கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Manjummel Boysஐ முன்வைத்து சில திரைப்படக் குறிப்புகள்..

Monday, March 25, 2024


 ண்மையில் இன்னொரு நகருக்கு ஒரு நிகழ்வுக்காகப் பயணித்தபோது தற்செயலாக நண்பரொருவரைச் சந்தித்திருந்தேன். சில வருடங்களுக்கும் முன் அவர் ஒரு முழுநீளத் திரைப்படத்தை எடுத்திருந்தார். அவரோடு சமகால புலம்பெயர்/ஈழத்துத் திரைப்பட முயற்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். புலம்பெயர் இலக்கியம் போல, புலம்பெயர் திரைப்பட முயற்சிகளும் தொடக்கத்தில் தந்த நம்பிக்கை போலவன்றி இப்போது உறைந்துபோய் விட்டதன் துயரம் நோக்கி நம் பேச்சு குவிந்தது.


நமது அசலான கதைகளை விட்டு நகர்ந்து, ஒரு 'மேற்கத்தைய' பார்வையாளர்களுக்கு விளங்குவதற்கு திரைப்படங்களை எடுக்கத் தொடங்கியபோது நமது திரைப்படங்கள் ஆட்டங்காணத் தொடங்கிவிட்டது. இது நான் ஒரளவு மதிக்கும் சில நெறியாளர்களின் அண்மைக்கால திரைப்படங்களை முன்வைத்து கிடைத்த‌ அவதானம் எனலாம். இன்னொருபக்கத்தில் எப்போதும் போல புலம்பெயர் தேசங்களிலும்/ஈழத்திலும் தென்னிந்திய திரைப்படங்களை மாதிரியாக வைத்து கதாநாயக விம்பம்/வன்முறை/ஆபாசம் என்றெல்லாம் ஒரு கதம்பமாக அளிக்கின்ற ஒரு வகையினர் இருக்கின்றனர். அவ்வாறு எடுப்பதை மட்டுமே திரைப்படமென உறுதியாக நினைக்கவும் செய்கின்றனர். அவர்களாக வெவ்வேறு திசைகளை பரிட்சித்துப் பார்க்காதவரை அதற்குள்ளேயே தேங்கிவிடுகின்றவர்கள் அவர்கள்.


கடந்த பல வருடங்களாக நான் புலம்பெயர்/ஈழத்து நெறியாளர்கள் முன்மாதிரியாக கொள்வதற்கு சிங்கள மற்றும் மலையாள திரைப்படங்களை உதாரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். அவர்கள் சாதாரண கதைகளையே எப்படியே அசாதாரணக் கதைகளாக மாற்றுகின்றார்கள் என்பதற்கு மட்டுமின்றி எவ்வாறு குறைந்த பட்ஜெட்டோடு விரிவான பார்வையாளர்களுக்கு அதைக் கொண்டு செல்கின்றார்கள் என்று அறிவதற்கும் நாம் அவர்களைப் பின் தொடர்ந்து பார்க்கலாம். இன்றைக்கும் புலம்பெயர் சூழலில் எடுத்த திரைப்படத்துக்கு 'முகத்தை'யும், ஈழத்துப் படத்துக்கு யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள் எண்பதுகளில் 'கல்லூரி வசந்தத்தை'யும் நான் இரண்டு எளிய உதாரணங்களாக முன்வைத்துக் கொண்டிருப்பவன். இரண்டுமே தொழில்நுட்பரீதியில் பார்த்தால் மிகக் குறைந்த வசதிகளைக் கொண்டு எடுக்கப்பட்டது. ஆனால் அதற்குள் கதை என்கின்ற ஆன்மா ஒளிர்ந்துகொண்டிருப்பதை எளிதாகக் கண்டுகொள்ளமுடியும். அவை 'நமது கதைகள்' என்று அதன் தொடக்கத்தில் இருந்து முடியும்வரை ஒரு நண்பனைப் போல தோள்மேல் கைபோட்டு அழைத்துச் செல்வதைப் பார்க்கலாம்.


திரைப்படங்களை எடுக்கும் இன்றைய நம் தலைமுறை தமிழகத் திரைப்படம் சம்பந்தமாக எதைப் பார்க்கின்றதோ தெரியாது, ஆனால் பல நெறியாளர்களின் நேர்காணலைக் கேட்டால்/பார்த்தால், இன்று எல்லாமே தொழில்நுட்பத்தால் சுருங்கிவிட்டதால், நீங்களாகவே குறும்படங்களை எடுத்துக் கற்றுக்கொள்ளலாம் என்று அவர்கள் எல்லா இடங்களிலும் வலியுறுத்துவதைக் கேட்கலாம் . நீங்களாகவே இயக்கி, எடிட் செய்யத் தொடங்க, திரைப்படம் எடுப்பதன் நுட்பங்கள் மெல்ல மெல்லப் புலப்படும் என்று அவர்கள் உற்சாகமூட்டுவதை அவதானிக்கலாம். நல்ல திரைப்படங்களை மட்டுமில்லை, நல்ல கதைகளை வாசிக்கும்போதும் உங்களுக்குள் ஒரு திரைப்படம் ஓடுவதைக் காணலாம்.

ன்றைக்கு ஈழத்திலும்/புலம்பெயர் சூழலிலும் நிறையக் கதைகளை எழுதப்பட்டு இருக்கின்றன. சமகாலத்துக் கதைகளை கதை/திரைக்கதையாக்கி எடுக்கத்தான் நமது ஈகோக்கள் விடாதென்று ஒரு கதைக்காக வைத்துக் கொண்டாலும், காலமாகிவிட்ட நம் முன்னோடிகளின் கதைகள் பல இருக்கின்றன. அதைக் கதையாக்கி பரிசோதனை முயற்சிகளை குறும்படங்களாக எடுத்துப் பார்க்கலாம். அந்த இறந்த ஆத்மாக்கள் நம்மை வந்து ஒருபோதும் பலிவாங்கப் போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் தாங்கள் இன்னமும் மறக்கப்படவில்லை என்று ஆசிர்வாதங்களை அளிக்கவே செய்வார்கள்.

தொடக்கத்தில் கதை/திரைக்கதை/இயக்கம் என்று எல்லா கீரிடங்களையும் தலைமேல் ஏற்றி பாரம் எல்லாம் சுமக்கத் தேவையில்லை. உண்மையில் இவை எல்லாமே வெவ்வேறு துறைகள் எனச் சொல்லலாம். திரைப்படம் என்பதே கூட்டுழைப்பின் உச்சத்தில் திரண்டு வருகின்றபோது அந்தத்த துறையில் மிகச்சிறந்த உழைப்பை/உதவியைப் பெற்றுக்கொள்வதில் எந்த வெட்கமும் கொள்ளத் தேவையில்லை. மேலும் கதை/திரைக்கதை விவாதங்களில் எழுத்தாளர்களை/திரைப்பட விமர்சகர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். நல்லதொரு குழு அப்படி அமைந்துவிட்டால் அது நம்மை அழைத்துச் செல்லும் பயணம் அருமையாக அமைந்துவிடக்கூடும். ஆனால் எல்லாம் திரண்டு வந்தபின் இயக்குநர் என்கின்ற மீகாமனை நம்புவதற்கு முழு அணியையும் தகவமைத்துக் கொள்ளவேண்டும். நல்ல திரைப்படங்களை எடுத்தவர்களின் நேர்காணலை/காணொளிகளைப் பார்க்கும்போது அவர்கள் ஒரு துறை நல்லதைக் கொடுத்ததைப் பார்த்தபின், அதைப் போட்டியாக வைத்து தமது துறையிலும் நல்லதைக் கொடுக்கவேண்டும் என்ற இயல்பான 'போட்டி' மனது தங்களுக்கு ஒரு திரைப்படத்துக்குள் அமைந்துவிடுவதைக் கூறுவதை நாம் அவதானித்திருக்கலாம்.

மேலும், கிளிஷேக்களை/ பார்வையாளர்களுக்கு அதிர்ச்சிகளைத் தருகின்றோம் என்றெல்லாம் அதிகம் கற்பனை செய்து உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளத் தேவையில்லை. நாம் ஏதோ புரட்சி செய்கின்றோம் என்று கதைக்குத் தேவையில்லாத எதையும் திணிக்காதீர்கள். அது சிறுபிள்ளைத்தனமாகப் போய்விடும். இதை விட மிக முக்கியமானது உணர்ச்சிகளோடு அளவுக்கு அதிகமாக விளையாடாதீர்கள். அதைப் போன்ற ஆபாசம் மனித வாழ்வைத் திரைப்படத்தில் கொண்டுவரும்போது இருக்கப் போவதில்லை.

இப்போது இதையெல்லாம் ஏன் எழுதுகின்றேன் என்றால், ஒரு திரைப்படத்தின் கதை என்னவென்று தெரிந்தும் (அதனால்தான் நான் ஒரு திரைப்படம் குறித்து எதையும் கேள்விப்படாமல்/வாசிக்காமல் திரைப்படங்களைப் பார்க்க விரும்புவேன்), அந்தத் திரைப்படம் அதைத்தாண்டியும் என்னை படம் பார்த்த முழுநேரமும் உள்ளிழுத்தது வைத்திருந்தது. அது உணர்ச்சிகளோடு அதீதமாய் விளையாடமல் கதையை அதன் இயல்போடு முன்வைத்ததால், இரண்டு சந்தர்ப்பங்களில் என்னையறியாமலே விழிகளில் நீர்த் திரையிட்டது. இத்தனைக்கும் இதைவிட ஆபத்தானதும், நீண்டநாட்கள் எடுத்த சிலியில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களையும், தாய்லாந்தில் மாட்டிக்கொண்ட சிறுவர்களையும் காப்பாற்றிய திரைப்படங்களை எல்லாம் பார்த்திருக்கின்றேன்/எழுதியிருக்கின்றேன். ஏன் - ஒரு நாளுக்குள்ளேயே காப்பாற்றப்பட்ட- இந்த ஒரு உயிரியின் கதை நம்மைப் பாதிக்கின்றது என்றால் நாம் அத்திரைப்படத்தில் வரும் நண்பர்களில் ஒருவராக ஆகிவிடுகின்றோம். சாதாரண மனிதர்கள் எல்லாம் எப்படி அசாதாரண மனிதர்களாக ஒரு சம்பவத்தின் மூலம் மாறுகின்றார்கள் என்பதை நுட்பமான திரைக்கதையின் மூலம் இது காட்சிக் கோவைகளாக்கியிருக்கின்றது. அத்துடன் பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படச் செய்வதற்கு, இன்னும் எத்தனையோ இங்கே சேர்ப்பதற்கு இடங்கள் இருந்தபோதும், உணர்ச்சிகளோடு விளையாடாமல் அதன் எல்லைகள் தெரிந்து கதையின் கடிவாளத்தை நிறுத்திவைத்திருக்கவும் இத்திரைப்படக்குழுவுக்கு நன்கு தெரிந்திருக்கின்றது.

சாதாரணமாக எளிய மனிதர்களுக்கு ஒரு பயணத்தின்போது நிகழ்ந்த கதை எனத் தாண்டிச் செல்லக்கூடியதை, கலையின் அத்தனை கூருருணர்வும் ஒன்று சேரும்போது நாமே அந்தக் குகைக்குள் மாட்டிக் கொண்டவனாகவும், காப்பாற்றி விடத் துடிக்கின்ற நண்பனாகவும் ஒரே நேரத்தில் இருக்கின்றோம். இதைத்தான் கலை மானிடர்க்கு அளிக்கின்ற ஆற்றுப்படுத்தலும், அரவணைப்பும், அற்புதமும் என்பேன்.


(Manjummel Boys)

***********

(Mar 04, 2024)

வீடற்ற வெளியில் அலையும் தன்னிலைகள்!

Sunday, March 24, 2024

 

வ்வொரு மனிதர்களும் சுதந்திரமான வெளிகளில் சிறகடித்துப் பறக்க விரும்புகின்றவர்களாக இருக்கின்றார்கள். அப்படியான ஒரு 'வெளி'யில் கலையில் திளைத்துக் கிடப்பவனுக்கு 'வீடு' என்பது எவ்வாறாக அர்த்தம் பெறுகின்றது என்பதை ஒரு குறுக்குவெட்டுப் பார்வையில் சி.மோகனின் 'வீடு வெளி' புதினம் முன்வைக்கின்றது. கதை 90களில் நிகழ்கின்றது. கதைசொல்லியான கிருஷ்ணன் அவரின் 40களின் நடுப்பகுதியில் இருக்கின்றார். குடும்பம், பிள்ளைகள் என்பவற்றிலிருந்து ஏதோ ஒரு காரணத்தால் விலகி, நண்பர்களில் வீடுகளில் தங்கியிருக்கும் ஒரு 'நாடோடி' வாழ்க்கையை கிருஷ்ணன் தேர்ந்தெடுக்கின்றார்.


அவ்வாறு 'வீடற்ற வெளி'யில் அலையும் கிருஷ்ணனை ஒரு விசித்திரமான நரம்பு நோய் தாக்குகின்றது. அவரின் கால்களை முதலில் தாக்கும் நோய் கைகளை நோக்கியும் பரவுகின்றது. அவரால் இயல்பாக நடக்க முடியாதது மட்டுமின்றி உணவைக் கூட கைகளால் எடுத்துச் சாப்பிடமுடியாத நிலைமை.  நரம்பியல் நிபுணரிடம் மருத்துவ ஆலோசனை கேட்கும்போது அது  poly neuropathy  எனக் கண்டுபிடிக்கப்படுகின்றது. ஒருவர் ஒரு வாரத்துக்கு மேலாகத் தாக்குப் பிடிப்பாராயின் தப்பிவிடுவார். அதற்குள் இது உடலின் உள்ளங்கங்களைப் பாதித்துவிட்டால் வெண்டிலேட்டர் உதவிக்குப் போக வேண்டும். உள் உறுப்புக்களைப்  பாதித்துவிட்டால் மிக ஆபத்தான நிலைக்குப் போய் உயிர் தப்பிவிடாது போகவும் கூடும்.

 

கிருஷ்ணன் அவரின் தோழி அனிதாவினதும், நண்பர்களினதும் உதவியுடன் ஓர் அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார். கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேலாக வைத்தியசாலையில் இருக்கும் கிருஷ்ணன் வைத்தியசாலைக்குள் இருந்து அந்த அனுபவங்களையும், தன் குழந்தைக் காலத்தையும், குடும்பத்தையும், நண்பர்களையும், காதலையும் சொல்கின்ற ஒரு புதினம் என இதைச் சொல்லிக் கொள்ளலாம்.

 

வைத்தியசாலைக்குள் அதன் அத்தனை பதைபதைப்புடன் வைத்துச் சொன்ன நாவலாக இமையத்தின் 'செல்லாத பணத்தை'ச் சொல்லலாம். அத்தகைய பதற்றங்கள் இல்லாமல் பொலி நியூரோபதி எந்நேரத்திலும் ஆபத்தான கட்டத்துக்குச் சென்றுவிடுமென்றாலும் ஒரு நிதானமான தன்மையுடன் 'வீடு வெளி' எழுதப்பட்டிருக்கின்றது.

 

தை ஒரு Novel எனச் சொல்வதை விட Auto Fiction எனச் சொல்வதே பொருத்தமாக இருக்கும். நமக்குப் பழக்கமான, அசலான மனிதர்களான நடேஷ், சஃபி, மாரிமுத்து (யூமா வாசுகி), பிரமிள், கோபிகிருஷ்ணன் எனப் பலர் இதில் வருகின்றார்கள். கதைசொல்லியான கிருஷ்ணன், சி.மோகன் என்று அடையாளப்படுத்துவதிலும் அவ்வளவு கடினம் இருக்கப்போவதில்லை. ஆக இந்த 'நாவல்' கதைசொல்லிக்கு, இமையத்தின் 'செல்லாத பணத்தில்' நெருப்பு மூட்டிய/மூட்டப்பட்ட உயிருக்கு தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு என்ன நடந்துவிடுமென்ற பதைபதைப்பு போல நமக்கு இதில் இருப்பதில்லை. எப்படியெனினும் கதைசொல்லி இறுதியில் எவ்வளவு வேதனை/துயரத்துக்கு அப்பாலும் தப்பிவிடுவார் என்று நமக்கு முதலிலேயே தெரிந்துவிடும். அத்துடன் அசலான மனிதர்கள் (பலர் இப்போதும் உயிரோடு இருப்பவர்கள்) பற்றியும் சொல்லப்படுவதால் ஒருவித எல்லைக் கோடுகள் இந்த தன்வரலாற்று நாவலுக்கு வந்துவிடும். ஆகவே இந்த மட்டுப்படுத்த வெளிக்குள் நின்று எப்படி மோகன் நாவலை எழுதிச் செல்கின்றார் என்று பார்ப்பதே எனக்கான சுவாரசியமாக இருந்தது.

 

90களின் நடுப்பகுதியில் கிருஷ்ணன் காலை இழுத்து இழுத்துக் கஷ்டப்பட்டு உயிருக்கு தத்தளித்தபோது நானென்ன அந்தக் காலத்தில் செய்து கொண்டிருந்தேன் என யோசித்துப் பார்த்தேன். ஆக ஒவ்வொருகாலத்திலும் எண்ணற்ற கதைகளைச் சொல்ல நம் ஒவ்வொருவருக்கும் இந்த வாழ்க்கை சந்தர்ப்பங்களை -அது நல்லதோ, நல்லதில்லையோ- உருவாக்கியிருக்கின்றது. இப்போது இந்தப் புதினத்தை வாசிக்கும்போதோ அல்லது இந்த வாசிப்பை நான் எழுதும்போதோ எத்தனை ஆயிரமாயிரம் கதைகள் எழுதுவதற்காக காத்திருக்கின்றன என்ற வியப்பு ஏற்படுகின்றது.

 

தேவிபாரதி 'நீர்வழிப் படூஉம்' எழுதியிருக்காவிட்டால் காருமாமா என்கின்ற ஓர் அற்புத பாத்திரத்தை நாம் அறிந்திருக்க மாட்டோம். சி.மோகன் 'வீடு வெளிஎழுதாவிட்டால் கிருஷ்ணனுக்கு அவர் வாழ்வின்  நிகழ்ந்த கொடும் சம்பவத்தையோ அதனூடாக அவர் மீளச்சென்று பார்க்கும் வாழ்வின் அனுபவங்களையோ நாம் அறிந்திருக்க முடியாது. ஆகக் குறைந்தது கிருஷ்ணனுக்கு வாய்த்த அற்புத நண்பர்களையோ, அவருக்கு வாய்த்த அந்தக் காதலையோ நாம் தெரிந்திருக்கவே முடியாது.

 

இன்றையகாலத்தில் படைப்புக்களில் அதிகம் சிக்கலாகவும், மொழிப் புலமைகளோடும் எழுதப்படும் நாவல்கள்/சிறுகதைகள் என்னை அவ்வளவு பாதிப்பதில்லை. அப்படி எழுதுவது தவறில்லை எனச் சொல்ல வரவில்லை. இந்த அலங்காரம்/ தன்முனைப்புகளைத் தாண்டி அழகான வாழ்க்கை நம்முன்னே விரிந்து கிடக்கின்றது, அதை வீணாக்கத் தேவையில்லை என நினைப்பதுண்டு. மோகனின் இந்த புதினம் மனிதர்களை அவர்களின் அத்தனைப் பலவீனங்களையும் தாண்டி இன்னமும் நேசிக்கலாம் என்கின்ற வெளிச்சத்தை வலியுறுத்தாமல் நமக்குள் ஒரு நம்பிக்கையாக விதைக்கின்றது. கிருஷ்ணன் ஏதோ ஒரு காரணத்தால் அவரின் மனைவி பிள்ளைகளை விலத்தி வந்துவிட்டார். மனைவியோடு அவ்வளவு விலத்தல் இருக்கின்றது. ஆனால் பிள்ளைகள் மீது நேசமிருக்கின்றது. இதையெல்லாம் அதீத வெறுப்போ/அளவற்ற சென்டிமென்டல்களோ இன்றி எழுத்தில் முன்வைக்கப்படுகின்றது.

 

சமகாலத்து புனைகதைகளில் அதீத உணர்ச்சிகளை முன்வைத்தால்தான் அது ஒரு சிறந்த படைப்பு என்று விம்பங்கள் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்ற சூழலில் மோகன் குடும்பம்/பிள்ளைகளை மட்டுமின்றி நண்பர்கள்/காதல்களைக் கூட எளிமையாக முன்வைக்கின்றபோது நமக்கு 'ஆசுவாசமாக' இருக்கின்றது. அந்த நிம்மதி நம்மை இந்தப் புனைவுக்குள் மட்டுமின்றி நமது வாழ்வில் நடந்தவற்றையும் ஒரு வித புன்னகையுடன் மீளப் பார்க்க வைக்கின்றது.

 

குடும்பத்தை விட்டு விலகி கலையைத் தன் வாழ்வாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒருவனுக்கு தமிழ்ச் சமூகத்தில் என்ன இடம் இருக்கின்றது என்பதை இப்புனைவினூடாகப் பார்க்கின்றோம். அதை அந்தக் கலைஞன் எந்த முறைப்பாடுகளும் இல்லாது இது நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை என்கின்ற நெஞ்சுரத்துடன் முன்வைக்கின்றான். கலைஞராக இருக்கும் இன்னொரு பாத்திரம் குடித்தபடி நம்மைக் கைவிட்ட சமூகம் இது என்று அரற்றும்போதும் கிருஷ்ணன் நிதானமாக உரையாடுகின்றார். இன்றைக்கும் பல படைப்பாளிகள் யாரேனும் பட்டியலிடும் படைப்புக்களின் அட்டவணயில் தாம் இல்லையெனப் பொங்கும்போதும், என் எழுத்துக்களை எவரும் கவனிக்கவில்லை என்று பிதற்றும்போதும் ஏன் இவர்கள் தங்களைத் தாமே சிறுமைப்படுத்துகின்றார்கள் என நான் எண்ணுவதுண்டு.

 

இந்நாவலிலும் ஓரிடத்தில் கலைக்கும் வசதி வாய்ப்புகளுக்கும் எவ்வித சம்பந்தமில்லை என்று விவாதத்தில் பிகாஸோவும், வான்கோவும் முன்வைக்கப்படுகின்றனர். அதேபோல டால்ஸ்டாயும், தால்தவேஸ்கியும் உதாரணம் காட்டப்படுகின்றனர்.  ஏன் அண்மையில் மறைந்துபோன ப்யூகோவ்ஸ்கியும் அவ்வளவு வறுமையிலும், வீடற்றவராக இருந்தபோதும், படைப்புகளுக்கும் வறுமைக்கும் ஒரு தொடர்புமில்லையென சொல்லிச் சென்றிருக்கின்றார். கலைக்கும், படைப்பு மனதுக்கும் வறுமையும் வசதியும் ஒரு முன் நிபந்தனையாக ஒருபோதும் இருப்பதில்லை. இவ்வாறு சோழமண்டலத்தில் வாழும் கலைஞர்கள், இளைய ஓவியர்கள் என்று பலரின் படைப்புக்கள்/படைப்பை இரசிக்கும் அனுபவங்கள் மட்டுமின்றி மும்பாயில் கலைஞர்களின் இசைக்கச்சேரி கேட்ட சம்பவங்கள் எனப் பலவற்றை நம்மாலும் அதன் சிறுதுளிகளை உணரக்கூடியதாக மோகன் எழுதிச் செல்கின்றார். இந்த நிகழ்வுகள் நம் முன்னே நடந்துகொண்டிருக்கும், ஆனால் அதை நாம் அனுபவிக்காமல்/கவனிக்காமல் வாழ்வின் அவசரகதியால் ஓடிக்கொண்டிருப்போம். கொஞ்சம் நின்று நிதானித்து இதையும் அனுபவியுங்கள் என மென்மையாகச் சொல்லும் குரலை இந்நாவலில் நாம் கண்டைய முடியும்.

 

இவை ஒருபுறமென்றால், இந்த நாவல் மரணத்தையும் பல்வேறு சம்பவங்கள்/மனிதர்களினூடாக ஆழமாகச் சென்று பார்க்க வைக்கின்றது. கிருஷ்ணன் வாழ்வில் பற்றற்றவராகத் திரிந்தாலும், ஒரு கடும்நோய் அவருக்கு உயிர் வாழும் விருப்பை ஏற்படுத்துவதை நாம் உணர்கின்றோம். அதற்கு அவருக்கு 'இடைவெளி' எழுதிய சம்பத்திலிருந்து, ஜி. நாகராஜனோடு கடைசிக் கணத்தில் இருந்த தருணம் வரை பலதை அவருக்கு நினைவுபடுத்துகின்றது. ஜி.நாகராஜன் ஓரிடத்தில், 'சாவும் அதை மனிதன் எதிர்கொள்ள  தன்னைத் தயார்ப்படுத்தும்போதுதான் வரும்' என்று சொன்னதை நினைவுகூர்கின்றார். அதுபோல கிருஷ்ணன் தன் தந்தையும், ஜி.நாகராஜனும் எப்படிச் சாவை எதிர்கொண்டார்கள் என்பதையும் ஒப்பிட்டுக் கொள்கின்றார். நாகராஜன் தன் சாவை எதிர்கொள்ளத் தயாரானதுபோல இறுதியில் கிருஷ்ணனிடம் 'குளிருது, ரொம்பக் குளிருது, சிதையில் போய் படுத்துக் கொண்டால்தான் இந்த குளிர் அடங்கும்' என்று இறுதியாகச் சொல்லிவிட்டு மதுரையில் இறந்து போகின்றார்.

 

இந்த நாவல் நோய்மையும், காதலும் கொண்ட எளிய புதினம் போலத் தோற்றம் அளித்தாலும், அது விட்டுச் செல்லும் வெவ்வேறு புள்ளிகள் முக்கியமானவை. கிருஷ்ணன் இசைக்கச்சேரியைக் கேட்கும்போது இசைக் குறிப்புக்களில் இல்லை, அதன் இடைவெளிகளில் உள்ள நிசப்தத்தில்தான் சிறந்த இசை இருக்கின்றதெனச் சொல்வார். அவ்வாறுதான் இந்த நாவலும் சொல்லியதை விட அது இடைவெளியில் விட்டுச் செல்கின்ற அமைதியில்தான் இன்னும் சிறப்பாக இருக்கின்றது. உதாரணத்துக்கு நமக்கு கிருஷ்ணனுக்கும் அவரின் மனைவிக்கும் ஏதோ நடந்துவிட்டதெனத் தெரிகிறது. ஆனால் நாவலில் அதற்கான எந்த விளக்கங்களோ, விபரணைகளோ இல்லை. அந்த இடைவெளி நமக்கு நாம் விட்டுவந்த காதல்களின் நினைவுகளை அருட்டிப் பார்க்கச் செய்யலாம். கிருஷ்ணன் அதை விபரித்துவிட்டிருந்தால் நாம் நம்மை ஆழமாகச் சென்று பார்க்கும் புள்ளிகள் மறைந்துவிட்டிருக்கும். ஒரு புதிர் உடைபடாமல் இருக்கும்போதே இன்னும் பலப்பல புதிர்கள் மொட்டுக்கள் போல விரிந்து கொள்ளச் செய்கின்றன. அதுபோலவே கிருஷ்ணன் இறுதியில் கண்டுகொள்ளும் காதலும் அவ்வளவு அழகானது. ஆனால் அதீத உணர்ச்சிவசப்படல்கள் இல்லாது இயல்பாக வாய்க்கின்ற ஒன்று. அங்கேயும் ஆணினது தடுமாற்றங்கள்/பொறுப்பற்று நடத்தல்/குற்றவுணர்வு அடைதல் என்பன சொல்லப்பட்டிருக்கின்றது.

 

ஒரு நோய் நம்மை எளிதாக எங்கிருந்தும் வந்தடையக் கூடும். ஆனால் ஒரு காதலைக் கண்டடைதல் அவ்வளவு இலகுவில்லை. அவ்வாறான ஒரு சிலிர்ப்பான காதலை நாம் கண்டையும்போது வாழ்வின் அனைத்து அபத்தங்களுக்கும் அப்பால் நாம் வாழ்வதற்கான அர்த்தம் நமக்குக் கிடைக்கின்றது. அப்படி வாய்த்த காதல் பின்னாளில் உடைந்துபோனாலும் அது ஒரு நல்ல படைப்பாக மாறலாம். சிலவேளை அதுவே நம்மை ஒரு கலைஞராக  நாம் உணராத் தருணத்தில் உருவாக்கி விடவும் கூடும்.

 

********************

 

(மாசி 18, 2024)

Bob Marley - One Love

Saturday, March 23, 2024

  

பாப் மார்லியின் வாழ்க்கை குறுகியகாலம். 36 ஆவது   வயதில் ஒருவகைப் புற்றுநோய் காரணமாக இறந்தும் விடுகின்றார். அந்தக் குறுகிய காலத்தில் மார்லி சாதித்தவை அதிகம், ஆகவேதான் அவர் இறந்து இன்று 40 வருடங்களுக்கு மேலான பின்னும் பேசப்படுகின்றார்; திரையில் ஒரு நாயகனாக முன்னிறுத்தப்படுகின்றார். Reggaeஇல் மார்லி அளவுக்கு இல்லையெனினும் அடுத்தடுத்த தலைமுறையில் வந்த டூபாக்கிற்கும் Rapஇல் இது நிகழ்ந்திருக்கின்றது. டூபாக் (Tupac)  அவரது 25ம் வயதில் 90களில் சுடப்பட்டு இறந்துவிட்டாரென்றாலும் அவரும் இன்றுவரை பேசப்படுகின்றார். மார்லியின் காலம் புரட்சிக்கும், காதல் செய்வதற்கும் நம்பிக்கை கொடுத்துக்கொண்டிருந்த 60/70கள். அன்றைய கால இளைஞர்கள் எதையாவது உறுதியாய்ப் பற்றிக்கொள்வதற்கு போராட்டமும் (சே குவேரா, மார்ட்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ்), இலக்கியமும் (பீட் ஜெனரேஷன்), இசையும் (பார்லி, ஜான் லெனான்) இருந்திருக்கின்றன.

அன்றையகாலம் போலில்லாது இன்று உலகம் அறிவியலால் சுருங்கிவிட்டபோதும், ஏன் இவ்வாறான நம்பிக்கை தரும் மனிதர்களோ, தத்துவங்களோ உருவாகி வரவில்லையென்பது முக்கியமான கேள்வியாகும். மார்லி இசையில் சாதிக்க வந்தபோது ஜமேய்க்கா அரசியல்/பொருளாதார‌ சீரழிவுக்குள் சிக்கிக் கொள்கின்றது. மார்லி நேரடி அரசியல் சாராது இசையின் மூலம் மக்களிடையே சமாதானத்தைக் கொண்டு வரலாமென‌ நம்புகின்றார். அதன் நிமித்தம் சுடவும்படுகின்றார். அவரும், அவரது மனைவியும், நண்பரும் அச்சம்பவத்தில் அருந்தப்பில் தப்புகின்றனர். ஜமேய்க்காவில் இனி சுதந்திரமாக இருக்கமுடியாதென மார்லி இங்கிலாந்துக்கு புறப்படுகின்றார். அங்கிருந்து புதிய இசை ஆல்பங்களை வெளியிட்டு ஐரோப்பிய நாடுகள் எங்கும் இசை நிகழ்ச்சிகளைச் செய்கின்றார்.

இத்திரைப்படம் மார்லியின் கடைசி 5 வருடங்களைப் பின் தொடர்கின்றது எனச் சொல்லலாம். மார்லி ஜமேய்க்காவின் ஒற்றுமையை மட்டுமில்லாது, ஆபிரிக்கா நாடுகளின் கூட்டிணைவையும் கனவு கணடவர். ஒருவகையில் தன் வேர்கள் எதியோப்பாவில் இருக்கின்றதென நம்பியவர். அதுபோலவே இசைக்கும், ஆன்மிகத் தேடலுக்கும் கஞ்சா புகைத்தல் ஓர் உந்துசக்தியென தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டவர். மார்லியின் இசை, அரசியல், ஆன்மீகத் தேடல் என்பவை மிகத் தெளிவானவை. அதுமட்டுமில்லாது இந்த வாழ்க்கையில் எப்போதும் வேதனையுற்றிருப்பதுதான் இயல்பானதா என்கின்ற இருத்தலியத் தேடல்களும் அவருக்குள் இருந்திருக்கின்றன. இவ்வாறான சில புள்ளிகளை இந்தத் திரைப்படம் தொட்டுச் சென்றாலும் மார்லி என்கின்ற பெரும் ஆளுமையை அதே வீரியத்துடன் முன்வைக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். எனினும் இதுவரை மார்லியை அவ்வளவு அறியாத ஒரு புதிய தலைமுறைக்கு நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்து, மார்லியை இன்னும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தைக் கொடுக்கக் கூடும்.

மார்லியின் காலத்து அன்றைய ஜனாதிபதிகளை உலகம் மட்டுமில்லை, ஜமேய்க்கா கூட இப்போது மறந்துவிட்டிருக்கலாம். ஆனால் ஒரு கலைஞனான மார்லி இன்று ஜமேய்க்காவைத் தாண்டி 'இசையின் மூலம் சமாதானத்தைத் தேடிய' ஒரு திருவுருவாக ஆகிவிட்டார். ஜமேய்க்காவின் அடையாளமாக இன்று உலகப்பரப்பில் மார்லியும், அவரால் பாடப்பட்ட ரெக்கே பாடல்களும் நிலைநிறுத்தப்பட்டுவிட்டன. ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பதைவிட எப்படி வாழ்ந்தான் என்பதே முக்கியம் என்பதை 40 வயதுகளுக்குள்ளேயே காலமான‌ சேகுவேரா, வான்கோவிலிருந்து, மார்லி வரை பலர் நிரூபித்திருக்கின்றனர்.

*************


(Movie - 'Bob Marley: One Love')

(Feb, 2024)

விழிகளில் உறைந்து போகும் காலம்..!

Wednesday, March 20, 2024


னிக்காலம் இன்னமும்  முடிவடையவில்லை. ஆனாலும் வசந்தகாலத்துப் பறவைகள் வந்து பாடத் தொடங்கிவிட்டன. இலையுதிர்த்த மரங்களின் கிளைகளில் புதுத்துளிர்கள் மழைத்துளிகள் போல அரும்புகின்றன. சாம்பல் வானத்தைப் போர்த்தியபடி சுணங்கிக் கிடந்த‌ சூரியன் கூட பிரகாசமாக எட்டிப் பார்க்கின்றது.  இளமை கடந்தபின் காதல் ஓர் ஆம்பலாய் நீருக்குள் மிதப்பது போல, சூரியனின் வெளிச்சம் இருக்கின்றதே தவிர வெம்மையின் துளிக் கதகதப்பைத்தானும் உணர  முடியவில்லை.

