கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 135

Monday, March 09, 2026

 


மாற்றுவழிகளைக் தேடுதல்..!
***


கிளாராவின் சில உரைகளைக் கேட்டபின் அவரின் புதிய நூலான 'Escape from Capitalism: An Intervention' வாசிப்பதற்கு order கொடுத்திருக்கின்றேன். கிளாரா ஒரு பேராசிரியராக மட்டுமின்றி நாம் இன்று 'ஜனநாயகம்', 'பொருளாதாரம்' என்று விளங்கியிருப்பதை 'கட்டவிழ்க்க' வேண்டுமென விரும்புகின்ற ஒருவர். ஒருவகையில் அவர் ஜனநாயகவாதிகளும் பாஸிட்டுக்களும் முதலீட்டிய பொருளாதாரம் நெருக்கடிக்கு ஆளாகும்போது  ஒரே நேர்கோட்டில் வரும் ஆபத்தைச் சுட்டிக் காட்டுகிறார். இதற்கான உதாரணமாக இத்தாலியின் முஸோனியையும், இங்கிலாந்தையும் இரண்டாம் உலக யுத்தம் தொடங்குவதற்கான காலப்பகுதியில் வைத்து ஆராய்கிறார்.

அதேவேளை தாராள ஜனநாயகம் (libearal demoracy) என்பதற்கும் பங்கேற்கும் ஜனநாயகம் (participatory democracy) என்பதற்கும் பெரும் வித்தியாசம் இருப்பதைப் பற்றி விவாதிக்கின்றார்.

தாராள ஜனநாயகம் என்பது நீங்கள் ஒரு தேர்தலில் வாக்களிப்பது, ஓர் அரசியல்கட்சியில் சேர்ந்து போட்டியிவது போன்றவையாகும்.

பங்கேற்கும் ஜனநாயகம் என்பது  சாதாரண குடிமக்கள், அரசு/அரசாங்க முடிவுகளில்  பங்கெடுப்பது பற்றியதாகும். அதாவது உங்கள் நகரசபை/உள்ளூராட்சி சபை எடுக்கும் திட்டங்களில் ஒவ்வொருவரும் பங்கேற்று தீர்மாங்களில் எடுப்பதாகும்.

Uploaded Image


உதாரணத்துக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் எதை பட்ஜெட்டில் உள்ளடக்குவது என்பது தீர்மானிப்பதற்குப் பதிலாக, வரிகளை கட்டும் மக்களாகிய நாம் எமக்கு/எமது பிரதேசத்துக்கு என்ன அவசியமாக வேண்டும் என்பதை முடிவு செய்வதாகும்.

இன்னொருவகையில் சொல்வது என்றால் முடிவுகள்/தீர்மானங்கள் என்பவை மேலேயிருந்து வருவதைத் தவிர்த்து, கீழேயிருந்து மேல் நோக்கி முடிவுகள் எடுப்பதற்கான வெளிகளைக் கொடுப்பதாகும். இங்கேதான் இலங்கை உள்ளிட்ட பல இடங்களில் வரவேண்டுமென நான் அடிக்கடி வலியுறுத்தும் Grassroots movements முன்னணிக்கு வருகின்றன..

சாதாரண மக்களாக, agency இல்லாதவர்களாக இருக்கும் எம்மால் மேலடுக்களில் அதிகாரங்களில் உள்ளவர்களோடு 'யுத்தம் புரிவது' என்பது மலையைப் பெயர்த்தெடுக்கப் போவதைப் போன்றது. ஆனால் நாம் இருக்கும் சிறுவட்டங்களான நகரசபைகள்/உள்ளூராட்சிகளில்  எமது குரல்களை காத்திரமாக ஒலிக்க வைத்து மாற்றங்களை ஏற்படுத்த முயலாம்.

கிளாரா நம்மை இந்த முதலீட்டியம் உறைந்த மனிதர்களாக (வேலை/வீட்டுக்கு வருதல்/மீண்டும் வேலைக்குப் போதல்) என்று நாளாந்த வாழ்க்கைக்கு அப்பால் எதையும் செய்யவோ/சிந்திக்கவோ இல்லாமல் திட்டமிட்டுச் செய்கிறது. உண்மையில் நாங்கள் அப்படியான் உதிரிகள் அல்ல, அதற்கப்பால் சமூகத்திற்குப் பங்களிக்க முடியும் என்று தீர்க்கமாகக் கூறுகின்றார்.

இந்த பங்கேற்கும் ஜனநாயகம் (participatory democracy) சரியான விதத்தில் சிலவருடங்களுக்கு முன் பிரேசிலில் பல்வேறு நகர்களில்  நடைமுறைப்படுத்தப்பட்டதை கிளாரா ஓர் உதாரணமாக நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்.

Uploaded Image

எப்படிப் போனாலும் நாம் இறுதியில் மார்க்ஸிடமோ, கிராம்ஸியிடந்தான் பொருளாதார விடயங்கள் சார்ந்து போக வேண்டும். ஆனால் ஐக்கிய அமெரிக்கா/கனடா உள்ளிட்ட முதலீட்டிய நாடுகளில் அவர்கள் 'தீண்டத்தகாதவர்களாகவே' இருக்கின்றனர்.  பாடசாலைகளிலோ/பல்கலைக்கழகங்களிலோ அவர்களைப் பற்றிக் கற்பிப்பதில்லை எனவும் சுட்டிக் காட்டுகிறார்.

கிளாரா, கிராம்ஸியின் தொழிலாளர்கள் பங்கேற்று (participatory democracy) ஒரு தொழிற்சாலையில் எந்த அவசியமான பொருட்களை உற்பத்தி செய்வது என்கின்ற அதிகாரத்தை முன்னொருபொழுதில் கொண்டிருந்தார்களோ அப்படியான மக்கள் பங்கேற்கும் ஜனநாயகம் அமெரிக்கா/பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு அவசியம் வேண்டியது என்கின்றார்.

மேலும் கிளாரா பெரும்பாலான பல்கலைக்கழக இடதுசாரி அறிவுஜீவிகளை நிராகரிக்கின்றார். அவர்கள் களத்தில் செயலாற்றுவதற்கோ அவர்களின் 'மாடல்களை' பரிட்சித்துப் பார்க்கவோ முன்வருவதில்லை என்று அவர்களையும் விமர்சிக்கின்றார். நமது மொழியில் சொல்வதென்றால் அவர்கள் Arm Chair Intellectuals!

கிளாரா முன்வைக்கும் சில தரவுகள் அதிர்ச்சி தரக்கூடியவை. ஐக்கிய அமெரிக்காவில் கிட்டத்தட்ட 7 இலட்சம் பேர் வீடற்றவர்களாக (homless) இருக்கின்றார்கள். அது அல்ல அதிர்ச்சி தரும் விடயம், இதில் அரைவாசிப்பேர் வேலை செய்தும் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் திகைப்பதைத் தருவது. சாதாரண பொதுப்புத்தியில் இந்த வீடற்றவர்கள் வேலை எதுவும் செய்யாத சோம்பேறிகள் என்கின்ற எண்ணம் இருக்கின்றது. ஆனால் வேலை செய்தும் கிட்டத்தட்ட முன்றரை இலட்சம் பேர் ஒழுங்கான வீடில்லாது இருப்பதை எப்படிப் புரிந்து கொள்வது?

ஆகவேதான் கப்பிட்டலிஸ்ட் என்று சொல்லும்போது pay cheque to pay cheque வாழ்கின்றவர்களை அந்த வகைக்குள் அடக்கமுடியுமா என்ற கேள்வியையும் கிளாரா எழுப்புகின்றார். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்களின் செல்வத்துக்கு நிகரானதை, 19 அமெரிக்க பணக்காரர்கள் மட்டும் தமக்குள் பதுக்கி வைத்திருக்கின்றார்கள் என்கின்ற தரவுகள் எல்லாம் அதிர்ச்சி தரக்கூடியது என்றாலும், நாம் சில வருடங்களுக்கு முன் நடந்த  Occupy Wall Street ஆர்ப்பாட்டங்களை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். அதில் "We are the 99%" என்று எழுப்பட்ட கோஷம், அந்த 99% வீதத்திடம் இருக்கும் செல்வத்துக்கு நிகரானதை, மிகுதி 1% பணக்காரர்கள் வைத்திருக்கின்றார்கள் என்பதுதானே கசப்பான உண்மையாகும்.

தமிழ்ச்சூழலில் நாம் மாறும் காலத்துக்கேற்ப புதிய பொருளாதார நிலைமை விரிவாகப் பேசவில்லை என்பதோடு, நாம் வளர்ந்த மூன்றாமுலக உலகநாடுகளில் கூட உலகமயமாதலின் நிமித்தம் இப்படியான 1% பணக்காரர்களைத்தான் மேலும் மேலும் உருவாக்கி நடுத்தரவர்க்கம் என்பதையே இல்லாமல் செய்வதே இன்னொரு பக்கம் நடக்கிறது.

அதைவிட உலக வங்கி, IMF  போன்ற முதலீட்டீய நிறுவனங்களில் கடன்வாங்கி. நாம் பிறந்து/ வளர்ந்த நாடுகள்  சாதாரண குடிமக்களுக்கு அடிப்படை வசதிகளையே வழங்க முடியா, மீளமுடியாகக் குழியில் தம்மை வீழ்த்திக் கொண்டிருப்பதுதான் இன்னும் அவலமானது.

கிளாரா போன்ற புதிய தலைமுறையிடமிருந்து பொருளாதார/அரசியல் பற்றிய புதிய கோணங்களை நாம் அறிவதுடன், அவரைப் போன்று களத்தில்  செயற்படுவதும் இன்னும் முக்கியமானது.

***

 

கார்காலக் குறிப்புகள் - 134

Saturday, March 07, 2026

 


இ.ஜீவகாருண்யனின் 'தேடலும் விமர்சனங்களும்..' நூலை அது வெளிவந்த காலத்தில் (2009) மேலோட்டமாக வாசித்திருக்க வேண்டும். பின்னர் இப்போது அதை முழுமையாக வாசித்துவிட்டு நண்பர் எமிலைத் தொடர்புகொண்டு ஜீவகாருண்யன் இதில் எழுதுவதாகச் சொன்ன 'மு.த(ளையசிங்கம்) - ஒரு நோக்கு' என்ற நூலை எழுதிவிட்டாரா, அப்படி எழுதியிருந்தால் அதை எப்படியாவது நாங்கள் பதிப்பிக்க வேண்டும் எனச் சொன்னேன்.

ஜீவகாருண்யனின் பிற்காலத்தைய ஆக்கங்களில் அநேகம் எமில் ஆசிரியராக இருக்கும் 'கலைமுகம்' இதழில் வெளிவந்திருக்கின்றன. ஜீவகாருண்யனுக்கு இப்போது வயது எண்பதுகளைத் தாண்டிவிட்டது, எனவே எதையும் எழுத முடியாதிருக்கின்றார் என்று எமில் சொல்லியிருந்தார்.

ஜீவகாருண்யன், மு.த(ளையசிங்கம்), சு.வி(ல்வரத்தினம்), மு.பொ(ன்னம்பலம்), எம்.கே.மகாலிங்கம் போன்றவர்களுடன் 70/80களில் நெருக்கமாகப் பழகிய ஒருவர். மு.தவின் 'சர்வ மத சங்க' பிரார்த்தனை/தியான வகுப்பில் கலந்து கொண்டவர். அந்தவகையில் இன்றைக்கு அந்தப் பரம்பரையில் இறுதியாட்களாக ஜீவகாருண்யனும், மகாலிங்கமும் மட்டுமே இருக்கின்றனர் என நினைக்கின்றேன்.

Uploaded Image

இன்றைக்குக் கூட மு.தளையசிங்கம் 1973 மரணமாகும்வரை அந்த 'சர்வமத சங்க' விடயங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை என்றே நம்புகின்றேன். ஒரு படைப்பாளியை அவரின் ஆக்கங்கள் மட்டுமில்லை, அவரைப் பற்றிப் பேசும் சிறந்த விமர்சகர்கள்/வாசகர்கள் கிடைப்பதும், அவர்கள் அந்தப் படைப்பாளியையும், படைப்புக்களையும் தொடர்ந்து பேசும்போது மட்டுமே அப்படைப்பாளி காலத்தில் முன் நிறுத்தப்படுவார் என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும். மு.தளையசிங்கத்தை முன்னிறுத்த அவரின் சகோதரர் மு.பொன்னம்பலம், சு.வில்வரத்தினம் போன்றோர் இருந்திருக்கின்றனர். எஸ்.பொ(ன்னுத்துரை)வுக்கு அவரின் அணுக்க நண்பரான ரஹ்மான் அமைந்தது அவரின் நல்லூழ் எனச் சொல்லவேண்டும்.

இந்நூலிலும் ஜீவகாருண்யன், மு.தவைப் போன்ற ஓர் ஆளுமையை தன் வாழ்நாளில் சந்தித்தில்லை என்று சொல்கின்றார். 'முதல் சந்திப்பின்போது பிரமித்துப் போனேன். உண்மையும் உறுதியும் வீரமும் கொன்ட அப்படியான ஒருவர் 'மனித வடிவில்' இருக்கமுடியுமா என்ற வியப்பு ஏற்பட்டது. கண்களிலே ஒளி, பேச்சிலே தீட்சண்யம், கருத்துகளில் தெளிவு, முகத்திலே ஒரு பிரகாசம். இந்த உலகினில் எதையோ சாதிக்கப் பிறந்தவராய் என்னுள் பிரமாண்டத் தோற்றத்தை எழுப்பினார் என் முதல் சந்திப்பிலே' என்று எழுதிச் செல்கிறார்.

அப்படி மு.தவிற்குப் பிறகு எவ்வித விமர்சனமும் இன்றி ஜீவகாருண்யன் ஏற்றுக்கொண்ட எழுத்தாளர் சுந்தர ராமசாமி. சு.ராவுக்கு எழுதும் கடிதத்தில் கூட 'நான் முதன்முதலில் சந்தித்த உண்மையான மனிதன் மு.தளையசிங்கம். நான் இன்றுவரை சந்தித்த உண்மையான மனிதனும் அவர்தான், இன்னுமொருவரை அப்படித் தேடிக் கொண்டிருக்கின்றேன். அவர் கிடைப்பாரா?' என்று கூட மு.தவை குறிப்பிட்டிருக்கின்றார்.

