கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Malcolm & Marie

Saturday, February 27, 2021


ஒரு இயக்குநர் தனது திரைப்பட வெளியீடு முடிந்து நள்ளிரவு தன் காதலியோடு வீடு திரும்புகின்றார். விமர்சகர்கள் படத்தைப் பாராட்டிய உற்சாகம் நெறியாளருக்கு, ஆனால் காதலி எதனாலோ உறுத்தப்படுகின்ற பாவனையுடன் இருக்கிறார்.  இயக்குநர் என்ன நடந்தது எனக் கேட்க, இந்த இரவு எதையும் பிரயோசனமாகப் பேசுவதற்காய் இருக்கப் போவதில்லை. அடுத்த நாள் பேசலாம் என்கிறார் காதலி.


இந்த உரையாடல் இப்படியே நீண்டு, காதலி எல்லோருக்கும் திரையிடலில் நன்றி கூறியபோது தனக்கு நன்றி கூறாது தவறவிட்டது உறுத்துகின்றது எனச் சொல்ல அந்த இரவு வேறொன்றாக மாறத் தொடங்கின்றது. அப்படியே பல்வேறு திசைகளில் பேச்சு போக, அதுவரை மறைந்து வைத்திருந்த பல இரகசியங்கள் வெளிவரத்தொடங்கின்றன.


இத்திரைப்படத்தின் கதை, இந்தக் காதலியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இருபதுகளில் போதையிற்கு அடிமையான மேரியின் தத்தளிப்புக்களே மால்கம் எடுத்த இந்தத் திரைப்படம். நீ எனது கதையை எடுத்துவிட்டு என்னைத் தனித்துவிட்டுவிட்டாய் என்கின்றார் மேரி. நீ கதையாக எழுதியும், அதில் ஒரு நடிகை நடித்தும் எனக்கான கதையை எங்கேனும் இனிச் சொல்வதற்கான எல்லா இடத்தையும் அடைத்துவிட்டீர்களென மேரி மேலும் குற்றஞ்சாட்டுகின்றார்.


இதனால் கோபமடையும் மால்கம், இந்தக் காட்சிகள் எல்லாம் நீ சொன்னதின் அடிப்படையில் எழுதப்பட்டதல்ல. எனது கடந்தகாலக் காதலிகளின் அனுபவங்களில் இருந்தும் எழுதப்பட்டதென அவற்றைப் பட்டியிலிடத் தொடங்கின்றார். அது மட்டுமின்றி அவர்களோடு கழித்த தனிப்பட்ட பொழுதுகளை விபரிக்கவும் செய்கின்றார்.


கடந்தகாலக் காதல்கள் என்பது முற்றுமுழுதாக புதிய காதலிக்குத் தெரியாமல் இருப்பதுதான் அழகானது. அந்த மர்மங்கள் அவிழ்ந்துவிட்டால் உன்னை அறிந்துகொள்ளும் எல்லாப் பாதைகளும் அடைபட்டுவிடும். உனது பழைய காதலிகள் அவ்வளவு அழகானவர்களா, அறிவானவர்களா, நீ அவர்களோடு எதையெதைச் செய்வாய், அதைவிட நான் இன்னும் முன்னே ஒருபடி இருக்கவேண்டும் என்ற ஒருவித மெல்லிய பதற்றம் துளிர்க்கையில்தான் நம் காதல் இன்னும் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று மேரி மால்கத்திற்குச் சொல்கிறார்.


நான் உன்னோடு எவ்வளவு கோபத்தோடு இருந்தாலும், உன்னைப் போல நான் என் கடந்தகாலக் காதல்களை இப்படியெல்லாம் விலாவரியாக விபரிக்க மாட்டேன். அது உன்னைக் காயப்படுத்தும் என்பதைவிட என்னை இன்னும் அதிகமாய்க் காயப்படுத்தும் என்கிறார் மேரி. 


தான் நெறியாள்கை செய்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுவிட்டதான மகிழும் மால்கமின் இரவு இன்னும் இருண்மையாகின்றது. இப்படி உரையாடல் போகும்போது, திரைப்படம் பற்றிய முதலாவது விமர்சனம் ஒரு பத்திரிகையின் இணையத்தளத்தில் வெளிவருகின்றது. அதை வாசித்து வாசித்து மால்கம் விமர்சிக்கத் தொடங்கின்றார். கறுப்பினத்தவராக இருக்கும் தன்னை அடையாள அரசியலுக்குள்ளும், 'அரசியல்' இல்லாத தன் திரைப்படத்தை ஏன் அரசியல் படமாக்கியும் மதிப்புரை எழுதுகின்றார் என மால்கம் இப்போது இதை எழுதிய வெள்ளையினப் பெண் விமர்சகர் மீது கோபப்படுகின்றார். அதை மெல்லிய புன்னகையுடன் மேரி கேட்டுக்கொள்கிறார். 


மெல்ல மெல்ல இரவு இவர்களுக்குள் நெகிழ்வாகின்றது. நீ எனது அரிய காதலி, உன் காதல் இல்லாது என்னால் இதைச் சாதித்திருக்கமுடியாது என்று உருகின்றவராக மால்கம் மாறுகின்றார். கோப இரவு காதலுக்கான பொழுதாக மாறும்போது, சட்டென்று நானும் ஒரு நடிகையாக இருக்கும்போது என்னையேன் நீ இத்திரைப்படத்தில் நடிக்கவைக்கவில்லை என்ற முக்கிய கேள்வியை மேரி எழுப்புகின்றார். நீ ஆடிஸனுக்கு வரவில்லை என்று காரணத்தைச் சொன்னாலும் மால்கமிற்கு அவரது பெருந்தவறு புரிகிறது. சட்டென்று ஒருகாட்சியில் மேரி போதைக்கு அடிமையான ஒருவரைப் போல கத்தியைக் கொண்டு நானின்னும் இந்த அடிமையிலிருந்து வெளிவரவில்லையென ஒரு தனிநடிப்பைச் (monologue) செய்கின்றார். அவ்வளவு தத்ரூபமான நடிப்பு. நடிப்பென்று கூடச் சொல்லமுடியாது. அது அவரின் கடந்தகால வாழ்க்கையின் ஒரு பகுதி.


இப்போது மீண்டும் இரவு அடர்த்தியாகின்றது. இவர்களுக்குள் அடுத்து என்ன நடக்குமென்று ஒரு பதற்றம், திரைப்படத்தைப் பார்க்கும் நமக்கு வருகின்றது.


இத்திரைப்படம் ஒரே இரவில் நடப்பது. இரண்டே இரண்டு பாத்திரங்கள்தான் திரையில் வருகின்றன. இது கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பம்சம். இந்த இரண்டு பாத்திரங்களில் நடித்திருக்கும் இரு நடிகர்களும் ( Zendaya & John Washington) அவ்வளவு இயல்பாக  நடிப்பை வெளிப்படுத்துகின்றார்கள். ஹொலிவூட்டில் இருக்கும் அடையாள அரசியல், இனவாதம், இன்னபிற ஏற்றத்தாழ்வுகள் வெளிப்படையாக இதில் பேசப்படுவதும் கவனத்திற்குரியது. அத்துடன் இவர்களிடையே முரணும் உறவும் மாறி மாறி வரும்போது பின்னணியில் ஒலிக்கின்ற பாடல்களும் சிறப்பான தேர்வு. 


ஆண் X பெண்,  இயக்குநர்  X நடிகை என்ற இடைவெளியில்/இடைவெட்டுக்களில்  இரு பாத்திரங்களுக்குள் உரையாடல்களால் மட்டுமே நிகழ்த்தப்படும் இத் திரைப்படம் அவ்வளவு எளிதில் எல்லோரையும் கவர்ந்துவிடாது. ஆனால் இதில் விவாதிக்கப்படும் விடயங்கள் நமக்கு அவ்வளவு தொலைவில் இருப்பதில்லை. இந்தக் கறுப்பு வெள்ளை படத்துக்குள் நாம் மூன்றாவது பாத்திரமாக ஒருவேளை நுழைந்துவிட்டால்,  நமக்கு நெருக்கமான ஒரு திரைப்படமாக இது ஆகிவிடவும் கூடும்.

.....................................

(Feb 06, 2021)

ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து

 1.

"Thus Spoke Zarathustra" இல்  நீட்ஷே, கடவுள் இறந்துவிட்டார் என்று அறிவிக்கின்றார். ரமேஷ் பிரேதனின்  'ஆண் எழுத்து + பெண் எழுத்து= ஆபெண் எழுத்து' நாவலிலும் கதைசொல்லி தனது கடவுள் இறந்துவிட்டதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிப்பதுடன், புத்தரை ஒரு ஆன்மீக நாத்திகன் எனவும் கொண்டாடவும் செய்கின்றார். இந்த நாவல் மீபுனைவின் வழியே எழுதப்பட்டதால் தன்னிலையில் சொல்லப்படுகின்றது. ஆனால் கதையைச் சொல்பவர் ஒற்றை அடையாளத்தை மறுக்கிறார். பன்மைத் தளங்களில் உரையாடல்களில் நிகழ்த்தி, பலவற்றைச் சிதைத்து தனது பன்மைத்துவத்தை நமக்கு ஒவ்வொரு அத்தியாயங்களிலும் வெளிப்படுத்துகின்றார்.


இந்நாவலில் வருகின்றவர் தன்னைப் பால் நிலைகளைக் கடந்தவர் என்று சொல்கின்றார். இன்னொரு இடத்தில் தன்னைத் தாயுமானவன் என்றும், பாலுறுப்புகள் திரிவடைந்து திருநங்கையாக மாறினேன் என்றும் குறிப்பிடுகின்றார்.  வேறோர் இடத்தில், தன்னை லூவ்ர் மியூசியத்தில்  சல்வதோர் டாலி அடைகாத்த முட்டையிலிருந்து வந்தவன் தான் என்றும் சொல்கின்றார். அப்படிச் சொல்கின்வர் இன்னொரு இடத்தில் 'நான் மொழிவழி உயிரி. எனது கட்டமைப்பு புனைவால் அமைந்தது. வெற்று சொற்களாய் என்னை உதிர்த்துக் கூட்டிக் குவித்துக் கூடையில் அள்ளி குப்பை லாரியில் கொட்டிவிடலாம்' என்றும் கூறுகின்றார். இவ்வாறு ஒவ்வொரு அத்தியாயங்களிலும் இந்தக் கதைசொல்லி பிறந்தும், உருமாறியும், மரணமடைந்தும், புதுப்பிறப்பு எடுத்தபடியும் இருக்கின்றார். ஆகவே அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பது ஒரு சுவாரசியமாக விடயமாக இந்த நாவலின் இடையே ஓடிக்கொண்டிருக்கின்றது.


மீபுனைவின் (metafiction) சாத்தியங்களைத் தொடக்கத்தில் தமிழில் முயன்று பார்த்தவரென நகுலனைச் சொல்லலாம். அதன்பிறகு பின் நவீனத்துவ/பின் அமைப்பியல் சூழலினால் நமக்குத் திறந்துவிடப்பட்ட புதியவெளிகளைச் சரிவரக் கையகப்படுத்தி ரமேஷ் பிரேதன் அற்புதமாக எழுதிச் செல்கின்றார். இந்த நாவலையே அவர் மீபுனைவு என்று தெளிவாகக் குறிப்பிட்டாலும் அவரின் அண்மைக்கால நாவல்களான நீல அணங்கின் கதை, ஐந்தவித்தான் போன்றவற்றை வாசித்தவர்க்கு அவற்றிலும் மீபுனைவின் பாதிப்பு பெரும் செல்வாக்குச் செலுத்தியிருப்பதைக் காணலாம். ரமேஷ் நமக்கு அறிமுகமான மொழியில்/நிலப்பரப்புக்களில் இருந்து தனக்கான புதிய உலகை, அதிமானிடர்களை ,பால் திரிந்தவர்களை, நூற்றாண்டுகள் முன்னும் பின்னும் பிறந்தவர்களை இயந்திரத்தனமான மொழியில் அன்றி அற்புதமான கவித்துவமான எழுத்து நடையில் முன்வைக்கும்போது அவரின் நாவல்களை வாசிக்க சுவாரசியமாகின்றது.


