கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வாசித்த சில இலத்தீன் அமெரிக்க கதைகள்

Wednesday, April 25, 2007

- சாருநிவேதிதாவின் 'கடல்கன்னி'யை முன்வைத்து-

மொஸார்ட் என்றால் யார் என்று சரியாகத் தெரியாமல் இருப்பது - அவனுடைய ஆரம்பம் -அவனுடைய முக்கியத்துவம் - அவன் உத்தி பற்றிய விபரங்கள் எல்லாம் தெரியாமல் இருப்பது - அவனையே நம் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல அனுமதிப்பதைப் போன்றது - ஒன்றும் தெரியாமல் இருப்பதுதான் எவ்வளவு சந்தோசமான விடயம்!
-Maria Lusia Bombal on The Tree

உலக வாசக பரப்பில் ஒரு காலத்தில் அதிக கவனம் பெற்றிருந்த சோவியத்து படைப்புகள் பின்னகர்ந்து செல்ல அந்த வெற்றிடத்தை இலத்தீன் அமெரிக்கப் படைப்புகள் பின்னாட்களில் நிரப்பத் தொடங்கின. சர்ரியலிஸமும், பின்நவீனத்துவமும் அறிமுகப்படுத்தப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்ட சூழலிருந்து புதுவகையிலான கதைசொல்லும் பாங்கு இலத்தீன் அமெரிக்கா நாடுகளில் முகிழ்ந்தெழத்தொடங்கின. அங்கிருந்த பல நாடுகளின் சமநிலையற்ற அரசியற் சூழ்நிலைகள் மற்றும் நெருக்கடிகளால், நேரடியாகக் கதைசொல்லும் முறைகளிலிருந்து விலகிய மாய யதார்த்தவாத கதைகள் முக்கியத்துவம் பெறத்தொடங்கின. 'கடல்கன்னி' என்று சாருநிவேதிதாவால் மொழிபெயர்க்கப்பட்ட இத்தொகுப்பில் ஒரு கதையைத் தவிர மிகுதி அனைத்தும் இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கதைகளாகும். ரஷ்யப்படைப்புக்களைப் போல இலத்தீன் அமெரிக்கா படைப்புகள் பெரும்பான்மையில் மானுடநேசிப்பே அடிநாதமாய் ஓடிக்கொண்டிருக்கின்றது. இயற்கையின் மீதான பாடலும், பூர்வீக மண் மீதான பற்றும் அநேக பிரதிகளின் ஓரங்களில் தொடர்ந்து கசிந்தபடி இருக்கின்றன.

மரியா லூயிஸாவின் (María Luisa Bombal) 'மரமும்', ஆர்த்துரே பியேட்ரியின் (Arturo Pietri) 'மழையும்' இத்தொகுப்பிலுள்ள அருமையான கதைகள். மரம் கதையில் ஒரு குடும்பத்தில் ஐந்து பெண்களுக்குப் பிறகு ஆறாவதாகப் பிறக்கும் பெண்ணே முக்கிய பாத்திரமாகின்றாள். ஐந்தும் பெண்களாக இருக்கின்றார்களே என்ற அலுப்பில் ஆறாவதாய்ப் பிறக்கும் பெண்ணிற்கு வெளி உலகம் பற்றி எதுவும் கற்பிக்காமல் வீட்டிற்குள் வைத்து அவளது பெற்றோர்கள் வளர்க்கின்றார்கள். அந்தப்பெண்ணும் வெகுளியும் அறியாமையுமாய் வாழ்வைக் கழிக்கின்றாள். தனது சகோதரிகள் அனைவரும் இசையிலும் இன்னபிறவற்றிலும் தேர்ச்சி பெற இவள் அது குறித்து எவ்வித பிரக்ஞையுமின்றி வளர்வதோடு, தனது வயதுக்கு சற்று அதிக வயதில் இருக்கும் லூயிஸையும் மணந்துகொள்கின்றாள். லூயிஸிற்கு வேலை என்பதே வாழ்வின் முக்கிய விடயம் என்பதைத்தவிர தனது இளம் மனைவியோடு சந்தோசமாய் பொழுதைக்கழிப்பதில் அவ்வளவு ஆர்வமில்லை. இவளுக்கோ நண்பிகள் என்று நெருங்கிப்பழகவும் எவருமில்லை. தனியே, வெளியே சடைவிரித்திருக்கும் இறப்பர் மரத்தோடு சிநேகித்தபடி இருக்கின்றாள். தனக்குள் புதைத்து வைத்திருந்த கதைகளை எல்லாம் அந்த மரத்தோடு பகிர்ந்தபடி நாட்களை நகர்த்துகிறாள்.

