கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

திருகோணமலையில் புத்தர் சிலை

Thursday, December 25, 2025

 

இப்போது திருகோணமலையில் மீண்டும் புத்தர் சிலை வைப்பது பேசுபொருளாகியிருக்கின்றது. இதேமாதிரி 2000களின் மத்தியிலும் திருமலையில் புத்தர் சிலையைப் பலவந்தமாக வைத்ததும், 'ஜாதிய ஹெல உறுமய' என்கின்ற இனவாத சிங்களக் கட்சி அதன் முன்னணியில் நின்றதும் பலருக்கு ஞாபகமிருக்கலாம். அந்தப் புத்தர் சிலை அவ்வளவு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இப்போது நிறுவப்பட்டுவிட்டது. எவ்வளவு காலத்துக்குத்தான் மக்கள் இவ்வாறான ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகப் போராட முடியும். அதுவும் பெளத்த பீடாதிபதிகளின் கட்டளைகளின் ஒரு சொல்லையேனும் மறுக்காத ஒரு அரசாகவே இலங்கை சுதந்திரமடைந்த 1940களிலே இருந்து சிங்கள அரசுக்கள் ஆட்சிப்பீடமேறியபடி இருக்கின்றன. நாட்டின் பிரதமரையே துப்பாக்கியேந்திய ஒரு புத்தபிக்கு கொன்ற வரலாறு இலங்கையில் இருக்கின்றது.

அண்மையில் இலங்கைக்கு (2023) போனபோதும் திருகோணலையில் இப்படி ஒரு ஆக்கிரமிப்புப் புத்தர் சிலை நெல்சன் தியேட்டருக்கருகில் நிறுவப்பட முயற்சி நடந்ததும், மக்கள் எதிர்ப்பைக் காட்டியதும் ஞாபகத்தில் இருக்கின்றது. நான் அந்த தியேட்டரில்தான் அருகிலிருந்த சித்தி வீட்டிலிருந்து நடந்துபோய் ஒரு தமிழ்த்திரைப்படத்தின் முதல் காட்சி அன்று பார்த்திருக்கின்றேன்

இந்தக் கவிதை 2006இல் நிகழ்ந்த ஆக்கிரமிப்புப் புத்தருக்கு எதிராக எழுதப்பட்டது. பின்னர் எனது கவிதைத் தொகுப்பான 'நாடற்றவனின் குறிப்புகளிலும்' சேர்க்கப்பட்டது.  இருபது ஆண்டுகளாக அதே நிலைமைதான்.  இவற்றுக்கு மெளன சாட்சியமாக இருக்கின்றோம் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறு எதுவுமில்லை.

*

தீர்வு

***
புறாமலையில்
விஜயனால் தந்திரமாய் ஏமாற்றப்பட்ட வெஞ்சினமும்
தன் மூத்தகுடிகளை நிராதரவாய்க் கைவிட்ட துயரமும்
தோயத் தன்னைச் சிதைத்துக்கொண்டிருந்த
குவேனி
 நகரத்தெருக்களில் கால்களைப் பதிக்க
புழுதி சுழன்றாடி
நகரைக் கனவாய்ப் படர்ந்ததாம் மழை

கடற்கரையில்
கால்கள் நனைத்து சுண்டல் சுவைத்து
நெல்சன் தியேட்டரில் படங்கள் பார்த்து
நீ இன்னவின்ன இனமென்றில்லாது
பொதுச்சந்தையில் கலகலக்கும்
சனங்களின் மொழியில்
தன் துயரினைத் தொலைத்தாள்
குவேனி

கொத்துரொட்டிகளின் தப்பாத் தாளத்திலும்
பஸ்நிலைய பல்லினமொழிக்கீதத்திலும்
தன்னை உயிர்ப்பிக்கையில்
பலவந்தமாய்க் குடிவைக்கப்பட்ட புத்தரைக் கண்டு
இயற்கையை வழிபடும்
குவேனி கோபித்தாளில்லை
அவரையும் நேசிக்கத் தொடங்கினாள்
பேச்சுத்துணையாக்கி.

புத்தரும் குவேனியும்
நேவிக்கப்பல்கள் தொலைவில் மின்னும்
கடற்கரையில் கால்கள் புதைய
கரங்கள் கோர்த்து உலாவுகையில்
கோணேசரும் பத்திரக்காளியும்
காதற்கிறக்கத்திலும் பதட்டத்திலும்
இருப்பது கண்டு புன்னகைப்பதுண்டு

கோணேசர் பாவம்
இராணுவம் சூழவிருக்கும் அவருக்கும்
ஊரடங்குச் சட்டமுண்டு;
பின்னிரவு நீளமுன்னர் தன் தலம்
மீளவேண்டிய அவதி அவர்க்கு

சங்கமித்தா
புத்தரைச் சந்திக்க வந்தவொருபொழுதில்
எல்லாம் தலைகீழாயிற்று
குவேனியுடன் புத்தர் நட்பாயிருப்பதை
சகிக்கா சங்கமித்தா
உறுமய ஜாதிய நரிகளை உசுப்பிவிட
கொந்தளிக்கத் தொடங்கிற்று
மீண்டும் நகர்

அரசமரக் கிளைக்குப் பதிலாய்
சங்கமித்தாவின் கரங்களில்
கொடும் ஆயுதங்கள் முளைக்கத்தொடங்கின
கோணேசரருடன் காதல் சரசமாடிக்கொண்டிருந்த
காளியும் ஆடத்தொடங்கினாள்
தற்காப்பு ஆட்டம்

தம் இயல்பு மறந்து
காளியும் சங்கமித்தாவும்
ஊழிநடனம் ஆடுவது பொறுக்காது
இடைநடுவில் புகும் குவேனியையும்
கொத்துரொட்டித் தகட்டால் குற்றுயிராக்கி
நரிகளுக்கு நிகராய்
விழும் தலைகளுக்காய் தெய்வங்களும் அலைகின்றன
நாக்குகளைத் தொடங்கவிட்டபடி

பிறகு
புத்தர் குவேனி எனும்
இரு சடலங்கள்
காலப்பெருவெளியில் மிதந்து கொண்டேயிருந்தனவாம்
ஒரு சிறுதீவில்
அமைதி வருவது எப்படியெனும்
எளிய சூத்திரங்களைத் தம்முடல்களில்
சுமந்தபடி.

(April 18th, 2006)
***

 

0 comments: