கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Baby you're my good thing!

Tuesday, September 08, 2020

நேற்று மாலை Jazz & Blues festivalற்குப் போயிருந்தேன். பூங்காவிற்குள் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு திறந்தவெளி அரங்குகளில் பாடகர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் முரே போர்ட்டர்  (Murray Porter) பாடிக்கொண்டிருந்தார். 'காதல் அதற்கான வழியைக் கண்டுபிடிக்கும்' என்ற பாடல் ஒருபக்கம் கரையவைக்க, முன்னாள் காதலன்/காதலி/துணைகளுக்காய் பாடுவதாய் முரே சொல்லிப் பாடிய 'அப்படியே போய்விடு, திரும்பிவராதே' (Stay Gone) என்ற பாடல் நமக்குள் ஏதேனும் கோபமிருந்தால் அதையும் வழிந்தோடச் செய்யவைத்தது. முரே போர்ட்டர் பூர்வீகக்குடிகளின் Mohawk tribesஐச் சேர்ந்தவர். காதலை மட்டுமில்லாது 'நெடுஞ்சாலை-16' என்ற பாடலில்  நெடுஞ்சாலைகளில் காணாமற்போன பெண்களுக்காகவும், 'இந்த மன்னிப்புப் போதுமா?' என்று நமது அரசு இங்குள்ள பூர்வக்குடிகளுக்குச் செய்த அநியாயங்களுக்கு  'மன்னியுங்கள்' என்று கேட்பது மட்டும் போதுமா என்றும் சில அரசியல்மயமாக்கப்பட்ட பாடல்களையும் உருக்கமாகப் பாடினார். 


பாடல்களுக்கிடையில் பேசும்போது, யாராவது தமது கலையாக்கங்களில் working செய்கின்றோம் என்றால் ஏற்றுக்கொள்ளாதீர்கள். கலை என்பது playing. எம்மை நாம் மறந்து அதில் ஈடுபடுவது. அப்போதே அது அற்புதமான கலையாகின்றது எனவும் சொன்னார். கலையைச் செய்நேர்த்தியோடு ஒருவகை நுட்பமாக யாராலும் செய்துவிடமுடியும், ஆனால் அதை ஒரு விளையாட்டாக, கலை நிகழ்கின்றது என்பதை நாம் அறியாமல் அதை நிகழ்த்திக்காட்டுபவர்களே அரிய கலைஞர்களாக மிஞ்சுகின்றார்கள் என்பது காலம் நமக்குக் கற்றுத்தரும் பாடமாகும்.


அன்பே, என்னுடைய நல்லதொரு பொருள் நீ. உன்னை ஒருபோதும் போக விடப்போவதில்லை. நானொரு முரட்டு மனிதனாக இருந்தேன். எனக்கு இதயம் ஒரு கல்லாக இருந்தது. இப்போது எல்லாம் மாறிவிட்டதென 'Baby you're a good thing' என்ற பாடலை முரே பாடியபோது நாம் உற்சாகத்தின் நிலைக்கு வந்திருந்தோம். நிறையச் சோடிகள் அந்த அழகிய மாலையை நடனமாடி அழகாக்கத் தொடங்கியிருந்தனர். 


இன்று எழுத்துக்கு மட்டுமில்லை, இசை, ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைகளுக்கும் இருக்கும் சிக்கல் என்னவென்றால், நம்மால் பொறுமையாக நின்று நிதானித்து இரசிக்கமுடியாமல் இருப்பதாகும். கலை என்பது உடனே எங்களுக்குள் தங்களை உள்ளிழுத்துக்கொள்ளாது. நிறையப் பரிசோதனை செய்யும், பரீட்சித்துப் பார்க்கும், சிலவேளை குழப்பமடையவும் செய்யும். பின்னர்தான் தனது கதவுகளைத் திறந்து உள்ளிழுத்துக்கொள்ளும். முதலில் சாதாரணமாகக் கேட்கத் தொடங்கிய முரேயின் இசையினுள் உள்ளிறங்கியபோது காதலியின் கரம்பற்றி நடப்பது போன்று இதமாய்த் தோன்றியது. மேலே  வானத்தில் நிலவும் அரைவாசியாக காலித்தபடி கூடவே நமக்குத் துணையிருந்தது.


