கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இருள் தின்ற ஈழம்

Monday, July 15, 2013

தேவஅபிராவின் 'இருள் தின்ற ஈழம்' கவிதைத் தொகுப்பை முன்வைத்து...

1.
கவிதைகளை எவ்வாறு வாசிப்பது என்பது நம் எல்லோருக்கும் முன்னாலுள்ள கேள்வி. இன்று தமிழ்ச்சூழலில் எழுதப்படும் வகைமையில் கவிதைகளே நிறைய எழுதப்படுகின்றன . மேலும் கவிதைகளுக்கு சங்ககாலம் தொடக்கம் நீண்டகால தொடர்ச்சியும் தொன்மையும் இருக்கின்றன. ஆகவே நீண்டகால பராம்பரியம் உள்ள கவிதை உலகில், இவற்றில் எவற்றை வாசிப்பது என்னும்போதே நம்மையறியாமலே நாம் சில  தேர்வுகள் செய்து கொள்ளத் தொடங்குகின்றோம். அந்தத் தேர்வுகளின் அடிப்படையில் எது நல்ல கவிதை, எது நல்லது அல்ல என்கின்ற பிரிப்புக்களை நம்மையறியாமலே ஏற்படுத்திக் கொள்கிறோம். நான் இப்போது அந்த பிரிப்புக்களில் இறங்க விரும்பவில்லை. நம் வாசிப்பிற்கும் இரசனைக்கும் ஏற்ப நாம் தேர்ந்தெடுக்கும் கவிதைகள் மாறுபடும் என்பதை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நாம் வாசிக்கும் கவிதைகள், நம் இரசனைகளுக்கு ஏற்பத்தான் நமக்குப் பிடித்துப் போகின்றனவா? எனவும் யோசித்துப் பார்க்கலாம். சிலவேளைகளில் கவிதைகள் நம் அகமனத்தூண்டலுக்கும் , புறச்சூழலுக்கும் ஏற்ப நமக்கு நெருக்கமாகிக் கூடப் போய்விடலாம். உதாரணமாக பிரிவுத் துயரில் இருந்தபோது றஷ்மியின் 'காவு கொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள்' தொகுப்பு எனக்கு நெருக்கத்தைத் தந்திருந்தது. இப்போது சிலவேளைகளில் அதை மீண்டும் வாசித்தால், நான் சாதாரணமாய்க் கடந்து போய் விடவும் கூடும். அவ்வாறே வாசுதேவனின் 'தொலைவில்' என்கின்ற தொகுப்பை முதலில் வெகு எளிதாய் ஒரு பத்திரிகையைச் செய்திகளை வாசிப்பதுபோலக் கடந்து சென்றிருந்தேன். பின்னொரு பொழுது  தீராத் தனிமையும்  சுயம் குறித்த தேடலுமாயிருந்த பொழுதில் அது எனக்கு  நெருக்கமான ஒரு தொகுப்பாயிருந்தது. ஆக தனிமனிதர் ஒருவருக்கே அக/புறச்சூழலிற்கு ஏற்ப கவிதை வாசிப்பு நெருக்கத்தையும் விலகலையும் த்ருகின்றதென்றால் நம்மால் எது நல்ல கவிதை எது நல்லது அல்லாத கவிதை எனப் பிரிப்பதில் சிக்கல்கள் வருகின்றன தான் அல்லவா?

