கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சே குவேரா

Saturday, December 30, 2006

-El Che: Investigating a Legend என்ற ஆவணப்படத்தை முன்வைத்து-

சே குவேரா: அவரை நேசிப்பவர்களுக்கு மட்டுமல்ல அவரை எதிர்ப்பவர்களையும் தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் பாதித்தபடியே இருக்கின்றார். நியூயோர்க் ரைம்ஸ் குறிப்பிட்டதுமாதிரி, 'சே குவேரா அவர் வாழ்ந்த காலத்தில் அல்ல; அதற்கப்பாலான -30 வருடங்களின்பின் தான்- இன்னும் பிரபல்யமாக இருக்கின்றார்' என்ற குறிப்பு கவனிக்கத்தக்கது. கனடீய நெறியாள்கையாளரால் எடுக்கப்பட்ட El Che: Investigating a Legend என்ற இவ் ஆவணப்படும், சே குவேராவின் குறிப்புக்களினூடாக மட்டுமின்றி அவரை நேரடியாகப் பரீட்சயமானவர்களின் குரல்களினூடாகவும் சே என்ற ஆளுமையைப் பதிவு செய்கின்றது.

இவ் ஆவணப்படும், சே இறந்த 30 வருடங்களின் பின், பொலிவியா அரசாங்கமும் உண்மையை ஏதோ ஒருவகையில் ஒப்புக்கொண்டு சேயைக் கொன்று புதைத்த இடத்தை அடையாளம் காட்டிய இடத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. சேயினது ஆரம்பக்குறிப்புக்களான மோட்டார் சைக்கிள் டயரிக்குறிப்புக்களிலிருந்து இப்படம் ஆரம்பித்தாலும் அந்தச் சம்பவங்களை விரைவாகக் கடந்து போகின்றது. ஏற்கனவே அந்தச் சம்பவங்கள் திரைப்படமாக்கப்பட்டதால் அப்படி நேர்ந்திருக்கலாம். சேயின் ஆளுமையில் அந்தப்பயணம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றாலும், சே பிறகு குவாத்தாமலாவில் சந்திக்கும் அரசியல் ஆளுமை மிக்க பெருநாட்டு பெண்ணுடனான (Hilda) தொடர் விவாதங்களினூடாகத்தான் அவரின் அரசியல் சித்தாந்தப் பயணங்கள் தொடங்குகின்றது. மார்க்சின் மீதான பெருவிரும்பும், ஏகாதிபத்தியம் மீதான எதிர்ப்பும் அங்கேதான் சேயில் ஆரம்பிக்கின்றது. ஹில்டாவை சே திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கின்றது.


che
பிறகு முதலாவது கியூபாப் புரட்சி தோல்வியில் முடிவுற்று சிறையில் இரண்டு வருடங்கள் கழித்த பிடலை மெக்சிக்கோவில் சே சந்திக்கின்றார். அதன்பின்னர் கியூபாப் புரட்சி நடக்கின்றது. கியூபாப் புரட்சி மிகக்குறுகிய காலத்தில் நடந்தது என்று நினைத்துக்கொண்டிருந்த -எனக்கு- Sierra Maestra மலைப்பிரதேசத்தில் வருடக்கணக்கில் தங்கியிருந்து, தமக்கான ஆயுதங்கள், ஆட்சேர்ப்பு, வானொலி பிரச்சாரம் என்று நெடிய விடயங்களை கியூபாப் புரட்சியாளர்கள் செய்திருக்கின்றார்கள் என்பது -என்னளவில்- ஆச்சர்யமாயிருந்தது. பிறகு காஸ்ரோவின் ஆணைப்படி, அவரது முக்கிய லெப்டினங்களான சேயும் இன்னொருவரும் வெவ்வேறு நகரங்களினூடாக ஹவானாவை அடைய முயற்சிக்கின்றனர். அங்கேதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த -450 கிலோமீற்றர்கள் நடந்து- சான்ரா கிளாராவை சே தனது தோழர்களுடன் வந்து சேர்கின்றார். அந்தச் சமயத்தில்தான் ஆயுதத் தளபாடங்களுடன் வருகின்ற புகைவண்டியைத் தாக்கி கைப்பற்ற, மிக முக்கிய தளமான சான்ரா கிளாராவும் பின் வீழ்கின்றது. ஒரு வைத்தியரான சே, திறம்பட போராட்டத்தை நடத்தும் ஆயுதப்போராளியாக அதில் பரிணமிக்கின்றார்.

சேயின் ஆளுமையில் கறை என -ஒரு தனி மனிதரால் நினைக்கத்தோன்றும்- பஸ்டிட்டா ஆதரவாளர்களை கழுவிலேற்றும் பணி கியூபாப்புரட்சியின்பின் நிகழ்கின்றது. 'புரட்சியின் பெயரால்..' என்று காஸ்ரோவுடன் சேர்ந்து சேயும் அவர்களுக்கான தீர்ப்பை எழுதுகின்றார். காஸ்ரோவுக்கு அடுத்த முக்கிய ஆளுமையாக சே கியூபாவில் வளர்கின்றார். எனினும் ஏகாதிபத்திய எதிர்ப்பே முக்கியம் என்பதிலும் அமெரிக்கா முதன்மையான எதிரி என்ற விவாதங்களிடையே சேயிற்கும் பிடலுக்கும் முரண்கள் எழுகின்றன. கியூபாவுடனான தங்கள் உறவு முறிந்ததற்கு பிடலை விட சே முக்கிய காரணமென அமெரிக்காவும் குற்றஞ்சாட்டுகின்றது. பொருளாதாரத் தடை, மற்றும் கியூபாவின் முக்கிய ஏற்றுமதியான கரும்பை வாங்குவதில்லையென அமெரிக்க முடிவெடுக்க, சோவியத் ஒன்றியம் கியூபாவின் புதிய அரசுக்கு கரும்பை தாங்களே இறக்குமதிசெய்து கைகொடுக்கின்றது. ஒரிடத்தில் கியூபாவில் நடந்தது என்ன என்று கேட்கப்படுகின்றபோது சே நகைச்சுவையாக so-CIA-list revolution என்று வார்த்தைகளைப் பிரித்துப் பதிலளிப்பார்.

ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் எப்போதும் களத்தில் நின்று மக்களுடன் போராட வேண்டும் என்று கூறி பலவேறு வகையான வேலைகளை ஒரு சாதாரண குடிமகனாய் நின்று செய்து, இப்படி எல்லா அமைச்சுப் பொறுப்பில் இருப்பவர்களும் களத்தில் இறங்கவேண்டும் என்று கூறவும் சே செய்கின்றார். தேசிய வங்கிகளின் தலைவராய் இருக்கும் சேயிடம் ஒரு அந்நிய நாட்டு நிருபர் are you an economist? என்று கேட்கும்போது no, i'm a communist என்று பதிலளிப்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். எனினும் சேயினது பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தோற்றுப்போக, பிடல் தங்கள் நாட்டு புரட்சியின் தூதுவராய் பலவேறு உலகநாடுகளுக்கு சேயை அனுப்புகின்றார். அந்தச் சுற்றுப்பயணத்தில்தான் சே, குருசேவ்,மாவோ, ரிற்றோ, நாசர், நேரு போன்றவர்களைச் சந்திக்கின்றார். எனினும் திரும்பி வருகின்றபோது ஆபிரிக்காவில் நடக்கும், ஆபிரிக்கா-ஆசிய மாநாட்டில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிடுகின்றார். கம்யூனிச நாடுகள் தங்கள் லாபநட்டங்களைப் பார்த்து மூன்றாம் உலகநாடுகளுடனான வர்த்தக உறவுகள் வைத்திருக்கக்கூடாது; மேலும் அந்நாட்டுகளின் புரட்சியிற்கு தேவையான ஆயுதங்களையும் இலவசமாய் கொடுக்கவேண்டும் என்றும் கூறுகின்றார். சோவியத் ஒன்றியத்தை நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும், சோவியத் மீதான விமர்சனமாய் அது பலரால் பார்க்கப்படுகின்றது (இவ் ஆவணப்படுத்தில் குறிப்பிடப்படாவிட்டாலும், சே பின்னாட்களில் ஆகர்சிக்கப்பட்ட சீன கம்யூனிசமே, சோவியத் எதிர்ப்புக்கும் பிடலோடான பிளவுகளுக்கும் ஏதோவொரு வகையில் காரணமானது என்பது கவனத்தில் கொள்ளக்கூடியது). அந்த எதிரொலி பிடல் சேயை விமான நிலையத்தில் சந்திக்கும்போது படம்பிடிக்கப்பட்ட முறையிலே தெளிவாகத் தெரிகின்றது. பயணத்தின் முடிவில் கிட்ட்டத்தட்ட இருபது மணித்தியாலங்கள் எந்த கமராவும் அனுமதிக்கப்படாமல் சேயிற்கும் பிடலுக்கும் இடையில் உரையாடல் மூடிய அறையினுள் நிகழ்கின்றது. அதன்பின்னராக சே யின் இருப்பு கியூபாவின் எந்த நிகழ்விலும் இல்லாமற்போகின்றது. இற்றைவரை பிடலுக்கும் சேயிற்கும் நிகழ்ந்த தனிப்பட்ட உரையாடல் இரகசியமாகவே இருக்கின்றது.

தொடர்ந்து சேயின் இருப்பு கியூபாவில் இல்லாததால் கியூப மக்களிடையே பலவேறு வதந்திகள் சேயைப் பற்றி பரவுகின்றது. ஒருகட்டத்தில், பிடல் உண்மையை உடைக்கின்றார். சேயின் முக்கியத்துவம் பெற்ற -பிடலுக்கான கடிதம்- பொது அரங்கில் வெளியிடப்படுகின்றது. தான் தனது எல்லாப் பதவிகளிலிருந்து விலகுகினறேன்; இனி கியூபவாசியாக தான் இருக்கப்போவதில்லையென்ற சேயின் சாட்சியம் வாசிக்கப்படுகின்றது. இதற்கு எப்படி சேயினது எதிர்வினை இருந்தது என்பதை அந்தக் காலத்தில் சேயுடன் கொங்கோவில் இருந்த ஒரு தோழரால் இப்படிக் கூறப்படுகின்றது: சே அந்தக் கடிதம் தனது இறப்பின் பின்னே வெளியிடப்படும் என்று நம்பிக்கொண்டிருந்தார். அந்தக் கடிதம் பொதுவில் வாசிக்கப்பட்டதை அறிந்தபோது சே கூறியது, 'ஸ்ரானிலைப் போல இன்னும் பலர் தமது திருஉருவங்களை வளர்க்க பிரியப்படுகின்றார்கள் போலும்' என்பது. இது பிடல் மீதான விமர்சனம் என்பது எல்லோருக்கும் தெரியும். கொங்கோவில் சேயினது புரட்சியிற்கான திட்டங்கள் தோற்கின்றன. எனினும் சேயிற்கு தனது கடிதம் பிடலால் வாசிக்கப்பட்டதால் கியூபாவுக்கு வரவும் சங்கடமாயிருக்கின்றது. இறுதியில் சே அடுத்த திட்டத்திற்காய் பிடலிடம் வந்து சேர்கின்றார். அவரிடம் ஆளுமை மிக்க இருபது(?) கியூப வீரர்களை பிடல் ஒப்படைக்கின்றார். சே பொலிவியா போய்ச் சேருகின்றார். இலத்தீன் அமெரிக்கா முழுவதற்குமான கம்யூனிசப்புரட்சியென்ற தனது பெருங்கனவை விசாலிப்பதற்காய். எனினும் அவர் தனக்கு ஆதரவளிக்கும் என்று நம்பிய பொலிவியா கம்யூனிசக் கட்சி இவருக்கு ஆதரவு வழங்காது கைவிடுகின்றது (அக்கட்சியில் சோவியத்து கேஜிபியின் ஊடுருவல் இருந்ததாய் எங்கையோ வாசித்ததாய் நினைவு). சேயினது உடனடித்திட்டம் பொலிவியாவில் இருக்கும் அரசின் ஆட்சியை கவிழ்ப்பது அல்ல; இலத்தீன் அமெரிக்கா நாடுகளின் புரட்சியிற்கான ஒரு பெரும் தளத்தை பொலிவியாவில் அமைப்பதே அவரது முதன்மையான நோக்கமாயிருந்தது. பொலிவியா ஜந்து இலத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கிடையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போதுதான் வியட்நாமிய போரும் தீவிரமடைகின்றது. ஒன்று... இரண்டு... பல நூற்றுக்கணக்கான வியட்நாம்களை.... நாம் உருவாக்கவேண்டும் என்று சே பேச்சொன்றில் குறிப்பிடுகின்றார். பல வியட்நாம்களை உருவாக்குவதென்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியை விரைவுபடுத்தவேண்டும் என்றவகையிலும் வாசித்துணரலாம்.

சே யினது தோழர்கள் கைப்பற்றப்பட, அவர்களின் உதவி மற்றும் ஆயிரக்கணக்கான பொலிவியா வீரர்களின் சுற்றிவளைப்பில் சே காயத்துடன் பிடிக்கப்படுகின்றார். நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒரு இரவு சிறு பள்ளியொன்றில் தங்கவைக்கப்படும்போது மேலிடத்திலிருந்து விசாரிக்கும் பொலிவியா அதிகாரிக்கு தகவல் வருகின்றது, எந்த ஒரு சிறைக்கைதியும் உயிருடன் திருப்பிக் கொண்டுவரக்கூடாது என்று. சேயிற்கு வேட்டுக்கள் தீர்க்கப்படுவதற்கு முன் சிஜஏ அதிகாரியின் வரவு இருந்தது என்பதை பொலிவியா பொலிஸ் அதிகாரி ஆவணப்படத்தில் உறுதிப்படுத்துகின்றார். சேயின் இறுதிக்கணத்தை நேரடியாகப் பார்த்த பள்ளியாசிரியை ஒருவரும் அதில் உரையாடுகின்றார். பிறகு ஒரு பகலும் இரவும் சேயினது உடல் பொலிவியா மக்களுக்கு ஒரு 'துரோகி'யைப் போல காட்சிக்கு -எந்த மரியாதையும் இல்லாது- வைக்கப்படுகின்றது. சேயினது உயிரற்ற உடலைப் பார்க்கும்போது கிறிஸ்துவை சிலுவையில் அறைந்ததுமாதிரியான காட்சிதான் நினைவுக்கு வருகின்றது. விழிகள் மூடாது உதடுகளில் சிரிப்பு மலர்ந்தபடிதான்... இறந்தபின்னும் சே காட்சிதருகின்றார். அந்தக் கடைசிக்கணங்களைப் பார்க்கின்ற எவரும் சே இறந்துவிட்டார் என்று கூறமுடியாதபடி சே 'உயிர்ப்புடன்' இருப்பார்.

ஆவணப்படம் என்றாலே அலுப்பூட்டும் என்று தோன்றாவண்ணம் இப்படம் எடுக்கப்பட்டிருக்கின்றது (அல்லது சேயின் மீதான ஈர்ப்பால் அலுப்புத் தெரியவில்லையோ தெரியாது). சேயினது பல நேரடி நிகழ்வுகள் அப்படியே பதிவாக்கப்பட்டுள்ளன. ஒரு கூட்டத்தில் சே, நானொரு கவிதை சொல்லப்போகின்றேன் என்று சிறுவனைப் போல வெட்கமுறுவதும், பிறகு பயப்பிடவேண்டாம் இது எனது கவிதையல்ல என்று கூறியபடி கவிதையொன்றை வாசிப்பதும், சே தனது தகுதிகளை மறந்து சாதாரணமாய் இருக்க முயற்சித்திருக்கின்றார் என்பதைக் கவனிக்கலாம். சேயினது நெருங்கிய உறவுகள், முக்கிய தோழர்கள் -ஏன் பிடல் கூட சேயைப் பற்றி உரையாடுவது என- அனைத்தும் இந்த ஆவணப்படத்தில் சேர்க்கப்பட்டிருப்பது, ஏதோ சேயினது காலத்தில் நாமும் உலாவிவிட்டு வந்ததுமாதிரியான உணர்வினைத் தருகின்றது. சே தனது குழந்தைகள் மீது மிகப்பெரும் விருப்புடையவராக இருந்தார். அவரது இரண்டாவது திருமணத்தில் ஜந்து குழந்தைகள் அவருக்கு இருந்தார்கள். தனக்கு ஒன்பது குழந்தைகள் வேண்டும் அப்போதுதான் ஒரு பேஸ்போல் அணியை அமைக்கமுடியும் என்று தன்னிடம் நகைச்சுவையாக கூறுவார் என்று சேயினது துணைவியார் ஓரிடத்தில் நினைவுபடுத்தும் காட்சியும் உண்டு.

ஒரு கம்யூனிசப் புரட்சியாளன் எப்படி இருப்பான் என்பதை சே தன் வாழ்வினூடாக நிரூபித்துவிட்டுப் போயிருக்கின்றார். ஒரு புரட்சியாளன் வாழும்போது அல்ல; அவன் சாகும்போதுதான் உலக மக்களுக்கு நிறைய விடயங்களைச் சொல்லிச் செல்கின்றான் என்பது சேயினது இறப்பின் பின்பான அவரது பெரும் எழுச்சி நமக்குச் சாட்சியம் சொல்கின்றது.

(தோழிக்கு, for your birthday)

பெருந்தலைகள் உருட்டும் ஆட்டத்தில்....

Friday, December 29, 2006

'"இந்த மனிதருக்கு ஈழத் தமிழ் எழுத்து பற்றி என்ன தெரியும்? தெரியும் என்று காட்டிக்கொள்ள தன்னைத் தயார் செய்துகொண்டு வந்திருக்கிறாரா?" என்று பரிட்சிக்கவே டோரண்டோவில் நடந்த கூட்டத்திற்கு வந்ததாக ஒருவர் ஒரு கூட்டத்தினரின் பிரதிநிதியாக ஒரு வாக்குமூலம் தந்துள்ளார். இம்மாதிரி மனிதர்களும் எந்த சமூகத்திலும் காணப்படுவார்கள். அவர்களிடம் காணும் பாரம் எதுவோ அதற்குத் தகுந்த பக்ஷம் என்னதாக இருக்கும்.'
(வெ. சாவின் இக்கட்டுரையை விரிவாக வாசிக்க....)

வெங்கட் சாமிநாதனின் முன்னுரையை வாசித்தபோது 'அடியேனையும்' இந்த முன்னுரையில் குறிப்பிடுகின்றாரோ என்ற ஐயம்வர ப்ளாஷ்பாக்கை சுழலவிட்டேன் (எனது கட்டுரையைக் கீழே தந்திருக்கின்றேன்). 2004ல் இயல்விருதுக்காய் வெ. சா ரொரண்டோ வந்தசமயம், இதுவரை ஈழத்தமிழ் படைப்புக்கள் குறித்து எதையும் எழுதவில்லை என்ற கேள்வியை நான் நேரடியாக கேட்டதாய் நினைவினில்லை. 'அணங்கு' நிகழ்வு பற்றித்தான் ஒரேயொரு கேள்வியை அவரிடம் நேரடியாக கேட்டிருக்கின்றேன். மேலும் தளம்பாத நிறைகுடம் என்று வெ.சாவினால் விபரிக்கப்பட்ட நண்பர்தான், 'நீர் கேட்ட கேள்வி நியாயந்தான் இன்னும் விரிவாக கேட்கவேண்டும்' என்று கேள்விகளின் பின்பான நேரத்தில் -இன்னும் கேளும் என்று- உசுப்பிவிட முயன்றவர். எனினும் உந்த உசுப்பலுக்கு எல்லாம் நான் மயங்கமாட்டேன் என்று வாங்கவேண்டிய புத்தகங்களைத் தேடியெடுக்கப் போய்விட்டேன் என்பது வேறுவிடயம்.

அந்தக் கூட்டத்திற்கு போனபோது வெ.சா, பா.அகிலன், சனாதனன், நட்சத்திரன் செவ்விந்தியன் போன்றோரின் படைப்புக்களைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றார் என்ற புரிதலோடே சென்றிருந்தேன். எனது ஆதங்கம், அவருக்குப் பரீட்சயமான ஈழ/புலம்பெயர் படைப்புகள் குறித்து அந்தக்கூட்டத்தில் பேசவில்லை என்பதாக இருந்தது என்பதை மீண்டும் நினைவுறுத்திக்கொள்கின்றேன்.

'நாடகங்கள் பற்றிய அவரது ஆழந்த அனுபவங்கள்/அறிவு, புரிசை தம்பிரான் மீது அவருக்கு இருக்கும் மதிப்பு அவரது பேச்சிடையே தெளிவாய்த்தெரிந்தது. ஆனால் 'கருஞ்சுழி' எழுதிய ஆறுமுகத்தையோ, ந.முத்துச்சாமியையோ அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று தமிழ்நாட்டில் அநேகர் foundations மூலம் fund எடுத்து எல்லாக்கலைகளையும் அழித்தபடியிருக்கிறாகள் என்று அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது போலத்தான் இருக்கிறது (கிட்டத்தட்ட இதேகருத்தைத்தான், முருகேசபாண்டியனுன், மு.ராமசாமியைப் பற்றி உயிர்மையில் எழுதும்போது குறிப்பிட்டிருந்தார் என்று நினைவு). வெ.சாமியின் ஒரு கருத்து சற்று நெருடலாயிருந்தது. கூத்தின் ஆழமான மரபிலிருந்து வரும் ஒருவர் இன்னொரு வித்தியாசமான முயற்சியில் ஈடுபடும்போது அவரால் ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கிறது (அதிகம் படிக்காத, கூத்துக்கலையின் பின்னணியிலிருந்து வருபவர் நவீன நாடகங்களிற்கு செல்வதை -அவர் விரும்பித்தான் போகிறார் என்றால்- ஏற்றுக்கொள்ளாததில் வெ.சாமியின் சாதியபின்புலம் ஒரு காரணமாய் இருக்கக்கூடும்).'