துணைவனோடு பல்வேறு பிணக்குகள் வந்து போகின்றபோதும் அவனைவிட்டுப் பிரிந்துசெல்ல விரும்பாதவள், இறுதியில் அந்த இறப்பர் மரத்தை -நடக்கும் பாதைக்கு தடங்கலாயிருக்கின்றதென நகர ஊழியர்கள் வெட்டும்போது- இனி தன் துணைவனோடு சேர்ந்து வாழமுடியாது என்று வீட்டைவிட்டு வெளிக்கிடத்தொடங்குகின்றாள். இதுநாள்வரை அந்தப்பெண்ணின் திருமணவாழ்வின் எல்லா அபத்தங்களையும் வலிகளையும் தாங்கிக்கொள்ளச்செய்தது அந்த இறப்பர் மரமே என்ற நினைப்பை வாசிக்கும் நம்மிடையே பதித்தபடி கதை முடிகின்றது. நாமெல்லோரும் எத்தனையோ வீழ்ச்சிகளையும் சரிவுகளையும் சந்திக்கின்றபோதும் ஏதோ ஒன்றில் நாம் மீளப்போவற்கான நம்பிக்கைகளை குவித்துவைக்கின்றோம். அந்த இறுதி நம்பிக்கையும் தகர்கின்றபோது என்னசெய்வது என்று புரியாமல் திகைப்பதும், சிலவேளைகளில் அது தற்கொலை போன்ற வாழ்வின் இறுதிக்கணங்களைத் தேடிப்போவதாய் இருப்பதும் தவிர்க்கமுடியாத ஒன்றாய் இருக்கிறது. இந்தக் கதையை எழுதிய மரியா லூயிஸா கூட தனிப்பட்ட வாழ்வின் திருமணத்தால் மன அழுத்தத்திற்கு உட்பட்டு தனது கணவரைச் சுட்டுக்கொலைசெய்ய முயன்று, தற்கொலைக்கு முயற்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆர்த்துரே பியேட்ரியின் 'மழை' கதை மாய யதார்த்தக் கதைக்கு நல்லதொரு உதாரணமாய்க் கொள்ளக்கூடியது. மழை பொய்த்துப்போகின்ற ஒரு வறண்ட கிராமத்தில் வயோதிகத் தம்பதிகள் இருவர் வசிக்கின்றார்கள். என்றேனும் ம்ழை பெய்து பயிர்களின் வறட்சியும், தமது ஏழ்மையும் இல்லாமற்போய்விடும் என்று நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். வாழ்நாள் முழுதும் இந்தத் தம்பதிகள் தங்களுக்குள் சண்டைபிடித்துக் கொண்டேயிருப்பவர்கள். இப்படியான ஒரு மனுசனோடு இத்தனை காலம், தான் எப்படி சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் என்ற வியப்புத்தான் அந்த கிழவிக்கும் அநேக நேரங்களில் வந்துபோய்க்கொண்டிருக்கும். வறட்சிமிகுந்த ஒருநாளில் கிழவன் ஒரு சிறுவனை வழியில் காண்கின்றார். அவனை வீட்டுக்கொண்டு வருகையில் -அவனது வருகையால்- சின்னச் சின்ன விடயங்களில் தமக்கிடையில் இருக்கும் அன்பை, மகிழ்வை, நெகிழ்வை அந்த முதிய தம்பதிகள் கண்டுகொள்கின்றார்கள். இவ்வளவு காலமும் இவ்வரிய தருணங்களைத் தங்களுக்குள் தவறவிட்டிருந்தோமே என்று சிறுவனை நன்றியுடன் நினைவுகூருகின்றனர். ஒருநாள் சிறுவன் காணாமற்போய்விடுகின்றான். கிழவன் அவனைத் தேடிக்கொண்டு மலையில் ஏறத்தொடங்குகின்றார். அவனது குரல் கரைந்துகொண்டிருப்பதாய் பிரமை நீள்கின்றதே தவிர அவனது உருவம அந்தக்கிழவனின் கண்களில் தென்படவேயில்லை. நேரமும் களைப்பும் கூடிச்செல்லச் செல்ல அந்த குரல் கூட இறுதியில் மறந்து/மறைந்து போகின்றது. இனியும் அந்தச் சிறுவனை தேடமுடியாது என்று நினைக்கின்றபோது மழை தூறலாய் நீண்டகாலங்களின் பிறகு பொழியத்தொடங்குகின்றது. பெருமழைபொழிந்து பயிர்கள் எல்லாம் செழித்துவளர்ந்து அந்த முதிய தம்பதிகளின் வறுமை போய்விடக்கூடுமென்ற நம்பிக்கை முகிழவதைப் பிரதியின் அடியில் மறைத்தபடி கதை முடிகிறது. உண்மையில் இந்தக் கதையில் சிறுவன் என்பதே ஒரு படிமம்தான். கதையில் அவன் இருப்பதில்லை. அந்த முதிய தம்பதிகளின் ஒரு நம்பிக்கையாய் அது படிமமாக்கப்படுகின்றது. சிறுவனின் இருப்பு உண்மையானதா அல்லது மாந்திரீகமானதா என்பதில் வரும் மயக்கம் இந்தக் கதைக்கு இன்னும் மெருகூட்டுகிறது.

