விபாஸனாவில் இருந்தபோது நான் முற்றுமுழுதாக அதனோடுதான் இருந்தேன் எனச் சொல்ல முடியாது. ஆனால் புறச்சூழல் அமைதியாக்கப்பட்டதால் பெரும்பாலும் சிக்கலான யோசனைகள்/எண்ணங்கள் இல்லாது இருந்தேன் எனச் சொல்வேன்.

நான் போன விபாஸனா நிலையம் 140 ஏக்கர் விஸ்தாரமானது என்பதால் நிம்மதியாக உலாவுவதற்கு சிறு காடுகள் இருந்தன. சிலவேளைகளில் தியானம் செய்துவிட்டு காட்டுக்குள் உலாத்தும்போது அவ்வளவு அற்புதமாக சூரியவொளியில் மினுங்கிய மரங்களும், சிறுசெடிகளும் தெரிந்தன. நான் இந்தக் காட்டுக்குள் மிக அமைதியாக இருந்து இரசிக்கும் இடத்தை இந்த நாட்களில் கண்டெடுத்திருந்தேன்.
அடடா எவ்வளவு அமைதியாகவும் அழகாகவும் இந்தச் சூழல் இருக்கின்றதே, நாளையும் இங்கு வரும்போது இருக்குமா என்று எதிர்காலத்துக்குப் பாய்ந்த மனதை இழுத்துப் பிடித்து வைத்தேன். அடுத்தடுத்த நாளில் மழையோ, பெரும் நுளம்புப்படையோ (கொசுவோ) வந்தால் இந்த இதமான சூழல் இருக்கப்போவதில்லை, இப்போது இந்தக் கணத்தில் இந்த இயற்கை என்னவாக அமைகின்றதோ அதை இரசிப்போமே என எண்ணத்தை நிதானமாக்கிக் கொள்ள முயற்சிப்பேன்.
இரவுகளில் ஒரு மணித்தியாலத் தியானத்தின்பின், ஒளிபரப்பாகும் கோயிங்காவின் உரைகள் அவ்வளவு நெகிழ்வாக இருக்கும். மூன்றாம் நாள் கண்ணீர் துளிர்க்க மனது மிக இலேசாவதை உணர்ந்தேன். கவனிக்க, அப்போது அசலான விபாஸனா தொடங்கியிருக்கவே இல்லை.
நாம் ஆனாபானா தியானத்தையே பழகிக் கொண்டிருந்தோம். நான் நெகிழ்வாக இருப்பதை என் உதவி ஆசிரியரிடம் சென்று, எந்தக் கேள்விகளையும் கேட்காது நான் மிக எடையற்று உணர்கின்றேன், அதற்கு நன்றியெனச் சொல்லிவிட்டு அறைக்குச் சென்று உறங்கினேன்.
*
ஆஸ்மாவின் நிமித்தமோ அல்லது காலநிலைக் காரணமாக நான் கடந்தமாதங்களாக Hives ஆல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இரவுகளில் தோலின் மீது வரும் ஒவ்வாமை மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். விபாஸனாவில் இருந்தபோது, ஒருவருக்கு மனவழுத்தம் வந்துவிட்டால், அதை ஓடிப்போய் விடு என்று சொல்லி அதனோடு சண்டை பிடிக்காமல், நானும் நீயும் ஒரேயிடத்தில் சச்சரவு செய்யாமல் நட்பாக இருந்தால் மனவழுத்ததோடு சேர்ந்து வாழத் தொடங்கிவிடலாம் என்பதுபோல, நான் Hives யோடு ஒரு சமரசத்துக்கு இந்தப் பொழுதுகளில் வந்துவிட்டிருந்தேன்.
எந்த மாத்திரையைப் போட்டாலும், நீ என் மேனி மீது கோலம் போடத்தான் செய்வாய், ஆனால் கோலத்தை எனக்கு காயப்படுத்தாமல்/ கடிக்காமல் போடு என்று அதனோடு சமாதானத்துக்கு வந்திருந்தேன்.