2.

இந்த நாவலில் ஒவ்வொரு அத்தியாங்களும் இரண்டு பக்கங்களுக்கு மேலே நீள்வதில்லை. ஆனால் அதில் அவர் செய்யும் எழுத்து விநோதங்களுக்கு இதை வாசித்துப் பாருங்கள்:


"இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது? எனது கவிதைகளும் கதைகளும் பெண்ணுடம்புகளிலிருந்தே அகழ்ந்தெடுக்கப்பட்டவை. பெண் கவிச்சை வீசாத பிற எழுத்துக்களை என்னால் வாசிக்க இயல்வதில்லை. சில பொழுது எழுதும் எத்தனிப்பில் நானே பெண்ணாகப் பால் திரிவதும் நேரும். ஆணுடம்பில் பெண் உள்ளடக்கம். என்னைப் பெற்ற அம்மாவுக்கும் நான் பெற்ற மகளுக்கும் நடுவே இணைப்புப் பாலமாகக் கிடத்தப்பட்ட என் உடம்புக்குக் கீழே வற்றாமலோடும் பால்வரலாறு; அதில் மூழ்கி எழும் ஆண், பெண்ணாகிறான்.


எனது படைப்புகளைத் தின்று மெய் வளர்க்கும் ஆண், பெண்ணாகி விடுவதால் பலவகைக் குழப்பங்கள் விளைந்து சமூக மன ஒருமைக் குலைவதாக உளவியல் மருத்துவக் குழுவினரின் அறிக்கை சொல்கிறது. இதன் வழி, திருநங்கைச் சமூகம் வளர்ந்து தனி இனக்குழுவாக உருவாவதை ஏற்கமுடியாது என்ற காரணத்தை முன்வைத்து எனது வாழ்நாள் எழுத்துக்களை அரசு தடைச்செய்திருக்கிறது. 


ஆண் இலக்கியம், பெண் இலக்கியம் கடந்த ஆபெண் இலக்கியம் என்ற புதிய வகைமை ஒரு படைப்பியல் உத்தி மட்டும் இல்லை; அது பாலரசியல் அனார்க்கிய முறைமை. ஆண் மனத்தின் ஃபாசிச ஒருமையைக் குலைத்துப் பால் திரிபை உண்டாக்கிப் பெண்ணாக்குவது. அதிகார இச்சை பால்நிலைக் கடந்தது; ஆபெண் மனம் ஒரு பால் முற்றொருமை கடந்த பாவனை. மதம் என்பது கடவுளை முன்வைத்த முற்றதிகார பாவனை. பாவனை மதவியல், பாவனை அரசியல், பாவனை அறிவியல் என்னும் மூன்று முற்றொருமை அதிகார மையங்கள் தர்க்கம் இடறும்போது பாவனையைக் கைக்கொள்வது போன்ற ஒரு புலன் கடந்த உயிரியல் அரசியல் பாவனையே ஆபெண் நிலை.


ஆண் உடம்பில் பெண் சமைந்த ஆபெண் தன்மையைப் புதிய பாலினமாக ஏற்கமுடியாது என்று அரசியல் அமைப்புகள், மத அமைப்புகள் ஒருங்கிணைந்து எதிர் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.  ஆண், பெண்ணாவது என்பது எனது பிரதியின் அரசியல் இயங்கியல் பண்பு. திருக்குறளின் அறம், பொருள், காமம் என்னும் முப்பரிமாணத்தை ஒட்டி விழைவு அல்லது இச்சை என்னும் நான்காவது பக்கத்தை எழுதிப்பார்க்கும் எத்தனம். அதற்கு ஆபெண்ணிலை வாதம், மூன்றாம் பாலரசியலை உள்ளடக்கமாகக் கொண்டக் கவிதையியலை எழுதிப்பார்க்க உதவுமா என்ற பிரதியியல் முயற்சி. இதில் மதம், பண்பாடு, மருத்துவ உளவியல், பாராளுமன்ற அரசியல் அடிப்படைவாதிகள் தலையிடுவது மானுட விடுதலை அரசியல் அமைப்பிற்கு எதிரானது. எழுத்துக்களைத் தடைச்செய்வதன் மூலம் தேவையில்லாமல் என்னை விளம்பரப்படுத்துகிறீர். பாதுகாப்பு வேண்டி திருக்குறளுக்குள் அடைக்கலம் தேடுவதாக, அடிப்படை இலக்கிய அறிதலற்றவர் என்னைப் பகடிசெய்வதன் மூலம் தமக்கு விளம்பரம் தேடுகிறார்.


உடம்பில் செயல்படுத்தாத வன்முறையை என்னால் எதிர்கொள்ள முடியும். எழுதாமல் பேசாமல் வெற்றுப் பார்வையாலும் தொலை எண்ணத் தொடர்பினாலும் பிறருடைய சிந்தனைக்குள் என்னால் ஊடுருவமுடியும். இந்த அதிகார அமைப்பு சமூகச் செயல்பாடுகளிலிருந்து என்னைத் தனிமைப்படுத்த முடியாது. என்னை வெல்வதற்கான எளிய வழி, கொன்றுவிடுவது. நான் ஒத்துழைக்காமல் என்னைக் கொல்லமுடியாது; எனது யோசனையின் வேகத்தில் இடம்பெயரும் இயல்பினன். எனது வேகத்தைத் தடுத்து மறிக்கும் அறிவியல் வளர்ச்சியை அடைவதற்கு இன்னுமொரு நூற்றாண்டு உங்களுக்குத் தேவைப்படும். 