மேலும் கடந்த மூன்று தசாப்தகாலமாய் போரிற்குள் இருந்த ஈழத்தமிழர்களுக்கு இன்று போர் சார்ந்து வருகின்ற படைப்புக்கள் முக்கியமாய் இருக்கின்றன. ஆனால் இன்னும் 10/20 வருடங்களின் பின் இந்தப் படைப்புக்களிற்கான வாசிப்பு எப்படியிருக்கும்? இதன் அர்த்தம் போர்ச்சூழலைப் பதிவு செய்யக்கூடாது  என்பதல்ல. சிலவேளைகளில் காலம் நாமறியாத வேகத்திலேயே சுழன்று சென்று, நாம் கவனிக்காத ஊற்றுக்களைக் கூட திறந்துவிடக்கூடும் என நினைவூட்டுவதற்காய் இதைக் குறிப்பிடுகிறேன்.  எனவே எவை சிறந்த கவிதையென உரையாடுவதைவிட எவை எமக்குப் பிடித்தமான கவிதைகள், ஏன் அவை எங்களுக்குப் பிடித்தவையாக இருக்கின்றன என்றவகையில் கவிதைகளில் வாசிப்பை நிகழ்த்தவே நான் விரும்புவேன். சிலவேளைகளில் கவிதைகளுக்கு காலமோ வடிவமோ கூட அவ்வளவு முக்கியமில்லையென நினைப்பதுண்டு. காலம் முக்கியமானது என்றால் நமக்கு அண்மையாய் இருக்கும்  மரபுக்கவிதைகள் பற்றி அல்லவா நாம் நிறையப் பேசியிருக்கவேண்டும். ஆனால் அதையும் தாண்டி நூற்றாண்டுகள் தாண்டிய சங்கப்பாடல்களைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுகின்றோம் என்றால் கவிதை நமக்குள் அவிழ்த்துவிடுகின்ற பல்வேறு வாசிப்புக்களே முக்கியம் என்றுதான் நினைக்கின்றேன்

என் இலக்கிய வாசிப்பில் நான் தொடர்ந்து ஒருவர் தொடர்ச்சியாகவும் நிறையவோ எழுதவேண்டும் என்கின்ற அவசியமில்லை என்பதை வலியுறுத்துகின்ற ஒருவன் . படைப்பாளியொருவரை நினைவுகொள்ள அவர் ஒன்றிரண்டு நல்ல படைப்புக்களைத் தந்தால் கூட என்னளவில் போதுமானது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கின்ற கணியன் பூங்குன்றனிடமிருந்து, 'கோணேஸ்வரிகள்' எழுதிய கலா வரை இதற்கு நிறைய உதாரணங்களை முன்வைக்க முடியும்.

2.
'இருள் தின்ற ஈழம்' என்கின்ற தேவஅபிராவின் இத்தொகுப்பில் அவர் 89ம் ஆண்டிலிருந்து 2013 வரை -கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக- எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஈழத்தில் நா.பஞ்சாட்ரம் அவர்களின் பாதிப்பில் மரபுக்கவிதைகளை எழுதத்தொடங்கியவர் என்பதால் தேவஅபிராவின் கவிதைகளின் இன்னும் மரபின் நீட்சியைக் காணலாம். அது பலவேளைகளில் கவிதைகளுக்குச் சிறப்பியல்பாகவும் சிலவேளைகளில் பலவீனமாகவும் தெரிகிறது. தேவஅபிராவின் கவிதைகளை வாசிக்கும்போது சு.வில்வரத்தினம், வ.ஜ.ச.ஜெயபாலன் ஒரு தொடர்ச்சியில் வைத்துப் பார்க்கலாமோ என்று தோன்றியது. அதற்கும் முன்னால் போகவிரும்புபவர்கள் மஹகவியிடமும், முருகையனிடத்தும் போகவும் கூடும். சு.வியும், ஜெயபாலனும்  மரபுக் கவிதையுலகிலிருந்தும், பண்ணோடு பாடும் பாடல்களிலிருந்தும் தமக்கான வடிவங்களை நவீன கவிதையுலகில் செதுக்கிக் கொண்டவர்கள்.  இந்தத் தொடர்ச்சியை தேவஅபிரா கவிதைகளில் நாம் காணலாம்.  இதை ஒரு எளிய புரிதலுக்காய்ச் சொல்கின்றேனே தவிர, அவரது முழுத்தொகுப்பையும் அப்படி அடையாளப்படுத்தி விட முடியாது

