கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 30

Sunday, March 17, 2024

 

 1.


விசிறி சாமியார் என அழைக்கப்பட்ட யோகி ராம்சுரத்குமார் என் பதின்மங்களில் நான் வாசித்த பாலகுமாரனால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். அன்று பாலகுமாரன் எழுதிய 'விசிறி சாமியார்', 'குரு', 'ஆசைக்கடல்' போன்றவற்றினூடாக விசிறி சாமியார் பற்றி நிறைய அறிந்திருக்கின்றேன். முதன்முதலாக திருவண்ணாமலைக்குப் போனபோது நான் பார்க்க விரும்பியது கோயிலையல்ல, யோகி ராம்சுரத்குமாரின் சமாதியைத்தான். ஆனால் அப்போது அது ஒருநாள் குறுகிய‌ பயணமாக இருந்ததால் நிகழாது போயிற்று. பின்னர் அண்மையில் ஐந்து நாட்கள் திருவண்ணாமலையில் தங்கி நின்றபோது யோகி ராம்சுரத்குமாரின் ஆச்சிரமத்துக்குப் போனபோது எந்தக் உணர்ச்சிக் கொந்தளிப்பும் ஏற்படவில்லை. அது நிறுவனப்பட்டதால் ரமணருக்கு நிகழ்ந்தது போல, ராம்சுரத்குமாருக்கும்  நிகழ்ந்த சோகம் என எனக்குள் நினைத்துக் கொண்டேன்.


'அமரகாவியம்' என்கின்ற‌ எஸ்.பார்த்தசாரதி (தமிழில் சரஸ்வதி சுவாமிநாதன்) எழுதிய நூல் என்னளவில் முக்கியமானது. ஏனெனில் இது யோகி ராம்சுரத்குமார் நிறுவனப்படாத, அவரின் தொடக்க காலங்களில் அருகில் இருந்து பார்த்து பார்த்தசாரதி எழுதிய அனுபவங்களின் தொகுப்பாகும். அவ்வளவு எளிமையாக, தன்னைத் தேடி வருபவர்களை நாடுகின்ற ஒரு 'நாடோடியாக' புன்னை மரத்தடியில் பகல்வேளையிலும், இரவில் மூடப்பட்ட திருவண்ணாமலைக் கடைகளின் முன்வாசலிலும் உறங்கியெழுந்த ஒரு யோகியைக் காண்கின்றோம். அவர் திருவண்ணாமலைக்கு வரமுன்னர் கிட்டத்தட்ட 18 வருடங்கள் அலைந்து தன் ஞானத்தைத் தேடியது பற்றியும் இங்கு துண்டுதுண்டாகக் கூறப்படுகின்றது. அதேவேளை இதில் பல்வேறுபட்ட முக்கிய நபர்களின் சந்திப்புக்களை மட்டும் அல்ல, சாதாரண மக்களோடு ராம்சுரத்குமார் நடந்தகொண்ட விதங்கள் பற்றியும், அவர்களின் அனுபவங்களைப் பற்றியும் எழுதியிருப்பதுதான் சிலாகித்துப் பேச வேண்டியது. 


தமிழ் அறிஞர் தொ.பொ.மீனாட்சி சுந்தரம், பெரியசாமி தூரன், கி.வா.ஜகன்னாதன் போன்றவர்கள் அவருக்கு ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்திருக்கின்றனர்.  கிட்டத்தட்ட 500 பக்கங்களுள்ள இந்தப் புத்தகம், மதம், நிறுவனப்பட்ட அமைப்புக்களிலிருந்து வெளியேறி ஆன்மீகத் தேடலுள்ளவர்க்கு மிகுந்த ஆர்வங் கொடுக்கக் கூடியது என்று 'அமரகாவியம்' பற்றி 2020களில் எழுதியுள்ளேன் .


இப்போது யோகி ராம்சுரத்குமார் பற்றிய  நல்லதொரு அறிமுகத்தை முரளி அவரது 'சோக்கரட்டீஸ்' தளத்தில் தந்திருப்பதைப் பார்த்தேன். முரளி குறிப்பிடுவதைப் போல காஞ்சி காமகோடி விசிறி சாமியாரிடம் 'உங்கள் கோத்திரம் என்ன?' என்று கேட்டதும் அதற்கு விசிறி சாமியார் நகைச்சுவையாக ஒரு பதில் அளித்ததும் 'அமரபீடம்' நூலிலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அவ்வாறு இருந்த விசிறி சாமியார் பின்னாட்களில் நிறுவனப்பட்டதால் (அது ஒருவகையில் தவிர்க்க முடியாததும் கூட, இல்லாவிட்டால் ஜே.கிருஷ்ணமூர்த்தி, நாராயணகுரு மாதிரி தமது பீடங்களைத் தாமே தயவு தாட்சண்யமில்லாது அவர்கள் வாழும் காலத்திலோ அல்லது தம் வாழ்நாளோடோ நிர்மூலமாக்கும் அதிதிடமும் வேண்டியிருக்கும்) இதே காஞ்சிபீடமே அவரது இறுதிக்கிரியைகளில் உள்நுழைந்து கொண்டது என்பதும் முரண்நகையானது.


என்றாலும் விசிறி சாமியாருடனான‌ அந்தரங்கமான உரையாடல்கள்  இன்றும் எனக்குள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றது.


