கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஒரு க‌விதை: மூன்று த‌மிழாக்க‌ம்

Wednesday, November 16, 2011

Midwinter
by Thomas Transtromer

A blue glow
Streams out from my clothes.
Midwinter.
A clinking tambour made of ice.
I close my eyes.
Somewhere there's a silent world
And there is an opening
Where the dead
Are smuggled over the border.

[Translated from the Swedish by Robert Bly]

இடைப‌னிக்கால‌ம்

ஒரு நீல‌ ஒளிர்வு
என‌தாடைக‌ளிலிருந்து பிர‌வாகித்து வ‌ருகிற‌து.
இடைப‌னிக்கால‌ம்.
க‌ணீரெனும் ராம்போரின் ப‌னியாலான‌து
நானென‌து விழிக‌ளை மூடுகின்றேன்
எங்கேயோ இருக்குமோர் நிச‌ப்த‌ உல‌கில்
ஓரு திற‌ப்புள‌து
அங்கே இற‌ந்த‌ உட‌ல்க‌ள்
எல்லை தாண்டிக் க‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌.
..............

இம்மாத‌க் கால‌ச்சுவ‌டை இணைய‌த்தில் மேய்ந்து கொண்டிருந்த‌போது த‌ற்செய‌லாய் சுகுமார‌ன் மொழிபெய‌ர்த்திருந்த‌ தோம‌ஸ் (டி)ரான்ஸ்ரோம‌ரின் (Thomas Transtromer)க‌விதைக‌ளை வாசித்தேன். சுவீட‌னைச் சேர்ந்த‌ க‌விஞ‌ரான‌ ரான்ஸ்ரோம‌ர் இம்முறை இல‌க்கிய‌த்திற்கான‌ நோப‌ல் ப‌ரிசைப் பெற்ற‌வ‌ர் என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம். சுகுமார‌னின் மொழிபெய‌ர்ப்பை வாசித்த‌போது, இக்க‌விதைக‌ளில் சில‌வ‌ற்றை ஏற்க‌ன‌வே த‌மிழில் வாசித்த‌ நினைவு வ‌ர‌ ஜெய‌மோக‌னின் த‌ள‌த்தைத் தோண்டினேன். அங்கே கார்த்திக் என்ப‌வ‌ரும் ஏற்க‌ன‌வே மொழிபெய‌ர்த்திருந்த‌தை ஜெய‌மோக‌ன் ப‌கிர்ந்திருப்ப‌தைக் க‌ண்டுபிடித்தேன்.

சுகுமார‌ன், கார்த்திக் இர‌ண்டு பேரின‌தும் த‌மிழாக்க‌ங்க‌ளை வாசித்த‌பின், இந்த‌க் க‌விதையை நான் த‌மிழாக்க‌ம் செய்தால் எப்ப‌டியிருக்குமென‌ முய‌ற்சித்துப் பார்த்தேன். பிற‌கு அந்த‌ த‌மிழாக்க‌த்தை என‌து ந‌ண்ப‌ருக்கு வாசிக்க‌ச் சொல்லி அனுப்பியிருந்தேன். அவ‌ர் சில‌ திருத்த‌ங்க‌ளை செய்திருந்தார். அதைவிட‌ இன்னொரு சுவார‌சிய‌மான‌ விட‌ய‌ம் அவ‌ரும் இப்போது சுவீட‌னில்தான் இருக்கின்றார்.

உண்மையில் க‌விதைக‌ளைத் த‌மிழாக்க‌ம் செய்த‌தைவிட‌, க‌விதையை முன்வைத்து எங்க‌ளுக்கிடையில் ந‌ட‌ந்த‌ உரையாட‌ல் இன்னும் சுவார‌சிய‌மாக‌ இருந்த‌து. ஒரு கவிதை -முக்கிய‌மாய் வேறொரு மொழி/க‌லாசார‌ப் பின்ன‌ணியில் வ‌ருகின்ற‌ ப‌டைப்பு- ப‌ல்வேறு வ‌கையில் வாசிக்க‌க் கூடிய‌தாக‌ இருப்ப‌து..., அதைத் த‌மிழாக்க‌ம் செய்கையில் ந‌ம் ஒவ்வொருவ‌ரின் ம‌னோநிலைக்கு ஏற்ப‌ எவ்வாறு வேறுப‌ட‌க்கூடுமென‌... ப‌ல்வேறுபுள்ளிக‌ளில் நின்று யோசிக்க‌ முடிந்திருந்த‌து.

இந்த‌ 'இடைப‌னிக்கால‌ம்' என்கின்ற‌ க‌விதை முற்றுமுழுதாக‌ ஒரு ப‌னிக்கால‌ப் பின்ன‌ணியைக் கொண்டுவ‌ருகின்ற‌து.  இந்த‌ப் பனிக்கால‌ம் எந்த‌ உண‌ர்வை சுகுமார‌னுக்கோ, கார்த்திக்கிற்கோ கொடுக்கின்ற‌தோ தெரியாது அதை ஒவ்வொரு வ‌ருட‌மும் அனுப‌விக்கும் சூழ‌லில் வாழும் என‌க்கு அது என் வாழ்வில் ஒரு ப‌குதியை பிர‌திப‌லிப்ப‌து போல‌த் தோன்றிய‌து.

ப‌னிக்கால‌ம் என்ப‌தே அநேக‌ம் இருளாக‌வும் -கோடைகால‌த்தைப் போன்ற‌ல்லாது- மிக‌ அமைதியாக‌வும் இருக்கும். அப்ப‌டியெனில் ஏன் ஒரு ராம்போரின் ஒலியை இங்கே க‌விஞ‌ர் கொண்டுவ‌ருகின்றார் என‌ யோசித்தேன். அதுவும் முக்கிய‌மாய் அடுத்த‌டுத்த‌ வ‌ரிக‌ளில் நிச‌ப்த‌ உல‌கைப் பேசும் க‌விஞ‌ர் ஏன் 'ஒலி'யைக் கொண்டுவ‌ருகின்றார் என‌  நானும் ந‌ண்ப‌ரும் விவாதித்திருக்கின்றோம். தோல் வாத்திய‌வ‌கையைச் சேர்ந்த‌ ராம்பூரில் எப்ப‌டி 'Clinking ' ஓசை வ‌ருகின்ற‌து என்ப‌து இன்ன‌மும் யோசிக்க‌வைத்த‌து. உலோக‌வகை வாத்திய‌ங்க‌ளில் அல்ல‌வா 'Clinking' ச‌த்த‌ம் பொதுவாக‌க் கேட்கும்.

என‌க்கு மிருத‌ங்க‌த்தில் இருக்கும் சொற்ப‌ அனுப‌வ‌த்தை வைத்து, பிற‌கு  இதை ஒப்பிட்டுப் பார்த்தேன்.. மிருத‌ங்க‌த்தின் தொட‌க்க‌ப் பாட‌மாய் என‌க்கு க‌ற்பித்து த‌ந்த‌ 'தா/தீ/தொம்/ந‌ம்' இல் வ‌ரும் 'ந‌ம்' ற்கு நாம் சுட்டுவிர‌லால் அடிக்கும்போது, தொட‌ர்ந்து அதிரும் ஒரு ஒலி வ‌ரும். ஆக‌, தோல் வாத்திய‌த்தில்கூட‌ இந்த‌ க‌ணீரென்று ஒலிக்கும் ச‌த்த‌த்தைக் கொண்டுவ‌ரலாம் என‌ நினைக்கின்றேன். இன்னும் எளிதாக‌ச் சொல்வ‌தென்றால் முக்கிய‌மாய் இந்த‌க் க‌விதைக‌ளை தொட‌க்க‌த்தில் ஜெய‌மோக‌னின் த‌ள‌த்தில் வாசித்திருக்கின்றேன் என்ப‌தால், அவ‌ரைச் ச‌ந்தோச‌ப்ப‌டுத்த‌ இந்த‌ உதார‌ண‌த்தை எடுத்துக் கொள்கின்றேன்.  நாம் 'ஓம்' என்று உச்ச‌ரிக்கும்போது 'ம்' ஐ நீண்ட‌நேர‌த்திற்கு உச்ச‌ரித்தால் ஒரு ஒலி வ‌ருமே.  அவ்வாறு ச‌ட்டென்று ஒரு அடி அடித்துவிட்டு கைக‌ளை ராம்போரிலோ/த‌பேலாவிலோ இருந்து எடுத்துவிட்டால் தொட‌ர்ந்து அதிர்ந்துகொண்டிருக்கும்.அதைத்தான் இங்கே க‌விஞ‌ர் உண‌ர்த்துகின்றார் என‌ நினைத்துக்கொண்டேன். அந்த‌ அதிர்வும் சூழ்ந்திருக்கும் ப‌னிக்கால‌நிலையும் அவ‌ர‌து க‌ண்க‌ளை மூடி ம‌ன‌தைப் பார்க்க‌ வைக்கின்ற‌து.

அடுத்து 'Opening' என்ப‌த‌ற்கு 'திற‌ப்பு' என்ப‌தை பாவித்திருக்கின்றேன், ம‌ற்ற‌வ‌ர்க‌ள் 'விரிச‌ல்', 'பிள‌வு' என்ப‌தைப் பாவித்திருக்கின்றார்க‌ள்.  அது ம‌ர‌ண‌த்திற்கு பின் ந‌ம‌க்கு என்ன‌ நிகழ்கிற‌து என்ப‌து தெரியாத‌தால் 'திற‌ப்பு' என‌ப் ப‌ய‌ன்ப‌டுத்தல் பொருத்த‌மாய் இருக்கும் என்ப‌து என் துணிபு.    இந்த‌ அடிப்ப‌டையிலேயே என் த‌மிழாக்க‌ம் இருந்த‌து.  நிச்ச‌ய‌ம் நான் வாசிப்ப‌துபோல‌த்தான் இந்த‌க் க‌விதை இருக்க‌வேண்டுமென்றில்லை. நான் எப்ப‌டி வாசித்தேன், எத‌ன‌டிப்ப‌டையில் த‌மிழாக்கினேன் என்பத‌ற்கே இந்த‌க் குறிப்பு.

இறுதியில் இவ்வாறு இந்த‌க் க‌விதையை விரிவாக‌ வாசிக்க‌ உந்தித்த‌ள்ளிய‌ சுகுமார‌ன் ம‌ற்றும் கார்த்திக்கின் மொழிபெய‌ர்ப்புக்க‌ளுக்கு ந‌ன்றி. இந்த‌க் க‌விதையை நாங்க‌ள் மூன்று பேரும் வாசித்து விள‌ங்கிக்கொண்ட‌து போல‌வ‌ன்றி நீங்க‌ளும் வேறுவ‌கையில் வாசிக்க‌லாம்/வாசித்திருக்க‌லாம்.

இக்க‌விதையை த‌மிழாக்க‌ம் செய்த‌போது, ஒரு சிறுக‌விதை எவ்வ‌ள‌வு விரிவான‌ வாசிப்பைத் த‌ருகின்ற‌து என‌த்தான் விய‌ந்தேன். மேலும் இப்போது இங்கும் ப‌னிக்கால‌மாய் இருப்ப‌தால் இந்த‌க் க‌விதை இன்னும் நெருக்க‌த்தை உண‌ர்த்திற்றோ தெரிய‌வில்லை.


நன் பனிக்காலம்
-தமிழாக்க‌ம்; சுகுமார‌ன்

ஒரு நீல வெளிச்சம்
என் ஆடைகளிலிருந்து கதிர்வீசுகிறது
நன்பனிக் காலம்
பனிக்கட்டிகளின் டாம்போரின்களின்* ஓயாத பேச்சு
என் விழிகளை மூடுகிறேன்

மரித்தவர்கள்
எல்லை தாண்டிக் கடத்தப்படும்
பிளவு இருக்கிறது அங்கே
அங்கே இருக்கிறது ஓர் ஒலியற்ற உலகம்.

* டாம்போரின் - கஞ்சிரா போன்ற தாளவாத்தியம்.
.....

இடைகுளிர்காலம்(Midwinter)
-த‌மிழாக்க‌ம்: கார்த்திக்

என் உடைகளிலிருந்து
நீல நிறம் வெளிச்சம் ஒளிர்கிறது
இடைகுளிர்காலம்

பனிக்கட்டிகளின் டாம்பொரின்* சடசடப்பு

கண்களை மூடிக்கொள்கிறேன்
அங்கொரு நிசப்த உலகுண்டு
இறந்தவர்கள் எல்லைதாண்டி கடத்தப்படும்
ஒரு விரிசல் இருக்கிறது

டாம்பொரின்* கஞ்சிரா போன்றது

.............
ஆங்கில‌த்தில் ரான்ஸ்ரோம‌ரின் க‌விதைக‌ளையே மொழிபெய‌ர்த்த‌  Robert Blyன்   க‌விதைக‌ளையே என‌து த‌மிழாக்க‌த்திற்கு எடுத்துக் கொண்டேன். சில‌வேளைக‌ளில் சுகுமார‌னோ, கார்த்திக்கோ வேறு ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்பிலிருந்து த‌மிழாக்க‌ம் செய்திருக்க‌லாம் என்ப‌தையும் சுட்டிக்காட்ட‌ விரும்புகின்றேன்.
.................

முத‌ல் க‌விதையைத் த‌மிழாக்கிய‌போது வ‌ந்த‌ உற்சாக‌த்தில் இக்க‌விதையையும் த‌மிழாக்க‌ம் செய்தேன்.

April and Silence
 by Tomas Tranströmer

Spring lies abandoned.
A ditch the color of dark violet
moves alongside me
giving no images back.

The only thing that shines
are some yellow flowers.

I am carried inside
my own shadow like a violin
in its black case.

The only thing I want to say
hovers just out of reach
like the family silver
at the pawnbroker’s.

~ from The Winged Energy of Delight, Selected
Translations, Robert Bly (Perennial, 2004)


இள‌வேனிலும் அமைதியும்

வ‌ச‌ந்த‌ம் கைவிட‌ப்ப‌ட்டுக் கிட‌க்கிற‌து.
அட‌ர்ந்த‌ ஊதாக் கால்வாய்
எதையும் பிர‌திப‌லிக்காது
ந‌க‌ர்கிற‌து என்னோடு.

ஒளிர்வ‌ன‌
சில‌ ம‌ஞ்ச‌ட் பூக்க‌ள் ம‌ட்டுமே

க‌றுப்புப் பெட்டிக்குள்
வைக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ய‌லினைப் போல‌
என‌து நிழ‌லுக்குள் நான் காவ‌ப்ப‌டுகின்றேன்.

நான் கூற‌விரும்பும் ஒரேயொரு விட‌ய‌மும்
அட‌குக்க‌டையில் வைத்த‌
வீட்டு வெள்ளி போல‌
அடைய‌முடியாத் தூர‌த்தில் மின்னுகின்ற‌து.

ஹ‌ருக்கி முர‌காமியின் 'இருளின் பின்'

Friday, November 04, 2011

After Dark by Haruki Murakami

1.
ஹ‌ருக்கி முர‌காமியின் 'இருளின் பின்' (After Dark), ஒருநாளின் ந‌ள்ளிர‌விலிருந்து விடியும் வ‌ரை ந‌ட‌க்கும் நிக‌ழ்வுக‌ளைக் கொண்ட‌ ஒரு நாவ‌லாகும். இந்நாவ‌லில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப‌படும் எல்லாக் க‌தாபாத்திர‌ங்க‌ளும் அவ‌ர்க‌ள் அறிந்தோ அறியாம‌லோ இன்னொரு பாத்திர‌த்தை/நிக‌ழ்வைப் பாதிக்கின்ற‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள். இக்க‌தையில் மேரி, எரி என்கின்ற‌ இரு ச‌கோத‌ரிக‌ளைச் சுற்றியே க‌தை நிக‌ழ்கின்ற‌து. மேரி என்கின்ற‌ 19வ‌ய‌து இளைய‌ ச‌கோத‌ரி, ரோக்கியோவின் க‌ளியாட்ட‌ப் ப‌குதியுள்ள‌ ஓர் உண‌வ‌க‌த்தில் யாருக்காவோ/எத‌ற்காக‌வோ காத்திருப்ப‌துட‌ன் தொட‌ங்கும் க‌தை,  இறுதியில் மேரி அடுத்த‌ நாள் காலை த‌ன் வீட்டுக்குத் திரும்புவ‌துட‌ன் முடிவ‌டைகிற‌து. இந்த‌ இடைவெளியில் அவ‌ர் ச‌ந்திக்கும் ம‌னித‌ர்க‌ள் ம‌ற்றும் நிக‌ழும் ச‌ம்ப‌வ‌ங்க‌ள் மிகுந்த‌ சுவார‌சிய‌மாக‌ இந்நாவ‌லில் விப‌ரிக்க‌ப்ப‌டுகின்ற‌து.

மேரிக்கு எரி என்கின்ற‌ மூத்த ச‌கோத‌ரி ஒருவ‌ர் இருக்கின்றார். அவ‌ரைப் போன்று தான் மிகுந்த‌ அழகில்லை என்கின்ற‌ எண்ண‌மும் மேரிக்கு இருக்கின்ற‌து. த‌ம‌க்கை வ‌ச‌தியான‌ ஜ‌ப்பானிய‌ர்க‌ள் ப‌டிக்கும் க‌ல்லூரிக்குக் க‌ற்க‌ப்போக‌, அங்கே க‌ற்ப‌து பிடிக்காத‌ மேரி சீன‌க்குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் நிர‌ம்பியிருக்கும் ப‌குதியிலுள்ள‌ ஒரு சீனக்க‌ல்லூரிக்குப் ப‌டிக்க‌ப் போகின்றார்.  அழ‌கான‌ எரி த‌ன் இள‌ம்வ‌ய‌திலேயே ப‌தின்ம‌ர்க‌ளுக்கான‌ ச‌ஞ்சிகைக‌ளில் மொட‌லிங் செய்ப‌வ‌ராக‌, ரிய‌லிட்டி ரீவிக்க‌ளின் நிக‌ழ்ச்சிக‌ளில் ப‌ங்கேற்ப‌வ‌ராக‌ புக‌ழ்பெற்று விடுகின்றார். சீன‌ப் ப‌ள்ளிக்குப் போகும் மேரி சீன‌மொழியில் பேசுவ‌தில் வ‌ல்ல‌வ‌ராய் இருப்ப‌துட‌ன், த‌ன் த‌ம‌க்கைக்கு நேர் எதிரான‌ குண‌ங்க‌ளுடைய‌வ‌ராக‌ இருக்கிறார்.

த‌ன் வீட்டை விட்டு ஓடிவ‌ந்திருக்கின்றாரா அல்ல‌து யாரையாவ‌து ச‌ந்திக்க‌ வ‌ந்திருக்கின்றாரா என்கின்ற‌ எவ்வித‌த் தெளிவும் இல்லாது, க‌ஃபேயில் ஆறுத‌லாக‌ புத்த‌க‌ம் ஒன்றை வாசித்துக்கொண்டிருக்கும் ஒருவ‌ராக‌ மேரி, ஹ‌ருக்கி முர‌காமியால் வாச‌க‌ர்க‌ளுக்கு அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்றார். அங்கே த‌ற்செய‌லாய் ஓரு இளைஞ‌னை மேரி ச‌ந்திக்கின்றார். அவ‌ன் மேரியின் ச‌கோத‌ரியான‌ எரியை அறிந்த‌வ‌ன். மேலும் மேரியையும், எரியோடு சேர்த்து சில‌வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் நேர‌டியாக‌ச் ச‌ந்தித்துமிருக்கின்றான். ஆனால் மேரிக்கு இந்த‌ இளைஞனை அவ்வ‌ள‌வு ஞாப‌க‌ம் இல்லை. இளைஞ‌ன் மேரியோடு பேசுவ‌தில் ஆவ‌லாக‌ இருப்ப‌வ‌னாயிருப்பினும் மேரிக்கு அவ‌னோடு அள‌வ‌ளாவுவ‌தில் அவ்வ‌ள‌வு விருப்ப‌மில்லை. இளைஞ‌ன், எரி இப்போது எப்ப‌டி இருக்கின்றார் என‌க் கேட்கிறார். மேரி, தன் ச‌கோத‌ரி நீண்ட உற‌க்க‌த்தில் இர‌ண்டு மாத‌ங்க‌ளாய் இருக்கின்றார் என்கின்றார்.  இதைக் கேட்கும் அந்த‌ இளைஞ‌னுக்கு ம‌ட்டுமில்லை, வாசிக்கும் ந‌ம‌க்கும் எப்ப‌டி ஒருவ‌ர் இர‌ண்டு மாத‌ங்க‌ளாய் -கோமாவும் இல்லாம‌ல்- நீண்ட‌ உற‌க்க‌த்திலிருக்க‌ முடியும் என்ற‌ விய‌ப்பு ஏற்ப‌டுகிற‌து.

இப்போது க‌தை மூத்த‌ ச‌கோத‌ரியான‌ எரியை நோக்கித் திரும்புகின்ற‌து. அவ‌ர் மேரி கூறிய‌தைப் போல‌வே நீண்ட‌ தூக்க‌த்திலேயே இருக்கின்றார். வாசிக்கும் எம்மை ந‌க‌ரும் விடீயோக் க‌ம‌ராவைப் போல‌ எரியை அவ‌தானிக்கும்ப‌டி முர‌காமி அழைத்துச் செல்கின்றார். எரியுட‌ன் அவ‌ரைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு ம‌னித‌னும் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்றான். அவ‌னுக்கு வாசிக்கும் எங்க‌ள் வ‌ச‌திக்காய் 'முக‌மில்லாத‌ ம‌னித‌ன்' (The man without face ) என‌ ஒரு பெய‌ரை முர‌காமி த‌ருகின்றார்.  ஏன் எரி இப்ப‌டி நீண்ட‌ தூக‌த்தில் இருக்கின்றார்? யார் அந்த‌ 'முக‌மில்லாத‌ ம‌னித‌ன்'?  நாவ‌ல் முடியும்வ‌ரை அவை சுவார‌சிய‌மான‌ புதிர்க‌ளாய் அவிழ்க்க‌ப்ப‌டாம‌ல் இருக்கின்ற‌ன‌.

இப்போது மீண்டும் க‌தை, க‌ஃபேயிலிருக்கும் மேரியை நோக்கித் திரும்ப‌ தொட‌ங்குகின்ற‌து.  வ‌ந்த‌ இளைஞ‌ன், தான் த‌ன் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் இந்ந‌ள்ளிர‌வு முழுக்க‌ இசைநிக‌ழ்வுக்காய் ப‌யிற்சி எடுக்க‌ப்போகின்றேன் என‌வும் பயிற்சியின்போது இன்னொரு இடைவெளி எடுக்கும்போது மேரி க‌ஃபேயிலிருந்தால் வ‌ந்து தான் ச‌ந்திப்ப‌தாக‌வும் கூறி விடைபெறுகின்றான். நேர‌ம் ந‌ள்ளிரவைத் தாண்டியும் விட்ட‌து. ந‌க‌ரிலிருந்து புற‌ப்ப‌டும் க‌டைசி ரெயினும் போய்விட்ட‌து. இனி விடிகாலை வ‌ரை மேரி த‌ன் வீட்டுக்குத் திரும்ப‌முடியாது என்ப‌தும் அந்த‌ இளைஞ‌னுக்குத் தெரியும்.

மேரி இப்போது ஏற்க‌ன‌வே தான் வாசித்துக்கொண்டிருக்கும் புத்த‌க‌த்தில் ஆழ்ந்துவிடுகின்றார். அப்போது அசாதார‌ண‌ உய‌ர‌மும், எடையும் கொண்ட‌ ஒரு பெண்ம‌ணி மேரியைத் தேடி அந்த‌க் க‌ஃபேயிற்கு வ‌ருகின்றார். மேரியிட‌ம், தான் ஒரு சிக்க‌லில் மாட்டிக்கொண்டிருக்கின்றேன், உன‌க்குச் சீன‌மொழி பேச‌முடியுமென‌ உன்னை ஏற்க‌ன‌வே ச‌ந்தித்துச் சென்ற‌ இளைஞ‌ன் கூறியிருக்கின்றான். உன்னால் என‌க்கொரு மொழிபெய‌ர்ப்பாள‌ராக‌ இருந்து உத‌வ‌முடியுமா? என‌க் கேட்கின்றார். இத‌ற்கு முன் அறிமுக‌மேயில்லாத‌ பெண்ணோடு மொழிபெய‌ர்ப்பாள‌ராக‌ச் செல்வ‌தா அல்ல‌து வேண்டாமா என‌ மேரி முத‌லில் யோசித்தாலும் ஹ‌ரோக்கி என்கின்ற‌ அப்பெண்ம‌ணியோடு அவ‌ர் நிர்வாகிக்கும் 'ல‌வ்' ஹொட்ட‌லுக்குச் செல்கின்றார்.

போகும் வ‌ழியில் ஹ‌ரோக்கி தான் ஒரு ம‌ல்யுத்த‌ வீராங்க‌னையாக‌ (Wrestler)  இருந்த‌தாக‌வும் போட்டிக்களுக்காய்ப் ப‌ல‌ நாடுக‌ளுக்குச் சென்ற‌தாக‌வும், ஒரு நிக‌ழவில் த‌ன் முள்ள‌ந்த‌ண்டு பாதிக்க‌ப்ப‌ட்ட‌திலிருந்து போட்டிக‌ளில் தொட‌ர்ந்து ப‌ங்குபெற‌ முடியாம‌ல் போய்விட்ட‌து என்கின்றார். இப்போது வ‌ருமான‌ம் ஏதுமில்லாம‌ல், இந்த‌ ல‌வ் ஹொட்ட‌லை நிர்வகிப்ப‌வ‌ராக‌ வேலை செய்கின்றார் என‌வும் கூறுகின்றார் ஹ‌ரோக்கி. மேலும், 'இந்ந‌க‌ரில் ந‌ள்ளிர‌வில் என்ன‌ செய்துகொண்டிருக்கின்றாய்?' என‌ மேரியிட‌மும் கேட்கின்றார். மேரி மெள‌ன‌மாய் இருப்ப‌தைப் பார்த்து, 'உன்னைப் போன்றே பதின்ம‌ங்க‌ளைத் தாண்டியே நானும் வ‌ந்திருக்கின்றேன். உன்னைப் போன்ற‌ பெண்க‌ள் இக்க‌ளியாட்ட‌ப் பிர‌தேச‌ங்க‌ளுக்கு ந‌ள்ளிர‌வுக‌ளில் வ‌ர‌க்கூடாது. எதுவுமே ந‌ட‌க்க‌லாம். ப‌க‌லில் பார்க்கும் இட‌ம் போல‌ இது இர‌வில் இருப்ப‌தில்லை. இர‌வில் இத்த‌கைய‌ இட‌ங்க‌ள் இன்னொரு முக‌மூடியை அணிந்துகொள்கின்ற‌ன‌' என்கிறார் ஹ‌ரோக்கி. மேலும் தான் நிர்வாகிக்கும் ல‌வ் ஹோட்ட‌ல்க‌ளில் அநேக‌மாய் இர‌வைக் க‌ழிக்க‌ இணைக‌ளும், பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ளுமே வ‌ருவார்க‌ள் என‌வும் கூறுகின்றார்.

2.
ல‌வ் ஹொட்ட‌லின் நான்காம் மாடியில், சீன‌மொழி ம‌ட்டும் பேச‌க்கூடிய‌ பெண் அடிவாங்கி இர‌த்த‌க் காய‌ங்க‌ளோடு மூலையில் ஒடுங்கிக்கிட‌க்கிறார்.  மேரி, தான் பொலிஸின் ஆளில்லை, த‌ன்னை ந‌ம்பிக் க‌தைக்க‌லாம் என்கின்ற‌போதும் முத‌லில் அந்த‌ச் சீன‌ப் பெண் த‌ய‌ங்குகின்றார். இறுதியில் அந்த‌ப்பெண் தான் இந்த‌ நிலைக்கு வ‌ந்த‌ நிலைமை ப‌ற்றிக் கூறுகின்றார். பாலிய‌ல் தொழில் செய்வ‌த‌ற்கென‌ ஜ‌ப்பானில் இய‌ங்கும் ஒரு சீன‌க்குழுவால் அவ‌ர் ஜ‌ப்பானுக்கு க‌ள்ள‌மாக‌ வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார். அந்த‌ப் பெண்ணுக்கும் மேரியின் வ‌ய‌தே இருப்ப‌தால் மேரிக்கும் அவ‌ர் மீது ஒருவித‌ப் ப‌ரிவு வ‌ருகிற‌து.

