கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தாய் என்னும் எனது வழிகாட்டி - 02

Friday, April 29, 2022

 

4.


வியட்னாமில் அமெரிக்கா செய்யும் யுத்தத்தை நிறுத்த, மாட்டின் லூதர் கிங்கோடு தாய் கரம் சேர்ந்தவர். மாட்டின் லூதர் கிங் அன்றையகாலத்தில் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காய் தாயை பரிந்துரையும் செய்திருக்கின்றார். இவ்வாறு சமாதான நடவடிக்கையில் ஒரு புத்த துறவியாக இருந்தபோதும் ஈடுபட்டதாலேயே, அன்று அமெரிக்கச் சார்புடைய தென் வியட்னாமிய அரசால் தாய், அமெரிக்காவிலிருந்து மீண்டும் நாடு திரும்புவது மறுக்கப்பட்டு அகதியாக்கப்பட்டார்.


தனது சொந்த நாடு திரும்ப முடியாத அவலத்தினால், அவர் பிரான்சுக்குப் போய், பிரான்சின் தென்முனையில் plum villageஐ அமைக்கின்றார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 40 வருடங்களின் தாண்டிய பின்னே வியட்னாம் திரும்புகின்றார். இதற்கிடையில் அன்று 'boat people' என்று அழைக்கப்பட்ட, வியட்னாம் போரின் நிமித்தம் தப்பியோடிய, வியட்னாமிய மக்களின் துயரக்கதைகளைக் கேட்கும் ஒருவராகவும், இயன்றளவு உதவிகளை வழங்கக்கூடியவராகவும் இருந்திருக்கின்றார். அவ்வாறு படகுகளில் தப்பியவர்களை அன்றைய காலங்களில்  கடற்கொள்ளையர் கொல்வதும், பாலியல் பலாத்காரங்கள் செய்வதும் கூட நிகழ்ந்திருக்கின்றன.


அவ்வாறு ஒருநாள் தாயுக்கு, இவ்வாறு படகில் தப்பிப்போன ஒரு 12 வயதுச் சிறுமியை கடற்கொள்ளையர் பாலியல் வன்புணர்வு செய்து கொன்றனர் என்கின்ற கொடுஞ்செய்தி வருகின்றது. அந்த நிகழ்வை ஒருபோதும் மன்னிக்கமுடியாது என்கின்ற தாய், அதற்கான பழிவாங்கல், பெருங்கோபம் என்பவற்றுக்கு அப்பால இருந்து, இந்த விடயங்களை நம்மை நிதானமாகப் பார்க்கச் சொல்கின்றார். 


அதே போல், ஒருமுறை தாய் அமெரிக்க இராணுவத்துக்கான நிகழ்வைச் செய்தபோது, வியட்னாமில் பணிபுரிந்த ஒரு இராணுவத்தினன் தனது கதையைப் பகிர்கின்றார். அவர்கள் இருந்த குழுவின் மீது வியட்னாமிய போராளிகள் தாக்குதல் கொடுத்து அழிவைக் கொடுத்தபின், இவருக்கு அவர்களைப் பழிவாங்கும் வெறி மிகுகின்றது. ஒருமுறை சாப்பாட்டில் சயனைட்டை வைத்துவிட்டு போராளிகள் வந்து சாப்பிடுவார்கள் என்று ஒளிந்து நின்று காத்திருக்கின்றார். அதை அந்த வழியால் தற்செயலாகப் போகும் சிறுவர்கள் சாப்பிட்டு 5 குழந்தைகள் இறக்கின்றனர். அவர் அந்தக் குழந்தைகளின் பெற்றோர் ஓலமிட்டு அழுவதுவரை மறைந்திருந்து பார்க்கின்றார். 


அதன்பிறகு இந்த இராணுவத்தினன் ஒருபோதும் குழந்தைகளோடு இருக்கமுடியாத பதற்றத்தை அடைகின்றார். குழந்தைகள் ஒர் அறைக்குள் இருந்தாலே இவரால் தாங்குமுடியாது, அந்த இடத்தை விட்டு தப்பி ஓடக்கூடியவராக இருக்கின்றார். இந்த நிகழ்வைத் தாயிற்கு அவர் கூறுகின்றார். தாய், 'நீங்கள் கொன்ற குழந்தைகளுக்கான பழியிலிருந்து எளிதாகத் தப்பமுடியாது. ஆனால் நீங்கள் உண்மையில் அதற்காய் வருந்துவீர்களாயின், இனியான காலத்தில் என்ன செய்யமுடியுமென யோசியுங்கள். அன்று போல, இன்றும் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் அநியாயமாய் இறந்துபோய்க் கொண்டிருக்கின்றனர். அவர்களில் தினம் ஐந்து குழந்தைகளைக் காப்பாற்றும் விடயங்களில் நீங்கள் கவனம் கொள்ளலாமே' எனச் சொல்கின்றார். 


இத்தனைக்கும் தாய் அன்று வியட்னாமியர்களுக்காய், அந்தப் பிள்ளைகளைப் போன்ற பலர், போரால் கொல்லப்படக்கூடாதென்று போராடியவர். ஒரு வியட்னாமியராக இருந்தும் தாய் அமெரிக்க இராணுவத்தினனை வாஞ்சையுடனேயே அணுகுகின்றார். அதுவே தாய் நமக்குக் கற்றுத்தருகின்ற முக்கிய விடயம். சமாதானம் என்பது போரை நிறுத்துவது மட்டுமில்லை, பாதிக்கப்பட்ட மக்களை அரவணைத்துக் கொள்வது மட்டுமில்லை, பாதிப்புச் செய்தவர்களையும் மன்னிக்கச் செய்கின்ற மகத்தான மானுடத்தைக் கற்றுக்கொள்ளவே எங்களை வேண்டுகின்றார். 


ஆகவேதான் படகில் வந்த சிறுமியை பாலியல் வன்புணர்ந்த கடல்கொள்ளைக்காரரான நான் கூட அந்தக் கொள்ளைக்காரன் பிறந்த இடத்தில் வளர்ந்திருந்தால் அவனைப் போல ஆகியிருக்ககூடும். ஆகவே தீர்ப்புக்களை எழுத முதல் நம்மை நாமே ஆழப்பார்க்கவேண்டும் என்று ஒரு கவிதையில் சொல்கின்றார்.


இவற்றை மேலோட்டமாகப் பார்க்கும்போது ஏன் எமக்கு இவர் இப்படிச் சொல்கின்றார் என்று எரிச்சலும், ஆற்றாமையும் கூட வரலாம். ஆனால் மிக நிதானமாக, ஆழமாக உள்ளே பார்த்தால், இந்த விடயங்கள் பிறகு இன்னும் பெரும் திரளைப் பாதிக்கும் வெஞ்சினத்தின் விதைகளைக் கொண்டிருக்கையில் அது இதைவிட மேலும் பெரும் பாதிப்புக்களைத் தந்து நமது பல சந்ததிகளையே பாதிக்கலாம் என்பது புரியவரும். 



5.


'எனது உண்மையான பெயரில் என்னை அழையுங்கள்'. அப்போதுதான் உங்களால் என்னை ஆழமாகப் பார்க்கமுடியும் என்கின்றார் தாய். 


நானே உகண்டாவில் பட்டினியால் வாடும் மிக மெலிந்த குழந்தை. அதே நானே, உகண்டாவில் நடக்கும் போரில் ஆயுதங்கள் விற்கும் வியாபாரியுங்கூட. நானே வியட்னாமில் இருந்து படகில் ஏறி தப்பியோடிய குழந்தை. நானே அந்தக் குழந்தையை பாலியல் வன்புணர்ந்து கடலுக்குள் வீசிய கடற்கொள்ளைக்காரனும் கூட. 


ஆகவே என்னை எனது உண்மையான பெயர்களால் அழையுங்கள். நாம் எவராகவும் எந்தப் பொழுதிலும் இருக்கக்கூடுமென எங்களை எச்சரிக்கை செய்யவும், எமது தன்னிலைகளை ஆழமாகப் பார்க்கவும் தாய் நம்மை அழைக்கின்றார்.


"I am the child in Uganda, all skin and bones,

my legs as thin as bamboo sticks.

And I am the arms merchant,

selling deadly weapons to Uganda.


I am the twelve-year-old girl,

refugee on a small boat,

who throws herself into the ocean

after being raped by a sea pirate.

And I am the pirate,

my heart not yet capable

of seeing and loving"


மேலும் தாய் வன்முறையைக் கைவிடுதல் (non-violence) என்பதைத் தொடர்ந்து வற்புறுத்தியவர்.


'உன்னையொருவர் கோபப்படுத்துகின்றார், காயப்படுத்துகின்றார் என்றால், அவர் உன்னை விட நிறையக் கோபத்திலும், காயத்திலும் இருக்கின்றார், அதைப் புரிந்துகொண்டு எந்த மறுவினையும் செய்யாது உன் இயல்புக்கு நீ திருப்பிப் போக முயற்சி செய், இதன் நிமித்தம் உனக்கு வரும் கோபத்தை நீ முதலில் அரவணைத்துக் கொள்' என்றுதான் தொடர்ந்து எங்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருந்தவர் தாய்.


மேலும் புத்தரின் மத்தியபாதை (middle path) எல்லாவற்றுக்கும் நல்லதென்பதால், தாய் வியட்னாமிய போரில் அமெரிக்கா பின்னணியுடைய தென்வியட்னாமிய அரசு சார்ந்தோ அல்லது அதற்கெதிராகப் போராடிய சோவிய ரஷ்யா/சீனா சார்புடைய கம்யூனிசப் போராளிகள் சார்ந்தோ ஒரு நிலை எடுக்காதுவிட்டிருந்தால் கூட அவரின் நிலைப்பாடு தவறென்று கூட சொல்லமுடியாது. அவரொரு புத்த துறவியாக இருந்தும், எந்த நிலைப்பாடு எடுக்கவேண்டிய நிர்ப்பந்தமும் இல்லாதபோதும், அன்று அவர் வியட்னாமிய மக்களின் பக்கமே நின்றவர்.



6.


தாயை, அவரின் புத்தகங்களின் ஊடாக வாசித்தே நான் நிறையக் கற்றிருக்கின்றேன். ஏனெனில் அவரின் பேச்சைக் கேட்கும்போது என்ன இந்த மனிதர் ஒரே இயற்கையையும், ஒரு குறிப்பிட்ட விடயங்களையும் திரும்பத் திரும்ப -அதுவும் மிக எளிமையான சொற்களில்- சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்ற எண்ணமே நீண்டகாலம் இருந்தது. ஆனால் அவரின் words/notionsஐ தாண்டி ஏதோ ஒரு கணம் அவரின் உரைகளில் சில உள்ளே ஆழந் தொட்டபோது நான் உணர்ந்த மெளனம் அரிய அனுபவமாக இருந்தது. சிலவேளைகளில் தாயையோ அல்லது தாயைப் போன்றவர்களினூடாக நீங்கள் இந்த அமைதியை உணர்ந்தவர்களாக இருக்கக்கூடும்.


ஒருவகையில் நமது நகுலன் சொன்னதுங்கூட,

'ஆர்ப்பரிக்கும் கடல் 

அதன் அடித்தளம்

மெளனம்; மகா மெளனம்'


தாயினூடாக நிறையக் கற்றுக்கொண்டாலும், எனக்கு அவர் இந்த வாழ்க்கையை இன்னும் நிதானமாக/மெதுவாக (slowing down) அணுகிப் பார்க்கலாம் என்று கற்றுத்தந்ததைத்தான் முக்கியமானதெனச் சொல்வேன். வேறு எந்த ஆசிரியர்களை விடவும், தாய்தான் வாழ்க்கையில் எதற்கும் அவ்வளவு அவசரப்படத்தேவையில்லை என்பதை நாம் செய்யும் சிறுவிடயங்களினூடாக கற்றுக்கொள்ளலாம் என்று சொல்லித்தந்தவர். நடப்பதை எப்படி விழிப்புடன் மெதுவாக நடப்பது என்பதையும், சாப்பிடும்போது எப்படி மிக ஆறுதலாகச் சாப்பிடுவது என்பது பற்றியும், பருவங்கள் மாறும்போது அதன் ஒவ்வொரு சாறையும் துளித்துளியாக இரசிக்கலாமெனவும் திசைகளை வழிகாட்டியவர்.


வெளியில் வெண்பனி மூடிய நிலப்பரப்பை இப்போது பார்க்கின்றேன். அவ்வளவு வெண்மை, அவ்வளவு சூரிய ஒளியின் பிரகாசம். 


இதோ இவ்வளவு குளிருக்குள்ளும் மெல்லச் சிறகடித்து வரும் அந்தச் சிறுபறவை, நீங்கள் அல்லவா தாய்!


********************


(முற்றும்)


நன்றி: 'அகநாழிகை' - ஏப்ரல், 2022

புகைப்படங்கள்: இணையம்





தாய் என்னும் எனது வழிகாட்டி – Thich Nhat Hanh

Thursday, April 28, 2022


1.


எனது ஆசிரியரான தாய் (Thich Nhat Hanh) மறைந்ததிலிருந்து கிட்டத்தட்ட ஒரு வாரமாக அவரின் நினைவுகளோடு இருந்தேன். அவர் வியட்னாம் யுத்தத்தின்போது, சொந்த நாட்டிலிருந்து 1960களில் வெளியேற்றப்பட்ட பின், பிரான்ஸின் தென்பகுதியில் 'பிளம் கிராமம்' (Plum Village) அமைத்து தனது கற்பித்தல்களைத் தொடர்ச்சியாகச் செய்து வந்தவர்.


ஒரு ஸென் துறவியாக மட்டுமின்றி, அவர் ஒரு கவிஞரும் கூட. வியட்னாமில் இருந்த காலங்களில் பத்திரிகைகள் தொடங்கி நடத்தி வந்திருக்கின்றார். அதுபோல பல்வேறு பெயர்களில் எழுதியும் வந்திருக்கின்றார். சிறுகதைகள் கூட அவ்வப்போது எழுதியிருக்கின்றார். அநேக ஸென் வட்டங்களைச் சேர்ந்தவர்களைப் போல, பொதுவிடயங்களில் இருந்து விலத்தி இருக்காமல், தொடர்ச்சியாக சமாதானம், காலநிலை மாற்றங்களுக்காய் தனது பங்களிப்பைச் செய்து வந்தவர் என்பதால் தாய் எனக்கு இன்னும் நெருக்கமானவர்.


அவர் மறைந்ததிலிருந்து இறுதிக்கிரியைகள் நிகந்த ஒருவாரத்தில், அவரை இன்னும் நிதானமாக வாசிக்கவும், கேட்கவும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. பிளம் விலேஜ்ஜின் தினசரி தியான செயற்பாடுகளையும், வியட்னாமில் நடந்துகொண்டிருந்த இறுதிக்கிரியைகளையும் பார்த்துக் கொண்டிருந்தபோது இதுவரையில்லாத ஒரு சிறுமாற்றத்தை என்னளவில் உணரமுடிந்தது. அதற்கு என் ஆசிரியருக்கு மிக்க நன்றி.


'இங்கே வருவதும் போவதும் விடுதலையினூடாக நிகழ்வது' என்று சொன்ன தாய், 'இறப்பும் பிறப்பும் ஒருபோதும் நிகழ்வதில்லை, எல்லாமே தொடர்ச்சியான ஒரு செயற்பாடு' என்று அடிக்கடி எங்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருந்தவர்.


அவரின் இறுதிக்கிரியைகள்/உடல் எரியூட்டலை நான்கு மணிநேரமாக நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருமுறை அவரின் மாணவரான ஒருவர், தாயின் மீதான அன்பின் நிமித்தம் வியட்னாமில் ஒரு ஸ்தூபாவைக் கட்டி தாயின் இறப்பின் பின் அங்கு அவரின் சாம்பலை வைத்து வழிபடப்போவதாகக் கேட்டபோது, அவர் அப்படிக் கட்டினால் கூட நீங்கள், 'இதன் உள்ளே தாய் இல்லை' என்று எழுதி வைக்கவேண்டும் என்றவர். அதுமட்டுமில்லை அடுத்து, 'ஸ்தூபாவின் உள்ளே மட்டுமில்லை, வெளியிலும் நானில்லை' என்றவர். 'நான் எல்லா இடங்களிலும் இருப்பவன் என்றால், நான் உங்களின் விழிப்புணர்வான மூச்சிலும், நிதானமான நடையிலும் இருப்பேன்' என்று கூறியவர்.


பிறப்பும், இறப்பும் இந்த உடலினூடாகக் கடந்து போகின்றதே தவிர, ஒருவரும் இறப்பதுமில்லை, பிறப்பதுமில்லை என்று நமது notions களை மாற்றிப் பார்க்கச் சொன்னவர் தாய். ஆகவேதான் தனது சாம்பல் இந்தப் பூமி மீது தூவப்படவேண்டும் என்றவர். தன்னை அப்படித் தூவப்பட்ட சாம்பல் படிந்த பருவ மாற்றங்களினூடாக, உடைந்த மெல்லிய சிறகுடன் பறக்கும் பூச்சியினூடாக, பச்சை புழுவினூடாகப் பார்க்கச் சொன்னவர். 



2.


Thay எனக்கு அறிமுகமாகி அவரைப் பின் தொடர்ந்துகொண்டிருந்த காலங்களில், நண்பரொருவர் எனக்கு அறிமுகமானவர். அவரும் நானும் பல விடயங்களில் ஒத்த அலைவரிசை என்பதால், தாயை அவருக்கும் அறிமுகப்படுத்தியிருந்தேன். என்னைவிட அவர் தாயுக்குள் ஆழமாய் நுழைந்து, நாங்கள் இருவரும் தாயைப் போய் பிரான்ஸில் சந்திப்பது என்று மிகுந்த நம்பிக்கையுடன் திட்டங்களை வகுத்து வைத்திருந்தோம். அன்று நம் இருவருக்கும் சேர்ந்து வாய்க்காத நேரம்/பொருளாதார வசதி என்பவற்றால் அது பின்னர் சாத்தியமில்லாது போயிற்று. அந்த நண்பரோடு இருந்த நெருக்கமும் பின்னர் குறைந்து போயிற்று.


தாயின் மறைவு அறிந்த நள்ளிரவில் அந்த நண்பர், ‘தாயின் dismissal அறிந்தாயா’ எனத் தகவல் அனுப்பியிருந்தார். தாயை ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்று கனவுடன் இருந்தவர்களல்லவா நாங்கள், சாத்தியப்படாமலே போய்விட்டதென்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். அந்த நண்பரோடு நெருக்கமாக இருந்த காலங்களிலே தமிழில் தாயை அறிமுகப்படுத்தவேண்டும் என்று சொல்லி அவர் என்னை தாயை தமிழாக்கம் செய்யச் சொல்லி உற்சாகப்படுத்தியவர். 


தாய் கற்றுத்தந்தவைகளின் நிமித்தமும், அந்த நண்பரின் நேசம் தந்த நெகிழ்ச்சியின் காரணமாகவும், பின்னர் நான் தாயின் நூலொன்றைத் தமிழாக்கத் தொடங்கியிருந்தேன். அதைச் சில வருடங்களுக்கு முன்னர் முடித்துமிருந்தேன். நான் விரும்பிய வடிவமைப்புடனும், பிளம் விலேஜ்ஜின் உரிய அனுமதியுடனும் அந்தத் தமிழாக்கத்தை ஏதேனும் ஒரு தமிழ்ப் பதிப்பகம் கொண்டுவரவேண்டுமென்பதற்காய் இப்போதுவரை பொறுமையாய்க் காத்திருக்கின்றேன். தாய் மறைந்ததை அறிந்தபோது அவர் கற்றுத்தந்தவைகளுக்காய், அதை வெளியிட்டு சிறு நன்றியையாவது தெரிவிக்கவேண்டுமென மனது ததும்பிக் கொண்டுமிருக்கின்றது. 



3.


எனது ஆசிரியரான தாய் சமாதானத்துக்காகவும், வன்முறையற்ற விடயங்களுக்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர். ஒருவகையில் இது அவரை பிற ஸென் துறவிகளில் இருந்து வேறுபடுத்துகின்றது. தாய் இதை இளையவராக இருந்த காலத்திலிருந்தே செய்யத் தொடங்கியவர் என்பதுதான் கவனிக்க வேண்டியது.



வியட்னாமில் பெரும்போர் 1955-1975இற்கும் இடையில் நடைபெற்றதை நாம் அறிவோம். அதற்கு முன்னர் வியட்னாம் பிரான்ஸின் காலனியாக ஆக்கப்பட்டுமிருந்தது. தாய் தனது Root temple என அழைக்கும் தென்வியட்னாமில் இருந்த மடாலயத்தில் இருந்து துறவியாக வந்தவர். அங்கே இருந்த காலங்களில் அவர் புத்தர் உரைத்தவற்றை, நாம் இந்தக் காலத்துக்கு மீள பரிட்சித்துப் பார்க்கவேண்டும் என்று விரும்பி, அந்த மடலாயத்தில் இருந்து அனுமதி பெற்று வெளியேறியவர். அதன் பின் அவரின் பெயரை Nhat Hanh (Nhat- One, Hanh- Action) என மாற்றிக்கொண்டவர். முன்னொட்டாக இருக்கும் Thich, வியட்னாமிய மரபில் புத்தரின் தொடர்ச்சியில் இருந்து வருகின்றவர்கள் என்பதைக் குறிப்பதாகும் - புத்தரின் இன்னொரு பெயர்). ஆகவேதான் Thich Nhah Hanh என்ற அவரை தாய் என நாம் அழைக்கின்றோம்.  தாய் (Thay) என்பதற்கு வியட்னாமிய மொழியில் ஆசிரியர் என்று அர்த்தமாகும். இதிலிருந்து தாய் பிற புத்த துறவிகளைவிட அதிகம் செயலுக்கு (Engaged Buddhism) முக்கியம் கொடுத்தவர் என்பதையும் புரிந்துகொள்ளமுடியும். 


தாய், வியட்னாமில் இருந்த புத்த பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்தபோது, 14 mindfulness களை 1966 இல் வியட்னாமில் உருவாக்குகின்றார். இதை உருவாக்கும் காலத்தில் அவர் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். அவ்வாறு சமூகசேவைகளில் ஈடுபட்ட ஆறுபேரையே முதன்முதலாக தனது மாணவர்களாக ஏற்றுக்கொள்கின்றார். அதில் மூன்று பேர் பெண்கள், மிகுதிப் பேர் ஆண்கள்.


அப்படிச் சேர்ந்த, இப்போதும் உயிர்வாழ்கின்ற ஒரு பெண் மாணவர் அப்போது பிரான்ஸில் கற்றுக்கொண்டிருந்தவர். தாயின் அழைப்பை ஏற்று வியட்னாமுக்குத் திரும்புகின்றார். அந்த 6 மாணவர்களில், 3 பெண்களும் குடும்பவாழ்வைத் துறந்து 'பிரமச்சாரியத்து'க்குத் தம்மைத் தயாரென்றபோது, தாய் அதை ஒத்திவைக்கச் சொல்கின்றார். மற்ற ஆண்கள் என்ன நிலையில் இருக்கின்றார்கள் என்று தெரியாதபோது உடனே அனைவரும் பிரமாச்சரிய ஏற்றலை பிற்போடுவோம் எனக் கூறுகின்றார். ஏனெனில் அந்த ஆண்களில் அனைவருக்கும் காதலிகள் அப்போது இருந்தனர். பின்னர் அந்தப் பெண்கள் மூவரும் துறவிகளாகின்றார். அதில் ஒருவர் வியட்னாமில் போர் முடிந்து சமாதானம் வரவேண்டுமென்பதற்காய்த் தீக்குளித்து மரணித்துப் போனவர்.


தாயின் சீடர்கள் மட்டுமில்லை, தாயும் தொடர்ந்து போர்க்காலங்களில் பாதிக்கப்பட்ட தரப்புக்களைத் தேடிச் சென்றிருக்கின்றார். இவ்வாறு உதவப்போன நண்பர்கள் பலர் இறக்க இறுதிவரை தன்னாலான உதவிகளைச் செய்துகொண்டிருந்தவர் தாய். அத்துடன் அமெரிக்கத் தரப்பால் மட்டுமில்லை, அதற்கெதிராகப் போராடிய போராளிகளாலும் இவர் எந்தத் தரப்பைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்பட்டு உயிரச்சத்துக்கு ஆளானவர். எனினும் தாய் தொடர்ந்து அன்றைய காலத்தில் வியட்னாமில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எனப் போராடிக் கொண்டிருந்தவர்.


அதனால் அவர் 1966இல் சைகான் பல்கலைக்கழகத்தில், தென்வியட்னாமில் அமெரிக்கா இராணுவம் போரை நிறுத்தி -முக்கியமாய் மிலேச்சனத்தனமான குண்டுத்தாக்குதல்களை நிறுத்தி- தென்வியட்னாமின் சுயநிர்ணய உரிமையை மதிக்கவேண்டும் என்று உரையாற்றியவர். அந்த உரையை, அவர் தென்வியட்னாம் மக்களின் மனோநிலையை அவ்வளவு தெளிவாக முன்வைப்பதற்காகக் களத்திற்குச் சென்று வந்தே ஆற்றியிருக்கின்றார். எப்படி இருந்தாலும், அமெரிக்க இராணுவம் ஓர் அந்நிய இராணுவம் அதை எந்தப் பொழுதிலும் வியட்னாமிய மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறியவர். 


மேலும் வியட்னாமிய போராளிகளை 600 பேரை அமெரிக்கா கொன்றோம் எனச் சொல்லப்படுகின்றபோது, கொல்லப்படுகின்ற 590 பேரும் அப்பாவி மக்களே எனவும் அந்த உரையில் குறிப்பிடுகின்றார். அவர் ஒரு வியட்னாமிய குடியானவரைச் சந்திக்கும்போது, 'நாங்கள் கம்யூனிசம் எவ்வளவோ கொடுமையாக இருந்தாலும், போராளிகளின் பக்கமே நிற்போம், ஏனென்றால் எமக்கு ஜனநாயம் என்ன என்பதை அறிவதற்கு, முதலில் நாங்கள் உயிரோடு இருப்பதே முக்கியம்' என்று சொன்னதை இந்த சமாதானத்துக்கான அழைப்பு என்கின்ற உரையில் தெளிவாக தாய் -கள நிலவரத்தை முன்வைத்து- கூறுகின்றார்.


(தொடரும்)

நன்றி: 'அகநாழிகை' - 2022

மிலான் குந்தேரா - 02

Tuesday, April 19, 2022

இருப்பின் இறகிழத்தலும்,  அபத்தத்தின் வசீகரமும்

***************


Laughable Loves


ஆங்கிலத்தில் வெளிவந்த ஒரேயொரு குந்தேராவின்  சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். இத்தொகுப்பில் இருக்கும் கதைகள் குந்தேரா செக்கில் 1958-1968இல் இருந்தபோது எழுதிய கதைகளாகும். அவர் ஒருபோதும் செக் என்று எழுதுவதில்லை, பொஹிமியா என்றேதான் தனது தாய்நாட்டைக் குறிப்பிடுகின்றார். கதைகளிலும் அப்படியே பொஹிமியா என்றே அடையாளப்படுத்தவும் செய்கின்றார். 


இந்தப் புத்தகத்திலும் ஆண்-பெண் உறவுகளே ஆழமாகப் பேசப்படுகின்றன. மனித உறவுகள் என்பது இருத்தலியத்தின் நீட்சியே என்பதை கவனப்படுத்தும் குந்தேரா அதை ஒவ்வொரு கதைகளிலும் காதலினதும்/காமத்தினூடும் நமக்கு வெளிப்படுத்துகின்றார். இந்தக் கதைகளில் வரும் காதல்/காமம் எல்லாமே இறுதியில் அபத்தங்களை நோக்கி நகர்வதையும் நாம் காணமுடியும். 



இத்தொகுப்பில் இருக்கும் 'எட்வேர்டும் கடவுளும்' மிகச்சிறப்பான கதையெனச் சொல்வேன். கம்யூனிசத்தை, கடவுள் விருப்பை, காதலின் அபத்ததை, மனித வேட்கையை இதைவிட எள்ளலாகவும் தீவிரமாகவும் குந்தேரா இன்னொரு கதையில் சொல்லிருப்பாரா எனத் தெரியவில்லை. எட்வேர்ட் என்கின்ற இளம் ஆசிரியருக்கு, கடவுளை நம்பும் அலிஸின் மீதும் காதல் வருகின்றது. காதலை வளர்த்தாலும், மிகத் தீவிரமாக யேசுவை நம்பும் அலிஸ் காமம் நோக்கி எட்வேர்ட்டை நகர அனுமதிப்பதில்லை. திருமணத்துக்கு முன்னரான உடலுறவை எங்கள் மதம் அனுமதிப்பதில்லை என்பது அலிஸின் வாதம். அலிஸுக்காகவே கடவுள் நம்பிக்கை இல்லாத எட்வேர்ட் தேவாலயத்துக்கும் செல்லத் தொடங்குகின்றார். அவ்வாறு அலிஸின் நம்பிக்கையை பெறும் நோக்கில் தனது கடவுள் நம்பிக்கையை பொதுவெளியில் காட்டும்போது அவர் கற்பிக்கும் பாடசாலையினால் கண்டிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார். பாடசாலையில் கற்பிக்கும் ஒருவர் தனது மதநம்பிக்கையை பொதுவெளியில் காட்டக்கூடாதென்பது அங்கே வழக்கிலிருக்கிறது. இப்போது எட்வேர்ட்டுக்கு அவரது ஆசிரிய தொழிலே பறிபோய்விடும் ஆபத்து வருகின்றது.


