கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இளையராஜா இசைக்கச்சேரி

Friday, November 30, 2018

Surgeryற்குப் பின், அவ்வப்போது வைத்தியரைப் பார்த்து மூக்கு என்ன நிலையில் இருக்கின்றது என்று சோதித்ததை  விட இந்த 2 வாரங்களில் வெளியே எங்கும் போக இல்லை. இப்படி வீட்டிற்குள் முடங்கிக்கிடந்த என்னைப் பார்த்த நண்பர் , ஒன்று மூக்கை உறிஞ்சுக்கொண்டிருக்கின்றாய் அல்லது முகப்புத்தகத்திற்குள் ஏதேனும் சர்ச்சைகள் வருகின்றவனா என மூக்கை நுழைத்துக்கொண்டிருக்கின்றாய், ஏதேனும் உருப்படியாய் செய்யக்கூடாதா என்றார்.

ஏன் நினைத்த நேரத்திற்கு நித்திரை நன்கு   கொள்கின்றேனே, அது உருப்படியான ஒரு செயல்தானே என்றேன். அவர் முறைத்துவிட்டு, இளையராஜாவின் இசை நிகழ்ச்சியிற்குப் போவாமா என்று இன்று மாலை கேட்டார். நிகழ்ச்சி நடப்பதற்கு மூன்று மணித்தியாலங்களுக்கு முன் கேட்டால், என்ன செய்வதென முதலில் திகைப்புத்தான் வந்தது.

நான் மாயா(M.I.A) , ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோரின் அதிதீவிர இரசிகனே தவிர இளையராஜாவின் இரசிகனல்ல. இவர்கள் இருவரினதும் live concert களை ஏற்கனவே பார்த்துமிருந்தேன்.   'ஏ.ஆர்.ஆர் இரவில் இசையமைப்பார், ஆனால் ராஜா இரவிற்கென இசையமைப்பார்' என சந்தோஷ் நாராயணன் போன்று இசையைப் பற்றி மனோரதியமாய் நான் எழுதுபவனுமனல்ல. அப்போது கூட, 'ஏ.ஆர்.ஆர் இரவில் இசையமைத்தாலும் (அவர் என்னைப்போன்றவர்க்கு) அலுப்பில்லாது 24 மணி நேரமும் துணையிருப்பவர்' என்றுதான் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

என்னுடைய காலத்துப் பலர் ராஜாவின் இரசிகர்களாக இருந்தாலும், நான் ஏ.ஆர்.ஆரின் இரசிகன். எப்படி ராஜாவின் தீவிர இரசிகர்கள் ராஜாவை விட்டு நீங்கமாட்டாது அடம்பிடிப்பார்களோ, அப்படி ஏ.ஆர்.ஆரின் திறமையும் ஒருபக்கம்  சேடமிழுத்தாலும், நான்  ஏ.ஆர்.ஆரின் இரசிகனே இப்போதும்.

இப்படி ஏ.ஆர்.ஆரை 'வழிபடும்' ஒருவன், ராஜாவின் நிகழ்ச்சியிற்குப் போவதென்பதற்கு இரண்டு காரணம். ஒன்று இனிவரும் காலங்களில் ராஜாவின் இப்படியான இசைநிகழ்ச்சியைப் பார்ப்பது அவ்வளவு அரிதான ஒரு சந்தர்ப்பமாக இருக்கும், ஆகவே நம்மிடையே இருக்கும் அதிசிறந்த கலைஞரான அவரை ஒருமுறையேனும் நேரில் பார்க்க வேண்டும்.  இரண்டாவது அவருக்கென வூடாபெஸ்டிலிருந்து பின்னணி இசைக்க வந்த கலைஞர்கள்.

ராஜா கடந்தமுறை இங்கே இசை நிகழ்ச்சி செய்தபோது செய்த சில சிறுபிள்ளைத்தனங்களை ஏற்கனவே அறிந்திருந்தேன். அது அநேக கலைஞர்களுக்கும் இருக்கும் ஒருவகையான 'கிறுக்குத்தனம்' என்பதாகவும் புரிந்துவைத்திருந்தேன்.

