கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சண்முகம் சிவலிங்கத்தை நினைவுகொள்ளல்

Sunday, April 22, 2012


-அவரது கவிதைகளினூடாக-
(1939-2012)


இன்னுமொரு காடு

பறக்கிறது
இந்தக் காட்டையும் விட்டு
பறவை

புழு அரித்துப்போன இலை
நுனி கறுத்துப்போன அரும்புகள்
சாவட்டையாய் வதங்கி
சலித்துப் போன
நோய்த் தாவரங்கள்
குச்சும் கம்புமாய்
பரட்டை பற்றித் தெரிகிறது காடு

மனவருத்தந்தான் குருவிக்கு
எனினும்
வாழ்வை மறுதலிக்க முடியவில்லை
இன்னுமொரு காடு
இன்னுமொரு காடு
பறக்கிறது பறவை.

(2002)


குருவிமனம்

வெயில் சலித்துப்போன ஊமைப் பிற்பகலில்
ஒருநாள்,
வானத்து மார்புத் துகில் சற்று விலகித்
தெரியும் சூரிய முலைக்காம்பில்
கொத்தி விழ
வானின் குறுக்காகத் தாவும்
கிளாத்தன் குருவிகளை
கதவடியில் நின்று பார்த்த கணமே
வாய்விட்டுச் சொன்ன வரிகள் -
"வானத்தைப் பார்த்திருந்துவிட்டே
செத்துப் போகலாம்,
பின்னொரு நாளில்."

(1992)


ஆத்மாநாம்

மனோ வியாதி
கவிதை வரிகளாய் மாறும்
மற்றொரு வியாதி

இன்று அதிகாலைப் பனியோ
இந்தக் கதவிடுக்கினுள்ளும்
கூரை வளையிடுக்கிள்ளும் புகுந்து
என் விரல் நகங்களுக்குள் ஊடுருவி
என்னை வெடவெடக்கச் செய்கிறது.

ரோமத்தைப் பிய்த்துத்
தோலை உரித்து
தசைகளைக் கிளறி
நரம்புகளை இழுத்து, உருவிக் குவித்து
கபால உள்ளீட்டின்
கறையான் அரித்த சால்களுக்கிடையில்
என்னை வழிதொலையச் செய்கிறது,
வழி தொலைந்துபோன
ஆத்மாநாம் போல...

நானும்
மனோ வியாதியின்
கவிதை வரிகள்தானோ!

(1991)


தேவதைகளும் கடவுளரும்

மறக்காதீர், மறக்காதீர்
தேவதைகளை அழிக்கு முன்
அவர்களைப் பைத்தியம் ஆக்குவர் கடவுளர்
சுறாக்களை இழுக்குமுன்
அவைச் சுதந்திரமாய் ஓடவிடுவர் மனிதர்கள்.

சிறைக் கதவுகள் மூடுவது
திறந்த கதவினுள் சென்ற பின்புதான்
துப்பாக்கிகள் வெடிக்காதிருப்பது
தொடுவில்லை தொடாத வரையில்தான்
ஒரு நிகழ் யுத்தத்தின் நிறுத்தம்
வரும் யுத்தத்தின் தொடக்கம்.
திறந்த வெளிச் சிறைக்கூடம்
சுதந்திரபூமி ஆவதில்லை.

மறக்காதீர், மறக்காதீர்
தேவதைகளை அழிக்கு முன்
அவர்களைப் பைத்தியம் ஆக்குவர் கடவுளர்
சுறாக்களை இழுக்குமுன்
அவைச் சுதந்திரமாய் ஓடவிடுவர் மனிதர்கள்.

(2003)

துப்பாக்கிக் குழந்தை

உன் தங்க மீன்கள்
இன்னமும் கண்ணாடித் தொட்டியில்
தகதகக்கின்றன
உந்துதல்
ஓடுதல்
ஒளித்தல் எனும்
எந்த நகர்வும் இன்றி
நீரின் மேலெழுந்து
எங்கே நீ எனத் தேடுகின்றன
எவர் அவர்க்கு உன்போல்
தீனி இடுவர்?

வெண்பஞ்சுத் துளிகள் - உன் முயல்கள்
வெளியில் வந்து
துள்ளித் துள்ளி
முன்பாதங்கள் தூக்கி
செங்கண் முகத்தைத் திருப்பித் திருப்பி
எங்கே நீ எனத்தான்
இன்னமும் தேடுவன
எவர் உன்போல்
அடம்பன் தளிரை ஊட்டுவார்
அவர்க்கு?

பப்பி திரிகிறது
நாலுகால் பாய்ச்சலில்
எறிந்த பந்தை எடுத்துவந்து
என்னிடம் தராதாம்
உன்னையே தேடி
ஓட்டமாய்த் திரிகிறது.

இத்தனையும் விட்டு
எப்படி நீ
துப்பாக்கியோடு
வாழ்வைத் தொடர்கிறாய்
மகனே!

(1986)

போர்க்களம்

போனேன்
நான் உன் போர்க்களம் காண

விடிந்ததும் விடியாததுமாக
காதில் விழுந்தது
பல முகங்கள்
மிகத் துயரில்
விம்மலுடன்

முகங்கள் ஊடு
முகங்கள் ஊடு
பிடரிகள் ஊடு
பிடரிகள் ஊடு

அர்ச்சுனர் வீதியில்
அரைத்தூரம்...
இதுதான்...
என்றார்கள்
இடைவிடாது
துப்பாக்கிக் காயங்கள் துளைத்த
மதில் சுவருக்கும்
கிளிசரியா மரங்களுக்கும் இடையில்

நேருக்கு நேர்
நீ ஒருவன் தனியாக
சுழன்று சுழன்று தொடுத்த பாணங்களின்
அற்புதம் பற்றி அளந்தார்கள்
அமைதிப் படை
சர்ப்பமாய் ஒளிந்து
சக்கரமாய் மாறிய
அற்பத்தனம் பற்றியும் அளந்தார்கள்

மதிலோரத்தின் மயங்கிய மண்ணில்
குழிந்து கிடந்தது உன் குருதி
மெதுவாக அள்ளி முத்தமிட்டு
விரலிடை நெரித்தேன்

மீண்டும்
முகங்கள் முகங்கள்
முகங்கள் ஊடு
சிவந்த சூரியனின் சிதறிய முகத்துண்டுகள்
ஆயிரம் என் கண்ணில், அட என் மகனே

(1989)

ஒரு போராளியின் புதையல்

உன்னையும்
ஒரு சவப்பெட்டியுள்தான் ஒடுக்கினார்கள், மகனே!

நீட்டி நிமிர்ந்து நீ நெடுமலாய்க் கிடக்கையிலே
நிழல் போலக்
கறுத்து
விறைத்த உன் முகம்மீது
வீழ்ந்து புலம்பல் அல்லால்
வேறென்ன முடியும் உறவுக்கு?

மாலை வரையும் உன்னை வைத்திருக்கத் தடை
மதியத்திற்கு முதல்
புதைப்போம் என்ற பொறுப்பு
வழக்கமான பாதைக்கு மறுப்பு
ஊர்வலம் ஆகாதென உறுமல்

புதைத்தார்களா?
வாய்க்கரிசி போட்டார்களா?
பொன் மணலைக்
குவித்தார்களா? பிரண்டங்கொடி நட்டார்களா?
கொழுத்தினார்களா மெழுகுவர்த்தி
கடற்காற்றின் கொசுகொசுப்பினிடையே?
எதைத்தான் பார்த்தேன்,
என் மகனைக் கொன்றது ஓர்
இந்தியத் துப்பாக்கி என
எண்ணுவதைத் தவிர?

(1989)



நன்றி:
கவிதைகள்:சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகைகளும் -2010
ஓவியம்: றஷ்மி

மூன்று தீவுகள் (இறுதிப்பகுதி)

Wednesday, April 18, 2012

(முதல் பகுதியிற்கு...)

ரொப‌ர்ட் த‌ப்புவ‌த‌ற்கு க‌ச்சித‌மாய் ஒரு திட்ட‌த்தைத் தீட்டிவிட்டு, த‌ன‌க்கு ந‌ம்பிக்கைக்குரிய‌ சில‌ரைத் தேர்ந்தெடுத்துத் த‌க‌வ‌ல் அனுப்பியிருந்தார். சில‌ர் இங்கேயே நீண்ட‌கால‌ம் வாழ்ந்துவிட்ட‌தால், தாங்க‌ள் வ‌ந்த‌ நாட்டுக்குத் திரும்பிப்போகும் எண்ண‌த்தைக் கை கழுவியிருந்த‌ன‌ர். வில்லிய‌ம்ஸ் இங்கிருந்து த‌ப்பிப் போவ‌தா, இல்லை தொட‌ர்ந்து இருப்ப‌தா என்ற‌ இருத‌லைக்கொள்ளி எறும்பாய்த் த‌வித்தார். அருகில் தூங்கிக்கொண்டிருந்த‌ அசுந்தாவைப் பார்த்த‌போது அவ‌ருக்கு ய‌சோத‌ராவைக் கைவிட்டுப் போன‌ புத்த‌ரின் நினைவுதான் வந்த‌து. இறுதியில் இந்த‌ ம‌ர‌ம், வ‌ந்த‌ ம‌ண்ணில் வேரிற‌க்காதென‌த் தீர்மானித்து ரொப‌ர்ட்டோடு த‌ப்பிச் செல்வ‌தென‌ முடிவெடுத்தார்.

குறிக்க‌ப்ப‌ட்ட‌ நாளின் மூன்றாம் சாம‌த்தில் வில்லிய‌ம்ஸ் இர‌வோடு இர‌வோய்க் க‌ரைந்து, ந‌க‌ர் விட்டு நீங்கியிருந்தார். இச்செய்தி அறிந்த‌போது அசுந்தாவிற்கு அடுத்து என்ன‌ செய்வ‌தென‌த் திகைப்பாயிருந்த‌து. இன்னொரு ப‌க்க‌த்தில் அர‌ச‌ருடைய‌ ப‌டைக‌ள் இந்த‌த் த‌ப்புத‌லுக்கு அசுதாவின் உத‌வியும் இருந்திருக்குமென‌ ச‌ந்தேகித்து நெருக்குத‌ல்க‌ள் கொடுக்க‌த் தொட‌ங்கினார்க‌ள். ஊரும், ஒரு வெள்ளைக்கார‌னோடு வாழ்ந்த‌வ‌ளென‌ ஒதுக்கி வைக்க‌த் தொட‌ங்க‌ அசுதாவின் ச‌ந்தைக்குக் கூட‌ப்போகாது வீட்டுக்குள் ஒதுக்க‌த் தொட‌ங்கினாள்.

