கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

திருகோணமலையில் புத்தர் சிலை

Thursday, December 25, 2025

 

இப்போது திருகோணமலையில் மீண்டும் புத்தர் சிலை வைப்பது பேசுபொருளாகியிருக்கின்றது. இதேமாதிரி 2000களின் மத்தியிலும் திருமலையில் புத்தர் சிலையைப் பலவந்தமாக வைத்ததும், 'ஜாதிய ஹெல உறுமய' என்கின்ற இனவாத சிங்களக் கட்சி அதன் முன்னணியில் நின்றதும் பலருக்கு ஞாபகமிருக்கலாம். அந்தப் புத்தர் சிலை அவ்வளவு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இப்போது நிறுவப்பட்டுவிட்டது. எவ்வளவு காலத்துக்குத்தான் மக்கள் இவ்வாறான ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகப் போராட முடியும். அதுவும் பெளத்த பீடாதிபதிகளின் கட்டளைகளின் ஒரு சொல்லையேனும் மறுக்காத ஒரு அரசாகவே இலங்கை சுதந்திரமடைந்த 1940களிலே இருந்து சிங்கள அரசுக்கள் ஆட்சிப்பீடமேறியபடி இருக்கின்றன. நாட்டின் பிரதமரையே துப்பாக்கியேந்திய ஒரு புத்தபிக்கு கொன்ற வரலாறு இலங்கையில் இருக்கின்றது.

அண்மையில் இலங்கைக்கு (2023) போனபோதும் திருகோணலையில் இப்படி ஒரு ஆக்கிரமிப்புப் புத்தர் சிலை நெல்சன் தியேட்டருக்கருகில் நிறுவப்பட முயற்சி நடந்ததும், மக்கள் எதிர்ப்பைக் காட்டியதும் ஞாபகத்தில் இருக்கின்றது. நான் அந்த தியேட்டரில்தான் அருகிலிருந்த சித்தி வீட்டிலிருந்து நடந்துபோய் ஒரு தமிழ்த்திரைப்படத்தின் முதல் காட்சி அன்று பார்த்திருக்கின்றேன்

இந்தக் கவிதை 2006இல் நிகழ்ந்த ஆக்கிரமிப்புப் புத்தருக்கு எதிராக எழுதப்பட்டது. பின்னர் எனது கவிதைத் தொகுப்பான 'நாடற்றவனின் குறிப்புகளிலும்' சேர்க்கப்பட்டது.  இருபது ஆண்டுகளாக அதே நிலைமைதான்.  இவற்றுக்கு மெளன சாட்சியமாக இருக்கின்றோம் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறு எதுவுமில்லை.

*

தீர்வு

***
புறாமலையில்
விஜயனால் தந்திரமாய் ஏமாற்றப்பட்ட வெஞ்சினமும்
தன் மூத்தகுடிகளை நிராதரவாய்க் கைவிட்ட துயரமும்
தோயத் தன்னைச் சிதைத்துக்கொண்டிருந்த
குவேனி
 நகரத்தெருக்களில் கால்களைப் பதிக்க
புழுதி சுழன்றாடி
நகரைக் கனவாய்ப் படர்ந்ததாம் மழை

கடற்கரையில்
கால்கள் நனைத்து சுண்டல் சுவைத்து
நெல்சன் தியேட்டரில் படங்கள் பார்த்து
நீ இன்னவின்ன இனமென்றில்லாது
பொதுச்சந்தையில் கலகலக்கும்
சனங்களின் மொழியில்
தன் துயரினைத் தொலைத்தாள்
குவேனி

கொத்துரொட்டிகளின் தப்பாத் தாளத்திலும்
பஸ்நிலைய பல்லினமொழிக்கீதத்திலும்
தன்னை உயிர்ப்பிக்கையில்
பலவந்தமாய்க் குடிவைக்கப்பட்ட புத்தரைக் கண்டு
இயற்கையை வழிபடும்
குவேனி கோபித்தாளில்லை
அவரையும் நேசிக்கத் தொடங்கினாள்
பேச்சுத்துணையாக்கி.

புத்தரும் குவேனியும்
நேவிக்கப்பல்கள் தொலைவில் மின்னும்
கடற்கரையில் கால்கள் புதைய
கரங்கள் கோர்த்து உலாவுகையில்
கோணேசரும் பத்திரக்காளியும்
காதற்கிறக்கத்திலும் பதட்டத்திலும்
இருப்பது கண்டு புன்னகைப்பதுண்டு

கோணேசர் பாவம்
இராணுவம் சூழவிருக்கும் அவருக்கும்
ஊரடங்குச் சட்டமுண்டு;
பின்னிரவு நீளமுன்னர் தன் தலம்
மீளவேண்டிய அவதி அவர்க்கு

சங்கமித்தா
புத்தரைச் சந்திக்க வந்தவொருபொழுதில்
எல்லாம் தலைகீழாயிற்று
குவேனியுடன் புத்தர் நட்பாயிருப்பதை
சகிக்கா சங்கமித்தா
உறுமய ஜாதிய நரிகளை உசுப்பிவிட
கொந்தளிக்கத் தொடங்கிற்று
மீண்டும் நகர்

அரசமரக் கிளைக்குப் பதிலாய்
சங்கமித்தாவின் கரங்களில்
கொடும் ஆயுதங்கள் முளைக்கத்தொடங்கின
கோணேசரருடன் காதல் சரசமாடிக்கொண்டிருந்த
காளியும் ஆடத்தொடங்கினாள்
தற்காப்பு ஆட்டம்

தம் இயல்பு மறந்து
காளியும் சங்கமித்தாவும்
ஊழிநடனம் ஆடுவது பொறுக்காது
இடைநடுவில் புகும் குவேனியையும்
கொத்துரொட்டித் தகட்டால் குற்றுயிராக்கி
நரிகளுக்கு நிகராய்
விழும் தலைகளுக்காய் தெய்வங்களும் அலைகின்றன
நாக்குகளைத் தொடங்கவிட்டபடி

பிறகு
புத்தர் குவேனி எனும்
இரு சடலங்கள்
காலப்பெருவெளியில் மிதந்து கொண்டேயிருந்தனவாம்
ஒரு சிறுதீவில்
அமைதி வருவது எப்படியெனும்
எளிய சூத்திரங்களைத் தம்முடல்களில்
சுமந்தபடி.

(April 18th, 2006)
***

 

1813 - 1883 ~ சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி

Wednesday, December 24, 2025

 

(தமிழில்: இளங்கோ)
 

 
வாக்னரைக் கேட்கையில்
வெளியே இருட்டில் காற்று வீசுகிறது
குளிர்ந்த மழை மரங்களை மேவி அசைக்கிறது
விளக்குகள் அணைந்து எரிகின்றன
சுவர்கள் கிறீச்சிடுகின்றன
பூனைகள் கட்டிலின் அடியில் ஓடி மறைகின்றன

வாக்னர் வேதனைகளுடன் போராடுகிறார்
அவர் உணர்ச்சிவசப்படகூடியவர், ஆனால் உறுதியானவர்
அவரொரு மேன்மைமிகு போராளி
குள்ளர்களின் உலகில் அவரோர் இராட்சதன்,
அவர் துயரங்களை நேரடியாக எடுத்துச் செல்கிறார்,
தடைகளை வியக்கத்தக்க சப்தங்களின் சக்தியால்  தகர்க்கிறார்

இங்கிருக்கும் களிப்பாறைகள் எல்லாம்
கடும் சூதாட்டத்தில்.
விதிர்விதிர்க்கின்றன
வளைகின்றன
உடைகின்றன

ஆம், வாக்னரும் புயலும்,
மதுவோடு கலக்கையில்
இந்த இரவுகள்
எனது மணிக்கட்டுக்குள்ளால் ஓடி
என் தலைவரை ஏறி
மீண்டும் குடலுக்குள் இறங்குகின்றன.

சில மனிதர்கள்
ஒருபோதும் இறப்பதில்லை
சில மனிதர்கள்
ஒருபோதும் வாழ்வதில்லை

ஆனால் இன்றிரவு
நாம் அனைவரும்
உயிர்ப்புடன் இருக்கின்றோம்.

***

குறிப்பு: இந்தக் கவிதையில் தலைப்பு (1813-1883) ரிச்சர்ட் வாக்னரின் பிறப்பையும் இறப்பையும் குறிக்கின்றது.

'New Yorker' சஞ்சிகையில் சிறுகதை எழுதிய முதல் தமிழர்

Sunday, December 21, 2025

 

இன்றும் இலக்கிய உலகில் New Yorker சஞ்சிகையில் ஒரு படைப்பு வெளிவருவது என்பது மிகப் பெரும் விடயமாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால் இன்றைக்கு 70 வருடங்களுக்கு முன்னரே ஓர் ஈழத்தமிழரின் சிறுகதை வெளிவந்திருக்கின்றது என்பதை உங்களால் நம்பமுடியுமா? அதுவும் அந்தக் கதை புலம்பெயர் கதையாக இல்லாது, பூர்வீக மண்ணின் வாசம் வீசும் படைப்பாக இருந்ததும், அதை 'நியூ யோர்க்கர்' ஆசிரியர் குழு தெரிவு செய்து வெளியிட்டிருக்கின்றது என்பதும் அதிசயமானதுதான். 'மாதுளம் மரம்' ('The Pomegranate Tree'/1954) என்கின்ற இந்தக்கதை யாழ்ப்பாணத்தில் அச்சுவேலியில் நடக்கின்றது. அச்சுவேலி மட்டுமில்லை, கீரிமலை, கோப்பாய் என்று பல இடங்களும், தமிழ் வார்த்தைகள் சிலவும் இந்தக் கதையில் குறிப்பிடப்படுகின்றது.
Uploaded Image
இந்த 70 வருடங்களில், ஒரு தமிழரின் சொந்தப் படைப்பு அதன்பிறகு 'நியூ யோர்க்கரி'ல் வந்ததே இல்லையெனச் சொல்லலாம்(?). அண்மையில் அனுக் அருட்பிரகாசத்தின் 'Passage North' இற்கான மதிப்புரை, பெருமாள் முருகனின் 'மாதொருபாகனின்' சர்ச்சை குறித்து இன்னொரு எழுத்தாளர் எழுதிய கட்டுரை என்பவற்றைத்  தவிர எந்த ஒரு தமிழரின் சொந்தப்படைப்பும் (கதை/கவிதை) 'நியூ யோர்க்கர்' வரலாற்றில் இல்லை என்றே நினைக்கின்றேன்.

அப்படியெனில் எப்படி இப்படி ஒரு அதிசயம், 70 வருடங்களுக்கு முன் 'நியூ யோர்க்கரி'ல் நிகழ்ந்திருக்கின்றது? அந்தக் கதையை எழுதியவர் எம்.ஜே. தம்பிமுத்து. தம்பி என்று பலரால் சுருக்கி அழைக்கப்பட்ட தம்பிமுத்து இங்கிலாந்தில் இருந்து அன்று பிரபல்யமான  'Poetry London' சஞ்சிகையை அவரே  தொடக்கி தொடர்ச்சியாக 10 வருடங்கள் வெளியிட்டவர். அன்று மிகப் புகழில் இருந்த எழுத்தாளர்கள் பலரோடு நட்பாக இருந்தவர். எப்போது என்றாலும் T. S. Eliot ஐ சந்தித்துப் பேசக்கூடியவராக தம்பி இருந்திருக்கின்றார். தம்பிமுத்து திருமணமாகிய காலத்தில், எலியட் புதுமணத் தம்பதியினரை அழைத்து தேநீர் விருந்து கொடுக்குமளவுக்க்கு எலியட்டோடு தம்பிமுத்து நெருக்கமாக இருந்திருக்கின்றார். மேலும் அவர் பதிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், எடிட்டராகவும் பல நூல்களுக்கு இருந்திருக்கின்றார். அப்படி தம்பிமுத்து  பதிப்பாளராக இருந்த Poetry London மூலம் இங்கிலாந்தில்  விளாடிமீர் நபகோவ்வின் நாவலான 'The Real Life of Sebastian Knight' வெளியிட்டிருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.

தம்பிமுத்து பின்னர் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்குப் போய் நியூ யோர்க்கிலிருந்து, அதே சஞ்சிகையை ''Poetry London- New York' என்ற பெயரிலும் வெளியிட்டவர். அமெரிக்காவில் இருந்து இந்தச் சஞ்சிகையை வெளியிட்டபோது அன்றைய பீட் ஜெனரேஷனைச் சேர்ந்த Jack Kerouac, Allen Ginsberg போன்றவர்களின் படைப்புக்களை வெளியிட்டவர். அலன் கின்ஸ்பேர்க் போன்றவர்கள் தம்பிமுத்துவின் வீட்டு விருந்துகளில் கலந்துகொண்டு இலக்கியம் குறித்து விவாதிக்கின்றவர்களாக இருந்திருக்கின்றனர்.
Uploaded Image
இதைவிட எனக்கு வியப்பாக இருந்த ஒரு விடயம் தம்பிமுத்து அவரது வாழ்க்கைக்காலம் முழுதும் ஒரு முழுநேர இலக்கியவாதியாக இருந்தது. எழுத்தைத் தவிர வேறெந்தத் தொழிலையும் செய்யாது எழுத்தோடு பின்னிப்பிணைந்து கிடந்தவர் தம்பிமுத்து. இங்கிலாந்து/ அமெரிக்காவில் ஒரு முழுநேர எழுத்தாளராக, அதுவும் ஒரு புலம்பெயர் மண்ணிறக்காரர் அந்தக் காலத்தில் இருப்பதைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ அங்கே பிறந்து வளர்ந்த ஒருவர் வேண்டுமெனில் முழுநேர எழுத்தாளராக இருக்கலாம், அவர்களுக்கு அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்ய ஏதேனும் பூர்வீகச் சொத்துக்களாவது இருக்கும். ஆனால் தம்பிமுத்து போன்ற ஒருவர் எவருமே ஆதரவு கொடுக்காமல், எவ்வித பூர்வீகச் சொத்தும் இல்லாது, ஒரு முழுநேர எழுத்தாளராக தன் வாழ்க்கைக் காலம் முழுதும் இருந்திருக்கின்றார் .சிலவேளைகளில் ஒரே ஆடையை சில மாதங்களாக அணிந்து திரியுமளவுக்கு வறுமையின் அடிநிலைவரை போயிருக்கின்றார் என்றாலும், பூர்ஷூவா வாழ்க்கையை வெறுத்து, ஒருவகை போஹிமியன் வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர் தம்பிமுத்து என்பதால் அவருக்கு இது குறித்து எந்த முறைப்பாடுகளும் இருந்ததும் இல்லை.

