கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 143

Saturday, March 28, 2026

 

 அகிலனின் 'சித்திரப் பார்வை'க்கு ஞானபீடப் பரிசு கிடைத்தபோது, அதை எதிர்த்து சுந்தர ராமசாமி 'போலி முகங்கள் -  சந்தர்ப்பம்: ஞானபீடப் பரிசு'  கட்டுரையை எழுதியிருந்தார். அது 1976 ஆம்  ஆண்டு 'பிரக்ஞை' இதழில் வெளிவந்திருக்கின்றது (பார்க்க ;சுந்தர ராமசாமியின் 'ஆளுமைகள் மதிப்பீடுகள்', ப.202).


இப்போது ஜெயமோகன், வைரமுத்துக்கு ஞானபீடம் கிடைத்தற்கு பொங்கியெழுந்ததற்காக, அவர் அகிலன் நினைவுப்பரிசை 'ரப்பர்' நாவலுக்கு 1990இல் பெற்றது எந்தவகையில் நியாயம் என்று கேட்கப்படுவதைச் சில இடங்களில் பார்த்தேன். 



உண்மையில் சுந்தர ராமசாமியின் காலம் என்பது வேறு வகையானது. அறம்/அரசியல் சார்புகள் என்பவை தீர்க்கமாக எடுக்கப்பட்ட நவீனத்துவ காலம். சிற்றிதழ்கள் X வெகுசன இதழ்கள் என்று தெளிவான கோடு அன்றிருந்தது. சுந்தர ராமசாமி போன்றோர்  வெகுசன இதழ்களில் ஒருபோதும்  எழுதமாட்டோம் என்று தீவிர இலக்கியத்தின் ஒரு முகமாக பிடிவாதமாக இருந்த பொழுதுகள் அவை.

இன்று தீவிர இலக்கியத்துக்கும், வெகுசன இதழ்களுக்கும் இடையில் கோடுகள் தெளிவற்றுப் போனது மட்டுமில்லை, மூன்றாவது தளமான சினிமாவும் மேற்கூறிய இரண்டு விடயங்களோடு இடைவெட்டிக் கொண்டிருக்கின்றன. சுந்தர ராமசாமி இன்று உயிரோடிருந்தால், இன்றைக்கு தீவிர இலக்கியவாதிகள் என நாம் அழைக்கும் பலரை சினிமா/வெகுசன இதழ்களில் பங்காற்றுவதற்காக, அகிலனுக்கு அடித்ததைவிட இன்னும் தீவிரமாக அவர்களை அடித்துத் துவைத்திருப்பார் என்றே நினைக்கின்றேன்.

சுந்தர ராமசாமி அப்படி இருந்தது சரியானதா இல்லையா என்பது உரையாடலுக்குரியது ஒருபுறம் என்றாலும், அப்படி இருந்ததாலேயே சுந்தர ராமசாமி ஒரு தரப்பின்/ஒரு காலத்தின் முக்கிய அடையாளமாக இன்றும் நின்று நிலைத்தபடி இருக்கின்றார்.

ஜெயமோகன் அகிலன் நினைவுப்பரிசுக்காக அவரது ரப்பரை 1990இல் அனுப்பியபோது, சுந்தர ராமசாமியின் 'போலி முகங்கள் - சந்தர்ப்பம்: ஞானபீடப் பரிசு' கட்டுரையை எப்படியேனும் வாசித்திருப்பார். ஏனெனில் சுந்தர ராமசாமியோடு அவருக்கு 1985இலே அறிமுகமாகிவிட்டது (பார்க்க அவரது இணையத்தளத்தில் 'அறிமுகம்' பக்கம்). கிட்டத்தட்ட ஜெயமோகன் அவரது 'விஷ்ணுபுரம்' வெளியாகிய 1997 ஆம் ஆண்டுவரை சுராவோடு ஜெமோ நெருங்கிய நட்பாகவே இருந்தவர். ஆக, இந்த 'அகிலன் நினைவுப்பரிசு' குறித்து இவர்கள் இருவருக்குமிடையில் ஏதேனும் உரையாடல் நிகழ்ந்ததா என்பது அறிவது சுவாரசியமாக இருக்கும்.

இது ஒருபுறமிருக்க, எனது கேள்வி என்னவென்றால் இதே வைரமுத்து கொடுக்கும் விருதுகளை ஆண்டுதோறும் இலக்கியவாதிகள் பெற்றுக்கொள்வதைப் பற்றி நம் தமிழ்ச்சூழல் இவ்வாறு கிளர்ந்தெழுந்து பேசியிருக்கின்றதா?

அதுபோலவே சுஜாதாவின் பெயரில் விருதுகளை உயிர்மை வழங்கியபோதும் இன்று பொங்குகின்ற பல எழுத்தாளர்கள் சிரித்தபடி புகைப்படங்களுக்கு படங்காட்டியபடிதானே இருந்திருக்கின்றார்கள். ஏன் அண்மையில் பாலகுமாரன் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டபோதும் இதே இலக்கியவாதிகள் அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்தானே?

இதை நம் தமிழ் இலக்கியவாதிகள் அணிகின்ற இரட்டை வேடம் எனச் சொல்லலாமா? ஒருபக்கம் அகிலன், வைரமுத்து, சுஜாதா எழுதியவை அசலான இலக்கியம் அல்ல என்று கொந்தளித்துக் கொண்டு, இன்னொருபக்கம் அவர்களின் பெயரில் வழங்கப்படும் விருதுகளை நிராகரிக்காது ஏற்றுக்கொள்ளவும் செய்கின்றார்கள்.

ஆக, இதுதான் தமிழ்ச்சூழலின் இயல்பு என்று ஏற்றுக்கொண்டு மெளனமாக இருக்க வேண்டுமா?. அல்லது இவை குறித்து நமக்குள் சுயவிமர்சனம் அவசியமானது என்று இவ்வாறான விருதுகள் குறித்தும் உரையாட வேண்டுமா?

***

சிறுகுறிப்பு (பின்னர் சேர்க்கப்பட்டது):

தற்சமயம் அசோகமித்திரனின் 'காலக்கண்ணாடி'யை (கணையாழி இதழில் எழுதியவை) மீள வாசித்துக் கொண்டிருக்கின்றேன். அதில் 'சில நிருபணங்கள் (கதைக் கடன்)' பத்தியில்,

 'கேரளத்தில் உள்ள குமரன் ஆசான் நினைவு இலக்கிய அமைப்பு சமீபத்தில் க.நா.சுவுக்கு அவருடைய 'மயன் கவிதை'களுக்காகப் பரிசு அளித்திருக்கிறது. எழுபதை எட்டப்போகும் கநாசுவுக்கு இதுவே முதல் பரிசு என்று கூறலாம். படிப்பு முடித்து வந்த நாள் முதல் எழுத்தே பணியென்று வாழ்ந்து வரும் இவர்' என்று அசோகமித்திரனின் அந்த பத்தி எழுத்து நீளும்.

ஜூன் 1981 இல் எழுதப்பட்ட கட்டுரை. அதன் பிறகு க.நா.சு உயிரோடு வாழ்ந்தது ஏழே ஏழு ஆண்டுகள்தான். ஆக இப்படியான மனிதர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித விருதுகளும் இன்றி இளமைக்காலம் தொடக்கம் சாகும்வரை எழுதிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.


(ஓவியம்: சின்மயா)

 

கார்காலக் குறிப்புகள் - 143

Friday, March 27, 2026

 

மிழ்ச் சூழல் தங்களுக்குத் தாங்களே சூடிக்கொண்ட  மலினமான கவியரசுகள், கவிப்பேரரசுகளின்  பக்கமும், இன்னொருபுறம் ஏதென்று அறியாத கல்லூரிகள் வழங்கும் 'டாக்டர்' பட்டங்களில் தமது எழுத்தாளுமையை புதைத்து பெருமிதம் கொண்டு, விருதுக்கு எதிர் விருதென  ego centric trip களில் தொலைந்து போகின்ற காலத்தில், ஓர் எழுத்தாளர் இன்னமும் தன்னை எங்கேயும் முன்னிறுத்த விரும்பாது, தான் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்பதையோ அல்லது தனது புகைப்படங்களையோ பிரசுரிக்காது (ஒரு குறிப்பிட்ட காலம்வரை மிலான் குந்தேராவும் அப்படி இருந்தவர்) 'தலைமறை'வாக எழுத மட்டும் செய்கின்றார் என்பதை இந்த நவீன காலத்திலும் நம்ப முடிகின்றதா?

அவர்தான் Thomas Pynchon.
 

60களில் இருந்து எழுதிவரும் தோமஸ், அவரது அறுபது வருட எழுத்து வாழ்க்கையில் பத்துக்கு குறைவான நாவல்களே எழுதியிருக்கின்றார். கடந்த வருடம் அவரது பத்தாவது நாவலான Shadow Ticket  வந்திருந்தது.

தோமஸ் சிக்கலான, அபத்தமான நகைச்சுவையுடைய, அதேவேளை  வரலாறு, கலை மற்றும் வெகுசன கலாசாரத்தையும் உள்ளக்கி எழுதும் ஓர் பின்நவீனத்துவ எழுத்தாளரெனக் கொண்டாடப்படுகின்றார்.
இந்தக் கூறுகளைக் கொண்ட அவரின் நாவல்களில் ஒன்றான, 'Vineland'ஐ தழுவி எடுக்கப்பட்ட படமே One Battle After Another.

இத்திரைப்படத்தைப் பார்க்கின்றவர்களுக்கு அதில் இருக்கும் அன்றைய அமெரிக்க சமகாலமும் (60/70), அதேவேளை புரட்சி என்கின்ற பெருங்கனவு எவ்வளவு அபத்தமான நகைச்சுவையாக அமெரிக்க மண்ணில் ஆகின்றது என்பதை ஒருகாலத்தில் புரட்சியாளனாக இருந்த லியானார்டோ டீகாப்பிரியோ பாத்திரம், பிற்காலத்தில் குடிக்கும், போதைப்பொருளுக்கும் அடிமையான ஒரு paranoid தகப்பனாக மாறுவதைக் காண்கின்றோம்.

இதற்குள் அமெரிக்காவிற்குள் நுழையும்  இலத்தீன் அமெரிக்க குடிவரவாளரை அனுதாபத்துடன் அணுகுதல், காப்பாற்றி தலைமறைவாக வைத்து அனுப்புதல், Black Panthers ஐ  நினைவுபடுத்தும் கறுப்பினப்பெண்களின் புரட்சிக்கான தலைமைதாங்கல், காட்டிக்கொடுப்புகள், கொடூரமான அமெரிக்க இராணு  (DEA/ICE) அமைப்புக்கள் என இன்றை சமகாலத்துக்கும் பொருந்துவதாக கதை இருக்கின்றது.

இதே தோமஸின் இன்னொரு நாவலான Inherent vice உம், அதே பெயரில் திரைப்படமாக வெளிவந்திருக்கின்றது. ஆக ஓர் எழுத்தாளர் தனது நாவல்கள் திரைப்படமாகும்போதோ, ஏன் சிறந்த திரைப்படத்துக்கென மிக உயரிய விருதைப் பெற்றபோதோ தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாது ஓர் 'தலைமறைவு' வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பது எவ்வளவு பெருமிதப்படக்கூடியது.

நாவல்களை பின்நவீனத்துவமாக எழுதுவது மட்டுமில்லாது, எழுத்தை மட்டும் பார்,, எழுதும் நான் யாரென்பது முக்கியமில்லை என்று அதே பின்னமைப்பியல்/பின்நவீனத்துவம் சொல்வதைப் போல வாழ்ந்து கொண்டிருக்கும் தோமஸ் உண்மையிலே மதிப்புக்குரியவர்தான்.

***

 

கார்காலக் குறிப்புகள் - 142

Wednesday, March 25, 2026

 

The Secret Agent
***

ஒருவன் மூன்றுநாட்களாகப் பயணித்து ஒரு பெற்றோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக காரை நிறுத்துகிறான். அதன் அருகில் செத்துப்போன மனிதனின் உடல் இருக்கின்றது. இலையான்கள் மொய்த்தபடி இருக்கும் அந்த உடலை அவ்வப்போது தெருநாய்கள் வந்து கடிக்கவும் முயல்கின்றன.

மார்செல்லோ என்கின்ற அந்த மனிதன் இதைக் கண்டு அந்த இடத்தைவிட்டு நகர விரும்புகின்றான். நீயும் போனாய் என்றால், எரிபொருள் நிரப்ப எவரும் வரப்போவதில்லை என்று காஷியர் சொல்கின்றான். என்ன நடந்தது அந்த இறந்தவனுக்கு என்று மார்செல்லோ கேட்கின்றபோது, அவன் இங்கிருக்கும் என்ஜின் ஓயிலை களவெடுக்க வந்தபோது இரவில் சுட்டுக்கொல்லப்பட்டவன் என்கின்றான் காஷியர்.


இரண்டு நாட்களாக இங்கே கிடக்கும் உடலை, பொலிஸுக்கு தகவல் சொல்லியும் இங்கு வந்து உடலை எடுத்துச் செல்லவில்லை எனச் சொல்லப்படுகின்றது. மார்செல்லோ பெற்றோலை நிரப்பிவிட்டு அங்கிருந்து நகரும்போது, பொலிஸ் ஜீப் வருகின்றது. ஆனால் அவர்கள் வருவது அந்த உடலுக்காக அல்ல. தொலைதூர நகரிலிருந்து வந்திருக்கும் மார்செல்லோவிடமிருந்து இலஞ்சம் வாங்குவதற்காக. மார்செல்லோவின் எல்லா ஆவணங்களும் சரியாக இருப்பதால் அதை முன்வைத்து பணம் பறிக்க முடியாதிருப்பதால், இந்நகரில் இப்போது வருடாந்த பெரும் திருவிழா (carnival) நடக்கின்றது, அதற்கான பொலிஸ் நிதிசேர்தலுக்கு உன் பங்களிப்பைத் தா என்று பொலிஸ் கேட்கின்றது. அதிலிருந்து எப்படி மார்செல்லோ தப்பிப் போகின்றார் என்பதுடன் நீண்ட காட்சி முடிவதே அருமையான ஒரு குறும்படமாக எடுக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறுதான் The Secret Agent  என்கின்ற பிரேசிலத் திரைப்படம் ஆரம்பிக்கின்றது. இதுவும் 'I'm still here' திரைப்படம் போல, பிரேசில் இராணுவ சர்வாதிகார ஆட்சியில் இருந்த 70களில் நிகழ்கின்றது. இன்னும் திருத்தமாகச் சொல்வதால் இது 1977இல் நடக்கும் ஒரு கதை.

காரில் போகும் மார்செல்லோ உண்மையில் யார் என்பதை நாம் இத்திரைப்படத்தில் நடுப்பகுதியிலே அறிந்துகொள்கின்றோம்.
அதுவரை அவர் ஒரு இரகசிய உளவாளியா, அரசுக்கு எதிராக இயங்கும் குழுவைச் சேர்ந்தவரா என்கின்ற முடிவுக்கு வராது நாம் அவரைப் பின் தொடர்கின்றோம்.

ஏனெனில் இத்திரைப்படத்தில் எந்த முக்கிய பாத்திரமும், தாம் சர்வாதிகார அரசால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ரோம் என்ற பயத்தினால், நேரடியக உண்மையைக் கதைக்க அஞ்சுகின்றனர். மார்செல்லோ வந்து சேரும் நகரில் அடைக்கலம் கொடுக்கும் முதியபெண்ணான டொன்னா செபஸ்டியனா விசித்திரமான பெண். அவரது கடந்தகாலத்தில் இரகசியமானது என்றாலும், அவர் ஒரு புரட்சிக்காரியாக இருந்தவர். எனவே அவர் தனது தொடரடுக்கில் இப்படி அரசால் தேடப்படுபவர்களுக்கும், இராணுவத்தால் கொல்லப்பட சாத்தியமுள்ளவர்களுக்கும் தஞ்சம் கொடுக்கும் இடமாக அது அமைந்திருக்கின்றது.



பிரேசில் நாட்டிலிருப்பவர்கள் மட்டுமில்லை, அங்கோலா போன்ற ஆபிரிக்கா நாடுகளில் இருந்து அரசியல் காரணமாக தப்பிவந்தவர்களும் செபஸ்டினா வீட்டில் தங்கியிருக்கின்றனர். ஆனால் எவருமே தமது உண்மைப் பெயரை அங்கே தமது உயிரின் பாதுக்காப்பு சார்ந்து சொல்வதில்லை. அப்படியே தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கும் காரணத்தையும் சொல்வதில்லை.

நமக்கு திரைப்படத்தில், மார்செல்லோவின் மகன் ஒருவரும் இந்த நகரில் இருக்கின்றார் என்பதும், அவன் அவரின் இறந்துபோன மனைவியின் பெற்றோருடன் வாழ்கின்றான் என்பதையும் அறிகின்றோம். மார்செல்லோவோடு அவ்வளவு எளிதில் அவரது மகனைச் சந்திக்க முடிவதில்லை. அவரது கடந்தகாலத்தில் ஏதோ நடந்திருக்கின்றது. அரசு அவரை கண்காணித்தபடி இருக்கின்றது என்பதை அறிகின்றோம்.

மார்செல்லோ தனது மகனையும் அழைத்துக் கொண்டு வேறொரு நாட்டுக்கு அகதியாக தப்ப விரும்புகின்றார். ஆனால் அப்படி முயல்கின்றபோது அவரது பாஸ்போர்ட் அரசால் முடக்கப்பட்டதை அறிகின்றார்.  அவர் தப்பிப் போவதற்கு உதவ விரும்பும் அரசுக்கு எதிரான புரட்சிக்காரர் அவர் போலி பாஸ்போர்ட் எடுக்கும்வரை அந்நகரில் இருக்கும் அடையாள அட்டை வழங்கும் அலுவலகத்தில் வேலை செய்யச் சொல்கின்றனர்.

இப்படி ஒருபக்கத்தில் மார்செல்லோவின் வாழ்க்கை சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது, பிரேசிலில் அக்காலத்தைய புறவுலகம் விபரமாகவும், நிதானமாகவும் சித்தரிக்கப்படுகின்றது. மிக இருண்ட காலத்தில் எப்படி மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை இப்படம் காட்டுவது இதில் சிறப்பு. திருவிழா நடக்கின்றது. மக்கள் இந்தளவு அல்லாடல்களுக்கும் இடையில் அதைக் கொண்டாடுகின்றார்கள்.

இன்னொருபக்கம் அந்நகரில் அரசுக்காகவும், இராணுவத்துக்காகவும் கொலைகள் நடக்கின்றன. மோசமான பொலிஸ் அதிகாரி இந்தத் திருவிழாவோடு 90 கொலைகளைச் செய்துவிட்டோம், மிக விரைவில் 100 இலக்கத்தை கொலைகளில் எட்டுவிடுவோம் என்று சொல்கின்றார்.

மார்செல்லோவின் இந்த தலைமறைவு வாழ்க்கைக்கு சமாந்திரமாக, அரசியல்/தனிப்பட்ட கொலைகள் செய்பவர்களின் வாழ்க்கை காட்டப்படுகின்றது. ஒருகாட்சியில் மார்செல்லோவின் புகைப்படத்தைக் காட்டி இவர் கொலை செய்யப்படவேண்டியவர் என்று இரு கொலைகாரர்களுக்கு (தகப்பனும்/மகனும்) கட்டளை ஒரு பெரும் நிறுவன அதிகாரியால் கட்டளையிடப்படுகின்றது.

அந்தக் கொலைகாரர்கள் இவரைத் தேடி புறப்படுகின்றார்கள். மார்செல்லோவுக்கு நீ இனி உயிரோடு இருக்க நான்கு நாட்கள் மட்டுமே இருக்கின்றது. எப்படியாவது தப்பிப் போய் விடு என்று புரட்சிக்காரர்களால் தகவல் சொல்லப்படுகின்றது.

இப்போதுதான் நாம் மார்செல்லோவின் கதையை அறிகின்றோம். அவரை, அவரின் மாமனார் வேலை செய்யும் தியேட்டரில் இந்தப் புரட்சிக்காரர்கள் சந்தித்து, அவரது கதையைப் பதிவு செய்கின்றனர். அந்தப் பதிவு செய்த சில காஸேட்டுக்கள் பாதுகாக்கப்பட்டு, கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு சர்வாதிகார ஆட்சி கலைக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழக மாணவி ஓர் ஆய்வின் நிமித்தம் கேட்கின்றாள். அவளுக்கு மார்செல்லோவின் வாழ்க்கையும், அவருக்கு என்ன நடந்தது என்று அறியவும் ஆர்வம் கூடுகின்றது.

*

மார்செல்லோ, ஒரு இடதுசாரியோ அல்லது அரசுக்கு எதிரான புரட்சிக்குழுவில் இருந்த ஒருவரோ அல்ல. அவர் ஒரு சாதாரண பேராசிரியர். அவர் ஆய்வு செய்கின்ற லித்தியம் பட்டரிகள், எதிர்காலத்தில் வரப்போகும் மின்சாரகார்களுக்கு உதவும் என்பதால் அரசின் அமைச்சில் பங்குவகிக்கும் ஒரு பெருநிறுவனம் இவரது ஆய்வை வாங்க விரும்புகின்றது. அவர் அதற்கு உடன்படாததால், ஆய்வுக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துகின்றது. அத்தோடு அந்த நிறுவன அதிபரோடும்/மகனோடும் சந்திக்கும் இரவு விருந்தில், அவர்கள் மார்செல்லோவின் மனைவியை அவமானப்படுத்துகின்றனர். அதை எதிர்ந்த மார்செல்லோவின் மனைவி கதைக்கத் தொடங்கும்போது வாக்குவாதம் முற்றும்போது மார்செல்லோ அந்நிறுவன மகன் மீது கையை வைத்துவிடுகின்றார். அவ்வளவுதான் அந்தக் காட்சி.


இப்போது மார்செல்லோ முடித்து வைக்கப்பட்ட வேண்டிய ஓர் இரை.  மார்செல்லோவின் மகனை மார்செல்லோ நீண்டகாலமாகச் சந்திக்கும்போது, மகன் அம்மா என்று கேட்கின்றார். ஆனால் அவர் வருத்தம் காரணமாக இறந்துவிட்டார் என மகனுக்குச் சொன்னாலும், தாயார் கொலைசெய்யப்பட்டுவிட்டார் என்று அறிகின்றோம்.

இந்தச் சம்பவம் முடிந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. மார்செல்லோ அதன் பிறகு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திருப்பது மறைமுகமாக நமக்குத் தெரிகின்றது. இனி பிரேசிலில் வாழமுடியாது எங்கேயாவது மகனுடன் தப்பிப் போய்விடுவோம் என்று தீர்மானித்துத்தான் மகன் வாழும் இடத்துக்கு ஓர் இரகசியப் பெயருடன் மார்செல்லோ வந்திறங்குகின்றார் என்பது இப்போது நமக்குப் புரிகிறது.

மகன் ஓரிடத்தில் தலைமறைவாக இருக்கும் தகப்பனுக்கு செய்தி அனுப்புகின்றான். 'அப்பா, அம்மாவின் முகம் எனக்கு கிட்டத்தட்ட மறந்துபோய்விட்டது, உங்கள் முகமும் மறக்கமுன்னர் என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள்' என்று அது இருக்கும்.

மார்செல்லோ தவறான நேரத்தில் அதிகாரத்தில் மாட்டிக் கொண்ட ஒரு சாதாரண மனிதன். இப்போது அவனது சொந்த வாழ்க்கை அவனுக்குரியதல்ல. அவன் ஒருபொழுது திருவிழாக் கொண்டாடத்தில் கலந்துகொண்டு தன் மனம் நிறைந்த கவலைகள் மறந்து ஆடுகின்றான். இன்னொருபொழுதில் தலைமறைவானவர்களுடன் டொன்னா செபஸ்டியானா வீட்டில் விருந்துண்ணும்போது, 'என்னை இன்னும் சில நாட்களில் கொன்றுவிடுவார்கள். நான் வாழவே விரும்புகின்றேன்' என்று இயலாமையுடன் சொல்கின்றேன்.