 

அந்த விகாரை இந்தத் தெருவில் இருக்கின்றது என்று அறிந்தபோதும், ஒவ்வொருமுறை தேடும்போதும் அது எங்கோ தன்னை ஒளித்து வைக்கின்றதோ என எண்ணுமளவுக்கு என் கண்பார்வையிலிருந்து அது காணாமற் போவதுண்டு. இந்த விகாரை சில வருடங்களுக்கு முன் தீயுக்கு இரையாகியதும் அறிந்திருக்கின்றேன். அப்போது ஈழத்தில் இறுதி யுத்தத்தின் உச்சக்கட்டம். யாரோ, உணர்ச்சிவசப்பட்ட தமிழ் இளைஞர்கள்தான் இந்த விகாரையைக் கோபத்தில் எரித்தார்கள் என்கின்ற ஓர் கதையும் அன்றைய காலங்களில் உலா வந்திருந்தது. அனைத்து மானுடச் சிறுமைகளுக்கு அப்பாலும் நின்று புன்னகைத்துக் கொண்டிருக்கின்ற புத்தரால் முடியும். இல்லாவிட்டால் அவர் உதித்த நாட்டிலே முற்றாக 'மறக்கப்பட்ட'போதிலும், 2500 ஆண்டுகள் கடந்த‌ பின்னும் நாம் ஒவ்வொருவரும் வியந்து, நெருங்கிப் பார்க்கப் பிரியப்படுகின்ற ஒருவராக புத்தர் எப்போதோ இல்லாது போயிருப்பார்

 

உங்களுக்கான சரியான காலம் அமையும்போது, உங்களுக்குரிய ஆசிரியர்கள் தன்னியல்பிலே வந்து வழிகாட்டுவார்கள் என்பது ஸென்னில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுவது. அதுபோலவே இம்முறை சரியான நேரம் அமைந்து எனக்கு அந்த விகாரை தன்னிருப்பைக் காட்டியது. முதல் நாள் பூரணை. புத்தருக்குப் பிரியமான பெளர்ணமி நாள். நேற்றைய நிலவொளி வீசிய இரவில் காரை தெருவின் இடையில் நிறுத்தி நிலவை இரசித்திருந்தேன். இவ்வாறான ஒரு பூரணையில் புத்தர் ஞானமடைந்தார் என்றால், அன்று அவ்விரவும், நிலவும் என்ன மாதிரியாக புத்தருக்குள் உருமாற்றமடைந்திருக்கும் என யோசனை எழுந்தது. அவர் அதுவரை அலைந்து தேடிக் கொண்டிருந்த எல்லாக் கேள்விகளும் சட்டென்று உதிர்ந்து போய் நிசப்தத்தில் உறைந்து போயிருக்குமா? நம்மைப் போன்ற மனிதர்கட்கு அகப்படாத‌ எந்த வாழ்க்கை அதற்குப் பிறகு அவருக்குள் தோன்றியிருக்கும்?

 

விகாரைக்கு  வந்த எல்லோரும் வெள்ளையாடையுடன் இருந்தார்கள். பூரணை வரும்  நாட்களில் விரதமிருந்து மடாலயம் வந்து பிரார்த்தித்த பின் உணவுண்டு நோன்பு துறப்பார்கள். சடங்குகளில் அவ்வளவு நம்பிக்கை எனக்கு இருப்பதில்லை. அதேபோன்று அவரவர் நம்பிக்கைகளை பிறர் மீது திணிக்காதவரை அவற்றை மதித்தலும் மானுட மேன்மையின் ஒரு சிறுதுளி என்பேன். புத்தர் பிரமாண்டமாய் விரிந்திருந்த பிரார்த்தனை மண்டபத்தில் ஒரு பிக்கு ஏதோ பேசிக்கொண்டிருந்தார். சுற்றி இருந்தும், நின்றும் அவரின் உரையை பலர் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த 'உறைந்த நிலை'யிலும் ஒரு வயதான் பெண்மணி தன் தலையைச் சீப்பால் பின்னால் இருந்து வாரிக் கொண்டிருந்தார். நான் இந்தக் கணத்தில் அவ்வளவு பிரக்ஞையுடன் இருக்கின்றேன் என்று புத்தருக்கே சவால்விடும் ஒருவராகத்தான் அவர்  நிச்சயம் இருப்பார். எல்லோரும் பயபக்தியுடன் இருக்க, இவர் மட்டும் விளையாட்டுத்தனமாக புத்தரின் சந்நிதியில் நின்றது எனக்குப் பிடித்திருந்தது.

 

பிரார்த்தனைக் கூடத்தைத் தாண்டி வெளியே வந்து, எங்கேனும் அமைதியாக இருக்க இடம் இருக்கா என்று கேட்டபோது நூலகம் ஒன்று இருக்கின்றது, அங்கிருந்து வாசிக்கலாம், வேண்டுமெனில் தியானம்  கூடச் செய்யலாம் எனச் சொன்னார்கள். வாசிப்பா, தியானமா என்று கேட்டால் வாசிப்பை முதலில் தேர்ந்தெடுப்பவன் நானென்பதால் அங்கிருந்த நூல்களில் எனது ஆசிரியரான தாயின் நூலொன்றை எடுத்து அதில் அமிழத் தொடங்கினேன். தாய் தனது பிரபல்யமான கவிதையில் சொன்ன 'அதே வியட்னாமிய அகதிப் படகையும், அதில் கடற்கொள்ளையரால் வன்புணரப்பட்ட சிறுமி'யையும் இன்னும் விரிவாக அங்கே வாசிக்கத் தொடங்கினேன். அதில் அநியாயமாகக் கொல்லப்பட்ட சிறுமி மட்டுமில்லை, அந்த கடற்கொள்ளைக்காரனும் நாமாகவே இருக்கின்றோம் என்று அறிதலின் ஆழத்துக்கு தாய் அழைத்துச் செல்லத் தொடங்கியிருந்தார்.

 

எவரையும் எதன் பொருட்டு discriminate  செய்யாது இருப்பது குறித்து யோசிக்கத் தொடங்கியபோது  நூலகத்தின் இன்னொருபக்கத்தில் அந்நியமொழி பேச்சுக் கேட்கத் தொடங்கியது. எனக்குத்தான் அந்நியமே தவிர, அது (முன்பிருந்த) எனது நாட்டு மொழி. சட்டென்று இவர்களில் யாரேனும் இராணுவத்தில் இருந்திருப்பார்களா, என்னைப் போன்ற தமிழர்களைக் கொன்றிருப்பார்களா என் யோசனை போக, நான் அச்சூழலுக்கு அந்நியப்பட்டு அந்தரப்படத் தொடங்கினேன். எவ்வளவோ காலத்துக்கு முன் சொந்தநாட்டை விட்டு வந்தபின் ஏன் இப்படி அவர்களைப் பிரித்துப் பார்க்கின்றேன் என்பதும், அத்துடன் எனது ஆசிரியர் அந்தச் சிறுமியையும், கடற்கொள்ளைக்காரனையும் பிரித்துப் பார்க்காது ஒன்றெனப் பார்க்கச் சொல்வதை வாசித்தும் ஏன் இப்படி என் மனம் குழப்பித் தவிர்க்கின்றது என்பதும் புரியாமல் இருந்தது. எல்லாவற்றையும் அவ்வளவு எளிதாகக் கடந்து போக முடியவில்லை. அதனால்தான் புத்தர் பரிநிர்வாணமடைய முன்னர் எல்லாவித 'தீய'சக்திகளும் மனதில் ஒவ்வொன்றாக வந்து சேரச் சேர விடாது போராடினார் என்றும் சொல்கின்றார்கள்.

 

அங்கே நூல்களை இரவலாகப் பெற்று வரலாம் என்று சொல்ல,  நான் வாசித்த நூலை எடுத்து வெளியே வந்திருந்தேன். வெளியே ஒரு புத்தர் எனக்காக காத்திருந்தார். அவரோடு பனிக்காலத்து வெயிலும் கூடவே துணைக்கு நின்றது. இப்போது மூச்சு சீராகி நிதானமாக வரத் தொடங்கியிருந்த‌து.


