கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்
Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

கார்காலக் குறிப்புகள் - 107

Wednesday, August 27, 2025

 

கோடை என்றால் இங்கே தெருவிழாக்கள் அமோகமாக நிகழும். இப்போது ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் தமிழர்கள் விழாக்களை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். என்னை இந்தத் தெருவிழாக்கள் அவ்வளவாக கவர்வதில்லை. பெரிதாகக் காரணம் ஒன்றுமில்லை, அங்கே கூடும் சனங்களின் நெருக்கம் என்னை மூச்சுவிட திணற வைக்கும்.

நேற்று ஒரு தெருவிழாவுக்குப் போகவேண்டுமென நண்பர் விரும்பியிருந்தார். அதற்கு இந்நிகழ்வுக்கு பாடகர் பிரதீப் குமார் வருவதாக விளம்பரப்படுத்தியிருந்தனர் என்பதும் ஒரு காரணம். இன்னொரு நண்பரை நீண்டகாலமாக சந்திக்க விரும்பியும் இதுவரை சாத்தியமில்லாமல் இருந்தது. அவரையும் அவரின் வேலை முடித்து அங்கே சந்திக்க வரச் சொல்லியிருந்தேன்.

தமிழர்களின் தெருவிழாக்களில் இருக்கும் தன்முனைப்புக்கள்/அரசியல்/குழிபறிப்புகள் குறித்து விரிவாக எதுவும் பேசப்போவதில்லை. அது ஒரு பெருங்கடல்; அது குறித்து 24/7 சூடாய்ப் பேசுவதற்கு நிறையப் பேர் இருக்கின்றனர்.

பிரதீப்குமார் நண்பருடன் குழுவினராய் வந்து இறங்கியிருந்தனர். அவர்கள் Oorka என்கின்ற சுயாதீன இசைக்குழுவை நீண்டகாலம் நடத்தி வருகின்றனர். எனவே அவர்கள் தமது சுயாதீனப் பாடல்களைப் பாடினார்கள். எனக்கு இதில் இருந்த வியப்பு என்னவென்றால், பிரதீப்குமார் பிரசித்த பெற்ற பாடகர்/இசைக்கோர்ப்பாளர் என்று வளர்ந்தபின்னும், ஒரு சுயாதீன இசைக்குழுவின் ஒரு 'பேஸ் கிட்டாராக' அவர்களோடு சேர்ந்து வந்திருந்தார். இந்தக் குழுவின் இசைக்கோர்ப்பாளர்/பாடகராக முக்கியமாக இருப்பவர் பாரத் சங்கர்.

நேற்றைய நிகழ்வில் பிரதீப்குமார் எதுவும் பாடப்போவதில்லை என்றுதான் பாரத் சங்கர் கூறினார். அதுபோலவே பிரதீப் குமார் எதையும் பாடவில்லை. பொதுவாக சினிமா/இசைச்சூழலில் ஒருவர் அதில் பிரபல்யமானபின், தன்னை முதன்மை ஆளுமையாக முன்வைப்பார்கள்; அதில் துளி ஆணவமும் இல்லாது பிரதீப் குமார் நேற்று மற்றவர்கள் பாட, கூட ஒரு பக்கவாத்தியக் கலைஞராக மட்டும் இருந்தார். இது அவ்வளவாக எவருக்கு சாத்தியமாகாது. அந்தவகையில் பிரதீப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எப்போதும் சினிமாப் பாடல்களை பாடும் இவ்வாறான நிகழ்வுகளில், ஒரு சுயாதீன இசைக்குழுவை அழைத்து வந்து பாட வைத்த விழாக்குழுவினருக்கும் நன்றி சொல்லவேண்டும்.

இப்போது நான் இதை எழுத வந்ததற்கான காரணத்துக்கு வருகின்றேன். இதை நான் என் பள்ளி/பல்கலைக்கழகத்திலிருந்து பேசி வருகின்றோம். நம்மவர்களுக்கு இருக்கும் இந்த இந்தியச் சினிமா/சினிமா மோகம் பற்றியது. கோடம்பாக்கம் திரையுலகு எவ்வளவு பிரமாண்டம்/இராட்சத்தனம் என்பது பற்றி பேசவேண்டியதில்லை. சினிமா/ இசைக்கலைஞர்களை இங்கு அழைப்பது, மனம்குளிர 'கொடுத்து' திருப்பி அனுப்பிவைப்பது குறித்தும் கவலையில்லை. அவரவர் அவரவர்க்கான விருப்பம்.

ஆனால் பாருங்கள், இப்போது ஒரு சுயாதீன இசைக்குழுவை அழைக்க முடிந்தவர்களால், நம்மவர்களிடையே இருந்து முகிழ்ந்த சுயாதீன இசைக்குழு ஒன்றை அழைக்கவேண்டும் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடிந்திருக்காது. இத்தனைக்கும் கனடாவிலே நான்றிய சிறந்த சுயாதீனப் பாடர்களென தென்னிந்தியா சினிமா உலகே பாராட்டும் NavZ-47, Shan Vincent de Paul போன்ற பலர் இருக்கின்றனர்.

ஆங்கிலம் உள்ளிட்ட வேறு மொழிகளில் பாடமுடியும் என்றாலும், தமிழில் மட்டுமே பாடுவோம் என்று இங்கிருக்கும் நவனீ போன்று நோர்வேயில் 9 grader nord என்ற இசைக்குழுவை நடத்தும் மீரா/தீபா சகோதரிகள் தமிழிலேதான் பாடுகின்றனர். இப்படி எண்ணற்ற நம்மவரிடையே இருக்கும் 'சுயாதீன இசைக்குழு'வைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் இப்போது ஈழத்தில் இருந்து நன்றாகப் பாடும் வாகீசன் குழுவினரைக் கூடக் கூப்பிடலாம்.


மேலும் இங்கே தெருவிழாக்களை யார் நடத்துகின்றோம் என்று போட்டியிடும் குழுக்கள் கூட, எவரை அழைக்கவேண்டும்/எவருக்கு தளங்களை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்பது குறித்து ஒருபோதும் பொதுவில் விவாதிப்பதில்லை. இங்கே இப்போது தெருவிழா சார்ந்து அடிவாங்கும் ஒரு நிறுவனம் கூட, நம்மவர்கள் ஒரளவு பிரபல்யம் அடைந்தபிறகுதான், எம்மிடம் வாருங்கள் என்று தங்கத்தம்பாளம் வைத்து வரவேற்று பாராட்டுவார்கள். தமது தனித்துவமான கலைத்திறமைகளால் வளர்ந்துவரும் கலைஞர்களை இவர்களைப் போன்றவர்கள் ஒருபோதும் அரவணைப்பதில்லை. அந்தக் கலைஞர்களுக்கு ஏதோ ஒருவகையில் அங்கீகாரம் கிடைத்தபின்னேதான் நம்மவர்கள் எனப் பாராட்ட முன்வருவார்கள்.

உங்களுக்குச் சந்தேகம் இருப்பின், அவர்கள் கடந்தகாலத்தில் கெளரவித்தவர்களின் பட்டியலைப் பாருங்கள். ஆனால் வெளியில் என்னவோ ஈழத்தமிழர் சமூகத்திற்காக உடல்/பொருள்/ஆவியைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக களமாடி கொண்டிருப்பார்கள். நாங்கள்தான் தமிழ்ச்சமூகத்தை அடையாளப்படுத்துபவர்கள் என்ற ஏகபோக உரிமையை தாமாகவே எடுத்துக் கொள்வார்கள்.

ஒரு சமூகமாக எல்லோரையும் உள்ளடக்கும்போது அந்த சமூகம் உங்களை அரவணைப்பார்கள். விடுகின்ற தவறுகளைக் கூட, செய்து முடித்த/செய்து கொண்டிருக்கும் நல்ல விடயங்களை முன்வைத்து சமூகமாக மக்கள் மன்னிக்கக் கூடத் தயாராக இருப்பார்கள்.

ஆனால் அது ஊர்ச்சங்கமாக இருந்தாலென்ன, பாடசாலைச் சங்கமாக இருந்தாலென்ன, ஏன் சமூகச் சங்கமாக இருந்தாலென்ன, தலைமைக்கான போட்டியில் அடிபடுவார்கள், ஒருவரையொருவர் இழுத்து விழுத்துவார்கள், பிறகு நாங்களே நல்லவர்கள்/வல்லவர்கள், எங்களுக்கு நீங்கள் இப்படிச் செய்யலாமா என்று அழுதபடி சமூகத்திடம் வந்து நீதி கேட்பார்கள்.

ஆகவே இங்கிருக்கும் ஒவ்வொரு சமூக நிறுவனங்கள் மட்டுமில்லை, தனிப்பட்ட ஒவ்வொருவரும் நீங்கள் உங்கள் தனிப்பட்ட விருப்பு/தன்முனைப்புகளைத் தவிர்த்து ஒரு சமூகமாக நாம் முன்னேற/உருப்பட ஒரு சிறு கல்லையாவது எடுத்துப் போட்டிருக்கின்றோமா என்று கேள்வி கேட்கவேண்டும். அந்த அடிப்படை அறத்தோடே சமூகக் களங்களுக்கு பணியாற்ற வாருங்கள். இல்லாவிட்டால் அமைதியாக இருங்கள். ஆகக்குறைந்தது பொதுவில் வந்து நீதி கேட்கும் முன், நீங்கள் இதுவரை காலம் எவ்வளவு ஜனநாயகத்தன்மையுடன் செயற்பட்டிருக்கின்றீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

***


(Aug 10, 2025)

கார்காலக் குறிப்புகள் - 96

Saturday, June 21, 2025

 

வேடன்
***

நானெனது இருபதுகளில் ராப் பாடல்களில் மூழ்கியிருந்தவன். ஏற்கனவே இலங்கையில் இருந்த ஒடுக்குமுறையின் நிமித்தம் கனடாவுக்குத் தப்பி வந்தவன். இந்தப் புதிய கனடா என்கின்ற பனி நிலத்திலும் ஓரமாக (முக்கியமாக பாடசாலை/பல்கலைக்கழகம்) வாழ நிர்ப்பந்திக்கப்பட்டபோது, கறுப்பினத்தவர்களின் ராப் கவர்ந்திழுக்காது இருந்தால்தான் வியப்பாக இருக்கும். ராப் பாடல்களின் மீதான பெருவிருப்பு பின்னர் உதிர்ந்துபோனாலும், அந்த உலகம் எனக்குள்ளே இருந்த கோபம்/வெறுப்பு/சலிப்பு போன்றவற்றைக் கடந்துவர அன்று உதவியிருக்கின்றது.

நான் ராப் பாடல்களைக் கேட்க தொடங்கிய காலத்தில் அரசியலை முன்னிறுத்திய ராப் பாடகர்களின் காலம் முடிந்து கொண்டிருந்த காலம். அது ராப்பில் மட்டுமில்லை இசையின் பல்வேறு வகைமைகளிலும் நிகழ்ந்து கொண்டிருந்தன. பெண்ணுடல்களை காட்சிப்படுத்தி கீழிறக்குவதுடன், போதைமருந்துகள்/பணத்தின் மீதான பெரும் பித்துடன் இசை உலகம் மெல்ல மெல்ல மாறிச் செல்லத் தொடங்கியது. இப்படி அதற்கு முன்னர் இருக்கவில்லை என்றல்ல அர்த்தம். ஆனால் 2000களின் பின் இந்த விடயங்கள் பாடல்களை ஆக்கிரமிக்க, மிக அரிதான இசைக்கலைஞர்களே அரசியல்/ அழகியல்/சமூகம் சார்ந்து பாடல்களைப் பாடியபடி இருந்தனர் (சிலவேளை எனக்கு வயதாகிவிட்டதோ தெரியவில்லை, புதிய தலைமுறை என்னை மறுத்து பேசக்கூடும்).

புலம்பெயர் சூழலில் அவ்வப்போது சில இளைஞர்கள் ராப் பாடல்களைப் பாடி, இசைத்தட்டுக்களை வெளியிட்டபோதும், அவர்களிடம் ஓர் தொடர்ச்சி இல்லாததால் அதை ஒரு பெரும் விடயமாகக் குறிப்பிட்டுப் பேச முடியாது போய்விட்டது. தமிழக/ஈழத்துச் சூழலில் ராப் பாடல்கள் வந்து சேர நீண்டகாலம் எடுத்திருந்தது. அந்தவகையில் ராப் பாடல்களின் சரியான மூலவடிவத்தை எடுத்துக்கொண்டவர் என்று தமிழகக் கலைஞர் அறிவைச் சொல்லலாம். ஆனால் அவரும் ஏதோ ஒருவகையில் தன்னிருப்பைத் தக்கவைக்க தமிழ்ச் சினிமாச் சூழலுக்குள் போக வேண்டியிருந்தது. நமது இலக்கியவாதிகளின் பெரும்பாலானோரின் கடைசிப்புகலிடம் (அல்லது இரகசிய ஆசை) சினிமாவாக இருப்பதைப் போன்று, சுயாதீன இசைக்கலைஞர்களும் இறுதியில் சென்றுசேர வேண்டிய இடமாக திரைச்சூழலே இருக்கின்றது.

அந்தவகையில் கேரளச் சூழலில் இருந்து வந்த வேடனை நான் பின் தொடர்ந்து வந்திருக்கின்றேன். அவரின் 'குரலற்றவரின் குரல்' பாடல் வெளிவந்தபோது அது அதிக கவனத்தைப் பெற்றது. அப்போது அவரை (5 வருடங்களுக்கு முன்) யாரெனத் தேடியபோது ஆதிவாசிகளின் பின்னணியில் இருந்து வருகின்றவர் என்று ஒரு தகவல் கிடைத்தது. ஆனால் பின்னால் அவர் யாழ்ப்பாணத்திலிருந்து 'அகதி'யாக இடம்பெயர்ந்த தாயுக்கும், திரிச்சூர் தந்தைக்கும் பிறந்தவர் என்பதை அறிந்துகொண்டேன். மிக வறுமையான 'ரெசிடென்ஸி' சூழலில் வளர்ந்த வேடன் வீரியமான அரசியலை தன் பாடல்களில் வெளிப்படையாகப் பாடத் தொடங்கினார்.

எப்படி ராப்பில் Tupac போன்றவர்கள் அரசு/பொலிஸ் உள்ளிட்ட அதிகாரத்தை கடுமையாக விமர்சித்து கறுப்பின மக்களை அரசியல்படுத்தினார்களோ, அப்படி ஒருவராக வேடன் வரக்கூடுமென நினைத்தேன். ஆனால் அவர் இடையில் வேறொரு பாதைக்குச் செல்லத் தொடங்கினார். ஒருகட்டத்தில் பல பெண்கள் தம்மீது அத்துமீறியதாக வேடனுக்கு எதிராக பேச வந்தார்கள். அவர்கள் அதை அறிக்கையாக வெளியிட்டு நீதி கோரியபோது, வேடன் மன்னிப்பு கேட்டு ஒரு பதிவை எழுதினார். எனினும் அந்த மன்னிப்புப்பதிவு பொறுப்புக்கூறலற்ற மன்னிப்பு என பாதிக்கப்பட்ட பெண்கள் மறுதலித்தார்கள். இன்னொருபக்கம் ஒரு தலித்தாக இருக்கும் வேடன் மீது ஆதிக்கச்சாதிகள் செய்யும் சதி என்று பேசப்பட்டபோது, வேடனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தலித் பெண்ணாக இருக்கின்றார் என்றும் அப்போது பதில் கூறப்பட்டது.

இப்படி பாலியல் துஷ்பிரயோகங்களில் எந்த ஆணும் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டதில்லை என்றவகையில் நடிகை பார்வதி வேடனின் மன்னிப்புக்கடிதத்திற்கு இன்ஸ்டாவில் 'லைக்' இட்டிருந்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள், இந்த மன்னிப்பு பொறுப்புணர்ந்து genuine ஆனதல்ல என்றபோது, பார்வதி தனது 'லைக்'கை மீள எடுத்து அதற்காய் மன்னிப்பைக் கேட்டிருந்தார். எதற்கு இதையேன் விரிவாகச் சொல்கின்றேன் என்றால், எவ்வளவு நுண்ணியமாக இந்த விடயத்தை மலையாளப் பெண்கள் கையாண்டிருக்கின்றார்கள் என்பதற்காகும்.

*

ஒருவகையில் இந்த விடயங்களில் குற்றச்சாட்டுக்கு உள்ளானபோது வேடனுக்கு 25 வயதுக்குள்ளே இருந்தது. ஒரு முதிரா இளைஞன், சட்டென்று கிடைத்த தன் பிரபல்யத்தைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட துஷ்பிரயோகம் என்று பார்க்காது, மலையாளப் பெண்கள் வெளிப்படையாக இது குறித்துப் பேசினார்கள். இந்த நேரத்தில் இவ்வாறான விடயங்களில் பெண்களுக்கு நமது தமிழ்ச்சூழல் கொடுக்கும் தோழமையுணர்வையும், எதிர்வினைகளையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

ஒரு கலைஞனாக இதன்பின்னும் வேடன் வளர்ந்துகொண்டே இருந்தார். சுயாதீன பாடல்களை வெளியிட்டதோடு மட்டுமில்லாது, கடந்த வருடம் வந்து மிகவும் கவனத்தைப் பெற்ற திரைப்படங்களான மஞ்சுமல் பாய்ஸ், கொண்டல், All We Imagine as Light போன்றவற்றிலும் பாடியிருக்கின்றார்.