என்று வேறொரு வாசிப்பை முன்வைத்துக் கூறியதை இதுதான் சந்தர்ப்பம் என்று -வெ.சாவின் 'சாதிப்பின்புலமும் காரணமாயிருக்கலாம்' என்ற ஒற்றை வசனத்தை வைத்து- ஜெயமோகனும் என்னை வெருட்டும் ஆட்டத்தில் களமிறங்கியிருந்தார் (பிறகு விவாதம் வேறு திசையில் சென்றததால் அந்த வார்த்தைப் பிரயோகத்திற்கு நான் மன்னிப்பு கேட்டு நீக்கவும் செய்திருந்ததாயும் நினைவு). ஆனால் இற்றளவும் வெ.சாமிநாதன் தனது சாதி அடையாளங்களை மறந்து/மறுத்து வந்துவிட்டார் என்பதை ஒப்புக்கொள்ளமாட்டேன். இங்கே வரும் 'விளம்பரம்' என்ற சஞ்சிகையில் வெ.சா அவ்வப்போது பத்திகள் எழுதி வருகின்றவர். சில மாதங்களுக்கு முன் தலித் இயக்கங்கள், திருமாவளவன், கிருஸ்ணசாமி போன்றோரை 'வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல' தனது உயர்சாதி விமர்சனப்பார்வையால் நுட்பமாய் கீழ்நிலைக்கு தள்ளியிருந்தவர். மேலே தரப்பட்ட கட்டுரையில் கூட ஈழம் போன பெரியாரைப் பற்றிய வெ.சாவின் குறிப்புக்களிருந்து அந்த ஆதிக்கப்பார்வையை அறிந்துகொள்ளலாம். இன்னவும் பெரியார் விவாதித்த பார்ப்பான்/பார்ப்பனியம் என்ற வித்தியாசத்தைக் கூட பிரித்துபார்க்கமுடியாமல் ஏதோ எல்லா பார்ப்பனர்களையும் பெரியார் நிராகரித்தார் என்று குழந்தை போல கூறிக்கொண்டிருப்பது வெ.சா நெருங்கி நிற்கும் அரசியல் புள்ளியை அறிந்துகொள்ள இன்னும் உதவும். ஈழத்திலிருந்து வரும் எவரும் பெரியாரின் பார்ப்பான்/பார்ப்பனியம் என்ற உரையாடலை வெள்ளாளன்/ வெள்ளாள ஆதிக்கம் என்ற புள்ளிகளில் இணைத்து பார்க்க முடியும், ஒரு அமெரிக்க கறுப்பினத்தவனின் வாழ்க்கையை தலித் தன் வாழ்க்கையோடு ஒத்திசையச் செய்வது மாதிரி. மேலும் புலம்பெயர்ந்தவர்கள் பாஸிசக் கரங்களுக்கு எதிராக எழுதுகின்றார்கள் என்று கூறுகின்ற வெ.சாவிற்கு தமிழ்நாட்டின் தலித் எழுத்துக்கள் என்னவாய் தெரிகின்றதாம்? அவரது கண்களுக்கு சினிமா வெறி கவிதைகள் மட்டுமே தெரிகின்றது. அதிகார மையங்கள் சாதி ஒடுக்குமுறையாளர்கள் போன்ற பாஸிசக்கரங்களுக்கு எதிராய் தமிழகத்து தலித்துக்கள், இடதுசாரிகள் நிறையவே எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை வெ.சாவிற்கு யாராவது நினைவுபடுத்தினால் நல்லது. ஆகக்குறைந்து இதைப் பிரசுரித்த 'முன்னாள் இடதுசாரிகளான' திண்ணை ஆசிரியர் குழாத்தைச் சேர்ந்தவர்களாவது வெ.சாவின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கலாம்.

வெ.சாமிநாதனுக்கு குறிப்பு என்று எழுதியதுபோல அண்மையில் சா.கந்தசாமி ரொரண்டோ வந்தபோதும் அதுகுறித்து சிலவற்றை எழுத விரும்பியிருந்தேன். எனினும் ஏற்கனவே எதையோ எழுதப்போய் அது பெரும் விவாதமாய் நீட்சியடைந்து என் தலையெல்லாம் பெருந்தலைகளால் உருட்டப்பட்டதுபோல இதற்கும் நேர்ந்தால், எனது அஸின், பாவனா கனவுகளுக்கு என்னவாவது என்ற கவலையில் அமைதியாகிவிட்டேன் என்பதை ஒரு முக்கியமில்லாத குறிப்பாய் பதிவுசெய்துவிடுகின்றேன்.

வெ.சாவை முன்வைத்து நடந்த விவாதம் குறித்து விரிவாக அறிய இந்தப்ப்க்கத்திற்குச் சென்று வாசிக்கலாம்.

வெங்கட்சாமிநாதனுடன் ஒரு (வெற்று) மாலைப்பொழுது!
~ டிசே தமிழன்
-

எப்போதுமே இலக்கியக்கூட்டங்கள் வறட்சியாக இருக்கின்றபோதும், நேரங்கிடைக்கும்போதெல்லாம் இப்படியான கூட்டங்களிற்கு போகாமல் இருக்க மனம்விடுவதில்லை. இப்படியான ஒரு மனநிலையுடந்தான் வெங்கட்சாமிநாதனுடனான கலந்துரையாடலுக்கு சென்றிருந்தேன். போனதற்கு இன்னொரு காரணம், நிரம்ப புதுப்புத்தகங்கள் வாங்கலாமென்பது கூடத்தான்(எல்லாப்புத்தங்களையும் வாங்கிடவேண்டும் என்ற ஆசை ஏன் ஓர்போதும் நிறைவேறுவதில்லை? ) ஒவ்வொரு முறையும் தமிழகத்திலிருந்து இப்படியானவர்கள் வரும்போதெல்லாம், அவர்கள் ஈழத்தமிழர் இலக்கியம் பற்றி என்ன மதிப்பீட்டை வைத்திருப்பார்கள் என்ற curiosity எப்போதும் என் மனதில் அலைபாய்ந்தபடியிருக்கும். ஈழத்தமிழர்களின் படைப்புக்களை வாசிக்க வசதிகள், resources (வளங்கள்?) இல்லாதபோதும், இப்படி ஒரு புலம்பெயர்பயணம் வரும்போது, அங்கேயிருப்பவர்கள் ஏதாவது இவைபற்றி கேள்விகள் கேட்பார்களே என்று மனச்சாட்சி உறுத்த கொஞ்சம் home work செய்துவிட்டு விமானம் ஏறுவார்கள் என்னும் நம்பிக்கையை எவரும் இதுவரை பூர்த்திசெய்ததில்லை. அதற்கு விதிவிலக்குமல்ல வெ.சாமியும்.

ஒர் அறிமுகமும், அவரது பொழிப்புரையும் முடிய, வாருங்கள் எல்லோரும் சேர்ந்து கலந்துரையாடுவோம் என்று அழைப்பு விடுத்தாலும், வெ.சாமியிற்கு நல்ல நகைச்சுவை உணர்வு. ஒவ்வொரு கேள்வியிற்கும் பதில்களை கொஞ்சம் நக்கலும் நளினமாயும் வெட்டிப்பேசியபடி இருந்தார். அவரில் இரசித்த இரண்டு விடயங்கள், தனது கருத்தை மற்றவர்கள் ஓமோம் என்று சொல்லி தலையாட்டவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை மற்றது நாடகங்கள் பற்றிய அவரது ஆழந்த அனுபவங்கள்/அறிவு. புரிசை தம்பிரான் மீது அவருக்கு இருக்கும் மதிப்பு அவரது பேச்சிடையே தெளிவாய்த்தெரிந்தது. ஆனால் 'கருஞ்சுழி' எழுதிய ஆறுமுகத்தையோ, ந.முத்துச்சாமியையோ அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று தமிழ்நாட்டில் அநேகர் foundations மூலம் fund எடுத்து எல்லாக்கலைகளையும் அழித்தபடியிருக்கிறாகள் என்று அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது போலத்தான் இருக்கிறது (கிட்டத்தட்ட இதேகருத்தைத்தான், முருகேசபாண்டியனும், மு.ராமசாமியைப் பற்றி 'உயிர்மையில் எழுதும்போது குறிப்பிட்டிருந்தார் என்று நினைவு). வெ.சாமியின் ஒரு கருத்து சற்று நெருடலாயிருந்தது. கூத்தின் ஆழமான மரபிலிருந்து வரும் ஒருவர் இன்னொரு வித்தியாசமான முயற்சியில் ஈடுபடும்போது அவரால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கிறது (அதிகம் படிக்காத, கூத்துக்கலையின் பின்னணியிலிருந்து வருபவர் நவீன நாடகங்களிற்கு செல்வதை -அவர் விரும்பித்தான் போகிறார் என்றால்- ஏற்றுக்கொள்ளாததில் வெ.சாமியின் சாதியபின்புலம் ஒரு காரணமாய் இருக்கக்கூடும்).

தன்னைப் பாதித்ததைப் பற்றி மட்டும்தான் எழுதுவேன். சரியான விதத்தில் எழுதப்பட்டிருந்தால் மற்றையோரைப் போய்ச்சேரட்டும், இல்லாவிட்டால் காற்றில் போகட்டும், அதைப்பற்றி கவலையில்லை என்று வெ.சாமி சொன்னதில் ஒரு படைப்பாளியின் கம்பீரத்தைப்பார்க்கமுடிந்தது. ஈழத்தமிழ் இலக்கியங்கள் ஏன் அதிகம் தமிழகத்தில் பேசப்படவில்லை என்பதற்கு, வெ.சாமி அது arrogance என்று சொல்லப்போக இன்னொருவர் roughயாய் இருக்கிறது ignorance என்று மாற்றிச்சொல்லுங்கள் என்று மன்றாட இறுதியில் எந்த வார்த்தையில் சமரசம் செய்தார்கள் என்பதை யானறியேன் பராபரமே. ஆனால், கூட்டத்திலிருந்து ஒருவர் எழுப்பிய நுட்பமான கேள்வியை, 'நீங்கள் கூட ஈழத்தமிழர் இலக்கியம் பற்றி அந்தக்காலத்தில் கூட எழுதவில்லை' என்பதை வெ.சாமி சமார்த்தியமாய்த் தவிர்த்துவிட்டார். அது சரி, நீங்களெல்லாம் தமிழகத்து 'இலக்கிய ஜம்பவான்களின்' திருவாய்மொழி மலர்ந்து அங்கீகாரம் வரவேண்டும் ஏன் எதிர்பார்க்கிறியள் என்று கூட்டத்திலிருந்து இன்னொருவர் வீசிய கேள்வியில் நிரம்ப உண்மையிருக்கிறதுதானே.

வெ.சாமிநாதன், இன்றைய எழுத்தாளர்களில், யூமாவாசுகி, பெருமாள்முருகன், இமையம் பற்றி நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். முக்கியமாய் யூமாவாசுகியின் 'ரத்த உறவை' எல்லோரும் கட்டாயம் வாசிக்கவேண்டும் என்று சிலாகித்துச் சொன்னார். பெண்ணிய எழுத்துக்கள் பற்றியும் கேள்விகள் எழும்பின. வெ.சாமியிற்கு பெண்கள் இப்படி வெளிப்படையாக எழுதுவதில் எல்லாம் உடன்பாடிலை. Rice cooker ஆவி (நல்லவேளை பிரமீளின் ஆவியில்லை) மாதிரி எல்லாம் சீறிபாய்ந்து பின் தானாகவே அனைத்தும் அடங்கிவிடும் என்றார். சரி நீங்கள் பெண்கள் எல்லாம் இப்படி எழுதுகிறார்கள் என்று ஆளுக்கொரு கருத்துக்களை சொல்கிறியள், ஜே.பி. சாணக்யா போன்றவர்கள் எழுதும்போது எந்த பேச்சுமூச்சையும் காணவில்லையே என்று கேட்க, அதையெல்லாம் வாசிக்கவில்லை என்றும் அவற்றையெல்லாம் புறத்தள்ளுங்கள் என்றார். ஜெயமோகனின் எழுத்துக்களில் கூட இப்படியான சித்தரிப்புக்கள் எல்லாம் இருக்கிறதே என்று யாரோ கூற, அப்படி என்றால் அவற்றையும் வாசிக்காமல் தூக்கியெறியுங்கள் என்று கொஞ்சம் உரத்தகுரலில் கூறினார். (ஜெயமோகன் கவனிக்க, நீங்கள் வெ.சாமி முன்னட்டையோடு ஒரு சிறப்பிதழே சொல்புதிதில் வெளியிட்டும் அவர் உங்கள் கட்சி இல்லையாம். இப்படி எல்லாம் சொல்லவில்லை என்று வெ.சாமி தமிழ்நாட்டை மிதிக்கும்போது சொன்னால், record செய்த tape யாரிடமாவது இருக்கும் வாங்கி அனுப்பிவிடுகிறேன். ஆனால் பதிவுக்கட்டணம் இலவசமல்ல.

இபபடி இந்தக்கூட்டத்திலும், இன்னொரு பிம்பம் உடைந்துபோன அலுப்போடு வீடு வந்துசேர, நான் வாங்கிய புத்தகங்களின் பக்கங்களிலிருந்து வேறொரு உலகம் விரிவுகொள்கிறது. அவை ஒரு இலக்கியக்கூட்டத்தைவிடவும், ஒரு படைப்பாளியை விடவும் என்னுடன் அதிகம் நேசம் கொள்கின்றன.

(http://www.geotamil.com/pathivukal/djtonvenkatsaminathan_june2004.html)



எதிர்வினை!
வெ.சா. பற்றி தமிழனின் குறிப்பு...!


- ஜெயமோகன் -

எதிராளியின் வாதங்களை தங்களுக்கு சாதகமாக திரித்துக் கொள்வதை ஓர் உத்தியாக இடதுசாரிகளில் ஒரு சாரார் கடைப்பிடிப்பதுண்டு. அவ்வுத்தி மூலமே தோற்கடிக்கப்பட்ட மனிதர் வெசா. அதே உத்தி தொடர்வதையே தமிழனின் குறிப்புகள் காட்டுகின்றன. ஒரு பெரிய சிந்தனையாளாராக மலர்ந்திருக்க வேண்டிய வெ சாவை குறுக்கியது எதிரிகளின் இந்த உத்தியே. உதாரணாமாக வெசா 'உள்வட்ட சித்தாந்தம்' ஒன்றைக் கொண்டுவந்தார். அதாவது இலக்கியம் என்பது அனைவருக்கும் உரிய ஒன்றல்ல, அது அறிவார்ந்த தெரிவு ரசனை தேடல் கொண்ட சிறு உள்வடத்துக்கு உரியது, அந்த உள்வட்டமே இலக்கியத்தின் சாராம்சத்தை வெளியே கொண்டுசெல்லும் ஆகவே 'மக்கள் இலக்கியம்' என்று ஒன்று இருக்க முடியாது என்றார் அவர். இது மாத்யூ ஆர்னால்ட் காலம் முதல் உள்ள ஒரு முக்கியமான தரப்பு. இதில் எந்த வர்க்க சாதிய அடையாளமும் அவரால் தரப்படவில்லை. இதை பிராமணார்களுக்கு மட்டுமே இலக்கியம் தேவை என்று அவர் சொல்வதாக திரித்து பதினைந்துவருடம் இங்கே பிரச்சாரம் நடைபெற்றது. இப்போதும் நடக்கிறது. நான் என்றால் பேசாமல் இருந்துவிடுவேன். வெசா மீண்டும் மீண்டும் விளக்கம் சொல்ல முயன்று தன் வாழ்நாளை வீணாக்கிக் கொண்டார். தமிழனின் குறிப்பே உதாரணம். வெசா என்ன சொல்கிறார்? ஈழத்தமிழர் கூப்பிட்டார்கள் என்பதற்காக தயாரித்துக் கொண்டுவருபவன் ஈழ எழுத்தைப்பற்றி என்ன நினைத்தால் என்ன என்கிறார். தமிழன் எப்படி திரிக்கிறார்? தமிழ்நாட்டு விமரிசகன் ஈழ எழுத்தைப்பற்றி என்ன நினைத்தால் என்ன என்று வெ சா சொல்கிறார் என்ற தொனியில் இங்கேதான் சாதிவெறி போன்ற உள்நோக்கங்கள் உள்ளன. இதுவே தமிழில் உயரிய விவாதம் நிகழாமல் செய்து சிந்தனையை மழுங்கடிக்கிறது.

(http://www.geotamil.com/pathivukal/jeyamoganondj2.html)

கனவுகளை உடைத்து கரைபுரளும் வாழ்வு

Monday, December 25, 2006

'உனது கனவுகளுக்குள் சிக்கி சிதைந்து போகாதே. உனது மொழியை முற்றாய் இழந்துவிட்ட நிலையில் இனி உனக்கான எழுத்து என்பது சாத்தியமில்லை. ஒரு கட்டத்தில் எல்லா படைப்பாளியும் தான் எழுதுவதை நிறுத்திவிட்டு மீண்டும் தன்னை ஒரு நல்ல வாசகனாக ஆக்கிக் கொள்வதற்கான அவசியம் நேர்கிறது. கனவுகளை மீறிய வாழ்க்கை வெளியில் இருக்கிறது.'
(ரமேஷ்:பிரேமின் 'பேசப்படாத பூக்களுக்கு இனி மெளனங்களும் இல்லை')

உறவுகள் குறித்து எவ்வளவு நெருக்கமாயும் வியப்பாயும் பேசமுடியுமோ அதேயளவுக்கு சிக்கல்களும் வலிகளும் குழைந்தும் அவை குறித்து பேச முடியும். ஏதாவது ஒரு பூர்வீக நிலப்பரப்பின் பின்னணியில் பிறக்கின்ற மனிதனுக்கு அவன் விரும்பியோ விரும்பாலோ உறவுகள் என்று பெயரிடப்பட்டு பல இழைகள் பிறந்தவுடனேயே பிணைக்கப்பட்டு விடுகின்றன. அடையாள மறுத்தலைப் போல பிறப்பால் வருகின்ற உறவுகளை வெட்டிச் சிதைத்துக்கொண்டு போகமுடியுமெனினும், புதிதாய் மலரும் உறவுகளுக்கு அவனவன்களும், அவளவள்களும் மட்டுமே பொறுப்பாக முடிகின்றது. அவற்றை வளர்ப்பதும் சிதைப்பதும் அவரவர்களுக்கான உள்ளங்கைகளுக்குள் ஒரு பூவைப்போல பத்திரப்படுத்தப்பட்டிருக்கும் காலத்தினுள் புதைந்துகிடக்கின்றது.

இவ்வாறான ஒரு மார்கழிப்பொழுதில் குளிர் உதைத்து தன்னை வின்ரர் வெளியில் துரத்தப்போகின்றதா, இல்லை ஊர் ஞாபகம் வந்து தன்னைச் சிதைக்கப்போகின்றதா என்று யோசித்தபடி தாரகைகள் இல்லா அடர்கருவானத்தை அவன் பார்த்தபடியிருக்கின்றான். நல்ல நண்பர்கள் என்றைய பொழுதும் தன்னை விட்டு நீங்காதிருப்பார்கள் என்ற நம்பிக்கை இவன் வசத்து நிறையவே உண்டு. நண்பர்கள் என்று கூறிக்கொண்டு பிறகு ஏதோ ஒரு புள்ளியில் முகஞ்சுழித்துப் போகின்றவர்களும் இவனுக்கு வாய்க்காமலில்லை. அவர்களில் சிலர் திட்டமிட்டு காய்களை நகர்த்தி தொடர்ந்து காயங்களை உண்டாக்கியபடி தம் இருப்பை நினைவுபடுத்தியபடியே இருப்பார்கள். நீங்கள் என்னை நோக்கி முன்வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் நான் இன்னும் இரண்டு அடிகள் பின்னோக்கி வைப்பேன் என்றபடி அவர்களை தொடர்ந்து அலட்சியப்படுத்தியப்படுத்துவதுதான் இதிலிருந்து தப்பிப்பதற்கு எளிய வழியென்று நினைப்பவன் இவன். மேலும் இவனுக்கு முரண்பாடாய்/அசூசையாய் தெரியும் அவர்களின் புள்ளிகள் அவர்களுக்கான அளவில் நேர்மையாக/ஓர்மமாக இருக்கலாம் என்ற புரிதலும் உண்டு. தம்மோடு ஒத்த புள்ளிகளை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதற்காய் அவர்களில் கோளாறு என்று முடிவுசெய்தலும் தவறு. உனதும் எனது புள்ளிகள் என்றேனும் ஒருநாள் மீண்டும் சந்திக்கையில் கைகுலுக்கி அறிமுகங்கள் செய்துகொள்வோம் என்று கூறி கைகுலுக்கி விடைபெறும் நேர்மையான சந்தர்ப்பங்கள் இவனுக்கு இன்னும் வாய்க்கவில்லை என்பதும் சோகமான விடயமே. அவ்வாறு மனம் மலர்ந்து பிரியாவிடை கொடுத்திருப்பின் எவரையும்/எதனையும் நினைத்து காலகாலங்களில் சோகித்திருக்கத் தேவையும் இருக்காதில்லையா?

ஒரு நாள் அவள் அவனின் எழுத்தின் தடங்களைப் பின்பற்றியபடி வந்து சேர்ந்தாள். எப்போதும் தனது எழுத்துக்களினூடாக தன்னை வந்தடையும் பாதைகளை சாமர்த்தியமாய் கலைத்தபடி இருப்பவனுக்கு அவள் அவனது இருப்பிடத்தை வந்தடைந்தது வியப்பாயிருந்தது. அறிமுகபடுத்திக்கொண்டாள். வந்தவளுக்கு தேநீரும் இனிய சொற்களும் கொடுத்து வரவேற்கவேண்டும் என்ற சம்பிரதாயத்தையே மறந்து போயிருந்தான் (அல்லது அப்படிக் காட்டிக்கொண்டான்). என்ன வேண்டும் என்ற ஒரு அதிகார மையத்தின் முதற்கேள்வியைப் போல அவன் அவளைப்பார்த்து முறைத்துக்கொண்டான். என்னைச் சமதையாக வைத்து உரையாட முடியுமெனில் உரையாடு இல்லையெனில் திரும்பிப் போகின்றேன் என்றாள் அவள். இப்போது அண்மையாக எழுதிய என் எழுத்துக்களினூடாக வந்த நீ, திரும்பிப் போவதற்குள் நீ வந்த பாதையைக் கலைத்துபோட்டு இன்னொரு எழுத்தை எழுதினால் எப்படித் திரும்பிப்போவாய் என்று அவளை வளைத்துவிட்ட பெருமிதத்தோடு கேட்கின்றான் இவன் (அந்தச் சமயத்தில் சுருள் சுருளாய் இவன் புகைபிடித்துக் கொண்டிருக்கவேண்டும்). திரும்பி வந்த இடத்தைப் போய்ச்சேருவது மிக இலகுவானது ஏனெனில் உனது எழுத்துக்கள் ஒவ்வொன்றும் முடிவடையும் புள்ளி ஒரு பெண்ணிடம் அன்பை எதிர்பார்த்து உள்ளுக்குள் மறுகிக்கொண்டிருப்பது.... எனவே நீ புதிதாய் எழுதும் ஒரு படைப்பினூடாகவும் நான் எனது வழியை எளிதாய் கண்டுபிடித்துத் திரும்பிப்போயிவிடுவேன் என்கிறாள் அவள்.