அன்று வாடிக்கையாள‌ரோடு வ‌ந்த‌ இப்பெண்ணுக்கு மாதாந்த‌ உதிர‌ப்பெருக்கு ஏற்ப‌ட்டுவிட‌, வாடிக்கையாள‌ ஆண் கோப‌த்தில் இவ‌ரைத் தாக்கிவிட்டு இவ‌ர‌து உடைக‌ள் உட்ப‌ட‌ அனைத்து உடைமைக‌ளையும் எடுத்துக்கொண்டு போயிருக்கின்றார். உடைகளை எடுத்துச் சென்ற‌துகூட‌ -இந்த‌ வ‌ன்முறையை- உட‌னேயே வேறு யாருக்குத் தெரிவித்து எவ‌ரும் வ‌ந்துவிட‌க்கூடாது என்கின்ற‌ முற்பாதுகாப்பிற்காக‌வே ஆகும். ஆடைக‌ளில்லாதுவிடின் உட‌னேயே வெளியே ஓடிப் போய் இப்பெண் எவ‌ரிட‌மும் உத‌வி கேட்க‌முடியாத‌வ‌ல்ல‌வா?

இறுதியில் அப்பெண்ணுக்கு மாற்றுடை கொடுத்து, அவ‌ர் யாருடைய‌ க‌ட்டுப்பாட்டில் இருக்கின்றாரோ அந்த‌ச் சீனக்குழுவுக்கும் செய்தி கொடுக்க‌ப்ப‌ட்டு அப்பெண்ணை அந்த‌க்குழு பொறுப்பெடுத்துக் கொள்கின்ற‌து. த‌ன‌து ஹொட்ட‌ல் அறைக்கு உரிய‌ ப‌ண‌ம் த‌ராத‌ற்கு ம‌ட்டுமின்றி, ஒரு பெண்ணின் மீது மூர்க்க‌த்த‌ன‌மாய் தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌த‌ற்குமாய் அந்த‌ வாடிக்கையாள‌ர் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌வேண்டுமென‌ வீறாப்பில், ஹ‌ரோக்கி பாதுகாப்புக் க‌ம‌ராக்க‌ளை பின்னோக்கிச் சுழ‌ற்றி அந்த‌ வாடிக்கையாள‌ரைக் க‌ண்டுபிடித்து ப‌ட‌த்தைப் பிர‌தி எடுத்தும் கொள்கின்றார். மேலும் சீன‌க்குழுவிற்கும் தொலைபேசி அழைத்து அந்த‌ வாடிக்கையாள‌ர் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌வேண்டுமென்ப‌த‌ற்காய் அந்த‌ப் புகைப்ப‌ட‌த்தையும் அவ‌ர்க‌ளிட‌ம் ஹ‌ரோக்கி கொடுத்துவிடுகின்றார்.

இத‌ற்கிடையில் மேரியைக் கொண்டுபோய் க‌ஃபேயில் மீண்டும் விட்டுவிடும் ஹ‌ரோக்கி, இர‌வில் த‌ங்குவ‌த‌ற்கு ஓரிட‌ம் வேண்டுமென்றால் த‌ன் ஹொட்ட‌லுக்கு எந்த‌ நேர‌மும் வ‌ர‌லாம் என‌ அழைப்பையும் விட்டுச் செல்கின்றார். மீண்டும் தேநீரும்,பாட‌லும், புத்த‌க‌ம் வாசிப்ப‌துமாய் மேரி இருக்க‌, இசைப் ப‌யிற்சிக்குப் பின்பான‌ இடைவேளையில் முத‌லில் மேரியைச் ச‌ந்திக்க‌ அந்த‌ இளைஞ‌ன் வ‌ருகின்றான். அவ‌ன், தான் இனி இசைக்குழுவை விட்டு முற்றுமுழுதாக‌ வில‌கி, விரைவில் ச‌ட்ட‌ம் ப‌டிக்க‌ப் போவ‌தாய்க் கூறுகின்றான். அதைத் தேர்ந்தெடுத்த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளையும், த‌ன் எதிர்கால‌க் க‌ன‌வுக‌ளையும் மேரியுட‌ன் ப‌கிர்கிறான். மேரி முத‌ற் ச‌ந்திப்பைப் போல‌வ‌ன்றி, இப்போது அவ‌னோடு அளவ‌ளாவ‌த் தொட‌ங்குகின்றார். அப்போதுதான், அவ‌ன் மேரியின் ச‌கோத‌ரியான‌ எரி ஒருநாள் த‌ன்னோடு சில‌ த‌னிப்ப‌ட்ட‌ விட‌ய‌ங்க‌ளைப் ப‌கிர்ந்தாள் என்கின்ற‌ விட‌ய‌த்தைக் கூறுகின்றான். அத்துட‌ன் அவ‌ள் நிறைய‌ மாத்திரைக‌ளையும் எடுத்துக்கொண்டிருக்கின்றாள் என்ப‌தையும் தெரிவிக்கின்றான். மேரிக்கு த‌ன் த‌ம‌க்கை எளிதில் வெளிவ‌ர‌முடியாத‌ பெரும் சிக்க‌லில் மாட்டியிருக்கின்றாள் என்ப‌து விள‌ங்குகின்ற‌து.

3.
க‌தை இப்போது சீன‌ப்பெண்ணை மூர்க்க‌மாய்த் தாக்கிய‌ வாடிக்கையாள‌னைச் சுற்றி ந‌கர‌த்தொட‌ங்குகின்ற‌து. அவ‌னொரு மென்பொருள் நிறுவ‌ன‌த்தில் வேலை செய்கின்றான். அதிக‌மாய் இர‌வில் த‌ன் வேலைத்த‌ல‌த்தில் த‌ங்கி நெடுநேர‌ம் வேலை செய்யும் ஒருவ‌னாக‌ இருக்கின்றான். அன்றும் த‌ன‌க்குக் கிடைத்த‌ இடைவெளியில்தான் சீன‌ப்பெண்ணைக் கூட்டிக்கொண்டு ல‌வ் ஹொட்ட‌லுக்குப் போயிருக்கின்றான். மீண்டும் த‌ன் வேலைத்த‌ள‌த்திற்கு வ‌ரும் அவ‌ன் நிதான‌மாக‌ வேலையை முடித்து, யோகா செய்து ச‌வ‌ர‌ஞ்செய்து வீட்டுக்குப் புற‌ப்ப‌டுகின்றான். போகும்வ‌ழியில் ம‌னைவி பால் வாங்கி வ‌ர‌ச் சொன்ன‌து நினைவுக்கு வ‌ருகின்ற‌து. பால் வாங்கும் க‌டையின் முன்னாலிருக்கும் குப்பை போடும் இட‌த்தில், தான் அப‌க‌ரித்து வ‌ந்த‌ சீன‌ப்பெண்ணின் ஆடைக‌ள் தோற்பை உள்ளிட்ட‌ எல்லாவ‌ற்றையும் வேறொரு பையினுள் பாதுகாப்பாய்ப் போட்டு வைத்துவிடுகின்றான். ஆனால் அந்த‌ப் பெண்ணின் கைத்தொலைபேசியை ம‌ட்டும் வேண்டுமென்றே க‌டையிலுள்ள‌ விற்ப‌னை பொருட்க‌ளிடையே ம‌றைத்து வைத்தும் விடுகின்றான்.

மேரியோடு க‌தைத்துக் கொண்டிருந்த‌ இளைஞ‌ன் மீண்டும் இசைப்ப‌யிற்சி செய்வ‌த‌ற்காய்த் திரும்புகின்றான். மேரியை காலைச் சாப்பாட்டுக்காய்க் கூட்டிக்கொண்டு போக‌ விரும்புவ‌தாய்க் கூறிவிட்டுப் போகின்றான். அவ‌னும் சில‌ பொருட்க‌ளை வாங்க‌ வேண்டி க‌டையொன்றுக்குப் போக, அந்த‌க்க‌டையில் ம‌றைத்து வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ கைத்தொலைபேசி ஒலிக்க‌, யாரோ த‌வ‌றவிட்டுச் சென்றுவிட்டார்க‌ள் போலும், போனைத் தேடுகின்றார்க‌ள் போலும் என‌ தொலைபேசி அழைப்பை எடுக்கின்றான். எதிர்முனையில், 'நீ என்ன‌ செய்துவிட்டுப் போனாய் என்று எங்க‌ளுக்குத் தெரியும், இத‌ற்கான‌ விலையை நீ ஒருநாள் கொடுப்பாய்' என‌ அச்சுறுத்தும் குர‌ல் கேட்கின்ற‌து. இந்த‌ இளைஞ‌னுக்கு விய‌ப்பாயிருக்கிற‌து. த‌ன் நிலையை விள‌ங்க‌ப்ப‌டுத்த‌வும் அவ‌னுக்கு எதிர்முனையில் பேசிய‌வ‌ன் ச‌ந்த‌ர்ப்ப‌ம் கொடுக்க‌வில்லை. ப‌ய‌த்தோடும் ப‌த‌ற்ற‌த்தோடும் அந்த‌க்க‌டையை விட்டு இந்த‌ இளைஞ‌ன் ந‌க‌ர்ந்து செல்கின்றான்.

...இவ்வாறாக‌ நாவ‌ல் இன்னும் நீளும். ஹ‌ருக்கி முர‌காமியின் நாவ‌ல்க‌ளில் வ‌ரும் முக்கிய‌ ஆண்பாத்திர‌ங்க‌ள் அநேகமாய் த‌னிமைப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாய் அல்ல‌து த‌னிமையை விரும்புவ‌ர்க‌ளாய் இருப்ப‌வ‌ர்க‌ளாய் ப‌டைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தைப் போல‌ இதில் வ‌ரும் இளைஞ‌னும் இருக்கின்றான். முக்கிய‌மாய் பெண்க‌ள் மீது ஈர்ப்பிருப்பவ‌ர்க‌ளாய் இருப்பினும் அவ‌ர்க‌ளை க‌வ‌ர‌முடியாத் தாழ்வுண‌ர்ச்சியுட‌ன் இருப்ப‌வ‌ர்க‌ளாய் முர‌காமியின் அநேக ஆண்பாத்திர‌ங்க‌ள் ப‌டைக்க‌ப்ப‌ட்டிருக்கும். இந்நாவ‌ல் ந‌ள்ளிர‌வில் தொட‌ங்கி விடிகாலையில் முடியும் குறுகிய‌ கால‌ப்ப‌குதிக்குரிய‌ க‌தை என்றாலும் ஹ‌ருக்கி முர‌காமி த‌ன் எழுத்தால் எம்மையும் அந்த‌ச் சூழ‌லுக்குள் ஒரு பார்வையாள‌ரைப் போல‌ ஆக்கிவிடுகின்றார்.

மேரி ஒவ்வொரு பாத்திர‌த்தையோ, ச‌ம்ப‌வ‌ங்க‌ளையோ ச‌ந்திக்கும்போது ந‌ம‌க்கு அடுத்து என்ன‌ ந‌ட‌க்க‌ப்போகின்ற‌தோ என்கின்ற‌ ப‌த‌ற்ற‌ம் வ‌ந்துவிடுகின்ற‌து. அதேபோல் மேரியின் ச‌கோத‌ரியான‌ எரி ப‌ற்றி விப‌ரிக்கப்ப‌டும்ப‌குதிக‌ள் முழுதுமே ஒருவித‌ மாய‌ ய‌தார்த்த‌த்தில் எழுத‌ப்ப‌ட்டிருக்கும். மேரி, எரி த‌ங்க‌ள் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கின்றார் என‌த்தான் கூறுகின்றார். அப்ப‌டியாயின் அவ‌ர் தூங்குவ‌தைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த‌ 'முக‌ம‌ற்ற‌ ம‌னித‌ன்' யார்? அதும‌ட்டுமில்லாது ஒரு அத்தியாய‌த்தில், தூக்க‌த்திலிருந்து ச‌ற்று விழிக்கும் எரி, நில‌த்திலிருக்கும் ஒரு பென‌சிலை எடுக்கின்றார். பிற‌கு பார்த்தால் அதே பென்சிலே சீன‌ப்பெண்ணைத் தாக்கிய‌ வாடிக்கையாள‌ன் வேலை செய்யும் மேசையில் இருப்ப‌தாய்க் கூற‌ப்ப‌ட்டிருக்கும். இவ்வாறாக‌ எரியின் உற‌க்க‌மே ப‌ல்வேறு வித‌மான‌ விசித்திர‌ப்புதிர்க‌ளால் நெய்ய‌ப்ப‌ட்டிருக்கும். இருநூறு ப‌க்க‌ங்க‌ளுக்கும் குறைவான‌ நாவ‌ல் என்றாலும் வாசிப்புச் சுவார‌சிய‌த்திற்கு குறைவே இல்லாத‌து.

ஹ‌ருக்கி முர‌காமிக்குப் பிடித்த‌மான‌ பூனைக‌ள் இந்நாவ‌லிலும் முடிவ‌த‌ற்கு சில‌ அத்தியாய‌ங்க‌ள் முன் பூங்காவில் தோன்றுகின்ற‌ன‌. மேரியும், அந்த‌ இளைஞனும் ரூனா மீனை அப்பூனைகளுக்கு சாப்பிட‌க் கொடுத்து அவைக‌ளை வ‌ருடிய‌படி இருக்கின்ற‌ன‌ர். ஒருவ‌கையில் பார்த்தால் இந்த‌ப் பூனைக‌ளைப் போல் நாமும் வாழ்வில் யாருடைய‌தோ அர‌வ‌ணைப்புக்காக‌ காத்திருக்க‌வோ அல்ல‌து அலைக்க‌ழிய‌வோ வேண்டியிருக்கிற‌து அல்ல‌வா?
............

Photos: Thanks to Google Images (search words: after dark, haruki murakami)

ப‌னி

Tuesday, October 18, 2011

வ‌ன் ப‌ழைய‌ கிங்ஸ்ட‌ன் தெரு, 401 நெடுஞ்சாலையோடு இணைகின்ற‌ ப‌குதியில் ந‌ட‌ந்து கொண்டிருந்தான். மெல்லிய‌தாக‌ப் பெய்த ப‌னி, அணிந்திருந்த‌ க‌றுப்ப‌ங்கியின் மேல் ம‌ல்லிகைப் பூவைப் போல‌ விழுந்து க‌ரைந்து போய்க்கொண்டிருந்த‌து.  வான‌த்தை மூடியிருந்த‌ க‌ருஞ்சாம்ப‌ல் போர்வை ஒருவ‌கையான‌ நெகிழ்வை மாலை நேர‌த்துக்குக் கொடுக்க‌, இலைக‌ளை உதிர்த்த‌ ம‌ர‌ங்க‌ள் த‌லைவிரிகோலமாய் வானை நோக்கி எதையோ யாசிப்ப‌து போல‌வும் தோன்றிய‌து. தானும் எல்லா இழைகளும் அறுந்து தனித்துவிடப்பட்ட தனியன்தானோ என்கிற வெறுமை இவ‌னுக்குள் ப‌ர‌வ‌த் தொட‌ங்கிய‌து. தலைவிரிக்கோல ம‌ர‌ங்க‌ளைப் போன்று, பனித்திடலில் இரு கால்கள் புதைய ந‌ட‌மாடும் ம‌ர‌ந்தானோ தானும் என உருவ‌கித்துக் கொண்டான்.

இன்ன‌ கார‌ண‌ம் என்றில்லாது க‌ண்க‌ளிலிருந்து நீர் க‌சிய‌த்தொட‌ங்கும‌ள‌வுக்கு மிகவும் நெகிழ்ந்திருந்தான். க‌ண்ணீரைக் கையால் துடைக்காது, அது விழுகின்ற‌ ப‌னியோடு சேர்ந்து க‌ரைந்து போய்க்கொண்டிருந்ததை அச‌ட்டை செய்து ந‌ட‌ந்த‌ப‌டியிருந்தான். மெல்லிய‌ தூற‌லாய் விழும் ப‌னியை நாவை நீட்டி ருசிப்ப‌து அவ‌னுக்கு எப்போதும் பிடித்த‌மான‌ செய‌லென்ப‌தால் இன்றும் ப‌னியைச் சுவைத்துப் பார்த்தான். உவ‌ர்ப்ப‌து போல‌ப்ப‌ட்ட‌து. இது ப‌னியில் இய‌ல்ப‌ல்ல‌வே, த‌ன் நினைவுதான் அதைக் க‌ச‌ப்பாக்கிற‌து போலும் என‌ எண்ணிக்கொண்டான். இப்ப‌டியே நெகிழ்ந்த‌ நிலையில் தொட‌ர்ந்தும் ந‌ட‌ந்துபோனால், வாக‌ன‌ங்க‌ள் நூறு கிலோமீற்ற‌ருக்கு மேலாய் விரையும் நெடுஞ்சாலையில் குதித்துவிட‌க்கூடுமென‌ அஞ்சி இட‌துப‌க்க‌ வீதியிற்குள் இற‌ங்கினான். 86ம் இல‌க்க‌ ப‌ஸ் வ‌ந்துகொண்டிருந்த‌து, ச‌ட்டென்று ஏறி அத‌னுள் அம‌ர்ந்து கொண்டான்.

அவ‌ன் க‌ன‌டாவிற்கு வ‌ந்து இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாகி விட்ட‌ன‌. இல‌ங்கையில் இருந்து வெளிநாடுக‌ளுக்கு ஒழுங்கான‌ விஸா இல்லாது வ‌ரும் அனைவ‌ரைப் போல‌வே அவ‌னும் வ‌ந்து சேர்ந்திருந்தான். வ‌ருகின்ற‌ வ‌ழியில் க‌ள்ள‌ங்க‌ள் செய்த‌த‌ற்கு ப‌ய‌ப்பிட்ட‌தை விட‌, க‌ன‌டாவிற்கு வ‌ந்த‌பின் ப‌ய‌ண‌த்திற்காய் ப‌ல‌ரிட‌ம் வாங்கிய‌ க‌ட‌ன் காசுதான் இன்னும் அச்சுறுத்திய‌து. அது போதாதென்று இவ‌னின் தாயார், 'வெளிநாட்டுக்குப் போய் மாறிவிடாதை, உன‌க்குப் பின் இர‌ண்டு த‌ங்க‌ச்சிமார் இருக்கின‌ம் என்ப‌தை ம‌ற‌ந்துவிடாதே' என‌ அடிக்க‌டி நினைவுப‌டுத்தியுமிருந்தார். அம்மாவின் இந்த‌ ந‌ச்ச‌ரிப்புத் தாங்காம‌லே, 'அங்கை போன‌வுட‌னையே ஒவ்வொரு காலையும் ஒரு த‌ங்க‌ச்சிக்கென‌ தாரை வார்த்து, உழைத்துக் காசு அனுப்புகிறேன் க‌வ‌லைப்ப‌டாதைய‌னை' என‌ எரிச்ச‌லுட‌ன் இவ‌ன் சொன்னான்.

மொன்றிய‌ல் விமான‌ நிலைய‌த்தில்தான் முத‌லில் வ‌ந்திற‌ங்கினான். 'எங்கே பாஸ்போர்ட்?' என‌க் கேட்க‌, இல‌ங்கையில் உள்நாட்டுப் போர் தீவிர‌மாக‌ ந‌ட‌க்கின்ற‌தென‌ச் சொல்லி க‌ன‌டா இமிக்கிரேச‌னில் இர‌ண்டு கைக‌ளையும் உய‌ர்த்தினான். கிரேஹ‌வுண்ட் ப‌ஸ் எடுத்து ரொறொண்டோவிற்கு அடுத்த நாள் வ‌ந்து சேர்ந்திருந்தான். இவ‌னுக்குத் தெரிந்த‌ உற‌வினொருவ‌ர் ரொறொண்டோவில் இருந்த‌து ந‌ல்ல‌தாய்ப் போய்விட்ட‌து. ஓர் அறையுள்ள‌ அபார்ட்மெண்டில் ஏற்க‌ன‌வே இருந்த‌ மூன்று பேருட‌ன் நான்காவ‌து ஆளாக‌ இணைந்தான். ரொறொண்டோ போயிற‌ங்கிய‌ இர‌ண்டாம் நாளே, த‌ன் தாய் கூறிய‌தை ம‌ற‌ந்துவிடாது, 'அண்ணை என‌க்கொரு வேலை எடுத்துத் தாங்கோ' என‌ உறவுக்காரரிடம் கேட்டான். 'உன்ர‌ வ‌ய‌சுக்கு ஸ்கூலுக்குப் போற‌தை முத‌லில் பார். இல்லாட்டி பிற‌கு எங்க‌ளைப் போல‌ கிச்ச‌னுக்குள்ளேதான் முட‌ங்கிக் கிட‌க்க‌ வேண்டும்'  என‌ச் சிவா அண்ணா இவ‌னுக்குக் கூறினார். இவ‌னுக்கு ப‌தினேழு வ‌ய‌து அப்போதுதான் முடிந்திருந்த‌து.


வெஸ்ட் ஹில் உய‌ர்க‌ல்லூரிக்குப் ப‌டிப்ப‌த‌ற்காய் செப்ரெம்ப‌ரிலிருந்து போக‌த் தொட‌ங்கியிருந்தான். பாட‌சாலை முடிந்த மாலை நேர‌த்தில் ஒரு வேலையும் கிடைத்திருந்த‌து. 'கைக‌ளைத் தூக்கிய‌ கேஸ்' இன்னும் முடியாத‌தால் சிவா அண்ணாவின் ந‌ம்ப‌ரில்தான் வேலை செய்ய‌த் தொட‌ங்கினான். போக‌த் தொட‌ங்கியிருந்த‌ வேலைத்த‌ள‌த்தில் ஆடைக‌ள் தோய்ப்ப‌த‌ற்கான‌ இர‌சாய‌ன‌க்க‌ல‌வையைத் த‌யாரிப்பது நிகழ்ந்து கொண்டிருந்தது. இவ‌ன‌து தொழில், அந்தக் கெமிக்க‌லை நான்கு 2லீற்ற‌ர் க‌ல‌ன்க‌ளில் நிர‌ப்புவ‌தும், அதை எடுத்து ஒழுங்காய் பெட்டிக்குள் அடுக்கி வைப்ப‌தும் என்பதாய் இருந்தது. வேலை பார்க்க‌ எளிதாக‌ இருந்தாலும் ஒவ்வொரு 30செக்க‌ன்க‌ளில் நான்கு க‌ல‌ன்க‌ள் நிர‌ம்ப‌ நிர‌ம்ப‌ எடுத்து, முதுகு வலிக்க வலிக்க அடுக்க‌வேண்டும். கொஞ்ச‌ம் நேர‌ம் பிந்தினாலும் க‌ல‌ன்க‌ள் நிர‌ம்பி வ‌ழிய‌த் தொட‌ங்கிவிடும். இது போதாதென்று கண்க‌ளுக்கு பாதுகாப்புக் க‌ண்ணாடி எப்போதும் அணிந்து கொண்டும் இருக்க‌வேண்டும். த‌ப்பித் த‌வ‌றி கெமிக்க‌ல் சிந்தி க‌ண்க‌ளைப் பாதித்து விட‌க்கூடாதென்ப‌த‌ற்கான‌ முற்பாதுகாப்பு இது.

வேலைக்குப் போன‌ முத‌ல்நாள், வேலை முடியும்போது துடைப்ப‌த்தைத் த‌ந்து இட‌த்தைக் கூட்டிச் சுத்த‌மாக்கச் சொன்னார்கள். இல‌ங்கையில் இருந்த‌போது தும்புக்க‌ட்டை இருந்த திசைக்கே போகாத‌வ‌னுக்கு இது ஒரு மான‌ப் பிர‌ச்சினையாக‌ப் போய்விட்ட‌து. வீட்டில் அம்மாதான் இதையெல்லாம் செய்வார். அவ‌ருக்கும் ஏலாதென்றால் த‌ங்க‌ச்சிமார்தான் வீட்டைக் கூட்டுவ‌து பெருக்குவ‌து. க‌ன‌டாவில் இப்படியாயிற்றே தன் விதியென நொந்துகொண்டான். ஊரில் பெடிய‌ங்க‌ளுக்கு இருக்கும் எழுத‌ப்ப‌டாத‌ சொகுசான‌ வாழ்க்கையைக் க‌ண்டு, பொம்பிளைப்பிள்ளைக‌ள் மனமெரிந்து சாப‌ம் போட்டுத்தான் த‌ன்னைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ நிலை இப்போது வ‌ந்திருக்கின்ற‌தோ என‌ நினைத்துக் கொண்டான்.

பாட‌சாலைக்குப் போக‌ ஆறு ம‌ணித்தியால‌ம், வேலைக்கு எட்டு ம‌ணித்தியால‌ம், ப‌ஸ்சில் போய்வ‌ர‌ இர‌ண்டு ம‌ணித்தியால‌ம் என ஒருநாளில் ப‌தினாறு ம‌ணித்தியால‌ங்கள் இப்படியாகப் போய்விடும். ச‌னி ஞாயிறுக‌ளிலும் சும்மா இருக்காது வீடு வீடாக‌ப் போய் ஃபிளைய‌ர்ஸ் போட‌வும் தொட‌ங்கியிருந்தான். இவ‌ன் க‌ன‌டா வ‌ந்து ஒரு வ‌ருட‌ம் ஆன‌போதுதான் சிவா அண்ணா ஒரு யோச‌னை கூறினார். 'இப்ப‌டி நாங்க‌ள் நான்கு பேரும் வீணாய் வாட‌கைக்கு ப‌ண‌த்தைச் செல‌விடுவ‌தை விட‌, ஒரு வீட்டை நான்கு பேருமாய்ச் சேர்ந்து வாங்கி மோட்கேஜ் க‌ட்டுவோம்' என்றார். இவ‌ன் உட்ப‌ட‌ எல்லோரும் த‌லா 3000 டொல‌ர்க‌ள் ட‌வுன் பேமேண்ட் போட்டு வீடொன்றை மோர்னிங்சைட் ப‌க்க‌மாய் வாங்கினார்க‌ள். யாரேனும் ஒருவ‌ர் முத‌லில் திருமணம் செய்யும்போது, வீட்டை விற்றுவிட்டு எல்லோரும் ச‌ம‌னாக‌க் காசைப் பிரித்துக் கொள்வோம் என‌வும் தீர்மானித்திருந்த‌ன‌ர்.