தம்பிமுத்து அடிப்படையில் ஒரு கவிஞர். அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தபோதே அவர் கதைகளின் பக்கம் தீவிரமாக இறங்குகின்றார். ஒரு படைப்பாளி நான்கைந்து கதைகளை எழுதியவுடனேயே நியூ யோர்க்கர் அவரின் கதையொன்றைப் பிரசுரிக்க முன்வந்திருக்கின்றது என்பது திகைப்பைத் தரக்கூடியது. ஆனால் தம்பிமுத்து அந்தளவுக்கு திறமையானவராக இருந்திருக்கின்றார்.
Uploaded Image
நியூ யோர்க்கரிலும், ரிப்போர்ட்டரிலும் தம்பிமுத்துவின் ஐந்து கதைகள் வெளிவந்தவுடன், அவரை ஒரு பதிப்பகம் சிறுகதைத் தொகுப்பு வெளியிடுவதற்காக கையெழுத்திடுகின்றது. இன்னும் ஏழு கதைகள் எழுதியவுடன் 12 கதைகளுடன் ஒரு தொகுப்பு வெளியிடுவோம் என்று அந்தப் பதிப்பகம் முன்வருகின்றது. தம்பிமுத்துவின் எழுதப்பட்ட அநேக கதைகள் அச்சுவேலியைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டதால் அந்தச் செம்பாட்டு மண்ணை முன்வைத்து 'A handful of Red Earth' என்ற தலைப்புக் கூட தெரிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தம்பிமுத்துவுக்கு திரும்பவும் இங்கிலாந்தில் வெளியிட்ட கவிதை சஞ்சிகையை பதிப்பிக்கும் 'பைத்தியம்' பிடித்துவிட, தொடர்ந்து கதைகள் எழுதுவதைக் கைவிட்டு சஞ்சிகை வெளியிடும் வேலையில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.

இறுதியில் அந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளிவராமலே போய்விட்டது. ஆனால் நியூ யோர்க்கரில் முதல் சிறுகதையை எழுதிய ஒரு தமிழர் என்ற பெருமையை தம்பிமுத்து அவரையறியாமலே செய்துவிட்டிருந்தார் என்பதுதான் நாம் பெருமைப்படக்கூடிய விடயம்.

***

(மூன்றாவது புகைப்படம்: தம்பிமுத்துவும், அலன் கின்ஸ்பேர்க்கும்)

நியூ யோர்க்கரில் வந்த தம்பிமுத்துவின் சிறுகதை

 

'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' குறித்து..

Saturday, December 20, 2025


விஜிரூபிணியின் முகநூல் பக்கத்திலிருந்து..

Uploaded Image


நான் உன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்.இலங்கையிலிந்து பறந்து யேர்மனி வந்துள்ளது. திரு இளங்கோவின் எழுத்துருவில் உருவாகிய இந்நூல். தலைப்பை பார்த்ததும் வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது, அட்டைப்படம் வாஞ்சையை கூட்டியது.அண்மையில் நண்பி ஒருவர் இலங்கை சென்றிருந்தார்,இப்புத்தகம் கிடைத்தால் வாங்கிவரச் சொன்னேன்.இன்று கையில்கிடைத்தது.திரு இளங்கோ அவர்களின் எழுத்துகள் தனித்தன்மையானவை. வாசித்து முடித்ததும் மீண்டும் பகிர்கிறேன்.

(ஆவணி 29,2025)

*
இனிய மாலை வணக்கம்....

தங்களுடைய "நான் உன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்" முற்றுமுழுதாக வாசித்து முடித்தேன். ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு திரைப்படம் பார்த்த மாதிரியான உணர்வைத் தந்தது. கதாபாத்திரங்கள் இன்னும் உயிர்ப்புடன் மனதில் உருவெடுத்தபடி இருக்கின்றன.

Uploaded Image

எவ்வித மிகைப்படுத்தல்களுமின்றிய வர்ணனைகள், யதார்த்தங்களுக்கு  புறம்பில்லாத எழுத்தாடல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். 'முள்ளிவாய்க்கால்' கதை மனதை அறுத்துக்கொண்டே இருக்கிறது. இது கதையல்ல நிஜம். எத்தனை எத்தனை நிஜங்கள் புதைந்து போயுள்ளன.

தாங்கள் எழுத்தாளர். நானோ ஒரு வாசகி மட்டுமே. ஏதோ படித்ததைப்  பகிர்ந்துள்ளேன். ஒரு முறை தாங்கள் எழுதியிருந்தீர்கள் எழுத்துக்கள் உங்களுக்கு அந்தரங்கமானவை என்று. அவ்வாறிருந்தாலும்
தங்கள் எழுத்துகள் உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிறையட்டும்.

(புரட்டாதி 11, 2025)

***
நன்றி: விஜிரூபிணியின் முகநூல் பக்கம்

 

கார்காலக் குறிப்புகள் - 122

Friday, December 19, 2025

 

நான் மிருதங்கம் பழகப் போனது, என்னுடைய பன்னிரண்டாவது வயதில் என்று நினைக்கின்றேன். எங்கள் ஊரில் இருந்து 6 கிலோமீற்றர் தூரத்தில் எனது மிருதங்க ஆசிரியர் இருந்தார். மிருதங்கம் பழக ஆசை ஏன் வந்ததென்றால் கோயில்களில் மேளச்சமா பார்த்து மேளத்தின் மீது மோகம் வந்தது. மேளத்தின் உயரம் எல்லாம் நமக்குச் சாத்தியமில்லை என்று மிருதங்கம் பழகலாம் என்று விரும்பினேன். ஆனால் அப்போது எங்கள் குடும்பம் கொஞ்சம் கஷ்டத்துக்குள் இருந்தது.

பாடசாலையில் என் வயதில் பெரும்பாலனோர் சாரணர் (Scouts) வகுப்பில் சேர்ந்தபோது என்னால் சிறுவயதில் இணைய முடியவில்லை. சிறுவர்களாக சாரணரில் சேர்பவர்களை குருளைச் சாரணர்கள்  (Cub Scouts) என்று அழைப்பார்கள். ஏன் குவளைச் சாரணராக என்னால் முடியவில்லை என்றால், என்னிடம் சாரணர் அணிவதற்கான சீருடை வாங்குவதற்கான பணம் இருக்கவில்லை. ஆகவே அப்போது குருளைச் சாரணராக ஆக முடியவில்லை. பிறகு 12/13 வயதில் சாரணராகச் சேர்ந்தபோது எனக்கு பக்கத்து வீட்டு அண்ணாவின் சாரணர் சீருடை  இலவசமாகக் கிடைத்திருந்தது. 
 
 
எனவே இப்படியான நிலையில் மிருதங்கம் பழக ஆசை இருந்தாலும் எங்கள் வீட்டு பொருளாதார வசதி சரிப்படுமா என்று கேள்வி இருந்தது.  எனது ஆசையின் காரணமாக அக்கா 'நீ போய் மிருதங்கம் பழகு' என்று தனது செலவில் அனுப்பி வைத்தார். இந்த மிருதங்கம் பழகலை நீண்டகாலம் அப்பாவுக்குத் தெரியாமல் வைத்திருந்தேன். அவருக்குத் தெரிந்தால், இந்த நிலைமையில் மிருதங்கம் ஒரு கேடா என்று கேட்டு என்னை முடக்கியிருப்பார்.

மிருதங்கம் பழகுவது என்று தீர்மானித்தாயிற்று. என் வயதொத்த ஒருவன் மிருதங்கம் பழகுகின்றான் என்பதையும் கண்டுபிடித்தாயிற்று. ஆனால் ஆசிரியர்தான் 6 கிலோமீற்றர் தொலைவில் சுன்னாகத்தில் இருந்தார். அவரிடம் எப்படிப் போவது என்றும் தெரியவில்லை. அப்போதுதான் எங்கள் பாடசாலையில் இருந்த அண்ணா ஒருவர் எனக்கு உதவ முன்வந்தார்.

அவரும் அப்போது அந்த ஆசிரியரிடம் மிருதங்கம் பழகிக் கொண்டிருந்தார். அவர் எங்களுக்கு அடுத்த கிராமமான அளவெட்டியில் இருந்தார். ஒருநாள் அவர் என்னை தனது வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய்,  தன் சைக்கிளில் ஏற்றிக் கொண்டுபோய் மிருதங்க ஆசிரியரிடம் சேர்த்துவிட்டார்.

Uploaded Image

நான் பிறகு வீட்டில் சைக்கிள் இருக்கும்போது சைக்கிளிலும் இல்லாதவேளைகளில் அந்தத் தூரத்தை நடந்தும் கடந்திருக்கின்றேன். அப்போது மட்டுமில்லை, மிருதங்கம் பழகிய காலம் முழுதும் என்னிடம் ஒரு மிருதங்கம் இல்லையென்பதை நீங்கள் நம்பமாட்டீர்கள். ஆனால் அதுதான் உண்மை. வகுப்புக்காக காசு கொடுக்கவே கஷ்டம் என்கின்றபோது எப்படி ஒரு மிருதங்கம் வாங்க முடியும்?

என் ஆசிரியர், நான் படிக்கும் மேசையின் லாச்சியைத் திறந்துவிட்டு இரண்டு பக்கமும் அடித்துப் பழகு என்று சொல்லித் தந்தார். அந்த மேசை லாச்சியில் அடித்துப் பழகலாம். ஆனால் அதற்கு எங்கே ஆதிதாளம் தெரியப் போகின்றது. தா, தீ, தொம், நம் என்று வெவேறு சப்தங்களில் ஒலிக்கும் இசையின் இலயம் விளங்கப் போகின்றது?

ஆனால் ஓர் ஆர்வமுள்ள மாணவனாக சுன்னாகத்தில் மிருதங்கம் பழகப் போயிருக்கின்றேன். நடந்து வருகின்றபோது யாராவது சிலவேளைகளில் சைக்கிள் 'ride' தருவார்கள். ஒருமுறை அப்பாவின் நண்பர், கேகேஎஸ் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்த எனக்கு அவரின் சைக்கிளில் சவாரி தந்தார்.

எனக்கு இவர் நான் மிருதங்கம் பழகுகின்றேன் என்பதை அப்பாவிடம் சொல்லிவிடுவாரோ என்று பயம் வந்தது. மனுசன் நான் இருக்கும் ரென்ஷன் தெரியாமல், ' 5கிலோ உப்பு ஆறில் கரைந்தால் என்ன மிஞ்சும்?' என்று புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்டுக் குழப்பியது, இன்றும் நினைவிருக்கின்றது. நான் 5 -6, ஆகவே -1 என்று ஏதோ சொல்ல, 'தம்பி ஆற்றில் 5 கிலோ என்ன 50 கிலோ உப்பைக் கரைத்தாலும் ஒன்றும் மிஞ்சாது' என்று சொல்லிவிட்டு சிரித்தார். எனக்கு வந்த கோபத்துக்கு சைக்கிள் மட்காட்டைப் பிடுங்கி ஒன்று அவரின் முதுகில் போட்டால் என்றமாதிரி இருந்தது. ஆனாலும் பொறுத்துக் கொண்டேன்.

இப்படி  மிருதங்க வகுப்புக்குத் தொடர்ந்து போனாலும் எப்படியாவது என் திறமையை நிரூபிக்க வேண்டுமல்லவா? அப்போது வடமாகாண சங்கீத சபை என்று ஒன்றிருந்து. அது, இப்படி இயல் இசை நாடகத்துக்கு பரீட்சைகள் என வைத்து சான்றிதழ்கள் வழங்கும். ஆகவே நான் மிருதங்கப் பரிட்சைக்கு -கொக்குவில் இந்துக்கல்லூரியில் நடந்திருக்க வேண்டும்- சென்றேன்.

ஆனால் பாருங்கள் என்னிடம் ஒரு மிருதங்கம் சொந்தமாக இல்லை. பழகியது எல்லாமே என் மிருதங்க ஆசிரியர் வைத்திருந்த மிருதங்கத்தில் மட்டுமே. அத்தோடு நாங்கள் எங்கள் சொந்த ஊரை விட்டு யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்திருந்தோம். வடலியடைப்புக்குக் கிட்டவாக உள்ளூர் அகதிகளாக இருந்தோம்.

