொள்வது சிந்தனைகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியெனினும், அப்போதும் மூளை சித்திரவதைக்கூடமாய் இயங்கிக்கொண்டுதானிருக்கிறது. நரம்புப்பின்னலுக்குள் நுழைந்து நுழைந்து உன்னை வருத்தும்/உருக்கும் நரம்பைப் பற்றி வேரோடு பிடுங்கியெறிவதற்காய் நீயின்னும் தீவிரமாய் யோசிக்கத்தொடங்கும்போதே இன்னுமொரு குரூரமான உலகிற்குள் நீ நுழையத்தொடங்கிவிடுகிறாய். வாழ்வின் அபத்தங்களிலிருந்து தப்பியோடுவதால் நீதான் அவற்றிலிருந்து விலகிப்போகிறாயே தவிர, அவை உன்னைப் பின் தொடராமல் இருக்கும் என்பற்கு எத்தகைய உத்தரவாதமுமில்லை. அது ஆடையில் அப்பிக்கொண்ட உருக்கப்பட்ட தாரைப்போல அகற்றமுடியாதிருக்கின்றது. உனக்கான தெரிவுகளைத் தெரிவு செய்த நீ அதற்கான விளைவுகளையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொள்ளவேண்டும் என்று இருத்தலியம் கூறக்கூடும் உனக்கான முற்பிறப்பின் பாவங்களின் ஊழ்வினையை நீ அனுபவிக்கத்தான் வேண்டுமென மதங்கள் வேறொரு திசையில் நின்று விளம்பவும்கூடும். ஆனால் உன் நிலை பரிதாபமானது, எனெனில் நீயிரண்டிலும் இல்லை. இந்த மற்றதுகள் நீ மூர்க்கமாய் நிராகரித்தவை அல்லது உன்னை அவை நிராகரித்தவை. ஆகவே நீ இவற்றைச் சொந்தம் கொண்டாடி ஒரு மூலையில் இருந்துகொண்டு இவை குறித்து எழுதப்பட்ட பிரதிகளைப் புரட்டி புரட்டி சமாதானமாகிவிடமுடியாது. நீ சாதாரணமானவன், உனக்கான பலங்களை விட பலவீனங்களுடன் இயங்கிக்கொண்டிருப்பவன். இந்த நாளின் இந்தக்கணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் என்றெண்ணியபடி கழிவிரக்கமுள்ள நேற்றிலும் நிச்சயமற்ற நாளையிலும் பொழுதுகளை விரயமாக்கிகொண்டிருப்பவன். செய்யவேண்டிய காரியங்களையோ எதிர்கொள்ளவேண்டிய சவாலகளையோ தட்டிக் கழித்தபடி எனது இயல்புநிலை குலைகின்றதென முணுமுணுத்தபடி நள்ளிரவு ஆந்தைகளோடு கரியவிருளில் உனது வழிகளைத் தொலைப்பவன். நீ மிகவும் இயலாத சந்தர்ப்பங்களில் உன்னை விமர்சிக்கத் தொடங்குகின்றாய். ஆனால் அந்த வாசிப்புகள உனது தவறுகளைத் திருத்தமுடியாமல் அறிவியலிலோ ஆன்மீகத்திலோ காரணங்களை உனது விளைவுகளுக்கு தேடத் தொடங்கும்போது நீ உன்னையல்ல பிறரைத் தான் விமர்சிகின்றேனெனும் புரிதலையடைந்து மீண்டும் அபத்தங்களின் நுண்ணிய வட்டங்களுக்குள் சிக்கிவிடுகின்றாய். யாருக்கும் உயர்ந்தவனுமல்ல தாழ்ந்தவனுமல்ல என்று கூறத்தொடங்கும்போதே நீ யாருகோ உயர்ந்தவனாகவும் யாருக்கோ தாழ்ந்தவனாகவும் இருக்கத் தொடங்கிவிடுகிறாய். மதம், இனம், சாதி, காலசாரம் போன்றவற்றை மிகவும் மட்டந்தட்டியபடி, ஆனால் அப்படிக்கட்டுக்களோடு இருப்பவர்களால் எப்படி இப்படி நிம்மதியாக வாழமுடிகின்றது என்பதை உள்ளுக்குள் பிரமிக்கவும் செய்கின்றாய். உலகமற்ற உலகில் உண்மையற்ற உண்மையில் நீயற்ற நீ சாத்தியம்தானா என்றெல்லாம் யோசித்துப்பார்க்கத் தொடங்குகின்றாய். உண்மையற்ற உண்மை நீயற்ற நீயின் மேலேறி நின்று தொடர்ந்து பேசவிடாது தவிர்க்கச் செய்கிறது. அபத்தஙகளோடு வாழ்வது பல சிக்கலகளுக்கும் புதிர்களுக்கும் அழைத்துச் செல்லும் எனவெண்ணும் நீ உன் காலகளிலிருந்து ஆரம்பித்து உடம்பு முழுவதுமிருக்கும் மயிர்களை சிலவேளைகளில் வேதனையோடும், பல சமயங்களில் ஒருவித கிளுகிளுப்பான இன்பத்தோடும் பிடுங்கியெறியத் தொடங்குகின்றாய். அவ்வாறு செய்வதால் உனது அடையாளங்களைத் தொலைத்து உன்னைப் பின் தொடர்ந்து வரும் அபத்தப் பிசாசுகளின் நிழல்களிலிருந்து தப்பிவிடலாம் என்று நம்புகின்றாய். பின் குவிந்துகிடக்கும் மயிர்களை எரியூட்டி உனது பிரதியை அழித்துவிட்டேன் என நீ நடனமாடிக் குதூகலிக்கும்போது எரியூட்டப்பட்டவை தனக்கான பிரதியை எழுதிக்கொள்கிறது. அதில் முழுதும் உன்னைப்பற்றிய விபரங்கள் நிகழ்காலத்தோடும் எதிர்காலத்தோடும் எழுதப்பட்டுக்கொண்டிருப்பது உன்னை மிகவும் அச்சுறுத்துகிறது. உன் கனவுகளுக்குள் இருக்கும் கள்வனையும், காமுகனையும், போதைக்கு அடிமையாகுபவனையும் அது வெளிப்படுத்திக்கொள்ள நீ நிர்வாணமாக்கப்படுவது அறிந்து அதிர்கிறாய். மேலும் நிர்வாணம் என்பது மிகப்பெரும் விடுதலையென்ற எளிய புரிதல் கூட இல்லாது மிகவும் கோபிக்கத் தொடங்கி, இந்தப்பிரதியிற்கு எதிர்ப்பிரதியை உனது தோலைக் கிழித்து உன்னை நியாயமாக்கும் வகையில் எழுதத்தொடங்குகின்றாய். சிலவேளைகளில் உனது பிரதியிலிருந்து எழும் குரல்கள் இவை பொய்கள் என்று உரத்துக்கொடுக்கும்போது அந்தப்பக்கங்களைக் கிழித்து கிழித்து கரப்பான் பூச்சிகளைப்போல காலில் வைத்து தேய்த்தழிக்கிறாய். இவ்வாறான இரண்டு பிரதிகளுக்கு அப்பால் காலம் தன் மூன்றாவது பிரதியை எழுதுகிறது. அங்கே, 'நீ உனக்கு நேர்மையாக இருந்தாய்' என்ற கல்லறை வாசகம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அதைத்தாங்க முடியாத நீ கடற்கரையை நோக்கி ஓடும்போது குளிர்ப்பருவத்தின் முதல் பனி, மயிரும் தோலுமில்லாத உனது உடலில் ஒரு பெரும் வெடிகுண்டைப் போல விழுந்துவெடிக்கின்றது.. காற்று, இரத்தம் பாய்கின்ற நாடிகளில் நுழைந்து குரூரத்தின் இசையை வாசிக்கிறது. அலைகளை, கடல் துப்பித் துப்பியெறிய நீ எழுதிய இரண்டாவது பிரதி கரையத் தொடங்குகின்றது. அது ஒரு படகைப் போல மெல்ல மெல்ல அசைந்து செல்வதைப் பார்க்கையில் உனது இருத்தலை மீள நிர்மாணிப்பதற்கான கடைசித் துருப்பு என விளங்குகின்றபோதும் வெறித்தபடி நீ வாளாவிருக்கிறாய். பின், உனது மற்றவர்கள்/மற்றதுகள் உன்னையின்னும் பின் தொடர்ந்துகொண்டிருக்கும் அச்சத்தில் நீ நண்டுகள் நிறைய நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு குழியினுள் உன்னைப் புதைத்துக்கொள்கின்றாய். அங்கேயும் குடும்பம், உயர்வு/தாழ்வு, அமைப்புகள், இதுவே சிறந்ததென்கின்ற தத்துவ வியாபாரங்கள் இருப்பதைப் பார்த்து உனது வாழ்வின் அபத்தங்களுக்கு என்றுமே தீர்வில்லையெனத் தெளிவடைகிறாய். ஆனால் அங்கிருந்த நண்டுகளின் இராணி நண்டு உனது மயிர்களும் தோலுமில்லாது துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தை முலைகளைப் போல உறிஞ்சத் தொடங்கும்போது நீ ஆணும்/பெண்ணும் கலந்த அர்த்தநாரீஸ்வர நிலையை அடைந்துவிடுகின்றாய். உன் இதயம் உறிஞ்சப்படும் ஒவ்வொரு முறையும் நீ உலகெங்குமுள்ள மனம்பிறழ்ந்தவர்களின் துயர வாழ்வை அனுபவிக்கத் தொடங்கின்றாய். துயரங்களுக்கும், பாரிய வன்முறைக்கும் அப்பால் அவர்கள் தமக்கான உலகில் தாங்களாக வாழ்வதைப் பார்த்து அவ்ர்களில் ஒருவனாய் என்றைக்குமாய் இருந்துவிடத் துடிக்கிறாய். எனினும் அதுவாக மாறுதல் அல்ல அதுவாக ஆகுதல் என்பதே உண்மையான உனகான மீட்சி என்று கூறி இதயமுறிஞ்சிய இராணி நண்டு உன்னை குழிக்கு மேலே தூக்கியெறிந்துவிடுகிறது. பனிவிழுந்து ஈரஞ்சிலிர்த்திருக்கும் மணலில் வந்தொதுங்கிய பாசியொன்று உன்னோடு உரையாடத் தொடங்கும்போது உனக்கு மீண்டும் மயிர்களும் தோலும் வளர்ந்திருப்பதைக் கண்டு மிகவும் அச்சமடைகிறாய். ஒரு உச்சக்கட்ட புணர்வு தரும் இன்பத்திற்கு நிகரான உற்சாகத்தில் நீ நட்சத்திரமொன்றில் சுருக்குப்போட்டு நிலவு நாற்காலியை உதைத்துதுன் கால்களை விடுவித்து விடுதலையைத் தேடிக்கொள்கின்றாய். உனது இனி உனதல்லாத உடலம் பிரபஞ்சப் பெருவெளியில் அலையத்தொடங்குகிறது நடுநடுங்கியபடி.

2.
தொடர்ந்து துயரம் மழையைப் போல இடைவிடாது கொட்டிக் கொண்டிருக்கும்போது அவன் செய்வதறியாது திகைக்கத் தொடங்குகின்றான். இப்படியெல்லாம் தனக்கும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நடக்குமா என்று நினைத்தபடி தொடர்ந்து சிந்திப்பதே ஒரு வன்முறையாக சூனியத்திற்குள் இழுத்துச்செல்வதைப் பார்க்கச் சகிக்கமுடியாது ஒரு நீண்ட துயிலுக்கு சென்றுவிட விரும்புகின்றான். ஒரு பின்னேரப் பொழுதில் factoryயின் பின்வாசலொன்றில் நின்றபடி தனக்கு மிக நெருக்கானவருடன் ப்கிர்வதற்கு காத்துக்கொண்டிருக்கின்றான். ஆனால் அவர் அவனைவிட இந்நிகழ்வுகளால் நிலைகுலைந்திருப்பதைப் பார்த்து தான் பகிரவிரும்பியதைப் பகிராது இருட்டாகிக்கொண்டிருக்கும் வானத்தை வெறித்தபடி வார்த்தைகளை எண்ணியெண்ணி உரையாடத் தொடங்குகின்றான். பின்னர் மனது வெடித்துவிடக்கூடுமென்ற பாரத்துடன் மின்னொளிகளால் நிரப்பப்பட்டிருக்கும் உதைபந்தாட்ட மைதானத்தின் விளிம்பில் நின்றபடி தனக்கு பிரியமானவளுக்கு தொலைபேசுகிறான். வார்த்தைகளில்லாது தடுமாறும் அவள இவ்வாறான பொழுதுகளில் அவனுக்கருகில்லாத துயரத்தை தன் பெருமூச்சுகளால் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாள. இதுவரையில்லாத கடவுள் நம்பிக்கை நீ துயரங்களிலிருந்தும் விடுபடுவதற்காகவேனும் எனக்கு வந்துவிடக்கூடாதோ எனும் நெகிழ்வுதரும் வார்த்தைகளை அலைவரிசையில் கரைக்கிறாள். அந்த இதமான வார்த்தைகளுடன் அவன் தாண்டவக்கூத்திற்கு ஆயத்தாமாகின்றான். 'சாவதும் ஒரு கலை' என்று கூறிய சில்வியா பிளாத் கூட முதல்முயற்சியிலேயே நேர்த்தியாக தனது கலையை நிகழ்த்தினாரில்லை
.

நாடற்றவனின் குறிப்புகள்

Thursday, June 07, 2007

-கவிதைத் தொகுப்பு: இணையத்தில் வெளியீடு செய்தல்-

elanko1

கவிதைகளைத் தொகுப்பாக்க வேண்டுமென்று வலைபதிவு நண்பர்களிலிருந்து -வலைப்பதிவுக்கு அப்பாலிருந்து- உற்சாகப்படுத்திய நண்பர்கள்வரை அனைவரையும் இத்தருணத்தில் அன்புடன் நினைவுகூர்கின்றேன். தொகுப்பு வேலைக்கு உதவி என்று நான் தேடிப்போன அனைவரும் தங்களால இயன்ற உதவிகளையும் ஆலோசனைகளையும் மனமுவந்து தந்திருந்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தொகுப்பு வேலையின்போது அருமையான சிலர் புதிதாக நணபர்களாகியும் இருக்கிறார்கள்.

எனது சோம்பலாலும் -இவையெல்லாம் கவிதைகள்தானா- என்று வந்த சோர்வாலும், தொகுப்பு வேலையிலிருந்து தப்பியோட முனைந்தபோதெல்லாம், மீண்டும் தொகுப்பு வேலைக்கு இழுத்து வந்து அமர்த்திய பிரியமானவர்களின் கரங்களை நெகிழ்வுடன் பற்றிக்கொள்கின்றேன். பத்து வருடங்களுக்கு மேலாய் எழுதிக்கொண்டிருக்கின்றேனென காலம் கணக்குச் சொன்னாலும், அவற்றிலிருந்து ஒரு ஐம்பது ந்ல்ல கவிதைகளைத் தேர்ந்தெடுப்பது என்பதே எவ்வளவு கடினமாய் இருந்தது என்பதை நினைக்கும்போது கடக்கவேண்டிய தூரம் மிகத் தொலைவில் இருப்பது புரிகிறது.

ஒரு வருடத்திற்கும் மேலாய் நீண்ட இத்தொகுப்பு வேலைக்கு உதவிபுரிந்த அனைவரையும் பட்டியலிட்டு பிரதியில் நன்றி கூருதல் சாத்தியமில்லை. பட்டியலிட்டவர்களை விட பட்டியலிட்டப்படாத நண்பர்களின் எண்ணிக்கை நீண்டதானது. அனைவரின் நினைவுகளையும் நேசத்துடன் பத்திரப்படுத்தியபடி வழிப்பயணம் தொடரும் நன்றி.


