கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அ.முத்துலிங்கத்தின் 'பிள்ளை கடத்தல்காரன்'

Wednesday, July 12, 2017


தேர்ந்தெடுத்த சொற்கள், அங்கதச்சுவை மற்றும் வித்தியாசமான கதைக்களன்கள் என விரிகின்ற அ.முத்துலிங்கத்தின் கதைகள் வாசிப்பதற்கு சுவாரசியமானவை. 'பிள்ளை கடத்தல்காரன்' என்கின்ற இத்தொகுப்பில் அ.மு, 2012ன் பின் எழுதப்பட்ட 20 கதைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. சியரா லியோன், இலங்கை, பாகிஸ்தான், கனடா எனப் பற்பல இடங்களுக்குக் கதைகள் பாய்ந்தபடியே இருக்கின்றன. 'முதல் ஆச்சரியம்' என்கின்ற சியரா லியோனிலிருந்து இலங்கையிற்குக் கதைசொல்லி பொதியொன்று அனுப்புகின்ற கதையை எத்தனை முறை வாய்த்தாலும் சிரிப்பில்லாது வாசித்துவிட முடியாது.

அதுபோல் 'நான் தான் அடுத்த கணவன்' என இந்தியாவிலிருக்கும் பத்மப்ரியாவையே முதன்முறை திருமனஞ்செய்ய முடியாது போய், 2வது முறை இன்னொருவனால் ஏமாற்றப்பட்டு, மூன்றாவது கணவனாக ஆகும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது தயக்கமின்றி அவரை மணக்கப்போகும் ஒரு ஆணின் அப்பாவித்தனம் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டாலும் அதை மீறி பத்மப்ரியா மீது இந்தக் கனடா ஆணுக்கிருக்கும் பிரியம் வாசிப்பவர்களால் புரிந்துகொள்ளமுடியும்.

இன்னொரு கதையான 'அது நான் தான்' மற்றொரு சுவாரசியமான கதை. ஒருவர் கனடாவிலிருந்து இலங்கை ஒருபோய் ஒரு பெண்ணை யுத்தக்காலத்தில் மணஞ்செய்கின்றார். திருமணம் முடிந்த சொற்பநாட்களுக்குள் அவர் கனடாவிற்குத் திரும்பியும் விடுகின்றார். மனைவியைக் கனடாவிற்குக் கூப்பிடும்போது அது அவர் மணம்முடித்த பெண்ணல்ல, வந்திருப்பது வேறு ஒருவர் என்பது புரிகின்றது. ஆனால் அந்தப் பெண்ணோ அது நான்தான் நான்தான் என அடம்பிடிக்கின்றார். ஒருகட்டத்தின்பின் இந்தச் சந்தேகத்தை விட்டுவிட்டு அந்தப் பெண்ணோடே, இந்த ஆண் வாழத்தொடங்குகின்றார். இவர்களுக்குப் பிள்ளைகள் பிறந்து வளர்ந்தும் விடுகின்றன. இடையில் ஒருநாள் ஒரு தொலைபேசி அழைப்பு வந்து, 'மூன்று நாட்கள் உங்களுடன் வாழ்ந்திருக்கின்றேன். நீங்கள் கட்டிய தாலி இன்னும் கழுத்தில் தொங்குகின்றது. நான் வெளிநாடு போகப்போகின்றேன். என்னை இனித்தேடி இலங்கை வரவேண்டாம்' என ஒரு பெண் தொலைபேசிவிட்டு வைத்தும் விடுவாள்.

ஒருநாள் சட்டென்று இவரது மனைவி நான் உண்மையைச் சொல்லப்போகின்றென நள்ளிரவில் எழுப்புகின்றார். இவரும் இறுதியில் உண்மை வரப்போகின்றதென ஆவலுடன் எழும்பினால், "நான் உங்களுக்கு உள்ளதைச் சொல்லப் போகின்றேன். இந்த விசயத்தை இனிமேல் நீங்கள் என்னிடம் கேட்கக்கூடாது. இது எங்களுக்காகவும், எங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்காகவும்.' அந்தக் கணத்தில் அவன் மனம் உருகியது. 'எத்தனை கொடூரமாக நடந்துகொண்டேன்' என்று நினைத்தான். 'நீங்கள் சத்தியம் செய்து கொடுக்கவேண்டும்.' 'சத்தியம்' என்றான் வசந்தகுமாரன். 'நீங்கள் தாலி கட்டிய பெண் வேறு யாருமல்ல. அது நான்தான்' என்றாள் சிரித்துக்கொண்டே (ப 68)."

