கால்பந்தாட்டக் குறிப்புகள் - 02
***
ஐரோப்பிய
நாடுகளுக்கு ஒருவிதமான ஆட்ட வியூகங்கள் இருப்பதுபோல, தென்னமெரிக்கா
நாடுகளுக்கு எப்போதும் முன்களமே வலுவாக இருக்கும். ஆகவேதான் அவர்களால்
நிறையக் கோல்களை எதிரணியினர் அடித்தாலும், விடாமுயற்சியுடன் திரும்பி வந்து
விளையாடி உலகக்கோப்பைகளை வெல்ல முடிந்தது.

அதேசமயம்
பிரேசில் போன்ற நாடுகள் முன்கள வீரர்களின் கவனம் செலுத்தும்போது, பின்களம்
வலுவற்று இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஜேர்மனி அவர்களுக்கு ஏழு
கோல்கள் அடித்த சம்பவத்தை உதாரணத்துக்குச் சொல்லலாம். அதேபோன்று
தென்னமெரிக்கா நாடுகளுக்குள் (கோஃபா கப்) விளையாடும்போது ஒரு உத்தியையும்,
உலக்க்கோப்பைக்காக விளையாடும்போது (அதிகம் ஐரோப்பா நாடுகளோடு) வேறொரு
உத்தியையும் கையாள வேண்டியிருக்கும்.
இதைச் சரியாகக்
கணித்து கடந்த சில உலகக்கோப்பை ஆட்டங்களில் (2014 இல் இருந்து) விளையாடுவது
ஆர்ஜெண்டீனா. அதை அதிகம் கவனம் கொள்ளாது இன்னும் strikers/forwards மீது
கவனம் குவித்து தொடர்ச்சியாக பிழை விட்டுக்கொண்டிருப்பது பிரேசில்.
ஆர்ஜெண்டீனாவுக்கு மரடோனாவுக்குப் பிறகு மெஸ்ஸி என்கின்ற தங்கமுட்டையிடும் வாத்துக் கிடைத்திருக்கின்றது. அதேவேளை ஆர்ஜெண்டீனா முன்களத்தை வலுவாக்கியதுபோல பின்களத்தையும் பிரேசிலைப் போலவன்றி வலுவாக்கியிருந்தது.
இந்த உலகக்கிண்ணத்திலே அதை எளிதாகப் பார்க்கலாம். ஆர்ஜெண்டீனாக்காரர்கள் ஐரோப்பியர்கள் போல tough ஆட்டம் விளையாடினார்கள். இந்த அரையிறுதி ஆட்டத்தில் கூட இடைவெளியின் முன் ஆர்ஜெண்டீனா நிறைய ஃபவுல்கள் விட்டார்கள். இடைவெளியின் பின் ஒன்றுக்கு மேற்பட்ட மஞ்சள் அட்டைகளையும் பெற்றார்கள்.
ஆர்ஜெண்டீனா சுதாகரித்துக் கொண்ட ஆட்ட வியூகத்தை பிரேசில் தவறவிட்டது. நோர்வேயுடன் அவ்வளவு மென்மையான ஆட்டத்தை ஆடியது. நோர்வைக்காரர்கள் தங்களுக்குள் வைத்து நீண்டநேரம் விளையாடிய பந்தைப் பறிக்கக்கூட பிரேசில்காரர்கள் ஃபவுல் விடத் தயாராக இருக்கவில்லை. பிரேசில் அன்று தோற்ற ஆட்டத்தில் பிரேசில் பெற்ற ஒரேயொரு மஞ்சள் அட்டை நெய்மாருடையது. அதுவும் ஆட்டம் முடிகின்ற கட்டத்தில்.
இவ்வாறு சொல்வதால் நான் ஃபவுல் ஆட்டங்களுடன் அழுகுணி ஆட்டம் ஆடவேண்டும் என்று சொல்ல வரவில்லை. இன்னும் இப்படி மென்மையாக விளையாடி கோல்களைப் போட்டு ஆட்டத்தைச் சோபிக்கச் செய்வதற்காகத்தான் பிரேசில் ஆதரவாளனாக இருக்கின்றேன். ஆனால் உலகக்கோப்பையில் வெல்லவேண்டும் என்றால் கடுமையான ஆட்டத்தை முக்கியமாக ஐரோப்பிய நாடுகளுடன் ஆடாவிட்டால், அவ்வளவு எளிதாக வெல்லமுடியாது. அதற்கு இன்றையகால பிரேசில் சிறந்த உதாரணம்.