அவரை விசாரிக்கும் குழுவில் இருக்கும் பெண்ணாலேயே, அதற்கு முன்னர் எட்வேர்ட்டின் தமையனின் வளாக வாழ்வே இல்லாமற் செய்யப்பட்டதால், எட்வேர்டின் தமையன் இதுகுறித்து எச்சரிக்கை செய்தே எட்வேர்டை அனுப்பியிருந்தார். என்றாலும் 'விதி' எட்வேர்டின் வாழ்விலும் மீண்டும் விளையாடுகின்றது. எட்வேர்டின் தமையன், படிக்கும் காலத்தில் ஸ்டாலின் இறந்துபோனது அந்தச் செய்தி தெரியாது, நன்கு தூங்கு எழுந்து அடுத்த நாள் கம்பஸுக்குப் போனபோது - இப்போது எட்வேர்டை விசாரிக்கும் பெண்- ஒரு துயரச்சிலை போல நடுவளாகத்தில் காட்சியளித்தபடி நிற்கின்றார். எட்வேர்டின் தமையனுக்கு, ஸ்டாலினின் இறப்பின் விபரந்தெரியாது, ஆகவே அந்தத் 'துயரச்சிலையை' மூன்றுமுறை சுற்றி, எள்ளல் செய்து சிரிக்கின்றார். கம்பஸ் வளாகமோ இவர் வேண்டுமென்றே ஸ்டாலினுக்கு எதிராகக் கலகம் செய்கின்றார் என்று நினைக்கின்றது. இதன் காரணமாக அன்று எட்வேர்டின் மூத்த சகோதரர் கம்பஸில் இருந்து விலத்தப்படுகின்றார். 


இப்போது எட்வேர்டின் கடவுள் நம்பிக்கையை விசாரிப்பவரும் அதே பெண்தான். எட்வேர்ட் 'உண்மையில் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அலிஸிற்காகவே இப்படி தேவாலயத்துக்குப் போகின்றேன்' என்பதை மறைத்து, தனக்குள் எங்கிருந்தோ கடவுள் நம்பிக்கை வந்துவிட்டது என்று ஓர் அப்பாவித்தனமான நாடகத்தை விசாரணைக்குழுவின் முன் ஆடத்தொடங்குகின்றார். விசாரணைக் குழு அதை உண்மையென நம்பி, இவரை 'நல்மனிதனாக்கும்' முயற்சியை இப்போது நிர்வாகியாக இருக்கும் அந்தப் பெண்ணிடம் கொடுக்கப்படுகின்றது. 


இவ்வாறாக அந்தச் சந்திப்புக்கள் நீண்டு அந்தப் பெண் நிர்வாகி இவரை தனது ஸ்டூடியோ அடுக்ககத்திற்கு அழைத்துப் பேச, அது உடலுறவுக்குச் செல்கின்றமாதிரியும் ஆகிவிடுகின்றது. கடவுள் நம்பிக்கையை இல்லாமல் செய்ய, எட்வேர்டை அழைக்கும் அந்தப் பெண்ணை, காமத்தின் நிமித்தம் முழந்தாழிட்டு கடவுளின் பெயரால் என்று பிரார்த்தனையும் செய்ய எட்வேர்ட் வைக்கின்றார். அதை மிக நளினமாக, மிகச் சிறந்த எள்ளலாக குந்தேரா எழுதிச் செல்கின்றார்.


இதுவரை தனது காதலை/காமத்தை மறுத்துவந்த அலிஸிக்கு எட்வேர்ட் ஒரு மதநம்பிக்கைக்காகப் போராடும் ஒரு போராளி போலக் காட்சியளிக்கத் தொடங்குகின்றார். மற்ற எல்லோரும் அமைதியாக இருக்க, எட்வேர்டே தனது கடவுள் நம்பிக்கைக்காய் தனது தொழிலைக் கூடத் துறக்கத் தயாரானவர் என்று அலிஸிற்கு எட்வேர்ட்டில் மதிப்புக் கூடுகின்றது. எட்வேர்ட்டுக்குத் தன்னை முழுதாகக் கொடுக்க அலிஸ் சம்மதிக்க, கிராமப்புற பண்ணை வீடொன்று எட்வேர்ட் அழைக்கப் போகின்றார். அதுவரை உடல் சார்ந்து காமத்தைப் பெருக்கி பெரும் ஆனந்ததைக் கொடுத்துக் கொண்டிருந்த அலிஸ் தன்னைக் கொடுத்த அந்த இரவின் பின் எட்வேர்ட்டுக்கு ஒரு சாதாரண பெண்ணைப் போல ஆகிவிடுகின்றார். அந்தப் பயணம் முடியும் தருவாயிலேயே, அலிஸ் நீ இப்போது ஒரு உண்மையான கடவுள் நம்பிக்கையான பெண் இல்லை. உன்னை எனக்குத் தந்ததால் நீ உன் மதத்துக்கு துரோகம் செய்துவிட்டாய், இதுவரை நான் உன் மீது வைத்திருந்த நம்பிக்கை அனைத்தும் தவிடுபொடியாக்கிவிட்டாய்’ என்று கோபித்து அலிஸோடு உறவை அத்தோடு  முறித்துவிடுகின்றார்.


ஆனால் எட்வேர்டை விட வயது முதிர்ந்த பெண் நிர்வாகியோடு உடல்சார்ந்த உறவு, அலிஸின் உறவைத்துறந்த பின்னரும் எட்வேர்ட்டுக்கு நீள்கின்றது. இப்போது எட்வேர்ட் அலிஸையும், பெண் நிர்வாகியையும் தனது வாழ்வினுள்  கடந்து வந்துவிட்டார். அவருக்கு இதற்குப் பின் பல பெண்களின் உறவுகளும் வாய்த்துவிட்டன. தனித்து இருந்தால் இவற்றை நன்கு அனுபவிக்க முடியும் என்பதையும் கற்றுணர்ந்துவிட்டார். இந்தக் கதையை முடிக்கும்போதுதான் குந்தேராவின் கதையெழுதும் நுட்பம் தெரியும். 


இப்போது எட்வேர்ட் அவ்வப்போது தேவாலயத்துக்குச் செல்கின்றார். ஆனால் அதை வாசிப்பவராகிய நாங்கள் உண்மையிலே எட்வேர்ட்டுக்கு கடவுள் நம்பிக்கை வந்துவிட்டதென்று நம்பவேண்டாம். அவருக்கு கடவுள் இல்லை என்பது நன்கு தெரியும். ஆனால் அவருக்கு கடவுள் என்ற கருத்திற்கான ஏக்கம் இருப்பதால் மட்டுமே தேவாலயத்துக்குச் சென்று கொண்டிருக்கின்றார் என்று நமக்குச் சொல்கின்றார் குந்தேரா. எப்போதும் எதையும் தொலைத்ததுபோல இருக்கும் எட்வேர்ட் ஒருநாள் தேவாலயத்தில் கப்போலாவை கனவோடு பார்த்தபோது, கடவுள் ஒருநாள் சூரியஒளியில் எட்வேர்ட்டுக்கு தரிசனம் கொடுத்தார். அப்போது மட்டும் எட்வேர்ட் நன்கு சிரித்தார். ஆகவே இந்தக் கதையை வாசிக்கும் நீங்களும் தயவுசெய்து அந்த சிரித்த முகத்து எட்வேர்ட்டை உங்கள் நினைவுகளில் வைத்துக் கொள்ளுங்கள் என்று மிலேன் குந்தேரா இந்தக் கதையை முடிக்கிறார்.


இவ்வாறு இந்தத் தொகுப்பு முழுதும் எள்ளலும், அபத்தமானதுமான காதல் கதைகள் சொல்லப்படுகின்றன. சில கதைகளில் வயது முதிர்ந்த பெண்களோடு இளம் ஆண்களுக்கு வரும் காதல்கள், அவர்கள் அதுவரை வைத்திருக்கும் நம்பிக்கைகளை உடைத்துப் பார்க்கும் காம நிகழ்வுகள் என பல பாத்திரங்களை குந்தேரா இங்கே நமக்குத் தருகின்றார். இந்தக் கதைகளின் பலமும் பலவீனமும் என்னவென்றால் ஆண்களே முக்கிய பாத்திரங்களாகின்றனர். பெண்கள் இரண்டாம் கதாபாத்திரங்களாகின்றனர். அத்தோடு அவர்கள் பெரிதாக தங்கள் குரல்களில் பேசுவதில்லை. பேசினாலும், அதை மிஞ்சி குந்தேராவின் ஆண் பாத்திரங்கள் எள்ளலாக எதையாவது சொல்லி தம்மை நிரூபிக்க முயல்கின்றன. 


இந்தக் காரணங்களினால் இன்றைக்கு (இவை எழுதப்பட்டு கிட்டத்தட்ட 50 ஆண்டுகள்) குந்தேராவின் பெண் பாத்திரப்படைப்புக்கள் கேள்விக்குட்படுத்தப்படலாம். பெண் பாத்திரங்கள் பெரிதும் காதல்/காமம் சார்ந்து வருகின்றனவே தவிர, அவை ஒருபோதும் ஆணைச் சாராது தனித்து நிற்கும் உறுதியான பாத்திரங்களாய்க் காட்டப்படுவதில்லை. குந்தேராவின் பெண்கள் தனித்து வாழ்ந்தாலும், கணவனை இழந்து வாழ்ந்தாலும், ஏன் கணவனோடு சேர்ந்து வாழ்ந்தாலும் ஆணின் பார்வையினூடாகவே வாசிக்கும் நமக்கு அவர்கள் கடத்தப்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டவே வேண்டியிருக்கின்றது. இதனால் குந்தேராவின் கதைகள் வீரியமிழக்கின்றன என்பதைச் சொல்ல வரவில்லை, ஆனால் இவற்றையும் நினைவில் வைத்தே குந்தேராவின் படைப்புக்களை நாம் வாசிக்கவேண்டுமென கவனப்படுத்த விரும்புகின்றேன்.


The festival of insignificance


இதுவே குந்தேரா எழுதி இறுதியாக (2014) வெளிவந்த நாவலாகும். இந்த நாவல் தொடங்குமிடம் மிகவும் சுவாரசியமானது. தெருவில் நடந்துபோகும் பெண்ணின் தொப்புளைப் பார்த்து அதிலிருந்து ஆராய்ச்சி தொடங்குகின்றது. பெண்ணின் மார்பை, பிருஷ்டத்தை, தொடையை, தொப்புளை இவற்றில் எதை ஒருவன் முதலில் பார்க்கப் பிரியப்படுகின்றானோ, அவனின் காமம் எப்படியென அலசி ஆராயப்படுகின்றது. பின்னர் நாவலின் இடையில் தேவதைகளுக்கு தொப்புள் இல்லையெனச் சொல்லப்படுகிறது. அவ்வாறான ஒரு தேவதையே ஏவாள் எனவும் அவளுக்கு ஒருபோதும் தொப்புளே இருந்திருக்காது என ஒரு உரையாடலில் வரும். எனெனில் அவள் எவரினதும் தொடர்ச்சியில்லை. நேரடியாக 'ஆக்குபவரினால்' உருவாக்கப்பட்டவள். ஆனால் ஏவாளுக்குப் பிறகு பிறந்த எல்லோருமே தொப்புள்(கொடி) என்ற இணைப்பின் மூலம் காலங்காலமாய் தொடர்புபட்டிருக்கின்றோம். ஆகவேதான் எம்மால் எந்த வரலாற்றின் நினைவுகளிலிருந்தும் எளிதாய்த் தப்பிவிடமுடிவதில்லை என மிலான் குந்தேரா எழுதிச் செல்வார்.


எனினும் மிகச் சிறந்த படைப்பாளிக்கும் வீழ்ச்சியுண்டு. 'The Festival of Insignificance'ன் முக்கியத்துவத்தை முதல் வாசிப்பில் தவறவிட்டிருக்கலாமென இரண்டாந்தடவை வாசித்தபோதும், மிலான் குந்தேராவின் எழுத்தின் சரிவே இந்நாவலிற்குள் தெரிந்தது. 86 வயதாகிய மிலான் குந்தேராவின் இந்த நாவலின் முதற் பக்கங்களை வாசிக்கத் தொடங்கியபோது, இளமை ததும்பும் ஒரு கதையை மார்க்வெஸ் பிற்காலத்தில் 'Memories of My Melancholy Whores' எழுதியதுபோல எழுதப்போகின்றார் என்றே எதிர்பார்த்தேன்; நினைத்தது தவறாகிப்போன நாவலிது.



மிலான் குந்தேராவின் புனைவுகளில் ‘The  Book of Laughter and Forgetting’, ‘The Unbearable Lightness of Being’, ‘The Joke’, 'Laughable Loves'  என்பவை பிரசித்தமானவை. ஆனால் என் தனிப்பட்ட விருப்புக்களாக இவற்றோடு ‘Ignorance’, ‘Identity’ என்பவற்றைச் சேர்த்துச் சொல்வேன். ஆண்-பெண் உறவுகளின் சுவாரசியம்/அபத்தங்கள், நாடுவிட்டுப் பிரிந்த துயரங்கள், இழப்புக்களை எள்ளல்களோடு தாண்டும் இலாவகம்,  அரசியல் ஆக்கிரமிப்புக்களை எந்தப் பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர்மை, ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகளில் சிக்கிக்கிடக்கும் மனித மனங்கள் என்று கலவையாக, அதேசமயம் உளவியல்/தத்துவார்த்த விடயங்களோடு தொடர்புபடுத்தி சுவாரசியமாக மிலான் குந்தேராவை விட இன்னொருவரால்  சமகாலத்தில் எழுதிவிட முடியுமா எனத் தெரியவில்லை. அதேவேளை செக் மீதான ரஷ்யா ஆக்கிரமிப்பு (1989இல்) முடிந்தபின், அதுவரை இருந்த ரஷ்ய-அமெரிக்க இருதுருவ நிலை அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக, மிலான் குந்தேராவை 70/80களில் தூக்கிவிட்டுக் கொண்டாடிய மேற்குலகு பின்னர் கைவிட்டதும் நிகழ்ந்திருக்கின்றது. 


