கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பியானிப்பூ (Peony) குறிப்புகள்

Wednesday, July 21, 2021

 

 1.

அன்டன் செகோவ் சிறுகதைகள் - தமிழில் எம்.எஸ்



செகோவின் வாழ்வு 44 வருடங்கள். அவர் மறைந்துகூட இப்போது ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால் அவரது கதைகளை இன்று வாசிக்கும்போதும் காலாவதியாகாது இருக்கின்றன. 'நாயுடன் நடந்த பெண்' செகோவின் பிரபல்யம் வாய்ந்த கதை. அதில் வரும் பாத்திரம் அன்னா என்ற பெயரில் இருப்பதால் மட்டுமின்றி, அந்தக் கதையின் சம்பவங்கள் பலதும் எனக்கு டால்ஸ்டாயின் 'அன்னா கரீனா'வை ஞாபகப்படுத்தியபடி இருந்தது (ஆங்கிலத்தில் ஏற்கனவே வாசித்திருந்தேன்). திருமணம் செய்த ஒரு பெண் விடுமுறைக்கு வரும்போது அவர் மீது காதலில் விழும் ஒரு ஆணின் கதை இது. பிறகு அவன் அந்தப் பெண்ணைத்தேடி அவர் வாழும் நகரத்துக்குப் போவதாய்க் கதை நீளும். இது விளாடீமிர் நபகோவுக்குப் பிடித்த செகோவின் கதைகளில் ஒன்று. இந்தக் கதையை செகோவ் எழுத ஏதும் காரணமிருக்கின்றதா என சற்று ஆராய்கின்றபோது இது செகோவின் வாழ்வில் நடந்த கதையென்றும், அந்தப் பெண்ணே செக்கோவ் பின்னர் திருமணம் செய்த ஒல்கா என்பதையும் அறியமுடியும்.


இதேபோல இன்னொரு கதையான 'சந்தோசமான மனிதன்' சுவாரசியமான ஒன்று. திருமணம் செய்த ஒருவன் ரெயினில் வருகின்றான். அவன் தற்செயலாக ரெயினின் வேறொரு பெட்டியில் தனது நண்பரொருவனைக் காண்கின்றான். அவனிடம் தான் திருமணஞ்செய்துவிட்டேன், தான் மிகவும் ஒரு சந்தோசமான மனிதன் என அடிக்கடி சொல்லிக்கொள்கின்றான். தன்னால் விரும்பியபோது சந்தோசத்தை உருவாக்கமுடியும் என்று சொல்லி நண்பனை மட்டுமில்லை அந்த ரெயின் பெட்டியில் இருக்கும் அனைவரையும் உற்சாகப்படுத்துகின்றான்.


இதற்கு முன் அவன் ஒரு தரிப்பிடத்தில் ரெயின் நின்றபோது மது குடிப்பதற்காக இறங்கி சில குவளை மது அருந்த ரெயினும் புறப்பட இறுதி நேரத்தில் ரெயினுக்குள் ஏறியிருக்கின்றான். இதைக் கூறிவிட்டு நண்பனிடம் தனக்காய்க் காத்திருக்கும் மனைவியைக் காண இன்னொரு பெட்டிக்குப் போகும்போதுதான், அந்த மகிழ்ச்சியான மனிதனுக்கு தான் பிழையான எதிர்ப்புறத்தில் வந்துகொண்டிருக்கும் ரெயினுக்குள் அவசரத்தில் ஏறிவிட்டேன் என்பது புரிகிறது. முட்டாள் முட்டாள் எனத் தன்னைத் திட்டிக்கொள்கின்றான். சந்தோசத்தை தன்னால் தானே உருவாக்கமுடியும் என்று சொல்கின்றவன் இப்போது சோர்ந்து போகின்றான். அந்த ரெயினுக்குள் இருக்கும் மற்ற மனிதர்கள் அவனுக்கு அடுத்து என்ன செய்கின்றார்கள் என்பது கதை.