இன்றைய
ஆட்டத்தில் இங்கிலாந்து விட்ட பிழை (கடந்த உலகக்கிண்ண ஆட்டங்களிலும் இதைச்
செய்திருக்கின்றது), ஒரு கோலை அடித்தவுடன் தடுப்பாட்டம் ஆடும்
நிலைமைக்குப் போய்ச் சேர்ந்திருந்தது. இதே தடுப்பாட்டம் மெக்ஸிக்கோவுடன்
ஆடும்போது இங்கிலாந்துக்கு சாதகமாக இருந்து வெற்றியையும் பெற்றுக்
கொடுத்திருந்தது. ஆனால் ஆர்ஜெண்டீனா இன்னொரு மெக்ஸிக்கோ இல்லை.

இன்று இங்கிலாந்து ஒரு கோல் போட்டபின், பின்களத்தில் தடுப்பாட்டத்தில் கவனத்தைக் குவித்தபோது, தொடக்கத்திலே சில கோல்கள் இங்கிலாந்து கோல்கீப்பரால் இலாவகமாக தடுக்கப்பட்டன. அப்போதே இங்கிலாந்து சுதாகரித்திருக்க வேண்டும். இத்தனைக்கும் இங்கிலாந்து மிகச் சிறந்த strikers/midfields ஐ கொண்ட அணி. களத்தில் மட்டுமில்லை, reserve ஆகக்கூட ரஷ்பார்ட், ஷக்கா போன்ற வீரர்கள் இருந்த ஒரு அணி.
எனினும் எல்லா நேரங்களிலும் எதிரணி கோல்களை முதலில் அடித்தபின் மீண்டு வந்து அதைவிட கூடிய கோல்களை அடித்து வெல்வதென்பது இலகுவல்ல. அதிலும் ஆர்ஜெண்டீனா அடித்த (அடிக்காத சில கோல்கள்) கோல்களில் மெஸ்ஸியின் பங்களிப்பு மிகச் சிறப்பானது. மெஸ்ஸி இந்தப் பந்துகளை பெனால்டி பெட்டிக்குள் அனுப்பாவிட்டிருந்தால் ஆர்ஜெண்டீனா கோல்களை அடித்திருக்கவே முடியாது.
மெஸ்ஸி ஒரு கட்டத்தில் தன்னால் பெனால்டி பெட்டிக்குள் போய் கோல்களை அடிக்கமுடியாது என்பதை உணர்ந்து பின்னாலே நின்று பெரும்பாலும் விளையாடியதை நாம் பார்த்திருப்போம். பிரான்ஸ் தோற்ற போட்டியில் எம்பாவேவின் கால்களுக்கு பந்தே வரவில்லை. அவர் சிலவேளை மெஸ்ஸியைப் போல சற்று பின்னே நின்று விளையாடியிருந்தால் பிறர் மூலம் கோல்களை அடிக்கும் சந்தர்ப்பங்களை பிரான்ஸிற்கு உருவாக்கியிருக்கக்கூடும்.
இன்று ஆர்ஜெண்டீனாவின் நாள். அவர்கள் சிறப்பாகவே விளையாடினார்கள். இதுவரை நாட்களில் அவர்கள் மீதிருந்த விமர்சனத்தைத் தாண்டி, இன்று அவர்களை மனந்திறந்து பாராட்டலாம்.
அதுவும் ஐரோப்பா நாடொன்றுக்கு எதிரான வெற்றியென்பது இன்னும் மகிழ்ச்சி தரக்கூடியது!
****
(Jul 11)
பிரேசில்காரரே,
பிரான்சுக்காரன்கள் ஆடுகின்ற ஆட்டத்தைப் பார்த்தால் நாங்கள் அவர்களைச்
சந்தித்தால் அவர்கள் ஜேர்மன்காரர்கள் நமக்கு 7 கோல்கள் அடித்ததை விட
அடிக்காமல் அனுப்பமாட்டாங்கள் போல இருக்கிறது.