அகஸ்ரோவின் (Augsutro Bastos) 'கைதி', ஈழச்சூழலில் வளர்ந்த நம்மைப்போன்றவருக்கு மிகப்பரிட்சயமான கதையாக இருக்கும். சால்டிவோர் என்ற பதின்ம வயதினனின் பார்வையில் கதை விரிகின்றது. பராகுவேயில்(?) நடக்கும் கெரிலாக்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு கட்டளையிடுகின்றது. கிளர்ச்சியாளர்களைக் களையெடுக்கும் ஒரு இராணுவப்பகுதியில் சால்டிவோர் வலுக்கட்டாயமாய் பதினெட்டு வயதில் இணைக்கப்படுகின்றான். கிளர்ச்சியாளர்களின் கடைசிப் பதுங்குமிடத்தையும் இராணுவம் சுற்றிவளைக்கின்றது. அந்த முகாமைக் கைப்பற்றி கிளர்ச்சியாளர்கள் பலரைக் கொன்றபின், முக அடையாளம் கூட தெரியாது சிதைக்கப்பட்ட ஒரு கைதிக்கு காவலாய் இருக்கும்படி சால்டிவோரை இராணுவ அதிகாரி பணித்துவிட்டு அடுத்த மனிதவேட்டைக்கு தனது 'வீரர்களுடன்' புறப்படுகின்றார். இந்தப் பையன் பயந்தபடியே கைதிக்கு காவலுக்கு இருக்கின்றான். தன்னைப்போலவன்றி கிளர்ச்சியாளர் படையில் விரும்பிச்சேர்ந்த தனது அண்ணாவின் நினைவு அவ்விரவில் அப்பையனுக்கு வருகின்றது. வாழ்வை அர்த்தமுள்ளதாக்கவேண்டுமென்ற அண்ணாவின் நெகிழ்வான வார்த்தைகள் அவனது மனவெளியில் அலையத்தொடங்குகின்றன. வெளியே புறப்பட்ட இராணுவ அணி திரும்பி வரும்போது தனது அண்ணாவையும் இந்தமுறை பிடித்துக்கொண்டு வந்துவிடுவார்களோ என்று சால்டிவோர் கவலைப்படுகின்றான். அ த்தோடு உருக்கலைக்கப்பட்டு அரையுயிரோடு இருக்கும் கைதி தன்னைவிட்டுத் தப்பியோடக்கூடும் என்று பயந்து, அந்தக்கைதியை ஒரு குழியினுள் அமிழ்த்தி தலைமட்டும் வெளித்தெரியும்படி ஓரிடத்தில் புதைக்கத் தொடங்குகின்றான். அடுத்த நாள் விடியலில் இராணுவ அணி சில கைதிகளோடு திரும்பிவரும்போது , சால்டிவோர் துப்பாகியை மட்டும் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டிருக்கின்றான். இராணுவ அதிகாரி தப்பியோடிய சால்டிவோருக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று கட்டளை பிறப்பித்து அவனைத் தேட தனது இராணுவத்தை அனுப்புகின்றார். இறுதியில் தற்கொலை செய்த சால்டிவோரின் உடலை இராணுவம் காண்கின்றது. சால்டிவோர் இப்படிப் பயந்து ஓடி தற்கொலை செயததற்கு -கைதியாய் அரைகுறை உயிராய் இருந்து இறுதியில் இறந்துபோனது தனது சகோதரன் என்பதை கண்டு- அதை ஏற்றுக்கொள்ளமுடியாத யதார்தத்தின் கொடூரமே என்ற வாசிப்புக்குறிப்பை நம்மிடையே விட்டபடி கதை முடிகிறது.