மேலும், குந்தேரா செக் மொழியைக் கைவிட்டு பிரெஞ்சில் எழுதத் தொடங்கியபின், அவரது படைப்புக்கள் முன்னர்போல கொண்டாடப்படும் நாவல்களாக மாறிவிடாத துயரமும் நிகழ்ந்திருக்கின்றது. இன்றைக்கு #MeToo movement எழுச்சி பெற்றுவரும் வேளையில், குந்தேராவின் பெண் பாத்திரங்கள் மீது கடும் விமர்சனங்களும் சிலரால் முன் வைக்கப்படுகின்றன. ஒருவகையில் அன்றைய 'அரசியல் சரி/நிலை'யைப் பற்றி அக்கறைப்படாது எழுதிய எல்லா எழுத்தாளர்களும் இவ்வாறான கேள்விகளை நிகழ்காலத்தில் சந்திக்கவேண்டியவராகவே இருக்கின்றனர். அந்தவகையில் குந்தேராவும் விதிவிலக்கானவர் அல்ல. 


இன்று குந்தேராவின் நாவல்களில் முக்கிய தொனியாக இருந்த ரஷ்ய ஆக்கிரமிப்பு இல்லாது போனபின், அவரது நாவல்களுக்கு இன்று என்ன முக்கியத்துவம் என்ற கேள்விகளும் இருக்கின்றன. அதை ஒருகாலத்தின் வரலாறு என எடுத்துக் கொள்ளலாமே தவிர, இன்றைய தலைமுறைக்கு அந்த ஆக்கிரமிப்பு/துயரம் என்னவாக ஆகப்போகின்றது என்பதும் முக்கிய வினாவாகும். ஆனால் குந்தேரா தன் நாவல்களினூடாக இதைமட்டும் எழுதியவரல்ல. அவர் மனித இருப்புக்கள் குறித்தும், ஆண்-பெண் உறவுகள் குறித்தும், நிலைகொள்ளா மனங்களின் விசித்திரமான மாறுதல்கள் பற்றியும் ஆழ்ந்து பார்த்தவர் என்பதால் இந்த எல்லா வகையான விமர்சனங்களையும் தாண்டி மிலான் குந்தேரா இன்னும் நெடுங்காலம் மறக்கப்படாமல் இருப்பார் போலவே தோன்றுகின்றது. இருத்தலியத்தை பிரான்ஸிலிருந்து காப்ஃகா, சார்த்தர், காம்யூ போன்றோர் ஒருகாலத்தில் தமது படைப்புக்களினூடாகத் தீவிரமாக உரையாடிவர்களென எடுத்துக்கொண்டால், சமகாலத்தில் இருத்தலியத்தின் அழகையும் அபத்தத்தையும் பேசுகின்றவர்களாக நான் ஹருகி முரகாமியையும், மிலான் குந்தேராவையும் சொல்வேன்.


'ஓர் எழுத்தாளராக இருப்பது என்பது உண்மை என்னவென்று பிரசங்கம் செய்வதல்ல, எது உண்மை என்பதைத் தேடிப் பார்ப்பதாகும்' என்று கூறும் குந்தேரா, 'ஒர் இலக்கியப் படைப்பானது, மனித இருப்பின் அறியப்படாத பகுதியை வெளிக்காட்டி, வாழ்தலுக்கான ஒரு அர்த்தத்தைக் கொடுப்பதாகும்' எனவும் சொல்கின்றார். 


இந்த மனித இருப்பின் 'அறியப்படாத பகுதிகளின் ஆழங்களுக்கு' நம்மை தனது படைப்புக்களினூடாக அழைத்துச் சென்று பார்க்கவும், பதட்டப்படுத்தவும், பரவசப்படுத்தவும்  செய்தவர் மிலான் குந்தேரா என்பதில் வாசகர்களாகிய நமக்கு எந்தச் சந்தேகமும் ஒருபோதும் வரப்போவதில்லை. 


------------------------------------------


நன்றி: வனம்

புகைப்படங்கள்: இணையம்

மிலான் குந்தேரா - 01

Sunday, April 17, 2022


இருப்பின் இறகிழத்தலும், அபத்தத்தின் வசீகரமும் 


1.


மிலான் குந்தேராவுக்கு இப்போது 90 வயதுக்கு மேலாகிவிட்டது. அன்றைய செக்கோஸ்லாவாக்கியாவில் (1929) பிறந்த குந்தேரா அவரது தாய்நாடு ஒரு நூற்றாண்டில் சென்று வந்த பல மாற்றங்களைப் பார்த்திருக்கின்றார். முதலாம், இரண்டாம் உலக மகாயுத்தங்கள், செக்கில் பிரசித்தபெற்ற புரட்சியான 'ப்ராக் வசந்தம்',  அதன் பின்னர் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் செக்கின் மீது ஆக்கிரமிப்பு என்று பல சடுதியான மாற்றங்களில் குந்தேராவின் வாழ்வில் நிகழ்ந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஓர் இடதுசாரியாக இருந்த குந்தேராவினால் சோவியத் ஒன்றியம், செக்கின் மீது டாங்கிகள் கொண்டு நடத்திய ஆக்கிரமிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அந்த எதிர்ப்பை, அது ஏற்படுத்திய பாதிப்பைப் பல்வேறுவிதங்களில் குந்தேராவின் படைப்புக்களில் நாம் அவதானிக்கமுடியும்.


குந்தேரா, அவரது நாற்பதுகளில் பிரான்சிற்கு குடிபெயர்ந்து பின்னர் கிட்டத்தட்ட பிரெஞ்சுவாசியாகவே ஆகிவிட்டார். அவரிடம் ஓரிடத்தில், தாய்நிலம் பிரிந்து வந்ததை எப்படிப் பார்க்கின்றீர்கள் எனக் கேட்டபோது, 'உலக மகாயுத்தங்களின்போது ஜேர்மனியில் இருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த பலருக்கு திரும்பவும் ஜேர்மனிக்குப் போகும் கனவுகள் இருந்தன. எனவே அவர்கள் அதையொரு தற்காலிக புலம்பெயர்வாகவே நினைத்திருந்தனர். தனக்கு அப்படி இல்லை. பிரான்ஸிற்கு வந்தபோது அது தனது (புதிய) தாய்நிலம் என்றே நினைத்திருந்தேன். ஒருபோதும் செக்கிற்குத் திரும்பிப் போகும் கனவு தனக்கு இருந்ததில்லை' என்கின்றார். 


ஒருகாலத்தில் மேற்கின் பகுதியாக இருந்த செக், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் பின் கிழக்கின் பகுதியாகவே மாறிவிட்டதென்கின்றார். தன்னை மேற்கின் கலாசார வழி வந்த ஒருவனாக நினைத்துக் கொள்வதால் இன்று 'கிழக்கின் பேரரசனாக' இருக்கும் செக் தன்னைக் கவர்வதில்லை என்கின்றார். இதை நாம் குந்தேராவின் Ignorance நாவலில், செக்கைப் பிரிந்துவந்த ஒரு பெண் இருபது ஆண்டுகளின் பின் தாய்நிலம் திரும்பிச்சென்று தோல்வியுடன் திரும்பி வரும் அபத்தத்தினூடாக நாம் அவதானிக்க முடியும்.


குந்தேரா, இதுவரை பத்து நாவல்களை அவரது தாய்மொழியான செக்கிலும், பின்னர் அவரின்  புலம்பெயர்ந்த புதிய நிலப்பரப்பு மொழியான பிரெஞ்சிலும் எழுதியிருக்கின்றார். அவரது ஒரேயொரு (ஆங்கிலத்தில் வெளிவந்த) சிறுகதைத் தொகுப்பான 'Laughable Love' அவரது நாவல்களைப் போல மிகவும் பேசப்பட்ட ஒரு தொகுப்பாகும். அதில்தான் அவரது பிரசித்தி பெற்ற கதையான 'The Hitchhiking Game' வெளிவந்தது.


மிலான் குந்தேராவுக்குப் பிடித்த எழுத்தாளர்களில் காஃப்கா பிடித்த எழுத்தாளர்.  செக் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின்னும், உங்களுக்கு யாரேனும் ரஷ்ய எழுத்தாளர்கள் பிடிக்குமாவென ஒரு நேர்காணலில் கேட்கப்படும்போது, லியோ தால்ஸ்தோய் தனக்குப் பிடித்த எழுத்தாளர் என்கின்றார். தாஸ்தவேஸ்கியை விட தால்ஸ்தோய் நவீனகாலத்து எழுத்தாளர் என்கின்றார். ஜேம்ஸ் ஜாய்ஸில்ன் ‘யுலிஸஸின்’ கட்டுப்பாடற்ற தன்னுரைக்கு (monologue) முன்னோடி, தால்ஸ்தோயின் ‘அன்னா கரீனா’ என்கின்றார். அன்னா கரீனா இறுதியில் பேசும் தன்னுரை உண்மையில் அசல் பிரதியில் கட்டுபாட்டற்ற தன்மையுடனும், பகுத்தறிவுக்கு(irrational) அப்பாற்பட்டு இருக்கின்றதென்றும், அதை பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் வாசித்தபோது அதன் இயல்புகெட்டு தர்க்கத்துக்கு உட்பட்ட தன்னுரையாக அன்னாவின் மனோநிலை மாற்றப்பட்டு வந்திருந்தது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். 


அசல் மொழியிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்தவர்கள் அப்படியே அந்தக் கட்டுப்பட்டில்லாத தன்னுரையை பிரெஞ்சுமொழிக்கு மாற்றினால், இவர்களுக்கு மொழிபெயர்க்கத்தெரியாது என்று யாரும் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்தினால் அப்படிச் செய்திருக்கலாம் எனச் சொல்லும் மிலேன் குந்தேரா, ஆனால் அதை அதன் இயல்பிலேயே கட்டுப்பாடற்றதன்மையோடு, தர்க்கமில்லாது மொழிபெயர்த்திருக்கவேண்டும் எனச் சொல்கிறார். இதன் காரணமாகவோ என்னவோ, மிலான் குந்தேரா தனது படைப்புக்களின் மொழிபெயர்ப்புக்களில் மிகவும் நுணுக்கமாகப் பார்த்துத் திருத்தங்களை நிறையச் செய்கின்றவர் எனவும் கூறப்படுகின்றது.


அதேபோன்று எழுத்தாளர்கள் என்பவர்கள் அவர்களின் படைப்புக்களைத் தவிர்த்து, வெளியே தெரியத் தேவையில்லை என்பதை அடிக்கடி வலியுறுத்திக் கொண்டவர். முக்கியமாக அவர்களின் தனிப்பட்ட வாழ்வு ஒருபோதும் பிறருக்குத் தெரியவேண்டியதில்லை என்றும் கூறியவர் (இதை வலியுறுத்திய இன்னொருவர் ழாக் தெரிதா). இதனால் பொதுநிகழ்வுகளில் பங்குபெறவோ, தனது புத்தக வெளியீடுகளில் கலந்துகொள்ளவோ மறுத்ததோடு, புகைப்படங்களை வெளியிடவோ, நேர்காணலைக் கொடுக்கவோ தயங்கிய ஒருவராக இருக்கின்றார் மிலான் குந்தேரா.


2.


The Unbearable Lightness of Being 


மிலான் குந்தேராவின் The Unbearable Lightness of Being மனித வாழ்வின் இருத்தலின் மீதும் குடும்பம் என்ற அமைப்பின் மீதும் கேள்விகளை எழுப்புகின்றது. மூளை சத்திரசிகிச்சை நிபுணனாக இருக்கும் நாயகன் தோமஸ், ஒரு பெண் பித்தனாக (womanizer) இருக்கின்றான். அவனது வாழ்வும் தெரேஸா, சபீனா என்ற இரு பெண்களைச் சுற்றியே நகர்கின்றது. பெண்களோடு உடலுறவு கொள்வதற்கும் நேசிப்பதற்கும் தெளிவான எல்லைகள் இருக்கின்றதென நினைத்து வாழ்வை அதன்பாட்டில் கொண்டாடிக்கொண்டிருப்பவன். 


அவனது பெண்பித்து நிலைமையைத் தெரிந்துகொண்டு திருமணம் செய்கின்ற தெரேஸாவிற்கு திருமணத்தின்பின்னும் தோமஸ் ஒரு பெண் பித்தனாக இருப்பதை அறிந்து உளவியல்ரீதியில் சிதைவிற்குள்ளாகின்றார். பின்னாட்களில் ரஷ்யா(சோவியத் ஒன்றியம்) செக்கோசிலாவாக்கியா (பின்னாட்களில் செக்- ஸ்லாவாக்கியா) நாட்டின் மீது ஆக்கிரமிப்புச் செய்கின்றபோது, சுதந்திரத்தை/உயிரைத் தக்கவைப்பதற்காய் சுவிஸிற்கு தோமஸும், தெரேஸாவும் தப்பியோடுகின்றார்கள் (அமெரிக்காவாயிருந்தாலென்ன, ரஷ்யாவாயிருந்தாலென்ன, இந்தியாவாயிருந்தாலென்ன அயல் நாடுகளில் மீது ஆக்கிரமிப்புச் செய்வதும், அந்நாடுகளில் கலாசாரங்களைச் சிதைப்பதும் அளவுகளில் அவ்வளவு வேறுபடுவதில்லை). 


செக்கில் இருந்தபோது ஒரு சுயாதீனப்புகைப்படப்பிடிப்பாளராய் இருந்த தெரேஸாவுக்கு, தொழில் தேடி சுவிஸில் அலையும்போது தோட்டங்களையும்/நிர்வாணப்படங்களையும் எடுத்தால் மட்டுமே பிரசுரிப்போம் என்கின்ற சுவிஸ் பத்திரிகைத் தொழில் வெறுக்கின்றது. மேலும் சுவிஸ் வந்தும், தோமஸ் பெண்பித்தனாக அலைவதைப் பார்த்து சோர்வு வந்து, தேரேஸா மீண்டும் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருக்கும் செக்கிற்கு திரும்பிச்செல்கின்றார். 


ஏன் திரும்பிப்போகின்றாய் எனக் கேட்கப்படும்போது, செக்கில் தோமஸ் ஒரு பெண்பித்தனாக இருந்தபோதும் தான் தனித்தியங்க முடிந்திருந்தது. எனக்கு அவனது அன்பு மட்டுமே அப்போது போதுமானதாயிருந்தது. இப்போது எல்லாவற்றின் நிமித்தமும் தோமஸைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. எனக்கு வேண்டியது அவனது அன்பு மட்டுமே, நான் தனித்தியங்கவே விரும்புகின்றேன் என்று தெரேஸா கூறுகின்றார்.


பெண் பித்தனாக தோம்ஸ இருந்தாலும், அவனுக்கு பிற உறவுகள் உடலுறவுக்காய்த் தேவைப்படுகின்றதே தவிர, நேசத்திற்கு எனப் பார்க்கும்போது அவனது தேர்வு தெரேஸாவாகவே இருக்கின்றது. தெரேஸாவோடான அன்பு அவனளவில் உணமையானது, அதை வேறு எவரும் ஈடுசெய்யவும் முடியாது. தெரேஸா செக்கிற்கு மீண்டும் போனதை அறிந்த தோமஸும் செக்கிற்குள் மீண்டும் நுழைகின்றான். சில அரசியல் காரணங்களால் மீண்டும் வைத்திய நிபுணராய் தொழில் செய்யமுடியாது கட்டடவேலை/வர்ணம் பூசுதல் என்பவற்றைத் தோமஸ் செய்துவருகின்றான். 