புத்தராவதைப் பற்றிப் பிறகு யோசிக்கலாம், என் ஆசிரியரான தாய் அவரின் அகத்தில் வந்தடைந்த ஞானத்தின் ஒரு சிறுதுளியை நான் அனுபவிப்பது என்பது கூட அவ்வளவு எளிதல்ல என்பது புரிந்தது. ஆனாலும் இந்த வாழ்க்கை நம்முன்னே ஒரு நதியைப் போல அள்ள அள்ளக் குறையாது எவருக்கும் வேறுபாடு காட்டாது ஓடிக் கொண்டிருக்கின்றது.

 

அதன் சுவையை ஏதோ ஒருவகையில் நான் உணர அன்பே நீயிருகின்றாய்.  மனம் சிலிர்த்து ஆரத்தழுவி உன் விழிகளில் முத்தமிடுகின்றேன். உறைந்து போகின்றது காலம்!

 

***********


(Feb, 2024)


கார்காலக் குறிப்புகள் - 30

Sunday, March 17, 2024

 

 1.


விசிறி சாமியார் என அழைக்கப்பட்ட யோகி ராம்சுரத்குமார் என் பதின்மங்களில் நான் வாசித்த பாலகுமாரனால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். அன்று பாலகுமாரன் எழுதிய 'விசிறி சாமியார்', 'குரு', 'ஆசைக்கடல்' போன்றவற்றினூடாக விசிறி சாமியார் பற்றி நிறைய அறிந்திருக்கின்றேன். முதன்முதலாக திருவண்ணாமலைக்குப் போனபோது நான் பார்க்க விரும்பியது கோயிலையல்ல, யோகி ராம்சுரத்குமாரின் சமாதியைத்தான். ஆனால் அப்போது அது ஒருநாள் குறுகிய‌ பயணமாக இருந்ததால் நிகழாது போயிற்று. பின்னர் அண்மையில் ஐந்து நாட்கள் திருவண்ணாமலையில் தங்கி நின்றபோது யோகி ராம்சுரத்குமாரின் ஆச்சிரமத்துக்குப் போனபோது எந்தக் உணர்ச்சிக் கொந்தளிப்பும் ஏற்படவில்லை. அது நிறுவனப்பட்டதால் ரமணருக்கு நிகழ்ந்தது போல, ராம்சுரத்குமாருக்கும்  நிகழ்ந்த சோகம் என எனக்குள் நினைத்துக் கொண்டேன்.


'அமரகாவியம்' என்கின்ற‌ எஸ்.பார்த்தசாரதி (தமிழில் சரஸ்வதி சுவாமிநாதன்) எழுதிய நூல் என்னளவில் முக்கியமானது. ஏனெனில் இது யோகி ராம்சுரத்குமார் நிறுவனப்படாத, அவரின் தொடக்க காலங்களில் அருகில் இருந்து பார்த்து பார்த்தசாரதி எழுதிய அனுபவங்களின் தொகுப்பாகும். அவ்வளவு எளிமையாக, தன்னைத் தேடி வருபவர்களை நாடுகின்ற ஒரு 'நாடோடியாக' புன்னை மரத்தடியில் பகல்வேளையிலும், இரவில் மூடப்பட்ட திருவண்ணாமலைக் கடைகளின் முன்வாசலிலும் உறங்கியெழுந்த ஒரு யோகியைக் காண்கின்றோம். அவர் திருவண்ணாமலைக்கு வரமுன்னர் கிட்டத்தட்ட 18 வருடங்கள் அலைந்து தன் ஞானத்தைத் தேடியது பற்றியும் இங்கு துண்டுதுண்டாகக் கூறப்படுகின்றது. அதேவேளை இதில் பல்வேறுபட்ட முக்கிய நபர்களின் சந்திப்புக்களை மட்டும் அல்ல, சாதாரண மக்களோடு ராம்சுரத்குமார் நடந்தகொண்ட விதங்கள் பற்றியும், அவர்களின் அனுபவங்களைப் பற்றியும் எழுதியிருப்பதுதான் சிலாகித்துப் பேச வேண்டியது. 


தமிழ் அறிஞர் தொ.பொ.மீனாட்சி சுந்தரம், பெரியசாமி தூரன், கி.வா.ஜகன்னாதன் போன்றவர்கள் அவருக்கு ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்திருக்கின்றனர்.  கிட்டத்தட்ட 500 பக்கங்களுள்ள இந்தப் புத்தகம், மதம், நிறுவனப்பட்ட அமைப்புக்களிலிருந்து வெளியேறி ஆன்மீகத் தேடலுள்ளவர்க்கு மிகுந்த ஆர்வங் கொடுக்கக் கூடியது என்று 'அமரகாவியம்' பற்றி 2020களில் எழுதியுள்ளேன் .


இப்போது யோகி ராம்சுரத்குமார் பற்றிய  நல்லதொரு அறிமுகத்தை முரளி அவரது 'சோக்கரட்டீஸ்' தளத்தில் தந்திருப்பதைப் பார்த்தேன். முரளி குறிப்பிடுவதைப் போல காஞ்சி காமகோடி விசிறி சாமியாரிடம் 'உங்கள் கோத்திரம் என்ன?' என்று கேட்டதும் அதற்கு விசிறி சாமியார் நகைச்சுவையாக ஒரு பதில் அளித்ததும் 'அமரபீடம்' நூலிலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அவ்வாறு இருந்த விசிறி சாமியார் பின்னாட்களில் நிறுவனப்பட்டதால் (அது ஒருவகையில் தவிர்க்க முடியாததும் கூட, இல்லாவிட்டால் ஜே.கிருஷ்ணமூர்த்தி, நாராயணகுரு மாதிரி தமது பீடங்களைத் தாமே தயவு தாட்சண்யமில்லாது அவர்கள் வாழும் காலத்திலோ அல்லது தம் வாழ்நாளோடோ நிர்மூலமாக்கும் அதிதிடமும் வேண்டியிருக்கும்) இதே காஞ்சிபீடமே அவரது இறுதிக்கிரியைகளில் உள்நுழைந்து கொண்டது என்பதும் முரண்நகையானது.


என்றாலும் விசிறி சாமியாருடனான‌ அந்தரங்கமான உரையாடல்கள்  இன்றும் எனக்குள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றது.


2

.
Sudani from Nigeria, Argentina Fans Kaattoorkadavu ஆகிய மலையாளத் திரைப்படங்கள் கால்பந்தாட்ட வீரர்கள், இரசிகர்களைப் பின்னணியாகக் கொண்டவை என்றால், Sesham Mike-il Fathima ஒரு கால்பந்தாட்ட இரசிகை எப்படி ஒரு  நேரலை கால்பந்தாட்ட வர்ணனையாளராக மாறுகின்றார் என்பதைப் பற்றியது. மலபுரத்தில், orthodox முஸ்லிம் குடும்பத்தில் இருந்து வரும் ஒரு பெண் எவ்வாறு ஆண்களுக்கே மட்டுமே உரித்துடையதென்கின்ற நேரலை வர்ணணையாளர்கள் பட்டியலில் முதல் மலையாளப் பெண்ணாக இடம்பிடிக்கின்றார் என்பதை அவ்வளவு அழகாகக் காட்டியிருக்கின்றார்கள்.


மலையாளப் படங்களில் இருந்து எப்படி சிறுபான்மையினங்களை அதன் இயல்பு கெடாமல் சித்தரிக்க வேண்டும் என்பதை நமது தமிழ் நெறியாளர்கள் கற்கவேண்டும். இத்தனைக்கும் இந்த இயக்குநருக்கு இது முதல் படம் என்று சொல்கின்றார்கள். அவர் இஸ்லாமியரும் அல்ல. ஒரு எளிய கிராமத்துப் பெண் தனது கனவை அடைவதற்கு எடுக்கும் முயற்சிகளில் நம்மையும் ஒரு சாட்சியாக இத்திரைப்படத்தினூடு அழைத்துச் செல்கின்றனர். இந்தப் பெண் தான் நினைத்ததை சாதிக்காமல் விட்டிருந்தால் கூட, அவர் செய்த அனைத்து முயற்சிகளுக்குமாக நாம் அவரை அள்ளி அரவணைத்திருப்போம். அதுதான் இத்திரைப்படத்தின் வெற்றி. 


இதில் நடித்த அனைத்துப் பாத்திரங்களும் அவ்வளவு தத்ரூபமாக நடித்திருக்கின்றனர். அதிலும் கல்யாணியின் அந்தத் துடிப்பும், கொண்டாட்டமும் கால்பந்தாட்ட இரசிகராக இல்லாதவர்களைக் கூட  அவ்வளவு வசீகரிக்கும். இரசிகர்களையோ/வாசகர்களையோ தன்னோடு கூட அழைத்துச் செல்லாத எந்தப் படைப்பும் அவ்வளவு பரவலாகச் சென்று சேர்வதில்லை. அந்த magic மட்டும் நிகழ்ந்துவிட்டால் எந்தப் படைப்பும் தன் உயரத்தை அடைந்து ஒளிரும் நட்சத்திரமாகிவிடும். அந்த 'அதிசயம்' இங்கே நிகழ்ந்திருக்கின்றது.