ஒருநாள் பாட‌சாலைக்கு ந‌ட‌ந்து போய்க்கொண்டிருந்த‌போது பிலிப்பைன்கார‌ப் பெட்டை ஒருத்தி த‌ன் கையுறையைத் த‌வ‌றவிட்டு ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடி போய்க்கொண்டிருப்ப‌தைக் க‌ண்டான். இவ‌ன் ஓடிப்போய் நில‌த்தில் வீழ்ந்திருந்த‌ கையுறையை எடுத்து, முன்னே போய்க்கொண்டிருந்த‌ அவ‌ளின் தோளைத் த‌ட்டிக் கொடுத்தான். 'மிக்க‌ ந‌ன்றி.  இது என் அம்ம‌ம்மா மூன்று வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் கிறிஸ்ம‌ஸ் ப‌ரிசாக‌த் த‌ந்த‌து. இப்போது அம்ம‌ம்மா உயிரோடு இல்லை. அவ‌ரின் நினைவாக‌ இதை வைத்திருக்கின்றேன். தொலைத்திருந்தால் அம்ம‌ம்மாவைக் கைவிட்ட‌து போல‌ வ‌ருந்தியிருப்பேன். மீண்டும் ந‌ன்றி' என்றாள். 'நீங்க‌ள் அதிஷ்ட‌ம் செய்த‌வ‌ர்க‌ள். உங்க‌ளின் நெருங்கிய‌ உற‌வுக்கார‌ர்க‌ள் எல்லோரும் இங்கிருக்கின்றார்க‌ள். என‌க்கென்றுதான் எவ‌ரும் இங்கு இல்லை' என‌ இவ‌ன் சொன்னான். 'Aaah..I am really sorry to hear it' என உண்மையிலே இவன் நிலை கண்டு வருந்தினாள் அவ‌ள்.  பிற‌கு ஒருநாள்  ஹ‌லோவீனுக்கு த‌ன் த‌ம்பியோடு 'Trick or Treat' கேட்க‌, இவ‌ன் இருந்த‌ வீட்டுக் க‌தவைத் த‌ட்டினாள். 'நீ எங்க‌ளுக்கு அருகில்தான் வ‌சிக்கின்றாய் என்ப‌து என‌க்குத் தெரியாதே' என‌ இவன் கதவைத் திறந்ததைப் பார்த்து அவள் சொன்னாள். 'பேய்க‌ள் அருகில் வ‌சித்தால் தான் என்ன‌, தொலைவில் வ‌சித்தால் தான் என்ன‌? பேய்க‌ள் எப்போதும் பேய்க‌ள் தானில்லையா?' என‌ச் சிரித்தபடி இவ‌ன் கூறினான்.

அவ்வ‌ப்போது பாட‌சாலையில் இருவரும் ச‌ந்தித்துக் க‌தைத்துக் கொண்டார்க‌ள். அவ‌ளுக்காக‌வே இவ‌ன் பாட‌சாலை தொடங்குவதற்கு அரை ம‌ணித்தியால‌ம் முன்பாகப் க‌ல்லூரிக்குப் போக‌த் தொட‌ங்கினான். பாடசாலை முடிந்து மாலையில் நின்றும் அவ‌ளோடு ஆறுத‌லாக‌ப் பேச‌லாம் என்றாலும், மாலை நேர‌ வேலை அத‌ற்கு இட‌ங்கொடுப்ப‌தில்லை. ஒருநாள் அவ‌ள் Thanks Giving டின்ன‌ருக்கு அழைத்தாள். இவ‌ன் தனிமையில் இருக்கின்றான் என்றெண்ணியோ என்ன‌வோ தெரியாது, க‌ட்டாய‌ம் வ‌ர‌வேண்டுமென கைகளைப் பிடித்தபடி சொன்னாள். இவ‌ன் த‌ன்னை அவ‌ளின் குடும்ப‌த்துக்கு கலாதியாக அறிமுக‌ம் செய்ய‌வேண்டும் என்ப‌த‌ற்காய் Levi's ஜீன்ஸும், CK ஷேர்ட்டும் அணிந்து கொண்டு போயிருந்தான். க‌ன‌டா வ‌ந்து ரீவியை அவ்வ‌ப்போது பார்த்த‌தில் Thanks Giving டின்னருக்கு விருந்தாளிக‌ளாக‌ப் போகின்றவ‌ர்க‌ள் அநேக‌மாய் வைன் போத்த‌ல்களைக் கொண்டு போவ‌தை அவதானித்திருந்தான். அவ‌ள் வீட்டுக்குப் போக‌முன்ன‌ர் லிக்க‌ர் ஸ்ரோரிற்கு போய் கொஞ்ச‌ம் விலைகூடிய‌ வைனையும் வாங்கினான். தான் வைன் வாங்கும்போது தெரிந்த‌ முக‌ங்க‌ள் எதுவும் கடையில் தெரிகிற‌தா என‌ச் சுற்றுமுற்றும் நோட்ட‌மும் விட்டான். தெரிந்த‌ ச‌னம் தான் வைன் வாங்குவதைக் க‌ண்டு, இந்த‌க் க‌தை இல‌ங்கைக்குப் போனால், இவ‌ன் முழுநேர‌க் குடிகார‌ன் ஆகிவிட்டான் என‌ப் புல‌ம்பி புல‌ம்பி த‌ன்ரை தாய் ம‌னுசி கோயில் கோயிலாக‌ ஏறக்கூடுமென‌கிற‌ ப‌ய‌ம் தான் இத‌ற்குக் கார‌ண‌ம். தாய்க்காரி அங்கையிருக்கின்ற கோயில்க‌ளில் வைக்கின்ற‌ நேத்திக்கும், அபிசேசங்க‌ளுக்கும் இவ‌ன் தானே மாய்ந்து மாய்ந்து உழைத்து, அத‌ற்கும் ப‌ண‌ம் அனுப்ப‌ வேண்டியிருக்கும்.

அவ‌ளின் வீட்டுக்குள் போன‌போது ஒரே அல்லோலகல்லோலமாய் இருந்தது. ஏதோ பிலிப்பையின்சையே அப்ப‌டியே க‌ன‌டாவிற்குத் தூக்கிக் கொண்டுவ‌ந்த‌மாதிரி வீடு முழுக்க‌ச் ச‌ன‌மாய் இருந்த‌து. அவ‌ளின் அம்மா, 'நீ சோறு சாப்பிடும் பழக்கமுடையவனா?' என்றொரு முக்கியமான கேள்வியைக் கேட்டார். 'ஓம். ஒருநாளைக்கு ஒருமுறை...' என்றான் இவ‌ன். 'நாங்க‌ள் மூன்று நேர‌மும் சாப்பிடுகின்ற‌வ‌ர்க‌ள். அத‌னால்தான் திட‌காத்திர‌மாய் இருக்கின்றோம்' என்றார். இவ‌னுக்கு அவ‌ரின் உட‌லின் அள‌வைப் பார்த்த‌போது சூமோ வீர‌ர்க‌ள்தான் நினைவுக்கு வந்தார்கள். இதைத்தான் திட‌காத்திர‌ம் என்று இவா கூறுகின்ற‌வோ என‌ நினைத்து இவ‌னுக்குச் சிரிப்பு வ‌ந்த‌து. 'எங்க‌ளின் குடும்ப‌த்தின் அள‌வைப் பார்த்து, இதைவிட‌ த‌னியே இருப்ப‌து ந‌ல்ல‌தென‌ யோசிக்கின்றாயோ' என‌க் கேட்டப‌டி இவனை அவள் விருந்திற்குக் கூட்டிச் சென்றாள். 'அப்ப‌டி என்றில்லை, எப்போதும் இல்லாத‌ ஒன்றுக்காய்தானே ம‌ன‌ம் ஆலாய்ப் ப‌ற‌க்கும்' என்றான் இவ‌ன்.

பிற‌கான நாட்களில், இவன் ஆட்க‌ள் குறைவாக‌ இருக்கும் ஷோக்க‌ளுக்கு அவ‌ளோடு ப‌ட‌ம் பார்க்க‌ச் சென்றான். ஆட்க‌ள் நிறைய‌க் கூடும் கிள‌ப்புக்க‌ளுக்கும் நில‌வு ஒளிந்த‌ இர‌வுக‌ளில் அவளை கூட்டிப் போக‌த் தொட‌ங்கினான்.  இலங்கையில் இருக்கும் தன் குடும்ப‌த்திற்கு ஆறு நாள், இவ‌ளுக்கு ஒரு நாளென‌ ச‌னிக்கிழ‌மைக‌ளில் வேலை செய்வ‌தையும் த‌விர்த்தான். செஞ்சோற்றுக் கட‌ன் போல‌,  இர‌ண்டு த‌ங்க‌ச்சிமாருக்குச் செய்ய‌வேண்டிய‌ க‌டமைக‌ள் முன்னே இருக்க‌, அதுவ‌ரை அவ‌ள் காத்திருப்பாளா என்ப‌து குறித்த நிச்சய‌மின்மைக‌ளும் தெரிந்த‌ன. இத‌ற்கிடையில் இவ‌னுடைய‌ ப‌ள்ளிக்கூட‌ ந‌ண்ப‌ர்க‌ள், 'எந்த‌ப் பெட்டைக‌ளோடு என்றாலும் திரிய‌டா, ஆனால் பிலிப்பீனோ பெட்டைக‌ளோடு ம‌ட்டும் ச‌க‌வாச‌ம் வைத்துக்கொள்ளாதே. செல்ல‌ம் கொஞ்சிக் கொஞ்சியே க‌ற‌க்க‌ வேண்டிய‌தை க‌ற‌ந்துவிட்டு வெறுங்கையோடுதான் அனுப்புவார்க‌ள்' என‌வும் எச்சரித்தார்க‌ள். தான் வேலை செய்கிற‌ ப‌க்ர‌றியில் இருக்கிற‌ சூப்ப‌ர்வைச‌ர் திட்டிக்கொண்டும் சுர‌ண்டிக்கொண்டும் தானிருக்கிறார். அதையே ச‌கித்துக் கொண்டுதானே இருக்கிறேன். இவ‌ள் என்னிட‌ம் இருந்து எதைச் சுர‌ண்டிக் கொண்டு போனாலும் செல்ல‌ம் கொஞ்சித்தானே கொண்டு போக‌ப்போகிறாள்; போனால் போக‌ட்டும் என‌ எண்ணிக் கொண்டான். ந‌ண்ப‌ர்க‌ள் கூறிய‌துபோல‌ அவ‌ள் எதையும் இவ‌னிட‌மிருந்து சுர‌ண்ட‌வும் இல்லை, தானாகக் க‌ழ‌ற்றிக் கொள்ள‌வும் இல்லை. இவ‌ன் தான் அவ‌ள் உற‌வை வெட்ட வேண்டியதாகப் போயிற்று.


சிவா அண்ண‌ன் திரும‌ண‌ம் செய்ய‌ப் போகின்றேன் என்றார். அவ‌ர் இந்த வீட்டில் மூன்று இள‌ந்தாரிப் பெடிய‌ங்க‌ளோடு மனைவியைக் கூட்டிக்கொண்டு வந்து இருக்க‌ அவ்வ‌ள‌வாய் விரும்ப‌வில்லை. வ‌சிக்கும் வீட்டை விற்ப‌தென‌த் தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து. இவ‌ன் மோர்னிங்சைட்டிலிருந்து 50 கிலோமீற்ற‌ருக்கு அப்பாலிருந்த‌ மிஸிசாக்கா ப‌க்க‌மாய் இட‌ம்பெய‌ர்ந்தான். அவ‌ளோடு உற‌வைத் தொட‌ர‌ முடியாம‌ற் போன‌த‌ற்கு தூர‌ம் ம‌ட்டும் ஒரு கார‌ணமில்லை; நீண்ட‌கால‌ உற‌வாய் அது இருக்க‌முடியாது என்று ய‌தார்த்த‌மே இவ‌னை இன்னும் ப‌ய‌முறுத்திய‌து. த‌ங்கைக‌ள் இருவ‌ருக்கும் திரும‌ண‌ஞ் செய்துவைத்த‌ பின்னே எதையும் த‌ன‌க்காய்ச் செய்ய‌லாம் என்கிற‌ ச‌ம்பிர‌தாய‌ம் ஒருப‌க்க‌ம் துன்புறுத்தியது. க‌லாச்சார‌மும், த‌ன் ச‌மூக‌மும் த‌ன்னை எல்லாத் திசைக‌ளிலும் இறுக்குகின்ற‌து என்ப‌தை எல்லாம் விரிவாக‌ விள‌க்கிச் சொல்லாது, தான் மிஸிசாக்காவிற்கு இட‌ம்பெய‌ர்கிறேன் என்ப‌தை ம‌ட்டும் இவ‌ன் அவ‌ளுக்குச் சொன்னாள். அவ‌ளுக்கும் இனி என்ன‌ நிக‌ழும் என்ப‌து விள‌ங்கியிருக்க‌க் கூடும். 'உட‌லின் மூலைகளுக்குள் ஒடுங்கியிருந்த காமத்தின் அரும்புகளை கிளர்த்தி, என்னுடன் த‌ன் உட‌லைப் ப‌கிர்ந்த‌வ‌ள் அவள்' என்கின்ற‌ நினைவை இவ‌ன் த‌ன‌க்குள் என்றைக்குமாய்ப் ப‌த்திர‌ப்ப‌டுத்திக் கொண்டான்.

மீண்டும் ச‌னிக்கிழ‌மைக‌ளிலும் வேலைக்குப் போக‌த் தொட‌ங்கினான். ப‌குதி நேர‌மாய் ஹ‌ம்ப‌ர் கொலீஜுக்கு ப‌டிக்க‌ப் போனான். ஒரு த‌ங்க‌ச்சிக்கு பிரான்சில் இருந்து பொருத்த‌ம் ஒன்று பொருந்தி வ‌ர‌ பாரிஸூக்கு நிறைய‌ச் சீத‌ன‌க்காசு கொடுத்து தங்கச்சியை அனுப்பி வைத்தான். பிரான்ஸ் போன‌ த‌ங்க‌ச்சி சிலவருடங்களின் பின், த‌ன் ம‌னுச‌னின் உற‌வுக‌ள் யாரோ சுவிசிலாந்திலிருக்கும் ஒருவ‌ருக்குப் பெண் தேடுகின்ற‌ன‌ர் என்று அறிந்து இவ‌னுக்குச் சொன்னாள். ஆனால் அவ‌ர் ஏதோ இய‌க்க‌த்திலிருந்தவ‌ர் என்றாள். 'முன்னாள் இய‌க்க‌மோ இன்னாள் இய‌க்க‌மோ, ஆள் ஒழுங்கான‌வ‌ராய் இருந்தால் போதும்' என்று அவரைப் பற்றி விசாரித்து அறிந்து, தன் ம‌ற்ற‌த் த‌ங்க‌ச்சியை சுவிசிலாந்திற்கு அனுப்பி வைத்தான். 'இய‌க்க‌த்திலிருந்தார்க‌ளோ அல்லது இல்லையோ, ஆனால் சீத‌னம் வாங்குகின்ற‌ க‌லாச்சார‌த்தை ம‌ட்டும் ம‌ற‌க்காம‌ல் இருக்கின்றார்க‌ள்' என்று இவ‌ன் சீதனமாய் அனுப்பக் கேட்ட‌ காசின் அளவைப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

த‌ங்க‌ச்சிமார் இர‌ண்டு பேரும் வெளிநாட்டுக்குப் போன‌பிற‌கு இல‌ங்கையில் தாயும் த‌க‌ப்ப‌னும் ம‌ட்டும் த‌னியே இருந்தார்க‌ள். இவ‌ன் ஹ‌ம்ப‌ர் கொலீஜில் இர‌ண்டு வ‌ருட‌ங்களில் ப‌டித்து முடிக்க வேண்டிய பாடங்களை ஐந்து வருடங்களாய் எடுத்து, டிப்ளோமா பெற்றான். ப‌ட்ட‌ம‌ளிப்பு விழாவிற்கென‌ த‌ன் தாயையும் த‌க‌ப்ப‌னையும் இல‌ங்கையிலிருந்து எடுப்பித்தான். வ‌ந்த‌ அவ‌ர்க‌ளை 'இனி அங்கே போய் என்ன‌ செய்ய‌ப்போகின்றீர்க‌ள்' என‌க் சொல்லிவிட்டு அவ‌ர்க‌ளைத் தானே கன‌டாவிற்குள் வைத்து ஸ்பொன்ச‌ரும் செய்தான். வீட்டுக்கு வருகின்ற‌ ச‌ன‌ம் எல்லாம் 'இவ‌னுக்கு எப்போது திரும‌ண‌ம்?' என்ப‌தை ம‌ட்டும் ம‌ற‌க்காம‌ல் கேட்டு விட்டுச் செல்வார்க‌ள். இந்த‌ ந‌ச்ச‌ரிப்புத் தாங்காமலே உற‌வின‌ர்க‌ள் வீட்டுக்கு வ‌ருகின்றார்க‌ள் என்றால் வீட்டை விட்டு வெளியே போகின்ற‌வ‌னாய் இவன் மாறிப்போனான். தாய் ம‌னுசியும்,'த‌ம்பி நான் க‌ண்ணை மூடுகிற‌துக்குள்ளை பேர‌ப்பிள்ளைக‌ளை பார்த்துவிட்டு க‌ண்ணை மூட‌னோனும‌டா' என‌ த‌மிழ்ப்ப‌ட‌ சென்டிமென்ட‌லில் அடிக்க‌டி சொல்ல‌த் தொட‌ங்கிவிட்டார். பிலிப்பைன்காரியைத் திரும‌ண‌ம் செய்வோமோ என்றுகூட‌ இவ‌ன் ஒருக‌ண‌ம் நினைத்தான். ஆனால் அவ‌ளைத் திரும‌ண‌ஞ்செய்தால் த‌மிழ் ஆண்க‌ளுக்குக் கிடைக்கக்கூடிய‌ செளக‌ரிய‌ங்க‌ள் ஒன்றும் கிடைக்காது என்று ஆழ‌மாய் யோசித்து அந்த‌ எண்ண‌த்தைக் கைவிட்டான்.

ஊரிலையே பெண் பார்ப்ப‌தே எல்லா வ‌ழிக‌ளிலும் மிக‌ச் சிற‌ந்த‌தென‌ முடிவெடுத்து, அப்போது அதிக‌ ப‌ட‌ங்க‌ளில் ந‌டித்துக்கொண்டிருந்த‌ சிநேகா மாதிரி ஒரு பெண் பார்க்க‌ச் சொன்னான். 'சிநேகா மாதிரி என்றால் என்ன‌மாதிரி?' என‌ அங்கே இவ‌னுக்காய்ப் பெண் பார்த்துக்கொண்டிருந்த‌ சித்த‌ப்பா ரெலிபோனில் கேட்டார். அப்போதுதான், சினிமாவே பார்க்காத‌ சித்த‌ப்பாவை பெண் பார்க்க‌ புரோக்க‌ராய் வைத்திருப்ப‌து எவ்வ‌ள‌வு ஆப‌த்து என்று விள‌ங்கிய‌து. அவ‌ர் அப்ப‌டிக் கேட்ட‌தால் வ‌ந்த‌ எரிச்ச‌லில், 'பார்த்திப‌ன் க‌ன‌வில் வ‌ந்த‌ சிநேகா மாதிரி' என்றான். 'ச‌ரி த‌ம்பி, நான் உந்த‌ச் சினிமாப் ப‌ட‌ம் ஒன்றும் பார்ப்ப‌தில்லைத்தானே, சித்தி தான் ஒன்றுவிடாம‌ல் எல்லாம் பார்க்கிற‌வா. அவாவிட‌ம் கேட்டு சிநேகாவைத் தெரிஞ்சு கொள்கிறேன்' என்றார் சித்த‌ப்பா. இவ‌ன் இதைச் சொன்ன‌த‌ன் பிற‌குதான் அந்த‌ப் ப‌ட‌த்தில் வ‌ருகிற‌ சிநேகாவிற்கு இடுப்பைத் தொடும் வ‌ரை இருந்த‌ த‌லைம‌யிர் உண்மையான‌தா அல்ல‌து போலியான‌தா என்ற‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்த‌து.

இர‌ண்டு வ‌ருட‌ டிப்ளோமா கோர்ஸை ஹ‌ம்ப‌ர் கொலிஜீல் செய்த‌தை, நான்கு வ‌ருட‌ம் யூனிவ‌சிற்றியில் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு டிகிரி வாங்கிய‌ அள‌வுக்கு க‌தையை மாற்றினான். மெஷின் ஒப்பிரேட்ட‌ராய் வேலை செய்வ‌தை 'மெஷின் எஞ்சினிய‌ர்' என்று புதுப்பெய‌ரும் கொடுத்தான். த‌குதிக‌ளைப் பொலிஷ் ஆக்க‌ ஆக்க‌ த‌ரப்ப‌டும் சீத‌ன‌த்தின் அள‌வையும் கூட்ட‌லாம் என்ப‌தே இத‌ற்குக் கார‌ண‌ம். த‌ங்க‌ச்சிமாருக்குச் சீத‌ன‌ம் கொடுத்த‌போது ம‌ன‌மெரிஞ்சு எரிஞ்சு கொடுத்த‌ த‌ன் க‌ட‌ந்த‌ கால‌த்தை ஒருமுறை நினைத்துப் பார்த்தான். 'கொடுத்த‌ காசை எப்ப‌டியேனும் திருப்பி எடுக்க‌த்தானே வேண்டும்' என‌ பிற‌கு த‌ன‌க்குத்தானே ச‌மாதான‌மும் செய்து கொண்டான்.


சுக‌ந்தியின் பொருத்த‌த்தோடு இவ‌னின் ஜாத‌க‌ம் பொருந்தியிருந்த‌து. சுக‌ந்தியின் புகைப்ப‌ட‌த்தைப் பார்த்த‌போது சிநேகாவின் எந்த‌ச் சாய‌லும் இல்லாம‌லிருந்த‌து. சில‌வேளைக‌ளில் நேரில் பார்க்கும்போது சிநேகா போல‌ இருக்க‌க்கூடுமென‌த் த‌ன்னைத் தேற்றிக் கொண்டான். சுக‌ந்தியை இல‌ங்கையில் போய் க‌லியாண‌ங்க‌ட்ட‌ வேலையில் இர‌ண்டு வார‌ங்க‌ள்தான் விடுமுறை கொடுத்திருந்தார்க‌ள். புது மெஷின் ஒன்றை ப‌க்ர‌றியில் இற‌க்கியிருந்ததால், அத‌ற்கு மேல் லீவு த‌ர‌மாட்டோம் என‌ உறுதியாய்க் கூறியிருந்தார்க‌ள். இல‌ங்கைக்குப் போகமுன்ன‌ர், சுக‌ந்தியை பிற‌கு கனடாவிற்கு ஸ்பொன்ச‌ர் செய்யும்போது, ஒரு பிர‌ச்சினையும் வ‌ர‌க்கூடாதென்ப‌த‌ற்காய் லோய‌ரைப் பார்க்க‌ச் சென்றான். லோய‌ர் 'திரும‌ண‌த்திற்கு இலங்கை போக‌முன்ன‌ரே க‌டித‌ங்க‌ளை மாறி மாறி உங்களுக்குள் அனுப்பிக் கொள்ளுங்கள்' என்றார். தொலைபேசியில் சுகந்தியோடு க‌தைப்ப‌தை பேப்ப‌ர் ஸ்டேட்ன்மென்டில் சான்றாதார‌ங்க‌ளாய் வைத்திருங்க‌ள் என்றும் சொன்னார். திரும‌ண‌ம் ந‌ட‌க்கும்போது இன்ன‌ இன‌ன‌ கோண‌த்தில் ப‌ட‌ங்க‌ள் எடுக்க எடுக்க‌வேண்டுமென‌க் கூறிவிட்டு, க‌ட்டாய‌மாய் ஒரு புகைப்ப‌ட‌ம் தாலியை போக‌ஸ் ப‌ண்ணி நல்ல தெளிவாய் எடுக்க‌வேண்டும், ம‌ற‌ந்துவிடாதீர்க‌ள் என‌வும் ப‌ய‌முறுத்தினார். இதைவிட‌ ஹ‌னிமூன் போகும்போது நிற்கும் ஹொட்ட‌லுக்குக் கட்டும் பில்,  இரண்டு பேரும் இயற்கைக் காட்சிகளின் பின்னணியில், சற்று நெருக்க‌மாய் நின்று கொஞ்ச‌ப் ப‌ட‌ங்க‌ள்... என‌ ஒரு நீண்ட‌ ப‌ட்டிய‌லைய‌க் கொடுத்தார். இவ‌னுக்கு இதையெல்லாம் பார்த்து, இன்னும் கொஞ்ச‌க் கால‌ம் போனால் 'ஹ‌னிமூனில் க‌ட்டிலில் என்ன‌ ந‌ட‌ந்த‌து?' என்பதற்கும் புகைப்ப‌ட‌ச் சான்று இமிக்கிரேசன்காரன் கேட்பான் போல‌க் கிட‌க்கிற‌து என நினைத்துக் கொண்டான்.

இவ‌ன் இல‌ங்கைக்குப் போய் தன் விருப்புக்கேற்றமாதிரி இல்லாது, க‌ன‌டா இமிக்கிரேச‌னின் 'யாப்புக்கு' ஏற்ற‌மாதிரி திரும‌ண‌த்தைச் செய்துகொண்டான். நுவ‌ரெலியாவிற்கு இவனும் சுகந்தியும் ஹ‌னிமூனுக்குப் போனார்க‌ள். 'இந்த‌ ஹொட்ட‌லுக்குத்தான் சிறிமா ப‌ண்டார‌நாய‌க்காவின் குடும்ப‌ம் விடுமுறைக்கு வ‌ருகின்ற‌வ‌ர்க‌ள்' என‌க் ஹொட்ட‌ல் மானேஜ‌ர் சொன்னார். 'ப‌ர‌வாயில்லை, மாமா ந‌ல்ல‌ வசதியான இட‌மாய்ப் பார்த்துத்தான் புக் செய்திருக்கின்றார்' என‌ இவன் சிரித்த‌ப‌டி சுக‌ந்திக்குச் சொன்னான். இர‌வு சுக‌ந்தியோடு முதன்முதலாக முய‌ங்கிய‌போது, இவ‌னுக்கு வேலை செய்யுமிட‌த்தின் மெஷின் ச‌த்த‌ம்தான் மூளைக்குள் ஓடிய‌து. க‌ன‌டாவில் வேலை, காசு என ஓடியோடி த‌ன் மென்னுண‌ர்வுக‌ளைத் தொலைத்துவிட்டேன் என‌ச் ச‌லித்துக்கொண்டான். இனி க‌ன‌டா போய் நிறைய‌த் த‌மிழ் ப‌ட‌ங்க‌ள் பார்த்துத் த‌ன் காத‌ல் உண‌ர்வை மீட்டெடுக்க‌வேண்டுமென‌ அந்தவேளையிலும் த‌ன‌க்குள் ச‌ப‌த‌மும் எடுத்தான்.

சுக‌ந்தி க‌ன‌டா வ‌ந்த‌போது, க‌ன‌டாவிலிருப்ப‌வ‌ர்க‌ளுக்கென‌ ஒரு ரிஷ‌ப்சன் வைத்தான். சுக‌ந்திதான் எதையோ ப‌றிகொடுத்த‌வ‌ள் போல‌ சோகமாய் இருந்தாள். இப்போது எல்லாம் புதிதாக‌ இருக்கும் போக‌ப் போக‌ எல்லாம் ச‌ரியாகிவிடுமென‌ இவ‌ன் நினைத்தான். நிறைய‌த் த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளைப் பார்த்து 'காத‌ல்' உண‌ர்வை வ‌ள‌ர்த்த‌போதும் சுக‌ந்திக்கு பெரிதாய் அந்த‌ விட‌ய‌த்தில் ஆர்வ‌மிருக்க‌வில்லை. க‌லியாண‌ஞ்செய்வ‌தே முக்கியமாய் அத‌ற்கென‌ நினைத்துக் கொண்ட‌வ‌னுக்கு இப்ப‌டி சுக‌ந்தி இருப்ப‌தைக் க‌ண்டு எரிச்ச‌ல் வ‌ந்த‌து. ஒருநாள் நேரே கேட்டும் விட்டான். 'நீங்க‌ள் இப்ப‌டி ஹ‌வேயில் போகின்ற‌ வேக‌த்தில், எல்லாம் வேண்டும் என்றால் என்னாலை எப்ப‌டி ச‌மாளிக்க‌ முடியும்' என‌ அவள் ஒரு சாட்டுச் சொன்னாள்.  ஓ...அதுதான் சிக்க‌லா என்று ரெசிடென்சிய‌ல் ஏரியாவில் போகின்ற‌மாதிரி 40 கிலோமீற்ற‌ர் ஆமை வேக‌த்தில் கட்டிலில் திருவிளையாடலைக் காட்டினான். அப்போதும் சுக‌ந்தி முன்னர் மாதிரியே அதே துல‌ங்க‌லைக் காட்டினாள்.