ஜீவகாருண்யனின் எழுதவும், அவரின் எழுத்துக்களைத் திருத்திய ஒருவராக அ.யேசுராசா இருப்பதையும், அ.யேசுராவின் எழுத்துக்களுக்கு எதிராக அன்றைய காலங்களில் எழுதப்பட்ட விமர்சனங்களுக்கு திருப்பி பதில் கொடுக்கும் ஒரு தீவிர வாசகராகவும் ஜீவகாருண்யன் இருந்திருப்பதை இந்நூலில் இருக்கும் கட்டுரைகளினூடாக பார்க்க முடியும்.

இதில் ஜீவகாருண்யன் சு.வில்வரத்தினம் மறைவையொட்டி எழுதும் நீள்கட்டுரையும், சண்முகம் சிவலிங்கத்தின் 'நீர் வளையங்கள்' தொகுப்பை முன்வைத்து எழுதிய வாசிப்பும் முக்கியமானவை.

ஏற்கனவே குறிப்பிட்டமாதிரி படைப்பாளியின் படைப்புக்கள் மட்டுமல்ல, அவரோடு ஊடாடிய மற்றவர்களின் அனுபவங்களும் இன்னும் செழுமையை ஒரு படைப்பாளிக்குக் கொடுக்கக் கூடுமென்பதற்கு, இந்த நூலில் ஜீவகாருண்யன் சு.வி, சசி போன்றவர்களின் படைப்புக்களினூடு அவர்களுடனான அனுபவங்களைப் பேசுவதும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் சு.வில்வரத்தினம் எந்தந்த காலகட்டத்தில் எந்தந்த அவரது கவிதை நூல்களை வெளியிட்டார் என்பதும், சசியுடனான ரயில் பயணத்தில், யாரோ ஒருவர் இவர்களின் இருக்கையை எடுத்துவிட, அவரை நெஞ்சுரத்துடன் எதிர்த்துப் பேசி இருக்கையை ஜீவகாருண்யனுக்குக் கொடுத்த சண்முகன் சிவலிங்கத்தின் ஓர்மத்தையும் இந்நூலை வாசிக்கையில் அறிய முடியும்.

ஏஜே என்கின்ற அருமையான மனிதரைப் பற்றியும், 'க.கைலாசபதியைப் பற்றிய எனது கட்டுரையை வாசித்துவிட்டு அவர் (ஏஜே) சொன்னார், கைலாசபதியைக் குறைகூறுவதற்கு நியாயங்கள் இருந்தாலும் அவரிடம் ஆக்கபூர்வமான பக்கம் ஒன்று இருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளிலுள்ள அறிஞர்களை உள்வாங்கி, வரவழைத்துத் துரைத்தனமற்ற ஆரோக்கியமான அறிவு வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றார். எனவே அதை ஏற்றுக்கொண்டு, கைலாசபதியை முற்றாக ஒதுக்குவதாக இல்லாமல் எழுதினால் நல்லது என்றார்' என்று ஜீவகாருண்யன் எழுதுகின்றார்.

அதுவே ஜீவகாருண்யன் அவருக்கு இன்னொருமுனையில் இருந்த மார்க்சியரான சண்முகம் சிவலிங்கத்தைச் சந்திக்கின்றபோது 'எந்தத் தர்க்கத்தின்போதும், கருத்துகளுக்குப் பின்னாளுள்ள உன்னத மனிதனை நேசிக்க வேண்டும் என்று ஏ.ஜே.கனகரத்ன சொல்வார்' என்று நினைவுகூரவும் செய்கின்றார்.

இன்னொரு பொழுதில், சு.வில்வரத்தினத்தின் கவிதைகள் மீதான பிடிப்பால் ஜீவகாருண்யன் வெங்கட் சாமிநாதனை இந்தியாவில் சந்திக்கின்றபோது, சு.வியின் கவிதைகளை நிராகரித்துப் பேசுகின்ற வெங்கட்சாமிநாதனோடு எதிர்வினையாற்றுகின்றார். அதை வெசா அன்றைய 'காலம்' இதழில் எழுதியபோது, அதற்கும் எதிர்வினையாற்றி சு.வில்வரத்தினத்தை கைவிடாது ஓர் உண்மையான நண்பராக இருந்திருப்பதையும் நாம் அவதானிக்க முடியும்.

அதுபோலவே சுந்தர ராமசாமியை நிராகரித்து ஒரு கட்டுரையை யதீந்திரா எழுதுகின்றபோது அதற்கு நிரம்பிய தரவுகளோடு சுந்தர ராமசாமியின் ஆளுமையை ஒரு கட்டுரையினூடு நிரூபிக்கவும் செய்கிறார்.

ஜீவகாருண்யன் அவருக்கிருந்த வாசிப்புகளுக்கும், அனுபவங்களுக்கும் ஏற்ப அவ்வளவு நிறைய எழுதியவரல்ல. ஆனால் கொஞ்சமாக எழுதினாலும் காத்திரமாகவே எழுதியிருக்கின்றார். அவரின் சொந்தப்படைப்புக்கள் இதில் சேர்க்கப்பட்டிருந்தாலும் அதைத்தாண்டி அவரொரு சிறந்த வாசிப்பாளராகவும், அவருக்குப் பிடித்த எழுத்தாளர்களை கைவிடாத நல்லதொரு வாசகராகவும் இருந்திருக்கின்றார் என்பதையே இந்த நூல் ஒருவகையில் நிரூபிக்கின்றது.

ஜீவகாருண்யனைப் போன்றோரை இந்தத் தலைமுறையில் காண்பது அரிதென்பதால் அவரைப் போன்றோரை நாம் கவனப்படுத்த மட்டுமில்லை நாம் இப்படிப்பட்டவர்களை இந்தக்காலத்தில் உருவாக்கவும் வேண்டியிருக்கின்றது.

***

 

பனிக்காலத் தனிமை - 13

Friday, March 06, 2026

 

திருவண்ணாமலையில் ரமணாச்சிரமத்துக்குச் சென்றபோது ஒருவரைக் கண்டேன். அப்போது அவருடன் பேசவில்லை என்றபோதும் பின்னர் குவாடிசிஸில் உணவருந்தும்போது அவரோடு உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் தென்னாபிரிக்காவுக்குச் சென்ற இந்திய வம்சாவளியின் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்தவர் என்றும், அங்கே தானொரு அங்கிலிக்கன் ஃபாதர் எனவும் சொன்னார். ஒரு பாதிரியாருக்கு அருணாச்சலமலையில் என்ன வேலை எனக் கேட்க முன்னரே, அவர் திருவண்ணாமலைக்கு வந்தபோது ஏதோ ஓர் ஈர்ப்பு சிவனில் வந்து, சிவபக்தராகிவிட்டேன் என்றார்.

மனிதர்கள் ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்துக்கு அவரவர் வாழ்க்கைச் சூழ்நிலைக்கேற்ப மாறுவது இயல்பு. ஆனால் எப்படி இயேசுவும், சிவனும் ஒருவருக்குள் சரிசமனாக இருக்க முடியும் என்று அவரைப் பார்க்கும்போது வியப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட அவரைச் சந்தித்து 10 வருடங்களாகிவிட்டது. ஆனால் இன்றும் அவர் இரண்டு நம்பிக்கைகளையும் கைவிடாது தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்று மக்களிடம் உரையாடியபடி இருக்கின்றார் என்பதை அவரின் சமூகவலைத்தொடர்பால் அறிந்து கொள்ள முடிகிறது.



இதற்கு நிகரான ஓர் அனுபவத்தை நேற்று அனுபவித்திருந்தேன். இருபது புத்த துறவிகள் 2,300 மைல்கள் 110 நாட்களாக தொடர்ந்து நடந்த Walk for Peace இன்றோடு முடிந்தது. கடந்த சில நாட்களாக அவர்கள் வாஷிங்க்டன் டிசியிலும், மேரிலாண்டிலும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களை நடக்கும் பாதைகள் எல்லாம் சூழ்ந்திருந்தார்கள். சாதாரண துறவிகளான அவர்களை என்னைப் போன்று முகநூலில் பின் தொடர்பவர்களே கிட்டத்தட்ட 2.8 மில்லியனைத் தாண்டியிருந்தது.

நேற்று ஒரு பிரமாண்டமான கதீட்ரலில் சமாதானத்தின் பொருட்டு அனைத்து மதக்குருமார்களும் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க கூடியிருந்தார்கள். இந்த புத்த துறவிகள் கதீட்ரலுக்குள் நுழையும்போது தேவாலயத்துக்குள் இருந்து ஒரு பெண் பியானோவுடன் இயேசுவிற்கான சமாதானப்பாடலைப் பாடிக்கொண்டிருந்தது வார்த்தைகளில் எளிதில் விபரிக்க முடியாத நெகிழ்வாக இருந்தது.

ஊரில் பக்கத்து ஊரில் ஒரு தேவாலயம் இருந்தது. ஆனால் ஏதோ ஒரு பயம் காரணமாக, எங்கள் ஊரிலிருந்து போர் நிமித்தம் வெளியேறும்வரை அதற்குள் நுழைந்ததில்லை. அதுபோலவே இலங்கையில் வாழ்ந்த காலத்தில் எந்த ஒரு புத்த ஆலயத்துக்குள்ளும் போனதில்லை. எவரும் போகக்கூடாது, எவரும் உள்ளே நுழையக்கூடாது என்று சொல்லாமலே எவ்வாறான இந்தப் பயம்/விலகல் அந்த வயதுகளிலே எம்மைப் போன்றவர்களுக்கு நுழைந்தது என்று இப்போது யோசித்துப் பார்க்க திகைப்பாக இருக்கின்றது.

புலம்பெயர்ந்து கனடா வந்ததன் பிறகு, இங்குள்ள  கோயில்களுக்குப் போனதைவிட, தேவாலயங்களுக்கும், புத்த மடலாயங்களுக்கும், பள்ளிவாசல்களுக்கும், குருத்துவராக்களுக்குந்தான் அதிகம் போயிருக்கின்றேன் என்று நினைக்கின்றேன்.

*

சில மனிதர்களுடனான உரையாடல்களோ, சில இடங்களுக்கான பயணங்களோ அவ்வளவு அற்புதமாக இருக்க, இது ஒருபோதும் முடிந்துவிடக்கூடாதென மனம் அவாவிக் கொண்டிருக்கும். அப்படித்தான் தினமும் Walk for Peace நடையோடு ஒன்றிக்கொண்டிருந்த எனக்கு இந்த நடைப்பயணம் ஒருபோதும் முடிந்துவிடக்கூடாதென இதயம் விம்மிக் கொண்டிருந்தது. அவர்கள் நடக்கும்போது மக்களின் முகங்களில் இருந்த அமைதியும், அவர்களுக்காக காத்திருந்த குழந்தைகளின் களங்கமின்மையும் எனது நாட்களுக்கு அவ்வளவு நெகிழ்வைத் தந்திருந்தன.

Uploaded Image

இந்த நடைப்பயணத்தைத் தலைமை தாங்கிய துறவி பன்னங்கராவிடம், இப்பயணத்தில் எது உங்களுக்கு மறக்கமுடியாது இருந்தது எனக் கேட்கப்பட்டபோது, ஒருவகையில் இவ்வளவு மக்கள் எமக்காகத் தெருக்களில் காத்திருந்தது மகிழ்ச்சியைத் தந்தது என்றாலும், இன்னொரு புறத்தில் இவ்வளவு மக்கள் துயரங்களோடு இருக்கின்றார்கள் என்பது கவலையைத் தந்தது என்றார். அதாவது எமக்காய்க் கண்ணீருடன் காத்திருந்து கதைகளைச் சொன்ன மக்கள் அவர்கள் தமது சொந்த வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருந்தால் எமக்காக இப்படிக் காத்திருக்க மாட்டார்கள் அல்லவா என்றார்.

அப்படி மக்கள் அமைதியுடன் தமக்கான வாழ்வதையே நான் அதிகம் எதிர்பார்க்கின்றேன், விரும்புகின்றேன் என்றார். எமது நடைபவனி எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாது, எவருமே எமக்காக காத்திருக்காதபோது, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்று எண்ணி நாங்கள் இன்னும் சந்தோசமாக நடந்திருப்போம்  என்றார் பன்னங்காரா. இதுதான் இப்பயணத்தினூடு நாம் தவறவிடாது எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயம் எனச் சொல்வேன்.

தனிப்பட்டோ அல்லது சமூகவலைத்தளத்திலோ ஒருவர் தற்பெருமையோடோ/காழ்ப்புணர்வோடோ உரையாடிக் கொண்டிருக்கின்றார் என்றால், அவர் உண்மையிலே தன்னளவில் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இல்லையென எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். மேலும் புறவயமாக வரும் எந்த சந்தோசமும் உண்மையான மகிழ்ச்சியே அல்ல என்ற புரிதல் வரும்போது நம் வாழ்வு கொஞ்சம் அமைதியடைந்துவிடக்கூடும்.  சிலவேளைகளில் இன்னும் அர்த்தமுடையதாகவும் அது மாறிவிடவும் கூடும்.

துறவி பன்னங்கராவும் அதனால்தான் 'அமைதி என்பது வேறு காரணிகளால் வரக்கூடியது என்றால் அது உண்மையான அமைதியல்ல. அந்த அமைதி எந்தக் கணத்திலும் குழப்பிவிடக்கூடியது'  (Peace with a condition that is not peace) என்று நம்மை எச்சரிக்கின்றார். அதுபோலத்தான் நேசமும் என்பதை நாம் கவனிக்கத் தவறும்போதுதான் நமக்கான நேசமும் நம்மிலிருந்து கைநழுவிப் போவதையும் அவதானித்திருப்போம்.

