கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 06

Thursday, September 10, 2026

 

இந்த பத்து நாள் விபாஸனா வகுப்புகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது என்று உங்களால் நம்பமுடிகின்றதா? ஆம். தனியறையிலிருந்து பத்து நாள் உணவு உட்பட அனைத்துக்கும் எந்தக் கட்டணமும் நாம் செலுத்தத் தேவையில்லை.


எவ்வித பணமும் செலவழிக்காமல் இப்படி பத்து நாள் விபாஸனா அனுபவத்தை நீங்கள் எவ்வித புறச்சூழல் அழுத்தங்கள் இல்லாது அனுபவியுங்கள் என்று கோயிங்காவை ஆசிரியராகக் கொண்ட இந்த விபாஸனா நிலையங்கள் நமக்கு வழங்குவதுதான் எவ்வளவு அருமையானது.



இந்தவகையான இலவசமான தியான அனுபவம் இங்கு மட்டுமில்லை, கோயிங்காவை ஆசிரியராகக் கொண்டு உலகெங்கும் இயங்கும் 270 நிலையங்களிலும் இருக்கின்றன. இலங்கையில் ஏழுக்கும் மேற்பட்ட விபாஸனா நிலையங்களும், தமிழ்நாட்டில் மட்டும் ஐந்து விபாஸனா நிலையங்களும் இயங்குகின்றன என நினைக்கின்றேன்.

*
எமக்கு தங்குமிடம், உணவு தருவது இலவசம் மட்டுமில்லை, இங்கே வந்து கற்பிக்கும் ஆசிரியர்கள், நமக்கு உணவு தயாரித்துத் தருபவர்கள், கட்டடங்களின் உட்கட்டமைப்பு/பராமரித்தல்/சுத்தம் செய்தல் எனச் செய்பவர்கள் அனைவருமே தமது சேவையை இலவசமாகவே வழங்குகின்றனர்.

இப்படியொரு இலவசமான அமைப்பு எப்படி தொடர்ந்து இயங்க முடியும் என்பது 'வியாபாரக் காந்தங்களுக்கே' வியப்பளிக்கும் ஒரு விடயமாகும்.

ஆசிரியர் கோயிங்கா இப்படி விபாஸனா நிலையங்களை முதலில் இந்தியாவில் தொடங்கியபோது, 'இங்கே பலர் ஒழுங்கான உணவில்லாது இருக்கின்றனர். இப்படி இலவசமாக உணவும் இடமும் கொடுக்கின்றோம் என்றால் உணவுக்காகத் தான் வந்து நிரம்புவார்கள், தியானம் செய்ய வரமாட்டார்கள்' என்று கோயிங்காவைப் பயமுறுத்தியிருக்கின்றார்கள். ஆனால் கோயிங்கா, 'ஒருவர் காலை 4 மணிக்கு எழும்பி, இரவு 9மணிவரை இருந்து கடும் தியானம் செய்யும் நிகழ்ச்சி நிரல் இருக்கும்போது, அப்படி உணவுக்காக மட்டும் வருகின்றார்கள் என்றால் ஒன்றிரண்டு நாளில் இங்கிருந்து ஓடிவிடுவார்கள்' எனச் சொல்லி வெற்றிகரமாக விபாஸனா நிலையங்களை இந்தியா, மியான்மாரில் தொடங்கியிருக்கின்றார்.

சில காலத்துக்குப் பிறகு இதே 'இலவச' மாடல்களை மேற்குலகிற்குக் கொண்டு வந்தபோது, மேற்கத்தையவர்கள் கோயிங்காவிடம், கீழைத்தேயத்தில் இப்படி தன்னார்வ சேவை இயங்க வாய்ப்பிருக்கின்றது, ஆனால் மேற்கில் இதெல்லாம் வேலைக்கு உதவாது' என்று சொல்லியிருக்கின்றார்கள். கோயிங்காதான் பரவாயில்லை, முயன்று பார்ப்போம் என்றிருக்கின்றார்.

*

நான் சென்ற இந்த நிலையம் 20 வருடங்களுக்கு மேலாக இயங்குகின்றது. மாதம் இரண்டு தடவைகள் 10 நாள் விபாஸனா என்று வருடம் முழுதும் வெயில், மழை, பனி என்று பாராது தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கின்றது.

இத்தனைக்கும் கோயிங்கா தனது விபாஸனா தியான முறைகளில் நம்பிக்கை இல்லாதுவிட்டால் இதைச் செய்திருக்கவே முடியாது. ஏதோ ஒருவகையில் விபாஸனா மூலம் பலர் பயன்பெறுவார்கள், அவர்கள் திரும்பத் திரும்ப இந்த விபாஸனா நிலையங்களுக்கு வருவார்கள், தங்களின் தன்னார்வல சேவையை வழங்குபவர்கள், நிதியுள்ளவர்கள் நிதி வழங்கி நிலையங்களை விஸ்தரிப்பார்கள் என்று உறுதியாக நம்பியிருக்க வேண்டும்.

இப்படி தொடர்ச்சியாக எந்த அமைப்பினதோ/தனிமனிதர்களினதோ நிதி வழங்கலில் தங்கியிருக்காது விபாஸான கற்ற/கற்றுக்கொண்டிருந்த மாணவர்களின் தன்னலமற்ற உழைப்பில் இந்த விபாஸனா நிலையங்கள் இயங்குகின்றன என்று அறிந்தபோது உண்மையில் மனம் குளிர்ந்து நின்றேன்.

பத்து நாள் விபாஸனாவிற்கு வருகின்றவர்கள், பத்து நாள் வகுப்பையும் முடித்தால் மட்டுமே, விரும்பினால் நன்கொடைகள் வழங்கலாம். நான் இந்த விபாஸனாவிற்குப் போகும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்கலாம் என்று நினைத்துத்தான் போனேன்.

ஆனால் பத்து நாள் விபாஸனாவில் பங்குபற்றியதன் பிறகு நினைத்ததைவிட இரண்டு மடங்கு தானம் செய்துவிட்டு வந்தேன். அப்படிக்கு இதன் இயங்குநிலையும், நம்மை அரவணைத்து விபாஸனா சொல்லிக் கொடுக்கும் நெகிழ்ந்த தன்மையும் எனக்குப் பிடித்திருந்தது.

*
கோயிங்கா இந்த பத்துநாள் விபாஸனா அமைப்பை, எப்படி அசலான புத்த பிக்குகள்/பிக்குணிகள் தமது நாளாந்த வாழ்வில் வாழ்வார்களோ அப்படித்தான் வடிவமைத்திருக்கின்றார். துறவிகள் தம்மத்தின் பாதைக்குச் செல்வதற்கு அனைத்தையும் துறந்து போவதைப் போல குடும்பவாழ்வில் இருக்கும் நம்மைப் போன்றவர்களால் முடிவதில்லை.

கடைசிவரை குடும்பவாழ்வில் இருந்த கோயிங்கா, அப்படி இருக்கக்கூடியவர்களும் தம்மத்தின் பாதையில் நடந்து பரிநிர்வாணம் அடையவோ அல்லது அதை நெருங்கிச் செல்லவோ இந்த வாழ்க்கைக்காலத்தில் முடியும் என்பதை இப்படியான விபாஸனா கற்றுக்கொடுப்பதன் மூலம் நமக்குச் சொல்ல விழைகிறார்.

தொடக்ககாலத்தில் கையில் நிதி இல்லாத நிலையில், இந்தியாவில் விபாஸனா பழக வந்தவர்களிடம் வகுப்புக்களுக்காக நிதி அறவிட்டிருக்கின்றார். அப்படி பணம் வாங்கி விபாஸனா கற்றுக்கொடுத்தாலே அது தம்மத்தின் பாதை இல்லை. அவ்வாறு இருக்கமுடியாது என்று முற்றிலும் இலவசமாகச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றார் கோயிங்கா.

மேலும் இல்லறவாழ்வில் இருக்கும் நாம் துறவிகளின் வாழ்வை இந்த பத்து நாட்களில் வாழ்ந்து பார்க்கப் போகின்றோம் என்றால், துறவிகளின் முக்கிய பண்பு தானம் கேட்பது. அதாவது உணவுக்காக தெருவில் இறங்கி பிச்சையெடுப்பது. அப்படி தானம் கேட்பதை, ஒருவரிடம் பணத்தை அறவிட்டு உணவைக் கொடுப்பதால் அடையமுடியாது.

நமக்கு இந்த விபாஸனா நிலையங்களில் யாரோ ஒரு முன்னாள் விபாஸனா மாணவர் கொடுத்த நிதியின் ஊடாக உணவென்ற தானமாக வழங்கப்படுகின்றது. ஆக நாம் யாரிடமோ துறவிகள் போல (இரந்து கேட்டு) உணவைப் பெற்றுச் சாப்பிடுகின்றோம் என்பதைப் புரிந்துகொள்கின்றோம்.

*
அதுபோலவே இந்த நிலையங்களில் எவரும் மற்றைய புத்த மடாலயங்கள் போல நிரந்தரமாக தங்கியிருப்பதில்லை. எல்லாமே மாறும் என்று புத்தர் சொல்லியதுபோல இங்கே வருபவர்களைப் போல, அதைப் பின் நின்று நடத்துபவர்களும் தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சுடரேந்திய தொடரோட்டம் போல இந்த நிலையங்கள் உலகெங்கிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கின்றன.

இன்றைய புத்த மடலாயங்களில் அநேகமாக நிரந்தரமாகத் தங்கியிருக்கும் புத்த பிக்குகள்/பிக்குணிகளாலே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றது. மேலும் எந்த ஒரு புத்த மடாலயமும் இப்படி இலவசமாக meditation retreats செய்வதுமில்லை. அதற்கான sustainability அவர்களிடம் இருப்பதுமில்லை. அதைப் புரிந்துகொள்ளவும் முடியும்.

இப்படியான சூழலில் கோயிங்காவில் இந்த விபாஸனா நிலையங்கள் உலகெங்கும் (270) விபாஸானவை இலவசமாக நமக்கு வழங்குகின்றன என்பதை நினைத்தால் வியப்பாய்த்தான் இருக்கின்றது.

மேலும் நான் போன விபாஸனா நிலையத்தில் புத்தரின் சிலைகளோ/படங்களோ மட்டுமில்லை, கோயிங்காவின் எந்த
புகைப்படமோ/அடையாளப்படுத்தல்களும் இல்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.  கோயிங்காவே தனது உரைகளில் ஒரு கட்டடத்தைக் கட்டிவிட்டு அதில் பெயரைப் போடுவது எவ்வளவு அபத்தம் என்று எள்ளல் செய்து கொண்டிருப்பார். அது தன்முனைப்பின் (Ego) உச்சமே தவிர வேறெதுவும் இல்லை என்று ஞாபகப்படுத்துவார். ஆகவே புத்தரை மட்டுமில்லை கோயிங்காவை நினைவுபடுத்தும் எவற்றுக்கும் இங்கு இடமில்லை. தியான மணடபமே சும்மா 'வெறிச்சோடி'த்தான் எல்லாத் திசைகளிலும் இருக்கும்.

ஆக, நீங்கள் இந்த விபாஸனா நிலையத்தில் உலாவும்போது மத அடையாளங்கள் எதுவுமற்ற ஏதோ ஒரு சாதாரண விடுதிச் சூழலில் நிசப்பத்தோடு வாழ்கின்றீர்கள் என்று மட்டுமே உணர்வீர்கள்.

அதனால்தான் இங்கே நானுட்பட,  குரு நானக்கை வழிபடும் தலைப்பாய் கட்டிய சீக்கும், அல்லாஹ்வை பின்தொடரும் முஸ்லிமும், கைகள் முழுதும் கயிறுகள் கட்டிய இந்துவும் என அனைவரும் ஓர் அந்நிய பிரதேசத்தில் நுழைந்துவிட்டோம் என்ற பதற்றமில்லாது மிக இயல்பாக விபாஸனாவைப் பழகிக் கொண்டிருந்தோம்.

***

(இன்னும் வரும்)

 

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 05

Monday, September 07, 2026

 

விபாஸனாவில் இருந்தபோது நான் முற்றுமுழுதாக அதனோடுதான் இருந்தேன் எனச் சொல்ல முடியாது. ஆனால் புறச்சூழல் அமைதியாக்கப்பட்டதால் பெரும்பாலும் சிக்கலான யோசனைகள்/எண்ணங்கள் இல்லாது இருந்தேன் எனச் சொல்வேன்.


தொடக்கத்தில் சில நினைவுகள்/காட்சிகள்/உருவங்கள் மிகத் தீவிரமாக மனதில் வந்து கொண்டே இருந்தன. பிறகு தியானம் செய்யாது அறையினுள் ஓய்வெடுத்துக் கொண்டபோது கூட மிகச் சிறிய உலகிலே எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன.
Uploaded Image

நான் போன விபாஸனா நிலையம் 140 ஏக்கர் விஸ்தாரமானது என்பதால் நிம்மதியாக உலாவுவதற்கு சிறு காடுகள் இருந்தன. சிலவேளைகளில் தியானம் செய்துவிட்டு காட்டுக்குள் உலாத்தும்போது அவ்வளவு அற்புதமாக சூரியவொளியில் மினுங்கிய மரங்களும், சிறுசெடிகளும் தெரிந்தன. நான் இந்தக் காட்டுக்குள் மிக அமைதியாக இருந்து இரசிக்கும் இடத்தை இந்த நாட்களில் கண்டெடுத்திருந்தேன்.

அடடா எவ்வளவு அமைதியாகவும் அழகாகவும் இந்தச் சூழல் இருக்கின்றதே, நாளையும் இங்கு வரும்போது இருக்குமா என்று எதிர்காலத்துக்குப் பாய்ந்த மனதை இழுத்துப் பிடித்து வைத்தேன். அடுத்தடுத்த நாளில் மழையோ, பெரும் நுளம்புப்படையோ (கொசுவோ) வந்தால் இந்த இதமான சூழல் இருக்கப்போவதில்லை, இப்போது இந்தக் கணத்தில் இந்த இயற்கை என்னவாக அமைகின்றதோ அதை இரசிப்போமே என எண்ணத்தை நிதானமாக்கிக் கொள்ள முயற்சிப்பேன்.

இரவுகளில் ஒரு மணித்தியாலத் தியானத்தின்பின், ஒளிபரப்பாகும் கோயிங்காவின் உரைகள் அவ்வளவு நெகிழ்வாக இருக்கும். மூன்றாம் நாள் கண்ணீர் துளிர்க்க மனது மிக இலேசாவதை உணர்ந்தேன். கவனிக்க, அப்போது அசலான விபாஸனா தொடங்கியிருக்கவே இல்லை.