இப்படி உடன்படிக்கை வராது விட்டிருந்தால் என்னால் ஒழுங்காக கொஞ்ச நேரத்துக்கேனும் நித்திரை கொள்ளமுடியாது போயிருக்கும்.
விடிகாலை நான்கரை மணிக்கு தியானத்துக்குப் போகும் வழியில் நட்சத்திரங்களைப் பார்ப்பதும், அவ்வளவு சுத்தமான காற்றைச் சுவாசிப்பதும் எனக்குப் பிடித்துப் போனது. ஆனாபானா தியானத்தின்போது உடலை அவ்வப்போது அசைத்துப் பார்க்க விட்டவர்கள், விபாஸனா தியானம் தொடங்கியவுடன் எங்களை அந்த ஒவ்வொரு மணித்தியாலமும் உடலை அசைக்காது, வெளியே போகாது அப்படியே சிலைபோல இருக்கவேண்டுமென உறுதிப்பாட்டை எடுக்கச் சொல்லியிருந்தனர்.
எனக்கு வலது முழங்காலை மடக்கி வைத்ததில் தொடர்ந்து வலித்துக் கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் அந்த வலியைத் தாண்டி உள்ளே மனதைக் குவிக்க முடிந்தது. வலி ஒரு பொருட்டன்று போல அது தன்பாட்டில் குழந்தை போல கதறிக் கொண்டிருந்தது. அதற்கு கவனம் கொடுத்தால்தான் கூட வலிக்கும். ஆக அது குறித்து யோசிக்காது வலியை வலியாக மட்டும் கடந்து போகப் பழகியிருந்தேன்.
என்கின்றபோதும், நான் தியானத்தின்போது Posture ஐ மாற்றாதபோதும் என் முள்ளந்தண்டை அவ்வப்போது வெவ்வேறு கோணத்தில் மாற்றிக் கொள்ளச் செய்தேன். அதில் நான் மூன்று வெவ்வேறு நிலைகளில் என் முதுகைச் சரித்துக் கொண்டிருந்தேன். ஒரு கோணம் எல்லாவற்றையும் துறந்து refugee எடுப்பது. பிறகு முள்ளந்தண்டை நன்றாக நிமிர்த்துவேன்.
இப்படியெல்லாம் நான் கஷ்டப்பட்டு தியானம் செய்ததை அறியாத ஒரு வெள்ளைக்காரர் (எனக்குப் பின்னால் இருந்தவர்), இந்த விபாஸனா வகுப்புகள் முடிந்த பத்தாம் நாள் என்னிடம் வந்து, 'உன்னைப் பார்த்தால் நீ என் வயதொத்தவனாக இருப்பாய் போலத்தான் தெரிகின்றது. ஆனால் எப்படி 90 பாகையில் உன் முள்ளந்தண்டை நிமிர்த்தி வைத்திருந்தாய். எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. என்னால் அது முடியவில்லை' என்றார். 'இல்லையே நானும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருந்தேன். சிலவேளைகளில் எங்களுக்குச் சிறுவயதிலே சப்பாணி கட்டி அமர்வது இலங்கையில் சொல்லித்தந்ததால் அப்படி இருந்து முதுகை நிமிர்த்தி வைப்பது எளிதாக இருந்திருக்கலாம்' எனச் சொல்லி நான் அவரை ஆறுதற்படுத்தினேன்.
இதற்கிடையில் எனக்குப் பின்னே இருந்த ஒருவர் தடிமனோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். எனக்கு என் சுவாசத்தை விட அவர் 'ஜலதோசத்தோடு' சிரமப்பட்டு மூச்சு இழுப்பதுதான் தெள்ளியதாகக் கேட்டது. முதலில் இவரென் தியானத்தைக் குழப்புகின்றாரே என்று கொஞ்ச எரிச்சல் வந்தாலும், பிறகு அவரின் கஷ்டத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.
அத்தோடு அவர் நல்ல ஆகிருதியான ஆள். அவரால் கால்களை மடக்கியெல்லாம் உட்கார முடியாது. தேவாலயத்தில் முட்டுக்கால் இட்டு நிற்பதுபோல அவர் முழங்காலில் நிற்க அவரின் மூச்சு என் முதுகோடு 'காதோடு தான் ஒரு கதை சொல்வேன்' போல உரசிக் கொண்டு போகும்.
அவருக்கு அதற்குப் பிறகு ஒருகட்டத்தில் இயலாது போய், ஏழோ எட்டாவது நாளோ முற்றாக விபாஸனாவிலிருந்து விலகி வீடு போயிருந்தார். அவரின் தடிமன் ஒருபக்கம் என்றால், எனக்கு வலதுபக்கம் இருந்தவருக்கு உலர் இருமல் வரத்தொடங்கிவிட்டது. அந்த உலர் இருமலோடு எனக்கு நன்கு பரிட்சயம் இருக்கின்றது. நான் இங்குள்ள ரெயினில் இப்படியான இருமலோடு வேலைக்குபோகும்போது மற்றவர்களைச் சிரமப்படுத்தக்கூடாது என்றெல்லாம் இரெயினில் இருந்து இறங்கி அது சரியாக வரும்வரை அடுத்த ஸ்டேசனில் இருந்து இருமலை சீராக்கி விட்டெல்லாம் போயிருக்கின்றேன். அதுவும் இங்கு இருக்கும் GO Train மேற்றளத்தில் எவரும் பேசாது அமைதியாக இருக்க வேண்டும். அப்படியான சூழலில் நான் தொடர்ந்து இருமிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
தடிமன் ஆசாமியைப் போல, இருமல் ஆசாமியின் இருமலோடும் நான் நட்பு கொள்ளத் தொடங்கினேன். ஒருகட்டத்தில் இருமலைத் தாண்டி மனதை உள்ளே குவிக்கவும் பழகியிருந்தேன். இன்னொருபக்கம் ஆசிரியர் கோயிங்கா, எப்பொழுதும் எதிர்ச்சக்திகளை உருவாக்கிவிடாதீர்கள், பிறகு சம்ஷாராக்கள் உங்களைத் தொடர்ந்து துரத்திக் கொண்டு இருக்கும் என்று எச்சரித்துக் கொண்டிருந்தார்.
நோய்த்தொற்றுள்ளவர்களை நேசிக்க முடிந்தாலும், பின்னே/பக்கத்தில் இருந்தவர் எல்லாம் நோயோடு சமர் செய்தபோது அடுத்து நோய்க் காவியாக நான்தான் ஆகப் போகின்றேனே என்ற பயம் வந்தது.
அப்படி வந்தால் நான் இருமியோ தும்மிக்கொண்டோ தியான மண்டபத்துக்கு வரப்போவதில்லை என்பது எனக்கு உறுதியாகத் தெரிந்தது. அப்படியாயின் என்னால் இந்த 10 நாள் விபாஸனாவை முழுதாகப் பூர்த்தி செய்யாமல் போய்விடுமே என்ற எண்ணமும் அவ்வப்போது தலைதூக்கியது.
*
இப்படியான 10 நாள் தியான வகுப்புக்களுக்கு, ஏற்கனவே தியானத்தைத் தெரிந்துகொண்டு போவது நல்லதா அல்லது Beginner's mind போல ஒன்றையும் தெரியாமல் போவது அதிக பலனைத் தருமா என்ற கேள்வியொன்றும் எனக்குள் ஓடியது. ஏனெனில் ஏற்கனவே கொஞ்சம் தியானம் செய்தும், நிறைய தியானம் குறித்து வாசித்தும் இருந்ததால் என் பகுத்தறிவு மனம் ஆசிரியர் கோயிங்கா சொல்லும் விடயங்களைத் தொடர்ந்து அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது.