ஆக, அதிகம் எதிர்பார்க்காது போனதால் நிகழ்ச்சி என்னைப் பொறுத்தவரை நிறைவாக இருந்தது. இந்த நிகழ்வில் ராஜா பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. அவரில்லாமலே இந்த நிகழ்ச்சியைச் செய்து முடித்திருக்கமுடியும். அவர் பாடிய 3-4 பாடல்களில், 2 பாட்டை அவராலேயே ஒழுங்காகப் பாடமுடியாதிருந்தது. பெருந்தன்மையாக ஒன்றுக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். குறைகள் இருப்பதுதானே எல்லாவற்றிற்கும் அழகு. நிறைவின்மையின் வனப்பு அவ்வாறான குறைகளில்லவா ஒளிர்ந்துகொண்டிருக்கும்.

எனக்கு இந்த நிகழ்ச்சியில் ராஜாவைப் பார்த்தபோது, அவர் செய்த சாதனைகளை கடந்தகாலத்தில் போய் ஒருவர் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல, தனது இசையின் நுட்பங்களை ஒருமுறை மீள ஆறுதலாக நின்று இரசிப்பவர் போலத்தான் தோன்றியது. அது ராஜாவின் பலவீனமல்ல. தனது காலம் கடந்துகொண்டுவிட்டதை ஏற்று, அதை இரசிக்கும் சாதித்த ஒருவரின் பயணம் எனலாம்.

ராஜாவை மட்டுமில்லை, ஏ.ஆர்.ஆரையும் கூடக் கடந்து ஒரு தலைமுறை தமிழில் வந்துவிட்டது. நம் ஒவ்வொருவருக்கும் வயதாகிக்கொண்டிருப்பதைக் கூட இப்படி நமது காலத்து இசை/இலக்கியம்/கலை ஆளுமைகளினூடாகக் கண்டும் கொள்ளலாம். ஒருவகையில் அவர்களை அங்கீகரிப்பது, நமது வாழ்வின் இலைகள் நிறமாறவும், பழுக்கத் தொடங்குவதையும் அனுமதிப்பது என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.

நிகழ்வில், ராஜா காரணமேயில்லாமல் எல்லோரும் சத்தம் போடாது கேட்கவேண்டும் ஒரு ஆசிரியரைப் போல வெருட்டினார். இடையில் தான் மிகக் கஷ்டப்பட்டு இங்கே இசை நிகழ்ச்சி தர வந்திருக்கின்றேன் என்றும் சொன்னார். அதைவிட என்னுடைய பாட்டுக்கள் இல்லாது உங்களால் உயிர்வாழமுடியுமா கண்ணா எனவும் சிலாகித்தார். நிகழ்ச்சி முடிய இரண்டு பாட்டுக்கள் இருக்கும்போதே உரிய முறையில் இரசிகர்களிடமிருந்து விடைபெறாது மேடையிலிருந்து ஒன்றும் சொல்லாமலே இறங்கியும்போனார்.

இவையெல்லாம் ராஜாவின் தீவிர இரசிகராய் இருக்கும் ஒருவருக்கு பெரிய விடயங்களல்ல. நமது ஜெயமோகனிடம்  கேட்டால் அந்தக் கர்வந்தான் ஒருவரைக் கலைஞராக்கின்றது என்பார். எனக்கும் ராஜாவின் இசைக்கு அப்பாலான கிறுக்குத்தனங்கள் தெரியும் என்பதால் இவை பெரிதாகத் தெரியவில்லை. எனது நண்பருக்குத்தான் ராஜாவின் இந்த attitude பிடிபடவில்லை. புலம்பிக்கொண்டிருந்தார்.

ராஜாவின் ஒரு நிகழ்ச்சியிற்கு மட்டும் வந்து இப்படி குறைகள் சொல்கின்றீர்கள், தினமும் ஜெயமோகனின் வலைத்தளத்தை வாசிக்கும் என்னைப் போன்றவர்களின்  நிலைமைகளையும் தயவு செய்து நீங்கள் யோசித்துப் பார்க்கவேண்டும் என்றேன். அத்தோடு அவர் அமைதியாகிவிட்டார்.

மற்றும்படி மூன்று மணித்தியாலங்களிற்கு மேலாய் நீண்ட இந்த நிகழ்ச்சி எங்கள் இருவருக்கும் பிடித்திருந்தது. ஓர் அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிடாததில் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

(Apr 02, 2018)

ரொறொண்டோவில் தமிழ்ப்புத்தகங்கள் இரவல் பெறுவது பற்றி..