Nadattavain Kuripukal (Poetry Collection in Tamil)
Elanko, First Edition: 2007
Published by Ampana


பிரதிகளுக்கான தொடர்புகளுக்கு:
டிசே (இளங்கோ)
E-mail: elanko@rogers.com / dj_tamilan25@yahoo.ca

தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம்:
'அடையாளம்'
1205/1 Karupur Salai,
Puthanatham 621310, TamilNadu

Federico García Lorca

Thursday, May 31, 2007

-மொழிபெயர்ப்பு கவிதை முயற்சிகள்-

கார்சியா லோர்கா தமிழ்ச்சூழலில் நன்கு அறியப்பட்ட ஒரு ஸ்பானிய படைப்பாளி. அவரது கவிதைகளை வாசிக்க வாசிக்க ஒரு புதுவிதமான உலகு எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எளிமையான வார்த்தைகளால்... ஆனால் நிறைய படிமங்களால் ஆனவை அவரது கவிதைகள். சடப்பொருடகளுடனான அவரது உரையாடல்கள் குறிப்பிட்டுச்சொல்லவேண்டியவை. (அப்படி நினைக்கும்போது தமிழ்ச் சூழலில் நினைவுக்கு வருபவர், சோலைக்கிளி). லோர்காவின் நாடகங்களை விதந்து பேசியளவுக்கு அவரது கவிதைகள் குறித்து எழுதிய கட்டுரைகளைத் தமிழில் வாசித்தது குறைவு. இடதுசாரித்துவம் மீது ஈர்ப்பிருந்த லோர்கா ஸ்பானிய உள்நாட்டுப்போரால அவரது 38 வயதில் சுட்டுக்கொல்லப்பட்டவர். (லோர்காவின் கவிதைத் தொகுப்புகளை வாசித்ததை முன்வைத்து ஒரு கட்டுரை எழுத விருப்புண்டு; ஆசை கோடி, பட்டியலோ நீளும்.)


lorca
(1898-1936)
Saturday Paseo: Adelina

தோடை
கடலில் வளர்வதோ
காதல் *செவில்லாவில் முகிழ்வதோ அன்று.
நீ நிழலில் நான் தகிக்கின்ற சூரியன்
உனது குடையை இரவல்தா

நானெனது பொறாமையின் விம்பங்களை அணிவேன்
எலுமிச்சையும் நாரத்தையுமான சாறு
உனது வார்த்தைகள்
உனது குற்றமுள்ள சிறு வார்த்தைகள்
சிறிது நேரத்திற்கு நீந்தத் தொடங்கும்.

தோடை
கடலில் வளர்வதில்லை.
ஆ.., அன்பே!
செவில்லாவில் காதலும் இல்லை.

*A city
----------------------

கிற்றார்
(The Guitar)

கிற்றாரின் விசும்பல்
ஆரம்பிக்கிறது
விடியலின் கோளங்கள்
துவசமாக்கப்பட்டன.
கிற்றாரின் விசுமப்ல
ஆரம்பிக்கிறது.
அதை அமைதியாக்குவது
பயனற்றது.
அதை நிசப்தமாக்குவது
சாத்தியமற்றது.
அது அலுப்புடன் விசும்புகிறது,
பனிப்புலத்தின் மேலாய்
நீரைப் போல
காற்றைப் போல
விசும்புகிறது
அதை அமைதியாக்குவது
சாத்தியமற்றது
தொலை தூரத்திலுள்ளவைக்காய்
அது விசும்புகிறது
சூடான தென்னக பாலைவனங்கள்
வெள்ளை கமீலியாஸுக்காய் காத்திருக்கின்றன.

விசும்பும்;
இலக்கில்லாத அம்புக்காய்
காலை இல்லாத அந்திக்காய்
கிளையின் மேல் இறந்த முதலாவது பறவைக்காய்.
ஓ கிற்றார்!
ஜந்து வாட்களால்
இதயம் பயங்கரமாய்க் காயப்படுத்தப்பட்டது.
------------------------

பேச்சற்ற சிறுவன்
(The Little Mute Boy)

சின்னப்பையன் தேடிக்கொண்டிருந்தான்
தனது குரலை
(சில்வண்டுகளின் அரசனிடம் அது இருந்தது)
தண்ணீரின் துளியொன்றில்
சின்னப்பையன் தனது குரலைத் தேடிக்கொண்டிருந்தான்.

அதனுடன் பேசுவதற்காய் அதெனக்கு(குரல்) வேண்டாம்
நானொரு மோதிரத்தை அதிலிருந்து உருவாக்குவேன்
அவ்வண்ணம் அவன் தனது சின்னவிரலில அணியக்கூடும்
எனது மெளனத்தை.

தண்ணீரின் துளியொன்றில்
சின்னப்பையன் தனது குரலைத் தேடிக்கொண்டிருந்தான்.

(கைப்பற்றப்பட்ட குரல், வெகு தொலைவில்
சில்வண்டுகளின் ஆடையை அணிகிறது)
------------

பிரியாவிடை
(Farewell)


நான் இறந்தால்,
பலகணியைத் திறந்தபடியே விடுக.

சிறுவன் தோடம்பழங்களை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்
(எனது பலகணியிலிருந்து, அவனைப் பார்க்க முடியும்)

அறுவடை செய்பவன் கோதுமையை அறுவடை செய்துகொண்டிருக்கிறான்
(எனது பலகணியிலிருந்து, நான் அவனைக் கேட்கமுடியும்)

நான் இறந்தால்,
பலகணியை திறந்தபடி விடுக.
--------------


மலட்டுத் தோடையின் பாடல்
(The song of the Barren Orange Tree)

மரம்வெட்டி.
என்னிலிருந்து எனது நிழலை வெட்டு
கனியாக ஆகமுடியாத அவஸ்தையை
என்னிலிருந்து விடுவி

கண்ணாடிகளுக்கு மத்தியில் நானேன் பிறப்பிக்கப்பட்டேன்?
நாள்
என்னைச் சுற்றி சுற்றி படர்கின்றது
இரவு
தனது அனைத்து நட்சத்திரங்களிலும்
என்னை நகலெடுக்கிறது.

நானெனது விம்பமில்லாது வாழ விரும்புகிறேன்.
பிறகு என்னைக் கனவு காண அனுமதி,
எறும்புகளும் *Thistledownம்
எனது இலைகளும் கிளிகளுமாக.

*தமிழில் எப்படிக் கூறுவது?
--------------------------

பிரியமுள்ள நண்பர் ஒருவருக்கு அனுப்புவதற்காய் கார்சியா லோகாவின் கவிதைகள் சிலதை மொழிபெயர்த்தேன். எனது மொழியின் போதாமையால் இதை மொழிபெயர்ப்பு என்று சொல்லமுடியாது. நான் இக்கவிதைகளை விளங்கிக்கொண்டளவில் தழுவி எழுதியிருக்கின்றேன் என்றுதான் -நேர்மையாக- ஒப்புக்கொள்ளவேண்டும்.

வலிகளை ஆவணப்படுத்துதல்

Friday, May 04, 2007

-Provoked & Bordertownஐ முன்வைத்து-

பெண்கள் மீதான வன்முறை காலங்காலமாய் நடந்தேறிக்கொண்டேயிருக்கிறது. இனங்களின் கலாசாரங்களையும், குடும்ப விழுமியங்களையும் கட்டிக்காக்கவென்று கட்டியெழுப்பப்பட்ட மதங்களோ, கலாசார நிறுவனங்களோ இவ்வாறான விடயங்களில் அதிகளவு குறுக்கீடு செய்யவிரும்புவதில்லை. தொடர்ச்சியாக உடல்/உளரீதியான சுரண்டலகளுக்கு ஆளாகும் பெண்கள் மனப்பிறழ்வுக்கு உள்ளாபவர்களாகவும் தற்கொலையை நாடுபவர்களாகவும் அதிக சந்தர்ப்பங்களில் மாறிப்போகின்றார்கள். அண்மைக்காலமாய் ரொரண்டோ சபவேகள் எங்கும் பெண்கள், சிறுவர்களுக்கான வன்முறைக்கெதிரான (violence against women and children) விழிப்புணர்வு பதாதைகள்/விளம்பரங்கள் பரவலாகத் தென்படத்தொடங்கியுள்ளன. வளர்ச்சியடைந்த பெருநகரங்களில் ஒன்றான ரொரண்டோவில் கூட இவ்வாறான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்பதை திடீரென்று முளைக்கும் இவ்விளம்பரங்கள் நமக்கு சாட்சியப்படுத்தியபடியிருக்கின்றன.


Provoked என்கின்ற இத்திரைப்படம், கிரண்ஜிட் என்ற இலணடனில் வசித்த பஞ்சாபி பெண்ணுக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பத்து வருடங்களாய் தனது கணவருடனும், இருகுழந்தைகளுடன் வசிக்கும் கிரண் தனது கணவனை ஓரிரவில் தீயிட்டு கொளுத்திவிடுகின்றார். தீக்காயங்களினால் இறக்கும் கணவரைக்கொன்ற குற்றத்திற்காய் கிரணிற்கு பன்னிரண்டு ஆண்டுகால ஆயுட்தண்டனை வழங்கப்படுகின்றது. இவ்வாறான ஒரு சம்பவத்தை கிரண் செய்ய அவரை உந்தித்தள்ளியது எதுவென ஆராய்கின்றபோது அவரது கணவனின் உடல்/உள வன்கொடுமைகள்தான் காரணம் என்று தெரியவருகின்றது. எனினும் வெளியுலகம் அவ்வளவு தெரியாத, ஆங்கிலம் பேச முடியாத, தன் உடற்காயங்களை வெளிப்பார்வைக்குக் காட்டத்தயங்குகின்ற கீழைத்தேய மனதுடைய கிரணால் தனது வழக்கறிஞர்களின் ஊடாக இதுகுறித்த விவாதத்தை நீதிமன்றத்தில் நடத்த முடியாமல் போகின்றது. மேலும் கிரணிற்கு தனது கணவரைத் தான் தீயிட்யெரித்து கொலைசெய்துவிட்டேன் என்ற குற்றவுணர்வு இன்னும் உறுத்துகிறது.

provokedGood

ஜெயிலில் பிற பெண்களால் கிரண் bullying ற்கு (தமிழில் என்ன?) ஆரம்பத்தில் உட்பட்டாலும், பிறகு சில நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்கிறார். ஜெயிலில் இருக்கையில், 'இப்போதுதான் எனது இரவுகள் நிம்மதியாகக் கழிகின்றன' என்கின்றபோது அவரது திருமணவாழ்வு அவருக்கு எத்தகை வலியைத் த்ந்திருக்கின்றது என்பது பார்ப்பவருக்கு புரியவரும். இதற்கிடையில் கிரணை இந்தக் கொலையைச் செய்வதற்கு உந்தித்தள்ளியது எதுவென South Asian Black Sisters என்ற அமைப்பு ஆராயத் தொடங்குகின்றது. அவரது கணவர் நிகழ்த்திய உடல் மீதான வன்முறை/பாலியல் பலாத்காரங்கள் தான் இத்தகைய முடிவுக்கு வர கிரணை provoke செயதது என்ற பிரச்சாரத்தை இலண்டன் சமூகத்தில் அவர்கள் மேற்கொள்ளத்தொடங்குகின்றார்கள். அதன் நீட்சியில் கிரணின் வழக்கை மேன்முறையீடு செய்ய விரும்பும்போது ஜெயிலில் இருக்கும் பெண்ணொருவரின் சகோதரர் முறையிலான வழக்கறிஞர் ஒருவரின் உதவி வாய்க்கிறது. அவர் இங்கிலாந்து இராணிக்கு சட்ட நுணுக்கஙளை சொல்லவல்லபர் என்பதால் இவ்வழக்கு இன்னும் பரவலான கவனத்தைப் பெறுகிறது. இறுதியில் attempted murder என்ற நிலைய்லிருந்து manslaughterற்கு வழக்கு மாற்றப்படுகிறது. இவ்வழக்கு முடிவதற்குள் -நான்கு வருடங்கள்- கிரண் ஜெயிலிற்குள் தண்டணை பெற்றுவிட்டபடியால் அத்தோடு அவர் விடுதலை பெறுகின்றார்.

கிரணைப்போன்ற கதைகள் -துணைவர்களால துன்புறுத்தப்படுகின்ற சம்பவங்கள்- பல இடங்களில் 'சாதாரணமாய்' நடந்துகொண்டிருந்தாலும், இந்தச் சம்பவத்தின் தீர்ப்பே பிற கதைகளிலிருந்து இதை வித்தியாசப்படுத்துகின்றது. 'கொலையும் செய்வாள் பத்தினி' என்று நமது கீழைத்தேயமரபுகள் போதித்துக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் ஒரு பெண் தன்னை விடுதலை செய்வதற்காய் கொலை செய்திருக்கின்றார் என்பது சற்று 'அதிர்ச்சியானது'தான். புலம்பெயர் நாடுகளில் நமது பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளின் பட்டியல் நீண்டுகொண்டேயிருப்பவை. மேலும் எம்மைப்போன்ற கீழைத்தேயங்களிலிருந்து வருகின்றவர்களுக்கு இருக்கும் கண்காணிப்புச்சுவர்கள் இவை குறித்த திறந்த விவாதங்களைப் பெண்கள் தொடக்கி வைக்க அவர்களுக்கு தடைக்கற்களாகவும் இருக்கின்றன.

இப்படத்தில் கிரணாக, ஜஸ்வர்யா சிறப்பாக நடித்திருக்கின்றார். ஆரம்பத்தில் வெளியுலகம் அவ்வளவு தெரியாத, ஆங்கிலம் தெளிவாகப் பேசமுடியாத பெண்ணாக இருந்து பிறகு ஜெயிலில் ஆங்கிலம் கற்று தெளிவாகச் சிந்திக்கும் பெண்ணாக மாறுவது என நல்லதொரு நடிப்பை ஜஸ்வர்யா தந்திருக்கின்றார். ஜெயிலிற்குள் வருகின்றபோது, பொதுவில் வைத்து ஆடைகளைக் கழற்றி ஜெயில் உடுப்புகள் அணியவேண்டும் என்ற நிலை வரும்போது, 'எங்கள் கணவருக்கு முன்னாலேயே ஆடைகள் மாற்றக் கூச்சப்படுபவர்கள் நாங்கள்' என்று ஜஸ்வர்யா பதட்டப்படுவது, உடல் குறித்த நமது சமூகத்தின் கண்காணிப்பு அரசியலை மறைமுகமாய் காட்சிப்படுத்துக்கிறது. நந்திதா தாஸ் south asian black sisters என்ற பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளாராய் வருகின்றார். எனினும் அவர் தனது நடிப்பை வெளிப்படுத்துவத்றகான் காட்சிகள் மிகக்குறைவாகவே இத்திரைப்படத்தில் இருக்கின்றது. மது அம்பட்டின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ஆரின் இசையும் புலம்பெயர்ந்த மேற்கத்தைய நாட்டில், கீழைத்தேயவரின் வாழ்வு முறையை இன்னும் நெருக்காமாய்க்காட்டுகிறது.

இங்கே கிரண் கொலையைத்திட்டமிட்டுச் செய்யப்படவில்லை என்று - அந்தக்கணத்தின் வன்முறையின் கொடூரத்தில் உந்தப்பட்டு செய்யமுயன்றார்- என்பதே கிரணிற்கான தண்டனையைக் குறைக்கின்றது. கொலை நடந்த சந்தர்ப்பத்தில் எப்படியான மனநிலையில் கிரண் இருந்தார் என்ற ஒரு பொலிஸின் சாட்சியே கிரணிற்கான முக்கிய சாட்சியாக இருக்கின்றது. அவ்வாறு நிரூபிக்கப்படாதவிடத்தில் கிரணிற்கு ஒரு கொலையைச் செய்தவருக்கான தண்டனையே வழங்கப்பட்டிருக்குமென்பது நினைவில் கொள்ளக்கூடியது.

(2)

இந்தப்படத்தைப் பார்ப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தான், போர்டர் ரவுண் (Bordertown) என்ற ஜெனிபர் லோபஸ் (Jennifer Lopez), அன்ரோனியோ பாண்டரஸ் (Antonio Banderas) நடித்த படத்தைப் பார்த்திருந்தேன். மெக்ஸிக்கோ-அமெரிக்க எல்லையில், மெக்ஸிக்கோ சுதந்திர வர்த்தக வலயத்தில் (Free Trade Zone) அமைந்திருக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் கொலை செய்து புதைக்கப்படும் உண்மைச் சம்பவங்களை அடையாளப்படுத்துகின்றது. சுதந்திர வர்த்தக வலயத்தில் இருக்கும் அந்நிய நாட்டு நிறுவனங்கள் (அமெரிக்க நிறுவனங்கள்) குட்டிச் சர்வாதிகாரிகள் போலச் செயற்படுகின்றன. தமக்கான தனிப்பட்ட சட்டதிட்டஙகளை கொண்டு, இருபத்து நான்கு மணிநேரமும் இயங்கும் இத்தொழிற்சாலைகள், இளம்பெண்களை வேலைக்கு எடுப்பதில் முக்கிய கவனம் எடுப்பதோடு, (அப்போதுதான் அவர்கள் ஓய்வில்லாது வேலை செய்து தமது நிறுவங்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும்) இரவு நேரங்களில் வேலை முடிந்து பெண்களின் பாதுகாப்பு குறித்து எவ்வித அக்கறையும் இல்லாமல் இருக்கின்றன.

இவ்வாறு வீடுதிரும்பும் வழிகளில் பல பெண்கள் காணாமற்போகின்றார்கள். அப்படியொருநாள் வீடு திரும்பும் வழியில் பாலியல் வன்புணர்ச்சியிற்கு உள்ளாக்கப்பட்டு அரையுயிருடன் தப்பும் ஒரு பூர்விக குடிப்பெண்ணின் மூலம் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரத்தொடங்குகின்றன. ஆனால் இந்த உயிருள்ள சாட்சியைக் கொலைசெய்ய பலர் தீவிரமாக முயற்சிக்க, அந்தப்பெண் ஒரு பத்திரிகையின் உதவியை நாடுகின்றார். அதே சமயம், இவ்வாறு பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படும் பெண்களின் செய்தியறிந்து சிகாகோவிலிருக்கும் ஒரு பத்திரிகை, செய்திகள் சேகரிப்பதற்காய் தமது நிருபரை (ஜெனிபர் லோபஸை) மெக்சிக்கோவிற்கு அனுப்புகிறது. சுதந்திர வர்த்தக வலயங்களில் நடக்கும் கொடூரங்களை பாதிக்கப்பட்ட பெண்ணின் பார்வையினூடு கட்டுரைகளாக எழுதி ஜெனிபர் தனது பத்திரிகை நிறுவனத்திற்கு அனுப்புகிறார். இந்தக்கதைகள் வெளியுலகத்திற்கு வந்தால்தான் பாதிக்கப்பட்ட அந்தப்பெண்ணின் எதிர்கால வாழ்வு காப்பற்றப்படும் என்ற நிலையிலும், அமெரிக்க பத்திரிகை நிறுவனம் அந்தக்கட்டுரைகளை பிரசுரிக்க மறுக்குகின்றது. கோபம் கொண்டு நிருபர் (ஜெனிபர்) வினாவுகின்றபோது, பத்திரிகை உடபட எல்லாமே பெருநிறுவனங்களால் ஆளப்படுபவை; அவற்றிற்கு எதிராய் எதையும் எழுதிவிடமுடியாது என்ற காரணம் கூறப்படுகிறது. இதற்கிடையில் மெகிசிக்கோவில் ஜெனிபருக்கு உதவியாக இருக்கின்ற பத்திரிகையாளர் (அன்ரோனியோ பண்டர்ஸ்) கொல்லப்படுகின்றார். இனி அமெரிக்கப் பத்திரிகையில் தனக்கு வேலை வேண்டாம் என்று தனது வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு வருகின்ற ஜெனிபர் தனது நண்பரின் மெக்ஸிக்கோ பத்திரிகையில் இணைந்து வேலை செய்யத் தொடங்குகின்றார்.

இறுதியில் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் மனித உரிமைகள் அமைப்பால் பாதுகாக்கப்பட்டு, அவரைப் பாலியல் வன்புணர்ந்து கொலைசெய்ய முயன்ற சில கொலைகாரர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். எனினும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றபடி இருக்கின்றன. இந்தக்கொலைகள் நடப்பதை ஏதோவொருவகையில் அமெரிக்கப் பெருநிறுவனங்களும், மெக்ஸிக்கோ அரசும் அங்கீகரிக்கின்றன என்ற குறிப்புகளை விட்டபடி திரைப்படம் நிறைவுறுகிறது. வறுமையான கிராமப்புறங்களிலிருந்து வரும் பெண்கள் பாலியல் வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்டு நூற்றுக்கணக்கில் அடையாளங்கள் இல்லாது மறைக்கப்படுவது குறித்து எவருக்கு அக்கறையிருக்கப்போகின்றது? அரசுக்கு தமது கெளரவம் வெளியுலகில் கெட்டுவிடக்கூடாது என்ற கவலையும், பெரு நிறுவங்களுக்கு இவ்வாறான செய்திகளால் தமது இலாபம் பாதிக்கப்படும் என்ற பதட்டம் வருவதும் 'சாதாரண'மானதே.

bDGood

உழைப்பவர்களை மனித இயந்திரங்களாக்கி ஓய்வுநேரங்களையும் மனித விழுமியங்களையும் மூன்றாமுலக நாடுகளில் விழுங்கி ஏப்பமிட்டுக்கொண்டிருக்கும் உலகமயமாதலின் விளைவுகள் குறித்து விரித்து ஆராய வேண்டிய அவசியம் இங்கு தேவையில்லை. இப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஈழத்தில் இருந்தபோது, 'இலங்கை வளநாட்டை பொருளாதாரத்தால் உயர்விக்க அமைக்கப்பட்ட சுதந்திர வர்த்தக வலயங்களையும், வந்திறங்கிய நிறுவங்களையும்' பாடப்புத்தகங்களில் வாசித்த குறிப்புகள் நினைவுக்கு வருகின்றன. கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரியில் படித்த காலங்களில் எங்களோடு பஸ்ஸிலும், நடந்தும் வருகின்ற சுதந்திர வர்த்தக வலயத்தில் உழைப்பவர்களுக்கு இருக்கும் நெருக்கடிகள்/சுரண்டல்கள் குறித்து நிதானமாய் இப்போது யோசித்துப்பார்க்கமுடிகின்றது. அதைவிட made in Sri Lanka, made in Bangaladesh என்று வருகின்ற ஆடைகளை அணியும்போது எத்தனைபேரின் உழைப்பு மிகக்கேவலமாய் சுரண்டப்பட்டிருக்கும் என்பது குறித்தும் கவலைப்படவேண்டியிருக்கிறது.

இப்படத்தை எடுக்கும்போது மெக்ஸிக்கோ நாட்டின் கண்காணிப்பு அதிகளவு இருந்தது என்று இப்படம் எடுத்தவர்களின் குறிப்பு கூறுகின்றது. அதைவிட அமெரிக்கா பெருநிறுவங்களை இதை எப்படி உன்னிப்பாய் கவனித்திருக்கும் என்பது குறித்துக் கூறத்தேவையில்லை. தமது நடிப்புத் தொழில் இவ்வாறான ஒரு படத்தில் நடிப்பதால் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தை மீறி, இப்படத்தில் நடிக்கமுன்வந்த ஜெனிபஸ் லோபஸும், அன்ரோனியோ பண்டரஸும் பாராட்டப்படக்கூடியவர்கள். மேலும் இப்படி பிரபலமானவர்கள் நடிக்கின்றபோடு இவ்வாறான திரைப்படங்கள் பரவலான பார்வையாளர்களைப் போய்ச்சேரும் என்பதையும் நினைவூட்டிக்கொள்ளலாம்.

Provoked, BorderTown போன்ற படங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்படவேண்டும். பொதுப்பார்வைக்கு வைக்கப்பட்டு விரிவான உரையாடல்கள் வளர்க்கப்படவேண்டும். அவற்றின் மூலமான அதிர்வுகள் ஆட்சியிலிருப்பவர்களையும், அதிகாரங்களை ஆக்குபவர்களையும் சலனமடையச் செய்தாலே பல மாற்றங்கள் சாத்தியப்படக்கூடும். கிரண் தனது வழக்கின் முடிவில் கூறுவார், இங்கே நான் பாதிக்கப்பட்டேன், விடுதலை பெற்றுவிட்டேன் என்று மகிழ்ச்சியடைய முடியாது, வெளியில் சொல்லப்படாத பல கதைகள் சொல்லப்படாமலே இருக்கின்றன. அவை குறித்தும் நமது பார்வைகள் விரியவேண்டும் என்பது நம் எல்லோருக்குமானது.


வாசித்த சில இலத்தீன் அமெரிக்க கதைகள்

Wednesday, April 25, 2007

- சாருநிவேதிதாவின் 'கடல்கன்னி'யை முன்வைத்து-

மொஸார்ட் என்றால் யார் என்று சரியாகத் தெரியாமல் இருப்பது - அவனுடைய ஆரம்பம் -அவனுடைய முக்கியத்துவம் - அவன் உத்தி பற்றிய விபரங்கள் எல்லாம் தெரியாமல் இருப்பது - அவனையே நம் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல அனுமதிப்பதைப் போன்றது - ஒன்றும் தெரியாமல் இருப்பதுதான் எவ்வளவு சந்தோசமான விடயம்!
-Maria Lusia Bombal on The Tree

உலக வாசக பரப்பில் ஒரு காலத்தில் அதிக கவனம் பெற்றிருந்த சோவியத்து படைப்புகள் பின்னகர்ந்து செல்ல அந்த வெற்றிடத்தை இலத்தீன் அமெரிக்கப் படைப்புகள் பின்னாட்களில் நிரப்பத் தொடங்கின. சர்ரியலிஸமும், பின்நவீனத்துவமும் அறிமுகப்படுத்தப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்ட சூழலிருந்து புதுவகையிலான கதைசொல்லும் பாங்கு இலத்தீன் அமெரிக்கா நாடுகளில் முகிழ்ந்தெழத்தொடங்கின. அங்கிருந்த பல நாடுகளின் சமநிலையற்ற அரசியற் சூழ்நிலைகள் மற்றும் நெருக்கடிகளால், நேரடியாகக் கதைசொல்லும் முறைகளிலிருந்து விலகிய மாய யதார்த்தவாத கதைகள் முக்கியத்துவம் பெறத்தொடங்கின. 'கடல்கன்னி' என்று சாருநிவேதிதாவால் மொழிபெயர்க்கப்பட்ட இத்தொகுப்பில் ஒரு கதையைத் தவிர மிகுதி அனைத்தும் இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கதைகளாகும். ரஷ்யப்படைப்புக்களைப் போல இலத்தீன் அமெரிக்கா படைப்புகள் பெரும்பான்மையில் மானுடநேசிப்பே அடிநாதமாய் ஓடிக்கொண்டிருக்கின்றது. இயற்கையின் மீதான பாடலும், பூர்வீக மண் மீதான பற்றும் அநேக பிரதிகளின் ஓரங்களில் தொடர்ந்து கசிந்தபடி இருக்கின்றன.

மரியா லூயிஸாவின் (María Luisa Bombal) 'மரமும்', ஆர்த்துரே பியேட்ரியின் (Arturo Pietri) 'மழையும்' இத்தொகுப்பிலுள்ள அருமையான கதைகள். மரம் கதையில் ஒரு குடும்பத்தில் ஐந்து பெண்களுக்குப் பிறகு ஆறாவதாகப் பிறக்கும் பெண்ணே முக்கிய பாத்திரமாகின்றாள். ஐந்தும் பெண்களாக இருக்கின்றார்களே என்ற அலுப்பில் ஆறாவதாய்ப் பிறக்கும் பெண்ணிற்கு வெளி உலகம் பற்றி எதுவும் கற்பிக்காமல் வீட்டிற்குள் வைத்து அவளது பெற்றோர்கள் வளர்க்கின்றார்கள். அந்தப்பெண்ணும் வெகுளியும் அறியாமையுமாய் வாழ்வைக் கழிக்கின்றாள். தனது சகோதரிகள் அனைவரும் இசையிலும் இன்னபிறவற்றிலும் தேர்ச்சி பெற இவள் அது குறித்து எவ்வித பிரக்ஞையுமின்றி வளர்வதோடு, தனது வயதுக்கு சற்று அதிக வயதில் இருக்கும் லூயிஸையும் மணந்துகொள்கின்றாள். லூயிஸிற்கு வேலை என்பதே வாழ்வின் முக்கிய விடயம் என்பதைத்தவிர தனது இளம் மனைவியோடு சந்தோசமாய் பொழுதைக்கழிப்பதில் அவ்வளவு ஆர்வமில்லை. இவளுக்கோ நண்பிகள் என்று நெருங்கிப்பழகவும் எவருமில்லை. தனியே, வெளியே சடைவிரித்திருக்கும் இறப்பர் மரத்தோடு சிநேகித்தபடி இருக்கின்றாள். தனக்குள் புதைத்து வைத்திருந்த கதைகளை எல்லாம் அந்த மரத்தோடு பகிர்ந்தபடி நாட்களை நகர்த்துகிறாள்.