செகோவிடம் இருந்து எப்படி எளிமையான கதைகளைச் சொல்வது என்பதை அறிந்து கொள்வதைப் போல, அந்த எளிமையிலிருந்து நம்மைப் பாதிக்கச் செய்யும் கதைகளையும் எழுதமுடியும் என்பதையும் கற்றுக்கொள்ளமுடியும். ஒரு சிறு உலகத்திற்குள் நாம் சுழன்று கொள்ளாது அல்லது அதுதான் 'மோஸ்தர்' என்று நம்பாது, வெளியே வந்து எப்படி நாம் வெவ்வேறு பின்னணியில் இருந்து மனிதர்களின் கதையைச் சொல்லலாம் என்பதற்கு செகோவ் நமக்கு நல்லதொரு உதாரணமாக இருக்கின்றார்.


எம்.எஸ்(எம்.சிவசுப்பிரமணியன்) நேர்த்தியாக இந்தக் கதைகளைத் தமிழாக்கம் செய்திருக்கின்றார். என்ன சிலவேளைகளில் தமிழ் வாசகர்களுக்கு விளங்கவேண்டும் என்பதற்காய் மதுக்கடைகளையெல்லாம் கள்ளுக்கடைகளாக்கிவிடும்போது. ரஷ்யாவில் கள்ளுக்கடைகளா என திகைப்பு வந்தாலும் எதுவென்றாலும் போதை போதைதானேயென அதையும் இரசிக்கமுடிகிறது.



2.


மெளன வாக்கிய மாலை (கவிதை-காண்பியம்-தியானம்) - யோகி



ஆன்மீகத்தை வியாபாரப்படுத்தப்பட்ட மதங்களுக்குள்ளும், அதைப் பிரதிநிதிப்படுத்துகின்றோம் என்கின்ற போலிகளின் பேரிச்சலுக்குள்ளும் இடையில் இருந்து பேசுவது என்பது மிகவும் கடினமானது. மேலும் உள்ளுணர்ந்து கொள்வதை எல்லாம் எழுத்தாகவோ/பேச்சாகவோ வைக்கும்போது கூட அவற்றின் சாராம்சம் இழந்துபோகும் ஆபத்தும் உள்ளது. விசர்ச் செல்லப்பா எனப்படும் செல்லப்பா சுவாமிகள் பேசியது மிகக்குறைவு. ஏன் அவரின் தொடர்ச்சியெனப்படும் யோகர் சுவாமிகள் கூட அவ்வளவு பேசவில்லை. மிகவும் குறைவாகப் பேசிய ரமணர் கூட, நான் யார் என்றே தொடர்ந்து அவரைத் தேடி வந்தவர்களிடம் கேள்விகளாகக் கேட்க வைத்தவர். விசிறி சாமியார், தன்னைப் பற்றி வரும் ஓரிரு வரிகளை தொடர்ந்து மனனம்/பராயாணம் செய்தாலே போதும் என்று சொல்லியபடி தன்னையொரு பிச்சைக்காரன் என்று அறிவித்துக்கொண்டவர்.


அதைபோலத்தான் ஆன்மீகத்தை எளிதான வார்த்தைகளில் அல்லது ஏற்கனவே தேய்வழக்காகிப்போன சொற்களில் பேசும்போது நமக்குப் பெரும்பாலும் அர்த்தத்தைத் தராது போய்விடும் நிலைமையும் உண்டு. ஸென்னில் மலையைப் பார்க்கும்போது முதலில் மலை தெரியும், பிறகு அது இல்லாது போகும், ஞானம் கிடைத்தபின் மலை மலையாகவே தெரியும் என்று சொல்லும் கதை உண்டு. மலை மலையாகத் தெரிவதற்கு ஏன் நாம் இவ்வளவு கஷ்டப்படவேண்டும் என்று உடனே ஒருவர் நினைக்கக்கூடும். ஆனால் அந்த transformation - மலை/மலையில்லாது போதல்/மீண்டும் மலை தெரிதல்- என்பதற்கு சிலவேளைகளில் ஒரு ஆயுளே நமக்குப் போதாமல் கூடப் போகலாம். ஆகவே எளிமை என்பது எப்போதும் ஒரே 'எளிமை'யல்ல.