'ஒரு கவிதை எங்கே ஆரம்பிக்கின்றது?'  எனும்  93ம் ஆண்டு எழுதப்பட்ட கவிதை,  கவிதை உருவாகும் தருணங்களை முதலில் இப்படிப் பட்டியலிடுகிறது.'யாழ்ப்பாணத்தில் என்றால்/ மாவீரர் துயிலும் இல்லத்தை/ எவனும் சுட்டிக் காட்டுவான்/ யாரேனும் ஒருவன் தன்னிலை மறந்து/ இன்னும் உடைக்கப்படாத பள்ளிவாசலையும் காட்டக் கூடும்/  கொழும்பிலோ என்றால்/ நெரிசலான பேருந்துக்குள்/  முன்னும் பின்னும் நெரிக்கும்/ ஆண் குறிகளுக்கிடையில்/ தவிக்கும் பெண்ணிலிருந்தோ....' தொடங்கக்கூடும் என நீளும் கவிதை...'அது சரி/ ஒரு கவிதை எங்கே முடிகிறது?/ அங்கே...அதோ.../ 'நிறுத்து' என்றறிவித்தல் பலகையை நீட்டியபடி/ சீருடை அணிந்தவொருவன் மறிக்கிறானே/ அங்கே....' என முடிகிறது.  இதைத்தான் இன்னொருவகையில் மரணத்தில் வாழ்வது என்பது. உயிருக்கே எந்தக்கணமும் உத்தரவாதம் இல்லையென்கின்றபோது ஒரு கவிதையை எவர்தான் நிம்மதியாக எழுதிவிடமுடியும்?அதைத்தான் தேவஅபிராவின் இந்தக் கவிதை பிரதிபலிக்கிறது.

'ஈழக்காளி' என்கின்ற இன்னொரு கவிதை, எப்படி தமிழர்கள் முஸ்லிம்களை யாழிலிருந்து துரத்தினார்கள் என்பதை 'குருதியிற் சிவந்த கோர உதடுகள்.../நரமாமிசம் தொங்கும் நீண்ட பற்கள்..../ சிசுக்களை இரண்டாய்க் கிழித்த கைகள்.../ மானுட விழுமியம் மீது/ இரத்தக் கோடுகள் வரைந்தாள்/ ஈழக்காளி...என மானுடத்தின் பெரும் அவலத்தை நரபலி கேட்க எழுந்த காளியிற்கு படிமமாக்குகின்றார் தேவஅபிரா. இவ்வாறு குறிக்கப்பட்ட மணித்தியாலங்களுக்குள் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடமைகளுக்கு என்ன நடந்தது என்பதை... 'இரத்தத்தில் நனைந்த எல்லாப் பொருட்களும்/ 'எழிலக்த்திலும் தமிழருவியிரும்'/மலிவு விற்பனையில்... எனத் தொடர்ந்து அந்தக் காலத்தைப் பதிவு செய்கிறார். இறுதியில் 'ஈழக்காளி உன் ஆத்மாவையும் பிடுங்கி/ அங்காடியில் வில்/ என முடிக்கிறார். ஒருவரின் சுயத்தை/ஆன்மாவையும் அங்காடியில் விற்கப்போகின்ற நிலை என்பது எவ்வளவு வெட்கக்கேடானது. முஸ்லிம்களின் விடயத்திலும் நாமெல்லோரும் தமிழர்கள் எனச் சொல்லவே அவமானப்பட்டு தலைகுனிந்து அல்லவா நிற்கவேண்டும். மேலும் இக்கவிதை எப்போது பிரசுரமானது என்று தெரியவில்லை, ஆனால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட அதேயாண்டு எழுதப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று.

'இரவின் பாடல்' என்கின்ற கவிதை எப்படி ஒரு காலத்தில் நம் நாடுகளை காலனித்துவமாக்கினார்களோ, இப்போது அவர்களில் நாட்டிலும் நாம் விளிம்புநிலை வாழும் அவலத்தைச் சொல்கிறது.
'சில நூறு ஆண்டுகளின் முன்பு
எமது கிராமங்களில் அள்ளி வந்த
பொற்கழஞ்சுகள் சிதறச் சிதற
சீமான்களும் சீமாட்டிகளும் ஆடிய நடனத்தின் ஒலி இன்னும்
அடங்காது திரிகிறது
நானோ
கனவுகள் வெடித்த காலக்கிழவியின் நெற்றியெனக் கற்கள் நெருக்கி
புல்லும் கருக மருந்தடித்த இரவு வீதியில்
திமிறிக்கிடந்த வரலாற்று வேர்களில் தடக்கி
புலத்தைப் பாடும் துருக்கிக்காரன் இரவுப்பாட்டில் சில்லறையென விழுந்தேன்'
என கவனிக்கத்தக்கப் படிமமாய் தேவஅபிரா மாற்றுகிறார்.

