கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

'களி' மற்றும் 'உத்த பஞ்சாப்'

Tuesday, August 30, 2016


Kali (மலையாளம்)

சடுதியாக வந்துவிடும் கோபந்தான் முக்கிய பேசுபொருள் என்றாலும், படம் வெவ்வேறு புள்ளிகளில் ஓரிடமில்லாது அலைந்தபடியே இருக்கிறது. எந்த வகையான கோபம் என்றாலும் அது உறவை/பிறதைப் பாதிக்கும் என்பதை இன்னும் ஆழமாய்க் கொண்டுசெல்லக்கூடியதை , பின்பாதியில் அதிக நேரத்தை தேவையேயில்லாததில் மினக்கெடுத்தி விடுகின்றனர். கோபத்தின் விளைவுகளை அவதானித்தபடி அதை மீறி நேசிக்கும் ஒரு பெண், தன் கோபத்தால் அவளை எந்தப் பொழுதிலும் இழக்கலாம் என்ற பதற்றங்கள் இருக்கும் ஒரு ஆண், அந்தப் புள்ளியில் தொடர்ச்சியாகப் பயணித்திருந்தால் மறக்கமுடியாத ஒரு திரைப்படமாக இது மாறியிருக்கும்.

இடைவெளியின் பின் திணிக்கப்பட்ட ஒரு சம்பவத்தைச் சுற்றியே கதை ஓடிக்கொண்டிருப்பதால் எப்போது அந்தக்காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்கப்போகின்றதென்று என எண்ணுவதற்குள் படம் நிறைவடைந்துவிடுகின்றது. அதுவரை ஆண் கோபமடையும்போது உருவேற்றும் இசை , இப்போது பெண்ணுக்குள் ஒலிக்கத் தொடங்கிவிடுகின்றது. எது அவசியமற்றது, எதனால் ஒரு அழகான உறவு இழந்து போகப்போகின்றது என்ற அடிப்படையே மறந்து அந்தச் சடுதியாக வரும் கோபத்தையே நியாயப்படுத்துவதாகக் காட்டும்போது, இதற்காகவா இவ்வளவு நேரமும் அந்தப் புள்ளியில் ஒன்றிப் படத்தைப் பார்த்தோம் என்ற சலிப்பு வருகிறது. 'பிரேமம்' சாய் பல்லவிக்கு சிரிக்க வருகிறது,
எளிமையாகவும் அதிக அலங்காரமும் இல்லாதும் இருக்கிறார். ஆனால் 'பிரேமத்தில்' வந்த மடோனா செபஸ்டியான் நடிப்பில் 'காதலும் கடந்து போகுமில்' எளிதாய்க் கடந்துபோனதைப் போல, சாய் பல்லவி தாண்ட இன்னும் சில படங்கள் வேண்டியிருக்கும் போலத்தோன்றுகிறது.

'நீல ஆகாசம், பச்சைக்கடல் சுவர்ணபூமி' எடுத்த சமீர் தஹீரே இத்திரைப்படத்தையும் எடுத்திருக்கின்றார். அந்தப் படமும் சுவாரசியமாகத் தொடங்கி, பிறகு அதை எப்படித் தொடர்வது/முடிப்பது என்ற அதே சிக்கலே இந்தப் படத்திலும் நெறியாளர் முகங்கொடுக்க வேண்டியிருக்கின்றது. துல்காரின் கோபத்திற்கும் நேசத்திற்கும் மாறிமாறி அலைபாயும் பாத்திரத்தைப் பார்த்தபோது ஃபகத் ஃபாசில் நடித்த North 24 Kaatham நினைவிற்கு வந்தது. அதில் ஃபகத் ஃபாசிலின் பாத்திரம் அவ்வளவு எளிதில் எவரையும் கவர்ந்திழுக்காத ஒரு பாத்திரம். ஆனால் தன் நடிப்பின் மூலம் படம் முடிகின்றபோது நாயகியிற்கு மட்டுமில்லை நமக்கும் நெருக்கமான ஒரு பாத்திரமாய் ஃபகத் அதை மாற்றியிருப்பார். இங்கே துல்காரின் பாத்திரத்தோடு நம்மால் அவ்வளவு நெருக்கமாய் உணரமுடியாதது இன்னொரு பலவீனம் போலத்தெரிந்தது. எனினும் பிரேமத்தில் வந்ததைப் போலவே இதிலும் பருக்களோடும் சிரிப்போடும் இருக்கும் சாய் பல்லவிக்காய் வரும் இரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்கவும்கூடும்.