ஒருநாள் அசுந்தாவும் ந‌க‌ர் நீங்கி அட‌ர் வ‌ன‌ம் சூழ்ந்திருந்த‌ வ‌ட‌க்குத் திசை நோக்கி ந‌ட‌க்க‌த் தொட‌ங்கினாள். அர‌ச‌ரின் விசுவாசுக‌ளும் சன‌ங்க‌ளும் அவ‌ள் வில்லிய‌ம்ஸோடு இணைய‌த்தான் போயிருக்கின்றாள் என‌ நினைத்துத் தூற்ற‌த் தொட‌ங்கின‌ர். அசுதா ச‌ன‌ம் குறைந்த‌ காட்டுப் ப‌குதியில் ஒரு குடிலை அமைத்து வாழ‌த் தொட‌ங்கினாள். அந்த‌ நில‌ப்ப‌ர‌ப்பு இன்னொரு அர‌ச‌னுக்குச் சொந்த‌மாக‌ இருந்த‌து. அவ்வ‌ப்போது அர‌ச‌னின் ப‌டைவீர‌ர்க‌ள் அந்த‌ப் ப‌குதியில் காவ‌ல் ந‌ட‌வ‌டிக்கைக்காய் வ‌ந்து போவார்க‌ள். அப்ப‌டி வ‌ந்த‌ ஒரு ப‌டைவீர‌னுக்கு அசுதா மீது மைய‌ல்வ‌ந்து அசுதாவோடு சேர்ந்து வாழ‌த் தொட‌ங்கினான். தொட‌க்க‌த்தில் அவ‌ன் பேசும் மொழியை அறிந்துகொள்ள‌ அசுதா க‌ஷ்ட‌ப்ப‌ட்டாலும் சில மாத‌ங்க‌ளில் கொச்சையாக‌வேனும் பேச‌க் க‌ற்றுக்கொண்டுவிட்டாள்.

காலியிலும், கொழும்பிலும் கோட்டைகளைக் கைப்ப‌ற்றிய‌வ‌ர்க‌ளுக்கு இந்நில‌த்து ம‌ன்ன‌ன் பெரும் த‌லைவ‌லியாக‌ இருந்தான். அட‌ர்ந்த‌ காடு அவ‌னுக்கு அடைக்க‌ல‌ம் கொடுத்து அர‌வ‌ணைத்துக் கொண்டிருந்த‌து. அவ‌னோடிருந்த‌ ப‌டைவீர‌ர்க‌ளும் த‌ம் ம‌ன்ன‌னுக்காய் உயிரைக் கொடுக்க‌வும் த‌யாராக‌ இருந்த‌ன‌ர். ஒருநாள் அந்நிய‌ர்க‌ளின் ந‌டமாட்ட‌ங்க‌ளைக் க‌ண்காணிப்ப‌த‌ற்கென‌ அசுந்தாவோடு இருந்த‌வ‌னும் போயிருந்தான். அந்த‌ வேளையில் அசுதா நிறைமாத‌க் க‌ர்ப்பிணியாக‌ இருந்தாள். விரைவில் வேலை முடித்து உன்னிட‌ம் மீள‌வ‌ந்து விடுவேன் என‌ அவ‌ன் கூறிச் சென்றான். அசுந்தா உயிருட‌ன் அவ‌னைப் பார்த்த‌ க‌டைசி நாளாக‌ அது இருந்த‌து. அவ‌னும் அவ‌னோடு சென்ற‌ ஏழுபேரும் காட்டுக்கு வெளியே த‌ந்திர‌மாக‌ வ‌ர‌வ‌ளைக்க‌ப்ப‌ட்டு அந்நிய‌ர்க‌ளால் சுற்றிவ‌ளைக்க‌ப்ப‌ட்டார்க‌ள். தாம் கைதுசெய்ய‌ப்ப‌ட்டால் த‌ம‌து அர‌ச‌ன் ம‌றைந்திருக்கும் இட‌த்தின் இர‌க‌சிய‌ங்க‌ளை அந்நிய‌ர்க‌ள் அறிந்துவிடுவார்க‌ளென்ற‌ அச்ச‌த்தில் அந்த‌ ஏழுபேரும் த‌ம‌து குறுவாள்க‌ளால் க‌ழுத்தைக் கீறி தற்கொலை செய்து கொண்டார்க‌ள்.

கால‌ங்கால‌மாய் த‌ன் ம‌ர‌பில் த‌ற்கொலைச் ச‌ட‌ங்குக‌ள் நிக‌ழும்போது க‌ண்க‌ளைத் திற‌க்கும் வ‌ற்றாப்ப‌ளை அம்ம‌னும் ஒரு முறை விழிவிரித்து சோக‌த்தை உள்வாங்கிக்கொண்டாள். இத‌ன்பின் ஒன்றிர‌ண்டு மாத‌ங்க‌ளில் அந்நில‌த்து அர‌ச‌னும் க‌ற்சிலைம‌டுக்க‌ருகில் த‌ந்திர‌மாய் கொல்ல‌ப்ப‌ட, அந்நில‌ப்ப‌ரப்பே பெரும் கொந்த‌ளிப்பில் கொதிக்க‌த் தொட‌ங்கிய‌து. எல்லாத் துய‌ர‌ங்க‌ளையும் அசையாய்ச் சாட்சியாய்ப் பார்த்துக்கொண்டிருந்த‌ அம்ம‌னைப் போல‌, நாட்டில் ந‌ட‌க்கும் விப‌ரீத‌ங்க‌ளை அசுந்தாவும் த‌ன் குழ‌ந்தையோடு இருந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

இவையெல்லாம் நிக‌ழ்ந்து சில‌ ஆண்டுக‌ளின் பின், இடைவிடாது சில நாட்க‌ள் பொழிந்த‌ ம‌ழையின் கார‌ண‌மாய் அசுந்தா நோயுற்றாள். தொற்று நோய் ப‌ர‌வி நிறைய‌ப் பேர் அங்குமிங்குமாய்ச் செத்துக் கொண்டிருந்தார்க‌ள். த‌ன் குழ‌ந்தைக்காக‌வேனும் உயிர் வாழ‌வேண்டுமெனும் நினைப்பில், ம‌த‌ம் ப‌ர‌ப்ப‌ வ‌ந்த‌ வெள்ளைக்கார‌ப் பெண் தொற்று நோயிற்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த‌ ஓலைக் குடிசையொன்றில் அசுந்தா த‌ன் குழ‌ந்தையோடு போய்த் த‌ங்கினாள். ஒரு சில‌ நாட்க‌ளில் நோய் முற்றி அசுதா இற‌க்க‌, க‌வ‌னிக்க‌ எவ‌ருமேயில்லாத‌ அசுதாவின் குழ‌ந்தையின் அழ‌கில் ம‌ய‌ங்கி அந்த‌ வெள்ளைக்கார‌ப் பெண் த‌ன் நாட்டுக்கு, வ‌ள‌ர்க்க‌ எடுத்துச் சென்றிருந்தார்.

க‌ட்டிலில் உட்கார்ந்திருந்த‌ அவ‌ளின் ம‌டியில் ப‌டுத்திருந்த‌ நான் 'உன் முக‌ அமைப்பு என‌க்கு ஒரு கீழைத்தேய‌ப் பெண்ணை நினைவுப‌டுத்துகிற‌து' என்றேன். 'இன்ன‌மும் நீ உன் ப‌ழைய‌ காத‌லியின் நினைவிலிருந்து வெளியே வ‌ர‌வில்லைப் போலும்' என‌ச் சிணுங்கிக்கொண்டு அவ‌ள் சொன்னாள். 'இல்லை உண்மையாக‌வே நீ என‌க்கு ஏதோ நெருக்க‌மான‌வளைப் போன்று தோன்றுகிறாய்' என்றேன். 'யாருக்குத் தெரியும், எங்க‌ளின் மூதாதைய‌ர் யாருக்கோ இல‌ங்கையோடு தொட‌ர்பிருக்கிற‌தென‌ எங்க‌ளின் கிராண்ட் கிராண்ட்மா கூறுவார். அந்த‌வ‌கையில் சில‌வேளைக‌ளில் நீயென‌க்குச் சொந்த‌க்கார‌னோ தெரியாது' என‌ச் சிரித்த‌ப‌டி சொன்னாள். 'என்றாலும் நீதானே கூறினாய் உன‌து பூர்வீக‌ம் டவ‌ர‌ன்ஹில்லில் இருந்து தொட‌ங்குகிற‌தென‌... ' நான் இழுத்தேன்.

இறுதியில் நான் அர‌ச‌ப‌ர‌ம்ப‌ரைச் சேர்ந்த‌வ‌ன‌ல்ல‌ என்ற உண்மையைக் கூறாவிட்டாலும், என‌க்கு ஒழுங்காய் நீந்த‌த் தெரியாதென்ப‌தை ம‌ட்டும் அவ‌ளுக்குச் சொல்லிவிட்டேன். ஆனால் 'எங்க‌ள் அர‌ச‌ ப‌ர‌ம்ப‌ரைக்குச் சொந்த‌மாய் ஒரு பொய்கை இருந்த‌தென்றும் அத‌ற்கு கீரிம‌லைக் கேணி என‌ப் பெய‌ர் என‌வும், அது ஒழுங்காய்ப் ப‌ராம‌ரிக்க‌ப்ப‌டாத‌தால் அங்கே முத‌லைக‌ள் இருந்த‌தால் என் பெற்றோர் என்னை நீச்ச‌லடிக்க‌ அனும‌திப்ப‌தில்லை' என‌வும் சொன்னேன். 'அதனாலென்ன‌ உங்க‌ளுக்குத்தான் பெருங்க‌ட‌லே இருக்கிற‌தே அங்கே நீச்ச‌ல் ப‌ழ‌கியிருக்க‌லாமே' என‌த் திருப்பிக் கேட்டாள். 'இந்து ச‌முத்திரத்தில் ப‌ழ‌கியிருக்க‌லாந்தான், ஆனால் நானொரு அர‌ச‌ ப‌ர‌ம்ப‌ரையைச் சேர்ந்த‌வ‌னென்ப‌தால் கண்ட‌கிண்ட‌ இட‌ங்க‌ளிலெல்லாம் நீராட‌ முடியாத‌ல்ல‌வா?' என அத‌ற்கும் ம‌றுமொழிந்தேன். என்னுடைய‌ விச‌ர்க்க‌தையால் அவ‌ளுக்கு எரிச்ச‌ல் வ‌ந்திருக்க‌வேண்டும். You are right என‌ச் சொல்லிவிட்டு First Accept your mistakes, then only you can learn more என்றாள். எங்க‌ள் த‌மிழ்ப்ப‌ர‌ம்ப‌ரையிற்கும் இத‌ற்கும் எட்டாப் பொருத்த‌ம் என‌ ம‌ன‌துக்குள் கூறிக்கொண்டேன்.