இந்தக்கதையை வாசிக்கும்போது Hernando Tellez எழுதிய Lather and Nothing Else நினைவுக்கு வருகின்றது. அதில் ஒரு கிளர்ச்சியாளன் சவரம் செய்கின்ற தொழிலாளியாக இருக்கின்றான். அங்கே சவரம் செய்ய வருகின்ற இராணுவ கப்டன், பல கிளர்ச்சியாளர்களை கொடூரமான முறையில் கொன்றுகுவித்தவன் மட்டுமில்லாது, சவரம் செய்கின்றபோதும் அடுத்து நிகழப்போகும் -கிளர்ச்சியாளர்களைப் போட்டுத்தள்ளும்- நிகழ்வையும் விபரிக்கின்றான். ஒரு கத்தியின் நுனியில் அவனது கழுத்தை துண்டித்துவிடும் சந்தர்ப்பம் வாய்த்தும், அந்தக் கப்டனைக் கொலை செய்யாது கிளர்ச்சியாளன் தப்பவிடுகின்றான். அந்தக்கொடூரனைக் கொலைசெய்ய முடியாது தடுத்தது எதுவென எண்ணும்போது, கப்டனைப் போல தான் ஒரு 'தொழில்முறை' கொலைகாரன் இல்லையென்பது என்பது அந்தக்கிளர்ச்சியாளனுக்கு உறைக்கிறது. இல்லாவிடின் அவ்வரிய சந்தர்ப்பத்தை தவறவிடுவானா என்ன? கப்டனும் 'கொலை செய்வது அவ்வளவு இலகுவல்ல; எனது வார்த்தைகளை நீ நம்பலாம்' என்று கூறியபடி நகர அக்கதை முடிவுறும்.

