கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 01

Tuesday, August 25, 2026

 

தியானம் செய்வதை அவ்வப்போது நிகழ்த்திக் கொண்டிருந்தாலும், பத்து நாள் விபாஸனாவிற்குப் போவது என்பது எனக்கு சற்றுப் பயத்தைத் தந்து கொண்டிருந்தது. கடந்தகாலங்களில் சிலமுறை இப்படிப் போக முயன்றபோது எனக்குள் இருந்த தயக்கம்/வேலை நெருக்கடி போன்றவைகளால் அது சாத்தியப்படாமல் போயிருந்தது.

எல்லாவற்றுக்கும் அது நிகழ ஒரு காலம் தேவைப்படுகின்றது என்பது போல, நான் விபாஸனாவுக்குப் போகவும் ஒரு அழைப்பு(calling) தேவையாக இருக்கிறது என்று அமைதியாக இருந்தேன். இங்கே விபாஸனாவுக்குப் போக மூன்று மாதங்களுக்கு முன் பதிவு செய்ய வேண்டும். அப்படிச் செய்தாலும், பதிவு செய்யும் கொஞ்ச நேரத்துக்குள் இடங்கள் முழுதும் நிரப்பப்பட்டு விடும். 



நான் இம்முறையும் பதிவு செய்தபோது, 'இடங்கள் நிரம்பிவிட்டன, உங்களைக் காத்திருப்போர் பட்டியலில் (waiting list) வைத்திருக்கின்றோம்' என்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. சரி, இம்முறையும் எனக்கான 'அழைப்பு' இல்லை என்று அமைதியாகிவிட்டிருந்தேன்.


திடீரென்று விபாஸனா தொடங்குவதற்கு ஐந்து நாட்களுக்கு முன், ஓர் இடம் இருக்கின்றது உங்களுக்கு இணைய விருப்பமா என்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. எனது பிறந்தநாள் காலப்பகுதியில் அந்த பத்து நாட்கள் வருவதால், அது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. அடிக்கடி இந்தப் பிறப்பின் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதுக்கு ஏதேனும் விபாஸனா தியானம் ஆறுதலைத் தரக்கூடும் என்று நினைத்தேன்.

ஜூலை 22 - ஓகஸ்ட் 02 வரையும் விபாஸனாவில் இணைந்து கொண்டேன். இப்படி பத்து நாட்கள் போவதை ஓர் ஆனந்தமான நிலை என்று பொய் சொல்லமாட்டேன். ஒருவிதமான பதற்றமும் பரவசமும் கலந்த நிலையில் இருந்தேன் மட்டும் எனத்தான் சொல்ல முடியும்.

இந்தப் பதற்றத்துக்கு ஒரு காரணம் விபாஸானாவின் சில அடிப்படை விதிகள்.

(1) பத்து நாளும் அலைபேசி பாவிக்கக்கூடாது.

சரி அலைபேசி இல்லாவிட்டாலும், புத்தகங்களை வாசித்தோ, ஜேர்னலை எழுதியோ பொழுதை எப்படியேனும் கழித்துவிடக்கூடிய 'ஆசாமி' நான் என்றாலும், அவை எதற்கும் கூட அனுமதி இல்லை. மேலும் எந்தவகையான இசை கேட்டலோ, இசை வாத்தியங்களை இசைப்பதோ முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தது. வாசிப்பும் இல்லை, எழுத்தும் இல்லை, இசையும் இல்லை என்றால் என்னைப் போன்றோர் எப்படி ஒரு நாளைக் கழித்துவிட முடியும்?

ஒருவகையில் பார்த்தால், இப்படி வெளியுலகத்தோடு தொடர்பு கொள்வதுதான் தடை செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் எப்படியோ எழுபது எண்பது பேர்கள் வருவார்கள், அவர்களோடு கூடிப் பேசி கொஞ்சி விளையாடலாம் என்றால் அடுத்த விதி இப்படி இருந்தது.

(2) பத்து நாட்களும் நீங்கள் எவரோடும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் (Noble Silence).

பேசாமல் மட்டுமில்லை, சைகையில் பேசுவதோ, துண்டுப்பேப்பரில் எழுதி கருத்துக்களைப் பரிமாறுவதற்கோ இங்கே துப்பரவிற்கு இடமில்லை.

அதாவது எண்பது பேர் உலாவுகின்ற இடத்தில் நீங்கள் இருந்தாலும், நீங்கள் உங்கள் தனித்த உலகில்தான் இருக்க வேண்டும். எந்த தொடர்பாடலும் சக தியானிப்பவர்களோடு இந்த பத்து நாட்களில்  வைக்க முடியாது.

*

இந்த இரண்டு கடும் விதிகளை கடவுளே(?) என்று கடைப்பிடித்தாலும் அடுத்த விதிதான் என்னை அதிகம் பயமுறுத்தியது. இந்த மூன்றாம் விதியின் காரணமாக என்னால் ஒருபோதும் பத்துநாட்கள் நின்று தாக்குப் பிடிக்க முடியாது என்றுதான் உள்மனம் சொல்லிக் கொண்டிருந்தது. அது;

(3) மதியம் பன்னிரண்டு மணிக்கு பிறகு எந்த உணவையும் எடுத்துக் கொள்ள முடியாது (காலை மற்றும் மதியம் அவர்கள் தரும் உணவு மட்டும்).

நான் பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் குணமுடைய ஒருவன். குறித்த நேரத்தில் நான் சாப்பிடாவிட்டால் ஏதோ எரிமலையை விழுங்கிய கோபக்காரன் போலத்தான் நடந்து கொள்ளத் தொடங்குவேன். அதுவும் தியானம் இரவு 9 மணி வரை இருக்கும்போது, எப்படி ஒரு மனிதன்  மதியம் பன்னிரண்டு மணிக்குப் பிறகு சாப்பிடாமல் தாக்குப்பிடிப்பான்?

இந்த மூன்றாம் விதியால் புத்தர் என்னை பரிநிர்வாணப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றாரா அல்லது  பட்டினி கிடந்து சாகடிக்கத்தான் மறைமுகமாகத் திட்டமிடுகின்றாரா என்ற யோசனைதான் வந்தது.

இன்னும் வேறு சில விதிகள் இருந்தாலும் இத்தோடு விதிகளை நிறுத்திக் கொள்வோம்.

ஏனெனில் இந்த விதிகள் அனைத்தையும் 10 நாட்கள் தாங்கிப் பிடித்த ஒருவனாகத்தான் நான் இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கின்றேன் என்பதால் மற்ற விதிகள் அனைத்தையும் பஞ்சைப் போல பறந்து போகக்கூடியவை என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும்.

***

(இன்னும் வரும்)

 

கார்காலக்க் குறிப்புகள் - 157

 

'கடலோடிகள்' என்கின்ற இந்தத் தொகுப்பில் நான்கு எழுத்தாளர்களின் பத்துக் கதைகளை எழுத்துக்கினியவனும், அனுஜா பிரகாஷூம் தமிழாக்கியிருக்கின்றனர். அழகு சுப்பிரமணியத்தினதும் (3), து.தம்பிமுத்துவினதும் (3) கதைகள் பற்றியே இங்கே எழுத விரும்புகின்றேன். இரண்டு பேருமே சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கல்வி கற்பதற்காக இங்கிலாந்து சென்று, அங்கே இலக்கியத்தில் சுடர் விட்டு ஒளிர்ந்தவர்களாவர்.

அழகு சுப்பிரமணியம் பதினைந்து ஆண்டுகள் இங்கிலாந்து வாசத்துக்குப் பிறகு யாழ்ப்பாணம் வந்து தனது வாழ்வை முடித்துக் கொண்டவர். தம்பிமுத்துவோ இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா என்று பல்வேறு நாடுகளுக்கிடையே அலைபாய்ந்து திரிந்தவர்.
 



இவர்கள் இருவருக்கும் எப்படி எழுத்துத் திறமை இருந்தவோ, அவ்வாறே குடிபோதையும் அவர்கள் இருவரையும் கடைசிவரை விடாது துரத்தியிருக்கின்றது. அதனால் இன்னமும் ஒளிர்விட்டு ஒளிர்ந்திருக்கக்கூடிய நட்சத்திரங்கள் இடைநடுவில் வால்வெள்ளியாக விரைவில் ஒளிர்ந்து இருட்டாகி விடைபெற்றுக் கொண்டவர்களோ என்ற எண்ணம் எனக்கிருக்கின்றது.

இவர்களின் இருவரினதும் கதைகளை வாசிக்கும்போது எப்படி இவர்கள் அன்றைய கால யாழ்ப்பாணத்தை ஆங்கிலத்தில் நுட்பமாக எழுதியிருக்கின்றார் என்ற வியப்பே ஏற்படும். ஈழத்துச் சூழலில் மண் மணம் கவிழும் கதைகள் தமிழில் எழுதப்படும் காலம் அல்லது அதற்கு முன்னரே மிக நுட்பமாக தமிழ் கலாசாரத்துக் கதைகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கின்றார்கள் என்பதுதான் கவனிக்கத்தக்கது.

இன்றைக்கு கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு அவர்களின் கதைகளை வாசிக்கும்போது நாம் அன்றைய யாழ்ச்சூழலில் உலாவிக் கொண்டிருப்பது போலத் தெரிகின்றது. தம்பிமுத்துவும் அழகு சுப்பிரமணியமும் எப்படி மேற்தட்டு மக்களின் வாழ்வியலை எள்ளலுடன் கேலி செய்கின்றார்களோ, அதேயளவிற்கு விளிம்புநிலை மனிதர்களைப் பரிவுடன் அணுகின்றார்கள் என்பதையும் இக்கதைகளினூடு நாம் அவதானிக்க முடியும்.

உதாரணத்திற்கு அழகுவின் 'கூலிக்கு மாரடிப்பவர்கள்' கதையையும், தம்பிமுத்துவின் 'மரமேறி' கதையையும் வாசிப்பவர்கள் அதை உணர்ந்து கொள்ள முடியும். கூலிக்கு அழுபவர்கள் கதையில், ஆதிக்கசாதி தலைவர் வீட்டில் ஒரு சாவு விழுந்துவிட  மரணவீட்டிற்கு கூலிக்கு அழுபவர்களை அழைத்து வரச் சொல்லப்படுகின்றது. ஆனால் அதேசமயம் இந்த விளிம்புநிலை மனிதர்களின் வீட்டிலும் சாவீடு நடக்கின்றது. அவர்கள் தமது சொந்த சோகத்தை ஆற்றமுடியாது, ஆதிக்கசாதி சா வீட்டுக்கு கூலிக்குப் பாட அழைத்து வரப்படுகின்றார்கள். அப்போது இந்தச் சா வீடுகளில் நிகழும் சம்பவங்களை அழகு சுப்பிரமணியம் அருமையாக எழுதிச் செல்கின்றார்.

அதுபோல தம்பிமுத்துவின் 'மரமேறி' கதையில் இப்படி மரமேறியான வேலுவின் கதை சொல்லப்படுகின்றது. வேலு, அச்சுவேலிக்கு கொழும்பிலிருந்து விடுமுறைக்குச் செல்லும் கதைசொல்லிக்கும், அவரின் சகோதரருக்கும் தென்னைமரமேறி இளநீர் வெட்டிக் கொடுப்பவர். அவர்களின் தாத்தாவுக்கு தென்னையிலிருந்து கள் இறக்குபவர். இத்தனைக்கும் வேலு வசதியில் குறைந்தவரல்ல. அவருக்கு நிறையத் தென்னைகளுடன் சொந்தமாகத் தோப்பும் இருக்கின்றன. ஆனால் கதைசொல்லியின் தாத்தா மீதிருக்கும் அன்பால் இவர்களின் தென்னைகளிலும் ஏறி இறங்குகின்றவர்.

இந்தக் கதையின் தம்பிமுத்து, மரமேறி வேலுவுக்கும், இவர்களின் பூட்டனாருக்கு நல்ல உறவு இருந்தாலும், சாதியின் நுட்பமான தடுப்புச் சுவர்கள் பற்றியும் பேசுகின்றார்.  அதுவேதான் இந்தக்கதையை அசல்தன்மையுடன் வாசகர் முன்னால் வைக்கின்றது எனச் சொல்வேன்.

எப்படி அழகு சுப்பிரமணியத்தின் 'கூலிக்கு மாரடிப்பவர்கள்' கதையில் செத்தவீட்டில் அழும் நிலைமை விபரிக்கப்படுகின்றதோ, இந்த 'மரமேறி' கதையிலும் ஒரு மரணம் நடந்துவிட இப்படி கூலிக்கு அழுபவர்கள் சித்தரிக்கப்படுகின்றார்கள். ஒருவகையில் அழகும், தம்பிமுத்துவும் மத்தியதர உயர்வர்க்க வாழ்க்கை வாழ்ந்தாலும், அவர்களாலும் சமூகத்தில் அடிநிலையில் இருந்த மக்களை எழுத்துக்களால் நெருங்க முடிந்திருக்கின்றது என்பதுதான் முக்கியமானது.

*

இந்த 'கடலோடிகள்' தொகுப்பில் தம்பிமுத்துவின் 'மாதுளை மரம்', 'மரமேறி', 'பூட்டனாரும் பேய்பூதங்களும்' ஆகிய மூன்று கதைகளை எழுத்துக்கினியனும், அனுஜாவும் தமிழாக்கியிருக்கின்றனர்.  தம்பிமுத்து தன்னையொரு கவிஞராகவே வாழும் காலத்தில் முன்வைத்தவர். அவர் இங்கிலாந்தில் (அமெரிக்காவிலும்) தொடர்ந்து நடத்திய Poetry London (/New York) சிற்றிதழே கவிதைகளுக்கென்றே நடத்தியவர். அவ்வாறான தம்பிமுத்து அமெரிக்காவில் வாழ்ந்த காலத்திலே கதைகளை எழுதத் தொடங்கியவர். வெளியாகிய கதைகள் ஐந்துதான் என்கின்றனர். சிலவேளைகளில் அதற்கு மேலும் எழுதி சிலது வெளிவராதிருக்கக்கூடும்.

இந்தக் கதைகளை தமிழாக்கிய எழுத்துக்கினியனோடு தனிப்பட்ட பேச்சில், அவர் தம்பிமுத்துவின் ஒரேயொரு மகளான சகுந்தலாவோடு தொடர்பில் இருப்பதை அறிந்துகொண்டேன். எனவே தம்பிமுத்துவின் புதிய கதைகளை எழுத்துக்கினியன் கண்டெடுத்து இனி வரும் காலங்களில் நாம் தமிழில் வாசிக்கும் சந்தர்ப்பம் வரக்கூடும் என நம்புகின்றேன்.

