இந்த பத்து நாள் விபாஸனா வகுப்புகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது என்று உங்களால் நம்பமுடிகின்றதா? ஆம். தனியறையிலிருந்து பத்து நாள் உணவு உட்பட அனைத்துக்கும் எந்தக் கட்டணமும் நாம் செலுத்தத் தேவையில்லை.
எவ்வித பணமும் செலவழிக்காமல் இப்படி பத்து நாள் விபாஸனா அனுபவத்தை நீங்கள் எவ்வித புறச்சூழல் அழுத்தங்கள் இல்லாது அனுபவியுங்கள் என்று கோயிங்காவை ஆசிரியராகக் கொண்ட இந்த விபாஸனா நிலையங்கள் நமக்கு வழங்குவதுதான் எவ்வளவு அருமையானது.
இந்தவகையான இலவசமான தியான அனுபவம் இங்கு மட்டுமில்லை, கோயிங்காவை ஆசிரியராகக் கொண்டு உலகெங்கும் இயங்கும் 270 நிலையங்களிலும் இருக்கின்றன. இலங்கையில் ஏழுக்கும் மேற்பட்ட விபாஸனா நிலையங்களும், தமிழ்நாட்டில் மட்டும் ஐந்து விபாஸனா நிலையங்களும் இயங்குகின்றன என நினைக்கின்றேன்.
*
எமக்கு தங்குமிடம், உணவு தருவது இலவசம் மட்டுமில்லை, இங்கே வந்து கற்பிக்கும் ஆசிரியர்கள், நமக்கு உணவு தயாரித்துத் தருபவர்கள், கட்டடங்களின் உட்கட்டமைப்பு/பராமரித்தல்/சுத்தம் செய்தல் எனச் செய்பவர்கள் அனைவருமே தமது சேவையை இலவசமாகவே வழங்குகின்றனர்.
இப்படியொரு இலவசமான அமைப்பு எப்படி தொடர்ந்து இயங்க முடியும் என்பது 'வியாபாரக் காந்தங்களுக்கே' வியப்பளிக்கும் ஒரு விடயமாகும்.
ஆசிரியர் கோயிங்கா இப்படி விபாஸனா நிலையங்களை முதலில் இந்தியாவில் தொடங்கியபோது, 'இங்கே பலர் ஒழுங்கான உணவில்லாது இருக்கின்றனர். இப்படி இலவசமாக உணவும் இடமும் கொடுக்கின்றோம் என்றால் உணவுக்காகத் தான் வந்து நிரம்புவார்கள், தியானம் செய்ய வரமாட்டார்கள்' என்று கோயிங்காவைப் பயமுறுத்தியிருக்கின்றார்கள். ஆனால் கோயிங்கா, 'ஒருவர் காலை 4 மணிக்கு எழும்பி, இரவு 9மணிவரை இருந்து கடும் தியானம் செய்யும் நிகழ்ச்சி நிரல் இருக்கும்போது, அப்படி உணவுக்காக மட்டும் வருகின்றார்கள் என்றால் ஒன்றிரண்டு நாளில் இங்கிருந்து ஓடிவிடுவார்கள்' எனச் சொல்லி வெற்றிகரமாக விபாஸனா நிலையங்களை இந்தியா, மியான்மாரில் தொடங்கியிருக்கின்றார்.
சில காலத்துக்குப் பிறகு இதே 'இலவச' மாடல்களை மேற்குலகிற்குக் கொண்டு வந்தபோது, மேற்கத்தையவர்கள் கோயிங்காவிடம், கீழைத்தேயத்தில் இப்படி தன்னார்வ சேவை இயங்க வாய்ப்பிருக்கின்றது, ஆனால் மேற்கில் இதெல்லாம் வேலைக்கு உதவாது' என்று சொல்லியிருக்கின்றார்கள். கோயிங்காதான் பரவாயில்லை, முயன்று பார்ப்போம் என்றிருக்கின்றார்.
*
நான் சென்ற இந்த நிலையம் 20 வருடங்களுக்கு மேலாக இயங்குகின்றது. மாதம் இரண்டு தடவைகள் 10 நாள் விபாஸனா என்று வருடம் முழுதும் வெயில், மழை, பனி என்று பாராது தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கின்றது.
இப்படி தொடர்ச்சியாக எந்த அமைப்பினதோ/தனிமனிதர்களினதோ நிதி வழங்கலில் தங்கியிருக்காது விபாஸான கற்ற/கற்றுக்கொண்டிருந்த மாணவர்களின் தன்னலமற்ற உழைப்பில் இந்த விபாஸனா நிலையங்கள் இயங்குகின்றன என்று அறிந்தபோது உண்மையில் மனம் குளிர்ந்து நின்றேன்.
பத்து நாள் விபாஸனாவிற்கு வருகின்றவர்கள், பத்து நாள் வகுப்பையும் முடித்தால் மட்டுமே, விரும்பினால் நன்கொடைகள் வழங்கலாம். நான் இந்த விபாஸனாவிற்குப் போகும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்கலாம் என்று நினைத்துத்தான் போனேன்.
ஆனால் பத்து நாள் விபாஸனாவில் பங்குபற்றியதன் பிறகு நினைத்ததைவிட இரண்டு மடங்கு தானம் செய்துவிட்டு வந்தேன். அப்படிக்கு இதன் இயங்குநிலையும், நம்மை அரவணைத்து விபாஸனா சொல்லிக் கொடுக்கும் நெகிழ்ந்த தன்மையும் எனக்குப் பிடித்திருந்தது.
