கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கோணங்கியை பின்னிரவில் வாசித்தல்

Monday, April 28, 2014

சில படைப்பாளிகளை விரிவாக வாசிக்காது, சும்மா சந்தித்துப் பேசும்போது சொல்லப்படும் சில வரிகளை மட்டும் கொண்டு அந்தப்படைப்பாளிகள் பலரால் மதிப்பிடப்படுகிறார்கள். ஆழமான வாசிப்பில்லாது இவ்வாறு 'கதை'களைக் காவிக்கொண்டு திரிவது தமிழ்ச்சூழலின் அவலம் என யாரோ எழுதியது நினைவிலுண்டு. கோணங்கியின் 'சலூன் நாற்காலியில் சுழன்றபடி'யை ஏற்கனவே வாசித்தபோதும், தவறவிட்ட சில கதைகளுக்காய் மீண்டும் வாசிக்கத் தொடங்கியபோது கோணங்கியும் அவ்வாறு அரைகுறையான 'பேச்சுக்காவி'களால் தவறாக மதிப்பிடப்படுகின்றார் எனவே தோன்றுகின்றது. இந்த தொகுப்பிலிருக்கும் 70 கதைகளில் ஆகக்குறைந்தது 45 கதைகளை மிக எளிதாக வாசித்துவிடமுடியும். மிகுதிக்கதைகளுக்கு வேண்டுமென்றால் 'புரியாத மொழியில் எழுதுகிறார்' என்ற விமர்சனத்தை ஒரு பொருட்டாகக் கொள்ளலாம். ஆனால் கோணங்கியின் கதைகளின் மொழி எவ்வாறு மாற்றமடைந்து போகிறது என்பதற்கு இந்நூலை முன்வைத்து நல்லதொரு விமர்சனத்தை ஒருவர் வைக்கலாம் (நான் அவரின் நாவல்களை இங்கே சேர்க்கவில்லை).

கதைகளிலும் கவிதைகளிலும் என்னை ஒருகாலத்தில் அதிகம் வசீகரித்த படைப்பாளிகள் ரமேஷ்-பிரேம். ஆனால் இன்றும் என்னால் அவர்களின் தொடக்ககால படைப்பான 'அதீதனின் இதிகாசத்தை' முழுமையாக வாசிக்க முடியாமற்றானிருக்கிறது.  அதில் ஐந்தாறு பக்கங்களை வாசித்தவுடனேயே எங்கையோ தொலைந்துவிடுபவனாக ஆகிவிடுகின்றேன். ஆக, ரமேஷ்-பிரேமின் ஆரம்பகால எழுத்துக்களே எனக்கு விளங்கவில்லை என நினைத்து விலத்தியிருந்தால் பிறகு அவர்களை எனக்கு நெருக்கமானவர்களாக  என்றுமே அடையாளங் கண்டிருக்க முடியாது. அது போல 'காவப்படும் கதைகளை' மட்டும் கவனத்தில் எடுத்திருந்தால் நான் கோணங்கியையும் தவறவிட்டிருப்பேன். 'மதினிமார்களின் கதை'யையும், 'கொல்லனின் ஆறு பெண்மக்களையும்', 'பொம்மைகள் உடைபடும் நகரத்தையும்' தேடிக்கொண்டிருந்தபோது எனக்கு கிடைத்தவை அவையல்ல, 'பாழி'யும் 'பிதிரா'வும்தான்.  இந்நாவல்களின் பெயர்கள் வசீகரித்த அளவுக்கு, அவற்றின் உள்ளடக்கம் இப்போதைக்கு தொடக்கூடாதென்றளவுக்கு மிகவும் பயமுறுத்தியிருக்கின்றன. அதேவேளை அவை எழுதப்பட்டிருக்கும் மொழியினோடு எனக்கு இன்னும் பரிட்சயம் வரவில்லை என்று நினைத்திருக்கின்றேனோ தவிர எழுதிய ஆசிரியரை 'இப்படி எழுதியிருக்கின்றாரே, நாசமாகப்போக' எனச் சாபம் கொடுக்கவில்லை.

'சொல் என்றொரு சொல்'லும் முதல் சிலமுறை வாசித்தபோது உள்ளிழுக்காதபோதும், சட்டென்று ஒருமுறை இழை இழையாகப் பிரிந்து விளங்க முழு மூச்சாக அதை வாசித்து முடித்திருந்தேன். மேலும் எல்லாமே எப்போதும் விளங்கவேண்டும் என்ற அவசியமிருக்கா என்ன?  நகுலனின் எழுத்துக்களை சுய அலட்டல்கள், உள்ளோளி தரிசனங்கள் இல்லையென்பவர்கள் ரொபர்த்தோ போலானோவின் எழுத்துக்களை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என யோசித்துப் பார்க்கின்றேன். உள்மனத் தரிசனங்களுக்கு இலக்கியத்தில் ஒரிடமிருப்பதுபோல சுய அலட்டல்களுக்கும் ஓர் இடம் கொடுத்தால் என்னதான் குறைந்துவிடப்போகின்றது?

ஒற்றைத்தன்மையான, இறுக்கமான தமக்கான பார்வையினூடாகப் பார்ப்பது மட்டுமே நல்ல இலக்கியங்கள் என்று உரத்துக் கூறுபவர்களை, 'நீங்கள் கூறுவதற்கும் ஓரிடம் உண்டு, ஆனால் அந்த இடம் மற்ற வகைமைகளை உதாசீனப்படுத்துவதால் வருவதால் அல்ல' என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டிக் கொள்வோம்.  கதைகளில் ஒரு தெளிவான 'கதை' இருக்கவேண்டும், முடியும்போது நெற்றிப்பொட்டில் அடித்தால்போல ஒரு முடிவு அமையவேண்டும் என்றெல்லாம் உறுதியாக இருப்பவர்களோடு நாம் நிதானித்து நின்று பதில் சொல்லவேண்டியதுமில்லை (புதுமைப்பித்தனின் கதைகளில் வரும் tragedy  பற்றி மெளனி எழுதியதை இங்கே நினைவுபடுத்தியும் பார்க்கலாம்).

