'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' நூல் குறித்த வாசிப்பு
-றிஹானா நெளபர்
உண்மையில் இந்நூலை வாசிக்கின்ற போது 112 பக்கங்களுக்குள் 13 நூல்களை அறிந்து கொள்வது மட்டுமல்லாமல் மேலதிகமான தகவல்களையும் அறிய முடிகிறது.ஆங்கிலத்தில் இந்நூல்களை வாசிக்க முடியாதவர்களுக்கும் அதனைப் பற்றிய அறிமுகமும் கிடைக்கின்றது..”
இதில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து நூல்களுமே ஈழப்போராட்டம் தொடர்பானவையாகும். உண்மையில் இளங்கோ குறிப்பிடுவதைப் போல “ பௌதீகமான நூல்களை தான் அழிக்க முடியும், இனமொன்றின் வரலாற்றை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது என்பதே உண்மை. அதற்கு ஆதாரமாகத்தான் இன்றைக்கும் ஈழப் போராட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் நிறைய நூல்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.”
ஒவ்வொரு நூல் தொடர்பாகவும் தனது பார்வையை
விரிவாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆழமாகவும் சிறந்த
முறையிலும் விவரித்திருக்கிறார் இளங்கோ.உண்மையில் நூல் தொடர்பாக அவர்
முன்வைப்புச் செய்துள்ள விதம் அவற்றை பற்றிய தெளிவான பரந்த அறிவை
வாசகருக்குத் தந்து விடுகின்றது.
இந்நூலின் வாசிப்பின் பல தருணங்களில் என்னுடைய போர்க்கால நினைவுகளையும் மீட்டிக் கொள்ள கிடைத்தது.எனக்கு ஆறு வயது இருக்கும் போது ஊரில் திடீரென ஆர்மி சுற்றிவளைப்பு இடம்பெறும். அவர்களது உயர்ந்த வாகனங்களும் தோற்றமும் இயல்பாகவே எனக்கு அச்சத்தை ஏற்படுத்தும். சிறிய வயது கனவுகளைக் கூட இவை ஆர்ப்பரித்து இருந்தன.
இத்தனைக்கும் கொவிட் காலப்பகுதியில் என்னுடைய வாசிப்பின் துவக்கத்தில் ஈழப்போர் தொடர்பான நூல்களை வாசித்து அறிந்த போது நான் அனுபவித்ததை விட போர் கொடுத்திருக்கும் வலிகள் மறக்க முடியாத வரலாற்றுப் பாடங்கள் என்பதை உணர முடிந்தது. ஈழப்போர் தொடர்பான சில நூல்களை தொடர்ந்து வாசிக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்திய அனுபவமும் இருக்கின்றது.
இதில் அடங்கியுள்ள 11 எழுத்தாளர்களின் 13 நூல்களில் “போர் உலா” தவிர்ந்த ஏனையவை ஆங்கிலத்தில் வெளி வந்தவை. “போர் உலா” மாத்திரம் தமிழில் வெளிவந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யப்படுள்ள நூலாகும்.
புலம்பெயர்ந்தவர்கள்,போராளிகளாக இருந்தவர்கள், வெளிநாட்டவர்கள் என பதின்மூன்று நூல்களும் ஈழப்போர் தொடர்பான வெவ்வேறு பட்ட அனுபவங்களை கொண்டவர்களால் எழுதப்பட்டுள்ளமையினால் போர் தொடர்பான ஆழமான அதே போன்று வித்தியாசமான பார்வையை இந்நூல் தருகின்றது.
குறிப்பாக ஒவ்வொரு நூல் தொடர்பாக அறிமுகம் தருகின்ற போதும் அதனை விவரிக்கின்ற போதும் இளங்கோவின் வாசிப்பின் ஆழத்தையும் எழுத்து நடையின் அழகையும் ரசிக்காமலும் வியக்காமலும் இருக்க முடியாது.
அனுக் அருட்பிரகாசத்தின் “வடக்கிற்கான ஒரு பயணம்” நூலைப் பற்றி ஆரம்பிக்கும் போது மிக அழகாக அதன் தனித்துவத்தையும் ‘மான் புக்கர் ‘ பரிசின் குறும்பட்டியல் வரை அவரைக் கொண்டு சென்ற காரணத்தையும் இவ்வாறு குறிப்பிட்டு ஆரம்பிக்கின்றார்.
“எல்லாக் கதைகளும் எழுதப்பட்டு விட்டதெனின், எந்தக் கதையைப் புதிதாகச் சொல்வது என்பது எழுதுபவர்க்கு எப்போதும் குழப்பமாக இருக்கும் ஒரு விடயமாகும். பரவலாகத் தெரிந்த கதையை, அதிலும் சமகாலத்தில் நிகழ்ந்ததை யாரேனும் எழுதப் போகின்றார்களென்றால் அது இன்னும் கடினமாகி விடும். ஆனால் தெரிந்த கதையாக இருந்தாலும், புதிதாய்ச் சொல்லமுடியும் என்று நம்பியதன் விளைவாகவே அனுக் அருட்பிரகாசத்தின் “வடக்கிற்கான ஒரு பயணம்” நமக்கு கிடைத்திருக்கின்றது. அது இதுவரை இலங்கையில் இருக்கும் எந்த தமிழ் எழுத்தாளருக்கும் வாய்க்காத மான் புக்கர் பரிசின் குறும்பட்டியல் வரை அவரைக் கொண்டு சென்றிருக்கின்றது.”