அந்த வீட்டில் அடைக்கலம் புகுந்த சிங்கள் மதருடன் அவனுக்கு உடல் சார்ந்த உறவின் பின் தூங்கும்போது, பெற்றோல் நிலையத்தில் பார்த்த தலை சிதைந்த உடலுக்கு உயிர் வந்து நடமாடும் பயங்கரக் கனவு கண்டு உடல் விதிர்விதிர்க்கின்றான். கூடவே படுத்திருக்கும் பெண் அவனை ஆரத்தழுவி அவன் பதற்றம் தணிக்கின்றாள்.

ஆக மார்செல்லோ வாழ்க்கையை வாழவிரும்பும் மனிதன் மட்டுமில்லை, மிகுந்த vulnerable ஓர் ஆண் என்பதையும் கண்டுகொள்கின்றோம். ஆனால் அவர்களையும் சும்மா வாழ தமது குடும்பத்துடனோ, பிள்ளைகளோடு வாழ அரச அதிகாரங்கள் விடுவதில்லை என்பதை இங்கே பார்க்கின்றோம்.

மார்செல்லோவைத் தேடி வந்த கொலைகாரர்கள் மார்செல்லோவின் இடத்தைக் கண்டுபிடிக்கின்றனர். தமது வேலையைக் கச்சிதமாக முடிக்க உள்ளூரிலே கொலைகளைத் திருத்தமாகச் செய்யும் ஒருவனை வாடகைக்கு அமர்த்துகின்றனர். அவன் மார்செல்லோவைத் தேடி அடையாள அட்டை அலுவலகத்துக்குச் செல்கின்றான். தன்னைத் தேடி கொலைகாரர்கள் வந்துவிட்டதை, அவரது அசல்பெயரை வைத்து அழைப்பதில் மார்செல்லோ கண்டுபிடிக்கின்றார். அவரின் நல்லூழ் காரணமாக பொலிஸுக்கும் அந்த கொலைகாரர்களுக்கும் துப்பாக்கிச் சண்டை காரணமாக இவர் அங்கிருந்து தப்பியோடும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

*

அந்தக் காட்சியோடு 70களின் கதை முடிகின்றது. நாம் மார்செல்லோ தப்பிவிட்டார் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றோம். இப்போது கடந்தகாலத்தின் கதையை பதிவுசெய்யப்பட்ட காஸெட்டுக்களில் இருந்து கண்டுபிடிக்கும் பல்கலைக்கழக மாணவியிடம் திரும்புகின்றோம். அந்தக்காலத்தில் இவ்வாறான இணையத்தேடல் வசதி இல்லை. அந்தப் பெண் மார்செல்லோ இப்போது எங்கேயிருக்கின்றான் என்று அன்றைய பத்திரிகைகளைத் தேடிக் கண்டுபிடிக்க முயல்கின்றார். அதில் சட்டென்று ஒரு செய்தி இடைவெட்டிப் போகின்றது.

இந்தப் பல்கலைக்கழக மாணவி, மார்செல்லோ கடைசியாக இருந்த நகருக்குச் செல்கின்றார். அங்கே இப்போது மார்செல்லோவின் மகன் வைத்தியராக பணிபுரிகின்றார். இம்மாணவி மார்செல்லோவின் மகனிடம் தந்தையைப் பற்றிய நினைவுகளைச் சொல்லச் சொல்கின்றார். எனக்கு தந்தையைப் பற்றிய எந்த நினைவுகளும் இல்லை என்கின்றார். அன்று தனது தந்தையிடம், 'எனக்கு அம்மாவின் முகம் மறந்துவிட்டது' என்று மகன் சொன்னதுபோல, இப்போது அப்பாவின் நினைவுகளும் இல்லை என்கின்றார்.

அம்மாணவி பல்கலைக்கழக ஆய்வுக்காக இருந்த டேப்களை யூஎஸ்பியில் பதிவு செய்து இதில் உனது தந்தையின் கதை மட்டுமில்லை, அவரின் குரலையும் நீங்கள் கேட்கலாம் என்கின்றார். மார்செல்லோவின் மகனோ, 'என்னை விட உங்களுக்கு என் தந்தையை அதிகம் தெரியும் போலிருக்கின்றது என்கின்றார்.

பிறகு அவர் வேலை செய்யும் வைத்தியசாலை உனக்கு எதுவும் நினைவுபடுத்துகின்றதா எனக் கேட்கின்றார். இல்லை என்கின்றபோது இதுதான் எனது தாத்தா வேலை செய்த தியேட்டர். இங்கேதான் நீ 70களில் கேட்ட டேப்புகள் பதிவு செய்யப்பட்ட இடம் என்கின்றார் மார்செல்லோவின் மகன்.

நமக்கு காலம் அவ்வளவு விரைவாக மாறிவிட்டது என்பது தெரிகின்றது. காலம் மட்டுமில்லை இடங்களும், மனிதர்களும் இலகுவில் மறக்கப்படிவிட்டார்கள் என்பதும் புரிகின்றது.

மார்செல்லோ அவரை முதலில் தேடி கொலைகாரர்கள் வந்தபோது அருந்தப்பில் தப்பிவிட்டார் என்றாலும், பின்னர் அவரை ஏதோ ஒருவகையில் கொலை செய்துவிட்டார்கள். அந்த மாணவி தேடியெடுத்த பத்திரிகைத்துண்டுச் செய்தியில் 43 வயது மார்செல்லோ தெருவில் இரத்தவெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடக்கின்றார். ஒரு சாதாரண மனிதனாக வாழ இருந்த மனிதன் வரலாற்றில் எவ்வித அடையாளங்களுமற்றுப் போயிருக்கின்றார். அவரின் குடும்பத்துக்கே அவர் எதனால் கொல்லப்பட்டார் என்கின்ற முழுவிபரமும் தெரியாது அடுத்தடுத்த தலைமுறைகள் வந்துவிடவும் செய்துவிடுகின்றது என்பதுதான் இன்னும் துயரமானது.

இத்திரைப்படத்தை இந்த வருடத்தில் பார்த்த மிகச் சிறந்த திரைப்படமாக மட்டுமில்லை, இந்த ஞாயிறு நடக்கும் ஆஸ்கார் விருதுக்காக பத்துக்கு மேற்பட்ட திரைப்படங்களில் (எனக்குப் பிடித்த One Battle Afer Another, Sentimental Value போன்றவை பட்டியலில் இருந்தாலும்) இது விருது பெற்றால் மிகவும் அகமகிழ்வேன்.

பிரேசிலின் இருண்ட சர்வாதிகார இராணுவ ஆட்சியைப் பின்னணியாக வைத்து 'I'm still here', 'The Secret Agent' என்பவற்றைப் பார்க்கும்போது என்றேனும் ஒருகாலத்தில் நமது ஈழப்போராட்டத்தை முன்வைத்து ஒரு தலைமுறை சிறந்த திரைப்படங்களை எடுக்கும் என்கின்ற நம்பிக்கை வருகின்றது. மேற்கூறிய இரண்டு திரைப்படங்களையும் எடுத்தவர்கள் பிரேசிலியர்கள். படங்களும் போர்த்துக்கீஸிய மொழியைப் பேசுகின்றவை.

'I'm still here' உண்மைக்கதையை, எழுதப்பட்ட தன்வரலாற்று நூலை அடிப்படையாக எடுக்கப்பட்டது என்றால், The Secret Agent திரைப்படத்தை தனது சொந்தநகரில் பார்த்ததை புனைவாக மற்ற இயக்குநர் இயக்கியிருக்கின்றார்.

I'm still here குடும்பத்துக்குள் நடக்கும் அல்லாடல்களை குடும்பத்துக்குள்ளேயே அகவயமாகப் பார்த்ததென்றால், The Secret Agent புறவயமாக பிரேசிலின் அன்றைய கால வாழ்க்கையை நேர்த்தியாகச் சித்தரித்தபடி ஒரு தலைமறைவு வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு தகப்பனை நமக்குக் காட்டுகின்றது.  

இத்திரைப்படங்களைப் பார்க்கும்போது நாம் நமது கொடுங்காலத்தை ஏதோ ஒருவகையில் பதிவு செய்வது என்பது முக்கியமாகத் தெரிந்தது. அதிலும் போர்க்காலத்தில் வாழ்ந்தவர்களின் அனுபவங்கள் ஏதோ ஒருவகையில் பதிவு செய்யப்படாதவிடின் அது பிறகு வந்த சந்ததி தேடும்போது கதைகளை உருவாக்கவோ, வரலாற்றை மறுவாசிப்புச் செய்யவோ முடியாது போய்விடும். அதைத்தான் நாம் இந்தக் காலத்தில் கவனத்தில் மிகவும் கொள்ளவேண்டும்.

***

கார்காலக் குறிப்புகள் - 141

Monday, March 23, 2026

 

இந்தத் தொடரை விளாடிமீர் (நபகோவ்) என்கின்ற பெயருக்காகவும், அதில் முதன்மைப் பாத்திரமாக நடித்த ராச்சல் வெல்ஸிற்காவும் பார்த்தேன். பல்கலைகழகச் சூழல்/MeToo/Open Marriage போன்ற பின்னணிச்சூழலில் இக்கதை நிகழ்ந்தாலும், தெளிவாக வரையறுக்க முடியாத ஒருவகை கலவையான உணர்வே (mixed feelings) இதைப் பார்த்து முடித்தபின் எனக்கு ஏற்பட்டது.

50 வயதுகளின் மத்தியில் இருக்கும் ஒரு பேராசிரியையே இதன் முதன்மைப் பாத்திரம். அவரே இந்தக் கதையைச் சொல்லிக் கொண்டு போகின்றார். அவரது துணைவரும் ஆங்கிலத்துறையின் டீனாக இருக்கின்றவர். கதை நிகழும் காலத்தில் இந்த ஆண் பேராசிரியர் மீது கடந்தகாலத்தில் மாணவிகள் மீது ஏற்படுத்திக் கொண்ட பாலியல் உறவுகளால் பல்கலைக்கழகத்தால் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றார். அந்த விசாரணை தொடங்கி தீர்ப்புக்கள் வழங்கப்படும் காலத்தில் நடக்கின்ற கதைதான் இது.

 



பெண் பேராசிரியைக்கு இந்தப் பொழுதில் புதிதாக வருகின்ற ஒரு இளம் ஆண் பேராசிரியர் மீது பாலியல் சார்ந்து ஈர்ப்பு வருகின்றது. நீண்டகாலத்துக்கு, அவரின் வயது காரணமாக அடங்கியிருந்த பாலியல் வேட்கை மீள இந்தப் பெண்ணுக்கு ஏற்படுவதும், அதேவேளை அவரது துணை இப்படி மாணவிகளுடன் ஈடுபட்ட பாலியல் உறவுகள் பற்றி இந்தப் பெண் பேராசிரியை வெளிப்படையாக எதுவும் பேசவில்லை என்கின்ற பல்கலைக்கழகமட்ட விமர்சனங்களையும் கேட்டுக் கொண்டு இந்தப் பெண்ணின் நாட்கள் கழிகின்றன.

இது ஏற்கனவே வெளிவந்த நாவலான 'விளாடிமீர்' என்கின்ற நாவலை (2022) அடிப்படையாக முன்வைத்து எடுக்கப்பட்டிருக்கின்றது. நபகோவ்வின் மீதிருந்த ஈர்ப்பினால் இந்த நாவலை ஜூலியா எழுதியதோடு அவரின் பெயரையும் இந்த நாவலுக்கு வைத்திருக்கின்றார். பலர் இந்த நாவல் நபகோவ்வின் 'லோலிடா' நாவலின் பாதிப்பு இருப்பதாகக் கூறியிருந்தாலும், நாவலாசிரியரான ஜூலியா இதற்கு 'லோலிடா' அல்ல, நபக்கோவின் மற்றொரு 'Laughter in the Dark' இதற்கு ஆதர்சம் என ஒரு நேர்காணலில் கூறுகின்றார். 