நேற்றைய அழகிய மாலைக்கு நன்றி செலுத்த ஞாயிறு  காலை சைக்கிளை எடுத்து ஓடத்தொடங்கினேன். மெல்லிய குளிராக இருந்தாலும் உற்சாகமாக சைக்கிளை ஓடமுடிந்தது. இன்றைய காலை நமது தமிழாக்கள் நிதி சேகரிப்பிற்காய் ஏதோ ஒரு வருடாந்த நடைபவனி செய்துவிட்டு, பூங்காவில் Mr Local பாட்டுக்குச் சின்னப்பிள்ளைகளை விட்டு ஆடவைப்பதைப் புன்னகையுடன் கடந்துவந்தபோது முத்துராசா குமாரின் இந்தக் கவிதைதான் நிகழ்வுக்கு வந்தது.


டிஸ்கோ

.........................


இன்று இரவுதான்

கடைசிநாள் மண்டகப்படி

இறுதிப்படையலாக

டிஸ்கோ டான்ஸ் ஆரம்பித்துவிட்டது.

மேடைக்கு அருகிலேயே

சீரியல் பல்பு சாரத்தில் நிற்கிறார்

சங்கிலி கருப்புசாமி.

வீச்சரிவாளில் பல்புகள் எரியாமல் போக

ஆயுதமற்று நிற்கும் கருப்புவினால்

தெருவின் போர்த்திறனுக்கு 

இழுக்கென்று குதித்த படைவீரர்கள்

மைக்செட்காரனை வீழ்த்தக் கிளம்புகையில்

ஊமைவிழிகளிலிருந்து ஒலித்த

' ராத்திரி நேரத்துப்பூஜை' பாடலுக்கு

சினம் மறந்து ஆர்ப்பரிக்கத்தொடங்கினர்

நீண்ட காலம் கழித்து வெறுங்கைகளை

சொடக்கு முறித்த சங்கிலி கருப்பு

பாடலுக்கு முரட்டு விசிலாக அடித்தார்.

...............

(Sept, 2019)

வரலாற்றை வாசித்தல் - 03

Monday, September 07, 2020

1.

'நான் பூர்வ பெளத்தன்' என்கின்ற டி.தருமராஜனின் நூல், பண்டிதர் அயோத்திதாசர் ஏன் தன்னை ஒரு பெளத்தனாக முன்வைத்தார் என்பதற்கான ஒரு சித்திரத்தை நமக்குத் தருகிறது. 'இந்துக்கள்' என்ற அடையாளத்துக்குள் ஒடுக்கப்படாதவர்கள் வந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் 'ஆதித் தமிழர்' என்ற அடையாளத்துக்குள் தம்மை உள்ளடக்கவேண்டும் என்று சனத்தொகைக் கணக்கெடுப்பின்போது வேண்டுகோளை ஆங்கிலேயரிடம் முன்வைக்கின்றார். அது நிராகரிக்கப்பட்டாலும் ஆதித்தமிழர், திராவிடர் என்ற அடையாளங்களைத் தொடர்ந்து கோட்பாட்டு உருவாக்கம் செய்ய பல தொன்மக் கதைகளைத் தேடிப்போகின்றார். ஆதித் தமிழர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்பதையும், பெளத்தம் தமிழ்ச்சூழலில் அழிந்துவிடவில்லை, அதன் தொடர்ச்சி உள்ளுறைந்து இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பதையும் வித்தியாசமான கோணங்களில் முன் வைக்கின்றார். அதன் நீட்சியில் பண்டிதர், தீபாவளி, போகிப்பண்டிகை, கார்த்திகை விளக்கீடு போன்றவற்றிற்கு புதிய கதைகளைப் பெளத்தத்தினூடாக முன்வைக்கின்றார். 