தெரேஸாவாலும் தான் முன்பு பணியாற்றிவந்த பத்திரிகையில் இயங்க முடியவில்லை. ஆரம்பத்தில் செய்துவந்த மதுபானப் பணியாளர் (bartender) வேலையைத்தான் செய்கின்றார் இதற்கிடையில் தோமஸ் மீண்டும் ஒரு பெண்ணோடு உடலுறவில் ஈடுபடுவதை அறிந்து கோபத்தில் -ரஷ்ய உளவாளி என நம்பப்படுகின்ற- ஒருவரிடம் தன்னைத் தெரேஸா இழக்கின்றார். ஓர் இரவில் தனியே அந்த ஆடவனின் வீட்டிற்குப்போகும் தேரேஸாவை, அந்த நபர் உடலுறவுக்கு அழைக்க தான் அதற்காய் வரவில்லையென மறுக்கின்ற தெரேஸா, பிறகு தோமஸின் மீதிருக்கும் கோபத்தில் ரஸ்யரோடு இணங்கிப்போகின்றார். எனினும் அந்த உடலுறவு ஒரு பாலியல் வன்முறையைப் போலவே தெரேஸாவுக்குத் தெரிகின்றது. 


இறுதியில் தான் முழுமையாக நேசம் கொள்ளக்கூடிய ஒருவர் தோமஸே என உணர்ந்து, தோமஸிடம்  திரும்பிவந்து மீண்டும் செக்கிலிருந்து வேறு நாட்டுக்குப்போய்விடுவோம் என்கின்றார். எனினும் இவர்களிலிருவரின் கடவுச்சீட்டுக்களும் ரஷ்ய அதிகாரிகளால் பறிக்கப்பட்டதால் அவர்களால் வேறு நாட்டுக்குத் தப்பியோட முடியாது போக, ஒரு கிராமப்புறத்திற்குச் சென்று வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள். இயற்கையோடு இயைந்து விவசாய வாழ்வு செய்து தமக்கான சந்தோசத்தை கண்டெடுக்கின்ற இவ்விணை, முடிவில் ஒரு ட்ரக் விபத்தில் இறந்துபோவதுடன் நாவல் முடிவடைந்து விடுகின்றது.


மிலான் குந்தராவின் இந்நாவல் இருத்தலியத்தையும், குடும்ப அமைப்பையும் கேள்விக்குட்படுத்துகின்றது. பெண்களை இலகுவில் ஈர்த்துவிடக்கூடிய தோமஸ் ஏன் திருமணத்துக்குச் சம்மதித்தான் என்று வாசிப்பவர்கள் யோசிக்கவேண்டியிருக்கின்றது. எவ்வாறு ஒருவன்/ஒருத்தியின் இருப்பு இருந்தாலும் (ஃபிரைடாவும் இங்கே நினைவுக்கு வருகின்றார்) அவர்கள் நம்பிக்கை கொள்கின்ற/சரணாகதி அடைகின்ற ஒரு இடம் இருக்கத்தான் செய்கின்றது. அதேயேதான் தோமஸ் தெரேஸாவிடம் தேடியிருக்கின்றான் போலும். 


Ignorance 


மிலான் குந்தேராவின் 'அறியாமை' (Ignorance) இடம்பெயர்ந்தவர்கள் மீளவும் தாய்நிலம் செல்லும் சாத்தியம்/சாத்தியமின்மைகளைப் பேசுகிறது. செக் நிலப்பரப்பு ரஷ்யா படைகளால் 1969ல் ஆக்கிரமிக்கப்படுகின்றது. இருபது வருடங்களின் பின் உலக நிலைமைகள் மாற, செக் மீண்டும் சுதந்திரம் பெறுகிறது. ரஷ்ய ஆக்கிரமிப்பால் பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்த பெண் மீள தாய்நிலம் மீள்வது இந்நாவலின் பல்வேறு இழைகளில் ஒரு முக்கிய நிகழ்வாக‌இருக்கிறது.


இரினா இரண்டு குழந்தைகளுடன் கணவனுடன் பிரான்ஸிற்குப் புலம்பெயர்ந்தவள். கணவன் இறந்துபோய், பிள்ளைகளும் வளர்ந்துவிட, அவளுக்கு இப்போது சுவீடனைச் சேர்ந்த கஸ்தோவ் என்கின்ற காதலனும் இருக்கின்றான். பாரிஸிலிருக்கும் இரினாவின் தோழிகள் மட்டுமில்லை, அவளின் காதலனும், செக் இப்போது சுதந்திரமடைந்துவிட்டதே, நீ ஏன் இன்னும் தாய்நிலம் போகவில்லை எனத் தொடர்ச்சியாகக் கேட்கின்றனர். தாய்நிலம் போகும் கனவு இல்லாத இரினாவை, இவர்களின் கேள்விகள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகின்றது.


இறுதியில் செக்கிற்குத் திரும்புகின்றாள். இருபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த செக் மட்டுமில்லை, அவளின் நண்பிகளும் கூட அவளுக்குத் தொடர்பில்லாத/தெரியாத ஒரு உலகைப் பற்றிப் பேசுகின்றனர். அவளின் வருகையை அவர்கள் கொண்டாடுகின்றனரே தவிர, அவர்களுக்குத் தெரியாத அவளின் அந்த இருபது ஆண்டுகள் பற்றி அறிய எவருமே அக்கறை கொள்கின்றார்களில்லை. அது இரினாவிற்குத் துயரத்தை மட்டுமின்றி சலிப்பையும் கொண்டு வருகின்றது.


அவளது ஒரு தோழி மட்டுமே கொஞ்சம் இரினாவைப் புரிந்துகொள்கின்றாள். எல்லோரும் தங்கள் செக் நாட்டுக்கலாசாரத்தைக் காட்ட பியர்களை ஓடர் செய்து குடிக்கும்போது, இரினா பிரான்சிலிருந்து கொண்டு வந்த வைனின் அருமையை இந்தத்தோழியே கண்டுகொள்கின்றாள். 'நமது செக் மக்கள் கடந்து இருபது ஆண்டுகள் செக்கில் நடந்தத கொடுமையையே மறந்ததுமாதிரி புதிய வாழ்வைக் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, நீ உனது புலம்பெயர்ந்த 20 வருடகால வாழ்க்கையை அறிவார்கள் என நினைக்கின்றாயா?' என அவள் கேட்கின்றாள்.


இரினாவின் தோழிகள் மட்டுமில்லை அவளின் காதலனான குஸ்தாவாவும் அவளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிப்போகின்றான். அந்த விலகல் நடக்கும் கட்டத்தில் இரினா அவளது இளமைக்கால காதலனான யோசப்பைக் காண்கின்றாள். அவளுக்கு அவனை ஞாபகம் இருப்பதுபோல, அவனுக்கு இவள் பற்றிய எந்த நினைவுகளுமில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் சேர்ந்து கதைத்து, மது அருந்திக் கொண்டாடியபோது, அவளுக்கென அவன் உணவகத்தில் களவாடிக்கொண்டு வந்து கொடுத்த ஆஸ்ட்ரேயை இரினா இன்னமும் கவனமாக வைத்திருக்கின்றாள். ஏன் அதை பிரான்சிற்குக் கூட புலம்பெயர்ந்து போனபோது கொண்டு சென்றிருக்கின்றாள்.


இருபது ஆண்டுகளில் யோசப்பிற்கும் நிறைய நடந்தேறிவிட்டது. வைத்தியர்கள் நிறைய இருக்கும் குடும்பத்தில் வந்த அவன், மிருக வைத்தியராக பின்னாட்களில் மாறியிருக்கின்றான். இரினாவைப் போல அவனும் ரஷ்யா ஆக்கிரமிப்பால் டென்மார்க்கில் குடிபெயர்ந்திருக்கின்றான். அவன் அவ்வாறு புலம்பெயர்ந்ததால் அவனது குடும்பம் ரஷ்யாப் படைகளால் துன்புறுத்தப்பட்டுமிருக்கின்றார்கள். டென்மார்க்கில் போய் அங்கே டென்மார்க் பெண்ணை மணந்துவிட்டு, இப்போதுதான் 20 ஆண்டுகளின் பின் செக்கிற்குள் கால் வைக்கின்றான்.


இறுதியில் இரினாவுக்கும், யோசப்பிற்கும் செக் தமது பழைய செக் இல்லை என்கின்ற சலிப்பு வருகின்றது. இந்த நாட்டில் இனி ஒருபோதும் இருக்க முடியாது என முடிவு செய்கின்றனர். இரினாவின் காதலனான குஸ்தாவ்வோ அவளிடமிருந்து விலகிச் செல்வதோடு அல்லாது, அவளுக்கு அவ்வளவு விருப்பமில்லாத அவளின் குடும்பத்தோடும் நெருக்கமாகின்றான். இது இன்னும் பெரிய விலகலை இரினாவிற்குக் கொடுக்கின்றது.


தாய் நிலம் மீளும் இருவரின் அனுபவங்களும் கசப்பாக இருக்கின்றன. யோசெப், தன் மனைவியை நோயிற்குக் காவு கொடுத்துவிட்டான். ஆனால் நினைவுகளை அழிக்காது அவள் எப்படி உயிரோடு இருந்திருந்தால் ஒரு வாழ்வை அவன் அவளோடு சேர்ந்து வாழ்ந்திருப்பானோ அவ்வாறு ஒரு வாழ்வை தன் வீட்டினுள் வடிவமைத்து தானும் தன்பாடுமாய் தனித்து வாழ்ந்து வருகின்றவன்.


குஸ்தாவின் மீதான விலகல் இரினாவிற்கு யோசெப்பின் மீது ஈர்ப்பைக் கொடுக்கின்றது. யோசெப் ஒருகாலத்தில் அவனின் காதலனாக மாற இருந்தவன் என்பதால் நேசம் இன்னும் அடர்த்தியாக இரினாவுக்குள் இருக்கிறது. அவனோடு தன் உடலைக் பகிர்ந்த இரவின் பின்தான் இரினா அறிந்துகொள்கின்றாள், யோசெப்பிற்கு தன்னைப் பற்றி எந்த நினைவும் இல்லை என்பது. அது அவளுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருக்கின்றது.


மீளத் தாயகம் விரும்பும் கனவு மட்டுமில்லை, மீளப் புதிய காதலைக் கண்டடையும் கனவும் இரினாவிற்குக் கலைந்துபோகின்றது. புலம்பெயர்ந்த எல்லோர்க்கும் தாய் நிலம் மீளும் பெருங்கனவு இருந்துகொண்டே இருக்கின்றது. ஆனால் உண்மையிலே அந்தக் கனவு அழகான கனவுதானா என்பதையே மிலான் குந்தேரா 'அறியாமை'யில் பல்வேறு விதமான இழைகளைப் பிடித்துப் பிடித்துக் கேள்விகளால் முன்வைக்கின்றார்.


கடந்தகால நினைவுகளை இல்லாமற் செய்வது கடினமானதுதான், ஆனால் அதைவிட நிகழ்காலக் கனவுகள் இன்னும் பாழ் என்கின்றபோது எந்த மனிதரால்தான் வாழ்வினை எதிர்கொள்ள முடியும்?


(இன்னும் வரும்)


நன்றி: வனம்

எஸ்.பொவின் 'முறுவல்'

Saturday, April 16, 2022


எஸ்.பொன்னுத்துரை - பகுதி 08 


1.

எஸ்.பொ, பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடந்த புலம்பெயர்ந்தவர்களை இணைத்து தமிழ் ஊழியம் செய்யவேண்டும் என்ற பெருங்கனவோடு கனடா வந்தபோது, நான் அவரின் வெகுசிலவான ஆக்கங்களை மட்டுமே வாசித்திருந்தேன். எனினும் எஸ்.பொ என்கின்ற ஆளுமை என்னை ஈர்க்க அவரைப் பின்தொடர்ந்து அவர் பங்குபற்றிய சில கூட்டங்களுக்குத்  சென்றிருக்கின்றேன். ஒரு நிகழ்வு இங்கிருந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தோடு இணைந்து படித்துக்கொண்டிருந்த தமிழ் மாணவர்களோடு நடந்ததிருந்தது.


எஸ்.பொ, இலக்கியவாதிகளை இணைத்துப் பேசிய இன்னொரு ஒருமுழுநாள் கருத்தரங்கில் முற்போக்கு அணியினரையும், முக்கியமாய் கைலாசபதியையும், சிவத்தம்பியையும் இழுத்துப் பேசியிருந்தார். அடுத்த நிகழ்விலும் கொஞ்சம் வம்பாய் அவர்களை இழுத்தார். எஸ்.பொ அவர்கள் இருவரையும் விட்டுவிலகி, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே இறுக்கத்தோடும், கோபத்தோடும் இருக்கின்றார் என எனக்குத் தோன்றியது. சிவத்தம்பியும், கைலாசபதியும் இலக்கியத்தை நமக்கு உகந்த வகையில் இலக்கியத்தைப் பார்க்கவில்லை என்பதற்காக அவர்களின் பங்களிப்புக்களை ஏன் இப்படி உதாசீனப்படுத்தவேண்டும் என்று எனக்கு அப்போது தோன்றியது.


மனோன்மணியம் சுந்தரனார் மாணவர்களின் நிகழ்வில், எஸ்.பொ, சிவத்தம்பியை இழுத்ததைச் சில மாணவர்கள் விரும்பவில்லை. ஒரு மாணவி கேள்வி நேரத்தில் நீங்கள் இப்படி சிவத்தம்பியை கீழிறக்கத் தேவையில்லை என்றார். எஸ்.பொவுக்கு இது சுட்டிருக்கவேண்டும். 'எனக்கு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரியும்' எனச் சற்று எள்ளலுடன் கூறினார். அந்த மாணவியோ, 'நான் சிவத்தம்பி சேரின் மாணவியாக ஒருகாலத்தில் இருந்திருக்கின்றேன், அவர் ஓர் அற்புதமான ஆசிரியர்' என்று மறுத்துக் கதைத்தார். தொடர்ந்து அந்த நிகழ்வு கொஞ்சம் குழப்பமாகப் போனது. எனக்கு அதற்குப் பின் எஸ்.பொவின் பேச்சுக்களில் இருந்து, அறிவதற்கு பெரிதாக எதுவும் இல்லை என்ற எண்ணம் தோன்றியது.