எனக்குத் தொல்லைத்தராமல் ஒதுங்கி நிற்பதே எல்லாருக்கும் நல்லது. அடிப்படையில், நான் ஆண் கலப்படம் இல்லாதவன்; தன் நிழலைத் தானே புணர்ந்து என்னைக் கருத்தரித்ததாக அம்மா சொன்னது புனைவு இல்லை. என்னை விட்டு வெளியேறுவதே இனியான உங்கள் அரசியல். ஆம், என்னால் நீங்கள் இயக்கப்படுகிறீர். ஃபாசிசம் என்பது திட திரவ வாயு நிலைகளில் தன்னை உருமாற்றும் பாவனை; அதை ஒரு நகைப்பில் கடந்துவிடுவேன்.

(87, ப 173-174)"


3.

இவ்வாறுதான் ஒவ்வொரு அத்தியாயங்களும் வெவ்வேறு திசைகளில் பறந்து செல்லும் பறவைகள் போல இருக்கின்றன. பறவைகள் வானத்தில் தடங்களை விட்டுச் செல்லாததுபோல, ஒரு அத்தியாயத்தில் இன்னொரு அத்தியாயத்தில் சிதைத்து புதிய கதையாடல்களை எழுப்பி நாம் பின் தொடரும் எழுத்தின் வழித்தடங்களையே ரமேஷ் மறைத்துவிடுகின்றார். இது ஒருவகையில் முடிவுறா 'அலகிலா' விளையாட்டு. இன்னொருவகையில் போர்ஹேஸில் மாயபுதிர்வட்டங்களுக்குள் தொலைந்துபோவது போன்றது அல்லது டாலியின் சர்ரிலிசத்தில்  உருமறைந்து இன்னொன்றாகத் தோன்றுவதாகும்.


இந்த நாவலில் கதைசொல்லி தொடர்ந்து தான் பல்வேறு நூற்றாண்டுகளில் பிறப்பெடுத்தும், இறந்தும், மீள்பிறப்பெடுப்பதுமாகச் சொல்கின்றார். அவரின் சில பிறப்புக்கள் பற்றித் தெளிவான ஞாபகங்களைக் கொண்டிருக்கின்றார். ஐம்பூதங்களான தனது உடம்பும், ஐந்திணைகளான தனது உள்ளமும் ஒருபோதும் அழிவதில்லை, வெவ்வேறு வடிவங்களில் உருமாறக்கூடியது மட்டுமே என்பதோடு எனது மொழியின் வயது எதுவோ அதுவே எனது உடம்பின் வயதும் என்கின்றார். 


ஒருவகையில் நாம் காலத்தையும் வெளியையும் நேர்கோட்டில் வைத்துப் பார்த்தால், நமக்கு முன் வாழ்ந்து மறைந்தவர்களும், இந்தப் பொழுதில் 'வாழ்ந்து' கொண்டிருப்பவர்களும், இனி வாழப்போகின்றவர்களும் ஒரே தளத்தில் நடமாடிக்கொண்டிருப்பதாய்க் கற்பனை செய்துபார்க்கலாம். அவ்வாறே ரமேஷின் அநேக கதைசொல்லிகள் பல்வேறு நூற்றாண்டுகளில் நடமாடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த உடம்பிலிருந்து 'தற்செயலாக' வெளியேறுவதே மரணம் என்கின்றார் ரமேஷ். ஆகவே எந்தக் காலத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றவன் என்பதோடு பல நூற்றாண்டு ஞாபகங்களைத் தன்னோடு காவிக்கொண்டிருக்கின்றேன் என்று கூறுவதோடு மட்டுமின்றி,  தனது பாத்திரங்கள் போல தன்னையே ஒரு மீபுனைவாகவும் ரமேஷ் அவ்வப்போதுவெளிப்படுத்தியபடியும் இருப்பவர். 


ரமேஷ் பிரேதனின் "நல்ல பாம்பு: நீல அணங்கின் கதை", "ஐந்தவித்தான்" போன்ற நாவல்களின் தொடர்ச்சியில் 'ஆண் எழுத்து - பெண் எழுத்து - ஆபெண் எழுத்து"ம் இன்னொரு முக்கியமான படைப்பே! நம் சூழலில் யதார்த்தவாதப் பாம்பு  மொழியை அளவுக்கதிகமாக கட்டித் தழுவி நம் மூச்சைத் திணறவைக்கும்போதெல்லாம், ரமேஷ் பிரேதன் போன்றவர்களின் இவ்வாறான எழுத்துக்கள்  நமக்குப் புதிய திசையைக் காட்டி இதமூட்டுகின்றன.

............................

நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்

Thursday, February 25, 2021

இந்த நாவல் தகவல் தொழில்நுட்ப (IT) வேலையின் பின்புலத்தில் நிகழ்கிறது. இது கார்த்திக்கின் முதல்நாவல் என்றாலும் அவருக்குப் புனைவுக்குரிய அலுப்படைய வைக்காத, ஒரு நிதானமான மொழி கைவந்திருக்கின்றது. ஜடியில்தான் இத்தனை உளைச்சல்களும், பாதுகாப்பின்மைகளும், மற்றவரை இழுத்துவிழுத்தும் காழ்ப்புக்களும் இருக்கின்றதா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால் மற்ற எந்தத் தொழில்கள் எல்லாவற்றையும் விட தகவல் தொழில்நுட்பம் சடுதியாக எமக்குள் நுழைந்து பலவிதமான திறப்புக்களை அவிழ்த்துவிட அதை எப்படி எதிர்நோக்குவது என்பதுதான் சிக்கலாயிருந்திருக்கின்றது.