ஏற்கனவே சொல்லப்பட்ட 'வரலாறு'களை நம்பிக்கொண்டு வந்த நமக்கு பண்டிதர் முன்வைக்கும் இந்த விடயங்கள் வியப்பைத் தருகின்றன. அதேசமயம் பண்டிதர் மிகக் கவனமாகவே இந்த 'மறுவாசிப்பை' நிகழ்த்துகின்றார் என்பதைக் காணவேண்டும். நமக்குச் சொல்லப்பட்ட வரலாறுகளில் எல்லாம் புராணம்/தொன்மங்கள் இணைத்தே சொல்லப்படுகின்றது. ஒருவகையில் வரலாறு என்பதே இந்தக் 'கதையாடல்களினால்' இறுக்கக் கட்டப்பட்டிருப்பதை நாம் அறிவோம். இவ்வாறான கதைகளினால் வரலாற்றை வாசிக்கும், அதையே வரலாறென நம்பும் எங்களைப் பண்டிதர் தான் சொல்லும் புராணங்களையும்/கதைகளையும் கேட்கச் சொல்கின்றார். இந்தப் பண்டிகைகள் எல்லாவற்றிலும் பெளத்தத்தின் வேர்கள் இருக்கின்றன எனச் சொல்கின்றார். ஆகவே ஆதித்தமிழர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள், பின்னர்தான் மாற்றங்களுக்க்குள் உள்ளாகினர் என்று சொல்கின்றார். 

ஒருவகையில் இது இந்து வரலாற்றை கட்டவிழ்ப்பதுதான். பண்டிகைகள் கொண்டாடும் நிகழ்வை ஏற்றுக்கொண்டு, அது எப்படி மாற்றப்பட்டிருக்கலாம் என்று வேறொரு கோணத்தில் அணுகிப்பார்ப்பது. இராணவன் இராமனினால் கொல்லப்பட்டது நடந்ததுதான் எனக் கொண்டு, ஆனால் இராமாயணத்தில் சொல்லப்படும் இராவணன்தான் இராவணனா அவன் அதில் இருப்பதுபோல இல்லாதவனாக இருந்திருக்கலாம் என 'வாசித்து'ப் பார்ப்பது. ஆகவேதான் இற்றைக்கு பல நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் நம் சூழலில் இருக்கின்றன. இராமாயணத்தை ஒற்றைப்படையாக வாசிக்கும் நம்மை அப்படியெல்லாம் வாசிக்கத் தேவையில்லை என்று இவை இடையீடு செய்கின்றன. அவ்வாறான ஒரு வாசிப்பு முறையை பண்டிதர் 'பூர்வ பெளத்தன்' என்பதில் எடுத்துக்கொள்கிறார். அதை மிக நேர்த்தியாகப் பல்வேறுவழிகளில் செய்தும் காட்டுகிறார். 


2.

வ்வாறு எழுத்தில் வாசிப்புமட்டும் செய்யாது ஒரு பெளத்தராகவும் இலங்கை சென்று பஞ்சசீலம் எடுத்து தன்னை மாற்றிக்கொள்ளவும் செய்கின்றார். இதில் ஒரு சுவாரசியமான புள்ளியென்னவெனில், தமிழ்நாட்டுக்கு வந்து பெளத்தத்தின் திரிபீடகம் போன்ற நூல்களை பண்டிதருக்குக் கற்பித்தவர் இலங்கையில் இருந்து வரும் தமிழரென்ற குறிப்பைப் பார்க்கின்றோம் (பார்க்க, ஸ்டாலின் ராஜாங்கம் தொகுத்த - அயோத்திதாசர் -சிங்காரவேலர் விவாதங்கள்). அப்படியெனில் இலங்கையில் 1900களிலேயே தமிழ்ப் பெளத்தம் உயிர்ப்புடன் ஏதோ ஒருவகையில் இருந்ததென்பதை அறிந்துகொள்கின்றோம். ஆனால் அதன் வேர்களை ஒருவரும் இற்றைவரை தேடிச்சென்று விரிவாக எழுதவில்லை என்று நினைக்கின்றேன். இன்னொருவகையில் அயோத்திதாசரின் கதையாடலை வாசிக்கும்போது நம்மிடையே எத்தனைவிதமான போராட்டவகைமாதிரிகளைக் கைகொண்டஎவரும் இவ்வாறு பழைய தொனமங்களை/புராணங்களைத் தேடிச்சென்று மகாவம்சத்தைக் கட்டவிழ்த்து வரலாற்றை மறுவாசிப்புச் செய்து பார்க்கவில்லையே என்ற ஆதங்கமும் எழுந்திருந்தது. 