அவ்வாறுதான் யோகியின் கவிதைகளை வாசிக்கும்போது எனக்குத் தோன்றியது. யோகி தன்னை முதலில் ஆன்மீகவாதியாக முன்வைக்க விரும்புகிறார் என இந்தத் தொகுப்புச் சொல்கின்றது. அவரின் கவிதைகள் எளிமைபோல, ஏற்கனவே பழக்கப்பட்ட வார்த்தைகளுக்குள் வந்துவிழுவதால் நாம் சாதாரணமாக வாசித்து கடந்துகூடப் போய்விடலாம். ஆனால் அவருக்கு அந்தச் சொற்கள் தரும் மெளனமும் ஆழமும் மிக நீண்டவையாக இருக்கலாம்.


அவருக்கு ஒத்தவரிசைகளில் பயணித்துக்கொண்டிருப்பவர்கள் அந்த சொற்களை அதன் மேலோட்டமான அர்த்தங்களைத் தாண்டி வேறு அர்த்தங்களை அறிந்துகொள்ளவும் கூடும். இந்த நூல் அழகான வடிவமைப்பில் இலங்கையிலிருந்து வெளிவந்திருக்கின்றது. கவிதைகளை அப்படியே ஒரு நீண்ட ஒற்றையாக மாற்றிவிட, அதன் மறுபக்கத்தில் காண்பியக் காட்சிகள் விரிகின்றன.



3.

அயல் பெண்களின் கதைகள் - (சிங்களத்திலிருந்து தமிழில் எம்.ரிஷான் ஷெரீப்)


எனக்கு ஒரு சிங்கள நண்பர் இருக்கின்றார். அவரிடம் அவ்வப்போது இலக்கியம் சார்ந்து பேசுவதுண்டு. அண்மையில் கத்யானா அமரசிங்ஹாவின் 'தரணி' வாசித்துவிட்டு என்ன ஒரு நாவலென வியந்துகொண்டிருந்தார். அதற்கு அவர் சிங்களத்தில் ஒரு வாசிப்பும் எழுதியிருந்தார். தமிழிலும் 'தரணி' வந்திருக்கின்றதென்று நான் கூறியபோது, விரைவில் வாசித்துவிட்டு வா, நாம் அதைப் பற்றிப் பேசுவோம் என்றார்.


அந்தப் புத்தகம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் ரிஷான் ஷெரீப் சிங்களத்திலிருந்து தமிழாக்கம் செய்திருந்த 'அயல் பெண்களின் கதைகளை' கடந்தமுறை சென்ற சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கிவந்திருந்தேன். 5 சிங்களப் பெண்களின் 9 கதைகள் இருக்கின்றன. கத்யானாவின் 'நட்சத்திரப் போராளி', தஷிலா ஸ்வர்ணமாலியின்' பொட்டு', சுநேந்ரா ராஜ கருணாநாயகவின் 'குறுந்தகவல்' எனக்குப் பிடித்தமான கதைகள். ஒருவகையில் இந்தக் கதைகள் மூன்றும் தமிழ் மக்களைப் பேசுகின்றவையுங்கூட. எப்படி இந்தப் பெண்கள் நுட்பமாக கதைகள் எழுதுகின்றார்கள் என்பதோடு, நமக்கு நெருக்கமாய் நம்மைப் பற்றிய கதைகளைச் சொல்கின்றார்கள் என்பதும் சற்று வியப்பானது. போர் அனுபவங்கள் நிறைந்த தமிழ் மக்களாகிய நாம் எத்தனை விரிவான அனுபவங்கள் இருந்தாலும் ஏனின்னும் இவர்கள் அளவுக்கு நம்மால் கதைகளை வேறொரு பாதையில் நின்று சொல்லமுடியவில்லை என்ற ஏக்கமும் இவர்களை வாசிக்கும்போது வருகின்றது.