எந்த ஒரு விடயமும் புதிதாக நுழையும்போது இப்படி பெரும் எழுச்சியையும், வீழ்ச்சியையும் சந்தித்து பிறகு சுதாகரித்துக்கொண்டு தன்னைக் காலத்தில் நிறுத்திக்கொள்ளும். மற்றத் தொழில்களில் இருப்பவர்க்கும் இப்படி மன அழுத்தங்கள், பணம் சம்பாதிக்கும் பேராசை போன்ற எல்லாமே இருக்கின்றன. அங்கே அது நிதானமாக கட்டம் கட்டமாக நிகழ்ந்திருக்கின்றது என்பதுதான் ஒரு சிறு வித்தியாசம். அதுபோலவே இன்றைய சமூக ஊடக வலைத்தளங்களில் எல்லாவற்றையும் பகிர்வதுபோல அப்போது இருக்கவில்லை. ஆகவே இப்போது நடப்பவை எல்லாம் நமக்கு உடனே உடனே தெரிந்துவிட இன்னும் அச்சந்தருவதாக நாளாந்த வாழ்வில் இவை சார்ந்த விடயங்கள் இருக்கின்றன.
இந்த நாவலில் வரும் நித்திலன் - மீரா உறவு நம் காலத்து உறவுச்சிக்கல்களுக்குச் சரியான உதாரணம். அத்துடன் மீராவின் பாத்திரமும் மிகக் கச்சிதமாக இங்கே விபரிக்கப்பட்டிருக்கின்றது. இன்றைய காலம் பெண்களுக்கு திறந்துவைத்திருக்கும் வெளிகளை, மரபுகள் இழைய இழைய வளர்க்கவைக்கப்படுகின்ற ஆண்களால் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியாது. நேசம் இருந்தாலும் பெண் மீது அவனுக்குள் ஊட்டிவளர்க்கப்பட்ட சந்தேகம் - முக்கியமாய் ஜடி பின்புலம் சார்ந்து - பெரும் பேயாக அவள் நடத்தைகள் ஒவ்வொன்றின் மீது படர்கின்றது. ஆனால் அது ஆண்கள் வளர்க்கும் மாயையே தவிர, பெண் எப்போதும் தனக்குப் பிடித்த ஒரு ஆணுக்கு எல்லாவற்றையும் வழங்கத் தயாராகவே இருக்கின்றாள். நேசம் வற்றிப்போகும் வரையாவது அதை அனுபவிக்க எந்த ஆணும் தயாராக இல்லை என்பதுதான் நம் காலத்தைய சோகம். அவன் அந்த அருமையான நாட்களையும் இல்லாத எதிர்காலத்துக்காய் வீணாக்கி விட்டு, பிறகு காலங்கடந்து பெண்ணுக்காய் ஏங்கிக்கொண்டிருக்கின்றான். இந்த நாவல் முடிந்தாலும் இதன் இன்னொரு பகுதியாக நித்திலன்/மீரா/வேணு/அர்ச்சனா/சத்தியமூர்த்தி/சாஜூ போன்றவர்களுக்கு பிறகு என்ன நடந்திருக்குமென கார்த்திக் எழுதினால் சுவாரசியமாக இருக்கும். இந்த நாவலை வாசித்தபோது, ஏழெட்டு வருடங்களுக்கு முன் வந்த விநாயகமுருகனின் 'ராஜீவ்காந்தி சாலை' ஞாபகம் வந்தது. அதே பின்னணியில், ஏன் கிட்டத்தட்ட பல சம்பவங்கள் அந்த நாவலை நினைவூட்டக்கூடியதாகவே இருக்கின்றது. ஆனால் அதில் எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்ற பரபரப்பு இருந்தது போலில்லாமல், இதில் ஒரு நிதானமான கதைசொல்லல் சாத்தியமாகியிருக்கின்றது. அதுவே இதை வாசிக்கச் சுவாரசியமாக்கின்றது.
...............................

(Oct 23, 2020)

மெக்ஸிக்கோ - சுகிர்தா

Wednesday, February 17, 2021

 GV Prakash இசையில் சைந்தவி பாடும் பாடல் ஒன்று. " நிழல் தேடும் ஆண்மையும், நிஜம் தேடும் பெண்மையும் ஒருபோர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா?" ஏனோ இந்தப்பாடல் வரிகள் தான் எனக்கு நினைவில் வருகின்றன.