பிறகான காலங்களில் எஸ்.பொவை ஆழமாகவும் விரிவாகவும் வாசிக்கத் தொடங்கி என் ஆசானாகக் கொண்டபோதும் எஸ்.பொவோடு நெருக்கம் கொள்ளவேண்டும் என்று எனக்கு பிறகு ஒருபோதும் தோன்றியதில்லை. ஆசான்களாயிருப்பினும் அவர்களைத் தள்ளி நின்று இரசிப்பதில்தான் ஓர் அழகும், மதிப்பும் இருக்கின்றது என்பது என் அனுபவம். ஆகவேதான் எஸ்.பொ இரண்டாவது முறையாக இயல்விருது வாங்க, கிட்டத்தட்ட 10 வருடங்களின் பின் கனடா வந்தபோதும் அவரைத் தனித்துச் சந்தித்து நிறைய அளவளாவ வேண்டும் என்ற விருப்பு எனக்குள் எழுந்ததில்லை.


ஆனால் ஆசான்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவேண்டும் என்பதற்காய் 'உரிய அழைப்பிதழ்' இல்லாதே எஸ்.பொவைக் கெளரவப்படுத்திய இயல் விழாவுக்கு 'மதில் ஏறிப்பாய்ந்து' போயிருக்கின்றேன். எஸ்.பொ அந்த 'நாசூக்கான‌ கற்றோர்' அரங்கில், 'நானொரு காட்டான்' என்று தொடங்கி ஒரு சிறப்பான உரையை ஆற்றி என்னைப் போன்றவர்களுக்குப் பெருமிதத்தைத் தந்தார். அதற்குப் பிறகு இறுதியாய் அவரை நேரடியாகச் சந்தித்தது என்றால், 'காலம்' சஞ்சிகை நடத்திய நிகழ்வில். அன்று எத்தனையோ எஸ்.பொ எழுதிய நூல்கள் இருக்க, அவர் காமசூத்ராவுக்கு 'கவிதை' உரை எழுதிய நூலில் கையெழுத்து வாங்கி அவருக்கு நான் என்றுமே 'இவ்வாறான விடயங்களில்' விசுவாசமான சீடனாக இருப்பேன் எனவும் உணர்த்தியிருக்கின்றேன். 


2.


முற்போக்கு இயக்கமும், கைலாசபதி, சிவத்தம்பி போன்ற விமர்சகர்களும் தீவிரமாக இருந்த ஒருகாலத்தை இன்று நிதானமாக நாங்கள் அசைபோட்டுப் பார்க்கலாம். ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஏதோ ஒரு இயக்கமோ, இசமோ தீவிரமாகப் பரவுவதும் அவை தம்மை முன்னிறுத்துவதும் நிகழ்ந்திருப்பதை நாம் பார்க்கமுடியும். அவ்வாறே ஈழத்தில் ஒருகாலத்தை முற்போக்கு இயக்கத்தினர் முற்றுகையிட்டிருக்கின்றனர். அது தவிர்க்கமுடியாததும் கூட. இலங்கையில் தீவிர சாதி ஒடுக்குமுறையை எதிர்த்த ஓர் இயக்கம், தன்னை கலை இலக்கியம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் நுழைந்து பங்களிப்பது இயல்பானது. ரஷ்யாப் புரட்சியின்பின் ரஷ்யாவில் நிகழ்ந்ததுபோல, தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் எழுச்சியின் பின் நிகழ்ந்ததுபோல, இடதுசாரிகள் முற்போக்கு இயக்கத்தைக் கட்டியமைத்து கலை இலக்கியங்களிலும் பரவியிருக்கின்றனர்.


காலத்தின் தேவையாயிருந்த முற்போக்கு இயக்கத்திலிருந்தே நமது முக்கிய முன்னோடிகள் எல்லோரும் வளர்ந்திருக்கின்றனர். பிறகான காலங்களில் சிலர் முரண்பட்டு வெளியேறினாலும் கே.டானியல், எஸ்.பொ, மு.தளையசிங்கம், டொமினிக் ஜீவா என்று, முதல் தலைமுறையின் நிறையப் பேரை அப்படிப் பட்டியலிடலாம். ஒருவகையில் ஒரு இயக்கம் தீவிரமாக இருக்கும்போது உதிரிகளாய்  பலர் வெளியேறுவதும், அவர்கள் தமது எதிர்ப்பை அந்த பேரியக்கத்தின் மீது விமர்சனமாக வைப்பதும் முரணியக்கத்தின் அடிப்படைப் பண்பாகும்.


அவ்வாறே முற்போக்கு இயக்கத்திலிருந்து மு.தளையசிங்கமும், எஸ்.பொவும், வ.அ.இராசரத்தினமும் வெளியே வந்து தமதான இலக்கியத்தை, அது சார்ந்த கோட்பாடுகளை முன்வைத்திருக்கின்றனர். ஒருவகையில் முற்போக்கு இயக்கத்தினோடு ஏற்பட்ட முரணியக்கமுமே நல்ல இலக்கியவாதிகளை அதற்கு வெளியிலும் எமக்கு ஈழத்தில் தந்திருக்கின்றது. எனவே முற்போக்கு இயக்கத்தின் எழுச்சியை இன்று நின்று அவதானிக்கும்போது அது ஒரு நல்ல விளைவே என்று சொல்லத் தோன்றுகின்றது.


என் வாசிப்பின் வழியே நான் முன்னோடிகளாகவும், விருப்பத்திற்குரியவர்களாகவும் கொள்பவர்களான எஸ்.பொவும், மு.தளையசிங்கமும், பின்னாளில் யேசுராசாவின் 'அலைகள்' போன்ற சிற்றிதழ்கள் முன்வைத்த கலையிலக்கியக் கோட்பாடுகள் என்றாலும், எனக்கு சிவத்தம்பி, கைலாசபதி போன்றவர்களிடமும் மதிப்பிருக்கின்றது. அவர்களின் இலக்கியம் சார்ந்த கோட்பாடுகளில், இலக்கியத்தின் நுண்ணழகியல் உள்ளிட்ட பலதைத் தவற விட்டிருந்தாலும், அவர்களின் உழைப்பு ஒருவகையில் பாராட்டத்தக்கதே.


அண்மையில் தற்செயலாக 1968இல்  இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்ட கைலாசபதியின் "Tamil Heroic Poetry"ஐ (தமிழ் வீரயுகக் கவிதைகள்)கொஞ்சம் தட்டிப்பார்த்தபோதே அவரின் உழைப்பின் தீவிரம் தெரிந்தது. ஏற்கின்றோமோ இல்லையோ அதற்கான ஆய்வு மதிக்கப்படவேண்டியது. அவ்வாறே சிவத்தம்பியின் இலக்கிய ஆய்வுகளில் அவ்வளவு ஈர்ப்பில்லாதுவிடினும் அவர் நமது சங்க இலக்கியங்களில் செய்த ஆய்வுகளும், அன்றைய காலத்தில் படித்தவர்களால் தீண்டப்படாத சினிமாக்கள் பற்றி எழுதிய கட்டுரைகளும்  நினைவில் கொள்ளப்படவேண்டியவை. இன்றையகால ராஜ் கெளதமனும், அ.மார்க்ஸும் இன்னும் பிறரும் கைலாசபதி/சிவத்தம்பியின் ஆய்வுகளின் ஈர்ப்பினாலே இவ்வாறான  ஆய்வு வாசிப்புக்களுக்குள் புகுந்ததாகச் சொல்லியிருக்கின்றனர்.


எஸ்.பொ போன்றவர்கள் ஒருவகையில் இந்த 'முற்போக்கு விடயத்தை' சற்று அதிகமாய் ஊதிப் பெருப்பித்தவர்கள் என்றே இப்போது பார்க்கும்போது தோன்றுகின்றது. எஸ்.பொவைப் போன்றோர் உதாசீனம் செய்யப்பட்டது உணமையெனினும், அவரின் முக்கிய படைப்புக்களான 'சடங்கு', 'வீ 'போன்றவை முற்போக்கு முகாமோடு தீவிரமாக முரண்பட்ட காலங்களிலேயே வந்திருக்கின்றது. கே.டானியல், தெணியான், பெனடிக்பாலன், கே.கணேஷ், பசுபதி, முருகையன் போன்ற முக்கிய பல எழுத்தாளர்கள் முற்போக்கு முகாமிலிருந்தே உருவாகியிருக்கின்றனர். ஆக முற்போக்கு இலக்கிய முகாம் நமது இலக்கியச்சூழலுக்கான இருண்டகாலம் என ஒருபோதும் சொல்லவே முடியாது.


இன்றைக்கு தமிழகத்தில் ஒருசாரார் சிவத்தம்பி/கைலாசபதி போன்றவர்களின் இலக்கிய ஆய்வுகளுக்கு எதிராக வெங்கட் சாமிநாதன் போன்றவர்களை உயர்த்திப் பிடிக்கின்றனர். பிற்காலத்தில் வெங்கட் சாமிந்தானுக்கு எதிராகப் பிரமிளும், எம்.ஏ.நுஃமானும் (மார்க்சின் கல்லறையிலிருந்து) தொடர்ச்சியாக எதிர்வினைகள் செய்திருக்கின்றார்கள் என்பது ஒருபுறமிருக்க, இன்று வெங்கட் சாமிநாதன் முன்மொழிந்த இலக்கியவாதிகளில் எத்தனைபேர் 'உருப்படியான' இலக்கியவாதிகளாகக் கனிந்திருக்கின்றார்கள் என்றும் பார்க்க வேண்டியிருக்கின்றது. அந்தவகையில் பார்த்தால் சிவத்தம்பி/கைலாசபதிக்கு இலக்கியவாதிகளை முன்மொழிந்ததில் நிகழ்ந்த சரிவே, வெ.சாவுக்கும் கூட நிகழ்ந்திருக்கின்றது என எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? மேலும், சிவத்தம்பி போன்றவர்கள் கூட பிற்காலத்தில் எஸ்.பொவை அங்கீகரித்திருக்கின்றார்கள் என்று எஸ்.பொவே 'இப்போதாவது என்னை ஏற்கிறார்களே' எனச் சில இடங்களில் எழுதியிருக்கின்றார்.


ஒருவகையில் நமக்கு முற்போக்கு இயக்கமும், அதனோடு நிகழ்ந்த முரணியக்கமுமே நல்ல இலக்கியங்களை அதற்குள்ளும், அதற்கு வெளியிலே தந்திருக்கின்றது என்பது விளங்குகின்றது. அதேபோல முற்போக்கி இலக்கிய முகாமிலிருந்து வெளியேறிய மு.தவோ, எஸ்.பொவோ ஒருபோதும் மார்க்சியத்தை வெறுத்தார்களில்லை.  முற்போக்கு முகாமில் இருந்த சிலரின் அதிகாரத்தைக் கேள்வி கேட்டார்களே தவிர, அந்த இயக்கத்துக்கு சமூகத்தில் இருந்த வகிபாகத்தை ஒருபோதும் மறுத்தவர்களில்லை. இன்றும் கூட முற்போக்கு இயக்கத்தின் மீதான மறுவாசிப்புக்கள் சரியாக நிகழ்த்தப்படவில்லை. எடுக்கவேண்டியதை எடுத்து உதறவேண்டியதை உதறி முற்போக்கு இலக்கியத்தை மீளவாசிப்புச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


நான் எப்போதும் வலியுறுத்துவது ஒன்றுதான். ஒரு இலக்கியப்போக்கோ இலக்கியமுகாமோ பூதாகாரமாக எழும்பி நிற்கும்போது அதைப் போலவே உதிரிகளும் கவனிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். அதேபோல அந்த இலக்கிய முகாங்களில்/முகங்களில் இருக்கும் அரிய விடயங்களை எடுத்துக்கொண்டு அடுத்த தலைமுறை முன்னே நகரவேண்டும். ஒருவகையில் நாம் மற்றமையை முற்றாக நிராகரிக்கும்போது, அடுத்ததாக நாம் ஒரு புதிய சூழலுக்குள் புகும்போது, நாம் நம்பியவையே முற்றுமுழுதாக நிராகரிக்கப்படும் அவலச்சூழல் நமக்கும் வரலாம். 


ஒருகாலத்தில் முற்போக்கு முகாம் தனதில்லாத மற்றமைகளை நிராகரித்ததால், நாங்களும் அவர்களை இப்போது முற்றாக நிராகரிக்கவேண்டும் என்பதில்லை. அதுபோலவே இன்று தமிழ்நாட்டின் சில இலக்கியவாதிகள் தமதல்லாத மற்றமைகளை கடுமையாக நிராகரிக்கும்போது எதிர்காலத்தைப் பற்றியும் அவர்கள் யோசித்துப் பார்க்கவேண்டும். நாளை புதியவர்களோ புதிய இலக்கியக்கோட்ப்பாடுகளோ வந்து இவர்களை முற்றாக நிராகரித்தால் தமிழ் இலக்கியத்துக்கு அது இழப்பாக அல்லவா போகும். 


கடந்தகாலத்தில் முக்கியமானவர்களாக முன்னிறுத்தப்பட்ட சுந்தர ராமசாமியையோ அல்லது ஜெயகாந்தனையோ இன்று எத்தனை பேர் இப்போதும் அதே ஆவலுடன் வாசித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அன்று உதிரிகளாக இருந்து மிகக் குறைந்தளவே எழுதிய ஜி.நாகராஜனையும், ப.சிங்காரத்தையும் வாசிக்க புதிது புதிதாகப் பலர் வந்துகொண்டிருப்பதை நாங்கள் பார்க்கமுடிகின்றது. எப்போதும் காலத்தோடோ ஊரோடோ ஒத்தோட வேண்டியதில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்வோம்.


ஆகவேதான் தொடர்ந்து நான் பெரும் மரங்களின் நிழல்களிலிருந்து வெளியேறி உதிரிகளின் மீது என் பார்வையை அதிகம் குவிப்பவனாகவும், பெரு மரங்களை விமர்சனங்களின்றி அப்படியே ஆரத்தழுவ விருப்பம் இல்லாதவனாகவும் இருப்பதை என் வாசிப்பின் அடிப்படைப் பண்பாக வைத்திருக்கின்றேன்.


3.


எஸ்.பொவின் 'முறுவல்' ஒரு நாடகப் பிரதியாகும். இதை அவர் 70களில் எழுதி 74ல் கொழும்பில் மேடையும் ஏற்றியிருக்கின்றார். இந்தப் பிரதியில் பல்வேறு பாத்திரங்கள் குறுக்கிடுகின்றன. நிகழ்காலப் பாத்திரங்கள் பாத்திருக்க, இதிகாசப் பாத்திரங்கள் உயிர்பெற்று எழும்பத்தொடங்குகின்றன. விஸ்வாமித்திரனுக்கும், மேனகாவுக்கும் நிகழும் உரையாடல் விதந்து சொல்லக் கூடியவை. விஸ்வாமித்திரன் மேனகாவின் காதலை நிராகரிக்க இந்திரன் பூமியின் மீது சாபம் போட திரேகாதயுகம் தோன்றுகின்றது.