சிங்களப் பெண்களின் கதைகளுக்கு தொடர்பில்லாத இந்திய நகரத்துப் பெண்களின் அட்டைப்படம் ஏன் தெரிவுசெய்யப்பட்டது என்பது மட்டும் புரியவில்லை. இது எனக்கான கேள்வி மட்டுமில்லை, இந்த அட்டையைப் பகிர்ந்தபோது என் சிங்களத் தோழியும் இதையே கேட்டார். அதுபோல அவரும் நமது தமிழ்க்கதைகளை வாசிக்க ஆர்வமாகவே இருக்கிறார் (தமிழினியின் கதைகள் தவிர வேறு எதுவும் அவருக்குக் கிடைக்கவுமில்லை). சிங்களத்திலிருந்து தமிழுக்கு வருகின்ற மாதிரி, தமிழிலிருந்து சிங்களத்துக்கும் நேர்த்தியான மொழிபெயர்ப்புக்களை யாரேனும் தனித்தோ/கூட்டாகவோ செய்யலாம். இல்லாவிட்டால் ஒற்றைவழிப் பயணம் போல நாம் மட்டுமே நம்மோடு பேசிக் கொண்டிருப்பதைப்போல ஆகிவிடும்.

.................................


(Feb 23, 2021)

Baggio: The Divine Ponytail

Thursday, July 15, 2021

1.

எனக்கு நினைவு தெரிந்த முதலாவது உலகக்கோப்பை உதைபந்தாட்டம் என்றால் அது 1994 இல் நிகழ்ந்த ஆட்டங்களாகும். அப்போது நாங்கள் மட்டுமில்லை எங்கள் பாடசாலையும் இடம்பெயர்ந்து இணுவில்/மருதனார்மடம் போன்ற இடங்களில் இயங்கிக்கொண்டிருந்தது.  அப்போது தொலைக்காட்சி, ஏன் ரேடியோ வசதி கூட எங்களிடம் இருக்கவில்லை. மின்சாரமே தடைபட்டு மண்ணெண்ணெய் விளக்குகளில் படித்துக்கொண்டிருந்த நாங்கள் இதையெல்லாம் எதிர்பார்ப்பது கூட அதிகந்தான். ஆக, உலகக்கிண்ண உதைபந்தாட்ட விபரங்களைப் பார்க்க பத்திரிகைகளை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த காலமது .


அதேசமயம் மருதனார்மடத்தில் எங்களுக்குத்தெரிந்த வீட்டில் மட்டும் ஜெனரேட்டரின் உதவியுடன் இந்த உதைபந்தாட்ட ஆட்டங்களை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தனர். அது எங்களுக்கு உதைபந்தாட்ட பயிற்சியாளராக இருந்த றொகானின் வீடு. அவர் எங்கள் பாடசாலை அணிக்கு விளையாடிய காலங்களில் எங்கள் பாடசாலை அணி அகில இலங்கை சாம்பியன்ஸாக வந்திருந்தது.  றொகான் பின்னர் வன்னிக்கு இடம்பெயர்ந்து புலிகளின் விளையாட்டுத்துறைப் பொறுப்பில் முக்கியமான ஒருவராக இருந்து காலமானவர். 


அதேபோல, நான் 15 வயதுக்குட்பட்ட எங்கள் பாடசாலை கிரிக்கெட் அணிக்கு நான் தலைமை தாங்கியபோது யாழ் இந்துக்கல்லூரிக்கு புலிகளின் முக்கிய அரசியல்பொறுப்பாளர்களின் ஒருவராக இருந்த யோகி பயிற்சியாளராக இருந்தார். மாத்தையாவின் பிரச்சினைகள் நிகழ்ந்து, புலிகள் அவரைப் பதவியிறக்கி, இயக்கத்திலிருந்தும் வெளியேற்றியபோது அவர் இப்படி பயிற்சியாளராகப் புதிய வடிவம் அன்று எடுத்திருந்தார்.


றொகானின் வீட்டில் உதைபந்தாட்டங்களைப் பார்க்க விரும்பினாலும், இரவுகளில் அல்லது விடிகாலைகளில் நடக்கும் ஆட்டங்களை நேரடியாகப் பார்க்க எனக்கு அன்று சந்தர்ப்பம் வரவில்லை. நாங்கள் வேறு ஊரில் அப்போது இடம்பெயர்ந்து வசித்துக்கொண்டிருந்தோம். போர்க்காலம் வேறு. ஆனால் எங்களில் ஒரு நண்பன் மட்டும் அவரின் வீட்டிற்கருகில் இருந்ததால் அவனுக்கு ஆட்டங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. ஆகவே அவன் சுடச்சுட அடுத்தநாள் காலையில் எங்கள் வகுப்பில் இரவு நடந்த ஆட்டங்களைப் பற்றிச் சுவாரசியமாகச் சொல்லிக்கொண்டிருப்பான். நாங்கள் வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருப்போம்.