குறிப்பாக இதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் நூல்களைப் பொறுத்த வரை 1983 ஜுலைக்கலவரம், 1974 தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 1981 யாழ் நூலக எரிப்பு போன்றவை அம்மக்கள் மனதில் ஏற்படுத்தி உள்ள பாதிப்புக்கள் அவற்றால் அவர்கள் வாழ்வியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்பவற்றின் தாக்கங்களை அறிய முடிகிறது.
அதே போன்று சொந்த நாட்டில் பிரச்சினை என்று வலிகளோடு வெளியாகிய மக்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் அனுபவிக்கும் வலிகளும், சவால்களும் இங்கு குறபிப்பிடப்பட்டிருக்கும் சாரோன் பாலாவின் “படகு மக்கள்”, ரோம் ரத்தினவேல் அவர்களின் “கைதி#1056”, லோகதாசன் தர்ம துரையின்“ஓர் ஈழத் தமிழரின் புகலிட வாழ்வு” ஆகிய நூல்களின் வாயிலாக உணர முடிகின்றது. மீண்டும் மீண்டும் வாழ்வை கட்டியெழுப்ப வேண்டிய தேவை, அந்நிய கலாசாரத்திற்கு தங்களை பழக்கப் படுத்த வேண்டிய இருக்கின்றமை, புதிய மொழி இவை எல்லாம் அவர்களை உளச்சிக்கலுக்கு ஆளாக்குகின்றது. ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்டு சொந்த நிலத்தை விட்டுச் செல்லும் மக்களுக்கு இவை எல்லாம் மிகப்பெரும் சவாலாகவே அமைந்திருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நூல்களை நாங்கள் முழுமையாக வாசிக்க விட்டாலும் இளங்கோவின் எழுத்து வாயிலாக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள வலிகளை எம்மால் உணர முடிகிறது.
ரோய் ரத்தினவேல் அவர்களின் “கைதி-1056” சுயசரிதை நூலில் குறிப்பிடப்படும் பூசா சிறை அனுபவம்,அனுக் அருட்பிரகாசத்தின் வடக்கிற்கான பயணம் நூலில் வரும் ராணியின் மகன் அவர் மடியிலேயே செல் துண்டு பட்டு இறந்து போதல், மலரவனின் “போர் உலா” நூலில் வரும் அவரது தமையன் பிடிபட்டு நான்காம் நாள் விடிகாலையில் தாயும் மலரவனும் முகாமிற்குச் சென்றதை மலரவன் எழுதி இருப்பது போன்றவை ஆழமான சிந்தனைக்குள் எம்மை இழுத்து விடுகின்றது.
உண்மையில் இந்தப் போர் எதைத் தான் எமக்கு விட்டுச் சென்றிருக்கின்றது என்ற கேள்வி எமக்கு எழாமல் இல்லை. இளங்கோ கூறுவதைப் போல..
“இறந்தவர்கள் எந்தத் தரப்பாயினும் அவர்கள் மீண்டு வரவா போகின்றார்கள்? அன்று முகாமை தாக்கி வெற்றி கொண்டவர்கள் பின்னர் தோற்றுப் போயிருக்கின்றனர். அன்று தோற்றுவர்கள் பிறகு வென்றிருக்கின்றனர் எனில் இந்த யுத்தங்கள் எதைத்தான் நமக்கு கொண்டு வந்திருக்கின்றன? இழப்புகளையும் வெறுப்புகளையும் காலத்தால் ஆற்ற முடியாத வடுக்களையும் அல்லவா நினைவுகளாக அவை விட்டுச் சென்றிருக்கின்றன.”
இது வாசிப்பனுபவம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு என்றாலும் இளங்கோவின் வாசிப்பின் ஆழமும் குறிப்பிட்ட பரப்புக்களில் அவருக்கு இருக்கும் பரந்துபட்ட அறிவும் சில விடயங்களை அவர் விவாதிக்கும் திறனும் குறிப்பிட்ட விடயப் பரப்புக்கள் தொடர்பாக நம்மையும் தேட வைக்கின்றது. அத்தோடு இன்னும் வாசிக்க வேண்டிய தேவைப்பாடு நமக்கு இருக்கின்றது என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கின்றது.
***
(மட்டக்களப்பில் நிகழ்ந்த 'இருத்தலின் மீது கவிழ்ந்த இன்மைகள்' நூல் அறிமுக நிகழ்வில் றிஹானா உரையாற்றியதன் சுருக்கமான வடிவம் இது)