இப்படித்தான்.... சிக்கலான ஒரு தேற்றத்தை பரீட்சைநேரம் முடிவதற்குள் நிறுவிவிட முடியாத பதட்டத்துடன்தான் அவன் ஒவ்வொருமுறையும் அவளுடனான உரையாடல்களில் தோற்றுக்கொண்டேயிருந்தான். தனது வாழ்க்கையை தனது தனிமையாலும், விரும்பிக்கற்றுக்கொண்ட கணித எண்களாலுமே தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தவன் அவன். எல்லோரைப்போல மையநீரோட்டத்தில் வாழ விரும்பம் எனினும் தனது கடந்தகாலப் பயங்களும் எதிர்கால அச்சங்களுமே தன்னை இப்படியான எண்களால் கட்டியமைக்கப்பட்ட வாழ்வைத் தேர்ந்தெடுக்க வைத்தது என்று பொழுதுபோகாத நேரமொன்றில் பொழிந்துகொண்டிருந்த ஸ்நோவில் நனைந்தபடி கூறிக்கொண்டிருந்தான். வார்த்தைகள் முடிந்த மறுமுனையில் அவள் நின்று கேட்டுக் கொண்டிருக்கவேண்டும். அவன் அவளது பெயரை தன்னையறியாது பனியில் கிறுக்கிக்கொண்டிருந்தபோது தானும் அவனது பெயரை மணலில் எழுதிக்கொண்டிருந்தேன் என்றபடி சிரிததபடி வருகின்றாள் அவள் மீண்டும்.

அவள் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருந்தாள். தனக்கான பயங்களை, தனது தாய்நிலம் சூறையிடப்படும் அவல நிலையை, எதிர்கால இலட்சியங்கள் பற்றி இன்னவும் பிறவுமாய். அவள் நேசித்த ரஷ்ய படைப்பிலக்கியங்களையும், பயணம் செய்யும் விரும்பும் ஆபிரிக்கா வனாந்தரங்களையும் அறிய அறிய, அவன் இப்போதைக்கு உடையாது எனத்திடமாய் நம்பிய அவனது பாதுகாப்பு அரண்கள் உருகத் தொடங்கின. என்றாலும் இவன் சளைத்தானில்லை, வார்த்தைகளை கொண்டு விமர்சனக்கத்திகள் ஆயிரமாயிரம் செய்து போரிடும் சூழ்ச்சிகள் நிறைந்தவன் என்பதால் அவளை வலிக்கச் செய்யக்கூடிய இடங்கள் பார்த்து விமர்சனக்கணைகளை எண்ணற்று எய்யத் தொடங்கினான். அவள் பரிவுடன் வருபவளுக்கு கருணை பொங்கும் அன்னை மேரி; போரென்று வந்துவிட்டால் கண்ணீரைப் புதைதோண்டிப் புதைத்துவிட்டு விழிகள் சிவக்கும் உக்கிரமான காளி என்பது அவனுக்கு முன்னரே தெரியாமற்போய்விட்டது. (மணிமேகலையைத்தான் காளியாய் பிற்காலத்தில் 'இந்து'சமயம் ஆக்கிவிட்டது என்ற ஒரு ஆய்வுக்குறிப்பையும் கூடவே சேர்த்துக்கொள்ளவேண்டும்). இவ்விடத்தில் பிறழ்வாய் இருக்கக்கூடுமெனினும், அவள் ஆடிய உக்கிரமான ஆட்டந்தான் இவனின் அனைத்துக் கர்வங்களையும் துடைத்தெறிந்து அவளிடம் நேசம் வைக்கச் செய்தது என்பதுவும் உணமையுமாகும்.

எதையும் எதிர்ப்பார்க்காத அன்பு எப்படிப்பட்டது என்பதை அவளிடமிருந்து அவன் அறிந்துகொண்டான். தனக்கென்று எதையுமே அவனிடம் கேட்டு வாங்கிக்கொள்ள தொடர்ந்து மறுத்துக் கொண்டேயிருப்பவள்; எப்போதாவது அன்பளிப்பாய் கொடுக்கும் நாலைந்து புத்தகங்களைத் தவிர பெறுமதியான எதையும் அவள் இற்றைவரையும் ஏற்றுக்கொண்டதுமில்லை. தனக்காய் சிறிது நேரத்தையும் நேசத்தையும் தந்துவிட்டு நீ எதையும் எவற்றையும் செய்துகொள்ளலாம் என்ற மிகப்பெரும் சுதந்திரவெளியை வழங்கிக்கொண்டிருப்பவள். இவை அனைத்தையும் விட தன்னைப் புத்தகங்கள் மட்டுமே நேசிக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு, அவன் மீது தனக்கு பிரியமுள்ளதென்று அவளே தயக்கமேதுமின்றி வந்து முதலில் நேசத்தை வெளிப்படுத்தியதுதான் இவனுக்கு வியப்பாயிருந்தது. அவள் தன்னை நேசிக்கின்றாள் என்பது புரியவே இவனுக்கு மாதங்கள் எடுத்துக்கொண்டதற்கு இவன் நிறைய தமிழ் சினிமாக்கள் பார்த்திருந்தததைத் தவிர வேறு எதுவும் காரணங்களாகிவிடாது.

நேசம் அரும்பிய ஆரம்பப்பொழுதில் திருமணம், இன்னபிற அடையாளங்களுடன் வாழுதல் தன்னால் சாத்தியமில்லை என்று முற்றுப்புள்ளியில்லாது வாக்கியங்கள் நீளநீளமாய் அமைத்தபோது, - கூறி முடித்துவிட்டாயா என்று பொறுமையுடன் காத்திருந்துவிட்டு-இப்படித்தான் எல்லா முற்போக்காளர்களும் கூறிக்கொண்டிருப்பார்கள், பிறகு அவர்களின் அனைத்து வண்டவாளங்களும் தெரியும் என்றாள். இதற்குப் பிறகும் இவை குறித்து அவனால் வாய் திறந்து பேசமுடியுமா என்ன? இதைவிட தனது அடையாளங்களை தொடர்ந்து மறுதலித்துக்கொண்டே வருபவள் என்றபடியால், கலாச்சாரம் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் திலகமிடுதலிருந்து நகைகள் அணிவது வரை புறக்கணித்துக்கொண்டே இருப்பவள் அவள். பட்டுப்புடவை சரசரக்க கைகளிலும் கழுத்திலும் ஆபரணங்கள் மினுங்க ஒரு 'தமிழ்'ப்பெண்ணை எதிர்ப்பார்த்துக்கொண்டிருப்பவனின் கனவை நிர்மூலமாக்கிக்கொண்டிருக்கின்றேனோ என்ற கவலை அவளுக்கு உண்டு போலும். எனினும், 'ஏனெனில் நானொரு அரசிளங்குமரி/எனது பெறுமதி நான் அணிந்திருக்கும் ஆடைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை/இண்டியா அரியாக இருப்பதற்கு எது தேவையோ/அதை மட்டுமே நான் அணிவேன்' என்று இண்டியா அரி பாடுவதுபோல வாழவும் விரும்பும் பெண்கள் இருக்கின்றார்கள் என்ற எளிய புரிதல் இவனுக்கும் உண்டு. நீ இன்று வெறுத்தொதுக்கும் ஆபரணங்களை, நாளை நீ அணிய விரும்புகின்றாய் என்றாலும் அதனூடாக நான் உன்னை அணுகப்போவதில்லை. அதற்கும் உனக்கான் என் பிரியங்களுக்கும் எந்தச் சமன்பாடுகளும் காலத்தின் எந்தப்புள்ளியிலும் வரப்போவதில்லை என்று மட்டுமே விளம்பமுடிகிறது இவனால்.

பின்னான காலங்களில் இவன் பலவற்றை அறிந்துகொண்டான். எழுத்துக்களினூடாகவும் வாசிப்பினூடாகவும் ஒருவரை இன்னொருவர் அறிந்துகொள்வது என்பது சுவாரசியமானது. எழுதுபவர்களின் வாசிப்பவர்களின் வாழ்க்கை அப்படி வியந்து சொல்லக்கூடியதாக அல்ல என்று கடந்தகால வரலாறுகள் வெள்ளிடைமலையென காட்டிக்கொண்டிருந்தாலும் அப்படியிருப்பது இருவருக்கும் பிடித்துக்கொண்டது. கணணித் திரையில் ஒரு அஞ்சலை அனுப்பிவிட்டு அது பெறுநரைப் போய்ச்சேரும் நேரத்தைவிட, உறவு ஒன்று சிதைந்துபோவதற்கான கால அவகாசம் குறைவானதே என்ற அச்சமிருந்தாலும்.... அவள் மீதான இந்தக்கணத்து நேசம் என்பது உண்மையானதும் எதிர்ப்பார்ப்புக்களின் அப்பாற்ப்பட்டதும் கூட.

'நேற்று இல்லாத மாற்றம் என்னது/ காற்று என் காதில் ஏதோ சொன்னது?' என்று அவள் அவனையறிந்த ஒருவருடத்திற்கும் பின்பான பொழுதொன்றில் பாடுகின்றாள். அதுவரை பாடவே மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தவள் அன்றைய பொழுதில் இன்னும் பல பாடல்களைக் காற்றில் கரைக்கின்றாள். இராகத்துக்கும் தாளத்திற்கும் பல்லவிக்கும் சரணத்திற்கும் கூட்டல் கழித்தல் பெருக்கல் முறையிலா உறவிருக்கிறது என்று மூளையைப்போட்டு குழப்பிக்கொண்டிருக்கின்றவனுக்கும் அவள் பாடுவது பிடித்துத்தான் போகின்றது. இதைவிட தனக்கு மிக நெருக்கமாயிருப்பவள் தன்னைவிட தீவிர வாசிப்பும், ஆளுமைமிக்க எழுத்துத்திறனும் கொண்டிருப்பதும் அவனுக்கு மகிழ்வைத் தருகின்றது. தனக்குப் பிடித்த கவிதையொன்றை எழுதும்போது தான் எழுதுவதை நிறுத்திவிடுவேன் என்று தீர்க்கமான நம்பிக்கை அவனுக்கு உண்டு. அந்தக் கடைசி கவிதையில் அவள் இருப்பதுதான் அவள் தந்துகொண்டிருக்கும் அற்புதமான தருணங்களுக்கு அவன் செலுத்தும் நன்றியாக இருக்கும்.

சு.வில்வரத்தினம் காலமானார்

Saturday, December 09, 2006

suVa
(1950-20006)

ஈழத்தின் முக்கிய படைப்பாளியான சு.வி என்று நண்பர்களால் அழைக்கப்படும் சு.வில்வரத்தினம் கொழும்பில் காலமானார் என்ற மின்னஞ்சல் பத்மநாப ஜயரிடமிருந்து இன்று காலை வந்திருந்தது. ஏ.ஜே.கனகரட்ன, சு.வில்வரத்தினம் என்று ஈழத்தில் இருக்கும் படைப்பாளிகளை நாம் தொடர்ந்து இழந்து கொண்டிருப்பது மிகவும் துயரமானது.

சு.வில்வரத்தினம் எழுதி வெளிவந்த கவிதைகளின் தொகுப்புக்கள்:
(1)அகங்களும் முகங்களும் (கவிதைத் தொகுதி, 1985)
(2)காற்றுவழிக் கிராமம் (கவிதைத் தொகுதி, 1995)
(3)காலத்துயர் (கவிதைத் தொகுதி)
(4)நெற்றிமண் (கவிதைத் தொகுதி, 2000)
(5) உயிர்த்தெழும் காலத்துக்காக (கவிதைத் தொகுதி, 2001)


பதின்மங்களில் 'காற்றுவழிக்கிராமத்தை' வாசித்தபோது மிகவும் பாதித்தது. ஊரூராய் அகதியாய் அலைந்து கொழும்பில் வாழ்ந்து கொண்டிருந்த காலம் அது. இழந்துவந்த மண்ணின் துயரை மனமெங்கும் படியவிட்ட கவிதைகள் அதில் நிறைய இருந்தன. அதன் பாதிப்பில் ரியூசன் வகுப்புக்குப் போன ஆங்கில ஆசிரியரிடமும் ஆங்கிலத்தில் ஒரு கவிதையைக் மொழிபெயர்த்து தரக்கேட்டதாயும் நினைவு.

உயிர்த்தெழும் காலத்துக்காக' தொகுப்பில் - இதுவரை வந்த தொகுப்புகளின் அனைத்து கவிதைகளையும் உள்ளடக்கி வேறு புதிதாய் எழுதப்பட்ட கவிதைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று நினைக்கின்றேன். நூலகத்திற்கு சென்று இவரது தொகுப்புக்களை வாசிக்க முடியும். அண்மையில் வெளிவந்த 'காலம்' இதழ் -27ல் ஜெயமோகன் சு.வில்வரத்தினத்தின் கவிதைகளை முன்வைத்து தனது விமர்சனப்பார்வையை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதியிருக்கின்றார்.

...................................................................................
Dear friends,

A sad news.

Su. Vilvaratnam passed away today 5pm at Delmon Hospital Colombo.
He was suffering from kidney failure and liver problem.
Contact Mu ponnambalam 0115518464.

Nuhman
(....added later.....Thanx to Pathmanaba Iyer)
....................................................................................

புத்தகங்களுடனான சிநேகம்

Wednesday, December 06, 2006

'ரஷ்ய எழுத்தாளர்கள் என் கனவுகளைக் கவர்ந்தவர்கள் என்றே சொல்லவேண்டும். தாஸ்தாயெவ்ஸ்கி (மரணவீட்டின் குறிப்புகள்), டோல்ஸ்டோய், மிகயீல் ஷோலகவ் (கன்னி நிலம்), சிங்கிஸ் ஐத்மாத்தவ் (அன்னை வயல்), ஐவன் டெர்கனெவ் (அஸ்யா) ஆகியோர் என்னைப் பயங்கரமாகப் பாதித்தவர்கள். மற்றபடி அந்நியமொழி எழுத்தாளர்களென்றால்... விக்டர் ஹ்யூகோ (அவரது toilers of the sea யின் தாக்கத்திலிருந்து விடுபட பல வாரங்களாயின), ஒஸ்கர் வைல்ட், தோமஸ் போர்கே (இவரது சிறுகதைகள் மட்டும்தான் வாசித்திருக்கிறேன்), ஹெர்மன் ஹெஸ்ஸே (இவரது சித்தார்த்தா பலவிதத்திலும் என்னைச் சிந்திக்கத் தூண்டிய நாவல்), சினுவா ஆச்சிபி (சிதைவுகள்), சில இந்திய எழுத்தாளர்கள்.. தமிழ்மொழியல்லாதோர்.. (பெயர்கள் நினைவிலில்லை - சம்ஸ்காரா, நிழல்கோடுகள் என நாவல்கள் மட்டும் நினைவிருக்கின்றன). ...'
(நண்பரொருவரின் கடிதத்திலிருந்து....)

வீட்டில் அவ்வப்போது குடும்பத்தினரால் பொது அறிவு காணாது என்று நற்சான்றிதழ் பாத்திரம் பெற்றுக்கொண்டிருக்கின்றவன் நான். வலைப்பதிவிலாவது இந்தப் பலவீனத்தை மறைத்து கொஞ்சம் 'அறிவாளி' மாதிரி உரையாடலாம் என்ற ஆசையை அவ்வப்போது 'உனக்கெல்லாம் அரசியல் தெரியுமா?' என்று கேட்டு பலர் -'என்னை வளரவிடாது' - காலை வாரிக்கொண்டிருக்கின்றார்கள்.

அறிவு வளரவேண்டும் என்றால் என்ன செய்வது? புத்தகங்களைத் தான் நிரம்ப வாசிக்கவேண்டும். சில மாதங்களுக்கு முன், ஒரு அன்பர் திட்டோ திட்டென்று திட்டி -முடிவுறாத அனுமான் வாலாய்- பதிவொன்றை எழுதியிருந்தார். கூட்டத்தோடு கோவிந்தா பாடுவோம் என்று இன்னொரு நலன்விரும்பி பழைய கறளெல்லாம் சேர்த்து வைத்து வசைக் கவிதையை உடைப்புச்செய்து கூடவே எழுதியிருந்தார். அம்மா வளர்கின்றேன் என்று விளம்பரம் ஒன்றில் காட்டப்படுவதுபோல குட்டு விழுவதில் 'சந்தோசம்' என்பதைவிட, 'உங்களின் வட்டத்திற்குள் நானில்லை' என்பதே அந்தப்பொழுதுகளில் எனக்கு நிறைவாயிருந்தது.

வசைக் கவிதையில் நலன்விரும்பி எனக்கு இரண்டு தெரிவுகளைத் தந்திருந்தார். ஒன்று அரசியலை ஒழுங்காய்ப் பேசு; இல்லையெனில் அம்மாவுக்கு தோசை சுட உதவி செய் என்று. அன்பர் சொன்னதை சும்மா தட்டிக் கழிக்கமுடியாது. 'மூலதனத்தை' எல்லாம் கரைத்துக் குடித்தவர் சொன்னால் ஏதோ பெரும் பின்புலம் இருக்கத்தானே செய்யும்? எனவே இல்லாத என் மூளையைக் கசக்கத் தொடங்கினேன். புலம்பெயர் தேசமொன்றில் நான் உயிர் வாழ்ந்துக்கொண்டிருப்பற்கு எனக்கு அரசியல் பேசுவது அவசியமா? இல்லை தோசைக்கு மா கரைத்து ஊற்றுவது முக்கியமா? உயிர் வாழ்வதற்கு உணவே அவசியம் என்று மூன்றோ நான்காம் வகுப்பில் சுற்றாடல் கல்வியில் கற்பித்த 'மனிதருக்கு அத்தியாவசியமானது உணவு உடை உறையுள்' என்பது இன்னமும் எனக்குள் பதிவாயிருந்தது இந்த நேரத்தில் கைகொடுத்தது.

சரி, இப்படி 'அன்பர்கள்' பாராட்டு வழங்கும்போது என் மானம் ரோசம் பொங்கியெழுந்தல்லவா இருக்கவேண்டும்? மானம் ரோசம் வீரம் இல்லாது தமிழனாய் இருப்பதில் என்ன பயன்? இது போதாது என்று வைத்த புனைபெயரில் 'தமிழன்' என்றும் சேர்த்து வைத்தல்லவா படம் காட்டிக்கொண்டிருக்கின்றேன். திண்ணையிலோ பதிவுகளிலோ எனக்கு பரீட்சயமான ஒரு நண்பர் 'தம்பி நீர் டிசே தமிழன் என்றால் நாங்கள் என்ன டிசே சிங்களவனா இல்லை டிசே ஆங்கிலேயானா?' என்று கேட்டார். நான் சும்மா விடுவேனா என்ன? தமிழில் எழுதும்போது நான் டிசே தமிழன், சிங்களத்தில் எழுதும்போது டிசே சிங்களவன், ஆங்கிலத்தில் எழுதும்போது டிசே ஆங்கிலேயன் ஆவேன் என்றேன். அவரும் தான் ஊக்குவித்த பெடியன் நல்லாய்த்தான் 'வளர்ந்துவிட்டான்' என்று தலையிடித்துக் கொண்டிருப்பார் என்பது வேறு விடயம்.

இப்படி பதிவுகளில் சிலர் வசைக்கவிதை/பதிவுகள் எழுதிக்கூட ஏன் எனக்கு -பெண்களுக்கு அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு போல- ஆண்களுக்குரிய 'குணங்கள்' எதுவுமே ஊற்றெடுத்துக் கிளம்பவில்லை என்பதுதான் மிகுந்த கவலையாயிருந்தது. போற வாற இடமெல்லாம் சைட் அடிக்கின்ற ஸ்பானிய பெண்கள்தான் எனது தமிழ்க் கலாச்சாரத்துக்கு ஆப்பு வைத்துவிட்டார்களோ என்ற அச்சமே எனக்குள் எழுந்தது. ஆனால் இந்த மானம் ரோசம் எனக்கிருப்பின் அது வளாகத்தில் இருந்தபோதே பொங்கியிருக்கவேண்டும். பரீட்சைகளின்போது குறைய மார்க்ஸ் கிடைக்கும்போதெல்லாம், என் படிப்பில் பிழையில்லை prof ன் பேனையில்தான் தவறு என்று பெருந்தன்மையாக நினைப்பவன் நான். ஏன் பாடங்களில் சித்திபெறத் தவறினால் கூட.... அந்தப் பாடத்தைப் பழிவாங்கவேண்டும் என்று சிரத்தையாக திருப்பப் படிக்காமல், 'இடுக்கண் வருங்கால் நகுக' என்றுதான் நகர்ந்து போயிருக்கின்றேன். எனவே என் அடிப்படையில்தான் பிரச்சினை இருக்கின்றததே தவிர, எங்கள் தமிழ்க் கலாச்சாரத்தில் அல்ல என்று இப்போது புரிகின்றது.

