கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 151

Saturday, June 13, 2026

 

மைக்கல் ஜாக்சன்

மைக்கல் ஜாக்சனைப் பற்றி ஒரு கட்டுரை 'அம்ருதா' இதழில் வெளிவந்திருக்கின்றது. மைக்கல் ஜாக்சனின் பாடல்களையும், ஆடல்களையும் பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமுடியுமா என்ன? நாம் அனைவருமே அவரின் பாடல்களைத் தாண்டாமல் வந்திருக்கவே மாட்டோம். மேலும் அவரின் நிறம், குடும்பச்சூழல், அன்றையகால அமெரிக்கா போன்ற பின்னணியில் இருந்து ஒருவர் இந்தளவு உயரத்துக்கு எழுந்து வருவது என்பது நாம் கற்பனையே செய்து பார்க்க முடியாதது. ஆனால் அதற்காய் அவர் மீதான குழந்தைகள் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்களையும் எழுந்தமானமாகத் தாண்டிப் போய்விடமுடியாது.

'அம்ருதா'வில் வெளிவந்த கட்டுரை மைக்கலின் மீதான பேரன்பினால் அதை முற்றாக நிராகரிக்க முயல்கின்றது. அந்தக் குற்றச்சாட்டுகள் 'சதிக்கோட்பாடு'களால் கட்டமைக்கப்பட்டது என்று சொல்லுவது, ஒரு கறுப்பு-வெள்ளைப் பார்வையில் பார்ப்பது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

மைக்கல் ஒரு கறுப்பினத்தவராகவும், அவர் மீது குழந்தைத் துஷ்பிரயோக குற்றச்சாட்டை முன்வைத்தவர்களில் பெரும்பான்மையினர் வெள்ளையினத்தவர்களாக இருப்பினும், நாம் அதை எளிதாக இனவெறிப் பார்வையில் வைக்கவும் முடியாது. மேலும் மைக்கலுக்கு ஆதரவாக 90களில் (அப்போதுதான் முதன்முதலில் குழந்தைப் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது) சாட்சி சொன்ன சிலர் பின்னாட்களில் பொய்ச்சாட்சியம் சொன்னோம் என்று உண்மையைப் பின்னர் சொல்லவும் செய்திருக்கின்றார்கள். இது குறித்த உள்வீட்டு விபரங்களை நாம் அவ்வளவு அறியாவிட்டாலும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் கொஞ்சமேனும் உண்மையில்லாவிட்டால் இந்தளவுக்கு இந்த விடயம் தீவிரமாகச் சென்றிருக்காது என்பது எளிதான உண்மையாகும்.

மைக்கல் ஏன் இப்படி குழந்தைகள் மீது பித்தானார் என்பதற்கும், எப்படி குழந்தைகளை (அக்குழந்தைகளின் பெற்றோர்) மைக்கலோடு படுக்கையைப் பகிர அனுமதித்தனர் என்பதெல்லாம் நிறைய கேள்விகளுக்குரியது. இன்னொருபுறம் மைக்கல்  வித்தியாசமான குழந்தையாக/பதின்மனாக வளர்ந்தார் என்பதெல்லாம் அவரின் உளவியலை வைத்து அலசிப் பார்க்க வேண்டியதே. ஆனால் அதேவேளை குழந்தைகளாக இருந்தபோது மைக்கலால பாதிப்புற்றவர்களின் குரல்களில், பல ஆவணப்படங்கள் வந்திருப்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்.  அவற்றையெல்லாம் நாம் எளிதாகப் புறக்கணித்து மைக்கலைப் புனிதராக ஆக்கவும் முடியாது.

அண்மையில் வெளிவந்த மைக்கலைப் பற்றிய படம் (Michael) வசூலிலும் பெரும் சாதனை படைத்திருக்கின்றது. இறந்தாலும் யானை ஆயிரம் பொன் என்பதற்கிணங்க மைக்கல் தனது அதிசயத்தக்க திறமைகளால் நெடுங்காலத்துக்கு வாழ்ந்து கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் மைக்கலை இந்தக் குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து வெள்ளையடித்துத்தான் நாம்  அவரைக் கொண்டாட வேண்டும் என்கின்ற எந்த அவசியமும் இல்லை. இப்போது வந்திருக்கும் மைக்கலின் திரைப்படம் கூட மைக்கலில் வெற்றியின் முதல்படிக்கட்டுடன் முடிந்தாலும், மைக்கல் பற்றிய குற்றச்சாட்டுக்களை காட்சிப்படுத்தாது மைக்கலைத் திருவுருவாக்கும் முயற்சியென கடும் விமர்சனமும் இன்னொருபக்கம் வைக்கப்பட்டிருக்கின்றன.

நான் இத்திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அந்தக் குற்றச்சாட்டுக்களும் உறுத்தத்தான் பார்த்தேன்.  எமக்கு ஒருவரின் கலைத்திறமைகள் பிடிக்கின்றன என்பதற்காக அவர்களைப் புனிதர்களாக்கித்தான் அந்தத் திறமைகளை இரசிக்கவேண்டும் என்கின்ற எந்தக் கட்டாயமும் இல்லை. இப்படியான விமர்சனங்களோடுதான் மைக்கலை மட்டுமில்லை, பாப்லோ நெரூடா, வூடி அலன் போன்ற எண்ணற்ற படைப்பாளிகளையும்  நான் பார்க்க விரும்புகின்றேன்.

இவர்களைப் பற்றி ஒருவர் வியந்து ஒரு ஆக்கம் எழுதுகின்றார் எனின், அதில் இந்தக் குற்றச்சாட்டுகளையும் தொட்டுச் செல்லவேண்டும் என எதிர்பார்ப்பேன். இந்தப் புனிதங்களால் நாம் எமக்குப் பிடித்தவர்களை ஒருபோதும் காப்பாற்ற முடியாது என்பது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் இவர்களால் பாதிப்புற்றவர்களின் குரல்களை அமைதியாக்கி அநீதி இழைப்பவர்களாகவும் நாம் ஆகிவிடுகின்றோம்.

என்னைப் போன்றவர்களுக்கு ஆங்கிலப்பாடல்களே மைக்கல் ஜாக்சனால்தான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. என் பதின்மத்தின் முகிழ்ந்த முதல் காதலின் காதலி ஒரு காஸெட் முழுதும் மைக்கல் ஜாக்சனின் பாடல்களைப் பதிவு செய்து எனக்காகத் தந்திருந்தார். அந்தப் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டு அப்பாவிடம் இதிலென்ன இருக்கின்றது என திட்டுவாங்கியதும், நான் என் வாழ்வில் (அப்பாவுக்கு எதிராக) முதன்முதலாக அச்சம் களைந்து எதிர்த்துப் பேசியதும் (எல்லாம் காதலும் மைக்கலும் தந்த 'தில்'தான்) இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கின்றது.

இவ்வாறு என் முதல் காதலிலும், குடும்பத்துக்கு எதிரான முதல் குரலிலும் முக்கிய பங்காற்றிய மைக்கலை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. ஆனால் அந்த மைக்கலையும் அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களோடுதான் ஏற்றுக்கொள்வேன்.

கடவுளரை வேண்டுவோர்க்குத்தான் புனிதர்கள் தேவைப்படுவார்கள்; கலைஞரை நேசிப்போர்க்கு, கலைஞர்கள் அவர்களின் பலவீனங்களோடோ போதும்.

மேலும் எந்த ஒரு கலைஞரையும் அவரின் இருண்டபக்கத்தை மட்டும் வைத்து, படைப்புத் திறமைகளைப் புறக்கணித்த சந்தர்ப்பங்கள் வரலாற்றில் மிக அரிதே என்பேன்.

***

 

இருத்தலின் மீது கவியும் இன்மைகள் – நூல் வெளியீட்டு நிகழ்வு

Tuesday, June 09, 2026

 

– திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம் 

எழுநாவின் வெளியீடாகிய, இளங்கோவின் 'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' நூல் வெளியீட்டு நிகழ்வு, 28.02.2026 (சனிக்கிழமை) அன்று, காலை 10.00 மணிக்கு - 238, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது மணி மண்டபம் - திருமறைக்கலாமன்றத்தில் இடம்பெற்றது.


Uploaded Image


திரு. இ. கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு. கி. செல்மர் எமில் வரவேற்புரை வழங்க, திரு. டெ. க. அரவிந்தறாஜ் மற்றும் திரு. சி. ரமேஸ் ஆகியோர் மதிப்பீட்டுரைகளை வழங்கினர்.
 
 



நிகழ்வின் தொடர்ச்சியாக, நூலினை திரு. வடகோவை வரதராஜன் அவர்கள் வெளியிட்டு வைக்க, திரு. சோ. பத்மநாதன் மற்றும் திரு. அ. யேசுராசா ஆகியோர் கெளரவப்பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வினை ஒழுங்குபடுத்தியவர்களுக்கும், பேச்சாளர்களுக்கும், நூலாசிரியர் இளங்கோ சார்பில் வடகோவை வரதராஜனால் நினைவுப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. பொதுமக்கள், வாசகர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


நன்றி: எழுநா


 

இளங்கோவின் "இருத்தலின் மீது கவியும் இன்மைகள்"

 

டெ. க. அரவிந்தறாஜ்
***

நூலாசிரியர் இளங்கோ யாழ்ப்பாணத்தில் அம்பனையில் பிறந்து தனது பதினாறாவது வயதில் புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கிறார். இதுவரை கவிதைகள், கட்டுரைகள்,  சிறுகதைகள், நாவல் என ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இது அவரது பத்தாவது புத்தகம்.

ஈழயுத்தத்தில் அநியாயமாக பலியான அனைவரிற்குமாக படையல் செய்யப்பட்டுள்ள இந்நூல் 112 பக்கங்களில் எழுநாவால் அழகான, கைக்கடக்கமான வடிவமைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 

 



நூலின் அட்டைப்படம் இளங்கோவின் யுத்தத்தால் சிதைவடைந்த வீட்டின் எஞ்சிய பகுதியின் புகைப்படமாகவும் அதைச் சுற்றிப் படரும் கொடிகளும் பூக்களுமாக காட்டப்பட்டுள்ளது. வீடு என்பது இருத்தலின் ஒரு குறியீடு. ஆனால் இங்கு அதன்நிலை இல்லாமையையும் அதேவேளை பூக்கள் நம்பிக்கையையும் தருவதுபோல தலைப்பிற்கு வலுச்சேர்க்கின்றது.

எழுநா சஞ்சிகையில் தொடர்ச்சியாக வெளிவந்த 13 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். ஈழப்போராட்டத்துடன் தொடர்புடைய ஆங்கிலத்தில் வெளியான 13 நூல்களை ஆசிரியர் தன்னுடைய பார்வையில் ஆராய்கிறார். அவற்றின் சார்பு நிலை, வரலாற்று உண்மைகள், எழுதப்பட்ட நோக்கம், அதற்கு நியாயம் செய்யப்பட்டுள்ளதா என விரிகின்றது இக் கட்டுரைகள்.

இதற்கான களத்தை  ‘எழுநா’ வழங்கி உள்ளது. அதாவது ஈழக்கற்கைகள் என்ற எண்ணக்கருவின் கீழ் வரலாறு, பண்பாடு, சமூகவியல், மானிடவியல், மொழியியல், அரசியல், அபவிருத்தி, சட்டம், பொருண்மியம் என்று பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு அறிவு பரம்பலை அல்லது கருத்தாடலை அல்லது வெவ்வேறு பார்வை கோணங்களை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு ‘எழுநா’ செயற்படுகின்றது. அந்த வகையில் ஆங்கிலத்தில் வெளியான இந்தப் புத்தகங்கள் தொடர்பான உரையாடலை உருவாக்குவதில் எழுநாவும் இளங்கோவும் வெற்றி பெற்றுள்ளார்கள் எனலாம்.

பதினொரு எழுத்தாளர்களின் 13 நூல்கள் தொடர்பாக இக்கட்டுரைகள் பேசுகின்றன. அதாவது அனுக் அருட்பிரகாசத்தின் "வடக்கிற்கான பயணம்" மற்றும் ஒரு குறுகிய திருமணத்தின் கதை" ஆகிய இரு நூல்களும் வாசுகி கணேசானந்தனின் "சகோதரனற்ற இரவு" மற்றும் "Love Marriage" ஆகிய  இரு நூல்களும், நிரோமி டீ ஸொய்ஷாவின் "தமிழ்ப் பெண் புலி", ஷியாம் செல்லத்துரையின் "பசித்த பேய்கள்", சாரோன் பாலாவின் "படகு மக்கள்",  ரோய் ரத்னவேலின் "கைதி # 1056", லோகதாசன் தர்மதுரையின் "The Sadness of Geography" , மலரவனின் போர் உலா, மார்க்ஸ் ஸ்டீபனின் "தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம்", சங்கரி சந்திரனின்"சூரியக்கடவுளின் பாடல்", மற்றும் பெஞ்சமினின் "வன்னி: கிரபிக் நாவல்" என்பவையாகும்.

மலரவன் அவர்களின் போர் உலா தவிர்ந்த ஏனையவை யாவும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டவை. போர் உலா தமிழில் எழுதப்பட்டு ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டது. இந்நூல்களின் எழுத்தாளர்களை எடுத்து நோக்கினால் இருவர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். பத்துப்பேர் புலம் பெயர்ந்தவர்கள். மலரவன் ஈழ விடுதலைப் போராளி. நிரோமி போராளியாய் இருந்து விலகி பின்னர் புலம்பெயர்ந்தவர்.

இந்நூல்கள் தொடர்பான தனது பார்வையை இளங்கோ முன் வைக்கும்போது ஒரு தெளிவான வடிவத்தை கையாளுகின்றார். அதாவது முதலில் நூலை அறிமுகம் செய்து அதனுடைய கதை, அதை எழுதியவரின் பின்புலம், கதை எழுதப்பட்ட சூழல் என்பவற்றை குறிப்பிட்டு அதன் பின்னர் அந்த பிரதி ஊடாகவும் அந்த பிரதிக்கு வெளியேயும் அந்நூல் எதைப்பற்றி பேசுகிறது என்பதை  தெரிவிப்பதன் ஊடாக வாசகர்களை சிந்திக்கத் தூண்டுகின்றார்.

இது இலக்கியத்தில் ஆதாரமான ஒரு கேள்வியை எழுப்புகின்றது. ஒரு படைப்பை புரிந்து கொள்ள படைப்பு மாத்திரம் போதுமா அல்லது அதன் பின்னணி,  எழுத்தாளரின் நோக்கம் போன்றவற்றையும் கொண்டு அதனை மதிப்பிட வேண்டுமா? அத்துடன் இலக்கியம் என்றால் என்ன? அதன் சார்பு நிலைகள் என்ன? வாசகர்களுக்கு இலக்கியத்தின் ஊடாக என்ன வழங்கப்பட வேண்டும்? போன்ற கேள்விகள் இப்புத்தகத்தை வாசித்து முடிக்கின்ற போது எழுவதை தவிர்க்க முடியவில்லை.