நாம் ஆனாபானா தியானத்தையே பழகிக் கொண்டிருந்தோம். நான் நெகிழ்வாக இருப்பதை என் உதவி ஆசிரியரிடம் சென்று, எந்தக் கேள்விகளையும் கேட்காது நான் மிக எடையற்று உணர்கின்றேன், அதற்கு நன்றியெனச் சொல்லிவிட்டு அறைக்குச் சென்று உறங்கினேன்.

*

ஆஸ்மாவின் நிமித்தமோ அல்லது காலநிலைக் காரணமாக நான் கடந்தமாதங்களாக Hives ஆல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இரவுகளில் தோலின் மீது வரும் ஒவ்வாமை மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். விபாஸனாவில் இருந்தபோது, ஒருவருக்கு மனவழுத்தம் வந்துவிட்டால், அதை ஓடிப்போய் விடு என்று சொல்லி அதனோடு சண்டை பிடிக்காமல், நானும் நீயும் ஒரேயிடத்தில் சச்சரவு செய்யாமல் நட்பாக இருந்தால் மனவழுத்ததோடு சேர்ந்து வாழத் தொடங்கிவிடலாம் என்பதுபோல, நான் Hives யோடு ஒரு சமரசத்துக்கு இந்தப் பொழுதுகளில் வந்துவிட்டிருந்தேன்.

எந்த மாத்திரையைப் போட்டாலும், நீ என் மேனி மீது கோலம் போடத்தான் செய்வாய், ஆனால் கோலத்தை எனக்கு காயப்படுத்தாமல்/ கடிக்காமல் போடு என்று அதனோடு சமாதானத்துக்கு வந்திருந்தேன்.

இப்படி உடன்படிக்கை வராது விட்டிருந்தால் என்னால் ஒழுங்காக கொஞ்ச நேரத்துக்கேனும் நித்திரை கொள்ளமுடியாது போயிருக்கும்.

விடிகாலை நான்கரை மணிக்கு தியானத்துக்குப் போகும் வழியில் நட்சத்திரங்களைப் பார்ப்பதும், அவ்வளவு சுத்தமான காற்றைச் சுவாசிப்பதும் எனக்குப் பிடித்துப் போனது. ஆனாபானா தியானத்தின்போது உடலை அவ்வப்போது அசைத்துப் பார்க்க விட்டவர்கள், விபாஸனா தியானம் தொடங்கியவுடன் எங்களை அந்த ஒவ்வொரு மணித்தியாலமும் உடலை அசைக்காது, வெளியே போகாது அப்படியே சிலைபோல இருக்கவேண்டுமென உறுதிப்பாட்டை எடுக்கச் சொல்லியிருந்தனர்.

எனக்கு வலது முழங்காலை மடக்கி வைத்ததில் தொடர்ந்து வலித்துக் கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் அந்த வலியைத் தாண்டி உள்ளே மனதைக் குவிக்க முடிந்தது. வலி ஒரு பொருட்டன்று போல அது தன்பாட்டில்  குழந்தை போல கதறிக் கொண்டிருந்தது. அதற்கு கவனம் கொடுத்தால்தான் கூட வலிக்கும். ஆக அது குறித்து யோசிக்காது வலியை வலியாக மட்டும் கடந்து போகப் பழகியிருந்தேன்.

என்கின்றபோதும், நான் தியானத்தின்போது Posture ஐ மாற்றாதபோதும் என் முள்ளந்தண்டை அவ்வப்போது வெவ்வேறு கோணத்தில் மாற்றிக் கொள்ளச் செய்தேன். அதில் நான் மூன்று வெவ்வேறு நிலைகளில் என் முதுகைச் சரித்துக் கொண்டிருந்தேன். ஒரு கோணம் எல்லாவற்றையும் துறந்து refugee எடுப்பது. பிறகு முள்ளந்தண்டை நன்றாக நிமிர்த்துவேன்.

இப்படியெல்லாம் நான் கஷ்டப்பட்டு தியானம் செய்ததை அறியாத ஒரு வெள்ளைக்காரர் (எனக்குப் பின்னால் இருந்தவர்), இந்த விபாஸனா வகுப்புகள் முடிந்த பத்தாம் நாள் என்னிடம் வந்து, 'உன்னைப் பார்த்தால் நீ என் வயதொத்தவனாக இருப்பாய் போலத்தான் தெரிகின்றது. ஆனால் எப்படி 90 பாகையில் உன் முள்ளந்தண்டை நிமிர்த்தி வைத்திருந்தாய். எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. என்னால் அது முடியவில்லை' என்றார். 'இல்லையே நானும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருந்தேன். சிலவேளைகளில் எங்களுக்குச் சிறுவயதிலே சப்பாணி கட்டி அமர்வது இலங்கையில் சொல்லித்தந்ததால் அப்படி இருந்து முதுகை நிமிர்த்தி வைப்பது எளிதாக இருந்திருக்கலாம்' எனச் சொல்லி நான் அவரை ஆறுதற்படுத்தினேன்.

இதற்கிடையில் எனக்குப் பின்னே இருந்த ஒருவர் தடிமனோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். எனக்கு என் சுவாசத்தை விட அவர் 'ஜலதோசத்தோடு' சிரமப்பட்டு மூச்சு இழுப்பதுதான் தெள்ளியதாகக் கேட்டது. முதலில் இவரென் தியானத்தைக் குழப்புகின்றாரே என்று கொஞ்ச எரிச்சல் வந்தாலும், பிறகு அவரின் கஷ்டத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.

அத்தோடு அவர் நல்ல ஆகிருதியான ஆள். அவரால் கால்களை மடக்கியெல்லாம் உட்கார முடியாது. தேவாலயத்தில் முட்டுக்கால் இட்டு நிற்பதுபோல அவர் முழங்காலில் நிற்க அவரின் மூச்சு என் முதுகோடு 'காதோடு தான் ஒரு கதை சொல்வேன்' போல உரசிக் கொண்டு போகும்.

அவருக்கு அதற்குப் பிறகு ஒருகட்டத்தில் இயலாது போய், ஏழோ எட்டாவது நாளோ முற்றாக விபாஸனாவிலிருந்து விலகி வீடு போயிருந்தார். அவரின் தடிமன் ஒருபக்கம் என்றால், எனக்கு வலதுபக்கம் இருந்தவருக்கு உலர் இருமல் வரத்தொடங்கிவிட்டது. அந்த உலர் இருமலோடு எனக்கு நன்கு பரிட்சயம் இருக்கின்றது. நான் இங்குள்ள ரெயினில் இப்படியான இருமலோடு வேலைக்குபோகும்போது மற்றவர்களைச் சிரமப்படுத்தக்கூடாது என்றெல்லாம் இரெயினில் இருந்து இறங்கி அது சரியாக வரும்வரை அடுத்த ஸ்டேசனில் இருந்து இருமலை சீராக்கி விட்டெல்லாம் போயிருக்கின்றேன். அதுவும் இங்கு இருக்கும் GO Train மேற்றளத்தில் எவரும் பேசாது அமைதியாக இருக்க வேண்டும். அப்படியான சூழலில் நான் தொடர்ந்து இருமிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

தடிமன் ஆசாமியைப் போல, இருமல் ஆசாமியின் இருமலோடும் நான் நட்பு கொள்ளத் தொடங்கினேன். ஒருகட்டத்தில் இருமலைத் தாண்டி மனதை உள்ளே குவிக்கவும் பழகியிருந்தேன். இன்னொருபக்கம் ஆசிரியர் கோயிங்கா, எப்பொழுதும் எதிர்ச்சக்திகளை உருவாக்கிவிடாதீர்கள், பிறகு சம்ஷாராக்கள் உங்களைத் தொடர்ந்து துரத்திக் கொண்டு இருக்கும் என்று எச்சரித்துக் கொண்டிருந்தார்.

நோய்த்தொற்றுள்ளவர்களை நேசிக்க முடிந்தாலும், பின்னே/பக்கத்தில் இருந்தவர் எல்லாம் நோயோடு சமர் செய்தபோது அடுத்து நோய்க் காவியாக நான்தான் ஆகப் போகின்றேனே என்ற பயம் வந்தது.
அப்படி வந்தால் நான் இருமியோ தும்மிக்கொண்டோ தியான மண்டபத்துக்கு வரப்போவதில்லை என்பது எனக்கு உறுதியாகத் தெரிந்தது. அப்படியாயின் என்னால் இந்த 10 நாள் விபாஸனாவை முழுதாகப் பூர்த்தி செய்யாமல் போய்விடுமே என்ற எண்ணமும் அவ்வப்போது தலைதூக்கியது.

*
இப்படியான 10 நாள் தியான வகுப்புக்களுக்கு, ஏற்கனவே தியானத்தைத் தெரிந்துகொண்டு போவது நல்லதா அல்லது Beginner's mind  போல ஒன்றையும் தெரியாமல் போவது அதிக பலனைத் தருமா என்ற கேள்வியொன்றும் எனக்குள் ஓடியது.  ஏனெனில் ஏற்கனவே கொஞ்சம் தியானம் செய்தும், நிறைய தியானம் குறித்து வாசித்தும் இருந்ததால் என் பகுத்தறிவு மனம் ஆசிரியர் கோயிங்கா சொல்லும் விடயங்களைத் தொடர்ந்து அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது.

இது கூட பரவாயில்லை. நான் பதின்மங்களில் வாசித்த பாலகுமாரனின் தியான அனுபவங்களும் எனக்குள் அலைபாய்ந்து கொண்டிருந்தன. பாலகுமாரன் விசிறி சாமியாரை (யோகி ராம்சுரத்குமார்) சந்தித்து அவரோடு பெற்ற தியான அனுபவங்களை ஒருவித மாயயதார்த்தபாணியில் எழுதியிருப்பார். விசிறி சாமியார் அதிர்வுகளை உருவாக்கி தனக்கு உடலுக்குள் அந்தச் சக்கரம் இந்தச் சக்கரம் சுழன்றது, நெற்றியில் நீலச்சுடர் தோன்றியது என்றெல்லாம் அவர் எழுதியதாக நினைவிருக்கிறது.

நானும் தியானத்தில் உடல் நோவு காணும்போது, இப்படியான நீலச்சுடர் நெற்றியில் சுடர்கின்றதா என்று கனவு காணத்தொடங்குவேன். ஒருநாள் உண்மையாகவே நடு முள்ளந்த்தண்டில் இருந்து ஏதோ ஒன்று ஊரத்தொடங்கியது. அது அப்படியே மேலே மேலே சென்று என் பிடறியை ஒட்டியது. அடடா இந்த ஏழாம் நாளிலே எனக்கு உடலில் சக்கரங்கள் எல்லாம் சுழலப்போகின்றதே என்று மனம் ஆகாயத்தில் பறக்கத் தொடங்கியது.

முதலில் இப்படி ஊர்ந்துதான் சக்கரங்கள் ஏழும் மூலாதாரத்தில் இருந்து சகஸ்ராரத்தில் வரை சுழலப்போகின்றது என்று நினைக்க இந்த ஊர்தல் நிலை பின்னந்தலையில் போய் உச்சந்தலைக்குப் போகாது சட்டென்று தலையின் வலதுபக்கமாக திசை மாறத் தொடங்கியது.

அன்றாடத்தில்தான் நான் கோணல்காரன் என்றால், சக்கரங்களையும் கடவுள் திசைமாற்றி கோணலாக மாற்றிவிட்டாரோ என்றுதான் முதலில் நினைத்தேன். இல்லாவிட்டால் இந்தப் பரவச ஊர்தல் நிலை உச்சந்தலையில் அல்லவா போய் முடிந்திருக்க வேண்டும்.

இப்படியெல்லாம் யோசிக்கத்தான், வலதுபக்க தலையில் அதிகம் ஊர்வது, இது சக்கரத்திற்கான அறிகுறி அல்ல, ஒரு பூச்சி என்பது தெரிந்தது.

இந்த 'அற்புத நிலை' நிகழ்வதற்கு முன்னர் தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை பெய்ந்து கொண்டிருந்தது. நான் வெளியே காயப்போட்டிருந்த என் உடுப்புகளை இந்தத் தொடர்ச்சியான மழையினால் வெளியிலே விட்டிருந்தேன். பிறகு வெயில் வந்தவுடன் அது நன்கு காய்ந்தவுடன் எடுத்துக் கொண்டு வந்து அணிந்திருந்தேன். அந்த இரண்டு நாட்களில் இந்த பூச்சிப்பிள்ளையார் என் ஆடைக்குள் புகுந்திருக்கின்றார். நான் ஒழுங்காய் உதறிப்போடாததால் என் தியான நேரத்தில் அவர் நான் காட்டுக்குள் உலாப்போவது போல உலாத்தத் தொடங்கியிருந்தார்.

கடைசியாக சுழலும் சக்கரத்தைத் தலையில் இருந்து தட்டி விழுத்தினேன்.

என் நண்பர்களுக்கு மட்டுமில்லை, புத்தருக்குக் கூட என்னை சக்கரங்கள் சுழல்வதாக கற்பனை செய்ய, கொஞ்ச நேரம் விடக் கூட மனம் வரவில்லையே என்று என் விதியை நொந்துகொண்டேன்.

***

(இன்னும் வரும்)

 

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 04

Tuesday, September 01, 2026

 

விபாஸனா என்பது புத்தரால் அவரின் காலத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்டது. பின்னர் எப்படி புத்தம் இந்தியாவில் அதன் அடிச்சுவடுகள் இல்லாது அழிந்துபோனதோ, அவ்வாறே இந்த தியான முறையும் காணாமல் போயிருந்தது. புத்தரின் போதனைகள் அசல் வடிவத்தில் மியான்மார் (பர்மா), இலங்கை போன்ற இடங்களில் இருந்தாலும் விபாஸனா ஒரு 'மறைந்துபோன பிரதி'யாக காலத்தில் உறைந்து கிடந்திருக்கின்றது.


அதிஷ்டவசமாக மியான்மாரில் இந்தியாவில் இருந்து சென்று புத்தமும் விபாஸனாவும் அதன் அசல்தன்மையோடு ஒரு சிறுவட்டத்தில் தொடர்ச்சியாக காலம் காலமாக எடுத்து வரப்பட்டிருக்கின்றது. அப்படி விபாஸனா கற்பிக்க சிறுவட்டத்தில் இருந்த ஆசிரியரிடமிருந்து எமது விபாஸனா ஆசிரியர் கோயிங்கா தியானத்தைப் பழகியிருக்கின்றார்.




ஒவ்வொரு நாள் மாலையிலும் (ஏற்கனவே இப்படி 10 நாள் விபாஸனா வகுப்புக்களில் பதிவு செய்யப்பட்ட) கோயிங்காவின் தம்ம போதனைகள் நடக்கும். ஒருவகையில் இன்றைய வகுப்பில் என்ன செய்தீர்கள் என்பதற்கான விளக்கமும், நாளைய வகுப்பு என்னவாக இருக்கும் என்பதைப் பற்றியும் அதிகம் கோயிங்கா உரையாற்றுவார்.