தம்பிமுத்துவின் 'மாதுளை மரம்' நியூ யோர்க்கர் இதழில் வெளிவந்திருந்தது. இவ்வளவு காலமாகியும் இன்னும் வேறெந்த தமிழ் எழுத்தாளரின் கதை நியூ யோர்க்கரில் வெளியாகியதாக ஆதாரபூர்வமான சாட்சிகள் எதுவுமில்லை என்கின்றபோது தம்பிமுத்துவின் கதை கடந்த நூற்றாண்டின் 50களில் வெளிவந்திருக்கின்றது என்பதையிட்டு ஈழத்தமிழர்களாகிய நாம் பெருமை கொள்ளலாம்.

ஒருவகையில் பார்த்தால் தம்பிமுத்து கதைகளை எழுதப்போகின்றபோது அவர் இளமைக்காலத்தில் விடுமுறையில் கழித்த யாழ்ப்பாணத்தை (அச்சுவேலி) பின்னணியாகக் கொண்டுதான் கதை எழுதியிருக்கின்றார் என்பது புரிகின்றது. இந்த மூன்று கதைகளிலும் அச்சுவேலி எங்கோ ஓரிடத்தில் வெளிப்படையாகப் பதிவு செய்யப்படுகின்றது. ஆக ஒரு மனிதனின் சிறுவயது/பதின்மவயது ஒருவரின் படைப்பில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தும் என்பதற்கு தம்பிமுத்துவின் கதைகளை உதாரணமாகக் கொள்ளலாம்.

*

அழகு சுப்பிரமணியம் இருபதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியிருக்கின்றார். அவரின் ஒரு குறிப்பிட்ட சிறுகதைகள் 'நீதிபதியின் மகன்' என்ற பெயரில் ராஜ சிறிகாந்தனால் தமிழாக்கப்பட்டிருக்கின்றது. அப்படி தமிழாக்கப்படாத மூன்று கதைகளை எழுத்துக்கினியவன் தமிழாக்கியிருக்கின்றார்.

அழகுவின் 'பெரிய பிள்ளை (The big Girl) எழுதிய காலத்திலே கவனத்திற்குள்ளான கதை. அதே பெயரிலேதான் அழகு தனது முதலாவது சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டும் இருந்தார். ஒருவகையில் பார்த்தால், இந்தத் தொகுப்பில் இருக்கும் 'பெரிய பிள்ளை'யும், 'பெரிய கடைச் சந்தி'யும் ஒன்று மற்றதன் தொடர்ச்சி எனச் சொல்லலாம்.

'பெரிய பிள்ளை' ஒரு செல்வாக்கான யாழ்ப்பாணத்துப் பெரிய மனிதர் தனது மகளை படிப்பதற்கான யாழ்நகரிலுள்ள புளியடி (வேம்படி) பாடசாலைக்கு அனுப்புவதுதான் கதை. இந்தக் கதையில் திருமதி இராமசாமி தனது மகளை வேம்படி பாடசாலை மாட்டுவண்டிலில் கொண்டுபோய் விடுதியில் விட்டு விட்டு திரும்புவதுதான் கதை. இரண்டாவது கதையான 'பெரிய கடைச் சந்தியில்' யாழ் நகருக்கு திருமதி இராமசாமி தனது நகருக்கு மாட்டு வண்டியில் திரும்புகின்ற பயணத்தைப் பற்றியது. திருமதி இராமசாமிக்கு அதுவரை காலமும் தன்னோடு வளர்ந்த மகள் பார்வதியை புளியடி பாடசாலை விடுதியில் தனியே விட்டுவிட்டு வந்தது கவலையைக் கொடுக்கின்றது. வழிமுழுதும் வண்டிலுக்குள் இருந்து அழுகின்றார். வண்டியோட்டியோ 'இப்படியே அழுதபடி வந்தால், பெரியகடைச் சந்தியில் இருக்கும் வம்பன்கள் வேறுவிதமாகக் கதைப்பார்கள்  ஆகவே அழாமல் இருங்கள்' எனச் சொல்கின்றார்.

இந்தக் கதையில் திருமதி இராமசாமியின் பயணத்தினூடாக அன்றைய யாழ்ப்பாணத்தின் வெளிச்சூழலை அழகு அற்புதமாகக் காட்டுகின்றார். இவ்வளவு நுணுக்கமாக எப்படி ஆங்கிலத்தில் அழகுவால் எழுத முடிகின்றது என்று வாசிப்பவர் வியக்காமல் இருக்க முடியாது.

மூன்றாவது கதையான 'மதமாற்றத்தில்'தான் அழகு என்கின்ற படைப்பாளின் ஆளுமை விகசிப்பதை நாம் காண்கின்றோம். வேலைக்காக மதம் மாறிய ஒருவரால் கடைசிவரை 'சிவன் சிவன்' என்று இந்துக்கடவுளளை உச்சரிப்பதை மாற்றமுடியாது. அந்த ஒரு காரணத்தை வைத்தே இந்த ஆசிரியரின் மீது பொறாமை கொள்ளும் சக ஆசிரியர் அவரின் பதவியுயர்வை தடுக்க நினைக்கின்றார். இறுதியில் மதம் மாறி சிவன் சிவன் என்று உச்சரிக்கின்ற அந்த ஒடுக்கப்பட்ட ஆசிரியருக்கு அவரது பதவி உயர்வு கிடைக்கின்றதா இல்லையா என்பதுதான் கதை. இந்தக் கதையை தீவிரமாகவும், அதேவேளை நகைச்சுவையுணர்வு பொங்க அழகு எழுதியிருப்பதுதான் சிலாகிக்கத்தக்கது.

*

இவர்கள் இருவரின் கதைகளோடு வி.வி.கணேஷானந்தனினதும், வஜ்ர சந்திரசேகரினதும் தலா இரண்டு கதைகள் இத்தொகுப்பில் தமிழாக்கப்பட்டிருக்கின்றது. இந்தத் தொகுப்பை வாசிப்பவர்கள் அதை வாசிக்கட்டுமென அவர்களின் கதைகளைப் பற்றிப் பேசுவதை இங்கே தவிர்க்கிறேன்.

சமகால எழுத்துக்களில் ஒருவித அலுப்பு வந்து நான் பழைய ஈழத்து எழுத்தாளுமைகளைத் தேடத் தொடங்கியபோது அழகுவும் தம்பிமுத்துவும் என்னை அவ்வளவு பாதிப்புச் செய்தனர். அவர்களது படைப்புக்கள் மட்டுமில்லை, எந்தப் பிரபல்யம்/புகழ் எது குறித்தும் கவலைப்படாது தாம் நம்பிய கலையில் ஊன்றித் திளைத்தது என்னை அவர்களை மேலும் மேலும் அறியவேண்டும் என்கின்ற வேட்கையை ஏற்படுத்தியது.

அதே சமகாலத்தில் தமிழுக்கு கிடைத்த பேறாய் எழுத்துக்கினியவனும், அனுஜாவும் இவர்கள் இருவரின் கதைகளையும் தமிழாக்கம் செய்யத் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கின்றது. தமிழில் எழுதப்பட்ட கதைகளைப் போல இவர்களின் மொழிபெயர்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குறையாக அல்ல, ஆனால் விரும்பினால் கவனிக்கலாம் என்று தமிழாக்கம் குறித்து ஒரு விடயத்தை அவர்களிடம் சொல்வேன். இந்தளவுக்கு யாழ் வட்டாரமொழியில் கதாபாத்திரங்கள் பேசுவதை மாற்றத் தேவையில்லை என்று சொல்வேன். கொஞ்சம் நியமத்தமிழின் பக்கம் சென்று பார்க்கும்போது இன்னும் இறுக்கமான கதைகளாக தமிழுக்கு வரும்போது இவர்களின் இருவரின் கதைகள் இருக்கும் போலத் தோன்றியது. விரும்பியனால் தமிழாக்கிய இருவரும் இந்தப் புள்ளி குறித்து சற்று யோசித்துப் பார்க்கலாம்.

அழகு சுப்பிரமணியன் இருபதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியவர். 'நீதிபதியின் மகன்' தொகுப்பில் பன்னிரண்டு கதைகள் இருக்கின்றன. எழுத்துக்கினியன்/அனுஜா இதுவரை தமிழாக்காத அழகுவின் கதைகளை தமிழாக்கி ஒரு தனித் தொகுப்பாக வெளியிடலாம். அதுபோல தம்பிமுத்துவின் கதைகள் உள்ளிட்ட பொயட்ரி இலண்டனில் அவர் எழுதிய அற்புதமான ஆசிரிய தலையங்கள், விமர்சனங்கள் என்பவற்றைத் தொகுத்து தம்பிமுத்துவுக்கெனவும் ஒரு தொகுப்பு வெளியிடலாம்.

தமிழிக்கு ஒரு நல்நிகழ்வாய் எழுத்துக்கினியன்/அனுஜா போன்றவர்கள் இரண்டு மொழிகளிலும் தமிழாக்கும் வல்லமை உடையவர்களாக இருக்கின்றார்கள். எனவே அவர்களைப் போன்றவர்களின் தமிழாக்கங்களை/அதற்கு அவர்கள் கொடுக்கும் உழைப்பை மதிக்கின்றவர்களாக நம் சமூகம் இருந்தால் இன்னும் நிறைய வளங்களைத் தமிழுக்கு அவர்கள் கொண்டுவந்து சேர்ப்பார்கள் என நினைக்கின்றேன்.

***

 

நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார் - ராஜேஷ்

Saturday, August 22, 2026

 

நண்பர் இளங்கோ எழுதிய "நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்" சிறுகதைத் தொகுதியை வாசித்தேன்.

இளங்கோ அவர்களை தமிழ் பிளாகர், தமிழ்மணம் காலந்தொட்டு டி.சே வாக அறிந்தாலும், அனுக்கமாக வாசிக்கத் தொடங்கியது சமீபமாக முகநூலில் தான்.

அவரது விட்டேத்தியான பதிவுகளும், அவர் வசிக்கும் கனடா தேச காடுகளுக்குள்ளும், இயற்கையான சூழல்களில் தன்போக்கில் நடை பயிலும் காணொளிகளும், அதே நேரம் அவர் வாசிக்கும் கடினமான புத்தகங்களும், பயணிக்கும் உலக நாடுகளும், எழுதும் விஷயங்களின் அடர்த்தி என ஒவ்வொன்றும் எப்பொழுதும் பிரமிக்க வைக்கும்.

 
எப்படி ஒரு மனிதரால், தன்னையும் வாழ்வையும் நையாண்டி செய்தபடியும், அதன் தீரா வசீகரங்களை நுகர்ந்தபடியும், சத்துவரை சாட்சியாக வைத்து ரத்த காவு கொண்ட ஒரு தேசத்திலிருந்து வந்தும், புத்தரை நேசித்தபடியும் என்று வெவ்வேறு திசைகளில் மிக இயல்பாக பயணிக்க முடிகிறதென வியந்திருக்கிறேன்.

புலம்பெயர் வாழ்வு, ஒரு கலைஞனுக்குள் உண்டாக்கும் அநேக வடுக்களை, அனுபவ கீறல்களை, செக்கு மாடாய் சுழலும் ஒரு வாழ்வு முறையில் இருப்பவனால் முழுவதும் புரிந்து கொள்ள முடியாது.

இவை எல்லாம் தான் அவரது கதைகளாக இப்புத்தகத்தில் விரிந்திருக்கின்றன.ஒரு மனிதரை அனுக்கமாக பின் தொடரும் பொழுது, அவரது படைப்புகள் இன்னும் கூடுதல் ஒத்திசைவைத் தருகின்றன.

இப்புத்தகத்தில் வரும் இயக்கக்காரி, அரசன் அன்று கொல்வான், நம் இயல்புவாத சிறுகதையின் தொனியில் இருந்தாலும், வெளிப்படும் விதத்தில் நம் அனுபவத்திற்கு மிகப் புதிது.

ஒவ்வொரு சிறுகதையிலும், அவரை அடையாளம் காண முடிவது போல், கதை முழுவதும் வரும் அப்பாத்திரங்களின் காதலிகள் ஒன்றே தானா வெவ்வேறா என ஒரு குறுகுறுப்பும் உள்ளே ஓடிக் கொண்டிருக்கிறது.அவரது நாயகர்களால், மிக இயல்பாக ஒரு தோழியை போகுமிடமெல்லாம் உருவாக்கிக் கொள்ள முடிகிறது.

மிஸ்டர் கே சிறுகதையில் வரும் ஒரு நபரை அவர் இன்னாராக இருக்குமோ என சொல்லும் பொழுது, நம் பிரிய எழுத்தாளர்களை இவரும் பிரியப்பட்டிருப்பதில் ஒரு மகிழ்ச்சி.

சற்றே கொஞ்சம் இலங்கைத் தமிழ் சொற்கள் மலிந்திருந்தாலும், வாசிக்க லகுவான, ஆனால் தமிழ் சிறுகதைகள் அதிகம் பேசாத விஷயங்களால் விளைந்த கதைகள் இவை.

வாசித்து பாருங்கள்..சுவாரஸியமான புத்தகம்.

***

(நன்றி: ராஜேஷ்)

 

கார்காலக் குறிப்புகள் - 156

Tuesday, August 18, 2026

 

 கால்பந்தாட்டக் குறிப்புகள் - 02

***

துவரை ஆர்ஜெண்டீனாவின் ஆட்டங்கள் சோபிக்கவில்லை. நடுவர்களின் ஆதரவும் இருக்க அளாப்பி விளையாடுகின்றார்கள் என்கின்ற விம்பமும் இருந்தது. இன்று அதை மறுதலித்து எதிரணியினரே ஒப்புக்கொள்ளும்படி நன்றாக விளையாடினார்கள்.

ஐரோப்பிய நாடுகளுக்கு ஒருவிதமான ஆட்ட வியூகங்கள் இருப்பதுபோல, தென்னமெரிக்கா நாடுகளுக்கு எப்போதும் முன்களமே வலுவாக இருக்கும். ஆகவேதான் அவர்களால் நிறையக் கோல்களை எதிரணியினர் அடித்தாலும், விடாமுயற்சியுடன் திரும்பி வந்து விளையாடி உலகக்கோப்பைகளை வெல்ல முடிந்தது.