உதாரணமாக அண்மையிலே வெளிவந்த டிலுக்ஸன் மோகனின் ‘படுபட்சி’ நாவல் தன்வரலாறு என்று குறிப்பிடப்பட்டிருந்த போதும் பல்வேறு காரணங்களுக்காக  உண்மைக்கு முரணான பல தகவல்களை கொண்டிருந்ததாக சர்ச்சைக்கு உள்ளானது.

அத்துடன் "தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம்" என்ற நூல் தொடர்பாக இளங்கோ குறிப்பிடும்போது அதன் நூலாசிரியரான மார்க்ஸ் ஸ்டீபன் தீவிரவாதிகள் பற்றி ஆராயும் ஆசையில் அவர்களை சந்திக்க முயல்கிறார். வேறு நாடுகளைவிட இலங்கையில் சமாதான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்ற காலமாகையால் அது அவருக்கு இலகுவாக அமைகின்றது. எனினும் ஓமந்தை சோதனைச் சாவடியில் மதுபானங்களுடன் சூதாடும் போராளிகளை காணுதல் என குறிப்பிடுவது முற்று முழுதாக தவறானது என்கிறார்.

அதேபோல மார்க்ஸ் ஸ்டீபனின்  தீவிரவாதிகளை பற்றி அறிய வேண்டும் என்ற எண்ணத்தை அமெரிக்க மனநிலை என்று அவருடைய காதலியே சொல்வதாக இப்புத்தகம் குறிப்பிடுகின்றது. இக்கட்டுரையை முடிக்கும்போது இளங்கோ ஈழப் போராட்டம் பற்றி அறிய இப்புத்தகம் ஒன்றும் அவ்வளவு முக்கியத்துவம் ஆனதல்ல என்கிறார்.

அனுக் அருட்பிரகாசம் போர்ச் சூழலிற்குள் எப்போதும் இருக்காதவர். அதை வெளிப்படையாகத் தெரிவித்தே தனது கதைகளை எழுதுகிறார். அதேபோல ஏனையோரும் நேர்மையாக செயற்படுவது அவர்களது புத்தகங்களை புரிந்துகொள்ள உதவும் என்கிறார்.

பெரும்பாலான புத்தகங்கள் எண்பதுகளில் இடம்பெற்ற இனக் கொலைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. உதாரணமாக  "வடக்கிற்கான ஒரு பயணம்" , "படகு மக்கள்" , கைதி # 1056, "நிலவியலின் துயரம்"  1983 ஜூலை  இனக்கொலையுடன் தொடர்புபடுகின்றது.  இந்நூல் ஆசிரியர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ எண்பதுகளில் புலம்பெயர்ந்த நடுத்தர அல்லது உயர் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்கிறார் இளங்கோ. 




வாசுகி கணேசானந்தனின் ‘சகோதரன் அற்ற இரவு’ நாவலானது 1980 களில் ஆரம்பித்தாலும் இடையில் 20 ஆண்டுகளை விட்டுவிட்டு 2009 ற்கு தாவுவதை குறிப்பிட்டு இடையில் நடந்த யுத்தத்தாலான பாதிப்புகள் தொடர்பாக மௌனம் காப்பதுடன் போராட்டத்தின் அடிப்படை காரணத்தை மறைத்து யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளும் குற்றம் செய்தாக பொதுவாக கூறுவது பொருத்தமற்றது என்கிறார். ஒரு புலம்பெயர்ந்தவராக  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தரப்பின் வலிகளை புரிந்து கொள்ள வேண்டாமா என்றும் கேள்வி எழுப்புகிறார்.

படகு மக்கள் நாவல் தொடர்பாக குறிப்பிடும்போது சாரோன் பாலா யுத்தத்தோடு தொடர்புபடாதவர். அத்துடன் புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர். இருந்தும் அவரால் ஈழப் போராட்டத்தின் நியாயப்பாட்டை புரிந்து கொள்ள முடிகின்றது என்கிறார். சிக்கலான, அபாயம் நிறைந்த, உயிரைப் பறிக்கக்கூடிய படகுப் பயணத்தை ஏன்  இவ் அகதிகள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை இந்தப் பின்னணியில் அவரால் நியாயப்படுத்த முடிகிறது.

அதேபோல சூரிய கடவுளின் பாடல் நாவலில் சங்கரி சந்திரனால் 1930 இலிருந்து 2010 வரையான மூன்று தலைமுறைகளின் கதைகளை யுத்தத்தை நேரடியாக சொல்லாமல் குடும்பங்களின் ஊடாக சொல்லப்படுகின்றது.

வாசுகி கணேசானந்தன், சாரோன் பாலா, சங்கரி சந்திரன் போன்ற எழுத்தாளர்கள் 70,  80களில் வெளிநாடுகளில் பிறந்தவர்கள். தமிழைச் சரியான முறையில் வாசித்து விளங்குவதற்கான திறமை குறைவாக உள்ளவர்கள். இருந்தாலும் அவர்களால் ஈழப் பிரச்சனையின் வரலாற்று ஒழுங்கை எழுத முடிகிறது. அதிலும் சாரோன் பாலா மற்றும் சங்கரி சந்திரன் ஆகியோர் ஈழப் பிரச்சினையின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு உண்மைக்கு நெருக்கமாக எழுதுகிறார்கள் என்கிறார் இளங்கோ.

அதேபோல ரோய் ரத்தனவேல் மற்றும் லோகதாசன் தர்மதுரையின் சுயசரிதைகள் போரின் பாதிப்புகளையும் புலம்பெயர்வின் அவலங்களையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. போரால் ஏற்பட்ட உளவடுக்களில் இருந்து விடுபட இவர்களுக்கு நீண்ட காலம் சென்றுள்ளது. ரோயிற்கு ஒரு இராணுவ அதிகாரி உதவ, லோகதாசனுக்கு புகையிரதத்தில் சந்திக்கும் ஒரு பெண்ணும் ஒரு இஸ்லாமிய குடும்பமும் உதவுகின்றது. இது மனிதர்கள் தனித்தனியாக நல்லவர்களாக இருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

போர் உலாவை பற்றி  இளங்கோ குறிப்பிடும்போது ஈழப் போராட்டத்தைப் பற்றி ஒரு போராளியால் எழுதப்பட்ட முதலாவதும் முதன்மையானதுமான போர் இலக்கியம் என்கிறார். எனினும் அதை எழுதிய மலரவன் சிறிய வயதிலேயே இறந்து விடுவதை குறிப்பிட்டு அவர் இன்று இருந்தால் இன்னும் எவ்வளவு சிறப்பான படைப்புகளை தந்திருப்பார் என்று கேட்பதன் ஊடாக போரினால் என்ன நன்மை விளைந்துவிடக் கூடும் என கேள்வி எழுப்புகிறார்.

ஈழப் போராட்டம் தொடர்பில் வெளிவந்த ஆங்கில நூல்களில்  எவை சரியான வரலாற்று புரிதலுடன் எழுதப்பட்டுள்ளன மற்றும்  எவை வேண்டுமென்றே திரிவுபடுத்துவதற்காகவே எழுதப்பட்டுள்ளன  என்பதை எடுத்துக்காட்டுவதன் ஊடாக ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’
தமிழில் வாசிப்பவர்களுக்கு ஒரு முக்கியமான நூலாக விளங்குகின்றது. அத்துடன் ஆங்கிலத்தில் ஈழப் போராட்டம் தொடர்பான நூல்களில் எவற்றின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் வாசகர்களுக்கு முன்வைக்கின்றது.

எனினும் தமிழ் வாசகர்கள் ஈழப் போராட்டம் தொடர்பாக ஓரளவுக்கு தெளிவான பார்வை உடையவர்கள். புலம்பெயர்ந்த இரண்டாம் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர்களே ஆங்கிலத்தில் வாசிக்கும்போது எது உண்மை எது பொய் என்று தெரியாது ஒரு பிழையான வரலாற்றை நோக்கி இழுத்துச் செல்லப்படக்கூடிய வாய்ப்பு உடையவர்கள். எனவே இளங்கோவின் இப்புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது அவர்களுக்கும் ஒரு சரியான வரலாற்றை அறிந்து கொள்ள பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

***

(‘எழுநா’வினால் 2025 இன் இறுதியில் வெளியிடப்பட்ட ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ நூல் தொடர்பாக கடந்த 28/02/2026 அன்று திருமறைக்கலாமன்ற கலைத்தூது மணி மண்டபத்தில் ஆற்றப்பட்ட மதிப்பீட்டுரை.)

நன்றி: 'அம்ருதா' - சித்திரை இதழ் 2026

 

அகதி என்பது சிலருக்கு நிரந்தர அடையாளம்!

Thursday, May 21, 2026

 

-தொ.பத்தினாதனின் 'நாளையும் நாளையே' என்ற தொகுப்பை முன்வைத்து-


இலங்கையில் யுத்தம் முடிந்து 15 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. போரின் நிமித்தம் அமைக்கப்பட்ட அகதி முகாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டிருக்கின்றன. அதே போன்று போரின் நிமித்தம் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றவர்களில் பெரும்பான்மையானோருக்கு அந்த நாடுகள் தமது குடியுரிமையையோ/நிரந்தர வசிப்பிடத்தையோ கொடுத்திருக்கின்றனது. ஆனால் உலகில் மிகப் பெரும் ஜனநாயக நாடு எனச் சொல்லப்படுகின்ற இந்தியாவில், இலங்கையிலிருந்து அகதிகளாகப் புலம்பெயர்ந்தவர்கள் இன்னும் அகதிகள் என்ற அடையாளத்தோடோ இருக்கின்றார்கள். இப்படி அகதியாக அவர்கள் இருப்பது ஐந்தோ, பத்தோ ஆண்டுகள் அல்ல. கிட்டத்தட்ட 20/30 வருடங்களாக அகதிகளாக, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அகதி முகாங்களிலே விளிம்புநிலை மனிதர்களாய்த் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
 
அந்த அகதி முகாங்களில் அனைத்துத் தரப்பாலும் கைவிடப்பட்ட மக்களின் வாழ்க்கைப்பாடுகளைப் பதிவு செய்பவர்களில் முதன்மையான ஒருவராக தொ.பத்தினாதன் இருக்கின்றார். பத்தினாதன் அவரது 16வயதில், 1990இல் ஓர் அகதியாக இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்தவர். கிட்டத்தட்ட இலங்கையில் வாழ்ந்ததை விட இரண்டு மடங்கு இந்தியாவில் வாழ்ந்திருந்தபோதும், அவர் அங்கே நிரந்தரமான அகதியாகவே வாழவேண்டிய துர்ப்பாக்கியமே நிகழ்ந்திருக்கின்றது.

பத்தினாதன் ஏற்கனவே 'போரின் மறுபக்கம்' என்கின்ற தன்வரலாற்று நூலையும், 'அந்தரம்' என்கின்ற நாவலையும் எழுதியிருக்கின்றார். இப்போது அவர் கடந்த பத்தாண்டுகளாக எழுதிய 12 கதைகளை உள்ளடக்கி 'நாளையும் நாளையே' என்கின்ற சிறுகதைத் தொகுப்பை  வெளியிட்டிருக்கின்றார்.

*

பத்தினாதன் இதுவரை எழுதியவற்றை வாசித்தவர்களுக்கு, இது அவர் ஏற்கனவே எழுதியவற்றவைகளின் ஒரு தொடர்ச்சியென எளிதில் அடையாளங் கண்டுகொள்ள முடியும். இந்தக் கதைகளில் பெரும்பாலானவை அகதி முகாங்களில் நடக்கின்றன அல்லது அகதி என்கின்ற அடையாளத்தோடு புறச்சூழலில் நடக்கின்றவையாக இருக்கின்றன.

 'அகதி' என்கின்ற கதை, நட்சத்திர விடுதியில் திருமணக் கொண்டாட்டங்களில் உதவியாளராக வேலை செய்கின்ற ஒருவனின் வாழ்க்கைப்பாட்டைச் சொல்கிறதாக நீள்கின்றது. இந்தக் கதையில் வருகின்றவனுக்கு ஏற்கனவே நிறைய யோசனைகள் பீறிட்டுக் கிளம்பி, தனக்கு மனநலப் பிரச்சினை இருக்கின்றது என்று நம்புகின்றான். அதற்காக மருத்துவரைக் கூடப் பார்க்கின்றான்.

அப்படியான உளவியல் சிக்கலோடு நட்சத்திர விடுதியில் வேலை பார்க்கும்போது அங்கே ஏற்படுகின்ற அனுபவங்களை அவன் விபரிக்கின்றான். இத்தனைக்கு நடுவிலும் இலங்கையிலிருந்து வந்த அகதி  தானென்கின்ற அடையாளத்தை மறைத்தே அங்கே வேலை பார்க்கின்றான். இறுதியில் ஒரு சிக்கல் வந்து அவன் வெஞ்சினத்தில் வெடித்துச் சிதறும்போது, அவனை 'நீ மதுரக்காரனா?' என்று இன்னொருவன் அணைத்தலுடன் அந்த கோப நெருப்பு அணைந்து ஓர் அமைதி அவனுக்குக் கிடைத்து விடுகின்றது.

இதில் முக்கியமான கதைகளில் ஒன்றாக 'நோஞ்சானை'ச் சொல்லலாம். இக்கதையில் ஒரு நாடகம் நடக்கின்றது. அதை ஒருவர் எப்படி இலங்கையில் யுத்தம் இருந்தது, தமிழகத்தில் எப்படி அகதி வாழ்க்கை இருக்கின்றது என்று நடித்துக் காட்டுகின்றார். அப்படி நடித்துக் காட்டுபவரே சட்டென்று முழுநாடகத்தையும் முடிக்காமல் அமைதியாக ஒதுங்கி ஒளித்துக் கொள்கிறார். அதற்கு பார்வையாளர் மத்தியில் வாட்டசாட்டமாக ஒரு கியூ பிராஞ்ச் அதிகாரி உட்கார்ந்திருந்தமையே காரணம். இந்த உண்மையான காரணத்தை இதில் நடித்துக் கொண்டிருந்த பெரியசாமிக்கும், இந்த நாடகத்தை நிகழ்த்த இடம் கொடுத்த பேராசிரியர் பிரபாகருக்கு மட்டுமே தெரியும் என்று கதை முடியும். ஆக கலை இலக்கியங்களில் கூட முழுமையான சுதந்திரமாகப் பேச, தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கு இடமில்லை என்பதை அந்தக் கதை சொல்லாமல் சொல்லிச் செல்வதை நாம் அறிந்து கொள்கிறோம்.