இது கூட பரவாயில்லை. நான் பதின்மங்களில் வாசித்த பாலகுமாரனின் தியான அனுபவங்களும் எனக்குள் அலைபாய்ந்து கொண்டிருந்தன. பாலகுமாரன் விசிறி சாமியாரை (யோகி ராம்சுரத்குமார்) சந்தித்து அவரோடு பெற்ற தியான அனுபவங்களை ஒருவித மாயயதார்த்தபாணியில் எழுதியிருப்பார். விசிறி சாமியார் அதிர்வுகளை உருவாக்கி தனக்கு உடலுக்குள் அந்தச் சக்கரம் இந்தச் சக்கரம் சுழன்றது, நெற்றியில் நீலச்சுடர் தோன்றியது என்றெல்லாம் அவர் எழுதியதாக நினைவிருக்கிறது.
நானும் தியானத்தில் உடல் நோவு காணும்போது, இப்படியான நீலச்சுடர் நெற்றியில் சுடர்கின்றதா என்று கனவு காணத்தொடங்குவேன். ஒருநாள் உண்மையாகவே நடு முள்ளந்த்தண்டில் இருந்து ஏதோ ஒன்று ஊரத்தொடங்கியது. அது அப்படியே மேலே மேலே சென்று என் பிடறியை ஒட்டியது. அடடா இந்த ஏழாம் நாளிலே எனக்கு உடலில் சக்கரங்கள் எல்லாம் சுழலப்போகின்றதே என்று மனம் ஆகாயத்தில் பறக்கத் தொடங்கியது.
முதலில் இப்படி ஊர்ந்துதான் சக்கரங்கள் ஏழும் மூலாதாரத்தில் இருந்து சகஸ்ராரத்தில் வரை சுழலப்போகின்றது என்று நினைக்க இந்த ஊர்தல் நிலை பின்னந்தலையில் போய் உச்சந்தலைக்குப் போகாது சட்டென்று தலையின் வலதுபக்கமாக திசை மாறத் தொடங்கியது.
அன்றாடத்தில்தான் நான் கோணல்காரன் என்றால், சக்கரங்களையும் கடவுள் திசைமாற்றி கோணலாக மாற்றிவிட்டாரோ என்றுதான் முதலில் நினைத்தேன். இல்லாவிட்டால் இந்தப் பரவச ஊர்தல் நிலை உச்சந்தலையில் அல்லவா போய் முடிந்திருக்க வேண்டும்.
இப்படியெல்லாம் யோசிக்கத்தான், வலதுபக்க தலையில் அதிகம் ஊர்வது, இது சக்கரத்திற்கான அறிகுறி அல்ல, ஒரு பூச்சி என்பது தெரிந்தது.
இந்த 'அற்புத நிலை' நிகழ்வதற்கு முன்னர் தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை பெய்ந்து கொண்டிருந்தது. நான் வெளியே காயப்போட்டிருந்த என் உடுப்புகளை இந்தத் தொடர்ச்சியான மழையினால் வெளியிலே விட்டிருந்தேன். பிறகு வெயில் வந்தவுடன் அது நன்கு காய்ந்தவுடன் எடுத்துக் கொண்டு வந்து அணிந்திருந்தேன். அந்த இரண்டு நாட்களில் இந்த பூச்சிப்பிள்ளையார் என் ஆடைக்குள் புகுந்திருக்கின்றார். நான் ஒழுங்காய் உதறிப்போடாததால் என் தியான நேரத்தில் அவர் நான் காட்டுக்குள் உலாப்போவது போல உலாத்தத் தொடங்கியிருந்தார்.
கடைசியாக சுழலும் சக்கரத்தைத் தலையில் இருந்து தட்டி விழுத்தினேன்.
என் நண்பர்களுக்கு மட்டுமில்லை, புத்தருக்குக் கூட என்னை சக்கரங்கள் சுழல்வதாக கற்பனை செய்ய, கொஞ்ச நேரம் விடக் கூட மனம் வரவில்லையே என்று என் விதியை நொந்துகொண்டேன்.