அவ‌ள் மேலே அணிந்திருந்த‌ மெல்லிய‌ ஆடைக‌ளைக் க‌ளைந்துவிட்டு நீச்ச‌லுடைக்கு மாறியிருந்தாள். என்னையும் இழுத்துக் கொண்டு க‌ட‌லுக்குள் இற‌ங்க‌த் தொட‌ங்கினாள். நான் உப்புத்த‌ண்ணீரைக் குடித்து குடித்து நீருக்குள் மூழ்குவ‌தும் எழுவ‌துமாக‌வும் இருந்தேன். நாங்க‌ள் நீந்தி முடிந்து வெளியே வ‌ந்த‌போது, ப‌சித்த‌ வ‌யிற்றுக்குத் திற‌ந்த‌ வெளியில் ப‌டைத்து வைத்திருந்த‌ ம‌திய‌ உண‌வு தேவார்மித‌மாய் இருந்த‌து. அன்றைய‌ மாலை அவ‌ள் இன்னொரு பெருங்க‌ட‌லைத் த‌ன‌க்குள் நிர‌ப்பி என்னை நீந்த‌விட்டாள். இந்த‌க் க‌ட‌லில் எப்ப‌டி நீராடுவ‌தென்ப‌தில் என‌க்கு எந்த‌ச் சிக‌க‌லுமிருக்க‌வில்லை. அத‌ன் ஆழ‌ அக‌ல‌ங்க‌ளுக்குள் நான் ஒரு க‌ண்டுபிடிப்பாள‌னைப் போல‌ குதூக‌ல‌த்தோடு செல்வ‌தும் மீள்வ‌துமாக‌வும் இருந்தேன். அவ‌ள் ஒரு பொழுது பேர‌ல‌லையாக‌ எழுந்து என்னை உள்ளிழுத்த‌போது என் அம்ப‌னை இராச‌தானியையே காணிக்கையாக‌க் கொடுக்க‌த் த‌யாராக‌ இருந்தேன்.

க‌ன‌டாவிற்கு நான் புற‌ப்ப‌ட‌ ஒருநாள் முன்ன‌ர், அவ‌ள் இங்கிலாந்திற்கு வெளிக்கிட‌ ஆய‌த்தமாகிக் கொண்டிருந்தாள். கியூபாவில் என் நாட்க‌ளை அழ‌காக்கிய‌த‌ற்காய் அவ‌ளை அணைத்து இறுதியாய் முத்த‌மிட்ட‌போது அவ‌ள‌து பாஸ்போர்ட் மேசையிலிருந்து த‌வ‌றிக் கீழே விழுந்திருந்த‌து. அதையெடுத்துக் கொடுத்த‌போது, அவ‌ள‌து புகைப்ப‌ட‌ம் இருந்த‌ ப‌க்க‌த்தில் -அவ‌ளின் பெய‌ருக்க‌ருகில்- குடும்ப‌ப் பெய‌ராக‌ 'அசுந்தா' என‌ எழுத‌ப்ப‌ட்டிருந்த‌து.

000000000000000000000000000
Nov, 2011
ஓவியம்: Nicole Helbig & Darly Urig 
(நன்றி: தீராநதி, ஏப்ரல் 2012)

மூன்று தீவுகள்

Tuesday, April 17, 2012

சில‌ நிக‌ழ்வுக‌ள் த‌ற்செய‌லைப் போல‌த்தான் நிக‌ழ்கின்ற‌ன‌. ஆனால் அவ‌ற்றிற்கான‌ விளைவுக‌ளை அறிந்துகொள்ள‌ சில‌ச‌ம‌ய‌ம் ஆயுட்கால‌த்தையே விலை கொடுக்க‌வும் வேண்டியிருக்கும். பிரித்தானிய‌ அர‌சியின் ஆதிக்க‌த்திற்குட்ப‌ட்ட‌ நாடொன்றிலிருந்து அவ‌ர்க‌ள் ப‌ன்னிரெண்டுபேர் புற‌ப்ப‌ட்டார்க‌ள். ம‌ல‌பார் தேச‌த்தில் முளைத்தெழும் ஒவ்வொரு ம‌ர‌ஞ்செடியிலும் வாச‌னைத் திர‌விய‌ங்க‌ள் காய்த்துக் குலுங்குவ‌தான‌ எண்ண‌ற்ற‌ க‌தைக‌ளைக் கேள்விப‌ட்டுத்தான் இக்க‌ட‌ற்ப‌ய‌ண‌த்தை ஆர‌ம்பித்தார்க‌ள். கீழ்த்திசை நாடுக‌ளிலிருந்து க‌ப்ப‌ல்க‌ளில் வ‌ந்திற‌ங்கிக் கொண்டிருந்த‌ வாச‌னைப் பொருட்க‌ள், செல்வ‌த்தை மேற்கு நாடுக‌ளில் வாரியிறைத்துக் கொண்டிருந்த‌ன‌. வானில் இருக்கும் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் மீதும், கையில் இருக்கும் பைபிளின் மீதும் ந‌ம்பிக்கை வைத்தப‌டி, திர‌விய‌ம் தேடும் க‌ட‌ற்ப‌ய‌ண‌த்தை ஓர் எளிய‌ கிராம‌த்திலிருந்து இவ‌ர்க‌ள் தொட‌ங்கினார்க‌ள்.

நன்ன‌ம்பிக்கைமுனையைத் தாண்டும்வ‌ரை ப‌ய‌ண‌ம் எளிதாக‌வே இருந்த‌து. ம‌ட‌க‌ஸ்காரை நெருங்கும்போது க‌ரும் மேக‌ங்க‌ள் திர‌ள‌த் தொட‌ங்கின‌. ஏதோ ஒரு ப‌ருவ‌க்காற்றின் நிமித்த‌ம் வ‌ரும் ம‌ழையென‌ ஊகித்து அவ்வ‌ள‌வு க‌வ‌லைப்ப‌டாது சூரிய‌ன் எழும் திசை நோக்கிக் க‌ப்ப‌லைச் செலுத்திக் கொண்டிருந்தார்க‌ள்.. அன்றைய‌ இர‌வு எங்கிருந்து எப்ப‌டி வ‌ந்த‌தென‌த் தெரியாது க‌ட‌ல் மூர்க்க‌மாய்க் கொந்த‌ளிக்க‌த் தொட‌ங்கிய‌து. பெரும் சூறாவ‌ளிக்கான‌ ஆயத்த‌ம் இதுவென‌ அங்கிருந்த‌ கட‌லோடிக‌ளில் மூத்த‌வ‌ர் த‌ன் அனுப‌வ‌ அறிவை வைத்துச் சொன்னார். அசுர‌த்த‌ன‌மான‌ காற்று. க‌ப்ப‌ல் தான் அடைய‌வேண்டிய‌ திசையை விட்டு காற்றின் திசைக்கேற்ப‌ அலைய‌த் தொட‌ங்கிய‌து. கட‌லின் கொந்த‌ளிப்போ, இப்போதே க‌ப்ப‌லைக் க‌விழ்த்து இந்த‌ப் பன்னிரண்டு பேரின் உயிரையும் காவெடுத்துவிடுவேன் போல‌ சாவின் மொழியைப் பேசிக்கொண்டிருந்த‌து. ம‌ல‌பார் தேச‌ம் வேண்டாம், ஒன்றும் வேண்டாம், எங்கேயாவ‌து ஒரு க‌ரையைக் க‌ண்டாலே போதுமென‌க் க‌டவுளை நோக்கி அவ‌ர்க‌ள் பிரார்த்திக்க‌த் தொட‌ங்கினார்க‌ள்.

புய‌லில் ஒதுங்கி ஒரு க‌ப்ப‌ல் நிற்ப‌தை அந்த‌த் தீவு ம‌க்க‌ள் க‌ண்டு, அதைத் த‌ங்க‌ள் ப‌குதிக்கு பொறுப்பான‌ த‌லைவ‌ருக்குத் தெரிய‌ப்ப‌டுத்தினார்க‌ள். அந்த‌த் த‌லைவ‌ரும் த‌ங்க‌ள் ம‌ன்ன‌ருக்கு செய்தியை அறிவிக்க‌ச் சொல்லி ஒருவ‌ரை அனுப்பிவிட்டு முப்பத்தைந்து வீர‌ர்க‌ள் உள்ள‌ த‌ன் ப‌டையோடு காத்திருந்தார். க‌ரைக்குப் போன‌ இவ‌ர்க‌ள் தாம் போர் செய்ய‌வோ நில‌ம் பிடிக்க‌வோ வ‌ர‌வில்லை, ம‌ல‌பார் தேச‌த்திற்கு வியாபார‌த்திற்காய் ம‌ட்டுமே வ‌ந்த‌வ‌ர்க‌ள் என‌ தெரிய‌ப்ப‌டுத்த‌ விரும்பினார்க‌ள். அதை ந‌ம்ப‌ அந்த‌த் த‌லைவ‌ன் த‌யாராக‌ இருக்க‌வில்லை. அர‌ச‌னிட‌மிருந்து வ‌ரும் செய்தி அறிந்த‌பின்னால்தான், த‌ன்னால் முடிவுக‌ளை எடுக்க‌முடியும் என‌க் கூறினான். இவ்வாறு பெருந்தொகையான‌ அந்நிய‌ர்க‌ளைச் சிறை வைப்ப‌த‌ற்கான‌ வ‌ச‌திக‌ள் அந்த‌க் க‌ரையோர‌ப் ப‌குதியில் இருக்க‌வில்லை. ஒவ்வொருவ‌ரின் கால்க‌ளும் க‌யிற்றால் பிணைக்க‌ப்ப‌ட்டு மூன்று மூன்று பேராக‌ நான்கு வீடுக‌ளில் த‌ங்க‌ வைக்க‌ப்ப‌ட்டார்க‌ள். குடிப்ப‌த‌ற்கு நீரும், இர‌வுச் சாப்பாடாய் சோறும், ம‌ர‌வ‌ள்ளிக்கிழங்கில் செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌றியும் அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

அடுத்த‌ நாள் அர‌ச‌னிட‌மிருந்து செய்தி ஒன்று வ‌ந்து சேர்ந்த‌து. கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ இவ‌ர்க‌ளை அர‌சன் வ‌சிக்கும் அதிபாதுப்புடைய‌ பிர‌தேச‌த்திற்கு அவ‌ச‌ர‌ப்ப‌ட்டுக் கொண்டுவ‌ர‌வேண்டாம் என்றும், இந்த‌ அந்நிய‌ர்க‌ளை முத‌லில் தீவிர‌ விசாரிக்கும்ப‌டியும் அந்த‌ச் செய்தியில் கூற‌ப்ப‌ட்டிருந்த‌து. மேலும் இவ‌ர்க‌ளை முன்னே அனுப்பி நில‌வ‌ர‌ங்க‌ளை அறிந்துவிட்டு, பெரும்ப‌டையுட‌ன் அந்நிய‌ர்க‌ள் எம் தேச‌த்தில் ப‌டையெடுக்கும் அபாய‌மும் உள்ள‌தால், அவ‌ர்க‌ளைத் தொட‌ர்ந்து க‌ண்காணிப்பில் வைத்திருக்கும்ப‌டியும் ப‌ணிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. ஆனால் அவ‌ர்க‌ளை அர‌ச‌ கைதிக‌ளைப் போல‌ ம‌ரியாதையாக‌ ந‌ட‌த்தும்ப‌டியும் அர‌ச‌ன் வ‌லியுறுத்தியிருந்தான். இவ‌ர்க‌ள் தாங்க‌ள் புற‌ப்ப‌ட்டு வ‌ந்த‌ நாட்டு அர‌சின் அனுச‌ர‌ணையில் வ‌ந்த‌ வ‌ர்த்த‌க‌ர்க‌ளாக‌வோ அல்ல‌து ப‌டைவீர‌ர்க‌ளாக‌வோ இல்லாத‌தால், த‌ம்மைத் தேடி எவ‌ரும் வ‌ந்து காப்பாற்ற‌ப் போவ‌தில்லையென‌ எண்ணி வ‌ருந்தினார்க‌ள். ஒரேயொரு வ‌ழி தாங்க‌ளாக‌வே ஒரு வ‌ழியைக் க‌ண்டுபிடித்துத் த‌ப்பிச் செல்வ‌தே. ஆனால் இப்போது கைதியாகிருக்கும் இந்த‌ நாடு ஒரு தீவாக‌ இருப்ப‌தால் க‌ப்ப‌லின் துணையின்றித் த‌ப்பிப் போக‌வும் முடியாது. அப்ப‌டித் த‌ப்புவ‌தாக‌ இருந்தாலும், ஏற்க‌ன‌வே புய‌லில் சேத‌ம‌டைந்த க‌ப்ப‌லை முத‌லில் திருத்தியாக‌வும் வேண்டும். ஆனால் சேத‌ம‌டைந்த‌ க‌ப்ப‌லோ இங்குள்ள‌ ம‌க்க‌ள் செறிவாக‌ வ‌சிக்கும் ஒரு க‌ட‌ற்க‌ரைப் பிர‌தேச‌த்திற்கு இழுத்துக் கொண்டுவ‌ர‌ப்ப‌ட்டு இருந்த‌து. என்ன‌ செய்வ‌தென‌ ந‌ம்பிக்கை த‌ரும் எந்த‌த் திசையும் தெரியாது இவ‌ர்க‌ள் திண்டாடிக் கொண்டிருந்தார்க‌ள்.