ஆக என்னுடைய வாசிப்பை வைத்துச் சொல்வதென்றால், கோணங்கியைப் பதற்றமின்றி வாசிக்க அவருடைய சிறுகதைகளிலிருந்து தொடங்கலாம். 'சலூன் நாற்காலியில் சுழன்றபடி' இன்னுஞ் சிறப்பான தேர்வாக இருக்கும், எப்படி அவர் இன்று அதிகம் விமர்சிக்கபப்டுகின்ற 'புரியாத மொழியில்' எழுதுகிறார் என்ற புள்ளிக்கு கோணங்கி வந்தடைகின்றார் என்பதையும் கூட அலசி ஆராய்ந்து பார்க்க இத்தொகுப்பு உதவக்கூடும்.

'மஞ்சட்பூத் தெரு' வில ஜி.நாகராஜனும், 'ஆறில்' புதுமைப்பித்தனும், இறந்துவிட்ட பின்னும் ஒலிநாடா ஓடிக்கொண்டிருக்கிறதில்' நகுலனும் வருகிறார்கள். ஆனால் அவர்கள் அண்மையில்  'அறம்' பாடி உன்னதமாக்கப்பட்ட சில எழுத்தாள ஆளுமைகள் (ஆவிகள் எனச்சொல்வதும் சிலவேளைகளில் பொருந்தும்) போல மீள் உருவாக்கம் கொள்ளவில்லை. அவர்களின் பலங்களோடும் பலவீனங்களோடும் கோணங்கியிடமிருந்து வெளிப்படுகின்றார்கள். அதுதான் முக்கியமானது, இது படைப்புக்கான வெளியே தவிர,  சோகம் மேல் சோகமாய், தியாகம் மேல் தியாகமாய், அறம் மேல் அறமாய்.... போதும் போதும் என்றளவிற்கு ஒரு திரைக்கதைக்குரிய கதைகளாக இருக்கமுடியாது. எனெனில் வாழ்க்கை இப்படியென்றுமே அதீதமாய் இருப்பதில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

இறுதியில் விமர்சனமாய் கோணங்கியின் படைப்பில் தெரியும் ஒரு விடயத்தையும் கூறியாக வேண்டியிருக்கிறது. நான் வாசித்தவரையில் அசோகமித்ரனின் படைப்புக்களில் கூட அவ்வளவு துருத்திக்கொள்ளாத சுயசாதி அபிமானம் கோணங்கியின் படைப்புக்களில் பிறீட்டு வெளிப்படுகிறது. ஒருவர் தன் சுயசாதி அடையாளத்தை மறைக்கவேண்டிய அவசியமில்லைத்தான். ஆனால் தன் சுயசாதி ஓர் ஒடுக்குகின்ற சாதியாக இருக்கின்றபோது அங்கே பெருமிதம் பேசுவதை விட, தன் சாதியின் பெயரால் பிறரை ஒடுக்குவதை பதிவுசெய்வதை, தன் சுயசாதியைக் கிண்டல் செய்வதையும் முக்கியமாய்க் கொள்ளவேண்டும்.  அந்த விடயம் கோணங்கியின் கதைகளில் காணாமல் போயிருப்பது என்னளவில் ஏமாற்றமே. சுந்தரராமசாமி நாசூக்காய் மறைத்ததும், அசோகமித்ரன் கண்டும் காணாததுமாய் விட்டதும், ஆனால் ஆதவன் நக்கல் செய்ததும், கிருத்திகா 'வானேஸ்வரத்திலும்', கரிச்சான் குஞ்சு 'பசித்த மானுடத்திலும்' தாம் வந்த சாதிகளைக் கிழிகிழியென்று கிழித்துமிருக்கின்றார்கள் என்பது ஒரு நினைவூட்டலுக்கு.

'அடே...அப்பிச்சி....உன் தாத்தனுக்காக இருக்கவேண்டாமய்யா... நீ போய்யா, நல்லா இருப்ப, இன்னாரு பேரன். சுப்பையாத் தேவன் பேரன்னு பேரெடுத்துப்பாப் போதுமுடா. நாங்க மண்ணுக்குள்ள போறாமுடா' என 'அப்பாவின் குகையில் இருக்கிறேனில்' சொல்வதை ஓர் உணர்ச்சித்தளத்தில் வைத்துப் பார்க்காலாந்தான். ஆனால் அதற்கப்பால் தலைமுறைக்குள்ளால் தன் சுயசாதிப் பெருமிதங்களைக் கடத்தும் சாமர்த்தியங்கள் இதில் இருக்கிறதெனவும் வாசிக்கலாம். 'தேவர்கள் நிறையக்கதைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வருகிறார்கள். ஆகவே தான் கோணங்கி 'உங்கள் உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை'யும் தேவர் சாதிச் சிறுத்தைதானோ என சந்தேகிக்கவும் வேண்டியிருக்கிறது என அவருக்குச் சொல்லவும் வேண்டியிருக்கிறது. இதற்கப்பாலும் 'சிறுத்தையின் உடல் புள்ளிகள் பிரபஞ்சத்தின் ஆயிரம் கண்களாகத் திறந்து வைலட் கற்களை உமிழ்ந்து கொண்டிருக்கும் தீரவே தீராமல் ' (உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை) போர்ஹேயின் புலி போலும் எனச் சமாதானம் செய்துகொள்ள முயல்கிறேன்.

(ஒக்ரோபர் 01, 2011, 1.36 a.m.)

இரண்டு நண்பர்கள்

Friday, April 18, 2014

ன்னும் கொஞ்ச நாட்களில் இலையுதிர்காலம் தொடங்கிவிடும். பொழியத்தொடங்கும் மழையுடன்  மெல்ல மெல்லமாய் குளிர் பரவுவதும் நம்மையறியாமலே நிகழ்ந்துவிடும். இங்குள்ள காலங்களில் எனக்குப் பிடித்த பருவம் என்றால் இலையுதிர்காலந்தான் என்று அடிக்கடி எழுதிவிட்டேன். மரங்கள் மஞ்சளாறு (கடல்புறாவில் வரும் மஞ்சளகியல்ல) போல நகர்வதையும், சட்டென்று தீப்பிடித்து எரியும் காடுகள் ஆவதையும், பின்னர் அனைத்தும் உதிர்ந்து சாம்பல் வர்ணமாவதையும் பார்த்த எவருக்கும் இந்தப் பருவம் பிடித்துவிடும். ஆனால் அதேசமயம் இலைகள் எல்லாம் உதிர்ந்து போகுமொருகால், மனதில் பரவும் வெறுமையும் சொல்லிமாளாது. எல்லாமுமே வாழ்க்கையில் இயல்பு என இயற்கையைவிட நமக்கு வேறு யார்தான் கற்றுத்தரமுடியும்?