சரி எதற்கும் இருக்கட்டும்; அன்பர்கள் அளவுக்க்குமீறி 'பாராட்டுப் பத்திரம்' வாசிக்கும்போது நானும் திருப்ப அவர்களுக்கு பா.பாத்திரம் கொடுப்பதற்கு உசாத்துணையாக இருக்கட்டும் என்று சில புத்தகங்களைத் தேடத் தொடங்கினேன். புத்தகங்களுக்கு ஓடர்செய்து பல மாதங்களாகியும் என் கைகளில் வந்து சேரவில்லை. கனடீய அரசாங்கம்தான் புத்தகங்களைத் தடை செய்து வைத்திருக்கின்றதோ என்ற ஜயம் வந்தது. கனடாவில் நாற்பதோ, ஜம்பதோ வருடங்களுக்கு முன் சின்னதாய்க் கட்டியமைக்கப்பட்ட கம்யூனிசக் கட்சியை ஆட்சியில் இருந்த அரசாங்கம் தடை செய்தது என்று எங்கையோ வாசித்திருந்தேன். அதுபோல் தமிழ் வாசிக்கத் தெரியாவிட்டாலும் - மார்க்ஸ், மாசேதுங், மல்கம் எக்ஸ், சேகுவேரா, காஸ்ரோ போன்றவர்களின் படங்களைப் பார்த்துவுடன் பதுக்கி வைத்துவிட்டாகளோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சுங்கத்திலிருந்த( customs?) யாரோ ஒரு நல்ல மனிதர்தான், எங்கள் கனடீய பிரதம உறங்கிக்கொண்டிருக்க்கும்போது இரவோடு இரவாய் அனுப்பியிருக்கவேண்டும். கைகளில் புத்தகங்கள் கிடைத்துவிட்டன.

இப்படியாக இன்னும் பல கிளைக்கதைகள் உண்டெனினும்-உண்மையான- காரணங்கள் இரண்டே. பெரியாரைப் பாதிக்கின்ற எவரையும் மார்க்ஸும் பாதிக்கவே செய்வார். பெரியாரை விளங்கிக்கொள்கின்ற எவராலும் தலித்தியத்தையும் பின் நவீனத்துவத்தையும் இலகுவாய் அரவணைக்க முடியும். அந்த ஆர்வமே இவ்வாறான புத்தகங்களை வாங்கி வாசிக்கச் செய்தது.

இதைவிட இன்னொரு காரணம் உண்டு. தோழர் ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது, பெரியாரைச் சிலாகித்த அளவுக்கு மார்க்ஸை சிலாகித்துப் பேசாதது அவருக்கு கவலை தந்திருக்கவேண்டும். அவர் இடதுசாரிப் பின்புலத்தில் வந்தவர். நான் பெரியாரை வியந்து கொண்டிருப்பதுபோல அவர் மார்க்ஸை வியந்துகொண்டிருப்பவர். பெரியாரைப் போலத்தான் மார்க்ஸும் சாதாரண மனிதர் என்று தெளிவுபடுத்தவோ என்னவோ மார்க்ஸ் எழுதிய காதற்கவிதைகளை எல்லாம் வாசிக்கத் தந்தார். 'மார்க்ஸை எங்கோ எட்டாத தொலைவுக்கு துரத்திவிட்டார்கள் நமது மார்க்சிசவாதிகள்...' என்றதற்கு 'மார்க்ஸை நேர்மையாக அணுகினால் அவர் நெருக்கமாகிவிடுவார்' என்றார். 'நிச்சயமாய் மார்க்ஸ் மீது காழ்ப்புணர்வில்லை; இன்றைய உலக அரசியலின் சிக்கலான சூழ்நிலைக்குள் கடைசி நம்பிக்கையாய் இருப்பது மார்க்ஸியமே தவிர வேறு எதுவுமல்ல; ஆனால் மார்க்ஸை வைத்து கொண்டாடுபவர்களே மார்க்ஸை நெருங்கவிடாது செய்துவிட்டார்கள்' என்றேன் (வசைக்கவிதை எழுதிய அன்பரும் யாரோ ஒரு எழுத்தாளரின் வாரிசு என்றுதான் பட்டமொன்று இறுதியில் தந்திருந்தவர்; தங்கள் மீதான விமர்சனத்தையே ஏற்றுக்கொள்ளாது வேறொருவருடன் சேர்த்து கழுவிலேற்றுபவர்களிடமிருந்து... எப்படி மார்க்ஸை கற்றுக்கொள்வதாம்?) மேலும் இணையத்துக்கு வந்ததன்பின் பெரியாரை ஆதர்சமாய் ஏற்றுக்கொண்ட நண்பர்கள் தங்கமணி, ரோசாவசந்த் போல, மார்க்ஸை தங்கள் சொந்தக் கருத்துக்களுக்கு முண்டு கொடுக்க உபயோகிக்காது- மார்க்ஸை மார்க்ஸாக முன்வைத்து உரையாடியவர்களை இணணயத்தில் நான் இன்னும் காணவில்லை. அத்தோடு இவர்களிடமிருந்து மார்க்ஸை கற்றுக்கொள்ளமுடியும் என்று நம்பிய சிலர் இன்னும் மிகமோசமான முறையில் மார்க்ஸை அணுகியதையும். தங்களுக்குள் இருக்கும் வலதுசாரி/சாதீய முகங்களைக் காட்டியதையும் பார்த்து 'தள்ளியிரும் பிள்ளாய்' என்று விலத்தித்தான் வரமுடிந்தது (கோபம் வருமென்றாலும் 'வறட்சியான மார்க்ஸியர்கள்' என்றுதான் அவர்களை அழைக்கமுடியும்).

மேலைத்தேய தத்துவாசிரியர்களை/ஆய்வாளர்களை எல்லாம் போகின்றபோக்கில் உதிர்த்துவிட்டு செல்லும் இவர்கள் எத்தகைதூரம் அந்த ஆய்வாளர்கள் கூறியதை உள்வாங்கிக்கொண்டார்கள் என்பது கேள்விக்குரியதே. Noam Chomskyயை -சொற்பமாய்- வாசித்தவளவில் அவர் விவாதித்த தேசியவாதம்/தேசிய இனங்களின் பிரச்சினையைக் கூட - ஈழ இடதுசாரிகள் என்று கூறிக்கொண்டிருப்பவர்கள்- உள்வாங்கி தமிழில் விவாதித்தமாதிரி காணக்கிடைக்கவில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம். பல்வேறு இயக்கங்கள் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் பல இயக்கங்கள் சோசலிச சமதர்மமே முடிவான தீர்வு என்று ஈழத்தில் கூறிக்கொண்டிருந்தார்களாம். விசுவானந்ததேவனிடம் சேரப்போன சில இளைஞர்கள் கேட்டிருக்கின்றார்கள், எமக்கான அரசு எப்படி இருக்கும் என்று....? இலங்கை போன்ற நாடுகளுக்கு முற்றுமுழுதான கொம்யூனிசம் என்றைக்குமே சாத்தியப்படாது என்றுதான் எடுத்தவுடனேயே கூறியிருக்கின்றார் (அவரோடு இயங்கிய தோழர் ஒருவர்தான் கூறியது). இத்தனைக்கும் விசுவின் பாதிப்பில்தான் எஸ்.வி.ஆரோ அல்லது அ.மார்க்ஸோ அரசியல் எழுத்து இயக்கத்துக்கு வந்தவர்கள் என்று எங்கையோ வாசித்திருக்கின்றேன். உடனே விசுவானந்ததேவன் இப்படிக்கூறிவிட்டார் எனவே அவர் கம்யூனிச துரோகி என்று அவரது காணாமற்போன உடலை கடலிலிருந்து கண்டுபிடித்து முத்திரை குத்தாதிருப்பார்களாக....!

இவற்றை ஏன் எழுதிக்கொண்டிருக்கின்றேன்....? வேறு ஒன்றுமில்லை, மீண்டும் சனி பிடித்துவிட்டது. அவ்வளவுதான்.

இனி இன்னும் இரண்டு பதிவுகள், நான்கு வசைக்கவிதைகள் பறந்து வரும். புன்னகைத்தபடியே, மார்க்ஸை மார்க்ஸின் பார்வையினூடாக மட்டும் பார் என்கின்ற தோழருடன் விவாதித்தபடி, வந்திருக்கும் புத்தகங்களை ஆறவமர வாசிக்கவேண்டியதுதான்.

நியூ புக்லாண்டிலிருந்து வந்து சேர்ந்த புத்தகங்கள்:
book2

(1) மார்க்சியத்துக்கு அழிவில்லை - ஞானி
(2) மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை - ஜோர்ஜ் தொம்ஸன் (தமிழில்: எஸ்.வி.ராஜதுரை, இன்குலாப்)
(3) அழகும் உண்மையும்: மார்க்ஸிசப் பார்வை- ஸிட்னி ஃபிங்கெல்ஸ்டெய்ன் (தமிழில்: நேத்ரா, எஸ்.வி.ராஜதுரை)
(4) அ.அயோத்திதாசர் ஆய்வுகள்- ராஜ் கெளதமன்
(5) ஆட்சியில் இந்துத்துவம் - அ.மார்க்ஸ்
(6) மால்கம் எக்ஸ் - ரவிக்குமார்
(7) தலித்தியமும் உலக முதலாளித்துவமும் - எஸ்.வி.ராஜதுரை
(8) குற்றவாளிக்கூண்டில் வட அமெரிக்கா -தமிழாக்கம்: அமரந்தா
(9) இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு - அ.மார்க்ஸ்
(10) இந்தியாவில் சாதிகள் - டாக்டர்.B.R.அம்பேத்கார் (தமிழில்:செங்கோபன்)
(11) ஆகஸ்ட் 15: துக்கநாள் -இன்பநாள் - பெரியார், அண்ணா, கேசரி (தொகுப்பு:எஸ்.வி.ராஜதுரை)
(12) ஆதி சங்கரரின் மக்கள் விரோத கருத்துக்கள் - பகவான்
(13) கற்பிதங்களின் தேசம் - குமரன்தாஸ்
(14) இந்து இந்தியா: அக்ரனியிலிருந்து அத்வானிவரை - எஸ்.வி.ராஜதுரை
(15) மார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - ரா.கிருஸ்ணய்யா
(16) இந்தியத் தத்துவங்களின் அரசியல்- ந.முத்துமோகன்
(17) காந்திய அரசியல் - வ.கீதா
(18) பூர்தியாவும் மார்க்சிசமும் - எஸ்.வி.ராஜதுரை
(19) புத்தர் சிரித்தார் - பாமரன்
(20) க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - தமிழ்-தமிழ்-ஆங்கிலம்

நாககன்னி

Thursday, November 30, 2006

போர் பேரலையாகி
மூர்க்கமாய் எற்றித்தள்ள
சமுத்திரங்கள் தாண்டி
பெயரறியாக் கரையடையும் ஆதிமனிதன்
புரட்டுகின்றான்
பூர்வீகநிலம் அபகரிக்கப்படும்
வரலாற்றின் பக்கங்களை

இவன்
இருப்பிழந்த வலியின்
கனந்தாங்காது துடித்த தேவதைகள்
மழைக்காலத்தில் அனுப்பிய
நாககன்னியுடன்
பகிர்ந்தும் பிணைந்தும் சிலிர்க்க
அந்நிலப்பரப்பெங்கும் மலரத்தொடங்கின
குழந்தைகள் குதூகலத்துடன்

இங்கு
வாழ்வு செழிப்பாகவும்
இயற்கை தாலாட்ட
எவருக்கும் அஞ்சவேண்டியதில்லையெனவும்
தற்செயலாய் வந்திறங்கிய
கடற்கொள்ளையரிடம்
செய்தி கொடுத்தனுப்பினான்;
உயிருக்காய்
அலைமேல் தத்தளிக்கும்
தன் நாட்டு மக்களுக்கு.

கூட்டமாய் வந்தவர்கள்
தம்வாழ்வு
துப்பாக்கிமுனையில் தீர்மானிக்கப்பட்ட
பொழுதுகள் மறந்து
பசும்மரங்களை தீயிட்டு கொளுத்தி
இசைமீட்டிய பறவைகளை
நாண்பூட்டி வதைக்கவும்
தொடங்கலாயினர்

விரும்பியதை புனைந்து
விரும்பியதை அருந்தி
இயற்கையாய் வாழ்ந்த நாககன்னியை
வன்மத்துடன் புணரத்துடித்த
குறிகளின் வசீகரப்பேச்சில்
தன்சுயத்தையும் தொலைத்தான்
ஆதிமனிதன்

சூரியன் துணையிருக்கும்வரை
அவளை அடைதல் ஆகாதெனும்
உண்மை கசக்க
தங்களைப் போல பிறப்பால்
சாதிப்பச்சை குத்தப்படாதவள்
இழிபிறவியென கற்பிதங்கள் இயற்றத்தொடங்கினர்
பெயர்ந்தவர்கள்

ஓர் அமாவாசையிரவில்
நாககன்னியையும்
பச்சை குத்தப்படமுடியா குழந்தைகளையும்
சாதியுருவேறியாடி
கொன்று புதைக்க
வெகுண்டெழுந்தான் ஆதவன்
விழிகள் சிவக்க

மீண்டும்
நாடற்றவர்களான இவர்களை
இனி
தேவதைகளும்
அரவணைக்கப்போவதில்லை.

(2006)
(காலம் - இதழ் 27)


'வாழும் தமிழ்'

Saturday, November 25, 2006

-காலம் சஞ்சிகை ஆதரவில் நடந்த புத்தகக்கண்காட்சி-
(ரொரண்டோ)

P1010020


P1010018


P1010035


P1010032

P1010034


P1010026

P1010022

திரைப்படங்கள் திரையிடல், இன்னிசைக்கச்சேரி போன்றவற்றோடு 'வாழும் தமிழ்' புத்தகக்கண்காட்சி நடந்தேறியது. திரையிடலின்போது குறித்த நேரத்துக்குப்போக முடியாதபோதும், இன்னிசைக் கச்சேரியை கேட்கமுடிந்தது. நீண்டநாட்களுக்குப் பின் பாரதியார் பாடல்களை இசையுடன் இனிய குரல்களுடனும் கேட்டது நல்லதொரு அனுபவம்.

வாங்கிய சில புத்தகங்கள்

P1010048

(1) முன்பு ஒருகாலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன - ரமேஷ்-பிரேம்
(2) இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும் - பிரேதா - பிரேதன்
(3) பெரியார்: தலித்துக்கள் முஸ்லிம்கள் - அ.மார்க்ஸ்
(4)அழுவதற்கு நேரமில்லை - தாமரைச்செல்வி
(5) அமைதியான ஒரு மாலைப்பொழுதில் (மொழிபெயர்ப்புக் கதைகள்) - எம்.எஸ்
6) கனவுப்புத்தகம் - ஜே.பி. சாணக்யா
(7) நான் பேச விரும்புகின்றேன் (கலை ஆளுமைகளின் வாழ்வை முன்வைத்து....) - ச.தமிழ்ச்செல்வன்
(8) மீனுக்குள் கடல் - பாதசாரி
(9) அந்தமான் நாயக்கர் - கி.ராஜநாராயணன்
(10) வெயிலோடு போய் - ச.தமிழ்ச்செலவன்
(11) அகாலம் - சமயவேல்
(12) வாளின் தனிமை - ச.தமிழ்ச்செல்வன்

அன்புடன் கிடைத்தவை
(13)வலை - டானியன் அன்ரனி (டானியல் அன்ரனியின் சகோதரர் டானியல் ஜீவா தந்தது)(14)காலம் - இதழ் -27 ( 'காலம்' செல்வம் தந்தது; கவிதையென்று எதையோ ஒன்றை சஞ்சிகைக்காய் எழுதிக்கொடுத்த கஷ்டத்திற்காய்... )

மூன்று பெண்களின் கவிதைகள்.

Thursday, November 23, 2006

எனக்கு உன்னிடம் சொல்ல இருப்பது

நீ
எனது நேசத்தைக் குறித்து பயப்பட வேண்டாம்
அது உன்னிடமிருந்து
எதையும் எதிர்பார்ப்பதில்லை.
நீ எனது நட்பை சந்தேகப்பட வேண்டாம்
அது உன்னை
சொந்தமாக்கிக்கொள்ள விரும்புவதில்லை.

ஒருசமயம்
ஓர் இருண்ட இரவில்
என்னுள்ளே ஏராளமான தேவதைகள் புகுந்து
அன்பைக் கொட்டினார்கள்.
நான் உறங்கும்போது
நிகழ்ந்தது இந்த சினேகதானம்.
விழித்தபோது
இதயத்தின் கரைமீறிப்பொங்கும்
நேசப்பெருவெள்ளம்.
துக்கப்படுபவர்களும்
தனிமையானவர்களும் வந்து
தட்டிப்பறித்தனர் அதை.
எனினும்
மிஞ்சிய நேசத்தைக்
கோப்பைகளில் ஊற்றிவைத்தேன்.
விரிந்த ஆகாயத்தின் கீழாக
பொட்டல் மைதானங்களினூடே
யாருமற்ற பாதையோரங்கள் வழியே
நான் அலைந்துகொண்டிருந்தேன்.
கையில் ததும்பிவழியும் பானக்குவளை.

உனக்கு
எனது நேசத்தைப்பற்றி
குற்றவுணர்வு வேண்டாம்.
இன்னொருவருடையதைத் திரும்பி வாங்கி
உனக்குக் கொடுக்கவில்லை.
வீணாகிப் போகும் நேசத்தை பற்றியும்
ததும்பி வழியும் பானக்குவளை பற்றியும்
உன்னிடம் நான் சொன்னதில்லையா?

உன்னிடம் சில விஷயங்களைத்
தெளிவுபடுத்த வேண்டும் நான்
என்றாவது நீ
என்னை நெருங்கி வருவதானால்
ஓர் அரசன்
தாசியை பார்க்கவரும் உணர்வு வேண்டாம்
எனக்கு உன்னிடமிருந்து
பரிசிலாக... பூமியோ
கைச்சாத்துப்பெற்ற சிற்றரசுகளோ தேவையில்லை
பக்தனுக்கு தரிசனமருளும்
கடவுளின் உணர்வும் வேண்டாம்.

எனக்கு உன்னிடம் கேட்டுவாங்க
வரங்கள் எதுவுமில்லை.
உனது ஒளியால் நிரப்பிக்கொள்ள
இதயவறுமையும் எனக்கில்லை.
ஒரு சக்கரவர்த்தி
இன்னொரு சக்கரவர்த்தியைச் சந்திப்பது போல
ஒரு நண்பன்
மற்றொரு நண்பனைச் சந்திப்பது போல
சம உணர்வுடன் வா.

ஒரு புல்லாங்குழல்
ராகத்தைத் தேடுவது போலவோ
ஒரு கேள்வி
பதிலைத் தேடுவது போலவோ
இயல்பாக இருக்கட்டும் அது.

- ரோஸ்மேரி (மலையாளம்)
.......

வாமனன்

நேசிக்கும் ஆணிடம்
நான் சொன்னேன்
உன்னை நான் நேசிக்கிறேன்
ஆனால்
ஓரடி பூமிமேல் வைத்து
அவன் கேட்டான்
என்ன இதன் அர்த்தம்?
நீ வேசியைப்போல பேசுவது என்ன்?
குடையும் மறைப்புமில்லாமல்.

நேசிக்கும் ஆணிடம்
நான் சொன்னேன்
உன்னை நான் நேசிக்கிறேன்
ஆனால்
இரண்டாவது அடி ஆகாயத்தில் வைத்து
அவன் கேட்டான்
என்ன இதன் அர்த்தம்?
நீ வேட்டைக்கிறங்கிய
யட்சியைப்போல பேசுவது ஏன்?
மறைப்பும் குடையுமில்லாமல்.

நேசிக்கும் ஆணிடம்
நான் சொன்னேன்
எனக்கு உன்மேல் நேசம்
ஆனால்
மூன்றாமடியை என் உச்சியில் அழுத்தி
அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்
என்ன இதன் அர்த்தம்?

முடிவடையாத அந்த விசாரணைக்கும்
காலடியிலிருந்து நழுவிய பூமிக்கும்
தலைமுறைகளிடமிருந்து மறைந்த ஆகாயத்துக்கும் மேலாக
நான் சொன்னேன்

எனக்கு உன்னிடம் நேசம்
குடையும் மறைப்புமில்லாமல்..
பயமும் பாசாங்குமில்லாமல்.

-சாவித்திரி ராஜீவன் (மலையாளம்)
........
(அஸின், பாவனா போன்ற மலையாளச்சேச்சிகளைப் பார்த்து மட்டும் ஜொள்ளுவிடாமல், மலையாள ஆக்க இலக்கியங்களையும் கொஞ்சம் அறிந்துகொள்க என்று மலையாளக் கவிதைகள் சிலவற்றை அனுப்பி வைத்த தோழியின் அன்புக்கு நன்றி.)
.....

உடலெழுத்து

வெறுங்கால்களால் கடக்க முடியாத
வெப்ப நாளின் முன்னிரவில்
மதுவருந்த அழைக்கப்பட்டிருந்தேன்
மூவருக்கான அவ்வீட்டில்
நானும் அவளுமே தனித்திருந்தோம்
கண்ணாடியில் செதுக்கப்பட்ட குப்பிகளில்
நொதித்த திரவம் நிரம்பியிருந்தது
குழல் நீண்ட மதுக் கோப்பைகள்
பற்றப்பட வாகாய் காத்திருந்தன
பனித்துண்டங்கள் மிதக்கும் நீரை
மிடறுகளாக விழுங்க ஆரம்பித்தோம்
போதையின் ஒளி
பரவத் தொடங்கிய போது
வேற்றறையின் படுக்கையிலிருந்தேன்
குவிந்த என் மார்பின் மென்மைபற்றி
வெகுநேரம் வினாவெழுப்பிக் கொண்டிருந்த
அவளுடைய தேகமும்
மிகக் குழைவாக இருந்தது
பிறகவள் மூச்சின் வெளிச்சத்தில்
உடலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
விடியும் வரை பழகிக் கொண்டிருந்தாள்
நீண்ட யுகங்களுக்குப் பிறகு
அன்று தான்
என்னுடல் என்னிடமிருந்தது.

(சுகிர்தராணி)
நன்றி: புதியகாற்று

சுகிர்தராணியின், ஆரம்பக்காலக் கவிதைகள் மற்றும் 'இரவு மிருகம்' தொகுப்பை வாசித்து அவரில் மதிப்பு இருந்தாலும், தொடர்ந்து ஒரே வித்மான கவிதைகளையே எழுதித் தள்ளுகின்றார் என்ற சலிப்பு அண்மைக்காலமாய் அவர் எழுதிவரும் கவிதைகளை வாசிக்கும்போது வருகின்றது. அவற்றிலிருந்து சற்று வித்தியாசமான வாசிப்பனுபவமாய் இந்தக் கவிதை -எனக்கு- தோன்றியது.

சாம்பலாய்ப் படியும் மனிதர்கள்

Thursday, November 09, 2006

I keep on dying again.
Veins collapse, opening like the
Small fists of sleeping
Children.
Memory of old tombs,
Rotting flesh and worms do
Not convince me against
The challenge. The years
And cold defeat live deep in
Lines along my face.
They dull my eyes, yet
I keep on dying,
Because I love to live.

('Lesson' by Maya Angelou)


புத்தகங்கள் எப்போதும் புன்னகைகளையே பரிசாகத் தருகின்றன என்று சிறுவர்கள் கூறுகின்றார்கள். நான் திறந்து வாசிக்கும் புத்தகங்களிலிருந்து அநேகமாய் வலிகளே வெளியேறுகின்றன. பிரியும் பக்கங்களிலிருந்து இறங்கும் வலிகளைப் பின்தொடரும் ஒவ்வொருபொழுதிலும் என்னை அவை அவிழ்க்க முடியாத புதிர்களுக்குள் சிக்கவைத்துவிட்டு வெளியேறி விடுகின்றன. நானோ, இது புத்தகத்தின் வாதையா இல்லை என் அனுபவங்களின் வாதையா என்று மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றேன்.

கனடாவுக்கு வந்து ஒரு வருடம் இருந்திருக்குமா? அதுவரை அனுபவித்திராத காலநிலை; ஆங்கிலமொழிப் பரீட்சயம் அவ்வளவாய் இல்லை என்கின்ற அவதிகளினூடாக விழி பிதுங்கிக்கொண்டிருந்த காலம். நகைச்சுவைக்குணம் மிகுந்தவனாய், கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ளவனாய் அறிமுகமாயிருந்தான் அவன். புலம்பெயர்ந்த அநேகருக்கு போர் தந்தவலிகளைப் போல, அவனுக்குள்ளும் இரத்தக்கறை படிந்த கடந்தகாலத்தின் பக்கங்கள் உறைந்துபோய்க் கிடந்தன. சிறுவயதில் அவனது தாயார் அவனது கண்முன்னாலேயே இந்திய இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பிற நண்பர்கள் கூறக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் அதை விரிவாகக் கேட்கும் தைரியம் எனக்கு ஒருபோதும் வந்ததில்லை. அவனது துயரநதி பெருக்கெடுத்துப் பாய்ந்தால் அதைக்கட்டுப்படுத்தும் ஆறுதல் வார்த்தைகள் என்னிடம் இல்லை என்பது ஒருபுறமிருக்க, எதன் பொருட்டும் அவனது தாயாரை அவன் திரும்பிப் பெறமுடியாது என்ற வாதையும் சோர்வும்தான் என்னை இதுகுறித்து பேசுவதை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

அப்போதுதான் எனக்கு கணணி என்பதே என்னவென்று அறிமுகமாயிருந்தது. கோடைகாலத்தில் நான் எடுத்த கண்ணி சம்பந்தப்பட்ட பாடம் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரியாக பயமுறுத்திக்கொண்டிருந்தது. என்னால் தொடர்ந்து இதைக் கற்கமுடியாது என்று சோர்வாய் இருந்தபொழுதில் இந்த நண்பன்தான் 'எல்லாவற்றின் அறிமுகங்களும் இப்படித்தான் பயமுறுத்தும், நாட்கள் செல்லச் செல்ல அவற்றின் முடிச்சு அவிழ நமக்கு அவை நெருக்கமாகிவிடும்' என்று பரிவான வார்த்தைகள் பேசி என்னை உற்சாகப்படுத்தியவன். பிறகு கணணியில் இருந்த சுவாரசியத்தை விட -வருடத்தில் குறுகிய காலம் வரும் கோடையில்- வண்ணமயமாய்த் திரியும் காரிகைகளில் ஈர்ப்பு வந்து அப்பாடத்தைத் தொடராது இடைநடுவில் நிறுத்தியிருந்தாலும், இன்றும் புதிதாய் எதையாவது கற்றுக்கொள்ளும்போது அவனது அந்த உற்சாக வார்த்தைகள்தான் உடனடியாக மனதில் வந்து உட்கார்ந்து கொள்ளும்.

பிறகு நண்பன் ஒருநாள் இறந்துபோனான். அவன் தேடிய மரணத்தின் வழி மிகக் கொடூரமானது. தனக்குத்தானே தீ மூட்டிக் கொண்டான். நெருப்பின் உக்கிரம் தாங்காமல் தான் தப்பிவிடக்கூடுமோ என்று யோசித்தோ என்னவோ தன்னுடலை நீண்ட பொலித்தீனால் இறுக்கக்கட்டி பெற்றோலை ஊற்றியிருக்கின்றான். சம்பவம் கேள்விப்பட்டு அடுத்த நாள் போய்ப் பார்த்தபோது பசும்புல்வெளியில் தன் சுவடுகளை விட்டுச் சென்றிருந்தான். கடைசிக்கணத்தில் நண்பன் எங்களுக்கு என்ன சொல்ல விரும்பியிருப்பான் என்பதை கருகிய அந்தப்புற்கள் மட்டுமே அறியும்.

ஏனிந்த முடிவை எடுத்தான் தோழன்? அவனைச் சிலிர்க்க வைத்து குழம்பிப்போன காதல் என்றார்கள். அவனது தாயின் மரணத்தை நேரில் கண்ட மனப்பிறழ்வு என்றார்கள். காரணங்களைக் கண்டறிந்து என்ன செய்யப்போகின்றோம்? எங்களுக்காய் திரும்பி அவன் உயிர்த்தெழுந்து வந்து பாடசாலை வாசலில் சிரித்துக்கொணடு நிற்கவா போகின்றான்?

எனினும் அவன் மரணத்தோடு -என்றுமே அழித்துவிடமுடியாததாய்- ஒரு குற்றவுணர்வு எனக்குள் குந்திக்கொண்டது. அவனது மரணத்துக்கு சில வாரங்களுக்கு முன்புதான் நானும் தற்கொலை செய்ய முயற்சித்திருந்தேன். வகுப்புக்களில் அளவுக்குமதிகமான மெளனத்தையும், நூலகங்களில் தனித்திருக்கும் தனிமையும் கண்டு, என்னில் ஒருவித பரிவான உணர்வு அவளுக்குள் தலைத்தூக்கியிருக்கலாம். அதை 'தெய்வீக'க்காதல் எனக் கற்பிதங்செய்துகொண்டேன் நான். 'இப்போது பதினாறு வயது, உனக்கு என்னைப் பிடித்திருந்தால் இன்னும் நான்கு வருடங்கள் காத்திரு' என்று கூறி இன்னுமின்னும் கனக்க சரளமான ஆங்கிலத்தில் சலசலவென்று கதைத்துக்கொண்டே போனாள் அவள். எனக்கு அவளின் உரையாடலில் வந்த காதல் என்ற ஒரு வார்த்தையே போதுமானதாயிருந்தது நிறையக் கனவுகளை வளர்க்க. நான்கு வருடங்கள் காத்திரு என்றவள், நாற்பது நாட்களுக்கும் குறைவான நாட்களில் முகத்தைத் திருப்பி விறைத்துக்கொண்டபோது மனது உடைந்துபோனது.

சங்ககாலத்தில் கைக்கிளைக்காதலால் மடலேறி மாய்த்துக்கொண்ட யாரோ ஒருவன் எனக்கு உறவாயிருந்து அவனது மரபணுக்கள் என்னுள் கடந்தப்பட்டிருக்க வேண்டும் போல. தற்கொலைக்கு முயற்சித்தபோது -அதைக் கச்சிதமாய் நிறைவு செய்வதற்கான துணிவின்மை மற்றும் அம்மாவின் கடைசி நேர நுண்ணுணர்வு- என்னைக் காப்பாற்றி இப்போது இதை எழுத வைத்துக் கொண்டிருக்கின்றது. இப்படி நான் முயற்சித்தேன் என்றும் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்(?!) என்றும் அந்த நண்பனிடம் அன்று மனம் திறந்து பேசியிருந்தால், அவனும் தன்னம்பிக்கை பெற்றிருக்கக்கூடும். தற்கொலை மட்டுமே ஒற்றைவழியல்ல; வாழ்வதற்கு பல வழிகள் இருக்கின்றன என்று யோசித்து, தனது மரணத்தை இயற்கை தேர்ந்தெடுக்கட்டும் என்று தோழன் முடிவெடுத்து எங்களில் ஒருவனாய் இன்று அவன் வாழ்ந்து கொண்டிருக்கவும் கூடுமல்லவா?

இந்தத் தவறை மீண்டும் விடக்கூடாது என்பதில் -ஆகக்குறைந்தது எனக்கு நெருக்கமானவர்களிடம்- கவனமாயிருக்கின்றேன். பிறகொருபொழுதில் தோழியொருத்தி நிறைய தூக்க மாத்திரைகள் எடுத்து அதிஸ்டவசமாய்த் தப்பி, அடுத்த முறை தற்கொலையைத் திருத்தமாய் செய்வேன் என்று என்னிடம் அடம்பிடித்துக் கொண்டிருந்தாள். வைத்தியசாலையில் இருந்து வந்து அடுத்தநாளே -என்ன எழுதுகின்றேன் என்று தெரியாமல்- பக்கம் பக்கமாய் தற்கொலை குறித்து நிறைய எழுதி அவளிடம் கொடுத்திருக்கின்றேன் (இப்போது அதை நானோ இல்லை தோழியோ வாசித்துப் பார்த்தால் எவ்வளவு குழந்தைத்தனமாய் அது இருக்கும் என்பது வேறுவிடயம்). மஞ்சள்நிற ரோஜாப்பூக்களுடன் அவளைச் சந்தித்து - மனந்திறந்து பேசட்டும் என்று- ஒரு முழுநாளை அவளுடன் வளாகத்தின் study loungeல் கழித்ததும் நினைவிலுண்டு. 'ஒரு நாளும் பூக்கள் எனக்காய் வாங்கித் தராத நீ, நான் சாகப்போகின்றேன் என்றவுடன் ரோஸஸை வாங்கி தருகின்றாயா?' என்றார். 'அப்படியொன்றுமில்லை; பூக்கள் விற்கும் பெண்ணில் ஒரு crush வந்து அவரைச் சைட் அடிப்பதற்கு பூக்களை வாங்கவேண்டியதாய்ப் போய்விட்டது, அதுதான் வாங்கினதை இனி வேஸ்டாக்கக் கூடாது என்றுதான் உங்களிடம் தந்தேன்' என்று கூற, 'மவனே...' என்று ஆரம்பித்து அவர் திட்டத்தொடங்கியபோது, தோழி விரைவில் இயல்புநிலைக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கை வந்தது.

(II)

நிறைவேறாத ஆசைகள் கனவுகளாய் அடிக்கடி வந்துகொண்டிருக்கும் என்பார்கள். எனக்குள் தற்கொலை குறித்த எண்ணங்கள் கனவுக்கும் நனவுக்கு இடையிலான பாதையில் அடிக்கடி மூடிய பனியாய் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றன. அந்த வகையில்தான் சில்வியா பிளாத்தும், சிவரமணியும் எனக்கு நெருக்கமாகி இருக்கின்றார்கள் போலும். சிவரமணி இறந்துவிட்டார் என்று அக்கா யாழ் வளாகத்திலிருந்து ஒரு பின்னேரப்பொழுதில் கலங்கிய முகத்துடன் சொன்னபோதுதான் தற்கொலை குறித்த முதற்குறிப்பு எனக்குள் நுழைந்திருக்கவேண்டும்.

சிவரமணி எனக்கு முதலில் கவிஞையாக அறிமுகமானவரல்ல; அக்காவின் தோழியாகத்தான் அறிமுகமானவர். சிறுவயதுகளில் அக்காவின் அல்பங்களில் அவரின் படத்தைப் பார்த்து -கன்னக்குழி விழ அழகாகச் சிரித்துக்கொண்டிருப்பவர்- ஏன் இப்படியான முடிவை தேடினார் என்றுதான் அதிகம் யோசித்திருக்கின்றேன். 'கேட்ட கேள்விக்கு விடையில்லாதபோது மெளனமாயிருக்கப் பழகவும்' என்ற வலி(மை) நிறைந்த வார்த்தையை அக்கா கத்தரித்து வைத்திருந்த சிவரமணியின் படத்திலிருந்துதான் மனதுக்குள் ஒட்டிக்கொண்டது. இந்த வார்த்தை பல இடங்களில் அமைதியாக இருக்கச் செய்து தேவையில்லாத மன உளைச்சல்கள் என்னை நெருங்கவிடாது தடுத்திருக்கின்றது. சில்வியா பிளாத் தற்கொலை குறித்து வெளிப்படையாக எழுதியதைப் போன்று சிவரமணி தற்கொலை குறித்த குறிப்புக்களை நமக்காய் விட்டுச்சென்றதில்லை. சில்வியா 'சாவதும் ஒரு கலை' என்று சொன்னதோடு மட்டுமின்றி, தனது ஒரு நீண்டகவிதையில் எழுதியதுமாதிரியே தன் தற்கொலையின் வழியையும் தேர்ந்தெடுதெடுத்தவர். சில்வியாவின் கவிதைகளை முதன்முதலில் வாசிக்கத் தொடங்கும் ஒரு வாசகரின் பொருட்டு சில்வியா மீண்டும் தற்கொலை செய்துகொள்கின்றார், அந்த வாசகர் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என்ற பதட்டத்துடன்.

இன்றையபொழுதில் எத்தனையோ தற்கொலைச் சம்பவங்களை கேள்விப்பட்டும் வாசித்தும் விட்டாயிற்று. பெறுபெறுகள் குறைகின்றது என்ற பயத்தில் -நதிக்குள்-, அம்மா தன்னை அதிகம் திட்டிவிட்டார் என்பதற்காய் -நெடுஞ்சாலையில்-, நீ என்னை நேசிக்கவில்லையென்றால் இறந்துவிடுவேன் என்று கண்ணித்திரையில் எழுத்துக்கள் உறைந்துகிடக்க - அடுக்குமாடிக்கட்டட்டத்தில்- என எத்தனையோ சம்பவங்கள் நினைவின் அலையில் புரள்கின்றன. ஏன் இதை எழுத ஆரம்பித்த சென்ற வாரத்திற்கும், இப்போது எழுதி முடிக்கும் இந்த வாரத்திற்கும் இடையிலான வார இறுதியில்கூட, தமிழர் ஒருவர் தனது மனைவியையும் மகளையும் கொலை செய்துவிட்டு - domestic violence பெரும்பங்கு வகித்தது என்றாலும்- தானும் தற்கொலை செய்திருக்கின்றார் என்று ஊடகங்கள் கூறிக்கொண்டிருக்கின்றன.

பனிக்காலம் ஆரம்பிக்கின்றது. வந்து இறங்கிய புலத்தில் வேர்களையும் பதித்து அடுத்த சந்ததிகளின் விழுதுகளும் வளரத்தொடங்கிவிட்டன. ஆனால் பனிப்புலத்தை உழுது -ஈழத்தில் இருப்பதைவிட மோசமாய்- சாதி, சமயம், புரளி, அந்தஸ்து என்று 'அருமையான' விளைச்சல்களை அமோகமாய் பெற்றுக்கொண்டிருக்கின்றோமே தவிர சக உயிர்களின் மதிப்பை இன்னும் உணர்ந்தோமில்லை. சாதி, சமயம், கெளரவம் இன்னபிறவற்றால் மன அவசத்தையோ தற்கொலையையோ, வன்முறையையோ தடுத்து நிறுத்திவிடமுடியாது என்று எப்போது எமக்கு உறைக்கப்போகின்றது?

இனி, சூரியன் புதைந்துபோன வானப்பின்னணியைப் போல எம் மனங்களையும் எரித்துச் சாம்பராக்க-winter blue- விரைவில் வரப்போகின்றது. வெளியே -நினைத்த நேரத்தில் உலாத்தித்திரிந்து புத்துணர்ச்சி பெறுவதைத் தடுத்து - பனியும் காற்றும் பயங்கரமாய்ச் சுழன்றாட, இழந்துபோன எவற்றையோயெல்லாம் அசைபோட்டு மனது குழம்பிச் சிதறப்போகின்றது.

கொஞ்சம் கனிவு தரும் வார்த்தைகள்; மனந்திறந்து பேச சில நிமிடங்கள் என்று சக மனிதருக்காய் சிறுபொழுதை ஒதுக்கும்போது - உங்களை அறியாமலே- நடக்கவிருக்கும் ஒரு தற்கொலையை நீங்கள் நிறுத்திவிடவும் கூடும். ஆதியில் மடலேறியவனின் மரபணுவை கொண்ட என்னைப் போல, யாரேனும் ஒருவர் -தான் இன்று வாழ்ந்துகொண்டிருப்பதற்கு- நீங்கள்தான் காரணமென்று நாளை நன்றியுடன் ஒரு குறிப்பை அன்பு ததும்ப உங்களுக்காய் எழுதவும் கூடும்.

புதினம்

Friday, October 20, 2006

-கள்ளம்' நாவலும் காமம் பற்றிய சில குறிப்புக்களும்-

நாம் எல்லோரும் நம் வாழ்வில் கள்ளம் செய்துகொண்டே இருக்கின்றோம். பெற்றோருக்குத் தெரியாமல், துணைக்குத் தெரியாமல், குழந்தைகளுக்குத் தெரியாமல், நண்பர்களுக்குத் தெரியாமல் என நுட்பமாய் எமக்கான கள்ளங்களைச் செய்துகொண்டிருக்கின்றோம். கள்ளங்கள் பிடிபடும்போது அவமானப்பட்டும், பிறரின் பார்வைக்கு அது அகப்படாதபோது குறுகுறுப்பான மகிழ்ச்சியுடன் அதைக்கடந்தபடியும் போய்க்கொண்டிருக்கின்றோம். தஞ்சை ப்ரகாஷின் 'கள்ளம்' நாவலும் பலரது கள்ளங்களை நம்முன் நிலைக்கண்ணாடியாக -அரிதாரங்களையின்றி- முன் நிறுத்துகின்றது. எனினும் வாசிக்கும் நமக்குத்தான் அவை கள்ளங்களாய்த் தெரிகின்றனவே தவிர, இந்நாவலிலுள்ள பல பாத்திரங்களுக்கு அவை இயல்பான வாழ்க்கை நடைமுறைகளாகத் தெரிகின்றன.

தஞ்சாவூர் ஓவியங்களை பராம்பரியமாகச் செய்துகொண்டு வருகின்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ராஜூ என்கின்ற கலைஞன், எந்த மாற்றமும் இல்லாமல் புராதனத்தை அப்படியே பின்பற்றி ஓவியஞ் செய்கின்ற தந்தையோடு முரண்படுகின்றான். சுயாதீனமாய் எதுவுஞ்செய்யாது, வெட்டி ஒட்டி கண்ணாடிச்சில்லுகளால் அலங்கரித்து வெளிநாட்டில் அவற்றை நல்லவிலைக்கு விற்று பணஞ்சம்பாதிக்கும் தனது தந்தையை மிக வெறுக்கும் ராஜு குடியிலும், கஞ்சாவிலும் மிதக்கின்றான். ராஜூ தனது மகன் என்ற காரணத்திற்காகவும், தனது கெளரவம் பாதிக்கப்படக்கூடாது என்றவகையிலும் ராஜூவின் 'அடாவடிகளை' சகித்து அவனது செலவுகளுக்கு கேட்ட நேரத்துக்கு எல்லாம் காசு கொடுத்து கவனிக்கின்றார் ராஜூவின் தந்தை. ஒருநாள் சிதைந்து போய்க்கொண்டிருக்கும் தஞ்சாவூர் அரண்மணையின் சிக்கலான தெருக்களில் ஒன்றில் பாலியல் தொழிலாளியான பாபியைச் சந்திக்கின்றான் ராஜூ. ஆனால் அவளை விட அந்தப் பாலியல் தொழிலாளிக்கு கூடமாட ஒத்தாசை செய்து சமைத்துக்கொண்டிருக்கும் ஒரு மராட்டியப் பெண் மீது ராஜூவுக்கு மையல் வருகின்றது. பாபியால் -தான் தெரிந்து வைத்திருக்கின்ற பாலியல் தொழிலால் எந்த ஆணையும் அடித்து வீழ்த்த முடியும் என்ற எண்ணத்தை-ராஜூவை நுட்பமான விதத்தில் ஈர்த்து ஜூம்னா வெற்றி கொள்கின்றாள். பாபிக்கு பொறாமை தீயாய் எழுகின்றது.

kallam

ஜும்னாவுடன் சேர்ந்து சேரியில் வாழத்தொடங்கும் ராஜூ சேரி மக்களின் கடவுள்களான சுடலை மாடனையும், காடனையும், இராயனையும், சூரனையும் தஞ்சாவூர் கண்ணாடிச்சில்லுகள் தெறிக்க தெறிக்க பிரமாண்டமாய் கட்டி எழுப்புகின்றான். அவனின் ஆளுமை கண்டு சேரிப் பெண்கள் பலர் அவனில் மையல் கொள்கின்றனர். தம் விருப்பங்களை நாகரீகம் பூசி மினுக்காமல் நேரடியாக ராஜூவிடம் தெரிவிக்கவும் செய்கின்றனர். ராஜூவை அந்தச் சேரிப் பெண்கள் மட்டுமில்லை அந்தச் சேரி ஆண்களும் தலையில் வைத்துக்கொண்டாடுகின்றனர். அன்றைய நாளின் பசியை எப்படித் தீர்ப்பது என்ற கவலையைப்போல அன்றைய நாளின் காமத்தைத் தீர்ப்பது அன்றைய நாளுக்குரியது என்பதாய் சேரி மக்களுக்கு வாழ்க்கை முறை இருக்கின்றதே தவிர கடந்தகாலம்/நிகழ்காலம் குறித்த எந்தப்பிரக்ஞையும் அம்மக்களுக்கு இருப்பதில்லை. தமக்கான -ஒழுங்கு நடைமுறைப்படுத்திய சமூகம் கூறும்- கள்ளங்களைத் தெரிந்தே செய்கின்றனர். ராஜூ தன்னில் மையல் கொள்ளும் பெண்களுக்கு -உடலகளைக் கலக்கச் செய்யாமல் ஆனால் ஒருவித காமத்தைத் தக்கவைத்தபடி- தனது தஞ்சாவூர் ஓவியக் கலையைக் கற்றுக்கொடுக்கின்றான். 'கருப்பையைக் கழற்றி வைக்காதவரை உங்களுக்கு எங்களைப் போன்ற ஆண்களிலிருந்து சுதந்திரம் இல்லையடி' என்று ராஜூ கூறிக்கொண்டாலும் பல பெண்களைத் தேர்ச்சியுள்ளவர்களாய், தமது உழைப்பிலேயே வாழ்வை நகர்த்தக்கூடிய கலைஞர்களாய் வளர்த்துவிடுகின்றான். அவர்கள் தங்கள்பாட்டில் கண்ணாடிச் சில்லுகளில் படம் வெட்டி ஒட்டி தஞ்சாவூரிலும் அதற்கு அண்மையிலுள்ள ஊர்களிலும் விற்று காசு உழைக்கத் தொடங்குகின்றார்கள்.