Udta Punjab (இந்தி)

பஞ்சாப்பில் ஒருகாலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போதைமருந்துகளின் பாவனையை அப்படியே இயன்றளவு rawவாக தந்திருக்கின்றனர். அரசியல்வாதிகள், பொலிஸிலிருந்து எல்லோரும் அதற்கு உடந்தையாகி ஒரு தலைமுறையை பாழாக்கிக்கொண்டிருந்ததை, தம்மை, தமது குடும்பங்களை போதை தீண்டும்போது திகைக்கும் மனிதர்களை, மாற்றங்களுக்காய்ப் போராட விரும்பும் சிலரையென மிக தத்ரூபமாய்க் காட்சிகளில் கொண்டுவருகின்றனர்.

Highway படத்தைப் பார்த்தபோதே அலியா இன்னும் உயரங்களைத் தாண்டுவார் என நினைத்திருந்தேன். இந்தப் படத்தில் இன்னொரு காலடியை முன்நோக்கி வைத்திருக்கின்றார். இந்த வயதிலேயே அவர் ஏற்றிருக்கும் இந்தப் பாத்திரத்தை அவ்வளவு எளிதாய் எவராலும் நடிக்கமுடியாது. ஒரு பீகார் அகதியாக, வறுமை காரணமாய் பஞ்சாபிற்குள் தோட்டத்தில் வேலை செய்யவந்து தற்செயலாய் போதைப்பொருட்கள் கடத்துபவர்களின் வளையத்திற்குள் சிக்கி, அவர்களால் தனித்தும் கூட்டாகவும் பாலியல் வன்புணர்ச்சியிற்கு ஆளாகி, போதையிலிருந்து மீள்வேன் எனவும், எந்தப்பொழுதிலும் தற்கொலை செய்யமாட்டேனெனவும் உறுதியாக இருக்கும் அந்தப் பாத்திரத்தை நாம் நீண்டகாலத்திற்கு நினைவில் வைத்திருப்போம்.

இந்தப் படத்தை நான்கைந்து பஞ்சாபி நண்பர்களோடுதான் சேர்ந்து பார்த்தோம். பஞ்சாப்பில் இப்படியான நிலவரம் இருந்ததா எனக் கேட்டிருந்தேன். இந்தளவிற்கு முழுப்பகுதியிலும் இல்லாவிட்டாலும் இருந்தது உண்மை என்றனர். திரைப்படத்தின் முடிவு கூட அருமையாக இருக்கும். அடுத்த தலைமுறையின் ஒருவன் கையில் போதையினதும் கொலைகளினதும் கறைகளுடன் முன்னுக்கு நிற்கின்றான். ஆனால் அவனை மீண்டும் சமுகத்திற்குள் இணைத்த சிலர் அவனுக்காய்க் காவும் கொடுக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒரு தலைமுறையைக் காக்க/ விடுவிக்க நமக்குத் தெரியாத பலர் தம்மைப் பலிகொடுக்கின்றனர். அவர்களைப் பற்றிப் பெரிதாக நாம் அறிவதில்லை. ஆனால் அவர்களின் சாம்பல் மேடுகளிலிருந்தே நமக்கான நம்பிக்கையான வாழ்வொன்று முகிழ்கிறது.

(நன்றி: 'தீபம்)

அ.முத்துலிங்கத்திற்கான எதிர்வினை


நேற்று விகடனில் வந்திருந்த அ.முத்துலிங்கத்தின் ' வெள்ளிக்கிழமை இரவுகள் ' வாசித்திருந்தேன். அ.மு, ஈழப்பிரச்சினை குறித்து எழுதும் கதைகள் ஏன் தொடர்ந்து அபத்தமாய் இருக்கிறதென இன்னும் விளங்கவில்லை. ஒரு விடயத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள்தான் அவற்றையெல்லாம் எழுதவேண்டுமெனச் சொல்லப்போவதில்லை, ஆனால் அவை குறித்து அக்கறையும் அவதானமும் இல்லாது எழுதும்போது விசனமே வருகிறது.

இந்தக் கதை ஏற்கனவே அஷோக ஹந்தகமவின் 'இது எனது சந்திரன்' (This is my moon) என்று 2000ல் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் வந்துவிட்டது. என்ன அது உள்ளூரில் அனைத்தும் நடக்கிறது. இது உள்ளூரில் நடந்து, கனடாவிற்குப் புலம்பெயர்ந்து குழந்தையுடன் திரும்பிப்போய் ஒருவிதமான 'பழிவாங்குதலுடன்' முடிகிறது. அஷோக ஹந்தகம எனக்குப் பிடித்தமான படைப்பாளி என்றபோதும், எப்படி சிங்கள இராணுவமும், புத்தபிக்குவும் தமிழ்ப்பெண்ணை சிதைக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தினாலும், அதில் சிறுபான்மையினராகிய எம்மீதான ஒருவகையான exploitation இருக்கிறதெனவே அது கடந்தகாலத்தில் -இங்கு திரையிட்டபோதும்- விவாதித்திருக்கின்றோம், எழுதியிருக்கின்றோம்.