இப்போது அப்பாவுக்கு நான் மிருதங்கம் பழகுவது தெரிந்திருந்தது. ஏனென்றால் இந்தக் காலத்தில் நாங்கள் சங்கானை, அளவெட்டி, வடலியடைப்பு என்று பல இடங்களில் இடம்பெயர்ந்து வாழத் தொடங்கியிருந்தோம்.

எனக்குச் சொந்தமாக மிருதங்கம் இல்லாவிட்டாலும் பரிட்சைக்குப் போவதற்கு ஒரு மிருதங்கம் வேண்டும். அப்பா, யாழ் நகரிலிருந்த யாரோ ஒருவரிடமிருந்து பரிட்சைக்காக மிருதங்கம் ஒன்றை இரவல் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். பரிட்சை நாளனறு மாமா என்னை சைக்கிளில் முன் பாரிலும், மிருதங்கத்தை பின் கரியரிலும் கட்டி அழைத்துச் சென்றார்.

நான் ஏதோ இதுவரை 'கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி வைக்கும்' மும்முரத்தில் அடிஅடியென்று அடித்தேன். ஆனால் நான் நினைத்த அளவுக்கு ஆதிதாளம் கூட வரவில்லை என்பது வேறுவிடயம்.  பரிட்சையில் தேர்வாவேனோ என்பதே சந்தேகமாக இருந்தது. அதிலும் என்னை பரிட்சிக்க வந்த ஒருவர், 'தம்பி பக்கத்துக் கடையில் எனக்கு கொஞ்சம் வெற்றிலை பாக்கு வாங்கி வா'வென்று அனுப்பிவைத்தார். முன்னர் காலத்தில், ஆச்சிரமத்தில் தங்கி கலைகளைக் கற்கும்போது குருவுக்குப் பணிவிடை செய்வது போல இதுவும் என்று அவருக்கு வெற்றிலை வாங்கிக் கொடுத்தேன். வெற்றிலையின் புண்ணியத்தாலோ என்னவோ நான் ஒருமாதிரியாக முதலாம்தர மிருதங்கப் பரிட்சையில் சித்தியடைந்திருந்தேன்.

ஆனால் எனது கனவு இன்னும் நிறைவேறாமலே இருந்தது. மேளத்தில் 'மாங்குயிலே பூங்குயிலே' போன்ற சினிமாப் பாடல்களை இசைப்பதைப் பார்த்தல்லவா மிருதங்கம் பழக ஆசைப்பட்டவன் நான். அப்படிப் பாடல்களுக்கு அடிக்கப் பழகுவது இரண்டாம் தரத்துக்குப் பிறகுதான் தொடங்கும் என்று சொன்னார்கள்.

இதற்கிடையில் நான் என் மிருதங்க ஆசிரியரோடு, ஆசிரியர் - மாணவர் என்ற உறவைத்தாண்டி எதையும் கதைக்கும் ஒருவனாக மாறியிருந்தேன். நான் ஏதாவது நூலகத்தில் புத்தகத்தை எடுத்துவந்தால் அதைப் பற்றி அவர் கேட்பதும், நான் நூல் குறித்தும் பேசுவதாக, மிருதங்கத்தைத் தாண்டிய உலகிலும் நாம் இருந்தோம். அவரும், 'இவனுக்கும் மிருதங்கத்துக்கும் வெகுதொலைவு, பாவம் அவனுக்குத் தெரிந்த விடயத்தைப் பற்றிப் பேசுவோம்' என்று நினைத்து என்னோடு நூல்களையும், நடப்பு அரசியலையும் பேசும் ஒருவராக மாறியிருக்கக் கூடும்.

இவ்வாறு நான் இரண்டாவது தரம் மிருதங்கம் படிக்கும் காலத்தில் போர் இன்னும் உக்கிரமாகத் தொடங்க வகுப்புக்களுக்குப் போவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிடத் தொடங்கினேன். அப்போது எங்கள் பாடசாலை மாலைநேரப் பாடசாலையாக இணுவில் சைவமகாஜனாவில் (இப்போது இணுவில் இந்துக்கல்லூரி) இயங்கத் தொடங்கியது. அந்தப் பாடசாலையும் பாவம். அதன் முன்பகுதியில் குண்டுவிழுந்து இடிந்த கட்டடத்தோடே இயங்கியது.

என்னை மிருதங்கம் பழக்குவதற்கு ஓர் அண்ணா கூட்டிச் சென்றார் என்று சொன்னேன் அல்லவா? அவருக்கு என்னை விட மூன்றோ நான்கு வயது கூடவாக இருக்கும். அவருக்கு பாடசாலையில் ஒரு மதிப்பு இருந்தது. நான் போன (அளவெட்டி) லக்கி ரியூட்டரியில் வாணி விழா கோலாகலாமாக இசை நிகழ்வுடன் நடக்கும். அங்கே இந்த அண்ணா ஒருமுறை 'பாதைகள் வளையாது பயணங்கள் முடியாது/ போகுமிடத்தை சேரும்வரைக்கும் எங்கள் பாதை வளையாது' என்ற இயக்கப் பாட்டை மிகுந்த உணர்ச்சிவசமாகப் பாடினார். உண்மையில் அன்றுதான் நான் Goosebumps என்ன என்பதை உணர்ந்தேன் - மயிர்க்கால்கள் சிலிர்த்தெழுந்தன.

அந்த அண்ணாவை நான் இணுவில் மாலைப் பாடசாலைக்குச் செல்லும்போது பாடசாலையின் மதிலடியில் பார்த்தேன். இப்போது அந்த அண்ணா இயக்கத்துக்குப் போய், விடுமுறைக்காக ஊர் திரும்பியிருந்தார். அவர் வயதொத்த நண்பர்கள் எல்லோரும் பாடசாலைக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது, இந்த அண்ணா ஒருவித ஏக்கத்துடன் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். 'எப்படியடா நீங்கள் இருக்கின்றீர்கள்?' என்று கேட்டு எனது தலையில் கோதி பாடசாலைக்குள் அனுப்பிவைத்தார்.

இயக்கத்துக்குப் போய்விட்டால் பாடசாலை வளாகத்துக்குள் நுழைய முடியாது என்பது எழுத்தில் இல்லாத கட்டளை. எப்படி இந்த அண்ணா இப்போது வேறொரு அந்நிய ஆளாக மாறிவிட்டார் என்று எனக்குத் திகைப்பாக இருந்தது. சிறந்தொரு பாடகராகவும் அதைவிடச் சிறப்பாய் மிருதங்கம் வாசிப்பவராகவும் இருந்த அந்த அண்ணா இனி பாடவோ மிருதங்கம் அடிக்கவோ மாட்டார் என்பதை என்னால் நம்ப முடியாததாக இருந்தது. என்னை மிருதங்க வகுப்புக்குக் கூட்டிச் செல்வதற்காக தங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டுபோய் சாப்பாடும் சாப்பிட வைத்த அவரின் அம்மாவின் முகமும் என் நினைவில் நின்றாடியது.

பின்னர் மிருதங்கம் உள்ளிட்ட எமக்குப் பிடித்த எல்லாக் கவின்கலைகளும் எங்களை விட்டு வெகுதொலைவாகச் செல்லத் தொடங்கின. என்னைப் போன்றவர்களும் எங்களின் அப்பாவித்தனத்தைத் தொலைத்த ஒரு தலைமுறையாக விரைவில் மாறிப்போனோம்.

**

(இந்த மிருதங்கம் இப்போது, எனது தோழியொருவர் அன்பளிப்பாகத்  தந்தது. மிருதங்கம் பழகிய அவரின் தம்பி இப்போது என் தோழியைப் போல மருத்துவராகிவிட்டார். எனவே 'எவரும் தொடாமல் மிருதங்கம் வீட்டில் சும்மா கிடக்கின்றது, உனக்கு வேண்டுமென்றால், வந்து எடுத்துக் கொள்' என்றார். பார்த்தீர்களா,  இறுதியில் நான் ஒரு மிருதங்கத்துக்குச் சொந்தக்காரனாகி விட்டேன். வாழ்க்கை விசித்திரமானதுதான் அல்லவா?)

 

ஸ்கார்பரோவில் எழுத்தாளர் இளங்கோவின் 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்'!

Thursday, December 18, 2025

 

'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்' - இளங்கோவின்  (டிசெ. தமிழன்) புதிய சிறுகதைத்தொகுதி , நேற்று Scarborough Village Receation Centreஎஇல் நடைபெற்றது. கலை, இலக்கிய, சமூக, அரசியற் பிரமுகர்கள் பலர் வந்திருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பம் போர்ச்சூழலில் , மனித உரிமை மீறல்களில் பலியாகிய அனைவர்தம் நினைவாக ,  மெளன அனுஷ்டிப்புடன் ஆரம்பமாகியது.  'தேசியம்' இலங்காதாஸ் பத்மநாதனின் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

Uploaded Image

நிகழ்வின் ஆரம்பத்தில் நிரோஜினி றொபேர்ட்  இளங்கோவின் சிறுகதையொன்றின் சில பகுதிகளை வாசித்தார்.  வித்தியாசமான, ஆனால் ஆரோக்கியமான முயற்சி. தொடர்ந்து எழுத்தாளரும், நாடகவியலாளருமான பா.அ.ஜயகரன், முனைவர் மைதிலி தயாநிதி, நம் கலை, இலக்கிய உலகில் நன்கறியப்பட்டவரும், வானொலி, தொலைக்காட்சி ஊடகவியலாளரும், நாடகவியலாளருமான பி.விக்னேஸ்வரனின் இயக்கத்தில் மேடையேறிய இப்சனின் 'பொம்மை வீடு' நாடகத்தில் சிறப்பாக நடித்துப் பலரின் கவனத்தையும் பெற்றவருமான அரசி விக்னேஸ்வரன், 'காலம்' செல்வம் ஆகியோர் நூல் பற்றிய தம் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். 

ஜயகரன் தனது உரையைப் பொதுப்பட வைத்து, மொழி , சிந்தனை பற்றிய தொடர்புகளை மையமாக வைத்தும் , இடையில் இளங்கோவின் கதைகளைக் குறிப்பிட்டும்  ஆற்றினார். முனைவர் மைதிலி  தொகுப்பின் அனைத்துக் கதைகளையும் வாசித்ததாகவும், ஆனால் அவற்றில் இரண்டைத்  தவிர்த்து , மிகுதிப் பத்துக் கதைகளை மையமாக வைத்தே உரையாற்றப்போவதாகவும், ஜயகரனைப்போல்  பொதுப்பட்டதாகத் தனது உரை இருக்காதென்றும், விரிவாகவே இருக்கும் என்றும்  குறிப்பிட்டுத் தன் உரையினை ஆற்றினார். 

அரசி விக்கினேஸ்வரன் , முனைவர்  மைதிலி தயாநிதி தவிர்த்த இரு கதைகளை மையமாகவே வைத்துத் தனது உரை பெரிதும் இருக்குமென்று குறிப்பிட்டுத் தன் உரையினை ஆற்றினார்.  இறுதியில் வந்த 'காலம்' செல்வம் தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வு ததும்பத் தன் உரையினை ஆற்றினார். அவ்வப்போது சபையோரைச் சிரித்துக் குலுங்க வைத்தார். அது மேலும் அவருக்கு உற்சாகம் தரவே மேலும் உத்வேகம் மிக்கவராக அவரது உரை தொடர்ந்தது. அவர் தனது உரையில் புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்' சிறுகதையைக் குறிப்பிட்டு, இளங்கோவின் கதைகளிலும் புதுமைப்பித்தனின் கதைகளில் தென்படும் நுட்பங்கள் சில இருப்பதாகச் சிலாகித்தார்.

Uploaded Image

நிகழ்வின் நடுவில், பாராளுமன்ற உறுப்பினர் ஜுனிதா நாதன் நூலை வெளியிட்டு வைத்ததுடன், எழுத்தாளர் இளங்கோவின் புதிய இணையத்தளத்தையும் அறுமுகம் செய்தார்.  தான் இளங்கோவின் வாசகி என்றார். கூடவே அண்மையில் நடைபெற்றப்  பாராளுமன்றத் தேர்தலில்  தன் நண்பர்களுடன் வந்து ஆதரவு தேடிய இளங்கோவுக்கு நன்றியும் தெரிவித்தார்.  தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை இளங்கோவின் பெற்றோர்,  எழுத்தாளர் தமிழ்நதி, சமூக, அரசியற் செயற்பாட்டாளர் யோக வளவன், எழுத்தாளர் மணற்காடர் (ராஜாஜி ராஜகோபாலன்), காலம் செல்வம்  உட்படப் பலர் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து தலைமை வகித்த இலங்காதாஸ் பத்மநாதன் நூல் பற்றிய தன் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார், முடிவில் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானதும், கேட்கும்போதெல்லாம் உணர்வுடன் ஒன்றி ,இழந்த மண் மீதான ஏக்கத்தை உணரவைக்கும் மலையாளத்திலிருந்து  தமிழுக்கு வந்த பாடலான 'அன்றங்கே ஒரு நாடிருந்ததே; அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே' பாடலை உணர்வு பூர்வமாகப் பாடினார் நிரோஜினி றொபேர்ட்.   தொடர்ந்து இளங்கோவின் நன்றி கூறலுடன் நிகழ்வு முடிவுக்கு வந்தது.