Sunday, November 11, 2018

1.
ரொறொண்டோ மாநகரசபையின் கீழ் 100 நூலகக் கிளைகள் இருக்கின்றன. அதில் 24 கிளைகளில் தமிழ் நூல்களை நாம் நேரடியாகச் சென்று எடுக்கும் வசதி இருக்கின்றன. ரொறொண்டோவில் -ஆங்கிலம்/பிரெஞ்சு தவிர்ந்த- பிறமொழிகளில் சீன மொழிக்கு அடுத்து, தமிழ்ப்புத்தகங்களை நூலகங்களில் வந்து எடுக்கும் தமிழர்களே இருக்கின்றார்கள். தமிழுக்குப் பிறகே இந்தி உள்ளிட்ட ஏனைய மொழிகள் இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.
எனினும் கடந்த நான்கு வருடங்களில் சடுதியாக தமிழ்ப்புத்தகங்களை நூலகத்தில் எடுத்து வாசிப்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 44%மாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது. 2013ல் ரொறொண்டோ நூலகங்களில் இருந்து எடுக்கப்பட்ட புத்தகங்கள் 163, 077 ஆகவும், பின்னர் 2017ல் 102,015 ஆகி வீழ்ச்சியடைந்திருக்கின்றது.
இன்றைய கூட்டத்தில் இதற்கான காரணங்கள் என்ன, எப்படி இதை மாற்றமுடியும் என்பது பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டிருந்தது. நான் இந்தக்கூட்டத்திற்குப் போனபோது 2 கேள்விகள் கட்டாயம் கேட்கவேண்டும் என்றே போயிருந்தேன். அதே வேண்டுகோளை வந்திருந்த பிறரும் கூறியதால் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
(1) ஈழத் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் ரொறொண்டோவில் இலங்கைப் புத்தகங்கள் அரிதாகவே வாசிக்க நூலகத்தில் கிடைக்கின்றது.
(2) புலம்பெயர்ந்து எழுதும் எழுத்தாளர்களின் படைப்புக்களும் குறைவாகவே காணக்கிடைக்கின்றன (ரொறொண்டோவில் கிட்டத்தட்ட ஒவ்வொருமாதமும் ஏதோ ஒரு தமிழ்ப்புத்தகம் வெளியிடப்படுகின்றது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்).
குறைகேள் நிகழ்வில், வாசிப்பு 44% குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. அடுத்தடுத்த தலைமுறைகள் தமிழ்ப்புத்தகங்களை வாசிப்பது குறைவு என்பது ஒரு காரணம் என்றாலும், இப்போது அதிக தமிழர்கள் ரொறொண்டோவைத்தாண்டி (ரொறொண்டோவில் வீட்டுவிலை அதிகரிப்பால்) புறநகருக்கு வாழச்சென்றுகொண்டிருப்பதாலும் இந்த வீழ்ச்சி நடந்திருக்கலாம் என்று இலங்கதாஸ் கூறியது கவனிக்கத்தக்கது.
மற்றொரு முக்கிய காரணம் நூலகத்திற்கான புத்தகங்களை எப்படித் தெரிவு செய்கின்றார்கள் என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், கடந்த சில வருடங்களாக ஒரு குறிப்பிட்ட பதிப்பாளர்களின் புத்தகங்களை மட்டுமே இங்கே பார்க்க முடிகிறது என்பதையும் சொல்லியாகவேண்டும். உண்மையில் நூல்களைத் தெரிவு செய்யும் முறையானது இன்னும் சனநாயகத்தன்மையுடன் பல்வேறுவகையான வாசிப்பு நிலைகளைக் கொண்டவர்களின் ஒரு குழுவாக இருக்கவேண்டும் என்பதையும் நாம் பரிந்துரைக்கவேண்டும்.
ரொறொண்டோ நூலகத்தில் வேலை செய்பவர்களும், அதற்கு வெளியே இருக்கும் சிலரும் சேர்ந்தே இந்த நூல்களை வாங்கிக் கொள்கின்றனர். சிக்கல் என்னவென்றால் இன்றைய கூட்டத்திற்கு நூல்களை வாங்கிக்கொடுப்போர் எவருமே வரவில்லை என்பதேயாகும். நான்கு வருடங்களுக்கு முன் கிட்டத்தட்ட ஒரு லட்சம் டொலர்கள் தமிழ் நூல்கள் வாங்க நூலகத்தால் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்றறிந்தபோது வியப்பாக இருந்தது. ஆனால் நமக்குக் கிடைக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை/தரம் போன்றவற்றைப் பார்க்கும்போது அந்த நிதி உரியமுறையில் செலவு செய்யப்படவில்லை என்பதில் ஏமாற்றமாகவே இருக்கின்றது.