2.
சாருநிவேதிதாவின் 'கடல்கன்னி'யில் ஆறு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. அமெரிக்கக் கதாசிரியரான Ronald Sukenickன் கதையைத் தவிர மிகுதி அனைத்துக் கதைகளும் வித்தியாசமான வாசிப்பைத் தருகின்றன. Ronald Sukenickன் 98.6 நாவலின் வாசிப்பு, தனது சீரோ டிகிரி நாவலில் ஒரு தெறிப்பாய் இருக்கிறது என்று சாரு எங்கையோ குறிப்பிட்டது நினைவிலுள்ளது. அடிக்கடி சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்களை மாற்றிக்கொண்டிருக்கின்ற சாரு ஓரிடத்தில் குறிப்பிட்டது; தமிழில் தானும், ஜெயமோகனும், எஸ்.ராமகிருஸ்ணனும் 'மட்டுந்தான்' கதைகள் எழுதிக்கொண்டிருக்கின்றோம் என்பது ஞாபக அலைவரிசையிலுள்ளது. தொன்மங்களுக்குள்/செவ்வியல் பிரதிகளுக்குள் ஆழமும் விரிவுமான வாசிப்பைச் செய்யாது நவீனத்தோடு மட்டும் தொங்கி நின்ற படைப்பாளி என்று சுந்தர ராமசாமியை ஜெயமோகன் நிராகரிப்பதை ஒருபுறத்தில் நாம் வைத்துக்கொள்ளுவோம். ஆனால் தமிழின் தொன்மங்களுக்குள் நுழைந்து விரிவான வாசிப்பைச் செய்யும் ரமேஷ்-பிரேமின் எழுத்துகள் ஜெயமோகனின் கண்களுக்குத் தெரியாமல் இருப்பதற்கு நாகர்கோயிலும், பாண்டிச்சேரியும் 'தொலை'வில் இருப்பதைத் தவிர வேறொரு காரணமும் என்னளவில் தெரியவில்லை. அல்லது செவ்வியலில் இருந்து மீள்வாசிப்பை தன்னைப்போன்ற இந்துத்துவ 'நவீனமாதிரிகள்' மட்டுந்தான் செய்யமுடியும் என்ற எண்ண்ம் ஜெயமோகனிற்கு இருக்கின்றதோ தெரியவில்லை. ஜெயமோகனை விடுவோம்; தமது 'கிரணம்' இதழ்கள் மூலம் தளம் அமைத்துக்கொடுத்து ரமேஷ்-பிரேமை அணைத்து வளர்த்த சாருவிற்கு- உலக இலக்கிய வாசிப்பைத் தன்னைத்தவிர வேறொருவரும் விரிவாகச் செய்யவில்லையென அடிக்கடி குதூகலிக்கும் ஒரு படைப்பாளிக்கு- ரமேஷ்-பிரேமின் படைப்புகள், கண்களைச் சிறிது கூட உறுத்தவில்லையா என்பதுதான் வியப்பாயிருக்கிறது. எஸ்.ராமகிருஸ்ணன் போன்றோர் கூட மாய யதார்த்த கதைகள் எழுதி -இதெல்லாம் நமக்குச் சரிவராதென- மீண்டு/மீண்டும் யதார்த்தவாத கதைசொல்லல் முறைக்குத் திரும்பியிருக்கின்றவேளையில் தொடர்ந்து பலவித பரீட்சார்த்த முயற்சிகளில் கதை சொல்லல் முறைகளையும் கால அடுக்குகளையும் குலைத்துப் போட்டபடி நகர்ந்தபடியிருக்கும் ரமேஷ்-பிரேமின் கதைகளை நம் இலக்கிய விமர்சகர்கள் மிக இலகுவாய் புதைத்துப்போட்டு நகர்ந்துகொண்டிருப்பதில் இலக்கிய அரசியலைத் தவிர வேறெதனைக் காரணமாய்ச் சொல்லமுடியும்?

இத்தொகுப்பில் இருக்கும் சாருவின் உறுத்தாத மொழிபெயர்ப்புகள் குறிப்பிட்டுச்சொல்லவேண்டியவை. சைபர் ஸ்பேஸிற்கும், சாட்டில் கதைத்த பெண்கள் சென்னை வரும்போது நேரில் தன்னைச் சந்திக்க மறுத்த 'கன்னித்தீவுக்கதைகளை' பத்திகளில் எழுதி, வாசிக்கும் நமது தலையைச் சொறியவைக்கும் (பேன்/சொடுவால் அல்ல) சாரு, இவ்வாறான மொழிபெயர்ப்புகளைச் செய்தாலே பல வாசகர்கள் அவருக்கு நன்றியுடையவர்களாய் இருப்பார்கள். எனினும் நோநோவை எழுதிய, இலத்தீன் அமெரிக்கப் படைப்புகளை நேர்த்தியாக மொழிபெயர்த்த/வாசிப்புச்செய்த சாருவை வரும்காலத்தில் மீண்டும் கண்டெடுக்கும் நம்பிக்கைகள் மிக அரிதாகத்தான் துலங்குகின்றன என்பதுதான் அவலமானது.