3.


எனக்குப் பிடித்த எழுத்தாளராயினும் விருதுகள் அவர்களுக்குக் கிடைக்கும்போது அவ்வளவாக நான் இங்கே பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் இப்போது ரமேஷ் பிரேதனுக்கு இவ்வாண்டுக்கான பிரபஞ்சன் விருது கிடைத்திருக்கின்றதென்று அறியும்போது அந்த மகிழ்வை இங்கே பகிர்ந்து கொள்ளவேண்டுமெனத் தோன்றியது.ரமேஷ் (‍ - பிரேமும்) என் வாசிப்பில்/எழுத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள். அவர்களை வாசிக்க முடிந்ததால்தான், ஒருகாலத்தில் தொலைவில் வைத்திருந்த நகுலன் உள்ளிட்ட பலரின் படைப்புக்களுக்குள் பின்னர் எளிதாக நுழைய முடிந்தது. இன்றைக்கு ரமேஷ்-பிரேம் என்ற இரட்டையர்களில் இருந்து பிரிந்து ரமேஷ் தனியே எழுதிக் கொண்டிருப்பவை இன்னும் என் மனதுக்கு நெருக்கமானவை.

 

விருதுகளில் மீது தனிப்பட்டு எனக்கு அவ்வளவு உவப்பில்லாதபோதும், என் முன்னோடிகளை விருதுகளைத் தவிர அவர்களை மதிப்பளிப்பதற்கு வேறெந்த வழியும் இப்போதைக்கு தமிழ்ச்சூழலில் இல்லையென்கின்ற யதார்த்தத்தையும் விளங்கிக் கொள்ள முடிகின்றது. ஆகவேதான் அவ்வப்போது இங்கிருக்கும் 'இயல் விருது', 'விளக்கு விருது' படைப்பாளிகளுக்கு அளிக்கும்போது ரமேஷ் பிரேதன் போன்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று எழுதியிருக்கின்றேன்/விரும்பியிருக்கின்றேன். 

 

இப்போது ரமேஷ் பிரேதனுக்கு 'பிரபஞ்சன் விருது' வழங்கப்படுவது மிகுந்த மகிழ்வைத் தருகின்றது. அதுவும் ரமேஷ் போன்றவர்கள் தங்கள் கவிதைக்குள்ளும், புனைவுகளுக்குள்ளும் கொண்டு வந்த,  அவர்கள் மதிக்கும் அதே பிரபஞ்சனின் பெயரால் இந்த விருது வழங்கப்படுவது ரமேஷின் எழுத்துக்களை இன்னும் ஒருபடி மேலே சென்று மதிப்பளிப்பதைப் போன்றது.


ரமேஷ் பிரேதனுக்கு வாழ்த்துகள்.


***********


(மார்கழி, 2023/ தை, 2024)

(புகைப்படங்கள்: நன்றி முகநூல் )

 

'நீர்வழிப் படூஉம்'மும், இன்ன பிறவும்..

Saturday, March 16, 2024

 

காலங்காலமாக மனிதர்கள் வீட்டை விட்டு குடும்பத்தை விட்டு, ஓடிப் போகின்றவர்களாக‌ இருந்திருக்கின்றார்கள். ஆதியிலே புத்தரும் இப்படி தன் மாளிகையை விட்டு எவருக்குந் தெரியாமல் சென்றிருக்கின்றார். வீட்டை விட்டு என்றென்றைக்குமாக நீங்குவதற்கு ஒவ்வொருவருக்கும் பல்வேறு அக/புறக் காரணங்கள் இருந்திருக்கின்றன. நமது ஈழப்போராடத்தில் இப்படி பலர் போராட்ட இயக்கங்களில் இணைவதற்காய், குடும்பத்திடம் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போயிருக்கின்றனர்.  அவ்வாறானவர்களில் பலர் மீண்டும் வீடடையாமல் இடைநடுவில் அகால மரணமும் அடைந்திருக்கின்றனர்.

 

அதுபோலவே தம் மன விடுதலைக்கென, தமக்குப் பிடிக்காத குடும்ப வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லவென‌ பலர் வீட்டை விட்டு நீங்கியிருக்கின்றார்கள். சமகாலத்தில் இப்படி வீட்டை விட்டு ஓடிப்போகின்றவர்களைப் பற்றி நிறையப் புனைவுகளை எழுதிய ஒருவராக இமையத்தைச் சொல்லலாம். எம். கோபாலகிருஷ்ணனின் 'தீர்த்த யாத்திரை',  ஒருவன் தன் தேடலுக்காய் வீட்டை விட்டு விலகிச் செல்கின்றவனாக இருந்தபோதும், கோபாலகிருஷ்ணனின் முதன்மையான படைப்புக்களில் ஒன்றாக அதை வைக்கமுடியாது. அதேவேளை பல வருடங்களுக்கு முன் காசிக்கு ஓடிப்போன ஒரு பெண்ணைத் தேடி, அவள் இறந்துபோனபின் பின்னோக்கிப் பார்க்கின்ற‌ பா.வெங்கடேசனின் 'வாராணசி'யில் இந்த ஓடிப்போதல் கச்சிதமாகக் கையாளப்பட்டிருக்கின்றது.

 

இவ்வாறான 'ஓடிப்போதல்' தேவிபாரதியின் 'நீர்வழிப் படூஉம்' நாவலிலும் நிகழ்கின்றது. ஆனால் அது முக்கிய பேசுபொருளாக இல்லை. அதேவேளை அந்த ஓடிப்போதல் நிகழும்போது, ஓடிப்போனவரைப் பின் தொடராது, அவ்வாறு ஓடிப்போனவரால் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு என்ன நிகழ்கின்றது என்பதை நுட்பமாக அலசுகின்றது. நாவிதத் தொழில் செய்யும் காருமாமாதான் இங்கே முதன்மைப் பாத்திரம். காருமாமாவின் மரணத்தோடு தொடங்கும் நாவல் அவரின் மரணம் முடிந்து எட்டாம் நாள் 'தாலியறுப்புச் சடங்கோடு முடிவடைந்து விடுகின்றது. அந்த எட்டோ/பத்து நாட்களில் காருமாமாவின் வாழ்க்கை பற்றி மட்டுமில்லை, அவரோடு சம்பந்தப்பட்ட பலரது கதைககளும் இப்புதினத்தில் சொல்லப்படுகின்றன.

 

மனிதர்களுக்கு கலை இலக்கியம் எதற்கு அவசியமென‌  யோசிக்கும்போது, முதன்மையாக அது ஒருவர் வாழவோ கற்பனை செய்யவோ முடியாத‌ பிறிதான வாழ்க்கை முறைகளை அறிமுகப்படுத்துவ‌தென்று  நான் எண்ணிக் கொள்வதுண்டு. மேலும் அதிகாரப் பெரும்பரப்பில்  விலத்தப்பட்ட உதிரிகளாக/ கவனிக்கப்படாத உயிரிகளான மனிதர்களை, அவர்களுக்கும் வாழ்விருக்கின்றது, அவர்களுக்கென்று கொண்டாட்டங்களும்‍ சரிவுகளும் இருக்கின்றதென்று நம் முன்னே கலை நிகழ்த்திக் காட்டுக்கின்றது. அண்மையில் அலிஸ் வாக்கரின் Colour Purpleஐ தியேட்டரில் பார்த்தபோது, அலிஸ் அன்று அதை எழுதிப் பதிவாக்காவிட்டால் பல்வேறுவகையில் ஒடுக்கப்பட்ட மனிதர்களாயிருந்த‌ கறுப்பினத்தவர்களின் திமிர்தெழுதல்களும், கொண்டாட்டங்களும் நமக்கு ஒருபோதும் தெரிந்திராதென்றே ஒவ்வொரு காட்சிகளிலும் எண்ணிக் கொண்டிருந்தேன். அவ்வாறே தேவிபாரதியின் 'நீர்வழிப் படூஉம்'மில் விளிம்புநிலையாக்கப்பட்ட நாவிதக் குடும்பங்களில் ஊடாடிக்கொண்டிருந்த அற்புதமான வாழ்வு விரித்து வைக்கப்பட்டிருக்கின்றது.