அதுபோல 'தேசியகீதம்' கதை, இந்திய ஜனாதிபதி மதுரைக்கு வருவதையிட்டு அகதிகள் அனைவரையும் அகதி முகாங்களுக்குள் அடங்கியிருக்கும்படி கட்டளையிடப்படுகின்றது. இந்த 'ஊரடங்கில்' பாடசாலைக்குப் போகும் குழந்தைகளுக்குக் கூட விதிவிலக்கு கிடைப்பதில்லை. அவர்களும் பாடசாலைக்குப் போகாமல் முகாங்களுக்குள் அடைந்து கிடக்கின்றார்கள். அப்படி இரண்டு நாள் பாடசாலைக்குப் போகாத குயின்ரனை, அவனது புதிய ஆசிரியர் ஏன் வரவில்லை என்று கேட்டு அதட்டுகிறார். அவனுக்கு அனைவர் முன்னிலையிலும் தானொரு இலங்கை அகதி, எங்களை இவ்வாறான நாட்களில் அகதி முகாமை விட்டு வெளியே விடுவதில்லை என்று சொல்லத் தயக்கமாக இருக்கின்றது. ஆனால் அவனோடு பத்தாம் வகுப்பு கூடப்படிக்கும் ரோஸ்மேரிக்கு இந்தப் பிரச்சினையில்லை. அவள் நெஞ்சுரத்துடன் 'நாங்கள் அகதி முகாமில் இருப்பவர்கள். இவ்வாறு முக்கிய அரசியல்வாதிகள் இங்கு வரும்போது எமக்கு பாடசாலைக்கு வர அனுமதியில்லை' எனச் சொல்லி குயின்ரனைக் காப்பாற்றுகிறாள்.

பாடசாலை அசெம்பிளியில் தேசியகீதம் பாடப்படுகின்றபோது, அனைத்து மாணவர்களும் சேர்ந்து பாடும்போது, குயின்ரன் அதைப் பாடவில்லை என்பதைக் கண்டுபிடித்து ஏன் என அந்த ஆசிரியர் கேட்கிறார். அவன் மெளனமாக இருக்கின்றான். ஆனால் ஆசிரியர் உறுக்கிக் கேட்ட்கும்போது குயின்ரன் கேட்கிறான், 'நான் ஏன் தேசிய கீதம் பாட வேண்டும்?'. அத்துடன் இந்தக் கதை, அவனை நோக்கி ஆசிரியரின் தண்டனை அவனுக்குப் பிடிக்காத பல்லியைப் போல ஆவேசமாக நாக்கைச் சுழற்றியபடி வருவதுடன் முடிகின்றது. ஓர் அகதியாக/நாடற்றவனாக குயின்ரன் இருக்கும்போது, அவனுக்குரிய தேசம் எது, தேசிய கீதம் எதுவென்பது அவ்வளவு அழுத்தமாக இந்தக் கதையினூடாகச் சொல்லப்படுகின்றது.

*

பத்தினாதனின் கதைகளினூடாக பல்வேறு விதமான அகதி முகாம் வீடுகளைப் பார்க்கின்றோம். எல்லா வீடுகளும் மழையின்போது அடிக்கடி  ஒழுகுகின்றன, கதவுகள் உடைந்து சாட்டுக்கு கதவுகள் போல காட்சியளிக்கின்றன, சேலையை கட்டி அறைகளாக்கி மனிதர்கள் எவ்வித அந்தரங்கமுமில்லாது படுத்துறங்குகின்றார்கள். அப்படிப்பட்ட அகதி முகாமில் தன்பாட்டில் வளர்ந்து வரும் காய்க்காத புடலங்காய் கொடியால் பாம்பு வந்துவிட்டதென்று, இனி புடலங்காய் செடியைக் கூட அகதிமுகாமில் வளர்க்கக் கூடாதென்று சட்டமொன்று கொண்டுவரப்படுவதை 'புடலங்காய்' கதை சொல்கின்றது.

அதுபோலவே அகதிமுகாமில் வாழும் பெண்கள் மீது நிகழும் பாலியல் துஷ்பிரயோகத்தை 'நாளையும் நாளேயே' சொல்கின்றது. அகதி முகாமில் கொடுக்கப்படும் சம்பளக் காசின் நிமித்தம் நடந்த பாலியல் சேட்டையைத் தனது கணவரிடம் சொன்னாலும், அதற்கு எதிராகக் குரல் கொடுக்க முடியாத அவல நிலையே அந்தக் கணவர்க்கு இருக்கின்றது. ஒருகட்டத்தில் இப்படியான துஷ்பிரயோகங்கள் தாளாது, இங்கே இருக்கவேண்டாம், இலங்கைக்குத் திரும்பப் போகப் பதிவு செய்துவிடுங்கள் என்று அந்தப் பெண் மன்றாடுகின்றார். எனினும் அடுத்தநாள் எதுவுமே நடக்காதமாதிரி கணவனான கணேஷ் பெயிண்ட் டப்பாவுடன் வேலைக்கு நடந்துகொண்டிருப்பதாக இந்த கதை அவ்வளவு அவலச்சுவையுடன் முடிவதை வாசகராக நாம் கையாலாகாத நிலையில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

'பசிப்பாடல்' என்பது ஒரு அகதியின் ஒருநாள் பட்டினியை அவ்வளவு நெகிழ்ச்சியுடன் விபரிக்கின்றதென்றால், இன்னொரு கதையான   'அ(க)திகாரம்' கதை, மருத்துவமனையில் நீண்டநாள் சிகிச்சை பெறும் மகனின் நிலையை ஆவணங்களாகக் காட்டியும் ஏற்றுக்கொள்ளாது, அகதிகளுக்கான உதவிப்பணத்தைக் கொடுக்காத அதிகாரியின் அதிகாரத்தால் நொந்த ஓர் அகதி மின்சாரக் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்கின்ற துயரக்கதையைச் சொல்கின்றது. ஒரு மனிதன் உயிரைத் தக்க வைப்பதற்காக நாடு கடந்து அகதியாக வந்து, அந்த இன்னொரு நாட்டில் கொடுக்கப்படும் நிர்ப்பந்தத்தால் தனது உயிரை மாய்த்துக் கொள்வது என்பது எவ்வளவு அவலமானது.

இத்தொகுப்பிலிருக்கும் துயரமும், கொந்தளிப்புமான கதைகளை முன்வைத்து, அண்மையில் வெளிவந்த நூல்களில் கவனிக்கத்தக்க சிறுகதைத் தொகுப்பென்று இதை எளிதாகச் சொல்லிவிட முடியும். மேலும் அகதிகளின் கதைகளை வைத்து அனுதாபமோ கழிவிரக்கவோ வேண்டி நிற்காமல், அதை புனைவின் இயல்பான மொழியில் பத்தினாதன் சொல்வதைக் கவனித்தாக வேண்டும். இதில் 'பயம்' மற்றும் 'வடக்கத்தையான்' பத்தினாதனின் வழமையான மொழியை விட்டு விலகி நிற்பதால் அவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கூட, அவரின் ஏனைய பத்துக் கதைகள் முக்கியமானவை என உறுதியாகச் சொல்ல முடியும்.

பத்தினாதனின் எழுத்துக்களை இதுவரை வாசிக்காதவர்களாயின் இந்தத் தொகுப்பு பத்தினாதனை வாசிப்பதற்கான நல்லதொரு தொடக்கமாக அமையும். இன்னுமொரு முக்கிய விடயம், ஈழத்தமிழர்கள் மீது அக்கறையுள்ளவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் தமிழகத்தவர்கள், ஒருபோதும் தவறவிடக்கூடாத எழுத்துக்கள் இந்த நூலும், பத்தினாதனுடைய ஏற்கனவே வெளிவந்த ஏனைய தொகுப்புக்களும் எனச் சொல்வேன்.

பத்தினாதனின் அகதி முகாம் கதைகளை எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை எனில், 'என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்' என்று மாண்டோ சொன்னதை நமக்கு நாமே ஞாபகப்படுத்திக் கொள்வதே சரியான வழியாக இருக்கும்..

***

(நன்றி: 'கலைமுகம்' - 81)

பனிக்காலத் தனிமை - 14

Wednesday, May 13, 2026

 

இலங்கையில் Walk for 'Peace'  

****

அமெரிக்காவில் Walk for Peace நிகழ்ந்தபோது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் பிக்குகள் நடப்பதைப் பார்த்திருக்கின்றேன். அவை குறித்து விரிவாக எழுதவும் செய்திருக்கின்றேன். அந்த நிகழ்வு முடிந்தபோது, அதன் முன்னணி பிக்குவான பன்னங்கார அடுத்து தாங்கள் இலங்கைக்குப் போவதாகத் தெரிவித்திருந்தனர். டெக்ஸஸில் அமைந்திருக்கும் பிக்கு பன்னங்கரா சார்ந்த விகாரைக்கு இலங்கையிலிருந்து அரசமரக்கன்றைக் கொண்டு வருவதே அதன் முக்கிய நோக்கம் என்று தெரிவித்திருந்தனர்.

கடந்தவருடம் இந்த அரசமரக்கன்றை ஏற்கனவே இலங்கையில் தெரிவு செய்து வைத்திருந்தனர். இப்போது அதை உரியமுறையில் அனுரதாபுரத்திலிருந்து அமெரிக்காவுக்கு எடுத்து வருவதே இதன் முக்கிய நோக்கம்.
 

இதன் நிமித்தம் அதே Walk for Peace  ஒருபகுதியினர் அனுராதபுரத்திலிருந்து கொழும்புவரை கிட்டத்தட்ட பத்து நாட்கள் நடந்து செல்லத் தொடங்கியிருந்தனர். இந்த நிகழ்வை அறிந்தபோது இது குறித்து பகிர விரும்பியபோதும், இலங்கையின் நிலைமை குறித்து  சரியாகத் தெரியாது பகிருதல் நல்லதல்ல என நினைத்திருந்தேன்.

நினைத்ததுபோலவே முதல் நாளிலிருந்து இலங்கை இராணுவம் சீருடையில் முன்னணியில் நிற்கும்போதே இந்த Walk for Peace எனக்கு எந்த அமைதியையும் தராது என்று விலத்தியிருந்தேன்.

*

இலங்கையைப் பெளத்த நாடென்றுதான் தொடர்ந்து அங்கிருப்பவர்கள் பிரகடனப்படுத்தியபடி இருக்கின்றார்கள். புத்தரும் அங்கே தெய்வந்தான். புத்தரின் படங்களுடன் ஆடையோ, ஏன் எமது உடல் எமது உரிமை என்று நினைத்து புத்தரைப் பச்சை குத்தியிருந்தால் கூட 'புத்தரை அவமரியாதை' செய்ததாக ஜெயிலில் போட்டது கடந்த காலத்தில் நடந்திருக்கின்றது.

பெரும்பான்மை மக்களின் இந்த கடவுள் நம்பிக்கையில் நாம் தலையிடத் தேவையில்லை. அவரவர்க்கு அவரவர் தெய்வம். ஆனால் இன்று வத்திக்கானில் இருக்கும் போப்பாண்டவரே அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக பேசும் தைரியம் வந்தபோது கூட, இலங்கையில் 'இடதுசாரி' சார்புள்ள அரசு ஆட்சிப்பீடமேறியபோது மகாசங்கங்களில் ஆசியின்றி ஏதும் செய்ய முடியாத நிலையே இலங்கையின் யதார்த்தமாகும்.

அமெரிக்க ஜனாதிபதி போப்பாண்டவரை அவமதிப்பது போல இலங்கையின் இதுவரை எந்த ஜனாதிபதியாலும் 'உங்கள் மதம் உங்களுக்கு, எங்கள் அரசு  எங்களுக்கு' என்று வாய்திறந்து வெளிப்படையாகப் பேசினால் அவர் அடுத்த நாள் ஜனாதிபதியாக இலங்கையில் இருப்பாரா என்பதே சந்தேகந்தான். அந்தளவுக்கு அரசமரத்து வேர் போல இலங்கையில் பெளத்தம் அரசியல்மயப்படுத்தப்பட்டிருக்கின்றது.

எனவே இவ்வாறான இலங்கையில் புத்தர் ஒரு சாதாரண மனிதராக இருந்து நிர்வாணமடைந்தவர் மட்டுமே என்று சொல்ல எவராலும் வெளிப்படையாக முடியாது. இது இலங்கைக்குரிய பிரச்சினையில்லை. இயேசுவும் ஒரு சாதாரண மனிதர் என்று சொல்லமுடியாதளவுக்கு கிறிஸ்தவமும் எப்போது நிறுவனமயப்படுத்தப்பட்டு விட்டது.

இப்படியாக கடவுளாக்கி நிறுவனப்படுத்தப்பட்ட இடங்களிலிருந்து புத்தரும் இயேசுவும் தப்பியோடுவார்களோ தெரியாது, ஆனால் நான் தப்பியோடிவிடுவேன். தப்பியோடுவது என்பதன் அர்த்தம் இவ்வாறான இடங்களில் எனக்கு புத்தரோ இயேசுவோ அமைதியைக் கொண்டு வந்து தரமாட்டார்கள் என்பதாகும்.
இன்று இலங்கையின் பிரபல்யமான காட்டூனிஸ்டான அவந்த ஆட்டிக்கல நான் இலங்கையில் நடக்கும் Walk for Peace  குறித்து சரியாகப் பிரதிபலித்து ஒரு கார்ட்டூன் வரைந்திருக்கின்றார்.

*

புத்தருடைய வாழ்க்கை வரலாற்றில், அவர் காசியப்பவைச் சந்திப்பது பற்றி அடிக்கடி நினைவூட்டப்படுகிறது. மகாகாசியப்பாவே புத்தரின் மறைவின் பின் புத்ததர்மாவை நிலைநாட்டியவரும் முதன்மைச் சீடரும் எனச் சொல்லப்படுகின்றார். ஸென் மரபில் 'சங்கம் (சங்கா) அமைத்த தந்தை' என புத்தரல்ல, மகாகாசியப்பதான்  நினைவு கூரப்படுகின்றார்.
ஸென் மரபில் மகாகாசியப்ப புத்தரைச் சந்திக்கமுன்னரே காசியப்ப ஓர் அசிரியராக தனது ஐநூறு சீடர்களுடன் இருந்திருக்கின்றார். எனினும் காசியப்பாவின் வழிமுறை சடங்குகளை நிகழ்த்தி நிர்வாணமடைவதாக இருந்திருக்கின்றது.

புத்தரைச் சந்திக்கும்போது காசியப்பவுக்கு அவர்தான் தான் நிர்வாணமடைவதற்குரிய பாதையைக் காட்டக்கூடிய சிறந்த ஆசிரியர் என்று உணர்ந்திருக்கின்றார். அப்போது ஓரிடத்தில் சடங்குகளா அல்லது அதைத் தவிர்த்த புத்தரின் மத்தியபாதையா நிர்வாணமடைவதற்குச் சரியானது என்ற கேள்விக்கு புத்தர் கொடுக்கும் பதில் சிறப்பானது. ஒருகட்டத்தில் காசியப்பா தனது ஐநூறு சீடர்களுடன் புத்தரின் வழிக்குத் திரும்புகின்றார். 