என்னால் ஒரளவுக்கு நினைவுகொள்ளக்கூடிய இருபத்தாறு காதல் சம்பவங்களில் (இதை அறியாதவர்கள், வாசிக்க 'கம்பராமாயணம் படித்த கதை') அநேகமாய் நான் காதல்வயப்பட்டதும் இவ்வாறான இலையுதிர்காலங்களில் அல்லது குளிர்காலங்களில் என்பது தற்செயலானதுமல்ல. வெளியே சூரியனை அவ்வளவு எளிதாய்க் காணமுடியாக் காலம், மனதுக்கு ஒரு வெதுவெதுப்பைத் தந்துவிடுகின்றது. ஆகவே மனிதர்களை இன்னுமின்னும் நேசிக்க மனம் அவாவத் தொடங்குகின்றது. இந்த இருபத்தாறு சம்பவங்களில் வரக்கூடிய - நீங்கள் கேலியாய்ச் சிரிக்கக்கூடுவீர்களென்றாலும்- அஸினோடு காதல் வயப்பட்டதும் இப்படியான ஒரு தருணமாய்த்தான் இருக்கவேண்டும். கைக்கிளைக் காதலாய் இருந்தாலும், மடலேறும்படி அஸின் வற்புறுத்தமாட்டார் என்பது எவ்வளவு நிம்மதியைத் தருகின்றது. ஆக காதலில் வீழ்வது மட்டும் முக்கியமில்லை, நம்மை காதலின் பொருட்டு அவர்கள் காவு கொடுக்கமாட்டார்கள் என்று அறிந்துகொள்வதும் நம் ஆயுளை நீட்டிக்கும் ஒரு வழி என்க.

இலையுதிர்க்காலம் கதகதப்பானது என்றாலும் நான் இப்போது அதன் அழகைப்பற்றியல்ல பேசப்போகின்றேன். இலைகள் உதிர்வதைப் போல இந்த இலையுதிர்க்காலத்தில் - முக்கியமாய் செப்ரெம்பரில்- என்றென்றைக்குமாய் இழந்துபோன நண்பர்களைப் பற்றிச் சொல்லப்போகின்றேன். ஆகவே துயரங்களை கேட்கப் பிடிக்காதவர்கள் இந்த இடத்திலிருந்து நகர்ந்துவிடலாம். ஓர் இரவு இப்படி வீணாயிற்றேயென நீங்கள் பிறகு யோசிக்கக்கூடாது.

எத்தனை விதம் விதமான கனவுகள் மட்டுமில்லை நினைவுகள் கூட நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றன. அதுவும் சிறுவயது நினைவுகள் என்பது அவ்வளவு எளிதில் மறந்து போய்விடமாட்டாது. அவ்வாறு என் சிறுவயதுகளில் ஒன்றாய்ப் படித்த நண்பனை இந்த மாதமொன்றில்தான் ஒரு விபத்தில் இழந்திருக்கின்றேன். நாம் ஒரே ஊரில் ஓரே பாடசாலையில் படித்தவர்கள் என்பதால் நிறைய நினைவுகள் அவனைப் பற்றி எனக்கிருக்கிறது. கனடாவிற்கு நாமிருவரும் வெவ்வேறு காலங்களில் வந்திருந்ததால் -முன்னர் ஈழத்தில் இருந்த அதே நட்புத்தொடர்பாடல் இல்லாவிட்டாலும் அவனது இழப்பு என்னைப் பாதித்த ஒன்று. இங்கே கனடா வந்ததன்பிறகு முதன்முதலில் அவனைச் சந்தித்தபோது நான் ரஹ்மானை விரும்பிக்கேட்கிறேன் என்பதற்காய் அவன் தான் வாங்கி வைத்திருந்த 'லவ் பேர்ட்ஸ்' பாடல்கள் அடங்கிய கஸற்றைத் தந்திருக்கின்றான். நிறையக் காலம் அதை பத்திரப்படுத்தி கனடா வந்ததன் நினைவாய் வைத்திருந்திருக்கின்றேன்.

அப்படி நினைவுகொள்ளக்கூடிய இன்னொரு டேப் என்றால், 'ஆசை' படப்பாடல்கள். கொழும்பில் இருந்த தோழிகள் நீ நிச்சயம் கேட்கவேண்டுமென உசுப்பேற்ற ஏதோ ஒருகடையில் காவல் நின்று அந்தப்பாடல்களைப் பதிவுசெய்துகொண்டு வந்து வெள்ளவத்தை ஸ்ரேசன் ரோட்டில் தங்கியிருந்த வீட்டில் கேட்டிருக்கின்றேன். அதுவும் குறிப்பாய் 'கொஞ்சநாள் பொறு தலைவா' வை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்பதும் நினைவில் இல்லை. அந்தப் பாடலை திரும்பத் திரும்பச் சுழல வைத்து, ஏதோ கூரையைப் பிய்த்துக்கொண்டு காதலி வந்துவிடுவார் என நான் ஏகாந்தமாய்க் கூரையைப் பார்த்துக் கொடுத்த போஸை பதிவுசெய்திருந்தால் ஒரு  நல்ல குறும்படம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைத்திருக்கும். கனடாவிற்கு விமானம் ஏறியபோது கூட என்னுடைய இலட்சியங்களில் ஒன்றாய், வந்து இறங்கியவுடன் 'ஆசை' படம் பார்ப்பதும் இருந்திருக்கிறது. ஆனால் ராகுவிற்கும் கேதுவிற்கும் உள்ள உறவைப் போல பாடல்களுக்கும் அஜித்தின் ஆடலிற்கும் இருக்கும் தொடர்பைப் பற்றி நாமெல்லோரும் அறிவோம் என்பதால் மேலே எதும் கூறத்தேவையில்லை.

நண்பன் விபத்தில் மோசமாய்ச் சிக்கி கோமாவிற்குள் இருந்தாலும் எப்படியும் தப்பிவிடுவான் என நம்பிக்கொண்டிருந்தேன். தமிழ்த்திரைப்பட விழாவில்  critic award  கொடுப்பதற்காய் நடுவர்களில் ஒருவராய்ப் படங்களை அரங்கில் பார்த்துக்கொண்டிருந்தபோது நண்பன் என்றென்றைக்குமாய் எங்களை விட்டுப்போய்விட்டான் என்ற செய்தி வந்தது. என் வயதொத்த அவனின் இழப்பென்பது, எனக்கு முன்னும் மரணம் அருகில் நின்றுகொண்டிருக்கின்றது என்பதை நினைவுபடுத்த வந்த அச்சம் சொல்லிமாளாது. எப்போதும் நிகழலாம் மரணம், அதற்குள் உனக்குப் பிரியமானவர்களுடன் நேசத்துடன் இரு என நண்பன் சொல்லாமற் சொல்லிச் சென்றிருந்தான்.

அவனை நினைத்துத்தான்.... 'அகாலம்' என்ற கவிதையை எழுதினேன்.

நாள்குறிக்கப்பட்ட மரணத்தை
எப்படியெதிர்கொள்வதென
மழையுமிருளும் மூர்க்கமாய்ப்போரிடுகையில்
பூங்கா இருக்கையிலமர்ந்து யோசிக்குமொருவன்
நடக்கத்தொடங்குகின்றான் நூலகவாசலைநோக்கி
எல்லாப் புத்தகங்களும்
மரணம் நிகழ்வதற்கான சாத்தியங்களை எதிர்வுகூறுகின்றதே தவிர
இழப்பை ஆற்றுவதற்கான கதவுகளை
இறுக்கச்சாத்தியிருக்கும் சலிப்பில் புரட்டத்தொடங்குகின்றான்
தற்கொலைகளால் நிரப்பப்பட்ட தொகுப்பை.
சில்வியா பிளாத்தின் கவிதையோடு
விரியுமொரு தாளில்
உலர்ந்துபோய்க்கிடந்த பெயர்தெரியாப்பூச்சியொன்றை
இவன் உற்றுநோக்கியபொழுதில்தான்
நண்பனின் வாசனை உதிர்ந்திருக்கவேண்டும்
தனிமை இருகரங்கொண்டு தோளிலழுத்த
துயரினில் மூழ்கி விறைத்துக்கொண்டிருக்கும் இரவை
சிறுவனாயிருப்பின்
அம்மாவின் முதுகின்பின் முடங்கிப்படுத்தாவதுகடந்துபோயிருக்கலாம்
'என்னைவிட்டுபோயிட்டானடா' எனஆஸ்பத்திரி ப்ளோரில்
பதறியோடிவந்து விரல்நடுங்கும் காதலிக்கு
ஆறுதல்கூற வார்த்தையில்லா மொழியின் வெறுமை
மூளை சிதைந்து
வடிந்துகொண்டிருந்த நண்பனின் குருதியாய்
இவனில் பரவ
கள்ளிச்செடிகளில் தேன்குடித்து
பூவிலமர்ந்த தும்பிகளை
துரத்தியோடிய சிறுவயதுநினைவுகள்
சட்டமிட்ட ஓவியமாய் உறைந்துபோகின்றது.

ஊருமில்லை; பால்யம் விரிந்த ஒழுங்கைகளுமில்லை;
இனி நீயுமில்லை.

-------------

ப்படி ஒரு செப்ரெம்பரில் இன்னொரு நண்பனின் இழப்பும் நிகழ்ந்தது. நண்பரொருவரின் உறவினரை வைத்தியசாலைக்குப் பார்க்கப் போனபோதுதான் ஈழநாதனின் அகால மரணத்தை அறிய நேர்ந்தது. நம்பவே முடியாத ஒரு மரணமது. அதை உறுதிப்படுத்தும் ஒவ்வொருகணமும் அது ஈழநாதனாய் இருக்கக்கூடாதென மனம் சொல்லிக்கொண்டிருந்தது. ஆம், நண்பர்களே இறுதியில் முப்பது வயதுகளிலே நம் அருமையான நண்பனை நாமிழந்தோம்.2005/2006 காலப்பகுதியை என் வலைப்பதிவுகளில் உற்சாகமானதும் மறக்கமுடியாததுமான காலம் என நினைத்துக்கொள்வதுண்டு. தீவிர வாசிப்பில் அக்கறையும் அதேசமயம் நகைச்சுவையாகவும் உரையாடக்கூடிய அற்புதமான பல நண்பர்களைக் கண்டெடுத்திருக்கின்றேன். ரொறொண்டாவில் வலைப்பதிவு சந்திப்பு, அதன் நீட்சியில் அமெரிக்காவில் பெயரிலி என்கின்ற இரமணியைச் சந்தித்து அங்கு கார்த்திக், சுந்தரவடிவேல் போன்றவர்கள் வந்ததென உண்மையிலேயே அழகிய வலைப்பதிவுக்காலமேதான். இந்த நண்பர்களின் உற்சாகமே எனது முதற்கவிதைத் தொகுப்பான 'நாடற்றவனின் குறிப்புகள்' அச்சிடுவதற்கு உந்துசக்தியாகவும் இருந்துமிருக்கின்றது.