திருப்பத் திரும்ப அவர் நமக்கு நினைவுபடுத்துவது, அனுபவ நிலையில் இந்த தியானத்தை உற்றுக் கவனியுங்கள். இது ஒரு 'அறிவுஜீவு கொண்டாட்டம்' இல்லை. மேலும் இந்த விபாஸனாவை ஒரு மதத்துக்குள்ளோ, ஒரு கல்ட்டுக்குள்ளோ அடக்கக்கூடாது. அப்படி அடக்கினால் அது ஒருபோதும் அசலான விபாஸனா இல்லை.

மனிதர்கள் துன்பத்துக்குள் உழல்வது எல்லோருக்கும் பொதுவான என்றால், அந்தத் துன்பத்தை விளங்கி வெளியே வர முயற்சிப்பதும் 'யூனிவர்சலாக' இருக்க முடியுமே தவிர அதையொரு வட்டத்துக்குள் அடக்கிச் சொல்லிக் கொடுத்தால், நீங்கள் ஒருபோதும் உங்கள் துயரங்களிலிருந்து விடுபடமுடியாது மட்டுமில்லை, இந்த விபாஸனாவால் உங்களுக்கு எந்த பலனுமில்லை என்று தொடர்ச்சியாக தனது தம்ம உரைகளில் கோயிங்கா சொல்லிக் கொண்டே இருந்தார்.

*
விபாஸனா தியானம் பழகுவதற்கு சில முன் நிபந்தனைகள் இருக்கின்றன. ஒருவர் பரிநிர்வாணமடைய இப்படிப்பட்ட நிபந்தனைகள் தேவையா என்றால், அப்படி ஒரு கட்டாயமும் இல்லை. ஆனால் சாதாரண மனிதர்கள் தமது பழக்கப்பட்ட வட்டங்களில்  (habit patterns) இருந்து வெளியேறி விபாஸனாவுக்குள் நுழைவதற்கு சில முன்நிபந்தனைகள் அவசியம் என்று கோயிங்கா வலியுறுத்துகின்றார்.

அதில் முதலாவது புத்தர் கூறிய பஞ்ச சீலம்: கொல்லாமை, திருடாமை பிறரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யாமை, பொய் சொல்லாமை, கள்ளுண்ணாமை போன்றவையாகும்.

நீங்கள் நுட்பமாக கவனித்தீர்கள் என்றால், அதற்காக சூழலைத்தான் எங்கள் அலைபேசிகளை அணைக்க வைத்து, எதையும் பேசாத மெளனத்துக்குள் அமிழ்த்தி, எமக்குரிய உணவைத் தந்து எம்மை விபாஸனாத் தியானத்துக்குள் இங்கே அழைத்துச் செல்கின்றார்கள் என்பது புரியும்.

ஒருவர் இந்த விபாஸனா நாட்களில் எதையும் பேசாமல் இருக்கும்போது, எப்படி பொய் பேச முடியும்? உங்களுக்கான உணவு வழங்கப்படும்போது நீங்கள் எப்படி கொல்லப் போகின்றீர்கள். உங்களுக்கான தனித்த அறைக்குள்ளும், பொது தியான மண்டபத்திலும் இருக்கும்போது எப்படி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடமுடியும்?

மேலும் எமக்கு தனிப்பட்ட அறைகள் தரப்பட்டாலும் அவை எதற்கும் திறப்புக்கள் இருப்பதில்லை. எப்போதும் எவரும் திறந்து நுழையமுடியும். அது நாம் பிறரின் பொருட்களை திருட  சந்தர்ப்பம் இருந்தாலும் திருடாதிருப்பதற்கு நம்மை நெறிப்படுத்துவது.

ஆக இவ்வாறாக சீலம் நமக்கு கற்றுத் தரப்படுகின்றது. சீலத்தின் பின் சமாதி, அதன் தொடர்ச்சியில் பஞ்ஞ என்கின்ற விபாஸனாவின் ஆழ்நிலை சொல்லித் தரப்படுகின்றது.

கோயிங்காவின் சொற்களின்படி இந்த சீல, சமாதி எல்லாம் புத்தரின் காலத்துக்கு முன்னரே இருந்தன. புத்தரின் அசல் கண்டுபிடிப்பு என்றால் அது பஞ்ஞ மட்டுமே.

அதாவது பற்றறுத்தல் என்கின்ற ஆழ்நிலைக்குப் போவது அல்லது 'சம்ஹாரா' எனப்படுவதை அடிவேரிலிருந்து அகற்றுவது எனச் சொல்லலாம்.
இதை புத்தர் பிற உயிர்களுக்கு அளிக்கப்படாத மனிதவுடல் என்கின்ற அரிய சாதனத்தின் மூலம் கற்றுக்கொள்ளச் சொல்கின்றார் ((within frame work of body). அதாவது உடலின் உணர்வுகள் என்கின்ற தளத்தில் வைத்து நமது புதிய சம்ஹாரக்களையும், அடியில் புதையுண்டு கிடக்கும் சம்ஹாரக்களையும் முற்றாக இல்லாதொழிப்பது.

அனுபவத்தளத்தில் இவற்றைப் புரிந்து கொள்ளுதல் முக்கியமே தவிர  இப்படி அறிவுத்தளத்தில் விளங்கிக் கொண்டாலே நாம் விபாஸாவில் இருந்து வெளியேறிவிடுவோம் என்பதையும் கோயிங்காவும் எச்சரிக்கின்றார். ஆகவே இந்த விபாஸனா தியான விளக்கங்களில் இருந்து இப்போதைக்கு நாமும் விலகி விடுவோம்.

*

மதியம் பன்னிரண்டுக்குள் சாப்பிட்டதன் பின், என்னைப் போன்ற புதியவர்களுக்கு இரக்கப்பட்டுத்தான் என்னவோ மாலையில் தேநீரும், பழமும்  இங்கே தந்தார்கள். நீங்கள் விபாஸானாவுக்கு இரண்டாவது முறை வந்தால் அதுவும் இல்லை.  

எனது கடும்பயமாக இருந்த, இந்த மதியத்துக்குப் பிறகு எப்படி  இரவு உணவில்லாது மட்டுமில்லை,  இடையிடையில் கொறிக்கவும் எதுவும் இல்லாது எப்படி  இந்த நாட்களில் இருப்பேன் என்பதை  மிக எளிதில் இதன் பின்னரான நாட்களில் கடந்துவிட்டேன்.

அதற்கேற்றமாதிரி விபாஸனா நிகழ்ச்சிநிரல் இரவு 9 மணி வரை இருந்ததாலோ அல்லது வேறு எதனாலாவோ என்னால் பசியைப் பெரிதாக உணர முடியவில்லை. தொடக்க நாட்களில்  பின்னர் பசிக்குமே என்கின்ற பயத்தில் காலை, மதிய உணவுகளை அதிகம் எடுத்த நானே, பின் வந்த நாட்களில் கிட்டத்தட்ட அரைவாசி உணவு எடுக்குமளவுக்கு வந்திருந்தேன்.

மேலும் இந்த பத்து நாட்களில் உடலுக்கு பெரிதாக வேலையில்லை. மனது மட்டும் தீவிரமாக இயங்கியதால், இந்த உணவே போதும் போதுமென்ற அளவுக்கு திருப்தியாக இருந்தது. அதேவேளை குறைந்த தெரிவுகளாயினும் உணவை அப்படி இரசித்து உருசித்துச் சாப்பிட முடிந்தது. நாம் சாதாரண வாழ்வில் மூன்று நான்கு கறிகளுடன் சாப்பிடுவது என்பது ஒருவகை 'ஆடம்பரம் (luxury) போலவும் தோன்றச் செய்தது. இப்படியான எளிய உணவுடனும்  இனி வாழ முடியும் என்பதைப் பரிட்சித்துப் பார்க்க இந்த விபாஸனா நாட்கள் கற்றுத் தந்திருந்தன.

***

(இன்னும் வரும்)

 

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 03

Friday, August 28, 2026

 

நாள்  01
ஜூலை 23 - வியாழக்கிழமை


***

முதல் நாளிரவு தூங்கினேனா இல்லையா என்ற குழப்பத்தோடு விடிகாலை நான்கரை மணிக்கு  தியான மண்டபத்துக்கு நடந்து செல்லத் தொடங்கினேன். நான் சென்ற இந்த விபாஸனா நிலையத்தில் அண்மையில் தீ விபத்து நிகழ்ந்து இதன் முதன்மைத் தியான மணடபம் மூடப்பட்டிருந்தது.

தம்மம் என்பது ஒருவகையில் நடைமுறை வாழ்க்கையில் எதை மிகச் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதைப் பரிட்சித்துப் பார்ப்பதுதானே.
ஆகவே தீ விபத்துக்காக முழு விபஸன்னா நிலையத்தையும் மூடி வைக்காமல், உணவு பரிமாறும் இடத்தின் அரைவாசியைத் தற்காலிக தியான மண்டபமாக மாற்றி அமைத்திருந்தனர்.

Uploaded Image

விபாஸனாப் பயிற்சியின் நாளாந்த அட்டவணை காலை நான்கரை மணிக்குத் தொடங்கி இரவு ஒன்பதுவரை இருக்கும். இரவு பத்து மணிக்குள் அறையின் வெளிச்சத்தை அணைத்துவிட்டு அனைவரும் உறங்கப் போக வேண்டும்.

நாளாந்த விபாஸனாப் பயிற்சியில் மூன்று வெவ்வேறு தியான அமர்வுகளில் உங்களோடு ஆசிரியர் கட்டாயம் வந்தமவர்வார். மற்ற நேரங்களில் ஆசிரியரின் ஆணைப்படி தியான மண்டபத்திலோ அல்லது உங்கள் அறையிலோ தியானத்தைத் தொடரமுடியும்.

காலை எட்டு மணி, பின்னேரம் இரண்டரை மணி, மாலை ஆறு மணி என இந்த மூன்று நேரத்திலும் கட்டாயம் ஒரு மணித்தியாலம் ஆசிரியரோடு தியானத்தில் உட்கார வேண்டும். இந்த நேரத்தில் கிளாஸுக்கு கட்டடித்து அறைக்குள் முடங்கினால், உங்கள் கதவைத் தட்டி எழுப்பிக் கூட்டிப் போவார்கள்.

நான் ஒரேயொரு முறை மட்டும் எட்டு மணி தியான வகுப்பை மறந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது, கதவை வந்து தட்டி, உடல் நலத்துக்கு ஏதும் கேடா என்று கேட்டு அழைத்துச் சென்றிருந்தனர்.

*

விபாஸனாவில் காலை நான்கரையிலிருந்து ஆறரை வரை நீங்கள் தனியே தியானத்தில் அமரலாம். மற்ற விபாஸனா மையங்களில் நடைமுறையில் இது இருக்கின்றதா எனத் தெரியாது, ஆனால் நாங்கள் தியானத்தில் கண்ணை மூடியிருக்கையிலே எங்கள் ஆசிரியர் தினம் அமைதியாக ஐந்தரை மணிக்கு வந்து அமர்ந்து கொள்வார். ஆனால் எந்த உரையாடலும் இருக்காது.

எட்டு மணி, இரண்டரை மணி, ஆறு மணி வகுப்புக்கள், விபாஸனாவின்  ஆசிரியர் கோயிங்காவின் வழிப்படுத்தல்கள்/
உரைகள்/பாளி பாடல்களுடன் தொடங்கும் (ஆசிரியர் கோயிங்கா பற்றி தனியே ஒரு பகுதியை எழுதப்போவதால் அவரைப் பற்றிய விபரங்களை இங்கே தவிர்த்துக் கொள்கின்றேன்). இன்று உலகெங்கும் 270 இற்கும் மேலான விபாஸனா நிலையங்கள் இயங்குகின்றன. இவை அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே அட்டவணைப்படி, ஆசிரியர் கோயிங்காவின் நேரடி உரைகள் மூலம் நிகழ்த்தப்படுகின்றன.

எனக்கு இந்த விபாஸனா வகுப்புக்களில் முதல் ஆச்சரியம் என்னவென்றால், ஒரு ஆசிரியர் நேரே இருக்காது அவரது குரல் மட்டும் இவ்வளவு எமக்குள் ஊடுருவித் துளைக்குமா என்பதுதான். எங்களுக்கு ஒரு பெளதீகமான ஆசிரியர் இருந்தாலும் (ஆண்களின் பகுதியில் ஆண் ஒருவர், பெண்களின் பகுதியில் பெண் ஒருவர்) அவர்கள் தியானப் பயிற்சிகள் எதையும் தம்மளவில் நடத்துவதில்லை.

அவர்களை உதவி ஆசிரியர்கள் (Teaching Assistants) என அழைத்துக்கொள்கின்றனர்.  முதன்மை ஆசிரியர் எப்போதும் இந்த விபாஸனாவில் கோயிங்காதான்.

இந்த உதவி ஆசிரியர்கள் நம்மை மிகக் குறைந்த சொற்களால், இப்போது இடைveeளை, இதோ வகுப்பு ஆரம்பிக்கின்றது போன்ற சில ஆணைகளை இடுவதாக மட்டுமே இருக்கின்றனர். ஒரு நாளின் குறிப்பட்ட நேரத்தில் மட்டும்  தனிப்பட்டு அவர்களிடம் சென்று கேள்வி கேட்க நாம் அனுமதிக்கப்படுகின்றோம்.

அங்கேயும் இங்கே செய்யும் தியானம் சம்பந்தபப்பட்டோ, அது குறித்து நம் மனம்/உடல் உணரும் நிலைமைகள் குறித்த சந்தேகங்களுக்கே அவர்கள் பதிலளிப்பார்கள். அதற்கப்பாலான எந்த தேவையற்ற தத்துவ, அரட்டை, அலட்டல் சம்பாசனைகளுக்கு அறவே ஆசிரியர்களிடம் இடமில்லை. அதாவது வந்தமா, வந்த வேலையைப் பார்த்தமா, திரும்பிப் போனோமா என்று இருக்க வேண்டியதுதான்.

*

இந்த 'கட்டாய' ஒரு மணி நேர வகுப்புக்களில் முதுகை நிமிர்த்தி, கால்களை மடக்கி தொடர்ச்சியாக அமர்வது எனக்கு தொடக்க நாட்களில் கஷ்டமாக இருந்தது. யோகாவைச் சில வருடங்களில் பழகியதால், என்னால் அரைத்தாமரை  (Half Lotus Pose) வடிவத்தில் கால்களை மடக்கி முன்னர் நீண்டகாலத்துக்கு அமர்ந்திருக்க முடியும். ஆனால் எந்த விடயமாயினும் தொடர்ச்சியான பயிற்சியில்லையெனில் எல்லாமே துருப்பிடித்து பாழாகிவிடும் என்பதுபோல, யோகாவைத் தொடர்ச்சியாக பயிற்சி எடுக்காததால், கொஞ்ச நேரம் அரைத்தாமரை வடிவில் அமர்ந்திருக்கும்போது கால்களில் நோ கண்டது. முள்ளந்த்தண்டு 90 பாகையில் நிமிர்ந்து நிற்காமல் வலதுபக்கம் வலித்தது.