ஏனெனில் நமக்குக் கிடைக்கும் குறிப்புகளின்படி, 1960களில் வைரமுத்து அவர்கள் தொடங்கிய இலங்கைத் தமிழர் பெளத்த சங்கம் பற்றியே நமக்கு ஒரளவு அறிய முடிகின்றது. இந்த இலங்கைத் தமிழர் பெளத்தம் பற்றி இலங்கையன் 'வாழ்வும் வடுவும்' நூலிலும், யோகரட்ணம் எழுதிய 'தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்ட நாட்களும்' நூலிலும் நாம் அறியமுடிகின்றது. இலங்கையன் அவர்கள் தமிழர் சிறுபான்மை சபையில் செயலாளர் பதவியில் இருந்து 50களில் இயங்கியவர். பல்வேறு இழிவான பெயர்களால் ஒடுக்கப்பட்டவர்கள் அழைக்கப்பட்டபோது இதற்கு முன்னர் இயங்கிக்கொண்டிருந்த 'ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கம்', 'தாழ்த்தப்பட்டோர் சங்கம்', 'வடமராட்சி சேவா சங்கம்' ஆகியவற்றை இணைத்து 1940களில் 'அகில இலங்கை சிறுபான்மை மகாசபை' தொடங்கப்படுகின்றது. 

இலங்கையன் அவர்கள் பங்களித்துக்கொண்டிருந்த 1950களில், மகாசபை தீண்டாமை ஒழிப்பு, ஆலயப் பிரவேசம் போன்றவற்றில் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது.  அதேசமயம் மற்றக்கட்சிகள் சமஷ்டி அரசியலுக்காய் போராடியபோது' நாங்கள் தீண்டாமை காரணமாக பெரும்பான்மையினத் தமிழர்களால் தீண்டத்தகாதோர் என்று ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டிருக்கும் நிலையில், சமஷ்டி அரசியல்முறை தமிழருக்குக் கிடைத்தால் எங்கள் நிலைமை எப்படியாகும்' (ப.92) என தமிழர் மகாசபை கேட்பதோடு 'எமது சமூக விடுதலைக்காகக் கோவில்கள், தேநீர்-சாப்பாட்டுக் கடைகள் முன்பாகச் சத்தியாக்கிரகம் செய்வோம்' என்று குரல் எழுப்புகின்றார்கள். இந்தப் பிரச்சாரம் அன்று பல்வேறுமட்டங்களில் சென்று இறுதியில் 1956ஆம் ஆண்டு நல்லூர் கந்தசாமி கோயில், வண்ணை வரதராஜப் பெருமாள் கோயில், வண்ணை சிவன் கோயில் ஆகிய நகர் ஒடுக்கப்பட்டவர்கள் வழிபடுவதற்காகத் திறந்துவிடப்படுகின்றன என இலங்கையன் தனது நூலில் பதிவு செய்கின்றார்.