இறுதியில் வசந்தகுமாரன் வேலையில் தீர்க்கமுடியாத விடயங்களைப் புதிர்களின் பட்டியலில் சேர்ப்பதுபோல, தனது மனைவி உண்மையில் யாரென்றும், ஏன் இப்படி மாறி வந்தார் என்பதையும் தீர்க்கமுடியாத விடயங்களின் பட்டியலில் சேர்ந்துவிடுவோம் என நினைத்துக்கொள்கின்றார்.

ந்தத் தொகுப்பில் 'நிலம் என்னும் நல்லாளும்', 'ஆதிப்பண்பு'ம் முக்கியமான கதைகளாய் தம்மை ஆக்கிக்கொள்கின்றன. 'நிலம் என்னும் நல்லாளில்' சைமன் என்பவர் இயக்கத்தில் சேர்ந்து இறுதியில் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி கனடாவிற்கு வருகின்றார். அவரின் பெற்றோர் வசதியான வாழ்க்கையை வாழ்பவர்கள். சைமனை எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஒரு திருமணத்தைச் செய்துவிட்டு நிம்மதியாக வாழச்சொல்கின்றார்கள். அவரால் கடந்தகால நினைவுகளிலிருந்து தப்பிவெளியே வரமுடியவில்லை. ஒருநாள் கொடும்பனிக்குள் தனியே போய் சிலநாட்களின் பின் உயிரற்ற உடலமாகக் கண்டெடுக்கப்படுகின்றார். பிறந்தநாட்டில் சொந்த நிலத்திற்காய்ப் போராடிய சைமனுக்கு ஒரு துண்டுகூடச் சொந்தமாக இல்லாவிட்டால்கூட, அவரைப் புதைப்பதற்கு கனடாவில் ஓரிடமிருக்கிறதென உணர்த்தியபடி கதை முடியும். அதுபோல 'ஆதிப்பண்பு'  பெரும் ஆபத்தினிடையேயும் மனிதர்களிடையே, பிறருக்கு உதவும் மனப்பாங்கை கனடாவில் அதிகூடிய குளிர்பிரதேசமான நியூபவுண்லாண்டில் காப்பற்றப்பட்ட ஒரு வைத்தியரின் கதையைக் கூறுகின்றது.

'லூக்கா 22:34' கதை கனடாவில் வீடு விற்க/வாங்குவதற்கு முகவராய் இருக்கும் ஒருவர் இலங்கையில் ஒரு பெண்ணைத் திருமணஞ்செய்து வந்து அவரைத் துன்புறுத்துவதையும், அந்தப் பெண் ஒருகட்டத்தில் இவரை நுட்பமாகப் பழிவாங்குவதையும், இன்னொரு கதையான 'கடவுச் சொல்' வயதானவர்களின் விடுதியில் மகளால் தங்கவைக்கப்படும் ஒரு முதிய பெண்மணியின் தனிமையையும், அவருக்குப் பேரன் மீதிருக்கும் பிரியத்தையும் சொல்கின்றது.

மண்ணெண்ணெய்க்காரன், கனடாவிற்கு அண்மையில் கப்பலில் அகதிகளாய் அடைக்கலம் தேடி வந்த 76பேர்களில் ஒருவரின் கதையைப் பற்றியும், 'வால்காவிலிருந்து கனடாவரை' அன்றையகால இயக்கங்களில் ஒன்று தண்டனையாக பெரும்நூல்களை தன் உறுப்பினர்களுக்கு வாசிக்கக் கொடுப்பதையும் நகைச்சுவையாகச் சொல்கின்றது.