 

 
அந்த நாவலில் 'நாம் நமது வேட்கைகளால் எவ்வாறு சிறைப்பட்டிருக்கின்றோம்' என்பதையும், 'அதன் நிமித்தம் நாம் மனிதாபிமானத்தை இழந்து, யதார்த்தத்தை மறந்து, நமது வாழ்க்கையை நாம் சீரழித்துக் கொள்ளவும் செய்கின்றோம் என்பதை நபகோவ் பரிசீலிக்கின்றார்' என ஜூலியா கூறுகின்றார்.

அதேவேளை இன்று நபகோவ்வின் 'லோலிடா', 'எப்ஸ்டீனின் கோர்ப்புகள்' பொதுவெளிக்கு வந்தபின், பாலியல் குற்றவாளி இந்த நாவலையே தனது படுக்கையறையில் வைத்திருந்தவர் என்கின்ற விமர்சனங்களும் எழுந்தவண்ணம் இருப்பதை நாமனைவரும் அறிவோம். ஆனால், தனது நாயகியான ஹம்பேர்ட்டின் செயல்களுக்கு, யாரேனும் லோலிடாவை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டுவந்தால் அதைப் போல ஓர் அபத்தம் இல்லையெனவும் 'விளாடீமீரின்' நாவலாசிரியான ஜூலியா எச்சரிக்கின்றார்.

***


கார்காலக் குறிப்புகள் - 140

Thursday, March 19, 2026

 

'I'm still here'  (பிரேசிலிய திரைப்படம்)
*

நீங்கள் உங்கள் பெற்றோருடனும் சகோதரர்களுடன் வாழ்ந்து வருகின்றீர்கள். ஒருநாள் அரசாங்கத்தின் ஆதரவுடன் உங்கள் நாட்டு இராணுவம் உங்கள் தந்தையை விசாரணைக்கு என்று அழைத்துச் செல்கின்றார்கள். பிறகு ஒருபோதும் உங்கள் தந்தை வீடு திரும்பாமல் காணாமற் போய்விடுகின்றார். நீங்களும், உங்கள் தாயாரும், சகோதரர்களும் உங்கள் வாழ்நாள் முழுதும் அந்தத் துயரத்தோடு வாழப் பழகிக் கொள்கின்றீர்கள்.

இப்படியான சம்பவங்கள் தென்னமெரிக்கா நாடுகளில் மட்டுமில்லை, நமது நாடுகளிலும் அரசு,இராணுவம், விடுதலை இயக்கங்களால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. நாம் நமக்குரிய அரசியல் சார்புகளில் நின்று உரையாடமுன்னர், ஒருகணம், ஒரேயோருகணம் அப்படிக் காணாமற்போனவர்களின் குடும்பங்களில் நிலையை எவ்விதச் சார்பும் எடுக்காது யோசித்துப் பார்த்திருக்கின்றோமா?
 
 
இந்தக் கதை பிரேசிலில் நடந்தாலும், நமது தாய்நாட்டுக்கும் பொருந்தக் கூடியது. பிரேசிலில் 1960களில் இடதுசாரிகள் தேர்தலில் வென்றபோது, அங்கிருந்த இராணுவம் அமெரிக்காவின் உதவியுடன் அதைக் கவிழ்த்தது. பிறகு கிட்டத்தட்ட இருபது வருடங்கள் (1965-1985) வரை சர்வாதிகார இராணுவ ஆட்சியே நடந்திருக்கின்றது. அந்தக் காலத்தில் நிறையப் பேர் கொல்லப்பட்டும், காணாமற் போயிருக்கின்றனர்.பிரேசிலில் அன்று நடந்த இராணுவச் சதி கவிழ்ப்பே முன்னுதாரணமாக பல தென்னமெரிக்கா நாடுகளில் நடந்த சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு பிறகு காரணமாயிற்று என வரலாறு சொல்கின்றது.

'I'm still here'  என்கின்ற இத்திரைப்படம் உண்மையான நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கின்றது. இராணுவக் கவிழ்ப்புக்கு முன் ஒரு பொறியிலாளராகவும், காங்கிரஸ்மானாகவும் இருந்த ரூபன்ஸ் (Rubens Paiva) ஒருநாள் சிவில் உடையில் வந்த இராணுவத்தால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார். அதன்பிறகு அவரைப் பற்றிய எந்த பதிவுகளும் பிரேசிலில் இல்லாது மறைக்கப்படுகின்றது.

அவர் மட்டுமில்லாது அவருக்கு வேறு யாரோடு தொடர்பு இருக்கின்றதென ரூபன்ஸின் மனைவியும் பல நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றார். தாயார் விடுதலை செய்யப்பட்டபின், அவர்களின் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட்ட வீட்டிலிருந்து தனது கணவரைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகின்றார்.

காணாமற்போனவரைத் தாங்கள் கடத்தவே இல்லை என்கின்ற சொல்கின்ற இராணுவத்தைப் பற்றி எப்படி நீதிமன்றத்தில் முறையிடுவது? இறுதியில் ரூபன்ஸ் சித்திரவதைக்குள்ளான இடத்தில் தானும் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தேன் என்று சொல்கின்ற பெண் ஆசிரியர் ஒருவரின் வாக்குமூலத்தை வைத்து ரூபன்ஸின் குடும்பம் வக்கீல்களை அணுக முயல்கின்றது.

ஓர் சர்வாதிகார ஆட்சியில் இதற்கெல்லாம் எங்கே இடமிருக்கப் போகின்றது. ஐந்து பிள்ளைகள் இருக்கும் ரூபன்ஸுக்கு அந்தப் பிள்ளைகளைப் பார்க்கும் பொறுப்பு தாயாருக்கு வந்துவிடுகின்றது. எவ்வளவு காலந்தான் கணவரைக் காணவில்லை என்று தேடிக் கொண்டிருப்பது. அவர்கள் இருந்த ரியோ வாடகை வீட்டைத் துறந்து, வீடு கட்டுவதற்கென வாங்கிய காணியை விற்று, தொலைவிலிருக்கும் இன்னோரு ஊருக்கு அந்தக் குடும்பம் இடம் பெயர்கிறது.
 


எந்த ஆட்சியாயினும் நிலையாக நிலைப்பதில்லை என்பது வரலாறு. 1985 இல் சர்வாதிகார ஆட்சி கலைக்கப்பட்டு ஜனநாயக நடைமுறைக்கு பிரேசில் திரும்புகின்றது. ரூபன்ஸ் காணாமற்போனார், அதற்குப் பொறுப்புக் கூறவேண்டியது பிரேசிலிய அரசு என்று ரூபன்ஸின் தாயார் தொடர்ந்து போராடியதால், அவர் காணாமலாக்கப்பட்டு 25 வருடங்களுக்குப் பிறகு ரூபன்ஸிற்கான மரணச்சான்றிதழ் வழங்கப்படுகின்றது.

சற்று யோசித்துப் பாருங்கள். ஒருவர் காணாமல் போய் 25 வருடங்களுக்குப் பின்தான் அவர் இறந்துவிட்டார் என்று சொன்னால் அந்தக் குடும்பம் எத்தனை வருடங்கள் அந்தத் துயரத்தோடு வாழ வேண்டியிருந்திருக்கும்?

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு, அப்போது தந்தைக்கு என்ன நடந்தது என்று சிறிதும் அறியாத அந்தக் குழந்தைகள், வளர்ந்தவர்களாகியபின் (மரணச்சான்றிதழ் கிடைக்கும் நாளில்) உனக்கு அப்பா இனி ஒருபோதும் வரமாட்டார் என்று எப்போது தெரிந்தது என்று தங்களுக்குள் மாறி மாறிக் கேட்பார்கள்.

அப்போது மகன், 'எனது அம்மா அப்பாவின் ஆடைகள் அனைத்தையும் தானமாகக் கொடுத்தபோது அப்பா ஒருபோதும் திரும்பப் போவதில்லை என்று உணர்ந்தேன். அப்போது கிட்டத்தட்ட அவர் காணாமல் போய் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன' என்பான். அதுபோல சின்ன வயசில் இருந்த மகள், 'நாங்கள் எங்கள் வாடகை வீட்டை விட்டு வெளியேறியபோது, அந்த வெறிச்சோடிய அறைகளைப் பார்த்தபோது அப்பா எங்களிடம் இனி வரப்போவதில்லை' என்று உணர்ந்தேன் என்று மகள் சொல்வாள்.

இதைத் திரைப்படத்தில் காட்சிகளாய்ப் பார்த்துக் கொண்டிருந்தபோது கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. அதுபோலவே ரூபன்ஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதும், அதன் பிறகு இப்பிள்ளைகளின் தாயார் நாட்கணக்கில் சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் காட்சிகளையும் பார்த்தபோது என்னையறியாமலே என் உடல் ஒருவகை பதற்றத்துக்குள் போயிருந்தது.

*

இது உண்மையாக நடந்த கதை. இக்கதையை ரூபன்ஸின் மகனொருவர் இதே பெயரில் எழுதி 2015 வெளிவந்திருக்கின்றது. இதில் வரும் தாய் மிகவும் உறுதிவாய்ந்தவராக இருந்திருக்கின்றார். தனது காணாமல்போன கணவரைத் தேடிக் கொண்டிருந்த அவர், தனது 5 பிள்ளைகளின் நிமித்தம் ஒருவகையில் அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்ற யதார்த்ததை உணர்ந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியத்தைப் பெற்றிருக்கின்றார்.

அதுவரை வேலை எதுவும் இல்லாதிருந்த இந்த தாயார், தனது 48 வயதில் சட்டம் படித்து, அதன் பிறகு மனிதவுரிமைகளுக்காகவும், அமேஸான் காட்டுப் பூர்வீகக் குடிகளின் வாழ்வியல் உரிமைகளுக்காகவும் போராடியிருக்கின்றார். பிற்காலத்தில் அவர் மறதிநோயுக்குள் போய்க்கொண்டிருந்தபோதே, தாயின் நினைவுகளைச் சேகரம் செய்து அவரின் மகன் இந்த நூலை எழுதியிருக்கின்றார்.

எழுபதுகளில் சர்வாதிகார ஆட்சியில் காணாமல் போன ஒருவரின் கதை, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு எழுத்தாக்கப்பட்டு திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றது. இவற்றை நினைவுகூர்வதோ, இத்தகை விடயங்களுக்காக போராடுவது என்பதோ இவை இனி நிகழக்கூடாது என்பதற்காகத்தான் என ரூபன்ஸின் மனைவி அவரின் மரணச்சான்றிதழைப் பெறும்போது பத்திரிகைகளுக்குச் சொல்வார்.

ஒருவர் இப்படி அரசியல் நிலைமைகளை வைத்து காணாமலோ/கொல்லப்படுவதோ கூட அவர்களுக்கான முடிவு உடனே நிகழ்ந்துவிட்டன என கொஞ்சமாவது ஆறுதலடையலாம். ஆனால் அவர்கள் சார்ந்த குடும்பங்கள்/பிள்ளைகள் எத்தகைய துயரார்ந்த வாழ்வுக்குள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பதை மிகுந்த நெகிழ்வுடன், உண்மைக்கு மிக நெருக்கமாக மட்டுமின்றி, இவ்வாறான அடக்குமுறைக்குள் வாழாதவர்களைக் கூட இப்படியான விடயங்களை கரிசனையுடன் அணுகுங்கள் எனச் சொல்கின்ற் திரைப்படமாக இது இருக்கின்றது. அத்துடன் எனக்கு மிகப்பிடித்த படங்களில் ஒன்றான 'மோட்டார் சைக்கிள் டயரிகளை' நெறியாள்கை செய்த  Walter Salles யே இதையும் இயக்கியிருக்கின்றார்.