Uploaded Image


நிகழ்வின் இன்னுமொரு முக்கிய அம்சம். எழுநா இதழ்களின் வெளியீட்டுக்கு முக்கிய காரணகர்த்தாவான எழுத்தாளர்  'உரையாடல்' நடராஜா முரளிதரனுக்கு ஒரு மேசை வழங்கப்பட்டிருந்தது. எழுநா இதழ்களுடன் அவர் அமர்ந்திருந்தார்.  வழக்கமாக இவ்விதமான இலக்கிய நிகழ்வுகளில்  காலம் செல்வத்தின் வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சியும் இடம் பெறுவது வழக்கம்.  அவ்விதம் நடக்காததாலோ என்னவோ அவர் நிகழ்வின் முடிவில் பார்க்கிங் லொட்டில் நின்றபடி நூல்களை விற்றுக்கொண்டிருந்தார். அண்மையில் காலநதி மூலம் என் கவனத்தைக் கவர்ந்த எழுத்தாளர் யுவன் சந்திரகேசரின் , எழுத்து வெளியீடாக வெளிவந்திருந்த 'வெளியேற்றம்' நாவலின் பிரதியொன்றினையும் கூடவே வாங்கிச் சென்றேன். 

இளங்கோவின் நூலை இன்னும் வாசிக்கவில்லை. அது பற்றி உரையாற்றியவர்கள் தம் உரைகள் காரணமாக அதனை விரைவில் வாசிக்கும் ஆர்வம் தூண்டி விடப்பட்டுள்ளது. வாசிப்பேன். கருத்துகளையும் பகிர்ந்துகொள்வேன்.

நிகழ்வுக்காட்சிகளை அலெக்ஸ் வர்மா, 'தடயத்தார்' கிருபா கந்தையா ஆகியோர் எடுத்துக்கொண்டிருந்தனர்.  கிருபா கந்தையா நிகழ்வுக் காணொளியையும் எடுத்துக்கொண்டிருந்தார். நானும் சில காட்சிகளை என் அலைபேசிக்குள் அகப்படுத்தி வைத்தேன்.

***
நன்றி: வ.ந.கிரிதரன் முகநூல் பக்கம்

 

சிறுகதைத் தொகுப்பு வெளியீடு குறித்து - தமிழ்நதி

Wednesday, December 17, 2025

 

 
நேற்று (ஜூலை 19, 2025) மாலை, இளங்கோவின் சிறுகதைத் தொகுப்பாகிய 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்'  வெளியீடு ஸ்காபுரோவில் நடைபெற்றது. பா.அ.ஜெயகரன், அரசி விக்னேஸ்வரன், மைதிலி தயாநிதி, இலங்கதாஸ் பத்மநாதன், செல்வம் அருளானந்தம் ஆகியோர் நூல் குறித்து செறிவாக உரையாற்றினர்.   சிறுகதையொன்றின் ஒரு பகுதியை நிரோஜினி வாசித்தார்.  பாராளுமன்ற உறுப்பினர் யுவனிதா நாதன், நூலையும் இளங்கோவின் படைப்புகளைப் பதிவேற்றப்பட்டிருந்த இணையத்தளத்தையும் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். முதற் பிரதி நூலாசிரியரது பெற்றோருக்கு வழங்கப்பட்டது.
Uploaded Image

நீண்ட நாட்களுக்குப் பிறகு பல நண்பர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.  'காலம்' செல்வத்தார், சிறுகதை நூலைக் குறித்தல்லாமல் இளங்கோவைப் பற்றியே சிரிப்பலைகளினூடே உரையாற்றிக் கொண்டிருந்தார். நான் நெடுந்தூரம் செல்லவேண்டியிருந்த்தால், இருளத் தொடங்கவும் (ஒன்பது மணிக்கு சாவதானமாக இருள்கிறது) இளங்கோவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டுவிட்டேன். 

அதன் பிறகாவது செல்வம் அண்ணா புத்தருக்குள் வந்தாரா அறியேன். ஆனால், உரையினிடையில் என்னைப் பற்றி 'புத்தகப் பிசாசு' என்று அவர் குறிப்பிட்டதாக பிறகு கேள்விப்பட்டேன்.  

Uploaded Image

செல்லவேண்டிய பேருந்தை சில நொடி தாமதத்தால் தவறவிட்டு, நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த என்னை நண்பர் மீராபாரதி வ.க.செ யும் அவரது இணையரும் தமது காரில் ஏற்றிக்கொண்டு வந்து வீடு சேர்த்தனர். நன்றி.

மனவருத்தம் என்னவென்றால், "இனிமேல் இங்குதான் இருக்கப்போகிறேன்" என நான் கூறியதை, என்னோடு கதைத்த யாருமே நம்பவில்லை என்பதுதான். 

கேசரியும் வடையும் சுவையாக இருந்தன. கூட்டங்களுக்குப் போய் வெகுநாட்களாகிவிட்டன ஆதலால் அவற்றைச் சாப்பிட இடைவேளை விடுவார்கள் என்பதை மறந்து இடையிலேயே எடுத்துச் சாப்பிட்டுவிட்டேன். இனி கவனமாக இருக்கவேண்டும்.

கூட்டம் முடியும்வரை இருந்திருந்தால் நிரோஜினி (Nirojini Robert)  பாடுவதைக் கேட்டிருக்கலாம்.  'மிஸ்' பண்ணிவிட்டேன்.  இளங்கோவின் புத்தகத்தை விரைவில் வாசித்துவிட்டு அதுபற்றி எழுதுகிறேன்.

***

கார்காலக் குறிப்புகள் - 121

 

வ்வப்போது அரசியல் தளத்திலும்/களத்திலும் ஈடுபடும் நண்பர்களோடு உரையாடும் சந்தர்ப்பம் வாய்ப்பதுண்டு. அது எவ்வகை அரசியல் நம்பிக்கையாக இருப்பினும், அவர்களின் அரசியலை அறிக்கைகளாகவோ/ சிறு பிரசுரங்களாகவோ எழுதவேண்டுமென அவர்களை வற்புறுத்துவேன்.

ஏனெனில் அப்படி வெகுசன அரசியலில் ஈடுபாடுடையவர்கள், அந்த மக்களை நோக்கிப் பேசவேண்டியதும் அம்மக்களுக்குப் பரிட்சயமான  மொழியில் பேசவேண்டியது முக்கியமானது.  இல்லாவிட்டால் வெகுதிரள் அரசியலில் ஒரு அடி கூட முன்னே போக முடியாது.

அதுபோலவே தாம் செய்ய விரும்பும் அரசியல் பற்றிய அறிக்கையை பொதுவெளியில் வைத்து உரையாடும்போது, அதை யதார்த்த களநிலவரங்களுக்கேற்ப விரித்துக் கொண்டு செல்லவும் முடியும். கார்ல் மார்க்ஸ் 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை'யை எழுதியபின் அது தொடர்ந்து அவராலும் ஏங்கல்ஸாலும் பல தடவைகள் திருத்தி எழுதப்பட்டிருக்கின்றது என்பதை நாமறிவோம்.

Uploaded Image


நான் வாசிக்க வந்த காலத்தில் அ.மார்க்ஸ் உள்ளிட்ட சிலர் சேர்ந்து 90களில் எழுதிய 'தலித் அரசியல் ஆவணம்' எனக்கு முக்கியமான ஒன்றாகத் தெரிந்தது. அதை ஏற்றும், நிராகரித்தும் பல்வேறு உரையாடல்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்திருக்கின்றன. தலித் அரசியல் அந்த அறிக்கையிலிருந்து எவ்வளவோ முன்னகர்ந்தும் போய்விட்டது.  ஆனால் அந்த அறிக்கை  ஒரு முக்கிய விடயத்துக்கான தொடக்கப்புள்ளி என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

 அதேபோன்று ஈழத்தில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாய் அரசியல் கொதிநிலையில் இருக்கும் சூழ்நிலையில், அகிம்சை/ ஆயுதப்போராட்டம் என்று பல்வேறு அரசியல் களங்களில் பயணித்த நம்மவர்களும் நிறைய அறிக்கைகளையும், உரையாடல்களையும் செய்திருக்க வேண்டும். கடந்தகாலங்களில் இப்படி நிகழ்ந்திருக்கும் சாத்தியம் இருந்தாலும், அவற்றை நாம் விரிவாக எழுத்தில் பதிவு செய்யவோ, தொடர்ச்சியாக உரையாடவோ இல்லை என்று நினைக்கின்றேன்.

இலக்கியத்தில் எஸ்.பொ(ன்னுத்துரை) இலங்கையில் இந்திய நூல்களின் தடை வந்தபோது ஓர் அறிக்கையை விரிவாக  70களில் எழுதியிருக்கின்றார். அன்றைய அமைச்சருக்கு  இந்த அறிக்கையை 60 பக்கங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி சமர்ப்பித்துவிட்டு அதை ஒரு நூலாக அடுத்த நாளே எஸ்.பொவின் நண்பர் எம்.ஏ.ரஹ்மான் 'அரசு' பதிப்பாக வெளியிட்டுமிருக்கின்றார். பின்னர் 2000களின் வெளிவந்த எஸ்.பொவின் 'இனி' என்ற தொகுப்பிலும் இந்த அறிக்கை இருந்தது. அதிலேயே நான் இதை வாசித்திருந்தேன்.

லங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சீனச் சார்பு)யின் தலைவராக இருந்த நா. சண்முகதாசன் நிறைய நூல்களையும், சிறு பிரசுரங்களையும் எழுதியிருக்கின்றார், வேறொரு தேடலுக்காக நான் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்ககால வரலாற்றை  வாசித்தபோது சண்முகதாசனின் முக்கிய நூலொன்று அகப்பட்டது.

அது 'தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் பாதை எது?' என்கின்ற நூலாகும். இது வெளிவந்து கிட்டத்தட்ட 50 வருடங்களாகிவிட்டது. ஆனால் அதில் சண்முகதாசன் இதுவரை கால இலங்கையின் வரலாற்றை விரிவாகப் பேசிவிட்டு சமகாலத்திற்கு (70களுக்கு) வருகின்றார். அவரது அறிக்கையை ஏற்கவும் நிராகரிக்கவும் நாங்கள் செய்யலாம். ஆனால்  இன்று ஒரு பெரும் ஆயுதப்போராட்டம் முடிந்தபின்னும் நாம் இந்தக் காலத்திலும் இந்த அறிக்கையை முன்வைத்து உரையாட முடியுமளவுக்கு காலத்தில் அழியாமல் இருக்கின்றது.

Uploaded Image


இந்த நூல் வெளிவந்த காலத்தையும் நாம் கவனித்தாக வேண்டும். இது 1976 இல் வெளிவந்திருக்கின்றது. அதே ஆண்டில் சில மாதங்களுக்கு முன்னர்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து தமிழர்க்கு தனிநாடே இனி ஒரே தீர்வு என்று அறைகூவல் விடுத்தனர். அந்த உணர்ச்சிவசப்பட்ட காலத்தில் மிக நிதானமான நடையில் வெளிவந்த சண்முகதாசனின் இந்த அறிக்கை முக்கியமானது. அவரின் கட்சியினரே தொடர்ந்து காலத்துக்கேற்ப இந்த அறிக்கையை விசாலித்தபடி மக்களிடையே கொண்டு சென்றிருந்தால், நாம் வேறு விதமான பாதைகளை அடுத்து வந்த தசாப்தங்களில் தேர்ந்தெடுக்க முடிந்திருக்கலாமோ தெரியாது. ஆனால் அவர்களோ கட்சி தலைமைக்கு யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும், மற்றொரு பிரிவினரைத் திரிபுவாதிகள் என்றும் கட்சிக்குள்ளும், வெளியிலும் சமராடிய சோகந்தான் நிகழ்ந்திருக்கின்றது.

இன்றைய அரசியல் கட்சிகள், அரசியல் ஆய்வாளர்கள் மக்களுக்கான அரசியலைச் செய்வதாகச் சொல்லும்போதோ/எழுதும்போதோ நாம் அவர்களிடம் உங்களின் அரசியல் குறித்த அறிக்கையை வெளியிடுங்கள் எனக் கேட்கலாம். உண்மையான மக்கள் நலத்தின் மீது அக்கறையுள்ளவர்கள் எவராயினும் இந்த விடயத்தில் பின்னிற்கப் போவதில்லை என்றே நினைக்கின்றேன்.

ஆனால் எம்மிடையே இப்படி வரலாற்றை விரிவாக அறிந்தவர்களோ, தமது அரசியல் கொள்கைகளைத் தெளிவாக முன்வைக்கக்கூடிய அரசியல்வாதிகளோ, களச்செயற்பாட்டாளர்களோ, ஆய்வாளர்களோ,  மிக அரிது என்பதான் நமது இன்றைய அரசியலில் மிகப்பெரும் பலவீனமும் என்பேன்.

***

(நா.சண்முகதாசனின் தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் பாதை எது? என்ற நூலினை வாசிப்பதற்கான இணைப்பு )

 

புன்னைப்பூ குறிப்புகள்

Tuesday, December 16, 2025

 

Eden

1930 களில் உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். முதலாம் உலகப்போர் நடந்து முடிந்த வெறுமையில் மனித இருப்பின் சாத்தியங்களைத் தேடி ஜேர்மனியிலிருந்து இருந்து கலாநிதிப் பட்டத்தை வைத்திருக்கும் ஒருவர் தனது துணையோடு ஆளற்ற தீவுக்குச் செல்கின்றார். இது தென்னமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் தீவு. மகிழ்ச்சியும் அமைதியும் நிரம்பிய மனித வாழ்வு இங்கே துளிர்க்குமென தனது கட்டுரைகளை தங்கள் வாழ்வை முன்னிட்டு எழுதுகின்றார்.