Uploaded Image
அதேசமயம் பிரேசில் போன்ற நாடுகள் முன்கள வீரர்களின் கவனம் செலுத்தும்போது, பின்களம் வலுவற்று இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஜேர்மனி அவர்களுக்கு ஏழு கோல்கள் அடித்த சம்பவத்தை உதாரணத்துக்குச் சொல்லலாம். அதேபோன்று தென்னமெரிக்கா நாடுகளுக்குள் (கோஃபா கப்) விளையாடும்போது ஒரு உத்தியையும், உலக்க்கோப்பைக்காக விளையாடும்போது (அதிகம் ஐரோப்பா நாடுகளோடு) வேறொரு உத்தியையும் கையாள வேண்டியிருக்கும்.

இதைச் சரியாகக் கணித்து கடந்த சில உலகக்கோப்பை ஆட்டங்களில் (2014 இல் இருந்து) விளையாடுவது ஆர்ஜெண்டீனா. அதை அதிகம் கவனம் கொள்ளாது இன்னும் strikers/forwards மீது கவனம் குவித்து தொடர்ச்சியாக பிழை விட்டுக்கொண்டிருப்பது பிரேசில்.

பிரேசில் கடந்த நான்கைந்து உலகக்கோப்பைகளில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறிய அனைத்து ஆட்டங்களையும் பார்த்தால், அவர்கள் அவ்வளவு மோசமாக விளையாடி இருக்க மாட்டார்கள்; முன்கள வீரர்கள் இயன்றளவு கோல்களை அடிக்க முயற்சித்திருப்பார்கள். அதேசமயம் பிரேசிலிடம் ரொனால்டோ/ரொனால்டீனா போன்றவர்களுக்குப் பிறகு சிறந்த ஸ்ரைக்கர்ஸ் (நெய்மார் இருந்தாலும், அவரொருவரால் ஆட்டங்களின் நிலைமையை மாற்றியமைக்க முடியவில்லை). வரவில்லை. எனவே தொடர்ச்சியாக பிரேசிலால் வெல்ல முடியவில்லை.

ஆர்ஜெண்டீனாவுக்கு மரடோனாவுக்குப் பிறகு மெஸ்ஸி என்கின்ற தங்கமுட்டையிடும் வாத்துக் கிடைத்திருக்கின்றது. அதேவேளை ஆர்ஜெண்டீனா முன்களத்தை வலுவாக்கியதுபோல பின்களத்தையும் பிரேசிலைப் போலவன்றி வலுவாக்கியிருந்தது.

இந்த உலகக்கிண்ணத்திலே அதை எளிதாகப் பார்க்கலாம். ஆர்ஜெண்டீனாக்காரர்கள் ஐரோப்பியர்கள் போல tough ஆட்டம் விளையாடினார்கள். இந்த அரையிறுதி ஆட்டத்தில் கூட இடைவெளியின் முன் ஆர்ஜெண்டீனா நிறைய ஃபவுல்கள் விட்டார்கள். இடைவெளியின் பின் ஒன்றுக்கு மேற்பட்ட மஞ்சள் அட்டைகளையும் பெற்றார்கள்.

ஆர்ஜெண்டீனா சுதாகரித்துக் கொண்ட ஆட்ட வியூகத்தை பிரேசில் தவறவிட்டது. நோர்வேயுடன் அவ்வளவு மென்மையான ஆட்டத்தை ஆடியது. நோர்வைக்காரர்கள் தங்களுக்குள் வைத்து நீண்டநேரம் விளையாடிய பந்தைப் பறிக்கக்கூட  பிரேசில்காரர்கள் ஃபவுல் விடத் தயாராக இருக்கவில்லை. பிரேசில் அன்று தோற்ற ஆட்டத்தில் பிரேசில் பெற்ற ஒரேயொரு மஞ்சள் அட்டை நெய்மாருடையது. அதுவும் ஆட்டம் முடிகின்ற கட்டத்தில்.

இவ்வாறு சொல்வதால் நான் ஃபவுல் ஆட்டங்களுடன் அழுகுணி ஆட்டம் ஆடவேண்டும் என்று சொல்ல வரவில்லை. இன்னும் இப்படி மென்மையாக விளையாடி கோல்களைப் போட்டு ஆட்டத்தைச் சோபிக்கச் செய்வதற்காகத்தான் பிரேசில் ஆதரவாளனாக இருக்கின்றேன். ஆனால் உலகக்கோப்பையில் வெல்லவேண்டும் என்றால் கடுமையான ஆட்டத்தை முக்கியமாக ஐரோப்பிய நாடுகளுடன் ஆடாவிட்டால், அவ்வளவு எளிதாக வெல்லமுடியாது. அதற்கு இன்றையகால பிரேசில் சிறந்த உதாரணம்.

இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து விட்ட பிழை (கடந்த உலகக்கிண்ண ஆட்டங்களிலும் இதைச் செய்திருக்கின்றது), ஒரு கோலை அடித்தவுடன் தடுப்பாட்டம் ஆடும் நிலைமைக்குப் போய்ச் சேர்ந்திருந்தது. இதே தடுப்பாட்டம் மெக்ஸிக்கோவுடன் ஆடும்போது இங்கிலாந்துக்கு சாதகமாக இருந்து வெற்றியையும் பெற்றுக் கொடுத்திருந்தது. ஆனால் ஆர்ஜெண்டீனா இன்னொரு மெக்ஸிக்கோ இல்லை.

Uploaded Image


இங்கிலாந்து, தொடர்ச்சியாக இந்த உலகக்கிண்ணப் போட்டிகளில், பின்னாலிருந்து வந்து கோல்களை இறுதி 20/30நிமிடங்களில் அடித்து ஆட்டங்களை வென்ற ஆர்ஜெண்டீனாவுடன் இப்படி பின்னே நின்று தடுக்கும் ஆட்டம் விளையாடியது அவர்கள் விட்ட பிழை. நோர்வே பிரேசிலுக்கு ஒரு கோல் அடித்துவிட்டு தடுப்பாட்டம் ஆடவில்லை. பந்தை மைதானத்தின் நடுவிலும், பிரேசிலின் பெனால்டி பெட்டிக்குள்ளும் தொடர்ந்து தள்ளியபடியே இருந்தார்கள். அதனால்தான் பிரேசிலால் அவ்வளவு கோலடிக்கும் சந்தர்ப்பங்களை உருவாக்க முடியவில்லை.

இன்று இங்கிலாந்து ஒரு கோல் போட்டபின், பின்களத்தில் தடுப்பாட்டத்தில் கவனத்தைக் குவித்தபோது, தொடக்கத்திலே சில கோல்கள் இங்கிலாந்து கோல்கீப்பரால் இலாவகமாக தடுக்கப்பட்டன. அப்போதே இங்கிலாந்து சுதாகரித்திருக்க வேண்டும். இத்தனைக்கும் இங்கிலாந்து மிகச் சிறந்த strikers/midfields ஐ கொண்ட அணி. களத்தில் மட்டுமில்லை, reserve ஆகக்கூட ரஷ்பார்ட், ஷக்கா போன்ற வீரர்கள் இருந்த ஒரு அணி.

எனினும் எல்லா நேரங்களிலும் எதிரணி கோல்களை முதலில் அடித்தபின் மீண்டு வந்து அதைவிட கூடிய கோல்களை அடித்து வெல்வதென்பது இலகுவல்ல. அதிலும் ஆர்ஜெண்டீனா அடித்த (அடிக்காத சில கோல்கள்) கோல்களில் மெஸ்ஸியின் பங்களிப்பு மிகச் சிறப்பானது. மெஸ்ஸி இந்தப் பந்துகளை பெனால்டி பெட்டிக்குள் அனுப்பாவிட்டிருந்தால் ஆர்ஜெண்டீனா கோல்களை அடித்திருக்கவே முடியாது.

மெஸ்ஸி ஒரு கட்டத்தில் தன்னால் பெனால்டி பெட்டிக்குள் போய் கோல்களை அடிக்கமுடியாது என்பதை உணர்ந்து பின்னாலே நின்று பெரும்பாலும் விளையாடியதை நாம் பார்த்திருப்போம். பிரான்ஸ் தோற்ற போட்டியில் எம்பாவேவின் கால்களுக்கு பந்தே வரவில்லை. அவர் சிலவேளை மெஸ்ஸியைப் போல சற்று பின்னே நின்று விளையாடியிருந்தால் பிறர் மூலம் கோல்களை அடிக்கும் சந்தர்ப்பங்களை  பிரான்ஸிற்கு உருவாக்கியிருக்கக்கூடும்.

இன்று ஆர்ஜெண்டீனாவின் நாள். அவர்கள் சிறப்பாகவே விளையாடினார்கள். இதுவரை நாட்களில் அவர்கள் மீதிருந்த விமர்சனத்தைத் தாண்டி, இன்று அவர்களை மனந்திறந்து பாராட்டலாம்.

அதுவும் ஐரோப்பா நாடொன்றுக்கு எதிரான வெற்றியென்பது இன்னும் மகிழ்ச்சி தரக்கூடியது!

****
(Jul 11)


பிரேசில்காரரே, பிரான்சுக்காரன்கள் ஆடுகின்ற ஆட்டத்தைப் பார்த்தால் நாங்கள் அவர்களைச் சந்தித்தால்  அவர்கள் ஜேர்மன்காரர்கள் நமக்கு 7 கோல்கள் அடித்ததை விட அடிக்காமல் அனுப்பமாட்டாங்கள் போல இருக்கிறது.

இதற்கிடையில் அடுத்த சுற்றில் நாங்கள் நோர்வேக்காரன்களைச் சந்திக்கப் போகின்றோம். அவர்கள் கடைசி ஆட்டத்தில் வென்றபின் மைதானத்தில் தாங்கள் கடலோடிகளின் கலாசாரத்தில் வந்தவர்கள் என்று Viking Row செய்து வீரம் காட்டுகின்றார்கள். ஐவரி கோஸ்ட்டை வென்றதற்கே ஆ, ஊ என்று படகு வலித்து இப்படி படங்காட்டுகின்றவர்கள் நமக்கு என்ன வைத்துச் செய்யப் போகின்றார்களோ தெரியவில்லை என மனம் பதறுகிறதே.

மேலும் ஜேர்மனி முதல் knock out இலே தோல்வியடைந்து நாட்டுக்குத் திரும்பிப் போனதற்கு, முதலில் நான்கு சாம்பியன்ஸ் வென்ற அவர்களை அனுப்பிவிட்டு, அடுத்து ஐந்து சாம்பியன்ஸ் வென்ற பிரேசில்காரர்களுக்குத்தான் மலையாள மாந்தீரிக செய்திருக்கின்றோம் என்று கேரள ஆர்ஜெண்டீனா இரசிகன் எனக்கு எச்சரிக்கை செய்தபடி இருக்கின்றான்.

பிரேசிலினின் ஜாம்பாவன்களாக இருந்த ரொனால்டோ, ரொனால்டீனோ எல்லாம் உங்களுக்காக ஒவ்வொரு ஆட்டத்தை நேரடியாகப் பார்க்க வருகின்றார்கள். தங்களுக்கு அடுத்த தலைமுறை சாம்பியன்ஸ் வெல்லவேண்டும், அதைத் தமது கண்களால் நேரடியாகப் பார்க்க வேண்டும் என்று வரும் அவர்களின் பொருட்டாவது, ரியோ கடற்கரை மணலில்  பெண் பிள்ளைகளுக்கு கலர்ஸ் காட்டுவதற்காக விளையாடுவது போன்று அல்லாது professional ஆக, நாங்கள் சுண்டெலிகள் அல்ல, சிறுத்தைகள் என்று பாய்ந்து விளையாடவேண்டும்.

இன்றைய ஆட்டங்களில் நான் கொங்கோ, செனகல், பொஸ்னியா வெல்லவெண்டும் என்று விரும்புகின்றேன்.

Uploaded Image

ஆனாலும் வெல்லப்போவது என்னவோ இவற்றுக்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து, பெல்ஜியம், ஐக்கிய அமெரிக்காவாக இருக்கப் போகின்றதென்றாலும், எப்போதும் போல வலிமையும்/வளங்களும் குறைந்த நாடுகளுக்கு என்னுடைய ஆதரவு.

அதுவும் போர் நிறைந்த சூழலில் இருந்து வந்து குழுநிலை ஆட்டங்கள் அனைத்தையும் சமனிலைப்படுத்தி, மூன்று ஆட்டங்களிலும் வியப்பைத் தந்த ஈரான் இந்த knock out சுற்றுக்கு வராதது கவலையே. அதேபோல  தேவதைக் கதையைப் போல மிகச்சிறு தீவான Cabo Verde இந்தச் சுற்றுக்கு வந்திருப்பதும், மெஸ்ஸியின் ஆர்ஜெண்டீனாவைச் சந்திக்க இருப்பதும் மகிழ்ச்சியான விடயமே.

***
(Jul 01)


மெஸ்ஸி மூன்று உலகக்கிண்ண இறுதியாட்டங்களை விளையாடப் போகின்றார் என்பது நினைவுக்கு வந்தபோதுதான், பிரேசிலின் பீலேயும் அப்படி விளையாடி இருப்பார்தானே என்று தேடிப் பார்த்தேன். பீலே 1958, 1962, 1970 பிரேசில் சாம்பியன்ஸ் ஆனபோது இருந்தவர் என்றாலும், 1962 இல் காயம் காரணமாக பீலே இறுதிப் போட்டியில் பங்கேற்றவில்லை. ஆக பீலே இரண்டு உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் மட்டுமே பங்கு பற்றியிருக்கின்றார்.

மெஸ்ஸி இப்போது 2014, 2022, 2026 இறுதிப்போட்டிகளில் பங்குபற்றுகின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கின்றார். பிறகுதான் இன்னொரு விடயம் ஞாபகத்துக்கு வந்தது. பிரேசிலுக்குப் பீலேயிற்குப் பிறகான பொற்காலம் என்றால் அது 90 களிலும் 2000களின் தொடக்கத்திலும் இருந்திருக்கின்றது.

பிரேசில் 1994, 1998, 2002 என எந்த நாட்டினராலும் எளிதில் முடியாத சாதனையாக தொடர்ந்து இறுதியாட்டத்துக்கு வந்திருக்கின்றனர். அதில் 1994, 2002 இல் சாம்பியன்ஸ் ஆனார்கள். 1998 இல் பிரான்ஸிடம் இறுதிப்போட்டியில் 3-0 என்று தோற்றிருந்தனர்.