***

குறிப்பு:
இப்போது கடந்தகாலத்தை, இராணுவம் சதி செய்து கைப்பற்றிய ஆட்சியைப் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அதேபோன்று பிரேசிலில் அண்மையில் ஒரு சம்பவம் நடந்தேறியது. 2022 இல் பிரேசில் தேர்தலில் இடதுசாரிகள் வென்றபோது, வென்ற ஜனாதிபதி லூலாவையும், உப ஜனாதிபதியையும், உயர்நீதிபதியையும் கொல்ல, தேர்தலில் தோற்ற ஜனாதிபதியும்  இராணுவமும் சேர்ந்து சதி செய்ததும் அது தோற்றதையும் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும். தோற்ற ஜனாதிபதி  Bolsonaro, 70களில் இராணுவத்தில் இருந்தவர். இப்போது இந்த சதிக்காக Bolsonaro இற்கு பிரேசில் நீதிமன்றத்தால் 27 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

 

கார்காலக் குறிப்புகள் - 139

Wednesday, March 18, 2026

 


சில திரைப்பட நெறியாளர்களின் ஏதேனும் ஒரு படைப்பைப் பார்த்தபின், அவர்களின் மற்ற திரைப்படங்களைப் பார்க்க ஆவல் வரும். அப்படி நோர்வேஜிய/டேனிஷ் இயக்குநரான யூவாக்கிம் திரீயரின் (Joachim Trier), 'Sentimental Value' ஐப் பார்த்தபின் அவரின் மற்றத் திரைப்படங்களான  'Louder Than Bombs', 'The Worst Person in the World' போன்றவற்றைப் பார்த்து முடித்திருந்தேன்.
 


திரீயரின் திரைப்படங்களை அவ்வளவு எளிதாக ஒரே இருக்கையில் (One sitting) பார்த்து விட முடியாது. மிகவும் இருண்ட, உளவியல்/உளவடு அலைகளுக்குள் அழைத்துச் செல்லக் கூடியவை. திரீயர் அவரது திரைப்படங்களில் சேர்த்துக்கொள்ளும் வர்ணம் கூட பெரும்பாலான சமயங்களில் சாம்பாலானவை. மேற்கத்தைய பனிப்பொழியும் நாடுகளுக்குரிய இலையுதிர்காலத்துக்குரிய வர்ணமது. எனவே இயல்பாக உங்கள் மனது திரீயரின் திரைப்படங்களைப் பார்க்கும்போது அழுத்தமும் கனமும் கூடிய மனோநிலையை அடைந்துவிடும்.

 'Sentimental Value' இப்போது ஒஸ்கார் சிறந்த திரைப்படங்களின் பட்டியலுக்குச் சென்றதால் அநேகர் பார்த்திருக்கக் கூடும். இத்திரைப்படத்தில் ஒரு தந்தைக்கும், அவரின் இரண்டு மகள்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய கதை என்றால், ''Louder Than Bombs' ஒரு தந்தைக்கும் இரண்டு மகன்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய கதையெனச் சொல்லலாம்.

திரீயரின் பெரும்பாலான திரைப்படங்களில் (அவரின் முதல்படமான 'Reprise' உட்ப) வரும் பாத்திரங்கள் உளவியல் சிக்கலுக்குள் அகப்பட்டவர்களாகவும், தற்கொலை எண்ணமுடையவர்களாகவும், அதற்கு முயற்சித்தவர்களாகவும் இருப்பதை ஒரு பொதுப்பண்பானச் சொல்லிக் கொள்ளலாம்.

Sentimental Value வரும் இரண்டு மகள்களில் ஒருவரான நோரா அப்படி தற்கொலை முயற்சி செய்துவிட்டு தப்பி உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்.  அதுபோல 'Louder Than Bombs'  இல் வரும் இளைய மகன் கொனர்ட் மிகுந்த பிடிவாதமுள்ள, பாடசாலையிலிருந்து அந்நியப்பட்டு தற்கொலை எண்ணமுடைய ஒரு பாத்திரம். 'Reprise' வரும் இரண்டு எழுத்தாளர்களில் ஒருவர் அவரின் முறிந்துபோன காதலின் நிமித்தம்  உளவியல் நிலையத்தில் உளவடுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்.

*
 
இவ்வாறாக திரீயரின் திரைப்படங்கள் தற்கொலை/தற்கொலை எண்ணங்களுடன் வாழ்பவர்களின் வாழ்க்கையை மிக நெருக்கமாகப் பார்க்கின்றன. அதிலும் 'சென்டிமெண்டல் வால்யூ'வில் தம்மை இளவயதில் விட்டுச் சென்ற ஒரளவு புகழ்பெற்ற இயக்குநராகிவிட்ட தந்தை திரும்ப வந்து, முறிந்த தந்தை-மகள் உறவைச் சீராக்க முயலும்போது, அந்தத் தந்தை மகளின் இடைப்பட்ட சிக்கலான வாழ்வை, முக்கியமாக அவளின் கடந்தகால தற்கொலை முயற்சியை விளங்கிக் கொள்வதுடன் அத்திரைப்படம் முடிவது மிக அருமையானது.

நமது வாழ்க்கைக் காலங்களில் போரோடு தொற்றுநோய்களோடு வாழ்வதைப் போல, இவ்வாறான தற்கொலைகள்/தற்கொலை சிந்தனைகளோடு வாழ்வதும் சாதாரணமாக்கப்பட்டுவிட்டதோ (normalized) என்று திரீயரின் திரைப்படங்களைப் பார்க்க ஒருவகையில் அச்சம் வரச் செய்கிறது.

அதேவேளை திரீயரின் படைப்புக்களில் மனிதர்கள் எவ்வளவு அழிவுகள்/துயரங்கள் வந்தாலும், அதைக் கடக்கின்றபோதும், கடந்தபின்னும் அதே சாதாரண மனிதர்களாகவே இருக்கின்றார்கள். நம் காலத்தில் பெருந்தொற்று வந்து மனிதர்கள் உள்ளே அடைந்தபின்னும், எதைக் கற்றுக் கொண்டிக்கின்றார்கள்? அப்படி பெருந்தொற்றைப் பார்த்த மனித சமூகம் எப்படி போர்களுக்கு இப்போது போய்க்கொண்டிருக்க முடியும்?

ஆக மனிதர்கள் கடந்தகாலத்தில் இருந்து மட்டுமின்றி, சமகாலத்தில் இருந்தும் எதையும் கற்றுக்கொள்வதில்லை என்பதைக் கண்டுகொள்கின்றோம்.  'The Worst Person in the World' தனது முன்னாள் காதலன் குணப்படுத்த முடியாத புற்றுநோயால் சாகப்போகின்றான் என அறிந்து அவனை சுகம் விசாரிக்கச் செல்கின்ற காதலியிடம் 'நீ என்னை விட்டு விலகிச் சென்றபோது, உனக்கு இப்போதிருக்கும் காதலனோடு அதற்கு முன்னரே உறவு முகிழ்ந்துவிட்டதா?' என்று தேவையில்லத கேள்வி  கேட்கின்றான். அவள் இனி உண்மையை மறக்கக்கூடாது என்பதற்காய் 'ஆம்' என்று சொல்கின்றபோது, அவளையும் அவளின் புதிய காதலையும் சபிக்கின்றான். ஆக மனிதர்கள் தமது இறுதிக்காலத்திலும் எதையும் எளிதில் மன்னிக்க இயலவில்லை என்பதைப் பார்க்கின்றோம்.
 
 

'Louder Than Bombs' இல் தாயார் வாகன விபத்தில் இறந்தபின், மூன்று வருடங்களுக்குப் பிறகு தந்தைக்கு தனது ஆங்கில ஆசிரியரோடு வரும் உறவை, இளைய மகனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆசிரியரின் முகத்தில் வன்மத்துடன் துப்புகின்றான். ஆனால் அதே மகனுக்கு, தந்தையாரும்,அவனின் மூத்த சகோதரரும் மறைத்து வைத்திருந்த ஓர் உண்மை கடைசிவரை தெர்யாது. அது அவனின் தாயாருக்கு திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு பத்திரிகையாளாராக போர்ச்சூழலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இருந்தது என்பதாகும். அதை அவன் இறுதியில் எப்படி அறிந்துகொள்கின்றான்/தனது தந்தையை எவ்வாறு புரிந்து கொள்கின்றான் என்பதை திரீயர் இத்திரைப்படத்தில்  நுட்பமாக காட்டுகின்றார்.

*

திரீயரின் திரைப்படங்களைப் பார்க்கும்போது, நாம் உறவுகளின் நிமித்தம் அவ்வளவு புனிதமாக இருக்க வேண்டியதில்லை என்பதைக் கண்டுகொள்கின்றோம். இன்னொருவகையில் இவ்வாறு புனிதமாக்கப்பட்ட உறவுகளில்தான் நாம் நிறையத் தவறுகளைச் செய்பவர்களாக இருக்கின்றோம் என்றும் புரிந்துகொள்ளலாம்.

 Sentimental Value இல் வரும் நோரா, தமது தந்தையார் தாயை விட்டு சுவீடனுக்குப் போய்விட்டார் என்று கோபத்தில் இருக்கையில், எப்படி அதே நோரா தனது காதலை/உறவை, ஏற்கனவே திருமணம் செய்துவிட்ட சக நடிகனோடு ஏற்படுத்திக் கொண்டார் என்று யோசிப்பதும் சுவாரசியமானது. நமக்குள்ளிருக்கும் மனவடு/சிக்கல்கள்,  அதேபோன்ற சிலந்திவலைச் சிக்கல்களுள்ள உறவு/மனிதர்களைத்தான் தேடச் செய்கின்றதோ என்று ஆராய்ந்தும் பார்க்கலாம்.
 
 



'The Worst Person in the World' இல் வரும் காதலியானவள், அவளுக்கு சுவாரசியம் தந்துகொண்டிருந்த காதல் அலுப்பாகும்போதே இன்னொரு உறவுக்குள் போகின்றாள். அறிவுஜீவித்தனமான காதலனைவிட, உணர்ச்சிபூர்வமாக காதல் நிமித்தம் இருப்பவனே அவளுக்குப் பிடித்துப் போகின்றது. அவளளவில் அது சரியாகவே இருக்கின்றது. ஆனால் ஏன் அவள் அந்தப் புதிய காதலனைப் பின்னர் பிரியவும் செய்கின்றாள் என்பதில்தான் சொல்லப்படாத இன்னொரு கதை இருக்கின்றது. அந்தக் காதலன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து, அவர்களின் குழந்தையைப் யன்னலுக்குள்ளால் பார்க்கும்போது அவள் உண்மையில் தேடியது காதலையா அல்லது அவளுக்கான விட்டுவிடுதலையாகும் சுதந்திரத்தையா என நாம் யோசிக்கவும் தொடங்கின்றோம்.

திரீயரின் திரைப்படங்களைப் பார்ப்பதென்பது எளிய காரியமல்ல. அது பலவித மன அலைகளுக்குள் நம்மை துரும்பு போல எற்றித் தள்ளியபடியே இருக்கும். இவ்வாறு பலவித உணர்ச்சிக்குவியல்களுக்கு நான் சென்று கொண்டிருப்பதைப் பார்த்த நண்பர் இத்திரைப்படங்களையெல்லாம் நீ இவ்வளவு கஷ்டப்பட்டுப் பார்க்க வேண்டுமா எனக் கேட்டிருந்தார். அது உண்மைதான். பார்க்காமல் இருப்பதற்கும் தெரிவு இருக்கிறதுதான். ஆனால் இப்படியான ஒரு வாழ்க்கை இருப்பதை அறிவதென்பதும் ஒருவகையில் அவசியமானதுதான். இந்த வாழ்க்கை முழுதும் எத்தனைபேரின் இருண்ட வாழ்க்கைகளை/மனவடுக்களை/தற்கொலை முயற்சிகளை நாம் கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

மேலும், நாமெல்லோரும் காதல்/நட்புகளின் நிமித்தம் கொடுத்த உறுதிமொழிக்கு ஏற்ப வாழ்ந்து விடுகின்றோமா என்ன? அப்படித்தான் திரீயரின் திரைப்படங்களும் பெற்றோர்/காதல் உறவுகளின் தவறுகளுக்கு அப்பால் அவர்களை சகமனிதராக புரிந்துகொள்ள மட்டுமில்லை, நமக்கென்று ஒரு தனித்துவமான வாழ்க்கை இருப்பதையும் மறைமுகமாக உணர்த்துகின்றன போலும்.