Uploaded Image

இந்தக் கட்டுரைகளில் பாதிப்பில் வேறு சிலர் குடும்பமாகவும், நண்பர்களாகவும் சேர்ந்து அத்தீவுக்கு வரும்போது ஏற்படும் சிக்கல்கள், மனிதர்கள் எங்கு போனாலும் 'மனிதத்தன்மை'களோடே இருக்கின்றார்கள் என்பது புரிகின்றது. ஆனால் அதற்காக இவ்வளவு விலை கொடுக்கவேண்டுமா என்ற கேள்விகளும் எழுகின்றன.

இது நான் இங்கே எனது பதினொராம் வகுப்பு ஆங்கிலப் படத்தில் படித்த 'Lord of the Flies' ஐ நினைவுபடுத்தியது. அதில் ஒரு விமான விபத்தால் ஒரு சிறுவர்கள் கூட்டம் ஒரு ஆளற்ற தீவில் சிக்கிவிடுகின்றார்கள். நாட்கள் செல்லச் செல்ல அவர்களின் குழந்தை இயல்புகளை இழந்து 'வளர்ந்தவர்'களின் மனோநிலையான கொலை செய்யுமளவுக்குப் போய்விடுவார்கள்.

நாம் குழந்தைப் பருவத்திலேயே -கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால்- இப்படித்தான் சகமனிதர்களோடு உறவாடுவோமா என்று என்னை அந்தக் காலத்தில் யோசிக்க வைத்த ஒரு நாவலது. அது திரைப்படமாகவும் பின்னர் எடுக்கப்பட்டிருந்தது.

'Eden' திரைப்படத்தில் இப்படி அங்கே போன ஒரு குடும்பத்தினரின் சந்ததியினரே இன்றும் அத்தீவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மற்ற அனைவரும் அந்தக்காலத்தில் கொல்லப்பட்டோ, வெளியேற்றப்பட்டோ செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவ்வாறு அத்தீவுக்குச் சென்ற முதல் தலைமுறைப் பெண் ஒருவர் எழுதிய நூலை வைத்தே இத்திரைப்படம் படமாக்கப்படவும் செய்யப்பட்டிருக்கின்றது.

*

தேவகாந்தனின் 'கனவுச்சிறை' ஆங்கில மொழிபெயர்ப்பு

Uploaded Image


ஐந்து தனித்தனி நாவல்களாக 12 வருட இடைவெளியில் வெளிவந்த தேவகாந்தனின் படைப்புக்கள் பின்னர் "கனவுச்சிறை" என மொத்தமாகத் தொகுக்கப்பட்டு ஒரு பெரும் நாவலாக வெளியிடப்பட்டது. இப்போது ஆங்கிலத்தில் ஐந்து தனித்தனி நாவல்களாக நேத்ராவினால் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கின்றது. அந்த ஆங்கில நாவல்களுக்கான வெளியீட்டு விழா இன்று இனிதாக நடைபெற்றது. நூலாசியரிடமும், மொழிபெயர்ப்பாளரிடமும் கையெழுத்துக்களைப் பெற்றுக்கொண்டேன்.

இன்று இது தமிழ்ச்சூழலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் உடைய நிகழ்வல்ல. ஆனால் எதிர்காலத்தில் இந்நூலை ஆங்கிலத்தில் வாசிக்கப்போகும் ஒரு தலைமுறை கடந்த காலத்தில் தம் மூதாதையர் வாழ்ந்த  வாழ்வின் வேர்களைப் பதுக்கி வைத்த ஒரு படைப்பென கனவுச்சிறையை நிச்சயம் கொண்டாடச் செய்யும் என்பது என் நம்பிக்கை.

தேவகாந்தனுக்கும், நேத்ராவுக்கும் வாழ்த்துகள்!

*

Mango

Uploaded Image

ஓர் எளிமையான காதல் கதையென இதைச் சொல்லலாம். டென்மார்க்கிலிருந்து ஸ்பெயினில் இருக்கும் ஒரு மாமரப் பண்ணை உள்ள நிலத்தை வாங்க ஒரு நிறுவனத்தால் அனுப்பப்படும் பெண்ணின் கதை. எனக்கு மாம்பழம் பிடிக்கும் என்பது மட்டுமில்லை, ஸ்பெயினின் மலேக்காவும் பிடித்த நகரம் என்பதால் சுவாரசியமாக இந்தப் படத்தைப் பார்த்தேன். சிலவேளைகளில் நாம் தேடும் சந்தோசத்தை, நாம் துயரத்தில் தத்தளிக்கும் பொழுதுகளிலும் கண்டடைய முடியுமென்று நம்பிக்கை தரும் எளிமையான திரைப்படம். காதல் என்பது ஓர் அழகான உணர்வு, வாழ்க்கையின் எந்தப் பருவத்திலும் மலரக்கூடியது என்று நம்பக்கூடிய என்னைப் போன்ற மென்னிதயம் கொண்டவர்களை மட்டும் இப்படத்தைப் பார்க்கப் பரிந்துரைப்பேன்.

*

A House of Dynamite

நாம் வாழும் உலகில் அணுகுண்டுப் போர் தொடங்கினால் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றியது இத்திரைப்படம். ஆனால் இங்கே அணுகுண்டு வெடிப்பதோ அதன் அழிவோ அப்படிப்பட்ட எதுவோ காட்டப்பட்டிருக்காது. ஓர் அணுகுண்டு அது எங்கிருந்து அனுப்பப்படுகின்றது என்று தெளிவில்லாது அமெரிக்காவின் சிகாகோவை நோக்கி வரத் தொடங்குகின்றது. அமெரிக்காவின் அனைத்து ஏவுகணைத் தடுப்பு அரண்களையும் தாண்டி அந்த அணுகுண்டு ஏவுகணை அமெரிக்காவின் நிலப்பரப்புக்குள் நுழைகின்றது. அதை எப்படி அமெரிக்கா எதிர்கொள்கின்றது என்பதைப் பற்றிய படம்.

Uploaded Image


நாம் எல்லோரும் பாதுகாப்பான வீட்டில் இருக்கின்றோம், ஆனால் எம்மைச் சுற்றி எப்போதும் என்றாலும் வெடிக்கக்கூடிய வெடிமருந்துக் குவியல்தான் இருக்கின்றது, அதை மறந்துவிடாதீர்கள் என்று நம்மை எச்சரிக்கின்ற ஒரு திரைப்படம்.  'The Hurt Locker', 'Zero Dark Thirty'  திரைப்படங்களை எடுத்த Kathryn Bigelowவின் நெறியாள்கையில் வந்திருக்கின்ற ஒரு படம்.

***

Mr K சிறுகதை குறித்து..

Monday, December 15, 2025

 

கனடாவில் வசிக்கும் எழுத்தாள நண்பர் இளங்கோ  தனது சிறுகதை தொகுப்பான 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' நூலை நண்பர் வடகோவை வரதராஜன் ஊடாக என்னிடம் சேர்ப்பித்திருந்தார். அவருக்கு முதலில் எனது அன்பும் நன்றியும்.

10 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை. அதில் உள்ள 'Mr.K' என்ற சிறுகதை குறித்த பதிவாக இது அமைகிறது.

தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர்களை பாத்திரமாகக் கொண்ட பல சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. ஒரு வசதிக்காக அவற்றை நான்கு வகையாக வகைப்படுத்தி நோக்கலாம் எனத் தோன்றுகிறது.

Uploaded Image

1. எழுத்தாளர்களின் குணநலன்களை  விதந்தோதி அவர்களின் சொந்தப் பெயர்களையே பாத்திரமாகச் சித்திரித்து எழுதப்பட்டவை.
2. எழுத்தாளர்களின் குணவியல்புகளை உள்வாங்கி வேறு பெயர்களில் பாத்திரமாக்கி எழுதப்பட்டவை.
3. எழுத்தாளர்களை வசை பாடியோ அல்லது அவர்களது நடத்தைக் கோலங்களை எதிர்மறையாகச் சித்திரித்தோ புனைவுப் பாத்திரமாக எழுதப்பட்டவை.
4. தாம் வாசித்த எழுத்தாளர்களின் படைப்புகளில் வரும் பாத்திரங்களை தாம் எழுதும் படைப்புக்களில் வரும் பாத்திரங்களோடு ஒப்புநோக்கி எழுதப் பட்டவை.

மேற்படி முதல் இரு வகைகளுக்கும் உதாரணமாக பேராசிரியர் அ.ராமசாமி எழுதிய கட்டுரை ஒன்றின் சிறுபகுதியை  எடுத்துக் காட்டலாம்.

Uploaded Image


"எல்லா மனிதர்களையும்போலத் தன் குடும்பம், தன்மனைவி, தன் அடையாளம் என வாழ்க்கையை நடத்தாமல் / நடத்த விரும்பாமல் விலகிய பயணத்தைத் தேர்ந்தெடுத்த ஜி.நாகராஜனின் கடைசிக்கால வாழ்க்கை முறை பலருக்கும் ரசிக்கத்தக்கதாக இருந்திருக்கிறது. கதையாக ஆக்கத்தக்கதாக இருந்திருக்கிறது. ஆக்கியிருக்கிறார்கள். சி.மோகனின் 'விலகிய கால்கள்' கதைக்கும் முன்பே நான்கைந்து கதைகளை வாசித்திருக்கிறேன். அவர்கள் பெரும்பாலும் வெளியூர்வாசிகள். பாண்டிச்சேரிக்குப் போன ஜி.நாகராஜனைத் தற்செயலாகப் பார்த்துப் பிரபஞ்சன் தனது கதைக்குள் எழுதிக் காட்டியிருக்கிறார். தன்னைப் பார்ப்பதற்காகவே  நாகர்கோவில் வந்தவரை சுந்தரராமசாமி தனது கதையில் எழுதியிருக்கிறார்.

சென்னைக்கு வந்தவரை அசோகமித்திரனும் திலீப்குமாரும் எழுதியிருக்கிறார்கள். அசோகமித்திரனும்கூடக் கொஞ்சம் விலகலோடு தான் எழுதிக் காட்டுகிறார். ஆனால் திலீப்குமாரின் கதைக்குள் அவரை முழுமையாகப் புரிந்துகொண்ட ஓர் இளைஞனின் பார்வையில் நிறுத்தப்படுவார் ஜி. நாகராஜன். இவர்களெல்லோருமே கதைக்குள் தங்களை ஒரு கதாபாத்திரமாக மாற்றிக் கொண்டு கதையைச் சொல்லியிருப்பார்கள்.  அவர்களெல்லாம் அவரது வாழ்க்கையைப் போன்றதொரு வாழ்க்கையை வாழவேண்டுமென்று நினைத்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அப்படியொரு வாழ்க்கை வாழ்ந்து பாருங்கள் என்று வாசகர்களுக்கும் முன்வைக்கவில்லை.

ஜி. நாகராஜன் என்றொரு எழுத்தாளர் இருந்தார்; அவர் மற்றவர்களைப் போன்ற எழுத்தாளர் அல்லர்; என்னைப்போலவும்கூட அல்ல என்ற தொனி அவற்றில் உண்டு என்று கூறும் கதைகளையே எழுதிக்காட்டி இருக்கிறார்கள். ஆம் அவை கதைகள் தான்; வரலாறல்ல. அக்கதைகளில் எல்லாம் அவர் மட்டுமே உண்மைப் பாத்திரங்கள்.  அல்லது மையப்பாத்திரங்கள். கதைசொல்லிகளாக வரும் எழுத்தாளர்கள் தங்களை அதிகம் காட்டிக் கொள்ளாத முன்னிலைப் பாத்திரங்கள் மட்டுமே. அந்தக் கதைகளை வாசிக்கும்போது ஏற்படுவது இரக்க உணர்வு. இன்னும் சில காலம் அவர்  இருந்திருக்கலாம் என்பதான இரக்க உணர்வு"

இதே போன்று புதுமைப்பித்தன், ஆத்மாநாம், ஆதவன் ஆகியோர்களை கதாபாத்திரமாகக் கொண்ட சிறுகதைகளும் எழுதப்பட்டுள்ளன.
மூன்றாவது வகை கதைகளுக்கு  ஈழத்திலேயே நிறைய உதாரணங்களைச் சுட்டிக்காட்டலாம். 2011ஆம் ஆண்டு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற 'சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு' அரங்கில் நண்பர்  தேவ முகுந்தன் 'இலக்கியவாதிகளை பாத்திரங்களாகக் கொண்ட ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள்' என்று ஒரு கட்டுரை வாசித்ததும்  நினைவில் வருகிறது.

Uploaded Image

நான்காவது வகைக்கு உதாரணமாக குந்தவை எழுதிய இரண்டு சிறுகதைகளை எடுத்துக் காட்டலாம்.

"இப்படியான 'ஆண்கள்' எல்லாருமே நீலபத்மனாபனின் 'திரவி' போன்றவர்கள் தானோ என அவள் அடிக்கடி யோசித்திருக்கிறாள்"
( 'வீடு நோக்கி' சிறுகதையில்...)