துப்பாக்கி தின்று விழுங்கிய கவிஞன்

Tuesday, April 17, 2007

-சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்)-

விடிவுபற்றிய ஏக்கமும் தவிப்பும் எல்லா மனிதர்களிடத்திலும் தேசம் கடந்து விரவிக்கிடக்கின்றபோதிலும் இரத்தச் சகதியான இந்த வாழ்வின் மீதான பயணம் குறித்த பீதி எல்லாவற்றையும் தின்றுவிடுகின்றது.
..........
நாங்கள் பயத்தின் மீதும் சிலுவையின் மீதும் அறைந்தறைந்து ஒளியிழக்கச் செய்த எமது சொற்களை மீட்டெடுப்பது எப்போ?
இன்று எழுதப்பட்டவை பற்றியல்ல எழுதாமல் விடப்பட்டவை பற்றியே பேச வேண்டியிருக்கிறது. எல்லாம் எழுதப்பட்டுவிட்டது என நாங்கள் கருதினால் படைப்பின் மூலம் அநீதிகள் என திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டவை மீளவும் மீளவும் தலைவிரித்தாடுகிறது எனின் எமது எழுத்தின் மூலம் சிறிதளவேனும் சமூகமாற்றமோ அரசியல் மாற்றமோ நிகழவில்லை என்ற எண்ணம் எம்முள் மூளும் எனின் அது பற்றியே நாங்கள் சிந்திக்கவும் பேசவும் வேண்டியிருக்கிறது.
.......
வாழ்வு குறித்தான் இந்தப் படைப்பு முறைமையை அல்லது படைப்பாளனைச் சகித்துக்கொள்ள முடியாத, ஒரு துப்பாக்கியையோ அல்லது கத்தி, கோடரியையோ கூட கையில் எடுக்கத் துணியாத, அவற்றின் வருகைக்காக அஞ்சி ஒடுங்கும் அப்பாவி மக்களின் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடும் அரசோ அல்லது அது சார்ந்த இராணுவமோ அது சார்ந்த அமைப்புக்களோ பலி கொண்ட உயிர்களின் எண்ணிக்கை சொல்லில் உயிர்ப்பிக்க முடியாதவை.
......
இந்தக் காலத்தின் மீதும் சூழலின் மீதும் மிகப்பெரிய மாற்றம் வேண்டி விடிவுவேண்டி தமது வாழ்வை நமக்காக அர்ப்பணித்த நமது மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் பலர் தமது கடைசிக் காலத்தில் அநாதைகளாகவோ அல்லது இது தமது மரணகாலம் என்று அறியாமலே சாகடிக்கப்பட்டோரையோ நாங்கள் மிக நன்கு அறிவோம். இதில் துயரமானது என்னவெனில் அது இன்றும் நிகழ்ந்து கொண்டிருப்பதுதான்.

அடக்குமுறையாளர்களின் கொடூரம் ஒருபுறம் இடப்பெயர்வும் வறுமையும் நோயும் மறுபுறம் என சீரழிக்க்கப்படும் ஒரு எழுத்தாளனது குரலை நாங்கள் இந்தத் தேசம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. இதற்காக ஒன்றிணையவும் குரல் கொடுக்கவும் உங்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. இந்த உரிமைக்கான குரலாக நிலம் உங்கள் முன் வருகிறது.
....
(நிலம் இதழ் 03, நவம்பர்/2001- தலையங்கத்திலிருந்து சில பகுதிகள்...)

Nilam

சூரியனைக் கவர்ந்து சென்ற மிருகம்

என் அன்புக்கினிய தோழர்களே
எனது காதலியிடம் சொல்லுங்கள்
ஆயிரக்கணக்கில் மனிதர்கள் குழுமியிருந்த
வனாந்தரத்திலிருந்து
ஒரு மிருகம் என்னை இழுத்துச்சென்றுவிட்டது;
கடைசியாக நான் அவளுக்கு முத்தமிடவில்லை
அவளது கண்களில் வழமையாயிருக்கும் ஒளியை நான் காணவில்லை
கணங்களின் முடிவற்ற வலி தொடர்கிறது.
கடைசிவரை, நட்சத்திரங்களையோ புறாக்களையோ
எதிர்பார்த்த அவளுக்குச் சொல்லுங்கள்
எனது காலத்திலும் எனது காலமாயிருந்த
அவளது காலத்திலும் நான் அவற்றைக்காணவில்லை;
என்னை ஒரு மிருகம் இழுத்துச்சென்றுவிட்டது.