மாத‌ங்க‌ள் ப‌ல‌ உருண்டோடிக் கொண்டிருந்த‌ன‌. இவ‌ர்க‌ளைக் காப்பாற்ற‌ வெளியிலிருந்து எவ‌ரும் வ‌ராத‌தைப் போல‌வே, இந்நாட்டின் அர‌சிட‌மிருந்தும் ஒரு உருப்ப‌டியான‌ செய்தியும் வ‌ந்து சேர‌வில்லை. கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் த‌ம் சொந்த‌ நாடு திரும்பிச் செல்லும் ந‌ம்பிக்கையை இழ‌க்க‌த் தொட‌ங்கின‌ர். ஆர‌ம்ப‌ கால‌ங்க‌ளில் வித்தியாச‌மாக‌ நிற‌த்தில் இவ‌ர்க‌ளிருந்த‌தால் நின்று அவ‌தானித்த‌ ம‌க்க‌ளும் இப்போது அந்த‌ப் பிரக்ஞை இல்லாது ந‌ட‌மாடிக் கொண்டிருந்த‌ன‌ர். மேலும் இவ‌ர்க‌ள் எங்கே சென்றாலும் இவ‌ர்க‌ளைப் பின் தொட‌ர்ந்து வ‌ந்து கொண்டிருந்த‌ ப‌தினைந்து காவ‌லாளிக‌ளும் இப்போது இவ‌ர்களைப் பின் தொட‌ர்ந்து வ‌ருவ‌தையும் நிறுத்தியிருந்தார்க‌ள். இவ‌ர்க‌ளும் உள்ளூர் ம‌க்க‌ளைப் போல‌ வேலை செய்து கொஞ்ச‌ம் காசு சேக‌ரித்து கால்ந‌டைக‌ளை வாங்கி வ‌ள‌ர்க்க‌த் தொட‌ங்கினார்க‌ள். த‌ங்க‌ளுக்கென்று த‌னிக்குடில் வேண்டுமென‌ அந்த‌ப் பிர‌தேச‌த் த‌லைவ‌ரிட‌ம் விண்ண‌பித்து அனும‌தியும் வாங்கினார்க‌ள். குடிலைச் சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளில் த‌ம‌து உண‌வுக்குத் தேவையான‌ காய்க‌றிக‌ளை வ‌ள‌ர்க்க‌வும் தொட‌ங்கினார்க‌ள்.

ஒரு ந‌ம்பிக்கைக் கீற்று எங்கேயாவ‌து இருந்து வ‌ராதா என‌ ஏங்கிக் காத்திருந்து வ‌ருட‌ங்க‌ள் நான்கு க‌ழிந்துவிட்டிருந்த‌ன‌. ப‌ல‌ர் முற்றிலுமாய் ந‌ம்பிக்கை இழ‌ந்து விட்டிருந்த‌ன‌ர். இவ‌ர்க‌ளில் ஒரு சில‌ர் உட‌லுழைப்பிற்கான‌ வேலை தேடிச் ச‌ற்றுத் தொலைவுக்கு இட‌ம் பெய‌ர‌த் தொட‌ங்கினார்க‌ள். வேறு சில‌ர் இந்நாட்டுப் பெண்க‌ளைத் திரும‌ண‌ம் செய்துகொண்டு த‌ம‌க்கான‌ குடில்க‌ளை அமைத்து வாழ‌வும் தொட‌ங்கியிருந்த‌ன‌ர். இறுதியில் இவ‌ரும் ரொப‌ர்ட்டும் ம‌ட்டுமே திரும‌ண‌ஞ் செய்யாது மிஞ்சியிருந்த‌ன‌ர். ரொப‌ர்ட்டு த‌ன்னோடு கூட‌விருந்த‌ பைபிளை தின‌மும் ம‌ன‌ன‌ம் செய்து செய்து, த‌ன் வாழ்வு முழுவ‌தையும் இயேசுவிற்கு ச‌ம‌ர்ப்ப‌ண‌ம் செய்த‌வ‌ர் போல‌ வாழ்ந்துகொண்டிருந்தார். இவ‌ர்க‌ள் இருவ‌ருமே இப்ப‌டித் த‌னியே வாழ்ந்துகொண்டிருந்த‌தால், ம‌க்க‌ளில் சில‌ருக்கு இவ‌ர்க‌ள் இருவ‌ரும் த‌ப்பியோடுவ‌த‌ற்கான‌ திட்ட‌த்தில் இருக்கின்றார்க‌ள் என‌த் த‌ங்க‌ளுக்குள் பேசிக் கொண்டார்க‌ள். ம‌க்க‌ள் நினைத்த‌தில் அவ்வ‌ள‌வு பிழையுமில்லை. உண்மையில் இவ‌ர்க‌ள் இருவ‌ரும் அப்ப‌டியான‌ ஒரு திட்ட‌த்தை இர‌வுக‌ளில் வ‌ள‌ர்த்துக் கொண்டுதானிருந்தார்க‌ள். இந்த‌க் க‌ட‌லோர‌த்தால் த‌ப்ப‌முடியாது என்ப‌தால் நாட்டின் உள்ப‌குதியிற்குச் சென்று வேறொரு க‌ட‌ற்க‌ரையால் த‌ப்பியோடுவ‌தே இவ‌ர்க‌ளின் திட்ட‌மாக‌வும் இருந்த‌து. இந்நாட்டுக்கு வ‌ட‌க்கே ம‌ல‌பார் நாடு இருப்ப‌தையும், அத‌ற்குச் ச‌ற்று வ‌ட‌கிழ‌க்கில் போனால் ம‌த‌றாஸ‌ப் ப‌ட்டின‌த்திலுள்ள‌ கிழ‌க்கிந்திய‌க் க‌ம்ப‌னியோடு தொட‌ர்பு கொள்ள‌லாம் என்ப‌தையும் க‌ண்டுபிடித்திருந்தார்க‌ள். ஆனால் இந்நாட்டின் உள்ப‌குதிக‌ளுக்குள் போவ‌தென்ப‌து க‌டின‌மாக‌ இருத‌து. அர‌ச‌னின் ப‌டைக‌ள் முள்வேலிக‌ள் அடைத்து, அத‌ற்கு முன் நீண்ட‌ அக‌ழிக‌ளை அமைத்து தீவிர‌மான‌ காவ‌ற்ப‌ணியில் ஈடுப‌ட்டிருந்த‌ன‌ர். நாட்டின் உட்ப‌குதியிற்குள் செல்ப‌வ‌ர் எவ‌ராயினும் மூன்று வெவ்வேறு காவ‌ற்கோபுர‌ங்க‌ளைத் தாண்டியே போக‌வேண்டியிருக்கும். அண்மைக்கால‌மாய் ம‌லைக‌ள் சூழ‌ந்த‌ இந்த‌ அர‌சனின் பிர‌தேச‌ங்க‌ளைப் பிடிக்க‌ அந்நிய‌ர்க‌ள் சில‌ர் அடிக்க‌டி போர் தொடுத்தும் கொண்டிருந்தார்க‌ள்.

த‌னிமையையும், தாய்நாடு திரும்புவ‌த‌ற்கான‌ ஏக்க‌மும் அதிக‌ரித்து அதிக‌ரித்து ம‌ன‌ம் பித்தாகிப் பிற‌ழ்ந்து போன‌ ஒரு பொழுதில்தான் ரொப‌ர்ட் ஒரு திட்ட‌த்தை முன்வைத்தார். இவ‌ர்க‌ள் பன்னிரண்டு பேரும் ஓரிட‌த்தில் சேர்ந்து ஒருசில‌ நாட்க‌ளைக் க‌ழிந்தால், த‌ம‌து க‌ட‌ந்த‌கால‌ வாழ்க்கையைக் கொஞ்ச‌மாவ‌து அசைபோட்டு ம‌ன‌தை ஆற்றிக்கொள்ள‌லாம் என்று ரொப‌ர்ட் கூறினார். ஒவ்வொருத்த‌ரும் ஒவ்வொரு திக்கில் இருந்தாலும் ஒருவ‌ரை ஒருவ‌ர் அறிந்த‌வ‌ர் மூல‌மாக இச்செய்தி அறிவிக்க‌ப்ப‌ட்டு எல்லோரும் கிறிஸ்ம‌ஸ் தின‌த்தில் ச‌ந்திப்ப‌தாக‌ முடிவு செய்ய‌ப்ப‌ட்ட‌து. நிறைய‌ப்பேர் இந்த‌ ஏழு வ‌ருட‌ங்க‌ளில் மாறிப் போயிருந்த‌ன‌ர். சில‌ர் தம‌து மனைவிய‌ரோடு வ‌ந்திருந்த‌ன‌ர். சில‌ருக்குக் குழ‌ந்தைக‌ள் கூட‌ இருந்த‌ன‌. அவ‌ர்க‌ளில் அநேக‌ர் புதுச் சூழ‌லுக்கும் வாழ்க்கைக்கும் த‌ம்மை மாற்றிய‌துபோல‌ க‌ல‌க‌ல‌ப்பாக‌ இருந்த‌ன‌ர்.

அவ‌ர்க‌ள் எல்லோரும் சென்ற‌பின், இன்னும் த‌னிமை அதிக‌ம் சூழ‌ந்திருப்ப‌தாய் இவ‌ருக்குத் தோன்றிய‌து. ஒருநாள் த‌ங‌க‌ள் வீட்டில் வ‌ள‌ர்த்த‌ கோழிக‌ளின் முட்டைக‌ளை அருகில் கூடும் சிறு ச‌ந்தைக்கு விற்ப‌த‌ற்குச் சென்றிருந்தார். அந்த‌ச் ச‌ந்தையில் ப‌ண‌ம் போன்ற‌வை பெரிதாக‌ புழ‌க்க‌த்தில் இருப்ப‌தில்லை. ஒரு பொருளுக்கு இன்னொரு பொருளை வாங்கும் ப‌ண்ட‌மாற்றே ந‌ட‌க்கும். த‌ன‌து கோழி முட்டைக‌ளைக் கொடுத்து ஒரு ப‌லாக்காயை வாங்கினார். இதுவ‌ரை நாள் ச‌ந்தையில் காணாத‌ ஒரு புதிய‌ பெண் ப‌லாக்காய்க‌ளை விற்றுக்கொண்டிருப்ப‌தையும் அவ‌தானித்திருந்தார். இந்த‌ ஏழு ஆண்டுக‌ளில் இந்நாட்டு ம‌க்க‌ளின் சுதேசி மொழியையும் ஒர‌ள‌வு க‌ற்றிருந்தார். அடுத்த‌ முறை ச‌ந்தைக்குக்குப் போகும்போது, 'இதுவ‌ரை நான் உன்னை இங்கே காண‌வில்லை, நீ இந்த‌ச் ச‌ந்தைக்குப் புதிதா?' என‌ அந்த‌ப் பெண்ணிட‌ம் வினாவினார். எவ்வாறு உன்னை அழைப்ப‌தென‌க் கேட்ட‌போது அசுந்தா எனத் த‌ன் பெய‌ரை அவ‌ள் கூறினாள் தனிமைத்தீவில் ப‌ல்லாண்டுக‌ளாய்த் த‌வித்துக்கொண்டிருந்த‌ வில்லிய‌ம்ஸிற்கு அசுந்தா இவ‌ரைக் காப்பாற்ற‌ வ‌ந்த‌ ஒரு ப‌ட‌கு போல‌த் தெரிந்தாள். அசுந்தாவைச் ச‌ந்திப்ப‌த‌ற்கென‌வே -பொருட்க‌ளை விற்க‌வோ வாங்க‌வோ அவ‌சிய‌மில்லாத‌ பொழுதுக‌ளில் கூட‌- அடிக்க‌டி ச‌ந்தைக்கு செல்ல‌த் தொடங்கினார். நாட்க‌ள் செல்ல‌ச் செல்ல‌ அது அசுந்தா மேல் காத‌லாக‌ மாற‌, த‌ன்னைத் திரும‌ண‌ஞ்செய்ய‌ ச‌ம்ம‌த‌மா என‌ இவ‌ர் அசுந்தாவிட‌ம் கேட்டார். எல்லாம் சுமுக‌மாக‌ ஆன‌த‌ன்பின் அசுந்தாவும் இவ‌ரும் திரும‌ண‌ம் செய்வ‌த‌ற்காய் முறையான‌ அனும‌தியை அந்த‌ப் ப‌குதியின் த‌லைவ‌ரிட‌ம் சென்று கேட்டார்க‌ள். 'இப்போதாவ‌து திரும‌ண‌ம் செய்ய‌ முடிவு செய்தீர்க‌ளே, ந‌ல்ல‌ விட‌ய‌ம், ச‌ந்தோச‌மாக‌ இருவ‌ரும் வாழுங்க‌ள்' என‌ அந்த‌த் த‌லைவ‌ர் வாழ்த்தினாலும், அவ‌ருக்கு உள்ளுக்குள், இனித் திரும‌ண‌ம் செய்தால் வில்லிய‌ம்ஸ் இங்கிருந்து த‌ப்பியோட‌மாட்டார் என்ற‌ நிம்ம‌தியே ஏற்ப‌ட்ட‌து. இவ்வ‌ள‌வுகால‌மும் ஒன்றாய்ச் சேர்ந்திருந்த‌ ரொப‌ர்ட்டைப் பிரிவ‌துதான் இவ‌ருக்கு க‌ஷ்ட‌மாய் இருந்த‌து. ரொப‌ர்ட்டும் 'இறுதியின் நீயும் எல்லோரையும் போல தாய் நாடு திரும்பிப் போகும் க‌ன‌வைக் கைவிட்டு விட்டாயா?' என‌க் க‌வ‌லையுட‌ன் கூறித்தான் விடை கொடுத்தார். இவ‌ரும் அசுந்தாவும் த‌ங்க‌ளுக்கென‌ குடிலை அமைத்து காட்டுக்கு அண்மையாக‌ வாழ‌த் தொட‌ங்கினார்க‌ள்.

சுனைக‌ளில் நீராடி, ம‌ல‌ர்க‌ளை எப்போதும் சூடுவ‌தில் பிரிய‌ம் கொண்ட‌ அசுந்தாவின் உட‌ல் எப்போதும் சொற்க‌ளால் விப‌ரித்து முடியா புதுவித‌ உண‌ர்வுக‌ளை இவ‌ருக்குக் கொடுத்துக் கொண்டிருந்த‌து. க‌ர்த்த‌ரில் ந‌ம்பிக்கை வைத்து பெறுகின்ற‌ ஆன்மீக‌ விடுத‌லையை, உட‌ல்க‌ளினூடாக‌வும் புல‌ன்க‌ளினூடாக‌வும் கூட‌ப் பெற‌முடியும் என‌ நினைத்துக்கொண்டார். தொட‌க்க‌த்தில் த‌ன‌து உட‌லை ஒரு ஆணுக்கு இய‌ல்பாக‌த் திற‌ந்துவைக்க‌த் த‌ய‌ங்கிய‌ அசுந்தா, போக‌ப்போக‌ த‌ய‌க்க‌ங்க‌ளைக் க‌ளைந்து த‌ன்னுட‌லை ஒரு ந‌தியாக‌ப் பெருக‌ச் செய்து இவ‌ரை ஒரு பெருவிருட்ச‌மாக‌ உள்ளிழுத்துக் கொண்டாள். ஆணிவேரும் அறுப‌ட, முடிவுறாதோடிய‌ காம‌ந‌தியில் அமிழ்ந்த‌ இவ‌ர் த‌ன் ஆன்மாவின் க‌ட்டுண்டுகிட‌ந்த‌ க‌யிறுக‌ளை அசுந்தாவின் அல்குள் அறுத்து விடுத‌லை செய்வ‌தை உண‌ர்ந்தார். அதை அசுந்தாவிட‌ம் சொல்ல‌வும் செய்தார். உட‌ல்க‌ள் ச‌ங்க‌மிக்கும் பொழுதுக‌ளில் ம‌ட்டும் ஆண்க‌ள் எவ்வ‌ள‌வு அன்பான‌வ‌ர்க‌ளாக‌வும், உள‌றுப‌வ‌ர்க‌ளாக‌வும் மாறிவிடுகின்றார்க‌ள் என‌ எண்ணிய‌ப‌டி அசுந்தா இவ‌ரைத் தாப‌த்துட‌ன் இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

நான் கியூபாவில் சென்று இற‌ங்கிய‌போது ந‌ன்கு ம‌ழை பெய்துகொண்டிருந்த‌து. இர‌வுண‌வைக் கொஞ்ச‌மாய்ச் சாப்பிட்டு பாரில் இருந்து குடித்துவிட்டு, கொண்டுபோன‌ பிளாஸ்கில் இன்னும் கொஞ்ச‌ வைனை நிர‌ப்பிக்கொண்டு அறைக்குத் திரும்பியிருந்தேன். க‌ட‌ற்க‌ரையைப் பார்க்கும்ப‌டியாக‌ என் அறை இருந்த‌து. திரைச்சீலையை வில‌த்தினால் அலைய‌லைய‌டித்துக் கொண்டிருந்த‌ அத்திலாந்திக் ச‌முத்திர‌ம் விரிந்து கிட‌ந்த‌து. இந்த‌ ம‌ழைக்குள்ளும் யாரோ ஒருவ‌ர் க‌ட‌ற்க‌ரையில் இருந்து குடித்துக் கொண்டிருப்ப‌து தெரிந்த‌து. அவ‌ருக்கும் என்ன‌ க‌வ‌லையோ தெரியாது. பிளாஸ்கிலிருந்த‌ வைனும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் என்னைய‌றியாம‌லே குறைந்துகொண்டிருந்த‌து. இந்த‌ அறையிலிருந்த‌ப‌டி எத்த‌னைபேர் எத்த‌னைவித‌மான‌ உண‌ர்வுக‌ளோடு இந்த‌க் க‌ட‌லைப் பார்த்த‌ப‌டி இருந்திருப்பார்க‌ள் நினைத்துப் பார்த்தேன். மெல்ல‌ மெல்ல‌மாய் நீண்ட‌நாள் வ‌ர‌ ம‌றுத்த‌ நித்திரையும் என்னை அர‌வ‌ணைக்க‌த் தொட‌ங்கிற்று.

ந‌ள்ளிர‌வில் ச‌ட்டென்று விழிப்பு வ‌ர‌, ஏதோ ஒரு பொருளின் அசைவும், பெண்ணொருவ‌ரின் சிணுங்க‌லும் த‌லைக்க‌ருகாமையில் கேட்ப‌து போல‌த் தோன்றிய‌து. எலிவேற்ற‌ரில் இர‌வுண‌விற்காய் காத்திருந்த‌போது, ப‌க்க‌த்து அறைக்குப் புதிதாய் வ‌ந்திற‌ங்கிய‌ அந்த‌ இணைக‌ளின் காத‌ல் ச‌ர‌ச‌ம் போலுமென‌ நினைத்துக்கொண்டேன். பெண்ணின் குர‌ல் இப்போது கீச்சிட‌லாய் உச்ச‌த்தில் ஒலிக்க‌த் தொட‌ங்கியது. இது இய‌ல்பென‌த் தெரிந்தாலும் தூக்க‌த்தைக் க‌லைத்த‌ கோப‌த்தில் அவ‌ர்க‌ளைத் திட்டிக்கொண்டிருந்தேன். இனியும் இவ‌ர்க‌ளின் த‌ழுவ‌ல்க‌ளின் மொழியைக் கேட்டுக் கொண்டிருந்தால் எதையெல்லாம் ம‌ற‌க்க‌வேண்டுமென‌ கியூபாவிற்கு வ‌ந்தேனோ அதையெல்லாம் மீள‌ நினைக்கும்ப‌டியாகிவிடும் என்ற‌ அச்ச‌த்தில், ப்ளாஸ்கையும் எடுத்துக்கொண்டு இருப‌த்து நான்கு ம‌ணிநேர‌மும் திற‌ந்திருக்கும் பாருக்குச் செல்ல‌த் தொட‌ங்கினேன்.

