பொதுச்சூழலில் புத்தரையோ, அவரைப் போன்ற பரிநிர்வாணமடைந்த
போதிசத்துவாக்களைப் பற்றியோ பேசும்போது அவர்களால் தம் ஆயுளை நீட்சிக்க
முடித்ததா, அவர்களுக்கு வந்த நோயை மாற்ற முடிந்ததா என்று வழமையான 'கடவுள்'
நிலையில் வைத்து கேள்வி கேட்கப்படுவது வழமையான நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றது. அதாவது ஏதோ இவர்களுக்கு மேலதிக அருள் கிடைத்து நமக்கும்
அருள்பாலிப்பார்கள் என்கின்ற கடவுளாக்க நிலை அது.
புத்தர்
மனிதர்கள் தமது துன்பங்களில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது என்று
தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தவர். ஆனால் அவர் ஆகக்குறைந்தது இந்த
வாழ்வில் துயரங்களைக் களைந்து/குறைத்து நிம்மதியாக வாழ்கின்ற பாதையைப்
பற்றிச் சிந்தித்தவர், அதற்கான வழியில் பயணித்து தனக்கான விடுதலையை
அடைந்தவர் எனச் சொல்லலாம்.
புத்தர் மனிதவுடல்களோடு வாழும் நமக்கு இந்தத் துன்பங்களைக் களைந்து வாழும் முறையாக விபாஸனாவைக் கற்றுத் தருகிறார். அதாவது எந்த உயிரியையும் விட மனிதவுடல் என்பது மேன்மை வாய்ந்தது; அவ்வளவு மேன்மை வாய்ந்த மனிதவுடலைக் கொண்டு நாம் நமது தன்னிலைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்கின்றார். அவ்வாறு சரி வரப் புரிந்துகொள்ளும்போது நாம் இந்த உலகியல் துன்பங்களிலிருந்து விடுதலையாகி நிம்மதியாகவும், மகிழ்வாகவும் வாழ முடியும் என்கின்ற தம்மபாதையைக் காட்டுகிறார்.
மேலும் முக்கியமானவொன்று புத்தரால் நமக்கு ஒரு பாதையைத்தான் காட்ட முடியும். அதில் காலடி வைப்பதும், தொடர்ந்து நடப்பதும் நம் ஒவ்வொருவரையும் பொறுத்தது. புத்தர் ஒருபோதும் உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு நிர்வாணமடைதலின் எல்லை வரை கூட்டிக் கொண்டு போகப் போவதில்லை. அவரவர் அவரவர்க்கான பாதையில் பயணித்து தமக்கான விடுதலையைக் கண்டடைய வேண்டியதுதான்.
ஆகவேதான் 'விபாஸனா' தியானத்தின்போது உங்களுக்கு அந்தக் கணத்தில் எதை அனுபவிக்கின்றீர்களோ அதுவே உங்களுடைய உண்மை/தம்மமாக இருக்கின்றது எனச் சொல்கிறார்கள். பத்துப் பேர் ஒரே நேரத்தில் ஒரு ஆசிரியரின் வழிகாட்டலில் விபாஸனா செய்துகொண்டிருந்தாலும் ஒவ்வொருவரும் உணர்வது தனித்தன்மையானது. ஒருவரது அனுபவம் இன்னொருவரின் அனுபவத்தோடு ஒப்பிட நோக்கியதல்ல என்றும் குறிப்பிடுகின்றனர்.
ஆக, ஒருவகையில் நாம் இந்த உடலும் மனமும் ஒன்றுமேயில்லாத வெற்றிடத்தை அறியத்தான் இவ்வளவு கஷ்டப்படவேண்டுமா என்ற கேள்வியும் நமக்குள் எழக்கூடும். ஆம், அந்த வெற்றிடத்தை நோக்கி நாம் நகரும்போது நமக்குள் புதுப்புது உலகங்கள் விரியலாம்.
அதைப் பார்க்க வேண்டும் என்றால் நாம் தரையில் நின்று நீச்சலடித்தால் எவ்வித பலனுமில்லை. கடலுக்குள் தயக்கமின்றி இறங்கத்தான் வேண்டும். சிலவேளைகளில் பரிநிர்வாணமடைதல் என்ற மறுகரையை அடையலாம்.