 


ஸென் (மகாயான புத்தம்) புத்தரை சாதாரண மனிதராக இருந்து நிர்வாணமடைந்தவர் என்று தொடர்ந்து நினைவுபடுத்தியபடி இருக்க, தேரவாதமோ அவரை இன்னுமின்னும் தெய்வமாக்கிக் கொண்டே போய்க் கொண்டிருப்பது. மேலும் இலங்கையில் இருக்கும் தேரவாதபுத்தம் சடங்குகளுடன் அதிகம் பிணைந்திருப்பது. எனவே அதற்குள் கால் வைப்பது என்பது முதலைகள் உள்ள குளத்தில் தாமரைப்பூ பிடுங்கப்போவது போல ஆபத்தானது.

இன்னின்ன முறைதான் சரியென்று வாதிடுவது சரியல்ல. அப்படி விவாதித்தால் 'எனது மத்தியபாதையை மறந்த மூடனே' என்று எங்களை புத்தர் எள்ளி நகையாடக்கூடும். மேலும் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தால் இருமைகள் என்னும் துவிதங்களுக்கும் எளிதாக சிக்கியும் விடுவோம். அது அவ்வளவு எளிதில் வெளியேற முடியாத மர்மச்சூழலும் கூட.

ஆகவே இப்போது இலங்கையில் நடக்கும் இந்த Walk for Peace யும், இலங்கையின் யதார்த்தத்தையும் பிரதிபலித்த இந்தக் கார்ட்டூனையும் கொஞ்சம் மறப்போம் அல்லது தள்ளிவைப்போம்.

*

"புத்தரும் அனைத்து புத்த வழித்தோன்றல்களும் ஞானமுற்று தம் முதல் போதனைகளை வழங்கியபோது, மனவிழைவின் இரு எதிர்த்துருவங்களைச் சுட்டிக்காட்டினர் - இன்பத்தில் திளைத்தல் அல்லது துன்பத்தில் அமிழ்தல். அவற்றுக்கிடையே புலனின்பங்களில் மூழ்குபவர்கள் தாம் திளைக்கும் இன்பத்தால் ஒருபோதும் நிறைவுறாமல் அமைதியிழந்து இறுதியில் துன்பமிக உழன்று நிலைகுலைந்து தவிப்பர். இவ்வாழ் உழல்வு சம்சாரச் சூழல் மயக்கத்தின் பிரதிபலிப்பு.

அனைத்து மனிதர்களும் இவ்விரு எதிர்த் துருவங்களில் சிக்கிக் கொள்கின்றனர். அவர்களால் தம்மத்தின் நடுவழியை ஒருபோதும் காணமுடிவதில்லை. புத்தர்கள் இவ்விரு எதிர்த்துருவங்களால் விளையும் துயரைச் சுட்டிக் காட்டினர். எனினும் நாம் தொடர்ந்து அத்துருவங்களுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதால், அவற்றை மேலதிகமாக விழைவுவுறுவதால், மீண்டும் மீண்டும் அவற்றின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிறோம். அவ்விரண்டும் மயக்கத்தின் வழிகள், தியானிப்பவரின் வழிகள் அல்ல. அமைதிக்கான வழிகள் அல்ல என்கிறார் புத்தர்."

('புத்த தியானக் கருவூலம்,ப.38, வி.அமலன் ஸ்டேன்லி)

என்று அஜான் சா 'சுதந்திரத்தின் சுவை' நூலில் கூறுவதை நாம் இப்போது நினைவு கொள்வோம்.

***


(கார்ட்டூன்: Peace Walk by Awantha Artigala)

 

ரைனெர் ரில்க

Monday, May 11, 2026

 

'வசந்தம் வராத காட்டில்  பறவையின் ஓர் அழைப்பு'
தமிழாக்கம்: பிரசாந்தி சேகரம்

***

.ஒருமுறை ஸ்பெயினில் ப்ளமிங்கோ நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிய அரங்கு. முன்வரிசை இருக்கை. நடனமாடிய பெண் நுனிக்காலில் தரையை அழுத்தி எழுந்த தருணந்தோறும் என் இதயத்துடிப்பைத் துல்லியமாக உணர்ந்தேன். அவ்வளவு intense & intimate ஆன நடன நிகழ்வு. அந்த ஒன்றரை மணி நடனநிகழ்வைப் பார்த்த அந்த நாள் முழுதும் பரவசத்தின் திளைப்பில் அலைந்தபடி இருந்தேன்.
 

அந்த ஞாபகங்களை அப்படியே தத்ரூபமாக நினைவுபடுத்துவது போன்று பிரசாந்தி தமிழாக்கிய ரில்கவின் 'ஸ்பானிய நடனக்காரி' கவிதை இருந்தது.

"கையில் பிடித்திருக்கும் ஒரு தீக்குச்சி
வெண்மையில் இருந்தது
வெடிக்கும் தீப்பிழம்பாக மாறுமுன்
எவ்வாறு அங்குமிங்கும்
துடிக்கும் நாக்குகளை நீட்டுகிறதோ
அவ்வாறு தொடங்குகிறது
அவளின் நடனம்
பார்வையாளர்கள் சூழ்ந்திருக்க
வேகமும் வெளிச்சமும் வெப்பமும் பரப்பி
சுற்றிச் சுழல்கிறாள் அவள்
....

சட்டென சுற்றிலும் முற்றிலும்
அவளின் எல்லாமும் தீப்பிடிக்கிறது
ஒரெயொரு பார்வையில்
தன் கூந்தலைப் பற்றவைத்து
ஒரு சுற்றில்
திடீரெனத் தனது ஆடை முழுவதையும்
தனித்துவமான ஒரு கவித்துவத்துடன்
அடங்காத் தீயில் விசிறிவிடுகிறாள்
அதிலிருந்து
திடுக்கிட்டு விழித்தெழும்பிய
பாம்புகள் போல
நீள்கின்றன சடசடத்த நிர்வாணக் கைகள்
பிறகு அணையும் தருவாயில்
அந்தத் தீ இருக்கக் கண்டு
மிகுந்த ஆணவத்துடன்
ஆளுமை செழிக்கும் சைகையுடன்
அனைத்தையும் ஒருசேர அள்ளியெடுத்து
வீசியெறிகிறாள்."

என இன்னும் தொடரும் இக்கவிதையைப் பார்க்கும்போது ரில்கவும் நானும் ஒரே நடனத்தைத்தான் வெவ்வேறான கால நீட்சியில் பார்த்துக் கொண்டிருந்தோமா என்று எனக்கு இந்தக் கவிதை அவ்வளவு நெருக்கமானது.

ரைனர் ரில்க தமிழ்ச் சூழலில் அவரது கவிதைகளைப் போல, அவரின் 'இளம் கவிஞர்களுக்கு எழுதிய கடிதங்களாலும்' அறிமுகமானவர். அக்கடிதங்களை ரில்க அவரின் இருபதுகளில் எழுதியவர் என்பது மட்டுமின்றி அவரின் இறுதிக்காலம்வரை தொடர்ந்து பல்வேறு மனிதர்களுக்கு கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தவர். ஒருவகையில் பார்த்தால் ரில்கவிற்கு கவிதைகள் மீதிருந்து பித்தைப் போல கடிதங்கள் எழுதுவதிலும் இருந்ததோ என்று எண்ணத் தோன்றுமளவுக்கு கடிதங்களை காதலிகளுக்கு, தோழிகளுக்கு எண்ணிறைந்து எழுதியிருக்கின்றார்.

அநேக கவிஞர்களைப் போல ரில்கவின் வாழ்க்கை தத்தளிப்புக்களால நிரம்பி வழிந்திருக்கிறது. கவிதைகள் எழுதுவதும், பிறகு கவிதைகளை எழுதும் மனநிலையைத் தொலைப்பதும், அதை மீளக் கண்டுபிடிப்பதற்காகத் தொடர்ச்சியாகப் பயணிப்பதும் என்று தொடர்ந்து அலைபாயும் வாழ்வை அகமும் புறமாகக் கொண்டவர் ரில்க.

ரில்கவின் கவிதைகளை மேலோட்டமாகப் பார்த்தாலே அவர் எந்தளவுக்கு காதல் கவிதைகளை எழுதியிருந்தாரோ அந்தளவுக்கு தனிமை குறித்தும் எழுதியிருக்கின்றார் என்பது எளிதாகப் புரியும். ரில்க மறைந்து கிட்டத்தட்ட ஒரு நூறாண்டுகள் கடந்தபின்னும் ரில்க சமகாலத்தில் உயிர்த்தெழுவது அவர் தனிமனிதர்களின் அகவுலகின் தனிமையை அசலாக எழுதிச் சென்றிருப்பதால்தானோ என்று எனக்கு யோசிக்கத் தோன்றுகின்றது.

தமிழில் ரில்கவின் கவிதைகள் அவ்வப்போது தமிழாக்கப்பட்டிருந்தாலும், பிரசாந்தி சேகரத்தால் 'வசந்தம் வராத காட்டில் பறவையின் ஓர் அழைப்பு' என்கின்ற தொகுப்பில் ரில்கவில் ஒரு நூறு கவிதைகள் ஒரே நேரத்தில் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பதுதான் தனித்துவமானது. இந்நூலின் முதல் சிறப்பு என்பது ரில்கவின் கவிதைகள் அவர் எழுதிய மூலமொழியான ஜேர்மனிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டதாகும்.

ரில்க, காஃப்கா அனைவரும் செக்கில் பிறந்தவர்கள். முதலாம் உலக மகாயுத்ததின் முன் ஜேர்மன், ஆஸ்ரியா, ஹங்கேரி, செக் எல்லாவற்றையும் உலகப்படத்தில் விளங்கிக் கொள்வதென்பது சிக்கல் வரக்கூடியது. ரில்கவோ, காஃப்காவோ செக்கில் பிறந்து வளர்ந்திருந்தாலும், அவர்கள் ஜேர்மனியர்கள் என்கின்ற அடையாளத்தில் வருபவர்கள். ஒருவகையில் செக்கில்/ஆஸ்திரியாவில் பிறந்த அந்நியர்கள் இவர்கள் எனலாம். எனவேதான் அவர்கள் எப்போது நம்மைப் போன்ற புலம்பெயர்ந்தவர்கள் போல ஒரு விடுபட்ட தன்மையோடும், தனிமையோடும் அவர்கள் வாழ்ந்த சமூகத்தில் இருந்தார்கள். அது அவர்களின் படைப்புக்களிலும் பிரதிபலித்திருக்கின்றது. எங்கும் வேரூன்ற முடியாத அவதி என  இந்தத் தவிப்பைச் சொல்லலாம்.

அது ஹெர்மன் ஹெஸ்ஸேக்கும், மிலான் குந்தேராவுக்கும் வேறுவகையில் நடந்திருக்கின்றது. ஆகவேதான் ஹெஸ்ஸே சுவிற்சர்லாந்திலும், குந்தேரா பிரான்சிலும் தமது இறுதிக் காலங்களைக் கழித்தவர்கள். ரில்கவும் அப்படித்தான் ஒவ்வொரு நகராக அலைந்து இறுதியில் சுவிற்சர்லாந்தில் போய் அடைக்கலமானவர்.

ரில்கவின் முதல் காதல் லூவுடன் (Lou) தொடங்குகின்றது. ரில்க இருபதின் தொடக்கத்தில் இருக்கும்போது, லூவுக்கு முப்பதுகளின் மத்தி. ஆனால் அந்த மூன்று வருட உக்கிரமான காதல் ரில்க என்கின்ற கவிஞனை ஆளுமையுடையனாக வளர்த்தெடுத்திருக்கின்றது. ரஷ்ய பின்னணியில் இருந்து வந்த லூவால் அன்றைய ரஷ்யாவுக்கு அடிக்கடி ரில்கவினால் பயணிக்கவும் முடிந்திருக்கின்றது.

ரில்கவின் தளும்பும் மனது காதல்களை மட்டுமில்லை, அரசியல் சார்புகளையும் சிக்கலாகவே முடிவு எடுத்திருக்கின்றன. ஒருபக்கம் ரஷ்யப் புரட்சியை வரவேற்றவர், இன்னொருபுறம் முஸோலினியின் பாஸிசம் அந்த நாட்டுக்குத் தேவையென்று இறுதிக்காலத்தில் சொன்னவர்.  இதற்கிடையில் ஜேர்மன் (ஆஸ்திரியா) முதலாம் உலகப்போருக்குப் போனபோது,  படைவீரராகவும் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டவர். வயதின் காரணமாகவும், எழுத்தாளராக இருந்ததன் நிமித்தமும் இராணுவ சேவையில் இருந்து மிக விரைவில் விடுவிக்கப்பட்டவர். அது பிறகு அவரின் இறுதி பத்தாண்டு காலத்தில் மிகப் பெரும் உளவியல் பாதிப்பை ஏற்படுத்தியதும் என்றும் கூறுகின்றார்கள்.

ரில்க வாழ்க்கையில் இருத்தலியச் சிக்கலையும், இந்த அந்நியப்படுதலையும் தனது காதல்களாலும், பயணங்களாலும் கடந்து வந்தவராக ஒருவகையில் வகைப்படுத்தலாம். சிறுவயதுகளில் பெண்குழந்தை  இல்லாத காரணத்தால் பெண்களின் ஆடைகள் அணிவிக்கப்பட்டு தாயாரால் வளர்க்கப்பட்ட ரில்க, காலம் முழுதும் பெண்களின் கதகதப்புக்குள்ளேயே வாழ்ந்து முடித்தவர். மனைவி, காதலிகள், தோழிகள் ரில்கவின் ஆளுமையை மட்டுமின்றி அவரின் கவிதைகளைச் செதுக்குபவர்களாகவும், அவரை வறுமை எட்டவிடாது கனிவுடன் பராமரித்தவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.

*

பிரசாந்தி ஜேர்மனிக்கு சிறுவயதிலே சென்றவர். அவருக்கு பத்தாவது வகுப்பிலே ரில்க பாடசாலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றார். பிறகு பல்கலைக்கழகக் காலத்தில் மாலைநேர நண்பர்களின் கவிதை உரையாடல்களில் ரில்க அவருக்கு ஞாபகப்படுத்தப்பட்டிருக்கின்றார்.

இவ்வாறு ரில்க இளம்வயதில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர் பின்னர் ரில்கவின் அசலான ஆவணங்களைத் தேடி மூன்று நாட்கள் தொலைதூர நகருக்குச் சென்று தங்கி நுணுக்கமாகப் பார்க்கின்றார்.