இன்னொரு வகையில் அவரது பாடல்கள் இன்னுமின்னும் அரசியல்மயமாகிக் கொண்டிருக்கின்றது. அதிகாரத்தை நோக்கி மிகக் காட்டமாகக் கேள்விகளை எழும்புகின்றார். அதன் நிமித்தந்தான் அவர் சில வாரங்களுக்கு முன்
'கஞ்சா கேஸ்'ஸில் வேடன் கைது செய்யப்பட்டார் என்றும் சொல்லப்பட்டது. அப்படி கஞ்சா கேஸில் அகப்பட்டபோது அவர் அணிந்திருந்த சங்கிலி அசலான சிறுத்தைப் பல்லால் செய்யப்பட்டது என்று வன இலாக்காவினாலும் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இவ்வாறு சட்டமும்/அதிகாரமும் அவரைத் தொடர்ந்து தொந்தர்வு செய்து கொண்டிருக்கின்றது. அதற்கான காரணிகளை வேடனும் ஒருவகையில் உருவாக்கிக் கொண்டபடி இருக்கின்றார்.

இப்போது வேடன் ஒரு காதல் பாட்டைப் பாடியிருக்கின்றார். 3 வாரங்களில் 'MAUNA LOA' பாடல், 5 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து வேடனுக்கு ஒரு பெருந்திரளான இரசிகர்கள் இருப்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். அவருக்கு இப்போது ஒரு காதலி இருப்பதாகவும் பொதுவெளியில் சொல்லப்படுகின்றது. சிலவேளைகளில் இனியான காலத்தில் வேடன் ஒரு முதிர்ச்சியடைந்த ஆணாக, பெண்கள் சார்ந்த விடயங்களை அணுகவும் கூடும்.

*

வேடன் குறித்து இன்னொரு விடயத்தைச் சொல்லவேண்டும். நமது புலம்பெயர்/ஈழ சமூகம் பல விடயங்களில் தூங்கிக் கொண்டு சட்டென்று 'முழித்து'க் கொள்ளும் ஒரு சமூகம் என்பதை மீண்டும் நினைவுபடுத்தத் தேவையில்லை. நீங்கள் கலை/இலக்கியங்களில் எவ்வளவு காலம் இயங்கிக் கொண்டிருந்தாலும் தடித்த தோலோடு, உங்களை உற்சாகப்படுத்த ஓரடி கூட எடுத்து வைக்காது. ஆனால் யாரேனும் அந்நியர்கள் அந்த கலைஞர்களை ஏற்றுக்கொண்டால் போதும். உடனேயே கும்பம்/மாலை வைத்து வரவேற்று இவர் நம்மவரென கூட்டம் கூட்டமாக வந்து பொதுவெளியில் அவர்களை வியந்தோத்தும்.

அப்படித்தான் யாரோ ஒரு புண்ணியவான் இப்படி வேடனை ஒரு பாடலில் கண்டுகொண்டுவிட்டார். 4 வருடங்களுக்கு முன் வெளிவந்த வேடனின் 'பூமி ஞான் வாழுமிடம்' (Bhoomi Njan Vazhunidam) பாடலில் பல்வேறு நாட்டு ஒடுக்குமுறைகள்/போராடும் இயக்கங்கள் உசாத்துணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அதில் 'இலங்கையில் புலிகளினது தாகம் தீரா இனி நடப்போம்' என்ற வரிகள் வருகின்றது. நம்மாட்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இந்த வரிகளோடு, வேடனின் தாய் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்று தெரிந்ததோடு, 'ஒரு யாழ்ப்பாணத்தமிழன் பாடுகின்றான்' என்று எல்லாப் பக்கத்திலும் காணொளியை வெளியிட்டு இப்போது 'தெறி'க்க விடுகின்றார்கள்.

வேடனின் இந்தப் பாடலிற்கு முன்னோடியாக மாயா அருள்பிரகாசத்தின் (MIA) பாடலான 'Sun showers' ஐ சொல்லலாம். மேலும் மாயா அதில் புலிகளின் பெண் போராளிகளைப் போல ஆடைகள் அணிந்து வந்து 'Like PLO/ I don't surrender' என்றேல்லாம் பாடுவார். புலிகளைப் போல ஆடையணிந்தாலும் அவர் அதில் வெளிப்படையாகப் பாடுவது பாலஸ்தீனியர்களின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றியாகும். வேடனோ இதில் ஒடுக்குமுறை நடக்கும் ஒவ்வொரு இடத்தையும் ஒரிருவரிகளால் குறிப்பிட்டு பாடிவிட்டு எளிதில் விலகிச் செல்கின்றார்.

*

வேடனின் பாடலை ஈழத்தோடு இணைத்து பொதுவெளிகளில் புகழ்ந்து பரப்பிக் கொண்டிருப்பவர்கள், வேடன் மீது பாதிக்கப்பட்ட பெண்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கலைஞர்கள் இயல்பிலே பலவீனமானவர்கள்/பிறழ்வானவர்கள் என்று சாட்டுச் சொல்லாது, அவர்களின் கலைப்படைப்புக்களினால் கிடைக்கும் புகழைப் போல, இந்தக் குற்றச்சாட்டுக்களையும் நேரடியாக அவர்கள் எதிர்கொள்ளவேண்டும். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்புக்கூறும் கடமையிலிருந்து அவ்வளவு எளிதில் தப்பிச் செல்லவும் முடியாது.

அது ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து அத்தனை அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு, தனக்கான ஓரிடத்தை இசையுலகில் இப்போது சாதித்துக் காட்டிக்கொண்டிருக்கின்ற, ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட வேடனாக இருந்தால் கூட.

*******

 

(May 20 , 2025)

ஷான் வின்சென்ட்டின் 'Made in Jaffna'

Thursday, February 17, 2022

னக்கு திரைத்துறை சார்ந்தும், இசை சார்ந்தும் இருக்கும் நண்பர்கள்  குறைவு. அதைவிட இலக்கியஞ்சார்ந்து இருக்கும் நண்பர்கள் மிகக்குறைவு என்பது வேறுவிடயம்.  அவ்வளவு பரிட்சயமில்லாத இவ்வாறான துறைகள் சார்ந்திருக்கும் நண்பர்களிடம் அவர்கள் சார்ந்த துறையில், அசல் படைப்புக்களை -அது எவ்வாறான தரத்தில் இருந்தாலும்- கொண்டுவர முயற்சியுங்களென அடிக்கடி கூறிக்கொண்டேயிருப்பேன்.


ஒன்றையே தொடர்ந்து ஒருவர் பிரதி/பாவனை செய்துகொண்டிருந்தால், அவர்கள் தம் விருப்பம் சார்ந்த விடயங்களில் இருந்து மிக விரைவில் விலகிப் போய்விடுவார்கள் என்பதை ஓர் அவதானமாகச் சொல்வேன். மேலும் ஒருவர் ஏற்கனவே பாடப்பட்டுவிட்ட பாடல்களை மட்டும் பாடிக்கொண்டிருப்பதில் என்ன பிரயோசனம் இருக்கப்போகின்றது?  எமக்குப் பிடித்த படைப்பாளிகளைப் போல, நாங்களும் படைப்புக்களை எழுதிக்கொண்டிருந்தால் நமக்கான எழுத்தின் ஆன்மாவை நாம் கண்டுபிடித்துவிடுவோமா என்ன?  இதுதான் இன்றையகால 'மோஸ்தர்' என  நாம் நம் 'முன்னத்தி ஏர்களை'ப் போல எழுதிக் கொண்டிருந்தால் வாசிப்பவர்க்கு அலுப்பு வந்துவிடாதா என்ன?


அவ்வாறான மோஸ்தருக்குள் சிக்குப்பட்டு போகாமல், தனக்குரிய அசல் பாடல்களை இசைத்ததால்தான் இன்று நவீனி (Navz-47) கவனிக்கப்படும் ஒருவராக இருக்கின்றார். இத்தனைக்கும் கனடாவில் வசித்துக்கொண்டிருக்கும் அவரால் ஆங்கிலத்தில் பாடவோ, ஆங்கிலவரிகளை பாடல்களில் கலக்கவோ முடியுமென்றாலும், முற்றுமுழுதாக தமிழிலேயே பாடல்களை  எழுதிப் பாடுகின்றார். அது இன்று ஏ.ஆர்.ரஹ்மானின் 'மாஜா'வில் அவரை ஒரு சுயாதீன இசைக்கலைஞராக அடையாளங் காணவைத்திருக்கின்றது. இதே இடத்தில் தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடச் சென்ற பல்வேறு பாடகர்கள் ஏன் காணாமற் போய்க்கொண்டேயிருக்கின்றார்கள் அல்லது ஒரு சிறுவட்டத்திற்குள் மட்டும் பாடி ஏன் சுருங்கியபடியிருக்கின்றார்கள் என்பதையும் நாம் யோசித்துப் பார்க்கவேண்டும்.


இதேபோல ஷான் வின்செட் இன்னொரு சுயாதீன பாடகராகப் பாடிக்கொண்டிருக்கின்றார். ஒருவகையில் Tupacம்,  Eminemம் கலந்த கலவையென நான் அவரின் பாடல்களைக் கேட்டு என்னளவில் அடையாளப்படுத்தியபோது அவருக்கு முன்னோடிகளென அவர் வேறு சில பாடகர்களைச் சொல்கின்றார். அதுவும் ஒருவகையில் சுவாரசியமானதுதான். 


இப்போது அவரும் நவீனியைப் போல ஒரு சுயாதீனப் பாடகராக 'மாஜா'வில் இருக்கின்றார்.  Made in Jaffna  என்கின்ற புதிய இசைத்தொகுப்போடு  விரைவில் வரபோகின்றார். அவரின் பிற பல பாடல்களைப் போல Made in Jaffna என்கின்ற தனிப் பாடலிலும் நமக்கு ஒரு கதை சொல்கின்றார். ஒருவகையில் இது அவர் கடந்து வாழ்க்கையைப் பற்றிய  'புதிய ஏற்பாடு'  என்கின்றார். 


நான்கு வயதில் யாழிலிருந்து மொன்றியலிலுக்கு வந்து, பின்னர் ரொறொண்டோவில் பள்ளிக்காலம் கழிகையில் இனவாதம், வெறுப்புவாதம் என்பவற்றுக்கால் வாழ்ந்து, வன்முறைக்குள்ளாலும் தப்பி வந்ததைச் சொல்கின்றார். இது என்னைப் போன்று கனடாவிற்கு பதின்மத்தில் வந்த பலர் நுழைந்து, அருந்தப்பில் தப்பி வந்த பாதையுங்கூட. ஆகவே யாழ்ப்பாணத்தில் இருந்து எனத் தொடங்குகின்ற இந்தப்பாடலில் இருப்பது என்னைப் போன்றவர்களுக்கான கதையேதான். 


அதை மட்டும் ஷான் சொல்லவில்லை.  வெள்ளை ஆசிரியர், வெள்ளை ஜீஸஸ்,  வெள்ளைப் பாடசாலை, வெள்ளை சட்டங்களுக்குள் என எல்லாமே வெள்ளையினத்தவர்களால் சூழப்பட்டு, அதில் சிக்குப்பட்ட ஒரு மண்ணிறக்காரனின் தத்தளிப்புக்களையும் சொல்கின்றார். மேலும் அவர் வெளியிட்ட முதல் இசைத்தொகுப்பு அவ்வளவு கவனிக்கப்படாது போக, வாழ்க்கை அவருக்கு ஒரு மகளையும் கையளிக்க, எதையும் செய்யவியலாத இயலாமையில் அலைந்து திரிந்த வாழ்க்கையின் புள்ளிகளையும் இங்கே கூறுகின்றார். ஆனால் இதையும் தாண்டி அவருக்கு இசை மீதிருந்த காதல், இன்று கவனிக்கத்தொரு இசைக் கலைஞராக அவரை நம்முன்னே நிறுத்தியிருக்கின்றது. 


அதேபோன்று 'உயிரே' என்ற பாடல் ஒரு குழந்தை பிறந்தபின் விவாகரத்துப் பெறும் இணையைப் பற்றிப் பேசுகின்றது. தமிழ்ச்சூழலில் விவாகரத்து என்பது இன்னும் ஓர் எளிதான விடயமாக இருப்பதில்லை. ஆணொருத்தன் தன் தாயாரிடம் இந்த விவாகரத்து விடயத்தைச் சொல்கின்றான். எதிர்முனையில் அமைதி. ஆனால் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் துயரம், அவன் அறிவான். அதைவிட தனது இணையிடம் இந்தக் காதலை எவ்வளவு முயன்றாலும் தொடர்ந்து கொண்டுசெல்ல முடியவில்லை என்பதைச் சொல்கின்றான். 


தங்களுக்கிடையில் காதல் இல்லாமல், ஒரு குழந்தையை வளர்க்கமுடியாதென்று, குழந்தை மிமியின் தாயாரிடமும் வலியுடன் இந்தப் பாடலில் தன்னை முன்வைக்கின்றான்.  ஆனால்  தன் இணையிடம் உன்னைவிட ஒரு அருமையான தாயார் தன் பிள்ளைக்குக் கிடைக்காதிருக்க மாட்டார் என்கின்ற அவன், எம் பிள்ளையின் நிமித்தம் நமது பிரிவை கடினப்படுத்தாமல் கொண்டுசெல்லலாம் எனவும் வேண்டுகின்றான். 


நான் இப்போது உன்னிடம் என்னை மன்னிக்கச் சொல்லிக் கேட்க வரவில்லை. இந்த வாழ்க்கையின் ஒரு நாள் நீ என்னை உனக்குள் மன்னிப்பாய் என்பதற்காய் பிரார்த்தனை செய்கின்றேன்.  இந்தக் கோடையில் நான் எடுத்த இந்த முடிவானது என் வாழ்வின் இறுதிவரை தொந்தரவுபடுத்தியபடியே வருமென்பதையும் அறிவேன் என்பதையும் சொல்கின்றான். இதுவே இந்தப் பாடல் பிரிவைப்பற்றிப் பாடினாலும் கூட,  அதனூடாக வெறுப்பை உமிழாது, ஒரு காதல் இருந்தது, இப்போதில்லை என்பது கடினமானது, ஆனால் காதலில்லாத வீட்டில் அன்பு வாழாது, அது குழந்தையையும் பாதிக்கும் என்பதால் இந்த உறவிலிருந்து நாம் வெளியேறுவதே சிறந்ததெனன எவரையும் காயப்படுத்தாது பாடப்படுவதால் இந்தப் பாடல் ஒரு முக்கியபாடலாகின்றது.


ஷான் வின்சென்ட் கடந்து வந்த இந்தப் பாதை நெடியதும், கடியதுங்கூட.  அது நம்மாலும் எளிதாக அடையாளங் கண்டுகொள்ளக்கூடிய வாழ்வின் பாதை என்பதாலேயே இந்தப் பாடல்கள் நம்மை இன்னும் நெருக்கம் கொள்ளச் செய்கின்றது போலும். 


நாளை ஷானை நினைவுகொள்ள இந்தப் பாடல்களே நமக்குப் போதுமாகவும் இருக்கவும் கூடும். கலையின் மீது பித்தங்கொண்டு, அசல் படைப்புக்களைத் தருகின்ற எவருமே தோற்றுப்போனவர்கள் அல்ல, அவர்கள் சில்வேளைகளில் சமகாலத்தில் கவனிக்கப்படாத படைப்பாளிகளாக இருக்கலாம். ஆனால் அவர்களைப் பற்றிபேச வெளியில் தெரியாத (என்னைப் போன்ற) இரசிகர்கள் இருப்பார்கள். பெருங்காதலுடன் இரகசியமாகப் இவர்களைப் போன்றோரைப் பின் தொடர்ந்தபடியும் இருப்போம். அப்படி அவர்களைச் சமகாலம் கைவிட்டால் கூட, கலையின் மீது பித்தங்கொண்டவர்களை அடுத்த தலைமுறை கவனிக்கவே செய்யும்.


*********************


(நன்றி: 'காலம்' - 2022)

9 grader nord - இசைக்குழு

Tuesday, May 26, 2020


9 grader nord (நி கிராதர் நூர்) என்பது நமது தமிழ்ப் பிள்ளைகள் முதன்மையாக இருக்கும் ஓர் இசைக்குழு (band). எப்போதும் தனித்துவமான திசைகளைக் கலைகளில் தேடுபவர்களை எனக்கு நிறையப் பிடிக்கும். அவர்கள் தமக்கான பிரபல்யம், பொருளாதார வசதிகள் பற்றி அவ்வளவு கவலைப்படாது தம் இயல்பில் கலையில் ஊறியிருப்பார்கள். மாயா (M.I.A),அப்படித்தான் ஒருகாலத்தில் "Galang" என்ற single trackயோடு வந்தபோது அவர் மீது பிடித்த பித்து இன்னும் இறங்காது எனக்குள் இருக்கிறது.