இர‌வு விழித்திருந்து நீண்ட‌நேர‌ம் குடித்த‌தால் அடுத்த‌ நாள் நேர‌ம் பிந்தியே என்னால் எழும்ப‌முடிந்திருந்த‌து. ப‌த்த‌ரைக்கு காலையுண‌வை மூடிவிடுவார்க‌ள் என்ற‌ அவ‌ச‌ர‌த்தில் உண‌வுப்ப‌குதியிற்கு ஓடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவ‌ளைப் பார்த்தேன். அவ‌ளின் நிற‌த்தை வைத்து எந்த‌ நாட்டிலிருந்து வ‌ந்திருப்பாளென்று ம‌ட்டுக்க‌ட்ட‌ முடியாம‌ல் இருந்த‌து. ஏதோ வெவ்வேறு நாடுக‌ளின் க‌ல‌வையில் உதிர்த்த‌வ‌ள் என்ப‌து ம‌ட்டும் உறுதியாய்த் தெரிந்த‌து. என்னைப் பார்த்துச் சின்ன‌தாய்ப் புன்ன‌கைத்தாள். காலை உண‌விற்கு வ‌ரும்போதோ ட‌வ‌லையும், ஒரு பையையும் கூட‌வே கொண்டுவ‌ந்திருந்தாள். நீச்ச‌ல் செய்த‌பின் மாற்றுவ‌த‌ற்கான‌ ஆடைக‌ள் பையினுள் இருக்க‌க்கூடும் என‌ நினைத்துக்கொண்டேன். நான் மிச்ச‌மாயிருந்த‌ காலையுண‌வை அவ‌ச‌ர‌ம் அவ‌ச‌ர‌மாய் ஒரு பீங்கான் கோப்பையில் போட்டுக்கொண்டு அவ‌ள் எங்கே போகின்றாள் என‌ப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

க‌ட‌ற்க‌ரைக்கு அண்மையில் இருந்த‌ ஓலையால் வேய‌ப்ப‌ட்டிருந்த‌ பாருக்குள் போவ‌து தெரிந்த‌து. நானும் என் உண‌வோடு பாரை நோக்கி ந‌ட‌க்க‌த் தொட‌ங்கினேன். பீனா கால‌டாவிற்கு ஓட‌ர் கொடுத்துவிட்டு அவ‌ள் காத்திருப்ப‌து தெரிந்த‌து. என்னைக் க‌ண்ட‌தும், 'Are you following me?' எனச் சிரித்த‌ப‌டி கேட்டாள். உண்மை அதுதான் என்றாலும், 'இல்லையில்லை, ச‌முத்திர‌த்தைப் பார்க்க‌ வ‌ந்தேன்' என‌ச் ச‌மாளித்தேன். 'நான் ரொறொண்டோவிலிருந்து வ‌ருகின்றேன்,ஆனால் இல‌ங்கைதான் பூர்வீக‌ம்' என‌ அறிமுக‌ம் செய்ய‌, தான் இங்கிலாந்திலிருந்து வ‌ந்திருக்கின்றேன் என்றாள். 'க‌ன‌டாவின் க‌டுங்குளிரிலிருந்து த‌ப்புவ‌த‌ற்கு இப்ப‌டி வ‌ந்தால் ம‌ட்டுமே முடியுமென‌'க் க‌ட‌லைப் பார்த்த‌ப‌டி சொன்னேன். கியூபாவின் இசை ப‌ற்றிய‌ ஆராய்ச்சிக்காய் வ‌ந்த‌ மாண‌வி என‌ அவ‌ள் கூற‌, 'இசை என்ன‌ இங்கிலாந்து ம‌காராணி மாதிரி ப‌க்கிங்காம் அர‌ண்ம‌னைக்குள்ளா இருக்கும்? இப்ப‌டிச் சுற்றுலா விடுதியில் இருந்துகொண்டு அதை எப்ப‌டி ஆராய‌முடியும்' என‌ கேலியாக‌க் கேட்டேன். 'அது என‌க்கு ந‌ன்றாக‌வே தெரியும், க‌ட‌ந்த‌ ஒரு மாத‌ கால‌மாய் கியூபாவின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளுக்கு அலைந்திருக்கின்றேன். உட‌லுக்கு ச‌ற்று ஓய்வு வேண்டும் போலிருந்த‌து. அதுதான் இங்கே ஒரு வார‌ம் த‌ங்க‌ வ‌ந்திருக்கின்றேன்' என்றாள். பிற‌கு 'இங்கிருக்கும் இசை வ‌கைமைக‌ளை விட‌ இளைஞ‌ர்க‌ள்தான் இன்னும் சுவார‌சிய‌மான‌வ‌ர்க‌ள்' என‌ ஒரு க‌ண்ணை சிமிட்டிச் சொன்னாள். 'அப்ப‌டியெனில் ஆய்வின் முடிவுக‌ளும் த‌னித்துவமாய்த்தான் இருக்கும் போல‌' என‌ச் சிரித்த‌ப‌டி கூறினேன்.

நான் காலையுண‌வை முடித்து, என‌க்கொரு கோப்பியையும் அவ‌ளுக்கு இன்னொரு பீனா கொலாடாவையும் எடுத்துக்கொண்டு வ‌ந்தேன். 'Why dont you swim with me? என‌ அவ‌ள் கேட்க‌, என்ன‌ ப‌தில் கூறுவ‌தென்று என‌க்குக் குழ‌ப்ப‌மாயிருந்த‌து. இலங்கை போன்ற‌ ஒரு தீவு நாட்டைப் பூர்வீகமாய்க் கொண்ட‌வ‌னுக்கு நீந்த‌த் தெரியாதென்று ஒரு அந்நிய‌த் தேச‌ப்பெண் அறிவ‌து எவ்வ‌ள‌வு அவ‌மான‌மான விட‌ய‌ம். அதை ம‌றைத்துக்கொண்டு 'I don't feel like swimming right now' என‌ச்சொல்லிவிட்டு 'வேண்டுமென்றால் நீ நீந்தும்போது க‌ரையில் நான் காவ‌லிருக்கின்றேன்' என்றேன். 'என‌க்கு எவ‌ரும் துணைக்குத் தேவையில்லை. நானே என்னைக் க‌வ‌னித்துக் கொள்வேன். ஆனால் உன‌க்கு வேறு வேலையில்லையென்றால் என் ஆடைக‌ளுக்கு காவ‌லிரு' என்றாள்.

அடுத்த‌ நாளிர‌வு என் அறையில் இருந்து பேசிக்கொண்டிருக்கும்போது நான் அம்ப‌னையின் அர‌ச‌ ப‌ர‌ம்ப‌ரையைச் சேர்ந்த‌வ‌ன் என‌ அவ‌ளுக்குச் சொன்னேன். ஐம்ப‌து குடும்ப‌ங்க‌ளை விட‌க் குறைவான‌ ஒரு கிராம‌த்தை, ஒரு இராச‌தானியின் அள‌வில் வைத்து க‌தைக‌ளைப் புனைந்து கொண்டிருந்தேன். பிளாஸ்கிலிருந்த வைன் குறைய‌க் குறைய‌ இன்னும் உற்சாக‌ம் என‌க்குள் த‌ட‌ம்புர‌ண்டோட‌த் தொட‌ங்கிய‌து. ஒரு நாள் போரின் நிமித்த‌ம், ப‌துங்குகுழி வெட்டிய‌போது ஆற‌டி நில‌த்துக்கீழே புதைந்துபோன‌ ஒரு ப‌ழ‌ங்கால‌க் க‌ட்ட‌ட‌த்தின் தூண்க‌ளைக் க‌ண்டெடுத்தோம் என‌வும், அங்கு கிடைக்க‌பெற்ற‌ ம‌ண்க‌ல‌ங்க‌ளும் செப்புத் த‌க‌டுக‌ளும் எங்களின் மூதாதைய‌ர் முன்னோர் கால‌த்தில் முக்கிய‌மான‌வ‌ர்களாய் இருந்திருப்பார்க‌ளென‌வும் க‌தையை இன்னும் வ‌ள‌ர்த்தேன். வாழ‌ ஒரு துண்டு நில‌ம் கூட‌ இல்லாது துர‌த்த‌ப்ப‌ட்ட‌வ‌ன் த‌ன் சோக‌த்தைச் சொல்கிறான் போலுமென‌ அவ‌ள் என்னை அணைத்துக்கொண்டு முதுகைத் த‌ட‌விய‌ப‌டி ம‌வுன‌மாய்க் கேட்டுக்கொண்டிருந்தாள். அன்றிர‌வு நாங்க‌ள் ந‌ம்முட‌ல்க‌ள் மேல் நிக‌ழ்த்திய‌ ஆய்வில் ப‌க்க‌த்து அறைக்கார‌ர்க‌ளுக்கு நித்திரையே வ‌ந்திருக்காது. இதைத்தான் த‌மிழில் 'உன்னை அவ‌மானப்ப‌டுத்தியவ‌னுக்கு அவ‌ன‌து முற்ற‌த்திலேயே வைத்து ப‌தில‌டி கொடு' என்று சொல்கிறாக‌ள் போலும். காலை விடிந்த‌போது நான் வேறொருவ‌னாக‌ இருந்தேன். ஆடைக‌ள் எதுவும‌ற்றுக் கிட‌ந்த‌ எங்க‌ள் உட‌ல்க‌ளை இர‌வில் ஒழுங்காய் மூடியிராத‌ திரைச்சீலைக‌ளின் ஊடாக‌ சூரிய‌ன் புதின‌ம் பார்த்துக் கொண்டிருந்த‌து. நான் அவ‌ச‌ர‌ம‌வ‌ச‌ர‌மாய் என‌து ஆடைக‌ளையெடுத்து அணிய‌த்தொட‌ங்கினேன். என்ன‌தான் இர‌வில் இட‌க்குமிட‌க்காய் இருந்தாலும் ஒரு நாட்டு அர‌ச‌ப‌ர‌ம்ப‌ரைக்குரிய‌வ‌ன் பிற‌ர் பார்வையில் இப்ப‌டித் தெரிய‌க்கூடாத‌ல்லவா?

(இன்னும் வரும்)
நன்றி: தீராநதி (ஏப்ரல், 2011)

ஓவியம்: தீராநதியிலிருந்து பிரசுரிக்கப்படுகிறது. (ஓவியரின் பெயர் வேல் எனத்தொடங்குவது அவரின் கையெழுத்திலிருந்து தெரிகிறது. முழுப்பெயர் அறிந்தவர் கூறினால் இங்கே நன்றியுடன் இணைத்துக்கொள்வேன்)

இலங்கையின் கொலைக்களங்களும், இன்னபிறவும்

Tuesday, April 10, 2012

ப்போது ‘இலங்கையின் கொலைக்களங்கள்; தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் (Sri Lanka, Killing Fields: War Crimes Unpunished)’இரண்டாவது பகுதியாக பிரித்தானியாவின் சனல்4ல் வெளிவந்திருக்கின்றது. முதலில் காண்பிக்கப்பட்ட ‘இலங்கையின் கொலைக்களங்கள் (Sri Lanka, Killing Fields) ஆவணப்படத்தைப் பார்க்காததைப் போலவே இந்த இரண்டாம் பகுதியையும் பார்க்கவில்லை. அதற்கான மனோதிடம் என்னிடமில்லை என்பதால் தவிர்த்திருந்தேன். எனினும் நண்பர்கள் முகப்புத்தகங்களில் இவற்றைப் பகிர்ந்தபோது அதைத் தாண்டிப் போகவும் கடினமாயிருந்தது. இந்த இரண்டாவது ஆவணப்படம் ஒளிபரப்பாகிய அன்று எழுதப்பட்ட சில கட்டுரைகளை வாசித்தே, அன்றைய இரவு தூங்கமுடியாது நினைவுகள் அலைக்கழிந்து கொண்டேயிருந்தன.