எத்தனையோ ஆண்டுகள் ஆனபின்னும், தமிழ் நூல்களை வாங்கி நூலகத்தில் சேர்ப்போர் இற்றைவரை பொதுவெளிக்கு -புலம்பெயர்ந்து புத்தகங்களை வெளியிடும் எம்மிடம்- இன்னும் வரவில்லை என்பது ஒருபுறம் இருக்க, இத்தனை ஆண்டுகளானபின்னும் (முன்னராவது போர் இலங்கையில் நடந்தது என்ற ஒரு காரணம் இருந்தது) இலங்கையில் இருக்கும் வெளியீட்டாளர்களுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்தாமல் இருப்பதை அவ்வளவு எளிதில் கடந்து செல்லமுடியாது.
இலங்கையில் இருந்து கவனிக்கத்தக்க படைப்புக்கள் என வைத்துக்கொண்டால் ஒரு நூறு புத்தகங்கள் வருடமொன்றுக்கு வருமென்றால், அதை சற்றுத்தேடி இங்கே நூலகங்களுக்கு எடுப்பதற்கு இவர்களுக்கு ஏன் ஏலாமல் இருக்கின்றது என்பதும் புரியவில்லை.
ரொறொண்டோ நூலக -தமிழ் தெரியாத- பொறுப்பாளர் ஒருவருடன் தனிப்பட்டு உரையாடியபோது, பல பதிப்பகங்கள் இப்படி நூல்களை வாங்கும்போது, தமது பதிப்புக்களைக் கொடுக்க விரும்பவில்லை எனச் சொன்னார். அப்படி இருக்கமுடியாதென நானும் இன்னொரு நண்பரும் அவருக்குச் சொன்னோம். பதிப்புரிமை சார்ந்து தமது நூல்களைக் கொடுக்க வெகு சில பதிப்பகங்கள் தயங்கி இருக்கலாம். இவ்வாறு ரொறொண்டோ நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொடுக்க மறுத்திருந்தால் யாரேனும் பதிப்பாளர்கள் (இந்திய/இலங்கை) இருந்தால் அறியதரலாம்.
ஏற்கனவே இருக்கும் ஒரு பொறிமுறையை முற்றாக நிராகரித்து, புதிதாக ஒன்றைத் தேடவேண்டும் எனச் சொல்லவில்லை. இருக்கும் பொறிமுறையை இன்னும் செப்பனிடுவதற்கான புதிய அடிகளை ரொறொண்டோ நூலக தமிழ்ப்புத்தகத்தேர்வில் நாங்கள் எடுத்துவைக்க வேண்டியிருக்கின்றது என்பதாலே இதை எழுதுகின்றேன். 2.
நாங்கள் எடுக்கும் புத்தகங்களின் எண்ணிக்கையை வைத்தே ஒவ்வொரு மொழிக்கும் ஒதுக்கும் நிதி ரொறொண்டோவில் இருக்கின்றது. ஆங்கிலம்/பிரெஞ்சு தவிர்ந்து கிட்டத்தட்ட 40 மொழிகளில் நூல்களை இங்கே நூலகங்களுக்கு எடுக்கின்றார்கள் என்பதால், அவர்களின் வேலையின் கடினத்தையும் ஒருவகையில் புரிந்துகொள்ளமுடிகின்றது.
இயன்றளவு தமிழ் நூல்களை நூலகத்தில் எடுப்பதற்கு நாமெல்லாம் முயற்சிக்கவேண்டும். நானெல்லாம் சாதாரணமாக நூலகத்திற்குப் போனாலே ஏதேனும் ஒன்றிரண்டு தமிழ்ப் புத்தகங்களை கூடவே எடுத்து வருகின்றவன். அத்தோடு மூன்றுவாரத்தில் வாசித்து முடிக்கின்றேனோ இல்லையோ எனக்குப் பிடித்த தமிழ்ப் புத்தகங்கள் இருந்தால் பத்து/பதினைந்து என அள்ளிக்கொண்டு வருகின்றவன். அப்படி எடுக்கையில் ஒருநாள் தவணை பிந்தினால் நிறையப் பணத்தை அபராதமாகச் செலுத்தவேண்டி பலமுறை வந்திருப்பினும், புத்தகங்களுக்கும்/பொதுப்பாவனைக்கும் போகும் பணம் ஒருபோதும் வீணாகாது என்பதால் அது குறித்து ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. அண்மையில் 'அந்நியனை'ப் பார்த்து எடுத்துவந்து எங்கையோ தவறவிட்டதால் 25டொலர்கள் தண்டப்பணமும் கட்டியிருக்கின்றேன்.
எமது பிற நண்பர்களையும் நிறையப் புத்தகங்களை எடுக்க வைக்க முயற்சிக்கலாம். மேலும் உங்களுக்கு அருகில் இருக்கும் நூலகத்தில் (24 கிளைகளில் மட்டும் தமிழ்ப்புத்தகங்கள் இருக்கின்றன) தமிழ்ப்புத்தகங்கள் இல்லையென்றாலும், நீங்கள் இணையத்தில்/நேரில் ஓடர் கொடுத்தால் வேறு கிளைகளிலிருந்தாலும் அந்தப் புத்தகங்களை உங்கள் கிளையில் கொண்டுவந்து தருவார்கள். அப்படியும் தமிழ்ப் புத்தகங்களை எளிதாக இரவல் பெறலாம்.
மற்றது முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களில் மட்டும் எழுதுவதோடு நின்றுவிடாது இவ்வாறான பொதுமக்களுக்கான கருத்துக்கேட்டறிதல் நிகழ்ச்சிகளிலும் பெருமளவு கலந்துகொண்டு நமது எண்ணங்களை அவர்களின் செவிகளுக்குக் கொண்டு செல்லலாம். ஏனெனில் எழுதுபவர்கள்/வாசிப்பவர்கள் என்று எனக்குத் தெரிந்த நண்பர்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே இன்றைய கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தார்கள் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
(Oct 16, 2018)