ஆனால் தியான வகுப்புக்களை ஒருவர் இப்படி அமர்ந்துதான் செய்ய வேண்டும் என்கின்ற கட்டாயமும் இல்லை. உங்களுக்கு விருப்பமான நிலைகளில் தியானத்தைச் செய்யலாம். கதிரையில் (நாற்காலி) அமர்ந்து செய்ய விரும்புவோரும் அப்படி அமர்ந்து செய்யலாம். முதுகிற்கு சப்போர்ட் தேவையானவர்கள் அப்படியான அமைப்புகளைப் பொருத்தி எல்லாம் அமர்ந்து கொள்ள இங்கே வசதிகள் இருந்தன. ஆக ஒருவர் கால்களை மடக்கி 'சப்பாணிகட்டி' இருந்தால்தான் இதில் பங்கேற்ற முடியும்  என்கின்ற அச்சம் எல்லாம் கொள்ளத் தேவையில்லை.

ஆனால் அதற்காய் சோம்பேறியாக எனக்கு கொஞ்சம் முதுகு வலிக்கிறது, கதிரையைத் தருகின்றீர்களா என்றெல்லாம் கேட்டால், நல்லாய்த்தான் தரையில் அமர்ந்திருக்கின்றாய், அப்படியே போய் உட்கார்ந்து தியானத்தை தொடர் என்றும் சொல்வார்கள்.  (அப்படி தனக்கு நிகழ்ந்ததாக ஒருவர் பத்தாம் நாளில் எங்களுக்கு பேச அனுமதி தந்தபோது சொன்னார்).

விபாஸனாப் பயிற்சி எனச் சொன்னாலும் அது முதல் நாளில் தொடங்குவதில்லை. உண்மையான விபாஸனா 4ம் 5ம் நாளின்பின் தான் ஆரம்பிக்கின்றது.

முதல் சில நாட்கள் உங்கள் இயல்பான மூச்சில் கவனத்தைக் குவிக்கும் பயிற்சி தரப்படுகின்றது. பின்னர் முகத்தின் மூக்கோடு சம்பந்தப்பட்ட ஒரு முக்கோணப் பகுதியில் உங்கள் கவனத்தைக் குவித்து மனதைக் கூராக்கும் பயிற்சி தரப்படுகின்றது. இவை 'ஆனாபானா' தியானம் என்று அழைக்கப்படுகின்றது.

இப்படி மூச்சை மெதுவாக ஆரம்பிக்கும்போது உலகிலிருக்கும் ஆயிரத்தெட்டு கனவுகள், கற்பனைகள், வெறுப்புகள், வெறுமைகள் எல்லாம் பெருக்கி உங்களை எவ்வாறாயினும் தியானத்திலிருந்து வெளித்தள்ள பெரும் முயற்சிகள் நடக்கும்.

மூச்சைத் திரும்ப திரும்ப ஒரு இடத்தில் குவிப்பதற்கு பெரும் பாடு படவேண்டிருக்கும். அப்படிக் கொஞ்சம் செய்தாலும், இரவெல்லாம் வராத நித்திரா தேவி, மகனே உனக்கு இப்போது இரண்டாவது சந்தர்ப்பம் தருகின்றேன், வந்து என் மடியில் தூங்கிக் கொள் என்று அழைத்துக் கொள்ளத் தொடங்குவார்.

ஒரு மனிதன் வெளியில் இருக்கும்போதுதான் இந்த இலக்கியவாதிகள், காதலிக்கும், காதலித்த பெண்கள் எல்லாம் அவனுக்கு கவனக்கலைப்பான்கள் என்றால், இப்படி எல்லாவற்றையும் துறந்துவிட்டு  உள்ளே வந்தால் இங்கேயும் பலர் என்னை விடாது துரத்துகின்றனரே என்று நொந்தபடி திருப்ப திருப்ப மனதை மூக்கினடியில் குவிக்க நான் முயற்சித்தபடி இருப்பேன்.

***

(இன்னும் வரும்)

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 02

Wednesday, August 26, 2026

 

 நாள் - 00

 ஜூலை -22 - புதன்கிழமை


***

விபாஸனா தியானம் வியாழக்கிழமை தொடங்குகின்றது என்றாலும் எம்மை முதல் நாளான புதன்கிழமை வரச் சொல்லியிருந்தார்கள். நாம் எமது விபரங்களைப் பதிவு செய்து எம்மைத் தயார் செய்வதற்கு முதல் நாளே நாம் செல்ல வேண்டியிருந்தது.

நான் இருந்த நகரிலிருந்து நூறு கிலோமீற்றர்களுக்கு அப்பால் இந்த விபாஸனா நிலையம் இருந்தது. போகும்போது இன்னும் இரண்டு பேரை என் காரில் ஏற்றிச் சொல்வதாக உறுதியளித்திருந்தேன் (விபாஸானா தொடங்கும் வரை காத்திருக்காமல் எமது meritsஐ  ஜாடிக்குள் முன்னரே சேகரித்தல் எனவும் இதைச் சொல்லிக் கொள்ளலாம்). நாம் விபாஸனாவிற்கு வருகின்றோம் என்று பதிவு செய்யும்போது, உங்கள் வாகனத்தில் வேறு யாரை ஏற்றி வரமுடியுமா (ride) எனக் கேட்பார்கள். 




நான் என் வாகனத்தில் இரண்டு பேரை ஏற்றிக் கொண்டேன். ஒரு பெண் இத்தாலியப் பின்புலத்தைச் சேர்ந்தவர். மற்றவர் மலேசியக்காரர், ஆனால் மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்த சென்ற தமிழ்ப் பரம்பரையைச் சேர்ந்தவர்.

ஒருவர் என்னைப் போல தியான வகுப்புக்கும், மற்றவர் எமக்கு உணவு சமைப்பதற்கும் வந்திருந்தார். தியானத்துக்குப் போவதைப் போல, Serving செய்வதும் விபாஸனாவில் மிக முக்கியமானது. இதை இன்னொரு பொழுது விரிவாகப் பார்ப்போம்.

*
இருவரும் விபாஸனாவுக்கு என்னைப் போன்ற புதியவர்கள் அல்ல. ஏற்கனவே விபாஸனா பழகிய அனுபவசாலிகள். ஆகவே அவர்கள் விபாஸனாவுக்கு புதியவனாக வரும் எனக்கு என்ன அறிவுரை சொல்லுவீர்கள் என்று கேட்டேன். அறிவுரை எல்லாம் உனக்குத் தேவையில்லை, நீ வெற்றி வாகை சூடி வருவாய் என்று மட்டும் உற்சாகப்படுத்தினார்கள்.

போர்க்களத்துக்குப் போவதற்கு முன்னரே கால்கள்  எனக்கு நடுங்குகின்றனவே. பத்து நாள் குருஷேத்திரத்தில் இரண்டு நாள் தாக்குப் பிடிப்பேனா, மாமியார் முன் மருகும் மருமகன் போல வெட்கித்து நிற்க, என்னை விபாஸனாவில் இருந்து மூன்று நாளில் 'நீ இன்று போய்  விபாஸனாப் போருக்கு அடுத்துமுறை தயாராகி வா' என்று இராவணனைப் போல அவமானப்படுத்தி அனுப்புவார்களா என்றெல்லாம் என் உள்மனம் கதறுகிறது  என்பதை  எப்படி இவர்களுக்குச் சொல்வது? எனவே என் நடுக்கத்தை வெளிக்காட்டாது காரின் ஸ்டீரியங்கை இறுக்கிப் பிடித்து என்னை நிதானப்படுத்திக் கொண்டேன்.

இத்தாலியன் பெண் கொஞ்சம் இரக்கப்பட்டு, 'உனக்கு பத்தாவது நாளின்போது அந்த அமைதி (noble silence) கலையும்போது உடனே சத்தங்களின் உலகிற்கு வர சிலவேளைகளில் கஷ்டமாக இருக்கும்.  அதற்கு மட்டும் கொஞ்சம் உன்னைத் தயார்ப்படுத்திக் கொள்' என்றார்.

அவர் ஏற்கனவே தத்துவியலில் பிஎச்டி பெற்றிருந்தவர். இப்போது அந்தத் துறையை உதறிவிட்டு Psychoanalysis இல் dissertation எழுதிக் கொண்டிருக்கின்றேன் என்றார். இந்தப் பேராசிரியைமார்களுக்கு எல்லாம் என்னைப் போன்ற 'தற்குறி'களின் நிலைமை எங்கே விளங்கப் போகின்றது?

விபாஸனாப் பேச்சு இனி வேண்டாம் என்று நாங்கள் உலக அரசியலைப் பேசி கடைசியில் தமிழ்நாட்டு விஜய் அரசியலுக்கு வந்து சேர்ந்தோம். மலேஷியத் தமிழர் மிகப்பெரிய விஜய் இரசிகர் போல. எனவே பேச்சு சுவாரசியமாகப் போய்க் கொண்டிருந்தது. இத்தாலியப் பெண்ணின் துணைவர் ஈரானைச் சேர்ந்தவர் என்பதால் போகும் வழி முழுவதும் டிரம்புத் தாத்தா மீது அப்படி அன்பைப் பொழிந்தபடி நாம் அனைவரும்  சென்று கொண்டிருந்தோம்.

ஒரு கட்டத்தில் நாங்கள் தியானத்துக்குப் போகின்றோமா இல்லை ஏதேனும் அரசியல் ஊர்வலத்துக்குப் போகின்றோமா என்று சந்தேகம் வந்து அமைதியாகி வெளிச்சூழலை வேடிக்கை பார்த்தபடி விபாஸனா நிலையத்தைப் போய்ச் சேர்ந்தோம்.

இனி நாம் அனைவரும்  இறுதிப் பத்தாம் நாள்தான் காண்போம்/பேசுவோம், அப்படிச் சந்தித்து சேர்ந்து மீண்டும் ஒரே வாகனத்தில் திரும்பிச் செல்வோம் என்று முடிவெடுத்துக் கொண்டு  எங்களிடையே விடைபெறச் செய்தோம்.

*
இத்தாலியன் பெண், பெண்களுக்கான காபினுக்குச் செல்ல, மலேஷியக்காரர் உணவு பரிமாறுபவர்களின் பகுதிக்குப் போக, நான் வேள்விக்குத் தயாராகும் கிடாயைப் போல எனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றேன்.

விபாஸனா நிலையத்துக்கு வந்துவிட்டேன் என்று வீட்டுக்கு அறிவிக்கக்கூட அந்த நிலையத்துக்குள் என் தொலைபேசிக்கு network கிடைக்கவில்லை. கொஞ்சம் ஒதுக்குப்புறமாக காடுகளின் சூழலில் இருந்தாலும் இப்படி விபாஸனாக்காரர்  'அநியாயம்' செய்வார்கள் என்று நினைக்கவில்லை. ஆகவே மீண்டும் காரை எடுத்து ஐந்தாறு கிலோமீற்றர்கள் ஓடி coverage கிடைத்த இடத்தில் வைத்து வீட்டுக்கு சந்திரனுக்கு நீல் ஆம்ஸ்ரோங் காலடி வைத்த சந்தோசத்தைப் போல விபாஸனா நிலையத்துக்கு வந்துவிட்டேன், இனி பத்து நாளுக்கு என் மூச்சு இல்லை பேச்சுக்கூட கேட்காது நிம்மதியாக இருங்கள் என்று அறிவித்தேன்.

பிறகு விபாஸனா நிலையத்துக்குத் திரும்பி வந்து 'போறாளே பொன்னுத்தாயி/ விபாஸனாக் காட்டில் மனச விட்டு/உள்ளூரு பொல்லாப்புக்குக் கட்டுப் பட்டு' என்று கண்ணீர் விடாத குறையாக நிர்வாகத்தினரிடம் என் அலைபேசியைக் கையளித்தேன்.

இனி பத்து நாட்களுக்கு அலைபேசியோடு உறவு முற்றாக இல்லை என்று நினைக்க பரவசமா, நிம்மதியா, பதற்றமா  எது வந்தது என்று சொல்ல முடியாத குழப்ப நிலையில், என்னோடு வேள்விக்கு வந்த மற்றப் பலியாடுகளை அவதானிக்கத் தொடங்கினேன்.

அப்படி ஒருவரோடு கொஞ்ச நேரம் உரையாட முடிந்தது. அவர்தான் எங்கள் குழுவில் வயதில் மூத்தவராக இருந்தார். எழுபதைத் தாண்டியவர். இரண்டாவது முறையாக விபாஸனாவுக்கு வந்திருந்தார். என்னிடம், 'இப்படி விபாஸனாவை சிரத்தையாக தொடர்ச்சியாகச் செய்பவர்களிடம் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றத்தைக் கண்டீர்கள் என்று கேட்பேன். ஒருவரும் ஒழுங்காக இதற்குப் பதில் சொல்வதில்லை. ஒரு நண்பர் மட்டும், விபாஸனாவுக்கு வந்தபின் தனக்கு மனைவியோடு சண்டை பிடிப்பது குறைந்ததுவிட்டது என்று மட்டும் சொன்னார்' என்றார். அறிமுகமில்லாத மனிதர் முன் எங்கள் மனதை உடனே திறந்து வைத்தால் சிலவேளைகளில் பிறகு ஆபத்தாகிவிடும் என்பதால், 'மனைவியோடு சண்டை பிடிப்பது குறைந்துவிட்டால், அந்த மனிதருக்கு வாழ்வின் சந்தோசம் ஒரு மடங்கும், அவரின் மனைவிக்கு மகிழ்ச்சி இரண்டு மடங்கும் வந்துவிடுமே, அது போதுமே இந்த வாழ்க்கையை ஒருவர் இனிதாகக் கொண்டு செல்ல என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

*

அன்று மாலை  விபாஸனாக்காரர் நிகழ்வுகளுக்கான ஓர் அறிமுகத்தைத் தந்துவிட்டு, இன்றைக்கு உங்களுக்கு கொஞ்சம் மாலையுணவு தருகின்றோம் என்றார்கள். என் மனமோ இயேசு கடைசியாக சாப்பிட்ட 'இறுதி விருந்து' மாதிரி, புத்தரே நீருமா  என்னைக் கைவிடுகின்றீர் என்று  கலங்கியபடி கடைசி இரவுச் சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தேன்.