ஒரு துறவி சிலவருடங்களுக்கு முன் ஒரு உறுதியை (bow) எடுக்கிறார். தனது ஆசிரியரிடம் இதற்காய்த் தலைவணங்கிச் சம்மதம் கேட்கிறார். பிறகு சகோதரத்துவத்துடன் ஏனைய புத்த மடலாயத் துறவிகளிடம் என்னோடு சேர்ந்து இப்படி நடக்கச் சம்மதமா எனக் கேட்கின்றார்.



இறுதியில் பல்வேறு நாடுகள்/நகரங்களைச் சேர்ந்த 20 புத்த துறவிகள் சேர்ந்து நடக்கத் தொடங்குகின்றனர். அவர்களில் பலருக்கு இதற்கு முன் ஒருவருக்கு ஒருவரைக் கூடப் பழக்கமில்லை. ஆனால் இந்த 2300 மைல்களை, கடந்த நூறு நாட்களாகச் சேர்ந்து  நடக்கின்றனர். இடையில் பெரும் விபத்தைச் சந்தித்து சிலர் காயமடைகின்றனர். ஒரு புத்த துறவி தனது இடது காலை இதன் நிமித்தம் இழக்கின்றார். இவ்வளவு இழப்பு/துயரத்தினூடாக அவர்கள் தொடர்ந்து நடக்கின்றனர்.

கடும் வெயில் எரிக்கும் டெக்ஸலிலிருந்து வாஷிங்டன் டிஸியை அடையும்போது பெரும் பனியைச் சந்திக்கின்றனர். வெறும் கால்களோடு நடந்தவர்கள் பின்னர் பாதணிக்கும், இறுதி நாட்களில் குளிரையும் பொருட்படுத்தாது வெறும் காலுக்கும் (சில துறவிகள்) மாறியிருந்தனர். இதில் தலைமை தாங்கிய பன்னங்கரா உட்பட பலர் பனிக்குளிரில் மிக மோசமான உடல்நலக்குறைவுக்கும் உள்ளாகியிருக்கின்றனர். ஆனால் ஒருவர் நோயால் பின்தங்கினாலும்  இன்னொருவர் இக்குழுவைத் தலைமை தாங்கித் தொடர்ந்து நடந்திருக்கின்றனர். அவ்வளவு உறுதியாக தாம் எடுத்துக் கொண்ட பயணத்தில்  தளர்வடைவதில்லை என்று இருந்திருக்கின்றனர்.

ஓரிடத்தில் ஒரு முதிய பெண்மணி (78) தனது வாழ்வில் இந்த நடைபயணத்தைப் பார்த்தது பெரும் ஆசிர்வாதம் எனச் சொல்கின்றார். தனக்கு இந்தப் புத்த துறவிகளால் கொடுக்கப்பட்ட பூக்களை நான் உலர வைத்து காப்பாற்றப் போகின்றேன். எனக்குப் பிறகு எனது பிள்ளைகள் எனது பேரப்பிள்ளைகளிடம் இந்தப் பூக்களைக் கொடுக்க வேண்டும், அந்தப் புதிய தலைமுறை இந்த சமாதானத்துக்கான பயணத்தை அப்போது நினைத்துப் பார்க்க வேண்டும் என்று சொல்கின்றார். எவ்வளவு ஆழமாக இந்தத் துறவிகள் அந்தப் பெண்மணியின் ஆழுள்ளத்தில் விதையொன்றை ஊன்றியுள்ளனர் என்பதை அறிய முடிகிறதல்லவா?

இந்த உலகிலிருந்து நாம் நீங்கிப் போகும்போது எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை என்று நம்மனைவருக்கும் எளிதாகப் புரியும். ஆனாலும் நாம் தொடர்ந்து உலகாயத விடயங்களை நோக்கியே ஈர்க்கப்பட்டும், ஓடிக்கொண்டும் இருக்கின்றோம். அவ்வளவு எளிதாக இது நாம் பிறந்ததிலிருந்தே conditioned செய்யப்பட்ட மூளைக்குப் புரியப்போவதும் இல்லை. இல்லாவிட்டால் அவ்வளவு தெளிவாகத் தெரிந்த ஒன்றைக் கைவிட்டு, தற்காலிக நிம்மதியைத் தரும் விடயங்களை நோக்கி ஆலாய்ப் பறந்து கொண்டிருப்போமா என்ன?

இந்த நாளை நிம்மதியாக, Today is going to be my peaceful day என்று எழுதிவிட்டு, அதை நாள் முழுதும் கைவிடாது நினைவுபடுத்திக் கொண்டிருப்பீர்கள் என்றால், உங்கள் நாள் அவ்வளவு அழகாக்கிவிடும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு விடயங்களையும் mindful ஆகச் செய்யுங்கள், முக்கியமாக multitask என்ற சுழலுக்குள்  மட்டும் விழுந்துவிடாதீர்கள். எதைச் செய்வதாயினும் அந்த விடயத்தை மட்டும் செய்யுங்கள், அதன் பிறகு அடுத்த விடயத்தைத் தொடருங்கள் என்று துறவி பன்னங்கரா மக்கள் குழுமிய ஒவ்வொரும் கூட்டத்திலும் சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்படி நமது ஒவ்வொரு நாளையும் அமைதியான நாட்களாக நம்மால் அழகாக்க முடியுமா என்பதுதான் இன்றைய அவசரகதியான உலகில் நம் அனைவர் முன்னாலுள்ள பெரும் சவாலாகும்.

***
புகைப்படம்: Walk for Peace

 

கார்காலக் குறிப்புகள் - 132

Thursday, March 05, 2026

 

ஒரு குடும்பத்தில் குறிப்பிட்ட பருவம் வருகின்றபோது இருபதுகளில் இளைஞர்கள் தற்கொலை செய்கின்றார்கள்; இல்லாதுவிட்டால் நாற்பதுகளில் ஆண்கள் காணாமல் போகின்றார்கள். இது காலங்காலமாக நடக்க, புதுத் தலைமுறையான பாபுவுக்கு, அவனின் காதலியான மெர்ஸியைத் திருமணம் செய்ய அச்சமாக இருக்கின்றது. ஒவ்வொரு தலைமுறையிலும் ஆண்களைப் பலிகேட்கும் 'தெய்வம்', தன்னையும் பலிகேட்டு மெர்ஸியின் வாழ்வு வீணாகிவிடுமோ என்று மெர்ஸியின் காதலைத் துறக்க ஒரு கட்டத்தில் முடிவு செய்கின்றான்.

'தேவி விலாசம்' என்கின்ற புராதன வீட்டில் நான்கு திசைகளிலும் இருக்கும் குடும்பங்களையும், அங்கிருந்த வெளியேறிய குடும்பங்களையும் பற்றிய நாவல் இது. தற்கொலைகளுக்கும், தொலைந்துபோதல்களுக்கும் 'தேவி விலாசத்தில்' இருக்கும் தெய்வத்திற்கு ஒழுங்காகக் கோயில் கட்டாததே காரணமென்று அந்தக் கோயிலைக் கட்டி பகவதியையும், பூதத்தானையும் பிரதிஷ்டை செய்து தெய்வங்களுக்கு 'சக்தி கூட்டினால்' இந்தச் சோக சம்பவங்கள் இனி நடக்காது விடுமென்று அக்குடும்பத்தின் மூத்தவர்கள் நம்புகின்றார்கள்.

Uploaded Image

கோயில் நிர்மாணம் நடக்கும்போது, 'தேவி விலாசத்து'ப் பெண்களின் கதைகளும், அவர்களோடு சம்பந்தப்பட்ட ஆண்களின் கதைகளும், அக்குடும்பத்தில் நஞ்சூறிக் கிடக்கும் சாதிய அபிமானங்களும், இந்த நச்சுவலையை அறுக்க விரும்பும் சிலரின் போராட்டங்களையும் இந்நாவல் அழகாகச் சொல்கின்றது.

தமிழக எழுத்துக்களில் புட்டு (பிட்டு) பற்றியோ, அதன் செயல்முறைகள் பற்றியோ, ஏன் தேங்காய்ப்பூ பாவித்து உணவுகள் செய்வது குறித்தோ அவ்வளவு விபரிக்கப்படுவதில்லை. இதில் புட்டுச் செய்கின்ற விதமும், அதை உருசித்துச் சாப்பிடுவது குறித்தும் எழுதப்படுவதும், அதனோடு வெவ்வேறு வகை வாழைப்பழங்கள் சேர்த்து பரிமாறப்படுவதையும் வாசித்தபோது, ஏதோ பழக்கமான நிலப்பரப்பின்/குடும்பத்தின் கதைகளை வாசிப்பது போன்ற நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

நம் பலருக்கு நாவல் என்பது மாபெரும் கனவுகளைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதாகவும், ஒரு தெளிந்த நீரோடையாகக் கதையைச் சொல்லி, 'இதயம் பனிக்கும்' முடிவைச் சொல்லவேண்டும் என்பதாகவும் ஒரு நம்பிக்கை இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை புனைவு என்பது ஒரு பயணத்தைப் போன்றது. அதன் இறுதி முடிவு என்னவாக இருந்தாலும், என்னால் ஒரு நாவலுக்குள் மனமொன்றி பயணிக்க முடிந்தால் அது எனக்கு நெருக்கமான நாவலாக ஆகிவிடும்.

புனைவுகளுக்குள் வாசித்து முடித்தபின் சொல்லக்கூடிய ஒரு தெளிவான கதை இருக்கவேண்டும் என்பதை ஒருபோதும் நான் எதிர்ப்பார்ப்பதில்லை. அவ்வாறு அறுதியிட்டுச் சொல்லக்கூடிய கதைகளை எதிர்பார்த்தால் நகுலன் உள்ளிட்ட எண்ணற்றோர் தமிழில் எழுதியவை நாவல்களே அல்ல என்றுதான் முடிவு செய்யவேண்டி வரும்.
முதலாவது நாவலிலே எவ்விதத் தொய்வு வராமலும், மொழியின் வசீகரத்தைக் கைவிடாதும் எழுதுவது எல்லோருக்கும் வாய்த்துவிடாது. இந்தப் புனைவின் முடிவு ஒரளவு எதிர்பார்க்கப்பட்டதென்றாலும், ப்ரியா தம்பி வாசகர்களைக் கைபிடித்து அழைத்துச் செல்கின்ற தேவி விலாசத்துக்கான பயணம் அருமையானது.

*

 

கடுகுப்பூ குறிப்புகள்

Wednesday, March 04, 2026


சில எழுத்துக்கள் என்ன காரணத்துக்காய் உங்களை ஈர்க்கின்றதென்று அறியமுன்னரே உங்களை முழுதாய் வசீகரித்துக் கொள்ளும். அப்படித்தான் நான் அமலன் ஸ்டேன்லியின் புத்தம் சம்பந்தமான எழுத்துக்களை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பேன். இந்தப் புத்தாண்டில் நான் வாங்கி வாசிக்க வேண்டுமென அதிகம் விரும்பிய நூல்களில் ஒன்று அமலன் ஸ்டேன்லியின் 'புத்தம்'.

அப்படி விரும்பிய நூலை அதன் ஆசிரியரே உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கினால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அவ்வாறு அமலன் ஸ்டேன்லியால் எனக்கு வெகுமதியாகக் கிடைத்தவை அவரின் 'புத்தமும்', 'புத்த தியானக் கருவூலமும்'.

Uploaded Image

மிக மெதுவாகவும், நிதானமாகவும் வாசிக்க விரும்பும் நூல் 'புத்தம்.  கிட்டத்தட்ட எழுநூறு பக்கங்களைத் தொடுவது.

"தவத்தின் படிநிலைகளில் உயர்ந்தேற முடிந்தவர்கள் அதன் பேறுகளைப் பெற்று உய்யட்டும். எளிய மக்களுக்கு சார்புறு பண்பு, துக்கம், நிவாரணம், சீலம் என்பவற்றைப் போதித்து நல்வழிப்படுத்தலாம். எதையும் சாராத, பற்றியிராத தெள்ளமைதி, தெளிசிந்தை, பெருநோக்கு, அருநிறைவு நிலை மானுடர்க்கு வாய்க்கும். அன்பிலும் கருணையிலும் சார்ந்தூறும் மாபிரக்ஞைகொண்ட போதிசத்துவ வாழ்வு கூடுமென உய்த்துணர்ந்த அற்புத வேளையது.

புலரிச் செங்கதிரொளி காட்டு வெளியில் பனியினூடு கூர்ந்து பாய்ந்தது. அவர் தெளிந்தெழுந்தார். சம்போதி ஒளிர்ந்து மிளிர்ந்தது. இவ்வுலகம் இனி ஒருபோதும் முன்புபோல இருக்கப் போவதில்லை என்பதாகப் பறவைகள் பாடின."

இது சித்தார்த்தர் புத்தராக ஞானமடைகின்றதை 'புத்தம்' சித்தரிக்கின்ற பகுதியாகும்.

*

நான் 'Reflections of Life' 'ஐ நேரம் கிடைக்கும்போதெல்லாம் YouTubeஇல் பார்த்துக் கொண்டிருப்பவன். இந்த காணொளியைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்துபோய் எனக்குரிய சிறு நண்பர்கள் வட்டத்துக்குப் பகிர்ந்திருந்தேன்.

இப்படி முதிய காலத்தில் ஒருவர் இந்த வாழ்வின் பெறுமதியை மனவமைதியின் மூலம் பெறுவாரென்றால் அவர் இந்த வாழ்க்கையை வாழ்ந்திருப்பார் என்றே நம்புகின்றேன். இதில் பெர்னார்ட் ஒரு ஸென் துறவியைப் போல இயற்கை, வாழ்க்கை, மரணம் குறித்து பேசுகின்றார்.  இயற்கையின் சுழற்சியில் உயிரிகளில் மரணம் ஒரு புனிதமாக இருப்பதைப் போல, ஏன் மனிதர்களிடமில்லை, நாமேன் அதையிட்டு அஞ்சுகின்றோம் என்று அவர் கேட்க முடிவது, அவரால் இந்த வாழ்க்கையை சரியாக வாழ்ந்து கொண்டிருப்பதால் என்றே நான் நம்புகின்றேன். 