ஞாயிறு குறிப்புகள் - 02

Saturday, November 10, 2018

1.
அண்மையில் வாங்கியிருந்த மெளனியின் முழுத்தொகுப்பைக் கையில் வைத்து நீண்டநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். 24 கதைகளை மட்டுமே எழுதிய ஒருவர் எழுத்தால் இன்னும் உயிர்வாழ்ந்துகொண்டிருப்பது ஒருவகையில் அதிசயம் போலத் தோன்றியது. எழுதிய 24 கதைகளில் அரைவாசியளவுக்கு, சாதாரண கதைகளாக உதிர்ந்துபோக சாத்தியமிருப்பினும் மெளனி இன்றும் நம்மிடையே பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றார் என்பதே சிறப்பு.

1936ல் முதல் கதையிலிருந்து ஆறுகதைகள் வரை அந்த ஆண்டிலேயே மணிக்கொடி இதழில் பிரசுரமாயிற்று. அவரது தொடக்கக் கதைகளான 'ஏன்?', 'சுந்தரி', 'காதல் சாலை', 'கொஞ்சத் தூரம்' என்பவற்றை நல்ல கதைகளாக எழுதுவதற்கான முயற்சியென எடுத்துக்கொண்டால், 'குடும்பத் தேர்' நல்ல கதையாகி, 'பிரபஞ்ச கானம்' சிறந்த கலைப்படைப்பாக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. 'பிரபஞ்ச கானம்' கதையைப் பற்றிப் பலர் விரிவாகப் பேசிவிட்டாலும், பிரமிளைப் போல சிலாகித்துப் பேசியவர் எவருமில்லை என்பதே என் துணிபு.

பெரும்பாலான இந்தக்கதைகளில் வரும் முக்கியபாத்திரம் தனக்குள்ளே ஒரு 'ஏன்'ஐ வைத்தபடி அலைந்தபடி இருக்கின்றது. சில கதைகளில் அந்த ஏன்களுக்கு ஒரு விடையைக் கண்டுபிடித்து அமைதிகொள்கின்றது. சிலதில் அந்த ஏன்கள் இன்னும் நிறைய ஏன்களை பெருக்கியபடியும் இருக்கின்றது. 'குடும்பத்தேர்' கதையில் ஒரு மகனுக்கும் தாயுக்குமான உறவு பற்றிப்பேசப்படுகின்றது. இளவயதில் மட்டும் அல்ல, முதியவயதிலும் தாய் ஒரு வழிகாட்டியாக இருப்பதை மகன் பாத்திரம் தெளிவாக உணர்ந்துகொள்கின்றது. தன்னை வெளியுலகம் திறமையுள்ள மனிதன் எனப் பாராட்டுவதெல்லாம் தன் தாயினால் தனக்குக் கிடைக்கும் அணுசரனையால் என்பதைத் தெளிவாகவே மகன் பாத்திரத்திற்கு விளங்குகின்றது.