இதை இப்போது அயோத்திதாசர் 1892இல் சென்னையில் கூட்டப்பட்ட மகாஜனசபையின் முன் தாழ்த்தப்பட்டவர்களா எங்களையும் நீங்கள் இந்துக்களாக நினைப்பின் எங்களை ஆலயங்களுக்குள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று கேட்ட சம்பவத்தோடு இணைத்துப் பார்க்கலாம். எப்படி தலித்துக்கள் கோயிலுக்குள் நுழைய முடியும் என்று ஆதிக்கசாதிகள் வெகுண்டதைப் பார்த்தபின்னர்தான், அயோத்திதாசர் பூர்வ பெளத்தர் என்ற கதையாடலுக்குள் நுழையவும், தன்னையொரு பெளத்தனாக மாற்றிக்கொண்டதும் நிகழ்ந்தெனக் கூடச் சொல்லலாம். 


3.

மீண்டும் இலங்கைச் சூழலுக்கு வருவோம். இவ்வாறு சிறுபான்மை தமிழர்சபை தீவிரமாக இயங்கியபோது அதற்குள் அரசியல்கட்சிகள் சார்ந்து பங்குபெறாது தனித்து ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுக்க்வேண்டும் என்ற தன்னைப் போன்றவர்களின் விரும்பியபோதும், பின்னர் அதை சில கட்சிகள் தமக்கானதாகச் சுவீகாரம் எடுக்கவிரும்பியபோது பிளவுகள் வந்தன என இலங்கையன் எழுதுகின்றார். பின்னர்  இச்சபையிலிருந்தே 'சிறுபான்மைத் தமிழர் ஜக்கிய முன்னணி', 'தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்', இலங்கைத் தமிழர் பெளத்த சங்கம்' (1962), ஜக்கிய தேசியக் கட்சிசார் சிறுபான்மை தமிழர் இயக்கம் (1978) போன்றவை தோன்றியிருக்கின்றன. அதன்பின்ன்னர் 1960களில் மாவிட்டபுர ஆலயப்பிரவேசமும், நிச்சாம நிகழ்வுகளும் வரலாற்றுச் சம்பவங்களாகும்.


இலங்கைத் தமிழர் பெளத்த சங்கம் (அல்லது காங்கிரஸ்) வைரமுத்து அவர்கள் 1960களில் தொடங்கியபோது, நூறு இளைஞர்கள் பெளத்தர்களாக மாறக் காலிக்குப் போனதையும், அவர்களில் ஒருவராகத்தானுமிருந்ததை யோகரட்ணம் பதிவு செய்திருக்கின்றார். சில வருடங்கள் சிங்களமும், புத்த மதத்தையும் கற்ற இந்த இளைஞர்கள் யாழில் சாதிப்போராட்டங்கள் தீவிரமானபோது தென்பகுதிக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டிருக்கின்றார்கள். எனினும் யாழில் பெளத்த  தமிழ் சிங்களப் பாடசாலைகள் பல்வேறு பகுதியில் இதன் நீட்சியில் தொடங்கப்பட்டதையும், பின்னர் அரசாங்கப்பாடசாலைகளாக அவை தரமுயர்த்தப்பட்டதையும் யோகரட்ணத்தின் நூலில் காண்கின்றோம்.


4.