அ.முத்துலிங்கத்தின் கதை பாதியில் நகரும்போதே எனக்கு மிகுதிக்கதை விளங்கிவிட்டது. 1997ம் ஆண்டு ஜெயசுக்குறு சமயத்தில் மாங்குளத்தில் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகின்றார். பிறகு 2010ல், சம்பவத்தில் யார் ஈடுபட்டார்கள் என்பதை அந்தத் தாக்குதலிற்குத் தலைமை தாங்கிய மேஜரின் பெயரை மட்டும் கூறியவுடன், அவருக்குக் கீழேயிருந்து பாலியல் வன்புணர்வு செய்தவரை எளிதாய் இந்தப் பெண்ணின் நண்பி கண்டுபிடித்துச் சொல்லி விடுகின்றாராம். இந்திய வாசகர்கள்தானே எதைக் கொடுத்தாலும் வாசித்துவிட்டு உள்ளொளி பெற்றுவிடுவார்கள் என்று நம்பிக்கை இருக்கலாம். நமக்குத்தானே இன்னும் இந்த தரிசனங்கள் நிகழ்ந்துவிடவில்லையே? எப்படி நம்மால் இதையெல்லாம் எளிதாய்க் கடந்துபோய் விடமுடியும். இடியப்பதையே, இடி'யா'ப்பமாக அவர்களுக்காய் மாற்றி எழுதமுடிகின்றபோது இதெல்லாம் சிறு சம்பவங்கள்தானே என நகரச் சொல்கிறாரோ தெரியவில்லை.

தையில் இருக்கும் இப்படியான நெருடல்களையெல்லாம் விட்டுவிடலாம். கதை எந்த வகையிலுமே பாதிக்கவே இல்லை என்பதுதான் இங்கே சொல்ல வருகின்ற விடயம். பாலியல் வன்புணர்விற்குள்ளாகிய ஒரு பெண், அவ்வளவு எளிதாக எல்லாவற்றையும் மறந்துவிட்டு இப்படி பிள்ளை அப்பா யாரெனக் கேட்கிறது என்பதற்காக, பிள்ளைக்கு இலங்கையிற்குப் போய் அந்த 'அப்பா'வை அறிமுகப்படுத்துவாரா என்ன? அந்தப் பெண், பிள்ளை கேட்கிறார் என்பதற்காகத்தான் போகின்றார் என்றாலும் அவருக்குள் நிகழ்ந்த சம்பவம் குறித்து எத்தகைய கொந்தளிப்பாய் இருந்திருக்கும். அது குறித்து எதுவுமே இல்லாது -ஏதோ வெளிநாட்டிலிருந்து ஊரைப் பார்க்கப் போவது போல- அந்தப் பெண் வெளிக்கிட்டுப் போகின்றார். இப்படியெழுத அ.முவால் மட்டுந்தான் சாத்தியம்.

மேலும், இவ்வாறு பாலியல் வன்புணரப்பட்ட பெண் அவ்வளவு எளிதில் தனது பிள்ளைக்கு அந்தத் தகப்பனை அறிமுகப்படுத்துவாரா? தனது பிள்ளைக்கு எது நல்லதென ஒரு தாயிற்குத் தெரியாதா? அவ்வாறு பிள்ளையுடன் இருக்கும் தாய், உனது தந்தை இறந்துவிட்டார் என்று சொல்லக்கூடுமே தவிர, இப்படி ஓடிப்போய் தன்னைப் பாலியல் வன்புணர்ந்தவரை அறிமுகப்படுத்துவாரா என்பதை வாசிப்பவர்க்கு விட்டுவிடுகிறேன். இந்தப் பெண்பிள்ளை பிறகு வளர்ந்து இந்த உலகின் எல்லா அழுக்குகளையும் அறிந்தபின், ஏன் எனக்கு இப்படிப்பட்ட ஒருவரை அறிமுகப்படுத்தினாய் என தாயைக் காறி உமிழாதா?