நதி என்னும் கவிதை தான் பிறந்தபோது தனக்குள்ளேயே ஒரு நதியும் பிறந்தது. அதை தன் வாழும் ஒவ்வொரு காலங்களிலும் இடங்களிலும் காவிக்கொண்டிருப்பதையும் குறிப்பிட்டு, ஆனால் என்றேனும் ஒருநாள் தன் மகன், 'என்னை நீயேன் அகதியாக்கினாய் அப்பா?' எனக் கேட்கும்போது அந்நதி இறந்துபோய்விடும் என்கிறார். அகதிகளாக்கப்பட்டது மட்டுமில்லை அண்மையில் நடந்துமுடிந்த கோர யுத்தத்தின் சுவடுகள் பற்றியும் அடுத்த தலைமுறை தொடுக்கும் கேள்விகளுக்கு நமக்குப் பதில் சொல்லும் தைரியந்தான் இருக்கிறதா என்ன?

வேறு சில கவிதைகளில் வந்துவிழும் சில வரிகள் என்னைக் கவர்ந்திருக்கின்றன....
'வாழ்வென்று எவர் சொன்ன வாழ்வும் வாழ்வல்ல
என்றறைகிறது ஆழி'
என ஓரிடத்திலும், இன்னொரிடத்தில்
'நாங்களறியா ஆழத்துள் வேரோடிய திமிரில்
போர் கைகொட்டிச் சிரிக்கிறது'
எனவும்
'தனக்குள் ஒரு நதியைக் கொண்டிருக்கின்ற
எவரும் தலைநிமிர்ந்தே நடப்பர்'
எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

மேலே கூறியவை ஒன்றிரண்டு வாசிப்புக்களில் நான் கண்டுகொண்ட எனக்குப் பிடித்த தேவஅபிராவின் சில கவிதைகள். இத்தொகுப்பை வாசிக்கும் நீங்களும் உங்களுக்குப் பிடித்தமான சில கவிதைகளையேனும் அடையாளங் கண்டுகொள்வீர்கள் எனவே நம்புகிறேன்.

இத்தொகுப்பிலில் தவிர்த்துக்கொள்ளக்கூடிய சில குறைகளும் இருக்கின்றன. உதாரணமாக நீண்டவரிகள் உடைய கவிதைகளை தேவஅபிரா எழுதும்போது புத்தக வடிவமைப்பின் காரணத்தால் கீழே உடைத்துப் போடும்போது பல பக்கங்களில் கவிதைகள் வாசிக்கும் உணர்வைத் தராது தடுக்கின்றது.  மேலும் மரபுக்கவிதையின் மிச்சமான சில வரிகளின் பின் வரும் நிறையப் புள்ளிகளும்...ஆச்சரியக்குறிகளும் சிலவேளைகளில் அலுப்பைத் தருகின்றன.

'எனது தனிமைக்கு எதிராக நான் எழுதுகிறேன்' என்றார் ஒரு படைப்பாளி. இன்னொருவர். 'எனக்கு மகிழ்ச்சியாக இருக்கத் தெரியாது, மகிழ்ச்சியாக இருப்பதற்காக எழுதுகிறேன்' என்றார். அதுபோல் தான் எதற்காக எழுதுகிறேன் என்பதை தேவஅபிரா உட்கிடக்கையாகச் சொல்வதை இத்தொகுப்பை வாசிக்கும் நீங்களும் சிலவேளைகளில் கண்டுகொள்ளக்கூடும். அவ்வாறு கண்டுகொள்ளும்போது அந்த அலைவரிசையில் நீங்களும் இருந்தால் தேவஅபிராவின் கவிதைகளை உங்களுக்கு  நெருக்கமாய் உணரவும் கூடும்.

(ஜூன் மாதம் கனடாவில்  நிகழ்ந்த தேவஅபிராவின் 'இருள் தின்ற ஈழம்' நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

வடுக்களின் அடையாளமாக.....

Thursday, July 11, 2013

இளங்கோவின் ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ -
-க. நவம்
   
புறநடைகளிருப்பினும், பொதுவாக ஒரு தொகுப்பிலுள்ள கதைகளில், ஒரு கதையின் தலைப்பே புத்தகத்தின் பெயராய் இருப்பது வழக்கம். ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்என்ற பெயரை பொருளடக்கத்தில் தேடினேன்; காணவில்லை. கதைகளுக்குள் அதன் அடிமுடி தேடியலைந்தேன்; அகப்படவில்லை. எமது உடலின் Central Nervous System எனப்படும் மைய நரம்புத் தொகுதியின் நடுப்பகுதியில் உள்ள Grey Matter எனப்படும் நரைச் சடலத்திற்கும் இந்தக் கதைகளுக்கும் சம்பந்தமிருக்க வாய்ப்பில்லை. பதிலாக ஒரு தெளிவோ, நிச்சயமோ அற்ற இடைநிலையின் குறியீடாகவே சாம்பல் நிறத்தைக் கருதவேண்டியுள்ளது.

ஆனால், வைரவர் எப்படி இங்கு வந்து சேர்ந்தார்? யாழ்ப்பாணத்தில் பாவம், வைரவர் ஒரு சாதி குறைஞ்ச சாமி; பஞ்சக் கடவுள். ஆனாலும் சமூகத்தின் காவல் கடவுள். இனி, இந்த நிச்சயமற்ற சாம்பல் நிறவானத்தையும் அல்லது எல்லாம் எரிந்து முடிந்துபோய் சாம்பலாய் மிதக்கும் வானத்தையும்அதில் மறையும் வைரவரையும் பொருத்தி ஊகிக்கும் பொறுப்பை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

இந்த நூலின் நாலாம் பக்கத்தில்சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ – சிறுகதைகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிகழ்வின் அழைப்புப் பிரசுரத்தில்கதைகளின் தொகுப்பு வெளியீடுஎன்றுதான் கூறப்பட்டுள்ளது. இது தற்செயலானதோ அல்லது இளங்கோவின் கடைசி நேர self realization னோ சொல்லத் தெரியவில்லை. இந்தக் கதைகளைப் படித்தபோது கதைகளின் தொகுப்பு’ எனச் சுட்டுவதே பொருத்தமெ எனக்கும் தோன்றியது.

உருவத்திலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி, சிறுகதைக்களுக்கான மரபார்ந்த கட்டுக்கோப்பை இளங்கோ இதில் உடைத்தெறிந்திருக்கிறார். 4 பக்கக் கதையுமுண்டு; 16 பக்கக் கதையும் இதிலுண்டு.

பிரபல ஐரிஷ் எழுத்தாளரான Joseph O Corner சொல்வதுபோன்று, A moment of profound realizationனாக - ஆழ உணர்ந்தறியும் ஒரு கணப்பொழுதாக, ஒரு நிசப்த வெடிகுண்டாக, ஒரு சின்னஞ்சிறு நிலநடுக்கமாக அதிரும் சிறுகதையும் உண்டு. அதேவேளை, சிறுகதை வரம்புகளை மீறி, ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களினதும் அவற்றின் பின்புலங்களினதும் வளர்த்தெடுப்பினூடாக, வாழ்வியலின் பெருங்கூறுகளை சுவைபடச் சொல்லும் நெடுங்கதையும் இதில் உண்டு. ஆக, கட்டற்ற சுதந்திரத்துடன்கூடிய - மரபை மீறிய, கட்டுடுடைப்பு முயற்சியை இத்திரட்டில் இளங்கோ மேற்கொண்டிருகின்றார். படைப்பிலக்கிய இயங்கியலின் யதார்த்த பூர்வமான ஒரு முன்னகர்வாகவே இதனைக் கொள்ளவேண்டும்.