ண்டிதர் ஆதிதமிழர்களுக்கான கதையாடல்களை உருவாக்கியதற்கு, நாம் அம்பேத்கார் 'இந்தியாவில் சாதிகள்' பற்றிய நூலில் எழுதியதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். அம்பேத்கார் மனுவிலிருந்து சாதிகள் தொடங்கின்றன என்பதை மறுப்பதோடு, அதற்கு முன்னரே சாதிகள் பல்வேறு வகையில் வேர் பரப்பி இருந்ததையும், மனுவே இந்தச் சாதிப்பிரிவினைகளை நுட்பமாக ஒழுங்குபடுத்தியவர் என்பதை 1916இல் கொலம்பியாவில் சமர்ப்பித்த ஓர் ஆய்வுக்கட்டுரையில் கூறுகின்றார்; "சாதி பற்றிய சட்டதை மனு வழங்கவில்லை' அவனால் இயற்றவும் முடியாது என்பதே உண்மை. சாதி, மனுவிற்கு நெடுநாட்களுக்கு முன்பிருந்தே நின்று நிலவியது. அவன் சாதியை உயர்த்திப் பிடித்தவனாக இருந்தான். எனவே, அவன் சாதியைத் தத்துவத் தன்மை கொண்டதாக ஆக்கினான். ஆனால் மிக நிச்சயமாக அவன் இந்துச் சமூகத்தின் இன்றைய நிலையை ஏற்படுத்தவும் இல்லை; அவனால் ஏற்படுத்தவும் முடியாது. ...எந்த ஒரு தனி மனிதனின் எத்தனத்தாலோ, சக்தியாலோ அல்லது ஒரு வர்க்கத்தின் தந்திரத்தாலோ சக்தியாலோ சாதிக்கப்படமுடியாது' ('இந்தியாவில் சாதிகள் - ப35-36) என்பதன் மூலம் அம்பேத்கார் ஒற்றைத்தன்மையாக  சாதியை மனுவில் வைத்துப் பார்ப்பதைத் தவிர்க்கின்றார் என்பதை எளிதாக அறிந்துகொள்ளலாம். ஆக மனு இவ்வாறு சாதியைத் தத்துவத் தன்மையாக ஆக்குவதற்கு பல்வேறு புராணங்களும்/தொன்மங்களும் உதவியிருக்கின்றது என்றால், அதேபோன்று சாதியை ஒழிப்பதற்கும் பண்டிதர் புதிய கதையாடல்களைத் தேடியிருக்கின்றார் என்பது விளங்குகின்றது.

 

இன்று பலர் பெரியாரையும் பண்டிதரையும் எதிரெதிர் முனையில் வைத்து உரையாடும்போது பண்டிதரும் பெரியாரும் இந்தியச் சுதந்திரத் தினத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கின்றார்கள் என்பது சுவாரசியமானது. பெரியாரிடமிருந்து அண்ணாத்துரை பிரிந்துபோனதற்கு பெரியார்-மணியம்மை திருமணமன்று, உண்மையிலே இந்திய சுதந்திர தினமே என்று 'ஆகஸ்ட் 15: துக்கநாள் - இன்பநாள்' என்று எஸ்.வி.ராஜதுரை எழுதிய நூலை வாசித்திருந்தவர்க்கு விளங்கியிருக்கும். 


அதேபோன்று அயோத்திதாசரும் இப்போதுதான் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆங்கிலேயரால் சில விடயங்களாவது நிகழத்தொடங்கியிருக்கின்றன. இதைப் பொறுக்காத ஆதிக்கசாதிகள் 'இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை'க் கையிலெடுக்கின்றார்கள் என்று பண்டிதர் குறிப்பிட்டுமிருக்கின்றார்.  அதேவேளை பண்டிதர் இந்திய சுதந்திர நாளைப் பார்க்கமுன்னரே 1914இலேயே காலமாகினார் என்பதையும் கவனித்தாகவேண்டும். இந்தவகையில் பெரியாரும், அயோத்திதாசரும், ஆதிக்கசாதிகளின் கையில் கொடுக்கும் சுதந்திரம் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாதகமாகவே வந்துசேரும் என்பதை ஒரே கோணத்தில் நின்று கருதியிருக்கின்றார்கள் என்பதை நாம் கண்டுகொள்கின்றோம்.

....................................................


உதவியவை:

-நான் பூர்வ பெளத்தன் - டி.தர்மராஜ்

-வாழ்வும் வடுவும் - இலங்கையன்

-அயோத்திதாசரும் சிங்காரவேலரும்: நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம்  வெளிவராத விவாதங்கள் -  பதிப்பாசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்