ஈழநாதனின் வலைப்பதிவை ஏற்கனவே வாசித்திருந்தாலும், ஈழநாதனை மதிதான் முறையாக எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கவேண்டும். அவரையும் என்னைப் போலவே வீட்டில் 'இளங்கோ' என்றழைப்பார்கள் என்பது இன்னும்  நெருக்கத்தைத் தந்திருந்தது. அவர் சேகரித்த/சேகரிக்க விரும்புகின்ற புத்தகங்கள்/திரைப்படங்களின் பட்டியலை பகிர்ந்துகொள்வதுவரை நட்பு நீண்டிருக்கின்றது.கடந்தகாலத்து என் பதிவுகளில் ஈழநாதன் எழுதியிருக்கும் பின்னூட்டங்களை வாசிக்கும் ஒவ்வொரு பொழுதும் அவரின் நினைவுகள் எனக்குள் வழிந்து பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. மைக்கல் ஒண்டாச்சியில் எனக்கு பெருவிருப்பு இருப்பதை அறிந்த ஈழநாதன் ஓரிடத்தில் இப்படி எழுதியிருப்பார் 'மைக்கல் ஒண்டாச்சி புத்தகம் எழுதினால் அதுக்கு டிசே விமர்சனம் எழுதுவார் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.' அவ்வளவுக்கு என்னைக் கூர்ந்து கவனித்த ஒரு நண்பர்.

நூலகம் என்ற மாபெரும் கனவுத்திட்டத்தின் முதற்பங்களிப்பார்களில் ஒருவர் மட்டுமில்லை பல விடயங்களைச் செய்ய கனவுகள் கொண்டிருந்தவர் என்பதை அவரின் மறைவின்போது நண்பர்கள் எழுதிய பதிவுகள் சாட்சி சொல்கின்றன.இன்று ஈழநாதன் இல்லாது ஒரு வருடம் கழிகின்றபோதும் அவர் இன்றில்லையென்பதை நம்பவே மனம் மறுக்கிறது. எத்தனை மனிதர்களை நம் வாழ்வில் சந்திக்கின்றோம், ஆனால் சிலர் மட்டும் நம்மில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றார்கள்  ஏன் என்பதை நம்மால் அவ்வளவு எளிதில் அறிந்துகொள்ளமுடிவதில்லை. இத்தனைக்கும் ஈழநாதனை நான் நேரில் ஒருமுறை சந்தித்ததோ அல்லது தொலைபேசியில் கூட உரையாடியதோதில்லை. ஆனால் ஏன் அவரின் இழப்பு எனக்குள் பெரும் வெற்றிடத்தை உருவாக்கிறதெனத் தெரியவில்லை.

சிலவேளைகளில் என்னைப் போல விருப்புக்களும், கனவுகளும் கொண்ட ஒருவர்தான் ஈழநாதன் என்பதால்தானோ தெரியவில்லை. அவரின் இழப்பு, என் கனவுகளும் கூட சட்டென்று ஓரிடத்தில் அரைகுறையாக முடிந்துவிடக்கூடுமென்பதைத்தான் நினைவுபடுத்துகிறதோ நானறியேன்.

இலையுதிர்க்காலம் மரங்கள் உதிர்கின்றபோது பெரும் வெறுமை மனதில் தோன்றினாலும், அவை இன்னொருபொழுதில் துளிர்க்கும் என நம்பிக்கை கொள்ள முடிகிறது. ஆனால் மனிதர்கள் உதிர்ந்துபோகின்றபோது அவர்களின் நினைவுகள் மட்டுமே நம்மில் எஞ்சுகின்றன. அதைவிட என் சிறுவயது நண்பனுக்கோ அல்லது ஈழநாதனுக்கோ நான் உங்கள் மீது இவ்வளவு நேசத்துடன் இருந்திருக்கின்றேன் என்று அவர்கள் உயிருடன் இருந்த காலங்களில் சொல்லமுடியாமற்போய்விட்டதே என்ற குறுகுறுப்பு நெஞ்செங்கும் பரவவுதைத் தவிர்க்கவும் முடியவில்லை. இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்றுதானே நாமெல்லோரும் தேடிக்கொண்டிருக்கின்றோம். என்றைக்கோ ஒருநாள் நாமெல்லோரும் இந்த இலைகளைப் போல சலனமற்று உதிர்ந்து போகப்போகின்றோம் என்பது தெரிந்தாலும், ஏன் இழப்புக்கள் இவ்வளவு துயருடையதாக இருக்கின்றது. அவற்றை அவ்வளவு எளிதாய்க் கடந்துபோக முடியாதிருக்கின்றது? நாம் என்றுமே பிறர் மீது பிரியம் வைக்க ஆசைப்படும் எளிய மனிதர்கள் போலும். அதுவே நம்மைக் கதகதப்பாக்கி வாழ்வை சலிப்பின்றி வாழ வைக்கும்  என்று நினைப்பவர்கள் போலும். ஆகவேதான் நாம் பிரியம் வைக்கும் மனிதர்கள் இல்லாமற்போகும்போது நம்மில் ஒருபகுதியை இழப்பதாய் உணர்கிறோம் போலும்.

ஆளுமைகள் மறையும் போதுமட்டுமல்ல 'காற்றில் கலந்த பேரோசை' . நமக்குப் பிடித்தமான பிரியமான மனிதர்கள் கரைந்துபோகும்போது அது கூட நமக்குக் 'காற்றில் கலந்த பேரோசை'தான் அல்லவா?

(Sep,17, ,2013)

தமிழ்ப் பெண்புலி (Tamil Tigress)

Saturday, April 12, 2014


ருவர் ஈழத்தில் இயக்கமொன்றில் இணைந்து போராடியதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம். முக்கியமாய் போர் உக்கிரமாய் நடைபெறும் பிரதேசங்களில் -போராடத்தில் இணைந்துகொள்ள- புறக்காரணிகள் இன்னும் அதிக நெருக்கடிகளைக் கொடுக்குமென்பதை நாமனைவரும் அறிவோம். எமது இயக்கங்களில் பலர் பெருந்தொகையாய்ச் சேர 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுச் சம்பவமும், 81 யாழ் நூலக எரிப்பும், 83 ஜூலைக் கலவரமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவையாகும். ஆனால் யாழ் சமூகத்தில் அவ்வளவு ஒட்டமுடியாத மற்றும் உயரதரவர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஏன் இயக்கத்தில் இணைந்து கொள்கிறார் என்பது நம் போராட்ட வரலாற்றைக் கற்றுக் கொள்வோருக்குச் சற்று வியப்பாக இருக்கலாம் தமிழ் பெண் புலி(Tamil Tigress) என்கின்ற நினைவுகளின் தொகுப்பை எழுதிய நிரோமி தன்னை மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவராய்க் கூறிக்கொண்டாலும், அவர் விபரிக்கும் யாழ்ப்பாண வாழ்க்கையை வைத்து, அவர் யாழின் உயரதர வர்க்கத்தைச் சேர்ந்தவரென எவரும் எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