 

 

நான் வாசிக்க வந்த 2000களின் தொடக்கத்தில், அப்போது வாசிக்க முடிந்த பெருமாள் முருகனின் 'கூளமாதாரி'யும், சோ.தர்மனின் 'கூகை'யும், கண்மணி குணசேகரனின் 'கோரை'யும் ஏன் இன்னும் மறக்க முடியாத நாவல்களாய் எனக்குள் தங்கியிருக்கின்றதென யோசிக்கும்போது, அவை எனக்கு அறிமுகமற்ற கதைப்பரப்புக்களை மட்டுமில்லை, அந்த கதையில் உலாவும் மனிதர்களை அவ்வளவு பரந்த தளத்தில் மனதில் தங்கும்படியாக விபரிக்கச் செய்ததும் முக்கிய காரணமென நினைக்கின்றேன். இன்றைக்கு எழுதப்படும் பெரும்பாலான‌ நாவல்களில் இந்தப் புள்ளிகள் தவறவிடப்படுவதால் அவை மட்டுப்படுத்தப்பட்ட வாசிப்பு மன எல்லைக்குள் மட்டும் நின்றுவிடுகின்றன.

 

'நீர்வழிப் படூஉம்' நான் முன்னே குறிப்பிட்ட நாவல்களின் வழி வந்துசேரக் கூடியதொன்றாகும். 'கூளமாதாரி'யில் வரும் சிறுவன் பாத்திரம் போல ஒருவனான கதைசொல்லியாலே இந்நாவலின் கதை பெரும்பாலும் சொல்லப்படுகின்றது. காருமாமாவின் மரணத்தின்போது அவன் திருமணத்துக்கு தயாராகிவிட்ட இருபதுகளில் இருக்கக்கூடிய ஓர் இளைஞன். ஆனால் நனவிடைதோய்தல் முழுதும் அவன் சிறுவனாக இருப்பதிலேயே சொல்லப்படுகின்றது. இந்த நாவலின் கதை, எங்கு வாழ்ந்தாலும் உறவுகளுக்கு இடையிலும்/கூட்டுக் குடும்பங்களில் நடுவிலும் நிகழக்கூடியதுதான். ஆனால் காருமாமா, பெரியம்மா, அம்மா, ராசம்மா அத்தை என்பவர்களைப் பற்றிச் சொல்ல தேவிபாரதியால் மட்டுமே முடியும். ஏனென்றால் அது அவருக்கு மட்டுமே நன்கு பரிட்சயமான வாழ்க்கை. அதை நம்மால் வாழ மட்டுமில்லை, கற்பனை செய்யவும் முடியாது. அவ்வாறு நாம் வாழவும் கற்பனை செய்யவும் முடியாத வாழ்வையும், மனிதர்களையும் நமக்கு நினைவூட்டத்தான் எழுத்துத் தேவையாகின்றது.

 

எந்த மிகச் சிறந்த நாவல்களாயினும் அதில் விடுபடுதல்கள் இருக்கும். அவ்வாறான குறைகள்தான் ஒரு நாவலை முழுமைபடுத்துகின்றதென நம்புகின்றவன் நான்.. இங்கே நாவிதர்கள், அவர்கள் சென்று தொழில் செய்யும் ஆதிக்கச் சாதியினர் குறைகளற்றே விபரிக்கப்பட்டிருக்கின்றனர். சிலவேளைகளில் தேவிபாரதி ஆதிக்கசாதிகள் அது எங்கு இருப்பினும் எவ்வாறு ஒடுக்கும் என்பது நமக்குத் 'தெரிந்த கதை'தானேயென அதை விலத்திச் சென்றிருக்கலாம்.  Colour Purple கறுப்பின மக்களின் வாழ்வைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஓரிடத்தில் சட்டென்று விலத்தி கறுப்புப் பெண் தனது காருக்குப் பெற்றோல் அடிக்கும் இடத்தைக் காட்டும். அங்கே அந்தப் பெண்ணைச் சந்திக்கும் வெள்ளையினப் பெண் இந்தக் கறுப்புப் பெண்ணை தங்கள் வீட்டுக்கு வேலைக்கு வாவென்று அதே அடிமை மனோபாவத்துடன் அழைப்பார். இந்தக் கறுப்புப் பெண்ணோ ஏன் அங்கே வேலைக்கு வரவேண்டுமென வாய்காட்டுவாள். அது மட்டுமே அவள் செய்த ஒரே குற்றம். வசதி வாய்ப்புக்களில் எவ்வளவு முன்னேறினாலும் வெள்ளையினத்தவர்களுக்கு அன்று கறுப்பர்கள் அடிமைகள்தான்.

 

அந்த சிறு எதிர்ப்புக்காய் அந்தக் கறுப்புப் பெண், கணவர் பிள்ளைகள் முன்னால் பொலிஸால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாள். அவள் மாதக்கணக்கில், திருப்பி ‘வாய்காட்டி’யதற்காய் தண்டனைக்குள்ளாக்கப்படுவது மட்டுமில்லை, அந்தத் தண்டணை முடிந்தபின்னும் அதே வெள்ளையினப் பெண்மணியின் வீட்டில் வேலைக்குச் செய்வதற்காக அழைத்துச் செல்லப்படுவாள். இவையனைத்தையும் அவளின் கணவர்/பிள்ளைகளால் எதுவுமே செய்யமுடியாது, வேதனையுடன் பார்த்துக் கொள்ளவே முடிகின்றது. அவ்வளவுதான் இத்திரைப்படத்தில் வரும் வெள்ளையினத்தவர் சம்பந்தப்படும் காட்சி. ஆனால் படம் முழுவதும் அந்தப் பெண் செய்த குற்றந்தான் என்ன என்று நம் மனதை ஆழமாகப் பாதிக்கும் விடயமாக அது இருக்கும். இப்படியான திக்கசாதி மனோபாவத்தின் சுவடெதுவும் இன்றி தேவிபாரதி ஒடுக்கப்பட்ட சமூகமொன்றி வாழ்வைப் பற்றி எழுதியதற்கு படைப்பாளியாக‌ அவருக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கவும் கூடும். ஆனால் இற்றைக்கும் சாதிய சமூகமாகவே தமிழ்மனம் தன் ஒவ்வொரு செயற்பாட்டிலும் நிரூபிக்கத் துடித்துக் கொண்டிருக்கும்போது 'இந்த விடுபடல்' ஒரு நெருடலாகவே வாசிக்கும் மனதுக்கு இருக்கும்.

 

ஆனால் இதன் நிமித்தம் 'நீர்வழிப் படூஉம்' தன் சிறப்பை இழக்கப்போவதில்லை. அது தன்னளவிலே ஒரு முழுமையான நாவல்தான். ஒரு படைப்பை வாசிக்கும்போது  வாசிப்புமனம் அதற்கு நிகரான ஏற்கனவே எழுதப்பட்ட படைப்புக்களை ஒப்பிட்டுப் பார்க்கும். இந்த நாவலில் முக்கிய கருப்பொருளில் ஒன்று அண்ணா - தங்கச்சி பாசம்: அது காருமாமாவுக்கும்  இந்தக் கதைசொல்லியின் அம்மாவுக்குமான உறவு. அதை தேவிபாரதி பொதுமனங்களுக்கு நன்கு பரிட்சயமான 'பாசமலர்' சிவாஜி- சாவித்திரி பாத்திரங்களை முன்வைத்து தன் நாவலில் காருமாமா X கதைசொல்லியின் அம்மா உறவை ஆழமாக எடுத்துச் செல்கின்றார். அது ஒரு படைப்பாளிக்குரிய சவால். வாசகரின் முன் அவர்களுக்கு நனகு ஏற்கனவே தெரிந்ததை வைத்து அதைத் தாண்டி என் எழுத்தால் செல்ல முடியும் என்பதால் வருகின்ற கம்பீரம். தேவிபாரதி அந்தச் சவாலை அதியற்புதமாகக் கையாண்டிருக்கின்றார். இதே போன்ற சவாலை, திருமணத்தின் பின் வருகின்ற உறவைச் சொல்லும் படைப்பான 'கமலி'யில் சி.மோகன் நமக்கு நன்கு அறிமுகமான ஜானகிராமனின் படைப்புக்களை அந்த நாவலுக்குள் வைத்தே அழகாக‌ மீறிச்சென்றிருப்பார். 

 

காரு மாமாவும், அவரை விட்டு தன் பிள்ளைகளோடு ஓடிப்போகின்ற ராசம்மா அத்தையும், காருமாமாவின் சகோதரிகளும் இந்தப் புதினத்துக்குள் வராது விட்டிருந்தால், வரலாற்றில் சும்மா வாழ்ந்துவிட்டுப் போயிருக்கக்கூடிய சாதாரண மனிதர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் தேவிபாரதி அவர்களை காலத்தில் மறைந்து போகாதவர்களாக மட்டுமின்றி, நம்மைப் போன்று முற்றிலும் அந்நியமான ஒரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடையும் முக்கியமான மனிதர்களாக அவர்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றார். இவ்வாழ்வில் சாதாரணமானவர்கள் என்று சொல்லி பொதுப்பரப்பில் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களுக்கு, அது கலை அளிக்கின்ற மாபெரும் மரியாதை எனச் சொல்லலாம்.

 

****************

 

( நன்றி: 'அம்ருதா' - பங்குனி/2024)