ஒவ்வொரு நாளும் விடிகாலை நான்கரை மணிக்கு தியானம் தொடங்கிவிடும். நான்கு மணிக்கு மணியை அடித்து, தூக்கத்திலிருந்து விழிக்க எச்சரிக்கை தருவார்கள் என்றனர். நான் இரவு ஒரு மணி இரண்டு மணியெல்லாம் இயல்பாக விழித்திருக்கக்கூடியவன். ஆனால் என்னால் விடிகாலையில் எவ்வளவு முயற்சித்தாலும் இப்படி எழும்ப முடியாதே, எந்தக் கடந்தகால காதலி என்னை சபித்தாரோ, இப்படி நிலைமை ஆகிவிட்டதே என்று உறைந்து போய் நின்றேன்,

அது மட்டுமில்லை, நாளை காலை அல்ல, இன்றிரவு எட்டுமணியோடே noble silence தொடங்கிவிடும் என்று போன முதல் நாளே வாயிற்கு ஆணியடித்து திகைக்க வைத்தார்கள்.

தூக்குமேடைக்கு வந்துவிட்ட பிறகு, கில்லட்டினால் வெட்டினால் என்ன, தூக்குக்கயிற்றை சுருக்கி இழுத்தால் என்ன, முடிவு ஒன்றுதானே என்று என்னை இந்தப் பலிக்களத்துக்குத் தயார்ப்படுத்தினேன்.

ஆனால் நானே ஆச்சரியப்படுமளவுக்கு இந்த பத்து நாட்களில் ஒருநாள் கூட நான் விடிகாலை நான்கரை மணித் தியானத்துக்குப் போகத் தவறியதில்லை என்று நினைக்க இப்போது வியப்பாய்த்தான் இருக்கின்றது.

ஆக இதெல்லாம் முடியாது என்பதெல்லாம் மனது செய்யும் செப்படி வித்தையே தவிர, சூழல் அவ்வாறு நிர்ப்பந்திக்கும்போது நாம் இயல்பாக அந்தச் சூழல் வேண்டுவதைச் செய்யத் தொடங்கிவிடுவோம் என்று சொல்வது உண்மைதான் போலும்.

இப்படியாக என் விபாஸனா ஆயத்தப்படுத்தல் என்னும் திகில் அனுபவங்கள் தொடங்க, அடுத்த நாள் எப்படி விடியப்போகின்றதென யன்னலுக்கு அப்பால் விரிந்த சிறு காட்டில் எழுந்த வண்டுகளின் ரீங்காரத்தைக் கேட்டபடி படுக்கையில் வெவ்வேறு கோணங்களில் படுத்து நித்திராதேவியே தயவுசெய்து நேரத்துக்கு வந்து என்னை அணைத்துக் கொள்க என்று மன்றாடிக் கொள்ளத் தொடங்கினேன்.

****

(இன்னும் வரும்)

 

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 01

Tuesday, August 25, 2026

 

தியானம் செய்வதை அவ்வப்போது நிகழ்த்திக் கொண்டிருந்தாலும், பத்து நாள் விபாஸனாவிற்குப் போவது என்பது எனக்கு சற்றுப் பயத்தைத் தந்து கொண்டிருந்தது. கடந்தகாலங்களில் சிலமுறை இப்படிப் போக முயன்றபோது எனக்குள் இருந்த தயக்கம்/வேலை நெருக்கடி போன்றவைகளால் அது சாத்தியப்படாமல் போயிருந்தது.

எல்லாவற்றுக்கும் அது நிகழ ஒரு காலம் தேவைப்படுகின்றது என்பது போல, நான் விபாஸனாவுக்குப் போகவும் ஒரு அழைப்பு(calling) தேவையாக இருக்கிறது என்று அமைதியாக இருந்தேன். இங்கே விபாஸனாவுக்குப் போக மூன்று மாதங்களுக்கு முன் பதிவு செய்ய வேண்டும். அப்படிச் செய்தாலும், பதிவு செய்யும் கொஞ்ச நேரத்துக்குள் இடங்கள் முழுதும் நிரப்பப்பட்டு விடும். 



நான் இம்முறையும் பதிவு செய்தபோது, 'இடங்கள் நிரம்பிவிட்டன, உங்களைக் காத்திருப்போர் பட்டியலில் (waiting list) வைத்திருக்கின்றோம்' என்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. சரி, இம்முறையும் எனக்கான 'அழைப்பு' இல்லை என்று அமைதியாகிவிட்டிருந்தேன்.


திடீரென்று விபாஸனா தொடங்குவதற்கு ஐந்து நாட்களுக்கு முன், ஓர் இடம் இருக்கின்றது உங்களுக்கு இணைய விருப்பமா என்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. எனது பிறந்தநாள் காலப்பகுதியில் அந்த பத்து நாட்கள் வருவதால், அது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. அடிக்கடி இந்தப் பிறப்பின் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதுக்கு ஏதேனும் விபாஸனா தியானம் ஆறுதலைத் தரக்கூடும் என்று நினைத்தேன்.

ஜூலை 22 - ஓகஸ்ட் 02 வரையும் விபாஸனாவில் இணைந்து கொண்டேன். இப்படி பத்து நாட்கள் போவதை ஓர் ஆனந்தமான நிலை என்று பொய் சொல்லமாட்டேன். ஒருவிதமான பதற்றமும் பரவசமும் கலந்த நிலையில் இருந்தேன் மட்டும் எனத்தான் சொல்ல முடியும்.

இந்தப் பதற்றத்துக்கு ஒரு காரணம் விபாஸானாவின் சில அடிப்படை விதிகள்.

(1) பத்து நாளும் அலைபேசி பாவிக்கக்கூடாது.

சரி அலைபேசி இல்லாவிட்டாலும், புத்தகங்களை வாசித்தோ, ஜேர்னலை எழுதியோ பொழுதை எப்படியேனும் கழித்துவிடக்கூடிய 'ஆசாமி' நான் என்றாலும், அவை எதற்கும் கூட அனுமதி இல்லை. மேலும் எந்தவகையான இசை கேட்டலோ, இசை வாத்தியங்களை இசைப்பதோ முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தது. வாசிப்பும் இல்லை, எழுத்தும் இல்லை, இசையும் இல்லை என்றால் என்னைப் போன்றோர் எப்படி ஒரு நாளைக் கழித்துவிட முடியும்?

ஒருவகையில் பார்த்தால், இப்படி வெளியுலகத்தோடு தொடர்பு கொள்வதுதான் தடை செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் எப்படியோ எழுபது எண்பது பேர்கள் வருவார்கள், அவர்களோடு கூடிப் பேசி கொஞ்சி விளையாடலாம் என்றால் அடுத்த விதி இப்படி இருந்தது.

(2) பத்து நாட்களும் நீங்கள் எவரோடும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் (Noble Silence).

பேசாமல் மட்டுமில்லை, சைகையில் பேசுவதோ, துண்டுப்பேப்பரில் எழுதி கருத்துக்களைப் பரிமாறுவதற்கோ இங்கே துப்பரவிற்கு இடமில்லை.

அதாவது எண்பது பேர் உலாவுகின்ற இடத்தில் நீங்கள் இருந்தாலும், நீங்கள் உங்கள் தனித்த உலகில்தான் இருக்க வேண்டும். எந்த தொடர்பாடலும் சக தியானிப்பவர்களோடு இந்த பத்து நாட்களில்  வைக்க முடியாது.

*

இந்த இரண்டு கடும் விதிகளை கடவுளே(?) என்று கடைப்பிடித்தாலும் அடுத்த விதிதான் என்னை அதிகம் பயமுறுத்தியது. இந்த மூன்றாம் விதியின் காரணமாக என்னால் ஒருபோதும் பத்துநாட்கள் நின்று தாக்குப் பிடிக்க முடியாது என்றுதான் உள்மனம் சொல்லிக் கொண்டிருந்தது. அது;

(3) மதியம் பன்னிரண்டு மணிக்கு பிறகு எந்த உணவையும் எடுத்துக் கொள்ள முடியாது (காலை மற்றும் மதியம் அவர்கள் தரும் உணவு மட்டும்).

நான் பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் குணமுடைய ஒருவன். குறித்த நேரத்தில் நான் சாப்பிடாவிட்டால் ஏதோ எரிமலையை விழுங்கிய கோபக்காரன் போலத்தான் நடந்து கொள்ளத் தொடங்குவேன். அதுவும் தியானம் இரவு 9 மணி வரை இருக்கும்போது, எப்படி ஒரு மனிதன்  மதியம் பன்னிரண்டு மணிக்குப் பிறகு சாப்பிடாமல் தாக்குப்பிடிப்பான்?

இந்த மூன்றாம் விதியால் புத்தர் என்னை பரிநிர்வாணப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றாரா அல்லது  பட்டினி கிடந்து சாகடிக்கத்தான் மறைமுகமாகத் திட்டமிடுகின்றாரா என்ற யோசனைதான் வந்தது.

இன்னும் வேறு சில விதிகள் இருந்தாலும் இத்தோடு விதிகளை நிறுத்திக் கொள்வோம்.

ஏனெனில் இந்த விதிகள் அனைத்தையும் 10 நாட்கள் தாங்கிப் பிடித்த ஒருவனாகத்தான் நான் இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கின்றேன் என்பதால் மற்ற விதிகள் அனைத்தையும் பஞ்சைப் போல பறந்து போகக்கூடியவை என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும்.

***

(இன்னும் வரும்)

 

கார்காலக் குறிப்புகள் - 157

 

'கடலோடிகள்' என்கின்ற இந்தத் தொகுப்பில் நான்கு எழுத்தாளர்களின் பத்துக் கதைகளை எழுத்துக்கினியவனும், அனுஜா பிரகாஷூம் தமிழாக்கியிருக்கின்றனர். அழகு சுப்பிரமணியத்தினதும் (3), து.தம்பிமுத்துவினதும் (3) கதைகள் பற்றியே இங்கே எழுத விரும்புகின்றேன். இரண்டு பேருமே சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கல்வி கற்பதற்காக இங்கிலாந்து சென்று, அங்கே இலக்கியத்தில் சுடர் விட்டு ஒளிர்ந்தவர்களாவர்.

அழகு சுப்பிரமணியம் பதினைந்து ஆண்டுகள் இங்கிலாந்து வாசத்துக்குப் பிறகு யாழ்ப்பாணம் வந்து தனது வாழ்வை முடித்துக் கொண்டவர். தம்பிமுத்துவோ இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா என்று பல்வேறு நாடுகளுக்கிடையே அலைபாய்ந்து திரிந்தவர்.
 



இவர்கள் இருவருக்கும் எப்படி எழுத்துத் திறமை இருந்தவோ, அவ்வாறே குடிபோதையும் அவர்கள் இருவரையும் கடைசிவரை விடாது துரத்தியிருக்கின்றது. அதனால் இன்னமும் ஒளிர்விட்டு ஒளிர்ந்திருக்கக்கூடிய நட்சத்திரங்கள் இடைநடுவில் வால்வெள்ளியாக விரைவில் ஒளிர்ந்து இருட்டாகி விடைபெற்றுக் கொண்டவர்களோ என்ற எண்ணம் எனக்கிருக்கின்றது.

இவர்களின் இருவரினதும் கதைகளை வாசிக்கும்போது எப்படி இவர்கள் அன்றைய கால யாழ்ப்பாணத்தை ஆங்கிலத்தில் நுட்பமாக எழுதியிருக்கின்றார் என்ற வியப்பே ஏற்படும். ஈழத்துச் சூழலில் மண் மணம் கவிழும் கதைகள் தமிழில் எழுதப்படும் காலம் அல்லது அதற்கு முன்னரே மிக நுட்பமாக தமிழ் கலாசாரத்துக் கதைகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கின்றார்கள் என்பதுதான் கவனிக்கத்தக்கது.

இன்றைக்கு கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு அவர்களின் கதைகளை வாசிக்கும்போது நாம் அன்றைய யாழ்ச்சூழலில் உலாவிக் கொண்டிருப்பது போலத் தெரிகின்றது. தம்பிமுத்துவும் அழகு சுப்பிரமணியமும் எப்படி மேற்தட்டு மக்களின் வாழ்வியலை எள்ளலுடன் கேலி செய்கின்றார்களோ, அதேயளவிற்கு விளிம்புநிலை மனிதர்களைப் பரிவுடன் அணுகின்றார்கள் என்பதையும் இக்கதைகளினூடு நாம் அவதானிக்க முடியும்.

உதாரணத்திற்கு அழகுவின் 'கூலிக்கு மாரடிப்பவர்கள்' கதையையும், தம்பிமுத்துவின் 'மரமேறி' கதையையும் வாசிப்பவர்கள் அதை உணர்ந்து கொள்ள முடியும். கூலிக்கு அழுபவர்கள் கதையில், ஆதிக்கசாதி தலைவர் வீட்டில் ஒரு சாவு விழுந்துவிட  மரணவீட்டிற்கு கூலிக்கு அழுபவர்களை அழைத்து வரச் சொல்லப்படுகின்றது. ஆனால் அதேசமயம் இந்த விளிம்புநிலை மனிதர்களின் வீட்டிலும் சாவீடு நடக்கின்றது. அவர்கள் தமது சொந்த சோகத்தை ஆற்றமுடியாது, ஆதிக்கசாதி சா வீட்டுக்கு கூலிக்குப் பாட அழைத்து வரப்படுகின்றார்கள். அப்போது இந்தச் சா வீடுகளில் நிகழும் சம்பவங்களை அழகு சுப்பிரமணியம் அருமையாக எழுதிச் செல்கின்றார்.

அதுபோல தம்பிமுத்துவின் 'மரமேறி' கதையில் இப்படி மரமேறியான வேலுவின் கதை சொல்லப்படுகின்றது. வேலு, அச்சுவேலிக்கு கொழும்பிலிருந்து விடுமுறைக்குச் செல்லும் கதைசொல்லிக்கும், அவரின் சகோதரருக்கும் தென்னைமரமேறி இளநீர் வெட்டிக் கொடுப்பவர். அவர்களின் தாத்தாவுக்கு தென்னையிலிருந்து கள் இறக்குபவர். இத்தனைக்கும் வேலு வசதியில் குறைந்தவரல்ல. அவருக்கு நிறையத் தென்னைகளுடன் சொந்தமாகத் தோப்பும் இருக்கின்றன. ஆனால் கதைசொல்லியின் தாத்தா மீதிருக்கும் அன்பால் இவர்களின் தென்னைகளிலும் ஏறி இறங்குகின்றவர்.

இந்தக் கதையின் தம்பிமுத்து, மரமேறி வேலுவுக்கும், இவர்களின் பூட்டனாருக்கு நல்ல உறவு இருந்தாலும், சாதியின் நுட்பமான தடுப்புச் சுவர்கள் பற்றியும் பேசுகின்றார்.  அதுவேதான் இந்தக்கதையை அசல்தன்மையுடன் வாசகர் முன்னால் வைக்கின்றது எனச் சொல்வேன்.