மழையே இல்லாதுபோய் மனிதர்கள் பட்டினியில் வாடத்தொடங்குகின்றனர். அப்போது விஸ்வாமித்திரனோடு சண்டாளன் என்ற பாத்திரம் உரையாடத் தொடங்குகின்றது. விஸ்வாமித்திரன், பசியின் கோரம் தாங்கமுடியாமல் 'தீண்டக்கப்படாதவன்' தன் குடிசையில் வைத்திருந்த இறைச்சியைச் சாப்பிடுகின்றார். இதுவரை காலமும் நீங்கள் கட்டிவைத்திருந்த உங்கள் தீண்டாமைக் கொள்கைகள் என்னவாயிற்று என்று சண்டாளன் கேட்கின்றார். நாங்கள் உயர்ந்தகுடிகள் எங்களுக்கு ஏற்றமாதிரி மனுநீதியையும், சடங்குகளையும் மாற்றக்கூடிய அதிகாரம் வாய்த்தவர்கள். இப்போது இந்த இறைச்சியை தீண்டத்தகாதவனாக உன்னிடமிருந்து களவெடுத்துச் சாப்பிடுவதும் அறமே என்கின்றார் விஸ்வாமித்திரன். 


எப்படியெல்லாம் தமக்கு வேண்டியபடி தமக்கான சாத்திரங்களை மாற்றுகின்றனர் இந்த ஆதிக்கசாதியினர் என அதிர்ந்து போய் ஒடுக்கப்பட்டவர் மெளனமாக இருக்கின்றார். இந்திரனுக்கோ விஸ்வாமித்திரனை நாய் இறைச்சியைச் சாப்பிடவைத்து அவரின் கொட்டத்தை அடக்கிவிட்டேன் என்று நிம்மதி வருகின்றது. பிறகு சமகால பாத்திரங்கள் இந்த வரலாற்று வாசிப்பைப் பற்றி ஆராய்வதுடன் நாடகப் பிரதி முடிகின்றது.


இதைப் பிறகு 2005ல் தமிழகத்திலும் தமிழச்சி தங்கபாண்டியன், சித்தன் போன்றோர் நடிக்க நாரதகான சபையிலும் மேடையேற்றியிருக்கின்றனர். 


70களில் எழுதப்பட்டதாயினும் அப்போதே இதில் எஸ்.பொவின் குறும்புத்தனங்கள் பல இருக்கின்றன. எஸ்.பொவே இந்த நாடகத்தின் இடையில் ஒரு பாத்திரமாக வருகின்றார். இந்திரன் தன் மனச்சாட்சியுடன் உரையாடுகின்ற காட்சிகள் சிலாகிக்கக் கூடியவை. விஸ்வாமித்திரன்- மேனகாவினூடாக எஸ்.பொ நமக்கு ஏற்கனவே சொல்லப்பட்ட கதையை மீள்வாசித்துப் பார்க்கின்றார். எஸ்.பொவுக்கு அவரொம் கதைகளில் வாய்க்கும் அழகிய மொழி இதில் அவ்வளவு வாய்க்காவிட்டாலும் 70களில் இப்படி ஒரு பிரதியை - வழமையான அவருடைய காமத் தீற்றுக்களுடன் - மேடையேற்றியிருக்கின்றார் என்பது கவனத்திற்குரியது.


***********

எஸ்.பொவின் 'நீலாவணன் நினைவுகள்'

Saturday, April 09, 2022

 (எஸ்.பொ - பகுதி 07)


'இலக்கியத்தைக் கற்றுத் தேர்ந்தவன் நான்' என்ற இறுமாப்புடன் என்னை 'வித்தக விமர்ச'கனாகவோ, ஞானம் பாலிக்கும் 'ஆசானா'கவோ இலக்கிய உலகிலே நானை திணித்துக் கொண்டனல்லன். அன்றும், இன்றும், நாளையும் அந்த இனிய உலகிலே நான் பரமார்த்த ஊழியனே. 'நான் இலக்கிய உலகிலே இவற்றைச் சாதித்துவிட்டேன்' என்று எதையாவது தொட்டுக்காட்டவும் கூச்சப்படும் ஒரு முதிர்ச்சியும் என்னை வந்து சேர்ந்திருக்கின்றது. இவ்வளவு காலமும் நான் எழுதியவை எல்லாம், நாளை நான் எழுதப்போகும் ஓர் உன்னத இலக்கியப் படைப்பிற்கான பயிற்சியே என்று சத்தியமாக நம்புபவன் நான். எனவே, என் கருத்துக்களைச் செலவாணிப்படுத்தும் அதேவேளையில், இன்றளவும், எல்லோரிடத்திலிருந்தும், நேற்றுத்தான் பேனா தூக்கிய ஓர் இளவலின் அனுபவத்திலிருந்துங்கூட, எதையாவது கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவனாய் இருக்கிறேன்.


(எஸ்.பொ, 'நீலாவணன் நினைவுகள்', ப 120)


1.


நீலாவணன் கிழக்கிலங்கையில் பிறந்த முக்கியமான கவிஞர். எஸ்.பொவின் காலத்துக்குரியவர். நீலாவணன் இளவயதில் (44) காலமாகும்போது எழுதிய அஞ்சலிக்கட்டுரையை விரித்து பின்னர் எஸ்.பொ எழுதியதே நீலாவாணன் நினைவுகள் பற்றிய நூலாகும்.


எஸ்.பொ, 80களில் கலாமோகனின் வீட்டில் பாரிஸில் தங்கியிருந்தபோது, அங்கே அப்போது வாழ்ந்த நமது 'காலம்' செல்வத்தார் பாரிஸ் அழகிகளையும், நெப்போலியனையும் தேடிப் போகாத காலத்தில் (விரிவான விபரங்களுக்கு செல்வத்தாரின் 'எழுதி தீராக் கதை'களை வாசிக்க), எஸ்.பொவைச் சந்தித்திருக்கின்றார். பின்னர் கனடா வந்த செல்வம் 'மஹாகவி' உருத்திரமூர்த்தியின் சிறப்பிதழ் ஒன்றை வெளியிடுகின்றார். அதனைப் பாராட்டும் எஸ்.பொ, 'யாழ்ப்பாண இலக்கியப் பங்களிப்பு = ஈழத்து இலக்கிய வளம்' என்கிற பழைய தவறுகளை இயற்றாது, மட்டக்களப்பின் தற்கால எழுத்து எழுச்சிகளையும் ஆவணப்படுத்தும் வகையில் கவிஞர் நீலாவணன் பற்றியும் ஒரு சிறப்பு மலர் வெளியிடும்படியாகக் கேட்கின்றார். அதிலிருந்தே இந்த நூல் எழுதும் காலம் கனிந்தது என்கிறார் எஸ்.பொ. இந்த நூல் 'காலம்' வெளியீடாக 94ம் ஆண்டு வெளிவந்திருக்கின்றது.


எஸ்.பொ இந்த நூலில் நீலாவணனுடனான நினைவுகளினூடாக அந்தக்கால இலக்கியப் போக்குகளையும், இலக்கியவாதிகளையும் அசை போடுகின்றார். முக்கியமாய் 60களில் கிழக்கிலங்கையில் கலை இலக்கியம் சார்ந்து நிகழ்ந்த சம்பவங்களை நாங்கள் இந்தத் தொகுப்பினூடாக அறிகின்றோம். நீலாவணன் அந்த மண்ணின் கவிஞராக இருந்தது பற்றி, நீலாவணனின் கவிதைகளை முன்வைத்து எஸ்.பொ பேசுகின்றார். அப்படிச் செய்யும்போதும் நீங்கள் எனது வாசிப்பினூடாக நீலாவணனைப் பார்க்கத் தேவையில்லை, நீங்களே தேடி வாசித்து உங்களுக்கான பார்வைகளை உருவாக்குங்கள் என்றும் எஸ்.பொ எங்களுக்குத் தெளிவாக இங்கே சொல்கின்றார்.


எஸ்.பொ, முற்போக்கு முகாமிலிருந்து வெளியேறிய காலத்தை அண்டிய பகுதியில், எஸ்.பொவுக்கு நீலாவணனின் நட்பு வாய்க்கின்றது. ஒரு மேடையை முதன்முதலாக இருவரும் பகிரும்போதும் இரண்டுபேரும் ஒருவர் கருத்தை ஒருவர் மறுத்தே பேசுகின்றனர். காலப்போக்கில் அவர்களை அறியாமலே ஒரு நல்லதொரு நட்பு அவர்களுக்கிடையில் முகிழந்து விடுகின்றது. தன்னைப் போலவன்றி முற்போக்கு முகாமை விட்டு வெளியே வந்துவிடாத நீலாவணனை, கைலாசபதியோ, சிவத்தம்பியோ தமக்கான ஆஸ்தான கவிஞர்களாக முன்னிறுத்திய முருகையன், பசுபதி போலக் கூட கவனப்படுத்தவில்லை என்று எஸ்.பொ கவலைப்படுகின்றார்.


நீலாவணன், மஹாகவி உருத்திரமூர்த்தி மீது அளவற்ற பற்று வைத்திருந்தவர். மஹாகவியை எங்கும் விட்டுக் கொடுக்காதபோதும், அவர்களுக்கிடையில் தான் அறிந்த காலங்களில் அவ்வளவு நட்பு இருக்கவில்லை என்கின்றார். மஹாகவி கிழக்கில் அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் கூட, அவர்களுக்கிடையில் அவ்வளவு பேச்சுவார்த்தைகள் நடந்ததில்லை என்கின்றார். அது ஏனென்றும் தனக்குத் தெரியவில்லை என்கின்றார். அதுபோலவே எஸ்.பொவும், நீலாவணனுடன் அவரின் இறுதிக்காலத்தில் கிட்டத்தட்ட 10 வருடங்களாக தொடர்பில் இல்லாமலே இருந்திருக்கின்றார். தனிப்பட்டோ அல்லது இலக்கியஞ் சார்ந்தோ வராத ஊடலினால் இறுதிவரை பிறகு நீலாவணனோடு பேச முடியாமற் போய்விட்டது என்று கவலைப்படுகிறார். நண்பர்களாய் இருப்பவர்கள் பெரிய காரணங்கள் எதுவுமின்றி ஒருகட்டத்தில் பிரிவதும், பிறகு என்றென்றைக்குமாய்ச் சந்திக்க முடியாமல் இருப்பதும் இலக்கிய உலகில் வழமையாக நடைபெறுபவைகள்தானே.


நீலாவணன் குறித்த இந்தப் பதிவுகளில் எஸ்.பொ,  விபுலானந்தரின் ஆழ்ந்த உழைப்பும், பல்துறைத் திறமையும் எப்படி யாழ்ப்பாண வித்தகக் கும்பலால் மறைக்கப்பட்டது என்பது பற்றி எழுதுகின்றார். அதேவேளை யாழைப் பூர்வீகமாகக் கொண்ட இலங்கையர்கோன் உண்மையிலே கிழக்கிலங்கையில் இலக்கியம் செழிக்க பல்வேறுவழிகளில் உதவியிருக்கின்றார் என்பதைக் குறிப்பிடுகின்றார்.நீலாவணனுக்கும், இலங்கையர்கோனுக்கும் இருந்த உறவைப் பற்றி எஸ்.பொ விபரிக்கும்போது நமக்கும் நெகிழ்ச்சி வருகின்றது. அவ்வாறு இலங்கையர்கோன் பற்றி வ.அ.இராசரத்தினம் நெகிழ்ச்சியாக, தனது நினைவுகளின் குறிப்புகளில் எழுதியது எனக்கு நினைவுக்கு வருகின்றது.


எஸ்.பொவுக்கு, இலங்கையர்கோனோடும் இலக்கியக் குறித்த கருத்துக்களில் சர்ச்சை வருகின்றது. இருவருக்கும் நெருக்கமான நீலாவணனுக்கு இந்த மோதலை என்ன செய்வதென்றும் தெரியவில்லை. எஸ்.பொ அந்தக் கோபத்தில் நீலாவணன் வீட்டிலிருந்து புறப்பட்டு மட்டுநகருக்குப் போகப்போகின்றேன் என்கின்றார். நீலாவாணன் ஒருநாள் நின்றுவிட்டுச் செல்லுங்கள், இலங்கையர்கோன் தன் பக்கம் தவறிருந்தால் நிச்சயம் உங்களைச் சந்திக்க வருவார் என்கின்றார். அவ்வாறு இலங்கையர்கோன் வந்து மன்னிப்புக்கேட்டு எஸ்.பொவின் நினைவில் உயர்ந்த மனிதராக மாறுகின்றார்.


இலங்கையர்கோனின் மறைவு நீலாவணனைத் தாக்க, இலங்கையர்கோனை யாழ் வரை சென்று இறுதியாக வழியனுப்பி வைக்கின்றார். அப்படி நீலாவணனின் நிழலினூடாக வளர்ந்த எம்.ஏ.நுஃமான் பின்னர் மஹாகவி கொழும்பில் மரணமடைய யாழ்ப்பாணம் வந்து வழியனுப்பியதையும் எஸ்.பொ குறிப்பிடுகின்றார். நுஃமான் என்ற மெல்லிய இளைஞனை அளவெட்டி வரை வரசெய்த இலக்கியத்தாகத்தினூடாக எஸ்.பொ, மஹாகவிக்கும் தனக்கும் இருந்த நினைவுகளை இங்கே நம்மோடு பகிர்கின்றார்.


இலங்கையர்கோன், நீலாவணனுக்கு இருந்தமாதிரி, நீலாவணன் அவ்வாறு பலரைப் பிறகு 'எழுத்தாளர் சங்கம்' என்ற அமைப்பை நடத்தி வளர்த்திருக்கின்றார். அதிலிருந்து முகிழ்ந்து வந்த முக்கியமான இருவராக நுஃமானையும், சண்முகம் சிவலிங்கத்தையும் எஸ்.பொ கவனப்படுத்துகின்றார்.


2.


நீலாவணன், பாரதியாரை விட, பாரதிதாசன் மீது நிறைந்த பற்றுடையவராகவும், பாரதிதாசனின் கவிதைகளை மனப்பாடம் செய்து பாடுகின்றவராகவும் இருந்திருக்கின்றார் என்கின்றார். எஸ்.பொவுக்கு பாரதிதாசன், திராவிட இயக்கங்களின் உணர்ச்சிக்குள் வீழ்ந்துவிட்ட கவியென்கின்ற பிம்பம் இருக்கின்றது. எனவே நீலாவணனுக்கு இருக்கும் பாரதிதாசப் பிடிப்பை எதிர்மறையாக அவ்வப்போது குறிப்பிடுகின்றார். அதேவேளை நீலாவணனுடன் அவரின் கடைசிப் பத்தாண்டுகளில் தொடர்பில்லாததால் நீலாவாணன் கூட சிலவேளைகளில் மாறியிருக்கலாம் எனவும் எஸ்.பொ இந்நூலில் குறிப்பிடுகின்றார்.