Uploaded Image

இயற்கையில் எதுவுமே perfect இல்லை, பிறகேன் நாம் அப்படியிருக்க கஷ்டப்பட்டு முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்கின்றார். காட்டில் பறவைகள் தமக்காக மட்டும் பாடுவதில்லை, அங்கேயுள்ள மரங்களின் பொருட்டும் அவை பாடுகின்றன என அவர் கூறுவதெல்லாம் எவ்வளவு அழகானது.


"I choose to see magic in everything.'

*
இன்று வாசித்து முடித்த புத்தகம் சஞ்சயன் செல்வமாணிக்கத்தின் '3200 கிலோமீற்றர் கதைகள்'.

சஞ்சயனை அவரின் முதல் தொகுப்பான 'படுவான்கரை - போராளிகளின் வாழ்வும் துயரமும்' என்கின்ற 'எழுநா' வெளியிட்ட நூலிலிருந்து வாசித்து வருகின்றவன் என்றாலும், என்னை அவரின் எழுத்துக்களில் அதிகம் நெருக்கமாகச் செய்தது அவர் செய்யும் பயணங்கள்தான் என்றுதான் சொல்வேன். அது பாலஸ்தீனமாக இருந்தாலென்ன, ஸ்பெயினாலென்ன, அங்கே அவர் சந்திக்கும் மனிதர்களின் கதைகள் அவ்வளவு நெகிழ்ச்சியும், நெருக்கமாகவும் எனக்கு இருக்கும்.

Uploaded Image

இந்த நூல் அவர் நான்கு முறை செய்த யாத்திரைகளைப் பற்றியது. ஸ்பெயினின் பம்பலூனா என்ற நகரத்திலிருந்து 800 கிலோ மீற்றர்கள் நடந்து போய் சந்தியாகோ டீ கொம்பொஸ்தெல்லா என்கின்ற புராதன தேவாலயத்தைச் சென்றடைகின்ற நடைபயணத்தை சஞ்சயன் வெவ்வேறு காலப்பகுதியில் செய்தபோது எழுதிய அனுபவங்களின் தொகுப்பாகும்.

இதில் சிலவற்றை அவர் ஏற்கனவே 'அம்ருதா' இதழ், முகநூல் பக்கங்களில் எழுதியபோது வாசித்திருந்தாலும், ஒரு தொகுப்பாக வாசிப்பது இன்னும் சுவாரசியம் தருவது.  இதை வாசித்து முடிக்கும்போது இப்படியொரு யாத்திரையை ஸ்பெயினினுக்குள்ளோ அல்லது வேறெங்கோவாவது நடந்து சென்று பார்க்க வேண்டும் என்கின்ற ஆவல் நிச்சயம் ஒருவருக்கு வரும்.

இன்னொருமுறை சஞ்சயன் இதே பயணத்தைச் செய்வாரென்றால், தினம் தினம் சிறு குறிப்புக்களாகப் பதிவு செய்து எழுதுவாரென்றால் இன்னும் நுணுக்கமாக இந்த யாத்திரை பதிவு செய்யப்படக் கூடும். ஏனெனில் சாதாரண பயணங்களின்போதே தினம் தினம் சுவாரசியமான அனுபவங்களுக்கு குறைவில்லாதபோது, இதை ஒரு புனித யாத்திரையாகச் செய்பவர்களிடம் எண்ணற்ற கதைகள் பரந்து கிடக்கும் அல்லவா?

டீ கொம்பொஸ்தெல்லா  செல்வதற்கான இந்த புனித யாத்திரையை தமிழில்  முதன்முதலாக பதிவு செய்தவர் சஞ்சயனாக இருக்க வேண்டும். மேலும் இந்த யாத்திரை பெரும்பாலானர்க்கு அவர்களின் மதம் சார்ந்த நம்பிக்கையுடன் இருக்கும்போது சஞ்சயன் மதநம்பிக்கையற்றவராக தனது மீட்சிக்கான பயணமாக இந்த அனுபவங்களைப் பதிவு செய்திருப்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும்.

*

கார்காலக் குறிப்புகள் - 131

Monday, March 02, 2026

'சிறை' திரைப்படத்தின்  மூலக்கதைக்கு உரியவரான தமிழின் நேர்காணலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தமிழ், பொலிஸ் பின்னணியில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். ஈழப்போர் உக்கிரமாக நடந்த இறுதிக்காலத்தில் தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது நடந்த பல்வேறு ஊர்வலங்களில் தமிழ் கலந்து கொண்டிருக்கின்றார். கடலூரிலோ வேறெங்கோ யாரோ ஒருவர் ஈழப்போரின் நிமித்தம் தீக்குளித்தபோது அவர் உடலத்தை மயானத்துக் கொண்டும்போகும்போது அந்தக் கூட்டத்தினருக்கும், பொலிஸுக்கும் கலகலப்பு ஏற்பட்டிருக்கின்றது. பொலிஸ் கூட்டத்தைத் துரத்தியடித்து பலரைக் கைது செய்திருக்கின்றது.

அப்போது தப்பியோடிய தமிழைப் பொலிஸ் கைதுசெய்து, பொலிஸ் ஸ்டேசனுக்குக் கொண்டுபோகும்வழியில், வழமையாக பொலிஸ் எங்கிருந்து வருகின்றாய் என்று விசாரித்தபோது தமிழ் சென்னையில் இருந்து வந்திருக்கின்றேன் என்றிருக்கின்றார். என்ன வேலை செய்கின்றாய் என்றபோது பொலிஸ் என்றபோது கைது செய்த பொலிஸுக்குத் திகைப்பாக இருந்தது. ஒரு பொலிஸாக வேலை செய்யும் நீ இப்படியா இருப்பது, ஒழுங்காக செய்கின்ற வேலையைப் பாரென்று பொலிஸ் ஸ்டேசனின் பின்புறமாகக் கூட்டிச் சென்று சாப்பாடோ டீயோ கொடுத்திருக்கின்றார்.

Uploaded Image


பிறகு 'ஈழத்தில் உங்கள் போராட்டம் வெல்லும், கவலைப்படாது சென்னைக்குப் போ ' என்று சொல்லி தெருவில் போன ஒரு வாகனத்தில் ஏற்றி  அந்தப் பொலிஸ்காரர் அனுப்பியிருக்கின்றார் என்று நேர்காணலில் தமிழ் சொல்லியிருப்பார். அப்படியனுப்பிய பொலிஸ்காரர் இஸ்லாமியப் பின்புலத்தில் வந்தவர். அவரின் பாதிப்பில்தான் அந்த முஸ்லிம் பொலிஸ் பாத்திரம் சிறை திரைப்படத்துக்குள் வந்தது என்றிருப்பார்.

இன்றைக்கு இறுதி ஈழப்போராட்டத்தின்போது, இலங்கையை விட்டு வெளியே தமிழகம் உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் அப்போது என்ன நடந்தது என்பது சரியாகப் பதிவு செய்யப்படாது காலம் கரைந்து கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் அன்றைக்கு சாதாரண மனிதர்கள் எவ்வளவு உணர்வுபூர்வமாகப் பங்குபற்றினார்கள் என்பது பலருக்கு - முக்கியமாக ஈழத்தில் இருந்தவர்க்கும்/இரண்டாயிரத்தில் பிறந்தவர்க்கும் சரியாகத் தெரியாது.

இவ்வாறு தமிழ் கூறியதுமாதிரி, 'பாட்டில் ராதா' திரைநிகழ்வின்போது, ராஜூ முருகன் ஈழப்போராட்டம் முடிந்துவிட்டது என்று அறிந்தபோது மனம் கலங்கி அப்படி பெருங்குடி குடித்தேன். அதுதான் கடைசி. அதற்குப் பிறகு வாழ்க்கையில் குடிக்கவே இல்லை என்று சொல்லியிருப்பார்.

இப்படி ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாக அன்று களத்திலும், இணையத்திலும் ராம்,மாரி செல்வராஜ் இயங்கியதை 'காட்சி' என்ற தளத்திற்குச் சென்றால் நாங்கள் இப்போதும் பார்க்கலாம். தனது பல பார்வைகளை ஈழப்போராட்டம் மாற்றியமைத்தது என்று மாரி பல்வேறு இடங்களில் சொல்லியிருப்பார். அன்றைய அவர்களின் தளத்தில் தீக்குளித்த முத்துக்குமாரை வைத்து அரசியல் நடத்திய அரசியல்வாதிகளை தோலுரித்த கட்டுரை/கள் இன்னும் அந்த இணையத்தளத்தில் இருக்க வேண்டும்.

இதேகாலகட்டத்தில் பொதுமக்களைப் போல, மாணவர்களினதும் பேரெழுச்சியும் நடந்தது. அதில் சில மாணவர்கள் அமைப்புக்களாக இயங்கியதும், அவர்களில் (இளந்தமிழர் இயக்கம்) சிலரைப் பின் தொடர்ந்து கொண்டும் அப்போதும் நானிருந்தேன். அந்த மாணவர்கள் அமைப்புக்கள் அவ்வளவு தீவிரமாக அரசியல் பேசியது, களத்தில் இறங்கி கடுமையாக வேலையும் செய்திருக்கின்றன.

அன்றைய காலத்தில் தமிழகத்தில் 15 பேர் உட்பட, உலகெங்கும் 20இற்கும் மேற்பட்டவர்கள் முத்துக்குமாரனைப் போன்று ஈழத்துக்காக தீக்குளித்திருக்கின்றார்கள் என்பது எவ்வளவு வேதனையான விடயம். நாளை முத்துக்குமாரன் தீக்குளித்த நாள்.

எப்படி 1983 ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபோது,  தமிழகத்தில் ஒரு தலைமுறை அதன் பாதிப்பில் அரசியலிலும் இலக்கியதிலும் வெளிவந்ததோ, அதைப் போன்று 2009 இன் போதும் ஒரு தலைமுறை ஈழப்போராட்டத்தின் பாதிப்போடு அரசியல்/இலக்கியம்/கலைகளுக்கு வந்திருக்கின்றது. ஆனால் நாம் அவற்றை தொகுத்துப் பார்க்கவோ, விரிவாகப் பதிவு செய்யவோ இல்லை. இப்படி உதிரிகளாக ஒவ்வொருவரும் பேசுகின்றபோது மட்டுமே நமது கடந்தகால நினைவுகள் அருட்டப்படுகின்றன.

***

 

சுந்தர ராமசாமியின் கதைகள்

Sunday, March 01, 2026

 

சுந்தர ராமசாமியின் சிறுகதைகளின் முழுத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இதில் அவர் எழுதிய 75 சிறுகதைகள் இருக்கின்றன. சுரா அவரின் 20ஆவது வயதில் முதல் சிறுகதையை எழுதியதிலிருந்து அவர் 74வது காலமாகியவரை கதைகளை எழுதியவர்.  இந்த 50 வருடங்களில் அவர்  எழுபத்தைந்து கதைகளை மட்டுமேயாகும்.  

ஒரு வருடத்துக்கு 2 கதைகளைக் கூட எழுதாத ஒருவர் தமிழ்ச்சூழலில் புனைவுகள் சார்ந்து ஆழமாகப் பாதிப்புச் செய்திருக்கின்றார் என்பது நமக்கு வியப்புத் தரக்கூடும். ஆனால் நம் தமிழ்ச்சூழல் என்பதே எழுதிக்குவிப்பவர்களில் மட்டும் கவனம் குவிப்பதில்லை என்பதற்கு இப்படி எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன.

தன் வாழ்நாளில் 24 சிறுகதைகளை விட வேறெதுவுமே எழுதாத மெளனி முக்கிய படைப்பாளியாகத்தான் தமிழில் கொண்டாடப்படுகின்றார்.  மெளனியை, தமிழின் இன்னொரு பெரும்படைப்பாளியான புதுமைப்பித்தன் 'தமிழ்ச்சிறுகதையின் திருமூலர்' எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.  

இங்கே கூட புதுமைப்பித்தன் மாறுபட்டுத்தான் சிந்திக்கின்றார். வழமையாக திருமூலர், அவர் எழுதிய 3000 இற்கும் மேற்பட்ட செய்யுள்களால், நிறைய எழுதியவர் என்றுதான் பிறரால் உதாரணம் காட்டப்படுகின்றவர். அப்படிப்பார்த்தால் மெளனி நிறைய எழுதிய 'திருமூலர்' அல்ல. ஆனால் புதுமைப்பித்தன் ஏன் மெளனியை 'எழுத்துத் திருமூலர்' எனக்குறிப்பிடுகின்றார் என்றால், அவர் அகவுலகத்தில் நிறைய ஆழமாக திருமூலர் போல பயணப்பட்டதால் என்பதாலாகும்.

*
Uploaded Image


சுந்தர ராமசாமியின் 'காகங்கள்' தொகுப்பு என்னிடம் இருக்க வேண்டும். அது அவர் 2000வரை எழுதிய 60 கதைகளை உள்ளடக்கிய தொகுப்பென்பதாக நினைவு. ஒருவகையில் பார்த்தால் சுரா தனது கடைசி இரண்டு/மூன்று வருடங்களில், ஏதோ தன் மரணம் வரப்போவதை அறிந்து நிறையக் கதைகளை எழுதியிக்கின்றார் போலத் தெரிகிறது. அப்படி கடைசிச் சில வருடங்களில் எழுதிய 12 கதைகளின் தொகுப்பு 'மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்'  என வந்திருக்கின்றது (என் வசம் அத்தொகுப்பு இல்லை). ஆனால் அதில் எந்தக் கதைகள் இருக்கின்றன என்று இந்த முழுத்தொகுப்பைப் பார்க்கும்போது ஊகிக்க முடிகின்றது.