அதுவும் சில‌நாட்க‌ளில் இவ‌னின் ஆக்கினை தாங்காம‌ல், 'உங்க‌ளுக்கு என்ரை உட‌ம்புதானே வேண்டும்' என்று சொல்லிவிட்டு ஆடைக‌ளை எல்லாம் கடகடவென்று க‌ளைந்துவிட்டு நிர்வாண‌மாய்க் கிடப்பாள். என்ன செய்தாலும், த‌ன் கண்ணை மூடாது, விழிக‌ளால் வெறித்த‌ப‌டி இவ‌னின் அசைவுகளை அவதானித்தபடியே இருப்பாள். இவ‌னுக்கு கோயில்க‌ளில் நாக்கை நீட்டிய‌ப‌டி கையில் சூலாயுத‌ங்க‌ளோடு நிற்கும் அம்ம‌ன் சிலைதான் அந்த‌ நேர‌த்தில் சுகந்தியைப் பார்க்கும்போது நினைவுக்கு வ‌ரும்.

சுக‌ந்தி க‌ன‌டாவிற்கு வ‌ந்து ஆறேழு மாத‌ங்க‌ள் இருக்கும். ஒருநாள்,  இவ‌ன் வேலை செய்துகொண்டிருந்த‌போது இவனது செல்லுக்குச் சுக‌ந்தியிட‌மிருந்து ஓர் அழைப்பு வ‌ந்த‌து. 'உங்க‌ளோடு கொஞ்ச‌ம் க‌தைக்க‌வேண்டும்' என்று சொல்லிவிட்டு, 'என‌க்கு டிவோர்ஸ் வேண்டும். என‌க்குக் க‌ன‌டா பிடிக்கவில்லை. நான் திரும்பிப் போக‌ப் போகின்றேன்' என்றாள். இவ‌னுக்கு மேல்த‌ள‌த்தில் ஓடிக்கொண்டிருந்த‌ மெஷின் த‌ன் த‌லையில் விழுந்த‌மாதிரி இருந்த‌து. அரைநாள் லீவு எடுத்துக்கொண்டு வீட்டை அர‌க்க‌ப் ப‌ர‌க்க‌ ஓடிவ‌ந்தான். சுக‌ந்தி, தான் ஒருவ‌ரை இல‌ங்கையில் காத‌லித்த‌தாக‌வும், வீட்டில் ஒருவ‌ருக்கும் அந்த‌ப் பெடிய‌னைப் பிடிக்காத‌தால்தான் இவ‌னைத் திரும‌ண‌ம் செய்ய‌ச் ச‌ம்ம‌தித்தாக‌வும் கூறினாள். 'அப்ப‌டியெனில் ஏன் என்னை விருப்பமில்லாமல் கலியாணஞ் செய்த‌னீர்?' என‌ இவ‌ன் திரும்பிக் கேட்டான். 'உங்க‌ளைத் திரும‌ண‌ம் செய்யும்போது எல்லாவ‌ற்றையும் ம‌ற‌ந்துவிட‌லாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் என்னால் முடிய‌வில்லை. எப்போதும் அவ‌ன் நினைப்பே இருக்கிற‌து. அவ‌ன் அள‌வுக்கு என்னை ஒருவராலும் நேசிக்க‌ முடியாது' என்றாள் உறுதியாய். 'உங்க‌ளின் நாசமாய்ப்போன காதலுக்கு, நானா ப‌லிக்கடா ஆனேன்' என‌ இவ‌ன் கோப‌த்தில் சுகந்தியைப் பார்த்துக் க‌த்தினான். அந்த நேர‌த்திலும் இவ‌னுக்குள் ஓர் எண்ண‌ம் ஓடிய‌து. 'அப்ப‌டியெனில் நீர் என்னைக் க‌லியாண‌ங்க‌ட்டும்போது வேர்ஜின் இல்லையா?' எனக் கேட்டான். 'இப்போது தானே எங்க‌ளுக்குள் எல்லாமே முடிந்துவிட்ட‌து. அதைய‌றிந்து நீங்கள் என்ன‌ செய்ய‌ப் போகின்றீர்க‌ள்?' என்றாள் சுகந்தி.

இதெல்லாம் ந‌ட‌ந்து ஒரு வார‌த்தில் சுக‌ந்தி க‌ன‌டாவிலிருந்த‌ த‌ன் பெரிய‌ம்மா வீட்டுக்குப் போய்விட்டாள். சுக‌ந்தி போகும்போது த‌ன் வாழ்வையும் எடுத்துக்கொண்டு போய்விட்டாள் என்ற‌வாறு இவ‌ன் க‌வ‌லைப்ப‌ட்டான். உற‌வுக‌ள் ம‌ட்டுமில்லை ந‌ண்ப‌ர்க‌ளும் கூட‌, 'ஒரு பொம்பிளைப் பிள்ளை இல‌ங்கையில் இருந்து வ‌ந்து ஆறேழு மாத‌ங்க‌ளில் விட்டு விட்டுப் போகின்றாள் என்றால் இவ‌னில்தான் ஏதோ பிழையிருக்கிற‌து' என‌ இவ‌ன் காதுப‌ட‌வே க‌தைக்க‌த் தொட‌ங்கினார்க‌ள். இவ‌னுக்கு இதையெல்லாம் கேட்க‌ அவ‌மான‌ம் அவ‌மான‌மாய் இருந்த‌து. ம‌ன‌ம் ஆறுத‌ல‌டைவ‌த‌ற்காக‌வேனும் சுக‌ந்தியைப் பார்த்து நான்கு வார்த்தை தூச‌ண‌த்தோடு திட்ட‌லாம் என்றாலும் அத‌ற்கும் ம‌ன‌ம் விட‌வில்லை. சுக‌ந்தி இவ‌னுக்கு என்ன‌ த‌வ‌றைச் செய்தாள்? அவ‌ள் ஒருவ‌னை ம‌ன‌தார‌ விரும்பியிருக்கிறாள் என்ப‌தை விட‌ வேறெதுவும் செய்ய‌வில்லையே. 'நானுந்தானே ஒருகால‌த்தில் பிலிப்பைன்காரியைக் காத‌லித்திருக்கின்றேன். என்னால் பிலிப்பைன்காரியைப் பிரிந்து வ‌ர‌முடிந்த‌ மாதிரி சுக‌ந்தியால் அவ‌ள் காத‌லித்த‌வ‌னை விட்டு வ‌ர‌முடிய‌வில்லை அவ்வ‌ள‌வு தான் வித்தியாச‌ம்' என‌ நினைத்துக்கொண்டான்.

ஆனால் இவ‌னால் சுக‌ந்தியை அவ்வ‌ள‌வு எளிதாய் ம‌ற‌க்க‌ முடிய‌வில்லை. ம‌னைவி எங்கே என‌க் கேட்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் நினைவுப‌டுத்திய‌து ஒருபுற‌மிருந்தாலும் இவ‌ன‌ள‌வில் கூட‌ சுக‌ந்தியின் நினைவுக‌ளைத் தூக்கியெறிய‌ முடியாதிருந்த‌து. 'எல்லோருடைய‌ வாழ்விலும் ஒரு பெண் ம‌ற‌க்க‌முடியாத‌வ‌ள் ஆகிவிடுகின்றாள்' என‌ எங்கையோ ப‌டித்த‌து இவனுக்குள் நினைவில் இருந்த‌து. 'அவ்வாறு த‌ன் வாழ்வில் ம‌ற‌க்க‌ முடியாத‌ பெண் சுக‌ந்தி' என‌ எண்ணிக்கொண்டான். அவ‌ளுடைய‌ செல்ல‌ம் கொஞ்சும் ம‌ழ‌லைக்குர‌ல் மெஷின் ச‌த்த‌த்தை விட‌வும் இவ‌னுள் அதிக‌ம் ஒலிக்க‌த் தொட‌ங்கிய‌து. க‌ன‌டா வ‌ந்த‌ தொட‌க்க‌ நாளில் காலில் கொலுசு போட்டுக்கொண்டு சுக‌ந்தி திரிந்த‌ பொழுதுக‌ள், இருட்டிலும் ஒரு மின்மினியாய் ஒளிர்ந்து கொண்டிருந்த‌ அவ‌ள‌து மூக்குத்தி,  இடுப்பில் ஒரு பொட்டைப்போல‌ இருந்த‌ ம‌ச்ச‌மென‌ எல்லாமே இவ‌னை விடாது துர‌த்த‌த் தொட‌ங்கின‌. அவ்வ‌ப்போது மூளை விறைக்க‌த் தொட‌ங்கிய‌வ‌னாக‌ மாறிப் போக‌த் தொட‌ங்கினான். இர‌வில் நித்திரை ஒழுங்காய் வ‌ராது ப‌க‌லில் வேலை செய்ய‌வும் க‌ஷ்ட‌ப்ப‌ட‌த் தொட‌ங்கினான். இவ‌னின் த‌டுமாற்ற‌ங்க‌ளைக் க‌ண்டு வேலைத்த‌ள‌த்தில் நின்ற‌ ஒருத்த‌ன் தான் கொஞ்ச‌ம் ம‌ரிஜூவ‌னா பாவித்துப்பார் என‌ அறிமுக‌ப்ப‌டுத்தினான்.

முத‌லில் த‌ன் நினைவு த‌றிகெட்டும் அலைவ‌தை ஒழுங்காக்க‌ வேண்டும் என்று போதையைப் பாவித்த‌வ‌னுக்கு பிறகு அது இல்லாம‌ல் இருக்க‌முடியாது போல‌த் தோன்றியது. வேலைக்குப் போவ‌து ஒழுங்கில்லாது போக‌, கையில் காசும் இல்லாது கஷ்டப்படத் தொடங்கினான். நாலைந்து மாத‌ங்க‌ளில் சுக‌ந்தி விவாக‌ர‌த்துப் பெற்று திரும்ப‌வும் இல‌ங்கைக்கும் போய்விட்டாள். சுக‌ந்தி இனி அருகில் என்றும் இருக்க‌மாட்டாள் என்ற‌ நினைப்பு இவ‌னை இன்னும் அதிக‌ம் அலைக்க‌ழிக்க‌த் தொட‌ங்கிய‌து.


நான் அப்போதுதான் வின்ச‌ரில் நான்காண்டுக‌ள் ப‌டிப்ப‌தாய்ப் பாவ‌னை செய்துவிட்டு ரொறொண்டோவிற்குத் திரும்பி வ‌ந்திருந்தேன். வேலை எதுவும் கிடைக்காம‌ல் எல்லாத் திசைகளிலும் மனம் நொந்து அலைந்துகொண்டிருந்தேன். ஒரு பெப்ர‌வ‌ரி மாத‌த்திலிருந்து நான் காத‌லித்துக் கொண்டிருந்த‌வ‌ளும் என்னைப் பார்ப்ப‌தைத் த‌விர்த்துக் கொண்டிருந்தாள். என்ன‌ கார‌ண‌மென‌க் கேட்டு அவ‌ளுக்கு ஆக்கினை மேல் ஆக்கினை கொடுத்த‌போதுதான், ஒருநாள் அவ‌ளின் தோழி தொலைபேசியில் அழைத்து, '....... இன்னொருவ‌ரைக் காத‌லிக்க‌த் தொட‌ங்கியிருக்கிறாள். அவ‌ளை இனியும் தொட‌ர்புகொண்டு தயவு செய்து தொல்லை கொடுக்க‌வேண்டாம்' என்றாள். ஒழுங்கான‌ வேலை இல்லை, குளிர்க் கால‌நிலை என‌ எல்லாமே ம‌ன‌திற்கு இனம்புரியாத அழுத்த‌ம் கொடுத்துக்கொண்டிருக்க‌, இப்போது எல்லாமுமாய் இருந்த‌ அவ‌ளும் இல்லையென்ற‌போது எதையும் சிந்திக்க‌ முடியாத‌ள‌வுக்கு எனக்கு மூளை இறுக‌த் தொட‌ங்கிய‌து.

'.... யாரையோ காதலிக்கத் தொடங்கிவிட்டாள்' என்ற செய்தியை அறிந்த மூன்றாம் நாள், வேலை தேட‌ப் போகின்றேன் என‌ வீட்டில் கூறிவிட்டு ட‌வுன்ர‌வுணுக்குப் போனேன். காலையிலிருந்து வெளியே குளிருக்குள் அலைந்து, ச‌ட்டென்று ஒருக‌ண‌த்தில் இனி வீட்டுக்கு என்றைக்குமாய்த் திரும்புவ‌தில்லையென‌ முடிவு செய்தேன். யூனிய‌ன் ஸ்ரேசினில் 'கோ' ப‌ஸ்ஸை எடுத்து த‌மிழாக்க‌ள் அவ்வளவு திரியாத‌ ஒரு ந‌க‌ருக்குப் போனேன். அங்கே போய்ச் சேரும்போது இர‌வு ஒன்ப‌து ம‌ணியாகியிருக்கும். ஒவ்வொரு க‌டைக‌ளுக்கும் இடையில் இருந்த‌ இடைவெளியில் வீடுக‌ளைத் தொலைத்த ஒரு சில‌ர் ப‌டுத்திருப்ப‌து தெரிந்த‌து. ஒன்றிர‌ண்டு பேர் குளிரைப் புறக்கணித்துப் பாடிக் கொண்டுமிருந்தார்க‌ள். என்னால் குளிர் தாங்க‌ முடியாதிருந்த‌து. கதவுகள் சாத்தியிருந்த மூட‌ப்ப‌ட்ட‌ மொன்றிய‌ல் பாங்கிற்குள் ப‌டுப்ப‌த‌ற்காக‌ப் போனேன்.

முக‌ம் முழுதும் தாடி வள‌ர்ந்து நீண்ட‌ த‌லைமுடியுட‌ன் ஒருவ‌ர் காசு எடுக்கும் மெஷினடியில் ப‌டுத்திருந்தார்.  நான் வ‌ந்த‌ ச‌த்த‌ம் கேட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார். ச‌ட்டென்று எனக்கு க‌ட‌ந்த‌கால‌ம் மின்ன‌லாய் வெட்டிப் போன‌து.  இது ச‌ட‌கோப‌ன் அண்ணா. நான் வெஸ்ட் ஹில்லில் ப‌த்தாம் வ‌குப்பு ப‌டிக்கும்போது இவ‌ர் ப‌தின்மூன்றாம் த‌ர‌ம் ப‌டித்துக் கொண்டிருந்த‌வ‌ர். அவ‌ரின் க‌தை கூட‌ என‌க்குத் தெரியும். பின்னாளில் சுகந்தியோ யாரையோ க‌லியாண‌ங்க‌ட்டி அந்த‌ப் பெண் அவ‌ரை விட்டு இல‌ங்கைக்குப் போன‌துவ‌ரை அறிந்து வைத்திருந்தேன். ஆனால் ச‌ட‌கோப‌ன் அண்ணாவை இப்ப‌டியான‌ நிலையில் ச‌ந்திப்பேன் என‌ நினைத்தும் பார்க்க‌வில்லை. அவ‌ரின் க‌தையை அறிந்த‌போது கூட, 'ஒரு பெட்டைக்காய் இப்ப‌டி யாரும் த‌ம் வாழ்வைத் தொலைப்பார்களா?' என‌ என் நண்ப‌ன் ந‌க்க‌ல‌டித்த‌தும் நினைவுக்கு வ‌ந்த‌து. ஆனால் ச‌ட‌கோப‌ன் அண்ணாவிற்கு என்னை நினைவில் இல்லை. அவ‌ர் யாரோ பாங் மெஷினில் காசு எடுக்க‌ வ‌ந்திருக்கின்றார் என‌ நினைத்திருக்கின்றார். 'Can you buy a coffee for me?' என‌க் கேட்டார். அவரின் கோலமே அவர் வீட்டை விட்டு எப்பவோ ஓடிவந்து விட்டார் என்பதைச் சொல்லியது. என‌க்கு என்ன‌ செய்வ‌தென்று தெரிய‌வில்லை. இனி வீட்டை என்றுமே திரும்பிப் போவ‌தில்லை என‌ முடிவு செய்த‌வ‌னுக்கு அடுத்து என்ன‌ செய்வ‌தென்று ஒரே குழ‌ப்பாய் இருந்த‌து. முத‌லில் ச‌ட‌கோப‌ன் அண்ணாவிற்கு கோப்பி வாங்கிக்கொடுப்போம் என‌ செக‌ண்ட் க‌ப்பில் கோப்பி ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு, அவரைத் திரும்பிப் பார்க்காது ந‌ட‌க்க‌த் தொட‌ங்கினேன்.

வெளியே இப்போது ப‌னி கொட்ட‌த் தொட‌ங்கியிருந்த‌து. இலைக‌ளில்லாத‌ ம‌ர‌ங்க‌ள் அங்கும் இங்குமாய்த் தெரிந்த‌ன. நான் அணிந்திருந்த‌ க‌றுப்புக் குளிர‌ங்கியின் மேல் ப‌னி விழுந்து க‌ரைந்து கொண்டிருந்த‌து. அட‌க்க‌ப்ப‌ட்ட‌ எல்லா உண‌ர்வுக‌ளும் ம‌டைதிற‌ந்தாற் போல‌ எனக்கு க‌ண்ணீர் வ‌ர‌த்தொட‌ங்கியிருந்த‌து. எதற்காய் அழுதுகொண்டிருக்கின்றேன் எனவும் தெரியவில்லை. நான் கண்ணீரைக் க‌வ‌னிக்காம‌ல் ந‌ட‌ந்து போய்க் கொண்டிருந்தேன். உத‌டுக‌ளில் விழுந்த‌ ப‌னி கண்ணீரோடு சேர்ந்து உவ‌ர்ப்ப‌து போல‌த் தோன்றிய‌து.

மனம் விட்டு அழ‌ அழ‌ எல்லாம் வெளிப்ப‌து போல‌த் தோன்றிய‌து. ப‌தினாறு வ‌ய‌தில் ஒருவ‌ரைக் காத‌லித்து அது தொலைந்துபோன‌போது சாவ‌த‌ற்கு மாடியில் இருந்து குதிக்க‌ முய‌ற்சித்த‌து நினைவில் வ‌ந்த‌து. அடுத்த‌ முறை க‌ச்சித‌மாய் த‌ற்கொலையைச் செய்ய‌வேண்டும் என‌ நினைத்துக்கொண்டிருந்த‌ போது, என் ந‌ண்ப‌ன் ஒருவன் என்ன காரணத்திற்காகவோ, நான் முயற்சித்த நான்காம் நாள் த‌ற்கொலை செய்திருந்தான்.  இப்போது இன்னொரு காத‌லில் தோற்று வீடே வேண்டாம் என‌ தீர்மானித்து வீதிக்கு வ‌ந்த‌போது ச‌ட‌கோப‌ன் அண்ணாவை இந்த‌ நிலையில் சந்திக்க வேண்டியிருந்தது. என் ஒவ்வொரு காத‌ல் தோல்வியின் பொருட்டும், நான் ப‌லியாவ‌த‌ற்கு முன் யாரோ என‌க்காய்த் த‌ம் வாழ்வைப் ப‌லி கொடுக்கின்றார்க‌ளோ என்ற‌ யோச‌னை எனக்குள் ஓடிய‌து.

ச‌ட‌கோப‌ன் அண்ணாவையும், என் ந‌ண்ப‌னையும் நினைத்து நெஞ்சு ஒருக‌ண‌ம் ந‌டுங்கி விதிர்விதிர்த்த‌து. நான் அப்போது பால‌மொன்றைக் க‌ட‌க்க‌ வேண்டியிருந்த‌து. கீழே ந‌தி உறைந்தும் உறையாத‌மாதிரி ஓடிக்கொண்டிருந்த‌து. அதற்குள் குதித்துவிடுவேனோ என்று என‌க்கே என்னில் நம்பிக்கை இல்லாது இருந்த‌து. ப‌ஸ்சொன்று எதிர்த்திசையில் வ‌ந்து கொண்டிருந்த‌து. உட‌னேயே ஓடிப்போய் அதற்குள் ஏறிக்கொண்டேன். வீட்டை திரும்பிப் போய்ச் சேர‌ ந‌ள்ளிர‌வு ப‌ன்னிர‌ண்ட‌ரை ம‌ணியாகிவிட்ட‌து. அம்மா நித்திரை கொள்ளாது என‌க்காய்க் காத்துக்கொண்டிருந்தார். 'இவ்வ‌ள‌வு நேர‌மும் எங்கே போயிருந்தாய்?' எனக் கேட்டார். 'ச‌ட‌கோப‌ன் அண்ணை வீட்டை போயிருந்தேன்' என்றேன். 'ச‌ட‌கோப‌னா, அவ‌ன் யார்?' என்று அம்மா என்னிடம் திரும்பிக் கேட்க‌வில்லை.
...........................................

ஓர் அநாம‌தேய‌த் தீவு by Yi Mun-Yol

Thursday, October 06, 2011

-வாசிப்பு-

கொரிய‌ எழுத்தாள‌ரான‌ ஜி முன்-யோல் (Yi Mun-Yol) எழுதிய‌ 'ஓர் அநாம‌தேய‌த் தீவு' (An Anonymous Island) சிறுக‌தை அண்மையில் நியூயோர்க்க‌ர் இத‌ழில் வெளிவ‌ந்திருக்கின்ற‌து. இதுவே நியூயோர்க்க‌ரில் வெளிவ‌ந்த‌ முத‌லாவ‌து கொரிய‌க் க‌தை என்கிறார்க‌ள்.  ஜி முன்-யோல் 1948ம் ஆண்டு சியோலில் பிற‌ந்த‌வ‌ர்.

'ஓர் அநாம‌தேய‌த் தீவு' க‌தை, ஆணொருவ‌ர் தொலைக்காட்சியைப் பார்த்து இன்றைய‌ இளைஞ‌ர்க‌ள் எல்லாம் கெட்டுப் போய்விட்டார்க‌ள் என்று அங்க‌லாய்ப்ப‌துட‌ன் தொட‌ங்குகின்ற‌து. கிள‌ப்பில் ந‌ட‌ன‌மாடும் இளைஞ‌ர்க‌ளைக் கூட‌,  'ந‌ட‌ன‌மாடுப‌வ‌ர்க‌ள்' என்று கூறாது தொலைக்காட்சி 'உட‌ல்க‌ள் உர‌சுப‌வ‌ர்க‌ள்' என‌ப் புதுப்பெய‌ர் சூட்டி விம‌ர்சிக்கின்ற‌து. ஆணும்((க‌ண‌வ‌ர்), தொலைக்காட்சியும் இப்பெண்ணுக்கு ப‌ழைய‌ நினைவுக‌ள் சில‌வ‌ற்றைக் கிள‌றிவிடுகின்ற‌ன‌.

சில‌ கால‌த்திற்கு முன், இப்பெண் ஆசிரிய‌த்தொழில் பார்ப்ப‌த‌ற்காய் ந‌க‌ர‌த்தை விட்டொதுங்கிய‌ ஒரு தொலைதூர‌ ம‌லைக்கிராம‌த்திற்குச் செல்கின்றார். அக்கிராம‌த்திற்குச் சென்றிற‌ங்கும்போது ஒரு க‌டைக்கார‌ர், அழுக்கான‌ ஆடையுட‌னும் தாறுமாறான‌ த‌லைம‌யிருட‌னும் இருக்கும் ஒருவ‌னைத் திட்டிக் கொண்டேயிருக்கின்றார். அவ‌ன் அதைப் ப‌ற்றிக் க‌வ‌லைப்ப‌டாது எதுவும் பேசாது த‌ன்பாட்டில் இருக்கின்றான்.  இப்பெண், தான் இங்குள்ள‌ பாட‌சாலைக்கு புதிய‌ ஆசிரிய‌ராக‌ வ‌ந்திருக்கின்றேன் என்கின்றார். கிராம‌ம் ஓர் ஒதுக்குப்புற‌த்தில் இருக்கின்ற‌தென்றால் ம‌றுப‌க்க‌ம் பாட‌சாலையும் இன்னும் மோச‌மான‌ நிலையில் இருக்கிற‌து. ஆசிரிய‌த் தொழிலில் ஒன்றிப்போகும் இப்பெண், அந்த‌த் த‌றுத‌லை இளைஞ‌ன் எவ்வித‌ வேலையும் செய்யாம‌ல், த‌ங்குவ‌த‌ற்கு ஓர் ஒழுங்கான‌ வீடும் இல்லாம‌லும் வாழ்ந்து கொண்டிருப்ப‌தைக் காண்கிறார். ஆனால் அவ‌னுக்கு மூன்று நேர‌மும் சாப்பாடும், த‌ங்கிப் ப‌டுப்ப‌த‌ற்கு இட‌ங்க‌ளும் அந்த‌ ஊரில் கிடைத்துக்கொண்டிருப்ப‌துதான் இவ‌ருக்கு இன்னும் ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கின்ற‌து.  எந்த‌ வீட்டுக்குச் சாப்பாடு வேண்டும் என்று போனாலும் அங்கிருக்கும் பெண்க‌ள் அவ‌னுக்கு ம‌ன‌முவ‌ந்து உண‌வு ப‌ரிமாறுகின்றார்க‌ள். த‌டை எதுவும் கூறாம‌ல் ஆண்க‌ளும் அவ‌னைத் த‌ங்க‌ள் வீட்டுக்குள் அனும‌திக்கின்ற‌ன‌ர்.

நாட்க‌ள் செல்ல‌ச் செல்ல‌ ஓர் உண்மையை இந்த‌ ஆசிரிய‌ர் க‌ண்டுகொள்கின்றார். இக்கிராம‌ம் முழுதும் ஒரேயொரு இன‌க்குழு (Clan) ம‌ட்டுமே இருக்கின்ற‌து. ஆக‌ எல்லோருக்கும் எல்லோருமே உற‌வின‌ர்க‌ளாக‌வோ, தெரிந்த‌வ‌ர்க‌ளாக‌வோ இருக்கின்றார்க‌ள். இந்த‌ இளைஞ‌ன் ம‌ட்டுமே வெளியில் இருந்து வ‌ந்த‌வ‌னாக‌ இருக்கின்றான். அப்ப‌டியெனில் எப்ப‌டி இவனை இவ‌ர்க‌ள் ஏற்றுக்கொண்டார்க‌ள்? எத‌ற்காய் ம‌ன‌ங்கோணாம‌ல் மூன்று வேளையும் உண‌வு ப‌ரிமாறுகின்றார்க‌ள்?

இந்த‌ இளைஞ‌னுக்கும் அந்த‌ ஊரில் இருக்கும் அநேக‌ பெண்க‌ளுக்கும் இடையில் இர‌க‌சிய‌(?) உற‌வு இருக்கின்ற‌து.  சில‌ பெண்க‌ளுக்குப் பிற‌க்கும் குழ‌ந்தைக‌ள் கூட‌ அவ‌னின் சாய‌லுட‌ன் இருப்ப‌தாய் ஊர்ப்பெண்க‌ள் த‌ங்க‌ளுக்குள் கிசுகிசுத்தும் கொள்கின்றார்க‌ள். அவ‌னிட‌ம் எழுத‌ப்ப‌டாத‌ ஒரு கொள்கை இருக்கின்ற‌து. அநேக‌மாய் ம‌த்திய‌ வ‌ய‌தில் இருக்கும் பெண்க‌ளோடே உற‌வு கொள்கின்ற‌வ‌னாக‌வும், ஒரு முறை உற‌வு கொண்ட‌ பெண்க‌ளிட‌ம் மீண்டும் சென்று அவ‌ர்க‌ளை சிக்க‌லில் மாட்டிவிடாம‌லும் இருக்கின்றான். இப்போது இந்த‌ ஆசிரிய‌ருக்கு அவ‌ன் இங்கே இருப்ப‌த‌ற்கான‌ அரைவாசிக்கார‌ண‌ம் புரிந்துவிடுகின்ற‌து; பெண்க‌ள் எத‌ற்காக‌ அவ‌னைத் த‌ங்க‌ளுக்கு அருகாமையில் வைத்துக் கொள்ள‌ விரும்புகிறார்க‌ள் என்ப‌தை.  ஆனால் அவ‌ன் இவ்வாறு த‌ம் பெண்க‌ளுட‌ன் உற‌வு கொள்கின்றான் என்று தெரிந்தும் ஆண்க‌ள் ஏன் அவ‌னை அடித்துத் துர‌த்தாம‌ல் த‌ங்க‌ள் கிராம‌த்திற்குள் வைத்திருக்கின்றார்க‌ள் என்ப‌தைத்தான் இந்த‌ ஆசிரிய‌ரால் புரிந்துகொள்ள‌ முடியாதிருக்கின்ற‌து.