போருக்குள் இருந்தவர்களுக்கு இந்தக் காட்சிகள் நாளாந்தம் பார்ப்பதாய் இருந்திருக்கும். எனக்கு இவ்வாறான போர்க்குற்ற அசையும்/அசையாய்ப் படங்களை பொதுவில் வைப்பதிலும் சிக்கலுமுள்ளது. தமிழகத்து நண்பரொருவர் இவ்வாறான சலனக்காட்சிகளை வெளிப்படையாக முன்வைத்தால் மட்டுமே மேற்குலகின் முகத்தில் அறைந்து நீதி கேட்பது போல இருக்கும் என்றார். இன்னொரு ஈழத்து நண்பரொருவர் எங்களுக்கு எப்போதோ இவற்றைப் போன்று பலவற்றை நேரில் பார்த்து மனம் மரத்துப் போய்விட்டது என்றார். இந்தியா,சீனாவிலிருந்து மேற்குலகுகின் பல நாடுகள் வரை ஈழத்தின் இறுதிப் போரின் இரத்தத்தில் கை நனைக்காதவர்களென எவரும் இல்லையென்றேதான் கூறவேண்டும். இன்றைய காலத்தில் வடிக்கப்படும் இந்த நாடுகளின் நீலிக்கண்ணீர் பற்றியும் ஈழத்தில் போரால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு நன்கு தெரியும், எனினும் இழப்புக்களையும், வடுக்களையும், காயங்களையும் மறந்து தொடர்ந்து வாழ, அவர்களுக்கு யாரிடையதோ பெருங்கருணையும் ஆதரவும் தேவையாய் இருக்கின்றது.

எங்கள் ஊரில் வைரவர் கோயிலுண்டு. அங்கு பூசை செய்துகொண்டிருந்தவர் என் மீது பிரியமாய் இருந்திருக்கின்றார். 5ம் ஆண்டு புலமைப்பரிசுப் பரீட்சையின் நிமித்தம் மேலதிக வகுப்புக்களுக்காய் சில கிலோமீற்றர்கள் மாலை நேரங்களில் நடந்து போய்க்கொண்டிருப்பேன். அப்போது தெருவில் இடைநடுவில் நடந்துவரும் என்னைக் காணும்போதெல்லாம் அவர் தன் சைக்கிளில் ஏற்றிக்கொள்வார். ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தில் அவர் அப்போது வேலை செய்துகொண்டிருந்தார். இறுதிப் போரின் காலங்களில், காலில் ஷெல் துண்டுபட்டு வெளியேறிய இரத்தத்தை நிறுத்த முடியாது இறந்து போயிருந்தார். சாதாரண மருத்துவ வசதி அன்றிருந்தாலே எளிதாகத் தப்பக் கூடிய காயந்தானென -அவரின் இறப்பு வீட்டுக்கு இங்கே சென்றபோது- அவரின் உறவுக்காரர்கள் கூறியிருந்தனர். நினைவுகள் தொடர்ந்து துயரத்தில் அமிழ்த்தியபடியே இருக்கின்றன. எவற்றை மறக்கவேண்டும் என நினைக்கின்றோமோ அவை ஞாபகங்களைப் பலமடங்களில் பெருக்கிக் கொண்டேயிருக்கின்றன.

இன்று ஈழத்தமிழர்களில் தங்களின் உறவுகளில் ஒருவரையோ அல்லது அயலவர்களில் ஒருவரையோ போருக்குப் பலிகொடுக்காத யாரையேனும் காண்பது என்பதே அரிதாகத்தானிருக்கும். எல்லாவற்றையும் மறந்துவிடலாமென்றால் எங்கிருந்து தொடங்குவது என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தெரியவில்லை. ஏதாவது ஒரு சிறு நம்பிக்கைக் கீற்றாவது தென்படுதா எனப் பார்த்தால் கூட, பெரும் வெறுமையே அவர்களைச் சூழ்வதாய் இருக்கிறது. இது போதாதென்று வென்றவர்கள் தோற்றவர்களின் மனோநிலையைப் புரிந்துகொள்வார்கள் என்றால் இவ்வாறான படுகொலைகள் எதுவுமே நடக்கவில்லையென வென்றவர்களில் ஒருசாரார் கொழும்பில் நின்று ஆர்ப்பாட்டஞ் செய்கின்றார்கள். போர் முடிந்துவிட்டது என்கிறார்கள், ஆனால் இன்னமும் போர் இலங்கையிலுள்ள மக்களில் மனங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாய்த்தான் தோன்றுகின்றது. எல்லாத் திசைகளிலிருந்தும் எதிர்த்திசையிலிருப்பவர்களைப் பார்த்தே கையைக் காட்டுகின்றார்களே தவிர எவருமே தங்கள் தவறுகளை உணர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை அரவணைத்துச் செல்ல விரும்பவில்லை என்பதே இன்றைய கசப்பான யதார்த்தம்.

டி.எச்.லோறன்ஸின் ‘The Lady's Chatterley's Lover’ நாவல் முதலாம் உலகப் போர் முடிந்து மிகப் பெரும் 'அழிவின் பின் சிறு நம்பிக்கை மட்டுமே எஞ்சியிருக்கின்றது; எனினும் எத்தனை முறை வானம் இடிந்து வீழ்ந்தாலும் நாம் தொடர்ந்து வாழத்தான் வேண்டும். போகும் பாதை எளிதானதாயில்லாதபோதும் தடைகளைத் தாண்டி எதிர்காலத்தை நோக்கி நகரவேண்டும்' எனத் தொடங்குகின்றது. இந்தப் புதினம், அது பேசும் விடயங்களுக்காகவும், எழுதப்பட்ட மொழியிற்காகவும் ஒருகாலத்தில் மிகவும் விமர்சிக்கப்பட்டதோடு பல்வேறு நாடுகளில் தொடக்கத்தில் தடை செய்யப்பட்டும் இருக்கின்றது.  நாவலில் காமம் ஒரு முக்கிய இழையாக இருந்தாலும் அதையும் தாண்டி கைத்தொழில் புரட்சியிற்கு எதிரான கருத்துக்களும், உயர்வர்க்கத்தின் போலி ஆடம்பர வாழ்வு குறித்த எள்ளலும் கூர்ந்த கவனிக்கத் தக்கவை. பெண்ணின் காமம் குறித்து மிக நுட்பமாக டி.எச்.லோறண்ஸ் கவனித்து அதை ஆழமாக முன்வைத்திருக்கின்றார். மேலும் உயர்வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்/ நடுத்தர குடும்பத்தினர்/ கீழ் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களென பாத்திரங்களைப் படைக்கும்போது அவர்கள் பேசும் மொழியை ஒவ்வொருவருக்குமென வித்தியாசப்படுத்தி தனித்துவமாய் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று பல 'கெட்ட வார்த்தைகள்' நேரடியான பேசுமொழியில் பாவிக்கப்படுவதால் இந்நாவல் எழுதப்பட்ட காலத்தை வைத்துப் பார்க்கும் ஒருவருக்கு சிலவேளைகளில் அதிர்ச்சியைத் தரவும் கூடும்

இந்நாவல் காமத்தை மட்டுமின்றி மனிதர்களின் உளவியலை, முதலாம் உலகப்போரின் பின்பான நிலைமைகளை, தொழிற்புரட்சியினால் ஏற்படும் விளைவுகளை மிக விரிவாகப் பார்ப்பதாலும், எவ்வித ஒளிவுமறைவுமின்றி அவற்றை முன்வைப்பதாலும் கவனிக்கத்தக்கதொரு புதினமாயிருக்கின்றது. டி.எச்.லோறண்ஸ் இதையெழுதிய கடைசி நான்காண்டுகளில் வெவ்வேறு விதமாய் மூன்று தடவைகள் எழுதிப் பார்த்திருக்கின்றார் என்கின்றபோது இப்படைப்பிற்காய் அவர் செலவிட்ட உழைப்பை நினைத்து வியக்காமலும் இருக்கமுடியவில்லை.
.
கொலம்பஸ் 'அமெரிக்கா' என்னும் புதிய உலகைக் கண்டுபிடிக்கும்போது அவர் அந்நிலப்பரப்புக்களில் இருந்த பூர்வீக மக்களுக்கு நிறைய அநியாயங்களைச் செய்திருக்கின்றார். 15ம் நூற்றாண்டில் நடந்த இந்த விடயங்களை ஒரு பாதிரியார் குறிப்பாய் எழுதி வைக்க, அதை ஆதாரமாகக் கொண்டு சமகாலத்தில் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க ஒரு குழு பொலிவியாவிற்குப் புறப்படுவதோடு Even the Rain திரைப்படம் ஆரம்பிக்கின்றது. ஏனைய நாடுகளை விட ஏழ்மையான மக்கள் பொலிவியாவில் இருப்பதால், குறைந்த செலவில் இப்படத்தை எடுக்காலாமென்பது தயாரிப்பாளரின் திட்டம். தேர்ச்சி பெற்ற நடிகர்களோடு உள்நாட்டிலேயே இன்னும் அழிபடாது எஞ்சியிருக்கும் பூர்வீக மக்களையும் சேர்த்துத் திரைப்படத்தில் நடிக்க வைக்கின்றனர். படப்பிடிப்பு நடக்கும் காலத்திலேயே பொலிவியாவின் தண்ணீர் ஊற்றுக்களைப் வேறு நாடுகளிலிருந்து வரும் பெரும் நிறுவனங்கள தமக்குரியனவையாக வளைத்துப் போட முயற்சிக்கின்றன. இதற்கு எதிராக அங்கிருக்கும் பூர்வீக மக்கள் போராடத் தொடங்க, அதற்குத் தலைமை தாங்குபவரே -இத்திரைப்படத்திலும் பூர்வீகமக்களின் முக்கிய பாத்திரத்தில் நடிப்பவராக இருக்கின்றார். இவர் போராட்டத்தில் பங்குபெறுவதால் திரைப்படத்தைத்தொடர்ந்து எடுக்க முடியாது அந்தரப்படும் நிலை படக்குழுவினருக்கு ஏற்படுகின்றது.