ஒருவகையில் சுந்தர ராமசாமி அவரின் கடைசிக் காலத்தில் தனது குழந்தைப் பருவங்களுக்குத் திரும்பியவர் என்று அவர் எழுதிய பிற்காலக் கதைகளைப் பார்க்கும்போது சொல்ல முடியும். மேலும் அந்தக் கதைகளில் வெளிப்படையாகவே சுராவின் சொந்த வாழ்வியல் அனுபவங்கள் தெரிகின்றது. அதுபோலவே அவரின் பேரக்குழந்தைகளினூடாக குழந்தைமைக்குத் திரும்புகின்ற ஒரு முதியவராகவும் தெரிகின்றார்.

இந்தக் கதைகளில் சிலவற்றில் அவரின் மகள்/மனைவி/பேரக்குழந்தைகள் சொந்தப் பெயர்களில் வருகின்றார்கள். 'தனுவும், நிஷாவும்' கதையில் அழகான அந்தப் பேரக்குழந்தைகளின் உலகம் காட்டப்படுகின்றது. அதுபோலவே 'களிப்பு' என்கின்ற கதையில் ஒரு பிள்ளை/பேரக்குழந்தைகளுடனான புராதன கிணற்றைப் பார்க்கும் பயணத்தில் அமெரிக்க முதியவர்களின் உலகை இன்னொரு முதியவராக இருந்து பார்க்கும் சுராவைப் பார்க்கின்றோம். அதில் சுரா தனக்கு இருக்கும் மனசோர்வு நோயைப் பற்றியும், அதற்கு எடுக்கும் மருந்துகளையும் விபரிக்கின்றார். ஒருவகையில் பிற்காலத்தைய சுராவை இந்த 'களிப்பு' கதையில் என்னால் நெருங்கிப் பார்க்க முடிகின்றது.

அதுபோலவே 'கூடிவந்த கணங்கள்' கதையில் அமெரிக்க நண்பரொருவரின் காட்டுக்கு நடுவில் கலைத்துவமாக இருக்கும் வீட்டில் கழிக்கும் பொழுதைப் பற்றியது. அதில் கதைசொல்லி முதன்முதலாக 'பேரமைதியை இப்போதுதான் முதல் தடவையாக உணர்கிறேன் என்று தோன்றிற்று. அமைதி என்று இதற்கு முன் நான் எண்ணியது எல்லாம் சத்தத்தைப் பயங்காட்டி அமுக்கி வைத்திருந்த வெருட்டல்கள்தான்' என்ற வரிகள் எனக்குப் பிடித்தமானது. ஒருவகையில் நம்மில் பெரும்பாலானர்க்கு அமைதி என்பது சத்தத்தைப் பயங்காட்டி அமுக்கி வைத்திருந்த வெருட்டல்களாகத்தான் இளமையில் இருந்திருக்கின்றது என்று என் மனம் திரும்பிச் சொல்லிப் பார்த்தது. இந்தக் கதையில் இப்படியான அமைதியை கதைசொல்லி உணர்ந்தாலும், இறுதியில் அவருக்கு 'மனித வாழ்க்கையின் அற்ப அலைச்சல்களையும், சிறுமைகளையும் மனது நினைவுகொள்ளத் தொடங்கியதும் மிகுந்த வருத்தம் ஏற்படத்தான்' செய்கின்றது.

ஒருவகையில் நாம் இளமையில், நமக்கு அர்த்தம் தருவதாக நினைத்து பணம், புகழ், இன்னபிறவின் நிமித்தம் அலைவுறுவதுவும், பின்னர் முதுமையில் அவை எதற்கும் அர்த்தமில்லாது போவதை  பலரின் வாழ்க்கைப் பாடங்கள் மூலம் அறிகின்றோம். ஆனால் நாம் இளமையில் இவை எதையும் உணர்ந்து கொள்வது அரிதாகவே இருக்கும். இந்தக் கதையில் கதைசொல்லி தானுணர்ந்த தற்காலிக அமைதியான மனோநிலையை தனது நண்பரோடு பகிர்ந்து கொள்ள விரும்ப நினைப்பதுடன் இந்தக் கதை முடிகின்றது.

சுரா கடைசிக்காலங்களில்தான் ஜி.நாகராஜனை நினைவுகூரும் சிறந்த கதையான 'நண்பர் ஜி.எம்'மை எழுதியிருக்கின்றார். அறையினுள் அடைக்கப்பட்ட சிறுவர்கள் தெருவில் போகும் யானையைப் பார்க்க வேண்டும் என்பதற்காக கதவை உடைத்து அவர்களை யானையைப் பார்க்க வைக்கும் 'நண்பர் ஜி.எம்' வேறொரு விசுவரூபத்தை சுராவின் இந்தக் கதையில் எடுத்துவிடுகின்றார்.

சுரா தனது கதைகளைத் தொடர்ந்து செதுக்கவும், அதன் நேர்த்தியின் பொருட்டு 'இதயத்தை விட்டு மூளையை அதிகம் நம்புபவர்' என்கின்ற விமர்சனம் அவரது கதைகளைப் பற்றி இருக்கின்றது. இன்றைய காலத்து மொழியில் சொல்வதென்றால் சுரா அவரது கதைகளை அதன்போக்கில் எழுதவிடாது, ஒரு கடிவாளத்தை கண்களுக்குத் தெரியாமல் அணிந்துவிடுகின்றவர் என்று சொல்லலாம். அதை முற்றிலும் மறுக்கின்றமாதிரியாக 'கொசு, மூட்டை, பேன்' என்கின்ற கதையைச் சொல்லலாம். இக்கதையில் சுராவின் வழமையான நேர்த்தி இருக்கிறது, ஆனால் அவ்வளவு நகைச்சுவையாக எழுதப்பட்டிருக்கின்றது. சுராவினால் இந்தளவுக்கு வாசகரை சிரிக்க சிரிக்க வைக்க ஒரு கதை எழுத முடியுமா என்று நானே வியந்த கதை இக்கதை.

சுராவின் இறுதிக்காலத்தில் அவரது ஒரு கதை மிகுந்த விமர்சனத்துக்குள்ளானது. அன்று 2004 காலப்பகுதியில் இந்தக் கதை 'காலச்சுவடில்' வெளிவந்த பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. எனக்கிருந்த இளமைக்கொந்தளிப்புக்கேற்ப இந்தக் கதையை அன்று  விமர்சித்த தரப்பின் பக்கமே அப்போது  நின்றேன் என்றாலும், இப்போது அதை மீளவாசிக்கும்போது அந்தளவுக்கு எதிர்நிலை எடுக்க அதுவொன்றும் மோசமான கதையல்ல என்றேபடுகின்றது. அது தொடர்பாக வெளிவந்த ஆதரவு/மறுப்பு கட்டுரைகளைச் சேர்த்து நூறுபக்கங்களில் ஒரு நூலும் அந்தக் காலங்களில் வெளிவந்ததாக ஞாபகம். அந்தக் கதைதான் 'பிள்ளை கெடுத்தாள் வினை'.

ஆனால் என்னை அதிகம் கவராத அவரது இறுதிக்கால கதைகளில் ஒன்று, 'மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்'. இது கிட்டத்தட்ட 70 பக்கங்களுக்கு மேலான நீள்கதை. இவ்வளவு நீளமாக அந்தக் கதையைச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்றே எனக்குப்படுகிறது. ஆனால் சுரா அந்தக் கதையின் தலைப்போடே தனது கடைசி சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருகின்றார் என்றால் அவருக்கு அதை எழுத ஏதேனும் நெருக்கமான காரணம் இருந்திருக்கலாம் என்பதையும் புரிந்துகொள்கிறேன்.

*
எந்த ஒரு கலைஞருக்கும் அவருக்குப் பிடித்தமான கலையில் கடைசிவரை இயங்கிக் கொண்டிருப்பது ஒருவருக்கு அளிக்கப்படும் ஆசிர்வாதமென நான் நினைப்பதுண்டு. அப்படி அவர்கள் விரும்பிய கலை இறுதிக்காலத்தில் கைவிலகிப் போனதால் குடியில் அழிந்தவர்களும், தற்கொலைக்குப் போனவர்களும் நிறையப் பேர் இருக்கின்றார்கள். இப்போது சமூகவலைத்தளங்கள் வந்தபின் நமக்குப் பிடித்த பல படைப்பாளிகள் முதுமையில் வாழ்க்கையின் விரக்தி குறித்து சலித்து எழுதுவதை அதிகம் பார்க்கின்றோம் அல்லவா?

அவ்வாறில்லாது தமது கடைசிக்காலம்வரை எழுத்தின் வழி வாழ்வின் நம்பிக்கையைப் பற்றிக் கொண்டு இருந்தவர்கள் என அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்றவர்களைக் குறிப்பிடலாம். அவர்கள் தாம் காலமாகும் கடைசிக்காலம்வரை எழுத மட்டுமில்லை, கதைகளில் நீர்த்துப் போகாமலும் இருந்திருக்கின்றார்கள் என்பதுதான் இன்னும் முக்கியமானது. வாழ்க்கை அவர்கள் மீது எவ்வளவு சலிப்பைக் கொட்டினாலும், அவர்கள் கலையின் மீது கொண்ட தீராத விருப்பால் மட்டும் அது நிகழ்ந்திருக்கச் சாத்தியம் இருக்கின்றது.

ஒருவர் தனது இறுதிக்காலங்களில், இந்த வாழ்க்கையினால் என்ன பயன் என்று கேட்பதைப் போல, ஒரு படைப்பாளி நான் இவ்வளவு காலம் எழுதி என்ன பயன் என்று விரக்தியடைந்தார் என்றால், அதைப் போன்ற ஒரு மோசமான நிலை ஒரு எழுத்தாளருக்கு ஏற்பட முடியாது. அந்த வகையில் குழந்தைப் பருவத்தில் ஒரு நோயுற்ற சிறுவனாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்து, பாடசாலையில் தமிழே படிக்காத சுந்தர ராமசாமி தன் விருப்பில் தமிழைப் பிற்காலத்தில் கற்று தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியம் வாய்ந்த ஒருவராக மாறியது ஓர் அரிய நிகழ்வென்றுதான் சொல்லவேண்டும்.

***

 

ரமேஷ் பிரேதன் என்கின்ற ஒரு மகத்தான படைப்பாளி

Sunday, February 15, 2026

 

பிரிய ரமேஷ்,

நீங்கள்  இனியொரு பொழுதும் வாசிக்க முடியா ஒரு குறிப்பை இந்த நள்ளிரவில் உங்களுக்காக எழுதிக் கொண்டிருக்கின்றேன். கடந்த பத்தாண்டுகளில் நீங்கள் அவ்வப்போது அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், நாங்கள் பதற்றமடைவதும், பிறகு நீங்கள் எல்லா வாதைகளோடும் இன்னும் மிச்சமிருக்கும் உயிரைக் கையில் பிடித்தபடி  திரும்பி வருபவராகவும் இருந்தீர்கள்.

இம்முறை நீங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது வேறு விதமான நிலையில் இருந்தீர்கள். எனக்குத் தெரிந்த நண்பர் உங்கள் சகோதரியோடு தொடர்பில் இருந்தார். அவரிடம் உங்கள் உடல்நிலை குறித்து கேட்டபடி இருந்தேன். ஒருகட்டத்தில் நீங்கள் வெண்டிலேட்டருக்குள் போய்விட்டீர்களென்றும், மூளையின் பெரும்பகுதி செயலிழந்து கொண்டிருக்கின்றதென்றும் அந்த நண்பர் தெரிவித்தபோது கலங்கிப் போயிருந்தேன்.

Uploaded Image


இங்கே அருகில் இருக்கும் நண்பருக்கு உங்களின் நிலைமையைச் சொல்லிவிட்டு, ரமேஷ் இந்த வாழ்க்கை போதுமென்று நினைத்துவிட்டார் போலும். அவர் விரும்பினால் அவருக்கு விடைகொடுப்பதற்கு நாம் தயாராக இருப்போம் என்று கூறிவிட்டு தூங்கப் போயிருந்தேன். இன்று காலை விடிந்தபோது நீங்கள் உடலின் வாதைகள் போதுமென்று நம்மை விட்டுப் பிரிந்துவிட்டீர்கள் என்ற செய்தியை இங்குள்ள நண்பருக்குச் சொல்ல, என் நண்பர் அழத் தொடங்கினார்.
எனக்குள்ளும் வெறுமை பரவியது. நண்பர் என்னைப் போன்று நீங்கள், பிரேமோடு சேர்ந்து எழுதிய நாட்களில் இருந்து அறிந்த ஒருவரல்ல. அவருக்கு ரமேஷ் என்கின்ற தனிப்படைப்பாளியையே தெரியும். உங்களோடு தனிப்பட்ட மின்னஞ்சல் பரிமாற்றங்களும் அவருக்கு இருந்தன. அவரும், என்னைப் போலவே உங்களை நேரில் சந்தித்துமிருந்தார்.

நாங்கள் உங்கள் நினைவுகளை காலைப் பொழுது முழுதும் பகிர்ந்தபடி இருந்தோம். என் நண்பர், நீங்கள்  இந்தளவு உடல்அவதிகள் இல்லாது கொஞ்சக் காலமாவது சந்தோசமாக வாழ்ந்திருக்கக் கூடாதா என்று சொல்லிக் கலங்கினார்.

நான் அவருக்கு, 'ரமேஷ் இந்தளவு உடல் வாதைகளை அனுபவித்தவர் என்றால், அவர் புத்தர் கூறியபடி ஏதோ ஒரு புள்ளியில் அந்த துன்பங்களை ஏற்று இதுவரையான வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி வாழ்ந்துவிட்டுத்தான் போயிருக்கின்றார், ரமேஷை எங்கள் நினைவுகளால் இறுக்கிப் பிடிக்காது அவருக்கு விடுதலையை அளித்து விடுதலே சாலவும் சிறந்தது என்றேன். நீங்களும் அதைத்தானே விரும்புவீர்கள் அல்லவா ரமேஷ்?

நூற்றாண்டுகால பழைய உடம்பில் வாழ்ந்தபடி, இறந்தும் பிறந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு முடிவிலி உயிரியாக அல்லவா ரமேஷ் உங்களை நீங்கள் எழுத்துக்களில் நம்பிக் கொண்டிருந்தவர் . ஸென் கூறுவதன்படி உங்களுக்கு இறப்பும் பிறப்பும் நிகழ்வதில்லை அல்லது பிறந்தும் இறந்தும் மீண்டும் பிறந்தபடி இருக்கின்றீர்களென உங்களை நான் உருவகித்துக் கொள்கிறேன் ரமேஷ்.