நான்,
இனிமேல்,
எனது சித்திரவதைக்காலங்களை
அவளுக்கு ஞாபகப்படுத்தமுடியாது
எனவே தோழர்களே,
நான் திரும்பமாட்டேன் என்றோ அல்லது
மண்டையினுள் குருதிக்கசிவாலோ
இரத்தம் கக்கியோ
சூரியன் வெளிவர அஞ்சிய ஒரு காலத்தில்
நான் செத்துப்போவேன் என்பது பற்றிச்சொல்லுங்கள்.

நம்பிக்கையற்ற இந்த வார்த்தைகளை
நான் அவளுக்குப் பரிசளிப்பது
இதுவே முதற்தடவை, எனினும் அவளிடம் சொல்லுங்கள்
அவர்கள் எனது இருதயத்தை நசுக்கிவிட்டார்கள்
மூளையை நசுக்கிவிட்டார்கள்
என்னால் காற்றை உணரமுடியவில்லை.

எஸ்போஸ்
-10.09.2001 கைது செய்யப்படுவதற்கு எட்டு நாட்களுக்கு முன்னர் எழுதியது-

......
எஸ்போஸ் எனப்படும் சந்திரபோஸ் சுதாகர் தனது முப்பத்திரண்டாவது வயதில் துப்பாக்கிகளுக்கு வாழ்வை இரைகொடுத்தவர். துப்பாக்கிகள் ஆளும் காலத்தில் துப்பாக்கிகளால் வேறெதைச் செய்ய ஏலும்? அல்லது நம்மால்தான் ஏது செய்ய இயலும்?

எஸ்போஸ், கவிதைகளுக்காய் 'நிலம்' என்ற காலாண்டிதழை நடத்தியவர். தெரிந்த கவிஞர்களின் கவிதைகளை மட்டுமில்லாது, கவிதைகளுக்கான விமர்சனங்களையும், புதிய கவிஞர்களை இனங்காட்டவும் 'நிலம்' காலாண்டிதழின் ஊடாக எஸ்போஸ் முயன்றிருக்கின்றார். யாழ் இடப்பெயர்வுகளை (?) காலச்சுவட்டில் எழுதியபோது -காலச்சுவட்டின் அசிரத்தையால்- எஸ்போஸின் சொந்தவிபரங்கள் வெளியிடப்பட்டு 2001 ஆண்டில் அரச இயந்திரத்தினால் கைதுசெய்யப்பட்டவர் (மேலே தரப்பட்ட கவிதை அவர் கைதுசெய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் எழுதப்பட்டது). 'நிலத்தில்' மட்டுமின்றி பலவேறு இதழ்கள்/சஞ்சிகைகளில் பரவலாக எழுதியவர்.


அவரது ஏழு வயது மகன் சாட்சியாய் இருக்க நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார் என்பது மிக அவலமானது. முன்னர் -2001ல்- கைதுசெய்து சித்திரவதைக்கு பின் எஸ்போஸை விடுதலை செய்த 'மனிதாபிமானம்' கூட இந்தமுறை துப்பாக்கிகளோடு வந்தவர்களுக்கு இருக்கவில்லை.

மக்கள் இல்லாமற்போய்க்கொண்டிருப்பதை இலக்கங்களில் மட்டுமே கணக்கில்கொள்ளும் ஒரு நிலப்பரப்பில் தனித் தனியாக ஒவ்வொருத்தருக்கும் அஞ்சலியோ சொட்டுக்கண்ணீரோ விடுவதுகூட அருகதையற்றதாகிப் போய்க்கொண்டிருக்கின்றது.....