அ.முத்துலிங்கம் அங்கதம் கலந்த கதைகளைச் சொல்லும் ஒரு சிறந்த கதைசொல்லி என்பதை எவரும் அவ்வளவு எளிதில் மறுக்கமுடியாது. இதில் கூட அருமையான சில கதைகள் இருக்கின்றன. ஆனால் வாசிக்க இன்பந்தரும் கதைகள் எல்லாம் காலம் கடந்தும் அதே வாசிப்பனுபவத்தையோ மறக்கமுடியாதவையாகவோ ஆகியும் விடுவதில்லை. எந்தக் கதையை வாசித்தாலும் அங்கத்ததை அ.மு எளிதாகக் கலந்துவிடுகின்றார். அதுவே அ.மு எழுத்துக்களின் பலமாகவும் பல இடங்களில் பலவீனமாகவும் தெளிவாகவும் தெரிகின்றன.

மேலும் அ.முவிடம் இருக்கும் சிக்கல் என்னவென்றால் அவர் அங்கதத்தில், பல்வேறு சந்தர்ப்பங்களில் அவற்றுள் இருக்கக்கூடிய அரசியலையும், அதன் தீவீரத்தன்மையையும் மறைத்துவிட முயற்சிக்கின்றாரோ என்பது. அ.முவிற்கு நாடுகள் பல செல்லும் சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன. பல்வேறுபட்ட மக்களோடு கலாசாரங்களோடு நெருங்கிப்பழகவும் முடிந்திருக்கின்றது. ஆனால் சியரா லியோனில் இருக்கும் தபால்காரரை அறிமுகப்படுத்தும்போது அவரின் உதடுகள் குதிரைகளினதைப் போல மேல்நோக்கி இருக்கும் என போகின்றபோக்கில் எழுதிச் செல்கின்றார். இப்படி ஒருவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பார் என்றால் அவர் ஒரு நிறவாதியென  (racist) இங்கு கடும் விமர்சனம் வந்திருக்கும்.

அதுபோலவே 'ரயில் பெண்' என்கின்ற கதையில் அறிமுகப்படுத்தபப்படும் சோமாலியர் ஒருவரை சோமாலி சோமாலி என்றே கதை முழுதும் எழுதப்படுகின்றது. அந்தக் கதையில் வரும் மகேஷிடம் அந்த சோமாலியர் பெயரென்ன எனக்கேட்டு அறிமுகப்படுத்தும்போதாவது அந்தச் சோமாலியர் தன் பெயரைச் சொல்லியிருக்கமாட்டாரா என்ன? மேலும் 'சின்னச் சம்பவம்' கதையில் தமிழ் பெண்ணைத் திருமணஞ்செய்து, அப்பெண்ணைக் கொடுமைப்படுத்தும் ஒருவர் கென்யாக்காரராகவே இருக்கின்றார்.

'கடவுச் சொல்' கதையில் மகள் ஒருவர் யூதரை மணந்தததால் அவர்களின் கலாசாரத்தில் ஒட்டாத தன் தாயை முதியவர் இல்லத்திற்கு அனுப்புகின்றார். இந்தத் தாய் தனித்து தன் மகளை இலங்கையில் வீட்டு வேலை செய்தே வளர்க்கின்றார். அவ்வாறு தன் தாய் மிகக்கஷ்டபட்டு வளர்த்ததை அறிந்தபின்னும் தாயோடு கோபித்து தனியே முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிடுகின்றார்.
இவை தற்செயலானது என எடுத்துக்கொண்டாலும்,  ஏன் அ.மு தேர்ந்தெடுக்கும் அநேக எதிர்மறைப் பாத்திரங்கள் எப்போதும் விளிம்புநிலையைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர் என்பதில் கேள்விகள் வருவதும் இயல்பானதே.