*
கோயிங்கா இந்த பத்துநாள் விபாஸனா அமைப்பை, எப்படி அசலான புத்த பிக்குகள்/பிக்குணிகள் தமது நாளாந்த வாழ்வில் வாழ்வார்களோ அப்படித்தான் வடிவமைத்திருக்கின்றார். துறவிகள் தம்மத்தின் பாதைக்குச் செல்வதற்கு அனைத்தையும் துறந்து போவதைப் போல குடும்பவாழ்வில் இருக்கும் நம்மைப் போன்றவர்களால் முடிவதில்லை.
கடைசிவரை குடும்பவாழ்வில் இருந்த கோயிங்கா, அப்படி இருக்கக்கூடியவர்களும் தம்மத்தின் பாதையில் நடந்து பரிநிர்வாணம் அடையவோ அல்லது அதை நெருங்கிச் செல்லவோ இந்த வாழ்க்கைக்காலத்தில் முடியும் என்பதை இப்படியான விபாஸனா கற்றுக்கொடுப்பதன் மூலம் நமக்குச் சொல்ல விழைகிறார்.
தொடக்ககாலத்தில் கையில் நிதி இல்லாத நிலையில், இந்தியாவில் விபாஸனா பழக வந்தவர்களிடம் வகுப்புக்களுக்காக நிதி அறவிட்டிருக்கின்றார். அப்படி பணம் வாங்கி விபாஸனா கற்றுக்கொடுத்தாலே அது தம்மத்தின் பாதை இல்லை. அவ்வாறு இருக்கமுடியாது என்று முற்றிலும் இலவசமாகச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றார் கோயிங்கா.
மேலும் இல்லறவாழ்வில் இருக்கும் நாம் துறவிகளின் வாழ்வை இந்த பத்து நாட்களில் வாழ்ந்து பார்க்கப் போகின்றோம் என்றால், துறவிகளின் முக்கிய பண்பு தானம் கேட்பது. அதாவது உணவுக்காக தெருவில் இறங்கி பிச்சையெடுப்பது. அப்படி தானம் கேட்பதை, ஒருவரிடம் பணத்தை அறவிட்டு உணவைக் கொடுப்பதால் அடையமுடியாது.
நமக்கு இந்த விபாஸனா நிலையங்களில் யாரோ ஒரு முன்னாள் விபாஸனா மாணவர் கொடுத்த நிதியின் ஊடாக உணவென்ற தானமாக வழங்கப்படுகின்றது. ஆக நாம் யாரிடமோ துறவிகள் போல (இரந்து கேட்டு) உணவைப் பெற்றுச் சாப்பிடுகின்றோம் என்பதைப் புரிந்துகொள்கின்றோம்.
*
அதுபோலவே இந்த நிலையங்களில் எவரும் மற்றைய புத்த மடாலயங்கள் போல நிரந்தரமாக தங்கியிருப்பதில்லை. எல்லாமே மாறும் என்று புத்தர் சொல்லியதுபோல இங்கே வருபவர்களைப் போல, அதைப் பின் நின்று நடத்துபவர்களும் தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சுடரேந்திய தொடரோட்டம் போல இந்த நிலையங்கள் உலகெங்கிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கின்றன.
இன்றைய புத்த மடலாயங்களில் அநேகமாக நிரந்தரமாகத் தங்கியிருக்கும் புத்த பிக்குகள்/பிக்குணிகளாலே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றது. மேலும் எந்த ஒரு புத்த மடாலயமும் இப்படி இலவசமாக meditation retreats செய்வதுமில்லை. அதற்கான sustainability அவர்களிடம் இருப்பதுமில்லை. அதைப் புரிந்துகொள்ளவும் முடியும்.
இப்படியான சூழலில் கோயிங்காவில் இந்த விபாஸனா நிலையங்கள் உலகெங்கும் (270) விபாஸானவை இலவசமாக நமக்கு வழங்குகின்றன என்பதை நினைத்தால் வியப்பாய்த்தான் இருக்கின்றது.
மேலும் நான் போன விபாஸனா நிலையத்தில் புத்தரின் சிலைகளோ/படங்களோ மட்டுமில்லை, கோயிங்காவின் எந்த
புகைப்படமோ/அடையாளப்படுத்தல்களும் இல்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். கோயிங்காவே தனது உரைகளில் ஒரு கட்டடத்தைக் கட்டிவிட்டு அதில் பெயரைப் போடுவது எவ்வளவு அபத்தம் என்று எள்ளல் செய்து கொண்டிருப்பார். அது தன்முனைப்பின் (Ego) உச்சமே தவிர வேறெதுவும் இல்லை என்று ஞாபகப்படுத்துவார். ஆகவே புத்தரை மட்டுமில்லை கோயிங்காவை நினைவுபடுத்தும் எவற்றுக்கும் இங்கு இடமில்லை. தியான மணடபமே சும்மா 'வெறிச்சோடி'த்தான் எல்லாத் திசைகளிலும் இருக்கும்.
ஆக, நீங்கள் இந்த விபாஸனா நிலையத்தில் உலாவும்போது மத அடையாளங்கள் எதுவுமற்ற ஏதோ ஒரு சாதாரண விடுதிச் சூழலில் நிசப்பத்தோடு வாழ்கின்றீர்கள் என்று மட்டுமே உணர்வீர்கள்.
அதனால்தான் இங்கே நானுட்பட, குரு நானக்கை வழிபடும் தலைப்பாய் கட்டிய சீக்கும், அல்லாஹ்வை பின்தொடரும் முஸ்லிமும், கைகள் முழுதும் கயிறுகள் கட்டிய இந்துவும் என அனைவரும் ஓர் அந்நிய பிரதேசத்தில் நுழைந்துவிட்டோம் என்ற பதற்றமில்லாது மிக இயல்பாக விபாஸனாவைப் பழகிக் கொண்டிருந்தோம்.
***