இதற்கிடையில்
அடுத்த சுற்றில் நாங்கள் நோர்வேக்காரன்களைச் சந்திக்கப் போகின்றோம்.
அவர்கள் கடைசி ஆட்டத்தில் வென்றபின் மைதானத்தில் தாங்கள் கடலோடிகளின்
கலாசாரத்தில் வந்தவர்கள் என்று Viking Row செய்து வீரம் காட்டுகின்றார்கள்.
ஐவரி கோஸ்ட்டை வென்றதற்கே ஆ, ஊ என்று படகு வலித்து இப்படி
படங்காட்டுகின்றவர்கள் நமக்கு என்ன வைத்துச் செய்யப் போகின்றார்களோ
தெரியவில்லை என மனம் பதறுகிறதே.
மேலும் ஜேர்மனி
முதல் knock out இலே தோல்வியடைந்து நாட்டுக்குத் திரும்பிப் போனதற்கு,
முதலில் நான்கு சாம்பியன்ஸ் வென்ற அவர்களை அனுப்பிவிட்டு, அடுத்து ஐந்து
சாம்பியன்ஸ் வென்ற பிரேசில்காரர்களுக்குத்தான் மலையாள மாந்தீரிக
செய்திருக்கின்றோம் என்று கேரள ஆர்ஜெண்டீனா இரசிகன் எனக்கு எச்சரிக்கை
செய்தபடி இருக்கின்றான்.
பிரேசிலினின்
ஜாம்பாவன்களாக இருந்த ரொனால்டோ, ரொனால்டீனோ எல்லாம் உங்களுக்காக ஒவ்வொரு
ஆட்டத்தை நேரடியாகப் பார்க்க வருகின்றார்கள். தங்களுக்கு அடுத்த தலைமுறை
சாம்பியன்ஸ் வெல்லவேண்டும், அதைத் தமது கண்களால் நேரடியாகப் பார்க்க
வேண்டும் என்று வரும் அவர்களின் பொருட்டாவது, ரியோ கடற்கரை மணலில் பெண்
பிள்ளைகளுக்கு கலர்ஸ் காட்டுவதற்காக விளையாடுவது போன்று அல்லாது
professional ஆக, நாங்கள் சுண்டெலிகள் அல்ல, சிறுத்தைகள் என்று பாய்ந்து
விளையாடவேண்டும்.
இன்றைய ஆட்டங்களில் நான் கொங்கோ, செனகல், பொஸ்னியா வெல்லவெண்டும் என்று விரும்புகின்றேன்.

ஆனாலும்
வெல்லப்போவது என்னவோ இவற்றுக்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து,
பெல்ஜியம், ஐக்கிய அமெரிக்காவாக இருக்கப் போகின்றதென்றாலும், எப்போதும் போல
வலிமையும்/வளங்களும் குறைந்த நாடுகளுக்கு என்னுடைய ஆதரவு.
அதுவும்
போர் நிறைந்த சூழலில் இருந்து வந்து குழுநிலை ஆட்டங்கள் அனைத்தையும்
சமனிலைப்படுத்தி, மூன்று ஆட்டங்களிலும் வியப்பைத் தந்த ஈரான் இந்த knock
out சுற்றுக்கு வராதது கவலையே. அதேபோல தேவதைக் கதையைப் போல மிகச்சிறு
தீவான Cabo Verde இந்தச் சுற்றுக்கு வந்திருப்பதும், மெஸ்ஸியின்
ஆர்ஜெண்டீனாவைச் சந்திக்க இருப்பதும் மகிழ்ச்சியான விடயமே.
(Jul 01)
மெஸ்ஸி மூன்று உலகக்கிண்ண இறுதியாட்டங்களை விளையாடப் போகின்றார் என்பது நினைவுக்கு வந்தபோதுதான், பிரேசிலின் பீலேயும் அப்படி விளையாடி இருப்பார்தானே என்று தேடிப் பார்த்தேன். பீலே 1958, 1962, 1970 பிரேசில் சாம்பியன்ஸ் ஆனபோது இருந்தவர் என்றாலும், 1962 இல் காயம் காரணமாக பீலே இறுதிப் போட்டியில் பங்கேற்றவில்லை. ஆக பீலே இரண்டு உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் மட்டுமே பங்கு பற்றியிருக்கின்றார்.