பழக்கப்பட்டுப்போன இசைக்கும், பரிட்சயமான குரல்களுக்கும் பழகிய நமக்கு புதிய முயற்சிகள் முதலில் உள்ளே இறங்காது. மாயாவைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தபோது இதெல்லாம் இசையா என கேலி செய்து கொண்டிருந்த நண்பரை, மாயாவின் நேரடி இசை (Live ) நிகழ்வுக்குக் கூட்டிக்கொண்டுபோனதன்பின் மாயாவின் இரசிகராக அவர் மாறியிருந்தார். இசை மட்டுமில்லை, மாயா அந்த அரங்கை எப்படி ஒரு intimate இசை நிகழ்வாக மாற்றினார் என்பதை நேரில் கண்டுகளித்தவர்கள் நாங்கள்.

அதுபோலவே 9 grader nordஇன் இசையை இப்படி ஒரு அறைக்குள் இருந்து கேட்பதை விட, அவர்கள் பாடும்போது அரங்கில் நேரில் இருந்து கேட்பது வேறொரு உலகுக்கு அழைத்துச் செல்லுமென நம்புகின்றேன். போலச் செய்தல் இலக்கியம் உள்ளிட்ட எந்த கலையிலும் செய்தல் எளிது. அரிதானவர்களே அதைத் தாண்டி, புதிதாய் எதையோ தேடிப் போகின்றார்கள். அப்போது அவர்களின் படைப்புக்கள் நமக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. மகிழ்ச்சியுடன் அவர்களை நம் வாழ்வில் ஒவ்வொருபொழுதும் நினைவுகூரமுடிகிறது.


ட்வாட் முங்கின் (Edward Munch) ஓவியமான 'அலறலை'ப் (scream) போல இன்னொரு பிரல்யம் வாய்ந்த ஓவியம் 'நோயுற்ற குழந்தை' (sick child). இந்த ஓவியம் முங்கின் வாழ்வோடு மிகுந்த நெருக்கமுடையது. அவரும் அவரது சகோதரியும் காசநோயால் பதின்மத்தில் பாதிக்கப்பட்டு, முங் தப்பிவிட, சகோதரியோ அவரின் 15வயதில் மரணமாகின்றார். இந்த நிகழ்வு முங்கின் வாழ்வு முழுதும் தொடர்ந்து தொந்தரவுபடுத்தியபடி இருந்தது. முங்கின் 'நோயுற்ற குழந்தை' ஓவியத்தில் இருப்பது அவரது சகோதரி. இந்த ஓவியத்தின் மூலம் இறவாத்தன்மையாக அந்த நிகழ்வை முங்க் மாற்றியிருக்கின்றார்.

9 grader nord இசைக்குழு (நோர்வேஜியப் பெயரைத் தமிழாக்கினால் வருவது, உலக வரைபடத்தில் இலங்கை அமைந்திருக்கும் '9 டிகிரிஸ் வடக்கு') ஒரு சந்தர்ப்பத்தில் முங்கின் ஓவியங்களின் பாதிப்பில் ஓர் இசைக்கோர்வையைத் தயாரிக்கச் சொல்லிக் கேட்கப்பட்டபோது, இதன் முன்னணிப்பாடகரான மீரா இந்த ஓவியத்தைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்.

சிறுவயதிலேயே இந்த ஓவியத்தைப் பார்த்தபோது அது தன்னை மிகவும் பாதித்தது என்கிறார். ஓவியத்தில் இருக்கும் குழந்தை ஏதோ ஒருவகையில் தனது நோயை ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆனால் அவரைப் பராமரிக்கும் பெண்ணால் அதைத் தாங்க முடியாது இருப்பதாலேயே தலைகுனிந்து நோயுற்ற குழந்தையை நேரே பார்க்காது இருக்கின்றார் என்கின்றார்.

ஆகவே, இந்த 'நோயுற்ற குழந்தை' ஒரு தாலாட்டுப்பாடலாகப் பாடப்படுகின்றது. தாலாட்டுப்பாடல்கள் பிறப்பை மகிழ்ச்சியாகக் கொண்டாடுபவை. வழக்கத்துக்கு மாறாக மீரா இந்தத் தாலாட்டுப் பாடல், ஒரு குழந்தை இந்த உலகைவிட்டுப் போகும்போது கடைசியாகப் பாடுகின்ற பாடல் என்கின்றார்.

நோர்வேயின் பிரபல்யம் வாய்ந்த முங்கின் ஓவியமும், நமது தமிழ் மொழியும் இணைந்து இசையாகும்போது அது யூனிவேர்சல் நிலையை அடைகிறது. அதுவும் நிலமெங்கும் பனி மூடத்தொடங்கி மனசும் பரிசுத்தமாகும் நிலையில் கேட்பதற்கு மிகப் பொருத்தமான பாடல் இது என்பேன்.

...........
(1) 'The Sick Child' ஐக் கேட்பதற்கு
https://www.youtube.com/watch?v=TIKIjFr0bVQ

(2) 9 grader nord இன் புதிய இசைத்தொகுப்பான "Jaffna" விலுள்ள பத்துப்பாடல்களையும் கேட்க sportify இன் இந்த இணைப்பைத் தட்டுங்கள்.
https://open.spotify.com/album/05w6PGViE6ZQZQMOXZjn96

(Dec, 2019)

ஓர் இசைக்கலைஞனின் பயணம் (Passenger)

Tuesday, December 27, 2016

Passenger இசைக்குழுவின் மைக் ரோஸன்பர்க்கின் (Mike Rosenberg) 'Let her go' என்கின்ற பாடல் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றது. ஒரு பில்லியனுக்கு மேலாய் YouTubeல் கேட்கப்பட்டுமிருக்கின்றது. பாடலின் பிரபல்யமோ அல்லது  வெற்றியோ அல்ல என்னைக் கவர்ந்தது. மைக் கடந்து வந்த பாதை பற்றியே பேச விரும்புகின்றேன். மேலும் மைக் தேர்ந்தெடுத்த இசைவகையான Folk எனக்கு மிகப் பிடித்தமானதும் கூட.

மைக்கும் இன்னொரும் நண்பரும் சேர்ந்த 5 பேர் கொண்ட இசைக்குழுவை 2003ல் தொடங்குகின்றார்கள். முதலாவது அல்பத்தை 2009ல் வெளியிட்டபின் இந்த இசைக்குழு பிரிகின்றது. மைக் தனித்துப் பாடப் போகின்றார். கஷ்டமான காலம், தெருக்களில் பாடி தன் வாழ்க்கையை நடத்துகின்றார் என்றபோதும், இசையின் மீதான பித்தத்தை விடாது இருக்கின்றார். ஒரு கட்டத்தில் இசையிலிருந்து முற்றிலுமாய் வெளியேறுவோமா என்று மிகுந்த அழுத்தத்திற்குள் போனபோது ஆஸ்திரேலியாவிற்குப் போய்ப் பாட வாய்ப்புக் கிடைக்கிறது.

அங்கே கிடைத்த நண்பர்கள் மற்றும் வாய்ப்புக்கள் மூலம் இசையை உயிர்ப்புடன் வைத்திருந்து தொடர்ந்து இசைத்தட்டுக்களை வெளியிடுகின்றார். 'Let her go' பாடல் மைக்கை உலகம் முழுதும் எடுத்துச் சென்று, பெரும் வாய்ப்புக்கள் அவரின் கதவைத் தட்டினாலும், இன்னமும் பழைய நண்பர்களோடு சேர்ந்தே புதிய பாடல்களைத் தயாரிக்கின்றார். ஒரு வெற்றியால் எதுவும் மாறுவதில்லையென்கின்றார். எனக்கு எது மகிழ்ச்சியாகவும் இதமாகவும் இருக்கின்றதோ அந்தச் சூழலிலேயே இருக்க விரும்புகின்றேன் எனவும் சொல்கின்றார்.

ஒருகாலத்தில் தன்னை உயிர்ப்புடன் வைத்த தெருக்களை நினைவில் வைத்து இன்று இவ்வளவு பிரபல்யம் கிடைத்தபின்னும் அங்கே சென்று பாடுகின்றார். பெரும் இசைக்கச்சேரிகளில் கல்நதுகொள்ள எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை, எனவே அவ்வாறு சந்தர்ப்பம் வாய்க்காதவர்க்காய் தெருக்களிலேயே தான் பாடுவது தனக்குப் பிடித்தமானது என்கின்றார்.

மைக் கடந்து வந்த பாதையில் நாம் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள நிறைய விடயங்கள் இருக்கும் போலவே தோன்றுகின்றது. எழுத்தாளர், கலைஞர் என்பவர்க்கு மட்டும் என்றில்லை, எவராயிரும் எதுவாயினும் அவருக்குப் பிடித்ததைச் செய்வதே மிகவும் சிறந்தது. நம்மில் அநேகருக்கு நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையிற்கும் வாழ விரும்பும் வாழ்விற்குமிடையில் இடைவெளி இருப்பதை அறிவோம்.

இன்றைக்கு கனடாவில் பெரும்பாலானோன மக்களின் ஆண்டு வருமானம் சராசரியாக 35Kல் இருக்கின்றது என்றால், கலைஞர்களில் பெரும்பாலானோரின் சம்பளம் 25Kற்கும் குறைவாக இருக்கிறதென்று ஒரு கட்டுரையில் வாசித்தேன். ஆனால் அவர்கள் இத்தனை குறைந்த வருமானத்துடன் ஏன் அதைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்றால் அவர்கள் எதைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அது பிடித்தமாயிருக்கின்றது. பிடித்தமாயிருக்கிறதென்பதற்காய் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதை சுமுகமாயிருக்கிறது என்பதில்லை. எல்லா ஏற்ற இறக்கங்களோடும் அவர்களுக்குப் பிடித்த வழியில் அலைந்து கொண்டிருக்கின்றார்கள், அவ்வளவுதான்.

மைக் ஒருகட்டத்தில் அழுத்தங்களினால் இசையை விட்டு விலகியிருந்தால், அவரின் அழகான பாடல்களை நாமின்று கேட்டுக்கொண்டிருக்கமுடியாது. எனது இசையைக் கேட்க 10,000 பேர் வந்தாலும் அவர்கள் அனைவரும் அங்கும் தொலைபேசியின் சிறிய திரையின் மூலமே என்னைப் படமெடுக்கவே பெரும்பாலும் முயல்கின்றார்கள், நேரடியாக இந்த அனுபவத்தை இரசிப்பதைத் தவிர்த்து விடுகின்றார்கள் என்று இன்றைய தொழில்நுட்பம் நம்மை விழுத்தும் வலை பற்றியும் மைக் கவலைப்படுகின்றார்.

ஒரு பாடலின் மிகப்பெரும் வெற்றி உங்களை அடுத்த அல்பம் செய்வதற்கு மிகுந்த அழுத்ததைத் தருகின்றதா எனக் கேட்கும்போது, வெற்றி என்பது மகிழ்ச்சி தரும் செய்திதான். ஆனால் அடுத்தும் பரவலான வரவேற்புக் கிடைத்தால் சந்தோசந்தான். ஆனால் அதை விட என் பாடல்களைக் கேட்பவர்கள் என் பாடல்களோடு இன்னும் நெருக்கமாவது குறித்தே அதிகம் அக்கறைப்படுவேன் என்கின்றார்.

'Let her go' என்பது தனது காதலொன்றின் முறிவின்போது எழுதப்பட்டதென்கின்றார். ஆனால் இப்போது பார்க்கும்போது அதன் துயரத்தை விட இந்தப் பாடலின் மூலம் ஒரு இதமான சம்பவமாக அது மாறியிருக்கின்றது என்பதையே அவதானிக்கின்றேனென மைக் கூறுகின்றார்.

பிடித்த எதையும் செய்யும்போது அவை சிலவேளைகளில் தோற்றுப்போனாலும், ஒருபோதும் அதற்காய் வருந்தும் நிலை ஏற்படாது என்றுணரும் எவரும் வெற்றி/தோல்விகளில் அவ்வளவு தோய்ந்து போகாது மைக் போலவே தமக்கான பாதையில் நடந்துகொண்டிருக்கவே செய்வர்.

(நன்றி: 'பிரதிபிம்பம்')

M.I.Aயின் 'மாயா'

Wednesday, July 21, 2010

-மாயா அருட்பிர‌காச‌த்தின் 'மாயா' இசைத்தொகுப்பை முன்வைத்து-

'Did you like this?
They can rewrite History
But we can re write it back faster
We have speed on our hands'
-M.I.A


மாயா அருட்பிர‌காச‌த்தின் (M.I.A) மூன்றாவ‌து இசைத்தொகுப்பான‌ 'மாயா' அண்மையில் வெளிவ‌ந்துள்ள‌து. ஏற்க‌ன‌வே மாயாவின் 'அருள‌ர்', 'க‌லா' போன்ற‌ இசைத்தொகுப்புக்க‌ள் வ‌ந்து அதிக‌ க‌வ‌னிப்பைப் பெற்றிருக்கின்ற‌ன‌. அவ‌ர‌து அநேக‌ பாட‌ல்க‌ளிலுள்ள‌ அர‌சிய‌லைப் போல‌, அவ‌ர் நேர‌டியாக‌வும் த‌ன‌க்குச் ச‌ரியான‌து என்று நினைக்கின்ற‌வ‌ற்றைப் பேசுவ‌தால் மாயாவை நேசிக்க‌வும், வெறுக்க‌வும் செய்கின்ற‌ நிறைய‌ப்பேர் இருக்கின்ற‌ன‌ர். த‌ன‌க்குக் கிடைத்த‌ த‌ள‌ங்க‌ள் அனைத்திலும், ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌ ப‌டுகொலைக‌ளுக்கு எதிராக‌த் த‌ன் குரலைத் தொட‌ர்ச்சியாக‌ மாயா உர‌த்து ஒலித்திருக்கிறார். இத‌னால்தான் இல‌ங்கையின் பாதுகாப்புச் செய‌லாள‌ர் கோத்த‌பாய‌ ராஜ‌ப‌க்சா ஒருமுறை 'மாயா த‌ன் பாட‌ல்க‌ளைப் பாடுவ‌தோடு நிறுத்திக்கொள்ள‌ட்டும்; இல‌ங்கையின் உள்விவ‌கார‌ங்க‌ளில் த‌லையிட‌வேண்டாம்' என்று எச்ச‌ரித்துமிருக்கிறார் மாயாவின் வெளிப்ப‌டையாக‌ ஒலிக்கும் அரசிய‌ல் குர‌லால் அமெரிக்காவிற்குச் செல்வ‌த‌ற்கான‌ விசா ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌தையும் இதையிட‌த்தில் நாம் நினைவுகூர‌ வேண்டும். 'தீவிர‌வாதி'க‌ளென‌ தடைசெய்ய‌ப்ப‌ட்ட‌ விடுத‌லை இய‌க்க‌ங்க‌ளை முன்னிலைப்ப‌டுத்தி எவ‌ராலும் த‌ம் இர‌சிக‌ர்க‌ளைப் பெரும‌ள‌வில் க‌வ‌ர‌முடியாது, ஆனால் மாயா ம‌ட்டுமே விதிவில‌க்காக‌ த‌ன‌து பாட‌ல்க‌ளில் 'தீவிர‌வாத‌' இய‌க்க‌ங்க‌ளென‌ அடையாள‌ப்ப‌டுத்தப்ப‌ட்ட‌ இய‌க்க‌ங்க‌ளை அடிக்க‌டி குறிப்பிட்டும் கூட‌ பெரும‌ள‌வு இர‌சிக‌ர்களைக் கொண்டிருக்கின்றார்'  என‌க் கூறுகின்றார் ஓர் இசை விம‌ர்ச‌க‌ர்.