எப்படி அழகு சுப்பிரமணியத்தின் 'கூலிக்கு மாரடிப்பவர்கள்' கதையில் செத்தவீட்டில் அழும் நிலைமை விபரிக்கப்படுகின்றதோ, இந்த 'மரமேறி' கதையிலும் ஒரு மரணம் நடந்துவிட இப்படி கூலிக்கு அழுபவர்கள் சித்தரிக்கப்படுகின்றார்கள். ஒருவகையில் அழகும், தம்பிமுத்துவும் மத்தியதர உயர்வர்க்க வாழ்க்கை வாழ்ந்தாலும், அவர்களாலும் சமூகத்தில் அடிநிலையில் இருந்த மக்களை எழுத்துக்களால் நெருங்க முடிந்திருக்கின்றது என்பதுதான் முக்கியமானது.

*

இந்த 'கடலோடிகள்' தொகுப்பில் தம்பிமுத்துவின் 'மாதுளை மரம்', 'மரமேறி', 'பூட்டனாரும் பேய்பூதங்களும்' ஆகிய மூன்று கதைகளை எழுத்துக்கினியனும், அனுஜாவும் தமிழாக்கியிருக்கின்றனர்.  தம்பிமுத்து தன்னையொரு கவிஞராகவே வாழும் காலத்தில் முன்வைத்தவர். அவர் இங்கிலாந்தில் (அமெரிக்காவிலும்) தொடர்ந்து நடத்திய Poetry London (/New York) சிற்றிதழே கவிதைகளுக்கென்றே நடத்தியவர். அவ்வாறான தம்பிமுத்து அமெரிக்காவில் வாழ்ந்த காலத்திலே கதைகளை எழுதத் தொடங்கியவர். வெளியாகிய கதைகள் ஐந்துதான் என்கின்றனர். சிலவேளைகளில் அதற்கு மேலும் எழுதி சிலது வெளிவராதிருக்கக்கூடும்.

இந்தக் கதைகளை தமிழாக்கிய எழுத்துக்கினியனோடு தனிப்பட்ட பேச்சில், அவர் தம்பிமுத்துவின் ஒரேயொரு மகளான சகுந்தலாவோடு தொடர்பில் இருப்பதை அறிந்துகொண்டேன். எனவே தம்பிமுத்துவின் புதிய கதைகளை எழுத்துக்கினியன் கண்டெடுத்து இனி வரும் காலங்களில் நாம் தமிழில் வாசிக்கும் சந்தர்ப்பம் வரக்கூடும் என நம்புகின்றேன்.

தம்பிமுத்துவின் 'மாதுளை மரம்' நியூ யோர்க்கர் இதழில் வெளிவந்திருந்தது. இவ்வளவு காலமாகியும் இன்னும் வேறெந்த தமிழ் எழுத்தாளரின் கதை நியூ யோர்க்கரில் வெளியாகியதாக ஆதாரபூர்வமான சாட்சிகள் எதுவுமில்லை என்கின்றபோது தம்பிமுத்துவின் கதை கடந்த நூற்றாண்டின் 50களில் வெளிவந்திருக்கின்றது என்பதையிட்டு ஈழத்தமிழர்களாகிய நாம் பெருமை கொள்ளலாம்.

ஒருவகையில் பார்த்தால் தம்பிமுத்து கதைகளை எழுதப்போகின்றபோது அவர் இளமைக்காலத்தில் விடுமுறையில் கழித்த யாழ்ப்பாணத்தை (அச்சுவேலி) பின்னணியாகக் கொண்டுதான் கதை எழுதியிருக்கின்றார் என்பது புரிகின்றது. இந்த மூன்று கதைகளிலும் அச்சுவேலி எங்கோ ஓரிடத்தில் வெளிப்படையாகப் பதிவு செய்யப்படுகின்றது. ஆக ஒரு மனிதனின் சிறுவயது/பதின்மவயது ஒருவரின் படைப்பில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தும் என்பதற்கு தம்பிமுத்துவின் கதைகளை உதாரணமாகக் கொள்ளலாம்.

*

அழகு சுப்பிரமணியம் இருபதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியிருக்கின்றார். அவரின் ஒரு குறிப்பிட்ட சிறுகதைகள் 'நீதிபதியின் மகன்' என்ற பெயரில் ராஜ சிறிகாந்தனால் தமிழாக்கப்பட்டிருக்கின்றது. அப்படி தமிழாக்கப்படாத மூன்று கதைகளை எழுத்துக்கினியவன் தமிழாக்கியிருக்கின்றார்.

அழகுவின் 'பெரிய பிள்ளை (The big Girl) எழுதிய காலத்திலே கவனத்திற்குள்ளான கதை. அதே பெயரிலேதான் அழகு தனது முதலாவது சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டும் இருந்தார். ஒருவகையில் பார்த்தால், இந்தத் தொகுப்பில் இருக்கும் 'பெரிய பிள்ளை'யும், 'பெரிய கடைச் சந்தி'யும் ஒன்று மற்றதன் தொடர்ச்சி எனச் சொல்லலாம்.

'பெரிய பிள்ளை' ஒரு செல்வாக்கான யாழ்ப்பாணத்துப் பெரிய மனிதர் தனது மகளை படிப்பதற்கான யாழ்நகரிலுள்ள புளியடி (வேம்படி) பாடசாலைக்கு அனுப்புவதுதான் கதை. இந்தக் கதையில் திருமதி இராமசாமி தனது மகளை வேம்படி பாடசாலை மாட்டுவண்டிலில் கொண்டுபோய் விடுதியில் விட்டு விட்டு திரும்புவதுதான் கதை. இரண்டாவது கதையான 'பெரிய கடைச் சந்தியில்' யாழ் நகருக்கு திருமதி இராமசாமி தனது நகருக்கு மாட்டு வண்டியில் திரும்புகின்ற பயணத்தைப் பற்றியது. திருமதி இராமசாமிக்கு அதுவரை காலமும் தன்னோடு வளர்ந்த மகள் பார்வதியை புளியடி பாடசாலை விடுதியில் தனியே விட்டுவிட்டு வந்தது கவலையைக் கொடுக்கின்றது. வழிமுழுதும் வண்டிலுக்குள் இருந்து அழுகின்றார். வண்டியோட்டியோ 'இப்படியே அழுதபடி வந்தால், பெரியகடைச் சந்தியில் இருக்கும் வம்பன்கள் வேறுவிதமாகக் கதைப்பார்கள்  ஆகவே அழாமல் இருங்கள்' எனச் சொல்கின்றார்.

இந்தக் கதையில் திருமதி இராமசாமியின் பயணத்தினூடாக அன்றைய யாழ்ப்பாணத்தின் வெளிச்சூழலை அழகு அற்புதமாகக் காட்டுகின்றார். இவ்வளவு நுணுக்கமாக எப்படி ஆங்கிலத்தில் அழகுவால் எழுத முடிகின்றது என்று வாசிப்பவர் வியக்காமல் இருக்க முடியாது.

மூன்றாவது கதையான 'மதமாற்றத்தில்'தான் அழகு என்கின்ற படைப்பாளின் ஆளுமை விகசிப்பதை நாம் காண்கின்றோம். வேலைக்காக மதம் மாறிய ஒருவரால் கடைசிவரை 'சிவன் சிவன்' என்று இந்துக்கடவுளளை உச்சரிப்பதை மாற்றமுடியாது. அந்த ஒரு காரணத்தை வைத்தே இந்த ஆசிரியரின் மீது பொறாமை கொள்ளும் சக ஆசிரியர் அவரின் பதவியுயர்வை தடுக்க நினைக்கின்றார். இறுதியில் மதம் மாறி சிவன் சிவன் என்று உச்சரிக்கின்ற அந்த ஒடுக்கப்பட்ட ஆசிரியருக்கு அவரது பதவி உயர்வு கிடைக்கின்றதா இல்லையா என்பதுதான் கதை. இந்தக் கதையை தீவிரமாகவும், அதேவேளை நகைச்சுவையுணர்வு பொங்க அழகு எழுதியிருப்பதுதான் சிலாகிக்கத்தக்கது.

*

இவர்கள் இருவரின் கதைகளோடு வி.வி.கணேஷானந்தனினதும், வஜ்ர சந்திரசேகரினதும் தலா இரண்டு கதைகள் இத்தொகுப்பில் தமிழாக்கப்பட்டிருக்கின்றது. இந்தத் தொகுப்பை வாசிப்பவர்கள் அதை வாசிக்கட்டுமென அவர்களின் கதைகளைப் பற்றிப் பேசுவதை இங்கே தவிர்க்கிறேன்.

சமகால எழுத்துக்களில் ஒருவித அலுப்பு வந்து நான் பழைய ஈழத்து எழுத்தாளுமைகளைத் தேடத் தொடங்கியபோது அழகுவும் தம்பிமுத்துவும் என்னை அவ்வளவு பாதிப்புச் செய்தனர். அவர்களது படைப்புக்கள் மட்டுமில்லை, எந்தப் பிரபல்யம்/புகழ் எது குறித்தும் கவலைப்படாது தாம் நம்பிய கலையில் ஊன்றித் திளைத்தது என்னை அவர்களை மேலும் மேலும் அறியவேண்டும் என்கின்ற வேட்கையை ஏற்படுத்தியது.

அதே சமகாலத்தில் தமிழுக்கு கிடைத்த பேறாய் எழுத்துக்கினியவனும், அனுஜாவும் இவர்கள் இருவரின் கதைகளையும் தமிழாக்கம் செய்யத் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கின்றது. தமிழில் எழுதப்பட்ட கதைகளைப் போல இவர்களின் மொழிபெயர்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குறையாக அல்ல, ஆனால் விரும்பினால் கவனிக்கலாம் என்று தமிழாக்கம் குறித்து ஒரு விடயத்தை அவர்களிடம் சொல்வேன். இந்தளவுக்கு யாழ் வட்டாரமொழியில் கதாபாத்திரங்கள் பேசுவதை மாற்றத் தேவையில்லை என்று சொல்வேன். கொஞ்சம் நியமத்தமிழின் பக்கம் சென்று பார்க்கும்போது இன்னும் இறுக்கமான கதைகளாக தமிழுக்கு வரும்போது இவர்களின் இருவரின் கதைகள் இருக்கும் போலத் தோன்றியது. விரும்பியனால் தமிழாக்கிய இருவரும் இந்தப் புள்ளி குறித்து சற்று யோசித்துப் பார்க்கலாம்.

அழகு சுப்பிரமணியன் இருபதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியவர். 'நீதிபதியின் மகன்' தொகுப்பில் பன்னிரண்டு கதைகள் இருக்கின்றன. எழுத்துக்கினியன்/அனுஜா இதுவரை தமிழாக்காத அழகுவின் கதைகளை தமிழாக்கி ஒரு தனித் தொகுப்பாக வெளியிடலாம். அதுபோல தம்பிமுத்துவின் கதைகள் உள்ளிட்ட பொயட்ரி இலண்டனில் அவர் எழுதிய அற்புதமான ஆசிரிய தலையங்கள், விமர்சனங்கள் என்பவற்றைத் தொகுத்து தம்பிமுத்துவுக்கெனவும் ஒரு தொகுப்பு வெளியிடலாம்.

தமிழிக்கு ஒரு நல்நிகழ்வாய் எழுத்துக்கினியன்/அனுஜா போன்றவர்கள் இரண்டு மொழிகளிலும் தமிழாக்கும் வல்லமை உடையவர்களாக இருக்கின்றார்கள். எனவே அவர்களைப் போன்றவர்களின் தமிழாக்கங்களை/அதற்கு அவர்கள் கொடுக்கும் உழைப்பை மதிக்கின்றவர்களாக நம் சமூகம் இருந்தால் இன்னும் நிறைய வளங்களைத் தமிழுக்கு அவர்கள் கொண்டுவந்து சேர்ப்பார்கள் என நினைக்கின்றேன்.

***

 

நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார் - ராஜேஷ்

Saturday, August 22, 2026

 

நண்பர் இளங்கோ எழுதிய "நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்" சிறுகதைத் தொகுதியை வாசித்தேன்.

இளங்கோ அவர்களை தமிழ் பிளாகர், தமிழ்மணம் காலந்தொட்டு டி.சே வாக அறிந்தாலும், அனுக்கமாக வாசிக்கத் தொடங்கியது சமீபமாக முகநூலில் தான்.

அவரது விட்டேத்தியான பதிவுகளும், அவர் வசிக்கும் கனடா தேச காடுகளுக்குள்ளும், இயற்கையான சூழல்களில் தன்போக்கில் நடை பயிலும் காணொளிகளும், அதே நேரம் அவர் வாசிக்கும் கடினமான புத்தகங்களும், பயணிக்கும் உலக நாடுகளும், எழுதும் விஷயங்களின் அடர்த்தி என ஒவ்வொன்றும் எப்பொழுதும் பிரமிக்க வைக்கும்.

 
எப்படி ஒரு மனிதரால், தன்னையும் வாழ்வையும் நையாண்டி செய்தபடியும், அதன் தீரா வசீகரங்களை நுகர்ந்தபடியும், சத்துவரை சாட்சியாக வைத்து ரத்த காவு கொண்ட ஒரு தேசத்திலிருந்து வந்தும், புத்தரை நேசித்தபடியும் என்று வெவ்வேறு திசைகளில் மிக இயல்பாக பயணிக்க முடிகிறதென வியந்திருக்கிறேன்.

புலம்பெயர் வாழ்வு, ஒரு கலைஞனுக்குள் உண்டாக்கும் அநேக வடுக்களை, அனுபவ கீறல்களை, செக்கு மாடாய் சுழலும் ஒரு வாழ்வு முறையில் இருப்பவனால் முழுவதும் புரிந்து கொள்ள முடியாது.

இவை எல்லாம் தான் அவரது கதைகளாக இப்புத்தகத்தில் விரிந்திருக்கின்றன.ஒரு மனிதரை அனுக்கமாக பின் தொடரும் பொழுது, அவரது படைப்புகள் இன்னும் கூடுதல் ஒத்திசைவைத் தருகின்றன.

இப்புத்தகத்தில் வரும் இயக்கக்காரி, அரசன் அன்று கொல்வான், நம் இயல்புவாத சிறுகதையின் தொனியில் இருந்தாலும், வெளிப்படும் விதத்தில் நம் அனுபவத்திற்கு மிகப் புதிது.

ஒவ்வொரு சிறுகதையிலும், அவரை அடையாளம் காண முடிவது போல், கதை முழுவதும் வரும் அப்பாத்திரங்களின் காதலிகள் ஒன்றே தானா வெவ்வேறா என ஒரு குறுகுறுப்பும் உள்ளே ஓடிக் கொண்டிருக்கிறது.அவரது நாயகர்களால், மிக இயல்பாக ஒரு தோழியை போகுமிடமெல்லாம் உருவாக்கிக் கொள்ள முடிகிறது.