"காசிற்குத்தேவை, எப்பொழுதுமே இருந்து வந்தது. அவன் அந்தக் கலையில் தீவிரமாக முன்னேறி விட்டிருந்தான். தான் ஒரு சாதாரணமானவன். உலக இயல்புகளுக்கு உட்பட்டவன். 'தகழி'யின் கேசவப்பிள்ளை மாதிரி. இயற்கையைத் தானே 'தகழி'யும் எழுதியிருக்கிறார்"
( 'யோகம் இருக்கிறது' சிறுகதையில்...)

இந்த நான்கு வகையான சித்திரிப்புகளைத் தாண்டி 'Mr.K' சிறுகதையில் இளங்கோ செக் நாட்டு எழுத்தாளரான காஃப்காவையும் தமிழ் எழுத்தாளரான கோபி கிருஷ்ணனையும் சிறுகதைக்குள் கொண்டு வந்து நல்லதொரு வாசிப்பனுபவத்தை தந்துள்ளார்.

Mr.K கதையில் வரும் கதைசொல்லி  காதலினால் மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் இருவேறு சூழ்நிலைகளில் ஆளாகித் தடுமாறும் போது அந்த மனநிலைக்குப் பொருந்தக்கூடிய பிரதிபலிப்புகளை காஃப்காவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களோடும் அவரின் படைப்புகளின் வாயிலாகவும் ஒப்புநோக்கிச் சித்திரித்து, காஃப்காவை புரிந்து கொள்வதில் ஏற்படும்  விலகலையும் ஏற்பையும் விபரித்து,  நம் இருத்தலிய வாழ்வில் காஃப்கா ஒரு போதும் விலத்திப் போக முடியாதவர் என்றும் காட்டுகின்றார்.

அதற்கு காஃப்காவின் 'பெர்லின் பொம்மை' கதையையும் 'மழை' சிற்றிதழுக்காய் கோபி கிருஷ்ணனை,  யூமா வாசுகி எடுத்த நேர்காணலின் சில பகுதிகளையும் இந்தக் கதையில் பொருத்தமுறக் கையாண்டுள்ளார்.

இந்தக் கதையைப் படித்ததும்  எப்போதோ வாங்கிய சா.தேவதாஸ் தமிழில் மொழிபெயர்த்த "உலகப் புகழ் பெற்ற கலைஞன் : காஃப்காவின் கடிதங்கள்,கதைகள், கட்டுரைகள்" நூலையும் 'புது எழுத்து' சிற்றிதழ் வெளியிட்ட 'கோபி கிருஷ்ணன்' சிறப்பிதழையும் வாசிக்கத் தூண்டி உள்ளது.

***
 
(Oct, 2025)

 

புத்தகப்பிரியர் டான் வாசித்தவை

 

னடிய தேசிய ஊடகங்களில் இலங்கை வெள்ள அனர்த்தம் குறித்து ஏதும் தகவல்கள் வந்தனவா என்று துழாவிக் கொண்டிருந்தேன். தென்கிழக்காசியா நாடுகளைப் பதம் பார்த்து அழிவுகளை செய்த புயல் இப்போது இலங்கையைக் கடந்து கொண்டிருக்கின்றது. ஏற்கனவே நூறுக்கு மேற்பட்ட மக்கள் இலங்கையில் இறந்துவிட்டனர் என செய்திகள் வருகின்றன. மிகுந்த துயரமான காலம்!

மழையோ, புயலோ எது வந்தாலும் உடனே பாதிப்புறும் இடங்களாக இலங்கையில் மலையகமும், தென்னிந்தியாவில் கேரளாவும் இருப்பதை பல பொழுதுகளில் கண்டிருக்கின்றேன். இரண்டுமே எனக்கு மிக நெருக்கமான இடங்கள்.

இவ்வாறான சோர்வான காலங்களில் மனது எதையாவது நம்பிக்கையை கொழுகொம்பாகப் பற்றிக் கொள்ள அவாவும். அப்படி தற்செயலாக ஒருவர் தன் வாழ்க்கைக் காலத்தில் 3,599 நூல்களை வாசித்திருக்கின்றார் என்கின்ற ஒரு செய்தியை வாசித்தேன். அமெரிக்காவில் வாழ்ந்த டான் (Dan Pelzer), அண்மையில்தான் தனது 92 வயதில் காலமாகியிருக்கின்றார். ஒரு சமாதான (?) நடவடிக்கைக்காக நேபாளத்திற்கு 1962இற்கு சென்றபோது வாசிக்கத் தொடங்கிய புத்தகங்களிலிருந்து கிட்டத்தட்ட 60 வருடங்களாக  அவர் வாசித்த புத்தகங்கள் ஒவ்வொன்றின் பெயரையும் எழுதி வைத்திருக்கின்றார்.

நல்லவேளையாக அவர் வாசகராக மட்டும் இருந்திருக்கின்றார். எழுத்தாளராக ஆகவேண்டும் என்று முயலவேயில்லை. இல்லையெனில் நம்மிடையே இருக்கும் சிலரைப் போல தொடக்கத்தில் கொஞ்சப் புத்தகங்களை மட்டும் வாசித்துவிட்டு, எழுத்தாளராகி எமது தலையில் தங்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று சம்பல் அரைத்திருப்பார். அந்தத் தவறெல்லாம் இந்த நல்வாசகரான டான் செய்யவில்லை. அது அவரது நல்லூழ்.
Uploaded Image

சில மாதங்களுக்கு முன்னர்தான் இவர் காலமாகியிருக்கின்றார். அவரின் மகளுக்கே 20 வருடங்களுக்கு முன்னர்தான் தனது தகப்பன் இப்படி வாசித்த புத்தகங்களின் பட்டியலை அவரின் கையெழுத்தில் எழுதி வைத்திருக்கின்றார் என்பது தெரிந்திருக்கின்றது. இந்த வாசகர் இந்தப் பட்டியலை வேறு எவருக்கும் காட்டவேண்டும் என்றோ அல்லது இவ்வளவு நூல்களை வாசித்திருக்கின்றேனோ என்பதற்காகவோ தயாரிக்கவில்லை. அவருடைய தனிப்பட்ட விருப்புக்காக தான் வாசித்த  நூல்களைப் பட்டியலிட்டு வைத்திருக்கின்றார்.

கவனிக்கவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், டான் தான் எழுதி வைத்திருக்கும் நூல்களின் பட்டியலில் உள்ள நூல்களை முழுமையாக வாசித்திருக்கின்றார் என்பதாகும் . நமது சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி, 'எனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றியும் நான் எழுதுவதில்லை' என்று சொன்னதுபோல, டானும் அவர் வாசித்து முடிக்காத நூல்கள் பற்றிய பெயர்களை தனது பட்டியலில் சேர்த்தவர் இல்லை எனலாம். டானின் பட்டியலில் 1962 இல் முதல் வாசித்த முதல் நாவல் The Blue Nile ஆக இருக்கின்றது, இறுதி நாவலாக 2023 இல் வாசித்தது சார்ள்ஸ் டிக்கன்ஸின் David Copperfield.

*

மது தகப்பனின் மரண வீட்டின்போது, இந்தப் பட்டியலை அந்நிகழ்வுக்கு வருகின்றவர்களுக்கு கொடுக்கலாம் என்று பிள்ளைகள்  விரும்பியபோது அந்த நூல்களின் பட்டியலே நூறு பக்கங்களுக்கு மேல் வருவதால், அப்படி கொடுக்க முடியாது, தந்தை வாசித்த நூல்களின் பட்டியலை அனைவரும் வாசிக்கும்படி இணையத்தில் பிரசுரித்திருக்கின்றனர்.

இவ்வளவு நூல்களை ஒருவர் வாசித்திருக்கின்றாரா என்று பலர் வியந்து டானின் பிள்ளைகளுக்கு நிறைய மின்னஞ்சல்/தொலைபேசிகள் பேசியிருக்கின்றனர். டான் அடிக்கடி செல்லும் நூலகம் அவருக்கென ஒரு பக்கத்தை உருவாக்கி டான் வாசித்த நூல்களின் பட்டியலைக் கொடுத்து, அந்த நூல்களுக்கான இணைப்புக்களையும், அந்த புத்தகங்களுக்கான சிறியதான நூல் சுருக்கத்தையும் கொடுத்திருக்கின்றனர்.

அது மட்டுமில்லை நூலகத்தில் வருபவர் கண்ணுக்கு முன்னே தெரிவதற்காக, 'டான் வாசித்த நூல்கள்' என்றொரு நூலக அடுக்கையும் வைத்து மூவாயிரம் நூல்களை வாசித்த டானைப் பெருமைப்படுத்தியிருக்கின்றனர். . மேலும் இப்போது பல அமெரிக்கன் நூலகங்களில் டானின் பெயரோடு அவர் வாசித்த நூல்கள் காட்சிப்படுத்துமளவுக்கு டானின் வாசிப்பு பிரபல்யமாகிவிட்டது. பல தொலைக்காட்சி நிறுவனங்கள் அவரின் புத்தக வாசிப்பைப் பற்றி சிலாகித்துப் பேசத் தொடங்கியிருக்கின்றன.

டான், அவரின் இயல்பு வாழ்க்கையில் எப்படி இருப்பார் என்று அவரின் மகளிடம் கேட்டபோது, அவர் வேலை இடைவெளிகளின்போதும், பஸ்சில் பயணிக்கும்போதும் வாசிப்பவர் என்று அறிந்திருக்கின்றனர். பின்னர் அவர் வேலையில் இருந்து ஓய்வுபெற்றபோது, ஒவ்வொரு நாளும் எப்படியாயினும் நூறு பக்கங்களை வாசிக்காமல் தூங்கப் போகமாட்டார் என்று கூறியிருக்கின்றார்.

ஒருவர் தன் வாழ்க்கைக்காலத்தில் 3,500 இற்கு மேற்பட்ட நூல்களை வாசிப்பது என்பது எளிதல்ல. அதிலும் டான், ஜேம்ஸ் ஜாய்ஸின் 'யுலிஸிஸ்' உட்பட பல பெரும் புத்தகங்களை வாசித்திருக்கின்றார். டானுக்கு எத்தகைய புத்தகங்கள்/எழுத்தாளர்கள் மீது விருப்பமிருந்தது என்று கேட்கப்படும்போது, அடுத்த பக்கத்தில் என்ன இருக்கின்றது என்று சுவாரசியமாக பக்கங்களைப் புரட்ட வைக்கும் நூல்களே அவருக்கு அதிகம் பிடித்தது என்று சொல்லியிருக்கின்றார். ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸிஸை வாசித்து முடித்தாலும் அதற்காக கடும் உழைப்பு தேவையாக இருந்தது என்று டான் மகளிடம் கூறியிருக்கின்றார்.

இவ்வளவு புத்தகங்களை டான் வாசித்தவர் என்பதை விட, எனக்கு அவர்  தன் சொந்த வாழ்க்கையில் எப்படி இருந்தவர் என்பதை அறிய ஆவலாக இருந்தது. ஏனெனில் எங்களில் பலருக்கு எத்தனை புத்தகங்களை வாசித்தாலும் 'அறிவு' வளர்வதில்லை. டான் ஒரு அமைதியானவராக, புத்தகங்களை மேற்கோள் காட்டி பேசுபவராக/மற்றவர்களையும் புத்தகங்களை வாசிக்க உற்சாகமூட்டுபவராக, இவையெல்லாவற்றையும் விட பிறரின் மீது சகிப்புத்தன்மையுடையவராகவும், ஆன்மீகத்தில் (கிறிஸ்தவம்) ஆர்வமுள்ளவராகவும்  இருந்ததாக மகள் சொல்வதே எனக்கு முக்கியமானதாகத் தெரிந்தது. இப்படி புத்தகங்களை டான் வாசித்ததால் அவர் தன்னியல்பிலே நல்லதொரு உரையாடல்காரராக, பிறரை தன் வசம் பேச்சில் கவரக்கூடியவராக இருந்தார் எனவும் பிள்ளைகள் சொல்கின்றனர்.

டானின் மனைவி இறப்பதற்கு முன்னர், மூன்று வருடங்கள் வயதானவர்களைப் பராமரிக்கும் விடுதியில் இருந்திருக்கின்றார். 50 வருடமாக வாழ்ந்த தன் மனைவியை அந்த விடுதியில் பார்த்துவிட்டு, தனது தனிமையான வீட்டுக்குத் திரும்பும் டான், அப்போதும் வீட்டில் வாசித்துக் கொண்டிருப்பவராக இருந்தவரெனச்  சொல்கின்றனர். மனைவி இறந்த ஓரு வருடத்தில் டானும் இறந்திருக்கின்றார்.

*
டானின் இந்த புத்தகப் பைத்தியத்தைப் பார்த்தபின், நானும் சாவதற்குள் அவரளவுக்கு இல்லையென்றாலும் ஒரு இரண்டாயிரம் நூல்களை வாசித்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென யோசித்தேன். டான் எழுதிய பட்டியல் அவர் தனது 29 வயதில் வாசிக்க தொடங்கிய நூல்களிலிருந்து தொடங்குகின்றது.

நானும் இதுவரை காலம் எவ்வளவு நூல்களை வாசித்திருப்பேன் என யோசித்துப் பார்த்தேன். இதுவரை இருநூறுக்கு மேற்பட்ட நூல்களுக்கு விரிவான வாசிப்புக்களை எழுதியதாக என் வலைப்பதிவு காட்டுகின்றது (வாசிப்பு(239)). அவை என் 20 வயதுகளின் பின் எழுதத் தொடங்கியது.