இந்த‌ ஆசிரிய‌ர் ப‌டிக்கும் கால‌த்திலேயே ஒருவ‌ரைக் காத‌லிக்கின்றார். திரும‌ண‌ நிச்ச‌யார்த்த‌ம் முடிந்திருக்கும் பொழுதில் காத‌ல‌னுக்கு விய‌ட்னாமில் யுத்த‌ம் செய்வ‌த‌ற்கான‌ அழைப்பு வ‌ருகின்ற‌து. ஒருமுறை இவ‌ரின் காத‌லன் விடுமுறையில் இவ‌ரைப் பார்க்க‌ இந்த‌ ம‌லைக்கிராம‌த்திற்கு வ‌ருவ‌தாய்க் க‌டித‌ம் எழுதுகின்றார். காத‌ல‌ன் வ‌ந்திற‌ங்க‌வேண்டிய‌ அந்த‌க் கிராம‌த்திற்கான‌ க‌டைசிப் பேரூந்தும் வ‌ந்து போய்விட்ட‌து. இந்த‌ப் பெண் ப‌ஸ் நிலைய‌த்தில் காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துட‌ன் த‌ன் வீட்டுக்குத் திரும்புகின்றார். ம‌ழை பொழிய‌த்தொட‌ங்குகின்ற‌து.  கிடைக்காத‌ தாப‌ம் ம‌ன‌திற்குள் பெருக‌த் தொட‌ங்குகிற‌து.

ஓரிட‌த்தில் ம‌ழைக்காய் ஒதுங்கும்போது ஓருட‌ல் த‌ன்னை இழுத்து அணைப்ப‌தைக் காண்கிறார். ஆசிரிய‌ர் த‌ன் எதிர்ப்பைக் காட்டுகின்றார். யாரென‌ முக‌த்தைப் பார்க்கும்போது அது அந்த‌ த‌றுத‌லை இளைஞனாக‌ இருப்ப‌தைக் காண்கின்றார். 'நீ என்னைத் துர‌த்தாதே, உன‌து உட‌ல் இன்னும் கொதித்துக் கொண்டிருப்ப‌தை என்னால் உண‌ர‌முடிகின்ற‌து. நீ யாரையோ எதிர்ப்பார்த்து அவ‌ர் வ‌ர‌வில்லையென்ற‌ ஏமாற்ற‌த்துட‌ன் இருப்ப‌தையும் நான் அறிவேன்' என்கின்றான். இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் இடையில் உட‌லுற‌வு நிக‌ழ்கிற‌து. இப்போது நினைத்துப் பார்த்தால், 'அந்த‌ முய‌க்க‌ம் நினைவில் நிற்க‌க்கூடிய‌ ம‌கிழ்ச்சி த‌ரும் விட‌ய‌மாக‌ இல்லாவிட்டாலும், அவ‌ன் என்னை வ‌ற்புறுத்திப் புண‌ர‌வில்லை; அந்த‌ நேர‌த்தில் அது என‌க்கும் தேவையாக‌ இருந்த‌து' என‌ இப்பெண் நினைத்துக் கொள்கின்றார். இந்த‌ உற‌வு நிக‌ழ்ந்து முடிந்த‌பின் இப்பெண் இவன் த‌ன் உற‌வைப் ப‌ற்றிக் கிராம‌த்த‌வ‌ர்க‌ளிட‌ம் கூறிவிடுவானோ என்று அஞ்சுகின்றார். அவ‌ன் வேறு எவ‌ருக்கும் இவ‌ர்களின் உற‌வைச் சொல்லாத‌தைப் போல‌, பிற‌கு ஒருமுறை கூட‌ இந்த‌ ஆசிரிய‌ரைத் தேடி மீண்டும் உற‌வுக்காய் வ‌ர‌வும் இல்லை.

இப்போது இந்த‌ ஆசிரிய‌ருக்கு, யார் எது கேட்டாலும் அவ‌ன் வாய் திற‌ந்து பேசாது ம‌வுன‌மாய் இருப்ப‌த‌ன் கார‌ண‌ம் விள‌ங்குகின்ற‌து. அவ‌ன் த‌ன‌து இர‌க‌சிய‌ங்க‌ளை யாருக்கும் சொல்ல‌ விரும்புப‌வ‌னும் இல்லை, யாரையும் காட்டிக் கொடுப்ப‌வ‌னும் இல்லை. இறுதியில் இந்த‌ இளைஞ‌னை அந்த‌ ஊர் ஆண்க‌ள் ஏன் ச‌கித்துக் கொள்கின்றார்க‌ள் என்ப‌தற்கான‌ கார‌ண‌மும் தெரிகிற‌து. இந்த‌க் கிராம‌ம் முழுதும் ஒரேயொரு இன‌க்குழு  ம‌ட்டும் இருப்ப‌தால், ஒரு பெண் வேறு ஆணைத் தேடிப் போனால் அது உட‌னே கிராம‌த்திற்குத் தெரிந்துவிடும்; தேவையில்லாத‌ சிக்க‌ல்க‌ள் உற‌வுக‌ளுக்குள் ஏற்ப‌ட்டுவிடும்.  ம‌ற்ற‌க் கார‌ண‌ம், இவ்வ‌ள‌வு அல‌ங்கோல‌மான‌ ஒருவ‌னைத் தேடி ஒரு பெண் போகின்றாள் என்றால், அப்பெண்ணின் க‌ண‌வ‌ன் பாலிய‌ல் விட‌ய‌த்தில் எவ்வ‌ள‌வு செய‌ல‌ற்ற‌வ‌னாக‌ இருக்கின்றான் என்ப‌து விள‌ங்கும். ஆக‌ இந்த‌ விட‌ய‌த்தை பொதுவில் வெளிப்ப‌டுத்த‌ ஆண்க‌ள் ஒருபோதும் விரும்புவ‌தில்லை; எனெனில் பிற‌கு அவ‌ர்க‌ளின் ம‌திப்புச் ச‌மூக‌த்தில் இல்லாம‌ற் போய்விடும் (அதாவ‌து இந்த‌ த‌றுத‌லையிட‌மே உன‌து ம‌னைவி போகின்றாள் என்றால் உன‌து பெறும‌தி தான் என்ன‌?' என‌ பிற‌ர் கேள்விக‌ளால் துளைத்துவிடுவார்க‌ள்). ஆக‌ இந்த‌க்காரண‌ங்க‌ள்தான் ஆண்க‌ளும் அந்த‌ இளைஞ‌னை விரும்பியோ விரும்பாம‌லோ ஏற்றுக்கொள்கின்றார்க‌ள்.

இறுதியில் இந்த‌ ஆசிரிய‌ர் த‌ன் காத‌ல‌னை ம‌ண‌முடிப்ப‌த‌ற்காய் இக்கிராம‌த்தை விட்டு ந‌க‌ர‌த்திற்குத் திரும்புகின்றார். இவ‌ர் போகும்போது, புதிய‌ ஓர் ஆசிரியை ஊருக்குள் வ‌ருகின்றார். இவ‌ர் கிராம‌த்திற்கு முத‌ற்த‌ட‌வை வ‌ந்த‌போது எப்ப‌டி அந்த‌ இளைஞ‌னைக் க‌ண்டு முக‌ஞ்சுழித்தாரோ அப்ப‌டியே இந்த‌ப் புதிய‌ ஆசிரியையும் அவ‌னின் த‌றுத‌லைக் கோல‌ங்க‌ண்டு முக‌ஞ்சுழிக்கின்றார். அவ‌னைப் ப‌ற்றி தான் அறிந்த‌ எல்லா விட‌ய‌ங்க‌ளையும் இவ‌ருக்குக் கூறிவிடுவோமா என‌ இந்த‌ ஆசிரிய‌ர் நினைக்கின்றார். இறுதியில் அவ‌ராக‌வே அவ‌ருக்குரிய‌ தேர்வைப் பொறுத்து அவ‌னை அறிந்துகொள்ள‌ட்டுமென‌ நினைத்து ஒன்றும் கூறாம‌ல் இந்த‌ ஆசிரிய‌ர் கிராம‌த்தை விட்டுப் போகின்றார். அவ‌ன் ஓர் அர‌ச‌னைப் போல‌ புன்ன‌கைத்து ஆசிரிய‌ருக்கு விடைகொடுக்கின்றான். அந்த ஊரில் அவ‌ன் ஓர் 'அநாம‌தேய‌த் தீவாக‌'  என்றும் இருப்பான் என்ப‌தாய்க் க‌தை முடியும்.
..........

ஹருக்கி முரகாமியின் 'பூனைகளின் நகரம்'

Monday, September 26, 2011

-வாசிப்பு: Town of Cats by Haruki Murakami-

ஹ‌ருக்கி முரகாமியின் புதிய‌ சிறுக‌தையான‌ 'பூனைக‌ளின் ந‌க‌ர‌ம்' (Town of Cats), ஒரு த‌ந்தையிற்கும் ம‌க‌னிற்கும் இடையினான‌ உற‌வையும் வில‌க‌லையும், விடை காண‌முடியா சில‌ கேள்விக‌ளையும் முன்வைக்கிற‌து. மிக‌ ஏழ்மையில் வாழ்ந்த‌ த‌க‌ப்ப‌ன் த‌ன் ம‌க‌னையும் ஏழ்மை தெரிந்து வாழ‌வேண்டும் போல‌ வ‌ள‌ர்க்கின்றார். த‌க‌ப்ப‌ன் ஒரு ஜ‌ப்பான் தொலைக்காட்சி நிறுவ‌ன‌த்திற்கு, அவ‌ர்க‌ளின் வாடிக்கையாள‌ரின் வீடுக‌ளுக்குச் சென்று சேவைக்கான‌ ப‌ண‌த்தை சேக‌ரிக்கும் தொழிலைச் செய்கின்றார். எல்லோரும் விடுமுறையில் இருக்கும் ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் கூட‌ வீடுக‌ளைத் த‌ட்டி ப‌ண‌த்தை அற‌விடுகின்றார். ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் பாட‌சாலை இல்லாத‌தாலும், சிறுவ‌ன் பிற‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளிலே தாய் இற‌ந்துவிட்ட‌தால் வீட்டில் ஒருவ‌ரும் இல்லையென்ற‌ப‌டியாலும், ம‌க‌னையும் ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் த‌ன் வேலைக்குத் த‌க‌ப்ப‌ன் கூட்டிச்செல்கின்றார்.

த‌ன் வ‌ய‌தொத்த‌ சிறுவ‌ர்க‌ள் எல்லாம் ஞாயிறுக‌ளில் குதூக‌ல‌மாய்க் க‌ழிக்க‌ தான் ம‌ட்டும் இப்ப‌டித் த‌ந்தையோடு அலைய‌வேண்டியிருக்கிற‌தே என‌ இச்சிறுவ‌ன் வ‌ருந்துகின்றான். வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌த் த‌ந்தை த‌ன்னை ஒருவ‌கையில் த‌ன் தொழிலுக்குப் பாவிக்கின்றார் என‌வும் இச்சிறுவ‌ன் எண்ணிக்கொள்கின்றான். எனெனில் வீடுக‌ளைத் த‌ட்டும்போது, சிறுவ‌னை முன்னேவிடும்போது ப‌ண‌ம் கொடுக்காது சும்மா சாட்டுச் சொல்ப‌வ‌ர்க‌ள் கூட‌ குறுகுறுப்புட‌ன் உரிய ப‌ண‌த்தைக் கொடுத்துவிடுகின்றார்க‌ள். த‌ந்தையுட‌ன் இனியும் ஞாயிறுக‌ளில் வ‌ர‌ப்போவ‌தில்லையென‌ ப‌தினொரு வ‌ய‌தில் ம‌கன் ம‌றுத்துக் கூறுகின்றார். அப்ப‌டி வ‌ர‌வில்லையெனில் உன‌க்கு உண‌வுமில்லை, த‌ங்குவ‌த‌ற்கு வீடுமில்லை என‌த் த‌ந்தை கூறுகின்றார். இந்த‌ விட‌ய‌ம் அந்த‌ச் சிறுவ‌னின் ஆசிரிய‌ருக்குத் தெரிந்து அவ‌ர் த‌ந்தைக்கும் ம‌க‌னுக்கும் இடையில் ச‌ம‌ர‌ச‌ம் செய்கின்றார். ஆனால் அன்று தொட‌ங்கிய‌ தகப்பனிற்கும் மகனிற்குமான விரிச‌ல் வாழ்வில் என்றுமே ஒட்ட‌முடியாத‌ சம்ப‌வ‌மாக‌ ஆகிவிடுகின்றது.

வ‌ருட‌ங்க‌ள் பல உருண்டோடிவிட்ட‌ன. இப்போது த‌க‌ப்ப‌ன் டோக்கியோவை விட்டுத் தொலைவில் வயதானவர்களைப் ப‌ராம‌ரிக்கும் விடுதியொன்றில் இருக்கின்றார். அவ‌ர் அங்கே போய்ச் சேர்ந்த‌த‌ன்பின் ஒன்றிர‌ண்டு த‌ட‌வைக‌ள்தான் ம‌க‌ன் போய்ப் பார்த்திருக்கின்றார். ந‌ல்ல‌ வேலையில் இருக்கும் ம‌க‌ன் ஒரு ஞாயிற்றுக் கிழ‌மை த‌ன் த‌ந்தையைப் பார்க்க‌ப் போக‌லாம் என்று வெளிக்கிடுகின்றார். ரெயில் ப‌ய‌ண‌த்தில் ஒரு ஜேர்ம‌னிய‌ நூலை வாசிக்க‌த் தொட‌ங்குகின்றார். அந்த‌ நாவ‌லின் பெய‌ரே 'பூனைக‌ளின் ந‌க‌ர‌ம்'.

Haruki Murakami
ஒரு ந‌க‌ரில் ஒருவ‌ன் இருக்கின்றான். அவ‌ன் ப‌ய‌ண‌ம் செய்ய‌ விரும்புகின்ற‌வ‌னாக‌வும், எந்த‌த் திட்ட‌மிட‌ல் இல்லாம‌ல் இட‌ங்க‌ளுக்குப் ப‌ய‌ணித்துக் கொண்டிருக்கின்ற‌வ‌னாக‌வும் இருக்கின்றான். ஒருமுறை ரெயினில் போகும்போது, ஒரு அழ‌கான‌ இட‌த்தைக் கண்டு அந்த‌ இட‌த்தில் இற‌ங்கிவிடுகின்றான். இவ‌ன் ம‌ட்டுமே அந்த‌ புகைவ‌ண்டி நிலைய‌த்தில் இற‌ங்கி ந‌ட‌ந்து போகின்றான். அந்த‌ ந‌க‌ர‌த்தில் எவ‌ர‌து ந‌ட‌மாட்ட‌ங்க‌ளையும் காண‌முடிய‌வில்லை. ஏதோ பெரிய‌ அழிவு ந‌ட‌ந்து ம‌க்க‌ள் எல்லாம் இட‌ம்பெய‌ர்ந்து போய்விட்டார்க‌ள் என‌ நினைத்துக் கொள்கின்றான். ம‌னித‌ர்க‌ள் ந‌ட‌மாட்ட‌மில்லாத‌தால் அடுத்த‌ இரெயினில் ஏறிப்போகலாம் எனவும் நினைத்துக்கொள்கின்றான். இரவாகின்ற‌து. அந்த‌ ந‌க‌ர‌த்துக்குப் பூனைக‌ள் வெவ்வேறு இடங்க‌ளிலிருந்து வ‌ர‌த் தொட‌ங்குகின்ற‌ன‌. அவை ம‌னித‌ர்களைப் போல் மூட‌ப்ப‌ட்ட‌ க‌டைக‌ளைத் திற‌க்கின்ற‌ன‌. வியாபார‌ம் செய்கின்ற‌ன‌. உண‌வுக்க‌டைக‌ளில் உண‌வ‌ருந்துகின்ற‌ன‌. தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. ந‌க‌ர‌ம் இப்போது க‌ளைக‌ட்டி விட்ட‌து. பூனைக‌ளின் ந‌க‌ர‌த்தை அந்த‌ ந‌க‌ரிலிருக்கும் ம‌ணிக்கூட்டு கோபுரத்துக்கு மேலே ஏறியிருந்து இவ‌ன் வேடிக்கை பார்க்கின்றான். இவ்வாறான‌ பூனைக‌ளின் ந‌க‌ரைப் பார்த்து விய‌ப்ப‌டைந்து அடுத்த‌ நாளும் த‌ங்கி நின்று பூனைக‌ளை நடவடிக்கைகளை இலயித்துப் பார்க்கின்றான்.

மூன்றாவ‌து நாளும் இப்ப‌டி ம‌ணிக்கூட்டுக் கோபுர‌த்தில் இருந்து வேடிக்கை பார்க்கும்போது அத‌ன் கீழே இருந்து பெரிதாகச் ச‌த்த‌ம் வ‌ர‌, அங்கே கூடும் பூனைக‌ள் ம‌னித‌வாச‌னை வ‌ருவ‌தை அறிந்து ம‌ணிக்கூட்டு கோபுர‌த்தின் உச்சிக்கு ஏறி வ‌ருகின்ற‌ன‌. அவை ப‌டை ப‌டையாக‌ வ‌ருவ‌தைக் க‌ண்டு இவ‌ன்,த‌ன்னை அவை தாக்க‌ப்போகின்ற‌தென‌ அஞ்சி ஒடுங்கிய‌ப‌டி இருக்கின்றான். ஆனால் பூனைக‌ளால் அவனைக் காண முடியவில்லை. ம‌னித‌வாச‌னை வ‌ருகின்ற‌து என்று ம‌ட்டும் அவை தங்களுக்குள் கூறிக்கொண்டு போகின்ற‌ன‌. இப்ப‌டிப் பூனைக‌ளைச் ச‌ந்தேக‌ப்ப‌ட‌வைத்த‌தால் இனியும் இங்கு இருந்தால் ஆப‌த்து என‌ அடுத்த‌ நாள் வ‌ரும் ரெயினில் ஏறிப் போக‌த் த‌யாராக‌ ஸ்ரேச‌னுக்குப் போகின்றான். அவ‌னைக் க‌ட‌ந்து ம‌தியமும் மாலையும் ரெயின் போகின்ற‌து. ஆனால் அவ‌னுக்காக‌ ஸ்ரெச‌னில் ரெயின் நிற்க‌வேயில்லை. அந்த‌ ரெயினை ஓட்டும் எஞ்சினிய‌ரைக் கூட‌ அவ‌னால் அவ‌தானிக்க‌ முடிகிற‌து; ஆனால் அவன் அங்கே நிற்ப‌தாக‌வோ அல்ல‌து அங்கே ஓரு ஸ்ரேச‌ன் இருப்ப‌தாக‌வோ எதையும் க‌ண‌க்கெடுக்காது ஒவ்வொரு முறையும் ரெயின் இவனைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கின்ற‌து. இறுதியில் அவ‌ன் முற்றுமுழுதாக‌த் தான் 'தொலைந்துவிட்டேன்' என்பதை உண‌ர்கிறான். மேலும் இது பூனைக‌ளின் ந‌க‌ர‌ம‌ல்ல‌. இது ஒருவ‌ர் த‌ன்னைத்தானே தொலைத்துக் கொள்வதற்கான ந‌க‌ர‌மே என்ப‌தைக் க‌ண்ட‌டைகிறான். இனி எந்த‌ ரெயினும் நிற்க‌ப்போவ‌தில்லை. தான் ஏற்க‌ன‌வே வ‌ந்திருந்த‌ உல‌கிற்கு த‌ன்னால் ஒருபோதும் இனி என்றைக்குமாய்த் திரும்ப‌முடியாது என்ப‌தை உண‌ர்கின்ற‌தாய் அந்த‌ ஜேர்ம‌னிய‌க் க‌தை முடியும்.

இக்க‌தையை வாசித்த‌ப‌டி த‌ந்தை வ‌சிக்கும் ந‌க‌ருக்கு ம‌க‌ன் போகின்றான். இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாய்த் த‌ந்தையைப் பார்க்க‌வில்லை. த‌ந்தையோ அவ‌னை யாரென்று கேட்கின்றார். 'உங்க‌ள் ம‌க‌னைத் தெரிய‌வில்லையா? என‌ இவ‌ர் கேட்க‌, 'என‌க்கு ஒரு ம‌க‌னும் இல்லை' என்கின்றார் தந்தை. 'நான் உங்க‌ள் ம‌க‌னில்லை என்றால், நான் யார்?' என்கின்றார் இவர். த‌ந்தையோ 'You were nothing, you are nothing, and you will be nothing.” என்கிறார். த‌ந்தை இப்ப‌டிக் கூறிய‌வுட‌ன் இவ‌ருக்குத் தான் வாசித்த 'பூனைக‌ளின் ந‌கர‌த்தில்' கதாபாத்திரமாய் வ‌ந்த‌ தொலைந்த‌ ம‌னித‌னைப் போல‌ ஆகிவிட்டேன் போல‌த் தோன்றுகின்ற‌து.

இதுவ‌ரை ஓர் இர‌க‌சிய‌மாக‌ தனக்குள் வைத்திருந்து, த‌ந்தையிட‌ம் கேட்காத‌ கேள்வியைக் கேட்கின்றார், 'நான் உங்க‌ள் சொந்த‌ ம‌க‌ன் இல்லையா?'. எனெனில் உண்மையில் ம‌க‌னிற்குத் தெரியும், த‌ன‌து தாய் தான் பிற‌ந்த‌வுட‌ன் இற‌க்க‌வில்லை. அவ‌ர் கிட்ட‌த்த‌ட்ட‌ ம‌க‌ன் பிறந்து ஒன்ற‌ரை வ‌ருட‌ங்க‌ளுக்குப் பின்தான் இற‌ந்திருக்கின்றார் என்று. ஆனால் எப்போது த‌ன் தாயைப் ப‌ற்றிக் கேட்டாலும் த‌ந்தை தாயைப் ப‌ற்றிக் க‌தைப்ப‌தை ஒருபோதும் விரும்புவ‌தில்லை என்ப‌தையும் மகன் நினைவில் கொள்கிறார். ம‌க‌னின் நினைவுக‌ளில் தாய்...
Tengo fundamentally disbelieved his father’s story. He knew that his mother hadn’t died a few months after he was born. In his only memory of her, he was a year and a half old and she was standing by his crib in the arms of a man other than his father. His mother took off her blouse, dropped the straps of her slip, and let the man who was not his father suck on her breasts. Tengo slept beside them, his breathing audible. But, at the same time, he was not asleep. He was watching his mother.

உண்மையை அறிவ‌த‌ற்கு இதுதான் த‌ருண‌ம் என‌ த‌ந்தையிட‌ம் தொட‌ர்ந்து ம‌க‌ன் கேள்விக‌ளைக் கேட்கின்றார். த‌ந்தையோ சாம‌ர்த்திய‌மாய் இவ‌ரின் கேள்விக‌ளைத் த‌விர்த்த‌ப‌டி வேறெதுவோ பேசியப‌டி இருக்கின்ரார். த‌ந்தையிற்கு மகன் 'பூனைக‌ளின் ந‌க‌ர‌ம்' க‌தையை வாசித்துக் காட்டுகின்றார். இறுதியில் 'ஒரு வெற்றிட‌ம் எப்போதும் வெற்றிட‌மாய் இருப்ப‌தில்லை, அது எதையாவ‌து கொண்டு தன்னைத்தானே நிரப்பிக் கொள்கிறது, அப்ப‌டித்தான் தானும்' என்கின்றார் த‌க‌ப்ப‌ன். ஆனால் தான் உண்மையான‌ ப‌யோலாஜிக்க‌ல் ம‌க‌னா என்பத‌ற்கான‌ ப‌திலை த‌க‌ப்ப‌ன் மகனுக்கு கூற‌வேயில்லை. உன்னால் 'ஒரு விள‌க்க‌மில்லாது ஒன்றை விள‌ங்கிக்கொள்ள‌ முடியாவிட்டால், ஒரு விள‌க்கம் இருந்தால் கூட‌ அதை உன்னால் விள‌ங்கிக் கொள்ள முடியாது' என்பதை ம‌ட்டும் அடிக்க‌டி கூறும் த‌ந்தையின் வாச‌க‌த்தோடு ம‌க‌ன் விடைபெற க‌தை முடிகின்ற‌து.

ஹ‌ருக்கி முராகமி இந்த‌க்க‌தை, எவ்வ‌ள‌வு சிக்க‌லில்லாத‌ வ‌ச‌ன‌ங்க‌ளுட‌ன் உள்ம‌ன‌தின் ஆழ‌ங்க‌ளுக்குச் செல்ல‌ முடியும் என்ப‌த‌ற்கு ஓர் உதாரண‌ம். அவ‌ரின் மொழியின் அழ‌கிற்கு இந்த‌ப் ப‌குதியை வாசித்துப் பார்க்க‌ வேண்டும்.
While math was like a magnificent imaginary building for Tengo, literature was a vast magical forest. Math stretched infinitely upward toward the heavens, but stories spread out before him, their sturdy roots stretching deep into the earth. In this forest there were no maps, no doorways. As Tengo got older, the forest of story began to exert an even stronger pull on his heart than the world of math. Of course, reading novels was just another form of escape—as soon as he closed the book, he had to come back to the real world. But at some point he noticed that returning to reality from the world of a novel was not as devastating a blow as returning from the world of math. Why was that? After much thought, he reached a conclusion. No matter how clear things might become in the forest of story, there was never a clear-cut solution, as there was in math. The role of a story was, in the broadest terms, to transpose a problem into another form. Depending on the nature and the direction of the problem, a solution might be suggested in the narrative. Tengo would return to the real world with that suggestion in hand. It was like a piece of paper bearing the indecipherable text of a magic spell. It served no immediate practical purpose, but it contained a possibility.

தந்தைகளுக்கும் மகன்களுக்குமான உறவென்பது எப்போதும் விசித்திரமானதே. அன்பு காட்ட விரும்புகின்ற தருணங்களில் கூட விலத்தி நிற்கும் பொழுதுகளே பலருக்குச் சாத்தியமாகின்றது. அண்மையில் ஓர் ஆய்வின்படி, ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் பெற்றோருக்கு ஒரு பிள்ளை மட்டும் அதிகப் பிடித்த பிள்ளையாகி விடுகின்றது என்பது இயல்பு எனக் கூறுகின்றார்கள் (இறுதியாய் வந்த Timeஇல் இது பற்றிய கட்டுரை உள்ளது). சிலவேளைகளில் வளர்ந்த மகனுக்கும் தகப்பனுக்கும் இருக்கின்ற விலகல் கூட இயல்போ எனக்கூட எமக்குத் தோன்றக்கூடும். காஃப்கா தன் தந்தைக்கு எழுதி அனுப்பாத கடிதமும் இந்தக்கணத்தில் நினைவுக்கு வருகின்றது.
......................