ஜூம்னாவுடன், ராஜூ சேரியில் வசித்தாலும் மற்றப் பெண்களின் நெருக்கத்தால் ஜூம்னா விலத்திப் போகின்றாள். அவள் பூமாலை கட்டி சம்பாதித்துக்கொள்கின்றாள். ஆனால் ஜூம்னாவின் ராஜூவாக மட்டுமே ராஜூ அந்தச் சேரி மக்களால் பார்க்கப்படுகின்றான். ராஜூவை சந்திக்க முன், எத்தனையோ ஆண்களோடு படுக்கையில் சல்லாபிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஜூம்னாவுக்கு ஆண் உடல் வெறுத்துப் போகின்றது. அவளுக்கு ராஜுவின் உடலல்ல, தனக்காய் ஒருத்தன் இருக்கின்றான் என்ற துணையே தேவைப்படுகின்றது. ராஜூவுக்கும் காமத்தால் தன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஒரு பெண் ஜூம்னா என்பது மட்டும் தெளிவாய்த் தெரியும்.

ராஜூவின் தஞ்சாவூர்க்கலையும் நவீன ஓவியப்பரீட்சயமும் கலந்த ஓவியங்களின் புகழ் தஞ்சாவூரில் மட்டுமில்லாது, தமிழ்நாடு தாண்டி வெளியிலும் பரவுகின்றது. இறுதியில் 'உனக்கு ஒன்றுமே தெரியாது' என்று திட்டி அனுப்பிய ராஜூவின் தந்தை, மகனின் திறமை கண்டு வியந்து தனக்குப்பின் தனது ஓவிய நிறுவனத்தை நீதான் நடத்தவேண்டும் என்று சேரிக்குள் வருகின்றார். ராஜுவோ இன்னும் என்னை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையேன விசராந்தியாகச் சிரிக்கின்றான். மேலும் சேரிக்கு வரமுன்னர் தன்னில் மையல்கொண்ட நண்பனின் தங்கை தனது தந்தையிற்கு மனைவியாக இருப்பதைக் கண்டு இது வாழ்வின் விந்தையென திகைக்கின்றான்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குள் (சாதிக்குள்) சனாதனமாய் இறுகிக்கிடந்து விரைவில் அழிந்துபோய்விடும் என்ற தஞ்சாவூர் ஓவியப்பாணியை எல்லாச் சமூகங்களிலும் பரப்பி -காலங்களுக்கேற்ப மாற்றமடைந்து- தொடர்ந்து உயிர்த்திருக்கும் என்று நம்பிக்கை கொள்கின்றான் ராஜூ. சேரிக்குள் இருந்த பறையர், தேவர், கவுண்டர் பெண்களை மட்டுமில்லை, உயர்சாதியினராக தங்களைக் காட்டிக்கொள்வதில் பெருமிதப்படும் பிராமணப்பெண்களும் சேரிக்கு வந்து கற்கப்போகின்றோம் என்கின்றபோது ராஜு மறுப்பேதுமில்லாமல் சேர்த்துக்கொள்கின்றான். ஆனால் அதேசமயம் பாடத்திட்டங்களிலுள்ள கற்பித்தல்முறைகளை நிராகரித்து நேரடியாக ஓவியம் வரைவதிலிருந்து கலையைக் கற்றுக்கொள்வதையே ராஜூ ஊக்கப்படுத்துகின்றான். எனினும் அவன் தனக்குப்பின் இந்தக்கலையைப் பரப்புவார்கள் என்று தீவிரமாய் நம்புகின்ற ஒரு பெண் தற்கொலை செய்துகொள்கின்றாள். இன்னொரு பெண் யாரோ ஒருவனுடன் சென்னைக்கு ஓடிப்போகின்றாள். இப்படியாக வீழ்ச்சிகள் ஆரம்பிக்கின்றன. எனினும் காற்றைப் போன்றவன் கலைஞன், வீழ்ச்சிகளையும் எழுச்சிகளையும் பற்றிக் கவலைப்படாது தனக்குப் பிடித்ததைச் செய்துகொண்டிருப்பான் என்கின்றமாதிரி ராஜூ எவ்வித அறிவிப்போ எதிர்காலத் திட்டமிடல்களோ இன்றி அந்தச் சேரியை விட்டு வெளியேறத்தொடங்குகின்றான். அப்படியே நாவலும் நிறைவுபெறுகின்றது.

இந்த நாவலில் ராஜூ என்ற ஒரு பாத்திரத்தைத் தவிர கவனப்படுத்திருக்கும் மிகுதி அனைத்துப் பாத்திரங்களும் பெண்களே. நாவலில் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை சேரியே முக்கிய கதைக்களனாய் இருக்கின்றது. சேரியின் மொழிநடையில் அம்மக்களின் வாழ்வுப்ப்க்கங்கள் இயல்பாய் விரித்துவைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு நாகரீகமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு அதுமட்டுமே உன்னதமான வாழ்க்கையென நம்பிக்கொண்டிருக்கும் பலரால், இந்நாவலின் மொழிநடையை அவ்வளவு இலகுவாய் ஜீரணிக்கமுடியாது. எல்லாக் 'கெட்ட வார்த்தைகளும்', எல்லா 'அசிங்கங்களும்' (நாவல் ஆரம்பிப்பதே பாலியல் தொழில் செய்யப்படும் ஒரு பகுதியில்.. கெட்ட வார்த்தைகளுடன் தான் உரையாடலும் ஆரம்பிக்கும்) முகமூடிகளின்றி இந்நாவலில் பேசப்படுகின்றது. ஒரே களத்தில் இந்நாவல் சுழன்றாலும் பாத்திரங்களின் உரையாடல்களால் நாவலை அலுப்பின்றி வாசித்து முடிக்கக்கூடியதாய் இருப்பதை நாவலின் பலம் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால் ஒருவித மணிப்பிரவாள நடைக்குள் ப்ரகாஷ் சிக்கிக்கொண்டிருப்பது வாசிப்பிற்கு இடையூறு ஊட்டுவதும், சேரி மக்களின் பேச்சின் நடுவில் கூட இந்த மணிப்பிரவாளநடை கதாசிரியரை அறியாமலே வந்துவிடுவதும் ப்லவீனம் எனத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். (இந்நாவல் தஞ்சை ப்ரகாஷ் எழுத முடியாமல் வைத்தியசாலையில் நோயின் நிமித்தம் இருந்தபொழுதுகளில் ப்ரகாஷ் கூறக்கூற அவரின் நண்ப்ரொருவரால் எழுதப்ப்படடது என்ற குறிப்பையும் நாம் சேர்த்து வாசிக்கவேண்டும்).

நாவலில் விளிம்பு நிலை மக்களே முதன்மைப்படுத்தப்பட்டிருந்தாலும், சில குறிப்பிட்ட சொற்றொடர்கள் குறித்த அரசியல் குறித்தும் கவனிக்கவேண்டும். உதாரணமாய் 'பற சனத்த சும்மா சொல்லக்கூடாது. படுன்னு மடிய விரிக்கிறாளே(ப 172)' என்பதுமாதிரியான வாக்கியங்களை சேரியிலுள்ள பெண்கள் உபயோகிக்கின்றனர் (சேரியில் பறையர், கவுண்டர், தேவர் என்று எல்லவிதமான சனங்களும் இருக்கின்றனர்). இவ்வாறான உரையாடல்களை வாசிக்கும்போது அது பாத்திரங்களின் அடிமனக்குரலா இல்லை கதாசிரியரின் குரலா என்ற சந்தேகம் வருகின்றது.

இந்நாவலில் சமப்பாலுறவு பெண்கள் பற்றிய வர்ணனைகள் வருவதும், நாவலின் முடிவில் கூட இருபெண்களுடையே அவ்வாறான் ஒரு உறவு முகிழலாம் என்றமாதிரியான குறிப்பை விட்டுச்செல்வதும் குறிப்பிடவேண்டியதொன்று. இந்தக் கதையிலிருக்கும் பல பாத்திரங்கள் இரத்தமும் சதையுமாய் நடமாடிய /நடமாடும் மக்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார் ப்ரகாஷ். இந்நாவலில் குறிப்பிட்டதைவிட மிக வெளிப்படையும், அழுக்க்குகளும் கசடுகளும் வெற்றிகளும் வீழ்ச்சிகளும் நிரம்பிய மனிதர்கள் அவர்கள் என்றாலும் அவற்றை அப்படியே அடையாளப்படுத்த/ஏற்றுக்கொள்ள தமிழ்ச்சமூகம் இன்னும் வள்ர்ந்துவிடவில்லை என்ற தனது ஆதங்கத்தையும் ப்ரகாஷ் வெளிப்படுத்துகின்றார். நாவலை வாசித்தபோது ஒரு வாசக மனோநிலையில் நின்று யோசித்துப் பார்த்தபோது நினைவுக்கு வந்தது ஜி.நாகராஜனின் 'நாளை மற்றுமொரு நாளே'யும், ஆதவனின் 'காகித மலர்'களும். 'கள்ளம்' நாவல் இவற்றின் பாதிப்பிலிருந்து எழுந்தது என்று நிறுவுவதல்ல இதன் அர்த்தம். நாகராஜனால் விபரிக்கப்பட்ட பாலியல் தொழில் செய்யும் பெண்ணும், 'காகிதமலரில்' வரும் உலகோடு ஒட்டிவாழ முடியாத (வெறுமை/தனிமை)யும் கொண்ட ஆணும் உடனே நினைவில் வந்து ஒட்டிக்கொள்கின்றனர்.

(2)
-ப்ரகாஷ் இன்று உயிரோடு இல்லாதபடியால்- அவர் முன்னுரையில் எழுப்பியிருந்த கேள்வியை யோசிக்கும்போது, காமம் உட்பட்ட இன்னபிற விடயங்களைத் தமிழில் எவ்விதக்கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாய் இன்றையபொழுதில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் என்றால் ரமேஷு -பிரேமைக் குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன். அவர்கள் தமது இருபது வயதில் எழுதிய 'அதீதனின் இதிகாசத்திலிருந்து' தொடர்ந்து உடல்மொழி பற்றிய உரையாடல்களை விரிவாக்கியபடி இருக்கின்றார்கள். உடலை வியந்தபடியே அவ்வுடலை பல்வேறு கூறுகளாய் துண்டு துண்டுகளாக்கியபடி உடல் மொழியின் வினோதங்களை, உணர்ச்சியின் குவியல்களாக்கிவிடாது உரையாடுவதை ரமேஷ்-பிரேமின் எழுத்துக்களில் காணலாம். ஆனால் அதிலும் பல பலவீனங்கள் இருப்பதாய் தோழியொருவர் அடிக்கடி குறிப்பிடுவார்; அது அவரது வாசிப்பு.

சாரு நிவேதிதா மீது சில விடயங்களில் மரியாதை இருந்தாலும் -அவரோ அல்லது அவரின் நண்பர்களோ- சாருவை பாலியல் சேர்ந்த எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தும்போது சற்று அதிகப்படியோ என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது. சாருவின் சீ(ஜீ)ரோ டிகிரியிலிருந்து, இன்றைய (இணையத்திலிருக்கும்) பத்திகள்வரை -வாசிக்கும்போது- அவரின் பாலியல் பற்றிய உரையாடல்கள் நிமிடங்களுக்குள் jerk-off ஆக்கிவிடுகின்ற வகையைச் சேர்ந்த எழுத்தே தவிர காமத்தை அதன் இயல்போடு அணுகவில்லை என்றே கூறதோன்றுகின்றது. ஆனால் அதே சாருவே மற்ற நாட்டு இலக்கியங்கள்/திரைப்படங்களை வாசித்துவிட்டு அவர்கள் காமத்தை கலாபூர்வமாய் எழுதுகின்றனர்/எடுத்துத்தள்ளுகின்றனர் -தமிழில் தன்னைத்தவிர எவருமில்லை- என்று புலம்புவது என்பது முரண்நகைதான்.

ஜெயமோகனின் எழுத்துக்களில் காமம் இருந்தாலும் -ஒழுங்கு/ஒழுக்கம் என்பதில் ஜெயமோகனுக்கு இருக்கும் தீரா விருப்பால்- உடல்கள் பகிர்வது குறித்து குற்றவுணர்வுடன் அல்லது அவமானத்துடன் நகர்வதாய் பல இடங்களில் காட்டப்படுகின்றதே தவிர பரிபூரணத்தை அடைய முயற்சிக்கும் புள்ளிகளை வந்தடைவதே இல்லை. அதேபோன்று ஜே.பி.சாணக்கியாவின் எழுத்துக்களில், பாலியல் சார்ந்த சித்தரிப்புக்கள் முக்கியத்துவம் பெறுகின்றவேளைகளில், அவரது வர்ணனைகள் அதிகவேளைகளில் காமத்தை உணர்ச்சிக்குவியலாக்கும் முயற்சிகளாகிப் போய்விடுகின்றன. இந்தவகையில் ப்ரகாஷின் 'கள்ளம்' நாவல் உடல்மொழி குறித்து தீவிரமாய் உரையாடவிட்டாலும், விளிம்புநிலை மக்களினூடாக -இயன்றளவுக்கு- காமத்தை இயல்பாய் அணுகியிருக்கின்றதே என்றுதான் கூறத்தோன்றுகின்றது.

எனக்கான தெருக்கள்

Thursday, October 12, 2006

நான்கு பருவங்களில் பிடித்த பருவம் எதுவென்றால் இலைதுளிர்காலம் என்று தயங்காமல் சொல்வேன். இயற்கையின் நடனத்தினால் தெருக்களுக்கு வெவ்வேறு வர்ணம் வந்துவிடுவதைப் போல, பருவங்களுக்கேற்ப தெருக்களுக்கு விதம்விதமான வாசனைகள் இருப்பதை நீங்கள் உணர்ந்ததுண்டா? மழை பெய்து சுத்தமாய்த் துடைத்துவிட்ட, அதிகம் வாகனங்கள் பயணிக்காத ஒரு தெருவில் என்னைப் போல இப்போது நீங்கள் நடந்துகொண்டிருப்பீர்கள் என்றால் நிச்சயம் தெருவுக்குரிய தனித்துவமான வாசனையை நீங்களும் அனுபவித்து சிலிர்த்திருப்பீர்கள்.

புத்தனுக்கு பின்னால் ஒளிரும் வட்டத்தைப் போல, நிலவு மிகப்பிரமாண்டமாய் இந்நெடுங்கட்டடத்தின் பின்னால் விகசித்தெழுகின்றது. தெருவில் விழும் இக்கீற்றுக்களை உங்களுக்கு பிடித்தமான உருவங்களாய் நீங்கள் கற்பனை செய்து கொள்ளவும் கூடும். இயற்கையின் ஆலிங்கனத்தால் சிலிர்த்து சிவப்பும் செம்மஞ்சளுமாய் வெட்கிக்கின்ற மரங்களின் இலைகளினூடாக நீளும் நிலவின் கீற்றுக்கள் எனக்குள் சீன எழுத்துக்களாய்/கிறுக்கல்களாய் உருமாற்றம் பெறுகின்றன. சிறுவயதில் மிகவும் பாதித்த சீன ஓவியங்களும், அவற்றில் அதிகம் தோன்றும் மூங்கில்களும் பண்டாக்கரடிகளும் இப்போதும் நினைவில் தேயாமல் கைகோர்த்து வருகின்றன போலும்.

chinese2

இப்படி அமைதியும் அழகும் வாய்த்த தெருக்களாய் ஊரில் ஒருபோதும் எந்தத் தெருவும் இருந்ததில்லை. ஊர்த் தெருக்களை நினைத்தால் சந்திகளில் மிதக்கின்ற உடல்கள்தான் உடனே நினைவுகளில் வந்து உட்கார்ந்து கொள்கின்றன. ஆறடிக்கும் குறைவான தெருவைக் கடப்பதற்காய் உயிரைப் பயணம் வைத்திருக்கின்றீர்களா? இந்தியா இராணுவ காலத்தில் அப்படிக் கடந்திருக்கின்றோம், உயிரையும் பொருட்படுத்தாது. உயிர் மீதான் அக்கறையின்மையால் அல்ல; பசியின் நிமித்தத்தால் -உயிர் இழக்கும் பயமின்றி- என்னைப் போன்றவர்கள் கடந்திருக்கின்றோம். எங்கள் வீடுகளையும், அருகில் மிகப்பரந்திருக்கும் வயல்களையும் பிரிப்பது சிறு தெருத்தான். இந்திய இராணுவ காலத்தில் மிகப்பட்டினியாய் இருந்த காலங்கள் அவை. அடிக்கடி ஊரடங்குச் சட்டங்களும் வெளியிலிருந்து உணவுகளும் வராத பொழுதுகள். பசியைத் தீர்ப்பதற்கு என்று இருந்த ஒரேயொரு அட்சய பாத்திரம், யுத்தத்தால் இடைநடுவில் கைவிடப்பட்ட தோட்டங்கள். அங்கே வாடியும் வதங்கியும் இருக்கும் வெங்காயம், கோவா, தக்காளி, பீற்றூட் போன்றவை மட்டுமில்லை, களையாக வளரும் சாறணை(?) கூட எங்களின் பசிக்கு உணவாகியிருக்கிறது.

இந்த பீற்றூட்டிலிருந்தும் வெங்காயத்திலிருந்தும் இப்படி விதவிதமான உணவு வகைகள் தயாரிக்கமுடியுமா என்று அம்மா கறிகள் சமைத்து வியக்க வைத்த காலங்கள் அவை. அருகிலிருந்த சந்தியிலிருக்கும் இந்திய இராணுவத்தின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு தெருவைக் கடப்பது அவ்வளவு இலகுவில்லை. நாங்கள் சிறுவர்கள். இந்திய இராணுவம் எங்களில் பரிவு வைத்ததாலோ அல்லது அவர்களின் கண்களில் 'தீவிரவாதிகளாய்' வளர்வதற்கான பருவத்தை அடையாத காரணத்தாலோ என்னவோ நாங்கள் சூடு வாங்காமல் தப்பியிருக்கிறோம். ஆனால் அவ்வாறு அதிஸ்டம் வாய்க்காது சூடு வாங்கி கால்களை இழந்தவர்களையும், கைதாகி சித்திரவதைக்குள்ளானவர்களையும் நான் அறிவேன்..

ஈழத்தின் அனேக தெருக்களுக்கு வடுக்களாய் செல்களோ, குண்டுகளோ அல்லது கெலி அடித்த சன்ன நேர்கோடுகளோ இருக்கும். அப்போதெல்லாம் அடிக்கப்படும் 30 கலிபர், 50 கலிபர் சன்னக்கோதுகளை தேடி தேடிப் பொறுக்கிச் சேகரித்திருக்கின்றோம். இங்கே சிறுவர்கள் முத்திரைகளையும், நாணயங்களையும் சேகரிப்பதுபோல சன்னக் கோதுகளை யார் அதிகம் சேர்ப்பது என்ற போட்டி எங்களில் அநேகருக்கு இருக்கும்.

ஒருமுறை இப்படித்தான் சித்தியின் மகனும், அவரின் நண்பனும் -அவரும் ஏதோ ஒருவகையில் உறவுதான்- இராணுவம் முன்னேறுகின்றான் என்று வேலிகளை வெட்டி வெட்டி சனங்களை தெருக்களால் போகாமல் ஒழுங்கைகளுக்கால் போகச் செய்துகொண்டிருந்தார்கள். தார் ரோடுகளில் தப்பியோடினால் இலங்கை இராணுவத்தின் கெலி துரத்திச் சுடக்கூடும் என்பதால் இந்த ஏற்பாடு. கொஞ்சச்சனங்களை அனுப்பிவிட்டு எங்கள் மாமியொருவரை அனுப்பிய சொற்பபொழுதில் செல்லொன்று விழுந்து அந்த நண்பர் படுகாயமடைகின்றார். சித்தியின் மகன் அதிசயமாய் தப்பிக்கொள்கின்றான். செல்லால் படுகாயமடைந்தவரை ஒருமாதிரி அம்புலண்ஸில் ஏற்றிச் செல்கின்றனர். (அந்தப்பொழுதில் காயப்படுகின்றவர்களை காவிக்கொண்டு செல்லும் எந்த வாகனமும் அம்புலன்ஸ்தான்). அந்த வாகனத்தையும் துரத்திச் துரத்திச் சுடுகின்றது கெலி. செல்லடிபட்ட நண்பர் இடைநடுவில் காயத்தின் நிமித்தம் இறந்துவிடுகின்றார். சித்தியின் மகனுக்கு கெலிச்சன்னம் முழங்காலுக்குள்ளால் பாய்ந்து போகின்றது. பிறகு நெடுங்காலத்துக்கு காலை மடக்கமுடியாமல் நடக்கவோ சைக்கிள் ஓட்டவோ முடியாது அவதிப்பட்டதை அருகிலிருந்து கண்டிருக்கின்றேன். நாங்கள் கொழும்புக்கு பெயர்ந்தபொழுதுகளில் அவர் போராளியாக மாறிவிட்டிருந்தார் என்ற செய்தி வந்திருந்தது. இப்படி எத்தனையோ சம்பவங்களின் சாட்சிகளாய் பல தெருக்கள் வடுக்களை வாங்கியபடி உறைந்துபோயிருக்கின்றன. தாங்கள் வாய் திறந்து இப்படிப்பட்ட சம்பவங்களைப் பேசினால் உலகம் தற்கொலை செய்துகொள்ளும் என்ற பயத்தில்தான் இந்தத் தெருக்கள் நிசப்தமாகி இருக்கின்றன போலும்.