மாயாவின் மூன்றாவ‌து இசைத்தொகுப்பு வ‌ர‌முன்ன‌ரே ப‌ல்வேறுவித‌மான‌ ச‌ர்ச்சைக‌ள் தொட‌ங்கிவிட்ட‌ன‌. 'மாயா' இசைத்தொகுப்பில் உள்ளாட‌க்க‌ப்ப‌ட்ட‌ 'Born Free' பாட‌ல் காணொளியாக‌(video) வ‌ந்த‌போது மிக‌ப்பெரும் ச‌ர்ச்சைக‌ள் எழும்ப‌த் தொட‌ங்கிய‌து. அந்த‌க் காணொளியில் அமெரிக்க‌ இராணுவ‌ம் சிவ‌ப்புத்த‌லை  ம‌னித‌ர்க‌ளை நிர்வாண‌மாக‌ சுற்றி வ‌ளைப்பதாய், சுட்டுக்கொல்வ‌தாய், குழ‌ந்தைக‌ளைப் ப‌லியெடுப்ப‌தாய் காட்ட‌ப்ப‌ட்ட‌தால் YouTube அப்பாட‌லை 'வ‌ய‌து வ‌ந்த‌வ‌ர்க்கு ம‌ட்டும் உரிய‌து' என‌ எளிதாக‌க் கூறித்  த‌டைசெய்தது;  ஆனால் அதேவேளை மாயா 'தீவிர‌வாதப்புலிக‌ளின் பாட‌கி'யென‌ துவேச‌த்துட‌ன் வெட்டி ஒட்ட‌ப்ப‌ட்ட‌ காணொளிக‌ளை 'சுத‌ந்திர‌மாக‌' YouTube அனும‌தித்த‌து. மாயாவின் பாட‌ல்க‌ளிலுள்ள‌ அர‌சிய‌லைப்போல‌ இப்பாட‌ல் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌ வித‌த்திற்கும் ப‌ல‌வேறு வித‌மான‌ வாசிப்புக்க‌ள் விம‌ர்ச‌க‌ர்க‌ளாலும் இர‌சிக‌ர்க‌ளாலும் முன்வைக்க‌ப்ப‌ட்டு விவாதிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. இக்காணொளியில் அமெரிக்க இராணுவ‌த்தால் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ சிவ‌ப்புத்த‌லை இளைஞ‌ர்க‌ளுக்கு இர‌ண்டு வித‌மான‌ தெரிவுக‌ள் கொடுக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒன்று க‌ண்ணிவெடிக‌ள் புதைக்க‌ப்ப‌ட்ட‌ நில‌ங்க‌ளினூடாக‌ ஓடுத‌ல், ம‌ற்ற‌து ஒட‌ம‌றுத்தால் துப்பாக்கியால் ஈவிர‌க்க‌மின்றிச் சுட்டுக்கொல்ல‌ப்ப‌டுவார்க‌ள். இர‌ண்டு தெரிவுக‌ளின‌தும் முடிவு ஒன்றுதான், அது ம‌ர‌ண‌ம். இன்று வெளிநாடுக‌ளை ஆக்கிர‌மித்து நிற்கும் அமெரிக்கா/பிரித்தானியா ம‌ற்றும் அத‌ன் நேச‌ப்ப‌டைக‌ள் ஆக்கிர‌மிப்பு நாடுக‌ளில் நிக‌ழ்த்தும் கொடூர‌மான‌ வ‌ன்முறையை நாளை த‌ன‌து சொந்த‌ நாட்டின் ம‌க்க‌ளுக்கு எதிராக‌க் கூட‌ நிக‌ழ்த்தும் என்கின்ற‌ ஒருவ‌கையான‌ வாசிப்பைக்கூட‌ நாம் இக்காணொளியினூடு செய்ய‌லாம். எவ்வாறான‌தாயினும் இது அர‌சு/இராணுவ‌ம் போன்ற‌வ‌ற்றிற்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ அளவ‌ற்ற அதிகார‌த்திற்கு எதிரான‌ க‌ல‌க‌க் குர‌லே. மேலும் இப்பாட‌லைப் ப‌ற்றிய‌ விப‌ர‌த்தைத்த‌ரும் சிறுகுறிப்புப் புத்த‌க‌த்தில், ஈழ‌த்தில் நிர்வாண‌மாக்க‌ப்ப‌ட்டு க‌ண்க‌ளும் கைகளும் க‌ட்ட‌ப்ப‌ட்டு சுட்டுக்கொல்ல‌ப்ப‌ட்ட‌ இளைஞ‌னின் ப‌ட‌ம் இணைக்க‌ப்ப‌ட்டிப்ப‌தையும் குறிப்பிட்டாக‌ வேண்டும் (இந்நிக‌ழ்வு காணொளியாக‌ வ‌ந்த‌து ந‌ம் அனைவ‌ருக்கும் நினைவிருக்கும்).

இந்த‌ இசைத்தொகுப்பு ப‌ற்றி மாயா எம்ரீவியிற்கு நேர்காண‌ல் கொடுத்த‌போது, 'இது ஒரு முப்ப‌ரிமாண‌ இசைத்தொகுப்பு' என்று கூறியிருக்கின்றார். முப்ப‌ரிமாண‌ம் என்ப‌தில் எவ‌ற்றை மாயா உள்ள‌ட‌க்க‌ விரும்புகின்றார் என்று தெளிவாக‌த் தெரியாத‌போதும், இர‌ண்டு வ‌கையில் இவ்விசைதொகுப்பு மூன்று ப‌ரிமாண‌ங்க‌ளைத் தொட‌ முய‌ன்றிருக்கிற‌து போல‌த் தெரிகிற‌து. ஒன்று, தொகுப்பிலுள்ள‌ பாட‌ல்க‌ள் மாயாவின் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்வின் த‌த்த‌ளிப்புக்க‌ளையும், வெளிப்ப‌டையான‌ அர‌சிய‌லையும் ம‌ற்றும் காத‌லையும் கூறுவ‌தால் இது ஒருவ‌கையான‌ முப்ப‌ரிணாம‌ம் என‌ நாம் எடுத்துக்கொள்ள‌லாம். மாயாவின் இர‌ண்டாவ‌து இசைத்தொகுப்பான‌ 'க‌லா'வில் காத‌ல் த‌வ‌ற‌விட‌ப்ப‌ட்டிருந்த‌து அல்ல‌து மென்மையாக‌ ஒலித்திருக்கிற‌து. ஆனால் இத்தொகுப்பில் நான்கிற்கு மேற்ப‌ட்ட‌ காத‌ற்பாட‌ல்க‌ள் இருக்கின்ற‌ன‌; சில‌ பொப் (electro pop) இசையில் பின்ன‌ணியில் க‌சிகின்ற‌ன‌. இர‌ண்டாவ‌து வ‌கையான‌  முப்பரிமாண‌மாக‌ கொள்ள‌க்கூடிய‌து இங்கே ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் வெவ்வேறான‌ வாத்திய‌ங்க‌ள்...பொப், எலெக்ரோ, ரக்கே, ராப் பல்வேறுவித‌ இசைக் க‌ல‌வைக‌ள் -சில‌வேளைக‌ளில் த‌னிப்பாட‌ல்க‌ளில் கூட‌-க‌ல‌க்க‌ப்ப‌ட்டு முப்ப‌ரிணாம‌மாக‌ விரிவ‌டைகின்ற‌ன. இவ்வாறான வித்தியாச‌மான‌ இசைக்கோர்வைக‌ளோடு பல்வேறுவித‌மான‌ புதிய‌ முய‌ற்சிக‌ளையும் மாயா பாட‌ல்க‌ளில் புகுத்தியிருக்கிறார். இத‌னால் ம‌ர‌புவ‌ழியான‌ அல்ல‌து த‌ட‌ம்ப‌திக்க‌ப்ப‌ட்ட‌ பாதையிலான‌ இசைத்துணுக்குக‌ளைக் (genre) கேட்க‌விரும்புப‌வ‌ர்க‌ளுக்கு இவ் இசைத்தொகுப்பு ஏமாற்ற‌த்தை ஏற்ப‌டுத்த‌லாம். கேட்கும்போது ச‌வால்க‌ளை ப‌ல்வேறு த‌ள‌ங்க‌ளில் ஏற்ப‌டுத்தும் 'மாயா' இசைத்தொகுப்புட‌ன் ஒருவ‌ரால் அவ்வ‌ள‌வு எளிதாக‌ நெருக்க‌ம் கொண்டுவிட‌முடியாது என்ப‌தையும் குறிப்பிடாக‌ வேண்டும்.

'மாயா' தொகுப்பில் 'XXXO' சிற‌ந்த‌ காத‌ல்பாட‌லென‌ ப‌ல‌ரால் அடையாள‌ங்காண‌ப்ப‌ட்ட‌போதும் எவ‌ராலும் க‌வ‌னிக்காத‌ அருமையான‌ இன்னொரு காத‌ற் பாட‌லொன்று இருக்கிற‌து. அது 'Space' என்கின்ற‌ பாட‌ல். 'புவியீர்ப்பு என‌து எதிரி/ அது என்னைக் காசைப் போல‌ இழுக்கிற‌து/ நான் வாழ்வின் ஓடிசியில் மித‌ந்துகொண்டிருக்கும்போது/விண்மீன்க‌ள் என்ன‌ருகில் மோதுகின்ற‌ன‌/ என‌து தொலைபேசி இணைப்புக்க‌ள் செய‌லிழந்துவிட்ட‌ன்/ உன்னால் இனி என்னை (தொலைபேசியில்) அழைக்க‌முடியாது' என‌ பிரிந்துபோகின்ற‌ காத‌லை அருமையாக‌ மாயா சொல்கின்றார். மேலும் மிக‌ மென்மையோடும் ஒருவித‌ கெஞ்ச‌லோடும் த‌தும்பும் மாயாவின் குர‌ல் ந‌ம்மை இன்னொரு வெளிக்கு அழைத்துச் செல்கிற‌து. 'XXXO','Space' பாட‌ல்க‌ளைப் போல‌, 'It takes a muscle to fall in love', 'Tell Me Why' போன்ற‌வையும் காத‌லின் கொண்டாட்ட‌த்தையும் பிரிவின் வேத‌னைக‌ளையும் காம‌த்தின் கிற‌க்க‌ங்க‌ளையும் பாடுகின்ற‌ன‌.

மாயா இசைத்தொகுப்பில் இருக்கும் 'Teqkilla', Stepping Up', 'Illy Girl' ஆட்ட‌ அர‌ங்குக‌ளில் ஆடுவ‌த‌ற்குரிய‌வை; கொண்டாட்ட‌த்தையும் குதூக‌ல‌த்தையும் ஒருங்கே வ‌ழிய‌விடுப‌வை. காதலும், கொண்டாட்ட‌மும் அநேக‌ இசைஞ‌ர்க‌ளிட‌ம் இருப்ப‌வை, இவ‌ற்றோடு அர‌சிய‌லையும் இணைக்கும்போதே மாயாவின் இசை பிற‌ரிட‌மிருந்து வேறுப‌ட‌க்கூடியதாக‌ மாறுகின்ற‌து. 'Born Free' பாட‌லின் கூற‌ப்ப‌ட்ட‌ உக்கிர‌ அர‌சிய‌லைப் போல‌ 'Love a Lot'ல் 'நான் என‌து க‌ன்ன‌த்தைக் காந்தியைப் போல‌ (அடிக்க‌)காட்ட‌ மாட்டேன்/ என்னோடு ச‌ண்டை பிடிப்ப‌வ‌ர்க‌ளோடு நான் ச‌ண்டையிடுவேன்' என‌ மாயா கூறுகின்றார். அதேபோல‌ இன்னொரு பாட‌லான‌ 'Believer'ல் 'நான் போராட்ட‌ங்க‌ளைத் தேர்ந்தெடுக்க‌வில்லை/ போராட்ட‌ங்க‌ள் என்னைத் தேர்ந்தெடுக்கின்ற‌ன‌' என்கின்றார்.அதேபோல‌ நாம் எவ்வாறு நுண்ணிய‌த‌ள‌த்தில் க‌ண்காணிப்ப‌டுகின்றோம் என்ப‌தை 'Message' பாட‌லில் 'இணைய‌ம் கூகிளோடு இணைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து/ கூகிள் அர‌சாங்க‌த்தோடு இணைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து' என்று பாடுகிறார். உண்மைதான் அமெரிக்காவில் ம‌ட்டுமில்லை, சீனாவில் கூட‌ அர‌சாங்க‌ம் த‌ன‌க்குரிய‌வ‌ர்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌ த‌க‌வ‌ல்க‌ளைச் சேக‌ரிக்க‌க் கேட்க‌  யாகூ போன்ற‌ பெருநிறுவ‌ன‌ங்க‌ள் வ‌ழ‌ங்கிய‌மை க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டியுள்ள‌து. 'Story to be Told' என்கின்ற‌ பாட‌லில் எதுவானாலும் ‍அது மிக‌ச் சாதார‌ண‌ க‌தையாக‌ இருந்தாலும் அனைவ‌ரும் த‌த்த‌ம‌து க‌தைக‌ளைச் சொல்வ‌தை அனும‌திக்கும் சுத‌ந்திர‌மான‌ வெளி வேண்டும் என்கிறார் மாயா. அதேபோன்று 'Meds and Feds' என்ற‌ பாட‌லில் 'யார் சொன்ன‌து எல்லாச் ச‌ட்ட‌ங்க‌ளும் எதோவொரு ச‌ட்ட‌த்தால் ஆக்க‌ப்ப‌ட்ட‌து என்று/ நாங்க‌ள் அவ‌ற்றை உடைப்போம், அவ‌ர்க‌ளின் க‌ண‌னிக‌ளையும்' என்கிறார்.

இன்று அநேக‌மான‌ க‌லைஞ‌ர்க‌ளும், இல‌க்கிய‌க்கார‌ர்க‌ளும், அறிவுஜீவிக‌ளும் வ‌ச‌தியான‌ இட‌த்திலிருந்துகொண்டு எவ‌ரையும் நோகாது முன‌கிய‌ குர‌லில் அதிகார‌ங்க‌ளுக்கும்/அர‌சுக‌ளுக்கும்/ஒடுக்குமுறைக‌ளுக்கும் எதிரான‌ குர‌லை வெளிப்ப‌டுத்துகிறார்க‌ள். இவ் மெல்லிய‌ குர‌லை ம‌றுத்து தெளிவான‌ உறுதியான‌ குர‌லில் மாயாவின் க‌ல‌கக் குர‌ல் ஒலிக்கிற‌து. அதிகார‌ப் பெரும‌ர‌த்தின் ஒரு சில‌ இலைக‌ளையாவ‌து மாயாவின் இசை அதிர‌ச் செய்வ‌தால்தான் இல‌ங்கை அர‌சும், அமெரிக்க‌ உள‌வுத்துறையும் மாயாவிற்கு எதிர்வினை செய்கின்ற‌ன‌. இப்ப‌டியே தொட‌ர்ந்திருந்தால் உன்னை ஒடுக்கி ஓரிட‌த்தில் சுருட்டி வைப்போமென‌ அவ்வ‌ப்போது இவ‌ர்க‌ள் மாயாவை அத‌ட்ட‌வும் செய்கின்ற‌ன‌ர். இத‌ற்கு மாயா ப‌ய‌ப்பிடுகின்ற‌வ‌ர் இல்லை. அத‌னால்தான் 'You get off easy. I speak direct 2 the CIA FBI China Sri Lankan Gov on Aim' என‌ அவ‌ர்க‌ளை நோக்கி மீண்டும் பேசுகிறார்.

இது ம‌ட்டுமில்லாது ப‌டிப்பு ப‌டிப்பென‌ 'வ‌ளாக‌ங்க‌ளுக்குச் செல்வ‌தே வாழ்வின் உன்ன‌த‌ம்' என்கின்ற‌ த‌மிழ்ச் ச‌மூக‌த்திற்கு ப‌டிப்பைப்போல‌வே இசைத்துறையில் நுழைந்தால் கூட‌ உய‌ர‌ங்க‌ளை அடையால‌மென‌ முன்னுதார‌ண‌மாக‌ இசையில் சாதிக்கும் மாயா ம‌திக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌வ‌ரும் கூட‌. இன்றைய‌ உல‌க‌ப் ப‌ர‌ப்பில் ஒவ்வொரு ச‌மூக‌த்திற்கும் த‌ம‌து சாத‌னையாள‌ர்க‌ளாக‌ப் ப‌ட்டிய‌லிட‌ நீண்ட‌தொரு வ‌ரிசையிருக்க‌ ந‌ம‌க்கு எவ‌ருமேயில்லையென்கின்ற‌ வ‌ருத்த‌த்தை துடைத்து மாயா என்ற‌ ஈழ‌த்த‌மிழ‌ப்பெய‌ர் உல‌க‌ அர‌ங்கில் ஒளிருகிற‌து. த‌ன‌க்கு குழ‌ந்தை பிற‌ந்த‌போது 'என் பிள்ளைக்கு இருக்கும் வ‌ச‌திக‌ளில் ஒன்றுகூட‌ இல்லாது ஈழ‌த்த‌மிழ்ப்பிள்ளைக‌ள் வ‌ன்னியில் இற‌க்கின்ற‌ன‌வே' என‌ உண்மையான‌ ம‌னிதாபிமான‌த்தோடு த‌ன் ம‌ன‌தைத் திற‌ந்த‌ மாயாவை நாம் கொண்டாடத்தான் வேண்டும், அவ‌ர‌து பாட‌ல்க‌ளைப் போன்று.

ந‌ன்றி: அம்ருதா (செப்ரெம்ப‌ர்-2010)

*பால‌ஸ்தீன‌ எதிர்ப்பிசையின் இல‌ய‌ங்க‌ள்

Sunday, November 15, 2009

பாலஸ்தீன எதிர்ப்பு இசை
-அஹமட் ஹபீப்

தமிழாக்கம்: டிசே தமிழன்

திரைப்பட இயக்குநரும், நெறியாளருமான, ஜாக்கி ரீம் சலூம், பாலஸ்தீனக் கலைகளை உலக அளவில் எடுத்துவருவதில் முக்கியமான ஒருவராக இருந்து வருகின்றார்.