முதிய வயதில் தாய் இறக்கும்போது அவரின் இழப்பு மகனில் பெரும் வெற்றிடத்தை உருவாக்குவதோடு, தன்னால் எதையும் தாயில்லாது தனித்துச் செய்யமுடியாது என்று பதற்றமும் கொள்ளச் செய்கின்றது.  இவ்வாறு பல்வேறு வகைகளில் குழப்பித் தவிப்பினும் இறுதியில் 'குடும்பம் ஒரு விசித்திர யந்திரம் - பழுதுபட்ட ஒரு பாகத்தினால் அது நிற்பதில்லை. அதற்குப் பிரதி மறுபாகம் தானாகவே உண்டாகிவிடும்.. என எண்ணிக்கொள்கின்றது.  குடும்பம் என்றில்லை, உறவுகள், வேலை என இன்னபலவும் இவ்வாறே ஏதோ ஒருவரால்/ஒன்றால் பிரதிசெய்யப்பட்டுவிடுகின்றது. ஆனால் மனித மனங்கள்தான் இதெல்லாம் இயல்பு என ஏற்றுக்கொள்ளத் தயக்கங்கொள்கின்றன.

இவ்வாறு ஒன்றை ஏதோ இன்னொன்று பிரதிசெய்துவிடும் என்கின்ற மெளனியின் சொற்களை, அவரின் படைப்புக்களை வேறொன்று இன்னும் பிரதிசெய்துவிடாதிருப்பதுடன், அவர் பின்பற்றிய சனாதன வாழ்க்கை முறையைத்தாண்டியும் அவர் படைப்புக்கள் இப்போதும் விகசித்துக்கொண்டிருப்பதுதான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று.

2.

சென்றவாரம் நானும், நண்பரொருவரும் ஒரு நிகழ்வுக்குச் சென்று கொண்டிருந்தோம். நிகழ்ச்சி நடத்துபவர்கள் பற்றிய பெரும் அபிப்பிராயம் இல்லையெனினும், அதில் பங்குபெறும் -தெரிந்த- நண்பருக்குத் தார்மீக ஆதரவு கொடுக்கவேண்டுமென வெளிக்கிட்டிருந்தோம். இவ்வளவு தூரம் போய் நிகழ்ச்சியைப் பார்த்து மனது சோர்வடைந்தால் என்ன செய்வதென, லிங்கன் ஜஸ்கிறிம் பாருக்குக் காரைத் திருப்பியிருந்தோம். இடையில் இன்னொரு நண்பரையும் ஏற்றிவிட்டிருந்தோம்.

இரண்டு வருடங்களுக்கு முன், அடிக்கடி கோடைகாலத்தில் ஐந்தாறு கிலோமீற்றர்களுக்கென நடையுலா போவோம். ஒழுங்காய் வியர்த்து விறுவிறுக்க நடக்கின்றோமோ இல்லையோ நடைப்பவனி முடிந்தவுடன் லிங்கன் ஜஸ்கிறிம் உறுதி என்பது மட்டும் எனக்கு நன்கு தெரியும். அவ்வப்போது நடைக்கு புறமுதுகுகாட்டித் தப்பிக்கும் என்னை, உன்னையெல்லாம், ஊறப்போட்ட அரிசியோடு ஒரு கிழமைக்கு பங்கருக்குள் போட்டு மூடி புளொட்டில் கொமண்டோ ரெயினிங் கொடுப்பது போன்றுதான் தண்டனை தந்து திருத்தி எடுக்கவேண்டும் என்று வேறு, என் நண்பர் பயமுறுத்துவார்.

இப்போதெல்லாம் நாமெல்லோரும் நடப்பதற்கே நேரமில்லாது அலைந்தபடி இருக்கின்றோம் என ஐஸ்கிறிமைச் சுவைத், கதைத்தபடி இருந்தபோதுதான், மேற்குத் தொடர்ச்சிமலை படத்தை எல்லோருமாய்ச் சேர்ந்து வீட்டில்போய்ப் பார்ப்போமா என ஒரு எண்ணம் வந்தது. என் தலைமுறைக்கு மட்டுமில்லை இங்கே பிறந்த தலைமுறையும் கலையின் நுட்பத்தை அறிந்துகொள்ளக்கூடாது எனக் கங்கணம் கட்டியதுமாதிரி, இங்கே தியேட்டர்களில் மேற்குத் தொடர்ச்சி மலையையோ, பரியேறும் பெருமாளையோ திரையிடமாட்டார்கள். ஆக மேற்குத் தொடர்ச்சிமலையை வீட்டில் இருந்தே பார்த்தோம்.