துணைவனோடு பல்வேறு பிணக்குகள் வந்து போகின்றபோதும் அவனைவிட்டுப் பிரிந்துசெல்ல விரும்பாதவள், இறுதியில் அந்த இறப்பர் மரத்தை -நடக்கும் பாதைக்கு தடங்கலாயிருக்கின்றதென நகர ஊழியர்கள் வெட்டும்போது- இனி தன் துணைவனோடு சேர்ந்து வாழமுடியாது என்று வீட்டைவிட்டு வெளிக்கிடத்தொடங்குகின்றாள். இதுநாள்வரை அந்தப்பெண்ணின் திருமணவாழ்வின் எல்லா அபத்தங்களையும் வலிகளையும் தாங்கிக்கொள்ளச்செய்தது அந்த இறப்பர் மரமே என்ற நினைப்பை வாசிக்கும் நம்மிடையே பதித்தபடி கதை முடிகின்றது. நாமெல்லோரும் எத்தனையோ வீழ்ச்சிகளையும் சரிவுகளையும் சந்திக்கின்றபோதும் ஏதோ ஒன்றில் நாம் மீளப்போவற்கான நம்பிக்கைகளை குவித்துவைக்கின்றோம். அந்த இறுதி நம்பிக்கையும் தகர்கின்றபோது என்னசெய்வது என்று புரியாமல் திகைப்பதும், சிலவேளைகளில் அது தற்கொலை போன்ற வாழ்வின் இறுதிக்கணங்களைத் தேடிப்போவதாய் இருப்பதும் தவிர்க்கமுடியாத ஒன்றாய் இருக்கிறது. இந்தக் கதையை எழுதிய மரியா லூயிஸா கூட தனிப்பட்ட வாழ்வின் திருமணத்தால் மன அழுத்தத்திற்கு உட்பட்டு தனது கணவரைச் சுட்டுக்கொலைசெய்ய முயன்று, தற்கொலைக்கு முயற்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆர்த்துரே பியேட்ரியின் 'மழை' கதை மாய யதார்த்தக் கதைக்கு நல்லதொரு உதாரணமாய்க் கொள்ளக்கூடியது. மழை பொய்த்துப்போகின்ற ஒரு வறண்ட கிராமத்தில் வயோதிகத் தம்பதிகள் இருவர் வசிக்கின்றார்கள். என்றேனும் ம்ழை பெய்து பயிர்களின் வறட்சியும், தமது ஏழ்மையும் இல்லாமற்போய்விடும் என்று நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். வாழ்நாள் முழுதும் இந்தத் தம்பதிகள் தங்களுக்குள் சண்டைபிடித்துக் கொண்டேயிருப்பவர்கள். இப்படியான ஒரு மனுசனோடு இத்தனை காலம், தான் எப்படி சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் என்ற வியப்புத்தான் அந்த கிழவிக்கும் அநேக நேரங்களில் வந்துபோய்க்கொண்டிருக்கும். வறட்சிமிகுந்த ஒருநாளில் கிழவன் ஒரு சிறுவனை வழியில் காண்கின்றார். அவனை வீட்டுக்கொண்டு வருகையில் -அவனது வருகையால்- சின்னச் சின்ன விடயங்களில் தமக்கிடையில் இருக்கும் அன்பை, மகிழ்வை, நெகிழ்வை அந்த முதிய தம்பதிகள் கண்டுகொள்கின்றார்கள். இவ்வளவு காலமும் இவ்வரிய தருணங்களைத் தங்களுக்குள் தவறவிட்டிருந்தோமே என்று சிறுவனை நன்றியுடன் நினைவுகூருகின்றனர். ஒருநாள் சிறுவன் காணாமற்போய்விடுகின்றான். கிழவன் அவனைத் தேடிக்கொண்டு மலையில் ஏறத்தொடங்குகின்றார். அவனது குரல் கரைந்துகொண்டிருப்பதாய் பிரமை நீள்கின்றதே தவிர அவனது உருவம அந்தக்கிழவனின் கண்களில் தென்படவேயில்லை. நேரமும் களைப்பும் கூடிச்செல்லச் செல்ல அந்த குரல் கூட இறுதியில் மறந்து/மறைந்து போகின்றது. இனியும் அந்தச் சிறுவனை தேடமுடியாது என்று நினைக்கின்றபோது மழை தூறலாய் நீண்டகாலங்களின் பிறகு பொழியத்தொடங்குகின்றது. பெருமழைபொழிந்து பயிர்கள் எல்லாம் செழித்துவளர்ந்து அந்த முதிய தம்பதிகளின் வறுமை போய்விடக்கூடுமென்ற நம்பிக்கை முகிழவதைப் பிரதியின் அடியில் மறைத்தபடி கதை முடிகிறது. உண்மையில் இந்தக் கதையில் சிறுவன் என்பதே ஒரு படிமம்தான். கதையில் அவன் இருப்பதில்லை. அந்த முதிய தம்பதிகளின் ஒரு நம்பிக்கையாய் அது படிமமாக்கப்படுகின்றது. சிறுவனின் இருப்பு உண்மையானதா அல்லது மாந்திரீகமானதா என்பதில் வரும் மயக்கம் இந்தக் கதைக்கு இன்னும் மெருகூட்டுகிறது.

அகஸ்ரோவின் (Augsutro Bastos) 'கைதி', ஈழச்சூழலில் வளர்ந்த நம்மைப்போன்றவருக்கு மிகப்பரிட்சயமான கதையாக இருக்கும். சால்டிவோர் என்ற பதின்ம வயதினனின் பார்வையில் கதை விரிகின்றது. பராகுவேயில்(?) நடக்கும் கெரிலாக்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு கட்டளையிடுகின்றது. கிளர்ச்சியாளர்களைக் களையெடுக்கும் ஒரு இராணுவப்பகுதியில் சால்டிவோர் வலுக்கட்டாயமாய் பதினெட்டு வயதில் இணைக்கப்படுகின்றான். கிளர்ச்சியாளர்களின் கடைசிப் பதுங்குமிடத்தையும் இராணுவம் சுற்றிவளைக்கின்றது. அந்த முகாமைக் கைப்பற்றி கிளர்ச்சியாளர்கள் பலரைக் கொன்றபின், முக அடையாளம் கூட தெரியாது சிதைக்கப்பட்ட ஒரு கைதிக்கு காவலாய் இருக்கும்படி சால்டிவோரை இராணுவ அதிகாரி பணித்துவிட்டு அடுத்த மனிதவேட்டைக்கு தனது 'வீரர்களுடன்' புறப்படுகின்றார். இந்தப் பையன் பயந்தபடியே கைதிக்கு காவலுக்கு இருக்கின்றான். தன்னைப்போலவன்றி கிளர்ச்சியாளர் படையில் விரும்பிச்சேர்ந்த தனது அண்ணாவின் நினைவு அவ்விரவில் அப்பையனுக்கு வருகின்றது. வாழ்வை அர்த்தமுள்ளதாக்கவேண்டுமென்ற அண்ணாவின் நெகிழ்வான வார்த்தைகள் அவனது மனவெளியில் அலையத்தொடங்குகின்றன. வெளியே புறப்பட்ட இராணுவ அணி திரும்பி வரும்போது தனது அண்ணாவையும் இந்தமுறை பிடித்துக்கொண்டு வந்துவிடுவார்களோ என்று சால்டிவோர் கவலைப்படுகின்றான். அ த்தோடு உருக்கலைக்கப்பட்டு அரையுயிரோடு இருக்கும் கைதி தன்னைவிட்டுத் தப்பியோடக்கூடும் என்று பயந்து, அந்தக்கைதியை ஒரு குழியினுள் அமிழ்த்தி தலைமட்டும் வெளித்தெரியும்படி ஓரிடத்தில் புதைக்கத் தொடங்குகின்றான். அடுத்த நாள் விடியலில் இராணுவ அணி சில கைதிகளோடு திரும்பிவரும்போது , சால்டிவோர் துப்பாகியை மட்டும் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டிருக்கின்றான். இராணுவ அதிகாரி தப்பியோடிய சால்டிவோருக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று கட்டளை பிறப்பித்து அவனைத் தேட தனது இராணுவத்தை அனுப்புகின்றார். இறுதியில் தற்கொலை செய்த சால்டிவோரின் உடலை இராணுவம் காண்கின்றது. சால்டிவோர் இப்படிப் பயந்து ஓடி தற்கொலை செயததற்கு -கைதியாய் அரைகுறை உயிராய் இருந்து இறுதியில் இறந்துபோனது தனது சகோதரன் என்பதை கண்டு- அதை ஏற்றுக்கொள்ளமுடியாத யதார்தத்தின் கொடூரமே என்ற வாசிப்புக்குறிப்பை நம்மிடையே விட்டபடி கதை முடிகிறது.

இந்தக்கதையை வாசிக்கும்போது Hernando Tellez எழுதிய Lather and Nothing Else நினைவுக்கு வருகின்றது. அதில் ஒரு கிளர்ச்சியாளன் சவரம் செய்கின்ற தொழிலாளியாக இருக்கின்றான். அங்கே சவரம் செய்ய வருகின்ற இராணுவ கப்டன், பல கிளர்ச்சியாளர்களை கொடூரமான முறையில் கொன்றுகுவித்தவன் மட்டுமில்லாது, சவரம் செய்கின்றபோதும் அடுத்து நிகழப்போகும் -கிளர்ச்சியாளர்களைப் போட்டுத்தள்ளும்- நிகழ்வையும் விபரிக்கின்றான். ஒரு கத்தியின் நுனியில் அவனது கழுத்தை துண்டித்துவிடும் சந்தர்ப்பம் வாய்த்தும், அந்தக் கப்டனைக் கொலை செய்யாது கிளர்ச்சியாளன் தப்பவிடுகின்றான். அந்தக்கொடூரனைக் கொலைசெய்ய முடியாது தடுத்தது எதுவென எண்ணும்போது, கப்டனைப் போல தான் ஒரு 'தொழில்முறை' கொலைகாரன் இல்லையென்பது என்பது அந்தக்கிளர்ச்சியாளனுக்கு உறைக்கிறது. இல்லாவிடின் அவ்வரிய சந்தர்ப்பத்தை தவறவிடுவானா என்ன? கப்டனும் 'கொலை செய்வது அவ்வளவு இலகுவல்ல; எனது வார்த்தைகளை நீ நம்பலாம்' என்று கூறியபடி நகர அக்கதை முடிவுறும்.

2.
சாருநிவேதிதாவின் 'கடல்கன்னி'யில் ஆறு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. அமெரிக்கக் கதாசிரியரான Ronald Sukenickன் கதையைத் தவிர மிகுதி அனைத்துக் கதைகளும் வித்தியாசமான வாசிப்பைத் தருகின்றன. Ronald Sukenickன் 98.6 நாவலின் வாசிப்பு, தனது சீரோ டிகிரி நாவலில் ஒரு தெறிப்பாய் இருக்கிறது என்று சாரு எங்கையோ குறிப்பிட்டது நினைவிலுள்ளது. அடிக்கடி சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்களை மாற்றிக்கொண்டிருக்கின்ற சாரு ஓரிடத்தில் குறிப்பிட்டது; தமிழில் தானும், ஜெயமோகனும், எஸ்.ராமகிருஸ்ணனும் 'மட்டுந்தான்' கதைகள் எழுதிக்கொண்டிருக்கின்றோம் என்பது ஞாபக அலைவரிசையிலுள்ளது. தொன்மங்களுக்குள்/செவ்வியல் பிரதிகளுக்குள் ஆழமும் விரிவுமான வாசிப்பைச் செய்யாது நவீனத்தோடு மட்டும் தொங்கி நின்ற படைப்பாளி என்று சுந்தர ராமசாமியை ஜெயமோகன் நிராகரிப்பதை ஒருபுறத்தில் நாம் வைத்துக்கொள்ளுவோம். ஆனால் தமிழின் தொன்மங்களுக்குள் நுழைந்து விரிவான வாசிப்பைச் செய்யும் ரமேஷ்-பிரேமின் எழுத்துகள் ஜெயமோகனின் கண்களுக்குத் தெரியாமல் இருப்பதற்கு நாகர்கோயிலும், பாண்டிச்சேரியும் 'தொலை'வில் இருப்பதைத் தவிர வேறொரு காரணமும் என்னளவில் தெரியவில்லை. அல்லது செவ்வியலில் இருந்து மீள்வாசிப்பை தன்னைப்போன்ற இந்துத்துவ 'நவீனமாதிரிகள்' மட்டுந்தான் செய்யமுடியும் என்ற எண்ண்ம் ஜெயமோகனிற்கு இருக்கின்றதோ தெரியவில்லை. ஜெயமோகனை விடுவோம்; தமது 'கிரணம்' இதழ்கள் மூலம் தளம் அமைத்துக்கொடுத்து ரமேஷ்-பிரேமை அணைத்து வளர்த்த சாருவிற்கு- உலக இலக்கிய வாசிப்பைத் தன்னைத்தவிர வேறொருவரும் விரிவாகச் செய்யவில்லையென அடிக்கடி குதூகலிக்கும் ஒரு படைப்பாளிக்கு- ரமேஷ்-பிரேமின் படைப்புகள், கண்களைச் சிறிது கூட உறுத்தவில்லையா என்பதுதான் வியப்பாயிருக்கிறது. எஸ்.ராமகிருஸ்ணன் போன்றோர் கூட மாய யதார்த்த கதைகள் எழுதி -இதெல்லாம் நமக்குச் சரிவராதென- மீண்டு/மீண்டும் யதார்த்தவாத கதைசொல்லல் முறைக்குத் திரும்பியிருக்கின்றவேளையில் தொடர்ந்து பலவித பரீட்சார்த்த முயற்சிகளில் கதை சொல்லல் முறைகளையும் கால அடுக்குகளையும் குலைத்துப் போட்டபடி நகர்ந்தபடியிருக்கும் ரமேஷ்-பிரேமின் கதைகளை நம் இலக்கிய விமர்சகர்கள் மிக இலகுவாய் புதைத்துப்போட்டு நகர்ந்துகொண்டிருப்பதில் இலக்கிய அரசியலைத் தவிர வேறெதனைக் காரணமாய்ச் சொல்லமுடியும்?

இத்தொகுப்பில் இருக்கும் சாருவின் உறுத்தாத மொழிபெயர்ப்புகள் குறிப்பிட்டுச்சொல்லவேண்டியவை. சைபர் ஸ்பேஸிற்கும், சாட்டில் கதைத்த பெண்கள் சென்னை வரும்போது நேரில் தன்னைச் சந்திக்க மறுத்த 'கன்னித்தீவுக்கதைகளை' பத்திகளில் எழுதி, வாசிக்கும் நமது தலையைச் சொறியவைக்கும் (பேன்/சொடுவால் அல்ல) சாரு, இவ்வாறான மொழிபெயர்ப்புகளைச் செய்தாலே பல வாசகர்கள் அவருக்கு நன்றியுடையவர்களாய் இருப்பார்கள். எனினும் நோநோவை எழுதிய, இலத்தீன் அமெரிக்கப் படைப்புகளை நேர்த்தியாக மொழிபெயர்த்த/வாசிப்புச்செய்த சாருவை வரும்காலத்தில் மீண்டும் கண்டெடுக்கும் நம்பிக்கைகள் மிக அரிதாகத்தான் துலங்குகின்றன என்பதுதான் அவலமானது.

துப்பாக்கி தின்று விழுங்கிய கவிஞன்

Tuesday, April 17, 2007

-சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்)-

விடிவுபற்றிய ஏக்கமும் தவிப்பும் எல்லா மனிதர்களிடத்திலும் தேசம் கடந்து விரவிக்கிடக்கின்றபோதிலும் இரத்தச் சகதியான இந்த வாழ்வின் மீதான பயணம் குறித்த பீதி எல்லாவற்றையும் தின்றுவிடுகின்றது.
..........
நாங்கள் பயத்தின் மீதும் சிலுவையின் மீதும் அறைந்தறைந்து ஒளியிழக்கச் செய்த எமது சொற்களை மீட்டெடுப்பது எப்போ?
இன்று எழுதப்பட்டவை பற்றியல்ல எழுதாமல் விடப்பட்டவை பற்றியே பேச வேண்டியிருக்கிறது. எல்லாம் எழுதப்பட்டுவிட்டது என நாங்கள் கருதினால் படைப்பின் மூலம் அநீதிகள் என திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டவை மீளவும் மீளவும் தலைவிரித்தாடுகிறது எனின் எமது எழுத்தின் மூலம் சிறிதளவேனும் சமூகமாற்றமோ அரசியல் மாற்றமோ நிகழவில்லை என்ற எண்ணம் எம்முள் மூளும் எனின் அது பற்றியே நாங்கள் சிந்திக்கவும் பேசவும் வேண்டியிருக்கிறது.
.......
வாழ்வு குறித்தான் இந்தப் படைப்பு முறைமையை அல்லது படைப்பாளனைச் சகித்துக்கொள்ள முடியாத, ஒரு துப்பாக்கியையோ அல்லது கத்தி, கோடரியையோ கூட கையில் எடுக்கத் துணியாத, அவற்றின் வருகைக்காக அஞ்சி ஒடுங்கும் அப்பாவி மக்களின் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடும் அரசோ அல்லது அது சார்ந்த இராணுவமோ அது சார்ந்த அமைப்புக்களோ பலி கொண்ட உயிர்களின் எண்ணிக்கை சொல்லில் உயிர்ப்பிக்க முடியாதவை.
......
இந்தக் காலத்தின் மீதும் சூழலின் மீதும் மிகப்பெரிய மாற்றம் வேண்டி விடிவுவேண்டி தமது வாழ்வை நமக்காக அர்ப்பணித்த நமது மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் பலர் தமது கடைசிக் காலத்தில் அநாதைகளாகவோ அல்லது இது தமது மரணகாலம் என்று அறியாமலே சாகடிக்கப்பட்டோரையோ நாங்கள் மிக நன்கு அறிவோம். இதில் துயரமானது என்னவெனில் அது இன்றும் நிகழ்ந்து கொண்டிருப்பதுதான்.