-இந்தியாவில் சாதிகள் - டாக்டர் B.R. அம்பேத்கார்

- தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் - யோகரட்ணம்

- ஆகஸ்ட் 15: துக்கநாள் - இன்பநாள் - பதிப்பாசிரியர் எஸ்.வி.ராஜதுரை

மெக்ஸிக்கோ - செல்வரஞ்சினி

Thursday, September 03, 2020

வாழ்வியலின் எண்ணற்ற பிரச்சனைகளில் மனம் ஆழ்ந்து அமிழும் போதெல்லாம் காதலின் மெல்லுணர்வுகள் மட்டுமே கைதூக்கி கரைசேர்த்து விடுகின்றன. அல்லாடும் மனதை ஹீலியம் நிரப்பிய பலூனாக காற்று வெளியிடை அழைத்துச் செல்கின்றன.அப்படி ஒரு எண்ணப் பயணத்தை எனக்குள் விதைத்தவள் மெக்ஸிகோவின் அவள். படர்க்கையில் விளிக்கப் பட்டாலும் கூட படைப்பின் முன்னிலையில் விஸ்வரூபம் எடுப்பவள் அவள்தான்.


உலகில் ரசிப்புக்கு உரிய எதனையும் அதன் சோகத்தின் பக்கங்களோடும், எதிர்மறை எண்ணங்களோடும் எதிர்கொள்ளும் கதைசொல்லியான அவன் வளர்புப்பிராணிபோல வெறுமை ஒன்றையே கூட வைத்திருந்தாலும் கூட , பயணங்களிலும் வாசிப்பிலும் தன்னை மறந்தும் மறவாமலும் தேடலை விரும்புகின்றவன். அவனால் அதிகம் நேசிக்கப்பட்டவர்கள் ஆளுமையின் வசீகரமும், இயல்பாகவே மனஉறுதியும் கொண்ட இரு பெண்கள். இவர்களே தமது உரையாடல்களின் மூலம் வாசகருடன் நெருக்கமாகும் கதைமாந்தர்.


பெண்கள் மென்மையானவர்கள் மட்டுமல்ல, சந்தர்ப்பங்களைப் பொறுத்து எதிர்நிற்பவரை வீழ்த்தும் சாகசமும் வல்லமையும் படைத்தவர்கள் என்கிறார் இளங்கோ.உண்மைதான். இயற்கையையும், வாழ்க்கையையும் புரிந்து கொள்ளும் விதமும் , "இந்தக்_கணத்து_வாழ்வு_அழகானது" எனவே நிகழ்காலத்தில் வாழ்ந்து மகிழ் கொள்ளுங்கள் என்கிற அவர்களது அற்புதமான வெளிப்பாடும் ஒரு பெண்ணாக எனக்கும் பெருமிதத்தினை அளிக்கின்றன. அதே சமயம் இனிதான வாழ்வியல் இன்பங்களை எல்லாம் எமது ஆக்கிரமிப்பு எண்ணங்களாலும், உணர்வுகளினாலுமே சிக்கலாக்கிக் கொள்கிறோம் என்ற பேருண்மையானது வாசகருக்கு மனத்தெளிவினையும் தந்து நிற்பது சிறப்பானது.


பதினாறாவது பக்கத்தில் கடலில் அவளால் வீசப்பட்ட வலையில் மீனாகப் போனதென்னவோ கதைசொல்லியான ஆண்மகன்தான்.ஆனால் கதையில் ஆசிரியரது எழுத்து வன்மையெனும் மாயவலையில் சிக்கியது வாசகராக நானும்தான்.ஒரு ஆணால் எழுதப்பட்ட இந்த படைப்பு ஆணின் தன்முனைப்பையும், ஆதிக்கத்தையும் முன்னிறுத்துவதை விட பெண்மையின் கம்பீரத்தையும், கருணையையும் வெளிக்காட்டும் ஒன்றாக இருப்பது மனதுக்கு இதமானது. 