"நீ இந்தக் காலையில் படகில் போகும்போது உன் நாட்டிற்குப் போகும் கனவைப் பற்றிச் சொன்னாய். இன்னமும் கடந்தகாலத்தில் நீ வாழ்ந்துகொண்டிருப்பதால், உனக்கு எதிர்காலமும் ஒரு கனவாய் இருக்கிறது. எனக்கு அப்படியில்லை. இந்த அதிகாலை, இந்தச் சூரியன், அரிதாய் வாய்த்த படகுப் பயணமென அதில் மட்டுமே திளைத்திருந்தேன். எனக்கு இந்தக் கணமே முக்கியம். எதிர்காலத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் இப்படி ராகுலோடும், உன்னோடும் சுற்றித் திரியவே முடிந்திருக்காது. அடுத்தகணத்தில் என்ன நிகழுமெனத் தெரியாதபோது எதிர்காலத்தைப் பற்றி எப்படி தீர்மானிக்க முடியும் எனச் சொல்லியபடி, காற்றுக் கலைத்த கேசத்தை ஒரு பக்கமாய் ஒதுக்கினாள்." காதலியின் பிரிவிலிருந்து தன்னை மீட்டெடுக்கும் முயற்சியில் தன்னைத் தனிமைப்படுத்துபவனுக்கு அவளின் நட்பு எதிர்பாராமல் கிடைக்கிறது. அவள் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவள். மோதலில் தொடங்கிய அவர்களின் நட்பு, அது வளர்ந்த விதமும், அந்த அவளினூடான வாழ்வின் தரிசனமும், வாழ்ந்தால் அவளைப்போல ரசனையானவளாக, தெளிந்த மனநிலையுடையவளாக வாழவேண்டுமென்ற அவாவைத் தூண்டும் விதமான வர்ணிப்புகள்! அவளை எந்தவிதத்திலுமேனும் தாழ்த்திவிடாது வார்த்தைகளால் வர்ணித்த விதங்கள். ஆசிரியரின் கெட்டித்தனம் என்னவென்றால், அவளை ஒரு ஸ்பானியப் பெண்ணாகத் தேர்ந்தெடுத்ததுவே! ஏனென்றால் எம் பெண்களிடமில்லாத வாழ்வு தொடர்பான மாற்றுப் பார்வையை, தரிசனத்தை முன்வைக்க அந்த அவளின் வருகை அவசியமாக இருக்கிறது. கடைசிவரை அவள் என்னவானாள் என்று அறிவதற்கிடையில், அவன் அவளோடான அந்த அற்புத வாழ்வை வாழ்ந்து முடித்துவிட்டு கடைசியில் மனநல மருத்துவரின் வாயிலிருந்து அப்படியான ஒருத்தி அவன் வாழ்வில் வரவேயில்லையென்று சொல்லவைத்து நியாயம் செய்துவிட்டுத் தப்பித்துவிடுகிறார் ஆசிரியர். வாழ்த்துகள் இளங்கோ. உங்கள் எழுத்துகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்துவருகிறேன். நீண்ட காத்திருப்பின் பின் உங்கள் புத்தகம் கைவசம் கிடைத்தது மகிழ்ச்சி. உங்களைப் போல விமர்சனமெல்லாம் எழுதமுடியாது. ஆனாலும் ஒரு வாசகியாக நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொண்டேன் என்பதில் ஐயமில்லை. "Ich Erzähler" என்று சொல்லப்படும் வகையில் எழுத்தாளர் கதையை நகர்த்தும் விதமும், சொல்லாடல்களும் மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன!

காதல் ஓர் அழகிய உரையாடல்

Friday, February 05, 2021

'ஹரம்' திரைப்படத்தை முன்வைத்து


வாழ்க்கை என்பது ஒருபோதும் ஒழுங்குகளிற்குள்ளும், நமது கட்டுப்பாட்டிற்குள்ளும் நகர்ந்துகொண்டிருப்பதில்லை. அவ்வாறே நிகழும் நிகழ்வுகளுக்கும் அநேக பொழுதுகளில் ஒன்றுக்கொன்று தொடர்புகள் இருப்பதில்லை. இவ்வாறு காட்சிகளை முன்னும் பின்னும் நகர்த்தியபடியும், எங்கிருந்தும் எப்படியும் எதையும் தொடங்கலாம் என்கின்றமாதிரி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஹரம்.


எல்லாக் காட்சிகளுக்கும் ஒரு தெளிவான விளக்கத்தையும், நேர்கோட்டுக் கதை சொல்லலையும் மட்டும் விரும்புகின்ற பார்வையாளர்களை இது வெளியில் தள்ளிவிடவே செய்யும். ஆனால் நமது நாளாந்த வாழ்வு என்பது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத புதிது புதிதாய் முளைக்கும் தருணங்களினூடாக பொங்கிப் பிரவாகித்து நகர்ந்துகொள்வதென்பதை உணர்ந்தவர்களுக்கு இது நெருக்கமான ஒரு படமாக ஆகக்கூடும்.


பெங்களூரில் உள்ள பெருநிறுவனமொன்றில் பாலுவும் இஷாவும் வேலை செய்கின்றனர். இஷாவிற்கு ஏற்கனவே ஒரு காதல் இருந்து அது தோல்வியில் முடிவடைந்து, அதன் துயரிலிருந்து வெளிவர முடியாது தவிர்க்கின்றார். நினைவுகளின் சுமை தாங்காமல், கையை அறுத்து தற்கொலையின் எல்லைவரை செல்கின்றார். அவரை மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு மீட்டுக்கொண்டு வருகின்றார் பாலு. இருவருக்குமிடையில் மார்க்வெஸின் 'கொலராக் காலத்தில் காதலிலிருந்து', ஓ.விஜயனின் நாவல்களை வரை பேசக்கூடிய ஒத்த அலைவரிசை இருக்கிறது. 



பாலு கல்லூரிக்காலத்தில் புரட்சி மீது நம்பிக்கையுடையவராக இருக்கின்றார். சேயினுடைய 'புரட்சி என்பது ஆப்பிள் அல்ல, தானாய்க் கனிந்து விழுவதற்கு, நாம்தான் அடித்து விழுத்தவேண்டும்' என்பது பாலுவிற்குப் பிடித்த புரட்சிகர வார்த்தைகள். ஆனால் அப்படி இருந்தவரை வாழ்க்கை ஒரு பல்தேசிய நிறுவனத்திற்குக் கொண்டுவந்து சேர்த்துவிடுகின்றது. அவர் எப்படி இந்த இடத்திற்கு வந்துசேர்கின்றார் என்பது படத்தில் காட்டப்படுவதில்லை. ஆனால் இளமைக்காலத்தில் இப்படி புரட்சி பற்றி பெரும் நம்பிக்கையோடு இருந்தவர்கள் பலர் திசைமாறிப் போன கதைகள் நம்மிடம் பலநூற்றுக்கணக்கில் இருக்கின்றதுதானே.