ஒரு திரைப்படம் என்கின்ற விம்பத்திரையும், யதார்த்தில் நடைபெறும் போராட்டமுமென மாறி மாறிக் காட்சிகள் இப்படத்தில் விரிந்து கொண்டேயிருக்கின்றன. பொலிவியாவிற்கு வந்த திரைப்படக்குழுவினர் ஒழுங்காய்ப் படத்தை எடுத்து முடித்தார்களா, தண்ணீருக்கான போராட்டத்திற்கு என்ன நடக்கின்றது என்கின்ற பதற்றங்களோடே கதை நகர்கின்றது. தண்ணீருக்குக் கூட அரசியல் இருக்கின்றது என்கின்ற யதார்த்தத்தை உரத்துக் கூறுவதாய், அதற்காய்க் கூட இரத்தம் சிந்த வேண்டியிருக்கின்றது என்பதை இத்திரைப்படத்தின் பெண் இயக்குனரான இசியர் போலைன் பார்ப்பவருக்குள் பதியும்படி எடுத்திருக்கின்றார். அதுமட்டுமின்றி கொலம்பஸ் வந்து அமெரிக்காவைக் கண்டுபிடித்ததிலிருந்து, இற்றைவரை அந்தப் பூர்வீக மக்கள் இன்னமும் பல்வேறு வழிகளால் சுரண்டப்பட்டு அவர்களின் இயற்கையோடு இயைந்த இயல்புவாழ்க்கை குலைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதையும் இப்படம் ஒளிவுமறைவின்றி முன்வைக்கின்றது. எப்போதும் ஒடுக்குமுறைகளோ சுரண்டல்களோ தொடர்ந்து வெற்றி பெறுவதில்லை, என்றோ ஒருநாள் அவற்றுக்கெதிரான போராட்டங்கள் வெடித்தெழும்பும் என்பதைக் கடந்த கால வரலாறுகளிலிருந்து நாம் கண்டுகொள்ளலாம். எனினும் அதற்கான விலைகளையும், இழப்புக்களையும் பற்றி யோசிக்கும்போது வரும் சோர்வு மிகப்பெரியது. பிணங்களின் மேலே நின்று அரசியல் செய்ய ஒடுக்குபவர்களினால் முடியும். ஆனால் ஓடுக்குமுறைக்கு எதிராய்க் கொதித்தெழும்புவர்க்கு இழப்பின் பெறுமதியும் துயரமும் நன்கு தெரியும். ஒவ்வொரு போராட்டமும், உள்ளே போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமின்றி வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கும் எதையோ கற்றுக் கொடுத்துவிட்டுத்தான் முடிவை அடைகின்றன. இத்திரைப்படத்தின் இறுதியில் வெளிநாட்டிலிருந்து வரும் தயாரிப்பாளருக்கு, பூர்வீகக் குடியொருவர் சிறுபோத்தலில் நினைவாகக் கொடுக்கும் தண்ணீரும் அவ்வாறே பல கதைகளைச் சொல்லாமற் சொல்லி நிற்கின்றது. யதார்த்ததிலும், 2000ம் ஆண்டுகளவில் பொலிவியாவின் Cochabambaவில் தண்ணீருக்கான போராட்டங்கள் தீவிரமாய் நடந்திருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

ணையம் பற்றி விரிவாகப் பேசவேண்டிய அவசியமல்ல. அதன் எல்லைகளற்ற 'எல்லை'கள் பற்றியும், நம்மை அறியாமலேயே நாம் கண்காணிக்கப்படும் ஆபத்துக்கள் பற்றியும் நாமனைவரும் அறிவோம். இணையத்தின் மூலம் சாத்தியமாகிய அரபுப் புரட்சிகளின் பின் அதிகாரமிக்க எல்லா நாடுகளும் இணையத்தை இன்னுமின்னும் அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருக்கின்றன. தனி நபர் ஒவ்வொருவரையும் கண்காணிக்கும் சட்டங்களை இன்னுமின்னும் இறுக்கிக் கொண்டிருக்கின்றன.

அதேபோன்று எப்படிச் சாதாரண சமூகம்  வெளியில்இருக்குமோ அப்படியே இணையமும் எல்லாம் கலந்து கட்டியே இருக்கும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. எனவே சேர்க்கவேண்டியதைச் சேர்ந்து விலத்த வேண்டியதை விலத்த வேண்டியது தனிப்பட்ட ஒவ்வொருவரின் பொறுப்பே தவிர, இணையம் இப்படி கரடுமுரடாய் இருக்கிறதென எவரும் ஒப்பாரி வைக்க முடியாது. தமிழ்ச் சூழலில் இணையத்துக்கு வரும் படைப்பாளிகளில் அநேகர் 'ஏன் இணையம் இப்படிப் போர்க்களமாய்' இருக்கின்றதெனக் கூறியபடிதான் இணையத்திற்கு வந்திருக்கின்றனர். பிறகு தங்களுக்கான வாசகர்கள் அதிகரித்தவுடன், இணையமே கதியென இயங்கி தங்களுக்கான வாசகர் வட்டங்களை உருவாக்கி கணகணப்பு அடுப்புக்களின் முன்னால் குளிர்காய்ந்துகொண்டுமிருக்கின்றார்கள். அவரவர்க்கானதை அவரவர் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இணையத்திலும் உண்டென அவர்களுக்கு விளம்பி, 'இணையமென்றாலே அக்கப்போர் நிகழும் இடம் மட்டுந்தானா?’ என அவர்களின்  தொடக்ககால விசனங்களுக்கு இப்போது என்னவாயிற்றென நினைவுபடுத்த வேண்டியுமிருக்கின்றது.

இணையத்தில் பல்வேறு துறைகளில் பல்வேறு பேர் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். நான் பெரும்பாலும் பின் தொடர்ந்து வாசிப்பவர்கள் இலக்கியம்/திரைப்படம்/அரசியல்/தத்துவம் போன்ற விடயங்களை எழுதுகின்றவர்களாய் இருக்கின்றார்கள். இது என் தனிப்பட்ட தேர்வு. தமிழில் வலைப்பதிவுகள் தொடங்கிய காலத்திலிருந்து இணையச் சூழலின் வெகுசனக் கடலில் அல்லுப்பட்டுப் போகாது இன்னமும் தங்கள் போக்கில் தீவிரமாய் எழுதிக்கொண்டிருக்கும் பலர் இருக்கின்றார்கள். அவர்களில் இருவரை இங்கு அறிமுகம் செய்ய விரும்புகின்றேன். கரிசல்  என்கின்ற பெயரில் வலைப்பதிவு எழுதும் சன்னாசி. இற்றைவரை தனது சொந்த அடையாளங்களை மறைத்துக்கொண்டு எவ்வித அலட்டலுமில்லாது எழுதிக்கொண்டிருப்பவர். ஆழமான வாசிப்பும், கவனிக்கப்படாத திரைப்படங்கள் மீதான தன் கவனங்களைக் குவித்தும் எழுதிக்கொண்டிருப்பவர். இன்று மேற்குச் சூழலில் அதிகம் பேசப்படும் ரொபர்த்தோ பொலானோவை (2666, The Savage Detectives) தமிழில் மிக விரிவாக முதன்முதலில் அறிமுகஞ்செய்து வைத்தவர் சன்னாசி. அது மட்டுகின்றி இணையச் சூழலிலிருந்து பதிப்புச் சூழலுக்குப் போகும் பலரைப் போலவன்றி, தனது கவிதைகளையும்(‘தோட்டா’), சிறுகதைகளையும் (‘பேய்களின் ஒத்திகை’) தொகுத்து இணையத்திலேயே முதன் முதலாய் வெளியிட்டவரும் கூட. அண்மையில் அவ்வாறு தன் கவிதைத் தொகுப்பை  இணையத்தில் வெளியிட்ட இன்னொருவர், தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் அநேகருக்குப் பரிட்சயமான எம்.டி.முத்துக்குமாரசுவாமி.

மற்றொருவர் தனிமையின் இசை என்ற வலைப்பதிவு எழுதும் அய்யனார் விஸ்வநாத். இணைய உலகில் நிதானமாக நுழைந்து, பிறகான காலங்களில் வாசிப்பில் ஆழமாய்ச் சென்று, தனக்கான தனித்துவமான ஒரு மொழிநடையைத் தன் படைப்புகளில் கொண்டுவர முயற்சிக்கும் ஒருவர். கோபி கிருஷ்ணணையும், நகுலனையும் தனக்குப் பிடித்த முன்னோடிகளாய் வரித்துக் கொண்டவர். இதுவரை நான்கு தொகுப்புக்களை அச்சில் வெளியிட்டிருக்கின்றார். அண்மையில் வம்சி பதிப்பகத்தின் ஊடாக வெளிவந்தது 'இருபது வெள்ளைக்காரர்கள்' என்கின்ற மூன்று குறுநாவல்களின் தொகுப்பு. 

நல்ல படைப்புக்கள் எப்போதும் ஆர்ப்பாட்டங்களில்லாது, நீரின் அடியில் இருக்கும் என்கின்ற கூற்று பலரால் சொல்லப்படுவதுதான். ஒவ்வொரு வாசகருக்கும் இன்றைய சூழலில் உள்ள முக்கியமான சவால், அவ்வாறான நல்ல படைப்புக்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே. இரைச்சல்களின் ஒலியிலும், ஜிகினா வெளிச்சங்களிலும் நம் தேடலைத் தொலைக்காது, நிதானமாய் எல்லாத் திசைகளிலும் நம் வாசிப்பின் சிறகுகளை பறப்பதற்கான சுதந்திரத்தை நாம் கொண்டிருந்தால், நல்ல படைப்புக்களை அவ்வளவு எளிதில் தவறவிடமாட்டோம் எனத்தான் நினைக்கின்றேன்.
0000000000000000000000000

(அம்ருதா, ஏப்ரல்,2012)

ரெயின்

Monday, April 02, 2012


ஒளியைச் சுருட்டியபடி
விரையும் ரெயினின்
இழுபடும் பெட்டிகளில்
வாழ்வு ஓலமிடுகிறது
ஒரு ரூபாய் நாணயத்தை
தண்டவாளத்தில் வைத்துவிட்டு
புளியம்பூவை சுவைத்து நின்ற நாட்களும்
பிறகு ரெயினே வராத
நிராதரவான தண்டவாளங்களில்
சிலிப்பர் கட்டை பெயர்த்து
பங்கர்கள் சமைத்தபோதுகளில்
நம் கண்களின் முன்னே
ரெயினொரு வரலாற்றுப் பொருளாகிக் கடந்துபோனது.
நின்று நிதானித்து
ஏறிப் பயணிக்கவோ விடுப்புப் பார்க்கவோ
எந்த இரெயினும் பிறகு வாய்த்ததுமில்லை

கடந்த காலங்களின் முன் மண்டியிடும்போது
வந்துசேரும் பதற்றத்திற்குள்
எப்போதும் ஒரு ரெயின் ஓடிக்கொண்டேயிருக்கிறது
வெயிலூறும் ஒழுங்கைகளில் செருப்பில்லாது
கள்ளிவேலிகளைக் கடந்த
சிறுவர்களை மீண்டும் உயிர்ப்பிக்காதவரை
எந்த ரெயினில் ஏறினாலும்
குழந்தமையைக் கொன்றுவிடும்
கொடுங்காலத்திற்குள் சென்றுவிடுமெனும் அச்சத்தில்
சிலிப்பர்கட்டைகளை மாற்றிமாற்றி
அடுக்கியபடியிருக்கின்றேன் தண்டவாளங்களில்லாது.

Apr 02, 2012