***

 


கார்காலக் குறிப்புகள் - 138

Tuesday, March 17, 2026

 

க.கைலாசபதி
***

எனது தொடக்க கால வாசிப்பிலே எஸ்.பொவைக் கண்டடைந்தது, அதன் பிறகு பிரமிள், மு.தளையசிங்கம் என்று சென்று சேர்ந்து இருந்தேன். இலங்கையில் இருந்து பதினாறு வயதில்  கனடாவுக்குப் புறப்படமுன்னர் 'திசை'களும், 'சரிநிகரும்' எனது அக்காவினால் அறிமுகப்படுத்தப்பட்டதால் ஒரளவு தீவிர இலக்கியத்தின் முகம் தெரிந்திருந்தது. பின்னாட்களில் 'அலை' அறிமுகமானபோது, ஈழத்தில் வலுவாக இருந்த முற்போக்கு அணிக்கு மாற்றாக இன்னொரு தரப்பு இருந்தது எளிதில் புரிந்தது.

என் வாசிப்பின் திசை இவ்வாறாகப் போனதால், இயல்பாக முற்போக்கு அணியில் முன்னணியில் நின்ற கைலாசபதி, சிவத்தம்பி போன்றோரை ஆழ வாசிக்கும் ஆர்வம் அவ்வளவு எனக்குள் மேலெழவில்லை. எனவே எஸ்.பொ, மு.த, 'அலை' போன்றவை முன்வைத்த கருத்துக்களே எனக்குரியவையாகவும் எளிதில் மாறியிருந்தன.


ஆனால், நாம் ஒரு தரப்பில் உறுதியாக நிற்பதால் மறுதரப்பை முற்றாக நிராகரிக்க வேண்டியதில்லை என்கின்ற நிலைப்பாட்டை எப்போதோ இலக்கிய வாசிப்பினூடாக நான் வந்தடைந்தபோது, சிவத்தம்பி எனக்கு வேறொரு வடிவில் தெரிந்தார். அவர் மார்க்சியம் குறித்து மட்டுமின்றி, இலக்கியம், பின்னமைப்பியல்/ பின்நவீனத்துவம் குறித்துக் கூட பல நிலைப்பாடுகளை மாற்றியமைத்துக் கொண்டார் என்பதை அவரது பிற்காலத்தைய காலங்களில் கண்டுகொள்ள முடியும். மேலும் சிவத்தம்பி மார்க்ஸியம் குறித்து எழுதியதை விட அவர் சங்கப்பாடல்கள் தொடக்கம் தமிழ்த் திரைப்படங்கள், யாழ்ப்பாண சமூகத்தைப் புரிந்துகொள்ளல் உள்ளிட்ட அவர் எழுதிய ஆய்வு நூல்கள்  எனக்கு முக்கியமானவையாக இருக்கின்றன.

அவ்வாறே க.கைலாசபதியை பற்றி எத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும், அவரது நூலான 'ஒப்பியல் இலக்கியம்' ஒரு முக்கியமான படைப்பாகும். அதுவரைகாலமும் தறிகெட்டு எல்லாத் திசைகளிலும் திறனாய்வு/விமர்சனம் என்ற துறையை ஓர் ஒழுங்குக்குக் கொண்டு வர கைலாசபதியின் ஒப்பியல் இலக்கியம் அன்று பெரிதும் துணை புரிந்திருக்குமென நம்புகிறேன். அவர் இந்த நூலில் கல்தோன்றாப் மண்தோன்றாப் பெருமையில் நமக்கு எந்தப் பெருமிதமும் இல்லை என ஒப்பீட்டியல் ஆய்வு முறையை (comparative study) மிகுந்த கறாராக முன்வைக்கின்றார்.

அதுவே அவர் பின்னர் இங்கிலாந்தில் முதுகலை செய்யும்போது 'தமிழ் வீரயுகக் கவிதை' (Tamil Heroic Poetry) என்கின்ற மிக முக்கிய ஆய்வைச் சமர்பிக்க வைக்கின்றது. இந்த 'தமிழ் வீரயுகக் கவிதை'யில் எமது புறநானூறுக்கவிதைகளை கிரேக்க காவியங்களோடு ஒப்பிட்டு கைலாசபதி 1966இல் எழுதியிருக்கின்றார்.

கைலாசபதி அவரது ஐம்பது வயதுக்குள்ளேயே புற்றுநோயின் நிமித்தம் மரணித்தவர். அவரும் சிவத்தம்பி போலவோ அல்லது எப்போது முரண்பட்டு உரையாடிக் கொண்டிருந்த க.நா.சுப்பிரமணியம், வெங்கட்சாமிநாதன் போன்றவர்கள் போலவோ எழுபது வயதுகளைத் தாண்டி வாழ்ந்திருந்தால் கைலாசபதியின் எழுத்துக்கள் வேறுவிதமாக முதிர்ச்சியடைந்து வேறுவிதமாக மாறியிருக்கும்.
 

கைலாசபதியை ஓர் மரபுரீதியான மார்க்ஸியர் என முடிந்த முடிவுகளாகக் கூறும் கூற்றுக்களுண்டு. ஆனால் கைலாசபதி ஓரு மார்க்ஸியராக இருந்தபோதும், பாரதியார் மீது மட்டுமில்லை, கம்பன், பக்திக்காலக் கவிதைகள், தமிழ்ச்சித்தர்கள் என தமிழின் வளங்களைக் கொண்டுவந்த சேர்த்த அனைத்துப் பக்கங்கள் பற்றி கட்டுரைகளும், நூல்களும் எழுதியிருக்கின்றார். கைலாசபதி பாரதியார் பற்றி மிகச் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளை மட்டுமின்றி 'பாரதியார் நூல்களும் பாடபேத ஆராய்ச்சிகளும்' என்கின்ற முக்கிய ஆய்வு நூலையும் வெளியிட்டிருக்கின்றார். (அதை  எங்கள் உறவுக்காரர்களும்/அப்பாவும்/சித்தப்பாவும் ஒருகாலத்தில் பங்களிப்புச் செய்த கலைப்பெருமன்றம் 1974இல் வெளியிட்டிருப்பது ஆச்சரியமானது).

அதுமட்டுமின்றி கைலாசபதி தனது 'நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்' நூலில், தமிழ் நாவல்கள் பற்றிய கட்டுரையொன்றில் ப.சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்' என்கின்ற நூலை முக்கிய ஒரு நாவலாக 1971இல் குறிப்பிட்டிருக்கின்றார். ப.சிங்காரத்தின் அருமையே தமிழகத்தில் 1980இற்குப் பிறகுதான் உணரப்பட்டபோது, ஓர் ஈழத்தவராக அதன் மதிப்பை கைலாசபதி எழுபதுகளிலே கண்டுணர்ந்தது உவகையளிக்கிறது.

கைலாசபதி 'ஒப்பியல் திறனாய்வு' நூலில் கம்பராமாயணத்துக்கு எதிராக எழுதப்பட்ட பெரும்பாலான நூல்கள் எதுவுமே ஆய்வுமுறையான வகையில் எழுதப்படவில்லை என்று நிராகரிக்கின்றார். மேலும் தமிழ் ஆய்வாளர்கள் தனியே தமிழை மட்டும் அறியாது, வடமொழியோடு பிற திராவிட மொழிகளை செம்மையுறக் கற்கும்போதே ஒப்பியல் திறனாய்வு மூலம் திராவிட மொழிகளின் பெருமையை மேற்கத்தையவர்களும் பாராட்டும்படியாக இருக்கும் என்பதைக் குறிப்பிடுகின்றார். அந்தவகையில் சிறைக்குள் இருந்து வ.வே.சு.ஐயர் எழுதிய கம்பராமாயணம், அவருக்கு உசாத்துணைக்கு நூல்கள் இருக்காவிட்டாலும், தனது அறிவையும் நினைவையையும் நம்பி  அவர் எழுதிய சிறந்த ஒப்பியல் ஆய்வு நூலென கைலாசபதி சிலாகிக்கின்றார்.

*
இவ்வாறு அரியவற்றை எழுதிய கைலாசபதிக்கு இன்னொரு முகமிருக்கின்றது. க.நா.சுப்பிரமணியத்தை மறுப்பதற்கென்றே ஒரு நூலை எழுதி  ('திறனாய்வுப் பிரச்சினைகள்: க.நா.சு குழு பற்றிய ஓர் ஆய்வு)வெளியிட்டிருக்கின்றார். அது க.நா.சுவுக்கு அவரது வாசகர்கள் வெளியிட்ட மணிமலர் நூலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். அதில் கூட க.நா.சு முன்னர் போல இப்போது அவ்வளவு அடிபடுவதில்லை, அவருக்கு அடுத்ததாக வந்திறங்கிய வெங்கட்சாமிநாதந்தான் இப்போது சரியான கரைச்சல் என்கின்ற மாதிரி ஒரு நூறு பக்கங்களுக்கு மேலாக அந்த நூல் நீள்கின்றது.

உரையாடலோ சரி விவாதமோ இரு தரப்புக்களிடையே நடக்கும்போது மூன்றாந்தரப்பு அதை வாசிக்கும்போத் ஏதேனும் புதிதாக அறிய அங்கே பேசப்படவேண்டும் என்பது எனது எதிர்ப்பார்ப்பாக இருக்கும். ஆனால் இந்த கநாசு திறனாய்வு நூலிலிருந்து இருந்து எடுக்க எதுவுமே எனக்கு   இருக்கவில்லை என்பது துயரமானது.

இத்துடன் 'இலக்கியத்தில் மார்க்சீய எதிர்ப்பு - ஒரு புத்திசீவியின் இரண்டக நிலை' என்று தலைப்பிட்டு மு.தளையசிங்கத்தை மறுத்து எழுதிய நீண்ட கட்டுரையையும் சேர்த்துக் கொள்ளலாம். கைலாசபதியின் முக்கிய வாதங்களில் ஒன்று மு.த மார்க்ஸிய சார்பாக இருப்பதாகச் சொன்னாலும், அவர் தனது எழுத்துக்களில் மார்க்ஸீய எதிர்ப்பையும் முன்வைக்கின்றார். அதற்கு மு.த முன்வைக்கும் எழுத்தாளர்களின் பட்டியலைச் சொல்லி, இவர்களெல்லாம் இடதுசாரி எதிர்ப்பாளர்கள் என்ற வாதத்தை கைலாசபதி வைக்கின்றார். ஆனால் மு.தவின் மார்க்ஸிய எதிர்ப்பு க.நா.சு, வெசா போன்றோரைப் போன்ற தீவிரமான ஒற்றைப்போக்கு எதிர்ப்பு இல்லையெனவும் குறிப்பிடுகின்றார்.

மு.தவின் இரண்டகநிலை என்பது அவர் ஆன்மீகத் துறவு நிலையில் ஒரு காலையும், இன்னொரு காலை எழுத்தாளர் என்கின்ற அடையாளத்தில் வைக்கின்றார் எனச் சொல்கின்றார். உண்மையில் மு.த நீண்டகாலம் உயிரோடு இருந்திருந்தால் அவர் ஒருவகை ஆன்மீக வாதியாக, மெளனத்துள் எழுத்தை உதறித்தள்ளிவிட்டுச் சென்றிருப்பார் என்கின்ற கருத்தைச் சொல்கின்றார். இந்தக் கட்டுரை மு.த மரணமான 1973 இல் முதவின் நண்பர்கள் நடத்திய பூரணியில் பிரசுரக்க பூரணி சஞ்சிகையினர் கேட்டதாகவும், ஆனால் இந்த விமர்சனத்தொனியில் அது பிரசுரிக்காது, 1979இல்  'நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்' நூலில் சேர்க்கப்பட்டதாக கைலாசபதி குறிப்பிடுகின்றார்.
 