பாலஸ்தீன மற்றும் சிரியாப் பெற்றோருக்கு, டியபோர்ன் மிக்சிக்கனில் பிறந்த சலூமின் கலைப்படைப்புக்களில் ஒரு புலம்பெயர்ந்த அரபு இளம்பெண்ணுக்குரிய பாதிப்பு இருக்கின்றது. சலூம் தனது பதின்ம இறுதிகளில், நியூயோர்க் பல்கலைக்கழகத்திலுள்ள கலைக் கல்லூரியில் படித்திருக்கிறார்.

2005ம் ஆண்டில் சண்டான்ஸ் திரைப்படவிழாவில், 'அரேபியர்களின் உலகம்' என்கின்ற ஒன்பது நிமிடப் படத்தை சலூம் தயாரித்து அளித்திருக்கிறார். இப்படம் எப்படி அரேபியர்கள் ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றார்கள் என்பதைக் காட்சிப்படுத்துகிறது. எனினும், சலூம் அவரது அண்மைய படமான 'slingshot hip hop' மூலமாக அதிக கவனத்தைப் பெற்றதுடன், இப்படம் ரொறொண்டோவில் நிகழ்ந்த பாலஸ்தீனியத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டிருக்கிறது.

இந்த 80 நிமிட ஆவணப்படத்தில், சலூம் எவ்வாறு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் பாலஸ்தீன ஹிப் ஹொப் கலைஞர்களின் வாழ்வும் கலையும் இருக்கிறது என்பதைக் கவனப்படுத்துகின்றார்.

இஸ்ரேலுக்குள் இருக்கின்ற DAM மற்றும் Lyd போன்ற குழுக்களும், காஸாவில் இருக்கின்ற P.R போன்ற குழுக்களும் தங்கள் இசையை ஒரு கலாசார எதிர்ப்பாய் அறிமுகப்படுத்துகிறார்கள்.

அல்ஜீசிராவிற்காய் இந்நேர்காணலைக் கண்டவர்: அஹமட் ஹபீப்

அஹமட் ஹபீப்: ஏன் நீங்கள் உங்கள் திரைப்படத்தை ஒருவிதமான எதிர்ப்பு எனக்கூறிக்கொள்கின்றீர்கள்?

சலூம்: அர‌புக்கார‌ர் ஒருவ‌ர், பொதுப்புத்தி ம‌ற்றும் அர‌சு/ வெளிநாட்டுக் கொள்கைக‌ளை எதிர்க்கும் ஒரு ப‌டைப்பைக் கொண்டு வ‌ருதலோ அல்ல‌து எங்க‌ள் க‌லாசார‌த்தையும் வ‌ர‌லாற்றையும் பிர‌திப‌லிக்கும் ப‌டைப்புக்க‌ளை உருவாக்குவது என்பதோ, ஒரு எதிர்ப்பினூடாக‌வே நிக‌ழ்த்த‌வேண்டியிருக்கிற‌து.

இந்த‌த் திரைப்ப‌ட‌த்தை தொட‌ர்ச்சியாக‌ உல‌கின் ப‌ல்வேறுபகுதிக‌ளிலுள்ள‌ திரைப்ப‌ட‌ விழாக்க‌ளில் திரையிடும்போது, ப‌ல‌ ம‌க்க‌ள் முத‌ற்த‌ட‌வையாக‌ பால‌ஸ்தீனர்க‌ளையும், பால‌ஸ்தீனம் பற்றிய படிமங்களையும் பார்க்கின்றார்க‌ள்.இப்ப‌ட‌த்தில் வ‌ருகின்ற‌ ராப் பாட‌க‌ர்க‌ள், பால‌ஸ்தீனர்க‌ளின் வாழ்க்கையில் புதிய‌ ய‌ன்ன‌ல் ஒன்றைத் திற‌ந்துவிடுகின்றார்க‌ள்.

இன்னொருவ‌கையில் இந்த‌ப்ப‌ட‌ம் க‌ற்பித்தலிற்கான ஓர் உப‌க‌ர‌ண‌மும் கூட‌. அமெரிக்காவிலுள்ள‌ ப‌ல‌ உய‌ர்க‌ல்லூரிக‌ள் மற்றும் க‌ல்லூரிக‌ளின் பாட‌விதான‌த்தில் இந்த‌ப்ப‌ட‌ம் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌து.

ப்ரோக்ளின் போன்ற‌ ப‌குதிக‌ளிலிருந்து வ‌ரும் மாண‌வ‌ர்க‌ள் ‍-முக்கிய‌மாய் க‌றுப்பின, இல‌த்தீனிய‌ இனத்தைச் சேர்ந்தவர்கள்- பால‌ஸ்தீன்ர்களின் போராட்ட‌த்தினால் க‌வ‌ர‌ப்ப‌ட்ட்டிருக்கின்றார்க‌ள். இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் பிர‌ச்சனைக‌ளுக்கும், ஆக்கிரமிக்கப்பட்ட பால‌ஸ்தீனத்திலும், இஸ்ரேலிலும் இருந்து பாலஸ்தீன ராப் பாடகர்கள் பாடும் த‌ங்க‌ளின் வாழ்வு ப‌ற்றிய‌ கதைகளுக்கும் இடையில் தொட‌ர்புக‌ளைக் க‌ண்டுபிடிக்கின்ற‌ன‌ர். அமெரிக்காவிலிருக்கும் சில மாண‌வ‌ர்க‌ள், பால‌ஸ்தீன ராப் பாட‌க‌ர்க‌ளைக் க‌வுர‌ப்ப‌டுத்தும் முக‌மாய் ஹிப் ஹொப் பாட‌ல்க‌ளை அர‌பு-அமெரிக்க‌ க‌ல‌ப்பு இசையில் எழுதியுமிருக்கின்றார்க‌ள்.

இந்த‌ப்ப‌ட‌ம் ஒருவ‌கையான‌ 'எதிர்ப்பு' என்று கூறுவ‌த‌ற்கு இவ்வாற‌ன‌வை ஒரு சில‌ உதார‌ண‌ங்க‌ளாகும்.

அஹமட் ஹபீப்: : எவ்வாறான‌ த‌டைக‌ளை இப்ப‌ட‌த்தை உருவாக்கும்போது ச‌ந்தித்திருந்திருந்தீர்க‌ள்?

சலூம்: நான் இத்திட்ட‌த்திற்காக‌ ப‌ண‌த்தைச் சேக‌ரிக்க‌த் தொட‌ங்கிய‌போது, இப்ப‌ட‌ம் பால‌ஸ்தீனர்க‌ளின் ஹிப் ஹொப் இய‌க்க‌ம் ப‌ற்றிய‌து என்ப‌தை எப்போதும் நினைவுப‌டுத்திக்கொண்டு இருக்க‌வேண்டியிருந்த‌து.

அநேக‌மான‌வ‌ர்க‌ள் இப்ப‌ட‌ம் இஸ்ரேலிய‌ர்க‌ளும், பால‌ஸ்தீனர்க‌ளும் எப்ப‌டி ஹிப் ஹொப்பால் இணைகின்றார்க‌ள் என்ப‌தாக‌ இருக்குமென‌ நினைத்தார்க‌ள். ஆனால் இது பால‌ஸ்தீனிய‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌து மட்டும் என்று அவ‌ர்க‌ள் உண‌ர்ந்த‌போது, அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் இந்தத் திட்டத்தில் ஈடுபாட்டைக் காட்ட‌வில்லை.

இறுதியில், என்னிட‌மிருந்த‌ ப‌ண‌ம் அனைத்தும் செல‌வழிந்து என‌து பெற்றோருட‌ன் திரும்பச்சென்று வாழ‌ வேண்டிய‌ நிலை ஏற்ப‌ட்ட‌து. அங்கே என‌து பெற்றோருக்குச் சொந்த‌மான‌ ஜ‌ஸ்கிறிம் க‌டையில் வேலை செய்திருக்கின்றேன். இவ்வாறாக‌ வேலை செய்துகொண்டு, இர‌வில் படத்தை எடிட் செய்வ‌துமாய் இருந்தேன். ஐஸ்கிறிம் பார்ல‌ரினால் வ‌ந்த‌ லாப‌ம் எல்லாவ‌ற்றையும் இந்தப்படத்திற்காய்ச் செல‌வ‌ழித்தேன்.

அத‌னால் தான், இப்ப‌ட‌ம் முடியும்போது, 'குளிர்ச்சியான ஜ‌ஸ்கிறிம் த‌யாரிப்புக்க‌ளுக்கு' என்று ச‌ம‌ர்ப்பித்திருப்ப‌தை நீங்க‌ள் காண்பீர்கள்.

இவையும், ச‌மூக‌த்தின‌தும் ம‌ற்ற‌ க‌லைஞ‌ர்க‌ளின் உத‌வி இல்லாதிருந்துவிட்டால் இப்ப‌ட‌த்திற்கு நிதியே வ‌ந்திருக்காது.

அத்தோடு இப்ப‌ட‌த்தை இஸ்ரேலில் எடுத்துக்கொண்டிருந்த‌போது, ப‌ல‌வித‌ த‌டைக‌ளைச் ச‌ந்தித்திருந்தேன். ஓர் அர‌பு அமெரிக்க‌ராய், ரெல் அவிவிலுள்ள‌ பென் குரிய‌ன் விமான‌ நிலைய‌த்திற்குப் போவ‌தென்ப‌தும் எப்போதும் மிக‌ப்பெரும் ச‌வாலான‌ அனுப‌வ‌மாக‌வும் அதைவிட‌ காஸாவிற்குள் நுழைவ‌து என்பது இன்னும் க‌டின‌மானதாக‌வும் இருந்திருக்கின்ற‌து.

நானொரு பால‌ஸ்தீனிய‌ப் பின்புல‌த்தில் இருப்ப‌தை அவ‌ர்க‌ள் அறியும்போது இது இன்னும் மோச்மாக இருந்தது. என்னை ஒவ்வொருமுறையும் விசாரணைக்காக தடுத்தி நிறுத்தி வைத்திருந்திருக்கின்றார்கள், சில‌ நேர‌ங்க‌ளில் ஏழு ம‌ணித்தியால‌ங்க‌ளுக்கு மேலாக‌வும்.

இன்ன‌மும் ம‌ன‌அழுத்த‌ம் இருப்ப‌து எங்கே என்றால், நான் (இஸ்ரேலின்) உள்ளே அனும‌திக்க‌ப்ப‌டுவேனா என்ப‌தை அறிய‌முடியாம‌ல் இருக்கும்போது; எனெனில் என‌க்குத் தெரிந்த ப‌ல‌ அர‌பு ந‌ண்ப‌ர்க‌ளுக்கு இஸ்ரேலின் உள்ளே பிர‌வேசிக்கப்ப‌டுவ‌து ம‌றுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஒருமுறை இஸ்ரேலிய‌ அதிகாரிக‌ள் என‌து க‌ம‌ராவைத் திருப்பித் த‌ருவ‌த‌ற்கு முன் உடைத்திருக்கின்றார்க‌ள். அத‌ன் பின், நான் டேப்புக்க‌ளையோ, உப‌க‌ர‌ண‌ங்க‌ளையோ ப‌ய‌ணிக்கும்போது கொண்டு செல்வ‌தில்லை.

நாங்க‌ள் இஸ்ரேலின் இவ்வாறான‌ செய்கைக‌ள் குறித்து எந்த‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளையும் ஒருபோதும் கேட்ட‌தில்லை. ராச்ச‌ல் கோரி போன்ற‌ அமெரிக்க‌ குடியுரிமையுள்ள‌வர்கள் இஸ்ரேலிய‌ புல்டோச‌ர்க‌ளால் கொல்ல‌ப்ப‌ட்ட‌போது கூட‌, இஸ்ரேலின் செயற்பாடுகளை -அவ‌ர்க‌ள் காஸாவிலுள்ள 'தீவிர‌வாதிகளிற்கு' எதிராக‌ச் ச‌ண்டைபிடிக்கின்றார்க‌ள் என்ற‌வ‌கையில் ஊட‌க‌ங்க‌ளினால் நியாய‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌.

அஹமட் ஹபீப்: : எவ்வாறான உற‌வுக‌ள் பால‌ஸ்தீன ம‌ற்றும் இஸ்ரேலிய‌ ராப் பாட‌க‌ர்க‌ளுக்கிடையில் இருக்கிற‌து?

சலூம்: நான் பால‌ஸ்தீனர்க‌ளும் இஸ்ரேலிய‌ர்க‌ளும் எப்ப‌டி ராப் பாட‌ல‌களினுடாக‌ ஒற்றுமையாக‌ சேர்ந்து வ‌ருகின்றார்க‌ள் என்ப‌தைப் ப‌ற்றிப் ப‌ட‌ம் எடுக்க‌வில்லை எனெனில் ய‌தார்த்த‌தில் அவ்வாறான‌ ஒரு நிலை ஹிப் ஹொப்பில் அங்கே இருக்க‌வேயில்லை.

அத்துட‌ன் குறிப்பிடும்ப‌டியான‌ ஒருங்கிணைவு பால‌ஸ்தீன ம‌ற்றும் இஸ்ரேல் ராப்ப‌ர்க‌ளிடையே இருக்க‌வில்லை. மிக‌வும் பிர‌ப‌ல்ய‌மான‌ இஸ்ரேலிய‌ ஹிப் ஹொப் க‌லைஞ‌ரே ஒரு வ‌ல‌து சாரி சியோனிஸ்டாக‌ இருப்ப‌தோடு, அர‌புக்க‌ளை கொல்லுமாறுதான் த‌ன‌து நிக‌ழ்வுக‌ளில் இர‌சிக‌ர்க‌ளுக்குப் பாடிக்கொண்டிருக்க்கின்றார்.

பால‌ஸ்தீன ராப்ப‌ர்க‌ளும் அவ‌ர்க‌ள‌து இர‌சிக‌ர்க‌ளும் ஒருபோதும் இஸ்ரேலிய‌ர்க‌ளையோ யூத‌ர்க‌ளையோ கொல்ல‌ச் சொல்லிப் பாடுவ‌தில்லை.

ஒரு சில‌ இஸ்ரேலிய‌ ராப்பர்க‌ள் மித‌வாதிக‌ளாக‌வும், பால‌ஸ்தீனர்க‌ளின் ஹிப் ஹொப்பிற்கு ஆத‌ர‌வாக‌வும் இருப்ப‌தோடு, டாம் ம‌ற்றும் அர‌பு‍-இஸ்ரேலிய‌ ராப்ப‌ர்க‌ளோடு சேர்ந்து வேலை செய்ப‌வ‌ர்க‌ளாக‌வும் இருக்கின்றார்க‌ள்.

என்கின்ற‌போதும், இவ்வாறான மிக அரிய ஒன்றிணைவுகள் எதுவும் அவ்வ‌ள‌வாய் மைய‌நீரோட்ட‌த்திலுள்ள‌ இஸ்ரேலிய‌ ஹிப் ஹொப் உல‌கில் பிர‌திப‌லிப்ப‌தில்லை.

அஹமட் ஹபீப்: : அர‌புப் பெண்க‌ள் க‌லைக‌ளில் அதிக‌ம் ஈடுப‌ட‌வேண்டும் என்று நீங்க‌ள் அழைப்பு விடுத்துள்ளீர்க‌ள்?

சலூம்: பெண்க‌ளின் குர‌ல்க‌ள் எல்லா இட‌ங்க‌ளில் கேட்க‌ப்ப‌ட‌வேண்டும் என்ப‌து எப்போதும் மிக‌ முக்கிய‌மான‌து.

இளைய‌ அர‌புக்க‌ளுக்கு அவ‌ர்க‌ள் ஆண்க‌ளாய் இருந்தாலென்ன‌ பெண்க‌ளாய் இருந்தாலென்ன‌ இவ்வாறான‌ க‌லை ச‌ம்ப‌ந்த‌மான‌ விடய‌ங்க‌ளில், தங்களுக்கு ஈடுபாடு இருக்கிறது என்பது ப‌ற்றித் த‌ம‌து குடும்ப‌ங்க‌ளுக்குக் கூறுவது என்ப‌து மிக‌வும் க‌டின‌மாயிருக்கிற‌து.

வீட்டிலிருக்க‌வும், ச‌மைக்க‌வும் சுத்த‌ம் செய்ய‌வும் வேண்டிய‌வ‌ர்க‌ள் பெண்க‌ள் என்கின்ற‌ க‌ருத்துக்க‌ளுக்கு எதிராக‌ இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளில் ஈடுப‌டுவ‌து என்ப‌து ய‌தார்த்த‌தில் பெண்க‌ளுக்கு இன்னும் மிக‌வும் க‌டின‌மாயிருகிற‌து. நான் என‌து பெற்றோருக்கு க‌லைப்ப‌டிப்பு ப‌டிக்க‌ப்போகின்றேன் என்று கூறிய‌போது, அவ‌ர்க‌ள் வேண்டாம், ஒரு பார்ம‌ஸிக்காரியாகவோ நூலகக்காரியாகவோ ஆகத்தான் ப‌டிக்க‌ச் சொன்னார்க‌ள்.