எப்படியும் பதினொரு/பன்னிரெண்டு வயதிலே பாலகுமாரனையும், சாண்டியல்யனையும் வாசிக்கத் தொடங்கிவிட்டேன் என்பதால் ஒரு நூறு புத்தகங்களுக்கு மேலாக என் 20 வயதுக்குள்ளே வாசித்திருப்பேன். இதுவரை எப்படியோ திக்கித்திணறி ஒரு 700/800 நூல்களையாவது முழுமையாக வாசித்திருப்பேன் என நினைக்கின்றேன்.

எனது இலக்கையடைய இன்னும் 1,200 புத்தகங்களை வாசிக்க வேண்டும். இதற்குள் வாழ்க்கையின் தினசரிச் சிக்கல்கள், காதலியை ஆரத்தழுவுதல், ஆஸ்மாவோடு அல்லாடுதல், இலக்கிய எதிரிகளுக்கு எதிர்வினை செய்தல்  என்றெல்லாம் எவ்வளவு நேரத்தைக் கொடுக்கவேண்டும் என்று பெருமூச்சும் வருகின்றது.

'நான் சொர்க்கத்தை ஒரு நூலகம் போல கற்பனை செய்கின்றேன்' என்று போர்ஹேஸ் சொல்லியிருக்கின்றார். எனக்கென்னவோ போர்ஹேஸோடு இப்போது அருகில் அமர்ந்து இந்த டானும் புத்தகங்களை வாசித்துக்கொண்டிருப்பார் என்றுதான் கனவு காணத் தோன்றுகின்றது.

***

 

படுபட்சி: இறுதியாய்ச் சில குறிப்புகள்

Sunday, December 14, 2025

 

(1) அண்மைக்காலமாக வாசிக்கும் எந்தப் புத்தகத்துக்கும் எதிர்மறையான வாசிப்புக்களை எழுதக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றேன். விமர்சனங்கள் தேவையல்ல என்பதற்காகவல்ல, நிறைய நல்ல நூல்கள் கவனிக்கப்படாது நாம் எதிர்மறையான திசைக்கு அதிக கவனம் கொடுக்கின்றோம் என்று நினைத்துக் கொண்டதாலாகும். அதேயே 'படுபட்சி'யை வாசித்து முடித்தபோதும் எண்ணிக் கொண்டேன். ஆனால் வாசித்து ஓரிரு நாட்களுக்குப் பிறகும், அது தொடர்ச்சியாக தொந்தரவுபடுத்தியதால், இது குறித்து எழுதித்தான் தாண்டமுடியும் என்பதாலே 'படுபட்சி' குறித்து எழுத வேண்டியிருந்தது.

(2) அந்த வாசிப்புக்கு  நான் வைத்த தலையங்கத்தை ஒருவர் கவனித்தாலே ('படுபட்சி: மோசமான மொழியில் எழுதப்பட்ட அசலான கதை' க்குத் தெரிந்திருக்கும், நான் இந்த நூலை முற்றாக நிராக்கவில்லை என்பது [1]. படுபட்சி நிச்சயம் சொல்லப்படவேண்டிய ஓர் அசலான கதை, ஆனால் அந்த அசலான கதைக்குச் சொந்தமான டிலுக்‌ஸனுக்கு இருக்கக்கூடிய ஒரு மொழியில் சொல்லப்படாததே என் முக்கிய விமர்சனமாக இருந்தது.

(3) எப்படி எனது வாசிப்பைச் சொல்வதற்கு எனக்கு ஒரு வெளி இருந்ததோ, அப்படியே அதை  கனடாவில் இருந்து விதந்து எழுதிய ஜயகரனினதோ, விக்கியினதோ பதிவுகளையும் நான் வாசித்திருக்கின்றேன். அவர்களின் பெரும்பாலான கருத்தில் ஏற்பும் எனக்கு இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு திசைகளில் இருந்து இந்தப் பிரதியை அணுகின்றோம். அவ்வளவேதானே தவிர என் வாசிப்பு மட்டுந்தான் சரியென்று எந்த இடத்திலும் வாதிடவில்லை.

இந்த நூலில் எடிட் செய்தவரின் குரல் எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டலும், இதனால் சொல்லப்பட வேண்டிய முக்கிய கதையான 'படுபட்சி'யின் வீரியம் நீர்த்துப் போகின்றது என்பதுந்தான் என் வாசிப்பின் முக்கிய பேசுபொருளாகும்.

 



(4) இந்த நூலைப் பற்றி இன்னொரு பகுதியையும் எழுத, தொடக்கத்தில் தீர்மானித்திருந்தேன். அதாவது இந்த நூலின் 'அசலான கதையின் ஆன்மா' எங்கே ஒளிந்திருக்கின்றது என்பது பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியுமாகும். இந்த நூலின் 'அசல் கதை' பற்றிய தேடலில் ஒரு சிக்கலான சித்திரமே எனக்குள் வந்ததால், அப்படியொரு நிலையில் அதை எழுதுதல் இப்போதைக்கு சாத்தியமில்லை என நினைக்கின்றேன்.

(5) இந்த நூலை வாசித்தபோதும், இதற்கான வாசிப்பை எழுதிய பின்னரும் 'படுபட்சி'யோடு ஆகவும் obessed ஆக நான் இருந்ததைப் பார்த்த நண்பர், 'உங்களுக்கு இதில் அதன் அசல் மொழி  மாற்றப்பட்டு இன்னொருவரின் குரல் ஒலிப்பது பிரச்சினையாக இருக்கின்றதா அல்லது autofiction எனச் சொல்லப்பட்டு அசல் மனிதர்களும், காலமும் மாற்றி எழுதப்பட்டது சிக்கலாக இருக்கின்றதா' எனக் கேட்டார்.

(6) இஃதொரு முக்கியமான கேள்வியாக என் முன்னால் இருந்தது. எது என் வாசிப்பில் துருத்தியது என்றால் இந்த இரண்டையும் சேர்த்துத்தான் எனச் சொல்ல வேண்டும்; ஆனால் இந்நூலை எடிட் செய்தவரின் மொழியும்/கதையாடலும் அதிகம் துருத்திக் கொண்டிருப்பதால் என்னால் கதைக்குள் சரியாக நுழையமுடியாத அவதி இருக்கின்றது என்பதையும் கண்டுகொண்டேன்.

(7) இந்த ஆட்டோபிக்சனின் மிக முக்கிய காலப்பிழையைப் பின்னர் கண்டுபிடித்திருந்தேன்.

இந்நூலில் கதைசொல்லி யுத்தம் நடக்கும் காலத்தில் இந்த விமானத்தைச் செய்து பிடிபட்டு இலங்கை இராணுவத்தின் முகாமில் இருந்து, புலிகள் அதைத் தாக்கும்போது அவர்களோடு  தப்பி வருவதாக முடிக்கப்படுகின்றது.

"காயப்பட்ட போராளிகளுடன் என்னையும் ஏற்றிக்கொண்டு படகு படுவான்கரையை நோக்கி இருளில் நகர்ந்தது. எழுவான்கரையைப் பார்த்தேன். மயிலாம்பாவெளி இராணுவ முகாம் தீப்பற்றி எரியும் வெளிச்சத்தில் அது ஒளிர்கிறது" ( 'படுபட்சி', ப 143).

(8 நிஜவாழ்வில் டிலுக்ஸன் யுத்தம் முடிந்த 2009 ஆண்டுக்குப் பிறகே இப்படி விமானம் செய்யப்பட்டதற்காகக் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருக்கின்றார் என்பதே 'தெளிந்த' உண்மையாகும்.

(9) டிலுக்‌ஸன் கனடாவில் கொடுத்த ஒரு நேர்காணலில், 'நான் எனது விமானம் செய்யும் திட்டத்தை, இராணுவம் முள்ளிவாய்க்கால் வெற்றியைக் கொண்டாடிய மேமாதத்தில் காட்சிப்படுத்தவே கேட்டேன். அதன் பிறகுதான் என்னை கைதுசெய்தார்கள், சித்திரவதை செய்தார்கள்' [2]. <<இந்த நேர்காணல் காணொளியை முழுதாகப் பார்க்க முடியாதவர்கள் தயவு செய்து 9.00 ஆவது நிமிடத்தில் இருந்தாவது பார்க்கவும்>>

இந்த நூலில் வாசகரை மிக ஏமாற்றிய பகுதியாக இதைச் சொல்லலாம். நான் நூலை வாசிக்கும்போதோ,  அது பற்றிய என் முதல் வாசிப்பை எழுதியபோதோ இந்த முக்கிய விடயத்தைக் கவனிக்கவில்லை. அது என்னவெனில்..

டிலுக்‌ஸன் விமானம் செய்தது தொடர்பாக கைதுசெய்யப்பட்டது போர் முடிந்த 2009 ஆண்டுக்குப் பிறகே ஆகும். ஆனால் இந்த நூல் முழுவதுமே  யுத்தம் நடைபெறும்போது சமாந்திரமாக கதைசொல்லி விமானப் பொறியியல் படிப்பதாகவும், விமானம் செய்வதாகவும், அதன் நிமித்தம் கைது செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது.

(10) ஒரு கதையை யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் (2009 முன்) சொல்வதற்கும், யுத்தம் முடிந்தபிறகு சொல்வதற்கும் (2009 பிறகு) பெரும் இடைவெளி இருக்கின்றது என்பதை  நீங்கள் நன்கு அறிவீர்கள்.

உதாரணத்துக்கு ஒருவர் 2009 யுத்தம் முடிந்தபின்   கனடாவில் இருந்து இலங்கை போகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவரை ஏதோ ஒரு காரணத்தால் இலங்கையில் கைதுசெய்கின்றார்கள். அவர் அந்த நிகழ்வை யுத்தம் நடைபெறுகின்றபோது என்னைக் கைதுசெய்தார்கள் என்று யுத்தத்தின் பின்னணியில் ஒரு கதையை  ஆட்டோபிக்‌ஷனில் எழுதிவிட்டு இது எனக்கு நடந்த சம்பவம் என்று claim செய்தால் எவ்வளவு மோசமாக இருக்கும்.

அந்த மிகப்பெரும் தவறை, டிலுக்ஸன் 2010 இற்கு விமானம் தயாரிக்கப்பட்டதற்காக கைதுசெய்யப்பட்டதை, யுத்தம் நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது (நூலில் 2007 இல் எனச் சொல்லி), இப்படியெல்லாம்  நடைபெறுவதாக எழுதுவது எத்தகைய அறம் என நாம் கேட்க வேண்டியவர்களாகின்றோம்.

(10) இது ஒரு ஆட்டோபிக்‌ஷன், புனைவும் கலந்திருக்கலாந்தானே. ஏன் இந்தக் கால வழுவை கேள்விக்குட்படுத்துகின்றீர்கள் என ஒருவர் கேட்கலாம். அது நாவலாக இருப்பின் நாம் எளிதில் கடந்துபோகலாம்.

ஆனால் நாவல் முன்னட்டையில் 'இலங்கையில் முதல் விமானத்தை உருவாக்க வேண்டும் என்ற தமிழ் இளைஞனின் பயணமும் பாடுகளும்' என எழுதப்பட்டு டிலுக்ஷனின் புகைப்படத்தோடு விளம்பரப்படுத்துவது மட்டுமில்லை, டிலுக்‌ஷன் தனது ஒவ்வொரு நேர்காணல்/ மேடைப்பேச்சுகளிலும் இது தனது சொந்தக்கதை என்று claim செய்தபடியே இருக்கின்றார். அப்படி அவர் தனது சொந்தக்கதை என்று உரிமை கோருவதாலே நாம் இந்த காலவழுவை முன்வைத்து குறுக்கிட வேண்டியவராகின்றோம்.

இப்படி ஒரு காலவழுவோடு (யுத்தம் முடிந்தபின் நடக்கும் கதையை/ யுத்தத்தின்போது நடப்பதாக) எழுதுவது நமக்கு உறுத்துகின்றது. அதைப் பொதுவெளியில் இது இந்த நூலின் அடிப்படைத்தன்மையே சந்தேகிக்க வைக்கின்றதே என ஒரு கேள்வியாக நான் முன்வைக்க விரும்புகின்றேன்.

(11) மேலும் இது தொடர்பாக தேடியபோது, டிலுக்‌ஷனின் LinkedIn Profile கையில் அகப்பட்டது.  Facebook Profileஇல்  பொய் கூறலாம். ஆனால் LinkedIn Profile யில் கற்பனையைக் கலக்கமுடியாது. அது பிறகு உங்கள் வேலைக்கும், தனிமனித வாழ்க்கைக்கும் மேற்குலகில் 'ஆப்பு' வைத்துவிடும். அதில் டிலுக்‌ஷன் இலங்கையில் "Skyline aviation Sri lanka இல்,   Jan 2011- Jan 2014  இல் Associate's Degree - AirFrame Mechanics & Aircraft Maitenance Technology/Tehcnician செய்திருக்கின்றார் எனச் சொல்லியிருகின்றார் [3].

(12) அப்படியெனில் தன்னை இராணுவம் பிடித்துவிட்டு சித்திரவதை செய்தது, அதன் பிறகு இலங்கையில் எதையும் தொடர்ந்து படிக்கவில்லை, தப்பி ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன் என்று கோருவது எப்படி முறையாகும். எனில் இந்த டிகிரி அசலானதா அல்லது போலியானதா? அசலாகவே இருக்கவே சாத்தியம். அப்படியெனில்  2011-2014  வரை டிலுக்ஸன் இலங்கையில்தானே இருந்திருக்க வேண்டும்?