மஹாகவி, இலங்கையர்கோன் போல இந்த நூலில் சற்று விரிவாகப் பேசப்படும் இன்னொருவர் ஏ.ஜே.கனகரத்ன. எஸ்.பொ, ஏ.ஜேவுடன் யாழில் கிராண்ட் ஹொட்டலில் மதுவை சிறுசிறு மிடறுகளாக அருந்தியபடி இலக்கியம் பேசியது அற்புதமானது என்கின்றார். பிறகு எஸ்.பொவும், ஏ.ஜேவும் நீலாவணனின் வீட்டிலும் இருந்து பேசியிருக்கின்றனர். ஆனால் இதைவிட இம்மூவரும் கொட்டாஞ்சேனையில் இருந்து நீலாவணன் கவிதைகள் வாசிக்க, தாங்கள் மதுவருந்தி அதைக் கேட்டதும், கருத்துக்களைப் பகிர்ந்ததும் இன்னும் பேரின்பந்த தந்த அனுபவம் என்கின்றார் எஸ்.பொ.


ஏ.ஜே தமிழ் ஆக்கங்களை ஆங்கில ஆக்கங்களுடன் ஒப்பிட்டு நயப்பதும், கவிதைக்கு உருவகமொழி இன்றியமையாதது என நீலாவணனுக்குச் சொல்வதும், நீலாவணன் அதைப் பிறகான காலங்களில் எடுத்துக்கொள்வதுமென ஒரு கடந்தகாலத்தை நாங்களும் அவர்களுடன் இருந்து பார்க்கின்றோம். அதேபோன்று முற்போக்கு அணி தன்னை எல்லா இடங்களிலும் இருந்தும் தனிமைப்படுத்த, இளம்பிறை எம்.ஏ.ரஹ்மானும், நீலாவணனும், அவரின் கல்முனை நண்பர்களுமே தாங்கிப் பிடித்தார்கள் என்பதையும் எஸ்.பொ குறிப்பிடுகின்றார். எம்.ஏ.ரஹ்மானின் பதிப்பகம் இல்லாதுவிட்டால் தன்னால் இவ்வளவு உத்வேகத்துடன் எழுதியிருக்க முடியாதிருந்திருக்கும் என்றும் குறிப்பிடுகின்றார்.


நீலாவணனின் சடுதியான இழப்பு எஸ்.பொவுக்குப் பேரிழப்பாக இருக்கின்றது. கிழக்கின் இலக்கியத்தை இன்னும் ஆழமாகக் கொண்டு சென்றிருக்கக் கூடியவர் இளவயதில் இல்லாமற்போய்விட்டாரே என்று கவலைப்படுகின்றார். நீலாவாணனின் முக்கிய நெடுங்கவிதையான 'வேளாண்மை'யை பிறகு நீலாவணனின் நண்பரான வ.அ.இராசரத்தினம் பதிப்பிக்கின்றார். அவ்வளவு வசதியில்லாத வ.அ.இராசரத்தினம், இதை நீலாவணனுக்காய் செய்கின்றார் என எழுதுகின்ற எஸ்.பொ அதனூடாக நமது வாசிப்புப் பழக்கத்தையும், காசு கொடுத்து நூல்களை வாங்கப் பஞ்சிப்படுத்தும் சூழலையும் கடுமையாக விமர்சிக்கின்றார். 


முக்கியமாக, 'புலம்பெயர்ந்த நாடுகளிலே கலாசாரப் பராம்பரிய வேர்கள் பட்டுப்போகாது பாதுகாக்க வேண்டிய அவலங்களுக்கு மத்தியிலே வாழ்பவர்கள் கூட,  பொருள் வசதிகள் இருந்தும், தமிழ் சினிமா உலகின் மூன்றாந்தர நடிகைகளின் குண்டி நெளிப்புக்குப் பொன்மாலை சூட்டத் தவிக்கிறார்களே ஒழிய, ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்களைக் காசு கொடுத்து வாங்குவோம் என்கிற உணர்ச்சி அற்ற ஜடங்களாக வாழ்வதிலே பெரும்பாலும் திருப்திப்படும் அநியாய கோலத்தைப் பாக்கின்றோம். இத்தகைய அசட்டையும் பஞ்சிப்பாடும் நிலைத்திருக்கும் வரையிலும் ஈழத்து இலக்கியக்காரனின் படைப்புகளை நூலுருவிலே பேணும் ஆசை, ஓர் இனிய கனவாகவே கரைந்துபடும். இலவச கூப்பன் அரிசி நுகர்ந்து மகிழ்ந்த கூட்டத்தினருடைய சந்ததியினர், கலை-இலக்கிய ரஸனையை 'ஓசி'யில் பெறும் 'பொழுது போக்குப் பண்டம்' என்று கருதுதல் அவல் பேறாகும்.' என எழுதுகின்றார். 


எஸ்.பொ இந்தளவு கடுமையான கசப்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு, அன்று (94) வரை நீலாவணனின் ஆக்கங்கள் முழுவதும் நூலுருப் பெறவில்லை என்பதும் ஒரு காரணமாகும்.


நீலாவணனின் நினைவுகள் என்கின்ற இந்த நூலினூடாக எஸ்.பொ நீலாவணனை மட்டுமில்லை இன்னும் பலரை நினைவுகூருகின்றார். அன்றையகால இலக்கிய உலகை, சர்ச்சரவுகளை, இழந்துபோன நட்புக்களை, அன்று தமிழ் X முஸ்லிம் என்ற முரண்கள் இல்லாது கலந்துபழகிய அந்நியோன்னியத்தை நமக்குக் கவனப்படுத்துகின்றார். சடங்கு, ஆண்மை, நனவிடைதோய்தல் போன்ற அரிய படைப்புக்களைத் தந்தபோதும், தன்னை இன்னும் கற்றுக்கொண்டிருக்கும் மாணவர் என்று எஸ்.பொ சொல்லிக்கொள்கின்றார். உண்மையின் உபாசகனாகவும், தமிழ் இலக்கிய ஊழியனாகவும் தன்னை என்றும் வைத்துப்பார்க்கும் எஸ்.பொ இந்த நூலினூடாக  தனது நல்லதொரு நண்பரை நினைவுகொள்வதன் மூலம், நீலாவணனை அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் அறிமுகப்படுத்துகின்ற அரிய பணியைச் செய்திருக்கின்றார் என்றே கூறவேண்டும்.


**********

(2019)

கனடாவின் வடக்கு நோக்கிய பயணம் - 02

Monday, April 04, 2022

1. 

Sudbury நகரின் காட்சிகளின் இருந்து இயற்கையை இன்னும் ஆழமாய்த் தரிசிக்க வேண்டுமென்றால், Onaping Falls இற்குப் போய்ப் பார்க்கலாம். போகும்பாதையெங்கும் காடுகள் விரிந்துகிடக்கும், அதனூடு காரோட்டிப் போகும்போது மனது தெளிந்து துல்லியமாகும்.


இது Onaping Falls  என இப்போது அழைக்கப்பட்டாலும், Onumunaping என்றே பூர்வீகக்குடிகள் அழைத்திருக்கின்றனர். இதன் அர்த்தம் 'எரியும் சிவப்பு நிலம்' என்பதாகும். அருவி விழும் பாறைகளில் 'சல்லிப்பயல்களாகிய' மனிதர்கள் தங்கள் பெயர்களை எழுதி அதன் இயல்பைக் குலைத்திருந்தாலும், பாறைகள் பல 'செம்பாட்டு'நிறத்தில் இருப்பதை அவதானிக்கலாம். அத்துடன் இந்த இடத்துக்கு இன்னொரு சிறப்பும் இருக்கின்றது. இங்கே பல காலங்களுக்கு முன் எரிகல் ஒன்று விழுந்திருக்கின்றது. 


இந்த அருவியைச் சுற்றி நாம் நடந்து பார்க்கும் trailம் இருக்கின்றது. நான் முற்றுமுழுதாக அதன் முடிவுவரை நடந்து பார்க்கவில்லையெனினும், நடந்தவரைக்கும் ஏதோ காட்டிற்குள் நிற்பது போன்ற உணர்வைத் தந்திருந்தது. அத்துடன் பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உரிய நடைபாதையது. நிறைய மூச்சுவாங்கித்தான் நடக்கவேண்டியிருந்தது.


இந்த ஆற்றுக்கு ஒரு விநோதமான பின்னணி இருப்பதை இங்கே போனதன் பின்னரே அறிந்துகொண்டேன். 1950களில் A.Y. Jackson இங்கே வந்து ஆற்றைப் பார்த்து ஓவியத்தை வரைந்திருக்கின்றார். இவர் கனடாவில் பிரசித்திபெற்ற குழுவான Group of Seven என்கின்ற ஓவியக்குழுவை ஆறு நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கியிருக்கின்றார். கனடாவின் அழகு என்பது அதன் பரந்த நிலப்பரப்புக்களில்தான் இருக்கின்றது என்று, இந்தக்குழு கனடா எங்கும் பயணித்து இந்நாட்டின் நிலவியல் காட்சிகளை வரைந்திருக்கின்றனர்.


அப்போதுதான் ஜாக்சன் இங்கே வந்திருக்கின்றார். அந்தக்காலத்தில் இப்போது நாங்கள் போவதுபோல நெடுஞ்சாலை அமைந்திருக்கவில்லை. புகையிரப் பயணம் மூலமும், மிச்சத்தை நடந்து வந்தும் இந்த ஆறு பாயும் காட்சியை வரைந்திருக்கின்றார். அதற்கு "Spring on the Onaping River” எனப் பெயரிட்டிருக்கின்றார். இந்த ஓவியத்தை ஒரு கல்லூரி வாங்கித் தமது வளாகத்தில் காட்சிப்படுத்தியிருக்கின்றது. பின்னாளில் இந்த Group of Seven ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் பிரபல்யமானபோது, ஜாக்சனின் "Spring on the Onaping River” களவு போயிருக்கின்றது. அவ்வப்போது இந்த ஓவியம் எங்கே பதுக்கப்பட்டிருக்குமென அவ்வப்போது புதிய குழுக்கள் தேட வெளிக்கிட்டாலும், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆனபிறகும் இந்த ஓவியம் கண்டுபிடிக்காமலே இருக்கின்றது.


எனினும் ஜாக்சன் இந்த இடத்துக்கு வந்து ஓவியம் வரைந்ததை பெருமை செய்யும் இடமாக, இந்த ஆற்றை அவர் எந்த இடத்தில் இருந்து வரைந்திருந்தாரோ அந்த இடத்துக்கு இப்போது "A.Y Jackson Lookout" இடமெனப் பெயர் சூட்டி அவரை நினைவுகூர்கின்றனர்.



நீர்வீழ்ச்சி/அருவிகளைப் பார்க்கும்போது எனது யோசனைகள் 'மப்பில் மிதக்கும் மந்தி' போல வேறெங்கும் அலையாது, நிகழில் நிற்பதை அவதானித்திருக்கின்றேன். அது அருவியின் சலசலத்தோடும் சப்தத்தாலும், அவை உருவாக்கும் நீர்ச்சுழிகளாலும் எங்கும் என் சிந்தனைகள் தெறித்தோடாமலும் இருப்பதை இங்கும் பாறையில் படுத்திருந்து அருவியின் இசையையும், வானத்தின் நீலத்தையும் பார்த்துக்கொண்டிருந்தபோது உணர்ந்தேன்.


2.


Onaping அருவிலியிருந்து 200 கிலோமீற்றர்கள் பயணித்து Manitoulin Island நோக்கிச் செல்வதாக அடுத்த இலக்கு இருந்தது. Manitoulin தீவு, உலகிலேயே நன்னீர் ஏரிகளால் சூழப்பட்ட மிகப்பெரும் தீவாகும். கிட்டத்தட்ட 2500 கிலோமீற்றர்கள் பரப்பளவு உடையது. நன்னீர் ஏரிகளால் சூழப்பட்டவை. 


தீவுகள், தீவுகளுக்குள் தீவுகள் (Islands within Islands) எனப் பிரசித்தம் பெற்றது மட்டுமில்லை, நன்னீர் ஏரிகளைப் போல, மிகுந்த சுத்தமான காற்றுக்கும் (சுவாத்தியத்துக்கும்) பெயர் பெற்றது. இந்தத் தீவில் இப்போது கிட்டத்தட்ட 40வீதத்துக்கு மேலே பூர்வகுடிகளே இருக்கின்றனர். சில பகுதிகள் Unceded Indian Reserve ஆக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 


இங்கே இயற்கை வளங்கள் அவ்வளவு கவனமாகப் பாதுகாக்கப்படுவதால், பெரிய கடைகளோ கட்டங்களோ கண்ணில்படதாததால் காரையோட்டிக்கொண்டுப் போவது அருமையான அனுபவமாக இருக்கும். அடர்த்தியான காடுகள், நீர்வீழ்ச்சிகள், சமதரைகள் என மாறும் நிலப்பரப்புகளும், சுத்தமான காற்றும், செயற்கை வெளிச்சங்களால் மாசுபடாத வானமும் நமக்கு இங்கே கொடைகளாக அருளப்பட்டிருக்கின்றன.


இந்தத் தீவின் முதல் நகரான Little Current இற்குள் நுழைவதற்கு ஒரு பாலமே உதவுகின்றது. இது கிட்டத்தட்ட 180 பாகையில் நகரக்கூடிய பாலம். கார்கள் ஓடிச் செல்வதற்கும், மறுபுறம் திரும்பி - நீரில் போகும்- படகுகளுக்கும் வழி கொடுப்பதற்குமாக இது அசையக்கூய ஒரு பாலமாகும். நூற்றாண்டாகும் இந்தப் பாலம் விரைவில் மாற்றம் பெற்றுவிடும் என்கின்றார்கள். ஆனால் இந்த நகரும் பாலத்தினூடாகப் போவது வித்தியாசமான ஓர் அனுபவம்.


Airbnb ஊடாகப் பதிவு செய்து இடம் Manitowering இல் இருந்தது. அதற்கருகிலேயே பூர்வீகக்குடிகளில் நகரான Wikwemikong இருந்தது. உணவுக்கும் அவ்வளவு இடங்கள் இருக்காது. இருந்தவையும் விரைவிலேயே மாலையில் பூட்டிவிடுகின்றன. எனவே முப்பது கிலோமீற்றர்கள் மேலும் தெற்குபோய் ஒரு உணவத்தைக் கண்டுபிடித்து, அங்கே பிரசித்தமான Yellow Perch மீனுடன் இரவுணவை முடித்தேன்.


***********

(2021 கோடை)