போரின் நிமித்தம் மூடுண்ட பிரதேசங்களில் பிறந்து வளர்ந்த தலைமுறையில் அநேகர் போரன்றி வேறு வாழ்வில்லையெனவே நம்பிக் கொண்டிருந்திருப்பார்கள்.  அவர்கள் ஒவ்வொரு நாளும் போருக்குள்ளிலிருந்து எப்பிடித் தப்புவதென்பதைப் பற்றியே நிறைய யோசித்தபடி நாட்களைக் கழித்துமிருக்கவும் கூடும்.. ஆனால் நிரோமி மலையகத்தில் -நோர்ட்டன் பிரிஜ்டில்- வாழ்ந்தபோது அவர் நெருங்கிப் பழகியது சிங்கள மற்றும் பறங்கிய சமூகங்களுடனாகும். மேலும் அவர் சிங்கள் இராணுவ முற்றுகையோ ஆதிக்கமோ அவ்வளவு இல்லாத பகுதியில் வாழ்ந்தும் இருக்கின்றார். அதாவது அவரது சிறுபராயம் அவ்வளவு பதற்றமில்லாத சூழலிலேயே கழிந்திருக்கின்றது என்பதை நாமறிய முடியும் என்பதோடு -பலருக்கு வாய்க்காத- பல்லினச் சமூகங்களோடு வாழும் சூழ்நிலையும் அவருக்கு வாய்த்திருக்கின்றது. அப்படியெனில் ஏன் நிரோமி பிற்காலத்தில் இயக்கத்தில் சேருகின்றார்?

உண்மையில் நமது இயக்கங்களின் வரலாற்றை இன்று அலசுவோர் இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஓடுக்குமுறை என்பது வடக்கு கிழக்கு தமிழ் மக்களினது பிரச்சினை மட்டுமே என்பதோடு அநேகம் சுருக்கிவிடுவர். அதிலும் முக்கியமாய் இன்றையகாலத்தில் இலங்கை அரசு சார்பாய் இயங்க விழைவோர் இன்னும் குறுக்கி யாழ்ப்பாணியத்தின் பிரச்சினையென எளிய சூத்திரமாக்கி விடுவர். உண்மையில் இது வடக்கு மற்றும் கிழக்கு மக்களினது பிரச்சினை மட்டுந்தானா?  தமிழ் பேசும் அனைத்துச் சமூகங்களினதும் பிரச்சினை இல்லையா? யாழ்ப்பாணிகள் இந்தப் போராட்டத்தின் திசையை சிதறடித்தார்கள்/வீழ்ச்சியடையச் செய்தார்கள் என்கிற விமர்சனத்தை வேண்டுமானால் நாம் முன்வைக்கலாம். ஆனால் இனப்பிரச்சினையை யாழ்ப்பாணிகளின் பிரச்சினையாக மட்டும் சுருக்கிவிடும்போது பிறரின் போராட்டத்திற்கான வகிபாகத்தை நாம் மறுத்துவிடுபவர்களாய் மாறிவிடும் அபாயமுண்டு. மேலும் யாழ்ப்பாணத்தவர்கள் எதிர்கொண்ட/சந்தித்த பிரச்சினைகளுக்கு ஒரு தனிப்பட்ட வரலாறு இருப்பதுபோல, பிற மாவட்டங்களிலுள்ள மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கும் தனித்துவமான வடிவங்கள் இருப்பதையும், அவர்கள் அவற்றைத் தமது சூழலுக்கு ஏற்ப எதிர்கொண்டதையும் நாம் கவனித்தாக வேண்டும்.

மலையகத் தமிழர்கள் பெரும்பான்மை சமூகத்தால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதைப் பார்க்கையில் நிரோமிக்கு தன் தமிழ் சார்ந்த அடையாளம் நினைவுக்கு வருகின்றது. அதுவரை தன்னையொரு சிறிலங்கரெனவே உணரும் அவர் தன்னையொரு தமிழராகப் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகின்றார். மேலும் 1977 கலவரம், தமிழர் என்ற அடையாளத்தை இன்னும் தீவிர அரசியல் சொல்லாடலாக மாற்ற, இலங்கையில் அரசியல் சூழ்நிலைகள் மாற்றமடைகின்றன. 1979ல் நிரோமி மலையகத்திலிருந்து பாதுகாப்பு நிமித்தம் யாழ் நகரை வந்தடைகின்றார்.

.நிரோமியின்  இந்த நினைவுகளின் நூலை (Memoir) வாசிக்கும் ஒருவர்,  நிரோமி என்னும் ஒருவரின் வாழ்வை முன்வைத்து, நமது போராட்டத்தை விளங்கிக்கொள்வது என்பதே எவ்வளவு சிக்கலும் ஆழமும் நிறைந்ததென்பதைப் புரிந்து கொள்ள முடியும். நிரோமியின் வாழ்வை நாம் ஒரு Case Study ஆகச் செய்தால் கூட அது இன்னும் வித்தியாசமான பார்வைகளை நம் போராட்டம் குறித்து தரவும் கூடும். எனெனில் நிரோமி...