இலையுதிர்காலத்தெருக்களை பற்றி உரையாட ஆரம்பித்து நினைவுகள் எங்கையோ அலைய ஆரம்பித்துவிட்டன. 'எல்லாத் தெருக்களும் உனது வீட்டு வாசலில் முடிகின்றன' என்ற கவிதை வரிகளைப்போல எதைப் பற்றிப் பேசினாலும் ஊர் பற்றிய நினைவுகள் வந்து ஆக்கிரமித்துக் கொள்கின்றன. விலத்த வேண்டும் என்று வீம்பாய் நினைக்க நினைக்க அவை இன்னும் ப்லவந்தமாய் ஒட்டிக்கொள்ளுவதன் காரணம் ஏனென்று இன்னும் புரிவதில்லை. இலையுதிர்காலத்துக்கு வனப்பும் குளிர்ச்சியும் இறக்கைகளாகி விடுவதைப்போல, பறக்கத் துடிக்கும் அந்த இறக்கைகளை இழுத்து விழுத்திவிடும் காற்றைப்போல நோய்களும் இந்தப்பருவத்தில் வந்துவிடுகின்றன. அடிக்கடிவரும் தடிமனும், இருமலும், சிலவேளைகளில் கூடவே சேர்ந்துவிடும் இழுப்பும் மிகச் சோர்வு தரக்கூடியன. தனிமையில் என்னை விடுங்கள் என்றாலும் அம்மாவால் விடமுடிவதில்லை. தினமும் அளந்து வார்தைகள் பேசுபவன் வருத்தத்தின் நிமித்தம் அதையும் பேசாமலிருப்பதை அம்மாவால் தாங்கிக்கொள்ள முடியாது போலும்.

'மஞ்சள் வெள்ளை நீலமாய்
மாத்திரைகள்
வெளிறிய உறக்கத்தை
குதறிக் கொண்டிருக்க
கடிகார முள்ளின் அசைவுக்கும்
இதயத்தின் அதிர்வுக்குமிடையிலான
கணப்பொழுதுகளை அளந்தபடி
கரையும் இரவுகளில்
என் காய்ச்சலைக் கடன்வாங்கிய
தலையணையின் வெம்மையில்
உன் நெஞ்சுச் சூட்டினைக் கண்டுணர்ந்து
ஆழ முகம் புதைத்துக் கொள்ளவும்
சீறும் புலியாய்
வெறிகொண்டெழும் தாபம்
என் கட்டுக்களையும் மீறி...

காதல் இதமானதென்று
எவர் சொன்னார்..?'
(~அம்பனா)

இந்தப்பின்னிரவை எப்படிக் கழிப்பது? இணையத்தில் சதுரங்கம் ஆடலாம். சுவாரசியமாய் முடியும்வரை பார்க்கவைத்த Basic Instinct-2ன் நுட்பமான மனவுணர்வுகளை இன்னொருமுறை அசைபோடலாம். ஏ.ஜே அற்புதமாய் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ரஞ்சகுமாரின் 'கோசலையை' -புத்தக அலுமாரியிலிருந்து Lutesong & Lamentஐ கண்டெடுத்து- வாசிக்கலாம். இல்லையெனில், 'ஒரு நரம்பு/இப்போது/என் மூளையைக் கொத்துகிறது!/இன்று காலையில்தான் இந்தப் பாம்பு/ எனக்குள்ளே வந்தது./நேற்று முன்தினம்/இரு தரப்பிலும்/சுமார் நூறுபேர்வரை மரணம் என்ற/பத்திரிகைச் செய்தியைப் பார்க்கையில்,/யாரோ என் கண்ணை/கல்லால் தட்டு'வதாய்- என்கின்ற சோலைக்கிளியின் வரிகளோடு தாயகச்செய்திகள் வாசித்து உறக்கத்தைத் தொலைக்கலாம்.

தற்செயலாய் அறைக்குள் இருந்து வெளியே விரியும் புத்தரின் சாந்தத்தையொத்த தெருவைப் பார்க்கின்றேன். சில வருடஙளுக்கு முன் வன்னிக்குச் சென்றபோது இரண்டு கண்களுமிழந்த ஒரு போராளி சொல்கின்றான்.....'இன்று எந்த கஷ்டமும் இல்லாமல் A9னால் வந்துவிட்டீர்கள். ஆனால் இந்தப்பாதையின் ஒவ்வொரு அடிக்காயும் எத்தனை போராளிகள், மக்கள், மரங்கள் உயிரைக் கொடுத்திருக்கின்றார்கள் தெரியுமா? இன்று தார் போடப்பட்டு மினுங்கிக்கொண்டிருக்கும் இந்த ரோட்டுக்கீழே எத்தனையோ பேரின் சதைகளும் இரத்தமும் வலிகளும் உறைந்துபோய்க்க்கிடக்கின்றன'.

இப்போதெல்லாம் இங்குள்ள தெருக்களைப் பார்க்கும்போது விபத்தில் அநியாயமாக இறந்துபோன தோழன் வருகின்றான். ஊர்த்தெருக்களை நினைத்தால் கண்களிழந்த போராளியிலிருந்து இன்னும் பலர் ஞாபகிக்கின்றனர். இந்த இலையுதிர்காலத்து தெருக்களுக்கு அழகும் அமைதியும் உள்ளன என்று நான் நினைத்துக்கொண்டிருப்பது மாயத்தோற்றந்தானோ? புத்தர் கொடுத்து வைத்தவன்; அவனை அமைதியாக்க ஒரு போதிமரமாவது அவனுக்காய் காத்திருந்திருக்கின்றது. எனக்கான தெருக்களிலோ போதிமரங்கள் வளர்வதற்கான எந்தச் சுவடுகளும் இருப்பதில்லை.

தொலைதல்

Thursday, October 05, 2006

P3240033

(1)
ஒன்ராறியோ வாவியில்
சிறகென அலையும் நான்
பாண்டிச்சேரிக் கடற்கரையில்
உருமாற்றம் அடைகிறேன்
மனிதனாய்

பிரேமும் ரமேஷும்
அடுத்த கவிதைக்கான சர்ச்சையில்
தம்மிருப்பு மறந்து
வெகு தீவிரமாய்

'அம்மாவின் சாயலில் துணையைக்கண்ட'
கவிதையில் மிதந்த ஆணாதிக்கத்தை
விமர்சித்த தோழியின்
கோபத்தை விளம்புகின்றேன்;
புத்தரால் ஆட்கொண்ட
நீவிர்
புத்தரால் ஆகர்சிக்கப்பட்ட மக்கள் கூட்டத்து
தீவு அரசியலை
கட்டுடைக்காது அமைதியாவதேனோ?
கூடவே சேர்க்கின்றேன் என்கேள்வியையும்

எல்லாவற்றினின்றும் விடுபடும்
சித்தம் - இன்னும்
வாய்க்கவில்லை என்கின்றனர்

பிரேமும் ரமேஷும் பிரமீளும்
நிறைய நிறைய
எடையிழந்து
'சிறகென மிதக்கின்றேன்'
மீண்டும் நான்

படுக்கை முழுதும் - சிலவேளைகளில்
நெஞ்சில் தவழும் மழலைகளாகவும்
கவிதைப் புத்தகங்கள்.
..................

(2)
பின்னேரங்களில்
காயப்பட்ட உடலாய்
சூரியன் நிறந்தேய
போரின் வலிகாவி
ஊரூராய் அலைந்திருக்கின்றோம்
கால்கள் வலிக்க

வேலை நிமித்தம்
திசைக்கொன்றாய் அப்பா அலைந்தபோது
மாதங்களின் முடிவில்
அறைந்து சாத்தப்படும் கதவுகளின்
அவமானம்
முகத்தில் தெறித்தாலும்
இரவல் வாங்கி
பொங்கிப்படைக்க மறந்ததில்லை
சோறும் பருப்பும்

அம்மா,
பகிர்வதற்கான பிரியங்களை
பால்யம்
கருங்கற்பாறையாக்கி
மனதின் அடுக்குகளில் திணிக்க
முரட்டுமொழி பேசும்
ஆம்பிளையும் ஆயினேன்

'வலிகளைத் தந்தவளுக்கு
வன்மத்தையல்ல;
வாழ்த்தை
திருப்பிக்கொடுத்தலே நேசமென'
தலைகோதி
போர்வை இழுத்துவிட்டு
நகர்ந்த இரவில் நெகிழ்ந்தேன்
நானுனக்கு இன்னமும்
-என்றுமே- வளர்ந்துவிடாத மழலையென.
...................


(3)
ஒரு கொலையைப்பற்றி
உரையாடுகையில்
மற்றொரு கொலை எங்கேயெனக்கேட்கிறது
திணிக்கப்பட்டு...
உருமாற்றமடைந்த மூளை

கொலைகளிலும்
என் இருப்பை நிரூபித்து எழுதாவிட்டால்
கைகளின் அரிப்பை சொல்லிமாளாது

வசதியான சூழலில்
உண்டுறுறங்கி புணர்ந்து
அறிவுஜீவித்தனமாய் பேசாவிட்டால்
வந்த நாடு கற்றுத்தந்த
மனிதாபிமானத்துக்கும் மதிப்பில்லை

கடைசிக் கணத்தில்
கையைக் காலை இழந்தோ;
இல்லை
முலைகளை குதறக்கொடுத்தோ
உயிரைத் தக்கவைத்திருக்காலாமென்று
அவர்கள் நினைத்தது...

மதுக்கோப்பையில்
முண்டங்களாய் மிதப்பதையும்
பூகம்பமாய் நடுங்குவதையும்
மட்டும்
நிறுத்தவே முடிவதில்லை
வரைமுறையற்று எவ்வளவு குடித்தாலும்.
.............

(4)
விரல்களை மடக்கி விரிப்பதற்குள்
கூடிவிடும்
சப்வே சனங்களைப்போல
ஆகிவிடுகிறது காதல்
மூச்சுத்திணறலாய்

ஒரு இரெயினும்
இன்னொரு இரெயினும் சந்திப்பதற்குள்
நகரவேண்டியிருக்கிறது
முத்தமிட்டு

கசங்கிய ஆடையில்
வருவது
நம் வாசமென்ற
சிலிர்த்த காலம் போய்
மாலை வந்து
வியர்வையூறும் ஆடைகளை
தோய்க்கவேண்டுமெனும் நினைவே
எஞ்சுகிறது
இன்றைய நம்முறவில்.


Photo: @ chinese lantern festival

அகாலம்

Tuesday, September 19, 2006

நாள்குறிக்கப்பட்ட மரணத்தை
எப்படியெதிர்கொள்வதென
மழையுமிருளும் மூர்க்கமாய்ப்போரிடுகையில்
பூங்கா இருக்கையிலமர்ந்து யோசிக்குமொருவன்
நடக்கத்தொடங்குகின்றான் நூலகவாசலைநோக்கி
எல்லாப் புத்தகங்களும்
மரணம் நிகழ்வதற்கான சாத்தியங்களை எதிர்வுகூறுகின்றதேதவிர
இழப்பை ஆற்றுவதற்கான கதவுகளை
இறுக்கச்சாத்தியிருக்கும் சலிப்பில்
புரட்டத்தொடங்குகின்றான்
தற்கொலைகளால் நிரப்பப்பட்ட தொகுப்பை.
சில்வியா பிளாத்தின் கவிதையோடு
விரியுமொரு தாளில்
உலர்ந்துபோய்க்கிடந்த பெயர்தெரியாப்பூச்சியொன்றை
இவன் உற்றுநோக்கியபொழுதில்தான்
நண்பனின் வாசனை உதிர்ந்திருக்கவேண்டும்
தனிமை இருகரங்கொண்டு தோளிலழுத்த
துயரினில்மூழ்கி விறைத்துக்கொண்டிருக்கும் இரவை
சிறுவனாயிருப்பின்
அம்மாவின் முதுகின்பின் முடங்கிப்படுத்தாவது
கடந்துபோயிருக்கலாம்
'என்னைவிட்டுபோயிட்டானடா' என
ஆஸ்பத்திரி ப்ளோரில்
பதறியோடிவந்து விரல்நடுங்கும் காதலிக்கு
ஆறுதல்கூற வார்த்தையில்லா மொழியின் வெறுமை
மூளைசிதைந்து
வடிந்துகொண்டிருந்த நண்பனின் குருதியாய்
இவனில் பரவ
கள்ளிச்செடிகளில் தேன்குடித்து
பூவிலமர்ந்த தும்பிகளை
துரத்தியோடிய
சிறுவயதுநினைவுகள்
சட்டமிட்ட ஓவியமாய் உறைந்துபோகின்றது.

ஊருமில்லை; பால்யம் விரிந்த ஒழுங்கைகளுமில்லை;
இனி நீயுமில்லை.


(தோழனுக்கு....16092006)

Friday, September 15, 2006

abs2

பழுத்த இலைகள்
உதிர்ந்து விடைகொடுக்க
சாம்பர் வானக்குதிரையிலேறி
மிதக்குமென் பயணம்
மழையாக முடிவுறுகிறது
யுத்தபூமிகளில்

கந்தக வெடிலையும்
இரத்தச் சகதியையும் சுமந்தபடி
ஒற்றைச்சிறகுடன் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளை
தமக்கான இரையாக்குகின்றன
வட்டமிடும் வல்லூறுகள்

புறமுதுகிட்டு
பிள்ளை ஓடினானெனின்
முலையரிவேனென்ற புறநானூற்றுத்தாய்
போரை விதந்தேத்திய
கவிஞர்களின் எழுதுகோல்களை நொறுக்கி
இறந்துபோன பிள்ளைகளை
நினைவுகூர்கிறாள்
தன்முலைகளை அறுத்தெறிந்து

ஓர் அரும்பு
மலர்வதைப் போல
மரணித்தவர்களை உயிர்ப்பிக்கவும்
காற்று வீசுவதைப் போல
விழுப்புண்களை ஆற்றவும்
இயற்கையால் முடியவில்லையெனும் ஆதங்கத்தில்
பரிதி
பூமிபிளந்து
தனக்கான புதைகுழியைத் தோண்டத்தொடங்குகின்றது

அடர்ந்த காட்டில்
மூன்று நாட்களாய் சாப்பிடாதலையும்
ஒரு கெரில்லாப்போராளி
புழுக்கள் மிதக்கும்
அழுக்குத்தண்ணீரை அருந்துகையில்
விழிகளில் விரியும்
மக்களுக்கான கனவுகள்
பிரசவித்துவிடுகின்றன
எளிதில் தீர்க்கமுடியா
போர் குறித்த சிக்கலான சூத்திரங்களை.

2006.09.13
(திலீபனுக்கு.......)
ஓவியம்

ஒற்றைத்தாளில் படியும் நினைவுகள்....!

Monday, September 11, 2006

-யாருக்கு எழுதுகின்றேன் என்று தெரியாமல் யாருக்காகவோ எழுதிய குறிப்புக்கள்-

சென்ற சனிக்கிழமை Black Eyed Peasன் concertற்கு போயிருந்தேன். ஷக்கிராவின் (Shakira) இசை நிகழ்வுக்குப் போகவேண்டும் என்று நுழைவுச்சீட்டுக்கள் தேடிக்கொண்டிருந்தபோது, Black Eyed Peasம் நகரிற்கு வருகின்றார்கள் என்று அறிந்து சந்தோசத்தில் இந்நிகழ்வுக்கு நுழைவுச்சீட்டுக்கள் எடுத்திருந்தேன். 15,000 ற்கு மேற்பட்ட இரசிகர்கள் என்றால் கொண்ட்டாட்டத்திற்கு சொல்லவும் வேண்டுமா? என்ன சற்றுக் குளிராய் இருந்தது. சரி கதகதப்பாயிருக்கட்டும் என்று நண்பனும் நானும் பியரும் கூலரும் வாங்கிக்கொண்டு வந்தால் ரிகன்னா (Rihanna) சிறப்பு விருந்தாளியாக வந்து கலக்கத் தொடங்கியிருந்தார். DJ வாரும் வாரும்; வந்து பாட்டைத் திருப்பப் போடும், நான் ஆடப்போகின்றேன் என்று அவர் எனக்கு தனிப்பட்ட அழைப்புக் கொடுக்க, மேடையில் அசல் ஆட, கீழே நூற்றுக்கணக்கான ரொரண்டோ ரிகன்னாக்கள் ஆட, யாரை எந்த ஒழுங்கில் பார்த்து இரசிப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கவே அந்த நிகழ்வு முடிந்துவிட்டது. ஏன் தான் இப்படியான அரிய தருணங்கள் சடுதியாய் முடிந்துவிடுகின்றன என்பது ஒருபோதும் விளங்குவதில்லை.

Rihanna-32
Rihanna

Black Eyed Peas பற்றி நேரங் கிடைத்தால் விரிவாக எழுதவேண்டும். குளிர் கூட கூட நண்பன் சொன்னான், 'இவங்கள் நுழைவுச்சீட்டோடு மூன்று பியர்கள் இலவசமாய் வழங்கியிருக்கவேண்டும்' என்று. நானும் 'இரசிகர்களின் மனமறிந்த பொன்மனச்செம்மல் நீதான்டா' என்றொரு பாராட்டுப்பத்திரம் அவனுக்கு வழங்கிவிட்டு, 'பசிக்கிறது வா Pizza Slice வாங்கிச் சாப்பிடுவம்' என்று அழைத்துக் கொண்டு சென்றுவிட்டேன். பசி தாஙகமுடியாமல் அடுத்த ஒரு மணித்தியாலத்தில் இரண்டாவது முறையும் Pizzaவிற்கு போக, ஆயிரக்கணக்கான சனத்துக்கு இடையிலும் எங்களை அடையாளங்கண்டுகொண்ட அந்த Pizza விற்கும் பெண், Oh you guys again?ஆ என்றார். நாங்களும் ஓமோம் இசைத் தாகத்தைவிட வயிற்றுப்பசிதான் எங்களுக்கு அதிகமாயிருக்கிறது என்று அவரைச் சமாளித்துவிட்டு வர, Will I Am, 'Toronto Girls are so hot' என்று கூற நாங்களும் Pizza உண்ட தென்பில் ஓமோம் என்று உரத்தகுரலில் வழிமொழிந்தோம். பிறகு முடிகின்ற நேரத்தில் Black Eyed Peas, க... க... கனடா... ரொ... ரொ... ரொரண்டோ என்று -கிட்டத்தட்ட தமிழ் பாடல் beatல்- தொடங்கி Jump Jump Toronto Jump Jump என்று அவர்கள் உச்சநிலைக்குப் போக, நாங்கள் எல்லோரும் Fly தான். நல்லவேளை அன்றைக்கு வானம் சற்று உயரத்தில் இருந்தது, இல்லாவிட்டால் எங்களின் தலைகள் வானத்தில் முட்டி எத்தனைபேருக்கு காயம் வந்திருக்குமோ தெரியாது.

blackeyed
Black Eyed Peas
...................................

'இருக்கும்
பிரியமான மனிதர்களையும்
இழப்பதற்கு இன்னொரு பெயர்தான்
இலக்கியம்'

என்று ஒரு சோர்ந்துபோன நாளில் பதிந்து வைத்ததைப்போல, பிரியப்பட்டு வாங்கும்/சேகரிக்கும் பொருட்களை உடைக்கவும் தொலைக்கவும் செய்யும் பொழுதுகளிலும் சோகம் புகைமூட்டமாய் கவியச் செய்கிறது. அதிலும் பிரியமான மனிதர்கள் வாங்கித்தந்த பொருட்களை தொலைத்துக் கொண்டிருக்கையில், அந்த மனிதர்களின் அன்பையையும், நம் மீது அவர்கள் வைக்கும் நம்பிக்கையையும் இழப்பதுபோன்ற உணர்வுதான் தலைதூக்குகின்றன. என்றாலும் எவ்வளவுதான் அக்கறையாயிருந்தாலும் இழப்பதும் உடைப்பதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

...................................

இரண்டு வாரங்களுக்கு முன் என்று நினைக்கின்றேன். ஆங்கிலப்படம் பார்ககலாம் என்று நானும், நண்பனும் தீர்மானித்து எந்த புதுப்படம் பார்ப்பது என்று அலசிக்கொண்டிருந்தோம். World Trade Center பார்ப்பமா என்று நான் கேட்க, அமெரிக்கத் தேசியத்தையும், 'அமெரிக்காக் கனவு'களையும் பார்ப்பதை விட, தூங்கிவிடுவது நிம்மதி தரும் ஒருவிடயம் என்றான் நண்பன். அதுவும் சரிதான் என்று நானும் வழிமொழிந்து, அன்றையபொழுதில் எந்தப்படத்துக்கும் போகாமல், லெபனானில் நடந்த சம்பவத்துக்கு கனடா எடுத்த நிலைப்பாட்டுக்காய் Prime Minister Stephen Harperஐ திட்டிக்கொண்டிருந்தோம் இந்த லெபனான் பிரச்சினையின் நீட்சியில் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துக்கொண்டிருந்த ப்ளொக் க்யூபெக்காவும் (Bloc Quebec), 'Stephen Harperடனான் தேனிலவு முடிந்துவிட்டது' என்று அறிவித்திருந்தது. மற்றொரு கட்சியான என்டிபியின் தலைவர் Jack Layton, 'Prime Minister Stephen Harper, ஜோர்ஜ் புஷ்சின் cheer leader' என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றார். இப்போது ஆப்கானிஸ்தானில் அந்தமாதிரி அல்லவா கனடிய இராணுவம் அடிவாங்குகின்றது. இந்த அரசியல் கோமாளித்தனத்தில் பரிதாபமாய் காவுகொள்ளப்படும் இராணுவத்தினரைப் பற்றி ஆளும்வர்க்கத்திற்கு ஏது கவலை?