இதிலுள்ள 12 கதைகளையும் ஒட்டுமொத்தமாக உற்று நோக்கும்போது, இரண்டு முக்கிய விடயங்களை அவதானிக்கலாம். போர்க்காலக் கொடூரங்கள் குறித்து, ஈழத்துப் படைப்பாளிகள் பலரும் தமது மௌனம் கலைத்து, பக்கச் சார்பற்ற விமர்சனங்களையும் கண்டனங்களையும் இப்போது முன்வைக்கத் துவங்கியுள்ளதன் குறியீடாக இந்தக் கதைகளைப் பார்க்க முடிகின்றது. மௌனத்துக்கெதிரான போராட்டம்தானே உண்மையான எழுத்து! அந்த வகையில், புதிய தலைமுறைப் படைப்பாளி ஒருவரின் கதைகளினூடாக, ஈழத்தில் இடம்பெற்ற இனமோதல்களினதும் யுத்தத்தினதும் வலியையும் வேதனையையும் உணர்ந்தறிய முடிவது முதலாவது விடயம். ‘ஹேமா அக்கா,’ ’கொட்டியா,’ ’மினி,’ ’சிறகுவளர்ந்த குஞ்சுகளுடன் பறந்து போனவன்,’ ’கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்?’ போன்ற கதைகளை உதாரணங்களாகச் சொல்லலாம்.

அடுத்ததாக, அதே புதிய தலைமுறையைச் சார்ந்த படைப்பாளியின் அனுபவத்தினூடாக, கனடா போன்ற புலம்பெயர் தேசங்களில் வந்திறங்கிய இளம் தமிழ்ச் சந்ததியினர் சந்திக்கும் சமூக, அரசியல், பொருளியல், உளவியல், கல்வியியல், பண்பாட்டியல் சிக்கல்களையும் போராட்டங்களையும் இனங்காணமுடிதல் இரண்டாவதம்சம். பழகிப்போன வாழ்வியல் கட்டுமானத்தைத் தகர்த்தெறிந்து புதிய வாழிடச் சூழலுக்கு ஏற்ப தம்மை இசைவாக்கம் செய்துகொள்ளவதற்கென இவர்கள் மேற்கொள்ளும் எத்தனங்கள் எல்லாமே எல்லாருக்கும் உவப்பானவையல்ல. ஆயினும் சமூக அசைவியக்கத்தின் தவிர்க்க முடியாத கூறுகள் எனும் வகையில் அவற்றைச் சகித்துக்கொள்வதை விட வேறு வழியுமில்லை. ’ஆட்டுக் குட்டிகளும் உதிர்ந்த சில பழுப்பு இலைகளும்,’ ’யாழ்ப்பாணியின் சோக வாக்கு மூலம்,’ ’சிறகுவளர்ந்த குஞ்சுகளுடன் பறந்து போனவன்,’ ’துரோகி,’ ’பனி,’ ’கள்ளி’ ஆகியவற்றை அவ்வகைப்பட்ட கதைகளுக்கு உதாரணங்களாகச் சொல்லாம்.

இத்தொகுதியிலுள்ள அநேகமான கதைகளை, இளங்கோ தனது சொந்தக் கதைகளைச் சொல்கின்றாரோ என எண்ணி வியக்கும் விதத்தில், உண்மைத் தன்மையுடன் சொல்லியிருப்பது வாசகர்களுடன் மிகுந்த அணுக்கத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் யுத்தமும், வன்செயலும், மரணமும், பிரிவும், தனிமையும், அகதி வாழ்வின் அலைக்கழிவும், வேர்கொள்ள முடியாத வெறுமையும் ஒன்று திரண்ட துயர வெளிப்பாடுகளாகக் காணப்படும் பெரும்பாலான கதைகளில் வரும் கதை சொல்லி, ஒரு சிறுவனாகவோ அல்லது ஒரு பதின்ம வயதினனாகவோ அல்லது ஒரு பச்சை இளைஞனாகவோ இருப்பதன் காரணமாக, அக்கதை சொல்லியின் ஆற்றாமையையும், இயலாமையையும், கையாலாகாத் தன்மையையும் அநேகமான கதைகளில் உணரமுடிகின்றது. இக்கதைகள் கிளர்த்திவிடும் ஒருவித பச்சாதாபம் கலந்த துயரத்திற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம்.