இல்லாதுவிட்டால் இன்னுமின்னும் பல பிறப்புக்களின் பின் , நமது மாணிக்கவாசகர் கூறியது போல 'புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்/பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்/கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்/வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்/ செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்/எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்,/ எம்பெருமான்' ஒரு தெளிவை நாம் எப்போதாவது ஒரு 'பிறப்பில்' பெறமுடியலாம். அதற்கான ஒரு விதையை விபாஸனாவைக் கற்பதன் மூலம் நீங்கள் விதைக்கின்றீர்கள் என எடுத்துக் கொள்ளலாம்.
ஏற்கனவே குறிப்பிட்ட மாதிரி இந்த பத்து நாள் விபாஸனா வகுப்புக்களில் ஆசிரியர் வெவ்வேறு நேரங்களில் மூன்று மணித்தியாலங்கள் ஆசிரியரோடு இருந்து செய்ய வேண்டும். எனக்கு சிலநேரங்களில் கால் உளைந்து, முதுகு வலித்து இந்த ஒரு மணித்தியாலம் எப்போது முடியும் போல இருக்கும். மற்ற நேரங்களில் ஒரு மணித்தியாலம் இவ்வளவு விரைவாக முடிந்ததா என்ற மாதிரி முடிந்திருக்கும். ஆக நான் சரியாகத் தியானத்தில் ஆழ முடிகின்றதா என்பதற்கான அளவுகோல்களாக இவற்றை வைத்திருந்தேன்.
அதேவேளை எப்போதும் பெண்களின் மீது மனது குவிந்துகொண்டிருக்கும் எனக்கு எதிர்வரிசையில் பெண்கள் இருந்தபோதும் அவர்களைப் பார்க்க வேண்டும் என்கின்ற குறுகுறுப்பு கடைசிநாள் வரை எழவில்லை. யாரோ வருகிறார்கள், வந்து அமர்கின்றார்கள், விபாஸனா நேரம் முடிந்தபின் எழுந்துபோகின்றார்கள் என்றளவில் பெண்களையும் சாதாரண மனிதர்களாக எடுத்துக்கொண்டேனே தவிர மறுபுறத்தில் யார் யாரெல்லாம் இருக்கின்றார்கள் என்கின்ற பரபரப்பு எதுவும் எனக்குள் எழாததைக் கவனித்தேன். உலகிலே பெண்களின் நினைவுகள்/ஈர்ப்புகள் இல்லாது இருத்தல் கடினம் என்று நினைத்துக்கொண்டிருந்த ஒருவனை விபாஸனா, 'அலறாதே மனமே சும்மா அடங்கிக்கிட' என்று அதட்டி விட்டிருந்தது போலும்.
*
இங்கே விபாஸனா கற்றுத் தரும் ஆசிரியர் கோயிங்கா மியான்மாரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரின் பாட்டனார் இந்தியாவிலிருந்து வந்தவர். வசதி வாய்ந்த வணிகக் குடும்பத்தில் பிறந்த கோயிங்கா வர்த்தகத்தில் அவரது இளமைக்காலத்திலே சிறந்து விளங்கியிருக்கின்றார். கடந்த நூற்றாண்டின் அறுபதுகளிலே அவர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தனது வணிகத்தை விஸ்தாரிக்கும் அளவுக்கு இருந்திருக்கின்றார்.
இந்துவாக பிறப்பால் வளர்க்கப்பட்ட கோயிங்கா இந்துமத ஆசார அனுட்டங்களில் தோய்ந்தொழுகியவர். ஒருமுறை அவருக்கு மிக்கிரேன் (migraine) கடுமையாகத் தாக்க, பல்வேறு சிகிச்சைகளை உள்ளூரில் பெற்றிருக்கின்றார். இரவுகளில் தூங்க முடியாத அவதியால் இறுதியில் வைத்தியர்கள் அவருக்கு மோர்பினை (Morphine) கொடுக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். இந்த தலையிடி தாங்கமுடியாது கோயிங்கா ஜேர்மனி, சுவிற்சிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்று பல மாதக்கணக்கில் சிகிச்சை பெற்றிருக்கின்றார். ஆனால் எந்த வைத்தியராலும் இந்த கடும் தலைவலியை தீர்த்துவைக்க முடியவில்லை.