மெக்ஸிக்கோவின் இயற்கை வனப்பும், றொறண்டோ பனியின் கனதியும், தாயகத்தின் கடந்தகால கசப்பான நினைவுகளும், புத்தர்பெருமானின் தத்துவ முத்துக்களும், மாயன்களின் வாழ்க்கை வனப்பும் கதையின் பாதை எங்கும் ஆங்காங்கே சிதறிச் சிரித்துக் கொண்டிருக்கிறன. இது போதாதென்று புன்னகை தரும் இளங்கோவின் இதமான நகைச்சுவை மலர்களும், வரையறை தாண்டாத எழுத்தில் காதலின் காமரசங்களும் ஆங்காங்கே சிலிர்க்க வைக்கின்றன.காதல் என்பதே வாழ்வாக வேண்டுமா அன்றி வாழ்வின் பகுதியாக வேண்டுமா என்ற கேள்வி கதையின் இறுதியில் எழுவது தவிர்க்க முடியாதது.


கதையை வாசிக்கும் போது மனதைக் கவர்ந்த பல வரிகளுக்கு பென்சிலால் மெலிதாக அடிக்கோடு இட்டுக் கொண்டே வந்தேன். பக்கங்கள் செல்லச்செல்ல கோடுகளும் கூடிக்கொண்டே சென்றன. இறுதி அத்தியாயங்களை நெருங்கிய போது வலிதான எண்ணங்கள் தந்த திக்பிரமையுடன் இயல்பாகவே கோடிடுவதைக் கைகள் நிறுத்திக் கொண்டன. 


நிஜம் எது நிழல் எது என்ற மயக்கத்தில் மனது மரத்துப் போன அந்தக் கணங்களில். "நெஞ்சுக்குள்_பெய்திடும்_மாமழை..." என்ற பாடல் வரிகள் அலைகளாய் மனதில் ஆர்ப்பரிக்கத் தொடங்கின. இதன் அர்த்தம் என்னவென்று கதையை முதலில் இருந்து இறுதிவரை அர்ப்பணிப்போடும், உள்ளார்ந்த அன்பின் வழிநின்றும் வாசித்தவர்களுக்குப் புரியும். வாழ்த்துக்கள் இளங்கோ. அருமை.


அடிக்கோடிட்ட_அழகிய_வரிகளில்_மிகச்சில


தற்செயல்களின் அழகியல் தருணங்கள்......


காதல் ஒரு சாம்பல் பறவை........


இலையுதிர் காலமென்பது இலைகள் மலர்களாகும் இன்னொரு வசந்த காலம்.........


பனியில் உறைந்த நதி ஒன்று உறைநிலை விலத்தி வசந்தத்தில் பாயத் தொடங்குவது போல......


விழுவதும் எழுவதும் வாழ்க்கையில் இயல்பு.ஆனால் நான் ஒரே இடத்தில் விழுந்து விழுந்து கொண்டிருக்கிறேன்.......


ஒருகாதல் எப்படி முகிழ்கிறதோ அது போலவே எந்தப்புள்ளியில் அது முற்றுப் பெறுகிறது என்பதை எளிதாக அறிய முடியுமா........?


பிரியும் நாளோடு பிரிதல் நிகழ்ந்து முடிந்து விடுவதில்லை......


இந்த உலகில் அனைவராலும் கைவிடப்பட்டு இனி எதுவுமேயில்லை என்ற விரக்தியில் நிற்கும் ஒருவருக்கு ஒரேயொரு அணைப்பு போதும்.அது கொடுக்கும் கதகதப்பில் வாழ்வதற்கான நம்பிக்கை மீண்டும் துளிர்க்கும்........


எவ்வளவு காயங்கள் வாழ்வில் வந்தாலும் பெண்கள் இல்லாத வாழ்வு சாத்தியப்படாதென ஆசீர்வாதிக்கப் பட்டிருக்கிறேன்.........


எத்தனையோ மழைத்துளிகளுக்கிடையிலும் அவள் கூந்தலில் இருந்து இறங்கி என் நெஞ்சு நனைத்த துளியை எனக்குரிய துளியெனப் பத்திரப் படுத்திக் கொண்டேன்


மனம் நெய்யப் போகும் எல்லாப் புதிர்களில் இருந்தும் என்னைக் காப்பாற்றுபவளாக அவள் இருப்பாள்.....

........................................