அவ‌ர்க‌ளைச் ச‌ம‌ர‌ச‌ம் செய்வ‌த‌ற்காய் கிராபிக் டிசைனை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அத‌னால் அவ‌ர்க‌ள் என்னை ஊக்குவித்தார்க‌ள். ஆனால் நான் தொடர்ச்சியாக ஓவிய‌ங்க‌ளை வ‌ரைந்து அது ஊட‌க‌ங்க‌ளின் க‌வ‌ன‌த்தையும் பெற்ற‌போது அவ‌ர்க‌ள் (பெற்றோர்) என்க்கு மிக‌ உத‌வியாக‌வும் பிற‌ அர‌புப் பெற்றோர்க‌ளுக்கும் அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளை ஓவிய‌ர்க‌ளாக‌, இய‌க்குந‌ன‌ர்க‌ளாக‌, பாட‌க‌ர்க‌ளாக‌ வ‌ர‌ ஊக்குவிக்க‌ச் சொல்லிக் கூறியிருந்தார்கள்.

பால‌ஸ்தீனக் க‌லைஞ‌ராக‌ இப்ப‌ட‌த்தில் வ‌ருகின்ற‌ அபீர், மேடைக‌ளில் ஏறிப்பாடும்போது த‌ன‌து உற‌வின‌ர்க‌ளின் ப‌ய‌முறுத்த‌ல‌க‌ளுக்கு எதிராக‌ப் போர‌ட‌வேண்டியிருந்த‌து. அதிக‌மான‌ வேளைக‌ளில் பாடுவ‌தை இர‌க‌சிய‌மாக‌ச் செய்ய‌வேண்டியிருந்த‌து.

இவை எல்லாவ‌ற்றுக்கும் அப்பால், அபீர் எது த‌ன‌க்க்கு அதிக‌ம் பிடித்த‌தாக‌ இருந்த‌தோ அதைத் தொட‌ர்ந்து செய்துகொண்டிருந்தார்.... அது தானே பாட‌ல்க‌ளை உருவாக்கிப் பாடுவது என்பதாக இருந்தது.

ஜோர்டான், லெப‌னான், பால‌ஸ்தீனம் ம‌ற்றும் அமெரிக்காவில் இப்ப‌ட‌ம் திரையிட‌ப்ப‌ட்ட‌திலிருந்து ப‌ல‌ இளம் பெண்க‌ள் அபிரூக்கு த‌ங்க‌ள் ஆதரவையும், அபீர் செய்யும் பணிக்கான கவுரவத்தையும் மின்ன‌ஞ்ச‌ல்க‌ள் மூல‌ம் கூறிக்கொண்டிருக்கின்றார்க‌ள். அவ‌ர்க‌ளில் அநேக‌ர் தாங்க‌ளும் அபீரைப் போல‌வே ப‌ல‌வேறு ச‌வால்க‌ளைச் ச‌ந்தித்துக்கொண்டிருப்ப‌தாக‌க் கூறியிருக்கின்றார்க‌ள். அபீருக்கு பால‌ஸ்தீன ராப்ப‌ர்க‌ளிட‌மிட‌மிருந்தும் அதிக‌ அதரவு கிடைத்திருக்கின்ற‌து. அவ‌ர்க‌ள் த‌ம‌து திட்ட‌ங்க‌ளிலிருந்து அபீரை அக‌ற்றுவ‌தை ம‌றுத்த‌துட‌ன், அர‌புச் ச‌மூக‌ங்க‌ள் பெண்க‌ளை ந‌ட‌த்தும் வித‌த்தையும் விம‌ர்சித்தும் இருக்கின்றார்க‌ள்.

அர‌பு உல‌கிலுள்ள‌வ‌ர்க‌ளுக்கு, அபீர், அரிய‌பெய‌ட் போன்ற‌ இள‌ம் பெண்க‌ளைக் காட்ட‌வேண்டும் என்ப‌திலும், ஹிப் ஹொப் உல‌க‌ம் என்ப‌து அமெரிக்கா மற்றும் அர‌பு நாடுக‌ளிலிருந்து வ‌ரும் இனிப்பு பூச‌ப்ப‌ட்ட‌ பொப் இசை போன்ற‌த‌ல்ல‌ என்ப‌தை உண‌ர்த்த‌வேண்டும் எனவும் நான் மிகவும் விரும்பினேன்.

அஹமட் ஹபீப்: : இந்தப் படத்தை தயாரித்துக்கொண்டிருந்தபோது, எவ்வகையான மறக்கமுடியாத் தருணங்களைச் சந்தித்திருந்தீர்கள்?

சலூம்: மேற்குக் கரையில் எப்போதும் எங்கள் உறவினர்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள் என்பதனால் எனக்கு ஆக்கிரமிப்பு வாழ்வு மிகவும் பழக்கப்பட்டதாக இருந்தது.

இஸ்ரேலியர்களுடான தொடர்பு என்பது எனக்கு காவலரண்களைத் தாண்டும்போதோ, விமான நிலையத்தால் வரும்போதோ தான் இருந்திருக்கின்றது. இல்லாதுவிட்டால் அவர்கள் டாங்கிகளில் வரும்போதோ அல்லது சினைப்பர் ர(ட)வர்களில் இருக்கும்போதுதான் அவர்களைச் சந்திக்கவேண்டியிருந்தது. எனினும் இந்தப்படம் எனக்கு இஸ்ரேலியர்களின் 1948ம் ஆண்டு ஆக்கிரமிப்பின்பின் பாலஸ்தீனர்கள் தங்கள் நிலங்களில் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்ப‌தை அறிமுகப்படுத்தியது.

இஸ்ரேலிய குடியுரிமை இருந்தும் கூட மக்கள் மிகவும் மோசமான ஒடுக்குதலுக்கும், புறக்கணிப்புக்கும் இஸ்ரேலில் உள்ளாகின்றார்கள் என்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

முக்கியமாக பலவேறு நிலைகளில் பாலஸ்தீனர்கள் என்ற ஒரு பொது அடையாளத்திற்குள் அடைக்கப்பட்ட்டு ஒருமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். சில இளையவர்களை நான் சந்தித்தபோது அவர்களுக்கு தமது பாலஸ்தீன அடையாளம் குறித்த குழப்பம் இருந்ததுடன், த்ங்களை எவ்வாறு அடையாளப்படுத்துவது என்பதும் தெரியாமல் இருந்தது.

இவையெல்லாம் சேர்ந்து ஆக்கிரமித்த மக்களைப் பல்வேறு வழிகளில் பிரிக்கின்றது. அத்துடன் மேற்குக் கரையிலும், இஸ்ரேலிலும், காஸாவிலும் வாழும் பாலஸ்தீனர்களுக்கு ஒருவரை ஒருவர் சென்று பார்ப்பது எனபது மிகவும் சிரமமாக இருக்கின்றது.

இந்தப்புள்ளியில்தான் ஹிப் ஹொப் இசை பாலஸ்தீன இளையவர்களை ஒன்றாகக் கொண்டுவருவதில் முக்கியம் பெறுகின்றது.

அஹமட் ஹபீப்: நாங்கள் உங்களின் அடுத்த திட்டமாய் எதை எதிர்ப்பார்க்கலாம்?

சலூம்: இந்தப் படத்திற்காய் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களைச் செலவழித்திருக்கின்றேன். Slingshot hip hop படம் வெளிவந்துவிட்டதால் அதன் வெற்றிக்காக உழைக்க விரும்புகின்றேன்.

இறுதியாய், நான் அரபு கலைஞர்களின் வீடியோ இசை ஆல்பங்களில் வேலை செய்ய விரும்புகின்றேன். என்னால், தரப்படும் மூன்று நிமிடங்களுக்குள் ஒரு கதையைப் பாடலில் சொல்லமுடியுமென நினைக்கின்றேன்.

இன்றையநாட்களில் பாடல்களில் ஆக்கிரமித்திருக்கும் மெழுகுவர்த்திகள், நீர் மற்றும் பெண்களைப் பயன்படுத்தும் சூத்திரங்கள் என்பவற்றுக்கு மாற்றாய் வித்தியாசமாய் செய்ய நான் விரும்புகின்றேன்.

நன்றி: அல் ஜீசிரா
(உன்னதம், Nov, 2009)

*த‌லைய‌ங்க‌த்தைப் பொருத்த‌மாய் த‌மிழாக்கித்த‌ந்த‌ வ‌ள‌ர்ம‌திக்கு ந‌ன்றி.

வைரமுத்து

Wednesday, January 10, 2007

வைரமுத்து
-நான் அறிந்தவைகளினூடாக-

வைரமுத்து, எனக்குப் பிடித்த பாடலாசிரியர்களில் ஒருவர். வைரமுத்து ஒரு நவீன கவிஞர் இல்லையென்பதை -எனது வாசிப்புக்களினூடாக-எந்தளவுக்கு மறுதலிக்கின்றேனோ அதற்கு மாறாய் வைரமுத்துவை ஒரு சிறந்த பாடலாசிரியராய் ஏற்றுக்கொள்வதில் எந்தத் தயக்கமுமில்லை. இன்றையபொழுதில் தாமரை, நா.முத்துக்குமாரின் பாடல்களில் பிடிப்பு வந்து வைரமுத்துவை கடந்துவந்துவிட்டாலும் வைரமுத்துவின் பாடல்வரிகளை எப்போது கேட்டாலும் மனதை நிறைக்கத்தான் செய்கின்றது.

கவிதைகள் என்று வாசிக்கத் தொடங்கிய பதின்ம வயதுகளிலேயே வைரமுத்துவின் கவிதைகள் கவர்ந்ததில்லை. மு.மேத்தா தான் எனக்குப் பிடித்தமானவராக அன்றைய காலகட்டத்தில் இருந்தார். வானம்பாடி வகைக் கவிதைகளை பல வருடங்களுக்கு முன்னரே கடந்துவந்துவிட்டாலும் -அநேக சிற்றிதழ்க்காரர்கள் போல- என்னால் வான்மபாடிக் கவிதைகளை முற்றாக நிராகரிக்க முடியாது. கவிதைகளை வாசிக்கவும் எழுதவும் விரும்பும் ஆரம்பநிலையில் இருக்கும் வாசகர்களில் அநேகர் வானம்பாடி வகைக் கவிதைகளின் சாயலில்தான் எழுதத் தொடங்குவார்கள் என்றே நம்புகின்றேன். அதேபோன்று, அவ்வாறு கவிதை எழுத ஆரம்பிப்பவர்களின் படைப்பின் வளர்ச்சி என்பது எப்படி வானம்பாடி வகைக் கவிதைகளை தாண்டி/நிராகரித்துச் செல்லுகின்றார்கள் என்பதைப் பொறுத்தும் தங்கியுள்ளது.

வைரமுத்துவும், ரகுமானும் கூட்டணி அமைத்து -சரணமும் பல்லவிகளும்- எழுதி இசைத்த பாடல்கள் என்னைப் பொறுத்தவரை அருமையான காலங்கள். வைரமுத்துவின் திரையிசைப் பாடல்களைப் பற்றி விதந்தும் விமர்சித்தும் விரிவாகப் பேசமுடியும். அதற்கான் நேரம் இப்போதில்லை என்பதால் அதைக் கடந்துவிடுகின்றேன். அருமையான பாடல்வரிகள் வைரமுத்துவின் பல பாடல்களில் இருக்கும் என்ப்தோடு இயன்றளவு பாடல்களில் நவீன இரசிகர்களுக்குப் பரிட்சயமில்லாப் பழந்தமிழ்ப்பாடல்களையும் நேடியாகவும், சிலவேளைகளில் அவற்றின் விளக்கவுரையை மையமாகக் கொண்டு மறைமுகமாகவும் வைரமுத்து நிறையப் பாடல்களை எழுதியுள்ளார். உதாரணமாய் 'தீண்டாய் தீண்டாய்' (படம் என் சுவாசக்காற்றே) பாடலில் intro ஒரு சங்கப்பாடலே... அதில் வரும் 'அல்குல்' என்ற வார்த்தையை இன்றைய தமிழுக்கு மாற்றினால் சிநேகன் போன்ற பாடலாசிரியர்கள் சங்கப்புலவர்களையும் மவுண்ட்ரோட்டில் உயிரோடு கொளுத்தவேண்டும் என்றும் அறிக்கை விட்டிருப்பார்களோ தெரியவில்லை.

அதேபோன்று வேறு நாட்டுமொழிப்படைப்புக்களையும் - அசலை தனது அசல் இல்லையென்று கூறாமல் எடுத்தாள்வதில் சற்று கள்ளமிருந்தாலும்- எளிய முறையில் கொண்டுவருவதற்காய் வைரமுத்துவை மன்னித்துவிடலாம். 'இல்லையென்று சொல்ல ஒரு கணம் போதும்; இல்லையென்ற சொல்லைத் தாங்குவதென்றால் எனக்கு இன்னுமொரு ஜெனமம் வேண்டும்' என்ற பாடல்வரிகளில் பாப்லோ நெருடாவின் ஒரு கவிதையின் சாயலும், 'மழை கவிதை கொண்டு வருது... கறுப்புக் கொடிகள் காட்டி யாரும் கதவடைக்க வேண்டாம்' என்பது ஒரு அரேபிய பாடலின் சாயலில் இருப்பதையும் பாடலின் அர்த்தங்களுக்காய் -வைரமுத்துவின் கள்ளங்களை- மறந்துவிடலாம் (இன்று பெண்களை வர்ணிப்பதற்காய் பாவிக்கப்படும் வார்த்தைகளை எல்லாம் திருவள்ளுவரின் காமத்துப்பாலில் இருந்து எடுத்து அனைவருமே கள்ளம் செய்துகொண்டிருக்கையில் வைரமுத்துவை மட்டும் இப்படிக்கூறுவது சரியா என்றும் மனச்சாட்சி கேட்கத்தான் செய்கின்றது). வைரமுத்து கவிதைகள் என்று எழுதியதை வாசிக்கும்போது எதுவுமேயில்லாதமாதிரி இருப்பவை கூட பாடலாக்கப்படும்போது அழகாவிடுகின்றன்...'என்னவளே அடி என்னவளே'....'நீ காற்று நான் மரம்'.. என்று பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

வைரமுத்துவின் வீழ்ச்சி என்பது ரகுமானின் பிரிவோடு ஆரம்பித்தது என்றுதான் நினைக்கின்றேன் (ரகுமானின் இசை தொய்யத்தொடங்கியதும் அந்தப்புள்ளியே). பலர் ரகுமானின் இசையின் வீழ்ச்சிக்கு அவர் ஒரு international figure ஆனது என்றே கூறுகின்றார்கள். ஆனால் ஒரு தீவிர ரகுமான் இரசிகராய் இருந்த எனக்கு அவரது -தமிழ்த்திரைப்பட இசையின் வீழ்ச்சி-வைரமுத்துவின் பிரிவோடுதான் ஆரம்பிக்கின்றதெனவே எடுத்துக்கொள்ள முடிகின்றது. எப்போதும் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைப்பாளருக்கும் பாடலாசிரியருக்கும் இடையில் ஒரு கெமிஸ்ட்ரி இருக்கும் (யுவன் சங்கர் ராஜாவுடன் நா.முத்துக்குமாருக்கும், Harris ஜெயராஜிற்கு தாமரையும்) . தெ(ன்)னாலியோடு ரகுமானின் இசையைத் -தொடர்ந்து கேட்பவர்களுக்கு- நான் குறிப்பிடும் வீழ்ச்சியின் புள்ளி புரியக்கூடும்.

வைரமுத்து கனடாவுக்கு முதன்முறையாக வந்திருந்தபோது சந்திருக்கின்றேன். அப்போது உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அவரின் வருகையின்போது 'கவிதை'யென்று எதையோ எழுதி இறுதியில் -வழமைபோல நக்கீரர் பாணியில் - அவரைக் கொஞ்சம் சினம் செய்ய வைக்கின்றதாய் கேள்வியொன்றை விட்டிருந்தாயும் நினைவு. அந்தக் காலகட்டத்தில் எனது தந்தையார் இங்கு வெளிவந்துகொண்டிருந்த ஒரு பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். என்னையும் வைரமுத்துவை சந்திக்கக் கூட்டிச் சென்றிருந்தார். வைரமுத்துவின் ஆசி பெற்றால், உடனேயே 'உலகப் புகழ்' பெற்றிடுவேன் என்ற நினைப்புடன் 'கவிதைகள்' சிலவற்றை கூடவே எடுத்துக்கொண்டு நானும் சென்றிருந்தேன். அப்போதுதான் எனக்கு இணையம் அறிமுகமாகி -ஒரு பெண்ணல்ல, பல பெண்களோடு- 'கடலை' போட்டுக்கொண்டிருந்தேன். இணையத்தில் Hi சொல்கின்ற எல்லாப் பெண்களுமே என் 'காதலிகள்' என்ற கனவில் நிறைய இணையஞ்சம்பந்தமான காதற்கவிதைகள் எழுதி என்னாளான 'சமூகசேவையை' கனடாத்தமிழ்ச் சமூகத்திற்கு இரவுபகலின்றி வழங்கியும்கொண்டிருந்தேன். கவிதைகளை பார்த்துவிட்டு 'உங்கள் மகன் இன்(ர)டநெட்டில் காதல் செய்யும் அளவுக்குப் போய்விட்டான்' என்று எனது தந்தையாரிடம் வைரமுத்து திரியைப் பற்றவைத்ததுமாய் நினைவு. வைரமுத்து பழகுவதற்கு எளிமையானவர் என்றே நினைக்கின்றேன். தமிழகம் சென்றபின்னும் எனது தந்தையாருக்கும் -எனது தந்தையார் வைரமுத்துவுக்கு அறிமுகப்படுத்திய- வைரமுத்துவின் தீவிர இரசிகரான ஒரு அக்காவிற்கும் கடிதங்கள் அனுப்பிக்கொண்டிருந்ததும் ஞாபகத்திலுண்டு.