இன்னொரு கதையான 'சூனியக்காரியின் தங்கச்சி' கதையிலும் ஒரு முன்னாள் சிங்கள இராணுவத்தினன், இராணுவத்திலிருந்து தப்பிவந்து கனடாவில் அகதியாய் அடைக்கலம் புகுகின்றான். அவனுக்கு வேலைகள் கொடுத்து ஒருகட்டத்தில் தன் படுக்கையறையும் பகிர்ந்துகொண்ட அமண்டா இந்தக் கதையைச் சொல்கின்றார். அவரை 'மேம்' என்றழைப்பது கூட ஒரு அடிமையின் மனோநிலை என்றாலும், நிறையப்புத்தகங்கள் வாசிக்கும் அமெண்டா தன்னை அப்படியழைப்பதை எப்படி மறுக்காதிருந்திருப்பார் என்பது முதல் வினா. கடைசியில் படுக்கையைப் பகிர்ந்தபின்னர்,  அமெண்டா என்று தன்பெயரைச் சொல்லியழைக்க அமெண்டா கூறினாலும், அகதியாகிய அர்ஜூனா ரணதுங்க அதை மறுக்கின்றார். அதுகூடப் பரவாயில்லை. இறுதியில் கதையை முடிக்கும்போது எனக்கொரு அகதியைத் தெரியும் என்று அமெண்டா சொல்கின்றாரே தவிர அகதியாகிய அர்ஜூனா என்றெழுத எது அமெண்டாவையல்ல, அ.முவைத் தடுக்கின்றது என்று யோசிக்கும்போது அவர் எப்போதுமே தன் முக்கிய கதாபாத்திரங்களை மேல்நிலையில் வைத்துச் சொல்ல விழையும் பிரயத்தனங்களே இவையெனப் புரிகின்றன. ஆகவேதான் அ.முவின் அங்கதம் அருமையாக இருந்தாலும் அதில் மூழ்கி இந்தக் கதைகளிலிருக்கும் அரசியலை நாம் மறந்துவிடக்கூடாதென எச்சரிக்கவேண்டியிருக்கின்றது.

மேலும் அவரது கதையான 'பதினொரு பேய்கள்' காலச்சுவடில் வெளியாகிய அன்றே நாம் எல்லோரும் கடுமையாக விமர்சித்தோம். அங்கதம் என்ற பெயரில், முதன்முதலாகப் பெண்களையும் தமது இயக்கத்தில் சேர்ந்துகொண்ட தோழர்களையும், அவ்வாறு இணைந்து கொண்ட பெண்ணொருவரை மிகமோசமாக சித்தரிப்பதன் மூலம் இயக்கத்தை மட்டுமில்லாது, இயக்கப்பெண்களையும் மிக மோசமாகக் காட்டப்படுவதையும் நாம் எதிர்த்தோம். இந்தளவு எதிர்ப்பு வந்தபின்னும் 'பதினொரு பேய்களை' இத்தொகுப்பில் சேர்த்துக்கொள்ளும் அ.முவின் அரசியலை எந்தவகையிலும் நியாயப்படுத்திவிடமுடியாது. எத்தனையோ நூற்றுக்கணக்கான கதைகளை எழுதிய அ.மு இந்த ஒரு கதையை சேர்க்காதுவிட்டால் குறைந்துவிடப்போவதில்லை. அன்றையகால எதிர்ப்பில் தன் இணையதளத்திலிருந்து இந்தக்கதையை நீக்கிய அ.மு இங்கே இணைத்திருப்பதையும் சேர்த்தே நாம் அவரின் விளிம்புநிலை மக்கள் மீது கொண்டிருக்கும் 'அக்கறை'யையும் வாசிக்கவேண்டும்.

அங்கதம் அரசியலுக்கும் இலக்கியத்திற்கும் அணிசேர்ப்பவைதான். அது குறித்து சிக்கலில்லை. வாழ்க்கையிற்கும் அவசியமானதுதான். ஆனால் நமது அங்கதம் இன்னொருவரை/இன்னொன்றை கீழ்நிலையாக்கி காயப்படுத்தித்தான் வெளிப்படும் என்கின்றபோது அது இன்னொரு முகத்தைப் பெற்றுவிடுகின்றது. அ.முத்துலிங்கம் என்கின்ற ஒரு படைப்பாளி அடிக்கடி சறுக்கிப்போய் வீழ்ந்துவிடுகின்ற மிக முக்கியபுள்ளியும் இதுவேதான்.


(நன்றி: 'அம்ருதா' - ஆடி 2017,  எழுதியது, மார்கழி 12, 2016)