மேற்குத்தொடர்ச்சி மலை பார்க்கும்போது, இரண்டு விடயங்கள் மனதில் ஓடியபடி இருந்தன. இவ்வாறு ஒரு கடூழியமான வாழ்க்கை முறை தரப்படாததால் நாங்கள் பாக்கியசாலிகளா அல்லது  இப்படி இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழமுடியாது சபிக்கப்பட்டவர்களா நாங்கள் என்பதைப் பற்றியது.

நவீனத்துவகால வளர்ச்சி பற்றி விதந்துரைப்பவர்கள் கவனிக்கத் தவறுவது, உண்மையில் இந்த 'வளர்ச்சி'யானது கஷ்டப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை இன்னும் உயர்த்தியிருக்கின்றதா அல்லது இல்லையா என்பதைப் பற்றியாகும். ஏற்கனவே இருந்த வாழ்க்கையைவிட இன்னும் சிக்கலான, புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையைத்தான் வளர்ச்சி கொடுக்குமென்றால் நாங்கள் நிறையவே யோசிக்கவேண்டும் எனத் தூண்டுவதையும் மேற்குத்தொடர்ச்சிமலை செய்கின்றது.

முழுமையடையாமல் இருப்பதும் கலையின் அழகியல் என நம்புகின்றவன் நான் என்பதால் இப்படத்தில் இருக்கும் தளம்பல்களை இப்போதைக்கு விட்டுவிடலாம். எனினும் இவ்வளவு அன்பாக இருக்கும் மனிதர்கள், பிறரைக் கொலை செய்யவும் போவார்களா என மனம் ஏற்றுக்கொள்ளத்தயங்கியதையும் குறிப்பிடவேண்டும். ஆகக் குறைந்தது திரைக்கதையில் அதற்கான வலுவான பின்னணியை இழைத்திருக்கலாம் என யோசித்தேன். எனினும் அறம், மேற்குத்தொடர்ச்சி மலை என மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து வெளிவருவதும், இவற்றுக்கு தமிழ்ச்சூழல் ஆதரவை மனமுவந்து அளிப்பதும் மகிழ்ச்சி தரக்கூடியவை.

மேலும் இலக்கியம் போலவே சினிமாவையும் ஒற்றை 'அழகியல்' பார்வைக்குள் வலிந்து திணிப்பவர்க்கு மத்தியில், அது மட்டுமல்ல, இப்படி பன்மைத்துவமாக விரிந்து சடைப்பவையும், மக்களின் குரல்களைப் பேசுபவைகளும் கூட கலைகளே என நாம் உதாரணம் காட்டுவதற்கும் இவை நமக்காய் இருப்பதுவும் நிறைவைத்தரக்கூடியது.

3.

ஜி.நாகராஜனின் 'டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழுவேட்டியும் அணிந்த மனிதர்' தொகுப்பை (தொகுத்தவர்: சுரேஷ்குமார இந்திரஜித்) நண்பருக்காய் வாங்கி வந்திருந்தேன். காலச்சுவடு கிளாஸிக்குகளுக்கு அருமையான அட்டைகளை வடிவமைப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டும். இப்போது பெருமாள் முருகனின் நாவல்கள் எல்லாம் ஆங்கிலம்/ஜேர்மனில் மொழியாக்கம் செய்யும்போது, அடுத்து வரும் என் தொகுப்பை அவர்களினூடு போட்டால் ஊர் உலகத்தைச் சுற்றிப்பார்க்க ஒரு வழியுண்டாகுமோ என ஒரு 'நப்பாசை'யும் எனக்குள் இப்போது வருகின்றது.

'டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழுவேட்டியும் அணிந்த மனிதர்'  தொகுப்பில் ஒரு கதை 'நான் புரிந்த நற்செயல்கள்'. இதில் ஒரு இளைஞன், இரண்டு பிள்ளைகளுடன் இருக்கும் பாலியல் தொழிலாளியை மணந்தபின் நல்ல நிலைக்கு இருவரும் வருவார்கள். அதுபோல கதைசொல்லியுடன் ஆங்கிலத்தில் பேசி உடலையும் பகிரும் பெண், பின்னர் ஒரு எம்.எல்.ஏயினது இரண்டாவது மனைவியாகப் போவார் என்றெல்லாம் ஜி.நாகராஜன் 69லிலேயே இந்த விடயங்களை அலசி ஆராயமலே எளிதாகக் கடந்து போய்  விடுவார்.

