ஜூலை 23 - வியாழக்கிழமை
தம்மம் என்பது ஒருவகையில் நடைமுறை வாழ்க்கையில் எதை மிகச் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதைப் பரிட்சித்துப் பார்ப்பதுதானே.
ஆகவே தீ விபத்துக்காக முழு விபஸன்னா நிலையத்தையும் மூடி வைக்காமல், உணவு பரிமாறும் இடத்தின் அரைவாசியைத் தற்காலிக தியான மண்டபமாக மாற்றி அமைத்திருந்தனர்.

நாளாந்த விபாஸனாப் பயிற்சியில் மூன்று வெவ்வேறு தியான அமர்வுகளில் உங்களோடு ஆசிரியர் கட்டாயம் வந்தமவர்வார். மற்ற நேரங்களில் ஆசிரியரின் ஆணைப்படி தியான மண்டபத்திலோ அல்லது உங்கள் அறையிலோ தியானத்தைத் தொடரமுடியும்.
காலை எட்டு மணி, பின்னேரம் இரண்டரை மணி, மாலை ஆறு மணி என இந்த மூன்று நேரத்திலும் கட்டாயம் ஒரு மணித்தியாலம் ஆசிரியரோடு தியானத்தில் உட்கார வேண்டும். இந்த நேரத்தில் கிளாஸுக்கு கட்டடித்து அறைக்குள் முடங்கினால், உங்கள் கதவைத் தட்டி எழுப்பிக் கூட்டிப் போவார்கள்.
நான் ஒரேயொரு முறை மட்டும் எட்டு மணி தியான வகுப்பை மறந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது, கதவை வந்து தட்டி, உடல் நலத்துக்கு ஏதும் கேடா என்று கேட்டு அழைத்துச் சென்றிருந்தனர்.
*
விபாஸனாவில் காலை நான்கரையிலிருந்து ஆறரை வரை நீங்கள் தனியே தியானத்தில் அமரலாம். மற்ற விபாஸனா மையங்களில் நடைமுறையில் இது இருக்கின்றதா எனத் தெரியாது, ஆனால் நாங்கள் தியானத்தில் கண்ணை மூடியிருக்கையிலே எங்கள் ஆசிரியர் தினம் அமைதியாக ஐந்தரை மணிக்கு வந்து அமர்ந்து கொள்வார். ஆனால் எந்த உரையாடலும் இருக்காது.
எட்டு மணி, இரண்டரை மணி, ஆறு மணி வகுப்புக்கள், விபாஸனாவின் ஆசிரியர் கோயிங்காவின் வழிப்படுத்தல்கள்/
உரைகள்/பாளி பாடல்களுடன் தொடங்கும் (ஆசிரியர் கோயிங்கா பற்றி தனியே ஒரு பகுதியை எழுதப்போவதால் அவரைப் பற்றிய விபரங்களை இங்கே தவிர்த்துக் கொள்கின்றேன்). இன்று உலகெங்கும் 270 இற்கும் மேலான விபாஸனா நிலையங்கள் இயங்குகின்றன. இவை அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே அட்டவணைப்படி, ஆசிரியர் கோயிங்காவின் நேரடி உரைகள் மூலம் நிகழ்த்தப்படுகின்றன.
எனக்கு இந்த விபாஸனா வகுப்புக்களில் முதல் ஆச்சரியம் என்னவென்றால், ஒரு ஆசிரியர் நேரே இருக்காது அவரது குரல் மட்டும் இவ்வளவு எமக்குள் ஊடுருவித் துளைக்குமா என்பதுதான். எங்களுக்கு ஒரு பெளதீகமான ஆசிரியர் இருந்தாலும் (ஆண்களின் பகுதியில் ஆண் ஒருவர், பெண்களின் பகுதியில் பெண் ஒருவர்) அவர்கள் தியானப் பயிற்சிகள் எதையும் தம்மளவில் நடத்துவதில்லை.
அவர்களை உதவி ஆசிரியர்கள் (Teaching Assistants) என அழைத்துக்கொள்கின்றனர். முதன்மை ஆசிரியர் எப்போதும் இந்த விபாஸனாவில் கோயிங்காதான்.
இந்த உதவி ஆசிரியர்கள் நம்மை மிகக் குறைந்த சொற்களால், இப்போது இடைveeளை, இதோ வகுப்பு ஆரம்பிக்கின்றது போன்ற சில ஆணைகளை இடுவதாக மட்டுமே இருக்கின்றனர். ஒரு நாளின் குறிப்பட்ட நேரத்தில் மட்டும் தனிப்பட்டு அவர்களிடம் சென்று கேள்வி கேட்க நாம் அனுமதிக்கப்படுகின்றோம்.
அங்கேயும் இங்கே செய்யும் தியானம் சம்பந்தபப்பட்டோ, அது குறித்து நம் மனம்/உடல் உணரும் நிலைமைகள் குறித்த சந்தேகங்களுக்கே அவர்கள் பதிலளிப்பார்கள். அதற்கப்பாலான எந்த தேவையற்ற தத்துவ, அரட்டை, அலட்டல் சம்பாசனைகளுக்கு அறவே ஆசிரியர்களிடம் இடமில்லை. அதாவது வந்தமா, வந்த வேலையைப் பார்த்தமா, திரும்பிப் போனோமா என்று இருக்க வேண்டியதுதான்.