ஒத்தவரிசையில் இருப்பதாய் நம்பும் பாலுவும் இஷாவும் எளியமுறையில் திருமணஞ்செய்து கொச்சினுக்குச் சென்று வாழத் தொடங்குகின்றார்கள். அவர்கள் நினைத்தமாதிரி சேர்த்து வாழ்தல் என்பது எளிதாய் இருக்கவில்லை. மெல்ல மெல்லதாய் முரண்கள் அவர்களுக்கிடையில் வரத்தொடங்குகின்றது. ஒருமுறை இஷாவினது வேலையிட விருந்திற்குச் செல்லும்போது, இஷாவை உடல்ரீதியாய் மிகமோசமாய் விபரிக்கும், இஷா வேலை பார்க்கும் நிறுவன அதிபரோடு பாலு சண்டை பிடிக்கின்றார். அந்த விருந்து அத்தோடு குழம்புகின்றது. பாலுதான் இதைக் குழப்பினவன் என்று இஷா குற்றஞ்சாட்டுகின்றார். இனி தன் நிறுவன அதிபரை எந்த முகத்தோடு சந்திப்பது, தான் தன் வேலையை இராஜினாமாச் செய்யப்போகின்றேன் என்கிறார் இஷா.


பாலுவோ, இப்படி பெண்களைப் பாலியல் பண்டங்களாக ஒருவர் பேசுவதைச் சகித்துக்கொள்ளச் சொல்கின்றாயா எனக் கேட்கின்றார். பல்தேசிய நிறுவனங்களில் இவ்வாறு பேசுவது இயல்பு, நாம் தான் சமாளித்துக்கொண்டு போகவேண்டும் என்கின்றார் இஷா. தொழிலாளர்க்கு உற்பத்தியில் பெரும் பங்கிருக்கின்றது, அவர்களைக் கீழ்த்தரமாக நடத்தமுடியாது என்று பாலு மறுத்துக்கூறும்போது, இப்படி கம்யூனிசம் பேசும் நீயேன் பல்தேசிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாய் எனக் கேட்கின்றார். இந்த விவாதம் இப்படியே நீண்டு பாலு அதிகம் கதைத்ததற்காய் மன்னிப்புக் கேட்கின்றபோதும், இஷா இறுதியில் வீட்டை விட்டு வெளியேறுகின்றார்.



ஷா முன்பு எப்படி தன் பழைய காதலை மறக்கமுடியாது தவிர்த்தாரோ, அவ்வாறே இப்போது பாலுவினால் இஷாவின் பிரிவைத் தாங்க முடியாதிருக்கின்றது. தன் துயரைத் தவிர்க்க நிறையக் குடிக்க ஆரம்பிக்கின்றார், தனித்தும் போகின்றார். இதன் தொடர்ச்சியில், இஷா irreconcilable differences என்பதன் அடிப்படையில் விவாகரத்துக்கோரி பாலுவிற்கு விண்ணப்பம் அனுப்புகின்றார். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் இணைவோம் என்றிருந்த பாலுவிற்கு இது கோபத்தை மூட்ட, இஷாவின் அலுவலகம் சென்று மூர்க்கமாய்ப் பேசுகின்றார்.


இவர்களின் இருவரின் வழக்கை விசாரிக்கும் வழக்கறிஞர், இருவரிடமிருந்தும்- முக்கியமாய்- இஷாவிடமிருந்து எது முக்கிய காரணம் இந்த விவாகரத்துக் கோரிக்கையிற்கு என்பதை அவரால் அறியமுடியாதிருக்கின்றது. இஷா தனக்கு விவாகரத்து வேண்டும் என்று அடம்பிடிக்கின்றார். இறுதியில் வழக்கறிஞர் உங்கள் இருவரோடும் தனித்தனியாகக் கதைத்துப் பார்த்தன்படி, நீங்கள் இருவருமே ஒருவரையொருவர் வெறுக்கவில்லை என்பது தெரிகின்றது என்கின்றார். 'சிலவேளைகளில் எல்லாவற்றுக்கும் ஒரு தெளிவான காரணம் இருப்பதில்லை, என்னால் இந்த உறவில் இருக்கமுடியாது' எனச் சொல்கிறார் இஷா.


இதற்கிடையில் இன்னொருகதை சமாந்தரமாய்ப் போகின்றது. பெண் மீதான வன்முறை எப்படி பொதுவெளியில் சாதாரணமாய் நிகழ்கின்றது என்பதற்கான ஒரு சம்பவம் நிகழ்கின்றது. இதுவும் பாலுவின் வாழ்வில் ஒருவகையில் இடைவெட்டுகின்றது. கொச்சின் வாழ்க்கை துயரத்தைத் தருகின்றது என்பதால், வேலையையும், வீட்டையும் விட்டு பாலு வெளியேற விரும்புகின்றார். முதலில் விவாகரத்திற்கு கையெழுதிட மறுக்கும் பாலு பின்னர் கையெழுத்திடவும் விழைகிறார்.


பாலு, ஒரு பெண் அப்பாவியாக இறந்த சம்பவத்திற்கான நீதியைத் தேடிப் போகின்றார். அதற்கு அவர் கல்லூரிக்காலத்தில் நம்பிக்கை வைத்த புரட்சி ஒருவகையில் உதவுகின்றது. கொச்சினை விட்டு முற்றாக வெளியேறும் பாலுவின் முடிவை ரேடியோவில் வேலை செய்யும் பெண், இங்கே செய்வதற்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறதென இன்னொரு திசையைக் காட்டி, கைவிடச் சொல்கின்றாள்.


உறவின் ஒருவருடஇடைவெளி, இஷாவை மீண்டும் பாலுவிடம் சேர்வதற்கான மனோநிலையை உண்டாக்கின்றது. பாலு இப்போது விவாகரத்தில் கையெழுத்திட்டு, 'நீ இனி சுதந்திரமானவள்' என இஷாவிடம் அழைத்தும் சொல்கின்றார். இஷாவோ உன்னோடு கதைக்கவேண்டும், நாம் அந்தப் பழைய பாலுவாகவும், இஷாவாகவும் பேசவேண்டுமெனக் கேட்கின்றார். 