ஆனால் எனது கஷ்டகாலம் என்னவெனில் ஜி.நாகராஜனின்ன் காலத்தில் நான் வாழாதது. ஆகவேதான் ஜெயமோகன் எழுதும் 'சேர்ந்து வாழ்பவர்கள்' போன்ற கட்டுரை/கடிதங்களை வாசித்து சுவரோடு முட்டி மோத வேண்டியிருக்கின்றது.

சேர்ந்து வாழ்பவர்க்கும் ஒருவகை அறம் இருக்கின்றது என்பது மட்டுமல்ல, மேலைநாடுகளில் 'சட்டப்பூர்வமாக திருமணம் செய்ததைப் போல' பிரிந்துபோகையிலும் அவர்கள் சட்டபூர்வமாக சொத்துக்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என அது (living together) விரித்துப் பேசக்கூடியது.. சேர்ந்து வாழ்ந்தால் என்ன, சட்டப்படி ஊர்கூடித் திருமணம் செய்தால் என்ன, உறவொன்று பிரிகையில் யாரும் மனது நோகத்தான் செய்வார்கள். அது மனித உணர்வுகளோடு சம்பந்தப்பட்டது. சட்டம்/சட்டமில்லை என்பதற்குள் இந்த மென்னுணர்வுகள் ஒருபோதும் கட்டுப்படுவதுமில்லை.

இதையெல்லாம் விடலாம் பாருங்கள் கடைசிவரியில் என்ன சொல்கிறார்

"சரி, அந்த உடலுறவேதான் எவ்வளவுநாள் சுவாரசியமாக இருக்கும்?"

இப்படி ஒருவர், சேர்ந்து வாழ்வதை உடலுறவுக்காய் மட்டுமென கொடூரமாகச் 'தொகுத்துச் சுருக்கி'ப் பார்க்க முடியுமா என்ன? இஃதென்ன கொடுமை. சட்டப்படி திருமணம் செய்துவிட்டால் மட்டும்  ஜெயமோகனின் பார்வையில் 'அந்த உடலுறவு சாகும்வரை சுவாரசியமாக இருக்கும்' போலும்.

ஜெயமோகனை எதிர்த்துப் பேசினால் கூட இப்போது பா.ஜ.கவை எதிர்த்துப் பேசுவதைப் போலப் பயமாக இருக்கிறது. அழகிய பெரியவன் அவரின் கதை பற்றிச் சொல்லிவிட்டார் என்பதற்காய் அவரை ஒருபக்கம் போட்டுத்தாக்குகிறார். ஜெயமோகனைப் போலவே அழகிய பெரியவனுக்கும் படைப்பில் உயர்வும், வீழ்ச்சியும் இருக்கின்றன. ஒருவர் தன் படைப்பைப் பற்றி விமர்சித்து விட்டாரென்பதற்காய் அவரின் முழுப்படைப்பையும் உதறித்தள்ளுவது ஒரு படைப்பாளிக்கு  அழகும் அல்ல. ஆனால் அதையேதான் ஜெயமோகன் விடாது செய்தும் கொண்டிருப்பார்.

இப்போது 'சேர்ந்துவாழ்தல்' குறித்து அவர் எழுதியது அவ்வளவு அபத்தமாக இருக்கின்றதென என்னைப் போன்ற ஒரு வாசகர் சொன்னால் அவர் கேட்கமாட்டார் என்பது தெளிவு. ஆனால் எந்த விடயமெனினும் சாப்பாட்டு மேஜையில் தன் பிள்ளைகளோடு விவாதிப்பவர் என்கின்ற ஜெயமோகன் அவரின் மகனிடமோ அல்லது மகளிடமோ இதையும் உரையாடியிருந்தால் அவர்கள் இப்படி அவரைப் போல அபத்தமாகச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பது மட்டும் திண்ணம்.


('ஞாயிறு குறிப்பு'களை எழுதச் சொல்லி உற்சாகமூட்டிய ஜெயந்தன் நடராஜனுக்கு, 
 நன்றியுடன் இந்தக் குறிப்புகள்..)