அடக்குமுறையாளர்களின் கொடூரம் ஒருபுறம் இடப்பெயர்வும் வறுமையும் நோயும் மறுபுறம் என சீரழிக்க்கப்படும் ஒரு எழுத்தாளனது குரலை நாங்கள் இந்தத் தேசம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. இதற்காக ஒன்றிணையவும் குரல் கொடுக்கவும் உங்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. இந்த உரிமைக்கான குரலாக நிலம் உங்கள் முன் வருகிறது.
....
(நிலம் இதழ் 03, நவம்பர்/2001- தலையங்கத்திலிருந்து சில பகுதிகள்...)

Nilam

சூரியனைக் கவர்ந்து சென்ற மிருகம்

என் அன்புக்கினிய தோழர்களே
எனது காதலியிடம் சொல்லுங்கள்
ஆயிரக்கணக்கில் மனிதர்கள் குழுமியிருந்த
வனாந்தரத்திலிருந்து
ஒரு மிருகம் என்னை இழுத்துச்சென்றுவிட்டது;
கடைசியாக நான் அவளுக்கு முத்தமிடவில்லை
அவளது கண்களில் வழமையாயிருக்கும் ஒளியை நான் காணவில்லை
கணங்களின் முடிவற்ற வலி தொடர்கிறது.
கடைசிவரை, நட்சத்திரங்களையோ புறாக்களையோ
எதிர்பார்த்த அவளுக்குச் சொல்லுங்கள்
எனது காலத்திலும் எனது காலமாயிருந்த
அவளது காலத்திலும் நான் அவற்றைக்காணவில்லை;
என்னை ஒரு மிருகம் இழுத்துச்சென்றுவிட்டது.

நான்,
இனிமேல்,
எனது சித்திரவதைக்காலங்களை
அவளுக்கு ஞாபகப்படுத்தமுடியாது
எனவே தோழர்களே,
நான் திரும்பமாட்டேன் என்றோ அல்லது
மண்டையினுள் குருதிக்கசிவாலோ
இரத்தம் கக்கியோ
சூரியன் வெளிவர அஞ்சிய ஒரு காலத்தில்
நான் செத்துப்போவேன் என்பது பற்றிச்சொல்லுங்கள்.

நம்பிக்கையற்ற இந்த வார்த்தைகளை
நான் அவளுக்குப் பரிசளிப்பது
இதுவே முதற்தடவை, எனினும் அவளிடம் சொல்லுங்கள்
அவர்கள் எனது இருதயத்தை நசுக்கிவிட்டார்கள்
மூளையை நசுக்கிவிட்டார்கள்
என்னால் காற்றை உணரமுடியவில்லை.

எஸ்போஸ்
-10.09.2001 கைது செய்யப்படுவதற்கு எட்டு நாட்களுக்கு முன்னர் எழுதியது-

......
எஸ்போஸ் எனப்படும் சந்திரபோஸ் சுதாகர் தனது முப்பத்திரண்டாவது வயதில் துப்பாக்கிகளுக்கு வாழ்வை இரைகொடுத்தவர். துப்பாக்கிகள் ஆளும் காலத்தில் துப்பாக்கிகளால் வேறெதைச் செய்ய ஏலும்? அல்லது நம்மால்தான் ஏது செய்ய இயலும்?

எஸ்போஸ், கவிதைகளுக்காய் 'நிலம்' என்ற காலாண்டிதழை நடத்தியவர். தெரிந்த கவிஞர்களின் கவிதைகளை மட்டுமில்லாது, கவிதைகளுக்கான விமர்சனங்களையும், புதிய கவிஞர்களை இனங்காட்டவும் 'நிலம்' காலாண்டிதழின் ஊடாக எஸ்போஸ் முயன்றிருக்கின்றார். யாழ் இடப்பெயர்வுகளை (?) காலச்சுவட்டில் எழுதியபோது -காலச்சுவட்டின் அசிரத்தையால்- எஸ்போஸின் சொந்தவிபரங்கள் வெளியிடப்பட்டு 2001 ஆண்டில் அரச இயந்திரத்தினால் கைதுசெய்யப்பட்டவர் (மேலே தரப்பட்ட கவிதை அவர் கைதுசெய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் எழுதப்பட்டது). 'நிலத்தில்' மட்டுமின்றி பலவேறு இதழ்கள்/சஞ்சிகைகளில் பரவலாக எழுதியவர்.


அவரது ஏழு வயது மகன் சாட்சியாய் இருக்க நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார் என்பது மிக அவலமானது. முன்னர் -2001ல்- கைதுசெய்து சித்திரவதைக்கு பின் எஸ்போஸை விடுதலை செய்த 'மனிதாபிமானம்' கூட இந்தமுறை துப்பாக்கிகளோடு வந்தவர்களுக்கு இருக்கவில்லை.

மக்கள் இல்லாமற்போய்க்கொண்டிருப்பதை இலக்கங்களில் மட்டுமே கணக்கில்கொள்ளும் ஒரு நிலப்பரப்பில் தனித் தனியாக ஒவ்வொருத்தருக்கும் அஞ்சலியோ சொட்டுக்கண்ணீரோ விடுவதுகூட அருகதையற்றதாகிப் போய்க்கொண்டிருக்கின்றது.....

தவறவிடப்பட்ட தருணங்களும் விழுங்கப்பட்ட வார்த்தைகளும்

Friday, March 16, 2007

-ஈரானியத் திரைப்படம் Baranஐ முன்வைத்து-

அகதிகளின் வாழ்வை எவராலும் முழுமையாகப் பதிவு செய்துவிடமுடியாது. இருண்ட குகைக்குள் ஒரு மின்மினியின் ஒளியாவது வந்துவிடாது என்றவாறுதான் பல அகதிகள் உலகெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். எத்தனையோ இழப்புக்களுடன் வாழுகின்ற அகதிகளுக்கு வாழ்வில் சின்னச்சின்னதாய் தம்மை நெகிழ்த்திவிட்டுப்போகும் அழகிய தருணங்கள எத்தகை அருமையானது என்பதை -பிறரைவிட- அவர்களே அதிகம் அறிவர். தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்லுதல் சிலருக்கு சில மாதங்களில், சிலருக்கு சில வருடங்களில், சிலருக்கு வாழ்நாட்களில் அப்படியொரு சந்தர்ப்பம் வராமலே போய்விடுவதுமுண்டு. Baran என்கின்ற இப்படம் அகதி வாழ்வில் முளைக்கும் மென்மையான காதலை இயல்பாய்க் காட்சிப்படுத்தியபடி விரிகின்றது.

ஈரானில் ஒரு அடுக்குமாடியைக் கட்டும் பின்புலத்தோடு படம் ஆரம்பிக்கின்றது. அங்கே ஈரானியர்களும் -அரசால் வேலை செய்ய உரிமை மறுக்கப்பட்ட- ஆப்கான் அகதிகளும் வேலை செய்கின்றார்கள். கட்டட வேலை செய்வதற்காய் பதின்மவயது லரீஃவ் (Lateef) அந்த இடத்திற்கு வருகின்றார். அங்கே லரீஃப் பிறரைப்போல சீமெந்துப்பைகளைக் காவுவதையோ, சுவர்களைக் கட்டியெழுப்புவதிலோ ஈடுபடுவதில்லை. அவருக்கான வேலை, அந்த வேலைத்தளத்தில் வேலை செய்பவர்களுக்கு தேநீரும், உணவும் தயாரித்து வழங்குவது. அதன் காரணமாக பிறரால் கேலி செய்யப்பட்டும், அவ்வப்போது சிலரோடு சண்டையும் பிடித்தபடியும் இருக்கின்றார், லரீஃவ்.

ஒருநாள் தவறுதலாய் ஒரு ஆப்கானிய அகதித்தொழிலாளர் மாடியிலிருந்து கீழே வீழ்ந்துவிடுகின்றார். அவரது கால் பலமாய்க் காயப்பட்டு வேலை செய்ய முடியாதுபோக அவரது மகனொருவன் (Rahmat) வேலைக்காய் வருகின்றார். கட்டட மேற்பார்வையாளர், அந்தப் பையன் மிகவும் சிறுவனாயிருக்கின்றான்; இவனால் கடுமையான் வேலைகளைச் செய்ய முடியாது என்று முதலில் நிராகரிக்கின்றார். இறுதியில் இந்தப்பையனுக்கும் வேலை இல்லாது போனால் அந்தக்குடும்பத்தால் சாப்பிடக்கூட முடியாது என்றபடியால் வேலைக்குச் சேர்த்துக்கொள்கின்றார். எனினும் அந்தப்பையன் வாய்திறந்து பேச முடியாத ஊமையாக இருக்கின்றான். ரமட் கடுமையான வேலைகளைச் செய்யக் கஷ்டப்படுவதால், லரீஃவின் வேலை ரமட்க்கு வழங்கப்படுகின்றது. மேலும், ரமட் தயாரிக்கும் தேநீரும், மதியவுணவும் சுவையாக இருக்கின்றது என்று பிறர் கூறுவது லரீஃவிற்கு பொறாமையைத் தருவதோடு, தனது இலகுவான வேலையை புதிதாய் வந்த ரமட் எடுத்துவிட்டார் என்று ரமட் மீது கோபமும் வருகின்றது. எனவே லரீஃவ் தொடர்ந்து ரமட்டை நக்கலடித்தபடியும் காயப்படுத்தியபடியும் வேலைத்தளத்தில் இருக்கின்றார்.

b4

தற்செயலாய் ஒருநாள் ரம்ட் ஆணல்ல -ஆண்வேசம் போட்ட பெண் என்பதை- லரீப்ஃ கண்டுபிடிக்கின்றார். அதன்பிறகு, அதுவரை ரமட் மீது இருந்த வெறுப்பும் பொறாமையும் போய்விட லரீஃப்ற்கு அந்தப்பெண் -rahmat- மீது ஈர்ப்பும் பரிவும் வந்துவிடுகின்றது. சில வாரங்களின் பின், ஆப்கான் அகதிகள் சட்டதிற்கு புறம்பாய் வேலை செய்கின்றார்கள் என்று கேள்விப்பட்டு அரச அதிகாரிகள் வேலைத்தளத்திற்கு வர லரீஃவ், ரமட்டை அவர்களிடமிருந்து காப்பாற்றுகின்றார். எனினும் தொடர்ந்து அந்தப்பகுதியில் ஆப்கான் அகதிகள் வேலை செய்யமுடியாத நெருக்கடிநிலை வருகின்றது.

ரமட் வேலைக்கு வருவதை முற்றாக நிறுத்தியதால், லரீஃவ்வை பிரிவும் வெறுமையும் சுழற்றியடிக்கின்றது. ரமட்டை தேடி லரீஃவ் ஆப்கான் அகதிகள் வாழ்கின்ற ஈரானிய நிலப்பரப்பை நோக்கிச் செல்கின்றார். வேலை எதுவுமின்றி ரமட்டும், காயப்பட்ட அவரது தகப்பனாரும் மிகவும் கஷடப்படுகின்றார்கள் என்பது புரிகின்றது. லரீஃவ் திரும்பவும் தனது வேலைத்தளத்திற்கு மீண்டு, தனது மேற்பார்வையாளரிடம்- ஊரில் தனது சகோதரி கடும்பிணியில் இருக்கின்றார்- ஒருவருடதிற்கான தனது சம்பளத்தை இப்பவே தாருங்கள் என இறைஞ்சுகிறார். மேற்பார்வையாளரும் பரிதாபப்பட்டு பணத்தைக் கொடுக்க, அதை ரம்ட் குடும்பத்தினரிடம் கொடுத்துவும்படி அவர்களின் நண்பரொருவரிடம் லரீஃவ் கொடுத்தனுப்புகின்றார். அந்த நபரோ --ரமட்டின் தகப்பனிடம் பணத்தைக் கொடுக்காது- அந்தப் பணத்துடன் ஆப்கானிஸ்தானுக்கு ஓடிவிடுகின்றார்.

இப்படியாக லரீஃவ், ரமட்டுக்கு உதவி செய்யப்போகின்ற ஒவ்வொருமுறையும் ஏதோவொரு தடங்கல் வந்துகொண்டேயிருக்கின்றது. இறுதியில் வேலை செய்வதற்கு அவசியமான த்னது அடையாள அட்டையை விற்று லரீஃவ் பணத்தைத் திரட்டுகின்றார் (அந்தப்பகுதியில் அகதிகள் நிறைய இருப்பதால் அடையாள அட்டை மிகவும் பெறுமதி வாய்ந்தது; புகைப்படத்தை கிழித்துவிட்டு வேறொருவரின் படத்தை அதில் இலகுவாய் ஒட்டி விற்கலாம்) . அந்தப்பணத்தை லரீப்ஃ நேரடியாக ரமட் குடும்பத்திடம் கொடுக்கும்போது அவர்கள் கூறும் ஒரு செய்தி இடியாக லரீஃவ் வின் நெஞ்சினில் இறங்குகின்றது. தன்னைவிட்டு ரமட் விரைவில் விலகப்போகின்றார் என்ற துயரம் லரீஃவ்வின் விழிகளில் கசிகிறது. கடைசிக்காட்ச்யில், ரமட் சிறுகுட்டையில் தனது பாதச் சுவட்டை பதித்துவிட்டுப் போவதை லரீஃவ் வெறித்துப் பார்த்தபடி இருக்கின்றார். ரமட், லரீஃவ்வை விட்டு விலகிச்செல்ல செல்ல, பெய்கின்ற மழை ரமட்டின் பாத அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாய் மறைப்பதுடன் படம் முடிகின்றது.

இப்படம் எளிய காட்சிகளாலும் சொல்லாடல்களாலும் நகர்த்தப்ப்பட்டுக்கொண்டிருக்கின்றன. வருகின்ற கதாமாந்தர்கள் வளவளவென்று நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருப்பதில்லை. பருவங்களோடு காட்சிகள் சடுதி சடுதியாய் மாறுவதைக் கமரா கலைநயத்தோடு படம்பிடிக்கின்ற அதேசமயம், கதை நிகழும் நிலப்பரப்பிலிருந்து கமராக் கோணம் நகர்ந்தும் விடுவதில்லை. இப்படம் ஒரு அகதிப்பெண் மீது, இன்னொரு நாட்டு ஆண் காதல் கொளவதை மென்மையாகச் சொன்னாலும், வருகின்ற ஆண்-பெண் பாத்திரங்கள் வாய் திறந்து எந்த உரையாடலையும் நேரடியாக நிகழ்த்தவில்லை. அவர்களுக்கிடையில் முகிழும் இவ்வழகிய உறவு சிறுசிறு காட்சிகளால் மட்டுமே நுட்பமாய் கவனப்படுத்தப்பட்டிருக்கும்.