இந்த மூன்று தொடர்ச்சியான இறுதியாட்டங்களிலும் இருந்த ஒரேயொரு விளையாட்டு வீரராக பிரேசிலின் காஃபூ இருக்கின்றார். இவரே 2002இல் அணித்தலைவராக இருந்தபோது சாம்பியன்ஸை பிரேசில் வென்றும் இருக்கின்றது.

இப்போது மெஸ்ஸி மூன்று இறுதியாட்டங்களில் விளையாடும் இன்னொரு வீரராக உருவாகியிருக்கின்றார்.  எனக்கு மெஸ்ஸியைப் போல பிடித்த  இன்னொரு ஆர்ஜெண்டீனா வீரரான ஏஞ்சல் டீ மரியா (Ángel Di María ) இந்தச் சாதனையில் இடம்பெற்றிருக்கலாம். ஆனால் அவர் கடந்த உலகக்கிண்ண வெற்றியோடு ஓய்வுபெற்றுவிட்டார். இல்லாவிட்டால் மெஸ்ஸியைப் போல மூன்று உலகக்கிண்ண இறுதியாட்டங்களில் விளையாடும் ஒருவராக டீ மரியாவும் இருந்திருப்பார்.

இப்போது மெஸ்ஸியும், காஃபூவும் இந்தச் சாதனைப் பட்டியலில் இருக்கின்றனர். காஃபூவிற்கு இரண்டு சாம்பியன்ஸை வென்ற கிரீடம் இருக்கின்றது. மெஸ்ஸியிற்கு இரண்டு சாம்பியன்ஸ் வெல்லும் அதிஷ்டம் இருக்கா என்பதைப் பார்க்க இந்த ஞாயிறுவரை பொறுத்திருக்க வேண்டும்.

மரடோனா இரண்டு உலகக்கிண்ண இறுதியாட்டங்களை 1986, 1990 விளையாடியவர். ஆனால் ஒரு சாம்பியண்ஸையே அவரால் பெற முடிந்தது. ஆர்ஜெண்டீனா இந்தமுறையும் உலகக்கிண்ணத்தை வென்றால் மெஸ்ஸி, சாதனையில் மரடோனாவை முந்திவிடுவார்.

என்னைப் போன்றவர்களுக்கு பீலேயோ, மரடோனாவோ விளையாடும்போது அதே சமகாலத்தில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஆனால் மெஸ்ஸியின் ஆட்டங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இனி இவர்களைப் போல நீண்டகாலம் நிலைத்து நின்று சாதனை படைக்கும் வீரர்கள் மிக அரிதாகவே தோன்றுவார்கள்.

அந்தவகையில் மெஸ்ஸியின் ஆட்டங்களை மூன்று இறுதிப்போட்டிகளில் பார்க்க முடிவதில் ஒருவகையில் நாம் அதிஷ்டசாலிகள்தான்.

***
(Jul 15)

 

'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' - றிஹானா நெளபர்

Tuesday, August 11, 2026

 

'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' நூல் குறித்த வாசிப்பு


-றிஹானா நெளபர்


ங்கிலத்தில் வெளியான 13 நூல்களின்  வாசிப்பனுவங்கள் தொடர்பிலான கட்டுரைகளின் தொகுப்பே இளங்கோவின் “இருத்தலின் மீது கவியும் இன்மைகள்”.எழுநாவின் வெளியீடாக வந்துள்ள இந்நூலின் அட்டைப்படம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளங்கோவின் வீடு என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது பயணங்களின் போது போரினால் கைவிடப்பட்ட வீடுகளை பார்த்த போது ஏற்பட்ட உணர்வை மீட்டிப்  பார்க்க வைத்தது.அந்த வீடுகளின் ஏக்கமும், அவை கொண்டுள்ள கதைகளும் ஏராளம்.

உண்மையில் இந்நூலை வாசிக்கின்ற போது 112 பக்கங்களுக்குள் 13 நூல்களை அறிந்து கொள்வது மட்டுமல்லாமல் மேலதிகமான தகவல்களையும் அறிய முடிகிறது.ஆங்கிலத்தில் இந்நூல்களை வாசிக்க முடியாதவர்களுக்கும் அதனைப் பற்றிய அறிமுகமும் கிடைக்கின்றது..”

இதில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து நூல்களுமே ஈழப்போராட்டம் தொடர்பானவையாகும். உண்மையில் இளங்கோ குறிப்பிடுவதைப் போல “ பௌதீகமான நூல்களை தான் அழிக்க முடியும், இனமொன்றின் வரலாற்றை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது என்பதே உண்மை. அதற்கு ஆதாரமாகத்தான் இன்றைக்கும் ஈழப் போராட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் நிறைய நூல்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.”

ஒவ்வொரு நூல் தொடர்பாகவும் தனது பார்வையை விரிவாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆழமாகவும் சிறந்த முறையிலும் விவரித்திருக்கிறார் இளங்கோ.உண்மையில் நூல் தொடர்பாக அவர் முன்வைப்புச் செய்துள்ள விதம் அவற்றை பற்றிய தெளிவான பரந்த அறிவை வாசகருக்குத் தந்து விடுகின்றது.
 
 
இந்நூலின் வாசிப்பின் பல தருணங்களில் என்னுடைய போர்க்கால நினைவுகளையும் மீட்டிக் கொள்ள கிடைத்தது.எனக்கு ஆறு வயது இருக்கும் போது ஊரில் திடீரென ஆர்மி சுற்றிவளைப்பு இடம்பெறும். அவர்களது உயர்ந்த வாகனங்களும்  தோற்றமும் இயல்பாகவே எனக்கு அச்சத்தை ஏற்படுத்தும். சிறிய வயது கனவுகளைக் கூட இவை ஆர்ப்பரித்து இருந்தன.

இத்தனைக்கும் கொவிட் காலப்பகுதியில்  என்னுடைய வாசிப்பின் துவக்கத்தில் ஈழப்போர் தொடர்பான நூல்களை வாசித்து அறிந்த போது நான் அனுபவித்ததை விட போர் கொடுத்திருக்கும் வலிகள் மறக்க முடியாத வரலாற்றுப் பாடங்கள் என்பதை உணர முடிந்தது. ஈழப்போர் தொடர்பான சில நூல்களை தொடர்ந்து வாசிக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்திய அனுபவமும் இருக்கின்றது.

இதில் அடங்கியுள்ள  11 எழுத்தாளர்களின் 13 நூல்களில் “போர் உலா” தவிர்ந்த ஏனையவை ஆங்கிலத்தில் வெளி வந்தவை. “போர் உலா” மாத்திரம் தமிழில் வெளிவந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யப்படுள்ள நூலாகும்.

புலம்பெயர்ந்தவர்கள்,போராளிகளாக இருந்தவர்கள், வெளிநாட்டவர்கள் என பதின்மூன்று நூல்களும் ஈழப்போர் தொடர்பான வெவ்வேறு பட்ட அனுபவங்களை கொண்டவர்களால் எழுதப்பட்டுள்ளமையினால் போர் தொடர்பான ஆழமான அதே போன்று வித்தியாசமான பார்வையை இந்நூல் தருகின்றது.

குறிப்பாக ஒவ்வொரு நூல் தொடர்பாக அறிமுகம் தருகின்ற போதும் அதனை விவரிக்கின்ற போதும் இளங்கோவின் வாசிப்பின் ஆழத்தையும் எழுத்து நடையின் அழகையும் ரசிக்காமலும் வியக்காமலும் இருக்க முடியாது.

னுக் அருட்பிரகாசத்தின் “வடக்கிற்கான ஒரு பயணம்” நூலைப் பற்றி ஆரம்பிக்கும் போது மிக அழகாக அதன் தனித்துவத்தையும் ‘மான் புக்கர் ‘ பரிசின் குறும்பட்டியல் வரை அவரைக் கொண்டு சென்ற காரணத்தையும் இவ்வாறு குறிப்பிட்டு ஆரம்பிக்கின்றார்.

“எல்லாக் கதைகளும் எழுதப்பட்டு விட்டதெனின், எந்தக் கதையைப் புதிதாகச் சொல்வது என்பது எழுதுபவர்க்கு எப்போதும் குழப்பமாக இருக்கும் ஒரு விடயமாகும். பரவலாகத் தெரிந்த கதையை, அதிலும் சமகாலத்தில் நிகழ்ந்ததை யாரேனும் எழுதப் போகின்றார்களென்றால் அது இன்னும் கடினமாகி விடும். ஆனால் தெரிந்த கதையாக இருந்தாலும், புதிதாய்ச் சொல்லமுடியும் என்று நம்பியதன் விளைவாகவே அனுக் அருட்பிரகாசத்தின் “வடக்கிற்கான ஒரு பயணம்” நமக்கு கிடைத்திருக்கின்றது. அது இதுவரை இலங்கையில் இருக்கும் எந்த தமிழ் எழுத்தாளருக்கும் வாய்க்காத மான் புக்கர் பரிசின் குறும்பட்டியல் வரை அவரைக் கொண்டு சென்றிருக்கின்றது.”

குறிப்பாக இதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் நூல்களைப் பொறுத்த வரை 1983 ஜுலைக்கலவரம், 1974 தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 1981 யாழ் நூலக எரிப்பு போன்றவை அம்மக்கள் மனதில் ஏற்படுத்தி உள்ள பாதிப்புக்கள் அவற்றால் அவர்கள் வாழ்வியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்பவற்றின் தாக்கங்களை அறிய முடிகிறது.

அதே போன்று சொந்த நாட்டில் பிரச்சினை என்று வலிகளோடு வெளியாகிய மக்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் அனுபவிக்கும் வலிகளும், சவால்களும் இங்கு குறபிப்பிடப்பட்டிருக்கும்  சாரோன் பாலாவின் “படகு மக்கள்”, ரோம் ரத்தினவேல் அவர்களின் “கைதி#1056”, லோகதாசன் தர்ம துரையின்“ஓர் ஈழத் தமிழரின் புகலிட வாழ்வு” ஆகிய நூல்களின் வாயிலாக உணர முடிகின்றது. மீண்டும் மீண்டும் வாழ்வை கட்டியெழுப்ப வேண்டிய தேவை, அந்நிய கலாசாரத்திற்கு தங்களை பழக்கப் படுத்த வேண்டிய இருக்கின்றமை, புதிய மொழி இவை எல்லாம் அவர்களை உளச்சிக்கலுக்கு ஆளாக்குகின்றது. ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்டு சொந்த நிலத்தை விட்டுச் செல்லும் மக்களுக்கு இவை எல்லாம் மிகப்பெரும் சவாலாகவே அமைந்திருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நூல்களை நாங்கள் முழுமையாக வாசிக்க விட்டாலும் இளங்கோவின் எழுத்து வாயிலாக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள வலிகளை எம்மால் உணர முடிகிறது.

ரோய் ரத்தினவேல் அவர்களின் “கைதி-1056” சுயசரிதை நூலில் குறிப்பிடப்படும் பூசா சிறை அனுபவம்,அனுக் அருட்பிரகாசத்தின் வடக்கிற்கான பயணம் நூலில் வரும் ராணியின் மகன் அவர் மடியிலேயே செல் துண்டு பட்டு இறந்து போதல், மலரவனின் “போர் உலா” நூலில் வரும் அவரது தமையன் பிடிபட்டு நான்காம் நாள் விடிகாலையில் தாயும் மலரவனும் முகாமிற்குச் சென்றதை மலரவன் எழுதி இருப்பது போன்றவை ஆழமான சிந்தனைக்குள் எம்மை இழுத்து விடுகின்றது.

உண்மையில்  இந்தப் போர் எதைத் தான் எமக்கு விட்டுச் சென்றிருக்கின்றது என்ற கேள்வி எமக்கு எழாமல் இல்லை. இளங்கோ கூறுவதைப் போல..

“இறந்தவர்கள் எந்தத் தரப்பாயினும்  அவர்கள் மீண்டு வரவா போகின்றார்கள்? அன்று முகாமை தாக்கி வெற்றி கொண்டவர்கள் பின்னர் தோற்றுப் போயிருக்கின்றனர். அன்று தோற்றுவர்கள் பிறகு வென்றிருக்கின்றனர் எனில் இந்த யுத்தங்கள் எதைத்தான் நமக்கு கொண்டு வந்திருக்கின்றன? இழப்புகளையும் வெறுப்புகளையும் காலத்தால் ஆற்ற முடியாத வடுக்களையும் அல்லவா  நினைவுகளாக அவை விட்டுச் சென்றிருக்கின்றன.”

இது வாசிப்பனுபவம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு என்றாலும் இளங்கோவின் வாசிப்பின் ஆழமும் குறிப்பிட்ட பரப்புக்களில்  அவருக்கு இருக்கும் பரந்துபட்ட அறிவும் சில விடயங்களை அவர் விவாதிக்கும் திறனும் குறிப்பிட்ட விடயப் பரப்புக்கள் தொடர்பாக நம்மையும் தேட வைக்கின்றது. அத்தோடு இன்னும் வாசிக்க வேண்டிய தேவைப்பாடு நமக்கு இருக்கின்றது என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கின்றது.

***

(மட்டக்களப்பில் நிகழ்ந்த 'இருத்தலின் மீது கவிழ்ந்த இன்மைகள்' நூல் அறிமுக நிகழ்வில் றிஹானா உரையாற்றியதன் சுருக்கமான வடிவம் இது)

 

ஒரு வாசகர் கடிதம்

Wednesday, August 05, 2026


(இன்று எனக்கு அழகான ஒரு கடிதம் மின்னஞ்சலினூடு வந்து சேர்ந்தது. ஓர் எழுத்தாளர் அவர் வாழ்வில் அவரின் எழுத்துக்களைக் கொண்டாடும் ஒரு சில வாசகர்களைக் கண்டைந்துவிட்டாலே தொடர்ந்து சலிப்பின்றி எழுதமுடியும் என்று நம்புகின்றவன் நான். 

அப்படியான ஒரு இளம் வாசகரை கண்டடைந்து மனம் மகிழ்ச்சியில் ததும்பிய தருணம் இது.  