(1) தன் சிறுவயதில் பல்லினச்சமூகங்களோடு நெருங்கிப் பழகியவர்
(2) மத்திய(உயர்தர) வர்க்கத்தைச் சேரந்தவர்
(3) சமூகத்தில் இரண்டாம் பாலினத்தவராக -பெண்ணாக- இருப்பவர்
(4) புலிகளில் சேரும்போது புலிகள் தம்மோடு போராடப்போன இயக்கங்களை அழித்தவர்கள் என்பதை ஏலவே அறிகின்றவர்
(5) அதையும் தாண்டி சிங்களப் பேரினவாதத்தோடு போராடி தனித்தமிழீழம் பெறுவதே சுதந்திரத்திற்கான வழியென நினைத்தவர்
(6) எந்த எதிரியோடு போராடவேண்டுமெனப் போனாரோ அதனோடு போராட முடியாது இன்னொரு இராணுவமான இந்தியா இராணுவத்தோடு போராடியவர்
(7) புலிகள் தம் சகோதர இயக்கங்களை அழித்ததை அறிந்தவர் மட்டுமில்லை, புலிகள் இயக்கத்தின் உள்ளே நிகழ்ந்த கொலைகளையும் அறிகின்றவர்
(8) தன்னோடு இயக்கத்தில் சேர்ந்த தன் நெருங்கிய தோழியை தன் கண்முன்னே இந்திய இராணுவத்துடனான மோதலில் பலிகொடுத்ததும் புலிகள் தான் நினைத்துச் சென்ற இயக்கமல்ல என்வும் உணருகின்ற காலகட்டத்தில் இயக்கத்தை விட்டு வெளியேறுகின்றவர்.
(8) புலிகளை விட்டு வெளியேறப்போகின்றார் எனத் துண்டு கொடுத்ததும், புலிகள் நிரோமியை அவரின் பெற்றோரோடு இணையும்வரை அவரைப் பத்திரமாக வைத்துக் கையளிப்பது.

ஆக, நிரோமி என்கின்ற ஒருவர் -அதுவும் புலிகளில் ஒன்றரை வருடத்திற்கும் குறைவாக இருப்பவரின் வாழ்விலிருந்தே நம் போராட்டம் குறித்து எண்ணற்ற கேள்விகள் எழும்போது, அவற்றிற்கான விடைகளைத் தேடுவதென்பதே சிக்கலாக இருக்கும்போது நமது முப்பதாண்டு கால் ஆயுதப் போராட்ட வாழ்க்கையைப் புரிந்துகொள்ள நமது நிறையக் காலம் தேவைப்படும் என்பதை நம்மில் பலர் மறந்துவிடுகின்றோம். ஆகவேதான் எழுந்தமானமாக, நம் தனிப்பட்ட விருப்பு சார்ந்து எழுத விழைகிறோம். அவற்றையே நம் போராட்டத்தின்/இயக்கங்களின் வரலாறு எனவும் தீர்க்கமாய்ச் சொல்லியும் கொள்கிறோம். சிலவேளைகளில் அவ்வாறு சொல்லிக்கொள்வதால் நமது ஆற்றாமையை, காயத்தை, வெறுப்பை நாம் கரைத்து ஆறுதலடையக்கூடும். ஆனால் பலவேளைகளில் அது முடிந்துபோன ஆயுதப் போராட்டம் குறித்த பன்முகப்பார்வைகளைத் தவறவிட்டு, தட்டையாக நகர்ந்துவிடக் கூடிய அபாயமே காணப்படுகிறது.

நிரோமி புலிகளில் சேரப்போகின்ற காலத்திலேயே, இலங்கை இராணுவத்தின் யாழைக் கைப்பற்ற முயல்கின்ற ஓபரேஷ்ன் லிபரேஷன் தொடங்குகின்றது. இலங்கை இராணுவம் நம் ஊர்களுக்குள் புகுந்தால் நம்மைக் கொலை செய்துவிடுவார்கள் என்கிற பயம் மட்டுமில்லை, ஒரு பதின்ம வயதுப் பெண்ணாகவும் நிரோமி இருப்பதால் இராணுவம் பெண்ணுடல் மீது நிக்ழ்த்தப்போகும் வன்முறையும் அவரைப் பயமுறுத்துகின்றது. அத்தோடு இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் பிரஜைகளாய் தமிழர்கள் நடத்தப்படுவதும், நம் சமூகத்தில் பெண்கள் இரண்டாம்பாலினராக ஒடுக்கப்படுவதும், இயக்கத்தில் சேர நிரோமியை நிர்ப்பந்திக்கின்றன. நிரோமி விபரிக்கின்ற பல சம்பவங்களோடு நாம் நம்மைப் பொருத்திப் பார்க்கவும் முடியும். உதாரணமாக எந்நேரமும் யுத்தத்தால் கொலைகளும், அங்க இழப்புக்களும், இடம்பெயர்வுகளும் நிகழ்ந்துகொண்டிருந்தபோது, எப்படியும் ஒருநாள் இராணுவத்தின் கரங்களினால் சாகத்தான் போகின்றோம், ஆகவே இப்படி வீணாய்ச் சாவதைவிட இயக்கத்தில் சேர்ந்து கொஞ்ச இராணுவத்தைக் கொன்றுவிட்டு செத்தால்தான் என்ன என நம்மில் பலர் ஒருகாலத்தில் யோசித்திருப்போம். நிரோமியும் இப்படி யோசிப்பதை பல இடங்களில் எழுதிச் செல்கின்றார். வேறெந்த வெளியுலத் தொடர்புமில்லாது, போருக்குள் வாழ்ந்தவர்களுக்கு இப்படியான உளவியல்நிலைதான் இயல்பென்பதை நாமறியாததுமல்ல.

இவ்வாறாகத்தான் ஒரு தலைமுறை புலிகளை - பேரினவாதத்திற்கெதிராகப் போராடும்-  ஒரேயொரு இயக்கமாக நினைத்துக்கொண்டது.  தன்னை அந்த இயக்கத்திற்காய் -எவ்வித விமர்சனமுமின்றி- முழுமையாக அர்ப்பணித்தும் கொண்டது. ஆகவேதான் புலிகள் எவ்வளவு மூர்க்கமான இயக்கமாயிருந்தாலும் - தாம் நம்பிய கொள்கைகளுக்காய் அர்ப்பணித்துக்கொண்ட பல்லாயிரக்கணக்கான போராளிகளால்தான் - புலிகளால் இவ்வளவு காலத்திற்கு நீண்டகாலத்திற்கு  நின்று தாக்குப் பிடித்திருக்கவும் முடிந்திருக்கின்றது. அதை நிரோமி புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளராயிருந்த திலீபன், அன்றையகால புலிகளின் மாணவர் அமைப்பின்  தலைவராய் இருந்த முரளி போன்றவர்களுடான தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது நம்மால் விளங்கிக்கொள்ள முடிகின்றது. 