இவற்றுடன், வயதால் மூத்த தமிழ் மாணவியுடன் பேரம்பேசி முத்தம் பெறுதல், ஆடையவிழ்ப்பு நடனங்களில் ஆர்வம் காண்பித்தல், பல நண்பிகளுடன் படுக்கையைப் பகிர்தல், உடலுறவுகள் - அந்தரங்க உடலுறுப்புகள் பற்றிப் பச்சை பச்சையாகப் பேசுதல், பதின்ம வயதினருக்கே உரிய விருப்பங்களையும் வேட்கைகளையும் ஒளிவு மறைவின்றி விபரித்தல் போன்ற சம்பவங்கள் இத்திரட்டில் சர்வ சாதாரணமாக இடம்பெறுகின்றன. அடக்கமானவர்களுக்கும் அளவு கடந்த மரபுவாதிகளுக்கும் இது அசூசையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தலாம். ஆயினும் புதிய வாழிடத்தின் பண்பாட்டு நெருக்கடிகளையும் சிக்கல்களையும் தரிசிக்க மனங் கொள்பவர்களுக்கு, இவை விரசமற்ற புதிய அனுபவ வெளிப்பாடுகளாகவே தென்படும். மனித நடத்தைகள் அனைத்தினதும் மூலமுன்மாதிரி பாலியல் தானே என Sigmund Freud சொன்னதையும்I don’t know the question but definitely sex is the answer என்று ஹொலிவூட் பிரபலம் Woody Allen ஒருமுறை சொன்னதையும் ஒப்புக்கொள்பவர்களுக்கு இது ஒரு பிரச்சினையாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை.

க.நவம்
கௌரவக் கொலைக்கு ஆளாகவிருந்த பெண்ணொருத்தியின் உயிரைத் தனது தனது சொந்தக் கௌரவம் காரணமாகக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்ற குற்ற உணர்வைக் கோடிட்டுக் காட்டும்கள்ளிஎன்ற கதையானது, வாசனையால் கவரப்படுதல் மனிதர்களிடத்து மட்டுமன்றி எல்லா உயிரினங்களிடத்தும் காணப்படும் ஓர் உள்ளார்ந்த இயல்பூக்கம். எங்களை அறியாமலே எங்கள் உடலில் Pheromones எனப்படும் இரசாயனத் திரவம் ஒன்று சுரக்கப்படுகின்றது. இதன் வாசனையை எமது மூக்கிலுள்ள முகர்வுக் கலங்கள் இனங்கண்டு, மூளையின் Olfactory lobes எனப்படும் மணவுணர்ச்சிக் கோளங்களுக்கு அனுப்பி வைக்கின்றன. உடலில் இருந்து இவ்வாறாக வெளிப்படும் சிலவகை வாசனைகள் சிலருக்கு பாலியல் உணர்வைத் தூண்டவல்லன. ஒருமுறை கிடைத்த வாசனை அனுபவத் தூண்டல், மீண்டும் எந்நேரத்திலும் எவ்வளவு தூரத்திலிருந்தும் ஏற்படலாம். இது மலரின் வாசனையையோ அல்லது மசாலாத் தோசையின் மணத்தையோ அல்லது மாட்டுச் சாணத்தின் நெடியையோ ஒத்ததாக இருக்கலாம். இதனால்தான், எத்தியோப்பியா போன்ற நாடுகளில் எதிர்ப்பாலாரைக் கவர்ந்திழுக்கவென ஆண்கள் பசுமாட்டெருவை உடலிலும், பெண்கள் பசு நெய்யைத் தலையிலும் தடவிக்கொள்ளும் ஒரு பாரம்பரியம் உண்டு. ’கள்ளிகதையில் வரும் நாயகனும் ரொறொன்ரோ நகரின் பஸ் வண்டிகளிலும் சப்வே வாகனங்களிலும் தனது மனதுக்குப் பிடித்த வாசனையைத் தேடியலைதல் ஒரு சுவாரசியம் மிக்க வித்தியாசமான கதையாகும்.