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் இது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பின் பின் அசல் கடிதம் வரும். ~இளங்கோ, மே 16, 2026)

****

அன்புள்ள இளங்கோ,

இந்தக் கடிதம் மிகவும் குழப்பமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் எங்கே தொடங்குவது, என்ன தட்டச்சு செய்வது, உங்களிடம் என்ன சொல்லுவது என்று எனக்குத் தெரியவில்லை. என்னுள் சொல்ல முடியாத அளவுக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

என்னுடைய நண்பர்களின் சிறிய வட்டத்தில் நீங்கள் ஒரு செலிபிரிட்டி. நிச்சயமாக நீங்கள் ஒரு செலிபிரிட்டிதான். ஆனால் எனக்கு நீங்கள் ஒரு எழுத்தாளர் மட்டுமாகத் தோன்றவில்லை. சில நேரங்களில் பெரிய அண்ணன் போலவும், சில நேரங்களில் நண்பன் போலவும், சில நேரங்களில் எழுத்தின் மூலம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயலும் மனச்சோர்வில் இருக்கும் ஒருவரைப் போலவும் தோன்றுகிறீர்கள்.

நான் உங்களிடம் மிகவும் நீண்ட காலமாகப் பேச வேண்டும் என்று நினைத்தேன். குறைந்தபட்சம் ஒரு மெசேஜ் அனுப்பவேண்டும் என்று. ஆகக் குறைந்தது ஏதாவது உங்களுக்கு எழுதவேண்டும் என்றாவது. ஆனால் அதைச் செய்ய முடியவில்லை. ஏனெனில் நான் முதல் ஏழு Harry Potter படங்களைப் பார்த்துவிட்டு, அது முடிந்துவிடக் கூடாது என்பதற்காக எட்டாவது படத்தை மிகவும் நீண்ட நாட்கள் தவிர்த்தவனாக இருக்கிறேன். அந்த அளவுக்கு நான் sentimental.

அதனால் இந்த விஷயத்திலும், நான் உங்களுக்கு மெசேஜ் அனுப்பினால், என் மனதில் உங்களுடன் உருவாக்கியிருந்த இந்த உறவு எப்படியோ உடைந்து போய்விடுமோ என்று தோன்றியது. ஒரு எழுத்தாளராகவும், எனக்குத் தெரியாமலே எனக்குக் கற்றுக்கொடுக்கும் ஒரு அண்ணனாகவும், ஒரு mentor, teacher அல்லது இன்னும் சரியாக பெயரிட முடியாத ஏதோ ஒன்றாகவும் நீங்கள் இருக்கின்றீர்கள்.

உங்களால் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அதே சமயம் என்னுள் இருந்த பல விஷயங்களை நியாயப்படுத்திக்கொள்ளவும் முடிந்தது. அதை சரியாக எப்படி விளக்குவது என்று கூட எனக்குத் தெரியவில்லை.

'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்' புத்தகத்தில் நீங்கள் Osho பற்றி குறிப்பிட்டதை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். உண்மையாகச் சொன்னால் அந்த புத்தகத்தின் தலைப்பு முழுமையாக எனக்கு விளங்கவில்லை. ஆனால் அதில் ஓஷோவை மக்கள் ஆழ்ந்து படிக்கக் கூடாது, அப்படிப் படித்துவிட்டால் வாழ்க்கையைப் பற்றிய சுவாரசியம் சிலவேளைகளில் குறைந்து போகலாம் என்று நீங்கள் சொன்னது நினைவில் இருக்கிறது. ஆனால் நீங்கள் ஓஷோவைப் படித்திருந்தீர்கள். அதனால் நானும் படித்தேன். அது எனக்கு முற்றிலும் வேறொரு perspective கொடுத்தது. நான் அதிகமாக ஓஷோவைப் படிப்பவன் இல்லை, ஆனாலும் உங்களால் அவரை வாசித்துப் பார்த்திருக்கிறேன்.

உங்களின் 'தாய்லாந்து' புத்தகம்தான் இப்போது நான் வாசித்துக்கொண்டிருப்பது. அதில் என்னைப் பாதித்து எனக்குள் சேகரமாயிருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், ஒவ்வொருவருவம் அவரவர் வாழ்க்கையிலிருந்து வெளியேறிச் சென்றவர்களுக்குக் கூட நன்றி சொல்ல வேண்டும் என்று நீங்கள் கூறியது. ஏனெனில் அதுவே புதிய மனிதர்களை அறிமுகம் செய்வதற்கான இடத்தை எமக்குள் உருவாக்கின்றது என்று சொல்லியிருப்பீர்கள்.

இன்னொரு random விஷயம் — நிறையப் படிப்பவர்கள் conversations நடக்கும்போது திடீரென்று random  ஆக விஷயங்களைப் பற்றி பேசுவது. ஏதோ காரணமின்றி அது என்னை மிகவும் justify செய்தது.

என் ஆரம்ப பதின்ம வயதில் நான் உங்களின் 'மெக்ஸிக்கோ' படித்தேன். நான் பிரபலமான எழுத்தாளர்களைப் பின்தொடர்பவனோ, famous books தேடிப்பார்ப்பவனோ அல்ல. பொதுவாக நான் ஒரு நூலகத்துக்குப் போய், ஏதாவது random புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கிவிடுவேன். 

மெக்ஸிக்கோ எங்கள் வீட்டில் இருந்தது. நீங்கள் எழுதும் விதம், நீங்கள் காதலிக்கும் விதம், நீங்கள் மனிதர்களைக் கவனிக்கும் விதம் — இவையெல்லாவற்றையும் நானும் நேசிக்கத் தொடங்கி விட்டேன்.

சில நேரங்களில் உங்கள் எழுத்தை வாசிக்கும்போது அது மிகவும் எளிமையாகவும், சாதாரணமாகவும், almost effortless-ஆகவும் தோன்றுகிறது. ஆனால் திடீரென்று ஒரு random வரியின் நடுவில் நான் நின்று “oh my god this is brilliant” என்று நினைத்திருக்கிறேன். அதுதான் உங்கள் எழுத்தில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தும் விஷயம். மிகவும் எளிமையான ஒன்று திடீரென்று ஆழமானதும் மறக்க முடியாததுமாக மாறிவிடுகிறது.

இதைச் சொல்ல மன்னிக்கவும், ஆனால் நான் புத்தகத்தின் cover-ஐ வைத்து judge செய்யும் மனிதன். ஒருபோதும் எழுத்தாளரை அல்ல. ஆனால் somehow நீங்கள் என்னை உங்களையும் judge செய்ய வைத்துவிட்டீர்கள். ஒருவேளை மிகவும் ஆழமாக.

உங்கள் "மெக்ஸிக்கோ'வையும்,  “நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தாரை" யும்,  "தாய்லாந்தை" யும்,  நான் தொடர்ந்து என்னோடு தொடர்புபடித்தியபடியே  இருக்கிறேன்.

Haha! மன்னிக்கவும், ஆனால் எனக்கு உண்மையாகவே தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் ஏன் இப்படியாக இருக்கிறீர்கள்?

நீங்கள் எழுதும் விதம்… உண்மையாகச் சொன்னால் எனக்கே தெரியவில்லை. உண்மையிலேயே எப்படி எழுதுகின்றீர்கள் என்று தெரியவில்லை.

இதைச் சொல்வதற்கும் மன்னிக்கவும், ஆனால் honestly ஆக உங்கள் book covers எனக்கு ஒருபோதும் interesting-ஆகத் தோன்றவில்லை.

இந்தக் கடிதம் முழுக்க முழுக்க குப்பை என்பது எனக்குத் தெரியும். ஆனால் உங்களிடம் எப்படி பேசுவது என்று எனக்கே தெரியவில்லை.
நான் உங்களிடம் நிறைய விஷயங்கள் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது என் மனம் முழுக்க வெறுமையாக இருக்கிறது. Somehow இன்று குறைந்தபட்சம் இந்த mail-ஐ அனுப்பும் தைரியம் வந்தது.

இந்தக் கடந்த சில நாட்களாக நான் 'தாய்லாந்து' வழியாக மீண்டும் உங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறேன். 'மெக்ஸிக்கோ'வில் இருந்த சில scenes இன்னும் நினைவில் இருக்கின்றன. உங்கள் கதாபாத்திரம் ஒரு hotel bed-ல் laptop திறந்தபடி உட்கார்ந்திருந்திருக்கின்றது என்று நினைக்கிறேன். சரியான scene எனக்கு மறந்துவிட்டது. ஆனால் somehow உங்கள் கதைகளை என் மனதுக்குள் வேறு version-களாக rewrite செய்துவிட்டேன்.

நான் உங்களுக்காக உண்மையாகவே நன்றியுள்ளவன், இளங்கோ.
புவியியல் ரீதியாக நீங்கள் என்னிடமிருந்து 10,000 km-க்கும் அதிக தூரத்தில் இருந்தாலும், நீங்கள் என் இதயத்திற்கு மிகவும் அருகில் இருப்பது போல உணர்கிறேன்.

இவ்வளவு அற்புதமான எழுத்தாளராக இருப்பதற்கு நன்றி.

நான் எப்போதும் மனிதாபிமானத்துக்காக நிற்பவன். போரின் போது நான் இலங்கை அரசையோ அல்லது தமிழ் மக்களையோ கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. நான் எப்போதும் humanity, உயிர்கள், மக்களின் வாழ்வாதாரம் — இவைகளில்தான் அதிகம் நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் உங்கள் கதைகள் சில வழிகளில் என்னை வேறுவிதமாகச் சிந்திக்க வைத்தன.

இது random-ஆகத் தோன்றலாம். ஆனால் இந்தக் கேள்வி மிகவும் நீண்ட காலமாக என் மனதில் இருக்கிறது. நான் ஒருநாள் உங்களை நேரில் சந்தித்தால், நான் முதலில் கேட்கும் விஷயம் இதுதான் என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு “சாம்பல் வானம்” ஏன் இவ்வளவு பிடிக்கும்?

அன்புடன்,
.........

***

Dear Elanko,
 
I know this is going to be a very messy letter because I really don’t know where to start, what to type, or what to tell you. I have so many things inside me.

You’re a celebrity in my small little circle. Of course you’re a celebrity, but to me you feel more than just an author. Sometimes like a big brother, sometimes like a friend, sometimes like a depressed person trying to understand life through writing.

I really wanted to talk to you for a very long time. At least text you. At least write something to you. But I couldn’t do it because I’m the kind of person who watched the first seven Harry Potter movies and avoided the eighth movie for so long just because I didn’t want it to end. That’s how sentimental I am.

So in this case I felt like if I texted you, maybe I would somehow break this relationship I have in my mind with you. As an author, as an older brother who teaches me things without knowing, as a mentor, teacher, or something I still cannot properly name.

I have learned so many things because of you and also justified so many things inside myself because of you. I don’t even know how to explain it properly.

I still remember when you mentioned Osho in Sambal Vanathil Maraikum Vairavar, if I’m not wrong because honestly I’m not fully sure about the book tittle. I remember you saying maybe people shouldn’t read him because once they do they might stop getting excited about life. But you read him, so I did too. It gave me a completely different perspective. I haven’t read a lot, but I still went through it because of you.

Your Thailand book is actually my current read and one thing that really stayed with me was when you talked about thanking the people who left your life because that made space for new people.
And another random thing, the way people who read a lot randomly talk about random things in conversations. That justified me so much for some reason.

During my early teenage years I read Mexico. I’m not really the type of person who follows famous writers or searches for famous books. Usually I just go to a library, pick something random, and start reading. We had Mexico at home and I just fell in love with the way you write, the way you love, the way you observe people.

Sometimes when I read your writing it feels so simple, so normal, almost effortless. And then suddenly in the middle of one random line I stop and think “oh my god this is brilliant.” That’s the thing that surprises me the most about your writing. Something so simple suddenly becomes so deep and unforgettable.

Sorry to say this, but I’m the type of person who judges book covers, never the writer. But somehow you made me judge you too. Too deeply maybe. I keep connecting your Mexico self, your Nanunnai Muthamidukaiyil Buddha Sirithukkondirunthar self, and your Thailand Thai Nilam self.

Haha sorry, but I’m genuinely curious. Why are you like this?

And the way you write... I really don’t know. I genuinely don’t know.

And I’m sorry for saying this too, but honestly I never found your book covers interesting.

I know this letter is total shit but I genuinely don’t know how to talk to you.

I wanted to tell you so many things but right now my mind feels completely empty. Somehow today I got the courage to at least send this mail.

These last couple of days I’ve been meeting you again through Thailand. I still remember scenes from Mexico. I think you were sitting on a hotel bed with your laptop open. I kind of forgot the exact scene, but somehow I rewrote your stories into different versions inside myself.

I’m really grateful for you, Elanko.

Even though you are more than 10,000 km away from me geographically, I feel like you are very close to my heart.

Thank you for being such an amazing author.

I’m someone who always stands for humanity. During war I never blindly supported the Sri Lankan government or Sri Lankan Tamil people. I always believed more in humanity, lives, and people’s livelihoods. But your stories made me think differently in certain ways.

This may sound random, but this question has stayed in my mind for a really long time. If I ever met you in real life, this is probably the first thing I would ask you.

Why do you like “சாம்பல் வானம்” this much?

With love,
........

 

கார்காலக் குறிப்புகள் - 155

Tuesday, July 14, 2026

 

 ஈழம் பற்றிய உரையாடல்கள்!



ஈழம் சார்ந்த விவாதங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட அனுபவங்களால் கட்டியமைக்கப்பட்டிருப்பவை. தனிப்பட்ட அனுபவங்கள் எவ்வளவு முக்கியமோ, அதேயளவு அதைத்தாண்டி பொதுவான வெளிக்குள் ஈழம் சார்ந்த உரையாடல்களை நகர்த்தவும் வேண்டியிருக்கின்றது. தனிப்பட்ட அனுபவங்கள் சார்ந்த விவாதங்கள் இரண்டு தரப்பினரை முதன்மையான எதிரிகளாகக் கட்டமைக்கின்றன. அவரவர்களின் தனிப்பட்ட அனுபவங்களின் நிமித்தம் அவர்கள் இலங்கையரசையோ அல்லது நீண்டகாலமாக போராட்ட களத்தில் இயங்கிய விடுதலைப்புலிகளையோ ஆதரிக்கவோ/எதிர்க்கவோ செய்வதாக விவாதங்கள் முடிந்து போகின்றன. ஆனால் அவ்வாறான ஒரு கறுப்பு வெள்ளைக்குள் ஈழம் சார்ந்த உரையாடல்கள் அமையமுடியாது என்பதுதான் யதார்த்தமாகும்.
 