இன்றைக்கு மட்டுமில்லை அன்றைக்கும் எனக்கு இத்தாலி அணி பிடிக்காத அணி. என்றுமே பிடிக்காத இன்னொரு அணியென்றால் அது இங்கிலாந்து (இங்கிலாந்து இரசிகர்கள் மன்னிக்க). அன்றிலிருந்து இற்றைவரை பிரேஸிலின் தீவிர இரசிகன் நான். அடுத்து ஆர்ஜெண்டீனா, மற்றைய இலத்தீன் அமெரிக்க நாடுகள் என்றவகையில் என் விருப்பப்பட்டியல் நீண்டபடி போகும். 


1994 இறுதி ஆட்டம் பிரேசிலுக்கும், இத்தாலிக்கும் நிகழ்கிறது. அன்று இரண்டு 'சுப்பர் ஸ்டார்களான' பிரேசிலின் ரொமாரியோவும், இத்தாலியின் ரொபர்தோ பாஜ்ஜியோவும் களத்தில் நிற்கின்றார்கள். இவர்களின் முழுநீள வர்ணப்படங்கள் அன்று sports starஇல், வந்து அவற்றை சேகரித்து வைத்ததாகவும் நினைவு.


இதுவரை எந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் நிகழாதபடிக்கு, அன்றைய ஆட்டம் சமநிலையில் முடிந்து Penalty Shoot outஇற்குப் போகின்றது. இத்தாலிய நட்சத்திரம் ரொபர்தோ பாஜ்ஜியோ தனது உதையை கோல் கம்பத்திற்கு மேலாக அடித்ததால் பிரேஸில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரிக்கின்றது. ஒரு பிரேசில் இரசிகனாக அது எனக்கு மகிழ்ச்சி. 


பிறகு பிரேசிலின் ஆட்டங்கள் ஒவ்வொன்றையும் இரசித்துப் பார்த்துக் கொண்டாடித் தீர்த்தது 2002 இல் பிரேசில் உலக்கோப்பையை வென்றபோதாகும். அதன் பிறகு நிகழ்ந்ததெல்லாம் சோகக் கதை. சரி அதை  ஏன் இப்போதைக்கு  நினைப்பான். நெய்மார் விளையாட்டுக் களங்களில் சுருண்டு விழுவதெல்லாம் விஜய் படத்தில் வில்லன்கள் அடிவாங்கி சுருண்டுவிடுவதை விட மிகச்சிறந்த நடிப்பென இத்தாலிய/இங்கிலாந்து இரசிகர்கள் சொல்லி எள்ளல் செய்ய வந்துவிடுவார்கள். வேண்டாம், அது  பொல்லாத வினை!


2.

ஒரு நட்சத்திரமாக 1994இல் மின்னிய ரொபர்த்தோ பாஜ்ஜியோ எப்படி அந்தத் தவறான உதையினால் ஒளியிழந்த நட்சத்திரமாகப் போனார் என்பது நாம் அவ்வளவு அறியாதது. அதை மட்டுமில்லாது ஒரு நட்சத்திரமாக ரொபர்த்தோ மின்னியது, அதன் பின் நிகழ்ந்த சரிவுகள், இறுதியில் எப்படி இத்தாலி மக்களிடையே மறக்கப்படாத ஒருவராக ஆகினார் என்பதை இந்தப் படத்தைப் பார்க்கும்போது தெரியும். ஏற்கனவே கூறியதுமாதிரி நான் ஒரு இத்தாலிய அணி இரசிகனல்ல. ஆனால் ரொபர்தோவும்,  அநேக பிரேசிலிய ஆட்டக்காரகளைப் போல, வறிய/எளிய குடும்பங்களிலிருந்து வந்தாரோ அப்படி வந்திருக்கின்றார் என்பதும், தன் தனிப்பட்ட திறமைகளால் இந்தளவுக்குப் பிரகாசித்தார் என்பதும் என்னை இப்போது வசீகரிக்கின்றது என்பதும் உண்மை. 