நியூயோர்க்கரில் வந்த கதை
Timeல் வந்த கட்டுரையோடு சம்பந்தப்பட்ட விடீயோ
ஓவியம்: நன்றி  The New Yorker

துயில் - 02

Monday, September 05, 2011

(இதன் சுருக்கிய வடிவம் 'தீராநதி' செப்ரெம்பர் இதழில் வெளியாகியது)
3.
எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் 'யாம‌ம்' நாவ‌லுக்கு விம‌ர்ச‌ன‌ம் எழுதிய‌போது, 'யாம‌ம்' கால‌னித்துவ‌த்தை ஒரு எதிர்ம‌றையாக‌ ம‌ட்டும் பார்க்கின்ற‌து என்ற‌ குறிப்பை எழுதியிருந்தேன். ஆனால் 'துயிலில்' கால‌னித்துவ‌த்தின் இருப‌க்க‌ங்க‌ளும் மிக‌ அவ‌தான‌மாக‌ முன் வைக்க‌ப்ப‌டுகின்ற‌து என்ப‌தைக் குறிப்பிட்டாக‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு தொக்காட்டை அண்டியிருக்கும் ஒரு பூசாரி (அவ‌ரே வைத்திய‌ராக‌வும் அம்ம‌க்க‌ளுக்கு இருக்கின்றார்) ம‌ன‌ம் பிற‌ழ்ந்த‌ ஆண்/பெண்/குழ‌ந்தைக‌ளைச் ச‌ங்கிலியால் க‌ட்டி தான் அவ‌ர்க‌ளின் நோய்க‌ளைத் தீர்க்கின்றேன் என‌ ச‌வுக்கால் தின‌ம் அடிக்கின்றார். இத‌னை அவ‌தானிக்கும் ஏல‌ன்ப‌வ‌ர் இது மிருக‌த்த‌ன‌மான‌து என‌ வ‌ருந்துகின்றார். ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌த்தை இப்ப‌டியே தொட‌ர‌விடாது நிறுத்த‌வேண்டும் என‌ பாதிரியாரிட‌ம் முறையிடும்போது, நாங்க‌ளும்(வெள்ளைய‌ர்க‌ளும்) அப்ப‌டித்தானே க‌ட‌ந்த‌கால‌ங்க‌ளில் நோயாளிக‌ளுக்கு ம‌ருத்துவ‌ம் செய்திருக்கின்றோம் என‌ப் பாத‌ர் குறிப்பிடுகின்றார். எப்போதும் கீழைத்தேய‌ ம‌க்க‌ளைக் 'காட்டுமிராண்டிக‌ளாய்' விம‌ர்சிக்கும் வெள்ளையின‌த்த‌வ‌ர்க‌ளின் தோன்ற‌ல்க‌ள்தான் மிக‌க்கொடூர‌மான‌ சிலுவைப்போர்க‌ளை நிக‌ழ்த்தினார்க‌ள் என்ப‌தையும், தேவால‌ய‌ங்க‌ளுக்கு எதிரான‌ க‌ருத்துரைத்த‌ பெண்க‌ளைச் சூனிய‌க்காரிக‌ளாய் உயிரோடு எரித்த‌வ‌ர்க‌ளும் என்ப‌தையும் நாம் ம‌ற‌ந்துவிட‌முடியாது அல்ல‌வா?

அதுதான் இங்கே நினைவூட்ட‌ப்ப‌டுகின்ற‌து. அதேபோன்று இந்திய‌(த‌மிழ்)ம‌ன‌ங்க‌ளில் அக‌ற்ற‌முடியாக் க‌ச‌டாய் ஒளிந்திருக்கும் சாதி ப‌ற்றியும் துயிலில் நுட்ப‌மாக‌ப் பேச‌ப்ப‌டுகின்ற‌து. ஏல‌ன் ப‌வ‌ர் த‌ன்னிட‌ம் வ‌ரும் நோயாளிக‌ளை ஒரே மாதிரியாய் ந‌ட‌த்துவ‌து தொக்காடு கிராம‌த்திலிருக்கும் உய‌ர்சாதியின‌ரால் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட‌ முடியாதிருக்கின்ற‌து. ஏல‌ன் ப‌வ‌ரோடு வேலை செய்யும் சீபாளியின் குடும்ப‌ம் கிறிஸ்த‌வ‌ம‌த‌த்திற்கு மாறிய‌பின்ன‌ர் கூட‌, சீபாளி எல்லோரும் வ‌ழிப‌டும் தேவால‌ய‌த்தினுள் உள்ளே வழிப‌ட‌ அனும‌திக்க‌ப்ப‌டாம‌ல்தான் இருக்கின்றார். இந்த‌ச் சாதியின் அர‌சிய‌லை அங்கே மேற்கிலிருந்து வ‌ரும் பாதிரியார் கூட‌ ம‌த‌ம் மாற்ற ந‌ட்வ‌டிக்கைக்காய் அவ‌ர்க‌ளைத் த‌ந்திர‌மாய்ப் பிரித்து வைத்தே பாவிக்கின்றார் என்ப‌தையும் நாம் க‌வ‌னித்தாக வேண்டும். ஆனால் மானுட‌த்தின் மீதான உண்மையான‌ அக்க‌றையுள்ள‌ ஏல‌ன் ப‌வ‌ரால் அதை ஒருபோதும் ஏறுக்கொள்ள‌ முடிய‌வில்லை. இவ்வாறு எல்லா ம‌க்களையும் சாதி அடிப்ப‌டையில் பகுக்காது, ம‌னித‌த்தின் அடிப்ப‌டையில் ஒன்றாக‌ப் பாவித்த‌தே இறுதியில் ஏல‌ன் ப‌வ‌ரின் உயிரையும் ப‌றித்திருக்கின்ற‌து என்ப‌தை நுட்ப‌மாய் எஸ்.ரா நாவ‌லில் எழுதியிருக்கின்றார்.

ஊர் ம‌க்க‌ள், த‌ங்க‌ளுக்கு சீக்கு நோயைப் ப‌ர‌ப்புகின்றார் என்ற‌ குற்ற‌ச்சாட்டின்பேரில் ஒரு பாலிய‌ல் தொழில் செய்யும் பெண்ணை உயிரோடு அடித்துக்கொல்லும் முய‌ற்சியில் ஈடுப‌டுவ‌தை ஏல‌ன் ப‌வ‌ர் த‌டுத்து நிறுத்துகின்றார். அந்நிகழ்வே அதுவ‌ரை அவ‌ரை த‌ங்க‌ளில் ஒருவ‌ராக‌ நினைத்த‌ ஊர்ம‌க்க‌ளிட‌மிருந்து ஏலன் ப‌வ‌ரை வில‌த்தி வைக்கின்ற‌து ம‌ட்டுமின்றி, க‌த்தோலிக்க‌ச் ச‌பையிலிருந்தும் அவ‌ரை நீக்க‌ச் சொல்லியும் க‌ட்ட‌ளையும் இட‌ப்ப‌டுகின்ற‌து. ஒரு முக்கிய‌மான‌ பாத‌ரால் ஏல‌ன் ப‌வ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌தால் வ‌ங்காள‌த்திலிருந்து ஒரு உய‌ர்ம‌ட்ட‌க்குழு இச்ச‌ம்ப‌வ‌த்தை தீர‌ விசாரிக்க‌ தொக்காட்டிற்கு அனுப்ப‌ப்ப‌டுகின்ற‌து. அக்குழு இறுதியில் என்ன‌ முடிவை எடுத்த‌து என்ப‌தும், ஏல‌ன் ப‌வ‌ரின் இன்னொரு க‌னவான‌ க‌ல்வி க‌ற்க‌ வாய்ப்பேயில்லாத‌ அம்ம‌க்க‌ளுக்கு ஒரு பாட‌சாலை அமைத்துக்கொடுத்த‌ல் நிக‌ழ்ந்த‌தா என்ப‌தையும் வாசிப்ப‌வ‌ர்க‌ளுக்காய் விட்டுவிட‌லாம்.

தொக்காடு தேவால‌ய‌த்தின் திருவிழாவிற்காய் ப‌ல‌ர் ப‌ல்வேறு திசைக‌ளில் இருந்து வ‌ந்துகொண்டிருக்கின்றார்க‌ள். தொக்காடு தேவால‌ய‌த்திற்கென‌ ஒரு ஜ‌தீக‌ம் உண்டு. நோயாளிக‌ள் த‌த்த‌ம் இட‌ங்க‌ளிலிருந்து கால்ந‌டையாக‌வே ந‌ட‌ந்து திருவிழாவிற்கு வ‌ந்துசேர்ந்தால் அவ‌ர்க‌ளின் தீர்க்க‌முடியாப் பிணிக‌ள் எல்லாம் தீர்ந்துவிடும் என்ப‌து. ஆக‌வே ப‌ல்வேறு வித‌மான‌ நோயாளிக‌ள் திருவிழாவிற்காய் ந‌ட‌ந்து வ‌ந்துகொண்டிருக்கின்றார்க‌ள். அவ்வாறு வ‌ந்து சேரும் நோயாளிக‌ள் இடையில் த‌ங்கிச்செல்லும் இட‌மாக‌ எட்டூர் இருக்கின்ற‌து. அங்கே 'அக்கா' என‌ எல்லோராலும் அன்பாக‌ அழைக்க‌ப்ப‌டும் பெண்ம‌ணி எல்லா நோயாளிக‌ளையும் ப‌ரிவாக‌க் க‌வனிக்கின்றார்; அவ‌ர்க‌ளுக்கு உண‌வூட்டுகின்றார், ஆறாத‌ காய‌ங்க‌ளைச் சுத்த‌ம் செய்கின்றார்; எல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ நோயாளிக‌ள் ம‌ன‌ந்திற‌ந்து பேசுவ‌தை பொறுமையாக‌ இருந்து கேட்கின்றார். அக்கா ஒரு ம‌ருத்துவ‌ர‌ல்ல‌, ஆனால் நோயுற்ற‌வ‌ர்க‌ள் எல்லோரும் த‌ம‌து நோய்க‌ள் ப‌ற்றிப் பேச‌வும், த‌ம்மோடு பிற‌ர் ப‌ரிவோக‌ இருப்ப‌தையும் விரும்புகின்ற‌வ‌ர்க‌ள் என்கிற‌ நோயாளிக‌ளின் உள‌வியிய‌ல் ந‌ன்க‌றிந்த‌வ‌ர்.

பிணியின் பாதி தீர்வது, நோயாளிக்குத் தான் த‌னியாள் அல்ல‌ என்ப‌தை உண‌ர‌ச்செய்வ‌து, மிகுதிப் பாதியை கொடுக்கும் ம‌ருந்துக‌ள் தீர்க்கும் என்ப‌தை அக்கா ந‌ன்க‌றிந்த‌வ‌ர். ஆக‌வே நோயாளிக‌ளை ம‌ன‌ந்திற‌ந்து பேசும்போது அவ‌ர்க‌ள் ஏற்க‌ன‌வே த‌ம் வாழ்வில் செய்த‌ பாவ‌ங்க‌ளும் கூட‌த்தான் ஒரு நோயாக‌ கூட‌ இருந்து உறுத்திக்கொண்டிருக்கின்ற‌து என்ப‌தை அக்கா அவ‌ர்க‌ளுக்குப் புரிய‌ வைக்கின்றார். பாவ‌ங்க‌ளிலிருந்து விடுப‌ட‌ல் என்ப‌து நாம் பாவ‌ம் செய்த‌து யாரிட‌மோ அவ‌ர்க‌ளைத் தேடிச்சென்று எம‌து த‌வ‌றுக‌ளைக் கூறி ம‌ண்டியிடுவ‌துதான் என்கின்றார். அக்காவைத் தேடி தொழுநோயாளிக‌ள் ம‌ட்டுமின்றி ப‌ல்வேறு பிணிக‌ளோடு இருப்ப‌வ‌ர்க‌ளும் வ‌ருகின்றார்க‌ள். ஒருமுறை எப்போதும் போதையில் மித‌ந்த‌ப‌டி இருக்கும் ஒரு குடிகார‌னைச் ச‌ந்திக்கின்றார் அக்கா. ஆனால் அவ‌ன் த‌ன‌து அன்பு புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌தாலேயே குடியைக் கார‌ண‌ங்காட்டி எல்லோரையும் வெறுக்கின்றான் போன்ற‌ த‌ந்திர‌த்தைச் செய்கின்றான் என்ப‌தை அக்கா அவ‌னிட‌ம் க‌ண்டுபிடிக்கின்றார். தான் இதுவ‌ரை நுட்ப‌மாய் ம‌றைத்துவைத்திருந்த‌ உண்மையை அக்கா ச‌ட்டென்று க‌ண்டுபிடித்த‌தைக் குடிகார‌னால் தாங்க‌முடியாதிருக்கின்ற‌து. ஆக‌வே அக்காவை மூர்க்க‌மாய்த் தாக்குகின்றான். அதேபோன்று த‌ம‌து 50 வ‌ய‌துக‌ளில் வீட்டால் துர‌த்த‌ப‌ட்ட‌ 70 வ‌ய‌துக‌ளில் இருக்கும் இரு முதிய‌வ‌ர்க‌ளும் அக்காவைத் தேடி வ‌ருகின்றார்க‌ள். அவ‌ர்க‌ள் தாங்க‌ள் அக்கா செய்யும் ந‌ல்ல‌ப‌ணிக‌ளைக் கேள்விப்ப‌ட்டு அவ‌ருக்கு சில‌ நாட்க‌ள் உத‌வ வ‌ந்த‌தாக‌க் கூறுகின்றார். அக்கா நெகிழ்கின்றார். 50 வ‌ய‌துவ‌ரை தாங்க‌ள் வேலை, குடும்ப‌ம் என‌ ஒரு குறுகிய‌ வ‌ட்ட‌த்திற்குள் வாழ்ந்துகொண்டிருந்தோம், வீட்டிலிருந்து துர‌த்த‌ப்ப‌ட்ட‌பின் தான் உல‌க‌ம் எவ்வ‌ள‌வு விரிந்த‌து என்று தெரிகிற‌து என‌ச்சொல்லும் அம்முதிய‌வ‌ர்க‌ள் முதுமையிலும் வாழ்வு அழகுதானென‌க் கூறுகின்றன‌ர். இப்ப‌டி அக்காவின் எட்டூர் ம‌ண்ட‌ப‌த்திற்கு வ‌ருகின்ற‌ ப‌ல‌ரின் க‌தைக‌ள் கூற‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒவ்வொருவ‌ரின் க‌தைக‌ளும் ஏதோ ஒருவ‌கையில் ந‌ம்மைப் பாதிக்க‌ச் செய்கின்ற‌தோடு அவ‌ர்க‌ள் எம‌க்கு ஏற்க‌ன‌வே தெரிந்த‌ ந‌ம்மோடு உலாவுகின்ற‌ ம‌னித‌ர்க‌ள் போன்ற‌ நெருக்க‌த்தையும் வாசிக்கும் ந‌ம‌க்குள் ஏற்ப‌டுத்த‌வும் செய்கின்ற‌ன‌ர்.

4.
இவ்வாறு இருநூற்றாண்டுக‌ளில் நிக‌ழும் க‌தைக‌ள் வெவ்வேறு மாந்த‌ர்க‌ளினூடாக இந்நாவ‌லில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. தொக்காடு கிராம‌த்தில் எப்ப‌டி கிறிஸ்த‌வ‌ம் ப‌ர‌வுகின்ற‌து என்ப‌திலிருந்து, தொக்காடு தேவால‌ய‌ம் எவ்வாறு க‌ட்ட‌ப்ப‌ட்ட‌து என்ப‌து வ‌ரை நுண்ணிய‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளால் துயிலில் எழுத‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ஒவ்வொரு த‌னிம‌னித‌னும் தன் வாழ்வையும் தான் ச‌ந்தித்த‌ ம‌னித‌ர்க‌ளையும் ப‌ற்றியும் எழுத‌த்தொட‌ங்கினாலே அது எவ்வ‌ள‌வோ ப‌க்க‌ங்க‌ளுக்கு நீள‌க்கூடிய‌தாக‌ இருக்குமென்றால், இரு நூற்றாண்டுக‌ளுக்கு முன் எழுப்ப‌ப்ப‌ட்ட‌ தேவால‌ய‌த்தைப் ப‌ற்றிய‌ க‌ட‌ந்த‌கால‌த்தையும் நிக‌ழ்கால‌த்தையும் எழுத‌த்தொட‌ங்கினால் ஒருபோதுமே முடிவ‌டையாத‌ அள‌வுக்கு க‌தைக‌ள் என்றுமேந் நுரைத்துத் த‌தும்ப‌க் கூடிய‌ன‌தான். என‌வேதான் தொக்காடு தேவால‌ய‌த்தை ஒரு முக்கிய‌ மைய‌மாய் வைத்து எழுத‌ப்ப‌ட்ட‌ துயில் நாவ‌லும் அது கூறுகின்ற‌ க‌தைக‌ளை விட‌ சொல்ல‌ப்ப‌டாத‌ க‌தைக‌ளைத் த‌ன்ன‌க‌த்தில் உள்ள‌ட‌க்கியிருக்கின்ற‌து என்ப‌தை நாம் உய்த்துண‌ர்ந்து கொள்ள‌லாம். துயிலில் விட‌ப்ப‌ட்ட‌ இடைவெளிக‌ளைக் கொண்டு நாம் எம‌க்கான‌ க‌தைக‌ளைக் கூட‌ க‌ட்டியெழுப்பிக்கொள்ள‌லாம். உதார‌ண‌மாக‌ துயில் நாவ‌லில் வ‌ருகின்ற‌ முக்கிய‌ பாத்திர‌மான‌ அக்கா ஒரு குடிகார‌னால் தாக்க‌ப்ப‌ட்டு ம‌ய‌க்க‌ம‌டைவ‌தோடு இந்நாவ‌லிலிருந்து இல்லாம‌ற் போய்விடுகின்றார். ஆனால் அக்காவின் பாத்திர‌த்தை வாசிக்கும் ந‌ம‌க்கு, அந்த‌ அக்காவிட‌ம் ந‌ம‌க்குச் சொல்வ‌த‌ற்கு இன்னும் நிறைய‌க் க‌தைக‌ள் இருக்குமென்ப‌தை அறிவோம். அழ‌க‌ரின‌தோ, ஜ‌க்கியின‌தோ சிறுவய‌து அனுப‌வ‌ங்க‌ள் விரிவாக‌ச் சொல்ல‌ப்ப‌ட்ட‌துபோன்று அக்காவின‌து க‌ட‌ந்த‌கால‌ம் துயிலில் கூற‌ப்ப‌டாது விட‌ப்ப‌ட்டிருக்கும் இடைவெளியைக் கூட‌ நாம் ந‌ம‌க்குத் தெரிந்த‌ ஒரு அக்காவின் நினைவுக‌ளை ந‌ன‌விடைதோயச் செய்வ‌தாக‌க்கூட‌ மாற்றிக்கொள்ள‌லாம்.

19ம் நூற்றாண்டின் இறுதிப்ப‌குதியில் ஒரு பெண் அநியாய‌மாக‌ தொக்காடு தேவால‌ய‌ முன்ற‌லில் கொல்ல‌ப்ப‌டுகின்றார். அவ‌ரின் அதுவ‌ரை கால‌ச்சேவையை நினைவூட்டிக்கொண்டிருந்த‌ க‌ட்ட‌ட‌மும் பின்னாட்க‌ளில் அடையாள‌மின்றிப்போகின்ற‌து. ஆனால் அவர் எழுதிக்கொண்டிருந்த‌ க‌டித‌ங்க‌ளின் மூல‌ம் அவ‌ரின் நினைவுக‌ள் மீண்டும் தூசி த‌ட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌. க‌டித‌ம் ஒரு முக்கிய‌ ஆவ‌ண‌மாய் க‌ட‌ந்த‌கால‌ வ‌ர‌லாற்றை மீள‌க் க‌ட்டியெழுப்புகிற‌து. அதேபோன்று கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு நூற்றாண்டுக்குப் பின்னாலும் தொக்காடு தேவால‌ய‌ச் சூழ‌லில் கொலையொன்று நிக‌ழ்கின்ற‌து. ஆனால் சென்ற‌ நூற்றாண்டைப் போல‌ல்லாது, த‌ன‌க்குச் செய்ய‌ப்ப‌டும் அநியாய‌ம் க‌ண்டு பொங்கியெழுந்து ஒரு பெண்ணே அக்கொலையைச் செய்கின்றாள். ஒரு நூற்றாண்டு இடைவெளியில் கால‌ம் மாறிக்கொண்டிருப்ப‌தை இதைவிட‌ நுட்ப‌மாக‌ உண‌ர்த்தி விடமுடியுமா என்ன‌?

துயில் நாவ‌ல் நோய்மையை ம‌ட்டும் பேசாது வெவ்வேறுவித‌மான‌ ம‌ருத்துவ‌முறைக‌ள் ப‌ற்றியும் ஆழ‌ விவாதிக்கின்ற‌து. மேலைத்தேய‌ ம‌ருத்துவ‌ முறையில் தேர்ச்சி பெற்ற‌ ஏல‌ன் பவ‌ர், கீழைத்தேய‌ நாடுக‌ளில் த‌லைமுறை த‌லைமுறையாக‌ குறிப்பிட்ட‌ குடும்ப‌ங்க‌ளிடையே க‌ற்றுக்கொடுக்கப்ப‌டும் கீழைத்தேய‌ ம‌ருத்துவ‌ முறைக‌ளைப் ப‌ற்றி அறிய‌வும் ஆவ‌ல் உள்ள‌வ‌ராக‌ இருக்கின்றார். இம்ம‌ருத்துவ‌முறை இந்திய‌ ச‌மூக‌ங்க‌ளில் ஒதுக்க‌ப்ப‌ட்ட‌ சாதிக‌ளிடையே இருந்து வ‌ருவ‌தையும் அதனால் இவ‌ர்க‌ளிட‌ம் சிகிச்சை பெற‌ உய‌ர்சாதி ம‌க்க‌ள் விரும்புவ‌தில்லை என்ப‌தையும் அவ‌தானிக்கின்றார். மேலும் இந்திய‌ ம‌ருத்துவ‌முறைக‌ள், மேலைத்தேய‌ ம‌ருத்துவ‌த்தைப் போல‌ த‌னிப்ப‌ட்ட‌ நோயிற்கு ம‌ட்டும் சிகிச்சையைத் தேடுவ‌தை விடுத்து, அது முழுமனித‌னுக்குமான‌ உட‌ல்ந‌ல‌த்தைக் க‌வ‌ன‌த்தில் கொள்கின்ற‌து என்கின்ற‌ புரித‌லுக்கும் ஏல‌ன்ப‌வ‌ர் வ‌ருகின்றார். இய‌ற்கையோடு அதிக‌ம் வாழும் இந்திய‌ ம‌க்க‌ள் த‌ம‌து ம‌ருந்துக‌ளையும் இய‌ற்கை வ‌ள‌ங்க‌ளிலிருந்து பெற்றே த‌யாரிக்கின்றார்க‌ள் என்ப‌தையும், அவ்வாறு மேலைத்தேய‌ ம‌ருந்துக‌ள் த‌யாரிக்க‌ப்ப‌டுவ‌தில்லை என்கின்ற‌போது, துயிலில் வ‌ரும் உள்ளூர் ம‌ருத்துவ‌ர் அதை ந‌ம்ப‌முடியாத‌வ‌ராக‌ இருக்கின்றார் என்ப‌தும் குறிப்பிட‌ப்ப‌டுகின்ற‌து.

மேலும் துயில் நாவ‌லில் தொக்காடு தேவால‌ய‌த்தின் திருவிழா ப‌ற்றிய‌ வ‌ர்ண‌னைக‌ள் வித‌ந்து கூற‌க்கூடிய‌து. தேர்ந்த‌ ஒரு ஒளிப்ப‌திவாள‌ர் காட்சிப்ப‌டிம‌ங்க‌ளாக்குவ‌தைப் போன்ற‌ நேர்த்தியுட‌ன் திருவிழா நாட்க‌ள் எஸ்.ராவின் எழுத்தால் காட்சிப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. இன்னுஞ்சொல்ல‌ப்போனால் தேவால‌ய‌த்தின் உள்ளே நிக‌ழும் திருவிழாவைவிட‌, அத‌ன் சுற்றுச்சூழ‌லே அதிக‌ம் வ‌ர்ணிக்க‌ப்ப‌டுகின்ற‌து. ஒருவ‌கையில் பார்த்தால் இந்நாவ‌ல் விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளை முக்கிய‌ பாத்திர‌ங்க‌ளாக‌க் கொண்டே க‌ட்டியெழுப்ப‌ப்ப‌டுகின்ற‌து என‌க்கூட‌ச் சொல்ல‌லாம். ஓரு நிர‌ந்த‌ரமான‌ இருப்பில்லாது எப்போது அலைந்துகொண்டிருக்கும் அழ‌க‌ர், பாலிய‌ல் தொழில் செய்யும் ஜ‌க்கி ம‌ற்றும் டோலி, நோயாளிக‌ளைப் மிக‌க் க‌னிவுட‌ன் ப‌ராம‌ரித்து அனுப்பும் அக்கா, த‌ன‌க்கான எல்லா வ‌ச‌தி வாய்ப்புக்க‌ளையும் உத‌றிவிட்டு சேவை செய்வ‌த‌ற்கென‌ வ‌ரும் ஏல‌ன்ப‌வ‌ர் என‌ அனைவ‌ருமே விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளாக‌ இருக்கின்றார்க‌ள், அல்ல‌து விளிம்புநிலை மனித‌ர்களோடு சேர்ந்து வாழ‌ விரும்புகின்ற‌வ‌ர்க‌ளாக‌ இருக்கின்றார்க‌ள். மேலும் எஸ்.ராவின் அநேக‌ நாவ‌ல்க‌ளில் வ‌ருப‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள் இய‌ல்புக்கு அப்பால் சென்று த‌ங்க‌ளைப் ப‌ற்றி அல‌ட்டிக் கொள்வ‌துமில்லை. அவ‌ர்க‌ளின் தின‌வாழ்வென்ப‌தென்ப‌தே புற‌ நெருக்க‌டிப் பெருஞ்சுழிக‌ளுக்கு எதிராக‌த் துடுப்புப் போடுவ‌தாக‌ இருக்கும்போது உள்ம‌ன‌த் த‌ரிச‌ன‌ங்க‌ளுக்காய் நின்று நிதானிக்க‌வும் முடியாது. அந்த‌ இய‌ல்பு துயிலின் பாத்திர‌ங்க‌ளுக்கு இருப்ப‌தால் தான் நாவ‌ல் வாசிப்ப‌வ‌ர்க‌ளை உள்ளிழுத்துக் கொள்கிற‌து.

இந்நாவ‌லை வாசித்துக்கொண்டிருந்த‌போது காண‌க்கிடைத்த‌ சில‌ எதிர்ம‌றையான‌ புள்ளிகளையும் குறிப்பிட‌வேண்டும். ஒவ்வொரு அத்தியாய‌த்திலும் ஒரு சில‌ எழுத்துப் பிழைக‌ளென‌ நாவ‌ல் முழுதும் எழுத்துப்பிழைக‌ள் ம‌லிந்து கிட‌க்கின்ற‌ன‌. எஸ்.ராவின் 'உப‌பாண்ட‌வ‌ம்' வாசித்த‌ நாட்க‌ளிலிருந்து இதை அவ‌தானிக்கின்றேன் என்றாலும், இவ்வ‌ள‌வு க‌டும் உழைப்போடு எழுத‌ப்ப‌டும் ஒரு நாவ‌லில் இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளையும் க‌ளைய‌வேண்டுமென‌க் க‌றாராக‌ கூற‌வேண்டியிருக்கின்ற‌து. அதைவிட‌, சில‌வேளைக‌ளில் பாத்திர‌ங்க‌ளில் பெய‌ர்க‌ள் மாற்றி மாற்றி வ‌ந்திருக்கின்ற‌ன‌. உதார‌ண‌த்திற்கு ஜ‌க்கி தான் அவ‌ரின் த‌க‌ப்ப‌னோடு மிக‌வும் நெருக்க‌மாயிருக்கின்றார். ஆனால் சில‌ ப‌க்க‌ங்க‌ளைத் தாண்டிய‌பின் ஜ‌க்கியின் த‌ங்கையான‌ டோலிதான் த‌க‌ப்ப‌னுக்கு நெருக்க‌மாயிருக்கின்றார் என்ப‌துபோல‌ பெய‌ர் ஆள்மாறாட்ட‌ம் ந‌ட‌ந்திருக்கும். இவ்வாறான‌ விட‌ய‌ங்கள் வாசிப்ப‌வ‌ரை நிச்ச‌ய‌ம் குழ‌ப்ப‌வே செய்யும்.