மிஸ்டர் கே சிறுகதையில் வரும் ஒரு நபரை அவர் இன்னாராக இருக்குமோ என சொல்லும் பொழுது, நம் பிரிய எழுத்தாளர்களை இவரும் பிரியப்பட்டிருப்பதில் ஒரு மகிழ்ச்சி.

சற்றே கொஞ்சம் இலங்கைத் தமிழ் சொற்கள் மலிந்திருந்தாலும், வாசிக்க லகுவான, ஆனால் தமிழ் சிறுகதைகள் அதிகம் பேசாத விஷயங்களால் விளைந்த கதைகள் இவை.

வாசித்து பாருங்கள்..சுவாரஸியமான புத்தகம்.

***

(நன்றி: ராஜேஷ்)

 

கார்காலக் குறிப்புகள் - 156

Tuesday, August 18, 2026

 

 கால்பந்தாட்டக் குறிப்புகள் - 02

***

துவரை ஆர்ஜெண்டீனாவின் ஆட்டங்கள் சோபிக்கவில்லை. நடுவர்களின் ஆதரவும் இருக்க அளாப்பி விளையாடுகின்றார்கள் என்கின்ற விம்பமும் இருந்தது. இன்று அதை மறுதலித்து எதிரணியினரே ஒப்புக்கொள்ளும்படி நன்றாக விளையாடினார்கள்.

ஐரோப்பிய நாடுகளுக்கு ஒருவிதமான ஆட்ட வியூகங்கள் இருப்பதுபோல, தென்னமெரிக்கா நாடுகளுக்கு எப்போதும் முன்களமே வலுவாக இருக்கும். ஆகவேதான் அவர்களால் நிறையக் கோல்களை எதிரணியினர் அடித்தாலும், விடாமுயற்சியுடன் திரும்பி வந்து விளையாடி உலகக்கோப்பைகளை வெல்ல முடிந்தது.

Uploaded Image
அதேசமயம் பிரேசில் போன்ற நாடுகள் முன்கள வீரர்களின் கவனம் செலுத்தும்போது, பின்களம் வலுவற்று இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஜேர்மனி அவர்களுக்கு ஏழு கோல்கள் அடித்த சம்பவத்தை உதாரணத்துக்குச் சொல்லலாம். அதேபோன்று தென்னமெரிக்கா நாடுகளுக்குள் (கோஃபா கப்) விளையாடும்போது ஒரு உத்தியையும், உலக்க்கோப்பைக்காக விளையாடும்போது (அதிகம் ஐரோப்பா நாடுகளோடு) வேறொரு உத்தியையும் கையாள வேண்டியிருக்கும்.

இதைச் சரியாகக் கணித்து கடந்த சில உலகக்கோப்பை ஆட்டங்களில் (2014 இல் இருந்து) விளையாடுவது ஆர்ஜெண்டீனா. அதை அதிகம் கவனம் கொள்ளாது இன்னும் strikers/forwards மீது கவனம் குவித்து தொடர்ச்சியாக பிழை விட்டுக்கொண்டிருப்பது பிரேசில்.

பிரேசில் கடந்த நான்கைந்து உலகக்கோப்பைகளில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறிய அனைத்து ஆட்டங்களையும் பார்த்தால், அவர்கள் அவ்வளவு மோசமாக விளையாடி இருக்க மாட்டார்கள்; முன்கள வீரர்கள் இயன்றளவு கோல்களை அடிக்க முயற்சித்திருப்பார்கள். அதேசமயம் பிரேசிலிடம் ரொனால்டோ/ரொனால்டீனா போன்றவர்களுக்குப் பிறகு சிறந்த ஸ்ரைக்கர்ஸ் (நெய்மார் இருந்தாலும், அவரொருவரால் ஆட்டங்களின் நிலைமையை மாற்றியமைக்க முடியவில்லை). வரவில்லை. எனவே தொடர்ச்சியாக பிரேசிலால் வெல்ல முடியவில்லை.

ஆர்ஜெண்டீனாவுக்கு மரடோனாவுக்குப் பிறகு மெஸ்ஸி என்கின்ற தங்கமுட்டையிடும் வாத்துக் கிடைத்திருக்கின்றது. அதேவேளை ஆர்ஜெண்டீனா முன்களத்தை வலுவாக்கியதுபோல பின்களத்தையும் பிரேசிலைப் போலவன்றி வலுவாக்கியிருந்தது.

இந்த உலகக்கிண்ணத்திலே அதை எளிதாகப் பார்க்கலாம். ஆர்ஜெண்டீனாக்காரர்கள் ஐரோப்பியர்கள் போல tough ஆட்டம் விளையாடினார்கள். இந்த அரையிறுதி ஆட்டத்தில் கூட இடைவெளியின் முன் ஆர்ஜெண்டீனா நிறைய ஃபவுல்கள் விட்டார்கள். இடைவெளியின் பின் ஒன்றுக்கு மேற்பட்ட மஞ்சள் அட்டைகளையும் பெற்றார்கள்.

ஆர்ஜெண்டீனா சுதாகரித்துக் கொண்ட ஆட்ட வியூகத்தை பிரேசில் தவறவிட்டது. நோர்வேயுடன் அவ்வளவு மென்மையான ஆட்டத்தை ஆடியது. நோர்வைக்காரர்கள் தங்களுக்குள் வைத்து நீண்டநேரம் விளையாடிய பந்தைப் பறிக்கக்கூட  பிரேசில்காரர்கள் ஃபவுல் விடத் தயாராக இருக்கவில்லை. பிரேசில் அன்று தோற்ற ஆட்டத்தில் பிரேசில் பெற்ற ஒரேயொரு மஞ்சள் அட்டை நெய்மாருடையது. அதுவும் ஆட்டம் முடிகின்ற கட்டத்தில்.

இவ்வாறு சொல்வதால் நான் ஃபவுல் ஆட்டங்களுடன் அழுகுணி ஆட்டம் ஆடவேண்டும் என்று சொல்ல வரவில்லை. இன்னும் இப்படி மென்மையாக விளையாடி கோல்களைப் போட்டு ஆட்டத்தைச் சோபிக்கச் செய்வதற்காகத்தான் பிரேசில் ஆதரவாளனாக இருக்கின்றேன். ஆனால் உலகக்கோப்பையில் வெல்லவேண்டும் என்றால் கடுமையான ஆட்டத்தை முக்கியமாக ஐரோப்பிய நாடுகளுடன் ஆடாவிட்டால், அவ்வளவு எளிதாக வெல்லமுடியாது. அதற்கு இன்றையகால பிரேசில் சிறந்த உதாரணம்.

இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து விட்ட பிழை (கடந்த உலகக்கிண்ண ஆட்டங்களிலும் இதைச் செய்திருக்கின்றது), ஒரு கோலை அடித்தவுடன் தடுப்பாட்டம் ஆடும் நிலைமைக்குப் போய்ச் சேர்ந்திருந்தது. இதே தடுப்பாட்டம் மெக்ஸிக்கோவுடன் ஆடும்போது இங்கிலாந்துக்கு சாதகமாக இருந்து வெற்றியையும் பெற்றுக் கொடுத்திருந்தது. ஆனால் ஆர்ஜெண்டீனா இன்னொரு மெக்ஸிக்கோ இல்லை.

Uploaded Image


இங்கிலாந்து, தொடர்ச்சியாக இந்த உலகக்கிண்ணப் போட்டிகளில், பின்னாலிருந்து வந்து கோல்களை இறுதி 20/30நிமிடங்களில் அடித்து ஆட்டங்களை வென்ற ஆர்ஜெண்டீனாவுடன் இப்படி பின்னே நின்று தடுக்கும் ஆட்டம் விளையாடியது அவர்கள் விட்ட பிழை. நோர்வே பிரேசிலுக்கு ஒரு கோல் அடித்துவிட்டு தடுப்பாட்டம் ஆடவில்லை. பந்தை மைதானத்தின் நடுவிலும், பிரேசிலின் பெனால்டி பெட்டிக்குள்ளும் தொடர்ந்து தள்ளியபடியே இருந்தார்கள். அதனால்தான் பிரேசிலால் அவ்வளவு கோலடிக்கும் சந்தர்ப்பங்களை உருவாக்க முடியவில்லை.

இன்று இங்கிலாந்து ஒரு கோல் போட்டபின், பின்களத்தில் தடுப்பாட்டத்தில் கவனத்தைக் குவித்தபோது, தொடக்கத்திலே சில கோல்கள் இங்கிலாந்து கோல்கீப்பரால் இலாவகமாக தடுக்கப்பட்டன. அப்போதே இங்கிலாந்து சுதாகரித்திருக்க வேண்டும். இத்தனைக்கும் இங்கிலாந்து மிகச் சிறந்த strikers/midfields ஐ கொண்ட அணி. களத்தில் மட்டுமில்லை, reserve ஆகக்கூட ரஷ்பார்ட், ஷக்கா போன்ற வீரர்கள் இருந்த ஒரு அணி.

எனினும் எல்லா நேரங்களிலும் எதிரணி கோல்களை முதலில் அடித்தபின் மீண்டு வந்து அதைவிட கூடிய கோல்களை அடித்து வெல்வதென்பது இலகுவல்ல. அதிலும் ஆர்ஜெண்டீனா அடித்த (அடிக்காத சில கோல்கள்) கோல்களில் மெஸ்ஸியின் பங்களிப்பு மிகச் சிறப்பானது. மெஸ்ஸி இந்தப் பந்துகளை பெனால்டி பெட்டிக்குள் அனுப்பாவிட்டிருந்தால் ஆர்ஜெண்டீனா கோல்களை அடித்திருக்கவே முடியாது.

மெஸ்ஸி ஒரு கட்டத்தில் தன்னால் பெனால்டி பெட்டிக்குள் போய் கோல்களை அடிக்கமுடியாது என்பதை உணர்ந்து பின்னாலே நின்று பெரும்பாலும் விளையாடியதை நாம் பார்த்திருப்போம். பிரான்ஸ் தோற்ற போட்டியில் எம்பாவேவின் கால்களுக்கு பந்தே வரவில்லை. அவர் சிலவேளை மெஸ்ஸியைப் போல சற்று பின்னே நின்று விளையாடியிருந்தால் பிறர் மூலம் கோல்களை அடிக்கும் சந்தர்ப்பங்களை  பிரான்ஸிற்கு உருவாக்கியிருக்கக்கூடும்.

இன்று ஆர்ஜெண்டீனாவின் நாள். அவர்கள் சிறப்பாகவே விளையாடினார்கள். இதுவரை நாட்களில் அவர்கள் மீதிருந்த விமர்சனத்தைத் தாண்டி, இன்று அவர்களை மனந்திறந்து பாராட்டலாம்.

அதுவும் ஐரோப்பா நாடொன்றுக்கு எதிரான வெற்றியென்பது இன்னும் மகிழ்ச்சி தரக்கூடியது!

****
(Jul 11)


பிரேசில்காரரே, பிரான்சுக்காரன்கள் ஆடுகின்ற ஆட்டத்தைப் பார்த்தால் நாங்கள் அவர்களைச் சந்தித்தால்  அவர்கள் ஜேர்மன்காரர்கள் நமக்கு 7 கோல்கள் அடித்ததை விட அடிக்காமல் அனுப்பமாட்டாங்கள் போல இருக்கிறது.

இதற்கிடையில் அடுத்த சுற்றில் நாங்கள் நோர்வேக்காரன்களைச் சந்திக்கப் போகின்றோம். அவர்கள் கடைசி ஆட்டத்தில் வென்றபின் மைதானத்தில் தாங்கள் கடலோடிகளின் கலாசாரத்தில் வந்தவர்கள் என்று Viking Row செய்து வீரம் காட்டுகின்றார்கள். ஐவரி கோஸ்ட்டை வென்றதற்கே ஆ, ஊ என்று படகு வலித்து இப்படி படங்காட்டுகின்றவர்கள் நமக்கு என்ன வைத்துச் செய்யப் போகின்றார்களோ தெரியவில்லை என மனம் பதறுகிறதே.

மேலும் ஜேர்மனி முதல் knock out இலே தோல்வியடைந்து நாட்டுக்குத் திரும்பிப் போனதற்கு, முதலில் நான்கு சாம்பியன்ஸ் வென்ற அவர்களை அனுப்பிவிட்டு, அடுத்து ஐந்து சாம்பியன்ஸ் வென்ற பிரேசில்காரர்களுக்குத்தான் மலையாள மாந்தீரிக செய்திருக்கின்றோம் என்று கேரள ஆர்ஜெண்டீனா இரசிகன் எனக்கு எச்சரிக்கை செய்தபடி இருக்கின்றான்.

பிரேசிலினின் ஜாம்பாவன்களாக இருந்த ரொனால்டோ, ரொனால்டீனோ எல்லாம் உங்களுக்காக ஒவ்வொரு ஆட்டத்தை நேரடியாகப் பார்க்க வருகின்றார்கள். தங்களுக்கு அடுத்த தலைமுறை சாம்பியன்ஸ் வெல்லவேண்டும், அதைத் தமது கண்களால் நேரடியாகப் பார்க்க வேண்டும் என்று வரும் அவர்களின் பொருட்டாவது, ரியோ கடற்கரை மணலில்  பெண் பிள்ளைகளுக்கு கலர்ஸ் காட்டுவதற்காக விளையாடுவது போன்று அல்லாது professional ஆக, நாங்கள் சுண்டெலிகள் அல்ல, சிறுத்தைகள் என்று பாய்ந்து விளையாடவேண்டும்.

இன்றைய ஆட்டங்களில் நான் கொங்கோ, செனகல், பொஸ்னியா வெல்லவெண்டும் என்று விரும்புகின்றேன்.

Uploaded Image

ஆனாலும் வெல்லப்போவது என்னவோ இவற்றுக்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து, பெல்ஜியம், ஐக்கிய அமெரிக்காவாக இருக்கப் போகின்றதென்றாலும், எப்போதும் போல வலிமையும்/வளங்களும் குறைந்த நாடுகளுக்கு என்னுடைய ஆதரவு.

அதுவும் போர் நிறைந்த சூழலில் இருந்து வந்து குழுநிலை ஆட்டங்கள் அனைத்தையும் சமனிலைப்படுத்தி, மூன்று ஆட்டங்களிலும் வியப்பைத் தந்த ஈரான் இந்த knock out சுற்றுக்கு வராதது கவலையே. அதேபோல  தேவதைக் கதையைப் போல மிகச்சிறு தீவான Cabo Verde இந்தச் சுற்றுக்கு வந்திருப்பதும், மெஸ்ஸியின் ஆர்ஜெண்டீனாவைச் சந்திக்க இருப்பதும் மகிழ்ச்சியான விடயமே.