1994 உலகக்கிண்ணப் போட்டியின்போது அவர் தொடக்கத்தில் ஒரிரு ஆட்டங்கள் ஆடவில்லை. சில ஆட்டங்களில் இடைநடுவில் ஆட்டகளத்திலிருந்து அவரது விருப்புக்கு மாறாக எடுக்கப்பட்டிருந்தார் என்பதும், அவருக்கும் பயிற்சியாளருக்கும் இடையில் இருந்த முரண்பாடுகளும் இந்தத் திரைப்படத்திலிருந்து வெளிப்படையாகத் தெரியவருகின்றன. 1994 அந்த இறுதி உதை அவரை ஒரு தோல்வியின் நாயகனாக/வீழ்ச்சியுற்ற வீரனாக உள்ளே அழுத்தி உதைபந்தாட்ட ஆட்டங்களிலிருந்து சில வருடங்களுக்கு விடுபடச்செய்கிறது. ஒரு தவறான உதை ஒரு வீரனை என்னவெல்லாம் செய்துவிடக்கூடும் என்பதற்கு ரொபர்தோ நல்லதொரு உதாரணம்.


அடுத்த உலகக்கிண்ணத்தில் (1998) விளையாடினாலும்,  தனது மீள்வருகையை மீண்டும் அணியில் உறுதிசெய்ய கடுமையாகப் பயிற்சிசெய்து 2002 உலகக்கிண்ணப்போட்டியில் பங்குபெற விரும்பியபோது அப்போதும் பயிற்சியாளர் ஒருவரால் ரொபர்தோ தெரிவு செய்யப்படுவதிலிருந்து விலக்கப்படுகின்றார்.  இத்துடன் அவர் இத்தாலிக்கு ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொடுக்கும் கனவும் கலைந்து போகின்றது. இவ்வாறு இருந்தும் அவர் ஒருகாலத்தில் நட்சத்திரமாக மின்னினார் என்பதை ஒருவரும் மறுக்கப்போவதில்லை. 


இதையெல்லாவற்றையும் விட இந்தத் திரைப்படத்தில் என்னைக் கவர்ந்த விடயம், ரொபர்தோ தன் இளமைக்காலத்திலேயே புத்தரைப் பின் தொடர்பவராக தன்னை மாற்றிக்கொண்டமையாகும். அவர் தன் தோல்விகளிலிருந்து மீள்வதுகூட பயணம் முக்கியமே தவிர இலக்கை அடைதல் அவசியமில்லை என்கின்ற லா-சூ சொல்கின்ற வார்த்தைகளினூடாகத்தான் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும்.


மரடோனாவுக்கு காலம் உலகக்கிண்ணக் கோப்பையை மனது நிறைந்து அவரது 'பொன் கரங்களுக்கு'க் கொடுத்தது. அவருக்கு நிகரான வீரனான மெஸ்ஸிக்கு இன்னும் அந்தச் சந்தர்ப்பத்தை வழங்கவில்லை. ரொபர்தோவுக்கும் அந்தக் கனியைச் சுவைக்கக் கொடுக்காது காலம் அவரை களத்திலிருந்து நகர்த்தி விட்டிருக்கின்றது. 


94இல் எனது பெருமைக்குரிய நட்சத்திர வீரன் பிரேசிலின் ரொமாரியோ. ஆனால்  ஒருவன் சிறந்த வீரன் என்பதை நிரூபிக்க அவருக்கேற்ற மிகச்சிறந்த எதிராளி களத்தில் விளையாட வேண்டும். அந்த மிகச்சிறந்த எதிராளியாக ரொபர்தோ பாஜ்ஜியோ எதிர்முனையில் அன்று இருந்தார். அந்தவகையில் ரொபர்தோ மீது மதிப்பிருக்கிறது. மேலும் தோல்வியுற்றவர்களே என்னை வசீகரிப்பவர்கள். வென்றவர்களை விட எங்களுக்குச் சொல்வதற்கு அவர்களிடம் சிறந்த பாடங்களும் இருக்கும்.  எனக்கு நெருக்கமுடைய ஒருவராக ரொபர்தோவை இந்தக் காலத்தில் நினைத்துக் கொள்கிறேன்.


************


(மே 30, 2021)