ஒரு படைப்பாளிக்கு இப்படி பிரசாந்தி போல ஓர் அணுக்கமான வாசகர் கிடைப்பது அவர்களின் பெரும்பேறெனச் சொல்வேன். அதிலும் பிரசாந்தியின் பின்னுரையை வாசிக்கும்போது அவர் கிட்டத்தட்ட ஒருதலைக்காதலாக ரில்கவை நேசிக்கின்றாரோ என்றளவுக்கு அவ்வளவு நெருக்கமாக நம்மை உணரவைக்கின்றார்.

ஒரு மொழியிலிருந்து இன்னொரு  மொழிக்கு அதன் சாரம் தொலைந்துவிடாது மொழிபெயர்ப்பது என்பது எளிதானதல்ல. அதிலும் கவிதைகளை தமிழாக்குவது என்பது இன்னும் சவாலானது. சிலவேளைகளில் நாம் அந்தப் படைப்பாளிகளில் தோய்ந்து அவர்களின் மூலமொழியில் வாசிக்கும்போது அப்படியொரு பரவசம் உணர்வைத் தரும். ஏனென்றால் நாம் தனித்து ஒரு கவிதையை மொழிபெயர்ப்பதில்லை. நாம் அந்தப் படைப்பாளியின் வாழ்கையில் தோய்ந்தெழுவதால் நமக்கு அவர்களின் ஒவ்வொரு வாக்கியங்களுக்கு அப்பால் தொக்கி நிற்கும் அர்த்தங்கள் தெரியும். ஆனால் சிலவேளைகளில் மொழிபெயர்த்துப் பார்க்கும்போது அது தனியே அந்தக் கவிதையாக வாசிக்கப்படும் ஆபத்து இருக்கின்றது. அல்லது ஏன் இந்த மிக எளிய கவிதையை மொழிபெயர்த்தார் என்று மொழியாக்கத்தை வாசிப்பவர் நினைக்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது.



சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கியை தமிழாக்கும்போது நான் கிட்டத்தட்ட அவரின் அனைத்து நாவல்களையும் வாசித்தும், நிறைய நேர்காணல்களைப் பார்த்தும் முடித்திருந்தேன். எனவே என்னால் அவரின் கவிதைகளின் பின்னால் ஒளிந்து நின்ற அர்த்தங்களை அல்லது இது எதனோடு தொடர்புகொண்டு நிற்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள எளிதாக முடிந்திருந்தது. ஆனால் அதை நான் தமிழ்ப்படுத்தியபோது சிலவேளை மிகச் சாதாரண கவிதைகளாக அதைத் தனித்து வாசிக்கும்போது தோன்றியுமிருக்கின்றது. மேலும் ப்யூகோவ்ஸ்கி அந்தமாதிரி கெட்டவார்த்தைகளைப் பாவிப்பவர். எம்மிடையே இருக்கும் கெட்டவார்த்தைகளை அதற்குப் பாவித்தால் அது ஆங்கிலத்தில் வாசிப்பதுபோல ஒருவகைப் பரவசத்தைத் தராது. இந்தச் சந்தர்ப்பங்களில் நான் ஒரு தோற்றுப்போன மொழிபெயர்ப்பாளராக ப்யூகோவ்ஸ்கியின் முன் நின்றிருக்கின்றேன்.

பிரசாந்தி இந்நூலின் பின்னிணைப்பில் மொழிபெயர்ப்பின் ஒரு புதுப்பரிணாமம் குறித்து உரையாடுகின்றார். ரஷ்ய மொழியாக்கங்களில் அந்த மொழிபெயர்ப்பாளரே இன்னொரு படைப்பாளியாக முகிழும் தருணங்களையும், அதுபோல 'ரில்கவிடமிருந்து', 'ப்ராஸ்டிடமிருந்து' என்று அழைத்து மொழியாக்கங்களைச் செய்வதைக் குறிப்பிடுவது மொழிபெயர்ப்பாளர்கள் கவனிக்க வேண்டியதொன்று.

மேலும் டொச்சில் ஒரு சொல்லிலே மூன்று அர்த்தங்களை இணைத்து எழுதுவார்கள், அதை எப்படி பிரித்து தமிழில் எழுவது என்கின்ற சிக்கல்களையும் பிரசாந்தி முன்வைத்து இதில் எழுதியிருப்பது சுவாரசியமானது.  நேரடி மொழிபெயர்ப்பில் 'காய்ந்த காடு' என்பதை, 'பூக்காத காடு' என்பதற்குச் சென்று இறுதியில் எப்படி 'வசந்தம் வராத காட்டை' அவர் வந்தடைந்தார் என்பது மொழிபெயர்க்கும்போது நாம் வந்தடைகின்ற பரவசமான தருணங்கள் எனச் சொல்வேன்.  இவ்வாறு 'Silent Spring' என்ற சொல்லுக்கு ஏ.ஜே.கனகரத்ன, 'ஒலிக்காத இளவேனில்' என்கின்ற அழகான தமிழாக்கத்தைக் கண்டுபிடித்தவர் என்பது இந்நேரத்தில் நினைவுக்கு வருகின்றது (இதே பெயரில் 17 ஈழ/புலம்பெயர் பெண் கவிஞர்களின் ஒரு தொகுப்பும் வெளிவந்திருக்கின்றது).

'காதல் கொண்ட பெண்' கவிதையின் ஒரு பகுதி இப்படி வரும்.

'..இருப்பினும்
இலைகள் துளிர்க்கும் இந்தப் பொழுதுகளில்
என்னுள் ஏதோவொன்று விடுவிக்கப்பட்டுள்ளது

அறிந்திராத இருண்ட காலத்திலிருந்த ஏதோவொன்று
அது எளிய கதகதப்பான என் வாழ்வை
யாரோ ஒருவரின்
கைகளில் கொடுத்துள்ளது
நேற்று நான் யாராக இருந்தேன்
என்றறியாத ஒருவரின் கைகளில்'

நாம் ஒவ்வொரு புதிய நேசத்துக்குப் போகும்போது இப்படித்தானே 'நேற்று நான் யாராக இருந்தேன்/ என்றறியாத ஒருவரின் கைகளில்'தான் எமது வாழ்க்கையை ஒப்படைக்கத் தயாராகச் செல்கின்றோம். அதுவே காதலின் அழகும் ஆபத்தும் எனக் கூடச் சொல்லலாம்.

பிரசாந்தி 'வசந்தம் வராத காட்டில் பறவையின் ஓர் அழைப்பை' நேரடியாக ஜெர்மனிலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்திருக்கின்றார். ஒருவகையில் வசந்தம் வந்துவிட்ட  தமிழ் எனும் பெருங்காட்டிற்கு, ரில்க என்னும் பறவையை பரவசமாக அழைத்துக் கொண்டு அவர் வந்திருக்கின்றார் எனச் சொல்லலாம்.

அந்தப் பறவையின் நூறு பாடல்களை நாம் ஆறவமர இருந்து இனி இரசிக்கலாம்.

***

தமிழ் சினிமாவில் சாதி எதிர்ப்பின் அழகியல்

Thursday, April 30, 2026

 

தமிழ் சினிமாவில் சாதி எதிர்ப்பின் அழகியல்'  (Anti- Caste Aesthetics in Tamil Cinema) முதல்நாள் நிகழ்வில் சொர்ணவேல் நல்லதொரு உரையை பா.ரஞ்சித்தினதும் ('தங்கலான்', 'சார்பட்டா பரம்பரை'), மாரி செல்வராஜ்ஜினதும் ('கர்ணன்', 'பைசன்') திரைப்படங்களை முன்வைத்து தந்திருந்தார். தமிழ்ச் சினிமாவை தத்துவ, வரலாற்றுப் பின்புலங்களில் வைத்து ஆராயும் உரைகள்/எழுத்துக்களை வாசிப்பது என்பது இப்போது அரிதாகிவிட்டது.

சொர்ணவேல் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராக அமெரிக்காவில் இருந்தாலும், தமிழ்ச்சூழலை முக்கியமாக சினிமாவுக்கு நெருக்கமாகவும் இருக்கின்ற ஒருவர். அதனாலேயே அவரால் இன்றைய தமிழ் சினிமாவை, பல்கலைக்கழப் பின்புலத்தில் வைத்தும் பேசவும் எழுதவும் முடிகின்றது. இப்படி முன்பு 'தமிழியல்' மாநாடுகள் ரொறொண்டோ பல்கலைக்கழகத்தில் நடக்கின்றபோதும் பேராசிரியர்கள் வந்து தமிழ் இலக்கியம்/கலாசார/பண்பாடுகள் பற்றிப் பேசுவார்கள். 

ஆனால் அவர்களுக்கு சமகால தமிழ் இலக்கியப் போக்குகள் குறித்து பெரும்பாலும் தெரியாதிருக்கும். அதனால் அவர்களின் பெரும்பாலான ஆய்வுக்கட்டுரைகள் 'கற்கால'த் தமிழுக்குப் பொருத்தமாக மட்டும் இருந்திருக்கின்றன. அந்தத் தவறை தமிழ்ச்சினிமா சார்ந்து செய்யாத ஒருவராக பேராசிரியர் சொர்ணவேல் இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

 

இன்றைய நிகழ்வின் முடிவில் கேள்வி-பதில் நேரத்தில் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ்ஜின் 'வெற்றிகரமான ஜனரஞ்சக' நோக்கத்திற்காக சிலவேளைகளில் அவர்கள் சொல்ல வந்ததன் அடிப்படை நோக்கங்களை நீர்த்துப் போகச் செய்கின்றனரா என்ற விவாதம் வந்திருந்தது. அதற்கு சொர்ணவேல் கூறிய கருத்து அல்லது அவர் எடுத்திருக்கும் சார்ப்பை ரஞ்சித்தினதும், மாரியினதும் திரைப்படங்களை முன்வைத்து எனக்குரியதாகவும் சொல்வேன். எனினும் அனைத்து கலைப்படைப்புகளும் உரையாடல்களுக்கும், இடைமறிப்புக்களுக்கும் உரியவை என்பதிலும் மாற்றுக் கருத்துக்களுமில்லை.

*

'தமிழ் சினிமாவில் சாதி எதிர்ப்பின் அழகியல்' இரண்டு நாள் நிகழ்வுக்கும் சென்றிருந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு புதிதாக அல்லது அறிந்தவற்றை கேள்விக்குட்படுத்தும்  உரையாடல்களைக் கேட்க முடிந்தது என்னளவில் மகிழ்ச்சியானது.

எப்போதும் சொல்வதுதான், ஏதோ ஒன்றை வாசிக்கும்போதோ அல்லது ஒரு நிகழ்வில் பங்குபெறும்போதோ நாம் அங்கே ஏதேனும் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வதாக இருக்க வேண்டும். அல்லாதுவிடின் அவற்றால் எந்தப் பயனுமில்லை, நேரமும் வீண் விரயம்.

இந்நிகழ்வில் சொர்ணவேலுடன், கங்காவுடன், மற்றும்  பல நண்பர்களுடன் உரையாடியது மனதுக்கு இதமாக இருந்தது. நிகழ்வுகளை நடத்துவது முக்கியமில்லை, அதை எப்படி constructive ஆக நடத்துவது என்பதற்கும் இந்நிகழ்வு நல்லதொரு முன்னுதாரணம்.

***

 

கார்காலக் குறிப்புகள் - 150

Tuesday, April 28, 2026

 

மது நகரில் (Toronto) நூறு நூலகங்கள் இருக்கின்றன. நூறாவது நூலகமாக புதிதாகத் திறக்கப்பட்டது, அதற்கு முன்னர் மாநகரசபையாக இயங்கிய கட்டடத்தின் ஒருபகுதி. இப்படி நூறு நூலகங்கள் இருக்கும் எங்கள் நகரில் நூலகங்கள் சிலதை மூடவேண்டும் என்று ஆட்சியிலிருக்கும் வலதுசாரி மாகாண (மாநில) அரசு முடிவெடுத்தபோது, அதற்கு பெரும் எதிர்ப்பு வந்திருந்தது. அந்த எதிர்ப்பை முன்னெடுத்தவர்களில் முன்னே நின்றவர் கனடாவின் பிரபல்யமான எழுத்தாளரான மார்க்கரெட் அட்வூட். அவரும் எமது நகரில் வசிப்பவர்.

நூறு நூலகங்களில் ஆகக்குறைந்தது 15-20 நூலகங்களில் தமிழ் நூல்களை இரவல் பெறமுடியும். அவ்வாறு அந்த நூலகங்களுக்கு அருகில் இல்லாவிட்டாலும் இணையத்தில் தேவை என்று பதிவு செய்துவிட்டால், அவர் எமக்கு அருகில் இருக்கும் நூலகத்தில் கொண்டுவந்து வைப்பார்கள். நாம் தொலைதூரத்துக்குப் போகாது அருகில் இருந்த நூலகத்திலே இந்த நூறு நூலகங்களில் இருக்கும் எந்தப் புத்தகத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.

 


அண்மையில் ஒரு பெண் (Marci), அவரின் காலமாகிவிட்ட தாயின் நினைவுகளுக்காக எமது நகரில் நூலகங்களுக்கு நடந்து போயிருக்கின்றார். கிட்டத்தட்ட பத்து நாட்களாக முந்நூறு கிலோமீற்றர்கள் நடந்திருக்கின்றார். தாயார் சிறுவயதில் தன்னை இந்த நூலகங்களுக்கு ஒவ்வொரு வாரமும் கூட்டிக் கொண்டு செல்வார். அதுமட்டுமில்லாது அவர் இறக்கும்வரை (50 ஆண்டுகளுக்கு மேலாக) நூலகங்களுக்கு சென்று கொண்டிருந்தவர். அவரின் ஞாபகங்களுக்கு மரியாதை செலுத்த இந்த நூலகங்களுக்கு நடந்து போயிருக்கின்றார்.

நடப்பது மட்டுமில்லாது விரும்பியவர்கள் ஏதேனும் நிதி பங்களிப்புச் செய்யலாம் என்று அது நூலகத்திற்கே செல்லுமென ஒரு குறிப்பிட்ட நிதியைச் சேகரித்தும் கொடுத்திருக்கின்றார்.

இதையேன் இங்கே எழுதுகின்றேன் என்றால் இலங்கையிலோ இந்தியாவிலோ எவ்வளவோ நூலகங்கள் இருக்கின்றன. ஆனால் அதை எந்தளவுக்கு நாங்கள் பயன்படுத்துகின்றோம் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டுமென்பதற்காகவே. என் அனுபவத்தின்படி எங்கள் வீட்டில் நிறைய நூல்கள் இருந்தாலும் நான் பல்வேறு நூலகங்களுக்கு போர்க்காலத்தின் நடுவிலும் போய் வந்திருக்கின்றேன். அவையே ஒருவகையில் யுத்த சூழலைத் தாண்டிய ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

போர் நடந்த/நடந்து கொண்டிருக்கும் சிரியா, பாலஸ்தீனம், லெபனான், ஈரான் போன்ற பகுதிகளில் நூல்களை எந்தளவுக்கு அந்த மக்கள் நேசிக்கின்றார்கள் என்பதை நாம் அறிந்திருப்போம். ஏன் ஈழத்தில் தொடக்க கால போராளிக்குழுக்களுக்கு நூல்களின் வாசிப்பு எவ்வளவு முக்கியமானதாக இருந்திருக்கின்றது என்பதை அன்றைய காலத்தவர்கள் மூலம் தெரிந்திருப்போம்.