எனினும், அந்த நேரத்தில்தான் வைரமுத்து 'ஈழத்தமிழர் விரும்பினால் அவர்களுக்கான் தேசியகீதத்தை எழுதிக்கொடுப்பேன்'..., 'விரைவில் வன்னி சென்று ஈழத்தமிழர் காவியத்தை எழுதுவேன்' போன்ற 'பிரபல்யம்' வாய்ந்த பேச்சுக்களையும் பேசியவர். வினை விதைத்தால் வினை அறுக்க வேண்டியிருக்கும் என்பதற்கிணங்க ஒரு கவிதா நிகழ்வில் சக்கரவர்த்தியின் விமர்சனத்தில் மோசமாய் அடிவாங்கியவர் ('தண்ணீர் தேசத்தைப் பாடிவிட்டு எங்கள் கண்ணீர் தேசத்தை கை கழுவிவிட்டவரே...' இன்னும் நீளும்). இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறவிருந்த கவிதா நிகழ்வு -இதன்பின்- அடுத்த நாள் தடை செய்யப்பட்டது. அதனால் -நான் சென்ற அடுத்த நாள்- வைரமுத்துவின் பேச்சை மட்டுமே கேட்க முடிந்தது. எனினும் அவரது பேச்சுத் திறன் மிகவும் இரசிக்கத்தக்கதாய் இருந்தது. பேசும் கணங்கள் முழுதும் கூட்டதை அப்படியே அசையாமல் கட்டிவைப்பது என்ற வித்தையை -மேடைகளில் பேசிப் பேசி கொல்லும் பல ஈழத் தமிழர்கள்- வைரமுத்து போன்ற தமிழகத்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் (அப்படி நான் இரசித்த் இன்னொருவர் பெரியார்தாசன்).

இன்றைய காலத்தில் வைரமுத்து விகடனில் 'தேவர்' இனப்பெருமைகளை விதந்து எழுதும் 'காவியங்களில்' எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. அவற்றை வைரமுத்து எழுதக்கூடாது என்று நிராகரிக்கும் எண்ணமில்லை. எத்தனையோ பிராமணிய படைப்புக்களை காலங்காலமாய் அவர்களின் மொழியிலேயே ஏற்றுக்கொண்டு வாசித்திருக்கின்றோமல்லவா? சிறுவயதில் தமிழகத்தில் இருக்கும் அனைவரும் பிராமணியப்பாசை மட்டுமே பேசுவார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். எனெனில் எனக்குக் கிடைத்த தமிழகப் படைப்புக்கள் பெரும்பானமையான்வை அந்தமொழியையும் அவர்களின் பெருமைகளையும் மட்டுமே பேசிக்கொண்டிருந்தன.

வைரமுத்து..., கண்ணதாசன், எம்.எஸ்.வி போன்றவர்கள் 'கூத்தடித்தது' மாதிரி பெண்களைச் சீரழிக்காது -இயன்றளவு பெண்களை அவர் மதித்துக்கொண்டிருப்பது- எனக்குப் பிடிததமானது. மேலும் அவரது சுயசரிதத்தில் (பெயர் மறந்துவிட்டது, 'வானம் எனக்கொரு போதிமரமா?' 'இதுவரை நான்') பச்சையப்ப்பா கல்லூரியில் மனிதர்களை விலத்தி தனிமையுடனும், அங்கிருந்த மரங்களோடும் உரையாடிக்கொண்டிருந்த வைரமுத்து என்ற இளைஞன் -எனக்குள்ளும் எனது பதின்மங்களில் இருந்ததால்- வைரமுத்துவோடு சிநேகிக்க முடிகின்றதோ தெரியவில்லை.

(குழலி, நீங்கள் விரும்பியமாதிரி நீண்டதாய் எழுதாமல் இயன்றளவு சுருக்கமாய் எழுத இதில் முயற்சித்திருக்கின்றேன் :-))

ஒற்றைத்தாளில் படியும் நினைவுகள்....!

Monday, September 11, 2006

-யாருக்கு எழுதுகின்றேன் என்று தெரியாமல் யாருக்காகவோ எழுதிய குறிப்புக்கள்-

சென்ற சனிக்கிழமை Black Eyed Peasன் concertற்கு போயிருந்தேன். ஷக்கிராவின் (Shakira) இசை நிகழ்வுக்குப் போகவேண்டும் என்று நுழைவுச்சீட்டுக்கள் தேடிக்கொண்டிருந்தபோது, Black Eyed Peasம் நகரிற்கு வருகின்றார்கள் என்று அறிந்து சந்தோசத்தில் இந்நிகழ்வுக்கு நுழைவுச்சீட்டுக்கள் எடுத்திருந்தேன். 15,000 ற்கு மேற்பட்ட இரசிகர்கள் என்றால் கொண்ட்டாட்டத்திற்கு சொல்லவும் வேண்டுமா? என்ன சற்றுக் குளிராய் இருந்தது. சரி கதகதப்பாயிருக்கட்டும் என்று நண்பனும் நானும் பியரும் கூலரும் வாங்கிக்கொண்டு வந்தால் ரிகன்னா (Rihanna) சிறப்பு விருந்தாளியாக வந்து கலக்கத் தொடங்கியிருந்தார். DJ வாரும் வாரும்; வந்து பாட்டைத் திருப்பப் போடும், நான் ஆடப்போகின்றேன் என்று அவர் எனக்கு தனிப்பட்ட அழைப்புக் கொடுக்க, மேடையில் அசல் ஆட, கீழே நூற்றுக்கணக்கான ரொரண்டோ ரிகன்னாக்கள் ஆட, யாரை எந்த ஒழுங்கில் பார்த்து இரசிப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கவே அந்த நிகழ்வு முடிந்துவிட்டது. ஏன் தான் இப்படியான அரிய தருணங்கள் சடுதியாய் முடிந்துவிடுகின்றன என்பது ஒருபோதும் விளங்குவதில்லை.

Rihanna-32
Rihanna

Black Eyed Peas பற்றி நேரங் கிடைத்தால் விரிவாக எழுதவேண்டும். குளிர் கூட கூட நண்பன் சொன்னான், 'இவங்கள் நுழைவுச்சீட்டோடு மூன்று பியர்கள் இலவசமாய் வழங்கியிருக்கவேண்டும்' என்று. நானும் 'இரசிகர்களின் மனமறிந்த பொன்மனச்செம்மல் நீதான்டா' என்றொரு பாராட்டுப்பத்திரம் அவனுக்கு வழங்கிவிட்டு, 'பசிக்கிறது வா Pizza Slice வாங்கிச் சாப்பிடுவம்' என்று அழைத்துக் கொண்டு சென்றுவிட்டேன். பசி தாஙகமுடியாமல் அடுத்த ஒரு மணித்தியாலத்தில் இரண்டாவது முறையும் Pizzaவிற்கு போக, ஆயிரக்கணக்கான சனத்துக்கு இடையிலும் எங்களை அடையாளங்கண்டுகொண்ட அந்த Pizza விற்கும் பெண், Oh you guys again?ஆ என்றார். நாங்களும் ஓமோம் இசைத் தாகத்தைவிட வயிற்றுப்பசிதான் எங்களுக்கு அதிகமாயிருக்கிறது என்று அவரைச் சமாளித்துவிட்டு வர, Will I Am, 'Toronto Girls are so hot' என்று கூற நாங்களும் Pizza உண்ட தென்பில் ஓமோம் என்று உரத்தகுரலில் வழிமொழிந்தோம். பிறகு முடிகின்ற நேரத்தில் Black Eyed Peas, க... க... கனடா... ரொ... ரொ... ரொரண்டோ என்று -கிட்டத்தட்ட தமிழ் பாடல் beatல்- தொடங்கி Jump Jump Toronto Jump Jump என்று அவர்கள் உச்சநிலைக்குப் போக, நாங்கள் எல்லோரும் Fly தான். நல்லவேளை அன்றைக்கு வானம் சற்று உயரத்தில் இருந்தது, இல்லாவிட்டால் எங்களின் தலைகள் வானத்தில் முட்டி எத்தனைபேருக்கு காயம் வந்திருக்குமோ தெரியாது.

blackeyed
Black Eyed Peas
...................................

'இருக்கும்
பிரியமான மனிதர்களையும்
இழப்பதற்கு இன்னொரு பெயர்தான்
இலக்கியம்'

என்று ஒரு சோர்ந்துபோன நாளில் பதிந்து வைத்ததைப்போல, பிரியப்பட்டு வாங்கும்/சேகரிக்கும் பொருட்களை உடைக்கவும் தொலைக்கவும் செய்யும் பொழுதுகளிலும் சோகம் புகைமூட்டமாய் கவியச் செய்கிறது. அதிலும் பிரியமான மனிதர்கள் வாங்கித்தந்த பொருட்களை தொலைத்துக் கொண்டிருக்கையில், அந்த மனிதர்களின் அன்பையையும், நம் மீது அவர்கள் வைக்கும் நம்பிக்கையையும் இழப்பதுபோன்ற உணர்வுதான் தலைதூக்குகின்றன. என்றாலும் எவ்வளவுதான் அக்கறையாயிருந்தாலும் இழப்பதும் உடைப்பதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

...................................

இரண்டு வாரங்களுக்கு முன் என்று நினைக்கின்றேன். ஆங்கிலப்படம் பார்ககலாம் என்று நானும், நண்பனும் தீர்மானித்து எந்த புதுப்படம் பார்ப்பது என்று அலசிக்கொண்டிருந்தோம். World Trade Center பார்ப்பமா என்று நான் கேட்க, அமெரிக்கத் தேசியத்தையும், 'அமெரிக்காக் கனவு'களையும் பார்ப்பதை விட, தூங்கிவிடுவது நிம்மதி தரும் ஒருவிடயம் என்றான் நண்பன். அதுவும் சரிதான் என்று நானும் வழிமொழிந்து, அன்றையபொழுதில் எந்தப்படத்துக்கும் போகாமல், லெபனானில் நடந்த சம்பவத்துக்கு கனடா எடுத்த நிலைப்பாட்டுக்காய் Prime Minister Stephen Harperஐ திட்டிக்கொண்டிருந்தோம் இந்த லெபனான் பிரச்சினையின் நீட்சியில் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துக்கொண்டிருந்த ப்ளொக் க்யூபெக்காவும் (Bloc Quebec), 'Stephen Harperடனான் தேனிலவு முடிந்துவிட்டது' என்று அறிவித்திருந்தது. மற்றொரு கட்சியான என்டிபியின் தலைவர் Jack Layton, 'Prime Minister Stephen Harper, ஜோர்ஜ் புஷ்சின் cheer leader' என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றார். இப்போது ஆப்கானிஸ்தானில் அந்தமாதிரி அல்லவா கனடிய இராணுவம் அடிவாங்குகின்றது. இந்த அரசியல் கோமாளித்தனத்தில் பரிதாபமாய் காவுகொள்ளப்படும் இராணுவத்தினரைப் பற்றி ஆளும்வர்க்கத்திற்கு ஏது கவலை?

ம்...அடிக்கடி இப்படித்தான் எதற்கோ செல்வதற்கு/செய்வதற்கு என்று தீர்மானித்து எதையெதையோ நாங்கள் செய்துகொண்டிருப்போம். சாதாரணமாகவே ஒரு விசர் நிலையில் திரியும் எஙகளைப் போன்றவர்கள் விசர்த்தனமாய் அமெரிக்கா புகழ் பாடும் திரைப்படங்களைப் பார்த்து இன்னும் விசர்நிலையின் உச்ச நிலையை அடைந்துவிடுவோம் என்ற பயத்தால் அனேகமாய் தியேட்டருக்குச் சென்று பார்க்கின்ற படங்களாய் Superman Returns, Pirates of Caribbean போன்ற வகைகளய்த்தான் இருக்கும். இவ்வாறான படங்கள் பிடிக்கவில்லையானால் கூட, தியேட்டரோடு வசைகளை எறிந்துவிட்டு வெளியில் வரும்போது இயல்புக்கு வந்துவிடலாம்.

Ladder_49_poster

தற்செயலாய், Ladder 49 என்ற படத்தை பார்க்கும்போது அது மிகவும் பிடித்துவிட்டது. இத்திரைப்படத்தில் Joaquin Phoenix, John Travolt போன்ற தேர்ச்சி பெற்ற நடிகர்கள் நடித்திருக்கின்றார்கள் என்பதால் அல்ல, எளிமையான கதை சொல்லல் முறையில் மனதில் சலனங்களை உருவாக்கியிருந்தது. தாதித் தொழிலை(Nurses), sex symbol ஒன்றாய் ஆக்குவதைப் போலதான் அனேகமாய் Firefighters ஐயும் ஒரு symbol ஆக்குவார்கள். ஆனால் இந்தப்படம் அவர்களின் இன்னொருபக்கத்தை -வீரதீர பராக்கிரமச் செயல்கள் அன்றியும், 'ஆண்மையின் அழகு' வழிவதாகவும் காட்டாது- ஒரு சாதாரண தீயணைப்பாளனின் பார்வையில், அவனுக்குப் பின்னுள்ள குடும்பம், கடமை, ஆபத்துக்கள் என்று நகர்கின்றது.

நீ வாங்கித் தந்த ஈரானிய படங்களும், அகிரா குரோசோவின் Dreams ம் இருக்கின்றன. மனம் அமைதி கொள்கின்ற நிசப்தமான பின்னிரவுகளில் அவற்றைப் பார்க்கத் தொடங்கவேண்டும். மேலும் இங்கே இப்போது சீனா கலாச்சாரத்தை மையப்படுத்தி Lantern Festival நடக்கின்றது. கரீபனா பார்க்கப்போனபோது இந்த விழாவுக்காய் அலங்கரிக்கத் தொடங்கியிருந்த மிகப்பிரமாணடமான புத்தர் சிலைகளும், ட்ராகன்கள் போல வடிவமைக்கப்பட்ட படகுகளும் மனதை மிகவும் ஈர்த்துக்கொண்டிருந்தன.
உன்னை அதிகம் வசீகரிப்பவை சீனக் கலாச்சாரமும், ஆபிரிக்காக் கலாச்சாரமும் தானே. நீயும் இந்நகரில் இருந்திருந்தால் அந்த நிகழ்வுக்கு சேர்ந்து போயிருக்கலாம்.

...................................

திருமணங்கள் மட்டுமில்லை ஏனைய அலுப்பூட்டும் விழாக்களுக்கும் அவ்வளவாய் போவதில்லை. ஈழத்தில் இருந்தபோது பன்னிரண்டோ பதின்மூன்றோ வயதிலேயே சாமர்த்திய விழாக்களுக்குப் போவதை நிறுத்தியாயிற்று. சிலவேளைகளில் மச்சாள்மார், நெருங்கிய உறவுகளின் சாமத்திய விழாக்களுக்கு வாவென்று அம்மா கெஞ்சுகின்றபோதும் போவதில்லை. பிறகு பெற்றோரும் விழாக்கள் நடக்கும்போது தங்களை காரில் ஏற்றி இறக்க மட்டும் என்னை உதவிக்கு கூப்பிடுவதோடு அமைதியாகிவிட்டார்கள். நண்பர்களின் திருமணங்கள் என்கின்றபோது தவிர்க்கமுடியாது தலைகாட்ட வேண்டியிருக்கிறது. அண்மையில் வளாகத்தில் படித்த நண்பனின் திருமணத்துக்கு போவது என்று தயார்படுத்திவிட்டு கொஞ்சம் உறங்கி எழுந்தால், என்னைத் தன்னோடு கூட்டிப்போவதாய் உறுதியளித்த நண்பன் மறந்துபோய் விழாவுக்குப்போய்விட -அவனது செல்லிடப்பேசியும் உயிர்ப்பில்லாது உறங்கிவிட- என்ன முகவரி என்றும் ஒழுங்காய்க்கேட்காமல் விட்டிட்டேனே என்று கொஞ்சநேரம் குழம்பிவிட்டு...... பிறகு என்ன? வழமைபோல, எனக்கு எனது தூக்கத்தைத் நிம்மதியாய்த் தொடரச்செய்யும் வரம் கிடைத்துவிட்டது என்று அகமகிழ்ந்தேன். நல்லவேளை திருமணம் நடந்த நண்பனும் எங்களின் அலைவரிசையில் இருப்பதால் 'நிலைமையை' விளக்கியதும் பின்னர் விளங்கிக்கொண்டான்.