அப்போதுதான் அவரது நண்பரொருவர் விபாஸனாவிற்குச் சென்று பாருங்களேன அனுப்பி வைத்திருக்கின்றார். விபாஸனா புத்தத்தோடு சம்பந்தப்பட்டது, எப்படி அசலான இந்துவான நான் இதற்குப் போவது என்று கோயிங்காவிற்குத் தொடக்கத்தில் குழப்பம் இருந்திருக்கின்றது. ஒருவகையில் இந்து மதத்தில், புத்தர் தங்களின் பத்தாவது அவதாரம் என்று தனக்கு சிறுவயதில் சொல்லித் தந்தாலும், ஆனால் புத்தரின் தியான முறையைக் கற்றுச் சொல்வது ஏதோ மகாபாதகம் போல என்னை உணர வைத்தார்கள் என்று கோயிங்கா ஓர் உரையில் குறிப்பிடுகின்றார்.
கோயிங்கா இறுதியில் விபாஸனா பழக தனது ஆசிரியரிடம் போனபோது, நீங்கள் என்னிடம் விபாஸனா பழகலாம் என்று சொல்கின்ற அவரின் ஆசிரியர், 'நான் இதை எனது கடும் தலைவலி மாறும் என்பதற்காகவே பழகப்போகின்றேன்' என்று கோயிங்கா சொல்கின்றார். உடனேயே அவரின் ஆசிரியர், 'அப்படியெனில் என்னிடம் விபாஸனா பழகவேண்டாம்' என்று திருப்பியனுப்புகின்றார். விபாஸனா என்பது எந்த சிகிச்சைகளுக்கு உரியதல்ல, அப்படியான குணப்படுத்தல்களுக்காக வருவபர்களுக்கு விபாஸனா அதன் முழுப்பலனைத் தராது என்பது ஆசிரியரின் வாதம்.
என்கின்றபோதும் ஆசிரியரின் கனிவும், கருணையும் கோயிங்காவிற்கு வாய்த்ததால், இறுதியில் கோயிங்கா விபாஸனா பழகத் தொடங்குகின்றார். விபாஸனா பழகத் தொடங்கிய இரண்டாம் மூன்றாம் நாட்களிலே, சக விபாஸனா பழகுகின்றவர்கள், தமக்கு அங்கே ஒளி தெரிந்தது, இங்கே ஒளி தெரிந்தது என்று கூறவும், எந்த ஒளியும் தோன்றாத கோயிங்கா இது தன்னைப்போன்ற தந்திர மூளையுள்ள வணிகர்களுக்கு உரியதல்ல, நன்மக்களுக்கு மட்டுமே ஒளி தோன்றுமென விபாஸனாவை விட்டு விலகியோட முயற்சிக்கின்றார்.
அப்போதுதான் அவரோடு விபாஸனா ஒரு பேராசிரியப் பெண்ணொருவர் உங்களுக்கு ஒளி தோன்றாவிட்டாலும், நன்றாக உட்கார்ந்து விபாஸனா செய்கின்றீர்கள், இந்த பத்து நாள் வகுப்பிலிருந்து விலகவேண்டாம் என்று சொல்கின்றார். அதன் பிறகு நடந்தது கோயிங்கா என்னவாக மாறினார் என்ற வரலாறு நம்மனைவருக்கும் தெரியும்.
கோயிங்கா தனது பெரும்பாலான உரைகளில் தனது ஆசிரியரையும், இந்த பேராசிரியப் பெண்மணியையும் நன்றியுடன் நினைவுகூர்கின்றார். இவர்கள் இருவரும் இல்லாதுவிட்டால் தான் தம்மத்தின் பாதையில் ஒருபோதும் நடந்திருக்க மாட்டேன் என்று நமக்குச் சொல்கின்றார்.
***