ஆக அவ்வளவு கொடுமையான போர்ச்சூழலிலே வாசிப்பு என்பது எவ்வளவு நேசிப்புக்குரியதாக இருக்கும்போது, நாம் அப்படி கடும்சூழலுக்குள் வாழாதபோதும் ஏன் நூலகங்களுக்குச் செல்லத் தயங்குகின்றோம், நமது பிள்ளைகளுக்கு நூலகங்களை அறிமுகப்படுத்துவதில்லை என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவ்வாறான சூழ்நிலைகளை உருவாக்காது, இந்தச் சமூகம் தற்குறிகளையும், ரீல்ஸ் பார்க்கும் ஜென் ஸீக்களையும் உருவாக்குகின்றது என்று புலம்பதில் என்ன நியாயம் இருக்கப் போகின்றது? மேலும் வாசிப்பில் எப்போதும் பெரும்பான்மையானோர் திசை திருப்பவதில்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் வாசிக்கவும் சிந்திக்கவும் விரும்புகின்ற ஒரு சிறுபான்மையினர் ஒவ்வொரு காலத்திலும் இருந்தபடியே இருக்கின்றார்கள்.

அந்த அரிய உயிரினங்கள் அழிந்துபோகாமல் இருப்பதற்காகவேனும் நாம் நூலகங்களிளனதும், வாசிப்பினதும் அருமையை மார்ஸி ஒரு நூறு நூலகங்களுக்கு நடந்துசென்று ஒரு விழிப்புணர்வை தன் தாயாரின் நினைவுகளின் நிமித்தம் செய்தது போல, ஏதேனும் வித்தியாசமாகச் செய்து பார்க்கலாம்

***

 

'புளியடி' சாமுவேலும் இளங்கோவும் - ரவீன்

Sunday, April 19, 2026

 

வின்சென்ட் வான்கோவின் தன்னுருவப் படமொன்று. அதில் அவர் புல்லுத் தொப்பியோடு, தங்க நிறத் (blond) தாடியுமாய் ஒரு கடைக்கண் பார்வையோடு இருப்பார். அந்த ஓவியத்தின் பார்வை திடீரென்று உயிர்பெற்று கண்கள் மூடித்திறக்கின்றன. அவரின் பார்வை போகும் திசையில் முகத்தைத் திருப்பி, எழுந்து நிற்பார்.

​பிறகு அறுவடைக்குத் தயாராக இருக்கும் தங்க நிறத்திலான கோதுமை வயல்களினூடே நடந்து செல்வார். அந்த நிறங்களின் ஒற்றுமையோடு அவரின் சாம்பல் நிறத்திலான மேலங்கியும் அற்புதமாகப் பொருந்திக்கொள்ளும். காற்றில் கோதுமைப் பயிர்கள் அங்குமிங்குமாக அலைபோல் அசைய, வான்கோ நடந்து செல்லும் காட்சியை அவர் இறந்து 130 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவன் கற்பனை செய்து, அதற்கு உயிர் கொடுத்து நினைவு கொள்கிறான்.

அதை வான்கோவால் அறிய முடியும் என்றால், அவர் தனக்குத் தானே, 'இதுவே எனக்குப் போதுமானது' என்று சொல்லிக்கொள்வாரா...?
 
​இந்தக் கதை, இரண்டாம் உலகப்போர் காலத்தில் இங்கிலாந்தில் சட்டத்துறை பயின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் சாமுவேலால் தன்னைப்பற்றிச் சொல்லப்படுகிறது. சாமுவேலுக்குச் சட்டத்துறையில் பணியாற்றுவதைவிட, சிறுகதை எழுதுவதும் பெண்களை ரசிப்பதும் இலக்கிய நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பதுமே மகிழ்ச்சியைத் தருகின்றன.

​அதை இப்போது உயிரோடு இல்லாத சாமுவேல் சொல்வதாக இளங்கோ எழுதுகிறார். இளங்கோ, எழுத்தாளர்களையும் அவர்களின் கதைகளையும் தொடர்ச்சியாக வாசித்துக் கட்டுரைகளாக எழுதுபவர் என்பது நாம் அறிந்ததே.

அண்மையில் 'படுபட்சி' ஒரு புனைவா, அபுனைவா அல்லது தன் வரலாறா? இதில் எழுத்துக்கென்று இருக்கும் 'அறத்தை' எதை வைத்துக் கணிப்பது என்றெல்லாம் விவாதங்கள் எழுந்தன.

​இளங்கோவின் 'புளியடி சாமுவேல்' ஒன்றும் ஒரு புதிய வகை உத்தியல்ல. ஆனால், இக்கதையில் வரும் பாத்திரங்களையும் அவர்களின் உளவியலையும் நன்றாக அறிந்தவர்களால் மட்டுமே அதை உண்மைக்கு நெருக்கமாகக் கொண்டு வர முடியும். அது இளங்கோவிடம் மட்டுமே இருக்கிறது. அவ்வளவுக்கு அவர் அவர்களை வாசிக்கிறார்.

​இருந்தும் ஒரு எழுத்தாளனின் புதினமோ அல்லது சிறுகதையோ அவனுக்குள் எந்தச் சந்தர்ப்பத்தில் கருக்கொண்டிருக்கும் என்பது அந்த எழுத்தாளனுக்கு மட்டுமே தெரிந்த விடயம். அதைக்கற்பனை செய்வதும், அந்தக் கதையையும் எழுத்தாளனையும் சம்பந்தப்படுத்தி ஒரு புதிய கதையை உருவாக்குவதும் மிகவும் சுவாரசியமான விடயம். இந்தச் சுவாரசியத்தை எழுதுபவன், தன்னை முழுமையாகத் தவிர்த்துவிட்டு எழுதிவிட முடியாது. ஆக, புளியடி சாமுவேலுக்குள் இளங்கோவும் இருக்கிறார்.

​'புளியடி சாமுவேல்' என்ற சிறுகதையில் இளங்கோ என்று ஒரு பாத்திரம் வருகிறது. ஆனால், இந்தச் சிறுகதையை எழுதிய இளங்கோ அல்ல அவர். இளங்கோ, சாமுவேலுக்குள்தான் இருக்கிறார். இது தவிர்க்க முடியாதது.
​கற்பனைகளை நம்ப வைப்பதற்காக உண்மைச் சம்பவங்களைச் சேர்த்து எழுதுவதும், உண்மைச் சம்பவங்களை வலுவாக்கக் கற்பனைகளைச் சேர்ப்பதும் எழுத்துலகில் புதியதல்ல. இதில் இரண்டாவது உத்தியை இளங்கோ தனது வாசிப்பு அனுபவங்களால் சிறப்பாக்க முயற்சித்துள்ளார்.

கட்டுரைகள் போலல்லாமல், இந்த கதையாக சொல்லும் உத்தியால் நாம் அறியாத எழுத்தாளர்களையும் எழுத்துகளையும் மறக்க முடியாத அனுபவங்களாக மாற்ற முடியுமென்று நான் நம்புகிறேன்.

​சிறுகதையில் 'புளியடி' சாமுவேல்:
​'நான் இறந்து ஒரு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொருவன் என்னை ஞாபகம் வைத்து ஒரு கதையை நனவிடை உத்தி முறையில் எழுதிக் கொண்டிருப்பானா?' என்று கேட்பார்.

​'எழுத்துதானே என்னை இன்னும் உயிர்ப்புடன் காலத்தோடு கரைந்து போகாமல் வைத்திருக்கின்றது. அதில் நான் தோற்றுப்போனவனாக, தொடர்ச்சியாக எழுதாதவனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால், முப்பது கதைகள் மட்டும் எழுதிய ஒருவனை இந்தச் சமூகம் மறக்காமல், அவன் பிறந்த நூற்றாண்டிற்குப் பிறகு ஞாபகத்தில் வைத்திருப்பது வியப்பானதுதானே!'


​இதற்குள் இருக்கும் சாமுவேல் இளங்கோவால் கட்டமைக்கப்பட்டவர். கதையில் பாத்திரமாக வரும் இளங்கோவிடம், 'சாமுவேலிடம் உனக்கு அதிகம் பிடித்தது எது?' எனக் கேட்டால், உடனேயே 'வேறென்ன, பெண்களை ஆறவமர ரசிக்கும் அவரின் அந்த அழகியல்தான் என்னை அதிகம் கவர்ந்தது’ என்று ஒருகணம் கூடத் தயங்காமல் சொல்வான். அதற்கு, 'என்னை இவ்வாறாக நினைவு கொண்டால் கூடப் போதுமானதுதான்' என்பார் சாமுவேல்.

​உண்மையில் அந்தச் சாமுவேல் இவ்வளவு இலகுவாகத் திருப்திப்படக்கூடியவரா? அல்லது 'நான் அவ்வளவு மலிவானவனா…?' என்று அதிருப்தி அடையக்கூடியவரா என்பது யாருக்குமே தெரியாது. ஒரு மனிதனின் மனநிலை பல காரணிகளால் நீரைப் போல் உருக்கொள்கிறது.

​ஆனால், 1515-ஆம் ஆண்டில் வரையப்பட்ட மோனாலிசாவின் அந்த மௌனப் பார்வையும், அவளது உதடுகளுக்குள் மறைந்திருக்கும் ஒரு மெல்லிய புன்னகையும் இப்போது AI மூலம் மெதுவாக உயிர்பெறச் செய்து, தன் கண்களைச் சிமிட்டியபடி தனது முகத்தை நம் பக்கம் திருப்பிப் புன்னகைக்கிறாள்.

அதேபோல், 1920-களில் பிறந்த சாமுவேலை இப்போது உருவகப்படுத்துவது மிக அவதானமிக்க விடயம். ஏனெனில், இது அகம் சார்ந்து . அந்தக் கற்பனைப் பாத்திரம் உண்மையில் வாழ்ந்த ஒருவரைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற பொறுப்புடன் உருவாக்கப்படுகிறது.
அந்தப் பொறுப்பு 'புளியடி சாமூவேலில் புலப்படுகிறது.

***

நன்றி: ரவீன்

'புளியடி' சாமுவேல்

Saturday, April 18, 2026

 

நான் இங்கிலாந்துக்குப் போவதற்கு ஒரு காரணம் இருந்தது. ஆனால் ஏன் இலங்கைக்கு மீண்டும் வரத் துடித்தேன் என்பதற்கு என்ன காரணம் என்று இப்போதும் யோசித்துக் குழம்புவதுண்டு. சட்டம் படிப்பதற்காக இங்கிலாந்துக்குப் போனபோது எனக்கு இருபத்து மூன்று வயது. இருபதுகளுக்கு உரிய எல்லாக் குறும்புகளும் எனக்குள் அப்போது பொங்கிப் பிரவாகித்தபடி இருந்தது. சட்டப் பாடங்களைப் படிப்பதைவிட பெண்களை இரசிப்பதும், புத்தகங்களை வாசிப்பதும் எனக்கு மிகப் பிடித்தமாக இருந்தது.


சட்டத்தைப் படித்துக் கொண்டிருந்தபோதே எனக்கு ஒரு புத்தகக் கடையில் வேலை கிடைத்திருந்தது. அப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கதைகளை ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியிருந்தேன். அவை இங்கிலாந்தில் வெளியாகிய சிறுபத்திரிகைகளில் பிரசுரமாகவும் தொடங்கியது. 
 

ஒரு சனிக்கிழமை, நான் புத்தகக் கடையில் தனியே வேலை செய்து கொண்டிருந்தபோது இளம்பெண் ஒருத்தி புத்தகம் வாங்க வந்தாள். நடையில் ஒருவித அலட்சியமும், பார்வையில் ஒருவித குறுகுறுப்பும் அவள் வசம் இருந்தது. அப்படி வந்தவள், சமகாலத்து சிறந்த சிறுகதைப் புத்தகம் ஒன்றைத் தரும்படி கேட்டாள். நான் நிறையப் புத்தகங்களை புத்தக அடுக்குகளில் இருந்து எடுத்துக் கொடுத்தபடியிருந்தேன். அவளோ ஒவ்வொரு புத்தகத்தையும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி நிராகரித்துக் கொண்டிருந்தாள். இறுதியில் எனக்குப் பிடித்த ஹெமிங்வேயின் கதைத் தொகுப்பையே வேண்டாம் என்று அவள் மறுத்தபோது எரிச்சல் எனக்குக் தலைக்கேறி விட்டது. 'உனக்கெல்லாம் வாசிப்பு ஒரு கேடா?' என்று அவள் ஒரு வாடிக்கையாளர் என்பதைக் கூட மறந்து கோபத்தில் கத்திவிட்டேன்.

அப்போதுதான் அவள் உண்மையான காரணத்தைச் சொன்னாள்; 'நான் உங்களின் சில கதைகளை சஞ்சிகைகளில் வாசித்திருந்தேன், அதனால்தான் உங்களைத் தேடி இங்கே வந்தேன்'. நான் அவளை என் அலுவலக அறைக்குள் வந்து அமரும்படி சொல்லிவிட்டு, பக்கத்துக் கடையில் அருந்துவதற்கு எங்கள் இருவருக்கும் சூடான கோப்பிகளை எடுத்து வந்தேன். அந்தக் கஃபேயில் இருந்த பெண், 'என்ன இந்தச் சனிக்கிழமையும் ஒரு பெண்ணோடா?' என்று கொஞ்சம் எள்ளலாகக் கேட்டாள். நானோ 'எல்லாச் சனிக்கிழமைகளும் இப்படி ஆசிர்வதிக்கப்படுவதில்லை, பொறாமை வேண்டாமே' என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு வந்தேன்.

வந்திருந்தவள் என் கதைகளைப் பற்றி உரையாட ஆவலாகவும், நான் அவளை வாசிக்க விருப்பமுடையவனாகவும் இருந்தேன். அரை மணித்தியாலத்துக்குள்ளேயே அவளின் சம்மதத்துடன் புத்தக அடுக்கின் மறைப்பில் அவளைச் சாய்த்து முத்தமிட்டு, நான் சிறந்ததொரு குறுங்கதையை அக்கணமே எழுதி முடித்தேன். இது எமக்கிடையே மட்டும் எழுதப்பட்ட அந்தரங்கமான காவியம். அவளே எனது இலண்டன் காதலியாக பின்னாளில் மாறியிருந்தாள். இந்த அனுபவத்தை எப்படியாவது பதிவு செய்ய வேண்டுமென்று விரும்பியபோதுதான் நான் எழுதியது ‘திரு.மூன்’ என்கின்ற குறுநாவல்.