கைலாசபதி முதவின் மீது முன்வைக்கும் முக்கிய விமர்சனம் என்பது முத மார்க்ஸியத்தை கீழைத்தேய ஆன்மீக மரபுடன் இணைக்கின்றார் என்பதாகும். அதாவது மார்க்ஸை, ராமகிருஷ்ணர், அரவிந்தர், நந்தகோபாலகிரி (முதவின் ஆன்மீகக் குரு) போன்றோருடன் ஒப்பிட்டு சேர்க்கப்பார்கின்றார் என்பதே கைலாசபதியின் வாதம். ஆனால் இந்தக் கட்டுரையின் முரண்நகை என்னவென்றால் இதை நாம் கைலாசபதி கறாராக முன்வைக்கும் 'ஒப்பியல் ஆய்வுமுறை'ப்படி ஏன் முதவுக்கு இப்படி ஒப்பிட்டுப் பார்க்க சுதந்திரம் இருக்ககூடாதென்று கேட்கலாம்.

இன்னொருவகையில் ஒப்பீடு செய்வது என்பது மறுபுறத்தில் இணைப்புக்களை ஏற்படுத்திப் பார்க்கவுந்தானே, அப்படிப்பார்த்தால் மார்க்ஸியச் சிந்தனைகளை ஏன் கீழைத்தேய சிந்தனையாளர்ளோடு ஒப்பிட முடியாது என்றும் நாம் கேட்க முடியும்.

கைலாசபதியின் காலத்துக்குப் பிறகு தமிழில் அறிமுகமான பின்னமைப்பியல்/பின்நவீனத்துவம் போன்றவை எதையும் எதற்கு எதிராக நிறுத்தத்தேவையில்லை, அதையதை அதனதன் இயல்பில் fragments ஆகப் பார்க்கலாம் என்கின்ற புதிய பார்வைகளை நமக்குத் தந்திருக்கின்றது. ஒப்பீட்டு முறை தேவையானது என்றாலும், அது சிலவேளைகளில் அப்பிள்களை தோடம்பழங்களோடு ஒப்பிடும் அபத்தமான நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்கின்ற ஒப்பியல் ஆய்வின் பலவீனமான பக்கங்களையும் நாங்கள் பலவிடங்களில் பார்க்க முடியும்.

*

இன்றைக்கு கைலாசபதியின் எழுத்துக்களை மார்க்ஸியப் பார்வையில் மட்டும் பார்க்காது புதிய ஆய்வுக்கண்ணாடியைக் கொண்டு பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. அதை ஒருபோதும் மரபான மார்க்ஸியர்களால் செய்ய முடியாது. ஒரு புதிய தலைமுறை அவரின் எழுத்துக்களில் இதுவரை கண்டுகொள்ளப்படாத கோணங்களை முன்வைத்து உரையாடல்களை ஆரம்பிக்கவேண்டும். அப்போதுதான் நாம் இதுவரை பார்த்த பார்வைகளிலிருந்து விலத்தி இன்னொரு கைலாசபதியைக் கண்டடைந்து, அவரை இன்றைய காலத்துக்குரிய ஓர் ஆய்வாளாராக முன்னிறுத்த முடியும்.

இறுதியாக சுந்தர ராமசாமி ஓரிடத்தில் கைலாசபதி பற்றிக் குறிப்பிடுவதை இங்கே நினைவுபடுத்தலாமென நினைக்கின்றேன்.

"கலாநிதி கைலாசபதியை வெகுவாகப் போற்றும் ஓரு ஈழத்து இதழாசிரியர், விமர்சனத்தைக் கைலாசபதி விஞ்ஞான ரீதியாக வளர்த்தார் என்றும், க.நா.சு. மனம் போனபோக்கில் முடிவுகளைச் சொன்னார் என்றும் என்னிடம் சொன்னார். அவருடைய வார்த்தைகளால சீண்டப்பட்ட நான், கைலாசபதி விஞ்ஞான ரீதியாக தவறான முடிவுக்கு வந்தார் என்றும், க.நா.சு. மனம் போனபோக்கில் சரியான முடிவுக்கு வந்தார் என்றும் சுருக்கென்று சொன்னேன். உணர்வுரீதியான பாதிப்புக்கு நான் ஆளாகியிருக்கவில்லை என்றால் இவ்வாறு பதில் சொல்லியிருப்பேன்: 'கைலாசபதி விஞ்ஞானரீதியாக விமர்சனத்தை வளர்த்தார் என்பது உண்மைதான். படைப்புக்கும் சமூகத்துக்குமான உறவு முதன்முதலாகத் தமிழ் மொழியில் அவரால்தான் அழுத்தம் பெற்றது. க.நா.சு. கணக்கில் எடுத்துக்கொள்ளத் தொடர்ந்து மறுத்துக் கொண்டிருந்த ஒரு இடைவெளியைக் கைலாசபதிதான் பூர்த்தி செய்தார். ஆனால் படைப்பாளிகளின் தரம் சார்ந்து கைலாசபதி வந்திருக்கும் அனேக முடிவுகள் அபத்தமானவை. க.நா.சு. 'மனம் போன போக்கில்' வந்த முடிவுகள் சரியானவை'  ('ஆளுமை, மதிப்பீடுகள்', ப 127)  என்கின்ற சுந்தர ராமசாமியின் கருத்துக்களிலிருந்தும் நாம் புதிய உரையாடல்களை வார்த்தெடுக்க முடியும்.

***

 

கார்காலக் குறிப்புகள் - 137

Sunday, March 15, 2026

 

சிறுவயதுகளில் அருகிலிருந்த மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலுக்கு அப்பா அழைத்துச் செல்வார். அங்கே சுவர்களில் சமயக்கதைகளை நினைவுபடுத்தும் அழகான ஓவியங்கள் உட்சுவர்களில் வரையப்பட்டிருக்கும். அவற்றை அப்போது தனது நண்பர் (சிவப்பிரகாசம்?) வரைந்ததாகச் சொன்னதாக ஞாபகத்திலுண்டு. அம்மாவின் ஊருக்கருகில் இருந்த நகுலேச்சரம் கோயிலும் இவ்வாறான சுவரோவியங்களைப் பார்த்திருக்கின்றேன்.  

துயரம் என்னவென்றால், இவ்விரு ஆலயங்களும் போரில் பாதிக்கப்பட்டு இந்த அசலான ஓவியங்கள் இப்போது முற்றாக அழிந்துவிட்டிருக்கின்றன. அந்தக் காலங்களில் எங்கேனும் இவை ஆவணமாக்கபட்டு வைக்கப்பட்டிருந்தனவா என்றும் தெரியவில்லை.



எனது காலத்தவர்க்கு நிதானமாக சென்று பார்க்கும் ஓவியக் கண்காட்சிகள் அன்றைய காலத்தில் வாய்க்கவில்லை. பெரும்பாலான ஓவியங்களையும், சிற்பங்களையும் கோயில்களில்தான் பார்த்திருக்கின்றோம். பின்னர் யுத்தகாலத்தில் இயக்கம் தமது பிரச்சாரங்களுக்காக சுவர்களில் வரைந்த போர்க்காலத்தைச் சித்தரிக்கும் ஓவியங்களைப் பார்த்து வளர்ந்திருக்கின்றோம். அது தவிர, யுத்தகளங்களில் மரணமடைந்த போராளிகளின் அஞ்சலிகளும்,மா-வீரர் நினைவு வாரத்தை நினைவுபடுத்தும் பதாதைகளும் மட்டுமே எமக்கான ஓவிய உலகை விரிக்கும் சுருங்கிய எல்லையாக இருந்தன.

புலம்பெயர்ந்த பின், ஓவிய அறிவு அவ்வளவாக இல்லாதபோதும் ஓவியங்களை/ஓவியக் கண்காட்சிகளைத் தேடிப் போவது பிடித்தமாக ஒன்றாக இருந்தது. எமக்குப் பிடித்தமான சூழ்நிலைகளுக்குள் எம்மைத் தக்க வைப்பது என்பதே வாழ்வின் அலுப்புகளுக்குள் இடையில் சுவாரசியம் தரக்கூடியது.


சிலர் அவ்வளவாக வாசிக்காவிட்டாலும், புத்தகங்களை விருப்புடன் வாசித்துக் குவிப்பார்களே, அப்படி எனக்கு ஓவிய உலகு அவ்வளவு பரிட்சயமில்லாதபோதும் ஓவியங்களோடு இருக்க எப்போதும் விரும்புகின்றவன். மேலும் ஒருவர் தமக்குச் சுட்டுப்போட்டாலும் வராத ஒரு திறமையைப் பிறரிடம் பார்த்து வியப்பதைப் போல, நானும் ஓவியங்களை வரைபவர்களை அப்படி நேசமுடன் அரவணைக்க விரும்புவதுண்டு.

*
ஈழத்தில் மாற்கு மாஸ்டர், ஆசை இராசையா, ஓவியர் ரமணி, 'சிரித்திரன்' சுந்தர், கிக்கோ என்று சிறந்த ஓவியர்கள் இருந்திருக்கின்றார்கள். மாற்கு மாஸ்டரிடம் நேரடியாகவும், மானசீகமுமாக கற்ற ஓரு ஓவியப் பரம்பரை இன்றும் எம்மிடம் இருக்கின்றது.

போர் எதைத்தான் விட்டு வைத்திருக்கின்றது. போர்க்காலத்தில் ஓவியர்களும் அருகிப் போயிருந்தார்கள். ஆனால் இப்போது புதிய தலைமுறை ஓவியத்தில் மிளிர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது. ஈழத்தில் ஓவியர்கள் குறித்த என் தேடல் எல்லைக்குட்பட்டது. சில ஓவியர்களைத் தொடர்ந்து வந்தபடி இருப்பேன். ஒரு படைப்பாளி காலத்தின் நீட்சியில் எப்படி மாற்றமடைகின்றார்கள் என்பதைக் கவனிப்பேன்.

அப்படி நிறைய இளம் ஓவியர்கள் கடந்த பத்து வருடங்களில் தமிழகத்தில் சிறந்த கலைஞர்களாக மாறியிருப்பதைப் பார்த்திருக்கின்றேன். அப்படி காலத்தோடு வளர நமக்கு ஈழத்தில் அப்படியான வாய்ப்புக்களும், நம்மை வழிநடத்தும் முன்னோடிகளும் குறைவு என்பது ஒருபுறமிருந்தாலும், இத்தடைகளைத் தாண்டி வருகின்றவர்கள் எனக்கு மிக முக்கியமானவர்கள்.



அப்படி ஒருவராக பிருந்தாஜினியை அவதானித்திருக்கின்றேன். அவரின் தொடக்க கால ஓவியங்களில் இருந்து எப்படி நீர்வர்ணங்களில் தேர்ச்சி பெற்ற ஒருவராக மிளிருகின்றார் என்பதை அவரது அண்மைக்கால ஓவியங்களை வைத்து அறுதியிட்டுக் கூற முடியும். மேலும் ஈழத்தில் ஒருவர் தனது வாழ்க்கையை ஓவியத்துக்கு என்று அர்ப்பணித்து அதில் மட்டும் இயங்கிக் கொண்டிருப்பது என்பது மிக அரிதானது. இன்னொருவகையில் எதிர்கால வாழ்க்கையை வைத்துப் பார்த்தால் ஆபத்தானதும் கூட.  ஆனால் அப்படி முழுநேர ஓவியராக இயங்குகின்றவர் பிருந்தாஜினி என நினைக்கின்றேன்.

கனடாவில் இப்படி  முழுநேர ஓவியராக இருந்து, பிழைப்புக்காக வேறெந்தத் தொழிலுக்கும் போகாது, ஒரு சுயாதீன ஓவியராக இருந்து தனது ஐம்பதாவது வயதில் மரணித்தவர் நமது ஓவியர் கருணா. அப்படி தமக்குப் பிடித்த துறையில் மட்டும் பிற கவலைகள்/பொறுப்புகள்/சுமைகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு மூழ்கியிருப்பது என்பது எவ்வளவு கடினமானது என்பதை நாமனைவரும் அறிவோம்.

அண்மையில் ஈழத்தில் ஓவியர் ரமணி மரணமடைந்தவர். எனது பதின்மங்களில் யார் இவற்றை வரைந்தது என்று அறியாமலே அவரது ஓவியங்களைப் பார்த்து வளர்ந்திருக்கின்றேன். எனது தந்தையார் ஒரளவு நன்றாக ஓவியங்களை வரையக்கூடியவர். அப்படியே எனது சகோதரர்களில் ஒருவருக்கும் (அவரின் மகளே ஓவியங்களை வரையும் நிலா) ஓவியங்கள் வரைவது ஒருகாலகட்டம் வரை பிடித்தமாக இருந்திருக்கின்றது. 