எங்கோ தொலைவில் முற்றிலும் வேறுப‌ட்ட‌ ப‌ண்பாட்டுச் சூழலில் பிற‌ந்து இந்தியாவிற்கு சேவையாற்ற‌ வ‌ரும் ஏல‌ன் ப‌வ‌ர், த‌ன் துணையை விலத்திவிட்டுப் போவ‌த‌ற்கான‌ எத்த‌னையோ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் வாய்த்தும், த‌ன்னைப் ப‌ய‌ன்ப‌டுத்துகின்றான் க‌ண‌வ‌ன் என்கின்ற‌ புரித‌லோடு அழ‌க‌ரோடு அலையும் சின்ன‌ராணி, நோயாளிக‌ளை ஆற்றுப்ப‌டுத்த‌வும், அவ‌ர்க‌ளுக்கு விருந்த‌ளிப்ப‌துமே த‌ன் க‌டனென‌ அத‌ற்காய் த‌ன் வாழ்நாளை முற்றுமுழுதாக‌ செல‌வ‌ழிக்கின்ற‌ன‌ கொண்ட‌லு அக்கா...என‌ இந்நாவ‌லில் முக்கிய‌ பெண் பாத்திர‌ங்க‌ள் அனைத்துமே த‌ம் வாழ்வைப் பிற‌ருக்காய் அர்ப்ப‌ணித்து அதில் ஏதோ ஒருவ‌கையில் நிறைவைக் காண்ப‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள். த‌னிந‌ப‌ர் சார்ந்து எல்லாமே வ‌லியுறுத்த‌ப்ப‌டும் இன்றைய‌ உல‌க‌ ஒழுங்கில் மேற்குறித்த‌ பாத்திர‌ங்க‌ள் சில‌வேளைக‌ளில் விசித்திர‌ப் புதிர்க‌ளாக‌ வாசிப்ப‌வ‌ர்க‌ளுக்குத் தெரிய‌வும் கூடும். அத‌ன் நிமித்த‌ம் வ‌ரும் விய‌ப்பே, அண்மையில் வாசித்த‌வ‌ற்றில் 'துயிலை' ஒரு முக்கிய‌ நாவ‌லாக‌ வைத்துப் பார்க்க‌த் தோன்றுகின்ற‌தோ தெரிய‌வில்லை.

எழுதியது: ஆனி/2011
நன்றி: தீராநதி- புரட்டாதி/2011

எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் 'துயில்'

1.
நாம் எத்த‌னையோ இட‌ங்க‌ளுக்கு நம் வாழ்வில் ப‌ய‌ணித்திருப்போம். அவ்வ‌வ்விட‌ங்களின் இய‌ற்கையின‌தோ, க‌ட்டிட‌க்க‌லையின‌தோ அழ‌கைக் க‌ண்டு ம‌ன‌ஞ்சிலிர்த்து இர‌சித்துமிருப்போம். ஆனால் எப்போதாவ‌து நாம் நின்று இர‌சிக்கும் இட‌த்தின் நில‌விய‌லும் வாழ்விய‌லும் எவ்வாறு சில‌ தசாப்த‌ங்க‌ளுக்கோ, நூற்றாண்டுக‌ளுக்கு முன்னே இருந்திருக்கும் என்று யோசித்த‌துண்டா?  அவ்வாறு பிர‌பல்ய‌ம் வாய்ந்த‌ ஒரு தேவால‌ய‌த்தின் வ‌ர‌லாற்றையும், அத‌னோடு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளையும் விரிவாக‌ப் பேசுகின்ற‌ ஒரு நாவ‌ல்தான் எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் 'துயில்'.

இத்தேவால‌ய‌ம் பிற்கால‌த்தில் (அல்ல‌து நிக‌ழ்கால‌த்தில்) நோய்மையுற்ற‌வ‌ர்க‌ளுக்கு ந‌ம்பிக்கை த‌ரும் ஓரிட‌மாய்த் திக‌ழ்வ‌தால் நோய்மை ப‌ற்றியும் இந்நாவ‌லில் பேசப்ப‌டுகின்ற‌து. ஆக‌ ஒரு தேவால‌ய‌த்தின் வ‌ர‌லாற்றை ம‌ட்டுமின்றி நோய்மையுற்ற‌வ‌ர்க‌ளின‌தும், நோய் தீர்ப்ப‌வ‌ர்க‌ளின‌தும் உள‌விய‌லையும் பேசுவ‌தால் த‌மிழில் த‌வ‌ற‌விடாது வாசிக்க‌வேண்டிய‌ ஒரு நாவ‌லாகிவிடுகின்ற‌து 'துயில்'. தொக்காடு என்ற‌ தேவால‌ய‌மே இந்நாவ‌லில் வ‌ரும் அனைத்துப் பாத்திர‌ங்க‌ளையும் இணைக்கும் மைய‌ச் ச‌ர‌டாக‌ இருக்கிற‌து. தொக்காடு தேவால‌ய‌த்தின் திருவிழாவிற்குச் செல்வ‌த‌ற்கு த‌யாராகும் மாந்த‌ர்க‌ளோடு தொட‌ங்கும் நாவ‌ல், இறுதியில் தொக்காடு தேவால‌ய‌த்தின் தேர்த்திருவிழாவோடு நிறைவுபெறுகிற‌து. இந்த‌ இடைவெளியில் ஐநூறு ப‌க்க‌ங்க‌ளுக்கும் மேலாய் நீளும் நாவ‌லில் ப‌ல்வேறு திசைக‌ளில், ப‌ல்வேறு மாந்த‌ர்க‌ளினூடாக‌ க‌தைக‌ள் ந‌க‌ர்கின்றன‌ ம‌ட்டுமின்றி இருவேறு நூற்றாண்டுக‌ளுக்கும் அத்தியாய‌ங்க‌ள் மாறி மாறி அலையுறும்போது வாசிப்பு இன்னும் சுவார‌சிய‌மாகின்ற‌து.

தொக்காடு தேவால‌த் திருவிழாவில் க‌ட‌ற்க‌ன்னி ஷோ நட‌த்துவ‌த‌ற்காய் த‌ன் ம‌னைவி சின்ன‌ராணி ம‌ற்றும் ம‌க‌ள் செல்வியோடு புகைவ‌ண்டிக்காய் காத்திருக்கின்ற‌ அழ‌க‌ரோடு க‌தை ஆர‌ம்பிக்கின்ற‌து. தொலைவிட‌ங்க‌ளிலிருந்து தொக்காடு போகின்ற‌ அனைவ‌ரையும் இணைக்கின்ற‌தாய் இந்த‌ ரெயில் ப‌ய‌ண‌ம் இருக்கின்ற‌து. அந்த‌ ரெயில் முழுதும் அழ‌க‌ர் குடும்ப‌த்தோடு ப‌ல்வேறு பிணிகளால் பீடிக்க‌ப்ப‌ட்டு ச‌மூக‌த்தால் வில‌த்த‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌ர் ப‌ய‌ணிக்கின்ற‌ன‌ர். அழ‌க‌ருக்கு எப்ப‌டி தான் க‌ட‌ல்க‌ன்னி ஷோ திருவிழாவில் ந‌ட‌த்தி நிறைய‌ப் ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌லாம் என்கின்ற‌ க‌ன‌வு இருக்கின்ற‌தோ அதேபோன்றே இந்நோயாளிக‌ளும் இத்தேவால‌ய‌த்திற்குப் போவ‌தென்ப‌து த‌ம் பிணியை ஏதோவொரு வ‌கையில் தீர்க்கும் அல்ல‌து குறைக்கும் என்கின்ற‌ ந‌ம்பிக்கையைத் த‌ம் வ‌ச‌ம் வைத்திருப்ப‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள். நீளும் இந்த‌ ரெயில் ப‌ய‌ண‌த்தில் பிற‌கு தேவால‌ய‌த்திற்குக் காணிக்கை கொடுப்ப‌வ‌ர்க‌ளும் ஏறிக்கொள்கின்றார்க‌ள். கூட‌வே வெயிலும்/வெம்மையும் ஒரு பாத்திர‌மாய் எல்லா நிலைக‌ளிலும் வ‌ந்து கொண்டிருக்கின்ற‌து. எஸ்.ராம‌கிருஷ்ணனின் அநேக‌ படைப்புக்க‌ளில் வெயில் ஒரு முக்கிய‌ இட‌த்தை எடுத்திருப்ப‌தை அவ‌ர‌து நாவ‌ல்க‌ளை வாசிக்கும் நாம‌னைவ‌ரும் அறிவோம். வெயிலை இந்த‌ள‌வு விரிவாக‌வும் உக்கிர‌மாக‌வும் எஸ்.ராவைப் போல‌ வேறெந்த‌ப் ப‌டைப்பாளியும் த‌மிழில் எழுதியிருக்கமாட்டாரென‌வே ந‌ம்புகின்றேன். நாவ‌லின் பாத்திர‌ங்க‌ளினூடாக‌ வெயில் விப‌ரிக்க‌ப்ப‌டும்போது வாசிக்கும் ந‌ம் விழிகளிலும் விர‌ல்க‌ளிலும் வெம்மை ஏறுவ‌து போன்ற‌ உண‌ர்வைத் த‌விர்க்க‌வும் முடிவ‌தில்லை.

அழ‌க‌ரின் ம‌க‌ள் செல்வி இர‌யில் பெட்டியெங்கும் காற்றைப்போல‌ சுழித்துச் சுழித்து ஓடிக்கொண்டிருக்கின்றாள். நோயாளிக‌ள்/நோய‌ற்ற‌வ‌ர்க‌ள் என்ற‌ பாகுபாடில்லாது எல்லா ம‌னித‌ர்க‌ளோடும் ஒட்டிக்கொள்ளவும் அவ‌ள் செய்கின்றாள். அவ்வாறான‌ ஒரு பொழுதில் ஒரு தொழுநோயாளியால் செல்விக்கு க‌தையொன்று சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. தொக்காடு தேவால‌ய‌த்திற்கு அருகில் ம‌ர‌ங்க‌ளின் திருவிழா வ‌ருட‌ந்தோறும் ந‌டைபெறும் என‌வும், அத்திருவிழாவில் எல்லா இட‌ங்க‌ளிலிருந்தும் ம‌ர‌ங்க‌ள் சென்று அங்கே ஒன்று கூடுமென‌வும், தான் அந்த‌ திருவிழாவை த‌ன் சிறுவ‌ய‌தில் க‌ண்டிருக்கின்றேன் என‌வும் அந்த‌த் தொழுநோயாளி செல்விக்குக் க‌தை கூறுகின்றார். செல்வி இந்த‌க்க‌தையை எவ்வாறு எடுத்துக்கொள்கின்றார் என்ப‌தை விள‌ங்கிக்கொள்ள‌ நாம் துயிலில் இறுதி அத்தியாய‌ங்க‌ள் வ‌ரை காத்திருக்க‌ வேண்டும்.

நீளும் இந்த‌ ரெயில் ப‌ய‌ண‌த்தோடு அழ‌க‌ரின் சிறுவ‌ய‌துக் க‌தையும் கூற‌ப்ப‌டுகின்ற‌து. அழ‌க‌ர் த‌ன் தாயை சிறுவய‌திலேயே இழ‌ந்துவிடுகின்றார். அவ‌ரின் த‌ந்தையார் ஒரு தியேட்ட‌ரில் காவ‌லாளியாக‌ வேலை செய்கின்ற‌வ‌ராக‌ இருக்கின்றார். அழ‌க‌ரின் வீட்டில் ச‌மைய‌ல் ஒருபோதும் நிக‌ழ்வ‌தில்லை; அருகிலுள்ள‌ ஒரு சாப்பாட்டுக் க‌டையிலேயே மூன்று நேர‌மும் அழ‌க‌ர் சாப்பிட‌ த‌ந்தை ஏற்பாடு செய்திருக்கின்றார். குடிகார‌ராக‌வும் இருக்கும் அழ‌க‌ரின் த‌க‌ப்ப‌ன் தியேட்ட‌ரில் இர‌வுக்காட்சிக‌ள் முடிந்த‌வுட‌ன் அதிக‌வேளையில் அங்கேயே இர‌வில் உற‌ங்கிவிடுப‌வ‌ராக‌வும் இருக்கின்றார். த‌னியே வீட்டில் உற‌ங்கும் அழ‌க‌ருக்கு இர‌வு அச்ச‌மூட்டுவ‌தாக‌வே இருக்கின்ற‌து. ஒருநாள் இர‌வு அழ‌க‌ர் த‌ந்தை த‌ங்கும் தியேட்ட‌ருக்கு இர‌வில் போகின்றார். அங்கேயே உற‌ங்கிவிடும் அழ‌க‌ருக்கு, அவ்விர‌வில் த‌ன் த‌க‌ப்ப‌னாருக்கும் சாப்பாட்டுக்க‌டைக்கார‌ரின் ம‌னைவிக்கும் இருக்கும் இர‌க‌சிய‌ உறவு தெரிந்துவிடுகின்ற‌து. த‌க‌ப்ப‌னும் அப்பெண்ம‌ணியும் ச‌ல்லாபிக்கும் காட்சியையும் அழ‌க‌ர் க‌ண்டுவிடுகின்றார். அப்பெண்ம‌ணி அவ்விட‌த்தை விட்டு ந‌க‌ர்ந்த‌தும், த‌க‌ப்ப‌ன் அழ‌க‌ர் த‌ம்முற‌வைக் க‌ண்ட‌த‌ற்காய் அடித்து உதைக்கின்றார். அத‌ன் நிமித்த‌ம் கோப‌ம் கொள்ளும் அழ‌க‌ர் சாப்பாட்டுக்க‌டைக்கார‌ரின் வீட்டுக்குக் கல்லெறிகின்றார். இனியும் இங்கிருந்தால் த‌க‌ப்ப‌ன் த‌ன்னைக் கொல்லாம‌ல் விட‌மாட்டார் என‌ அஞ்சும் அழ‌க‌ர் ஊரைவிட்டு ஓடுகின்றார். அன்று தொட‌ங்கும் அழ‌க‌ரின் ஓட்ட‌ம் நாவ‌ல் முடியும்வ‌ரையில் ஓரிட‌த்தில் த‌ங்க‌முடியாத‌ வாழ்வின் ஓட்ட‌மாய்ப் ப‌டிம‌மாக்க‌ப்ப‌டுகின்ற‌து.

இவ்வாறாக‌ ஊரை விட்டோடும் அழ‌க‌ர் இன்னொரு ந‌க‌ர‌த்திலுள்ள‌ சாப்பாட்டுக் க‌டையில் வேலை செய்ய‌த் தொட‌ங்குகின்றார். அந்த‌ச் சாப்பாட்டுக்க‌டையும் த‌ன் வீழ்ச்சியைச் ச‌ந்திக்கும்பொழுதில் ஜ‌க்கி என்னும் பெண்ம‌ணியைச் ச‌ந்திக்கின்றார். அப்போது அழ‌க‌ருக்கு ப‌தினாறு வ‌ய‌து. த‌ன‌க்கு உத‌வி செய்ய‌ த‌ன்னோடு கூட‌ வ‌ந்துவிடுகின்றாயா என‌க் கேட்கும் ஜ‌க்கியோடு அழ‌க‌ர் போய்விடுகின்றார்.

ஜ‌க்கி, த‌ன‌து த‌ங்கை டோலி ம‌ற்றும் ப‌ல‌ பெண்க‌ளையும் இணைத்து பாலிய‌ல் தொழில் செய்கின்றார். அவ‌ர்க‌ளுக்கு வேண்டிய‌ எல்லா உத‌விக‌ளையும் செய்கின்ற‌வ‌ராக‌ இருக்கும் அழ‌க‌ருக்கு முத‌ன்முத‌லான‌ பாலிய‌ல் உற‌வும் அங்கிருக்கும் பெண்க‌ளில் ஒருவ‌ரோடு நிக‌ழ்கிற‌து. வாடிக்கையாள‌ரின் விருப்ப‌த் தேர்வாக‌ இருக்கும் ஜ‌க்கியின் த‌ங்கை டோலி ஒருநாள் காணாம‌ற்போக‌ ஜ‌க்கி ம‌ன‌ம் உடைந்து போகின்றார். இறுதியில் தான் இனித் தொழில் செய்ய‌ப்போவ‌தில்லையென‌ த‌ன்னிட‌ம் இருக்கும் பெண்க‌ளுக்குப் ப‌ண‌த்தைப் பிரித்துக் கொடுத்து அவ‌ர்க‌ளை அனுப்பிவிடுகின்றார். த‌ன் பூர்வீக‌ ஊர் போகும் ஜ‌க்கியோடும் தானும் வ‌ர‌ப்போகின்ற‌தாய் கூறும் அழ‌க‌ரை 'என்னோடு வ‌ந்தால் உன் வாழ்வு சீர‌ழிந்துவிடும் என்னைவிட்டுப் போய்விடு' என‌ ஜ‌க்கி அழ‌க‌ருக்கு அறிவுரைகூறி அனுப்பி வைக்கின்றார். அழ‌க‌ர், தான் முத‌ன் முத‌லில் உட‌லுறவு வைத்துக்கொண்ட‌ பெண்ணோடு சேர்ந்து ஊரூராய்ச்சென்று நாக‌க‌ன்னி ஷோ ந‌ட‌த்துகின்றார். ஒருநாள் அந்த‌ப்பெண்ணும் அழ‌க‌ரைக் கைவிட்டு விட்டு வேறு யாரோ ஒருவ‌ரோடு ஓடிவிடுகின்றார். இறுதியில் தான் செய்யும் வேலையை மாற்றிக் கூறி சின்ன‌ராணியைத் திரும‌ண‌ஞ் செய்கின்றார். திரும‌ணத்தின்பின்னே சின்ன‌ராணிக்கு அழ‌க‌ரின் உண்மை முக‌ம் விள‌ங்குகின்ற‌து.  வேறு வ‌ழியில்லாத‌ கார‌ண‌த்தால் அழ‌க‌ரின் வ‌ற்புறுத்த‌லில் த‌ன‌து வாழ்வை நொந்த‌ப‌டி க‌ட‌ற்க‌ன்னியாக‌ வேட‌ம் போட்டு ஊரூராய் சின்ன‌ராணி அழ‌க‌ரோடு செல்ல‌த் தொட‌ங்குகின்றார்.

இன்னொரு கிளைக்க‌தையாக‌ ஜ‌க்கி, டோலியின் சிறுவ‌ய‌துக் க‌தைக‌ள் கூற‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஜ‌க்கி/டோலியின் த‌ந்தை ஒரு த‌மிழ‌ராக‌வும், தாய் ஒரு ம‌லையாளியாக‌வும் இருக்கின்றார்க‌ள். த‌ந்தையின் மீது பெருவிருப்புள்ள‌ ஜ‌க்கியால் த‌ந்தை நோயுற்று ம‌ர‌ண‌முறுவ‌தைத் தாங்கிக்கொள்ள‌ முடிய‌வில்லை. வ‌றுமையாலும், உரிய‌ உத‌வியுமில்லாத‌தால் ஜ‌க்கியும் டோலியும் பாலிய‌ல் தொழில் செய்ய‌த் த‌ள்ள‌ப்ப‌டுகின்றார்க‌ள் என்ப‌தாய் அவ‌ர்க‌ளின் க‌தை நீளும்.

2.
இவ்வாறு அழ‌க‌ர்,சின்ன‌ராணி, செல்வி, ஜ‌க்கி, டோலி என‌ 1980க‌ளில் நிக‌ழும் ப‌ல‌ க‌தைக‌ள் ச‌ங்கிலி இணைப்புக்க‌ளாய் நீளும்போது, இவ‌ற்றுக்குச் ச‌மாந்த‌ர‌மாய் 1870க‌ளில் நிக‌ழும் ஏல‌ன் ப‌வ‌ர் என்கின்ற‌ இயேசுவிற்கு த‌ன்னை அர்ப்ப‌ணித்த ம‌ருத்த‌வ‌ரின் க‌தையும் கூற‌ப்ப‌டுகின்ற‌து. ஏல‌ன் ப‌வ‌ர் அமெரிக்காவில் ம‌ருத்துவ‌ம் ப‌டித்த‌வ‌ர். அங்கேதான் அவ‌ர் முத‌ன்முத‌லாக‌ ம‌ருத்துவ‌ம் ப‌டிக்க வ‌ருகின்ற‌ இந்திய‌ப் பெண்ணைச் ச‌ந்திக்கின்றார். சேவை செய்வ‌தில் மிகுந்த‌ விருப்புள்ள‌ ஏல‌ன் ப‌வ‌ர் உல‌கின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் ம‌ருத்துவ‌ராக‌ப் ப‌ணியாற்றி, இறுதியில் தொக்காட்டிற்கு வ‌ருகின்றார்.

வெயில் எரிக்கும் தொக்காட்டில் எவ‌ருமே, (ஆங்கிலேய‌) ம‌ருத்துவ‌ம் அறிந்த‌ ஏல‌ன் ப‌வ‌ரைத் தேடி வ‌ர‌வில்லை.  ஏல‌ன் ப‌வ‌ரும் அவ‌ருக்கு உத‌வியாய் இருக்கும் சீபாளி என்கின்ற‌ சிறுமியும் நோயாள‌ர்க‌ளுக்காய்ப் ப‌ல‌ மாத‌ங்க‌ளாய் காத்திருக்கின்றார்க‌ள். ஏல‌ன் ப‌வ‌ருக்கு ம‌ருத்துவ‌ம் செய்ய‌ இட‌த்தை ஒழுங்கு செய்யும் பாத‌ருக்கும் ஏல‌ன் ப‌வ‌ர் மீது ஒருவ‌கையான‌ வெறுப்பே இருக்கின்ற‌து. த‌ம‌க்கான‌ நோயையும் த‌ம் வாழ்வின் ஒரு ப‌குதியாக‌ ஏற்றுக்கொண்டிருக்கும் தொக்காட்டு ம‌க்க‌ளுக்கு நோயிலிருந்து விடுத‌லை என்ப‌து குறித்து அக்க‌றைய‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ இருக்கின்றார்க‌ள். த‌ன்னிட‌ம் ம‌ருத்துவ‌ம் பார்க்க‌ வ‌ருவ‌த‌ற்கு ம‌க்க‌ளை ஈர்க்க‌வேண்டுமென்றால் முத‌லில் அவ‌ர்க‌ளின் ந‌ம்பிக்கையைப் பெற‌வேண்டும் என்கிற‌ புரித‌லை ஏல‌ன்ப‌வ‌ர் க‌ண்ட‌டைகின்றார். ஆனால், தேவால‌ய‌த்திற்கு அருகிலிருக்கும் ம‌ருத்துவ‌னைக்கு வ‌ந்தால் பாத‌ரைப் போல‌ ஏல‌ன் ப‌வ‌ரும் த‌ங்க‌ளை ம‌த‌ம் மாற்றிவிடுவார் என‌ ம‌க்க‌ள் அஞ்சுகின்ற‌ன‌ர். அந்த‌ அச்ச‌த்தைப் போக்கி, தான் மத‌ம் மாற்ற‌மாட்டேன் நீங்க‌ள் உங்க‌ள் ம‌த‌ந‌ம்பிக்கையுட‌ன் இருந்த‌ப‌டியே ம‌ருத்துவ‌ம் பார்க்க‌ வ‌ர‌லாம் என்கின்றார் ஏல‌ன் ப‌வ‌ர். கால‌ப்போக்கில் அம்ம‌க்க‌ளின் ந‌ம்பிக்கைக்குரிய‌வ‌ராக‌வும், அவ‌ர்க‌ளில் ஒருவ‌ராக‌வும் மாறிவிடும் ஏல‌ன்ப‌வ‌ர், எது ந‌ட‌ந்தாலும் த‌ன் இற‌ப்புவ‌ரை தொக்காடு ம‌க்க‌ளோடு இருக்க‌ப் போவ‌தாய் நினைத்துக்கொள்கின்றார்.

த‌மது நோய் குறித்து அறியாமையால், நீண்ட‌கால‌மாய் இருந்த‌ ம‌க்க‌ளின் சில‌ நோய்க‌ளைத் தீர்த்து வைக்கின்றார் ஏல‌ன்ப‌வ‌ர். ஆனால் இதைத் தேவால‌ய‌த்தின் பாத‌ர், இயேசுவின் அருளாலேயே இந்த‌ அற்புத‌ங்க‌ள் நிக‌ழ்கின்ற‌ன என‌ ம‌த‌ம் மாற்றும் த‌ன் பிர‌ச்சார‌த்திற்குப் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்கின்றார். இந்நோய்க‌ள் அறிவிய‌லால்தான் தீர்ந்திருக்கின்ற‌ன‌ ம‌த‌த்தினால் அல்ல‌ என்ற‌ குழ‌ப்ப‌ம் ஏல‌ன் ப‌வ‌ருக்கு வ‌ந்தாலும் அவ‌ர் இவ்விட‌ய‌த்தை அத‌ன்போக்கிலேயே விட்டுவிடுகின்றார்.

(இன்னும் வ‌ரும்)
ஆனி/2011
 நன்றி: தீராநதி (செப்ரெம்பர்/2011)

துயில் - 02

Thursday, August 04, 2011

3.
எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் 'யாம‌ம்' நாவ‌லுக்கு விம‌ர்ச‌ன‌ம் எழுதிய‌போது, 'யாம‌ம்' கால‌னித்துவ‌த்தை ஒரு எதிர்ம‌றையாக‌ ம‌ட்டும் பார்க்கின்ற‌து என்ற‌ குறிப்பை எழுதியிருந்தேன். ஆனால் 'துயிலில்' கால‌னித்துவ‌த்தின் இருப‌க்க‌ங்க‌ளும் மிக‌ அவ‌தான‌மாக‌ முன் வைக்க‌ப்ப‌டுகின்ற‌து என்ப‌தைக் குறிப்பிட்டாக‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு தொக்காட்டை அண்டியிருக்கும் ஒரு பூசாரி (அவ‌ரே வைத்திய‌ராக‌வும் அம்ம‌க்க‌ளுக்கு இருக்கின்றார்) ம‌ன‌ம் பிற‌ழ்ந்த‌ ஆண்/பெண்/குழ‌ந்தைக‌ளைச் ச‌ங்கிலியால் க‌ட்டி தான் அவ‌ர்க‌ளின் நோய்க‌ளைத் தீர்க்கின்றேன் என‌ ச‌வுக்கால் தின‌ம் அடிக்கின்றார். இத‌னை அவ‌தானிக்கும் ஏல‌ன்ப‌வ‌ர் இது மிருக‌த்த‌ன‌மான‌து என‌ வ‌ருந்துகின்றார். ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌த்தை இப்ப‌டியே தொட‌ர‌விடாது நிறுத்த‌வேண்டும் என‌ பாதிரியாரிட‌ம் முறையிடும்போது, நாங்க‌ளும்(வெள்ளைய‌ர்க‌ளும்) அப்ப‌டித்தானே க‌ட‌ந்த‌கால‌ங்க‌ளில் நோயாளிக‌ளுக்கு ம‌ருத்துவ‌ம் செய்திருக்கின்றோம் என‌ப் பாத‌ர் குறிப்பிடுகின்றார். எப்போதும் கீழைத்தேய‌ ம‌க்க‌ளைக் 'காட்டுமிராண்டிக‌ளாய்' விம‌ர்சிக்கும் வெள்ளையின‌த்த‌வ‌ர்க‌ளின் தோன்ற‌ல்க‌ள்தான் மிக‌க்கொடூர‌மான‌ சிலுவைப்போர்க‌ளை நிக‌ழ்த்தினார்க‌ள் என்ப‌தையும், தேவால‌ய‌ங்க‌ளுக்கு எதிரான‌ க‌ருத்துரைத்த‌ பெண்க‌ளைச் சூனிய‌க்காரிக‌ளாய் உயிரோடு எரித்த‌வ‌ர்க‌ளும் என்ப‌தையும் நாம் ம‌ற‌ந்துவிட‌முடியாது அல்ல‌வா?