உங்களைப் பற்றி எப்போதும் முதலில் எழுதினேன் என்று காலத்தைச் சுழற்றிப் பார்த்தபோது 20 வருடங்களுக்கு முன் எழுதினேன் என்பதைக் கண்டுபிடித்தேன். அப்போது நீங்களும் பிரேமும் உயிர்மையில் எழுதிக் கொண்டிருந்தீர்கள். நான் உங்களைப் பற்றி அந்த முதல் கட்டுரையை எழுதியபோது ஏற்கனவே உங்கள் இருவரின் 'சொல் என்றொரு சொல்'லை வாசித்திருந்தேன். உங்கள் இருவரின் 'முன்பு ஒருகாலத்தில் நூற்றெட்டுக் கிளிகள் இருந்தன' போன்ற கதைகளில் கிறங்கியிருந்தேன்.

அதற்கு முதல் ஆண்டுதான் இலங்கைக்கு முதன்முதலாக கனடா வந்ததன்பிறகு, திரும்பி  ஒன்பது ஆண்டுகளின் பின் போயிருந்தேன். அந்தப் பயணத்திற்கு வழியனுப்ப வந்த ஒரு நண்பர் உங்களின் 'சக்கரவாளக் கோட்டம்' நூலை பயணத்துணையாகத் தந்தார். என்னவொரு அற்புதமான கவிதைத் தொகுப்பு அது.

இரட்டையராக இருந்த நீங்களும் பிரேமும் பிரிந்ததும், அந்தக் காலத்தில் நிகழ்ந்த பல விடயங்களும் துயரமானவை. எல்லாப் பிரிவுகளும் அது சார்ந்த அனைவரையும் காயப்படுத்துவதுதானே இயல்பு. இந்தக் காயங்களில் இருந்து மீளும் நிவாரணி எழுத்துக்களிலே இருப்பதை அறிந்தவர்களும் நாங்கள் அல்லவா? நீங்கள் தனித்து ரமேஷ் பிரேதன் என்ற அறிவிப்புடன் 'மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்' என்ற தொகுப்போடு புதிய பயணத்தைத் தொடர்ந்தீர்கள்.

பிறகு கவிதைகளைப் போல புனைவுகளுக்கும் ஆழ இறங்கச் செய்தீர்கள். 'அருகன்மேடு', 'நல்ல பாம்பு: நீல அணங்கின் கதை', 'ஐந்தவித்தான்', 'ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து', 'சூன்யதா', 'அவன் பெயர் சொல்' போன்ற பல நாவல்களை உற்சாகமாய் எழுதினீர்கள். நான் இவற்றின் பெரும்பாலானவற்றை வாசித்திருக்கின்றேன், என் வாசிப்புக்களைப் பதிவு செய்திருக்கின்றேன். அருகன்மேடு, நீல அணங்கு, ஐந்தவித்தான் மூன்றையும் சேர்ந்து பின்னர் 'பொந்திஷேரி'  டிரையாலஜியாக வெளியிட்டீர்கள். உங்களை நேரில் நான்  சந்தித்தபோது, இது உங்களின் ஈழப்போராட்டம் சம்பந்தப்பட்ட புனைவென்று சொல்லி எனக்கு 'அவன் பெயர் சொல்' நாவலைக் கையெழுதிட்டுத் தந்தீர்கள்.


ரமேஷ் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும், எழுத்துக்கு வந்த பலர் வாழ்வு கொடுத்த அழுத்தத்தாலும், தனிப்பட்ட காரணங்களாலும் பிறகான காலங்களில் முற்றாக எழுதாமலே போயிருக்கின்றனர். மேலும் எழுத்தின் மீது காதல் கொண்டவர்கள் எழுத்து அவர்களைக் கைவிட்டுப் போகும்போது மனச்சிதைவுக்கு ஆளாகியிருக்கின்றனர், சிலவேளைகளில் தங்களையே முற்றாக அழித்தும் கொண்டிருக்கின்றனர். அதற்கு ஹெமிங்வேயிலிருந்து எண்ணற்ற எழுத்தாளர்கள் உதாரணங்களாய் நம்முன்னே இருக்கின்றனர்.

ஆனால் நீங்கள் storke வந்து உங்கள் உடலின் பெரும்பாலான பாகங்கள் இயங்காது கட்டிலோடு உங்கள் வாழ்வு பிணைக்கப்பட்ட கடந்த பத்தாண்டுகளில் நீங்கள் ஒருபோதும் எழுத்தைக் கைவிடவே இல்லை. உங்களை அந்தவகையில் தமிழன்னை கடைசிக்காலம் வரை கைவிடவில்லை என்றே நம்புகின்றேன். உங்கள் கைகளும் ஒழுங்காக இயங்காது சில விரல்களைக் கொண்டே நீங்கள் தட்டித்தட்டி எழுதுவதை நேரில் பார்த்து நான் திகைத்திருக்கின்றேன்.

ஆனாலும் உடல்/மன வாதைகளுக்கிடையிலும் நீங்கள் தினந்தோறும் எழுதிக் கொண்டிருந்தீர்கள். என்னைப் போன்றவர்களைப் பார்த்து சோம்பறிகளே என்னோடு எழுத்தில் போட்டி போட முடியுமா என்று மறைமுகமாக சவால் விட்ட ஒருவராகவே உங்களை நான் எப்போதும் நினைப்பதுண்டு.

இவ்வாறு தினம் எழுதி, எழுத்தின் மூலமே உயிர்ப்பை வைத்துக் கொண்டிருந்த உங்களைப் பார்த்த ஒருவன் என்பதால், உங்களுக்கு கொஞ்ச கொஞ்சமாக மூளை இயக்கமற்றுப் போகின்றது என்று நேற்று அறிந்தபோது உங்களுக்கு மானசீகமாக விடைகொடுக்க விரும்பினேன். ஏனெனில் அவ்வாறு ஒரு நிலையுடன் எழுத முடியாதிருக்கும் ரமேஷை என்னால் கற்பனை செய்து கொள்ள முடியாதிருந்தது. ஒருவகையில் நீங்கள் இந்த வாழ்க்கை போதுமென்று ஓர் இறுதி  முடிவை எடுத்துவிட்டீர்கள் என்பதையே நான் உணர்ந்தேன்.

கடந்த வருடம் உங்களைத் தேடி 'பிரபஞ்சன் விருது' வந்தபோது அவ்வளவு அகமகிழ்ந்து எழுதியிருந்தேன். இந்த வருடம் விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோதும் அதே மகிழ்வை நானடைந்திருந்தேன். நீங்களோ நானோ ஜெயமோகனின் நம்பிகைகளுக்கும் விஷ்ணுபுர விருதுக்கும் இன்னொரு முனையில் இருப்பவர்கள். அவ்வாறு  இருக்கும் நீங்கள் அவர்களால் தவிர்க்கவோ/மறுக்கவோ முடியாத ஆளுமை என்பதை நிரூபிக்கும்போது உங்களை ஒரு முன்னோடியாக நினைக்கும் என்னைப் போன்றவர்கள் மகிழாமலா இருப்போம்.

ஒவ்வொரு நாட்டுக்கும் போகும்போது அங்கே இருக்கும் முக்கிய எழுத்தாளர்கள்தான் முதலில் எனக்கு நினைவுக்கு வருவார்கள். புதுச்சேரி என்று நினைத்தவுடன் நீங்கள், பிரபஞ்சன், கி.ரா, ராஜ் கெளதமன் என்று உடனே நினைவுக்கு வருவீர்கள். ஆனால் ஒவ்வொருவராக இப்போது விடைபெற்றுப் போய், எனது புதுச்சேரியை இப்போது வெறுமையாக அல்லவா நீங்கள் அனைவரும் கைவிட்டிருக்கின்றீர்கள்.

உங்களைச் சந்தித்தபோது, புதுச்சேரிக்கு இப்போது முதன்முறையாக வருகின்றேன் என்ற உணர்வில்லாது எல்லாத் தெருக்களும், கோயில்களும், அருகன் மேடுகளும் எனக்குப் பரிட்சயமாக இருக்கின்றதென்றேன்.

அந்தளவுக்கு உங்களதும், பிரபஞ்சனினதும் எழுத்துக்களிலும் நான் புதுச்சேரியை அடையாளங் கண்டிருக்கின்றேன். ராஜ் கெளதமனின் 'லண்டனில் சிலுவைராஜ்'ஜில் அரைவாசிக்கு மேலே புதுச்சேரி அனுபவங்கள் அல்லவா வந்திருக்கும். ஏதோ ஒரு பாரில் மது அருந்திக்கொண்டு நீங்கள், பிரபஞ்சன், ராஜ் கெளதன் எல்லோரும் இருப்பது போலவும் நான் அங்கே வருவதுபோலவும் கற்பனை செய்வது எவ்வளவு சுகமாக இருக்கின்றது. 'Midnight in Paris' திரைப்படத்தில் முக்கிய பாத்திரம் கடந்தகாலத்தில் பாரிஸ் தெருக்களில் உலாத்தித் திரிந்த பிரபல எழுத்தாளர்களைச் சந்திப்பதுபோல உங்கள் அனைவரையும் சந்திப்பதில் என்ன தவறிருக்கப் போகின்றது.

(பிற்காலத்தைய)உங்களதும், நகுலனதும், பிரமிளினதும், ஏஜே (கனகரட்ன)வினதும், ஓவியர் கருணா வின்சென்ட்டினதும் தனித்த வாழ்வானது எனக்கு வியப்பையும் திகைப்பையும் ஒரு சேரக்கொடுப்பவை. மனிதர்கள் ஏதோ ஒருவகையில் தனிமைப்பட்டவர்கள்தான். ஆனால் நீங்கள் அனைவரும் (காரணங்களோடோ/ காரணங்களின்றியோ) இப்படியொரு வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர்கள் என்பதால் எனக்கு உங்கள் அனைவர் மீதும் அவ்வளவு காதலும், கருணையும் இருக்கின்றது. அதைச் சொற்களால் வரைந்து காட்டிவிடவும் முடியாது.

ரமேஷ் உங்களை நேரில் இரண்டு வருடங்களுக்கு முன் சந்தித்துவிட்டு  வந்தபோது இப்படி எழுதியிருப்பேன்:

"அடுத்தநாள் ரமேஷ் பிரேதனைப் பார்க்கப் போயிருந்தேன். ரமேஷைச் சந்திக்கும்வரை அவரது புனைவு காட்டிய வழியே உலாத்திக் கொண்டிருந்தேன். மணக்குள விநாயகர் கோயில், அங்காளம்மாள் கோயில், கிட்டத்தட்ட வெள்ளை நகரின் அனைத்துத் தெருக்களும் எனக்கு நான் புனைவிற்குள்ளா அல்லது நிஜத்திலா உலாவிக் கொண்டிருக்கிறேன் என்ற தோற்ற மயக்கத்தைத் தந்திருந்தது..

என் பிரிய ரமேஷ் பிரேதனை, என் எழுத்துக்களில் பாதிப்புச் செய்யும் ஓர் ஆளுமையை இறுக்கி அணைத்துக் கொண்டேன். எப்படி எனக்கு அந்தத் தியானச் சாமியார் ஆசிர்வதித்தாரோ அவ்வளவும் ரமேஷிற்குள் கடத்தப்பட வேண்டும் போன்று நெகிழ்ந்திருந்தேன். அவரோடு பேசிய சில மணித்தியாலங்கள் என்றும் என் நினைவில் நிற்கும். ரமேஷ் இன்று இருக்கும் நிலைமை நம் யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாதவை."


கடைசியாக சில நாட்களுக்கு முன் 'உம்பர்தோ எக்கோ' பற்றிய என் பதிவில் உங்கள் ஆக்கமொன்றைக் குறிப்பிட்டபோது,  நீங்களும் (பிரேமும்) சேர்ந்து எழுதிய 'பேச்சு-மறுபேச்சில்' வந்த கட்டுரையல்ல, அது 'கட்டுரையும் கட்டுக்கதையும்' தொகுப்பில் வந்தது என்று என்னைத் திருத்தினீர்கள். இனி யார் என்னில் இப்படி உரிமை எடுத்துக் கொண்டு என் தவறுகளைத் திருத்துவார்கள். எனது பதின்மங்களில் இருந்து உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டிருந்த ஒரு மாணவனை விட்டு செல்வதற்கு ஏன் இவ்வளவு அவசரம் ரமேஷ்?

உங்கள் மறைவை அறிந்தபோது கண்ணீரில்லாது விடைகொடுக்கவேண்டும் என்று சொல்லி என் நண்பரின் அழுகையைக் கூட நிறுத்திய எனக்கு இப்போது இதை எழுதும்போது  ஏன் என்னை அறியாமல் கண்ணீர்த்துளிகள் உருட்திரண்டு வழிகின்றது.

என் நண்பர் அடிக்கடி சொல்வார், 'நான் உன்னை எந்தளவுக்கு நேசிக்கின்றேன் என்பதை நீ ஒருபோதும் அறியப்போவதில்லை' என்று. அப்படித்தான் ரமேஷ் உங்கள் எழுத்துக்கள் மீதான என் காதலை உங்களுக்குச் சொல்லியும் தீராதவளவுக்கு எனக்குள் இருந்திருக்கின்றது என்பதை இப்போது உணர்கின்றேன்.

நீங்கள் கற்றுத் தந்தவற்றையையும், உங்களின் தோழமையையும் எப்போதும் நன்றியுடன் நினைவு கூர்வேன். உங்களை இந்த வாழ்வில் சகபயணியாய் நான் சந்தித்து எனது நல்லூழ்.

சென்று வாருங்கள் ரமேஷ்!

