நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 03

Tuesday, March 28, 2023


1.

சென்ற வாரம் ஒரு நண்பர் அவர் சிறிதளவில் பங்களிப்புச் செய்துகொண்டிருக்கும் ஒரு திரைப்படம் பற்றி கூறிக் கொண்டிருந்தார். 'இது ஒரு நடுநிலையான திரைப்படம், அரசு X இயக்கம் என்கின்ற இரு தரப்பையும் விமர்சிக்கின்றது' என்று அவர் குறிப்பிட்டார். எனக்கு இவ்வாறான 'நடுநிலை'மைகளில் அவ்வளவு நம்பிக்கை இல்லை, ஒரு படைப்பு அது எடுத்துக்கொள்ளும் களத்துக்கு உண்மையாகவும்/genuine ஆகவும் இருக்கின்றதா என்பதை மட்டுமே பார்ப்பேன் எனச் சொன்னேன். மேலும் அரசு என்னும் மாபெரும் இயந்திரத்தை, எந்த ஒரு போராடும் இயக்கத்திற்கும் நிகராக வைத்துப் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் அவருக்குக் குறிப்பிட்டேன். எந்த ஒரு இயக்கமும் தன்னியல்பிலே விரும்பி ஆயுதமெடுத்துப் போராடுவதில்லை, தம்மைத் தாமே பலிகொடுக்கவும் வருவதில்லை. இவ்வாறான இயக்கங்கள் தோன்றுவதற்குப் பெரும்பாலும் அரசுக்களும், சமூக புறக்காரணிகளுமே முக்கியமானவை. அதைத் தவிர்த்து, இந்த இயக்கங்கள் பிறகான காலத்தில் தம்மளவில் வன்முறையாளர்களாகவும், தம்மைச் சுற்றியவர்களை அழித்து தம்மையும் அழித்துக்கொண்டாலும் அவற்றைப் பேசும்போதும் கூட, இவை எழுந்தவற்றுக்கான அடிப்படைக் காரணங்களை நாம் மறந்துவிடக்கூடாது என்றேன்.

இன்றைக்கு ஒரளவு வாசிப்புடைய எவருக்குமே உலகில் மக்களுக்காய் மக்களிடையே எழுந்த எந்தவொரு ஆயுத இயக்கமும் தன் கையில் இரத்தக்கறையில்லாது வரலாற்றின் முன் நின்றதேயில்லை என்பது புரியும். அவையவற்றின் கறையில் கூடக் குறைய இருக்குமே தவிர, எவருமே 'புரட்சியின் பெயரால்' எனச் சொல்லித் தப்பி விடமுடியாது. அது நாம் உலகப்பரப்பில் வியந்துகொண்டிருக்கும் சே, லெனினில் இருந்து, ஈழப்போராட்டத்தில் நல்லதொரு தலைமைப்பண்பு உடையவரென பலரால் சொல்லப்படுகின்ற பத்மநாபா உட்பட அனைவரும் இந்தப் பழியிலிருந்து தப்பமுடியாது.

இந்த 'கசப்பான உண்மை'யை அறிந்துகொண்டு ஈழப்போராட்டத்தை அணுகியவர்கள் என்று பார்த்தால் மிகக்குறைவானவர்களே இருக்கின்றனர். இன்றைக்கு ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிந்தபின்னும் அதன் தோற்றுவாய், துன்பவியலான முடிவு, இனியான எதிர்காலம் என்று தத்துவார்த்த பின்னணியில் தமிழ் நிலத்தோடு ஆராய்ந்து எழுதியவர்கள் என்பது மிகக் குறைவு. அதிலும் ஈழத்திலும், புலம்பெயர்ந்த தேசத்திலும் இருந்து எழுதும் ஆய்வாளர்கள் நிலைபற்றிச் சொல்லத் தேவையில்லை. இன்னமும் 2000களின் தொடக்கத்திலேயே தேங்கிவிட்டு, புதிதாக நாம் வாசிப்பதற்கு/சிந்திப்பதற்கு, எதையும் எழுத அவர்கள் தயாரில்லை. அது எத்தரப்பாயினும் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடுவதில் மட்டும் அவர்களுக்குப் பெருமிதம்.

ஈழப்போராட்டம் இறுதிக்கட்டத்தில் நின்றபோது, அதன் அத்தனை பலவீனங்களையும் அறிந்துகொண்டு அதைத் தமிழ்நிலப் பண்பாட்டிலும், சர்வதேச அரசியல் நிலைமைகளோடும் நான்றிய இருவர் எழுதிக் கொண்டிருந்தனர். ஒருவர் நாகார்ஜூனன், மற்றவர் தமிழவன். நாகார்ஜூனன் தனது இணையத்தளத்திலும், தமிழவன் தீராநதி போன்ற அச்சு ஊடகங்களிலும் எழுதிக்கொண்டிருந்தனர். வேறு சில தமிழகப் படைப்பாளிகள் அந்தக் காலத்தில் ஆஸ்திரேலியா போன்ற தேசங்களுக்குப் பயணஞ்செய்கையில், இந்தக் கடும் யுத்தம் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டபோது, 'நானொரு அரசு ஊழியன், அது பற்றி கருத்து எதுவும் கூறமாட்டேன்' என்று கூறியும் இருந்தார்கள். அந்தக் காலத்தில்தான் தமிழகத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் தீக்குளித்தபடியும், இன்னும் பலர் கையாலாகநிலையிலும் தம் எதிர்ப்பைக் காட்டி சிறைக்குள்ளும் போய்க் கொண்டிருந்தார்கள். அவரவர்க்கு அவரவர்க்கான அறம் அல்லது அந்தந்த நேரத்து நியாயங்கள்!


2.

ழப்போராட்டம் தீவிரமான கட்டத்தில் இருந்தபோது தமிழவன் அதை நீண்ட நம் தமிழ்ப்பண்பாட்டில் வைத்து புரிந்துகொள்கின்றார். எவ்வாறு 1980களில் ஈழத்தில் நிகழ்ந்த படுகொலைகள் தமிழகத்தின் அந்தக்காலத்தைய தலைமுறையைப் பாதித்ததோ, அவ்வாறே ஈழப்போராட்டத்தின் இறுதி முடிவானது தமிழவனை மீண்டும் தமிழடையாளத்தைத் தேடச் செய்கின்றது. அதை அவர் தமிழின் செழுமையான தமிழ் இலக்கியங்களினூடாக சென்று மறுவரையாக்கம் செய்கின்றார். அதுவே தொகுக்கப்பட்டு இப்போது 'திராவிடம் தமிழ்த்தேசம் கதையாடல் ( ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு)' என நூலாக வந்துள்ளது. இத்தொகுப்பின் முன்னுரையில் தமிழவன், 'தமிழ் இலக்கியமும் அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கின்றன' என்று தெளிவாகச் சொல்லிவிடுகின்றார்.

இன்றும் பின்னமைப்பியல்/பின்நவீனத்துவம் விரிவாகப் பேசப்பட்டபின்னும், இன்னும் இலக்கியத்தில் அரசியல் வேண்டாம் என்கின்ற குரல்களைப் பல இடங்களில் கேட்கின்றோம். இலக்கியத்தில் அரசியல் உரத்து ஒலிக்கின்றதா, மெளனத்தினூடாகப் பேசப்படுகின்றதா என்பதே ஒரு வாசகர் பார்க்கவேண்டியதே தவிர, இலக்கியத்தில் அரசியல் இல்லை என்பது அபத்தம் என்பதை நாமனைவரும் அறிவோம்.

தமிழவன் இத்தொகுப்பில் இருக்கும் 25 கட்டுரைகளிலும், நாம் ஏற்கின்றோமோ/மறுக்கின்றோமோ நாம் விவாதிக்கக் கூடிய பலபுள்ளிகளை ஒவ்வொரு கட்டுரையிலும் தருகின்றார். திராவிட இயக்கங்களின் முக்கியமாய் அண்ணாவின் பங்களிப்பை பெரும் நிகழ்வாகக் கொள்கின்ற அவர் அதேசமயம் அண்ணாத்துரையின் எழுத்துக்களை பலவீனம் என்றும் ஒதுக்கிவிடுகின்றார். ஆனால் அண்ணா கண்டெடுத்த பாரதிதாசனை தமிழவனும் முன்னிறுத்துகின்றார். பாரதியாருக்கும், அவரின் தாசனாக தொடக்கத்தில் கிளைத்த பாரதிதாசன் பிற்காலத்தில் எப்படி பாரதியாரிலிருந்து விலகி வந்திருக்கின்றார் என்று இதில் விபரமாக எழுதுகின்றார். பாரதியாருக்கு பக்தி இயக்கம் முன்னோடியாக இருந்து அதுவே அவரது சுதந்திரவேட்கைப் பாடல்களில் 'பாரத மாதா'வாக தீர்க்கமாக ஒலித்ததென்கின்ற தமிழவன், பாரதிதாசன் பிற்காலத்தில் சங்கப்பாடல்களுக்குள் அதிகம் மூழ்கின்றபோது அது தமிழ் அடையாளம் என்ற முக்கிய கதையாடலை முன்வைக்கின்ற புள்ளியாக மாறுகின்றதென்கின்றார். அந்தவகையில் 'தமிழ் தொல்மனமும் பாரதிதாசனும்', 'பாரதியும் உற்பத்தியாகிக் கொண்டிருந்த தமிழ்த்தேசமும்' முக்கியமான கட்டுரைகள் என்பேன்.

திராவிட இயக்கத்தினர் இன்றைக்கும் பாரதிதாசன் உள்ளிட்ட திராவிட எழுத்தாளர்கள் பற்றி முறையான ஆய்வுகள் செய்யாது ஒரு சிமிழுக்குள் பலரை அடக்கிவிட்டனர் என்பதைத் தமிழவன் விமர்சிக்கவும் செய்கின்றார். அதேவேளை திராவிட இயக்கத்தினர் கவனிக்காதுவிட்ட மணிக்கொடி/எழுத்து/க.நா.சு பற்றியும் அவர்கள் தமிழை வளர்த்துக்கொண்டு வந்த விதம்பற்றியும் குறிப்பிடுகின்றார். அதை ஒரு தனிக்கட்டுரையில் 'க.நா.சு வென்றார்' என்று தமிழவன் எழுதியிருக்கின்றார்.

அவ்வாறே ஈழத்தவர்களின் அரசியலைப் பேசுவதற்கு மஹாகவியின் படைப்புக்களையும், எஸ்.பொவின் 'மாயினி'யையும் எடுத்தாண்டிருக்கின்றார். கைலாசபதியும், ஏ.ஜே.கனரட்னவும், முக்கியமாய் சிவத்தம்பியும் பல கட்டுரைகளில் அவர்களின் பங்களிப்புக்காய் கவனப்படுத்தப்படுகின்றனர். இன்றைக்கு தமிழ் அரசியல் பேசும் ஆய்வாளர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டிய கட்டுரைகளாக தமிழவனின் 'இருபதாம் நூற்றாண்டின் தமிழாய்வில் அரசியல்' மற்றும் 'இருபதாம் நூற்றாண்டில் கம்யூனிசமும் தமிழும்' என்பவற்றைச் சொல்வேன்.

தமிழுக்கென்று சங்க இலக்கியங்களிலிருந்து ஒரு தொடர்ச்சியும், தொன்மையும் இருந்தாலும், சிறுகதைகள், நாவல் உள்ளிட்ட வகைமைகள் மேற்கிலிருந்து வந்ததை ஏற்றுக்கொள்பவர்கள், பின்னமைப்பியல்/பின்நவீனத்துவம் என்று வரும்போது அவை நம்சூழலுக்கு ஒத்துக்கொள்ளாது என முகஞ்சுழித்தபடி இருக்கின்றார்கள். அவர்கள் நிதானமாய்த் தங்கள் கருத்துகளை மறுபரிசீலனை செய்வதற்கு, இங்கே 'எண்பதுகளில் தமிழில் தோன்றிய புதுவகை கதை இயக்கமும் சில விமரிசனங்களும்', 'இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய விமரிசனமும், 21ஆம் நூற்றாண்டின் இலக்கிய விமரிசனமும்' போன்ற கட்டுரைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன.

எண்பதுகளில் உரையாடப்பட்ட பின் அமைப்பியல்/பின் நவீனத்துவம் போன்றவையே தமிழ்ச்சூழலில் தலித்தியமும், பெண்ணியமும் பேசுவதற்கான தளங்களை இன்னும் விரிவாக்கியது என்கின்ற உண்மையறியாதவர்களே இலக்கியத்தில் தத்துவ/கோட்பாட்டு உரையாடல்கள் தேவையில்லை எனச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். ஒரு இலக்கிய படைப்பு எத்தகைய தத்துவ சட்டகத்திற்குள்ளும் வலிந்து நின்று எழுதப்படுவதில்லை என்பது எந்த ஒரு இலக்கிய விமர்சகருக்கும் தெரிந்த எளிய உண்மை. ஆனால் ஒரு பிரதியைப் புரிந்துகொள்ள, அதை விரித்துப் பார்க்க இவ்வாறான கோட்பாடுகளே தேவையென்பதும், எல்லாக் கோட்பாடுகளும் காலத்தின் நீட்சியில் இன்னொன்றாக விரிந்து தன் வீரியத்தை இழந்துபோவதும் இயல்பானவைதான். இதைப் புரிந்துகொள்ளாமலே இன்றும் 80/90களில் பேசப்பட்ட கோட்பாடுகள் தற்காலத்தில் வழக்கொழிந்து போய்விட்டன, எனவே கோட்பாடுகள்/விமர்சனங்கள் தேவையில்லை என்று கிடைக்கும் மேடைதோறும் சிலர் பேசி அலுப்படைய வைக்கின்றனர்

திராவிடம் என்று தமிழடையாளம் தேடிய தமிழர், பின்னர் தமிழ்ச் சினிமா நாயகர்களைத் தமது தலைவர்களாகக் கொண்டு பாலும் தண்ணீரும் கட்-அவுட்களுக்கு அபிஷேசம் செய்பவர்களாகவும், அவர்களே தமிழ்நிலத்தின் நாயக பிம்பங்களாக தொலைக்காட்சிகளில் மாற்றப்பட்டதையும் தமிழவன் சிறப்பாக ' எந்திரம் மூலம் தயாரிக்கப்பட்ட கலையும், தமிழன் அகதி ஆனதும்' மூலம் எழுதிச் செல்கின்றார்.

இந்தத் தொகுப்பு தமிழ் அடையாளம் சீரழிந்து போவதை மட்டுமில்லாது, நாம் அந்த அடையாளங்களை எதன் மூலம் மீட்டெடுக்க முடியும் என்கின்ற சில புள்ளிகளை முன்வைப்பதும் முக்கியமானது. இன்றைக்கு தமிழ் அடையாளம் சார்ந்து அரசியல்/இலக்கியம் பேசும் எவராயினும் இந்த நூலை வாசிக்கவேண்டும் என்பேன்.

நாம் தமிழவனின் கட்டுரைகளை ஏற்கின்றோமோ, இல்லையோ என்பது அவ்வளவு முக்கியமில்லை. ஆகக்குறைந்தது போலி தமிழ் அடையாள உணர்விலும், பெருமையிலும் நம்மைத் தோய வைத்துக் கொண்டிருக்கும் அரசியல்/இலக்கிய/நடிக விம்பங்களிலிருந்தும், அதன் நச்சுச்சூழல்களிலிருந்தும் இதை வாசிப்பதன் மூலம் நாம் ஒரளவு தப்பிப் போகவாவது முடியும். 

**************************

(Dec 29, 2022)Part

கார்காலக் குறிப்புகள் - 02

Thursday, March 23, 2023


னி பொழிந்து வெண்மை மூடிய நிலத்தை, காலையில் மழை கரைத்துக் கொண்டிருந்தது. பெருங்காற்றுடன் பெய்த உறைபனிமழை புற்களை சற்று விலத்த பசுமை தெரிந்தது. அந்தக் காட்சி அவ்வளவு நீடிக்கவுமில்லை. மீண்டும் பனி சடுதியாகப் பொழிந்து வெள்ளை முகில்களால் போர்த்தியது போலத் தரை கண்முன்னே மாறியது.


எல்லாமே சில மணித்தியாலங்களுக்குள்! 

இந்தக் குறுகிய நேரத்திற்குள்ளே ஒரு 'நிரந்தரமின்மை'யைப் பார்க்கின்றேன். வியட்னாமில் போர் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது, தாயிடம் (Thich Nhat Hanh) இந்தப் போர் எப்போது முடியும் என்று மக்கள் ஆறுதல் தேடி வருகின்றனர். எப்போது போர் முடியும் என்று தெரியாவிட்டாலும், புத்தரை நான் நன்கறிவேன் என்பதால், 'எல்லாமே ஒருநாள் மாறும்' என்பதில் நம்பிக்கை வையுங்கள் என அந்த மக்களிடம் கூறியதாகத் தாய் கூறுகின்றார். 

ஆம். எதுவுமே நிரந்தரமில்லாதவை;  எப்போதுமே மாறிக் கொண்டேயிருப்பவை!

தாயிடம், பின்னர் இந்த உலகம் போர்கள்/காலநிலை மாற்றம்/சுரண்டல் என இவ்வளவு கொடுமையாக இருக்கின்றதே உங்கள் பதில் என்ன என்கின்றபோது தாய் இதையே ஒரு பத்திரிகையாளரிடம் -அவரின் 70வயதுகளில்- 'எல்லாமே மாறக்கூடியவை' என மீண்டும் நினைவுபடுத்துகின்றார். ஆனால் நம்மால் செய்யக்கூடியது, நல்லவை விளையக்கூடிய உகந்த காரணிகளை (Right Conditions) தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருப்பது என்கின்றார்.


தாயை, 1960களில் வியட்னாமிய அரசு சொந்த நாட்டுக்குத் திரும்ப வரக்கூடாது என்கின்றது. அதன்பின்னர் கிட்டத்தட்ட 40 வருடங்களின் பின் முதன்முதலாக மீண்டும் வியட்னாமுக்குப் போய் சங்காவை அவர் அமைக்கின்றார். ஒரு குறுகிய காலத்திற்குள்ளேயே நூற்றுக்கணக்கானவர்கள் அந்தச் சங்காவில் சேர, வியட்னாமிய அரசு தம் இறையாண்மையை அச்சுறுத்தும் சக்தி தாயினது சங்காவிற்குள்ளதோவென அச்சமுறுகின்றது. எனவே தாய் நாம் சங்காவை இங்கே நடத்துவதற்கான  உகந்த காரணிகள் இன்னமும் உருவாகவில்லையெனச் சொல்லி, அதை முற்றாகக் கலைத்து விடுகின்றார். ஆனால் அவ்வாறு வந்துசேர்ந்த பிக்குகளுக்கும், பிக்குணிகளுக்காவும் அருகில் தாய்லாந்தில் ஒரு சங்கா புதிதாகத் தொடங்கப்படுகின்றது.

இதையேன் தாயோ அல்லது அவரைப் பின் தொடர்பவர்களோ தொடர்ந்து நமக்கு நினைவூட்டுகின்றனர் என்றால், சில விடயங்களுக்கு சரியான காரணிகள் இல்லாதபோது பொறுமையாகக் காத்திருப்பதில் எவ்வித தவறுமில்லை என்பதற்காகவே.

ஆகவேதான் இப்போது பெரும் பனிக்காலம் தொடங்கிவிட்டபின், பெரும் பனிப்பொழிவு நடந்தேறி, தெருவில் பயணிக்க வேண்டாம் என்றும், விமானங்கள் வானில் ஏறமுடியாத ஒரு சூழலும் இருக்கும்போது, நாமெல்லோரும் சரியான காரணிக்காய்க் காத்திருக்கத்தான் வேண்டும். 

எதையும் நமக்கேற்றமாதிரி எல்லாப் பொழுதும் மாற்றிவிடமுடியாது என்பது பிரபஞ்ச யதார்த்தம்!

000000000000

நான் அவ்வப்போது பேசும் நண்பரொருவர் அடிக்கடி தனது நண்பர்கள் மாறிக் கொண்டிருக்கின்றனர், அவர்களைப் புரிந்துகொள்ளாமல் பழகிவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருப்பார். அவருக்கு நான் என் வாழ்விலிருந்து சில உதாரணங்களைச் சொல்லிக் கொண்டிருப்பேன். அவரைப் போல எனக்கு நிறைய நண்பர்கள் இல்லாதுவிட்டாலும், நானும் பல நண்பர்களுக்கு மெளனமாக விடை கொடுத்திருக்கின்றேன். அது நண்பர்களோ, காதலிகளோ எந்த ஒருவரிடம் நம்மால் மனம் திறந்து பேசும் வெளி இல்லாமல் போகின்றதோ அப்போதே அவர்களுக்கு விடைகொடுத்து விடுவது இரு தரப்பினர்க்கும் நல்லது என்றேன்.

இந்தப் பிரபஞ்சம் நமக்கான அரிய விடயங்களை இழக்க வைத்தாலும், அதைவிட இன்னும் பெறுமதி மிக்க மனிதர்களைக் கொண்டு நம் வாழ்வை நிரப்பும். அதை நண்பர்களை விட, காதலிகளின் விடயத்தில் நான் பார்த்திருக்கின்றேன் என நண்பருக்குச் சொன்னேன். இவ்வளவு நாளும் எங்கிருந்தார்கள் இவர்கள் என்று வியக்குமளவுக்கு சட்டென்று நம்மிடையே தோன்றி நம்மைப் பலர் புதிதாக வியக்க வைப்பார்கள்.

ஒரு காதலின் பெரும் பிரிவில் தனக்குள் உழன்று கொண்டு, 'இவ்வளவு காதலை வைத்துக் கொண்டு என்ன செய்வது' என்று மறுகிக் கொண்டவனுக்கு, பின்னர் ஒரு காலத்தில் ஒரே சமயத்தில் நான்கு பெண்கள் காதலிக்க வந்தார்கள் என்பதை காதலின் துயரத்தில் இருந்தபோது அந்த ஒருவன் நம்பியிருக்கத்தான் முடியுமா என்ன?

வாழ்க்கை அப்படி விசித்திரமானதுதான். நம்மை எந்தளவுக்கு நமது பலவீனங்களோடு இன்னொருவரின் முன்னால் வைக்கமுடியுமோ, அந்தளவுக்கு அந்தளவு நமக்கு தோழமையோ/நேசமோ கிடைக்கும். அதேபோல திறந்த மனதுடன் நேசத்துக்குப் பிரியாவிடை வேண்டியபோது கொடுக்கவும் முடியும்.

இந்த நண்பருக்கு நேற்றிரவு நகுலனைப் பற்றி சுகுமாரன் எழுதிய 'நகுலன் விட்டுச் சென்ற வழிகள்' பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். மலையாளக் கவிஞர்களும், தமிழ்க் கவிஞர்களும் பங்குபற்றிய ஒரு நிகழ்வில் நகுலனும் மேடையில் உட்கார்ந்திருக்கின்றார். அப்போது ஒவ்வொரு கவிஞர்களும் கவிதை வாசிக்கும்போது நகுலனையும் அழைக்கின்றனர். நகுலன், 'கவிதை உரக்க வாசிப்பதற்கானதல்ல; மனதால் வாசிப்பதற்கானது என்று ஒலிபெருக்கியில் அறிவித்து விட்டு வந்து மெளனமாக உட்கார்ந்து விட்டார். நெருங்கிய நண்பரான அய்யப்பப் பணிக்கர் வற்புறுத்தியும் நகுலன் இசையவில்லை.' என்று சுகுமாரன் அந்த நிகழ்வை நேரில் பார்த்து எழுதியிருக்கின்றார்.

அவ்வாறு ஒரு கவிஞர் ஒருவரின் நூல் அறிமுக நிகழ்வுக்கு, தமிழ்நாட்டில் நின்றபோது சென்றிருந்தபோது, சிறுகூட்டம் என்பதால் ஒவ்வொருத்தரும் அந்தக் கவிஞரின் தொகுப்பிலிருந்து ஏதோ ஒரு கவிதையை வாசித்தபோது, நான் கவிதைகள் மெளன வாசிப்பிற்குரியது என்று மறுத்திருந்ததை (ப்யூகோவ்ஸ்கியின் தமிழாக்கத்திற்கான முன்னுரையிலும் குறிப்பிட்டிருப்பேன்) நண்பருக்கு நினைவூட்டினேன். 'அப்படியெனில் நான் ஒரு நிகழ்வில் கவிதைகளை உரத்து வாசித்ததை மறுதலிக்கத்தான், இவற்றை எனக்குச் சொல்கின்றாயா' எனக் கேட்டார். அப்படி என்றெல்லாம் இல்லை. நான் உணர்ந்ததைப் போல நகுலன் உணர்ந்திருக்கின்றார் என்பது நினைவுக்கு வந்ததென்று கதையை வேறு திசைக்கு மடை மாற்றினேன்.

அத்தோடு இருந்தால் பரவாயில்லை. வெளிக் குளிர் எனக்கு கலக மனோபாவத்தைத் தந்ததோ என்னதோ, அதே கட்டுரையில் நகுலன் சுகுமாரனுக்கு ஒரு எழுத்தாளராக ஆகவேண்டும் என்று விரும்பினால், திருமணம் செய்யாது இருக்கவேண்டும் என்றும் கூறியிருக்கின்றார் என்று வாயைத் திறந்து சொல்லிவிட்டேன். சரி இப்போது என்ன சொல்ல வருகின்றாய் அலுப்பான, உடல் நோவிருக்கும் நாளொன்றில், நல்ல மனோநிலையை எனக்குத் தருவாய் என்று உன்னிடம் வந்தால், கவிதைகள் மெளன வாசிப்புக்குரியவை, எழுதப்போவது என்றால் பிரம்மசாரியாய் இருக்கவேண்டும் என்றெல்லாம் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாது 'பனி' போலக் கதைக்கிறாய் எனச் சலித்துக்கொண்டார் நண்பர்.

நகுலன், பிரமிள், ஏ.ஜே.கனகரட்ன, (ஓவியர்) கருணா என்று தனித்திருந்து தம்போக்கில் வாழ்ந்து, இவ்வுலகிலிருந்து உதிர்ந்து போனவர்கள் மீது ஏனோ பனிக்காலங்களில் இன்னும் பிரியம் கூடிவிடுகின்றது. அந்த ஆன்மாக்கள் எங்கிருந்தாலும் ஒன்று சேர்ந்து - தற்சமயம் எனக்குப் பிடித்த ஆர்ஜெண்டீனா Santa Julia என்கின்ற செம்மதுக்காரியோடு- காதல் நடனமாடி கள்வெறி கொள்ளட்டுமாக.

பெண்களின் அரவணைப்பின்றி ஒருகணமும் இருக்கவே முடியாத என்னைப் ஒருவனுக்கு இவர்களின் வாழ்வு என்றும் தீரா வியப்புத்தான். அதை அருகிலிருந்து பார்த்தபின்னும் இப்படிக் கோபிக்கக்கூடாது, நண்பரே!

00000000000000000000

(Dec 22, 2022)

புலம்பெயர் X புகலிட X அகதி இலக்கியம்

Wednesday, March 22, 2023

-சிறு குறிப்புகள்-

*******************

ற்றைக்கு 20 வருடங்ளுக்கு முன்னரே புலம்பெயர் X புகலிட வேறுபாடுகள் தீவிரமாகப் பேசப்பட்டிருக்கின்றது. பல்வேறு நிலைகள்/விடயங்கள் இடைவெட்டும் மிக சிக்கலான ஈழத்தமிழர்களின் அந்நிய நாட்டு வாழ்வை தெளிவாக வரையறுத்தும் விட முடியாது. 1983 இனக்கலவரத்தை ஒரு முக்கிய புள்ளியாக வைத்து புலம்பெயர் X புகலிடம் என்பது உரையாடப்பட்டிருக்கின்றது. 80களுக்கு முன் இலங்கையில் இருந்த படித்த உயர்வர்க்கத்தினர் பொருளாதார வசதிக்காய் புலம்பெயர்ந்தனர். முக்கியமான யாழ், கொழும்பு ஆதிக்கசாதியினருக்கு இந்த வாய்ப்புக்கள் எளிதாகக் கிடைத்து அவர்கள் புலம்பெயர்ந்தனர்.

83இல் நிகழ்ந்த படுகொலைகளும், இலங்கை/இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்களும், நம் இயக்கங்களுக்குள் நிகழ்ந்த உட்படுகொலைகளும் சாதி, மத, ஊர் பாகுபாடில்லாது எல்லோரையும் வெளிநாடுகளுக்கு எப்படியெனினும் உயிரைத் தக்கவைப்பதற்காய் அத்தனை ஆபத்துக்களுக்குமிடையில் 80களில் இருந்து அனுப்பி வைக்கத் தொடங்கியது.

இவ்வாறு நிகழ்ந்த விடயங்களை -80களின் பிற்பகுதியில் இருந்து 90களின் முடிவுவரை- புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து வந்த சிறுசஞ்சிகைகளின் எண்ணிக்கையையும், அவற்றின் பேசுபொருள்களையும் வைத்துப் பார்த்தாலே இந்த வரலாறு  நமக்கு எளிதாகப் புரியும். அந்தக் காலத்தில் கலை இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களில் சிலர், ஏற்கனவே பொருளாதார வசதிக்காய் வந்தவர்களையும், அகதிகளாய் உயிர் தப்பி வந்தவர்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தல் நியாயமில்லையென்று நினைக்கத் தொடங்கினர். எனவே பின்னமைப்பியல்/பின் நவீனத்துவம் கூறும் வித்தியாசங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினர். இந்த வித்தியாசங்கள் யாழில் இருந்து இலக்கியம் பேசுபவர்க்கும், மலையகத்தில் இருந்து இலக்கியம் பேசுபவர்க்கும் இருக்கும் வித்தியாசத்தைப் போன்றது அல்லது வடபகுதியில் இருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களுக்கும், கிழக்கில் அந்தளவுக்குப் பாதிக்கப்படாத முஸ்லிம்களுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தைப் போன்றது என  ஒரு எளிய உதாரணத்துக்குச் சொல்லலாம்.

இதன் நிமித்தமே பொருளாதார வசதி காரணமாக வெளிநாடுகளுக்கு வந்தவர்களைப் புலம்பெயர்ந்தவர்கள் என்றும், ஊரில் இருக்க முடியாத நிலையில் உயிர்தப்பி வந்தவர்களை புகலிடத்தவர் என்ற வகைமைக்குள்ளும் பலர் வைத்துப் பார்க்கத் தொடங்கினர்.

முன்னவர்கள் தம் படிப்பின் நிமித்தம் ஒரளவு வசதியாகத் தம் வாழ்வை அமைத்துக் கொள்ள, 80களின் பின் யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்கள் ஒரு விளிம்புநிலை வாழ்வுக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இந்த புலம்பெயர்வுக்குள்ளும் இன்னும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இலங்கையில் ஆங்கிலத்தை ஒரளவு கற்று இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்க்கும், ஜேர்மன், பிரான்ஸ், சுவிஸ் மற்றும் ஸ்கண்டிநேவியன் நாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கும் இடையிலான வாழ்வியல் முறையே முற்றும் வேறுவிதமானமை. புதிய நாட்டில் புதிய காலநிலையில் புதிய ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதென்பது எவ்வளவு கடினமென்பது சொல்லாமலே நமக்குப் புரியக் கூடியவை.

2.

ப்போது புலம்பெயர்ந்த இலக்கியத்திற்குள் வருவோம். இவர்கள் 83 கலவரத்துக்கு முன் புலம்பெயர்ந்தவர்கள் என்றாலும் நாம் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களையும், 'காலம்' செல்வத்தின் எழுத்துக்களையும் ஒன்றாக மதிப்பிட முடியாது என்பதை அறிவோம். செல்வத்தின் எழுத்துக்களை வாசிக்கும்போது அவர் தொடர்ச்சியான தனது இலங்கை வாழ்வில் அவரும், அவரது பெற்றோரும் எப்படி ஒடுக்கப்பட்டிருக்கின்றனர் என்று நேரடியாகப் பதிவு செய்து வந்திருக்கின்றார். அப்படியெனில் செல்வத்துக்கு போர் பற்றிய அனுபவங்கள் அவ்வளவு இல்லையென்று இந்த ஒடுக்கப்பட்ட விடயங்களை நாம் ஒதுக்கிவிட்டுப் போகமுடியுமா? இல்லைத்தானே. அவ்வாறே புலம்பெயர் எழுத்துக்களிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன. நாம் பாரதி புத்தகலாயத்தை அடையாளப்படுத்தும் சிராஜ் இப்போது கூறும் 'யாழ் வெள்ளாள மேட்டிமை' வாதத்திற்குள் செல்வத்தின் ஒடுக்கபட்ட எழுத்துக்களை அடக்கி, கடந்து போனால் அவ்வளவு அபத்தமாக இருக்குமல்லவா? இதையேன் குறிப்பிடுகின்றேன் என்றால் இவ்வாறான விடயங்களை எளிதில் பொதுமைப்படுத்தக் கூடாது என்பதற்காகவே.

இப்போது புகலிட இலக்கியத்துக்கு வருவோம். 83 இற்கு பின் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்கள், அனைவரையும் சாதி, மத, பிரதேச பேதமின்றி வெளிநாடுகளுக்கு துரத்தி வைத்தது. அவர்களின் அநேகர் உணவகங்களில் கோப்பை கழுவியும், சமையலறைகளில் வெந்தும், தொழிற்சாலைகளில் கடைநிலை ஊழியர்களாக தேய்ந்தும், இவற்றிற்கிடையில் இருந்து கலை இலக்கியங்களை வளர்க்கத் தொடங்கினர். அந்த புகலிட இலக்கியவாதிகளில் அனைத்துச் சாதியினரும் இருந்தனர். விளிம்புநிலை வாழ்க்கையை வாழ்ந்தனர். பின்னரான காலத்தில் குடும்பம், பிள்ளைகள் என்று பலர் தமது சொந்தசாதி/மதப் பெருமிதங்களில் திளைத்தாலும், புகலிட இலக்கியம் என்பது விளிம்புகளின் உரையாடலாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றது.

3.

ந்த புலம்பெயர் X புகலிட இலக்கிய வேறுபாடுகள் 2000களின் பின் மெல்ல மெல்லக் கரைந்து போயிருந்தது. ஏனெனில் பொருளாதாரவசதி காரணமாக புலம்பெயர்ந்தவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 1990/2000 பின்னரான காலம் ஈழத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஈழத்தமிழரையும் அகதிகளாக்கியுமிருந்தது. போரால் பாதிக்கப்படாத தமிழர்கள் இல்லை என்னுமளவுக்கு எல்லோரையும் யுத்தம் அலைய வைத்தது. ஆக 2000 பிறகான காலத்தில் அவரவர் விரும்பியமாதிரி புலம்பெயர், புகலிட இலக்கியம் என்று இதன் வரலாற்றை அவ்வளவு முக்கியப்படுத்தாது தம் விருப்பின்போக்கில் பாவிக்கத் தொடங்கினர்.

80களில் நடந்த இன்னொரு பெரும் புலம்பெயர்வு இந்தியாவை நோக்கியது. அதற்கு முன்னர் சாஸ்திரி-சிறிமாவோ ஒப்பந்தம் நம்மோடு ஒன்றாக நூற்றாண்டுகளாக வாழ்ந்த மலையகத்தமிழர்களை நாடற்றவர்களாகியது. அவர்களின் ஒருபகுதியை இந்தியாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தது. அந்தத் துயருக்கு நமது சில ஈழத்தமிழ்த்தலைவர்களும் காரணமாக இருந்தார்கள் என்பதை வரலாறு என்றும் மன்னிக்கவும் போவதில்லை.

அதற்குப் பின் 80களில் இலங்கையின் எல்லாப் பகுதியிலிருந்தும் பலரை இந்தியாவுக்கு அகதிகளாக யுத்தம் அனுப்பிவைத்தது. அங்கிருந்து வசதி வாய்ப்புக்களைப் பயன்படுத்தி சிலர் மேற்குலகிற்குத் தப்பியோட, பெரும்பான்மையினர் அகதி முகாமிற்குள்ளும் எவ்வித அடிப்படை வசதியோ, தனி மனித சுதந்திரமோ கிடைக்காமலே வாழவேண்டி வந்தது. இதன் உச்சக் கொடுநிலை ராஜீவ்காந்தியின் மரணத்தோடு வந்து சேர்ந்தது. இன்று எந்த மேற்கு நாடாயினும் நாம் அங்கே அகதியாகப் போனால் ஆகக்குறைந்தது அடிப்படை மனித வசதிகளுடன் வாழமுடியும். ஆனால் கணத்துக்கு கணம், தொப்பூழ்கொடி என்று உருகுகின்ற தமிழக மக்களாலோ, அரசாலோ இவர்கள் சக இந்தியர்களாக வாழ்வதற்கான எந்த வசதியும் ராஜீவ்காந்தியின் மரணம் முடிந்து 30 ஆண்டுகள் கடந்தபின்னும் செய்யமுடியாது இருப்பதென்பதுதான் எவ்வளவு துயரமானது.

இத்தனைக்கும் திபெத்திய மக்களையும், பங்களாதேச மக்களையும் குறிப்பிட்ட ஆண்டுகள் இம்மண்ணில் வாழ்ந்தபின் தம்மைப் போன்ற சக இந்தியர்களாக மாற வாய்ப்புக்கள் கொடுக்கும் இந்திய ஒன்றிய அரசு, அகதிகளுக்கான அடிப்படை உரிமையைக் கூட ஈழத்தமிழ் அகதிகளுக்கு இன்னமும் கொடுக்கத் தயாரில்லை. இப்போதும்  இந்திய உளவுத்துறையின் விசாரிப்புக்களும், கண்காணிப்புக்களும் இருக்கும் அகதி முகாமில் இருந்து எவர் நிம்மதியாக எழுத முடியும்? முகாமை விட்டு வெளியில் வந்தால் கூட உரிய எந்த ஆவணங்களுமின்றி 'தலைமறைவு' அகதிகளாகவே அவர்கள் வாழவும் வேண்டியிருக்கின்றது.

இதுகுறித்து யார் வெட்கப்படவேண்டும்? யார் அவமானப்பட வேண்டும்? நமது நிலத்தில் நமது சகோதரர்களை, நம்மைப் போன்று சரிநிகராக வாழவேண்டிய ஈழத்தமிழர்களை இப்படி நாம் நடத்தவேண்டி இருக்கிறதே என்று தமிழகத்தவர்கள் அல்லவா தலைகுனிய வேண்டும். கனடாவில் ஆதிக்குடிகளை எப்படி வெள்ளையினத்தவரும், பிரெஞ்சுக்காரர்களும் நடத்தினர் என்று வெட்கப்படவேண்டியது நம்மைப் போன்ற கனடிய குடிமக்களே தவிர அந்தப் பூர்வீகக் குடிகள் அல்ல.

ஆனால் இப்போது என்ன நடக்கிறது. தமிழகத்தில் இருக்கும் சிலர் இதுகுறித்து எந்த அவமானமும் வெட்கமும் அடையாது புலம்பெயர்ந்த நமக்கு பாடங் கற்பிக்க 'புதிய தீர்க்கதரிசிகளாக' வருகின்றார்கள். புலம்பெயர் இலக்கியமா, அகதி இலக்கியமா என்று மயிர்பிளக்கும் விவாதங்களை நடத்தி நம்மையின்னும் பிளவுபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள். போரின் எந்தத் துளியும் தீண்டிப் பார்த்திராத, அதன் மனவடுக்களை அறியாத நீங்கள் எங்களுக்கு அறிவுரை சொல்ல வருவது எவ்வளவு கேவலமானது என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?

ஆதிக்கசாதிக்காரனாக இருந்துகொண்டு அந்த privilegeகள் அறியாது , ஒரு தலித்துக்குப் பாடஞ் சொல்ல வந்தால், நீங்கள் பேசும் மானிடத்தின் எந்த மேன்மையையும் பேசத் தகுதியற்றவரே. அதுபோலவே இதுவும் உங்களின் privileges உங்களுக்குத் தரப்பட்ட உரிமைகளல்ல.

இத்தனை காலமும் ஒடுக்கப்பட்ட அகதி முகாம் குரல்கள் (யார் ஒடுக்கியது? நீங்களேதான்) இப்போது பொதுவெளிக்கு வரத் தொடங்கியிருக்கிறது. முகாங்களிலிருந்து வரும் குரல்களை தொடக்க கால பத்தினாதனின் எடிட் செய்யப்படாத பனுவல்களிலிருந்து, அண்மைக்கால விஜிதரனின் எழுத்துக்கள் வரை பெரும்பாலானவற்றை என்னைப் போன்றவர்கள் கவனித்துக்கொண்டே வருகின்றோம். அவை குறித்து அவ்வப்போது எழுதியும் இருக்கின்றோம்.

இனியான காலத்தில் அதிகம் ஒலிக்கவேண்டிய இந்த முகாம் வாழ்க்கைக் குரல்களை, யாரேனும் புலம்பெயர்ந்தவரோ, புகலிடத்தவரோ வரவேற்காதவிடத்து அவர்களையும் நாம் கேள்வி கேட்போம், தள்ளிவைப்போம். ஒருகாலத்தில் சிறுபான்மையினர் என்றும், ஒடுக்கப்பட்டோர் என்றும் பஞ்சமர் என்றும் அழைக்கப்பட்டுக் கேவலப்பட்டவர்கள் தமது குரல்களை உயர்த்தியபோது எல்லா ஆதிக்கசாதிகளும் பம்மிப் பதுங்கின அல்லவா. அவ்வாறே இந்த அகதிமுகாமின் குரல்களும் ஓங்கி ஒலிக்கட்டும். குரலற்றவர்களின் குரலான அவர்களுக்குத் துணையாக இருப்பதை விட நம்மைப் போன்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு வேறு எது நிம்மதியைத் தரப்போகின்றது. ஆனால் வெளியில் இருந்து கொண்டு எங்களுக்குப் பாடங்கற்பித்தால், முதலில் உங்கள் வீட்டைச் சுத்தப்படுத்தி, அகதி என்று சொல்ல இன்றும் அகதிகளாக இந்தியாவில் இருப்பவர்க்கும், என்னைப் போன்று போரின் நிமித்தம் அலைந்தவர்க்கும் மட்டுமே உரிமை இருக்கின்றதே தவிர, தமிழ்நாட்டில் சொகுசாக இருந்துகொண்டு, உங்கள் அரசியல் சுயநலங்களுக்காய் நம்மைப் பாவித்துக்கொண்டிருக்கும் உங்கள் எவருக்கும் நம்மை அகதி என்று அழைக்க உரிமையில்லை என்றும் தெளிவாகச் சொல்லி வைப்போம்.

நாளை இந்தியாவின் அகதி முகாங்களில் இருந்து வெளிவரும் குரல்கள், தம்மை அகதிக் குரல்களாக அடையாளப்படுத்த விரும்பினால் என்ன, இல்லை புகலிடக் குரலாக அடையாளப்படுத்த விரும்பினால் என்ன, அவர்களுக்கான தோழமையுணர்வைக் கொடுக்க நாம் என்றும் துணையிருப்போம். அதில் எந்த மறுபேச்சுக்கும் இடமில்லை.

*********************

(Jan 21, 2022)

கார்காலக் குறிப்புகள்

Monday, March 20, 2023

1.

கரிச்சான் குஞ்சின் 'பசித்த மானுடம்' எனக்குப் பிடித்த ஒரு நாவல். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' கணியன் பூங்குன்றன் போல, 'புயலிலே ஒரு தோணி' சிங்காரம் போல, 'பசித்த மானுடம்' என்கின்ற புதினத்தோடு கரிச்சான் குஞ்சு, அவரின் வாழ்நாளைத் தாண்டி  நிலைத்திருக்கக்கூடியவர் என்பது என் வாசிப்பின் துணிபு. அப்படி ஆதவனை காலங்களில்  ஏந்திச் செல்ல 'காகித மலர்களும்', 'என் பெயர் ராமசேஷனும்' நமக்குப் போதும். 


கரிச்சான் குஞ்சு 'பசித்த மானுடத்தை'த்  தவிர்த்து வேறு சில சிறுகதைகளை எழுதியிருப்பாரென்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அவரின் முழுத்தொகுப்பை வாசிக்கும்போது, அவர் கிட்டத்தட்ட 99 கதைகள் எழுதியிருக்கின்றார் என்பதைப் பார்க்க மலைப்பாக இருக்கின்றது. இன்னமும் தொகுக்கப்படாத கரிச்சான் குஞ்சின் கதைகள் எங்கேயும் இருக்கக்கூடுமென்று தொகுப்பாளர்கள் கூறுவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.


எனக்கு எந்தப் படைப்பாளியினதும் முழுத்தொகுப்புக்களை வாசிப்பதில் தயக்கமிருக்கும். தனித்தொகுப்பாக ஒருவரின் படைப்புக்களை வாசிப்பதில் இருக்கும் ஆர்வம் முழுத்தொகுப்பாக வாசிப்பதில் இருப்பதில்லை. அதை பத்து வருடங்களுக்கு முன்னர் வந்த 'பூமணியின் கதைகள்', மு.தளையசிங்கம் படைப்புகள்' 'சு.வில்வரத்தினம் கவிதைகள்' போன்றவற்றிலே கண்டடைந்துவிட்டதால் முழுத்தொகுப்பின் பக்கம் அவ்வளவாகப் போவதில்லை. ஒரு கதையில் கூட அலுப்படைய வைக்காது எழுதக்கூடியவர் என்று தயக்கம் எதுவுமின்றி சொல்லக்கூடிய என் விருப்புக்குரிய அம்பையின் முழுத்தொகுப்பை வாங்கி வாசிப்பதைத் தவிர்த்துக் கொண்டு இருப்பதற்கும், முழுத்தொகுப்புக்களின் மீது எனக்கு இருக்கும் தனிப்பட்ட இந்த ஒவ்வாமை மட்டுந்தான் காரணம்.


இப்போதும் கரிச்சான் குஞ்சின் கதைகளை முழுதாக வாசித்துவிடவில்லைத்தான். 'பசித்த மானுடம்' போல காலம் தாண்டிய சிறுகதைகளை கரிச்சான் குஞ்சு எழுதியிருக்கின்றார் என்று அறுதியாகச் சொல்லமுடியாவிட்டாலும் அவரின் 'அன்றிரவே' (1983) தொகுப்பில் வந்த கதைகள் முக்கியமானவை. 'அன்றிரவே' என்று 1955 இல் எழுதப்பட்ட கதையே அன்றைய காலத்தில் வித்தியாசமானது என்று சொல்லமுடியும். அந்தக் கதையின் தொடக்கமே 'வெங்கட்ராம் இந்தக் கதையை எழுதிவிட்டான்' என்று சொல்லப்பட்டே கதை சொல்லப்படுகின்றது. 


நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்டவர் கரிச்சான் குஞ்சு என மாறியது கு.ப..ராவின் மீதிருந்த பற்றினால் என்பது நாமறிந்ததே. கு.ப.ரா தொடக்க காலத்தில் கரிச்சான் என்ற பெயரில் எழுதி வந்தவர். கு.ப.ராவின் அணைப்பில் இருந்து எழுந்தவர்களென கரிச்சான் குஞ்சு, எம்.வெங்கட்ராம், தி.ஜானகிராமன் என்பவரைச் சொல்லலாம். கரிச்சான் குஞ்சை, கு.ப.ராவிடம் அறிமுகம் செய்தது தி.ஜானகிராமன். கு.ப.ரா கொடுத்த உற்சாகத்தில் எழுதத்தொடங்கியவர் கரிச்சான் குஞ்சு. 


20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதுவரை மரபுகளுடனும், சாதி/மத வேர்களுடனும் இருந்த ஆதிக்கசாதியினர், தம்மைக் கேள்விக்குட்படுத்த வேண்டிய தேவை விரும்பியோ/விரும்பாமலோ ஏற்படுகின்றது. அந்த விரிசலில் மேலெழுந்த வந்த ஒருவராக கரிச்சான் குஞ்சின் எழுத்துக்களைப் பார்க்கின்றோம். அவரின் இளமைக் காலத்தில் மரபை/மதத்தை/சுயசாதியை கேள்விக்குட்படுத்தும்/சுயஎள்ளல் செய்யும் கரிச்சான் குஞ்சு பிறகான காலத்தில் சற்று மரபின் பக்கம்  -தனக்குள்ளே ஆழ்கின்றபோது- அதிகம் சாய்வதையும் காண்கின்றோம்.  


இன்றைய காலத்திலேயே வெளியே 'எல்லா விடயங்களிலிருந்தும் விட்டு விடுதலையாகிவிட்டோம்' என்று பிரகடனம் செய்தபடி சுயசாதிகளில் திருமணம் செய்தபடியும், சீதனம் வாங்கிக்கொண்டு, சாதியெதிர்ப்புப் போராளிகளாகவும், பெண்ணுரிமை பேசுபவர்களாகவும் பலர் இருக்கும்போது அந்தக்காலத்தைய கரிச்சான் குஞ்சின் இந்தச் சாய்வு அவ்வளவு பெரிய விடயமில்லை. லெளதீகத்தில் தன் சுயசாதி சார்ந்த அடையாளங்களைக் காவியபடி  கரிச்சான் குஞ்சு இருந்தாலும், இடதுசாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் எல்லாம் பங்குபெற்றியிருக்கின்றார் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த வித்தியாசமான கலவையே கரிச்சான் குஞ்சின் கதைகளிலும் வெளிப்படுகின்றது.


2.


கரிச்சான் குஞ்சின் சிறுகதைத் தொகுப்பொன்றுக்கு முன்னுரை எழுதிய ஆதவன் கரிச்சான் குஞ்சின் கதைகள் பற்றிய ஒரு முக்கிய அவதானத்தை முன்வைக்கின்றார். இன்று யதார்த்தவாதக் கதைகள் என்றால் என்ன, இயல்புவாதக் கதைகள் என்றால் என்ன உரையாடல்கள் நடக்கும்போது, ஆதவன் அன்றே கரிச்சான் குஞ்சின் கதைகள் இயல்புவாதக் கதைகள் என்று அடையாளப்படுத்துகின்றார். அதற்கு ஓர் உதாரணமாக 'பித்தப்பசி' என்கின்ற கதையை முன்வைக்கின்றார். ராஜூ என்கின்ற ஆணுக்கு பத்மா என்ற மனைவியும் சில குழந்தைகளும் இருக்கின்றனர். பத்மா தற்சமயம் ஒரு குழந்தையும் பெற்றிருக்கின்றார். பிள்ளைகளையும், பத்மாவையும் கவனித்துக்கொண்டிருந்த ராஜூவின் தாயார் ஒரு மரண நிகழ்வுக்காக அவரின் ஊருக்கு இரண்டு மூன்று நாட்கள் செல்ல வேண்டியிருக்கின்றது. ராஜூ நம்மைப் போன்ற  வீட்டு வேலை எதிலும் பங்காற்றாத ஆண். ராஜூவின் தாயார், உன் மனைவியைக் கஷ்டப்படுத்தாது, உன் பிள்ளைகளைப் பார்த்து அவளுக்கு உதவியாக இரு' என்று சொல்லிவிட்டுப் போகின்றார். 


பத்மாவிற்கு உடம்பு சரியில்லை, அத்தோடு மூன்று பிள்ளைகளையும் பார்க்கவும் வேண்டும். ராஜூ ஒவ்வொருமுறையும் ஏதாவது உதவி வேண்டுமா வேண்டுமா என்று கேள்வி கேட்டுவிட்டு வழமையாக எப்படி இருப்பானோ அப்படியே இருக்கின்றான். தனது உணவைக் கூட, எடுத்துப் போடாது பத்மாவே அவனுக்குப் பரிமாற வேண்டியிருக்கின்றது. உணவுண்டபின் அடுத்த விருப்பமான தேகவேட்கை ராஜூவிற்குள் பொங்குகின்றது. பத்மா உண்மையிலே அலுப்பாக இருப்பதால் கொஞ்சம் மறுக்கின்றாள். ராஜூவிற்குக் கோபம் வருகின்றது. வீட்டை விட்டு வெளியேறுகின்றான். அப்போது கூட வழமை போல எல்லாம் மறந்து தன்னை வீட்டுக்குள் பத்மா அழைப்பாள் என்று எதிர்பார்க்கின்றான். ஆனால் அது நடக்கவில்லை. பிறகு வெளியே அலைந்து திரிந்து வரும் ராஜூவிடம், பத்மா தன் அலுப்பின் காரணமோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ மன்னிப்புக் கேட்பதில்லை. அப்படியே தூங்கிவிடுகின்றாள். அத்தோடு கதை முடிகின்றது. 


இங்கே கரிச்சான்குஞ்சு என்கின்ற படைப்பாளி  எந்த உரிமையும் எடுத்துக் கதையில் குறுக்கிடுவதில்லை. ஆதவன் குறிப்பிடுதைப் போல இங்கே ராஜூ ஒரு வில்லனாகச் சித்தரிக்கப்படுவதில்லை. பத்மா கூட ஒரு சொற்பொழிவு ஆற்றுவதில்லை. 'ஆசிரியர் ஒதுக்கமாகப் புற நிகழ்ச்சிகளை மட்டும் விவரித்து அழுத்தாமனதொரு சூழலை உருவாக்கும் இந்த நாச்சுரஸிஸ பாணியை' கரிச்சான் குஞ்சு கையாள்கின்றார் என்று ஆதவன் குறிப்பிடுகின்றார்.


முழுத்தொகுப்புக்கள் ஒருவகையில் படைப்பாளிகளின் முழுப்பரிணாமத்தையும் நம் முன்னே வைப்பதுபோல, அவர்களின் பலவீனமான படைப்பின் பக்கங்களையும்  எளிதாகக் காட்டிவிடக்கூடியவை. அதுவும் ஒரு படைப்பாளி காலமானபின், அவர் வாழுங்காலத்தில் தன் தொகுப்பில் சேர்க்க விரும்பாத கதைகளை எல்லாம் ஒரு தேர்ந்த தொகுப்பாளர் சேர்த்துவிடும்போது, நாம் நல்லதில்லாத கதைகளையும் வாசிக்க நேர்ந்துவிடுகின்றது. அந்தப் பலவீனங்களையும் தாண்டி ஒரு படைப்பளி விகசித்து எழுவதென்பதுதான் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இருக்கக்கூடிய பெரும் சவால். 


இதை வேறுவிதத்தில் 'ஒரு எழுத்தாளனின் எல்லாக் கதைகளையும் எல்லா வாசகர்களும் ரசிக்க வேண்டுமென்று கட்டாயமில்லை. அத்தகைய வீரவழிபாட்டை, நுட்பமான ஒரு இலக்கியாசிரியன் ரசிப்பவனுமில்லை' என்று ஆதவன் எழுதியிருப்பது இன்றைய காலத்துக்குப் பொருத்தமானதுதான். காதலிகளை அரவணைத்துக் கொண்டிருந்தால் அது தெய்வீக அனுபவம், நம்மைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஒருவர் தன் படைப்புக்களை ஆரத்தழுவிக் கொண்டிருந்தால், இலக்கியம் மட்டுமில்லை  அவரவர்க்கிருக்கும்  துணைகளும் பாவம் என்று நாம் எண்ணிக்கொள்ள வேண்டியதுதான். 


**********************

(Dec 27, 2022)

இலங்கையில் நடந்தது என்ன?

Saturday, December 31, 2022


லங்கையில் நிகழ்ந்தது/நிகழ்ந்து கொண்டிருப்பவை பின்நவீனத்துவ காலகட்டத்துக்கான மிகச் சிறந்த உதாரணம். இதை எந்த மார்க்சியரும் ஒரு இடதுசாரிப் புரட்சி என்று முழுமையாக உரிமை கோரமுடியாது. மார்க்ஸியர்களின் பங்களிப்பு இருக்கின்றதென -அது எவ்வகையான போராட்டமாக இருப்பினும்- சொல்லமுடியுமே தவிர இது முற்றுமுழுதான இடதுசாரிப் போராட்டம் அல்ல என்பது எவருக்குமே எளிதாகப் புரியும்.


1968 இல் பாரிஸில் மாணவர்கள் போராடத் தொடங்கியபோது, சார்த்தர் போன்ற அறிவுஜீவிகள் அது ஒரு பெரும் புரட்சியாக மாறுமெனக் கனவு கண்டார்கள். ஆனால் அது அப்படியாக நிகழவேயில்லை. பின்னர் ஈரானில் கலாசாரப்புரட்சி நிகழ்ந்தபோது ஃபூக்கோ போன்றவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அதற்கு ஆதரவளித்தனர். அதுவும் நம்பியதற்கு மாறாக வேறொரு திசையில் சென்று முடிந்தது. அண்மையில் நடந்த அரபு வசந்தம் மிகுந்த நம்பிக்கையோடு முகிழ்ந்தபோதும் பின்னர் திசைமாறியதை அவதானித்திருப்போம்.

இலங்கையில் நடந்ததைப் போல மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவருமென என்னைப் போன்றவர்கள் நம்பிய occupy wall street ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம்பிக்கையுடன் நிகழ்ந்தபோதும், பணக்கார 1% வீதத்துக்கு எதிரான 99% க்கு ஆதரவாக நடத்தப்பட்டபோதும், எவ்விதப் பெரும் மாற்றங்களையும் காட்டாமலே முடிந்துபோனது. இந்தப் போராட்டங்களை ரொறொண்டோவிலும், லண்டனிலும் நேரில் பார்த்திருக்கின்றேன். முற்றுமுழுதான முதலீட்டிய நாடுகள் நாம் விரும்பும் மாற்றங்கள் நிகழாது மிகக் கவனமாக இவ்வகைப் போராட்டங்களைப் பார்த்துக்கொள்ளும். நாசூக்காய் இவ்வகைப் போராட்டங்களை அவற்றுக்குக் கையாளவும் தெரியும். ஆனால் இந்தப் போராட்டங்கள் நடந்தபோது கைக்கொள்ளப்பட்ட பல விடயங்களையே GotaGoGama காரர்கள் உள்வாங்கியிருந்தனர் என்பது வெளிப்படையானது. ஒவ்வொரு போராட்டங்களும் அவை தோற்றவையாக இருந்தாலும் நாம் கற்றுக்கொள்வதற்கு நிறையப் பாடங்களை வைத்திருக்கவே செய்கின்றன.

ஆக இனியான மாற்றங்கள் இப்படியாக சடுதியாக நிகழுமே என்பதைத்தான் பின்நவீனத்துவமும் பின்நவீனத்துவவாதிகளும் எதிர்வு கூறியிருந்தனர்.

நமக்கு ஏற்றுக்கொள்ளக் கஷ்டம் என்றாலும் லியோதார்த் 'பின்நவீனத்துவ நிலவரத்தை'ப் பற்றிப் பேசும்போது மார்க்ஸிசம் உள்ளிட்ட பெருங்கதையாடல்களை நிராகரிக்கின்றார். அதற்கு முக்கிய காரணங்களாக தொழில்நுட்பத்தையும், வெகுசன ஊடகங்களின் பெருக்கத்தையும் (1970 இன் பிற்பகுதியில்) அவர் முன்வைக்கின்றார். அன்று லியோதார்த் எதிர்வுகூறியதை இன்றைய சமூகவலைக்காலத்தில் நடக்கும் போராட்டங்களினூடாகத் தெள்ளிடையாகப் பார்க்கின்றோம்.

நான் மிகவும் நெருக்கமாக உணரும் தெரிதா எதிர்காலம் என்பதே நாம் நினைத்துக் கொண்டிருக்கும் எதிர்காலம் அல்ல என்று கூறிவிட்டு அருமையாக ஒரு விளக்கம் தருவார். எதிர்காலம் என்பது கணிக்கக்கூடியதும், திட்டமிடப்படக்கூடியதும், அட்டவணைப்படுத்தக்கூடியதும்.... ஓரளவு எதிர்வுகொள்ளக்கூடியது என்பதை தெரிதா மறுக்கின்றார். இது எதிர்காலம் என்றாலும் எதிர்காலம் என்று நாம் நினைத்துக்கொள்கின்ற எதிர்காலத்தைத் தாண்டிய எதிர்காலமே (future beyond this known future), தான் குறிப்பிடுகின்ற 'எதிர்காலம்' என்கின்றார் ('மற்றதுகளின் வருகைக்காய் காத்திருத்தல்'). அதாவது முற்றுமுழுதாக எதிர்பாராத ஒரு வருகைக்காக காத்திருப்பதைப் போன்றதே எதிர்காலம் என்கின்றார் தெரிதா.

தெரிதா சொல்வதற்கு நிகரான ஒன்றுதான் இப்போது இலங்கையில் நிகழ்ந்துகொண்டிருப்பது. முற்றுமுழுதாக எதிர்பாராத ஒரு வருகையாக இந்தப் போராட்டம் நிகழ்ந்து, நவீன துட்டகைமுனுவாக சிறுபான்மையினரின் குரல்களை நசுக்கித் தங்களுக்கான மகாவம்சத்தை எழுதியவர்களை அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களும் சேர்த்து வீழ்த்தியிருக்கின்றார்கள்.

(ஒருகாலத்தில் மிக ஆர்வமாகக் கற்றுக்கொண்டிருந்த பின்அமைப்பியல்/பின்நவீனத்துவத்தைக் கற்பதிலிருந்து என்றோ விலகி வந்துவிட்டேன். ஆனால் இன்றும் எனக்கும் அவை நெருக்கமானவை. இலங்கைச் சூழலில் இப்போது நிகழும் மாற்றங்களை விளங்கிக்கொள்பவர்கள் இந்தப் பின்னணியோடும் ஆய்வுகளைச் செய்யவேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட அவசரக் குறிப்பே இது)

*****************

(July 14, 2022)

அ.இரவியின் 'PKM என்கின்ற புகையிரத நிலையம்'

Thursday, December 22, 2022

 1.

அ.இரவியின் பெரும்பாலான படைப்புக்களை வாசித்திருக்கின்றேன். அவர் என் தமிழாசிரியர் என்பதால் மட்டும் அல்ல, அவரின் சிறுகதைகளையும், பத்தியெழுத்துக்களையும் 'சரிநிகரில்' வாசிக்கத் தொடங்கிய என் பதினைந்து/பதினாறுகளிலேயே அவரென்னை வசீகரித்தவர். 'காலம் ஆகி வந்த கதை' அவரின் முக்கிய படைப்பென்பேன். 'பாலைகள் நூறு'க்கு விரிவாக என் வாசிப்பைப் பதிவு செய்திருக்கின்றேன். அவரின் '1958' முக்கியமான வரலாற்று ( 1956ம் ஆண்டு தனிச் சிங்கள அமுலாக்கத்தின் பின் வந்த இனக்கலவரம் ) நிகழ்வைப் பதிவு செய்கின்றதெனினும், அதில் துருத்திய சில சிக்கல்களையும் எழுதியதாகவும் நினைவு.


அண்மையில் வெளிவந்த 'PKM என்கின்ற புகையிர நிலையம்' என்கின்ற படைப்பை என்ன வகைக்குள் அடக்குவதென்று சற்றுக் குழப்பமிருந்தாலும் ஒரு நெடுங்கதை அல்லது குறுநாவல் என்ற வகைக்குள் வைத்துப் பார்க்கலாமெனத் தோன்றுகின்றது. 


இது ராசா என்றழைக்கப்படுகின்ற சிறுவன் வயதுக்கு வரும் ஒரு புதினமெனச் சொல்லலாம் (coming of age). ஆனால் இதில் ராசா என்பவனின் குழந்தைப் பருவம், பதின்மம் ஆகுவதைக் கவனப்படுத்துவதை விட அவனின் மாமாவாகிய வாழ்க்கையே அதிகம் கவனப்படுத்துகின்றது. ஒருவகையில் இது அந்த மாமாவின் கதையெனத்தான் அடையாளப்படுத்த வேண்டும். பிள்ளைகளே இல்லாத அந்த மாமாவை தன் பிள்ளைகளைப் போல ராசாவின் மீதும், ராசாவின் சகோதரியின் மீதும் பாசம் காட்டுகின்றார். இந்தப் புதினம் எனக்குத் தெரிந்த கிராமங்களின் பின்னணியில்  எழுதபப்ட்டதால், என்னால் எனக்கு அறிமுகமான இடங்களின் வரைபடங்களைப் பிந்தொடருவதும் ஒருவகையில் சுவாரசியமாகவும் இருந்தது. 


ஒன்று எனது அம்மாவின் ஊருக்கு அருகிலிருந்த கீரிமலை. மற்றது நாங்கள் யுத்தத்தால் இடம்பெயர்ந்து இருந்த அளவெட்டி. எப்படி சிறுவயதில் செங்கை ஆழியானின் 'நடந்தாய் வாழி வழுக்கையாறு' வாசித்தபோது கதை நிகழ்வது எனக்குத் தெரிந்த வழித்தடங்களென ஒருவகை சிலிர்ப்போடு வாசித்தேனோ, அவ்வாறான ஒருவித நிறைவோடு இரவியின் இந்தப் புதினத்தையும் வாசித்தேன்.


ராசாவின் சின்னமாமா, அவர்  ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிற்பாட்டி, ரெயில் நிலையத்தில் வேலை செய்கையில் 1956 இல் கொண்டு வரப்பட்ட தனிச்சிங்களத் திட்டத்தில் அரசாங்க வேலை இழப்பது, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைந்த குடிக்கு அவர் அடிமையாதல், தன் குடும்பத்தினர் மீது வன்முறையைப் பிரயோகித்தல், அதன் நிமித்தம் மனப்பிறழ்வுக்கு ஆளாதல் என அருமையான மனிதனின் வீழ்ச்சியை இந்தப் புதினத்தில் காண்கின்றோம். இந்தப் புதினம் அந்த மாமாவின் புறவயமான உலகை மட்டுமில்லை, இதில் வரும் மற்றப் பாத்திரங்களையும், கதை நிகழும் சூழல் பின்னணியையும் நுட்பமாக விபரிக்கின்றது. கீரிமலைக் கேணிக் குளியல்கள், யாழ்ப்பாணத்துக்குரிய பிரத்தியேக உணவு வகைகள் என்பவை சிலாகித்துச் சொல்லவேண்டியவை. ஆனால் இதன் சிக்கல் என்னவென்றால் எந்தவகையில் புறவயமாகக் கதை சொல்லமுயன்றதோ, அதேயளவுக்கு இது பாத்திரங்களின் அகவயத்துக்குச் செல்ல அவ்வளவாக முயற்சிக்கவில்லை என்பதேயாகும்.



2.


தமிழில் இப்போது விமர்சனக் கோட்பாடுகளில் ஒரு பகுதியாக இருக்கும் அழகியல் விமர்சனத்தையே ஒரு தனித்த விமர்சனமாகக் காட்டும் அபத்தம் இருப்பதைக் கண்டுகொள்கின்றோம். அழகியலும் விமர்சனக்கோட்பாடுகளில் ஒரு பகுதியே தவிர அதுமட்டுமே படைப்புக்களைப் பார்க்க அளவீடாக இருப்பதில்லை. அதேபோன்று ஒரு சில பாத்திரங்கள் மட்டும் இருந்து ஒரு புதினத்தை எழுதிவிட்டாலே 'தட்டையானது' என்று சொல்கின்ற எரிச்சலான குரல்களையும் பார்க்கின்றோம். என் பார்வையில் 'தட்டையானது' எதுவெனில், வாசிக்கும் நம்மை நாவல்களிலிருக்கும் பாத்திரங்களுக்குள் ஒன்றிக்கவிடாது புறம்தள்ளிக் கொண்டிருப்பவற்றை என்பேன். 


ஈழத்து/புலம்பெயர் நாவல்களில் முக்கிய பலவீனமாகப் பார்ப்பது இப்படி நாம் புறவயமாகக் கதை சொல்லல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு அகவயமான தேடல்களுக்கு அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்பதாகும். இன்று ஒரளவு கவனம் பெற்ற புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் கூட இதில் அதிக விதிவிலக்குகளல்ல. அவர்களில் சிலர் இந்தப் பலவீனத்தை தமது கச்சிதமான எழுத்து நடையில் கடந்து செல்ல முயற்சிக்கின்றனரே தவிர, இன்னும் அகவயமான கதை சொல்லல் முறைக்கு ஆழமாகச் செல்லவில்லை என்றே சொல்வேன். 


இதை எப்படிப் புரிந்துகொள்வது என்பதற்கு நாம் நகுலனை, மெளனியை, லா.ச.ராவை வாசிக்கும்போது எளிதாக அறிந்துகொள்ளலாம். அவர்கள் நமக்குச் சொல்லும் புறவயமான கதைகள் மிகவும் சுருங்கியது. ஆனால் அகவயமான ஆழமான தேடல்களுக்கு அவர்கள் தம் பாத்திரங்களினூடாக நம்மை அழைத்துச் செல்கின்றார்கள். ஆகவேதான் அவர்கள் நமக்குப் பரிட்சயமற்ற சூழலை, மனிதர்களை, நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டு சென்றாலும், நமக்கு நெருக்கமான படைப்புக்களாக அவை இருக்கின்றன.  அதுவே, இன்றும் என்னைப் போன்ற அவர்களின் தலைமுறையைத் தாண்டிய பலரை அவர்களின் படைப்புக்களைத் தேடித்தேடி வாசிக்க வைக்கின்றது.  அவர்கள் காலத்தின் முன் இன்னமும் உதிராது புதிது புதிதாய் மலர்ந்தபடி இருக்கிறார்கள்.


இங்கே இரவியின் இந்தப்புதினம் சிறுவனின் அகவயமான எல்லாத் தேடல்களையும் புறவயமான நிகழ்வுகளில் மட்டும் கவனஞ்செலுத்திக் கடந்து போவதைக் கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அந்த மாமா என்ற பாத்திரத்திற்குள் உள்ளே இறங்காததால், அவரின் வீழ்ச்சியைக் கூட வாசிக்கும் நாம் இன்னொரு மூன்றாம் மனிதரின் சரிவாகப் பார்க்கின்றோமே தவிர, நம்மைப் போன்ற ஒருவரின் வாழ்வு இப்படி வீணாகிவிட்டதே என்ற கழிவிரக்கம் அவ்வளவு வராது தாண்டிப் போகின்றோம். இந்தப் புதினத்தில் அந்த மாமாவின் மீது அவ்வளவு காதலும், அதேசமயம் அவரின் வன்முறையைத் தாங்கியபடி இருக்கின்ற அந்த மாமி பாத்திரத்தை விரித்தெழுத எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருந்தும் அது தவறவிடப்பட்டிருப்பதும் கவலையானது.


இலக்கியப் படைப்புக்களால் ஆனாலென்ன, திரைப்படப் பிரதிகளாய் இருந்தாலென்ன, நம்மிடம் சொல்வதற்கு எண்ணற்ற கதைகள் -அதுவும் மூன்று தசாப்தகாலத்தை போருக்குக் காவுகொடுத்த- நம்மிடம் இருக்கின்றன. ஆனால் அதை எப்படிச் சொல்லப்போகின்றோம் என்பதும் எழுதுகின்ற/படைக்கின்ற நம்மெல்லோருக்கும் முன்னாலுள்ள சவால். அதையறியாதுவிடின், அதில் கவனங்கொடுக்காவிடின், நாம் அவ்வவ்ப்போது ஒன்றிரண்டு நல்ல படைப்புக்கொடுத்துவிட்டு வால் நட்சத்திரங்களாக மறைந்து விடுவோம் என்பதாகத்தான் ஆகிவிடும். சில படைப்புக்களை வாசிக்கும்போது அது எழுதியவர்களின் ஆன்மாக்களிலிருந்து விகசித்து எழுந்துவந்ததென்பதை  நாம் உணர்ந்து, சில கணங்களாவது அதை வாசித்து முடிக்கும்போது அப்படியொரு நிறைவு வந்து கண்களை மூடி யோசிப்போம் அல்லவா?  இன்று எண்ணற்ற படைப்புக்கள் வரும் சூழலில், அவை நிகழ்வது மட்டும் ஏன் அரிதாக இருக்கின்றது என்பது பற்றி நாம் நிச்சயம் யோசிக்க வேண்டும்.


000000000000000


(Dec 22, 2021)

இனியும் மலர்கள் விரியும், வாழ்வு துளிர்க்கும்!

Friday, December 16, 2022


1.


கரும்சாம்பல் மூடி மழை பொழிந்துகொண்டிருந்த வானம் சட்டென்று மாறி, வெயில் எறிக்கும் கதகதப்பான பொழுதானால் நீங்கள் என்ன செய்வீர்கள்? வேலையால் வீட்டுக்கு வந்ததும் வராததுமாய், நடப்பதற்கான காலணிகளை அணிந்தபடி, குளிருக்கு இடையில் 'வராது வந்த மாமணி'யாய் வந்த இந்த இதமான‌காலநிலையை வரவேற்கப் போவீர்களா, இல்லையா?


எந்த ஒரு விடயத்துக்கும் 'தொடக்க நிலைதான்' அறியமுடியா எல்லாச் சாத்தியங்களையும் கொண்டு வரும். ஆகவேதான் ஸென்னில் தொடர்ந்து தொடக்கநிலை மனதை (beginner’s mind) பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். கற்றுத் தேர்ந்துவிட்ட ஒரு மனதிலிருந்து புதிதாய் எதுவும் முகிழ அவ்வளவு சாத்தியமிருப்பதில்லை. இளவேனில் காலத்துக்கான துளிர்கள் மெல்ல அரும்புவது, அந்தத் ‘தொடக்கநிலை’யை நமக்குக் காட்ட விரும்பும் இயற்கையின் குதூகலம் போலும். 


இதற்கு முன் அந்த அரும்புகள் மரத்தின் எந்தப் பாகத்தில் மறைந்து இருந்தன. இனி தளிராகி, குருத்திலையாகி, கடும்பச்சை நிறமாவதற்கான பச்சையத்தை இந்தத் துளிர்கள் எதில் ஒளித்து வைத்திருக்கின்றன.


இதைத்தான் இன்னொருவகையில் ஸென் ‘நாம் இறப்பதுமில்லை, பிறப்பதுமில்லை’ என்று சொல்கின்றது. இதை வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் எடுத்து வாசித்தால் புரிந்து கொள்வதற்கு ஏதுமில்லை. நாம் பிறக்கும்போது அதுவரை எங்கோ ஒரு 'சூனியத்தில்' இருந்த ஒன்று உடல் என்கின்ற வடிவத்தைப் பெறுகின்றது. பின்னர் இறப்பின்போது மீண்டும் வெறுமைக்கு அல்லது சூனியத்துக்குத் திரும்பிப் போகின்றது. 


இல்லாமையிலிருந்து இருத்தல்களும், இருத்தல்களிலிருந்து இல்லாமைகளும் ஒரு வட்டமாக சுழன்றுகொண்டிருப்பதால் 'எதுவும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை' என்பதை, வார்த்தைகளின் எளிய அர்த்தத்தைத்தாண்டி, ஆழமாய் விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் அது அவ்வளவு எளிதானதும் இல்லை.


2.


வழமையாக ஒரு பூங்காவிலிருந்து இன்னொரு பூங்காவிற்கு நான்கைந்து கிலோமீற்றர்கள் நடப்பவன், ஆனால் இப்போது பாலத்துக்குக் கீழே திருத்தும் வேலை நடப்பதால், அந்தப் பாதையை இடையில் மூடிவிட்டார்கள். வேலை ஒன்றை எப்படி இழுத்து இழுத்துச் செய்வதில் நமது நகரத்தார் புகழ்மிக்கவர்கள் என்பதால் எப்படியும் இந்த கோடையில் அதைத் திறக்க மாட்டார்கள் என்பது உறுதியென அவன் நினைத்துக்கொண்டான். மேலும் புத்தரிலிருந்து மார்க்ஸ் வரை சொன்னது மாதிரி, ‘எதுவுமே நிரந்தரமில்லை, எல்லாமே மாறிக்கொண்டிருப்பவை' என்பதால் இது குறித்து எந்தப் பொல்லாப்புமில்லை. ஆனால் நமக்களிக்கப்படும் வாய்ப்புக்கள் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. சந்தர்ப்பங்கள் மாறமுன்னர் அதையதை அனுபவித்துவிடும் விழிப்பு இருத்தல் முக்கியம். அனுபவித்தவற்றை விட, தவறவிட்டவைகளின் கழிவிரக்கத்தில் கழிந்த கடந்தகாலங்களை எண்ணி அவனுக்கு மெல்லிய சிரிப்பும் வந்தது. வார்த்தைக்கும் வாழ்க்கைக்குந்தான் எவ்வளவு பெரிய‌இடைவெளி!


நல்லவேளையாக கடந்த கோடையில் இன்னொரு மாற்று பாதையைக் கண்டடைந்துவிட்டதால், அடைபட்ட வழி குறித்து கவலைப்படாது புதிதாய்க் கண்டுபிடித்துவிட்ட தடங்களில் அவன் நடக்கின்றான். அங்கே பெருமரங்களும், மழைநீர் சேர்ந்து சலசலத்தோடும் சிற்றாறும் இருப்பதால் அது ஓர் அருமையான வழித்தடம். ஆகவே ஒரு பாதை அடைபட்டால் எல்லாம் முடிந்துவிட்டதெனக் கவலைப்படத் தேவையில்லை. வேறொரு வழி நாம் அதுவரை கண்டுணராத‌புதிய அனுபவங்களைத் தருவதற்காக திறபடலாம். 


இது பாதைக்கு மட்டுமில்லை, வாழ்க்கைக்கும் பொருந்தும்.


நடப்பதற்கான ஒரு வட்டப்பாதையை வழமைக்கு மாறாக, நடந்து முடிக்கும் இடத்திலிருந்து தொடங்குகின்றான். அதே பாதை, ஆனால் வேறொரு கோணத்தில் பார்வைகள் மாறுகின்றன. முன்னர் ஏறவேண்டிய மேட்டு நிலம் இப்போது சரிவான பள்ளமாக‌-தேர்ந்தெடுத்த பாதையின் நிமித்தம்- புதிய அவதாரம் கொள்கின்றது. ஆக ஒரே பாதையில் நடந்திருக்கக் கூடியவர்கள், அவரவர்கள் தேர்ந்தெடுக்கும் திசையின் நிமித்தம் அதன் மேடு பள்ளமாகவும், பள்ளம் மேடாகவும் மாறும்போது, ஒருவர் தான் சொல்வது/பார்த்ததுதான் உண்மையென விவாதிப்பது எவ்வளவு தூரம் சரியான பார்வையென்பது கேள்விக்குரியதே. ஆகவேதான் ஸென், நல்லது, கெட்டது என எதையும் அடையாளப்படுத்த வேண்டாமெனச் சொல்கின்றது.  எதைக் காண்கின்றோமோ அதை அப்படியே பார்க்கச் சொல்கின்றது. எந்த லேபிள்களும் எதற்கும் ஒட்டாதிருக்கத் தெரிந்தவர்கள் மேன்மக்கள். 


ஒருவர் ஞானமடையத்தான் தியானம் செய்கின்றார் என்றால், அந்தக்கணத்திலேயே நிர்வாணம் அடைவதிலிருந்து அவர் விலகிப் போய்விடுவார் என திரும்பத் திரும்ப ஸென் நமக்குத் தெளிவுறுத்துகின்றது. 


மரங்கள் இன்னமும் முழுமையாகப் பசுமை போர்க்கவில்லை, ஆனால் பொன்மஞ்சள் நிறத் தளிர்கள் வரத் தொடங்கிவிட்டன. மனிதர்களே இல்லாத பொழுது இயற்கையை நிதானமாக இரசிக்க முடிகிறது. இன்னொரு வகையில் நாங்கள் எமது எல்லா 'பைத்தியக்காரத்தனத்தோடும்' தனிமையில்தான் இயல்பாக இருக்க முடிகிறது. நதி ஓடும் ஒலியை, அது உருவாக்கும் குமிழ்களை, வாத்துக்கள் பறந்து நீரில் சிறகுகள் நனைப்பதை என எல்லாவற்றையும் ஆறுதலாக அவதானிக்க அவனது மனதுக்குள் ஒரு வெம்மை பரவுகிறது 


வழமையாக நடக்கத் தொடங்கும் பாதையெனில் அங்கே ஒரு பெரும் சாம்பல்கல் இருக்கும். அதில் அமர்ந்தபடி நதியை இவன் பார்ப்பான். சிலவேளை அப்படியே விழிகளை மூடியபடி அமைதியில் அமிழ முயல்வான். ஒருநாள் இந்தச் சூழலில் அவ்வளவு காணமுடியாத ஒரு பச்சைப் பாம்பு அருகில் வந்து எட்டிப் பார்த்ததைக் கண்டு வெருண்டோடியிருக்கின்றான். பாவம் அந்தப் பாம்புதான் என்ன செய்யும். அதன் வசிப்பிடத்துக்கு மனிதன் ஒருவன் வந்து இடையூறு செய்தால் அது விநோதமாக வேடிக்கைதானே பார்க்கச் செய்யும்.


3.


'ஓநாய் குலச்சின்னம்' நாவலில் கால்நடைகளை மேய்த்தபடி புல்வெளிகளை அழியாமல் வைத்திருக்கும் நாடோடிகளுக்கு ஓநாய்கள் தெய்வத்துக்கு நிகர்த்தவை. ஒநாய்களைத் தேவையில்லாமல் கொன்றாலோ, பழிவாங்கினாலோ அவர்கள் டெஞ்ஞர் என்ற சொர்க்கத்துப் போகவே முடியாது. நாடோடிகளையும் அவர்களின் கால்நடைகளையும் அடிக்கடி காயப்படுத்திக் கொல்லும் ஓநாய்களுக்கே, தமது இறந்த உடல்களை இந்த நாடோடிகள் உண்ணக் கொடுக்கின்றனர். நன்றாக ஓநாய்களால் உண்ணப்படும் உடலே உடனே சொர்க்கத்துக்குப் போகும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆகவேதான் சீனக்காரர்களுக்கு நாய்களைப் பிடிப்பதில்லை, என்றாலும் சிலபகுதிகளில் நாய்களைச் சாப்பிடுவார்கள் என்று இந்த மங்கோலிய மேய்ச்சல்நில நாடோடிகள் அறியும்போது, 'எப்படி உங்களால் நீங்கள் வெறுக்கும் ஒரு பிராணியை பிறகு உணவாகச் சாப்பிட முடிகின்றது' என்று கேட்கின்றனர். 


இப்போது எதிர்த்திசையில் நடந்துகொண்டிருப்பதால், ஆறு ஓடும் கரையில் இருந்து 'ஸென் மனம்; தொடங்குபவர்களின் மனம்' கேட்கத் தொடங்குகின்றான். எப்போது எதில் அவன் அமிழ்ந்து தன்னைத் தொலைத்தானோ சட்டென்று கட்டுக்கயிறு இல்லாது வந்த நாயொன்றால் விழித்தெழுகின்றான். நாய்களைப் பிடிக்கும், ஆனால் சிறுவயதில் பல நாய்களிடம் ஆறாத்தழும்புகளையெல்லாம் பெற்றுவிட்டாதால், எப்போதும் ஒரு பயம் அவனுக்கிருக்கும்.  அந்த நாயை வளர்ப்பவர் தூரத்தில் வர, அருகில் வரும் நாயை அரவணைப்பதா, இல்லை துரத்துவதா என்ற குழப்பமெழ, தகாதகர் கூறிய மத்தியபாதையே நல்லதென துரத்துவதைப் போல மெல்ல pet செய்து விடுகின்றான்.


'அந்த மனிதன் சும்மா தன்பாட்டில் இருக்கின்றான், அவனையேன் கஷ்டப்படுத்துகின்றாய், அன்பே' என்று நாயின் சொந்தக்காரர் சொல்லியபடி வருகின்றார். 'பரவாயில்லை' என இவன் சொல்கின்றபோது, 'இந்த நாள் அழகான நாள்' என்று சொல்லியபடி அவர் கடக்கின்றார். இவன் நினைவுகளில் மூழ்கின்றான். 'ஓநாய்குலச்சின்னத்தில்' நாடோடிகளின் வாழ்க்கையைக் கற்க மங்கோலிய மேய்ச்சல் நிலம் செல்லும் சீன மாணவன் ஒரு ஓநாயை,  குகையில் இருந்து குட்டியாக எடுத்து வளர்க்கின்றான். அதற்கு பால் கொடுக்க ஒரு நாயைத் தேர்ந்தெடுத்து, அதன் பிற குட்டிகளோடு இந்த ஓநாயையும் சேர்த்துவிடுகின்றான். நாய் எப்படிப் பால் கொடுத்தாலும் ஓநாய் தன்னியல்பை விடாது மூர்க்கமாகவே நடந்துகொள்ளும். 


ஆண் என்பதாலோ அல்லது தன்னியல்பாகவே வந்துவிட்ட மமதையோடு அவன் போனால் கூட, தம் நெஞ்சங்களைத் திறந்து அரவணைத்த காதலிகளை நினைத்துக் கொள்கின்றான். தானொரு ஓநாய்தான், ஒருபோதும் கருணையுள்ள நாயாக மாறமுடியாது அதில் சந்தேகமில்லையென தனக்குத் தானே சொல்லிக் கொள்ளவும் செய்கின்றான்.


4.


ஜப்பானிய தேநீர் கலையை உலகிற்கு அறிமுகப்படுத்திய Sen Rikyu, ஒவ்வொரு தேநீர் நிகழ்வின்போதும்,  தான் ஒவ்வொரு கணங்களிலும் இறந்து பிறப்பதாகச் சொல்லியிருக்கின்றார். ஏனெனில் அவ்வளவு விழிப்புடன் அந்தத் தேநீர்க்கலையை நிகழ்த்தும் அற்புதம் பெற்றவர் அவர். தியானம் மூலம் வரும் விழிப்பும் இப்படி கணங்களில் இருந்து எழுவதேயாகும். இவ்வாறு கணங்களில் இருப்பையும் இறப்பையும் கண்டுணர்கின்ற Sen Rikyu, தன்னோடு சூழவிருப்பவர்களுக்கு ஒரு அருமையான தேநீர் விருந்தை இறுதியாகக் கொடுத்துவிட்டு தனக்கான தற்கொலையை நிதானமாகச் செய்து கொளகின்றார். ஒவ்வொரு கணங்களில் இருப்பையும், இறப்பையும் கண்டுணர்ந்தவர்க்கு, உடல் நீங்கிச் செல்லல் அவ்வளவு கடினமாக இருக்காது போலும்.


அவன் நடந்த தன் வட்டத்தைப் பூர்த்தி செய்யும் இடத்துக்கு வந்தபோது, நாயோடு எதிர்த்திசையில் போனவரை மீண்டும் சந்திக்கின்றான். எதிர்த்திசை என்றாலும் வட்டம் உங்களை மீண்டும் சந்திக்க வைக்கும். நல்ல மழை பெய்ததால் உலாப்போகும் பாதை பல இடங்களில் சகதியாக இருந்ததை அவன் ஏற்கனவே அவதானித்திருந்தான். நாயோடு வந்தவர், ‘நான் வந்தவழியில் சறுக்கிவிழுந்துவிட்டேன், நீ கவனமாக நடந்துபோ என்று தனது சேறு அப்பிய ஜீன்ஸைக் காட்டுகின்றார். ‘கவனமாக நடப்பேன், எச்சரித்தமைக்கு நன்றி’யென அவருக்கு விடைகொடுத்து நகர்கின்றான்.


வீட்டுக்கு வந்தவுடன் பின் வளவில் நேற்று சிறுதளிராக இருந்த மரத்தில் இருந்தவை அனைத்தும், பொன்மஞ்சள் சிற்றிலைகளாக‌விரிந்து காற்றில் அசைவதை ஒருநாளில் நடந்துவிட்ட அற்புதமென நினைக்கின்றான். ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கும்போது பின்னிரவில் ஆஸ்மா தொந்தரவு செய்கின்றது. தலையணைகளை முதுகில் வைத்து நிமிர்ந்து இருந்தால் கொஞ்சம் சுகமாகவிருக்கும். ஆனால் இதுவும் ஓர்நாளில் சட்டென்று நடந்துவிடக் கூடியது நிகழ்வுதான். ஒவ்வொரு கணத்திலும் இறப்பும் இருப்பும் நிகழ்ந்துகொண்டிருப்பதை உணர்ந்தால் இதையும் சகித்துக் கொள்ளலாம். ஓர் அழகான நாளைப் போல இதுவும் கடந்துபோகும்.


ஒருபோதும் தம்மை வந்தடையும் பாதைகளை மூடிவிடாத காதலிகளின் கருணையின் பொருட்டும், இனியும் மலர்கள் விரியும், வாழ்வு துளிர்க்கும்!


****************


(நன்றி: "அம்ருதா" -மார்கழி, 2022)


கே.ஆர். மீராவின் 'கபர்'

Thursday, December 15, 2022

தமிழில் - மோ.செந்தில்குமார்


 'கபர்' மிகச் சிறிய நாவல். குறுநாவல் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஏழு அத்தியாயங்களே உள்ள ஒரு புனைவு. எனினும் ஒவ்வொரு அத்தியாயங்களும் அவ்வளவு சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கின்றன. தமிழில் அதிக பாய்ச்சல்களை ஏற்படுத்தும் என்று நம்பிய மாய யதார்த்த கதைகள், பின்னர் மொழியை மட்டும் கடுமையாக்கி பாவனைகளைச் செய்யச் தொடங்கியபோது அது எதிர்பார்த்த உயரங்களை எட்டவில்லை. ஆனால் மலையாளத்தில் அந்தவகை எழுத்துக்களுக்கான இடம் இன்னுமிருக்கின்றது போலும். மிகக் குறைந்த பக்கங்களில் கூட ஒரு மாய யதார்த்தப் புனைவைச் சொல்ல முடியும் என்பதற்கு கே.ஆர்.மீராவின் இந்த நாவலை உதாரணமாகச் சொல்லமுடியும்.

பாவனா என்கின்ற நீதிபதியின் முன்,விற்கப்பட்ட ஒரு காணியில் இருக்கும் கபரை இடிப்பதற்கான தடை செய்வதற்கான வழக்கு வருகின்றது. அதிலிருந்து பாவனா என்கின்ற் நீதிபதியின் பார்வையிலிருந்து கதை சொல்லப்படுகின்றது. ஒரு கபரிலிருந்து வரலாறு பின்னோக்கி நகர்கின்றது. யதார்த்தத்தில் நடக்கவே முடியாத பல விடயங்கள் நிகழத்தொடங்கின்றன.

கே.ஆர்.மீரா
இவ்வாறு வழக்கு நடக்கும்போது பாவனாவின் குடும்பக் கதைகள் சொல்லப்படுகின்றன. பாவனாவின் குடும்பத்தில் 'தாரவாடு' என்று அழைக்கப்படும் தாய்வழி கூட்டுக் குடும்பங்களில் தலைவர் ஒருவர் எப்போதும் இருப்பார். அவர்களின் வீட்டில் அப்படியான 'காரணமானவர்' யாரும் படுத்த படுகையாகக் கிடந்து சாவதில்லை என்பது ஜதீகம். வயதாகிவிட்டது என்று அவர்களுக்குத் தோன்றும்போது குடும்பப் பொறுப்பை அடுத்தவரிடம் ஒப்படைத்துவிட்டு காசிக்குப் புறப்பட்டுவிடுவார்கள். அவர்கள் போகும்வழியிலோ அல்லது காசிக்குப் போய் கொஞ்சக்காலம் இருந்துவிட்டோ இறந்துவிடுவார்கள். அப்படிப் போனவர்க்கு மோட்சம் கிடைத்துவிடும் என்பதால் யாருக்கும் இந்தக் குடும்பங்களில் நீத்தார் கடன் செய்வதில்லை.
இப்படியான காசிக்குப் போகும் மரபில் யோகீஸ்வரன் மாமா என்கின்ற ஒருவர் மட்டும் காசிக்குப் போய்விட்டு 5 வருடங்களில் திரும்பிவருகின்றார். அவர் திரும்பிவரும்போது தனியே வரவில்லை. இரண்டு பெண்பிள்ளைகளையும் கூட்டிவருகின்றார்.
அந்த யோகீஸ்வரனை அவரின் மூத்த மருமகன் நுட்பமாகக் கொலை செய்தார் என்றும், இல்லை அவர் தடுமாறிக் கீழே விழுந்து இறந்தார் என்றும் வெவ்வேறு ஜதீகக் கதைகள் சொல்லப்படுகின்றன. அவ்வாறான யோகீஸ்வரன் மாமாவுக்கும், இப்போது சமகாலத்தில் வழக்கு வந்த இந்த இஸ்லாமியர்களின் கபருக்கும் என்ன தொடர்பு என்பதுதான் இந்த நாவலின் மைய முடிச்சு.

ந்த ஜதிகக் கதை/வழக்குகளுக்கிடையில் பாவனாவின் சமகால வாழ்க்கையும் சொல்லப்படுகின்றது. அவர் திருமணம் செய்த பிரமோத், இவர்களுக்கு ஒரு ADHD குழந்தை பிறந்தபின் விலத்திச் போய்விடுகின்றார். தனித்த ஒரு தாயாக இருந்த இந்த ADHD குழந்தையை வளர்க்கும், சமாளித்து தன் நாளாந்தங்களையும் கவனித்துக்கொள்ளும் ஒரு தனித்த வேலை செய்யும் தாயின் அவதிகளையும் மீரா அவ்வளவு தத்ரூபமாக எழுதிச் செல்கின்றார். சாதாரணமாக ஒரு தனித்த தாயாக இருந்து பிள்ளையை வளர்ப்பதென்பதே கடினமாக இருக்கும்போது ஒரு ADHD குழந்தையையும் வளர்ப்பதென்பது வாசிக்கும் நமக்கு ஒவ்வொரு பொழுதும் நினைவூட்டப்படுகின்றது.

இத்தகைய அவதிக்கிடையில் பாவனாவின் கணவர் பிரமோத் இன்னொரு திருமணம் செய்துகொள்வதற்கான அழைப்பிதழை பாவனாவின் பெற்றோருக்கு அனுப்புகின்றார். அது ஒருவகை உளைச்சலை பாவனாக்குக் கொடுத்தாலும், அந்தத் திருமண நிகழ்வுக்கும் - எப்படியென்றாலும் தன் மகன் நாளை தன் தகப்பனையும் அவர் திருமணம் செய்த பெண்ணையும் சந்திக்கவேண்டியிருக்க வேண்டியிருக்கும் என்பதாலும் - அந்த நிகழ்வுக்குப் போகின்றார்.
இன்றைக்கும் தமது முன்னாள் காதலிகள்/மனைவிகள் இன்னொரு வாழ்விற்குள் நுழையும்போது, எவ்வளவு கொடுமைகள்/துன்பங்களைக் கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் கொடுக்கும் பெரும்பாலானவர்களாய் ஆண்கள் இருக்கும்போது, அவர்களைப் போன்றவர்கள் பாவனா இந்த விடயங்களை எவ்வளவு நிதானமாக -அதன் அத்தனை துயரங்களோடும்- எதிர்கொள்கின்றார் என்பதை மீராவின் எழுத்தினூடாக நிச்சயம் வாசித்துப் பார்க்கவேண்டும்.
இறுதியில் இந்தக் கபர் வழக்கு தள்ளிவைக்கப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் அந்த 'கபர்' அங்கே இருப்பதற்கான எந்தத் தடயங்களும் இல்லை என்பதால் வழக்கு நிராகரிக்கப்படுகின்றது.
வழக்கைப் பதிவு செய்த வாதியான காக்கசேரி கயாலுதீன் தங்ஙள் எப்படி மாந்தீரிகம் செய்து பாவனாவின் மனதை வாசிக்கின்றார் என்பது மிகச் சுவாரசியமானது. ஒருகட்டத்தில் அவரிடமிருந்தே மெல்ல மெல்லமாக கயாலுதீன் தங்ஙளின் மனதை வாசிக்கும் நுட்பத்தை பாவனாவும் கற்றுக் கொள்கின்றார். அது ஒருவகையில் பறக்கும் கம்பளங்களில் விரிந்து செல்லும் உலகாக, கயாலுதீன் தங்ஙள் முத்தம் தருகின்ற காதலானகவும் பாவனாவுக்கு மாறுகின்றார்.
இறுதியில் வழக்கு வேறுவிதமாகப் போனாலும், பாவனா தன் 'தாரவாடு' வம்சத்தின் யோகீஸ்வரன் ஏன் காசியிலிருந்து திரும்பி வருகின்றார் என்பதைக் கண்டுபிடிக்கின்றார். காசிக்குப் போய் மோட்சமடையாமல் யோகீஸ்வரன் திரும்பி வருவதற்குக் காரணம், அவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டார் என்பதாலேயாகும். அவரோடு வரும் பெண்கள் அவருக்குத் துணை புரிய வருகின்ற இரு ஜின்கள் என்பதை நாவலில் சொல்லாமலே நாம் புரிந்துகொள்கின்றோம்.
அந்தக் கபர் என்பது உண்மையிலே யோகீஸ்வரன் மாமா புதைக்கப்பட்ட இடம். அவர் கொலை செய்யப்பட்டோ அல்லது விபத்தாலோ இறந்ததோரோ என்னவோ, ஆனால் அவர் இரகசியமாகப் புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்து அந்தக் குடும்பத்து பெண் ஒருத்தி அன்றைய கேரள ராஜாவிடம் முறையிடுகின்றார். யோகீஸ்வரன் மாமா குழியிலிருந்து மீள எடுக்கப்பட்டு ஒரு இஸ்லாமியரைப் போல இந்த அடையாளமில்லாத 'கபரு'க்குள் புதைக்கப்பட்டிருக்கின்றார் என்பதே நிகழ்ந்திருக்கின்றது.
அப்படியெனில் எதற்காக காக்கசேரி கயாலுதீன் தங்ஙள், தங்கள் பரம்பரையின் கபர் இதென்கின்றார். அதற்கும் ஒரு சுவாரசியமான கதை இருக்கின்றது. நாவலை வாசித்துப் பாருங்கள்.
இவ்வளவு குறைந்த பக்கங்களுக்குள் (100) ஒவ்வொரு அத்தியாயங்கள் தோன்றும் வியப்புத் தோன்றும் சம்பவங்களைக் கொண்டு ஒரு கதையை மீராவினால் இப்படி எழுத முடிகின்றதே என்பதையே இந்த நாவல் முடிந்த பின்னும் யோசித்துக் கொண்டிருந்தேன்.

******************

(Oct 16, 2022)

மெக்ஸிக்கோ - தேவகாந்தன்

Wednesday, November 30, 2022


2019 இல் வெளிவந்திருக்கிற இளங்கோவின் முதல் நாவல் 'மெக்ஸிக்கோ'. மெக்ஸிக்கோவுக்கான ஒரு பயண அனுபவத்தைப் பதிவிறக்குவதுபோல் தொடங்கும் இந் நாவல், அதீதமாய்த் தென்படினும், உண்மையில் அது பதிவிறக்குவது * நவீன வாழ்வின் ஒரு முகத்தைத்தான். தன்னிலை ஒருமைப் பாத்திரமான 'நான்', அவர் மெக்ஸிக்கோவில் சந்திக்கும் ‘அவள்’, ஏற்கெனவே அவர் ரொறன்ரொவில் அறிமுகமாகிப் பிரிந்த துஷி, இறுதியாக கதையில் அறிமுகமாகும் மனநல வைத்தியர் ஆகிய நான்குமே நாவலின் பிரதான பாத்திரங்கள். 'நா'னும் 'அவ'ளும் நிறையவே ஓவியம், கவிதை, படைப்பெனப் பலவும்பற்றி , மிகவும் அறிவுஜீவித்தனமாகப் பேசிக் கொள்கின்றார்கள், தாம் வாசகரிடத்தில் போலியாகிக் கொண்டிருப்பதான பிரக்ஞையின்றி.


இந் நாவல் இரண்டு வாசிப்பு முறைகளைச் சாத்தியமாக்குகிறது. ஒன்று, மெக்ஸிக்கோவிலும் கனடாவில் கிங்ஸ்டனிலும் களிநிலை கொண்டலையும் பாத்திரங்களில் அழுந்திவிடும் வாசிப்பு; அது ஒருவகை வாழ்க்கையை வாசகரிடத்தில் தரிசனமாக்கும். மற்றது, அந்த அறிந்தனபோல் தோன்றும் பாத்திரங்களை மறந்துவிட்டு, அவர்களது உரையாடல்கள் வழி விரியும் கட்டுப்பாடற்றதும் அறிவார்த்தமானதுமான தனிவாழ்க்கையையும் அகவுலக வெளியையும் கவனமாக்கும் வாசிப்பு. இவை வேறுவேறு வழிகளினூடான அனுபவங்களை வாசகருக்குத் தரவல்லவை.

2012 இல் வெளிவந்த குறமகளின் 'மிதுனம் ', கனடாவில் வயது முதிர்ந்தோர் வாழ்வில்லத்தில் தனியாய்த் தங்கும் இலங்கை மூதாட்டியின் தனித்துவமான கதையை ‘மெக்ஸிக்கோ' போல் எடுத்துரைக்கும் நூல்தான். ஆனால் 'மிதுனம்' கதையாய்த் தேங்கிப்போக, தனிவாழ்வின் நாவலாய் நிமிர்ந்தது 'மெக்ஸிக்கோ'.

(நன்றி:தேவகாந்தன்
நூல்: இலங்கைத் தமிழ் இலக்கியம், ப161-162)

மொழிவது சுகம் - நாகரத்தினம் கிருஷ்ணா

Monday, November 21, 2022


'முள்ளிவாய்க்கால்' சிறுகதை, 'அம்ருதா' இதழ் நவம்பர் 2021


இளங்கோ என்கிற இளம் எழுத்தாளரின் சிறுகதை, பெயர் ‘முள்ளிவாய்க்கால்’. இளம் எழுத்தாளரில்லையா ஆதலால் இதொரு காதல் கதை.

கனடாவில் இருந்துகொண்டு, இலங்கை திரும்பும் எழுத்தாளர் தன் வாசகியைச் கொழும்பில் வைத்து சந்திக்கிறார். சந்திக்கிற வாசகித் தோழி தனது பதின்வயது காதலையும் அது பரிணாமம் பெற்றதையும், அதன் முடிவையும் நம்முடைய எழுத்தாளரிடம் பகிர்ந்துகொள்கிறார். சில தமிழ்ச் சினிமா காதல் அம்சங்கள் சிறுகதையில் இருந்தாலும் நண்பர் எளிமையாக அழகாக அலங்கார வார்த்தைகளின்றி சிறுகதையைச் சொல்லி இருக்கிறார். அண்மையில் நான் வாசிக்க நேர்ந்த ஒரு நல்ல சிறுகதை.

ஈழப்போர் முடிவுக்குவந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. பலிகொண்ட ஒரு இலட்சம் உயிர்களில் பெரும்பாலோர் தமிழர்கள், முள்ளிவாய்க்காலை அத்தனைச் சுலபமாக நாம் மறந்துவிடமுடியாது. துப்பாக்கி ஏந்திய ஒரு தலைமுறை தமிழரின் குருதி நனைத்த வரலாற்றின் பக்கங்களை மறப்பது அத்தனைச் சுலபமா என்ன?

சாதியென்றும், மதமென்றும் பிரிந்து எப்போதும் ஏதேனும் ஒன்றை முன்னிருத்தி சக்களத்திச் சண்டையைத் தெருச் சண்டையாக அரங்கேற்றி விளம்பர வாய்ச்சவடாலுக்கு வார்த்தைகளைத் தேடவே நமக்கு நேரம் சரியாக இருக்கிறது. நேரம் கிடைத்து, அறச்சீற்றத்திற்குத் தெம்புவேண்டி பாருக்குள் நுழைந்தால், இளங்கோ போன்று ஒரு சிலர் ‘முள்ளிவாய்க்கால்’ என முணுமுணுக்கின்றனர்.

கனடாவில் புலபெயர்ந்து வாழும் எழுத்தாளரிடம், தற்போது கொழும்பில் இடம்பெயர்ந்து வாழும் இளம்பெண் மேலே குறிப்பிட்டதுபோல தம்முடைய காதல், அரசுக்கு எதிரான இயக்கத்தின் எழுச்சி, அதில் அவள் காதலனின் பங்கேற்பு, எதிர்பாராத விதமாக தனது பள்ளிக்காதலியை மூன்று நான்குமுறை சந்திக்க நேர்ந்த காதலன் (இயக்கத்தில் சேர்வதற்கு முன்பாக தன் இரத்தத்தில் நனைத்து எழுதிய காதற்குறிப்புகளை கவனமுடன் காதலியிடம் கொடுத்து, தற்போதைக்குப் பிரித்துப் படிக்கவேண்டாம் என்ற வேண்டுதல் வைத்தவன்) தனது காதலை வெளிப்படுத்துவதே இல்லை.

ஆக இச்சிறுகதை, ஒர் இளம்பெண்ணின் கைகூடாத காதல், யுத்தகாலத்தில் அவளைச் சந்திக்கிற தருணங்களில் காதலன் காட்டும் அசாதாரண மௌனம், அது விஷயமாக புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளரும், நிறைவேறாத காதலுக்குச் சொந்தக்காரியான இளம்பெண்ணும் எழுப்பும் அனுமானங்கள் சிறுகதைக்கு அழகூட்டுகின்றன.

ஒருவகையில் இச்சிறுகதையில் ஆடையற்ற வார்த்தைகளைக் கொண்டு முள்ளிவாய்க்கால்ப் பேரிழப்பின் இருண்ட சரித்திரத்தில் ஏதோ ஒன்றை நினைவூட்ட தீக்குச்சியை உரசுகிறார் ஆசிரியர், வாழ்த்துகள்.

*************
நன்றி: நாகரத்தினம் கிருஷ்ணா