(2)

இப்படத்தைப் பார்க்கும்போது காலம் எனக்குள் பின்னோக்கி மெல்ல மெல்ல நகர்ந்துகொள்ளத் தொடங்கியது. என்னுடைய பன்னிரண்டு பதின்மூன்று வயதுகளில் மட்டக்களப்பிலிருந்து ஒரு பெண் எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்திருந்தார். கிழக்கு மாகாணத்தில் இருந்த சூழ்நிலை அவரையும் அவரது குடும்பத்தையும், வடக்கு நோக்கி துரத்தி அடித்திருந்தது. அதுவரை நாங்கள் -மூன்று பெடியங்கள்- வகுப்பில் முதல் மூன்று இடங்களில் மாறி மாறி வந்துகொண்டிருப்போம். ஆனால் புதிதாய் வந்திருந்த பெண்ணின் அறிவுக்கூர்மை எங்கள் எவரேனும் ஒருவரின் இடத்தை இல்லாமற்செய்துவிடும் என்ற பதட்டத்தை உருவாக்கியிருந்தது. என்னென்ன நேரங்களில் எப்படி எல்லாம் அவர் படிகின்றார் என்பதை எல்லாம் கவனமாய் நாங்கள் உளவு பார்க்கத் தொடங்கியிருந்தோம். எனினும் அவர் ஒவ்வொருமுறையும் பாடங்களில் கூடிய புள்ளிகள் எடுக்கும்போது ஒருவித பொறாமை கலந்த மகிழ்வுடன் பின்னாட்களில் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினேன்.

b3

பிறகு போர்ச்சூழ்நிலைகளால் பல மாதங்களாய் பாடசாலை நடைபெறாமல் இருந்தவேளை அவரது வீட்டிற்கு சென்று ஆங்கிலமும் கணிதமும் படிப்பது நாளாந்த கடமையாயிற்று. அவரது தந்தையார் ஒரு கணித ஆசிரியர். நான் விடிகாலை எழும்பி முகங்கழுவி -நல்ல மூட் இருந்தால் குளித்துவிட்டு- அவர்களின் வீட்டை போனேனென்றால் மதியவுணவு வரை எங்களுக்கு கணித வகுப்பு நடக்கும் (வெவ்வேறு வயதுகளிலிருந்த பத்துப்பேர்கள் வரை அங்கே படித்துக்கொண்டிருந்தோம்). மதியவுணவின் பின் ஆங்கில வகுப்புக்கள் நடைபெறும். இன்னொரு ஊரில் அவர்களின் வீடு இருந்தபடியால், மதியவுணவுக்காய் வீட்டை வந்தபின் பிறகு பின்னேர வகுப்புக்காய் சைக்கிளை உழக்குவேன். சிலவேளைகளில் அந்தப்பெண்ணின் வீட்டிலையே சாப்பிட்டுவிட்டு நண்பர்களோடு விளையாடுவதும் உண்டு. ஆங்கிலச் சொற்களின் ஸ்பெல்லிங்கை கிளிப்பிள்ளை போல மனப்பாடம் செய்துவந்த பருவத்தில் -அப்படியல்ல- சொற்களை ஒலியாய் உச்சரிப்பதன் மூலம் இலகுவாய் ஸ்பெல்லிங்கூட்டி எழுதலாம் என்ற விளங்கப்படுத்திவிட்டவரும் அவர்தான். எனினும் நாங்கள் ஓம்/இல்லை என்பதற்கப்பால் பெரிதாக எதையும் உரையாடியதில்லை. வகுப்பில் எனது இடத்தை அவர் அபகரித்துவிடுவார் என்ற அச்சமும் பொறாமையும் என்னை அவரிடம் அதிகம் நெருங்க அனுமதிக்கவில்லை போலத்தான் தோன்றுகின்றது. ஆயினும் -இருவரும்- நமக்கிடையிலுள்ள ஈர்ப்பையும் பரிவையும் வேறு விதங்களில் வெளிப்படுத்தியபடி இருந்திருக்கின்றோம். பிறகு எங்கள் ஊர்ப்பக்கம் நிலைமை மிகவும் மோசமாகத் தொடங்கியது. ஒருநாள் ஒழுங்கையொன்றில் சந்தித்த அந்தப்பெண்ணின் தம்பி, தாங்கள் இன்னும் சில நாட்களில் இந்தியாவிற்குப் படகில் போகப்போகின்றோம் என்று கூறினார். அப்போதுதான் முதன்முறையாக அந்தப்பெண்ணோடு -ஓமோம்/இல்லை என்பதற்கப்பால்- சற்று விரிவாக மனந்திறந்து ஒருமுறையேனும் பேசவேண்டும் என்ற ஆசை எனக்குள் அரும்பத்தொடங்கியது.

எனது பொறாமைகள், பதட்டங்களுக்கு அப்பால் அவரை நோக்கி காதல்(?) மெல்லியதாய் வளர்ந்துகொண்டிருந்தது என்பது அந்தச்செய்தியினூடு எனது உள்மனதிற்குள் விளங்கத்தொடங்கியது. அவருடன் பேசுகின்றபோது ஏதேனும் ஒரு வார்த்தையிலேனும் எனது நேசத்தைத் தெரிவித்துவிடவேண்டும் என்ற விருப்பு நுரையாய் ததும்பிக் கொண்டிருந்தது. எனினும் போர் அதற்கெல்லாம் அவகாசம் தராமல் எங்களிருவரையும் வெவ்வேறு திசைகளில் மிக வேகமாய்.... மிக மோசமாய்... அடித்துத் துரத்தியது. தவறவிடப்பட்ட தருணங்களும், விழுங்கப்பட்ட வார்த்தைகளும் காலம்பூரா தொண்டைக்குழிக்குள் சிக்கிய மீன்முள்ளாய் மெல்லிய வலியைத் தந்துகொண்டிருக்கின்றது.

(3)
மஜீத் மஜீதியின், இப்படம் (Baran) அவரின் Children of heaven, Colour of Paradise போன்ற படங்களுக்குப் பிறகு 2001ல் வெளிவந்திருந்த படம். தணிக்கையும், ஒடுக்குமுறைகளும்(?) இருக்கும் ஈரானிலிருந்து இப்படியான படங்கள் வருகின்றன் என்பதோடு ஈரானில் குறிப்பிடத்தக்க பெண் நெறியாள்கையாளரும் இருகின்றார்கள் என்பதை மேற்கத்தேய சிந்தனைகள் ஈரான் பற்றி கட்டியெழுப்பும் விம்பங்கள குறித்து நிறைய யோசிக்கவேண்டி இருக்கின்றது. ஈரானின் பல்வேறு பகுதிகளில் அடிப்படைவாதத்தை மீறிய இஸ்லாம் இருப்பதைப்போன்று கூட, அமெரிக்கா பின்புலத்தில் இருக்கும் சவுதி அரேபியாவின் பலபகுதிகளில் இல்லையென்பது கவனிக்கத்தக்கது.

மஜீதியின் பிறபடங்களைப் பார்த்தவர்கள் இந்தப்படத்திலும் அவற்றின் தொடர்ச்சியைக் காணமுடியும். தேநீர் பரிமாறுகின்ற நேர்த்தி, நகர- புறநகர் பாகுபாடுகள் தொடர்ச்சியாக மஜீத்தின் படங்களில் வந்துகொண்டே இருக்கின்றன. Children of Heaven படத்தின் இறுதியில் வரும் சிறு மீன் குட்டையும், சிவப்பு மீன்களும் இந்தப்படத்திலும் வருகின்றது. மீன் குட்டையையும், மீன்களையும் ஒரு படிமமாய் நாங்கள் பார்க்கமுடியும். நாமெல்லோரும் பல நேரங்களில் தொட்டிக்குள் அகப்பட்ட மீன்கள்தான். நாம் விரும்பினாலும் நம்மால் அதன் கரைகளை உடைத்து நினைத்த விடயங்களைச் சாதிக்கமுடியாமல் பல சந்தர்ப்பங்களில் யதார்த்ததில் இருக்கின்றோம் அல்லவா? இப்படத்தில் வரும் லரீப்ஃ, ரமட்டும் கூட, நமக்கு தொட்டிக்குள் அகப்பட்ட மீன் குஞ்சுகளாய்த்தான் தெரிகின்றார்கள்.

b2

Baran படம், காதல் அரும்புவதை மென்மையாகச் சொல்வதைப் போன்றிருந்தாலும் அடிநாதமாய் இருப்பது அக்திகளில் துயரவாழ்வுதான். அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாயினும் அவர்களும் சக மனிதர்களாய் மதிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கபபட ஒவ்வொரு நாடும் உதவ வேண்டும் என்ற அவாவே இப்படத்தில் முக்கிய இழையாக இருக்கின்றது. 9/11 தாக்குதல் அமெரிக்காவில் நடப்பதற்கு முன்னரே, ஈரானில் 1.5 மில்லியன் ஆப்கான் அகதிகள் புலம்பெயர்ந்திருக்கின்றார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படக்கூடியது. தலிபான காலத்து ஆப்கானிஸ்தானை சித்தரிக்கும் ஒசாமா (Osama) படத்தைப் பார்க்கும் ஒருவர், அப்படத்தில் Baran படத்தின் பாதிப்புக்கள் சில இடத்தில் இருப்பதை தெளிவாகக் காணமுடியும்.

பலவேறு மொழிகளைப் பேசுபவர்களாய், வெவ்வேறுபட்ட நிலப்பரப்புகளிலிருந்து வருகின்றவர்களாய் இருப்பினும் அகதிகளின் சோகங்களும் வெறுமைகளும் ஆளுக்காள் அவ்வளவு வேறுபடுவதில்லை. எல்லா அகதிகளும் தம் சொந்த நாட்டிற்கு/ ஊரிற்கு திரும்புவதைப் பற்றியே நிறையக் கனவுகளைக் கண்டுகொண்டிருக்கின்றார்கள். பலருக்கு அவை வெறும் கானல் கனவுகளாய்ப் போய்க்கொண்டுமிருக்கின்றன. பலர் தங்கள் நாட்டில்/ஊரில் அழகான ஆறுகளும், உயர்ந்த மலைகளும், அற்புதமான வாழ்வும் ஒருகாலத்தில் இருந்ததென -தேவதைக்கதைகள் போல- தமது சந்ததிகளுக்குச் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். போர்ச்சூழலில், எல்லாமே எங்களைக் கைவிட்டபொழுதிலும் உயிர்வாழ்வதற்கு நல்ல தண்ணீரைத் தருவதை மட்டும் எங்கள் ஊர்க்கிணறுகள் ஒருபோதும் நிறுத்தியதேயில்லை என்று அகதியாக்கப்பட்ட நானும் பிள்ளைகளுக்குச் சொல்லவென சில கதைகளை மனதினுள் தேக்கிவைத்திருந்தேன். ஆனால் இப்போது தண்ணீருக்குப் பதிலாய் மனித உடல்கள் எங்களூர்க்கிணறுகளிலிருந்து மிதந்துகொண்டிருக்கின்றன என்பதை அறிந்தபின்னும் எப்படி கிணறுகள் பற்றிக் கதைகள் சொல்லமுடியும்?

(அண்மையில் கொலைசெய்யப்பட்டு கிணற்றினுள் போடப்பட்ட யாழ் வளாக மாணவி, மயூராவிற்கு....)

நினைவெழுதும் ஒரு காலத்தின் உறைநிலை

Monday, March 12, 2007

(நாளை, உலகக்கிண்ண கிறிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்போகின்றன. காற்பந்தாட்டத்தில் பிரேசில் வெல்லவேண்டும் என்று விரும்ப, சென்றவருடம் நிலைமை தலைகீழாய் மாறியிருந்தது. எனவே அவுஸ்திரேலியா வெல்லட்டும் என்று வெளியே உரக்கச்சொல்லிக்கொண்டு, மேற்கிந்தியத்தீவுகள் கிண்ணத்தை சுவீகரிக்கவேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொள்கின்றேன். இந்தமுறை வெல்கிறதோ இல்லையோ இலங்கை அணிக்கு எனது ஆதரவில்லை. மேற்கிந்தியத்தீவுகள் வெல்லாது போனால், அடுத்து தென்னாபிரிக்கா (if not) நியூசிலாந்து வெல்ல வேண்டும் என்று நேர்ந்துகொள்கின்றேன்).
-விளையாட்டுக்கள் பற்றிய சில குறிப்புக்கள்-
(மீள்பதிவு)

அண்மையில் ஒரு நண்பரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது கதையின் நடுவில் எனக்கு கிறிக்கெட் ஒரளவுக்கு விளையாடத்தெரியும் என்றபோது அவரால் நம்பமுடியவில்லை. யாழில் இருந்தபோது பாடசாலையின் பதினைந்து வயதுட்குட்பட்டவர்களின் கிறிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியிருக்கின்றேன் என்ற அத்தாட்சிப்பத்திரம் வாசித்தபோதும் அந்த நண்பர் ஒருவித நகைச்சுவையாகத்தான் கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு மட்டுமில்லை, இன்று மிகச் சோம்பேறியாக காலங்கழிக்கும் எனக்கும் இப்படியெல்லாம் ஒருகாலத்தில் இருந்திருக்கின்றேன் என்று நினைக்கும்போது வியப்பாய்த்தானிருக்கிறது. -எங்கள் தாத்தாவுக்கு முன்னொருகாலத்தில் யானை இருந்தது - என்று பழம்பெருமை பேசுவதை விட வாழ்வில் உவப்புத்தரக்கூடிய விடயங்கள் வேறேதும் உள்ளனவா என்ன?

யாழில் இருந்தபோது கிறிக்கெட் மட்டுமில்லை, உதைபந்தாட்டம், சதுரங்கம் போன்றவற்றிலும் ஆர்வத்துடன் பங்குபற்றி, பாடசாலை பாடசாலைகளாய் போட்டிகளுக்காய் அலைந்து திரிந்தது என்றுமே மறக்கமுடியாத நிகழ்வுகள்தான். அதுவும், எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து சிறந்த பெறுபேறுகள் பெற்றாலும் கிடைக்காத புகழ் -பத்து நிமிடத்தில் பிரபல்யம் ஆகுவதுபோல- இவ்வாறான விளையாட்டுக்களில், தடகளபோட்டிகளில் ஈடுபடுபவர்க்கு பாடசாலையில் வந்துவிடுவது பலருக்கு பொறாமையைத்தான் கொடுத்திருக்கின்றது.

பாடசாலைக்கு அருகிலேயே வீடு இருந்ததனால் சிறுவயதிலேயே, அதிகமான பின்னேரப்பொழுதுகளை பாடசாலை விளையாட்டு மைதானத்தில்தான் கழித்திருக்கின்றேன். மைதானத்தின் நடுவில் கிறிக்கெட் பயிற்சிகள் நடக்கிறதென்றால், மைதானத்தின் இருகரைகளிலும் உதைபந்தாட்டப்பயிற்சிகள் களைகட்டும். இவர்களுக்கு நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன என்று மைதானத்தின் ஒருமூலையில் வலைபந்தாட்டப் பயிற்சிகள் (netball) நடக்கும். பயிற்சிகளில் பங்குபெற முடியா சிறுவயதில் இவற்றில் எந்த விளையாட்டை நான் அதிகம் இரசித்துக் கொண்டிருப்பேன் என்று எவருக்கும் கூறத்தேவையில்லை. எனது இந்தப்பழக்கம் -தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்- தொடர்வதை என் சுயபுராணத்தின் சாட்சிகளாய் நீங்கள் அவதானித்துக்கொண்டிருப்பதால், தன்னடக்கம் காரணமாய் அது குறித்து விதந்து பேசுவதை இந்தப்புள்ளியில் நிறுத்திக்கொள்கின்றேன்.

எங்கள் பாடசாலையில் விளையாட்டு மைதானத்தை நான்குபுறமும் சூழ்ந்து வகுப்பறைகள் இருந்ததனால், கிறிக்கெட்டோ, உதைபந்தாட்டமோ, வலைபந்தாட்டமோ நடைபெறப்போகின்றதென்றால், மத்தியானமளவிலேயே பாடசாலையை மூடிவிடுவார்கள். வீடு அருகில் இருப்பவர்கள் வீடுகளுக்குப் போய்த் திரும்புவதும், தொலைவில் இருப்பவர்கள் அன்றைய விளையாட்டு முடியும்வரை பாடசாலையில் நிற்பதுமாய் அனேகருக்கு அன்றையபொழுது இனிதாய்க் கழியும் (வகுப்புக்குள் இருந்து, புத்தகத்தைத் திறந்து, கொட்டாவி விட்டு, வாத்தி முறைத்துப் பார்க்காத எந்தப்பொழுதும் எனக்கு அருமையானதுதான்). ஒரு காலத்தில் எங்கள் பாடசாலையின் உதைபந்தாட்டப் புகழ் அகில இலங்கைவரை பரவியிருந்தது (’பட்டிக்காடா பட்டணமா?’ என்று போஸ்டர் ஒட்டி ஆட்டங்களை விறுவிறுப்பாக்கும் வரைபோனதாகவும்…) என்று கேள்விப்பட்டிருந்தாலும், நான் படித்த காலங்களில் பெண்கள்தான் வலைப்பந்தாட்டத்தில் மிகப்பிரபல்யமாய் இருந்தனர். அதிலும் வலைபந்தாட்டத்துக்கு என்று ‘என்றுமே புகழ்’ பெற்றிருந்த உடுவில், சுண்டிக்குளி, வேம்படி மகளிர் கல்லூரிகளுக்கே இவர்கள் பயத்தை வரவழைத்துக் கொண்டிருந்த காலமது. வலைப்பந்தாட்டத்துக்கு கூடும் கூட்டத்தைப்பற்றியும், அங்கே நடக்கும் சுவாரசியமான விடயங்கள் குறித்தும்- சொல்லாமல் புரிவர் பெரியார்- என்பதற்கிணங்க அதிகம் விபரிக்கத்தேவையில்லை என்றே நினைக்கின்றேன்.

பாடசாலை அணிக்காய் வலைப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருந்த அக்காமார்களில் சிலர் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களாய் இருந்ததாலும் அவர்கள் மூலம் வலைபந்தாட்டம் விளையாடும் பிற அக்காமார்களும் எனக்கு நன்கு பழக்கமாயிருந்ததாலும் கொம்புகள் முளைத்த மாதிரியான எண்ணந்தான் அன்றையகாலகட்டத்தில் எனக்குள் பரவியிருந்தது. அதுமட்டுமில்லாமல், இப்படி ‘பெரும் புகழுடன்’ நானிருக்கின்றேன் என்று பல அண்ணாமார்களுக்குத் தெரிந்து, விளையாடும் அக்காக்களுடன் ‘சில உடன்படிக்கைகள்’ செய்யும் நோக்கத்துடன் என்னை இரகசியமாய் அணுக எனது நிலை சிறகுகளில்லாமல் வானில் பறந்த கதையாயிற்று. ஆனால், அது பிறகு 'வானில் போன பிசாசை ஏணி வைத்து இறக்கிய அவதியாய்' சில அண்ணாக்களுக்கு நான் உபத்திரமாய் ஆகிப்போனதும் சோகமான விடயந்தான்.

எனக்கு விளையாட்டுக்களின் மீது ஆர்வம் வந்தற்கு, எனது அண்ணாவுக்கு கிறிக்கெட், உதைபந்தாட்டம் போன்றவற்றிலிருந்த மோகம் ஒரு காரணம் என்றாலும் இன்னொரு முக்கியமான காரணமும் இருந்திருக்கும் என்று இப்போது யோசிக்கும்போது தோன்றுகின்றது. அது என்னவென்றால், பெடியங்கள் கிறிக்கெட், உதைபந்தாட்டம் விளையாடும்போது அவர்களை உற்சாகப்படுத்தவரும் பெண் இரசிகர்களின் எண்ணிக்கையையும் உற்சாகத்தையும் கண்டும்தான் எனக்கும் விளையாட்டில் ஆர்வம் வந்திருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். ஆனால் நான் எங்கள் கிறிக்கெட் அணிக்கு தலைமைதாங்கும்போது அது ஒரு சோகமான நிலையை அடைந்தது குறித்து பிறகு கூறுகின்றேன். பன்னிரண்டு வயதளவில் பதினைந்து வயதுட்குட்பவர்களின் கிறிக்கெட் அணியில் எடுபடும் வாய்ப்பிருந்தும், கொழும்புக்கு விடுமுறையில் சென்று சில வாரங்கள் கழித்ததில் அந்த வாய்ப்பு கைநழுவிப்போனதில் எனக்கு மிகுந்த கவலையாக இருந்தது. சரி கிறிக்கெட்தான் கைநழுவிப்போய்விட்டது உதைபந்தாட்டத்திலாவது கவனஞ்செலுத்தலாம் என்று அந்தப்பக்கம் பார்வையைத் திருப்பலானேன். விடிகாலையில்தான் உதைபந்தாட்டப் பயிற்சிகள் நடக்கும். பயிற்சி முடிந்தபின் - அன்றையகாலகட்டத்தில் பிரேமதாசா பாடசாலைகளுக்குக் கொடுத்துக்கொண்டிருந்த இரண்டு கப் பாலும், சங்கிலி பணிஸ¤ம் எல்லோருக்கும் வழங்கப்படும். ஒரு மாதிரியாக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலாவது போட்டியில் முதலாவது கோலும் அதிஸ்டவசமாய் நான் போட்டிருக்கின்றேன். எப்படி கோல் போட்டது என்று சொன்னால் கொஞ்சம் அவமானந்தான் ஆனால் சொல்லாமலும் இருக்கமுடியவில்லை. வேறொரு நண்பன் கோலுக்கு அடித்த பந்தை, கோலி தட்டுத்தடுமாறித்தடுக்க அதையெடுத்துத்தான் கோல் போட்டனான். Rose is a rose is a rose என்ற மாதிரி எப்படி என்றாலும் கோல் கோல்தானே என்று என்சார்பாய் நீங்கள் பேசுவதும் நன்றாகவே என் காதுகளில் விழுகிறது என்க.

ஆட்டங்களுக்கு முன் ஒரு சம்பிரதாயமான பழக்கம் -ஆதிகாலத்தில் இருந்தே- எங்கள் பாடசாலையில் இருந்தது. பாடசாலையில் இருந்த கோயிலிலும், பக்கத்த்தில் இருந்த வைரவர் கோயிலிலும் தேங்காய் உடைத்து ‘வெற்றியைத்தாரும்’ என்று பிரார்த்திப்பதுதான் அது. ஆனால் கோயில்களுக்குள் போக முன்னரோ, போனதன் பின்னரோ, அல்லது இடையிலோ பச்சை முட்டைகள் குடிப்பதை மட்டும் மறக்கமாட்டோம். குடிக்கின்ற ஒவ்வொரு பச்சை முட்டைக்கேற்ப போடுகின்ற கோல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது எங்களில் பலருக்குள் ஒரு ‘ஜதீகமாய்’ இருந்தது. நான் விளையாடிய காலத்தில் நாங்களும் இன்னொரு பாடசாலையும் (வசந்தன் படித்த பாடசாலையும்) வலய/கோட்டமட்டத்தில் எடுபட்டு யாழ் மாவட்ட அளவில் விளையாடப் போயிருந்தோம். உதைபந்தாட்டத்தில் கத்தோலிக்க பாடசாலைகளின் திறமைபற்றி கூறவே தேவையில்லை. உலகில் பிரேசில் எப்படி கால்பந்தாட்டத்துக்கு மகுடம் சூட்டுபவர்களோ அப்படித்தான் யாழில் கத்தோலிக்கப் பாடசாலையினர். யாழ் மாவட்ட அளவில் எங்களுடன் முதலில் மோத வந்த அணி நாவாந்துறை சென்மேரிஸ் (பெயர் சரியா?) அணியினர். ஆனால் அன்று நடந்த சோகத்தைக் கேட்டால் என்னவென்று விளம்புவேன்? அவர்கள் அணியில் இருந்த அனைவரும் ரொனால்டோவாயும் ரொனால்டினோவாயும் இருந்தனர். ஒன்றா… இரண்டா… (என்ற ‘ஆசைகள்’ அல்ல, இது அவமானம்) ஏழு கோல்களைப் போட்டு, ஏதோ எங்களோடு பயிற்சி செய்வதைப் போலத்தான் அந்தப்பெடியங்கள் விளையாடினார்கள். கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்த ஆட்டத்தில் இனியும் நின்றால் அவமானம் என்று நினைத்து ஆட்டம் பார்க்க வந்த மாமாவின் சைக்கிளில் ஏறி, நண்பர்களையும் விட்டுவிட்டு உடனேயே வீடு திரும்பியதாயும் நினைவு.

(2)
கிறிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியபோது நான் படித்த பாடசாலை சொந்த இடத்தைவிட்டு பல்வேறு ஊர்களுக்கு எங்களைப்போல அதுவும் அகதியாய் அலையத்தொடங்கியிருந்த காலம். கிறிக்கெட் விளையாடுவதற்கு சொந்தமாக விளையாட்டு மைதானமே இல்லாதபோது, ஒருமாதிரி கஷ்டப்பட்டு ஒரு இடத்தை கண்டுபிடித்திருந்தோம். அந்த இடத்தில் சிலவருடங்களுக்கு முன்புவரை இந்திய இராணுவம் முகாம் போட்டுத் தங்கியிருந்தது. மழைவந்தால் நீர் தேங்கக்கூடிய அதிபள்ளமான பகுதியும் கூட. அத்தோடு பக்கத்தில் இருந்த அரிசி ஆலையிலிருந்த உமி, கரி முழுவதையும் இந்த ஒதுக்குப்புறமான காணியில்தான் கொட்டிக்கொண்டுமிருந்தார்கள். அந்தப்பக்கமாய் போனால் உமியும் கரியும் சாம்பலும் காற்றில் பறந்து வந்து கண்ணில், மூக்கில் எல்லாம் உறுத்தலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும். ஒருமாதிரி pitch போட்டு அதற்கு மேல் Matting எல்லாம் ஆணியால் இழுத்து மண்ணோடு இறுக்கி அடித்து கிறிக்கெட் விளையாடுவதற்குத் தயாராக்கியிருந்தோம். ஆனால் இரசிகைகள் அந்தமாதிரி கூடுவார்கள் என்று விளையாட நான் பிரியப்பட்ட கிறிக்கெட்டை எந்த இரசிகையும் இல்லாமல் விளையாடி முடிந்ததுதான் மிகுந்த அவலமான விடயம். ஏனென்றால் எங்கள் பாடாசாலை இயங்கிக்கொண்டிருந்த நகரை விட்டு பக்கத்து நகரில்தான் விளையாட்டு மைதானம் இருந்தது என்றபடியால் கிறிக்கெட்டுக்காய் என்று கூறிவிட்டு பயணம் செய்து வருவது பெண்களுக்கு கடினமாயும் இருந்தது. (ஆனால் வகுப்புக்களிடையில் ‘சென்றுவருக தோழர்களே வென்று வருக’ என்று அனுப்பி வைப்பதை மட்டும் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். நாங்களும் ஓமோம் ஓமோம் என்று தலையாட்டிவிட்டு… அடுத்த நாள் தோற்றகதையை வந்து சொல்வதும் வழமையான நிகழ்வாய் இருந்தது). யுத்தகாலம் என்றபடியால் வாகன வசதிகளும் அவ்வளவாய் இல்லையென்பதால், வரும் பார்வையாளர்களும், விளையாடும் எதிர் அணியினரும் உட்கார்வதற்கு என்று எங்கள் கைகளிலும் தோள்களிலும் நீண்ட வாங்குகளைக் காவிக்கொண்டு எல்லாம் நெடுந்தூரம் நடந்துபோய் இருக்கின்றோம்.

சென் பற்றிக்ஸ், கொக்குவில் இந்துக்கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ் இந்துக்கல்லூரி போன்றவற்றோடு விளையாடி, இரண்டு ஆட்டங்களில் வெற்றிதோல்வியின்றியும், மிகுதி இரண்டு ஆட்டங்களில் தோற்றும் இருக்கின்றோம்.

அதுவும் யாழ் இந்துக்கல்லூரியுடன் தோற்றதையும் அங்கு நிகழ்ந்ததையும் பற்றி இப்போது நினைத்தால் கூட நெஞ்சில் ஒரு அக்கினிக்கோளம் உருவாகின்றமாதிரித்தான் தோன்றுகின்றது. ஆட்டம் இந்துக்கல்லூரி மைதானத்தில்தான் நடந்தது. நாங்கள் விக்கெட்டுக்கு முன்னால் வளைந்துநின்றால் வளைந்த உடம்பிற்கு அளவாய்த்தான் விக்கெட்டும் இருக்கும், ஆனால் இந்துக்கல்லூரிப்பெடியங்களில் பலர் விக்கெட்டைப்போல இரண்டு மடங்களவில் பெரிய உருப்படியாக இருந்தாங்கள். என்றாலும் தாவீதை வென்ற கோலியாத்தின் கதை தெரியும் என்பதால் நாங்கள் இதற்கு எல்லாம் அவ்வளவாய்ப் பயப்பிடவில்லை. அன்றைக்கு என்று என்னோடு ஒப்பினிங் போலிங் போடுகின்றவன் வருத்தம் என்று காரணத்தைக் காட்டி விளையாடவும் வரவில்லை. வருத்தம் என்பதைவிட அவனுக்கு தனக்கு அணித்தலைமை பதவி தரவில்லை என்ற கடுப்பு ஏற்கனவே இருந்தது. எனவே தோற்கப்போவதை படுதோல்வியாக்குவதில் தனது பங்கும் இருக்கட்டும் என்று பெரிய ஃபீலா காட்டிக்கொண்டு வராமல் நின்றான். இந்துக்கல்லூரிக்கு அப்போது யோகிதான் பயிற்சியாளராய் இருந்தார். நாங்கள் 50ற்குளேயே சுருண்டு விட்டோம். அவங்கள் அடிகிறாங்கள் அடிக்கிறாங்கள் முடிகிறபாடாய் காணவில்லை. ஓட்டங்கள் இருநூறைத் தாண்டிவிட்டது…இரண்டு பேர் 50ற்கு மேலாய் அடித்தமாதிரியும் நினைவுண்டு. கடைசியில், சரி இவங்கள் பாவங்கள் என்று மனமிரங்கி ஆட்டத்தை இடையில் நிறுத்திவிட்டு எங்களை இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பெடுத்தாட அழைத்தார்கள். ஆட்டம் ஆரம்பித்ததில் இருந்தே என்னைப் பற்றிய பூர்வீகம் ஏற்கனவே தெரிந்து, வெளியாலை இருந்து இந்துக்கல்லுரிப் பெடியங்கள் நக்கலடித்துக்கொண்டிருந்தாங்கள். பூர்வீகம் வேறு ஒன்றுமில்லை.; அதற்கு ஒராண்டு முன்னர்தான் இந்துக்கல்லூரிக்கு படிக்கப்போய் ஒரு மாதம் வரை இருந்துவிட்டு இது நமக்கெல்லாம் ஆகாது என்று பழைய பாடசாலைக்கு மீண்டு(ம்) போயிருந்தேன். அதை தெரிந்து வைத்து அவங்களுக்கு ஒரே நக்கல்…இதெல்லாம் உனக்குத் தேவையா என்று. பந்து வீசும்போதுதான் எதையும் செய்ய முடியவில்லை…துடுப்பாட்டம் செய்யும்போதாவது இவங்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் என்று கறுவிக்கொண்டேன். ஆடிக்கொண்டிருந்தபோது நடுமைதானத்துக்குக் கூடக் கேட்கக்கூடியமாதிரி என்னுடைய ‘புகழை’ கலிங்கத்துப்பரணி ரேஞ்சுக்குப் பாடிக்கொண்டிருக்க, எனக்கு வந்த விசருக்கு அப்போது நல்ல லெந்தாய் வந்த பந்துக்கு கண்ணை மூடிக்கொண்டு விசுக்கினேன். ஒன்டு அடிபட்ட பந்து எல்லைக்கோட்டைத்தாண்டி நிற்கின்ற அவங்களின்ரை தலையில் படவேண்டும், இல்லாவிட்டால் விசுக்கின்ற bat ஆவது கைநழுவிப்போய் இரண்டு பேரின்ரை மண்டைகளையாவது உடைக்கவேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டு -அந்தமாதிரித்தான் batஜ- விசுக்கினனான். ஆனால் பிறகு -ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது- அந்தப் பந்து நடு ஸ்டாம்பை துவம்சம் செய்துகொண்டு போக மாமியார் முன் நாணிப்போகும் மருமகனாய் என் ‘வீரதீரச்செயல்’ முடிவுக்கு வர பவுலியனை நோக்கித் திரும்பவேண்டியதாயிற்று. அதற்கும், ஒழுங்காய் லெந்தான பந்தைக் கூடப்பார்த்து அடிக்கத்தெரியாதவன் ஒரு அணிக்கு தலைமைதாஙக வந்துவிட்டான் என்று வாய்க்கரிசி போட்டு வாழ்த்தாத குறையாக அவங்களின் ‘வாழ்த்து’க் கிடைத்தது. எனினும் இந்துக்கல்லூரி நண்பர்களோடு அருந்திய அருமையான பால் தேத்தண்ணியினதும் வடையினதும் வாய்ப்பனினதும் சுவையும் நட்புக் கலந்த வார்த்தைகளும்தான் இப்போது அதிகம் நினைவில் நிற்கின்றது என்பபதையும் குறித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

கிறிக்கெட், உதைபந்தாட்டம் போன்றவற்றில் இருந்த விருப்பைப் போல சதுரங்கத்திலும் மிகப்பெரும் விருப்பு எனக்கு ஈழத்தில் இருந்தபோது இருந்தது. இப்போதும் யாகூவின் சதுரங்கத்தளத்துக்கு வந்தால் நான் ஓடித்திரிந்து கொண்டிருப்பதை நீங்கள் கண்டுபிடிக்கவும் கூடும். சிறுவயதிலேயே -ஏழு அல்லது எட்டு வயதளவில் - சதுரங்கம் விளையாடத்தொடங்கியிருந்தேன் என்று நினைக்கின்றேன். சதுரங்கப் பலகையை முதன்முதலில் எனது அண்ணாவும் அக்காவும் வாங்கித்தந்த நாள் கூட நினைவில் நிற்கின்றது. அதை வாங்கியவன்றுதான், அண்ணாவின் நண்பரொருவரின் வீட்டில் பொம்மர் அடித்து அவர்களின் வீடு சிதைந்துபோனதும், அதிஸ்டவசமாய் அந்த அண்ணாவும் அவர்களின் குடும்பமும் தப்பியிருந்தாலும் பொம்மரைக் கண்டு பாதுகாப்புக்கென ஒதுங்கிய ஒருவர் இறந்துபோனதும்…அந்த கசப்பான நாள் நினைவில் இப்போதும் மிதக்கிறது. சதுரங்கப்பலகையை வாங்கிய சாபத்தால்தான் இப்படி நடந்தது என்று நெடுங்காலத்துக்கு எண்ணிக்கொண்டும் இருந்திருக்கின்றேன். யாழ் நகரில் சனசமூக நிலையங்கள், YMCA போன்றவை நடத்திய அனேக போட்டிகளில் பங்குபற்றி சிலதில் பரிசுகள் வாங்கியதும் இனிமையான தருணங்கள்தான். அந்தப்பொழுதுகளில் அப்பாவோடு சுமூகமான உறவுகள் இருந்ததும் - முக்கியமாய் எதையும் எதிர்த்துக் கதைக்காத ‘நல்ல பண்பும்’ என்னிடம் இருந்ததை அப்பா கூட இப்போது நனவிடை தோய்ந்து அந்தக்காலத்தை மகிழ்வுடன் அசை போடவும் கூடும். பிறகு பாடசாலைகளுக்கு இடையில் நடந்த போட்டிகளில் யாழ் மாவட்டவளவில் தொடர்ந்து runners-up யாய் -யாழ் இந்துக்கல்லூரிக்கு- அடுத்ததாய் வந்திருக்கின்றோம். எங்கள் அணியில் பெண்கள் இருப்பதைப் பார்த்து ஒருவித எகத்தாளத்துடன் விளையாடத்தொடங்கியவர்களை எல்லாம், அசர வைத்து வெற்றி வாகை சூடிய நாளகளும்….பதின்மூன்று பதினான்கு வயதுகளிலேயே வயது வித்தியாசமின்றி உயர்தரம் படிக்கின்றவர்களோடு நண்பர்களாகிக் களித்ததும் அருமையான பொழுதுகள்தான்.

(3)
விளையாடும் காலங்களைப்போல விளையாட்டை வெளியிலிருந்து இரசிக்கும் காலங்களும் மிகவும் அருமையானது. உள்ளூரிலிருந்து சர்வதேசம் வரை வெறிபிடித்தலையும் விளையாட்டு இரசிகர்கள் குறித்து பக்கம் பக்கமாய் எழுதலாம். நமது ஊர்களில்தான் மண்டையை உடைக்கின்றவரை இரசிகர்கள் போவார்கள் என்பதை… ஜரோப்பிய நாடுகளில்/ இலத்தீன் அமெரிக்காவில் நடக்கும் இரசிகர்களின் சண்டைகளைப்பார்த்தால் நாங்கள் எல்லாம் அவர்களின் கால்தூசிக்கும் வரமாட்டோம் என்றுதான் எண்ணிக்கொள்ளவேண்டிவரும். இன்றைய பொழுதில் வடஅமெரிக்கத் ‘தேசியத்தில்’ தவண்டும் புரண்டும் நீந்தியும் எழுந்தும் கொண்டிருப்பதால் கிறிக்கெட்ட் போன்றவற்றின் மீது வெறி போய், ஜஸ் கொக்கி, கூடைப்பந்தாட்டம், பேஸ்போல் போன்றவற்றில் பித்துப்பிடித்தலையும் நிலை வந்துவிட்டாலும் கனடாவில் கால்பதித்த ஆரம்பகாலங்களில் ஒருவித வெறியுடன் கிறிக்கெட் உதைபந்தாட்டம் போன்றவற்றைப் பார்த்திருக்கின்றேன்.

கனடா வந்தசமயத்தில்தான் இலங்கை கிறிக்கெட் அணி உலகக்கோப்பையை சுவீகரித்திருந்தது. நான் இலங்கையணியின் இரசிகனாவே என்றும் இருந்திருக்கின்றேன். இப்போது அல்ல, சிறுவயதிலிருந்தே டிலிப் மெண்டிஸ், அர்ச்சுன இரணதுங்கா போன்ற தொப்பை வண்டிக்காரர்களால் இலங்கை அணி நிரப்பட்டு எல்லா நாடுகளும் வந்து மொங்கு மொங்கு என்று அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்த காலத்திலிருந்தே நான் இலங்கையணியின் தீவிர இரசிகன்தான். அதற்கு அடுத்து மேற்கிந்தியத்தீவுகளுக்கு. எனது அண்ணாமார், அப்பா போன்றவர்கள் மேற்கிந்த்தியத்தீவின் தீவிர இரசிகர்கள். கொஞ்சம் ஆழமாய் அவதானித்தால் ஈழத்துக்கும் இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் தீவுகளுக்கும் நிரம்ப ஒற்றுமை இருப்பது புரிபடும். சுமூகமற்ற அரசில் சூழ்நிலைகள், போராட்ட இயக்கங்கள், காலநிலை, அழிவுகள், மீண்டும் உயிர்ப்புடன் எழுதல்… என்று பல புள்ளிகளில் ஒன்றுபடமுடியும். இப்படியான ஒரு ‘தீவிரமான ஆராய்ச்சியின்’ ஈடுபடும் என்னைப் போன்றவர்களுக்கு ஸ்பானியப் பெண்கள் மீது ஈர்ப்பு வருவதும் அதிசயமில்லைதானே (அப்பாடா ஒருமாதிரி நான் நெடுங்காலமாய் கூற நினைத்த விடயத்தை காரணகாரியங்களுடன் நிரூபித்துவிட்டேன்).

எனக்குத் தெரிந்து, அண்ணா ஊரில் இருந்தபோது நடத்தி விளையாடிக்கொண்டிருந்த் அணிக்குக் கூட Gary Sobers என்று பெயரிட்டதாய்தான் நினைவில் இருக்கிறது. கிறிக்கெட் வேல்ட் கப் நடந்துகொண்டிருந்தபோது நாங்கள் இங்கே பேப்பர் போட்டுக்கொண்டிருந்தோம். தனியே பேப்பர் போடுவது -அதுவும் வின்ரர் காலங்களில்- கடினமென்பதால் நானும் அவ்வவ்போது அண்ணாக்களுடன் உதவிக்கு என்று போவதுண்டு. ஆனால் இங்கு விடிகாலை நேரத்துக்கே வேல்ட் கப் ஆட்டங்கள் தொடங்கிவிடும் என்பதால், பேப்பர் போடப்போகாது தூங்குவது போலக் கள்ளமாய் நடிக்கத்தொடங்கிவிடுவேன். ஆரம்பத்திலிருந்தே ஆட்டத்தை பார்க்காவிட்டால் அது ஒரு ஆட்டம் பார்த்ததுமாதிரி இல்லை என்று வெறிபிடித்த இரசிகனாய் இருந்த காலம் அதுவாம். அண்ணாக்களும் என்ரை கள்ளம் விளங்கியோ அல்லது பாவப்பட்டோ விட்டுவிட்டுப்போக நான் கொஞ்சநேரத்தில் எழும்பி ஆட்டம் பார்க்கத் தொடங்கிவிடுவேன். பிறகு கொஞ்ச நேரத்தில் அண்ணாக்களின் நண்பர்களும் வந்து குவிய, இடைக்கிடை ஆட்டம் பற்றிய கதைகள், ஈழத்தில் அவர்களின் நனவிடைதோய்தல்கள் என்று விரிந்துபோக ஆட்டங்களைப் பார்ப்பது சுவாரசியமாகும் (இங்கே சாதாரண ரீவி சானல்களில் கிறிக்கெட்டை ஒளிபரப்பமாட்டார்கள்). நான் இங்குசந்தித்த நண்பர்களில் மட்டுமில்லை, 2004ல் இலங்கைகுச் சென்றபோது சந்தித்த நண்பர்கள் வரை 90% மேற்பட்டவர்கள் தீவிர இந்திய இரசிகர்களாக்வே இருக்கின்றார்கள் எனபதில் இந்தியாவின் பாதிப்பு ஈழத்துமக்களிடையே எவ்வளவுதூரம் என்பது வெள்ளிடை மலை. அதுவும் 2004ல் திருகோணமலையில் நின்றபோது ஏதோ ஒரு கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவும் இலங்கையும் விளையாடியபோது இருந்த சனம் முழுதும் இந்தியாவுக்கு ஆதரவாய் நிற்க - சித்தியின் மகள் மட்டுமில்லை சித்தி கூட - இலஙகை வீரர்களைத் திட்டித்திட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, என்னுடைய மானத்தைக் காக்கவேனும் இலங்கையணி வெல்லவேண்டும் என்று நேர்ந்துகொண்டேன். அவர்கள் இறுதியில் வென்றுகாட்டி, ஒரு இரசிகனுக்குத் தரவேண்டிய மிகப்பெரும் சந்தோசத்தை எனக்கு அன்று அளித்துமிருந்தார்கள்.

ஆனால் 96ல் நடந்த உலகக்கோப்பையை இலங்கையணியின் இரசிகன் என்றவகையில் - என்னால் என்றுமே மறக்கமுடியாது. உலகக்கோப்பையைத் தமதாக்கிக்கொள்ளும்வரை எந்தப்போட்டியிலும் தோற்காமல் அருமையாக அவர்கள் ஆடியிருந்தார்கள். அதிலும் இந்தியாவுடனான அரையிறுதி ஆட்டமும், ஆஸ்ரேலியாவுடனான இறுதியாட்டமும் உயர்தர ஆட்டங்கள். கைதராபாத்தில்(?) நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஜெயசூரியாவின் பந்துகள் -துடுபடுத்தாடியவர்க்ள் வெளியே போகின்றது என்று விலத்திவிட- பின்னங்கால்களுக்குள் சுழன்றாடி விக்கெட்டுக்களை விழுத்திய காட்சிகளையெல்லாம் அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியுமா என்ன? அதேபோல இறுதியாட்டத்தில் அசைக்கமுடியாது என்று நினைத்த ஆஸ்திரேலியா அணி 250 தாண்டிவிட்டு பெருமிதமாய் நிற்க, இலஙகையின் அன்றைய ஆரம்பநிலை ஆட்டக்காரர்களான ஜெயசூரியாவும், களுவிதானவும் கொஞ்ச ஓட்டங்களுடன் ஆட்டமிழ்ந்துபோக, அரவிந்த டீ சில்வா- அசங்க் குருசிங்கா, அர்ஜூன இரணதுங்கா, மகாநாமவுடன் very coolயாய் இணை துடுப்பெடுத்தாடி, சதமும் அடித்து அணியை உலகின் உச்சிக்கு கொண்டுபோய கிண்ணத்தை கைப்பற்ற வைத்த ஆட்டம், என்னைப்பொறுத்தவரை ஒரு classicதான். அதுபோல் பிரான்சோடு இறுதி ஆட்டத்தில் 3-0 தோற்று, அதற்கடுத்த உலகக்கோப்பையில் ரொனால்டோ ஒரு படைப்பின் நேர்த்தியுடன் பந்தின் இலயத்தோடு இயைந்து, ஜேர்மனியை மண்கவ்வச் செய்த பிரேசிலின் ஆட்டமும் அவ்வளவு இலகுவில் மனதைவிட்டு அகலாது.

(4)
மீண்டும் மேற்கிந்தியத்தீவுகள், ஒரு ப்னீக்ஸ் பறவையைப் போல எழுந்துவரும் நம்பிக்கையைத் தருவதும், இன்று ஆரம்பிக்கின்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டத்தில் -ஏதாவது பெருந்தவறுகள் விட்டாலன்றி- பிரேசில் வெல்லப்போகின்றது என்ற கட்டியங்களும் மீண்டும் கிறிக்கெட்ட்டிலும், உதைபந்தாட்டதிலும் எனக்கு ஈர்ப்பைக் கொண்டுவரச்செய்கின்றன. அதைவிட ரெக்கேயும், சம்பாவும் ஆடியும் பாடியும் ஆட்டங்களை ஒரு திருவிழாவின் கொண்டாட்டங்கள் போல ஆக்கும் இரசிகைகளைப் பார்க்கும்போது -எனக்குள் இருக்கும் இரசிகன் என்றும் உறைந்துபோய்விடமாட்டான் போலதான் தோன்றுகின்றது. இரசிகைகள் விளையாட்டு வீரர்கள் மீது பித்துப்பிடித்தலைவதும், என்னைப் போன்ற இரசிகன்கள் இரசிகைகள் மீது மையல் கொள்வதும் காலங்காலமாய் நடப்பதுதானே.

அம்மாவிற்கு

Thursday, March 08, 2007

பின்னேரங்களில்
காயப்பட்ட உடலாய்
சூரியன் நிறந்தேய
போரின் வலிகாவி
ஊரூராய் அலைந்திருக்கின்றோம்
கால்கள் வலிக்க

வேலை நிமித்தம்
திசைக்கொன்றாய் அப்பா அலைந்தபோது
மாதங்களின் முடிவில்
அறைந்து சாத்தப்படும் கதவுகளின்
அவமானம்
முகத்தில் தெறித்தாலும்
இரவல் வாங்கி
பொங்கிப்படைக்க மறந்ததில்லை
சோறும் பருப்பும்

அம்மா
பகிர்வதற்கான பிரியங்களை
பால்யம்
கருங்கற்பாறையாக்கி
மனதின் அடுக்குகளில் திணிக்க
முரட்டுமொழி பேசும்
ஆம்பிளையும் ஆயினேன்

'வலிகளைத் தந்தவளுக்கு
வன்மத்தையல்ல;
வாழ்த்தை
திருப்பிக்கொடுத்தலே நேசமென'
தலைகோதி
போர்வை இழுத்துவிட்டு
நகர்ந்த இரவில் நெகிழ்ந்தேன்
நானுனக்கு இன்னமும்
-என்றுமே- வளர்ந்துவிடாத மழலையென.


(2006)
-மீள்பதிவு-

--------------
(இன்று -Mar 08- பிறந்தநாளைக் கொண்டாடும் அம்மாவிற்கு...)