மெஸ்ஸி இப்போது 2014, 2022, 2026 இறுதிப்போட்டிகளில் பங்குபற்றுகின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கின்றார். பிறகுதான் இன்னொரு விடயம் ஞாபகத்துக்கு வந்தது. பிரேசிலுக்குப் பீலேயிற்குப் பிறகான பொற்காலம் என்றால் அது 90 களிலும் 2000களின் தொடக்கத்திலும் இருந்திருக்கின்றது.
பிரேசில் 1994, 1998, 2002 என எந்த நாட்டினராலும் எளிதில் முடியாத சாதனையாக தொடர்ந்து இறுதியாட்டத்துக்கு வந்திருக்கின்றனர். அதில் 1994, 2002 இல் சாம்பியன்ஸ் ஆனார்கள். 1998 இல் பிரான்ஸிடம் இறுதிப்போட்டியில் 3-0 என்று தோற்றிருந்தனர்.
இந்த மூன்று தொடர்ச்சியான இறுதியாட்டங்களிலும் இருந்த ஒரேயொரு விளையாட்டு வீரராக பிரேசிலின் காஃபூ இருக்கின்றார். இவரே 2002இல் அணித்தலைவராக இருந்தபோது சாம்பியன்ஸை பிரேசில் வென்றும் இருக்கின்றது.
இப்போது மெஸ்ஸி மூன்று இறுதியாட்டங்களில் விளையாடும் இன்னொரு வீரராக உருவாகியிருக்கின்றார். எனக்கு மெஸ்ஸியைப் போல பிடித்த இன்னொரு ஆர்ஜெண்டீனா வீரரான ஏஞ்சல் டீ மரியா (Ángel Di María ) இந்தச் சாதனையில் இடம்பெற்றிருக்கலாம். ஆனால் அவர் கடந்த உலகக்கிண்ண வெற்றியோடு ஓய்வுபெற்றுவிட்டார். இல்லாவிட்டால் மெஸ்ஸியைப் போல மூன்று உலகக்கிண்ண இறுதியாட்டங்களில் விளையாடும் ஒருவராக டீ மரியாவும் இருந்திருப்பார்.
இப்போது மெஸ்ஸியும், காஃபூவும் இந்தச் சாதனைப் பட்டியலில் இருக்கின்றனர். காஃபூவிற்கு இரண்டு சாம்பியன்ஸை வென்ற கிரீடம் இருக்கின்றது. மெஸ்ஸியிற்கு இரண்டு சாம்பியன்ஸ் வெல்லும் அதிஷ்டம் இருக்கா என்பதைப் பார்க்க இந்த ஞாயிறுவரை பொறுத்திருக்க வேண்டும்.
மரடோனா இரண்டு உலகக்கிண்ண இறுதியாட்டங்களை 1986, 1990 விளையாடியவர். ஆனால் ஒரு சாம்பியண்ஸையே அவரால் பெற முடிந்தது. ஆர்ஜெண்டீனா இந்தமுறையும் உலகக்கிண்ணத்தை வென்றால் மெஸ்ஸி, சாதனையில் மரடோனாவை முந்திவிடுவார்.
என்னைப் போன்றவர்களுக்கு பீலேயோ, மரடோனாவோ விளையாடும்போது அதே சமகாலத்தில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஆனால் மெஸ்ஸியின் ஆட்டங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இனி இவர்களைப் போல நீண்டகாலம் நிலைத்து நின்று சாதனை படைக்கும் வீரர்கள் மிக அரிதாகவே தோன்றுவார்கள்.
அந்தவகையில் மெஸ்ஸியின் ஆட்டங்களை மூன்று இறுதிப்போட்டிகளில் பார்க்க முடிவதில் ஒருவகையில் நாம் அதிஷ்டசாலிகள்தான்.
(Jul 15)