அண்மையில் அவரோடு கதைத்துக் கொண்டிருந்தபோதுதான் ஓவியர் ரமணி தன்னை மிகப் பாதித்த ஓர் ஓவியர் எனச் சொன்னார். அவரின் பாதிப்பிலிருந்தும், சிரித்திரன் சுந்தரின் பாதிப்பிலிருந்தும் எனது அண்ணா அவருக்கான ஓவியங்களை வரைந்திருக்கக்கூடும். அவற்றின் சுவடுகளையும் எமது அகதி/இடம்பெயர் வாழ்வு அழித்துச் சென்றிருந்தது.  எனது அண்ணா உக்ரேனிலிருந்து கனடாவுக்கு அகதியாக வந்திறங்கியபோது, அவருக்கு நெருக்கமான சில பொருட்களென கொண்டுவந்திருந்த ஒரு சூட்கேஸையும் விமானநிலையத்தில் கைவிட்டு வெறுங்கையோடு கனடாவின் மண்ணை மிதித்தவர். இது அவருக்கான கதை மட்டுமல்ல, இப்படித்தான் ஒரு தலைமுறை அந்நிய நிலங்களுக்கு வந்திறங்கியவர்கள் என்பதால் திகைப்பதற்கு ஏதுமில்லை.

ஓவியர் ஆசை இராசையா, மாற்கு மாஸ்டர் போல முக்கியமான ஓர் ஓவியர். அவரும் இனக்கலவரத்தில் பாதிப்புற்று தெற்கிலிருந்து  யாழ்ப்பாணத்துக்கு வந்திறங்கிய ஒருவர்தான். பல தமிழ் ஓவியர்களுக்குக் கிடைக்காத ஒரு சிறப்பு, அவருக்கு அரச நிறுவங்களோடு சேர்ந்து வேலை செய்ய  ஒருகாலத்தில் வாய்த்திருக்கின்றது. ஆனால்அதனால் பல முக்கிய ஆளுமைகளுடைய ஓவியங்களை இலங்கையரசின் முத்திரைகளுக்காக ஆசை இராசையா வரைந்திருக்கின்றார். அவரின் அடர்த்தியான இயல்புவர்ண ஓவியங்கள் தனித்துவமானவை.

மாற்கு மாஸ்டர், ஆசை இராசையா, ஏ.ஜே.கனகரட்ன போன்றவர்கள் பெரும் திறமையாளர்கள், அவர்கள் யாழ்ப்பாணத்துச் சூழலை விட்டு வேறொரிடத்தில் பிறந்தோ/வளர்ந்தோ இருந்திருந்தால் எப்படிப் போற்றப்பட்டிருப்பார்கள் என்று சிலவேளைகளில் யோசித்து மனம் வெதும்பதுவண்டு. பிறகு வான்கோ, காஃப்கா போன்றவர்களையே அவர்கள் வாழும் காலத்தில் கைவிட்டு அவர்களின் மரணங்களின் பின் கண்டுகொண்டு ஓர் உலகு இருக்கையில் இதில் வருந்துவதற்கு ஏதுமில்லையென என்னை நானே தேற்றிக் கொள்வதுண்டு. இப்படி மாற்கு மாஸ்டர், ஆசை இராசையா, ஏஜே, 'சிரித்திரன்'சுந்தர் போன்றவர்களின் அசல் திறமையை  மீளக்கண்டுபிடிக்க ஒரு தலைமுறை புதிதாய் எங்களிடையே தோன்றாமலா போய்விடும்?

***

நன்றி: ஓவியங்கள் ஆசை இராசையாவுடது. முதல் படம் அவரே அவரை வரைந்த பிரதிமை.

குறிப்பு:
Uploaded Image
ஆசை இராசையாவின் ஓவியங்களின்  'Echoes in the Bunker' கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடக்கின்றதென்பதைப் பார்த்தபோது இவற்றையெல்லாம் எழுதவேண்டும் போலத் தோன்றியது. யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களும், யாழுக்குப் போகின்றவர்களும் தவறவிடக்கூடாத ஓவியக்கண்காட்சி இது

 

கார்காலக் குறிப்புகள் - 136

Thursday, March 12, 2026

 

ஆதவனின் 'என் பெயர் ராமசேஷன்'

ஒரு செவ்வியல் பிரதி என்பது அதை வாசிக்கும்தோறும் புத்தம் புதுத் திசைகளை அறிமுகப்படுத்தியபடி இருக்க வேண்டும். அதுபோலவே அவை எழுதப்பட்ட காலத்தைத் தாண்டித் தோன்றுகின்ற புதுத் தலைமுறைகளிடையேயும் நீர்த்துப் போகாது இருக்க வேண்டும்.

நான் பிறப்பதற்கு முன் எழுதப்பட்ட ஓரு படைப்பாளியின் புதினங்களை  வாசிக்கும்தோறும், ஏதோ எனக்காக, என் தலைமுறைக்காக எழுதப்பட்டதாக நினைத்துக் கொள்வதுண்டு.அது ஆதவனின் 'காகித மலர்களும்', 'என் பெயர் ராமசேஷனும்' ஆகும்.

நான் என் பல்கலைக்கழகக் காலம் முடியும்தருவாயில் காகிதமலர்களை வாசித்துத் திகைத்திருக்கின்றேன். அதேயளவு நெருக்கத்தை 'என் பெயர் ராமஷேசனும்' எனக்குத் தந்திருக்கின்றது.
 


இரண்டுமே பதின்மங்களிலும்/இருபதுகளிலும் இருக்கின்ற இளைஞன் ஒருவனின் கதையெனச் சொல்லலாம். இரண்டுமே ஒன்றோடொன்று எங்கோ இணைந்து கொள்கின்ற கதைகள் எனவும் கருதிக் கொள்ளலாம்.

சிலநாட்களுக்கு முன் 'என் பெயர் ராமஷேசனை' மீண்டும் வாசித்து முடித்தேன். இந்நாவல் மீதான என்னுடைய ஐந்தாவதோ அல்லது ஆறாவதோ வாசிப்பாக இது இருக்கலாம். ஆனால் என் வாசிப்பில் அலுக்காக ஒரு பிரதியாகவே இன்னுமிருப்பது வியப்பாக இருந்தது. வேண்டுமெனில் இந்நாவலின் பிற்பகுதி கொஞ்சம் (திரைப்பட இயக்குநரின் பகுதி) இழுபட்டது என்று சொல்வதைத் தவிர வேறெந்தக் குறையும் இல்லை.

இந்நாவலில் வரும் ராமஷேசன் சந்திக்கும் மாலா, பிரேமா போன்ற பெண்களை ஏதோ ஒரு காலத்தில் சந்திக்காத ஆண்கள் குறைவாகவே இருப்போம். அதுபோலவே பெண்களைக் கவர்வதற்கு நாம் அணிந்திருக்கும் முகமூடிகளையும், அதற்குப் பின்னாலிருக்கும் நம் சனாதன முகங்களையும் நாமே நம்மில் பல தடவைகள் பார்த்திருப்போம்/இரசித்திருப்போம்/ வெறுத்திருப்போம். பின்னர் இதுதான் நம் அசலான முகமெனத் தெளிந்து, இந்த வாழ்வை எதிர்கொள்ளும் தைரியத்தைக் காலத்தின் நீட்சியில் கண்டடைந்திருக்கவும் செய்திருப்போம்.

ஆதவன், என் பெயர் ராமஷேசனை எழுதியபோது நான் பிறக்கவேயில்லை. ஆனால் நான் இதில் வரும் ஆண் சந்திப்பது போலவே பெண்களைச் சந்தித்திருக்கின்றேன். குழப்பங்கள் உள்ள மனிதனாக பெண்களின் உறவுகள் சார்ந்து அந்த வயதுகளில் இருந்திருக்கின்றேன். சரியான அல்லது தவறான முடிவுகளை நம் கற்பிதங்களின் நிமித்தம் பெண்கள் சார்ந்து எடுத்துமிருக்க்கின்றேன்.

ஆக இன்னமும் பிறக்காத ஒரு தலைமுறையும் இதே இருத்தலியச் சிக்கல்களை எதிர்கொள்ளுமென ஒரு பிரதி உங்களுக்காக அடுத்த தலைமுறையில் காத்துக் கொண்டிருப்பதென்பது எவ்வளவு அருமையானது.


ஆதவன் அவரது நாற்பத்தைந்து வயதில் சிருங்கேரியில் நின்றபோது துங்கபத்ரா நதியில் அடித்துச் செல்லப்பட்டவர். ஆனால் நானோ ஆதவனை அவர் தன்னைத்தானே இந்த வாழ்விலிருந்து கைவிட்டபோது அவராகவே இந்த முடிவை எடுத்திருப்பார் என்று கற்பனை செய்வதுண்டு. ஏனெனில் ஆதவனின் படைப்புக்களை வாசிக்கும்தோறும் அவர் நீரிலே அலைந்து போகின்ற ஒரு இலையைப் போன்ற மனதுடையவர் என நான் நினைப்பதுண்டு.

அவ்வாறு நீரின் போக்கில் இலை சென்று கொண்டிருந்தாலும், இலைக்கென்று ஒரு தனித்துவம் இருக்குமல்லவா? ஆனால் நீரின் போக்கில் மிதப்பதால் இலைக்கு என்றும் ஒரு கதை இருக்குமென்பதை மறந்து போய்விடுபவர்களாக நாம் இருப்போம். அவ்வாறுதான் ஆதவனுக்கு அவரளவில் அவர் நமக்கு ஒருபோதும் சொல்லாத பெருங்கதை, 'இலை' போல அவருக்குள்ளே அலைந்தபடி இருந்திருக்கும் என நான் நினைப்பதுண்டு.

என் பெயர் ராமஷேசனில் வரும் ராமுக்கு மாலா என்கின்ற அழகான பெண்ணோ அல்லது பிரேமா என்கின்ற அறிவுஜீவிப் பெண்ணோ தராதா ஏதோவொன்றை அவனது மாமியாரான் பங்கஜம் மாமி கொடுக்கின்றார். ஆனால் அவனது எல்லா அறிவுஜீவி/முற்போக்கு/புரட்சிகர ஆண் முகமூடிகளையும் அவனது தங்கை இன்னொரு ஆடவனோடு இருட்டில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருப்பதை அவன் காணும்போது  அவ்வளவு எளிதில் உதிர்ந்துவிடுகின்றன.  

'இந்த தடியன்களை எனக்குத் தெரியும். இவன்களுடைய கீழான எண்ணங்களும் வழிமுறைகளும் தெரியும்' என்று ராமசேஷன் சொல்வது, பிற ஆண்களைப் பற்றியல்ல, தன்னைப் பற்றித்தான் என நாம் புதினத்தின் இறுதியில் கண்டு புன்னகைக்கின்றோம். இதுவரை ராமஷேசன் பிறரை விமர்சித்ததும், தன்னைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டவையும், இறுதியில் இந்தளவு அற்பத்தனத்துக்காகத்தானா என்று ஆதவன் சொல்ல வைக்கும்போதுதான், இப்பிரதியை வாசிக்கும் நம் ஒவ்வொருவரினது முகமூடிகள் கழன்று விழத் தொடங்குகின்றன.

அது நம்மை இன்னும் பதற்றப்படுத்தச் செய்கின்றது. நாம் எதுவுமே செய்யமுடியாது, இளமை நம் மீது கவிழ்த்திய கற்பிதங்களை நோக்கிச் சபிக்கத் தொடங்குகின்றோம்.

***

 

இருத்தலின் மீது கவியும் இன்மைகள் - நூல் வெளியீட்டு அறிவிப்பு

Tuesday, March 10, 2026

 

'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' நூல் வெளியீடு பற்றிய அறிவிப்பு
-யாழ்ப்பாணம்




உதயன் பத்திரிகையில் வந்த அறிவிப்பு:

 



தினக்குரல் பத்திரிகையில் வந்த அறிவிப்பு:



***