ம்...அடிக்கடி இப்படித்தான் எதற்கோ செல்வதற்கு/செய்வதற்கு என்று தீர்மானித்து எதையெதையோ நாங்கள் செய்துகொண்டிருப்போம். சாதாரணமாகவே ஒரு விசர் நிலையில் திரியும் எஙகளைப் போன்றவர்கள் விசர்த்தனமாய் அமெரிக்கா புகழ் பாடும் திரைப்படங்களைப் பார்த்து இன்னும் விசர்நிலையின் உச்ச நிலையை அடைந்துவிடுவோம் என்ற பயத்தால் அனேகமாய் தியேட்டருக்குச் சென்று பார்க்கின்ற படங்களாய் Superman Returns, Pirates of Caribbean போன்ற வகைகளய்த்தான் இருக்கும். இவ்வாறான படங்கள் பிடிக்கவில்லையானால் கூட, தியேட்டரோடு வசைகளை எறிந்துவிட்டு வெளியில் வரும்போது இயல்புக்கு வந்துவிடலாம்.

Ladder_49_poster

தற்செயலாய், Ladder 49 என்ற படத்தை பார்க்கும்போது அது மிகவும் பிடித்துவிட்டது. இத்திரைப்படத்தில் Joaquin Phoenix, John Travolt போன்ற தேர்ச்சி பெற்ற நடிகர்கள் நடித்திருக்கின்றார்கள் என்பதால் அல்ல, எளிமையான கதை சொல்லல் முறையில் மனதில் சலனங்களை உருவாக்கியிருந்தது. தாதித் தொழிலை(Nurses), sex symbol ஒன்றாய் ஆக்குவதைப் போலதான் அனேகமாய் Firefighters ஐயும் ஒரு symbol ஆக்குவார்கள். ஆனால் இந்தப்படம் அவர்களின் இன்னொருபக்கத்தை -வீரதீர பராக்கிரமச் செயல்கள் அன்றியும், 'ஆண்மையின் அழகு' வழிவதாகவும் காட்டாது- ஒரு சாதாரண தீயணைப்பாளனின் பார்வையில், அவனுக்குப் பின்னுள்ள குடும்பம், கடமை, ஆபத்துக்கள் என்று நகர்கின்றது.

நீ வாங்கித் தந்த ஈரானிய படங்களும், அகிரா குரோசோவின் Dreams ம் இருக்கின்றன. மனம் அமைதி கொள்கின்ற நிசப்தமான பின்னிரவுகளில் அவற்றைப் பார்க்கத் தொடங்கவேண்டும். மேலும் இங்கே இப்போது சீனா கலாச்சாரத்தை மையப்படுத்தி Lantern Festival நடக்கின்றது. கரீபனா பார்க்கப்போனபோது இந்த விழாவுக்காய் அலங்கரிக்கத் தொடங்கியிருந்த மிகப்பிரமாணடமான புத்தர் சிலைகளும், ட்ராகன்கள் போல வடிவமைக்கப்பட்ட படகுகளும் மனதை மிகவும் ஈர்த்துக்கொண்டிருந்தன.
உன்னை அதிகம் வசீகரிப்பவை சீனக் கலாச்சாரமும், ஆபிரிக்காக் கலாச்சாரமும் தானே. நீயும் இந்நகரில் இருந்திருந்தால் அந்த நிகழ்வுக்கு சேர்ந்து போயிருக்கலாம்.

...................................

திருமணங்கள் மட்டுமில்லை ஏனைய அலுப்பூட்டும் விழாக்களுக்கும் அவ்வளவாய் போவதில்லை. ஈழத்தில் இருந்தபோது பன்னிரண்டோ பதின்மூன்றோ வயதிலேயே சாமர்த்திய விழாக்களுக்குப் போவதை நிறுத்தியாயிற்று. சிலவேளைகளில் மச்சாள்மார், நெருங்கிய உறவுகளின் சாமத்திய விழாக்களுக்கு வாவென்று அம்மா கெஞ்சுகின்றபோதும் போவதில்லை. பிறகு பெற்றோரும் விழாக்கள் நடக்கும்போது தங்களை காரில் ஏற்றி இறக்க மட்டும் என்னை உதவிக்கு கூப்பிடுவதோடு அமைதியாகிவிட்டார்கள். நண்பர்களின் திருமணங்கள் என்கின்றபோது தவிர்க்கமுடியாது தலைகாட்ட வேண்டியிருக்கிறது. அண்மையில் வளாகத்தில் படித்த நண்பனின் திருமணத்துக்கு போவது என்று தயார்படுத்திவிட்டு கொஞ்சம் உறங்கி எழுந்தால், என்னைத் தன்னோடு கூட்டிப்போவதாய் உறுதியளித்த நண்பன் மறந்துபோய் விழாவுக்குப்போய்விட -அவனது செல்லிடப்பேசியும் உயிர்ப்பில்லாது உறங்கிவிட- என்ன முகவரி என்றும் ஒழுங்காய்க்கேட்காமல் விட்டிட்டேனே என்று கொஞ்சநேரம் குழம்பிவிட்டு...... பிறகு என்ன? வழமைபோல, எனக்கு எனது தூக்கத்தைத் நிம்மதியாய்த் தொடரச்செய்யும் வரம் கிடைத்துவிட்டது என்று அகமகிழ்ந்தேன். நல்லவேளை திருமணம் நடந்த நண்பனும் எங்களின் அலைவரிசையில் இருப்பதால் 'நிலைமையை' விளக்கியதும் பின்னர் விளங்கிக்கொண்டான்.

என்றாலும் என்ன? என்னைப் பழிவாங்குவதற்கென்று ஒரு திருமண வைபவம் காத்துக்கொண்டிருந்திருக்கின்றது என்பது எனக்கு முன்கூட்டியே தெரியாமற்போய்விட்டது. இந்தப் பெண்ணையும் அவரின் குடும்பத்தையும் நெடுங்காலமாய் தெரியும். எங்கள் குடும்பம் எல்லோருக்கும் அவர்கள் மிகவும் பரீட்சயமானவர்கள். வளாகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, என் பெற்றோர் -அக்காவின் திருமணத்துகாய்- கொழும்பு சென்றபோது, தங்கள் வீட்டுக்கு எந்த நேரமும் வந்து சாப்பிடலாம் என்று அன்போடு அழைப்பு விடுததவர்கள். அத்தோடு தமிழ் ஆக்கள் குறைந்த அந்நகரில், தனிமை ததும்பி வழிந்த நாட்களில், அவர்கள் நட்பாய் இருந்தது மிகவும் இதமாய் இருந்த பொழுதுகள் அவை. 'எழுதிக் கிழிப்பதில்' அலுப்பு வந்து நிறுத்தியிருந்த காலகட்டத்தில, நீ எழுதத்தான் வேண்டும் என்று நாலைந்து பக்கத்தில் நம்பிக்கை தரும் வார்த்தைகளில் அவர்களில் ஒருவர் எழுதித்தந்தது இப்போதும் என்னிடம் பத்திரமாய் இருக்கிறது. அந்தப்பெண்களில் ஒருவருக்கு திருமணம் சில வருடங்களுக்கு முன் நடந்தபோது -தேர்வுகள் இருக்கிறது என்று - சும்மா தட்டிக்கழித்துவிட அவர் என்னோடு பேசுவதை பின்னாளில் நிறுத்திவிட, அந்தப்பயத்தில் அவர்களின் சகோதரியின் திருமணத்துக்காவது தலைகாட்டவேண்டும் என்று போயிருந்தேன்.

எண்ணூறு பேர் அமரக்கூடிய பெரிய மண்டப்பத்தில்தான் நிகழ்வு நடந்தது. நான் போவதற்கு முன்னால்- மாப்பிள்ளையும் பெண்ணும்- குதிரை வண்டிலில்- வந்திறங்கினார்கள் என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள். அப்பாடா நான் அந்த இம்சையிலிருந்து தப்பிவிட்டேன் என்று நிம்மதிப் பெருமூச்சுவிட, சட்டென்று இரண்டு பெரிய திரைகளில் 'சுட்டும் விழிச்சுடர்' ஒலிக்க, அட நம்ம அசினை பார்க்கலாம் என்று விழிகளை உயர்த்தினால், அங்கே இந்த மாப்பிள்ளையும் பெண்ணும், அசினும் சூர்யாவுமாக மாறி ஏதோ ஒரு பார்க்கில் காதல் டூயட் ஆடத் தொடங்கிவிட்டார்கள். அஸினின் தீவிர இரசிகனான என்னால் இதை எல்லாம் சகித்துக்கொள்ளமுடியுமா என்ன? இதுக்கு மேல் இருக்கமுடியாது என்றுதான் வெளியே வந்து உன்னோடு தொலைபேசுகின்றேன்.

-----------------------------------------

சென்ற வாரவிறுதியில் ஒரு நண்பன் கார் விபத்தில் சிக்கி தலையில் பலமாய் அடிப்பட்டு இன்னும் நினைவு திரும்பாமல் வைத்தியசாலையில் இருக்கின்றான். அவன் விரைவில் நலம்பெற வேண்டும் என்று மனம் கதறுகிறது. என் சிறுவயது நண்பன். ஊரில் பக்கத்து வீட்டுக்காரன். ஒரே வகுப்பில்தான் நாம் இரண்டுபேரும் படித்திருந்தோம். அவனோடு தான் முதன் முதலில் சைக்கிள் ஓடப்பழகியதும், கிரிக்கெட் விளையாடுவதற்கு என ஊர் ஊராய் அலைந்ததும் என்று பலப்பல நினைவுகள் மனதில் மிதக்கின்றன. புலம்பெயர்ந்த பின் பழைய நட்பின் நெருக்கம் குறைந்துவிட்டாலும், விபத்தில் சிக்கிவிட்டான் என்றறிந்தவுடன் அவன் இயல்புநிலைக்கு வரவேண்டும் என்று மனம் மிகவும் அவாவுகிறது. இந்த நினைவின் கனத்தோடு வாரப் பத்திரிகையை புரட்டினால், சென்றவாரம் இங்கு பதினாறு வயதும், இருபத்திரண்டும் வயதுமான இரண்டு தமிழ்ப்பெண்கள் விபத்தில் சிக்கி அகால மரணமடைந்திருக்கின்றார்களாம். போரை விட்டு எவ்வளவு தூரம் விலத்தி வந்தாலும் அநியாயச் சாவுகள் எம்மை விட்டு என்றும் அகலாது போலும்.
.................................

வாசிப்பு இடைமறிப்பு

Wednesday, September 06, 2006

ராஜ் கெளதமனின் 'தலித்திய விமர்சனக்கட்டுரைகளை' முன்வைத்து....

' *வரலாறு தலித் மீது தொடுத்த, தொடுத்துக் கொண்டிருக்கிற சகலவிதமான வன்முறைகட்கும், அவற்றை செய்துகொண்டிருக்கிற அதிகாரத்துவத்திற்கும் எதிரான குரலைத் தலித் இலக்கியம் ஒலிக்க வேண்டும். 'தலித்' ஒன்றுக்குத்தான் சாதி இல்லை., மதம் இல்லை எனக் கூறும் உரிமையும், தைரியமும், தேவையும், கடமையும் உண்டு. ஏனெனில் அதற்கு கீழே ஒடுக்கப்படுவதற்குச் சாதிகள் இல்லை; இதனைக் கட்டிக் காக்க மதங்கள் இல்லை. சாதியையும், மதத்தையும், ஆண் மகனையும் மையமாகக் கொண்ட குடும்பத்தையும் தகர்ப்பதே தலித் இலக்கியத்தின் உள்ளடக்கமாக இருக்கும். இவ்விதத்தில் கறுப்பர் இலக்கியமும், பெண்ணிய இலக்கியமும், நாட்டுப்புற இலக்கியமும் தலித் இலக்கியப் பரப்பிற்குரிய இன்றியமையாத கூறுகளை வழஙக முடியும்.'

raj

'தலித்திய விமர்சனக்கட்டுரைகள்' எனப்பெயரிடப்பட்ட இத்தொகுப்பில் வெவேறு காலகட்டத்தில் ராஜ்கெளதமனால் எழுதப்பட்ட பதினைந்து கட்டுரைகள் இருக்கின்றன. 'தமிழக தலித்தும் தலித் இலக்கியமும்', 'குடும்பம் பெண்ணியம்', 'பின்னை நவீனத்துவமும் தலித் சிந்தனைகளும்', 'தலித்தியப்பார்வையில் பாரதி', 'தலித் பார்வையில் (இந்து) மதம்' என்பவை குறிப்பிடத்தக்க கட்டுரைகளாகும். விரிவாகவும், சான்றாதாரங்களுடன் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகளை வாசிக்கும் வாசகர்கள் இவை உண்மைக்கு அண்மையாக இருக்கின்றன என்ற வாசிப்பனுவத்தை எளிதாகப் பெறமுடிகின்றது.

'தமிழக தலித்தும் தலித் இலக்கியமும்' என்ற கட்டுரையில் ஜெயகாந்தன் எப்படி ஒரு காலத்தில் கலகக்காராக இருந்து இறுதியில் 'ஜெயஜெய சங்கரா' பாடி இந்துமதப்பெரும் ஜோதியில் கலந்தார் என்பதை ராஜ்கெளதமன் அடையாளங் காட்டுகின்றார். 'இந்து மத்த்தில் புதைந்துள்ள கர்மவினைக் கோட்பாடில் ஏறுவரியையை ஜெயகாந்தனிடம் காணமுடியும்' என்று ஜெயகாந்தனுக்கு எழுதப்பட்டுள்ள முடிவுரை சரிபோலத்தான் தோன்றுகின்றது. அதேபோன்று ராஜம் கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களின் நாவல்களில் சித்தரிக்க்கபடும் தலித்துக்கள் எவ்வாறு கீழ்த்தரமாகக் காட்டப்படுகின்றார்கள் என்பதைச் அடையாளங்காட்டுவதோடு, பூமணி போன்ற சில தலித் எழுத்தாளர்கள் கூட மெல்ல மெல்ல உயர்சாதிக் கதாபாத்திரங்களை தங்கள் படைப்புக்களில் முக்கியபாத்திரங்களாக்கி நாவல் படைப்பதையும் ராஜ்கெளதமன் சுட்டிக்காட்டத்தவறவில்லை. அதே போன்று டானியலின் நாவல்களை முன்வைத்து, -எந்தமதமானாலும்- மதம் மாறினால் கூட சாதி இழிவும், பிரிவுகளும் நீங்கிவிடாது என்பதையும் கட்டுரையாசிரியர் கவனப்படுத்துகின்றார்.

நிறப்பிரிகை விவாதக்கூட்டமொன்றிற்காய் 90களில் வாசிக்கபட்ட, 'குடும்பம், பெண்ணியம்' முக்கியமான ஒரு கட்டுரை. பெண்ணிற்கான சுதந்திரத்தை பெண்கள தமக்கான வழிகளில் தேடுவதே மிகச்சிறந்த வழியாக இருக்குமென்பதையும், தலித்துக்களைப் போலவன்றி இன்னும் கடும் சவால்களையும் வீழ்ச்சிகளையும் சந்தித்தே பெண்கள் தமக்கான விடுதலையைப் பெறமுடியும் என்று ராஜ்கெளதமன் இக்கட்டுரையில் குறிப்பிடுகின்றார். மேற்கத்தைய பெண்ணிய சிந்தனைவாதிககளின் முக்கிய விவாதப்புள்ளிகள் மிக விரிவாக இக்கட்டுரையில் மேற்கோள்களுடன் பேசப்படுதைக் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

அதேபோன்று பாரதியைத் தலித்தியப் பார்வையில் கட்டுடைக்கும் கட்டுரையும் மிக அற்புதமாய் எழுதப்பட்டிருக்கின்றது. 'பெண்ணையும், தலித்துக்களையும் முறையே சக்தி, சகோதரர்கள் என்று ஓர்மையாய் மதிக்கின்ற பாரதியே, கோழைத்தனத்தையும், இழிவையும் குறிப்பிடும்போது ஓர்மையின்றி 'பெட்டை', 'புலை' என்று எழுதிவிடுகின்றார் (ப 158). பாரதி தனது காலத்தைய பிற உயர்சாதிக்காரர்களின் சிந்தனைகளில் இருந்து பெரிதாக வேறுபடவில்லை என்றாலும் (அதற்கான ஆதாரங்கள் விரிவாக இக்கட்டுரையில் பேசப்படுகின்றன), பாரதி உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை மனதார விரும்பியவர் என்பதை எவரும் துளியளவும் சந்தேகிக்கமுடியாது என்கிறார் ராஜ்கெளதமன்.

'தலித் பார்வையில் (இந்து) மதம்' என்ற கட்டுரையில் தலித்துக்களின் விடுதலைக்காய் பாடுபட்ட மூன்று முக்கிய ஆளுமைகளான அண்ணல் அம்பேத்கார், பெரியார் ஈ.வே.ரா, அயோத்திதாச பண்டிதர் பற்றி பேசப்படுகின்றன. அம்பேத்காரும், அயோத்திதாசரும் சாதி ஒழிப்பைப் பற்றி அதிகம் பேசியதாகவும், பெரியார் மத ஒழிப்பில் அதிக கவனம் செலுத்தியதாகவும் இக்கட்டுரை பேசுகிறது. நாத்திகராய் பலர் மாறினாலும் அவர்களுக்குள்ளும் சாதியக்கூறுகள் உயிர்ப்புடன் இருக்கின்றன என்பதால் இன்றைய காலகட்டத்தில் அம்பேத்காரும், அயோத்திதாசரும் முன் வைத்த சாதி ஒழிப்பே. பெரியார் முன்வைத்த மத ஒழிப்பை விட முக்கியத்துவம் வாய்ந்தது என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றார் ராஜ்கெளதமன். அதேவேளை மத ஒழிப்பைவிட சாதி ஒழிப்புக்காய்த்தான் நீண்ட பாதையில் மிகவும் கடினமாய் பயணிக்கவேண்டியிருக்கும் என்பதையும் குறிப்பிடுகின்றார்.

பெரியார் மீது வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பினும், அயோத்திதாசர் ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சாதிக்குள் முடங்கிப்போனதையும், அம்பேத்கார் -சாதி ஒழிப்புக்கு மட்டுந்தான் முக்கியத்துவம் கொடுத்தார் என்றால்- ஏன் அவர் தலித்துக்களை மதங்கள் (பவுத்தம், இஸ்லாம்) மாறச்சொல்லியிருக்கவேண்டும்? அதற்கான பின்னணி என்ன? என்பதைக் கவனப்படுத்தவும் தவறவிட்டு விடுகின்றார் ராஜ்கெளதமன். இன்றைய தலித் விடுதலை என்பது அம்பேத்காரியத்தையும், பெரியாரியத்தையும், மார்க்ஸிசத்தையும் உள்ளடக்கி, ஒன்றின் இடைவெளியை/போதாமையை மற்றொன்றதை வைத்து நிரப்புவதன் மூலம் சாத்தியமாவதற்கான குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ள இக்காலகட்டத்தில் அம்பேதகாரையோ, பெரியாரையோ ஒருவருக்கொருவர் தாழ்த்தி -தனிப்பட்ட மனிதர்கள் மீதிருக்கும் காழ்ப்புணர்வுக்காய்- அரசியல் செய்யும் வழிமுறைகளை தவிர்த்தல் நன்றாக இருக்கும் போல தோன்றுகின்றது.

மிக விரிவாக எழுதப்பட்ட (மேலே குறிப்பிடப்பட்ட) கட்டுரைகள் எவ்வளவு முக்கியமானவையோ, அதேபோன்று ராஜ்கெளதமன் இன்றையபொழுதுகளில் நகர்ந்துகொண்டிருக்கும் அரசியல்/குழு புள்ளிகளும் முக்கியமானவையே. இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள பதினைந்து கட்டுரைகளில் மூன்று கட்டுரைகள் புதுமைப்பிததனுக்கும், இரண்டு கட்டுரைகள் சுந்தர ராமசாமிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதையும் எழுந்தமானது என்று ஒதுக்கி நாம் அவ்வளவு இலகுவில் கடந்து சென்றுவிட முடியாது. புதுமைப்பித்தனிலும், சுந்தர ராமசாமியிலும் ராஜ்கெளதமனுக்கு இருக்கும் அளவற்ற பற்றைப்போல, இன்று காலச்சுவட்டுடன் எந்த விமர்சனமும் இன்றி ஒட்டி உறவாடும் நிலை குறித்தும், 'சிலுவைராஜ் சரித்திரம்' 'காலச்சுமை' போன்ற நூல்கள் ஆர்.எஸ்.எஸ் தொடர்புள்ளதாகக் குறிப்பிடப்படும் தமிழினி மூலம் வெளிவரும் அரசியற்புள்ளிகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

இலக்கியத்திலும் தலித் அரசியலிலும் ஈர்ப்புள்ள இளைஞர் யுவதிகளுக்கு ஒரு ஆளுமையாக/ வழிகாட்டியாக எழுத்தால் இருக்கக்கூடிய ராஜ்கெளதமனும் -நாளை ஜெயகாந்தனைப் போல-'ஜெய ஜெய' கோசம் பாடிக்கொண்டு பார்ப்பனியத்தில் இரண்டறக்கலந்து நமக்கு ஆசிகளை வழங்காமல் இருந்தால் சரி.


* தமிழக தலித்தும் தலித் இலக்கியமும் என்ற கட்டுரையிலிருந்து...