*

இங்கிலாந்திலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் திரும்ப வந்து எங்கள் பூர்வீக வீட்டில் நான் வசித்ததை அனைவரும் அறிந்திருப்பீர்கள். எனக்கு இங்கிலாந்திலேயே நன்றாக மது அருந்தும் பழக்கம் வந்துவிட்டது. பகல்வேளையில் யாரேனும்  யாழ் மத்தியகல்லூரி மாணவனின் சைக்கிளை எடுத்துக்கொண்டு போய் பாரில் ஒரு ஷொட் எடுக்காவிட்டால் ஏதோ சூரியனுக்கு கோபம் வந்து என்னை எரித்துவிடுவது போல உடல் பரபரக்கத் தொடங்கிவிடும். அதனால் நான் ஒருபோதும் சூரியனைக் கோபப்படுத்தியதில்லை. 

மாலை நேரங்களில் நான், ஏ.ஜே.கனகரட்ன, டொமினிக் ஜீவா என எல்லோரும் பறங்கித் தெருவிலுள்ள பிரீமியர் கஃபேயில் சந்தித்துப் பேசுவோம். உங்களுக்குத் தெரிந்திருக்கும் நான் இங்கிலாந்தில் இருந்தபோது ஒரு வெள்ளைக்காரப் பெண்ணை விரும்பியிருந்தேன் என்று. அன்று இலண்டனில் ஜேர்மன் விமானங்கள் குண்டுவீசும் அலறல்களுக்கிடையிலும் நாங்கள் நேசித்துக் கொண்டிருந்தோம். ஒருமுறை நாங்கள் தங்கியிருந்த அடுக்குமனைக்கு அருகில் குண்டு விழுந்தபோது பெற்ற அனுபவத்தை 'அபாயச்சத்தம்' என்ற கதையில் எழுதியிருந்தேன்.

என்னதான் என்னை இலண்டனுக்கு பெற்றோர் அனுப்பி சட்டம் படிக்க வைத்தாலும், அவர்களுக்கு கொழுத்த சீதனத்தோடு நானொரு தமிழ்ப் பெண்ணைக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று ஒரு கனவிருந்தது. இலண்டன் பெண்ணுடனான எனது காதல் வீட்டுக்குத் தெரிந்தவுடன், அவர்கள் எனக்குச் சொல்லாது நேராகவே என் காதலிக்கு கடிதம் அனுப்பி தங்கள் விருப்பமின்மையைத் தெரிவித்துவிட்டார்கள். அவளும் இதற்குப் பிறகு சரி வராது என்று என்னுடனான உறவை முறித்துவிட்டாள்.

இரண்டாம் உலக மகாயுத்தம் முடிந்து, கொஞ்சம் அமைதியும் வந்தபின் நான் இங்கிலாந்திலேயே வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கலாம். அந்தக் காலத்தில் என் கதைகள் நிறையச் சஞ்சிகைகளில் அங்கே வெளிவரத் தொடங்கியிருந்தன. என்னைவிட ஐந்து வயது மூத்தவரான கவிஞர் எம்.ஜே.தம்பிமுத்துவும் அப்போது இங்கிலாந்தில் பிரபல்யமாக இருந்தார். கவிதைக்கென்று ஒரு சஞ்சிகையை இங்கிலாந்தில் அவர் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

தம்பிமுத்துவுக்குக் கிடைக்காத ஓர் ஆசிர்வாதம் எனக்கு அப்போது கிடைத்திருந்தது. வர்ஜீனா வூல்ஃப், அவரின் கணவர் லெனாட் வூல்ஃப் ஆகியோரின் நட்புத்தான் அது. அவர்கள் தொடங்கிய 'ப்ளூம்ஸ்பெரி' இலக்கிய அமைப்பிலும் நான் இருந்திருக்கின்றேன். அந்தக் காலத்தில் பிரிட்டனின் அடிமைத்தனம், கீழைத்தேய காலனித்துவ நீக்கம் குறித்தெல்லாம் நாங்கள் நாட்கணக்காய் மது அருந்தியபடி, சிகரெட் புகைத்தபடி விவாதித்திருக்கின்றோம். அப்போதுதான் எனக்கு இந்தியாவின் முல்க் ராஜ் ஆனந்த் நல்லதொரு நண்பரானார். இவையெல்லாம் இந்தியாவும், இலங்கையும் பிரிட்டன்காரர்களிடமிருந்து விடுதலை பெறமுன்னர் நிகழ்ந்த சம்பவங்கள்.

சிலவேளைகளில் என் கதைகளை வர்ஜீனா வூல்ஃப் எடிட் செய்து கூடத் தருவார். ஆனால் நான் பங்குபற்றிய ப்ளூம்ஸ்பெரி அமைப்புப் பற்றி ஒருமுறை என்னிடம் யாரோ ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, 'இந்த அமைப்பு முற்போக்கானது. இது காலனித்துவ நீக்கல் பற்றிய ஆரம்ப உரையாடலுக்கு ஏற்ற அமைப்புத்தான். ஆனால் இந்த அறிவுஜீவிகளால் நீண்ட தொலைவுக்குப் பயணித்துப் போகமுடியாது' என்று சொன்னேன். இப்படிப் பேசியது வர்ஜினியாவுக்கும் அவரின் கணவருக்கும் அவ்வளவு பிடிக்கவில்லை என்பது தெரியும். அதற்காக உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா என்ன?

ஒருமுறை நான், எஸ்.பொ, ஏஜே என பறங்கித் தெருவில் இருக்கும் பிரீமியர் பாரில் மதுவருந்திக் கொண்டிருந்தபோது, எஸ்.பொ, ஏஜேவைப் பார்த்து, 'எப்போது நீங்கள் திருமணம் செய்யப் போகின்றீர்கள்?' எனக் கேட்டார். அதற்கு ஏஜே 'சாமுவேலைப் போன்ற ஒருவனே இந்த யாழ்ப்பாணச் சமூகத்துக்குப் போதும், நானும் யாரையேனும் கல்யாணம் செய்து மற்றவர் வாழ்வை பாழாக்கக் கூடாது' என்று என்னைச் சுட்டி நகைச்சுவையாகச் சொன்னார். நான் ஏஜேவைப் பார்த்து, ‘ஏஜே நீங்கள் ஏதோ ஒரு காதல்  தோல்வியால்தான் திருமணம் வேண்டாமென்று சொல்கின்றீர்கள் என்கின்றார்களே, உண்மையா? எனக் கேட்டேன். ஏஜே தன் இளந்தாடி நனைக்க பியரை அருந்திவிட்டு மெளனத்தின் ஆழத்துக்குப் போயிருந்தார்.

பதினான்கு வருடங்கள் இலண்டனில் கழித்துவிட்டு, எனது முப்பத்தேழாவது வயதில் நான் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பியிருந்தேன். எனக்குக் கல்யாணமோ என் நாற்பந்தைந்து வயதுக்குப் பிற்பாடுதான் நடந்தது. இதைப் பார்த்துவிட்டுத்தான் ஏஜே அப்படிச் சொல்லியிருக்க வேண்டும். எனக்கும் ஏஜேவுக்கும் ஒரு இருபது வயதுகள் வித்தியாசமாவது இருக்கும். ஆனால் நாங்கள் வயது வித்தியாசம் இல்லாமல் மிக நெருக்கமான நண்பர்களைப் போலப் பழகினோம்.

உங்களுக்கு முன் ஒரு விடயத்தை ஒத்துக்கொள்வதில் எனக்கு அவமானமில்லை. எனக்கு பெண்களைப் பார்த்து இரசிப்பதென்றால் கொள்ளைப் பிரியம். எனது மச்சான் கூட நகைச்சுவையாக பெண்களை இரசிப்பதைத் தவிர்ப்பதற்காக இவனை நாங்கள் அடிக்கடி வீட்டுக்குள் மறைத்து வைத்திருப்போம் என்று சொல்வான். அந்தளவுக்கு நான் அந்த விடயத்தில் பலவீனமாக இருந்தேன். எனக்கே இது அவ்வளவு நல்லதில்லை என்று தெரிந்தாலும் இதில் இருந்து வெளியேற முடிந்ததில்லை. ஒரு மலரை அதைத் தொந்தரவுபடுத்தாது அப்படியே இரசிப்பதில் என்ன தவறிருக்கின்றதோ தெரியவில்லை.

எனக்கு எழுதுவதும் வாசிப்பதும் என்னிடமிருந்து பிரிக்கமுடியாத கர்ணனின் கவசகுண்டலம் மாதிரி இருந்தது. அதனால் எனக்கு வக்கீல் வேலைக்குப் போவதில் அவ்வளவாக விருப்பம் இருக்கவில்லை. மேலும் பகல் வேளைகளிலே நன்றாக மதுவை அருந்திவிட்டு எப்படி நீதிமன்றத்துக்குப் போவது? ஒருநாள் ஏதோ ஒரு சின்ன குற்றத்துக்காக நான் ஒரு வழக்கறிஞர் என்றும் பார்க்காது என்னைக் குற்றவாளிக் கூட்டில் ஏற்றிவிட்டனர். அதற்கு முன்னர்தான் கொஞ்சம் ‘பிறிமியர் பார்’ பக்கம் எட்டிப் பார்த்துவிட்டு வந்திருந்தேன்.

தீர்ப்பு வழங்கும் நீதிபதி வந்துவிட்டார். 'நீங்கள் செய்த குற்றம் என்ன?' என்று கேட்டபோது நான் ஷேக்ஸ்பியரின், வெனிஸ் நகரத்து வணிகனில் வரும், போர்ட்டரின் தனிமையுரையை 'The quality of mercy is not strain’d, /It droppeth as the gentle rain from heaven..” என முழுமையாகச் சொல்லத் தொடங்க, நீதிபதி தலையில் அடித்தபடி யார் இவன் என்று என்னைப் பார்த்துக் கேட்டார். நீதிமன்றத்தில் எனது வரலாற்றை மட்டுமில்லை, நீதிபதியாக இருந்த என் தந்தையாரின் பூர்வீகமும் சொல்லப்பட, 'அந்த நல்ல மனுசனுக்கு இப்படியொரு மகனா?' என்று அதிர்ச்சியடைந்தபடி, இன்னொருமுறை நீதிமன்றப் படி ஏறக்கூடாதென்று எச்சரித்து அனுப்பி வைத்திருந்தார்.


*

பார்வதி என்கின்ற ஓர் இந்துப்பிள்ளை புளியடிப் பாடசாலை விடுதியில் தங்கிப் படிக்கத் தொடங்குவார். அந்தப் பிள்ளைக்கு ஜீசஸின் உருவப்படத்தை விடுதி வார்டன் அங்கேதான் முதன்முதலில் அறிமுகப்படுத்துவார். 'ஜீசஸ் பாவிகளாகிய எங்களை இரட்சிப்பதற்கென உதித்தவர். எங்களைப் பாவங்களிலிருந்து மீட்பதற்காக அவர் சிலுவையில் மரித்தவர்' என்று சொல்லிவிட்டு, ''குழந்தையின் உலகந்தான் கடவுளின் ராஜ்ஜியம் என்று வார்டன் பார்வதியிடம் கூறுவார்.

அத்தோடு நிற்காமல் ஜீசஸிடந்தான் நீ இனி எப்போதும் போகவேண்டும், உனக்கு அவர்தான் அடைக்கலம் தருவாரென்று அந்த வார்டன் சொல்லியும் கொடுப்பார். பார்வதிக்கு எல்லாமே குழப்பமாக இருக்கும். ஒருவரிடம் அடைக்கலம் அடையவேண்டுமென்றால் அவரை நான் நேரில் சந்திக்க வேண்டுமே, எப்போது ஜீசஸ் பாடசாலைக்கு வருவார் என்று அந்தப் பிள்ளை அப்பாவித்தனமாய்க் கேட்கும். 'இதென்ன முட்டாள்தனம், ஒரு கிறிஸ்தவப் பிள்ளைக்கு இதெல்லாம் நன்கு தெரியும். நீ நல்லவிதமாக உனது பெற்றோரால் வளர்க்கப்படவில்லை' என்று வார்டன் திட்டுவார்.

பிள்ளைக்கு அதற்குப் பிறகும் சந்தேகம் தீராது. 'வார்டன் அக்கா, ஜீசஸ் கடவுளென்றால், அவரின் மனைவிகள் எங்கே? படத்தில் அவர்களைக் காணவில்லையே?' என்று அந்தப் பிள்ளை கேட்கும். 'என்னுடைய கர்த்தாவே, இப்படி கேட்டு மிகப்பெரும் தெய்வநிந்தனையை நீ செய்துவிட்டாய்' என்று அந்த வார்டன் ஜீசஸின் உருவப்படத்தின் முன் மண்டியிட்டு பாவமன்னிப்புக் கேட்கத் தொடங்குவார். இந்தக் கதையில் உள்ளோடும் நகைச்சுவை எனக்கு மிகப் பிடிக்கும் என்று ஒருநாள் எஸ்.பொ என்னுடைய 'முள்' கதையைச் சிலாகித்துப்  பேசினார்.

அந்தக் கதையின் தொடர்ச்சியில், 'நான் என்ன தவறு செய்தேனென்று தெரியவில்லையே, உங்கள் கடவுளுக்கு எத்தனை மனைவிகள் இருக்கின்றார்களென்று கேட்டது அவ்வளவு பெரும் குற்றமா? இதனை ஏன் கேட்டேனென்றால் எங்கள் கடவுளுக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றார்கள்' என்று அந்தப் பிள்ளை கேட்கும். அதற்கு விடுதி வார்டன் 'அது எந்தக் கடவுள்?' என்று வினாவுவார். 'வேறு யார்? எங்களின் முருகப் பெருமான்தான்' என்று அந்தப் பிள்ளை சொல்வதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும், இதில் சாமுவல் இரண்டு மதங்களையும் விமர்சனத்துக்குள்ளாக்கின்றார் என்று ஏஜே இந்தக் கதையை விவரித்துப் பேசியதும் எனக்கு நன்கு நினைவில் இருக்கின்றது.

எஸ்.பொவும், ஏஜேவும் என் கதைகளை என் முன்னிலையில் விதந்து பாராட்டியது கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், அவர்களின் எழுத்துக்கள் மீது ஆழ்ந்த மதிப்பு இருந்ததால், இதைவிட எந்த புகழாரமும் என் எழுத்துக்குத் தேவையில்லை என்ற மிதப்பு, அவர்கள் பேசியபோது எனக்குள் செம்மதுவைப் போல ஊறியது என்பதுவும் உண்மைதான்.