என்றாலும் என்ன? என்னைப் பழிவாங்குவதற்கென்று ஒரு திருமண வைபவம் காத்துக்கொண்டிருந்திருக்கின்றது என்பது எனக்கு முன்கூட்டியே தெரியாமற்போய்விட்டது. இந்தப் பெண்ணையும் அவரின் குடும்பத்தையும் நெடுங்காலமாய் தெரியும். எங்கள் குடும்பம் எல்லோருக்கும் அவர்கள் மிகவும் பரீட்சயமானவர்கள். வளாகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, என் பெற்றோர் -அக்காவின் திருமணத்துகாய்- கொழும்பு சென்றபோது, தங்கள் வீட்டுக்கு எந்த நேரமும் வந்து சாப்பிடலாம் என்று அன்போடு அழைப்பு விடுததவர்கள். அத்தோடு தமிழ் ஆக்கள் குறைந்த அந்நகரில், தனிமை ததும்பி வழிந்த நாட்களில், அவர்கள் நட்பாய் இருந்தது மிகவும் இதமாய் இருந்த பொழுதுகள் அவை. 'எழுதிக் கிழிப்பதில்' அலுப்பு வந்து நிறுத்தியிருந்த காலகட்டத்தில, நீ எழுதத்தான் வேண்டும் என்று நாலைந்து பக்கத்தில் நம்பிக்கை தரும் வார்த்தைகளில் அவர்களில் ஒருவர் எழுதித்தந்தது இப்போதும் என்னிடம் பத்திரமாய் இருக்கிறது. அந்தப்பெண்களில் ஒருவருக்கு திருமணம் சில வருடங்களுக்கு முன் நடந்தபோது -தேர்வுகள் இருக்கிறது என்று - சும்மா தட்டிக்கழித்துவிட அவர் என்னோடு பேசுவதை பின்னாளில் நிறுத்திவிட, அந்தப்பயத்தில் அவர்களின் சகோதரியின் திருமணத்துக்காவது தலைகாட்டவேண்டும் என்று போயிருந்தேன்.

எண்ணூறு பேர் அமரக்கூடிய பெரிய மண்டப்பத்தில்தான் நிகழ்வு நடந்தது. நான் போவதற்கு முன்னால்- மாப்பிள்ளையும் பெண்ணும்- குதிரை வண்டிலில்- வந்திறங்கினார்கள் என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள். அப்பாடா நான் அந்த இம்சையிலிருந்து தப்பிவிட்டேன் என்று நிம்மதிப் பெருமூச்சுவிட, சட்டென்று இரண்டு பெரிய திரைகளில் 'சுட்டும் விழிச்சுடர்' ஒலிக்க, அட நம்ம அசினை பார்க்கலாம் என்று விழிகளை உயர்த்தினால், அங்கே இந்த மாப்பிள்ளையும் பெண்ணும், அசினும் சூர்யாவுமாக மாறி ஏதோ ஒரு பார்க்கில் காதல் டூயட் ஆடத் தொடங்கிவிட்டார்கள். அஸினின் தீவிர இரசிகனான என்னால் இதை எல்லாம் சகித்துக்கொள்ளமுடியுமா என்ன? இதுக்கு மேல் இருக்கமுடியாது என்றுதான் வெளியே வந்து உன்னோடு தொலைபேசுகின்றேன்.

-----------------------------------------

சென்ற வாரவிறுதியில் ஒரு நண்பன் கார் விபத்தில் சிக்கி தலையில் பலமாய் அடிப்பட்டு இன்னும் நினைவு திரும்பாமல் வைத்தியசாலையில் இருக்கின்றான். அவன் விரைவில் நலம்பெற வேண்டும் என்று மனம் கதறுகிறது. என் சிறுவயது நண்பன். ஊரில் பக்கத்து வீட்டுக்காரன். ஒரே வகுப்பில்தான் நாம் இரண்டுபேரும் படித்திருந்தோம். அவனோடு தான் முதன் முதலில் சைக்கிள் ஓடப்பழகியதும், கிரிக்கெட் விளையாடுவதற்கு என ஊர் ஊராய் அலைந்ததும் என்று பலப்பல நினைவுகள் மனதில் மிதக்கின்றன. புலம்பெயர்ந்த பின் பழைய நட்பின் நெருக்கம் குறைந்துவிட்டாலும், விபத்தில் சிக்கிவிட்டான் என்றறிந்தவுடன் அவன் இயல்புநிலைக்கு வரவேண்டும் என்று மனம் மிகவும் அவாவுகிறது. இந்த நினைவின் கனத்தோடு வாரப் பத்திரிகையை புரட்டினால், சென்றவாரம் இங்கு பதினாறு வயதும், இருபத்திரண்டும் வயதுமான இரண்டு தமிழ்ப்பெண்கள் விபத்தில் சிக்கி அகால மரணமடைந்திருக்கின்றார்களாம். போரை விட்டு எவ்வளவு தூரம் விலத்தி வந்தாலும் அநியாயச் சாவுகள் எம்மை விட்டு என்றும் அகலாது போலும்.
.................................

இண்டியா அரி - சிறு குறிப்புக்கள்

Friday, September 01, 2006

டென்வர், கொலராடோவில் 1975ல் பிறந்த இண்டியா அரி (India Arie), பாடுவதில் மட்டுமில்லாது அவரது வீரியமிக்க பாடல்வரிகளாலும் அதிகம் கவனம் பெறுபவர். 2000 ஆண்டளவில் இசையுலகிறகு வந்து இதுவரை மூன்று இசைத் தொகுப்புக்களை (Acoustic Soul ,Voyage To India, Testimony: Vol. 1, Life & Relationship) வெளியிட்டுள்ளார்.
india3
'எனது இசைத்தட்டை வெளியிடும்போது எந்த நிறுவனத்தினூடு வெளியிடவேண்டும் என்று அலையவில்லை; என்னை, எனது இசையை எவற்றோடும் சமரசம் செய்யாமல் வெளியிடவேண்டும் என்பதில் மட்டுமே அதிகம் கவனஞ்செலுத்தினேன்' என்று கூறுகின்ற இண்டியா அரி, சென்ற மாதமளவில் Testimony: Vol. 1, Life & Relationship என்ற தனது மூன்றாவது இசைத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். மகாத்மா காந்தியின் மீதிருந்த ஈர்ப்பினால் இண்டியா (India) என்ற பெயரையும், அரி (Arie) என்று தாயால் செல்லமாய் அழைக்கப்பட்டதை பிற்பகுதியாகவும் சேர்த்து இண்டியா அரி ஆகியிருக்கின்றார்.

2001ல் வெளிவந்த 'வீடியோ' என்ற பாடல்தான் இண்டியா அரியின் தனித்துவத்தை வெளிப்படுத்தியது. தனது பெண் என்ற அடையாளத்தை அந்தப் பாடலில் இண்டியா அரி தேட முயல்கின்றார்...

'நான் உனது வீடியோவிலிருக்கும் சாதாரண பெண் அல்ல
நான் ஒரு பேரழகியைப் போல வடிவமைக்கப்பட்டவளுமல்ல
ஆனால் நான் அறிந்துவைத்திருக்கின்றேன்
என்னை நானே எப்படி அளவிறந்து நேசிப்பது என்று
ஏனெனில் நானொரு அரசிளங்குமரி
எனது பெறுமதி நான் அணிந்திருக்கும் ஆடைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை
இண்டியா அரியாக இருப்பதற்கு எது தேவையோ
அதை மட்டுமே நான் அணிவேன்'


இந்தப்பாடலோடு அண்மையில் பிரபல்யம் அடைந்த பிங்கின்(Pink), Stupid Girls ஐ ஒப்பிட்டுப் பார்க்கலாம். பிங்கும் தனது பாடலில் வெகுசன ஊடகங்கள் பெண் பற்றி கட்டமைக்கபடும் விம்பங்களைக் கடுமையாகச் சாடுகின்றார். அதில் ஒரிடத்தில் இப்படி வரும்...., 'என்னவாயிற்று? /அமெரிக்காவில் பெண் ஜனாதிபதியாகும் இந்தப் பெண்ணின் கனவுக்கு/ அவள் இப்போது 50CENTன் வீடியோவில் ஆடிக்கொண்டிருக்கின்றாள்/' என்று.

தனிப்பாடலான 'வீடியோ' இண்டியா அரியை பிற பாடகர்களிலிருந்து வித்தியாசமாய் காட்டியது என்றால், அவரது இரண்டாவது இசைத் தொகுப்பான் 'இந்தியாவுக்கான பயணம்' (Voyage to India), அவரை அதிக இசை இரசிகர்களிடம் அறிமுகம் செய்திருப்பதோடு கிராமி விருதுகளையும் அவருக்குப் பெற்றுக் கொடுத்திருக்கின்றது.

'எதுவென்றாலும் நீ எனக்குச் சொல்லித்தந்தாய்
நானும் காரணங்களோடு கற்றுக்கொண்டேன்
நான் நம்புகின்றேன்; நாங்கள் நட்சத்திரங்களில் எழுதப்பட்டவர்கள்
'நாளை' எதை வைத்திருக்கின்றது என்று தெரியாது
நான் இந்தக் கணத்தில் வாழ்கின்றவள்
நான் ஆணெனும் உனக்காய் நன்றி சொல்லிக்கொண்டிருக்கின்றேன்
நீ, நான் - எனது பிரார்த்தனைகளில் கேட்கின்ற எல்லாமாயும் இருக்கின்றாய்
ஆகவே உன்னை எனது தேவதைகள்தான் கொண்டுவந்து சேர்த்திருக்கவேண்டும்
உனது அன்பு என் காயங்களை ஆற்றிக்கொண்டிருக்கின்றது
நீ எனது வாழ்வின் பிடிமானம்
நான் சிரித்துக்கொண்டிருப்பதற்கும் நீயே காரணம்
நீ ஒரு அழகிய வியப்பு!
'

என்று தனது இரண்டாவது இசைத்தட்டில் மலரும் புதிய உறவில் சிலிர்த்துப்போகின்ற இண்டியா அரி, மூன்றாவது இசைத்தட்டிலும் உறவுகளைப் பற்றியே பேசுகின்றார். தனது கடந்த (மூன்றாண்டு)கால உறவையும், பின் நிகழ்ந்த பிரிவையும் இறுதியாய் வந்த இசைத்தொகுப்பில் சொல்ல விளைவதாகவும், ஆனால் கசப்பான நினைவுகளில் தங்கிவிடாது வாழ்வின் இயல்பென வலிகளை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையுடன் முன்னோக்கி நகர்வதையே தான் பேச விரும்புவதாகவும் அரி கூறுகின்றார். Wings of Forgivenessல்....

'நெல்சன் மண்டேலாவால்
தன்னை ஒடுக்கியவர்களை மன்னிக்கமுடியுமென்றால்
நான் நிச்சயம் உன்னை மன்னிப்பேன், உனது தனித்துவத்திற்காய்.
.....
காந்தியால் persecutionஐ (தமிழ் மொழிபெயர்ப்பு என்ன?) மன்னிக்க முடியுமென்றால்
நிச்சயமாய் உனது பரிதாபத்துக்காய் என்னால் உன்னை மன்னிக்கமுடியும்.
....
இயேசு அவருக்குச் செய்யப்பட்ட கொடூரங்களை மன்னிக்கின்றார் என்றால்
நிச்சயமாய் நாங்கள் இதற்கொரு முடிவு கண்டு நகரமுடி
யும்'

என்று மன்னிப்பதன் மகோன்னதத்தை அருமையாக கூறுகின்றார். அதே பாடலில்.....

'குற்றங்களும் இரகசியஙளும்
நிறைந்த கடலில்
நான் நீந்தத்தொடங்கினேன்
என்னை யாரென
அடையாளங்காண்பதற்காய்.....
யாருமற்ற ஒரு தீவில்
எனக்குரிய தனிமையில்
உயர்ந்த உண்மை எதுவெனக் கேட்டேன்...'

என்று கூறிவிட்டு, நமக்கு நாமே நேர்மையாக இருப்பதுதான் அதியுயர்ந்த உண்மையாக இருக்கும் என்று தனக்குச் சொல்லப்பட்டதாய் கூறிக்கொள்ளவும் செய்கின்றார்.
indianew
அதே போல இன்னோரு பாடலான 'I am not my hair', ஒரு பெண்ணின் தலைமயிரை வைத்து சமூகம் செய்யும் அரசியல் குறித்து பேசுகின்றது. (தமிழ்பெண்களுக்கு உள்ளது போன்றே) கறுப்பினப் பெண்களுக்கு அவர்கள் எப்படி தலைமயிரை கட்டமைக்கவேண்டும் என்ற நெருக்குதல்கள் இருக்கின்றன என்கிறார் அரி. ஒவ்வொரு பருவத்திலும் எப்படி எப்படி தனது தலைமயிர் அலங்காரங்கள் கட்டமைக்கப்பட்டிருந்தன என்றும், பிறர் இவ்வாறான தலைமயிர் அலங்காரத்தை முன்மாதிரியாக வைத்து எப்படி எல்லாம் ஒரு பெண்ணைக் குறித்து பேசிக்கொண்டிருந்தனர்/பேசுகின்றனர் என்பதையும் இந்தப்பாடல் பேசுகிறது. இறுதியில் தனக்குரியதை தேர்வு செய்யும் உரிமை தனக்கு மட்டுமே என்று கூறுகின்றார். பெண்களின் தலைமயிரை வைத்து ஆண்கள் செய்யும் அரசியலை மிக அழகாக புற்றுநோய வந்த பெண்ணின் படிமம் மூலம் உடைத்துக்காட்டுகின்றார்.

மார்பகப் புற்றுநோயும், அதன் பின்பான சிகிச்சையும்
அவளது அழகையும் பெருமையையும் எடுத்துச் சென்றன
அவள் கடவுளிடம் உறுதிமொழி எடுத்தாள்
நான் உயிர்தப்பினேன் என்றால்
எனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் சந்தோசிப்பேன் என்று
தேசியத் தொலைக்காட்சியில்
அவளது கண்கள் மின்னலடிக்கின்றன வைரங்களாய்
அவளது வழுக்கைத் தலை ஒரு முழுநிலவாய் மினுங்குகின்றது
முழு உலகுக்குமாய் அவள் இப்போது பாடிக்கொண்டிருக்கின்றாள்...hey
'

indai2

வனப்புடன் இருப்பதாய் கட்டமைக்கப்படும் அமெரிக்க வாழ்வியலை, பிரேசில் நாட்டில் தான் சந்தித்த பையன் ஒருவனின் பார்வையால் அரி சீர்குலைத்துக்காட்டுகின்றார் இப்படியாக....,

'என்னால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை
உணரவைத்தான்
பிரேசில் நாட்டில்
ஒரு ஒதுக்குப்புறத்தில் சந்தித்த
இளஞ்சகோதரன்;
அவனும் என்னைப் போலவே பாடவிரும்பினான்
அவனது வீட்டுக்கு யன்னல்களோ கதவுகளோ இருக்கவில்லை
ஒரு எளிய வாழ்க்கை வாழும் அவன் மிகுந்த ஏழ்மையாக இருந்தான்
இவற்றுக்கும் மேலாய் அவனுக்கு பார்வையும் இல்லை
ஆனால் அது அவன் 'ஒளி'யைப் பார்ப்பதைத் தடுக்கவில்லை
அவன் கேட்டான், அமெரிக்கா எப்படி இருக்குமென்று
எனது பதில் முழுதும் முறைப்பாடுகளாகவே இருந்தன
அவன் சொன்னான், இங்கே வாழ்வது சொர்க்கத்தில் வாழ்வது...
அவன் எனக்கு சொல்லித் தந்தான்;
சொர்க்கம் என்பது எனது மனதின் உள்ளேதான் உள்ளது என்று.'

Pop, R&B, Rap பாடுபவர்களின் பாடல்களை ஓரளவு உற்றுக கவனிக்கின்றவன் என்றவகையில், இண்டியா அரியின் பாடல் ஒவ்வொன்றும் ஒரு கவிதைக்குரிய தனித்துவத்துடன் மிளிர்கின்றன என்பதைத் தயக்கமின்றிக் கூறலாம் என்று நினைக்கின்றேன் (Kanye Westன் பாடல்களிலும் இவ்வாறான நம்பிக்கைகள் துலங்குகின்றன). இண்டியா அரியின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு கதையை அவற்றின் பின்புலங்களுடன்/அரசியல்களுடன் விரித்துச் சொல்ல முயல்கின்றன. அவற்றில் அதீத காழ்ப்போ, வெறுப்போ இல்லாது சமூகத்தின் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் கடந்து மனிதர்களை பலவீனங்களுடன் ஏற்றுக்கொண்டு வாழ்வை இன்னும் ஆழமாய் நேசிக்க அரியின் பாடல்கள் கற்றுத் தருகின்றன என்பதுவும் முக்கியமானது. மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட நொய்ந்துபோன வார்த்தைகளை வைத்து பாடல்கள் இயற்றப்படுவதைத் தவிர்த்து தனக்குரிய தனித்துவங்களுடன் புதிய படிமங்களையும், அர்த்தங்களையும் தேடும் அரியின் பாடல்கள் கேட்கும் எவரையும் இலகுவில் வசீகரிக்கச் செய்வதில் வியப்பேதுமில்லைதானே.