 
ஆகவே ஈழம் சார்ந்த உரையாடல்களை எல்லாத் தரப்பினரும் பங்குபற்றும் பொதுவான தளத்துக்குள் நகர்த்த வேண்டியிருக்கின்றது. அவ்வாறு நகர்த்தினால் மட்டுமே அடுத்தகட்டத்துக்கான சிந்தனைகளை முன்வைக்க முடியும். அதேவேளை தனிப்பட்ட அனுபவங்களினூடு கிடைக்கும் கசப்பான உண்மைகளையும் ஏற்றுக்கொள்ளுபவர்களாக அனைத்துத் தரப்பினரும் இருந்தாக வேண்டும்.

அதற்கு ஓர் உதாரணமாக 'மாறிய நாட்களும் மாறாத சூரியனும்' என்ற வயிரமுத்து திவ்வியராஜன் எழுதிய நூலைச் சொல்லலாம்.

இந்த நூலில் கடந்தகால கசப்பான உண்மைகளை, தனிப்பட்ட ஒருவரின் அனுபவங்களினூடாகப் பார்க்கின்றோம். அதேவேளை அந்தத் தனிப்பட்ட அனுபவங்களின் நீட்சியில் அதைப் பொதுத்துயரமாக ஆக்கி ஈழம் சார்ந்த உரையாடல்களை உருவாக்க முயல்கின்றதையும் இந்த நூலில் அவதானிக்க முடியும்.

*

திவ்வியராஜன் தனது சிறுவயது அனுபவத்தைச் சொல்லும்போது 1950களிலே இலங்கை இராணுவத்தால் 'ஊரடங்குச் சட்டம்' அமுல்படுத்தப்பட்டு மாலை ஆறுமணிக்குப் பிறகு வீட்டுக்குள் அடங்கிய தமிழ்ச் சமூகத்தின் சுவடுகளைப் பார்க்கின்றோம். அதன் பின்னர் தனிச்சிங்களச் சட்டத்தின் நிமித்தம் சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குதல் நிகழ்ந்து, 1977 இல் 'இனக்கலவரம்' நிகழ்ந்தபோது ஒரு தமிழனாக கொழும்பில் அவர்பட்ட கஷ்டத்தின் அனுபவத்தை நாம் வாசிக்கின்றோம்.


கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படித்து ஓர் அரசாங்க உத்தியோகத்தராக கொழும்பில் வேலை செய்யும்போது 1977 இல் இனக்கலவரம் நிகழ்கின்றது. தமிழராக இருந்து வேலைக்குப் போவது ஆபத்து என்று வீட்டுக்குள் அடங்கி இருக்கும்போது, இவரைத் தேடி அலுவலகம் வந்த நண்பரொருவரை அங்கே வேலை செய்தவர்களின் ஒருபகுதியினர் அறைக்குள் புகுத்தி அடித்துத் துவைக்கின்றது. இந்நிகழ்வை அறிந்த திவ்வியராஜன் அடுத்தநாள் அங்கே போய் இப்படிச் செய்வது நியாயமானதா என்று கேட்கும்போது, அந்த 'காடையர்' கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் ஒரு கம்யூனிஸ்டாக இருப்பதைக் கண்டு அதிர்கின்றார்.

இப்படி ஒரு சிங்கள கம்யூனிஸ்ட் இனவாதியாக மாறினாலும், திவ்யராஜனையும் அவரது சகோதரரையும் கவனமாக பம்பலப்பிட்டி பிள்ளையார்கோயில் அகதிமுகாமிற்கு அனுப்பி யாழ்ப்பாணம் போகும்வரை கவனமாகப் பார்த்துக்கொள்பவர்களாக சிங்களவர்களே இருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணம் வந்து வடமராட்சியில் வாழும் திவ்வியராஜனை, 1984இல் இலங்கை இராணுவம் பல இளைஞர்களோடு சேர்த்து கைதுசெய்து பலாலி இராணுவமுகாமிற்கு அனுப்பி வைக்கின்றது. அப்போதே திவ்யராஜனுக்கு திருமணமாகி மகளும் பிறந்துவிட்டார். அப்படியான ஒரு குடும்பஸ்தவன் எப்படி இயக்கக்காரனாக இருப்பான், மேலும் தானொரு அரச உத்தியோகத்தன் என்று அனைத்து வகைகளிலும் ஆதாரம் காட்டியபோதும், திவ்வியராஜன்  கைதுசெய்யப்படுகின்றார்.
அங்கே கைதியாக இருக்கும் காலத்தில் தப்பியோடும் முயற்சியைச் செய்ய விரும்பும்போதும்,  தப்பும்போது இறந்துவிட்டால் தன் மனைவி/பிள்ளைகள் நிலை என்னவாகும் என்கின்ற யோசனை அதைத் தடுக்கின்றது.  அங்கிருந்த பெரும்பாலான இளைஞர்களை விசாரணையின்றி பூஸா முகாமிற்கு அனுப்பி வைக்கும்போது, ஓர் இராணுவ அதிகாரியின் கருணையில் இவர் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்புகின்றார்.

ஆனால் அந்த வீடு திரும்புதலும் நிம்மதியாக திவ்வியராஜனுக்கு இருப்பதில்லை. அவரது சகோதரர் அப்போது கிழக்கு மாகாணத்தில் நிலஅளவையாளராக வேலை செய்துகொண்டிருக்கின்றார். அவர் அங்கே 'இனந்தெரியாத நபர்களால்' கைதுசெய்யப்பட்டிருக்கின்றார் என்ற தகவல் இரண்டு வாரங்களின் பின் திவ்வியராஜன் குடும்பத்தினருக்குக் கிடைக்கின்றது. தனது தம்பியைத் தேடி கிழக்கு மாகாணத்துக்குப் போகும் திவ்வியராஜன், அவரது தம்பியோடு பத்துப்பேர் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று அறிகின்றார். அப்படி 'காணாமல் போன' அந்தத் தம்பி பிறகு என்றென்றைக்குமாக திரும்பி வருவதில்லை என்பது அவ்வளவு துயரமானது.

*
இப்படியான துயரங்களோடு வாழும் திவ்வியராஜன் பிறகு 1987 'ஒபரேஷன் லிபரேஷன்' என்ற இலங்கை இராணுவத்தின் யாழ் தீபகற்பகத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையால் மீண்டும் கைதுசெய்யப்படுகின்றார். வடமராட்சியில் பெருமளவு ஆளணியுடன் முன்னேறி வந்த இராணுவத்தைக் கண்டு விடுதலைப் புலிகள் பின்வாங்கி ஓடிவிட, இவரைப் போன்ற பல இளைஞர்கள் இராணுவத்தால் பிடிபடுகின்றார்கள். அங்கிருந்து இளைஞர்கள் பலரை சிங்களப் பகுதியில் இருந்த சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்க,  திவ்வியராஜனைக் கைதுசெய்து வைத்த இரண்டு இராணுவத்தின் கருணையாலும், திவ்வியராஜனுக்குத் தெரிந்திருந்த சிங்களத்தாலும் தப்பிச்செல்ல விடப்படுகின்றார் திவ்வியராஜன்.

பின்னர் இந்திய இராணுவத்தால் திவ்வியராஜனுக்கு ஏற்படும் துயரம் இன்னொருவகையானது.  இந்திய இராணுவத்தினர் தமக்கு மரியாதையைக் காவலரணில் தரவில்லை என்பதற்காக இவரது சைக்கிளைத் தோளின் மீது சுமந்துகொண்டு ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாம்வரை போகச் சொன்ன சென்ற தண்டனைகள் எல்லாம் நடந்திருக்கின்றன.

இவ்வாறு ஒருபக்கம் இலங்கை இராணுவம், இந்திய இராணுவம் போன்றவற்றால் ஏற்பட்ட துயரத்தைச் சொல்கின்ற திவ்வியராஜன், இன்னொருபுறத்தில் நமது தமிழ் இயக்கங்கள் செய்த அட்டூழியங்களையும் அதே கசப்புடன் பதிவு செய்கின்றார். மாறி மாறி சகோதர இளைஞர்களைச் சுட்டுக் கொல்கின்றவை, போஸ்ட்கம்பங்களில் குற்றவாளிகள் என்று அறிவித்து மரண தண்டனை  கொடுப்பது...அதுவும் ஒரு இயக்க இளைஞன் தப்பியோடும்போது அவனின் தாயின் முன்னாலே இன்னொரு இயக்கம் சுட்டுக் கொல்கின்றமை எல்லாம் இந்நூலில் குறிப்பிடப்படுகின்றது.

அதுபோல அவ்வளவு சித்திரவதைகொடுத்து 'துரோகி' என்று நாற்சந்தியில் எழுதி வைத்துவிட்டு, சரி இத்தோடு அந்த இளைஞனை விட்டுவிடுவார்கள் என்று நினைத்து முகம் திரும்பும்பொழுதில் நெற்றிப்பொட்டில் அந்த இளைஞனைச் சுட்டுக்கொல்ல, 'அய்யோ' என்று அருகிலிருந்த ஒரு பெண்  தரையில் விழுவதும், இந்தக் கொலையை ஒரு பத்துவயதுச் சிறுவன் பார்த்துக்கொண்டிருப்பதுமென எமது இயக்கங்களின் இரத்தம் தோய்ந்த கரங்களின் வரலாற்றையும்  இதில் திவ்வியராஜன் சொல்கின்றார்.

இந்திய இராணுவ காலங்களில் தெற்கில் எப்படி ஜேவிபியினர் ஒடுக்கப்பட்டனர் என்றும், சிங்களப் பேரினவாதம் தனது சொந்தமொழி பேசும்  சிங்கள இளைஞர்களைக் கூட சும்மா விடாது என்பதற்கான சாட்சியங்கள் இவை என்று சொல்லும் திவ்வியராஜன், எப்படி அதற்கு முன்னர் 1970களில் இதே ஜேவிபியினரை ஒடுக்க சிறிமா அரசுக்கும் இந்திய இந்திராகாந்தி அரசு உதவியது என்பதையும் நினைவூட்டுகின்றார்.

இப்படி தனது சொந்த நலன்கள் என்று வரும்போது தமது உரிமைகளுக்காகப் போராடுபவர்களை துச்சம் என நினைக்கின்ற வல்லரசான இந்தியாவிடந்தான் நமது இயக்கங்கள் ஆயுதப்பயிற்சியை எடுக்கப் போயிருந்தார்கள், அதே இந்திய அரசு தீர்வைத் தருவார்கள் என்று எப்படி நம்பினார்கள் என்றும் திவ்வியராஜன் இடைநடுவில் கேள்விகளை எழுப்புகிறார்.

*

இலங்கையில் இந்திய இராணுவ வெளியேற்றத்தின்பின், பிரேமதாசா அரசுடன் மீண்டும் போர் தொடங்கியபின், திவ்வியராஜன் இனி இலங்கையில் இருப்பது சாத்தியமில்லை என்று தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்குப் படகில் இரகசியமாக ஏறுகின்றார். சாதாரணமாக இரண்டு/மூன்று மணித்தியாலங்களில் முடிந்துவிடும் படகுப் பயணம்,  கிட்டத்தட்ட 18 மணித்தியாலங்கள் கடலுக்குள் நீடித்து திவ்வியராஜனும் அவரது குடும்பத்தினரும் எப்படியோ தப்பிப் பிழைத்து இந்தியாவின் கரைகளை அடைகின்றன்றனர்.

அங்கிருந்து தமிழ்நாடு-கேரளா எல்லையில் அமைந்த தக்கலை அகதிமுகாமில் இவர்கள் (1990களில்) தங்க வைக்கப்படுகின்றனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அந்த அகதிமுகாமில் இருந்த அனுபவங்களை திவ்வியராஜன் விபரிக்கும்போது, இதற்காகவா இந்தியாவுக்கு இவர்கள் தப்பிவந்தார்கள் என்கின்ற மனோநிலையே வாசிப்பவர்க்கு வரும். பிறகு ஒருமாதிரியாக அகதிமுகாமில் இருந்து வெளியேறி, 1994இல் திவ்வியராஜனும் அவரது குடும்பத்தினரும் கனடாவுக்கு வந்து சேர்கின்றனர்.

அப்போதும் இந்திய இமிக்கிரேஷன் அலுவலகர்கள் திமிர்த்தனமாகவே நடந்துகொள்கின்றார்கள். கனடாவுக்கு உரிய விஸாவுடன் (ஏற்கனவே அவரது தமக்கை முறையானர் கனடாவிலிருந்து ஸ்பான்ஸர் செய்கின்றார்) விமானநிலையம் போனபோதும், இது உரிய விஸாவல்ல என்று அந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனர். கிட்டத்தட சில வாரங்களுக்குப் பிறகே அது அசலான விஸா ஆவணம் என்று ஏற்றுக்கொண்டு இவர்களைக் கனடாவுக்கு அனுப்பிவைக்கின்றனர்.

அந்தளவுக்கு அந்த அதிகாரிகள் ஈழத்தமிழர் மீது வெறுப்புற்றிருந்தாலும்,  தனது தாய்/தந்தையரைப் போல தமிழகத்தில் பேணிக்காத்த சில குடும்பத்தவர்களையும், திவ்வியராஜன் பங்குபற்றிய தமிழ்நாடு முற்போக்கு  சங்க கலையிரவுகள் பற்றியும், பல தமிழ்நாட்டு இனிய மனிதர்கள் பற்றியும் இந்நூலில் பதிவு செய்திருக்கின்றார்.

இறுதியில் கனடா 'வேற்றுமையில் ஒற்றுமை காணும்' தன்மை இருப்பது போலவோ, அல்லது யார் முதலில் வந்தோம் என்ற தூய இனக்கூச்சல் இல்லாது எல்லோரும் அமைதியாக வாழ முடிவதைப் போல, ஏன் மூன்று/நான்கு இனங்கள் மட்டும் வாழும் இலங்கையில் அது சாத்தியமில்லாது போய்க்கொண்டிருக்கின்றது என்றும் யோசிக்கின்றார்.