இலங்கை ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை அடையாத காலத்தில், இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது இங்கிலாந்தில் நான் வசித்திருந்தேன். அங்கிருந்து வெள்ளைக்காரர்கள் பார்த்த காலனித்துவ இலங்கையையோ அல்லது இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் 'நாசூக்காய்’ சொன்ன உயர்குடிகளின் கதைகளையோ ஒருபோதும் நான் எழுத விரும்பவில்லை. இப்போது பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் விதந்து பேசிக் கொண்டிருக்கும் என் கதையான ''தேர்ந்த ஒப்பாரி வைப்பவர்களில்’ ஆதிக்கச்சாதியின் திமிரைத்தான் அப்போதே கேள்வி கேட்டு எழுதியிருந்திருப்பேன்.

ஒருமுறை இளங்கோ கூட கேட்டான். 'நான் ஒன்பதாம் வகுப்பில் ஆங்கில இலக்கியம் படிக்கும்போது ஆர்.கே.நாராயணனின் 'தக்கூரின் கிணறு' என்றொரு கதையை பாடப்புத்தகத்தில் படித்தேன். அதைவிட நெருக்கமான, நமது மண்ணில் நிகழும் சாதிக் கொடுமையை இந்த "தேர்ந்த ஒப்பாரி வைப்பவர்கள்" கதை தருகின்றதே, ஏன் இவர்கள் இதைச் சேர்க்கவில்லை' என்று கேட்டான். ‘இந்தக் கதையைப் பாடத்தில் வைத்தால், யாழ்ப்பாணத்தவர்களின் பெருமையை நினைத்து நாடு முழுதும் சிரித்துவிடுமே, அந்த அவமானத்தில் என் கதையைச் சேர்க்கவில்லையோ தெரியாது' என்று சொல்லிப் புன்னகைத்தேன்.

இளங்கோ, எனது எழுத்து வாழ்க்கை இரண்டு தமிழ் எழுத்தாளர்களைத் தனக்கு நினைவுபடுத்துகிறது என்பான். நான் எழுதிய முப்பது கதைகளால், ஒருவகையில் தமிழில் இருபத்து நான்கு கதைகளை மட்டுமே எழுதிய மெளனி தனக்கு ஞாபகத்துக்கு வருகின்றதென்பான் அவன். அதுபோலவே தனது சொந்த நாடு திரும்பியபின் சிறந்த இரண்டு படைப்புக்களை எழுதிவிட்டு பிறகு வேறெதுவும் எழுதாது மறைந்து போன ப.சிங்காரத்தைப் போல, நானும் யாழ்ப்பாணம் திரும்பி கொஞ்சக் காலம் எழுதிவிட்டு பின்னர் ஒன்றுமே எழுதாமல் உறங்குநிலைக்குப் போனதும் ஒன்றெனப் போல இருக்கின்றது என்பான்.

உண்மையில் எனக்கு தமிழில் அவ்வளவான விரிந்த வாசிப்பு இல்லை. ஒருமுறை வாசகர் ஒருவரோடு நான் மதுவருந்திக் கொண்டிருந்தபோது, 'நீங்கள் திருவள்ளுவரைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?' எனக் கேட்டேன். பிறகு 'தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்/தோன்றலின் தோன்றாமை நன்று' என்ற குறளைச் சொல்லி பொருள் என்னவெனக் கேட்டேன். அதன் பொருளை அந்த வாசகர் விரித்துச் சொன்னபோது, நான் 'இக்குறள் நாஸிசத்தை அல்லவா பிரச்சாரம் செய்கிறது. ஹிட்லருக்கும், வள்ளுவருக்கும் இந்த விடயத்தில் பெரிதாக வித்தியாசமில்லை' என்று சொன்னேன். அந்த வாசகருக்கு அது அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் நான் இரண்டாம் உலகமகாயுத்தத்தை நேரடியாக இங்கிலாந்திலிருந்து பார்த்தவன். ஒரு தனிப்பட்ட மனிதனான ஹிட்லரின் பேராசையால் எத்தனை இலட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக இறந்திருக்கின்றார்கள். புகழ் என்பதே மாயை. அது ஒருவரின் தன்முனைப்பை இன்னுமின்னும் உச்சத்தில் கொண்டுபோய் இறுதியில் பாதாளத்தில் தள்ளிவிடும் என்பதற்கு வரலாற்றில் எத்தனையோ பேர் உதாரணங்களாக இருக்கின்றனர் அல்லவா?

இந்த வாசகரை நான் முதன்முதலில் சந்தித்ததும் நினைவில் இருக்கிறது. ஏஜேயும், ஜீவாவும் பக்கத்தில் இருக்க, ஒரு சுவரில் காலை வைத்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். ஜீவாதான், வருகின்றவர் சாமுவேல், காலை ஒழுங்காக எடுத்து விட்டிட்டு, சிகரெட்டைத் தூர எறி என்று சொல்லியிருக்கின்றார். இவன் வேண்டா வெறுப்பாக இரண்டையும் செய்வதை நான் தூரத்தில் வரும்போதே அவதானித்தேன். எனக்கு வெளியில் எங்கு போவதென்றாலும் நேர்த்தியாக ஆடை அணிந்து போகவேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். அதிலும் யாழ்ப்பாண வெக்கைக்கு தொடர்பேயில்லாத ஒரு ஸ்காப்ஃவை என் கழுத்தில் சுற்றிக் கொண்டுதான் வெளிக்கிடுவேன்.

அன்று யாழ் நகரசபை முன்றலில் ஏதோ கார்னிவல் நடப்பதாய் விளம்பரம் வந்திருந்தது. நாங்கள் அனைவரும் இதற்காகத்தான் போய்க் கொண்டிருந்தோம். அந்த மக்கள் திரளுக்குள் தொலைந்துபோகாமல் நாங்கள் ஓரமாக நடைபாதையின் அருகில் ஒதுங்கி நின்றோம். நான் வழமை போல, போகின்ற, வருகின்ற பெண்களை கண்களால் ஆராதித்தபடி இருந்தேன்.  சட்டென்று, 'புனிதரோ, அல்லாதவரோ அவர்களுக்கும் ஓர் இதயம் இருக்கின்றது என்கின்ற விசுவாசம் நம்மவர்களுக்கு இருக்குமானால் அழகினை இரசிப்பதில் தவறொன்றுமில்லை' என்று சொன்னேன். 'உண்மைதான், அப்படி இரசிக்கலாம், ஆனால் அது பெண்களுக்கு இடைஞ்சல் கொடுப்பதாக இருக்கக் கூடாது' என்று அந்த வாசகர் சொன்னார். 'ஆ, அதேதான், சரியாகச் சொன்னீர்கள், நீங்கள்தான் என்னை நன்றாகப் புரிந்துகொண்ட வாசகர்' என்று அவரின் முதுகைத் தட்டி நான் பாராட்டினேன்.

*

எனது கடைசி பத்து வருடங்கள் மிகக் கடுமையாக இருந்தது. நான் குணப்படுத்த முடியாத ஒரு நோயோடு போராட வேண்டியிருந்தது. ஏஜே தனித்து வாழ்ந்ததால், அவரை எப்படி கிருஷ்ணகுமார்  குடும்பம் கைவிடாது காத்து நின்றதோ, அப்படிதான் என்னையும் என் மனைவி வைத்துக் காப்பாற்றினார். நான் திருமணம் ஆனவுடன் யாழ் நகரை விட்டு இன்னொரு தொலைவான நகருக்கு இடம்பெயர்ந்திருந்தேன். எங்கள் பூர்விக வேம்படிப் பாடசாலை அருகில் இருந்த -  என் கதைகளில் எதற்கு வீண் பிரச்சினை என்று இதைப் புளியடிப் பாடசாலை என்று மாற்றியிருப்பேன் - வீட்டை விட்டு, மனைவி கட்டிய வீட்டில் நாங்கள் புதுமனை புகுந்திருந்தோம். அங்கே நண்பர்கள் வருவது குறைவாக இருக்கும். பக்கத்தில் நிம்மதியாக இருந்து மது அருந்துவதற்குப் பெரிதாக நல்லதொரு பாரும் இருக்கவில்லை.

அத்தோடு என் கண்களின் பார்வையும் மங்கி ஒருவித இருளுக்குள் நான் அமிழத் தொடங்கியிருந்தேன். பார்வையை முற்றாக இழக்க முன்னர், எப்படியாவது என் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பை வெளியிட வேண்டுமென்று தொகுக்கப்படாத கதைகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டிருந்தேன்.

என் உடல்நிலை அறிந்து ஏஜேயும் ஜீவாவும் ஒருநாள் வந்திருந்தனர். இரண்டாவது தொகுப்பை வெளியிட இரண்டு பேரும் தங்களால் இயன்றளவு உதவுவதாக உறுதியளித்தனர். என் மனைவியும் அதை விரைவில் வெளியிடவேண்டும் என்று விரும்பியிருந்தார். புத்தகச் செலவை எப்படியேனும் மனைவி ஏற்றுக்கொள்கின்றேன் என்றபோதும், நான் தான் ஜீவாவிடம், 'இந்த வீட்டுக்காக வாங்கிய கடனை மட்டுமில்லை எனக்கான மருத்துவச் செலவுகளையும் அவள்தான் அடைத்துக் கொண்டிருக்கின்றாள், பாவம் அவள்' என்று சொன்னேன். கடைசியில் என் புதுக் கதைகளின் தொகுப்பு வந்தபோது, அதை என் மனைவிக்குத்தான் சமர்ப்பித்திருந்தேன்.

ஒருமுறை கொழும்பிலிருந்து வெளிவரும் ஏதோ ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் யாரோ  என்னைப் பற்றி எழுதியபோது, 'சாமுவேலுக்கு இப்போது கிறுக்குப் பிடித்துவிட்டது' என்று எழுதியிருந்தார்கள். நான் அதை வாசித்தவுடன் சிரித்துவிட்டேன். 'இப்போதுதான் கிறுக்குப் பிடித்தது என்பது தவறு, எப்போதுமே நான் கிறுக்கன்' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். இல்லாவிட்டால் ஒருவன் இங்கிலாந்தில் சட்டத்தில் பட்டம் பெற்றபோதும், எழுத்துத்தான் வாழ்க்கையில் பெரும் விடுதலை என்று எல்லாவற்றையும் துறந்து எழுதப் போயிருப்பானா? நல்லதொரு வாழ்க்கை வேண்டுமென்றால் இங்கிலாந்திலேயே தங்கியிருக்க மாட்டேனா. இலங்கைக்கு வந்த பிறகாவது ஒழுங்காக வழக்கறிஞராகப் பணியாற்றி மற்றவர்களைப் போல ஓர் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்திருக்க மாட்டேனா என்ன?

ஆனால் பாருங்கள். நானொரு வழக்கறிஞராகவோ, இல்லை அத்தொழிலில் தேர்ந்த என் தந்தையைப் போல ஒரு நீதிபதியாகக் கூட வந்திருக்கலாம். அப்படி வந்திருந்தால் நீங்கள் என்னை நினைவில் வைத்திருப்பீர்களா? நான் இறந்து ஒரு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொருத்தன் என்னை ஞாபகம் வைத்து ஒரு கதையை நனவிடை உத்தியில் எழுதிக் கொண்டிருப்பானா?

எழுத்துத்தானே என்னை இன்னும் உயிர்ப்புடன் காலத்தோடு கரைந்துபோகாது வைத்திருக்கின்றது. அதில் நான் தோற்றுப்போனவனாக, தொடர்ச்சியாக எழுதாதவனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் முப்பது கதைகள் மட்டும் எழுதிய ஒருவனை இந்தச் சமூகம் மறக்காமல் அவன் பிறந்த நூறாண்டுக்குப் பிறகு ஞாபகத்தில் வைத்திருப்பது வியப்பானதுதானே.

இறுதியில் என் நேசத்துக்குரிய ஏஜே எனக்காக எழுதிய அஞ்சலி வார்த்தைகளோடு முடிக்கலாமென நினைக்கின்றேன். 'சாமுவேல் செய்த தவறு அவர் தாயகம் திரும்பி வந்ததுதான் என்று நான் சிலவேளைகளில் நினைப்பதுண்டு. ஆனால் தன்னல நோக்கோடு பார்க்கையில் அத்'தவறு' எங்களுக்கு எவ்வளவு ஆதாயமாயிற்று' என்று சொல்லியிருப்பார். ஏஜே ஒரு புனிதமான, யாரையும் காயப்படுத்தாத ஆத்மா. அவனின் இந்தச் சொற்ப வார்த்தைகள் நான் கல்லறைக்குள் நிம்மதியாக உறங்கப் போதும்.

என் கதைகளில் இலங்கையைப் பின்னணியாக வைத்த கதைகளை விட, இங்கிலாந்தைப் பின்புலமாக வைத்து எழுதிய கதைகள்தான் தனக்கு அதிகம் பிடிக்கும் என்கின்ற இளங்கோவிடம், 'சாமுவேலிடம் உனக்கு அதிகம் பிடித்தது' என்னவெனக் கேட்டால், உடனேயே 'வேறென்ன, பெண்களை ஆறவமர இரசிக்கும் அவரின் அந்த அழகியல்தான் என்னை அதிகம் கவர்ந்தது’ என்று ஒருகணம் கூட தயங்காமல் சொல்வான். என்னை இவ்வாறாக நினைவு கொண்டால் கூட போதுமானதுதான்.

சிலவேளைகளில் இந்த வாழ்க்கை என்பது சின்னஞ்சிறு அழகிய தருணங்களின் கலவையால் காவியச் சுவையின் உச்சத்தை அடையக் கூடியது என்பதைக் கண்டிருப்பீர்கள். அதைத்தான் என் எழுத்துக்களின் உள்ளே ஓடும் நதியாக மறைத்தும் வைத்திருந்திருக்கின்றேன். ஒரு காடோ காதலோ எந்தக் கணத்தில் முழுதாக மலர்கின்றது என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அந்த முகிழ்தல் என்பது ஓர் அற்புதம். நம் அகமெங்கும் அந்த உணர்வுப்பிரகாரம் இதழ்களாய் விரிக்கும் அனுபவத்துக்காகத்தான் நாங்கள் மனிதராகப் பிறந்து வருகின்றோமோ என்று கூட நான் சிலவேளைகளில் நினைப்பதுண்டு.

அரை நூற்றாண்டுக்கு முன்பாக இவ்வுலக வாழ்விலிருந்து நீங்கிப் போன ஒருவனின் கதையை அல்லவா நீங்கள் இப்போது வாசித்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் வாழ்க்கையில் அகமகிழும் தருணங்கள் இன்னுமின்னும் நிறையட்டும். நீங்கள் வாழ்கின்ற நிலத்து மழையாகவோ அல்லது பனியாகவோ என் ஆசிர்வாதங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன். நனைய மறந்துவிடாதீர்கள். அந்தத் துளிகளில் இருப்பவை என்னைப் போன்று வாழ்ந்து முடித்தவர்களின் சின்னஞ்சிறு ஞாபகங்கள்.

***

நன்றி: 'காலம்' இதழ் - 63
ஓவியம்: Soorya TK