அதுதான் இங்கே நினைவூட்ட‌ப்ப‌டுகின்ற‌து. அதேபோன்று இந்திய‌(த‌மிழ்)ம‌ன‌ங்க‌ளில் அக‌ற்ற‌முடியாக் க‌ச‌டாய் ஒளிந்திருக்கும் சாதி ப‌ற்றியும் துயிலில் நுட்ப‌மாக‌ப் பேச‌ப்ப‌டுகின்ற‌து. ஏல‌ன் ப‌வ‌ர் த‌ன்னிட‌ம் வ‌ரும் நோயாளிக‌ளை ஒரே மாதிரியாய் ந‌ட‌த்துவ‌து தொக்காடு கிராம‌த்திலிருக்கும் உய‌ர்சாதியின‌ரால் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட‌ முடியாதிருக்கின்ற‌து. ஏல‌ன் ப‌வ‌ரோடு வேலை செய்யும் சீபாளியின் குடும்ப‌ம் கிறிஸ்த‌வ‌ம‌த‌த்திற்கு மாறிய‌பின்ன‌ர் கூட‌, சீபாளி எல்லோரும் வ‌ழிப‌டும் தேவால‌ய‌த்தினுள் உள்ளே வழிப‌ட‌ அனும‌திக்க‌ப்ப‌டாம‌ல்தான் இருக்கின்றார். இந்த‌ச் சாதியின் அர‌சிய‌லை அங்கே மேற்கிலிருந்து வ‌ரும் பாதிரியார் கூட‌ ம‌த‌ம் மாற்ற ந‌ட்வ‌டிக்கைக்காய் அவ‌ர்க‌ளைத் த‌ந்திர‌மாய்ப் பிரித்து வைத்தே பாவிக்கின்றார் என்ப‌தையும் நாம் க‌வ‌னித்தாக வேண்டும். ஆனால் மானுட‌த்தின் மீதான உண்மையான‌ அக்க‌றையுள்ள‌ ஏல‌ன் ப‌வ‌ரால் அதை ஒருபோதும் ஏறுக்கொள்ள‌ முடிய‌வில்லை. இவ்வாறு எல்லா ம‌க்களையும் சாதி அடிப்ப‌டையில் பகுக்காது, ம‌னித‌த்தின் அடிப்ப‌டையில் ஒன்றாக‌ப் பாவித்த‌தே இறுதியில் ஏல‌ன் ப‌வ‌ரின் உயிரையும் ப‌றித்திருக்கின்ற‌து என்ப‌தை நுட்ப‌மாய் எஸ்.ரா நாவ‌லில் எழுதியிருக்கின்றார்.

ஊர் ம‌க்க‌ள், த‌ங்க‌ளுக்கு சீக்கு நோயைப் ப‌ர‌ப்புகின்றார் என்ற‌ குற்ற‌ச்சாட்டின்பேரில் ஒரு பாலிய‌ல் தொழில் செய்யும் பெண்ணை உயிரோடு அடித்துக்கொல்லும் முய‌ற்சியில் ஈடுப‌டுவ‌தை ஏல‌ன் ப‌வ‌ர் த‌டுத்து நிறுத்துகின்றார். அந்நிகழ்வே அதுவ‌ரை அவ‌ரை த‌ங்க‌ளில் ஒருவ‌ராக‌ நினைத்த‌ ஊர்ம‌க்க‌ளிட‌மிருந்து ஏலன் ப‌வ‌ரை வில‌த்தி வைக்கின்ற‌து ம‌ட்டுமின்றி, க‌த்தோலிக்க‌ச் ச‌பையிலிருந்தும் அவ‌ரை நீக்க‌ச் சொல்லியும் க‌ட்ட‌ளையும் இட‌ப்ப‌டுகின்ற‌து. ஒரு முக்கிய‌மான‌ பாத‌ரால் ஏல‌ன் ப‌வ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌தால் வ‌ங்காள‌த்திலிருந்து ஒரு உய‌ர்ம‌ட்ட‌க்குழு இச்ச‌ம்ப‌வ‌த்தை தீர‌ விசாரிக்க‌ தொக்காட்டிற்கு அனுப்ப‌ப்ப‌டுகின்ற‌து. அக்குழு இறுதியில் என்ன‌ முடிவை எடுத்த‌து என்ப‌தும், ஏல‌ன் ப‌வ‌ரின் இன்னொரு க‌னவான‌ க‌ல்வி க‌ற்க‌ வாய்ப்பேயில்லாத‌ அம்ம‌க்க‌ளுக்கு ஒரு பாட‌சாலை அமைத்துக்கொடுத்த‌ல் நிக‌ழ்ந்த‌தா என்ப‌தையும் வாசிப்ப‌வ‌ர்க‌ளுக்காய் விட்டுவிட‌லாம்.

தொக்காடு தேவால‌ய‌த்தின் திருவிழாவிற்காய் ப‌ல‌ர் ப‌ல்வேறு திசைக‌ளில் இருந்து வ‌ந்துகொண்டிருக்கின்றார்க‌ள். தொக்காடு தேவால‌ய‌த்திற்கென‌ ஒரு ஜ‌தீக‌ம் உண்டு. நோயாளிக‌ள் த‌த்த‌ம் இட‌ங்க‌ளிலிருந்து கால்ந‌டையாக‌வே ந‌ட‌ந்து திருவிழாவிற்கு வ‌ந்துசேர்ந்தால் அவ‌ர்க‌ளின் தீர்க்க‌முடியாப் பிணிக‌ள் எல்லாம் தீர்ந்துவிடும் என்ப‌து. ஆக‌வே ப‌ல்வேறு வித‌மான‌ நோயாளிக‌ள் திருவிழாவிற்காய் ந‌ட‌ந்து வ‌ந்துகொண்டிருக்கின்றார்க‌ள். அவ்வாறு வ‌ந்து சேரும் நோயாளிக‌ள் இடையில் த‌ங்கிச்செல்லும் இட‌மாக‌ எட்டூர் இருக்கின்ற‌து. அங்கே 'அக்கா' என‌ எல்லோராலும் அன்பாக‌ அழைக்க‌ப்ப‌டும் பெண்ம‌ணி எல்லா நோயாளிக‌ளையும் ப‌ரிவாக‌க் க‌வனிக்கின்றார்; அவ‌ர்க‌ளுக்கு உண‌வூட்டுகின்றார், ஆறாத‌ காய‌ங்க‌ளைச் சுத்த‌ம் செய்கின்றார்; எல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ நோயாளிக‌ள் ம‌ன‌ந்திற‌ந்து பேசுவ‌தை பொறுமையாக‌ இருந்து கேட்கின்றார். அக்கா ஒரு ம‌ருத்துவ‌ர‌ல்ல‌, ஆனால் நோயுற்ற‌வ‌ர்க‌ள் எல்லோரும் த‌ம‌து நோய்க‌ள் ப‌ற்றிப் பேச‌வும், த‌ம்மோடு பிற‌ர் ப‌ரிவோக‌ இருப்ப‌தையும் விரும்புகின்ற‌வ‌ர்க‌ள் என்கிற‌ நோயாளிக‌ளின் உள‌வியிய‌ல் ந‌ன்க‌றிந்த‌வ‌ர்.

பிணியின் பாதி தீர்வது, நோயாளிக்குத் தான் த‌னியாள் அல்ல‌ என்ப‌தை உண‌ர‌ச்செய்வ‌து, மிகுதிப் பாதியை கொடுக்கும் ம‌ருந்துக‌ள் தீர்க்கும் என்ப‌தை அக்கா ந‌ன்க‌றிந்த‌வ‌ர். ஆக‌வே நோயாளிக‌ளை ம‌ன‌ந்திற‌ந்து பேசும்போது அவ‌ர்க‌ள் ஏற்க‌ன‌வே த‌ம் வாழ்வில் செய்த‌ பாவ‌ங்க‌ளும் கூட‌த்தான் ஒரு நோயாக‌ கூட‌ இருந்து உறுத்திக்கொண்டிருக்கின்ற‌து என்ப‌தை அக்கா அவ‌ர்க‌ளுக்குப் புரிய‌ வைக்கின்றார். பாவ‌ங்க‌ளிலிருந்து விடுப‌ட‌ல் என்ப‌து நாம் பாவ‌ம் செய்த‌து யாரிட‌மோ அவ‌ர்க‌ளைத் தேடிச்சென்று எம‌து த‌வ‌றுக‌ளைக் கூறி ம‌ண்டியிடுவ‌துதான் என்கின்றார். அக்காவைத் தேடி தொழுநோயாளிக‌ள் ம‌ட்டுமின்றி ப‌ல்வேறு பிணிக‌ளோடு இருப்ப‌வ‌ர்க‌ளும் வ‌ருகின்றார்க‌ள். ஒருமுறை எப்போதும் போதையில் மித‌ந்த‌ப‌டி இருக்கும் ஒரு குடிகார‌னைச் ச‌ந்திக்கின்றார் அக்கா. ஆனால் அவ‌ன் த‌ன‌து அன்பு புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌தாலேயே குடியைக் கார‌ண‌ங்காட்டி எல்லோரையும் வெறுக்கின்றான் போன்ற‌ த‌ந்திர‌த்தைச் செய்கின்றான் என்ப‌தை அக்கா அவ‌னிட‌ம் க‌ண்டுபிடிக்கின்றார். தான் இதுவ‌ரை நுட்ப‌மாய் ம‌றைத்துவைத்திருந்த‌ உண்மையை அக்கா ச‌ட்டென்று க‌ண்டுபிடித்த‌தைக் குடிகார‌னால் தாங்க‌முடியாதிருக்கின்ற‌து. ஆக‌வே அக்காவை மூர்க்க‌மாய்த் தாக்குகின்றான். அதேபோன்று த‌ம‌து 50 வ‌ய‌துக‌ளில் வீட்டால் துர‌த்த‌ப‌ட்ட‌ 70 வ‌ய‌துக‌ளில் இருக்கும் இரு முதிய‌வ‌ர்க‌ளும் அக்காவைத் தேடி வ‌ருகின்றார்க‌ள். அவ‌ர்க‌ள் தாங்க‌ள் அக்கா செய்யும் ந‌ல்ல‌ப‌ணிக‌ளைக் கேள்விப்ப‌ட்டு அவ‌ருக்கு சில‌ நாட்க‌ள் உத‌வ வ‌ந்த‌தாக‌க் கூறுகின்றார். அக்கா நெகிழ்கின்றார். 50 வ‌ய‌துவ‌ரை தாங்க‌ள் வேலை, குடும்ப‌ம் என‌ ஒரு குறுகிய‌ வ‌ட்ட‌த்திற்குள் வாழ்ந்துகொண்டிருந்தோம், வீட்டிலிருந்து துர‌த்த‌ப்ப‌ட்ட‌பின் தான் உல‌க‌ம் எவ்வ‌ள‌வு விரிந்த‌து என்று தெரிகிற‌து என‌ச்சொல்லும் அம்முதிய‌வ‌ர்க‌ள் முதுமையிலும் வாழ்வு அழகுதானென‌க் கூறுகின்றன‌ர். இப்ப‌டி அக்காவின் எட்டூர் ம‌ண்ட‌ப‌த்திற்கு வ‌ருகின்ற‌ ப‌ல‌ரின் க‌தைக‌ள் கூற‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒவ்வொருவ‌ரின் க‌தைக‌ளும் ஏதோ ஒருவ‌கையில் ந‌ம்மைப் பாதிக்க‌ச் செய்கின்ற‌தோடு அவ‌ர்க‌ள் எம‌க்கு ஏற்க‌ன‌வே தெரிந்த‌ ந‌ம்மோடு உலாவுகின்ற‌ ம‌னித‌ர்க‌ள் போன்ற‌ நெருக்க‌த்தையும் வாசிக்கும் ந‌ம‌க்குள் ஏற்ப‌டுத்த‌வும் செய்கின்ற‌ன‌ர்.

4.
இவ்வாறு இருநூற்றாண்டுக‌ளில் நிக‌ழும் க‌தைக‌ள் வெவ்வேறு மாந்த‌ர்க‌ளினூடாக இந்நாவ‌லில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. தொக்காடு கிராம‌த்தில் எப்ப‌டி கிறிஸ்த‌வ‌ம் ப‌ர‌வுகின்ற‌து என்ப‌திலிருந்து, தொக்காடு தேவால‌ய‌ம் எவ்வாறு க‌ட்ட‌ப்ப‌ட்ட‌து என்ப‌து வ‌ரை நுண்ணிய‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளால் துயிலில் எழுத‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ஒவ்வொரு த‌னிம‌னித‌னும் தன் வாழ்வையும் தான் ச‌ந்தித்த‌ ம‌னித‌ர்க‌ளையும் ப‌ற்றியும் எழுத‌த்தொட‌ங்கினாலே அது எவ்வ‌ள‌வோ ப‌க்க‌ங்க‌ளுக்கு நீள‌க்கூடிய‌தாக‌ இருக்குமென்றால், இரு நூற்றாண்டுக‌ளுக்கு முன் எழுப்ப‌ப்ப‌ட்ட‌ தேவால‌ய‌த்தைப் ப‌ற்றிய‌ க‌ட‌ந்த‌கால‌த்தையும் நிக‌ழ்கால‌த்தையும் எழுத‌த்தொட‌ங்கினால் ஒருபோதுமே முடிவ‌டையாத‌ அள‌வுக்கு க‌தைக‌ள் என்றுமேந் நுரைத்துத் த‌தும்ப‌க் கூடிய‌ன‌தான். என‌வேதான் தொக்காடு தேவால‌ய‌த்தை ஒரு முக்கிய‌ மைய‌மாய் வைத்து எழுத‌ப்ப‌ட்ட‌ துயில் நாவ‌லும் அது கூறுகின்ற‌ க‌தைக‌ளை விட‌ சொல்ல‌ப்ப‌டாத‌ க‌தைக‌ளைத் த‌ன்ன‌க‌த்தில் உள்ள‌ட‌க்கியிருக்கின்ற‌து என்ப‌தை நாம் உய்த்துண‌ர்ந்து கொள்ள‌லாம். துயிலில் விட‌ப்ப‌ட்ட‌ இடைவெளிக‌ளைக் கொண்டு நாம் எம‌க்கான‌ க‌தைக‌ளைக் கூட‌ க‌ட்டியெழுப்பிக்கொள்ள‌லாம். உதார‌ண‌மாக‌ துயில் நாவ‌லில் வ‌ருகின்ற‌ முக்கிய‌ பாத்திர‌மான‌ அக்கா ஒரு குடிகார‌னால் தாக்க‌ப்ப‌ட்டு ம‌ய‌க்க‌ம‌டைவ‌தோடு இந்நாவ‌லிலிருந்து இல்லாம‌ற் போய்விடுகின்றார். ஆனால் அக்காவின் பாத்திர‌த்தை வாசிக்கும் ந‌ம‌க்கு, அந்த‌ அக்காவிட‌ம் ந‌ம‌க்குச் சொல்வ‌த‌ற்கு இன்னும் நிறைய‌க் க‌தைக‌ள் இருக்குமென்ப‌தை அறிவோம். அழ‌க‌ரின‌தோ, ஜ‌க்கியின‌தோ சிறுவய‌து அனுப‌வ‌ங்க‌ள் விரிவாக‌ச் சொல்ல‌ப்ப‌ட்ட‌துபோன்று அக்காவின‌து க‌ட‌ந்த‌கால‌ம் துயிலில் கூற‌ப்ப‌டாது விட‌ப்ப‌ட்டிருக்கும் இடைவெளியைக் கூட‌ நாம் ந‌ம‌க்குத் தெரிந்த‌ ஒரு அக்காவின் நினைவுக‌ளை ந‌ன‌விடைதோயச் செய்வ‌தாக‌க்கூட‌ மாற்றிக்கொள்ள‌லாம்.

19ம் நூற்றாண்டின் இறுதிப்ப‌குதியில் ஒரு பெண் அநியாய‌மாக‌ தொக்காடு தேவால‌ய‌ முன்ற‌லில் கொல்ல‌ப்ப‌டுகின்றார். அவ‌ரின் அதுவ‌ரை கால‌ச்சேவையை நினைவூட்டிக்கொண்டிருந்த‌ க‌ட்ட‌ட‌மும் பின்னாட்க‌ளில் அடையாள‌மின்றிப்போகின்ற‌து. ஆனால் அவர் எழுதிக்கொண்டிருந்த‌ க‌டித‌ங்க‌ளின் மூல‌ம் அவ‌ரின் நினைவுக‌ள் மீண்டும் தூசி த‌ட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌. க‌டித‌ம் ஒரு முக்கிய‌ ஆவ‌ண‌மாய் க‌ட‌ந்த‌கால‌ வ‌ர‌லாற்றை மீள‌க் க‌ட்டியெழுப்புகிற‌து. அதேபோன்று கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு நூற்றாண்டுக்குப் பின்னாலும் தொக்காடு தேவால‌ய‌ச் சூழ‌லில் கொலையொன்று நிக‌ழ்கின்ற‌து. ஆனால் சென்ற‌ நூற்றாண்டைப் போல‌ல்லாது, த‌ன‌க்குச் செய்ய‌ப்ப‌டும் அநியாய‌ம் க‌ண்டு பொங்கியெழுந்து ஒரு பெண்ணே அக்கொலையைச் செய்கின்றாள். ஒரு நூற்றாண்டு இடைவெளியில் கால‌ம் மாறிக்கொண்டிருப்ப‌தை இதைவிட‌ நுட்ப‌மாக‌ உண‌ர்த்தி விடமுடியுமா என்ன‌?

துயில் நாவ‌ல் நோய்மையை ம‌ட்டும் பேசாது வெவ்வேறுவித‌மான‌ ம‌ருத்துவ‌முறைக‌ள் ப‌ற்றியும் ஆழ‌ விவாதிக்கின்ற‌து. மேலைத்தேய‌ ம‌ருத்துவ‌ முறையில் தேர்ச்சி பெற்ற‌ ஏல‌ன் பவ‌ர், கீழைத்தேய‌ நாடுக‌ளில் த‌லைமுறை த‌லைமுறையாக‌ குறிப்பிட்ட‌ குடும்ப‌ங்க‌ளிடையே க‌ற்றுக்கொடுக்கப்ப‌டும் கீழைத்தேய‌ ம‌ருத்துவ‌ முறைக‌ளைப் ப‌ற்றி அறிய‌வும் ஆவ‌ல் உள்ள‌வ‌ராக‌ இருக்கின்றார். இம்ம‌ருத்துவ‌முறை இந்திய‌ ச‌மூக‌ங்க‌ளில் ஒதுக்க‌ப்ப‌ட்ட‌ சாதிக‌ளிடையே இருந்து வ‌ருவ‌தையும் அதனால் இவ‌ர்க‌ளிட‌ம் சிகிச்சை பெற‌ உய‌ர்சாதி ம‌க்க‌ள் விரும்புவ‌தில்லை என்ப‌தையும் அவ‌தானிக்கின்றார். மேலும் இந்திய‌ ம‌ருத்துவ‌முறைக‌ள், மேலைத்தேய‌ ம‌ருத்துவ‌த்தைப் போல‌ த‌னிப்ப‌ட்ட‌ நோயிற்கு ம‌ட்டும் சிகிச்சையைத் தேடுவ‌தை விடுத்து, அது முழுமனித‌னுக்குமான‌ உட‌ல்ந‌ல‌த்தைக் க‌வ‌ன‌த்தில் கொள்கின்ற‌து என்கின்ற‌ புரித‌லுக்கும் ஏல‌ன்ப‌வ‌ர் வ‌ருகின்றார். இய‌ற்கையோடு அதிக‌ம் வாழும் இந்திய‌ ம‌க்க‌ள் த‌ம‌து ம‌ருந்துக‌ளையும் இய‌ற்கை வ‌ள‌ங்க‌ளிலிருந்து பெற்றே த‌யாரிக்கின்றார்க‌ள் என்ப‌தையும், அவ்வாறு மேலைத்தேய‌ ம‌ருந்துக‌ள் த‌யாரிக்க‌ப்ப‌டுவ‌தில்லை என்கின்ற‌போது, துயிலில் வ‌ரும் உள்ளூர் ம‌ருத்துவ‌ர் அதை ந‌ம்ப‌முடியாத‌வ‌ராக‌ இருக்கின்றார் என்ப‌தும் குறிப்பிட‌ப்ப‌டுகின்ற‌து.

மேலும் துயில் நாவ‌லில் தொக்காடு தேவால‌ய‌த்தின் திருவிழா ப‌ற்றிய‌ வ‌ர்ண‌னைக‌ள் வித‌ந்து கூற‌க்கூடிய‌து. தேர்ந்த‌ ஒரு ஒளிப்ப‌திவாள‌ர் காட்சிப்ப‌டிம‌ங்க‌ளாக்குவ‌தைப் போன்ற‌ நேர்த்தியுட‌ன் திருவிழா நாட்க‌ள் எஸ்.ராவின் எழுத்தால் காட்சிப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. இன்னுஞ்சொல்ல‌ப்போனால் தேவால‌ய‌த்தின் உள்ளே நிக‌ழும் திருவிழாவைவிட‌, அத‌ன் சுற்றுச்சூழ‌லே அதிக‌ம் வ‌ர்ணிக்க‌ப்ப‌டுகின்ற‌து. ஒருவ‌கையில் பார்த்தால் இந்நாவ‌ல் விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளை முக்கிய‌ பாத்திர‌ங்க‌ளாக‌க் கொண்டே க‌ட்டியெழுப்ப‌ப்ப‌டுகின்ற‌து என‌க்கூட‌ச் சொல்ல‌லாம். ஓரு நிர‌ந்த‌ரமான‌ இருப்பில்லாது எப்போது அலைந்துகொண்டிருக்கும் அழ‌க‌ர், பாலிய‌ல் தொழில் செய்யும் ஜ‌க்கி ம‌ற்றும் டோலி, நோயாளிக‌ளைப் மிக‌க் க‌னிவுட‌ன் ப‌ராம‌ரித்து அனுப்பும் அக்கா, த‌ன‌க்கான எல்லா வ‌ச‌தி வாய்ப்புக்க‌ளையும் உத‌றிவிட்டு சேவை செய்வ‌த‌ற்கென‌ வ‌ரும் ஏல‌ன்ப‌வ‌ர் என‌ அனைவ‌ருமே விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளாக‌ இருக்கின்றார்க‌ள், அல்ல‌து விளிம்புநிலை மனித‌ர்களோடு சேர்ந்து வாழ‌ விரும்புகின்ற‌வ‌ர்க‌ளாக‌ இருக்கின்றார்க‌ள். மேலும் எஸ்.ராவின் அநேக‌ நாவ‌ல்க‌ளில் வ‌ருப‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள் இய‌ல்புக்கு அப்பால் சென்று த‌ங்க‌ளைப் ப‌ற்றி அல‌ட்டிக் கொள்வ‌துமில்லை. அவ‌ர்க‌ளின் தின‌வாழ்வென்ப‌தென்ப‌தே புற‌ நெருக்க‌டிப் பெருஞ்சுழிக‌ளுக்கு எதிராக‌த் துடுப்புப் போடுவ‌தாக‌ இருக்கும்போது உள்ம‌ன‌த் த‌ரிச‌ன‌ங்க‌ளுக்காய் நின்று நிதானிக்க‌வும் முடியாது. அந்த‌ இய‌ல்பு துயிலின் பாத்திர‌ங்க‌ளுக்கு இருப்ப‌தால் தான் நாவ‌ல் வாசிப்ப‌வ‌ர்க‌ளை உள்ளிழுத்துக் கொள்கிற‌து.

இந்நாவ‌லை வாசித்துக்கொண்டிருந்த‌போது காண‌க்கிடைத்த‌ சில‌ எதிர்ம‌றையான‌ புள்ளிகளையும் குறிப்பிட‌வேண்டும். ஒவ்வொரு அத்தியாய‌த்திலும் ஒரு சில‌ எழுத்துப் பிழைக‌ளென‌ நாவ‌ல் முழுதும் எழுத்துப்பிழைக‌ள் ம‌லிந்து கிட‌க்கின்ற‌ன‌. எஸ்.ராவின் 'உப‌பாண்ட‌வ‌ம்' வாசித்த‌ நாட்க‌ளிலிருந்து இதை அவ‌தானிக்கின்றேன் என்றாலும், இவ்வ‌ள‌வு க‌டும் உழைப்போடு எழுத‌ப்ப‌டும் ஒரு நாவ‌லில் இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளையும் க‌ளைய‌வேண்டுமென‌க் க‌றாராக‌ கூற‌வேண்டியிருக்கின்ற‌து. அதைவிட‌, சில‌வேளைக‌ளில் பாத்திர‌ங்க‌ளில் பெய‌ர்க‌ள் மாற்றி மாற்றி வ‌ந்திருக்கின்ற‌ன‌. உதார‌ண‌த்திற்கு ஜ‌க்கி தான் அவ‌ரின் த‌க‌ப்ப‌னோடு மிக‌வும் நெருக்க‌மாயிருக்கின்றார். ஆனால் சில‌ ப‌க்க‌ங்க‌ளைத் தாண்டிய‌பின் ஜ‌க்கியின் த‌ங்கையான‌ டோலிதான் த‌க‌ப்ப‌னுக்கு நெருக்க‌மாயிருக்கின்றார் என்ப‌துபோல‌ பெய‌ர் ஆள்மாறாட்ட‌ம் ந‌ட‌ந்திருக்கும். இவ்வாறான‌ விட‌ய‌ங்கள் வாசிப்ப‌வ‌ரை நிச்ச‌ய‌ம் குழ‌ப்ப‌வே செய்யும்.

எங்கோ தொலைவில் முற்றிலும் வேறுப‌ட்ட‌ ப‌ண்பாட்டுச் சூழலில் பிற‌ந்து இந்தியாவிற்கு சேவையாற்ற‌ வ‌ரும் ஏல‌ன் ப‌வ‌ர், த‌ன் துணையை வெட்டிவிட்டுப் போவ‌த‌ற்கான‌ எத்த‌னையோ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் வாய்த்தும், த‌ன்னைப் ப‌ய‌ன்ப‌டுத்துகின்றான் க‌ண‌வ‌ன் என்கின்ற‌ புரித‌லோடு அழ‌க‌ரோடு அலையும் சின்ன‌ராணி, நோயாளிக‌ளை ஆற்றுப்ப‌டுத்த‌வும், அவ‌ர்க‌ளுக்கு விருந்த‌ளிப்ப‌துமே த‌ன் க‌டனென‌ அத‌ற்காய் த‌ன் வாழ்நாளை முற்றுமுழுதாக‌ செல‌வ‌ழிக்கின்ற‌ன‌ கொண்ட‌லு அக்கா...என‌ இந்நாவ‌லில் முக்கிய‌ பெண் பாத்திர‌ங்க‌ள் அனைத்துமே த‌ம் வாழ்வைப் பிற‌ருக்காய் அர்ப்ப‌ணித்து அதில் ஏதோ ஒருவ‌கையில் நிறைவைக் காண்ப‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள். த‌னிந‌ப‌ர் சார்ந்து எல்லாமே வ‌லியுறுத்த‌ப்ப‌டும் இன்றைய‌ உல‌க‌ ஒழுங்கில் மேற்குறித்த‌ பாத்திர‌ங்க‌ள் சில‌வேளைக‌ளில் விசித்திர‌ப் புதிர்க‌ளாக‌ வாசிப்ப‌வ‌ர்க‌ளுக்குத் தெரிய‌வும் கூடும். அத‌ன் நிமித்த‌ம் வ‌ரும் விய‌ப்பே, அண்மையில் வாசித்த‌வ‌ற்றில் 'துயிலை' ஒரு முக்கிய‌ நாவ‌லாக‌ வைத்துப் பார்க்க‌த் தோன்றுகின்ற‌தோ தெரிய‌வில்லை.

எழுதியது: ஆனி/2011
இறுதியாய்த் திருத்திய‌து: ஆவ‌ணி/2011