அதேவேளை நாம் எமது உரிமைகளைக் கேட்கின்றபோது, நம்மளவில் சரியானவர்களாக இருக்கின்றோமா என்ற கேள்விகளையும் இந்த நூலில் திவ்வியராஜன் சுட்டிக்காட்டுகின்றார். முக்கியமாக வடமாகாணத்தில் இருந்து 70,000 இற்கு மேற்பட்ட முஸ்லிம்களை ஒரே நாளில் நாம் அவர்களின் பூர்வீக நிலங்களில் இருந்து துரத்தியதையும், கோயில்களில் அகதிகளாக மக்கள் தங்கியபோது நுழைவாயில் கதவுகளைத் திறந்துவிட மறுத்ததையும், அகதிகளாக தங்கிய தங்கள் கிணறுகளில் வந்து தண்ணீர் குடித்துவிடக்கூடாது என்று சாதிவெறியுடன் குப்பைகளை அந்தக் கிணற்றுக்குள் நிரப்பிய நிகழ்வுகளையும் கவனப்படுத்துகின்றார். நாம் தமிழர்களாக சிங்களப் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அதேவேளை இன்னொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்களைத் துரத்துவதும், நமக்குள்ளே சாதிய அடிப்படையில் மற்றவர்களையும் ஒடுக்கிக்கொண்டும் இருக்கின்றோம் என்றால், நாம் நம்மை நோக்கியும் பெருமளவான கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கின்றது என்பதையும் இந்த நூல் கவனமாக பரிசீலனை செய்யச் சொல்கின்றது.

இந்த நூல் 2014இல் வெளிவந்திருக்கின்றது. இப்போது ஆயுதப்போராட்டம் முடிந்தே கிட்டத்தட்ட17 வருடங்கள் கடந்துவிட்டன. நாம் இத்தனை ஆண்டுகளுக்குள் புதிய உரையாடல்களை நிகழ்த்தி அரசியல்/சமூகம் சார்ந்து எங்கேயோ நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் பழைய கதைபேசி புகழ்ந்து அல்லது திட்டி கடந்தகாலத்தில் மட்டுமாக உறைந்துவிட்டிருக்கின்றோம். அப்படி ஓர் அரசியல் மாற்றம் நிகழ்ந்திருந்தால், நாம் இப்போதும் அதேபழையபாணி அரசியல் சிந்தனைகளுக்குள்ளோ/ அரசியல் கட்சிகளுக்குள்ளோ அடைக்கலம் ஆகியிருக்கமாடோம்.

அதே பழைய கோஷம்! அதே பழைய பெருமிதம்! அதே பழைய இயக்கங்களின் 'ஒற்றை' அரசியல் பாதைகள்! ஆக நாம் அப்போதும் இப்போதும் ஏதோ ஓன்றுக்கான எதிர்ப்பு அரசியலை மட்டும் செய்து கொண்டிருக்கின்றோமே தவிர, ஒருபோதும் புதிய அரசியல் செல்நெறிகளை தொடங்கவோ, புதிய grass roots movements பற்றிச் சிந்திக்கவோ இல்லை என்பதே கசப்பான யதார்த்தம்.

ஆகக்குறைந்தது ஒற்றைக்கதையாடல்களினால் ஈழப்போராட்ட வரலாற்றைக் கட்டமைக்கும் ஆபத்தை, ஒருபக்க அரசியல் சார்பாக மட்டும் நின்று பேசுவதன் அபத்தத்தை, நமக்கு மென்குரலில் மறுத்து சொல்வதற்காகவேனும் இப்படி திவ்வியராஜன் போன்றோர் கடந்துவந்த அனுபவங்களினூடாக எழுதிய சில பனுவல்களாவது நம் கைகளில் இருக்கின்றன என்று இப்போதைக்கு நாம் கொஞ்சம் நிம்மதியடைய வேண்டியதுதான்.

****

நன்றி: 'யாவரும்'/ஆனி-ஆவணி மின்னிதழ்

 

கார்காலக் குறிப்புகள் - 154

Friday, July 10, 2026


Money Heist எனக்குப் பிடித்த ஒரு தொடராக இருப்பதற்கு எத்தனையோ 
காரணங்கள் இருந்தாலும் எனக்கு அது ஸ்பானியப் பின்புலத்தில் இருந்து வெளிவந்த ஒரு தொடர் என்பதுதான் முக்கிய காரணம். மேலும் Money Heist முதல் மூன்று சீஸன்களில் இருந்த சுவாரசியம் பின்னர் வந்த இரண்டு சீஸன்களில் இருக்கவில்லை. ஸ்பெயினுக்கு வெளியே வந்து சட்டென்று உலகக் கவனத்தை ஈர்த்த தொடராகியதால், பின்னர் மேலும் நீட்டிக்கப்பட்டதால் வந்த வினை  என நினைக்கின்றேன். அது  பல வெற்றிகரமான தொடர்களுக்கு இறுதியில் வழமையாக நிகழ்வதுதான்.
 



ஐந்து தொடர்களுடன் முடித்தாலும், அதை அப்படியே விட்டுவிடக்கூடாது என்று Pre sequal எடுக்கத் தொடங்கினார்கள். அப்படியான முதல் வந்த தொடர்தான் Berlin and the jewel of Paris. பெயரிலே இருப்பதுபோல இதில் பேராசிரியர் அல்ல, பெர்லின் தான் முதன்மைப் பாத்திரம். பெர்லினும் இன்னொரு பேராசிரியரும், மூன்று முக்கிய பாத்திரங்களும் மட்டுமேயுள்ள தொடர் அது. இவர்களோடு எனக்குப் பிடித்த அழகியான கமரோன் பின்னர் இந்தத் திருட்டுக் கூட்டத்தில் வந்து சேர்வார்.

இந்தத் தொடர் மூன்று வருடங்களுக்கு முன்னர் வந்தது. இப்போது அடுத்த ஒரு Pre sequal ஆக, Berlin and the Lady With an Ermine வந்திருக்கின்றது. முதல் தொடர் பிரான்ஸில் என்றால் இந்தத் தொடர் ஸ்பெயினில். இன்னும் திருத்தமாகச் சொல்வதென்றால் Seville இல் நடப்பது. அதேவேளை போலந்தில் இருக்கும் லியானார்டோ டாவின்ஸியின் ஓவியத்தைத் திருடுவதற்கான திட்டம் (அல்லது பாசாங்கு) சமாந்திரமாக இந்தத் தொடரில் நடக்கின்றது.

இந்தத் தொடரில் அவ்வளவு அழகான செபியாவை (எஸ்பநோல் உச்சரிப்பு) காட்டுகின்றனர். இதற்கு முன்னர் வந்த Money Heist இன் மயிர்கூச்செரியும் சாகசம் இதில் அவ்வளவு இல்லை. காதல் மட்டும் கட்டுக்கடங்காமல் ஓடுகின்றது. அதிலும் பெர்லினுக்கும் அவரது புதிய காதலிக்கும் வரும் காதல் காட்சிகள் அவ்வளவு இரசிக்கத்தக்கவை. அதேபோன்று களவுக்குப் போவதைவிட தனிமனித உறவுகளுக்குள்தான் இதில் ஆழப் போகின்றார்கள்.

கடைசி எபிஸோட்டில்தான் கொஞ்சம் வீரசாகசம் இருக்கின்றது. அதையும் அவ்வளவு விரைவாக ஓடி முடித்து விடுகின்றார்கள். எனக்கென்னவோ  Money Heist திரைக்கதை ஆசிரியர்கள் நமது சாண்டியலினின் 'கடல்புறா'வை வாசித்திருப்பார்களோ என்று தோன்றுகின்றது. கடல்புறா மூன்று பகுதிகள் கொண்டது. எல்லாப் போர் சாகசங்களும் மூன்றாம் பகுதியில்தான் தெளிவாக வருகின்றது. முதலாம் இரண்டாம் பகுதியில் சண்டைகள் எல்லாம் கெரில்லாச் சண்டைகள் போலத்தான் இருக்கும். அதைத்தாண்டி இளையபல்லவன் முதலாம்பகுதியில் காஞ்சனாதேவியுடனும், இரண்டாம்பகுதியில் மஞ்சளகியுடனும் காதல் சரசங்கள் செய்வதுதான் பலாப்பழத்தை தேனில் நனைத்துப் பரிமாறுவது போல எழுதப்பட்டிருக்கும்.

Money Heistகாரர்,  Pre sequal இப்போது எடுத்துக் கொண்டிருப்பதே பலவேறு வகைக் காதலைப் பிழிந்து தருவதற்குத்தானோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்கின்றது. இந்த வீரசாகசக் கதைகளை விட காதல் எவ்வளவோ மேன்மையானதுதானே? அதுவும் ஸ்பானியக்காரிகள் காதலிப்பதைப் பார்ப்பது என்னைப் போன்றவர்களுக்குத் திகட்டித்தான் போய்விடுமா என்ன?

இந்தத் தொடரில் ஒரேயொரு கவலை, எனக்குப் பிடித்த அழகியான கமரோனைக் கொன்றுவிட்டனர் என்பதுதான். எனினும் கமரோன் அடுத்த சீஸன் வந்தால் மீள உயிர்ப்பார் போலத்தான் எனக்குத் தோன்றுகிறது.

***

 

டி.தருமராஜ்ஜின் 'ஜல்லிக்கட்டு' நூலை முன்வைத்து..

Wednesday, July 08, 2026

 

1.


சில நூல்களை வாசிக்கும்போது அவை அவ்வளவு எளிதில் முடிந்துவிடக்கூடாது என்று தோன்றும். அவ்வாறு இந்த ஆண்டில் வெளியான இரண்டு நூல்களை மிக நிதானமாக வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒன்று வி.அமலன் ஸ்டேன்லி எழுதிய 'புத்தம்' மற்றது டி.தருமராஜ் எழுதிய 'ஜல்லிக்கட்டு'.

இவ்வளவு புதுமையும், சுவாரசியமுள்ள ஒரு நூலை அண்மையில் வாசித்ததில்லையென்ற வியப்பே ஜல்லிக்கட்டை வாசித்து முடித்தபோது தோன்றியது.

ஜல்லிக்கட்டு ஒரு புள்ளியே தவிர இந்த நூல் அதைத் தாண்டி பல பல அற்புதமான  பக்கங்களைத் தொட்டுச் செல்கின்றது. தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு தடைக்கு (2017) எதிராக நடந்த ஒரு 'வெகுசன'ப் போராட்டத்தை இது சமகாலத்தில் மட்டும் வைத்து  பேசுவதில்லை. தமிழின் சங்ககாலத்தில் இருந்து தொடங்கி  பின்னமைப்பியல்/பின் நவீனத்துவம்வரை  இந்த 'வெகுசன'ப் போராட்டத்தை  முன்வைத்து இந்நூல் மதிப்பீடு செய்கின்றது. இங்கே வெகுசனப் போராட்டம் என்று அடைப்புக்குறிக்குள் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், இந்த நூலில் வெகுசனம் வேறானது, மக்கள் வேறானது என்று தொடர்ந்து டி.தருமராஜ் வலியுறுத்தியபடி வருகின்றார்.

Uploaded Image

இந்த நூலை ஒருவகையில் ஆய்வு நூலாகவும், இன்னொருபுறம் ஒரு புனைவாகவும் வாசிக்க முடிவதுதான் சுவாரயம் தருவது. இந்த நூலில் குறிப்புகளாக அல்லது சுருக்கமாகச் சொல்லப்படும் விடயங்கள் பற்றிய அடிக்குறிப்புகளே இருநூறுக்கும் மேலே வரக்கூடியது. பல்கலைக்கழக ஆய்வுகளின் அடிக்குறிப்புகள் போன்று வறண்டதன்மையில் இல்லாது, அந்த அடிக்குறிப்புகளில் குறிப்பிடப்படும் நூல்களைத் தேடி வாசிக்கவேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டுமளவுக்கு இந்த நூல்களின் அடிச்சாரத்தை 'ஜல்லிக்கட்டு' நூலில் தருமராஜ் பாவித்திருப்பதுதான் கவனப்படுத்த வேண்டியதாகும்.

என்னைப் போன்ற தமிழின் சங்கப் பாடல்களை ஆழ வாசிக்கவேண்டும் என்று விரும்புபவர்க்கு (அதேவேளை சோம்பலுடன் இருப்பவர்க்கு), இங்கே தருமராஜ் எடுத்தாளும் சங்கப் பாடல்கள்,  அவ்வளவு ஈர்ப்புடன் பழந்தமிழ் இலக்கியம் நோக்கி இழுத்துச் செல்கின்றது. ஐந்திணைகளில் குறிஞ்சி நிலத்தை, அங்கிருந்த வள்ளல்களை (பாரி, பேகன்) போன்றவர்களை மூவேந்தர்கள் எதற்காய் ஆக்கிரமித்தார்கள் என்றும், எப்படி யவனர்களின் வருகையுடன் அந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றது என்றும், அதனால் எப்படி அவர்கள் அதுவரைகாலமும் இருந்த செழுமையான வாழ்க்கையிலிருந்து அவர்கள் இழிசன மக்களாக ஆகினார்கள் என்ற ஒரு புது திணைக்கோட்பாட்டை டி.தருமராஜ் முன்வைக்கும்போது அவ்வளவு சிலிர்ப்பாக இருக்கிறது.

தமிழின் தொன்மையான நூல்களை மார்க்சிய/பின்னமைப்பியல் தளாங்களில் ஒப்பிட்டு தமிழவன் போன்ற அரிதானவர்களே மிக இயல்பாக எழுதியதை வாசித்திருக்கின்றேன். தமிழவனுக்குப் பிறகு, தமிழின் தொன்மையை பின்னமைப்பியல் புள்ளியில் வைத்து டி.தருமராஜ் எழுதியிருப்பது இந்த நூலை வாசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பொழுதும் மகிழ்ச்சி தந்து கொண்டிருந்தது.
'மார்க்சியம் இந்த நூலின் அடிப்படையக் காரணியாக இருப்பதை வாசிக்கும் நீங்கள் அறியலாம்' என்று தருமராஜ் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டாலும், அதுவே பெரும்பாலான ஆய்வுகளுக்கு இயல்பு என்றாலும், என்னால் இந்த நூலை மார்க்சியம் தாண்டிய பின்னமைப்பியல்/பின நவீனத்துவ தளத்தில் அதிகம் வைத்தே வாசிக்க முடிந்தது. சிலவேளைகளில் என் வாசிப்பின் ஒரு சார்புநிலையாக இருக்கலாம். ஆனால் அப்படி வாசித்துப் பார்த்துக் கொண்டிருப்பதே எனக்குச் சுவாரசியமாக இருந்தது.

2.