*****
(நன்றி: 'ஏர்' - அரையாண்டு இதழ்)
புகைப்படம்: இணையம்

பனிக்காலத் தனிமை - 12

Sunday, February 01, 2026

 

எனது ஸென் ஆசிரியரான தாய் ஒருமுறை விமானநிலையத்துக்குப் போனபோது அவரது மாணவர் ஒருவரிடம், 'இப்போது புத்தர் இருந்திருந்தால் விமானமேறிப் போயிருப்பாரா?' எனக் கேட்டிருக்கின்றார். அவரது மாணவர் அதற்குப் பதிலளிக்க முன்னரே, 'நிச்சயமாக புத்தர் விமானமேறி பல்வேறு கண்டங்களுக்கு தம்மத்தைப் போதிக்க சென்றிருப்பார்' என்று தாயே சொல்லியிருக்கின்றார்.


புத்தர் மறைந்தபின் பல்வேறு பிரிவுகள் பெளத்தத்தில் தோன்றியிருந்தன. அதில் தேரவாத பெளத்தம், பாலி மொழியில் இருந்த புத்தரின் போதனைகளை அப்படியே பின்பற்றி ஞானமடைதல் என்ற பாதையில் போக, மகாயான பெளத்தமோ  புத்தரின் போதனைகளை ஒரு வாகனமாக்கி தனியொருவரும் பிறரும் கூட்டாக ஞானமடைதல் என்ற பாதையைத் தேர்ந்தெடுத்தது.

தேரவாத பெளத்ததில் புத்தர் ஒருவரே மூலவர், மகாயான பெளத்ததில் பல புத்தர்களுக்கும், போதிசத்துவர்களுக்கும் இடமுண்டு. அவர்கள் போதிசத்துவர்களாக இருந்து பிறருக்கு கற்பிப்பதன் பொருட்டு நிர்வாணமடைதலைத் தள்ளிவைக்கவும் முடியும் என்று மகாயானம் கூறுகின்றது.

என்னுடைய ஆசிரியர் தாய் மகாயானப் பிரிவைச் சேர்ந்தவர். எனவே அவர் மகாயானத்துக்குரிய தனித்துவமான Lotus Sutra, Heart Sutra போன்றவற்றை அடிக்கடி பாவிப்பார். அதற்காய் தேரவாதப் பிரிவு பாவிக்கும் பாளி கனன்களை முற்றாக விலத்தி வைத்தவர் என்றில்லை. தேவைக்கேற்ப அந்தப் பாளி கனன்களையும் அவர் பாவிப்பதுண்டு.
*
இன்று அமெரிக்காவிலும், கனடாவிலும் பாரிய பனிப்பொழிவு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. 'Walk for Peace' என்று 120 பயணத்தில் 92ஆவது நாளாகத் தொடர்ந்து நடந்தபடியிருக்கும் பிக்குகளை (கிட்டத்தட்ட இப்போது 2 மில்லியன் மக்கள் சமூகவலைத்தளத்தில் பின் தொடர்கின்றார்கள்) தயவுசெய்து இன்றாவது நடக்காது ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுங்கள் என்று பலர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். என்றாலும் தினம் 20-30 மைல்களாவது நடப்பது என்று தீர்மானித்தன்படி இன்றைக்கும் அவர்கள் பெரும்பனிக்குள்ளும், சறுக்கும் தெருக்குள்ளும் நடந்து கொண்டிருக்கின்றனர்.

Uploaded Image


இந்தியாவில் நூறுநாட்களுக்கு மேலாக நடந்தபோது அங்கே வயல்கள், சிறுபாதைகளினூடாக எளிதாக குறுக்கே நடந்து செல்ல முடிந்தது. அமெரிக்காவில் பெரும்பாலும் தனிப்பட்டவர்களின் காணிகளாக(அதனூடாகச் செல்ல அனுமதியில்லை) இருப்பதால் எங்களால் எளிதாகப் போகமுடியாது,  நாங்கள் பெருந்தெருக்களால் மட்டுமே நடக்க வேண்டியிருக்கின்றது என்று ஒரு பிக்கு ஓரிடத்தில் சொல்லியிருப்பார்.

இந்த நீண்ட பயணத்தைத் தொடங்கிய பிக்குவான பின்னங்கரா, தான் இதுகுறித்து மூன்று வருடங்களாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். இவ்வளவு மக்கள் அமெரிக்காவிலும், உலகிலும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும்போது, இதுவே அமைதிக்காக நடப்பதற்கான சரியான தருணமென  நடக்கத் தீர்மானித்தேன் என்று கூறியிருந்தார். அவரின் ஆசிரியர்கள் அனுமதி கொடுக்க, பிற பிக்குகளோடு சேர்ந்து கடந்த புரட்டாதி மாதத்தில் இருந்து நடக்கத் தொடங்கியிருந்தார்.  ஆரவாமின்றித் தொடங்கிய இந்த நடைப்பயணம், இப்போது ஒவ்வொரு நகரின் மக்கள், மேயர்கள், கவர்னர்கள் கலந்துகொள்ள இன்று அது ஒரு பெரும் நிகழ்வாக மாறிக் கொண்டிருக்கின்றது.

அமெரிக்காவின் உள்நாட்டு நிலவரமோ, 'இறுதியாக அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்/ அப்பொழுது எனக்காக பேச எவருமே இல்லை' என்ற மார்ட்டின் மொல்வரின் கவிதைபோல, அரசதிகாரம் குடியேறிகள்/வந்தேறிகளைப் பிடித்து அனுப்பப் போகின்றோமெனத் தொடங்கி, இறுதியில் சொந்தமக்களையே சுட்டுக் கொல்கின்ற கொடுங்காலத்துக்கு அது இப்போது வந்துவிட்டது. எல்லா நம்பிக்கைகளும் இழக்கப்பட்டு கைவிடப்பட்ட மக்களுக்கு இந்த 'அமைதிக்காக நடத்தல்' என்பது கொஞ்சம் கருணையுடன் பற்றிக்கொள்ளும் ஓர்  'ஊடகமாக' இருக்கின்றது.

பிக்குகளும் தொடர்ச்சியாக தனியொருவரின் அமைதியே முக்கியமென தமது உரைகளில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஏதோ ஓரிடத்தில் நீங்கள் ஏன் இந்த அரசியல் அடாவடிகளுக்காக குரல் கொடுக்கக்கூடாது என்று கேட்கப்பட்டபோது, நாங்கள் அமைதிக்காக நடப்பவர்கள், ஒருவகையில் எமது ஆன்மீகப்பாதை அரசியல் பேசக்கூடாது என்பதைத் தடை செய்திருக்கின்றது. ஆனால் எங்களின் 'அமைதிக்கான நடத்தல்' என்பது நாளை நீதிக்காக நடத்தல் (Walk for Justice) என்பதற்கான விதையாக மற்றவர்களிடம் மாறினால் அதுவும் மகிழ்ச்சியானது என்றே அவர்கள் கூறியிருந்தனர்.

இன்னொரு இடத்தில், தனிமனிதர்கள் தாங்கள் கடுமையாக இன்னொருவரால விமர்சிக்கப்படும்போது அதை எப்படி எதிர்கொள்வது என்று கேட்கப்பட்டது. 'உங்கள் மீது ஒருவர் நெருப்புக் கோளத்தை வீசுகின்றார் என்றால், அதை நீங்கள் தாங்கிக் கொண்டால்தான் அந்த நெருப்பு உங்களை எரிக்கும். அதை ஏந்தாமல் கைவிடுங்கள். அப்படி கைவிடும்போது அந்த வினை எறிந்தவருக்கே மீளச் சென்று சேரும். ஆனால் நீங்கள் அதை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், அது உங்களுக்கானதாக மாறிவிடும், கவனம்' என்று ஒரு பிக்கு சொன்னார்.

இதற்கு மேலும் வலுவூட்ட, 'நீங்கள் நினைக்கின்றீர்களா, நாங்கள் இப்படி நடந்துவரும்போது எல்லாமே நல்லதுதான் நடக்கின்றது என்று. பல இடங்களில் எங்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கின்றார்கள். ஒருபொழுது காரின் சைலன்சரை அழுத்து எங்கள் முகம் முழுதும் கரியபுகையைப் படரவிட்டிருக்கின்றனர். இதையெல்லாம் பார்த்து நான் எதிர்வினை புரியவேண்டும் என்று அவர்கள் விரும்பியிருக்கக்கூடும். நாங்கள் அதைச் செய்யவில்லை, வழமைபோல எல்லோரையும் ஆசிர்வதிப்பதுபோல நீங்கள் நலமாகவும், மகிழ்வாகவும், அமைதியாகவும் இருங்கள் எனச் சொல்லிவிட்டுத்தான் அந்த மனதுக்கு உவக்காத சூழலையும் தாண்டி வந்து கொண்டிருக்கின்றோம்' என்று கூறியிருக்கின்றனர்.

இந்த அமைதிக்கான நடத்தலை முன்னின்று வழிநடத்தும்  பன்னங்கரா என்கின்ற துறவி 44 வயதுடையவர். அவரது பதின்மத்தில் அமெரிக்காவுக்கு வந்து பொறியியலில் பட்டம் பெற்றுவிட்டு, இரண்டு வருடங்களாகச் செய்த வேலையை உதறிவிட்டு, பிக்குவாக மாற மடாலயத்தில் சேர்கின்றார். கிட்டத்தட்ட 17 வருடங்களாக  துறவியாக அவர் இருக்கின்றார். ஆக இந்த 17 ஆண்டு தீராத பயிற்சியாலும், தேடலாலும் இந்தப் பிக்கு அவ்வளவு அமைதியாக ஒவ்வொரு விடயத்தையும் எதிர்கொள்ள முடிகின்றது, மக்களின் மனங்களோடு நெருக்கமாக உரையாடத் தெரிகின்றது.

பன்னங்கரா எனது ஆசிரியர் தாயைப் போன்று வியட்னாமியப் பின்னணியில் இருந்து வருகின்றவர். ஆனால் தேரவாதப் பெளத்தப் பிரிவைச் சேர்ந்தவர். ஆகவேதான் அவர் தெருக்களில் குழந்தைகளையும், முதியவர்களையும், நோயாளிகளையும் காண்கின்றபோது பிரித் ஓதி, கையில் நூலைக் கட்டி விடுகின்றார். இப்போது ஒவ்வொரு பெரும் கூட்டங்களின் பின்னும் Peace Bracelet எனக்கூறி அந்த நூலை மக்களுக்கும் அதை வழங்குகின்றார்கள். இது நீங்கள் எங்களைப் போன்ற பெளத்த துறவிகளைச் சந்தித்தீர்கள் என்பதற்காக மட்டுமின்றி, எங்களோடு சேர்ந்து  (அபெளதீகமாக) வாஷிங்டன் டிஸிக்கு நடந்து வருவதாக நினைவூட்டவும் மட்டுமில்லாது, உங்கள் வாழ்வின் இறுதிவரை எங்களோடு சேர்ந்து அமைதியாக நடந்து வருவதற்கு இது எனச் சொல்லி அந்த நூலினை வழங்குகின்றார்கள்.

இரண்டாம் உலக யுத்தத்தின் அழிவின் பின்பாக, "இருண்ட காலங்களில் பாடல்கள் இருக்குமா? ஆம், பாடல்கள் இருக்கும், இருண்ட காலங்களைப் பற்றியதாக இருக்கும்" என்று பிரெக்ட் எழுதியிருப்பார். அப்படி இருண்ட காலங்களைப் பற்றி மட்டுமில்லை, நம்பிக்கை தரும் ஒளியைப் பற்றியும் பாடல்கள் இருக்குமென்பதை இந்த 'அமைதிக்காக நடத்தல்' நமக்குச் சொல்கின்றது. ஹெமிங்வேயோ அல்லது யாரோ, "நாங்கள் எல்லோரும் உடைந்து போனவர்கள், ஆனால் அப்படி உடையும்போதுதான் ஒளி உள்ளே நுழையும்' என்று சொன்னமாதிரி அவநம்பிக்கையான காலங்களில் நாம் நம்பிக்கை கொள்வதற்கு எழும் இவ்வாறான கரங்கள்தான் எவ்வளவு இதமானவை.

***

நன்றி: புகைப்படம் (walk for peace fb page)

கார்காலக் குறிப்புகள் - 130

Saturday, January 31, 2026

 


சில வருடங்களுக்கு முன் திருவண்ணாமலைக்குப் போயிருந்தேன். ஒன்றிரண்டு நாட்களில் சென்னைக்குத் திரும்பி வருவதாகத் திட்டம்.  திருவண்ணாமலையில்  ஏதோவொன்று ஈர்த்துவிட ஐந்து நாட்களுக்கு மேலாக அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தேன். அம்மலையை விட்டு நீங்கியபோதும் என்றேனும் ஒருநாள் திருவண்ணாமலைக்கு வந்து நிரந்தரமாகத் தங்கிவிட வேண்டுமென்ற இனம்புரியாத உணர்வு அப்போது அலைக்கழித்திருந்தது.

இத்தனைக்கும் ஒருநாள் ரமணாச்சிரமம், மலை மேலிருந்த விருபாஷிக குகைக்கு ஏறியது, இன்னொருநாள் கிரிவலம் சுற்றியது தவிர நான் பெரிதாக அங்கே எதுவும் செய்யவில்லை. கடைசிநாளில் சென்னைக்குத் திரும்ப பஸ்ஸேறியபோதுதான், இவ்வளவுநாள் இங்கே நின்றும் அருணாச்சலேஸ்வரர் கோயிலினுள்ளே போகவில்லை என்று நினைப்பு வந்து, உள்ளே கொஞ்சம் எட்டிப் பார்த்துவிட்டு பஸ் போயிவிடுமோ என்ற பதைபதைப்புடன் திரும்ப ஓடிவந்தேன்.  

திருவண்ணாமலை எனக்கு பதின்மத்தில் பாலகுமாரன் மூலந்தான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அவர் விசிறி சாமியார் குறித்து எழுதிய அனைத்தையும் வாங்கி வாசித்திருக்கின்றேன். எனது மானசீகக் குருவாக அப்போது விசிறி சாமியார் ஆகியுமிருந்தார். உங்களின் கறைப்படாத பதின்மங்களில் ஒருவர் மிஸ்டிக்காக அறிமுகமாகும்போது அது எத்தனை இனிமையானது.