(13) திருப்பவும் ஞாபகமூட்டுவது ஒன்றேயொன்றுதான் இதை நாவல் என்று எழுதிவிட்டு போயிருந்தால் பரவாயில்லை. சரி ஆட்டோபிக்‌ஷன் என்றும் தலைப்பிட்டுவிட்டு ஒரு 'கொரில்லா' எழுதியது போல எழுதிவிட்டு அவரும் தப்பிப் போயிருந்திருக்கலாம். ஆனால் 'படுபட்சி'யை தொடர்ச்சியாக தனது சொந்தக்கதை என்று claim டிலுக்ஸன் செய்யும்போது மட்டுமே இப்படி ஆழ அலசி இந்தக் கேள்விகளை முன்வைக்க வேண்டியிருக்கின்றது.

(14) டிலுக்‌ஷன் தனது கதையைத் திரைப்படமாக்க வேண்டுமென ஒரு (முன்னாள்) போராளியிடம் சொன்னபோது, அவர் இந்தக்கதையை வன்னியிலோ அல்லது வடமாகாணத்திலோ நடப்பது மாதிரி மாற்றி எழுதினால் அதிகப் பேர் தயாரிப்பாளராக வருவார்கள் என்றும், தான் அதை மறுத்து என் சொந்தக்கதையை என் சொந்த ஊரில் நடப்பதாக மட்டுமே எடுப்பேன் என்று சொன்னதாகச் சொல்லியிருப்பார். உண்மையில் அவர் இதை கன்டாப் புத்தக வெளியீட்டு விழாவில் சொன்னபோது, இதுதான் ஒரு படைப்பாளிக்கு வேண்டிய நிமிர்வு என நினைத்தேன். அவரின் அந்த உரைக்கு மனம் விரும்பி கையும் தட்டியிருந்தேன்.

(15) ஆனால் இப்போது டிலுக்‌ஷனின் விமானத் தயாரிப்பும், கைது செய்யப்படுதலும்  ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிந்து புலிகளும் அழிக்கபட்ட பின்னரே நிகழ்ந்தது என்று அறியும்போது, புலிகளின் காலத்தில் நடந்ததாய்க்  நூலில் காலம்  மாற்றித் திருகுதாளம் செய்யும்போது, அந்தப் போராளி கேட்பதில் என்ன அநியாயம் இருக்கிறது  என்று கேட்கவே இப்போது தோன்றுகின்றது.

அவரின் நூலில், நிஜத்தில் உயிரோடு இருக்கும் தகப்பன் தாய் தங்கை எல்லோரையும் இறந்தவர்களாகக் காட்டி, இன்னும் எத்தனையோ விடயங்களை மாற்றிக்காட்டும்போது,  கிழக்கின் செங்கலடிக்குப் பதிலாக வடக்கின் ஆனந்தபுரத்தை காட்ட ஏன் தயக்கம் என்று ஒருவர் கேட்டால் டிலுக்‌ஸனிடம் என்ன பதில் இருக்கும்?

(16) இத்தகைய குழப்பங்களிடயேயும், அவர் ஆயுதப்போராட்டம் முடிந்த பின்னரேதான் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என்றாலும், டிலுக்‌ஷனின் இந்த அனுபவத்தை நாம் செவிகொடுத்து கேட்க வேண்டும். அதுவும் அவர் ஒரு தமிழனாக இருந்ததால் விமானிக்குப் படிக்க இலங்கையில் மறுக்கப்பட்டதும், பின்னர் ஏரோநாட்டிக்கல் எஞ்ஜினியங் படிக்கும்போது தனியொரு தமிழனாக இருந்ததால் இனவாதத்தால்  அவர் மோசமாகப் பாதிக்கப்பட்டதும் அவசியம் பதிவு செய்யப்பட வேண்டிய விடயங்களே.

தமிழர் என்ற அடையாளத்தால் வந்த இந்த இன ஒதுக்கல்,  யுத்தத்தின் பின் ஒரு தமிழருக்கு நடந்திருக்கின்றது என்பதுதான் நாம் கவனப்படுத்த வேண்டியது.

ஆக தமிழர்க்கு இலங்கையில் யுத்தம் முடிந்தபின் கூட அவர்களுக்குப் பிடித்த ஒரு துறையில் படிப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கவில்லை, அதன் நிமித்தம் ஒருவர் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளானர் என்பது நமக்கு டிலுக்ஸனின் வாழ்க்கை சொல்லும் ஒரு முக்கிய சாட்சியமாகும்.

யுத்தம் முடிந்த பின்னர் இவையெல்லாம் டிலுக்ஸனுக்கு நிகழ்ந்தாலும், அதன் நிமித்தம் அவர் கைது செய்யப்பட்டதும், சித்திரவதைக்குள்ளானதும் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இந்தக் காரணங்களால் டிலுக்‌ஸனின் கதை நிச்சயம் சொல்லப்பட வேண்டும் என்ற பக்கத்திலே நான்  உறுதியாக நிற்கின்றேன் என்பதையும் இன்னொருமுறை (என் படுபட்சி குறித்த முதல் வாசிப்பை சரியாக விளங்காது அலட்டும்  சில அரைகுறை  அறிவுஜீவிகளுக்கு) சொல்லிவிடுகின்றேன்.

அதேபோல டிலுக்ஸன் இதை தேசியத்தின் பேரில் திரைப்படமாக்க வேண்டும் என்று தன்முனைப்புக் கொண்டவர் என்று ஒருதரப்பார் வைக்கும் கதையாடல்களையும் நான் நிராகரிக்க விரும்புகின்றேன். ஒருவர் தனது வாழ்வில்பட்ட அல்லல்களைச் சொல்ல விரும்பினால், நாம் ஏன் அதற்கு தேசியம்/மார்க்ஸியம்/மண்ணாங்கட்டி என்கின்ற அடையாளங்களைச் சூட்ட வேண்டும். எவராயிலும் அவர்களின் கதைகளை அவர்கள் சொல்லட்டுமே!

பின்னமைப்பியல்/பின்நவீனத்துவம் கற்ற ஓர் ஆரம்பநிலை மாணவன் என்றவகையில் ஒவ்வொவரின் குரல்களும் எனக்கு முக்கியமானவை. ஆகவே டிலுக்ஸன் என்கின்ற தனிமனிதன் தாண்டி வந்த,  அவரது சொந்த வாழ்வியல் அனுபவம் எனக்கு முக்கியமானது. அந்தக் கதை சொல்லப்படவேண்டியது என்பதிலும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதை அவர் எந்த வடிவத்தில் சொன்னாலும்  என் தார்மீக ஆதரவு அவருக்கு எப்போதுமுண்டு.

ஆனால் அதை ஒரு எடிட்டரின் குரலிலோ, அந்த எடிட்டரின்'இன்னொரு நூலின் குரலைப் போன்ற பாவனையிலோ அல்ல, டிலுக்‌ஷனின் அசலான குரலில் அவர் அதைச் சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பேன்.

*****


குறிப்பு 01: 
இயன்றளவு ஆதாரங்களைத் தேடி, தெளிவாக எனது கருத்துக்களை முதல் பதிவிலும், இந்தப் பதிவிலும் முன்வைத்திருக்கின்றேன் என்று நம்புகின்றேன். இத்துடன் நான் 'படுபட்சி'நூலின் வாசிப்பு/ உரையாடல்களிலிருந்து முற்றாக விலகிக் கொள்கின்றேன்.

குறிப்பு 02:  
இது குறித்த எனது முதல் கட்டுரையில் 'எடிட் செய்பவரின் துருத்திக் கொண்டிருக்கும் குரல்' பற்றிக் குறிப்பிட்டிருப்பேன். அதற்கு நீட்சியாக அதற்கு நீட்சியாக அ.யேசுராசா அவர்கள் ஒரு பின்னூட்டம் எனது பதிவில் எழுதியிருந்தார். அந்தப் பின்னூட்டத்தை எங்கிருந்து அது எடுக்கப்பட்டது, எந்தப் பதிவின் நீட்சியில் அது எழுதப்பட்டது என்று எதுவும் சொல்லாது, யேசுராசாவின் கருத்தை மட்டும் எடுத்து ஒருவர் யேசுராசாவின் புகைப்படத்தோடு, 'எடிட்டிங்' குறித்து ஒரு பதிவு எழுதியிருக்கின்றார். அந்தப் பின்னூட்டத்தை எங்கிருந்து அது எடுக்கப்பட்டது, எந்தப் பதிவின் நீட்சியில் அது எழுதப்பட்டது என்று எதுவும் சொல்லாது, யேசுராசாவின் கருத்தை  மட்டும் எடுத்து ஒருவர் யேசுராசாவின் புகைப்படத்தோடு,   'எடிட்டிங்' குறித்து ஒரு பதிவு எழுதியிருக்கின்றார்.

அப்படி அடியும் நுனியும் இல்லாமல் எழுதுவது என்பது சரியான உரையாடலுக்கு வழிகோலாது. அந்த பதிவில் விருப்பக்குறிகள் இட்டிருக்கும் கல்விபுலப் பின்னணியில் இயங்கிய/இயங்கும் பெருமாள் முருகனோ அல்லது ராஜன்குறையோ, இப்படி அவர்களின் ஒரு மாணவர், உரிய reference கொடுக்காது எழுதியிருந்தால் அந்த மாணவரின் கட்டுரையை உடனேயே நிராகரித்திருப்பார்கள். அதுவே குறைந்தபட்ச எழுத்து அறமாகும்.

அத்துடன் அ.யேசுராசா அதைத் தனியே ஒரு பதிவாக தனது பக்கத்தில் எழுதவில்லை. எனது பதிவில் எழுதிய அவரது பின்னூட்டத்தை மட்டுமில்லை, யேசுராசாவின் புகைப்படத்தோடு சேர்ந்து எழுதுவது மிக மோசமான செயலாகும். ஒருவரின் personal space இற்குள் அத்துமீறுவதாகும்.

நானோ, யேசுராசாவோ ஒரு பிரதியை திருத்தும் எடிட்டர்களின் முக்கியத்துவத்தையோ அல்லது எடிட்டர்களின் அடிப்படைப்பண்புகள் என்னவென்றோ அறியாத 'பால்குடிக'ளோ அல்ல.  நானே தமிழில் எடிட்டர்கள் நமக்கு அவசியம் தேவை என்று சில பதிவுகளை எழுதியிருக்கின்றேன் [4].  ஒரு சிலரின் புனைவுகளை எடிட் செய்தும் கொடுத்திருக்கின்றேன்.

ஆனால் அந்தப் பதிவை  எழுதியவர் நமது இருவரின் கருத்தை வழமைபோல திருகி ஒரு 'டிப்ளோமட்'டிக்காக எழுதியிருக்கின்றார்.

ஒரு எடிட்டர் என்பவர் ஒரு பிரதியை முன்னுக்கு நிற்பவர் அல்ல, அவர் பிரதியின் திரைக்கு அப்பால் நின்று மறைமுகமாக வேலை செய்து ஒரு நூலைச் செம்மைப்படுத்துபவர். நானோ (யேசுராசவோ) சொல்வது, இந்த நூலில் உள்ள எடிட்டர் என்பவர், அந்த மூடுதிரையைத் தாண்டி  முன்னே துருத்திக்கொண்டிருக்கும் நிற்கின்ற அபாயத்தைப் பற்றியே ஆகும்.

நாங்கள் இருவரும் சொல்லவந்ததன் சரியான அர்த்தம், இப்படி 'பிய்த்து'க் கொண்டு போய் எழுதியவருக்குத் தெரியாதும் என்பதல்ல. அவர் அப்படித்தான் தனது நாசூக்கான ஆட்டத்தை எனக்குத் தெரிந்த காலத்தில் இருந்தே ஆடுபவர். ஆகவே நான் இந்த எடிட்டிங் குறித்து இனி எழுதுவது என்றால் மூன்றாம் தரப்போடு உரையாடல் செய்வதற்காக என்றால் மட்டும் எழுதுவேன்.

நிச்சயமாக என் பதிவில் இருந்து யேசுராசாவின் பின்னூட்டத்தை எந்த referenceம் இல்லாது எடுத்து போட்டு 'ஐயோ நான் படுபட்சியை எடிட் செய்துவிட்டேன் என்பதற்காக என்னைத் தாக்குகின்றனர்' என்று பாவனை காட்டுகின்றவருடன்  எனக்கு உரையாடல் சாத்தியமில்லை. இதை,  நான்  அவரோடு  கடந்தகாலங்களில் இவ்வாறான உரையாடல்களில் அனுபவங்களின் அடிப்படையில் வைத்துச் சொல்கின்றேன். நன்றி.

உசாத்துணைகள்:
[1]  படுபட்சி: மோசமான மொழியில் சொல்லப்பட்ட அசலான கதை:
https://www.facebook.com/elanko.dse/posts/10163083645923186

[2] டிலுக்ஸனின் கனடா நேர்காணல்:  https://www.facebook.com/reel/1367298351436228

[3] டிலுக்ஸனின் LinkedIn Profile: https://www.linkedin.com/in/deluxion-mohan-b00571101

[4] Genius திரைப்படமும், தமிழில் எடிட்டர்களும்..
https://djthamilan.blogspot.com/2017/01/genius.html


(Nov 23, 2025)