இந்த நூல் 'ஆடிப்பெருக்கு-கிளர்ச்சியின் சூத்திரம்', தற்செயலும் வரலாறும் - காளையின் வம்சாவழி', 'காளை அரசியல்', 'பண்பாட்டுப் பதற்றம்', 'முதலீட்டீயமும் நாட்டுப்புறவியலும்' என்ற ஐம்பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், இந்த ஒவ்வொரு பகுதியும் தனித்தனியே ஒவ்வொரு நூலாக வைத்து உரையாடுவதற்கான பல புள்ளிகளைக் கொண்டிருக்கின்றது.

ஜல்லிக்கட்டு என்பது கிராமப் புறங்களில் நடைபெறும் ஒரு விளையாட்டு. ஆனால் அது தடைசெய்யப்பட்டபோது எப்படி நகரத்தார் இதை ஒரு வெகுசனப்போராட்டமாக ஆக்கினார்கள், இப்படி முரணான புள்ளிகள் ஒருங்கிணைந்த (கிராமத்தார்/நகரத்தார்) போராட்டத்தை எப்படிப் எதிர்கொள்வது என்ற குழப்பத்தை இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் கொடுத்தது, மதுரையில் அந்தப் போராட்டத்தை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்த தனக்கு இதை எப்படிப் புரிந்துகொள்வது என்ற சிந்தனையில் தோன்றியதே இந்த நூல் என்கின்றார் தருமராஜ். நாட்டுப்புறவியலில்  'வழக்காறு' என்பதே நிகழ்த்தப்படுவதுதானே, ஆனால் இங்கே 'நிகழ்த்தப்படாத வழக்காறை' எவ்வாறு எதிர்கொள்வது என்ற திகைப்பைத் தன்னைப் போன்ற நாட்டுப்புறவியலாளர்கள் சந்தித்தனர் என அவர் தொடர்ந்து எழுதிச் செல்கிறார்.

மேலும் விஜய் (தற்போது தமிழக முதலமைச்சர்) 'தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியபோது அது ஏற்படுத்திய ஆரவாரத்தையும், அவரது அரசியல் புள்ளியையும் பார்த்தபோது, 'அது அலங்காநல்லூர்/அவனியாபுரம் ஜல்லிக்கட்டைப் பார்ப்பது போன்று இருந்தது, அதாவது விஜய் தன்னை இரகசியம் போல பூட்டி பூட்டி வைத்துக் கொள்வதும், அவரது பிரசன்னம் சில மணித்துளிகளே இருப்பதுபோல அரசியல் கூட்டத்தை வடிவமைத்துக் கொள்வதும், அந்த சில மனித்துணிகளில் காணப்படும் பாய்ச்சலையும், அதைக்காணும் வெகுசனம் உச்சக்கட்ட எழுச்சியை அடைவதும் ஜல்லிக்காட்டு என்கின்ற வீரவிளையாட்டின் ஒழுங்கமைப்பை ஒத்திருந்தது' என்றும் தருமராஜ் முன்னுரையில் எழுதிச் செல்வது, இன்று அரசியல்/பண்பாட்டுக் களங்களில் செயலாற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய புள்ளியாகும்.

ஜல்லிக்கட்டு வெகுசனப் போராட்டத்தில் கடைசிவரை ஜல்லிக்கட்டு காளை சீறிப்பாயவே இல்லை. ஆனால் அதே ஒழுங்கில் அறிந்தோ/அறியாமலோ வாடிவாசலில் இதோ பாய்கின்றேன் என்று உறுமிக் கொண்டிருந்த ஒரு காளை அரசியல் களத்தில்  சீறிப் பாய்ந்திருக்கின்றது. பாய்ந்தது மட்டுமில்லை பலரும் எதிர்பார்க்காத, யாராலும் அடக்கமுடியாத அரசியல் காளையாக நின்று வென்றும் காட்டியிருக்கின்றது. இந்த எதிர்பாராத விஜய் என்ற ஜல்லிக்காட்டுக் காளையின் வெற்றி எவராலும் கணிக்கமுடியாதது மட்டுமில்லை, எந்த வகைக்குள் வைத்து இதை மதிப்பீடு செய்வது என்ற குழப்பத்தையும் பல ஆய்வாளர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால் அதைச் சரியாக 'வெகுசனப் போராட்டம்' என்றவகையில் கணித்தவராக மட்டுமின்றி அதற்கான பின்னணிச் சூழலோடு நுட்பமாக விளங்கிக் கொண்டவராகவும் தருமராஜ் இருந்திருக்கின்றார்.

இந்தப் பெரும் நூல் வெளிவந்ததும், இந்த வெகுசனத் திரளைச் சரியாக விளங்கி விஜய் தமிழக முதலமைச்சரானதும் நம் தமிழ்ச் சூழலில் அரிதாக நிகழும் ஓர் நிகழ்வென்றே சொல்லவேண்டும். ஏனெனில் ஆய்வுகள் என்பதே வரலாற்றுச் சம்பவங்கள் நடந்தபின்னே முடிவுகளைக் கண்டடைவதாக இருக்கும்போது, ஜல்லிக்கட்டு எதிர்ப்புப் போராட்டத்தை முன்வைத்து, அதற்கு எந்த நேரடித் தொடர்பும் இல்லாதபோதும், வெகுசனம் திரண்ட பின்னணிச்சூழலை சரியாகப் புரிந்துகொண்டு (அல்லது புரியாமலே) அதேபாணியில் ஓர் அரசியல் மாற்றத்தை நிகழ்த்தியது என்பது எவ்வளவு வியப்பானது.
Uploaded Image


இதேநேரத்தில் டி.தருமராஜ்ஜின் இந்த நூலை முன்வைத்து இலங்கையில், பங்களாதேஷில், நேபாளத்தில் நிகழ்ந்த ஸென் ஸீ போராட்டங்களைப் பார்க்க முடியும் என்கின்ற ஜெயமோகன் போன்றவர்களின் கருத்துக்களோடு நான் சில புள்ளிகளில் முரண்படவும் செய்கின்றேன். இலங்கையிலோ இன்னபிற தென்கிழக்காசிய நாடுகளிலோ நடந்த போராட்டங்களில் ஒரு முதன்மையான எதிரி கண்முன்னே தெளிவாக இருந்தது. இலங்கையில் பொருளாதரத்தால் நாட்டைச் சீரழித்த (அவ்வாறே நேபாளத்தில்) ராஜபகஷே ஆட்சிப்பீடத்தில் இருக்கும்போதே இந்த வெகுசனப் போராட்டம் தொடங்கியது.

அங்கே ஏற்கனவே ஜல்லிக்காட்டுக் காளை களத்துக்குள்ளே பாய்ந்துவிட்டது. காளையை அடக்கவேண்டும் என்கின்ற உணர்வு போராட்டம் தொடங்கியபோது அந்த வெகுசனத் திரளுக்கு வந்துவிட்டது. ஆனால் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்காட்டு தடைப் போராட்டத்திலோ அல்லது விஜய் தமிழக முதலமைச்சரானபோதோ ஒரு தெளிவான எதிரி என்று வெகுசனத்துக்கு இருக்கவில்லை. அதாவது ஜல்லிக்கட்டுக்காளை களத்துக்குள் இறங்கவேயில்லை. அது அவிழ்த்துவிடாத ஒரு காளையாக மூசிக்கொண்டு வாடிவாசலை விட்டு இறங்காதிருந்தது என்பதே இவற்றுக்கு இடையிலான வித்தியாசமாகும்.

3.

எனக்கு இந்த ஜல்லிக்கட்டு நூலில் மிகப்பிடித்ததே தருமராஜ் எதையும் claim செய்யாத தன்மை. எனது நூலான 'பேயாய் உழலும் சிறுமனமே' அல்புனைவுத் தொகுப்பு வந்தபோது இடதுசாரிப் பின்னணியில் வந்த எனக்கு முன்னிலிருந்த தலைமுறையச் சேர்த்த ஒரு நண்பர், தங்கள் தலைமுறையில் ஒரு விடயம் குறித்து கறாரான முடிவெடுத்து உறுதியாக எழுதுவோம், ஆனால் இந்தத் தலைமுறை (என்னைப் போன்றவர்கள்) எல்லாவற்றையும் கேள்விகளுடன், சந்தேகங்களுடனும் அணுகின்றார்களே தவிர அறுதியான உறுதிகளை எடுக்கத் தயங்குகின்றார்கள்' என்று சொல்லியிருப்பார். அதை நேர்/எதிர்மறையாக துவிதங்களுக்குள் வைத்தெல்லம் பார்க்கத் தேவையில்லை.

நாம் இன்றைய சூழலைப் பார்த்தால் அப்படி கறாரான முடிவுகளை எடுப்பது எவ்வளவு கடினம் என்பதை அறிந்துகொள்ளலாம். உதாரணத்துக்கு நாம் ஈரான் விடயத்தை எடுத்துக் கொண்டால், ஈரான் தனது ஆட்சிக்கெதிராகப் போராடும் மக்களை எவ்வளவு கொடூரமாக ஒடுக்கின்றது என்பதை அறிவோம் (அதற்கு ஈரானிய மக்களின் சாட்சியங்களே போதும்). அதேவேளை இப்போது ஈரான் என்கின்ற நாட்டை  அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்கும்போது ஈரானுக்குச் சார்பாகத்தான் நாம் நிற்க வேண்டும். அப்படியொரு சார்பு நிலை எடுக்கும்போது ஈரானிய அரசு தன் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறையை ஏற்றுக்கொள்கின்றோமா என்கின்ற கேள்விகளும் வரும். இவ்வாறான சூழ்நிலைகளால்தான் ஒரு விடயத்தை கேள்விகளோடும் சந்தேகங்களோடும் fragmentation ஆகத்தான் இவற்றை நாம் அணுகமுடியும் என்கின்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

அவ்வாறான ஓர் அணுகுமுறையை, நாம் இந்த ஜல்லிக்கட்டு நூல் நாட்டாரியலா அல்லது பின்னமைப்பியலா எந்த முறையியல் (methodology) மூலமாக  அணுகின்றது என்று சந்தேகம் கொள்ளக்கூடாது என்பதற்காக தருமராஜ் இதில் ஓரு விளக்கத்தைத் தருகின்றார். 'இந்தப் புத்தகம் வெகுஜனக் கிளர்ச்சிகளின் சூத்திரத்தைக் கண்டுபிடிக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே பதில் சொல்வேன். அமைப்பியல் மானிடவியல் ஆய்வுகளில் இது போல் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கான சூத்திரத்தைக் கண்டுபிடிப்பது ஒரு சாகசமாகவே செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் அப்படியொரு கணித சூத்திரத்தையோ அல்லது கிளர்ச்சிகளின் ஒழுங்கமைப்பையோ கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்பது முக்கியம். இங்கே பயன்படுத்தப்பட்ட சூத்திரம் என்ற சொல், சூழ்திறம், சூழ்ச்சி என்று பொருள் தரும் வகையிலே கையாளப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் நீங்கள் பார்ப்பது அனைத்தும் ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்களின் கோணம், அவ்வளவுதான்' என்று சொல்லியிருப்பதை வாசகர்கள் ஒருபோதும் தவறவிடக்கூடாது என நினைக்கின்றேன்.

பின்னமைப்பியல்/பின் நவீனத்துவத்தில் எல்லாவற்றையும் விளையாட்டாகப் பார்ப்பது என்று முக்கியமான ஒன்று.  அதாவது மிகத் தீவிரமாக எந்தவொன்றையும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை (நமக்கு சமகால உதாரணம்  Slavoj Žižek). அதற்காக தருமராஜ் இங்கே பின்நவீனத்துவத்தை தனக்குரியதாக கொள்கின்றார் என்பதாக அர்த்தமல்ல. பின்னமைப்பியல் நிராகரிக்கும் பெருங்கதையாடலை (meta narratives), முக்கியமாக தத்துவத்தை நிராகரிக்கப் போவதில்லை என்று தருமராஜ் ஓரிடத்தில் உறுதியாகக் கூறுகின்றார் என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்.

மேலே 'இந்தப் புத்தகத்தில் நீங்கள் பார்ப்பது அனைத்தும் ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்களின் கோணம், அவ்வளவுதான்' என்று தருமராஜ் சொல்லியிருப்பதற்குதான் நான் விளக்கம் கொடுக்க விரும்புகிறேன்.
எல்லாமே ஏற்கனவே சொல்லப்பட்டாலும், அதன் ஒழுங்குகளை குலைத்து புதிய அடுக்குகளை தன் அறிவால் தருமராஜ் கட்டுகின்றார். இவ்வாறு ஒழுங்குகளைக் குலைத்தும் சிதைத்தும் புதிதாய் ஓன்றை உருவாக்குவதை ஒரு 'விளையாட்டாக'ச் செய்யமுடியுமென்று வேறு எந்தத் தத்துவத்தைவிடவும் பின்னமைப்பியல்/பின் நவீனத்துவ நிலவரங்கள் நமக்குத் துணைபுரிகின்றன. அதற்கான சுதந்திரத்தை அவை கொடுக்கவும் செய்கின்றன. அந்த மிகப்பெரும் சுதந்திரமே தருமராஜ் அவர்களையும் நாட்டாரியல் இருந்து தொடங்கி பின்னமைப்பியல்வரை கட்டற்ற சுதந்திரத்தோடு இந்த நூலில் இயங்க வைக்கின்றது. ஒருவகையில் அதையேதான் பண்டிதர் அயோத்திதாசரையும், அவருக்கிருந்த அன்றையகால நடைமுறை அறிவோடு, பல விடயங்களை கலைத்தும் சிதைத்தும் ஒழுங்குபடுத்தி 'பெளத்தவயமாதல்' என்கின்ற மிக முக்கியமான ஒரு தளத்தை வந்தடையச் செய்திருக்கின்றது என்பதையும் நாம் நினைவூட்டிக் கொள்லலாம்.

மிகச்சோர்வான காலகட்டத்துக்குள் தமிழ் ஆய்வுச்சூழலும் அல்புனைவு நூல்களும் இருக்கின்ற காலகட்டத்தில் அவ்வளவு சுவாரசியமாகவும், அதேவேளை நம்மை இன்னுமின்னும் சிந்திக்க வைக்கின்றதுமாகவும், ஜல்லிக்கட்டு என்கின்ற ஓர் அரிய நூல் நம் கைகளை வந்தடைந்திருக்கின்றது என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.

****

(நன்றி: 'அம்ருதா' - ஆனி, 2026)