2

.
Sudani from Nigeria, Argentina Fans Kaattoorkadavu ஆகிய மலையாளத் திரைப்படங்கள் கால்பந்தாட்ட வீரர்கள், இரசிகர்களைப் பின்னணியாகக் கொண்டவை என்றால், Sesham Mike-il Fathima ஒரு கால்பந்தாட்ட இரசிகை எப்படி ஒரு  நேரலை கால்பந்தாட்ட வர்ணனையாளராக மாறுகின்றார் என்பதைப் பற்றியது. மலபுரத்தில், orthodox முஸ்லிம் குடும்பத்தில் இருந்து வரும் ஒரு பெண் எவ்வாறு ஆண்களுக்கே மட்டுமே உரித்துடையதென்கின்ற நேரலை வர்ணணையாளர்கள் பட்டியலில் முதல் மலையாளப் பெண்ணாக இடம்பிடிக்கின்றார் என்பதை அவ்வளவு அழகாகக் காட்டியிருக்கின்றார்கள்.


மலையாளப் படங்களில் இருந்து எப்படி சிறுபான்மையினங்களை அதன் இயல்பு கெடாமல் சித்தரிக்க வேண்டும் என்பதை நமது தமிழ் நெறியாளர்கள் கற்கவேண்டும். இத்தனைக்கும் இந்த இயக்குநருக்கு இது முதல் படம் என்று சொல்கின்றார்கள். அவர் இஸ்லாமியரும் அல்ல. ஒரு எளிய கிராமத்துப் பெண் தனது கனவை அடைவதற்கு எடுக்கும் முயற்சிகளில் நம்மையும் ஒரு சாட்சியாக இத்திரைப்படத்தினூடு அழைத்துச் செல்கின்றனர். இந்தப் பெண் தான் நினைத்ததை சாதிக்காமல் விட்டிருந்தால் கூட, அவர் செய்த அனைத்து முயற்சிகளுக்குமாக நாம் அவரை அள்ளி அரவணைத்திருப்போம். அதுதான் இத்திரைப்படத்தின் வெற்றி. 


இதில் நடித்த அனைத்துப் பாத்திரங்களும் அவ்வளவு தத்ரூபமாக நடித்திருக்கின்றனர். அதிலும் கல்யாணியின் அந்தத் துடிப்பும், கொண்டாட்டமும் கால்பந்தாட்ட இரசிகராக இல்லாதவர்களைக் கூட  அவ்வளவு வசீகரிக்கும். இரசிகர்களையோ/வாசகர்களையோ தன்னோடு கூட அழைத்துச் செல்லாத எந்தப் படைப்பும் அவ்வளவு பரவலாகச் சென்று சேர்வதில்லை. அந்த magic மட்டும் நிகழ்ந்துவிட்டால் எந்தப் படைப்பும் தன் உயரத்தை அடைந்து ஒளிரும் நட்சத்திரமாகிவிடும். அந்த 'அதிசயம்' இங்கே நிகழ்ந்திருக்கின்றது.



3.


எனக்குப் பிடித்த எழுத்தாளராயினும் விருதுகள் அவர்களுக்குக் கிடைக்கும்போது அவ்வளவாக நான் இங்கே பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் இப்போது ரமேஷ் பிரேதனுக்கு இவ்வாண்டுக்கான பிரபஞ்சன் விருது கிடைத்திருக்கின்றதென்று அறியும்போது அந்த மகிழ்வை இங்கே பகிர்ந்து கொள்ளவேண்டுமெனத் தோன்றியது.ரமேஷ் (‍ - பிரேமும்) என் வாசிப்பில்/எழுத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள். அவர்களை வாசிக்க முடிந்ததால்தான், ஒருகாலத்தில் தொலைவில் வைத்திருந்த நகுலன் உள்ளிட்ட பலரின் படைப்புக்களுக்குள் பின்னர் எளிதாக நுழைய முடிந்தது. இன்றைக்கு ரமேஷ்-பிரேம் என்ற இரட்டையர்களில் இருந்து பிரிந்து ரமேஷ் தனியே எழுதிக் கொண்டிருப்பவை இன்னும் என் மனதுக்கு நெருக்கமானவை.

 

விருதுகளில் மீது தனிப்பட்டு எனக்கு அவ்வளவு உவப்பில்லாதபோதும், என் முன்னோடிகளை விருதுகளைத் தவிர அவர்களை மதிப்பளிப்பதற்கு வேறெந்த வழியும் இப்போதைக்கு தமிழ்ச்சூழலில் இல்லையென்கின்ற யதார்த்தத்தையும் விளங்கிக் கொள்ள முடிகின்றது. ஆகவேதான் அவ்வப்போது இங்கிருக்கும் 'இயல் விருது', 'விளக்கு விருது' படைப்பாளிகளுக்கு அளிக்கும்போது ரமேஷ் பிரேதன் போன்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று எழுதியிருக்கின்றேன்/விரும்பியிருக்கின்றேன். 

 

இப்போது ரமேஷ் பிரேதனுக்கு 'பிரபஞ்சன் விருது' வழங்கப்படுவது மிகுந்த மகிழ்வைத் தருகின்றது. அதுவும் ரமேஷ் போன்றவர்கள் தங்கள் கவிதைக்குள்ளும், புனைவுகளுக்குள்ளும் கொண்டு வந்த,  அவர்கள் மதிக்கும் அதே பிரபஞ்சனின் பெயரால் இந்த விருது வழங்கப்படுவது ரமேஷின் எழுத்துக்களை இன்னும் ஒருபடி மேலே சென்று மதிப்பளிப்பதைப் போன்றது.


ரமேஷ் பிரேதனுக்கு வாழ்த்துகள்.


***********


(மார்கழி, 2023/ தை, 2024)

(புகைப்படங்கள்: நன்றி முகநூல் )

 

0 comments: