1.
சில நூல்களை வாசிக்கும்போது அவை அவ்வளவு எளிதில்
முடிந்துவிடக்கூடாது என்று தோன்றும். அவ்வாறு இந்த ஆண்டில் வெளியான இரண்டு
நூல்களை மிக நிதானமாக வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒன்று வி.அமலன்
ஸ்டேன்லி எழுதிய 'புத்தம்' மற்றது டி.தருமராஜ் எழுதிய 'ஜல்லிக்கட்டு'.
இவ்வளவு புதுமையும், சுவாரசியமுள்ள ஒரு நூலை அண்மையில் வாசித்ததில்லையென்ற வியப்பே ஜல்லிக்கட்டை வாசித்து முடித்தபோது தோன்றியது.
ஜல்லிக்கட்டு
ஒரு புள்ளியே தவிர இந்த நூல் அதைத் தாண்டி பல பல அற்புதமான பக்கங்களைத்
தொட்டுச் செல்கின்றது. தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு தடைக்கு (2017)
எதிராக நடந்த ஒரு 'வெகுசன'ப் போராட்டத்தை இது சமகாலத்தில் மட்டும் வைத்து
பேசுவதில்லை. தமிழின் சங்ககாலத்தில் இருந்து தொடங்கி பின்னமைப்பியல்/பின்
நவீனத்துவம்வரை இந்த 'வெகுசன'ப் போராட்டத்தை முன்வைத்து இந்நூல்
மதிப்பீடு செய்கின்றது. இங்கே வெகுசனப் போராட்டம் என்று
அடைப்புக்குறிக்குள் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், இந்த நூலில் வெகுசனம்
வேறானது, மக்கள் வேறானது என்று தொடர்ந்து டி.தருமராஜ் வலியுறுத்தியபடி
வருகின்றார்.
இந்த
நூலை ஒருவகையில் ஆய்வு நூலாகவும், இன்னொருபுறம் ஒரு புனைவாகவும் வாசிக்க
முடிவதுதான் சுவாரயம் தருவது. இந்த நூலில் குறிப்புகளாக அல்லது
சுருக்கமாகச் சொல்லப்படும் விடயங்கள் பற்றிய அடிக்குறிப்புகளே
இருநூறுக்கும் மேலே வரக்கூடியது. பல்கலைக்கழக ஆய்வுகளின் அடிக்குறிப்புகள்
போன்று வறண்டதன்மையில் இல்லாது, அந்த அடிக்குறிப்புகளில் குறிப்பிடப்படும்
நூல்களைத் தேடி வாசிக்கவேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டுமளவுக்கு இந்த
நூல்களின் அடிச்சாரத்தை 'ஜல்லிக்கட்டு' நூலில் தருமராஜ்
பாவித்திருப்பதுதான் கவனப்படுத்த வேண்டியதாகும்.
என்னைப்
போன்ற தமிழின் சங்கப் பாடல்களை ஆழ வாசிக்கவேண்டும் என்று விரும்புபவர்க்கு
(அதேவேளை சோம்பலுடன் இருப்பவர்க்கு), இங்கே தருமராஜ் எடுத்தாளும் சங்கப்
பாடல்கள், அவ்வளவு ஈர்ப்புடன் பழந்தமிழ் இலக்கியம் நோக்கி இழுத்துச்
செல்கின்றது. ஐந்திணைகளில் குறிஞ்சி நிலத்தை, அங்கிருந்த வள்ளல்களை (பாரி,
பேகன்) போன்றவர்களை மூவேந்தர்கள் எதற்காய் ஆக்கிரமித்தார்கள் என்றும்,
எப்படி யவனர்களின் வருகையுடன் அந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றது
என்றும், அதனால் எப்படி அவர்கள் அதுவரைகாலமும் இருந்த செழுமையான
வாழ்க்கையிலிருந்து அவர்கள் இழிசன மக்களாக ஆகினார்கள் என்ற ஒரு புது
திணைக்கோட்பாட்டை டி.தருமராஜ் முன்வைக்கும்போது அவ்வளவு சிலிர்ப்பாக
இருக்கிறது.
தமிழின் தொன்மையான நூல்களை
மார்க்சிய/பின்னமைப்பியல் தளாங்களில் ஒப்பிட்டு தமிழவன் போன்ற அரிதானவர்களே
மிக இயல்பாக எழுதியதை வாசித்திருக்கின்றேன். தமிழவனுக்குப் பிறகு, தமிழின்
தொன்மையை பின்னமைப்பியல் புள்ளியில் வைத்து டி.தருமராஜ் எழுதியிருப்பது
இந்த நூலை வாசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பொழுதும் மகிழ்ச்சி தந்து
கொண்டிருந்தது.
'மார்க்சியம் இந்த நூலின் அடிப்படையக் காரணியாக இருப்பதை
வாசிக்கும் நீங்கள் அறியலாம்' என்று தருமராஜ் நூலின் முன்னுரையில்
குறிப்பிட்டாலும், அதுவே பெரும்பாலான ஆய்வுகளுக்கு இயல்பு என்றாலும்,
என்னால் இந்த நூலை மார்க்சியம் தாண்டிய பின்னமைப்பியல்/பின நவீனத்துவ
தளத்தில் அதிகம் வைத்தே வாசிக்க முடிந்தது. சிலவேளைகளில் என் வாசிப்பின்
ஒரு சார்புநிலையாக இருக்கலாம். ஆனால் அப்படி வாசித்துப் பார்த்துக்
கொண்டிருப்பதே எனக்குச் சுவாரசியமாக இருந்தது.
2.
இந்த
நூல் 'ஆடிப்பெருக்கு-கிளர்ச்சியின் சூத்திரம்', தற்செயலும் வரலாறும் -
காளையின் வம்சாவழி', 'காளை அரசியல்', 'பண்பாட்டுப் பதற்றம்',
'முதலீட்டீயமும் நாட்டுப்புறவியலும்' என்ற ஐம்பெரும் பகுதிகளாகப்
பிரிக்கப்பட்டிருந்தாலும், இந்த ஒவ்வொரு பகுதியும் தனித்தனியே ஒவ்வொரு
நூலாக வைத்து உரையாடுவதற்கான பல புள்ளிகளைக் கொண்டிருக்கின்றது.
ஜல்லிக்கட்டு
என்பது கிராமப் புறங்களில் நடைபெறும் ஒரு விளையாட்டு. ஆனால் அது
தடைசெய்யப்பட்டபோது எப்படி நகரத்தார் இதை ஒரு வெகுசனப்போராட்டமாக
ஆக்கினார்கள், இப்படி முரணான புள்ளிகள் ஒருங்கிணைந்த
(கிராமத்தார்/நகரத்தார்) போராட்டத்தை எப்படிப் எதிர்கொள்வது என்ற
குழப்பத்தை இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் கொடுத்தது, மதுரையில் அந்தப்
போராட்டத்தை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்த தனக்கு இதை எப்படிப்
புரிந்துகொள்வது என்ற சிந்தனையில் தோன்றியதே இந்த நூல் என்கின்றார்
தருமராஜ். நாட்டுப்புறவியலில் 'வழக்காறு' என்பதே நிகழ்த்தப்படுவதுதானே,
ஆனால் இங்கே 'நிகழ்த்தப்படாத வழக்காறை' எவ்வாறு எதிர்கொள்வது என்ற
திகைப்பைத் தன்னைப் போன்ற நாட்டுப்புறவியலாளர்கள் சந்தித்தனர் என அவர்
தொடர்ந்து எழுதிச் செல்கிறார்.
மேலும் விஜய்
(தற்போது தமிழக முதலமைச்சர்) 'தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியபோது அது
ஏற்படுத்திய ஆரவாரத்தையும், அவரது அரசியல் புள்ளியையும் பார்த்தபோது, 'அது
அலங்காநல்லூர்/அவனியாபுரம் ஜல்லிக்கட்டைப் பார்ப்பது போன்று இருந்தது,
அதாவது விஜய் தன்னை இரகசியம் போல பூட்டி பூட்டி வைத்துக் கொள்வதும், அவரது
பிரசன்னம் சில மணித்துளிகளே இருப்பதுபோல அரசியல் கூட்டத்தை வடிவமைத்துக்
கொள்வதும், அந்த சில மனித்துணிகளில் காணப்படும் பாய்ச்சலையும், அதைக்காணும்
வெகுசனம் உச்சக்கட்ட எழுச்சியை அடைவதும் ஜல்லிக்காட்டு என்கின்ற
வீரவிளையாட்டின் ஒழுங்கமைப்பை ஒத்திருந்தது' என்றும் தருமராஜ் முன்னுரையில்
எழுதிச் செல்வது, இன்று அரசியல்/பண்பாட்டுக் களங்களில் செயலாற்றிக்
கொண்டிருக்கும் அனைவருக்கும் மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய
புள்ளியாகும்.
ஜல்லிக்கட்டு வெகுசனப்
போராட்டத்தில் கடைசிவரை ஜல்லிக்கட்டு காளை சீறிப்பாயவே இல்லை. ஆனால் அதே
ஒழுங்கில் அறிந்தோ/அறியாமலோ வாடிவாசலில் இதோ பாய்கின்றேன் என்று உறுமிக்
கொண்டிருந்த ஒரு காளை அரசியல் களத்தில் சீறிப் பாய்ந்திருக்கின்றது.
பாய்ந்தது மட்டுமில்லை பலரும் எதிர்பார்க்காத, யாராலும் அடக்கமுடியாத
அரசியல் காளையாக நின்று வென்றும் காட்டியிருக்கின்றது. இந்த எதிர்பாராத
விஜய் என்ற ஜல்லிக்காட்டுக் காளையின் வெற்றி எவராலும் கணிக்கமுடியாதது
மட்டுமில்லை, எந்த வகைக்குள் வைத்து இதை மதிப்பீடு செய்வது என்ற
குழப்பத்தையும் பல ஆய்வாளர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால் அதைச்
சரியாக 'வெகுசனப் போராட்டம்' என்றவகையில் கணித்தவராக மட்டுமின்றி அதற்கான
பின்னணிச் சூழலோடு நுட்பமாக விளங்கிக் கொண்டவராகவும் தருமராஜ்
இருந்திருக்கின்றார்.
இந்தப் பெரும் நூல்
வெளிவந்ததும், இந்த வெகுசனத் திரளைச் சரியாக விளங்கி விஜய் தமிழக
முதலமைச்சரானதும் நம் தமிழ்ச் சூழலில் அரிதாக நிகழும் ஓர் நிகழ்வென்றே
சொல்லவேண்டும். ஏனெனில் ஆய்வுகள் என்பதே வரலாற்றுச் சம்பவங்கள் நடந்தபின்னே
முடிவுகளைக் கண்டடைவதாக இருக்கும்போது, ஜல்லிக்கட்டு எதிர்ப்புப்
போராட்டத்தை முன்வைத்து, அதற்கு எந்த நேரடித் தொடர்பும் இல்லாதபோதும்,
வெகுசனம் திரண்ட பின்னணிச்சூழலை சரியாகப் புரிந்துகொண்டு (அல்லது
புரியாமலே) அதேபாணியில் ஓர் அரசியல் மாற்றத்தை நிகழ்த்தியது என்பது எவ்வளவு
வியப்பானது.
இதேநேரத்தில்
டி.தருமராஜ்ஜின் இந்த நூலை முன்வைத்து இலங்கையில், பங்களாதேஷில்,
நேபாளத்தில் நிகழ்ந்த ஸென் ஸீ போராட்டங்களைப் பார்க்க முடியும் என்கின்ற
ஜெயமோகன் போன்றவர்களின் கருத்துக்களோடு நான் சில புள்ளிகளில் முரண்படவும்
செய்கின்றேன். இலங்கையிலோ இன்னபிற தென்கிழக்காசிய நாடுகளிலோ நடந்த
போராட்டங்களில் ஒரு முதன்மையான எதிரி கண்முன்னே தெளிவாக இருந்தது.
இலங்கையில் பொருளாதரத்தால் நாட்டைச் சீரழித்த (அவ்வாறே நேபாளத்தில்)
ராஜபகஷே ஆட்சிப்பீடத்தில் இருக்கும்போதே இந்த வெகுசனப் போராட்டம்
தொடங்கியது.
அங்கே ஏற்கனவே ஜல்லிக்காட்டுக் காளை
களத்துக்குள்ளே பாய்ந்துவிட்டது. காளையை அடக்கவேண்டும் என்கின்ற உணர்வு
போராட்டம் தொடங்கியபோது அந்த வெகுசனத் திரளுக்கு வந்துவிட்டது. ஆனால்
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்காட்டு தடைப் போராட்டத்திலோ அல்லது விஜய் தமிழக
முதலமைச்சரானபோதோ ஒரு தெளிவான எதிரி என்று வெகுசனத்துக்கு இருக்கவில்லை.
அதாவது ஜல்லிக்கட்டுக்காளை களத்துக்குள் இறங்கவேயில்லை. அது அவிழ்த்துவிடாத
ஒரு காளையாக மூசிக்கொண்டு வாடிவாசலை விட்டு இறங்காதிருந்தது என்பதே
இவற்றுக்கு இடையிலான வித்தியாசமாகும்.
3.
எனக்கு
இந்த ஜல்லிக்கட்டு நூலில் மிகப்பிடித்ததே தருமராஜ் எதையும் claim செய்யாத
தன்மை. எனது நூலான 'பேயாய் உழலும் சிறுமனமே' அல்புனைவுத் தொகுப்பு வந்தபோது
இடதுசாரிப் பின்னணியில் வந்த எனக்கு முன்னிலிருந்த தலைமுறையச் சேர்த்த ஒரு
நண்பர், தங்கள் தலைமுறையில் ஒரு விடயம் குறித்து கறாரான முடிவெடுத்து
உறுதியாக எழுதுவோம், ஆனால் இந்தத் தலைமுறை (என்னைப் போன்றவர்கள்)
எல்லாவற்றையும் கேள்விகளுடன், சந்தேகங்களுடனும் அணுகின்றார்களே தவிர
அறுதியான உறுதிகளை எடுக்கத் தயங்குகின்றார்கள்' என்று சொல்லியிருப்பார்.
அதை நேர்/எதிர்மறையாக துவிதங்களுக்குள் வைத்தெல்லம் பார்க்கத் தேவையில்லை.
நாம்
இன்றைய சூழலைப் பார்த்தால் அப்படி கறாரான முடிவுகளை எடுப்பது எவ்வளவு
கடினம் என்பதை அறிந்துகொள்ளலாம். உதாரணத்துக்கு நாம் ஈரான் விடயத்தை
எடுத்துக் கொண்டால், ஈரான் தனது ஆட்சிக்கெதிராகப் போராடும் மக்களை எவ்வளவு
கொடூரமாக ஒடுக்கின்றது என்பதை அறிவோம் (அதற்கு ஈரானிய மக்களின்
சாட்சியங்களே போதும்). அதேவேளை இப்போது ஈரான் என்கின்ற நாட்டை
அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்கும்போது ஈரானுக்குச் சார்பாகத்தான் நாம்
நிற்க வேண்டும். அப்படியொரு சார்பு நிலை எடுக்கும்போது ஈரானிய அரசு தன்
மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறையை ஏற்றுக்கொள்கின்றோமா என்கின்ற
கேள்விகளும் வரும். இவ்வாறான சூழ்நிலைகளால்தான் ஒரு விடயத்தை கேள்விகளோடும்
சந்தேகங்களோடும் fragmentation ஆகத்தான் இவற்றை நாம் அணுகமுடியும்
என்கின்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.
அவ்வாறான
ஓர் அணுகுமுறையை, நாம் இந்த ஜல்லிக்கட்டு நூல் நாட்டாரியலா அல்லது
பின்னமைப்பியலா எந்த முறையியல் (methodology) மூலமாக அணுகின்றது என்று
சந்தேகம் கொள்ளக்கூடாது என்பதற்காக தருமராஜ் இதில் ஓரு விளக்கத்தைத்
தருகின்றார். 'இந்தப் புத்தகம் வெகுஜனக் கிளர்ச்சிகளின் சூத்திரத்தைக்
கண்டுபிடிக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே பதில் சொல்வேன். அமைப்பியல்
மானிடவியல் ஆய்வுகளில் இது போல் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கான
சூத்திரத்தைக் கண்டுபிடிப்பது ஒரு சாகசமாகவே செய்யப்பட்டிருக்கிறது. இந்தப்
புத்தகத்தில் அப்படியொரு கணித சூத்திரத்தையோ அல்லது கிளர்ச்சிகளின்
ஒழுங்கமைப்பையோ கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்பது
முக்கியம். இங்கே பயன்படுத்தப்பட்ட சூத்திரம் என்ற சொல், சூழ்திறம்,
சூழ்ச்சி என்று பொருள் தரும் வகையிலே கையாளப்பட்டிருக்கிறது. இந்தப்
புத்தகத்தில் நீங்கள் பார்ப்பது அனைத்தும் ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்களின்
கோணம், அவ்வளவுதான்' என்று சொல்லியிருப்பதை வாசகர்கள் ஒருபோதும்
தவறவிடக்கூடாது என நினைக்கின்றேன்.
பின்னமைப்பியல்/பின்
நவீனத்துவத்தில் எல்லாவற்றையும் விளையாட்டாகப் பார்ப்பது என்று முக்கியமான
ஒன்று. அதாவது மிகத் தீவிரமாக எந்தவொன்றையும் எடுத்துக் கொள்ளத்
தேவையில்லை (நமக்கு சமகால உதாரணம் Slavoj Žižek). அதற்காக தருமராஜ் இங்கே
பின்நவீனத்துவத்தை தனக்குரியதாக கொள்கின்றார் என்பதாக அர்த்தமல்ல.
பின்னமைப்பியல் நிராகரிக்கும் பெருங்கதையாடலை (meta narratives),
முக்கியமாக தத்துவத்தை நிராகரிக்கப் போவதில்லை என்று தருமராஜ் ஓரிடத்தில்
உறுதியாகக் கூறுகின்றார் என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்.
மேலே
'இந்தப் புத்தகத்தில் நீங்கள் பார்ப்பது அனைத்தும் ஏற்கனவே சொல்லப்பட்ட
விஷயங்களின் கோணம், அவ்வளவுதான்' என்று தருமராஜ் சொல்லியிருப்பதற்குதான்
நான் விளக்கம் கொடுக்க விரும்புகிறேன்.
எல்லாமே ஏற்கனவே
சொல்லப்பட்டாலும், அதன் ஒழுங்குகளை குலைத்து புதிய அடுக்குகளை தன் அறிவால்
தருமராஜ் கட்டுகின்றார். இவ்வாறு ஒழுங்குகளைக் குலைத்தும் சிதைத்தும்
புதிதாய் ஓன்றை உருவாக்குவதை ஒரு 'விளையாட்டாக'ச் செய்யமுடியுமென்று வேறு
எந்தத் தத்துவத்தைவிடவும் பின்னமைப்பியல்/பின் நவீனத்துவ நிலவரங்கள்
நமக்குத் துணைபுரிகின்றன. அதற்கான சுதந்திரத்தை அவை கொடுக்கவும்
செய்கின்றன. அந்த மிகப்பெரும் சுதந்திரமே தருமராஜ் அவர்களையும் நாட்டாரியல்
இருந்து தொடங்கி பின்னமைப்பியல்வரை கட்டற்ற சுதந்திரத்தோடு இந்த நூலில்
இயங்க வைக்கின்றது. ஒருவகையில் அதையேதான் பண்டிதர் அயோத்திதாசரையும்,
அவருக்கிருந்த அன்றையகால நடைமுறை அறிவோடு, பல விடயங்களை கலைத்தும்
சிதைத்தும் ஒழுங்குபடுத்தி 'பெளத்தவயமாதல்' என்கின்ற மிக முக்கியமான ஒரு
தளத்தை வந்தடையச் செய்திருக்கின்றது என்பதையும் நாம் நினைவூட்டிக்
கொள்லலாம்.
மிகச்சோர்வான காலகட்டத்துக்குள் தமிழ்
ஆய்வுச்சூழலும் அல்புனைவு நூல்களும் இருக்கின்ற காலகட்டத்தில் அவ்வளவு
சுவாரசியமாகவும், அதேவேளை நம்மை இன்னுமின்னும் சிந்திக்க
வைக்கின்றதுமாகவும், ஜல்லிக்கட்டு என்கின்ற ஓர் அரிய நூல் நம் கைகளை
வந்தடைந்திருக்கின்றது என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.
****
(நன்றி: 'அம்ருதா' - ஆனி, 2026)