***
(Jul 01)


மெஸ்ஸி மூன்று உலகக்கிண்ண இறுதியாட்டங்களை விளையாடப் போகின்றார் என்பது நினைவுக்கு வந்தபோதுதான், பிரேசிலின் பீலேயும் அப்படி விளையாடி இருப்பார்தானே என்று தேடிப் பார்த்தேன். பீலே 1958, 1962, 1970 பிரேசில் சாம்பியன்ஸ் ஆனபோது இருந்தவர் என்றாலும், 1962 இல் காயம் காரணமாக பீலே இறுதிப் போட்டியில் பங்கேற்றவில்லை. ஆக பீலே இரண்டு உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் மட்டுமே பங்கு பற்றியிருக்கின்றார்.

மெஸ்ஸி இப்போது 2014, 2022, 2026 இறுதிப்போட்டிகளில் பங்குபற்றுகின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கின்றார். பிறகுதான் இன்னொரு விடயம் ஞாபகத்துக்கு வந்தது. பிரேசிலுக்குப் பீலேயிற்குப் பிறகான பொற்காலம் என்றால் அது 90 களிலும் 2000களின் தொடக்கத்திலும் இருந்திருக்கின்றது.

பிரேசில் 1994, 1998, 2002 என எந்த நாட்டினராலும் எளிதில் முடியாத சாதனையாக தொடர்ந்து இறுதியாட்டத்துக்கு வந்திருக்கின்றனர். அதில் 1994, 2002 இல் சாம்பியன்ஸ் ஆனார்கள். 1998 இல் பிரான்ஸிடம் இறுதிப்போட்டியில் 3-0 என்று தோற்றிருந்தனர்.

இந்த மூன்று தொடர்ச்சியான இறுதியாட்டங்களிலும் இருந்த ஒரேயொரு விளையாட்டு வீரராக பிரேசிலின் காஃபூ இருக்கின்றார். இவரே 2002இல் அணித்தலைவராக இருந்தபோது சாம்பியன்ஸை பிரேசில் வென்றும் இருக்கின்றது.

இப்போது மெஸ்ஸி மூன்று இறுதியாட்டங்களில் விளையாடும் இன்னொரு வீரராக உருவாகியிருக்கின்றார்.  எனக்கு மெஸ்ஸியைப் போல பிடித்த  இன்னொரு ஆர்ஜெண்டீனா வீரரான ஏஞ்சல் டீ மரியா (Ángel Di María ) இந்தச் சாதனையில் இடம்பெற்றிருக்கலாம். ஆனால் அவர் கடந்த உலகக்கிண்ண வெற்றியோடு ஓய்வுபெற்றுவிட்டார். இல்லாவிட்டால் மெஸ்ஸியைப் போல மூன்று உலகக்கிண்ண இறுதியாட்டங்களில் விளையாடும் ஒருவராக டீ மரியாவும் இருந்திருப்பார்.

இப்போது மெஸ்ஸியும், காஃபூவும் இந்தச் சாதனைப் பட்டியலில் இருக்கின்றனர். காஃபூவிற்கு இரண்டு சாம்பியன்ஸை வென்ற கிரீடம் இருக்கின்றது. மெஸ்ஸியிற்கு இரண்டு சாம்பியன்ஸ் வெல்லும் அதிஷ்டம் இருக்கா என்பதைப் பார்க்க இந்த ஞாயிறுவரை பொறுத்திருக்க வேண்டும்.

மரடோனா இரண்டு உலகக்கிண்ண இறுதியாட்டங்களை 1986, 1990 விளையாடியவர். ஆனால் ஒரு சாம்பியண்ஸையே அவரால் பெற முடிந்தது. ஆர்ஜெண்டீனா இந்தமுறையும் உலகக்கிண்ணத்தை வென்றால் மெஸ்ஸி, சாதனையில் மரடோனாவை முந்திவிடுவார்.

என்னைப் போன்றவர்களுக்கு பீலேயோ, மரடோனாவோ விளையாடும்போது அதே சமகாலத்தில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஆனால் மெஸ்ஸியின் ஆட்டங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இனி இவர்களைப் போல நீண்டகாலம் நிலைத்து நின்று சாதனை படைக்கும் வீரர்கள் மிக அரிதாகவே தோன்றுவார்கள்.

அந்தவகையில் மெஸ்ஸியின் ஆட்டங்களை மூன்று இறுதிப்போட்டிகளில் பார்க்க முடிவதில் ஒருவகையில் நாம் அதிஷ்டசாலிகள்தான்.

***
(Jul 15)

 

'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' - றிஹானா நெளபர்

Tuesday, August 11, 2026

 

'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' நூல் குறித்த வாசிப்பு


-றிஹானா நெளபர்


ங்கிலத்தில் வெளியான 13 நூல்களின்  வாசிப்பனுவங்கள் தொடர்பிலான கட்டுரைகளின் தொகுப்பே இளங்கோவின் “இருத்தலின் மீது கவியும் இன்மைகள்”.எழுநாவின் வெளியீடாக வந்துள்ள இந்நூலின் அட்டைப்படம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளங்கோவின் வீடு என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது பயணங்களின் போது போரினால் கைவிடப்பட்ட வீடுகளை பார்த்த போது ஏற்பட்ட உணர்வை மீட்டிப்  பார்க்க வைத்தது.அந்த வீடுகளின் ஏக்கமும், அவை கொண்டுள்ள கதைகளும் ஏராளம்.

உண்மையில் இந்நூலை வாசிக்கின்ற போது 112 பக்கங்களுக்குள் 13 நூல்களை அறிந்து கொள்வது மட்டுமல்லாமல் மேலதிகமான தகவல்களையும் அறிய முடிகிறது.ஆங்கிலத்தில் இந்நூல்களை வாசிக்க முடியாதவர்களுக்கும் அதனைப் பற்றிய அறிமுகமும் கிடைக்கின்றது..”

இதில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து நூல்களுமே ஈழப்போராட்டம் தொடர்பானவையாகும். உண்மையில் இளங்கோ குறிப்பிடுவதைப் போல “ பௌதீகமான நூல்களை தான் அழிக்க முடியும், இனமொன்றின் வரலாற்றை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது என்பதே உண்மை. அதற்கு ஆதாரமாகத்தான் இன்றைக்கும் ஈழப் போராட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் நிறைய நூல்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.”

ஒவ்வொரு நூல் தொடர்பாகவும் தனது பார்வையை விரிவாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆழமாகவும் சிறந்த முறையிலும் விவரித்திருக்கிறார் இளங்கோ.உண்மையில் நூல் தொடர்பாக அவர் முன்வைப்புச் செய்துள்ள விதம் அவற்றை பற்றிய தெளிவான பரந்த அறிவை வாசகருக்குத் தந்து விடுகின்றது.
 
 
இந்நூலின் வாசிப்பின் பல தருணங்களில் என்னுடைய போர்க்கால நினைவுகளையும் மீட்டிக் கொள்ள கிடைத்தது.எனக்கு ஆறு வயது இருக்கும் போது ஊரில் திடீரென ஆர்மி சுற்றிவளைப்பு இடம்பெறும். அவர்களது உயர்ந்த வாகனங்களும்  தோற்றமும் இயல்பாகவே எனக்கு அச்சத்தை ஏற்படுத்தும். சிறிய வயது கனவுகளைக் கூட இவை ஆர்ப்பரித்து இருந்தன.

இத்தனைக்கும் கொவிட் காலப்பகுதியில்  என்னுடைய வாசிப்பின் துவக்கத்தில் ஈழப்போர் தொடர்பான நூல்களை வாசித்து அறிந்த போது நான் அனுபவித்ததை விட போர் கொடுத்திருக்கும் வலிகள் மறக்க முடியாத வரலாற்றுப் பாடங்கள் என்பதை உணர முடிந்தது. ஈழப்போர் தொடர்பான சில நூல்களை தொடர்ந்து வாசிக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்திய அனுபவமும் இருக்கின்றது.

இதில் அடங்கியுள்ள  11 எழுத்தாளர்களின் 13 நூல்களில் “போர் உலா” தவிர்ந்த ஏனையவை ஆங்கிலத்தில் வெளி வந்தவை. “போர் உலா” மாத்திரம் தமிழில் வெளிவந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யப்படுள்ள நூலாகும்.

புலம்பெயர்ந்தவர்கள்,போராளிகளாக இருந்தவர்கள், வெளிநாட்டவர்கள் என பதின்மூன்று நூல்களும் ஈழப்போர் தொடர்பான வெவ்வேறு பட்ட அனுபவங்களை கொண்டவர்களால் எழுதப்பட்டுள்ளமையினால் போர் தொடர்பான ஆழமான அதே போன்று வித்தியாசமான பார்வையை இந்நூல் தருகின்றது.

குறிப்பாக ஒவ்வொரு நூல் தொடர்பாக அறிமுகம் தருகின்ற போதும் அதனை விவரிக்கின்ற போதும் இளங்கோவின் வாசிப்பின் ஆழத்தையும் எழுத்து நடையின் அழகையும் ரசிக்காமலும் வியக்காமலும் இருக்க முடியாது.

னுக் அருட்பிரகாசத்தின் “வடக்கிற்கான ஒரு பயணம்” நூலைப் பற்றி ஆரம்பிக்கும் போது மிக அழகாக அதன் தனித்துவத்தையும் ‘மான் புக்கர் ‘ பரிசின் குறும்பட்டியல் வரை அவரைக் கொண்டு சென்ற காரணத்தையும் இவ்வாறு குறிப்பிட்டு ஆரம்பிக்கின்றார்.

“எல்லாக் கதைகளும் எழுதப்பட்டு விட்டதெனின், எந்தக் கதையைப் புதிதாகச் சொல்வது என்பது எழுதுபவர்க்கு எப்போதும் குழப்பமாக இருக்கும் ஒரு விடயமாகும். பரவலாகத் தெரிந்த கதையை, அதிலும் சமகாலத்தில் நிகழ்ந்ததை யாரேனும் எழுதப் போகின்றார்களென்றால் அது இன்னும் கடினமாகி விடும். ஆனால் தெரிந்த கதையாக இருந்தாலும், புதிதாய்ச் சொல்லமுடியும் என்று நம்பியதன் விளைவாகவே அனுக் அருட்பிரகாசத்தின் “வடக்கிற்கான ஒரு பயணம்” நமக்கு கிடைத்திருக்கின்றது. அது இதுவரை இலங்கையில் இருக்கும் எந்த தமிழ் எழுத்தாளருக்கும் வாய்க்காத மான் புக்கர் பரிசின் குறும்பட்டியல் வரை அவரைக் கொண்டு சென்றிருக்கின்றது.”

குறிப்பாக இதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் நூல்களைப் பொறுத்த வரை 1983 ஜுலைக்கலவரம், 1974 தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 1981 யாழ் நூலக எரிப்பு போன்றவை அம்மக்கள் மனதில் ஏற்படுத்தி உள்ள பாதிப்புக்கள் அவற்றால் அவர்கள் வாழ்வியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்பவற்றின் தாக்கங்களை அறிய முடிகிறது.

அதே போன்று சொந்த நாட்டில் பிரச்சினை என்று வலிகளோடு வெளியாகிய மக்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் அனுபவிக்கும் வலிகளும், சவால்களும் இங்கு குறபிப்பிடப்பட்டிருக்கும்  சாரோன் பாலாவின் “படகு மக்கள்”, ரோம் ரத்தினவேல் அவர்களின் “கைதி#1056”, லோகதாசன் தர்ம துரையின்“ஓர் ஈழத் தமிழரின் புகலிட வாழ்வு” ஆகிய நூல்களின் வாயிலாக உணர முடிகின்றது. மீண்டும் மீண்டும் வாழ்வை கட்டியெழுப்ப வேண்டிய தேவை, அந்நிய கலாசாரத்திற்கு தங்களை பழக்கப் படுத்த வேண்டிய இருக்கின்றமை, புதிய மொழி இவை எல்லாம் அவர்களை உளச்சிக்கலுக்கு ஆளாக்குகின்றது. ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்டு சொந்த நிலத்தை விட்டுச் செல்லும் மக்களுக்கு இவை எல்லாம் மிகப்பெரும் சவாலாகவே அமைந்திருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நூல்களை நாங்கள் முழுமையாக வாசிக்க விட்டாலும் இளங்கோவின் எழுத்து வாயிலாக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள வலிகளை எம்மால் உணர முடிகிறது.

ரோய் ரத்தினவேல் அவர்களின் “கைதி-1056” சுயசரிதை நூலில் குறிப்பிடப்படும் பூசா சிறை அனுபவம்,அனுக் அருட்பிரகாசத்தின் வடக்கிற்கான பயணம் நூலில் வரும் ராணியின் மகன் அவர் மடியிலேயே செல் துண்டு பட்டு இறந்து போதல், மலரவனின் “போர் உலா” நூலில் வரும் அவரது தமையன் பிடிபட்டு நான்காம் நாள் விடிகாலையில் தாயும் மலரவனும் முகாமிற்குச் சென்றதை மலரவன் எழுதி இருப்பது போன்றவை ஆழமான சிந்தனைக்குள் எம்மை இழுத்து விடுகின்றது.

உண்மையில்  இந்தப் போர் எதைத் தான் எமக்கு விட்டுச் சென்றிருக்கின்றது என்ற கேள்வி எமக்கு எழாமல் இல்லை. இளங்கோ கூறுவதைப் போல..

“இறந்தவர்கள் எந்தத் தரப்பாயினும்  அவர்கள் மீண்டு வரவா போகின்றார்கள்? அன்று முகாமை தாக்கி வெற்றி கொண்டவர்கள் பின்னர் தோற்றுப் போயிருக்கின்றனர். அன்று தோற்றுவர்கள் பிறகு வென்றிருக்கின்றனர் எனில் இந்த யுத்தங்கள் எதைத்தான் நமக்கு கொண்டு வந்திருக்கின்றன? இழப்புகளையும் வெறுப்புகளையும் காலத்தால் ஆற்ற முடியாத வடுக்களையும் அல்லவா  நினைவுகளாக அவை விட்டுச் சென்றிருக்கின்றன.”

இது வாசிப்பனுபவம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு என்றாலும் இளங்கோவின் வாசிப்பின் ஆழமும் குறிப்பிட்ட பரப்புக்களில்  அவருக்கு இருக்கும் பரந்துபட்ட அறிவும் சில விடயங்களை அவர் விவாதிக்கும் திறனும் குறிப்பிட்ட விடயப் பரப்புக்கள் தொடர்பாக நம்மையும் தேட வைக்கின்றது. அத்தோடு இன்னும் வாசிக்க வேண்டிய தேவைப்பாடு நமக்கு இருக்கின்றது என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கின்றது.

***

(மட்டக்களப்பில் நிகழ்ந்த 'இருத்தலின் மீது கவிழ்ந்த இன்மைகள்' நூல் அறிமுக நிகழ்வில் றிஹானா உரையாற்றியதன் சுருக்கமான வடிவம் இது)