இவை அனைத்திற்கும் மேலாக, இளங்கோவிடம் இயல்பாகவே காணப்படும் சுயவிமர்சனமும், எள்ளலும், அங்கதமும் அலாதியானவை. மனதுக்கு உவப்பில்லாத விடயங்களைக்கூட வாசகரது மனக் குளத்தில் நாசூக்காக விட்டெறிந்து சட்டென விலகிச்சென்றுவிட இவை அவருக்கு உதவுகின்றன. அலுப்புச் சலிப்பின்றி இவரது கதைகளை ஒரே மூச்சில் படித்து முடிக்க வேண்டும் என்ற உந்துதலை இவை எமக்குத் தருகின்றன. இதனால், ஒரே தன்மையதான எம்மவர்களது கதைகளைப் படித்துப் படித்துக் கண்ணயர்ந்துவிடும் வாசகனுக்கு, இளங்கோவின் கதைகள் ஒருவித மாறுபட்ட அனுபவத்தையும், உற்சாகத்தையும் தருகின்றன

ஆயினும், ‘ஒரு கருத்தைச் சொல்வதற்கு ஒரே சொல் போதும் என்று இருக்கும்போது, இரண்டு சொற்களைச் செலவு செய்யாதேஎன்று யாரோ ஒருவர் சொல்லி வைத்ததை இங்கு நானும் சொல்லியாக வேண்டும். எந்தவொரு கலைப் படைப்புக்கும் காத்திரமான உள்ளடக்கத்துடன், கலைத்துவமும் கட்டிறுக்கமும் மிக்க உருவமும் முக்கியமாகும். ‘மினி,’ ‘கொட்டியா,’ ‘மூன்று தீவுகள்’ போன்ற சில கதைகளில் கட்டிறுக்கம் போதாமைக் குறைபாடு தூக்கலாக வெளித்தெரிவதை, இளங்கோ கவனதில் கொள்வாரென நம்புகிறேன்.

முடிவாக, யாழ்ப்பாணத்தில் அதிலும் வல்வெட்டித்துறையில் அதிலும் விசேடமாகப் பொலிகண்டியில் பிறந்து வளர்ந்த நான், துவக்குத் தூக்கித் திரிந்த ஒருபோராளியைத் தன்னிலும் ஒருபோதும் கண்டதில்லை. எனது கடைசிக் கால இலங்கை வாழ்க்கை கொழும்பில்தான் கழிந்திருந்த போதிலும் நெடியால் பெயர்பெற்ற களுபோவிலை கால்வாயை நான் நேரில் போய்க் கண்டதேயில்லை. கால்நூற்றாண்டுக்கு மேலாக ரொறொன்ரோவில் வாழ்ந்தவிட்ட போதிலும் சீஎன் கோபுரத்தையே இன்னமும் நான் போய்ப் பார்க்கக் கிடைக்கவில்லை. இந்த இலட்சணத்தில், கியூபாவுக்குச் சுற்றுலா சென்றேன் என்று சும்மா சொன்னலும் நீங்கள் நம்பமாட்டீர்கள். அப்படிபட்ட எனக்கு, கியூபாவின் இயற்கை அழகையும், வன்னிமண்ணின் போர்ச் சுழலையும், களுபோவிலைப் பாலத்தையும் இதுபோன்ற ஏனைய பல பின்புலங்களையும் அச்சொட்டாகக் கண்முன்னே வரவழைத்துக் காட்சிப்படுத்தி, மனதில் வாசிப்புப் பரவசத்தை ஏற்படுத்துகின்றார், இளங்கோ.

கவித்துவமும் கற்பனைத்திறனும் மிக்க ஒரு நல்ல படைப்பாளியாக இருப்பதற்கு சரஸ்வதி கடாட்சம் தேவை என்பதில் எனக்குச் சற்றேனும் நம்பிக்கை இல்லை. ஒரு கொஞ்சத் திறமையும் தேடலும் இருந்தால் போதும். இவற்றிற்கு மேலாக, வாழ்வின் வடுக்களை நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் இருக்கவேண்டும் என்பதில்தான் எனக்கு அளவிறந்த நம்பிக்கை உண்டு. அந்த ஆற்றல் இந்த நூலின் ஆசிரியர் இளங்கோவுக்கு நிறையவே உண்டு! ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்அதற்கு ஒரு நல்ல சாட்சியம்!

-------------------------------
(இதன் சுருக்கிய வடிவம் ஜூலை மாத 'தீராநதி'யில் வெளியானது)