மேலும், ஏதோ கனடாவில் gay/lesbian யாய் இருப்பவர்களின் பிள்ளைகளைக் கூட இலகுவில் ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால் single motherன் பிள்ளைகளைத்தான் கேலி செய்கின்றனர் என்றவகையில் அ.மு எழுதுவதில் எந்தளவு யதார்த்தம் என்பது குறித்தும் யோசிக்கின்றேன். single motherன் பிள்ளைகளுக்கு அவர்களுக்குரிய சிக்கல்கள் இருந்தாலும் இங்கு பொதுச்சூழலில் அவர்களை ஒரளவு ஏற்றுக்கொள்ளும் நிலைமைகள் இருக்கின்றன. மேலும் இந்தப் பிள்ளையை அதிகம் நக்கல் செய்வதாகக் காட்டப்படுவது, gay coupleன் ஒரு பெடியனால். Homosexual இன்னமே பொதுச்சமூகத்தால் அவ்வளவு ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு சூழலில், ஒடுக்கப்பட்டிருக்கும் அவர்களின் குழந்தைகளை அவர்கள் இப்படி அவ்வளவு எளிதில் வளர்க்கமாட்டார்கள் என்பதோடு, ஏன் அவர்களின் பிள்ளையை இங்கே அ.மு முன்னிலைப்படுத்துகிறார் என்பதில் அ.முவின் தற்பால் அரசியல் தெரிகிறது எனச் சொல்லலாமோ என யோசிக்கிறேன்.
வேண்டுமெனில் இந்தக் கதையிற்காய் விகடன் வாசகர்கள் 'ஆஹா'வென்று உச்சுக்கொட்டக்கூடும். எனக்கென்றால் எரிச்சல் தான் வந்தது.

சிலவேளைகள் நம்மால் முழுதாய் உணர முடியாத விடயங்களை, சரியாக எழுத்தில் வைக்க முடியா கதைகளை எழுதாமல் விடுவதே மிகச் சிறந்த 'அறமாக' இருக்கும் எனவும் -கேட்கிறார்களோ இல்லையோ- சொல்லிவைப்போம்.

அ.யேசுராசாவின் 'நினைவுக்குறிப்புகள்'

Sunday, August 07, 2016

.யேசுராசாவின் 'நினைவுக்குறிப்புகளில் 15 கட்டுரைகள் இருக்கின்றன; அநேகமானவற்றை 'ஜீவநதி'யிலும், அ.யேசுராசாவின் முகநூலிலும் எழுதப்பட்டபோது வாசித்தபோதும், இன்னொருமுறை முழுதாகச் சேர்த்து வாசித்தபோதும் சுவாரசியம் குறையாமல் இருந்தது. அ.யேசுராசாவில் நமக்கு எத்தகைய விமர்சனம் இருந்தாலும், இந்தத் தொகுப்பை நிறைவு செய்யும்போது அவர் அறிமுகப்படுத்தும் விடயங்களுக்காய் ஏதோ ஒருவகையில் நாம் அவருக்கு நன்றியுடையவர்களாக மாறிவிடுவோம். இலக்கியவாதிகளையும், இலக்கிய நிகழ்வுகளையும், சினிமாக்களையும், ஓவியங்களையும் அ.யேசுராசா இதில் பேசுகின்றார் என்கின்றபோதும், அதனூடு ஒரு குறிப்பிட்ட காலத்தின் (1970/1980) சுவடுகளையும் நாம் இவற்றில் அடையாங்காணமுடியும்.