விசிறி சாமியாரைப் பற்றி அறியமுன்னர் ஊரில் இருந்தபோது என் பன்னிரண்டாவது வயதில் பாலகுமாரனின் 'கனவுகள் விற்பவன்'  என்கின்ற நாவலை வாசித்திருக்கிறேன். அதில் (என் நினைவு சரியாக இருக்குமாயின்) ஒரு கிழவர் வீட்டுத்திண்ணையில் எதுவும் பேசாமல் 'நிஷ்டிக மெளனத்தில்' நீண்டகாலமாக உட்கார்ந்திருப்பார். ஆனால் அவரின் பார்வையில் சொல்லப்படுபவை எல்லாம் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டவையாக, ஒருவகை விசித்திரமான சம்பவங்களாக இருக்கும். அந்தக் கிழவர் பாத்திரம் மீது என் சிறுவயதுகளில் பயமாகவும், அதேவேளை சொல்லமுடியாத பிரியமாகவும் இருந்திருக்கின்றது.

*

இவ்வாறு சிறுவயதுகளில் சித்தர்களின் வாழ்வின் மீது தீராத வியப்பு இருந்ததால், பின்னாட்களில் அவர்கள் வந்து சேர்ந்த இந்த நாடோடிப் பாதையை அறியும் ஆவல் ஒருபோதும் தீர்ந்து விடாதிருந்தது. ஆன்மீகத்தின் சிறுதுளி தீண்ட, தமது ஊரை, வீட்டை, வசதிகளை விட்டு ஓடிப்போய் வேறொரு வாழ்க்கை வாழுபவர்களைப் பின் தொடர்கின்ற ஒரு புனைவாக யுவன் சந்திரசேகரின் 'வெளியேற்றம்' இருக்கின்றது.

சந்தானம் என்பவர் வேலையின் நிமித்தம் திருவண்ணாமலைக்குப் போகின்றார். அங்கே தற்செயலாக கண்பதி என்பவரைச் சந்திக்கின்றார். அந்தக் கணபதி அவருக்குக் காட்டும் திசைகளில் தொலைகின்ற சந்தானம், பல்வேறு மனிதர்களைத் தேடிப் போகின்றார். அவர்கள் அனைவரையும் இணைக்கும் புள்ளியாக பெரியவர் வேதமூர்த்தி இருக்கின்றார். வேதமூர்த்தியால 'ஆட்கொள்ளப்பட்ட' பல்வேறு வகை மனிதர்களைச் சந்தானம் சந்திக்க ஒவ்வொரு ஊர் ஊராக அலையத் தொடங்குகின்றார்.

Uploaded Image

அப்படி சந்தானம் சந்திக்கும் தங்கம், ஹரிஹர சுப்பிரமணியம், மன்னாதி, சிவராமன், ராமலிங்கம், பால்பாண்டி, குற்றாலிங்கம்,வைரவன், கோவர்த்தனம்,ஜய்ராம் என்ற எண்ணற்ற மனிதர்களின் வீட்டை விட்டு வெளியேறிய கதைகள் சொல்லப்படுகின்றன.

இதில் சிலர் திருமணம் செய்திருக்கின்றனர், சிலர் திருமணம் செய்யாதவர்களாக இருக்கின்றார்கள். சிலருக்குப் பெரியவர் தீட்சை கொடுத்திருக்கின்றார், சிலருக்குப் பெரியவர் தீட்சை கொடுக்காதிருக்கின்றார். ஆனால் அனைவருக்கும் பெரியவரைச் சந்திக்க முன்னர் ஒரு வாழ்வு இருந்தபோதும், பெரியவரைக் கண்டபின் அவர்களின் வாழ்வு முற்றிலும் வேறுவிதமாக மாறிவிடுகின்றது.  சிலர் பின்னர் இல்லறத்தில் புகுந்தாலும், எவரும் தமது சொந்த ஊருக்குத் திரும்புவதுமில்லை என்பதை நாவலின் பிற்பகுதியில் கண்டுகொள்கின்றோம்.  ஆக நாம் நமது ஊர் என்று இறுக்கப் பற்றிக்கொண்டிருப்ப்பதெல்லாம் ஒருவகையான மிகை கற்பனைதானோ என்று இந்தப் புதினம் யோசிக்க வைக்கின்றது.

இவர்களின் அனைவருமே பெரியவரோடு ஒருகட்டத்தில் சேர்ந்து அலைந்திருக்கின்றனர். சிலரைப் பெரியவர் இந்த இடத்திலே ஒரு புதிய வாழ்வை ஆரம்பியுங்கள் என்று இடைநடுவில் விட்டுவிட்டுச் சென்றிருக்கின்றார். சிலரைத் தன்னோடு நிறைய வருடங்கள் அலைய வைத்திருக்கின்றார். ஆனால் இத்தனைக்கும் பெரியவர் மற்றச்சாமியர்கள் செய்வது போல ஒரு ஆச்சிரமத்தை அமைத்து அங்கே உட்கார்ந்து 'அருள்பாலிப்பவரோ, ஓரிடத்தில் தரித்து நிற்பவரோ இல்லை. பெரியவரின் தனித்தன்மையே அலைந்தபடி இருப்பதுதான். பலரை அவரின் அந்த அலைச்சலில்தான், சீடர்கள் என்றறியாமலே அவரின் சீடர்களுமாக்கியிருக்கின்றார்.

இத்தனைக்கும் சந்தானம் இப்படி பெரியவரால் 'ஆட்கொள்ளப்பட்ட'வர்களைத் தேடிப் போகும்போது, அவர்களில் பலருக்குப் பெரியவருக்கு இத்தனைபேர் சீடர்களாக இருக்கின்றார்களா என்பது கூடத் தெரியாது. அது சந்தானத்துக்கு இன்னும் வியப்பாக இருக்கின்றது. இறுதியில் பெரியவர் தனக்கான வாழ்வின் இறுதியைத் தெரிவு செய்யும் கட்டம் சொல்லப்படுகின்றது.

இத்தனைகால பெரியவரின் வாழ்க்கையில், பெரியவரை நேசிப்பவரைப்போல, அவரின் சீடர்கள் சிலர் அவரின் இறுதி முடிவை விமர்சிக்கின்றவர்களாகவும் இருக்கின்றார்கள். அது பெரியவருக்குத் தெரிகின்றது. அவர்கள் தன்னைத் தேடி காசிக்கு வரப்போவதில்லை என்பதையும் அவர் முன்னரே அறிந்துகொள்கின்றார்.

*

திருவண்ணாமலையில் ஒரு வேலைக்காக வந்த சந்தானம், கண்பதி என்பவரால் 'அருட்டப்பட்டு, எல்லாவற்றையும் கைவிட்டு,  இப்படி பெரியவரின் சீடர்கள் ஒவ்வொருவராகத் தேடித் தேடி இறுதியில் காசிக்குப் போகும்வரை எதோ 'ஒன்றால்' ஆட்படுகின்றார். வேலையின் நிமித்தம் திருவண்ணாமலை போனவர் எங்கே சட்டென்று காணாமற்போய்விட்டாரே என்று அவரது மனைவி சித்ராவும், குடும்பத்தினரும் சந்தானத்தைத் தேடி அலைகின்றனர். காசியில் பெரியவர் சிதை சிங்கூர் கட்டில் எரியும்போது சந்தானம் என்ன முடிவை எடுக்கின்றார் என்பதை நாம் இந்த நாவலில் இறுதியில் கண்டுகொள்கின்றோம்.

வெவ்வேறு ஊர்கள், வெவ்வேறு சாதியப் பின்னணிகள், வெவ்வேறு சம்பவங்களினூடாக வீட்டைத் துறப்பவர்களை ஒரு மாலையில் கட்டிய முத்துக்களாக யுவன் சித்தரிக்கும் விதம் அலாதியானது. அதுவும் அவர்கள் வீட்டை விட்டு விலகும் பின்னணிச் சம்பவங்களைச் சொல்லிவிட்டு, பிற்பகுதியில் அவர்கள் அந்த பெரியவரின் அருளால்/அருட்டலால், இப்போது என்னவாக இருக்கின்றார்கள் என்பதை அவர்களின் பெயர்களிட்ட ஒவ்வொரு அத்தியாயங்களில் எழுதிச் செல்வது நுட்பமான எழுத்து வகை எனத் துணிந்து சொல்லலாம்.

*

இப்போது 500/600 பக்கங்களுள்ள நாவல்கள் என்றாலே ஒருவித அலுப்பு வாசிப்பில் வந்துவிடுகின்றது. கடந்த வருட சென்னைப் புத்தகக்கண்காட்சியில் இப்படி மூன்றுக்கு மேற்பட்ட பெரிய நாவல்களை வாங்கிவிட்டு அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் வாசித்து முடிக்காத குற்றவுணர்வை அவை ஏற்படுத்துகின்றன. யுவனின் இந்த நாவல் கிட்டத்தட்ட 500 பக்கங்கள் வருபவை. ஆனால் சுவாரசியமாக வாசித்துப் பார்க்க எனக்குள் இயல்பாக இருக்கும் அலைய விரும்பும் நாடோடிமனது இதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடுமென நினைக்கின்றேன்.

ஆனால் இதன் இன்னொரு சிறப்பையும் குறிப்பிட வேண்டும். இதை 'ஒரே மூச்சில்' வாசித்துவிடாது, மிக ஆறுதலாகவே வாசித்து முடித்தேன். ஒருவகையில் இதை slow burner எனச் சொல்லலாமென நினைக்கின்றேன். மேலும் யுவனின் எழுத்துக்கே உரிய தனித்துவமான 'எல்லாவற்றையும் சொல்லிவிடும்' எத்தனம் இல்லாது பல இடைவெளிகள் வாசகருக்காக விடப்பட்டிருப்பதும், பெரும்பாலான கதைகள் சட்டென்று தொடங்கிவிடுவதும் எனக்குப் பிடித்தமாக இருக்கின்றது.

இதையேன் குறிப்பிட்டுச் சொல்கின்றேன் என்றால், சில மாதங்களுக்கு வெளியான ஒரு நாவலை வாசிக்கத் தொடங்கியிருந்தேன் (நாவலின் பெயர் வேண்டாம்). அந்த நாவல் அவ்வளவு வேகமாக நகர்கின்ற நாவல். அது ஒரு பிரச்சினையில்லை. ஆனால் நாவலே பெருத்த குரலில் அலறுகின்ற மாதிரி எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. அதனால் ஏதோ புள்ளியில் எனக்கு அது சுவாரசியமற்றுப் போயிருந்தது. அன்பான எழுத்தாளரே நீங்கள் கொஞ்சம் பேசாமல் அந்தப் பாத்திரங்களையும் சற்று அமைதியாக இருக்க விடுங்களேன் என்று கெஞ்சிக்கூடப் பார்த்தேன். அவரோ இல்லை அது என்னால் முடியாதென்று கதையை 'எக்ஸ்பிரஸ்' வேகத்தில் 'சளசள'வென்று சொல்லிக் கொண்டு போகத்தொடங்கினார்,  எனக்கு வேறு வழியின்றி அதை வாசிப்பில் இடைநடுவில் விலத்தி வைத்திருந்தேன். அந்தவகை கஷ்டத்தையெல்லாம் யுவன் தரவில்லை. அப்படித் தராததாலேயே மிக மெதுவாக இரசித்து இரசித்து வாசித்தேன். ஒரு சிறு குறையாக எனக்குப் பிடித்த திருவண்ணாமலைச் சூழலை இன்னும் விபரமாக விவரித்து ஒருசில அத்தியாயங்களாகவது யுவன் இதில்  எழுதியிருக்கலாமே என்று மட்டும் நினைத்தேன்.

இப்படி 'வெளியேற்றம்' போல நான் வாசித்த இன்னொரு நாவலும் இப்போது நினைவுக்கு வருகின்றது (அதன் பெயரும் வேண்டாம்). அதுவும் இப்படி வீட்டை விட்டு ஓடிப்போகின்ற ஒருவனின் கதை. அது சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தபோது பலரால் முக்கிய நாவலெனக் கவனப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதை வாசித்தபோது என்னை அவ்வளவாகக் கவரவில்லை. ஏனோ அது ஓடிப்போனவனின் அகவுலகத்துக்குள் போகாது புறவயமாக வாசகரோடு ஒட்டாத மொழியில் கதையைச் சொல்லிப்போந்தது என்னளவில் ஏமாற்றமாக இருந்தது.

மேலும் யுவனின் ஒவ்வொரு நாவல்களை வாசிக்கும்போதும் அவருக்கு நெருக்கமான (அவர் நிறைய மொழிபெயர்த்த) ஸென்னின் வாசம்/பாதிப்பு புனைவில் வருகின்றதா எனத் தேடியபடி இருப்பேன். ஸென்னின் தூவல்களை மிக அற்புதமாக அது ஸென் என்றே அறியாதவளவுக்கு 'வெளியேற்றத்தில்' பாவித்திருப்பது எனக்கு இந்த நாவலை இன்னும் நெருக்கமாக்கிக்கொள்ள முடிந்திருந்தது .

ஒரு படைப்பாளியின் அதிசிறந்த படைப்பு என்பது வாசகருக்கு வாசகர் வேறுபடும். எத்தனை நல்ல நாவல்கள் இருந்தாலும் என்னைப் பொருத்தவரை அசோகமித்திரனின் சிறந்த நாவல், பலரால் கவனிக்கப்படாத அவரின் 'ஒற்றன்'. அதுபோல யுவனின் 'பகடையாட்டத்தை' அவரின் சிறந்த படைப்பாக பலர் சொல்லியிருக்கின்றார்கள். ஆனால் எனக்கென்னவோ இதுவரை நான் வாசித்த யுவனின் நாவல்களில் 'வெளியேற்றத்தை'யே அவரின் சிறந்த படைப்பாக என் வாசிப்பில் முன்வைக்கலாம் போலத் தோன்றுகின்றது..

***