உண்மையில் இஷா இப்போது மீண்டும் பாலுவோடு சேர்ந்து வாழ்வதற்கான மனோநிலையோடே வருகின்றார். பாலுவிற்கும் அது தெரியும். ஆனால் பாலு தனக்கான வாழ்வின் வேறொரு திசையைத் தேர்ந்தெடுத்துவிட்டார். 'நீ என்னை வெறுக்கலாம், காதலை வெறுக்காதே, காதல் ஒரு அழகிய உரையாடல்' என்று அணைத்து இஷாவை வழியனுப்புகின்றார். இஷா போகும்போது நீ ஏதோ பேச விரும்பினாய் அல்லவா? எனக் கேட்க, 'இல்லை இனிப் பேசுவதற்கு எதுவுமில்லை'யென இஷா என்றென்றைக்குமாய் பாலுவை விட்டு பிரிந்து போகின்றார்.



ந்தப் படத்தில் கதை ஒரு தொடர்ச்சியாகச் சொல்லப்படுவதில்லை. சிறு சிறு துண்டுகளாகவே மாறி மாறி சித்தரிக்கப்படுகின்றன. அதிலிருந்து தனக்கான திரைக்கதையை உருவாக்குவது பார்வையாளருக்கு சவால் தரும் ஒரு விடயம்.  அதுபோலவே, பல சம்பவங்களில் எல்லாவற்றையும் அலசி ஆராயும் நிலையும் இருப்பதில்லை. நமக்குத் தோன்றும்/தெரியும் காரணங்களோடு பொருத்திப்பார்க்கவேண்டியதுதான். ஓரிடத்தில் வழக்கறிஞர் இஷாவிடம், ஏன் நீங்கள் மீண்டும் சேரக்கூடாது என்கின்றபோது, 'நான் என்னை நானே நேசிக்கத் தொடங்கியிருக்கின்றேன். அது எனக்குப் பிடித்திருக்கின்றது' என்பார். 


இதை பார்வைளார்களாகிய எம்மால் உடனே விளங்கிக்கொள்ளக் கடினமாகவே இருக்கும். தன்னைத் தானே நேசிக்கும் ஒருவருக்கு, அவருக்கான சுதந்திரம் மிகப்பெரிதாக இருக்கும். அதை எந்த உறவாயினும் ஏதோ ஒருவகையில் தடைசெய்யவே பார்க்கும் என்பதாக நாம் விளங்கிக்கொள்ளலாம். அந்த 'தன்னைத்தானே நேசிக்கும் நிலை' பிறகு பிறரையும் நேசிக்கும் நிலைநோக்கி நகரும். ஆகவேதான் இஷாவினால் பாலுவை நீண்ட இடைவெளியின் பின் புரிந்துகொள்ள முடிகின்றது. தமது கடந்தகால முரண்களைத்தாண்டி சேர்ந்து வாழும் மனோநிலைக்கு மீண்டும் வரவும் செய்கின்றார். இவ்வாறு பல சம்பவங்கள் நாம் விரித்துப் பார்க்கக்கூடிய பல இடங்கள் இப்படத்தில் இருக்கின்றது.


இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த விடயம் என்னவென்றால், அநேகமாய் திருமணத்தின் முன் ஆண்களின் காதல்களே திரைப்படங்களில் காட்டப்பட்டிருக்கும் நிலையில், இதில் ஒரு பெண்ணின் காதல் காட்டப்படுகின்றது. தன் காதலுக்காய் உயிரையே கொடுக்கத் துணிகின்ற பெண்ணை நேசிக்க இன்னொரு ஆண் இருப்பதையும், அந்த  ஆணுக்கு அவளின் கடந்தகாலக்காதல் எவ்விதத் தொந்தரவு செய்வதுமில்லையென இயல்பாய்க் காட்டப்பட்டிருக்கின்றது. மேலும், இவ்வாறு காதலில் தோற்ற ஒரு பெண், திருமணம் என வருகின்றபோது, எல்லாவற்றையும் சகித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதையும் தனக்கான விவாகரத்தை அவள் கோரும்போதும் தெரிகின்றது. 


அதேசமயம், ஒரு பெண்ணோடு அளவிறந்த நேசத்தோடு இருக்கும் ஒரு ஆண், அவளின் முடிவுகளால் தன் சுயத்தையே இழந்து, அவளின் மீள்வரவை எதிர்ப்பார்த்து காத்திருந்தபோதும், அவள் மீண்டும் திரும்பிச் சேரும் விருப்பத்தைக் காட்டும்போது, அதை மென்மையாக மறுத்து, வாழ்க்கை தொடர்ந்து நகரவேண்டியது, நகரும். உனக்கான காதலை நீயடைவாய் என வாழ்த்துவதும், தனக்கான செய்கைகளுக்காய் மன்னிப்புக் கேட்பதும் அழகான காட்சிகள்.


இப்படத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டதற்காய் நிகழும் இன்னொரு 'பழிவாங்கல்' கொலையை எந்தப் பொழுதிலும் ஆதரிக்கமுடியாது அந்த காட்சியிலும் ஒரு மாற்றை இயக்குநர் யோசித்திருப்பாராயின் இன்னும் ஒரு அழகிய படமாய் விரிந்திருக்கும்.


நிகழும் ஒவ்வொன்றும் நாம் காரணங்களைத் தேட விழையும்போது சிலவேளை கடந்தகாலத்தில் உறைந்துபோய்விடவும் கூடும். பலவீனங்களுள்ள மனிதர்களான நாம் தவறுகளையும் செய்யாது வாழ்ந்து செல்வதும் கஷ்டமானதே. ஆனால் வாழும் காலத்தில் நம் பலவீனங்களை உணர்ந்து, இயன்றவரை மனிதர்களை வெறுக்காது ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சிக்கலாம். அந்த ஒரு புள்ளியை இத்திரைப்படம் ஏதோ ஒருவகையில் நமக்கு உணர்த்திச் செல்கின்றது.

------------------------------

(2016)