ஒரு கடற்றொழிலாளியின் மகனாக வறுமையான குடும்பத்தில் பிறந்து, விரும்பிய கல்வியைத் தொடரமுடியாது தொடக்கத்தில் மேசன் வேலையும், பின்னர் தபால் கந்தோரிலும் பணிபுரியும் அ.யேசுராசாவிடம் 'நிலவினில் பேசுவோம்' போல, 'நீங்கள் எப்படி ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்யலாம்' எனவும் சிலர் கேட்கின்றனர். அதுபோலவே அவர் சேகரிக்கும் நூற்களையும், அதில் எவ்வளவு பிரியமுடையவராக இருக்கின்றார் என்றும் எழுதப்பட்ட கட்டுரை அற்புதமானது. ஒருவகையில் அ.யேசுராசாவின் நூல் பித்து எனக்கு ஃபோர்ஹேஸை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. தனிமனிதர்களின் உறவை விட அவரின் புத்தகங்கள் மீதான நேசம் ஒருகட்டத்தில் எனக்கு அச்சமூட்டியதென்றாலும், புத்தகங்களின் மீதான தீரா வாஞ்சையும், அவையில்லாமல் ஒரு பொழுது விடிந்து முடியாதென நம்புகின்ற ஒருவனாக நானும் இருப்பதால் ஒருவகையில் யேசுராசாவைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஹாகவி, ஏ.ஜே, எஸ்.பொ போன்ற ஆளுமைகளில் மீது வைத்திருக்கும் மதிப்பை வெளிப்படுத்துகின்ற யேசுராசா, அவ்வளவு கவனிக்கப்படாத ஆனந்தமயில், செ.கதிர்காமநாதன் போன்றவர்களை மட்டுமின்றி, இலக்கியம் சாராத சாதாரணமனிதர்களைக் கூட அவர்களின் பங்களிப்புக்களுக்காய் நினைவுகூரவும் செய்கின்றார். அதேசமயம் டானியனில் படைப்புக்கள் மீது (முக்கியமாய் 'பஞ்சமர்') குறித்த தன் கறாரான பார்வையையும் முன்வைக்கின்றார். ஆனால் இன்று டானியலின் படைப்புக்கள் முழுதாய் வெளிவந்திருக்கின்ற/வாசிக்கப்படுகின்ற காலகட்டத்தில் டானியலை அவ்வளவு எளிதாய் அ.யேசுராசாவைப் போல புறந்தள்ள முடியுமா என்பதிலும் கேள்விகள் உள்ளன. அதேபோன்று கைலாசபதியினதோ, டொமினிக் ஜீவாவினதோ, மு.பொன்னம்பலத்தினதோ முரண்பாடுகளை இத்தொகுப்பில் சேர்க்காமல் விட்டிருக்கலாமோ எனவும் தோன்றியது. மேலும் அவர்கள் என்ன எழுதினார்கள்/ எந்த விமர்சனத்தை முன்வைத்தார்கள் என்பதை அறியாது ஏதோ இடைநடுவில் ஆதியும் அந்தமும் தெரியாது யேசுராசாவின் பதிவுகளை மட்டும் வாசிப்பதில் சிக்கல்களும் இருக்கின்றன. இத்தகைய விடயங்களுக்கு எதிர்வினையாற்றல் அவசியமென்கின்றபோதும் இத்தொகுப்பில் இதன் தேவை இல்லைபோலவே தோன்றியது. அதுபோலவே இதில் சேர்க்கப்பட்ட 15வது கட்டுரையும் எனலாம்.

இவை எல்லாவற்றிற்கும் அப்பால் அ.யேசுராசா அன்றைய காலத்திலிருந்து இன்றுவரை புதிது புதிதாய் அறிய விழைகின்றவராய், அவற்றைப் பகிரவிரும்புகின்றவராய் இருப்பதே என்னைப் பொறுத்தவரை கவர்கிறது. கட்டுரையிற்கான அவரின் கச்சிதமான மொழி நம்மை அலுப்பின்றி வாசிக்க வைக்கின்றது. பத்தி/கட்டுரைகளில் எழுதுவதில் ஆர்வமிருக்கும் என்னைப் போன்றவர்கள் அ.யேசுராசாவிடமிருந்து கற்றுக்கொள்ளவும், அவரின் அனுபவங்களினூடாக பயணிக்கவும் நிறைய உள்ளன. திரைப்படங்கள் பற்றிய ஒருகட்டுரையில் பிரசன்ன விதானகேயின் 'With you Without you' பிடித்தது பற்றியும், அஷோக ஹந்தகமவின் 'இனி-அவனில் இருக்கும் சிக்கலால் விலகிப்போனது பற்றியும் எழுதிய பார்வை எனக்கும் உவப்பானது.

அ.யேசுராசா என்ற ஆளுமை மீது நமக்கு வேறுபட்ட பார்வைகள் இருக்கலாம். ஆனால் அவர் நம்மோடு பகிர்வதற்கும் இன்னும் நிறைய விடயங்கள் இருக்கிறதெனவே நம்புகின்றேன். எதிலும் கறாரான பார்வையுடைய, எழுதும் மொழியின் கச்சிதம் அறிந்த, எதன் பொருட்டும் சமரசம் செய்யாத ஒருவராக அ.யேசுராசாவை அவரின் எழுத்தினூடும், அவரை அறிந்தவர்களினூடாகவும் அறிந்து வைத்திருக்கின்றேன். எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கியிருந்த அவர் 'ஜீவநதி'யில் எழுதத்தொடங்கியதிலிருந்து மீள வந்திருப்பதாய் இத்தொகுப்பின் முன்னுரையில் கூறுகின்றார். அவர் இன்னும் நிறைய எழுதவேண்டும். அவரின் எழுத்துக்களை இரசித்தும் முரண்பட்டும் செல்ல, என்னைப் போன்ற நிறையப் பேர் அவற்றை வாசிக்க ஆர்வத்துடன் இருப்பார்களெனவே நம்புகின்றேன்.

(நன்றி: 'தீபம்')