*
இந்த 'கட்டாய' ஒரு மணி நேர வகுப்புக்களில் முதுகை நிமிர்த்தி, கால்களை மடக்கி தொடர்ச்சியாக அமர்வது எனக்கு தொடக்க நாட்களில் கஷ்டமாக இருந்தது. யோகாவைச் சில வருடங்களில் பழகியதால், என்னால் அரைத்தாமரை (Half Lotus Pose) வடிவத்தில் கால்களை மடக்கி முன்னர் நீண்டகாலத்துக்கு அமர்ந்திருக்க முடியும். ஆனால் எந்த விடயமாயினும் தொடர்ச்சியான பயிற்சியில்லையெனில் எல்லாமே துருப்பிடித்து பாழாகிவிடும் என்பதுபோல, யோகாவைத் தொடர்ச்சியாக பயிற்சி எடுக்காததால், கொஞ்ச நேரம் அரைத்தாமரை வடிவில் அமர்ந்திருக்கும்போது கால்களில் நோ கண்டது. முள்ளந்த்தண்டு 90 பாகையில் நிமிர்ந்து நிற்காமல் வலதுபக்கம் வலித்தது.
ஆனால் தியான வகுப்புக்களை ஒருவர் இப்படி அமர்ந்துதான் செய்ய வேண்டும் என்கின்ற கட்டாயமும் இல்லை. உங்களுக்கு விருப்பமான நிலைகளில் தியானத்தைச் செய்யலாம். கதிரையில் (நாற்காலி) அமர்ந்து செய்ய விரும்புவோரும் அப்படி அமர்ந்து செய்யலாம். முதுகிற்கு சப்போர்ட் தேவையானவர்கள் அப்படியான அமைப்புகளைப் பொருத்தி எல்லாம் அமர்ந்து கொள்ள இங்கே வசதிகள் இருந்தன. ஆக ஒருவர் கால்களை மடக்கி 'சப்பாணிகட்டி' இருந்தால்தான் இதில் பங்கேற்ற முடியும் என்கின்ற அச்சம் எல்லாம் கொள்ளத் தேவையில்லை.
ஆனால் அதற்காய் சோம்பேறியாக எனக்கு கொஞ்சம் முதுகு வலிக்கிறது, கதிரையைத் தருகின்றீர்களா என்றெல்லாம் கேட்டால், நல்லாய்த்தான் தரையில் அமர்ந்திருக்கின்றாய், அப்படியே போய் உட்கார்ந்து தியானத்தை தொடர் என்றும் சொல்வார்கள். (அப்படி தனக்கு நிகழ்ந்ததாக ஒருவர் பத்தாம் நாளில் எங்களுக்கு பேச அனுமதி தந்தபோது சொன்னார்).
விபாஸனாப் பயிற்சி எனச் சொன்னாலும் அது முதல் நாளில் தொடங்குவதில்லை. உண்மையான விபாஸனா 4ம் 5ம் நாளின்பின் தான் ஆரம்பிக்கின்றது.
முதல் சில நாட்கள் உங்கள் இயல்பான மூச்சில் கவனத்தைக் குவிக்கும் பயிற்சி தரப்படுகின்றது. பின்னர் முகத்தின் மூக்கோடு சம்பந்தப்பட்ட ஒரு முக்கோணப் பகுதியில் உங்கள் கவனத்தைக் குவித்து மனதைக் கூராக்கும் பயிற்சி தரப்படுகின்றது. இவை 'ஆனாபானா' தியானம் என்று அழைக்கப்படுகின்றது.
இப்படி மூச்சை மெதுவாக ஆரம்பிக்கும்போது உலகிலிருக்கும் ஆயிரத்தெட்டு கனவுகள், கற்பனைகள், வெறுப்புகள், வெறுமைகள் எல்லாம் பெருக்கி உங்களை எவ்வாறாயினும் தியானத்திலிருந்து வெளித்தள்ள பெரும் முயற்சிகள் நடக்கும்.
மூச்சைத் திரும்ப திரும்ப ஒரு இடத்தில் குவிப்பதற்கு பெரும் பாடு படவேண்டிருக்கும். அப்படிக் கொஞ்சம் செய்தாலும், இரவெல்லாம் வராத நித்திரா தேவி, மகனே உனக்கு இப்போது இரண்டாவது சந்தர்ப்பம் தருகின்றேன், வந்து என் மடியில் தூங்கிக் கொள் என்று அழைத்துக் கொள்ளத் தொடங்குவார்.
ஒரு மனிதன் வெளியில் இருக்கும்போதுதான் இந்த இலக்கியவாதிகள், காதலிக்கும், காதலித்த பெண்கள் எல்லாம் அவனுக்கு கவனக்கலைப்பான்கள் என்றால், இப்படி எல்லாவற்றையும் துறந்துவிட்டு உள்ளே வந்தால் இங்கேயும் பலர் என்னை விடாது துரத்துகின்றனரே என்று நொந்தபடி திருப்ப திருப்ப மனதை மூக்கினடியில் குவிக்க நான் முயற்சித்தபடி இருப்பேன்.
***
(இன்னும் வரும்)