மென்மையானவர்களாகவும், எல்லோர் மீதும் அக்கறையுள்ளவர்களாகவும், தாம் சொல்வதைச் செவிமடுப்பவர்களாகவும் இவர்களைப்பற்றி  (இன்னுஞ் சிலர் செங்கமலன்)  நிரோமி கூறும்போது புலிகளின் ஆன்மா என்பது இவர்களைப் போன்ற போராளிகளின் உண்மையான அர்ப்பணிப்புக்களால்தான் கட்டியெழுப்பட்டது என்கின்ற புரிதலுக்கு வந்திருப்போம்.

நிரோமியும் அவரின் நீண்டகால பள்ளித்தோழியான அஜந்தியும் இயக்கத்தில் இணைய முரளியின் காரியாலத்திற்குப் போகும்போது முரளி அவர்களை இணைத்துக்கொள்ள மறுக்கின்றார். இவர்களின் பிடிவாதத்தைக் கண்டு, திலீபனை வோக்கியில் அழைத்து அவருடன் நேரடியாகப் பேச வைக்கின்றார். திலீபன் இவர்களிடம், 'வெளியே நீங்கள் பார்க்கும் இயக்கமல்ல புலிகள், உள்ளே வேறுவிதமானது' என எச்சரிக்கின்றார். அந்த எச்சரிக்கையைப் பல்வேறு விதமாய் நிரோமி புலிகளுக்குள் இருந்த காலங்களில் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதை இந்நூலை வாசிக்கும்போது நாம் அறிந்துகொள்ளலாம்.

நிரோமியின் இந்த நினைவுகளின் பிரதியை முக்கியமாகக் கொள்வதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. இதில் இதுவரை அவ்வளவாய்ப் பதியப்படாத, இயக்கங்களில் பெண்கள் முதன் முதலாய்ச் சேருகின்ற காலகட்டம் விபரமாய்ப் பதிவு செய்யப்படுகின்றது. என்னைப் போன்றவர்கள் பதினமங்களில் இருந்தபோது, ஆண்களைப் போல பெண்களும் இயக்கத்தில் சேருவது ஒரு இயல்பான விடயமாய் இருந்திருக்கின்றது. இதில் பெண்கள் இயக்கத்தில் தொடக்ககா லங்களில் சேரும்போது அவர்கள் பெண்களாய் இருப்பதால் அவர்களுக்கு தம் உடல் சார்ந்தும் புறவெளி சார்ந்தும்  இருக்கின்ற சிக்கல்களை அறிந்து கொள்ள முடிகிறது. நிரோமி போன்ற பெண்கள் மீது சக ஆண்களுக்கு வருகின்ற காதலிலிருந்து, சகோதர வாஞ்சையோடு அவர்களைப் போராட்டக் களங்களிலிருந்து காப்பாற்றுகின்ற நிலைமை வரை  பல விடயங்கள் இதில் வாசிக்கக் கிடைக்கின்றது.

நிரோமி புலிகள் இயக்கத்தில் இருந்த அனுபவங்களைச் சொல்லும்போது சற்று மிகையானதோ என்று தோன்றக்கூடிய சில இடங்களும் இருக்கத்தான் செய்கின்றது. சிலவேளை இன்னொருவிதமாய் அது புலிகளின் -முக்கியமாய் பெண்புலிகளின் - தொடக்ககால கட்டமாய் இருப்பதால் அப்படியிருந்திருக்கவும் கூடும். நிரோமியின் பதிவுகளை வாசிக்கும்போது அநேகமாய் ஈழத்தில் வைத்து முதன்முதலாய் ஆயுதப்பயிற்சி  கொடுக்கப்பட்ட பெண்களின் அணியில் அவர் இருந்திருக்கூடுமென ஊகிக்கின்றேன். அதற்கு முதல் வரை இந்தியாவிலேயே பெண்கள் ஆயுதப்பயிற்சி பெறச் சென்றிருக்கின்றார்கள் என்பதை நாமறிவோம். ஆகவேதான் தென்மராட்சியில் இவர்களின் பயிற்சி முகாமிற்கு பிரபாகரன் வருவதை விபரிப்பதை, நிரோமியை அடையாளம் வைத்து அவர்  சாதாரணமாய் உரையாடுவதை எல்லாம் பார்க்கும்போது சற்று அதிகப்படியானதாக நமக்குத் தோன்றுகின்றது. பெண் புலிகளுக்கான சீரூடைகளிற்கான செலவுக்கு, தானே நேரில் எவ்வளவு வேண்டுமெனக் கேட்டு பணம் கொடுக்கும், மேலும் தேவையெனில் தயக்கமின்றிக் கேட்கலாம் எனச்  சொல்கின்ற பிரபாகரனை நாம் இங்கே அவதானிக்க முடியும். ஆனால் இந்திய இராணுவத்தோடு போர் தொடங்குவதோடு பிரபாகரன் இந்த நூலிலிருந்து காணாமற் போகின்றார். மாத்தையா அந்த இடத்தை 'முதலை' என்ற பட்டப்பெயரோடு எடுத்துக் கொள்ளுகின்றார்.

நிரோமியின் குழுவினருக்கு ஆயுதப்பயிற்சி கொடுக்கப்பட்டபின்,  விரும்பியவர்கள் வீட்டுக்குப் போகலாம் எனப் புலிகள் அனுப்புகின்றனர். நிரோமி வீட்டுக்குத் திரும்புகின்றார்,ஆனால் அதேவேளை அவரது நெருங்கிய தோழியான அஜந்தி மீண்டும் வீட்டுக்குப் போவதைத் தவிர்க்கிறார். இந்த இடத்தில் நிரோமி ஏன் தன் நெருங்கிய தோழியை விட்டுவிட்டு தனியே வீடு திரும்புகிறார் என  வாசிக்கும் ஒருவருக்கு எழும் சந்தேகத்திற்கு நிரோமியால் இந்த நூலில் எந்தப் பகுதியிலும் சரியான காரணத்தைச் சொல்ல  முடியவில்லை. இந்தப் புள்ளியிலிருந்தே, நிரோமியின் இயக்கத்தோடு இணைந்து போராடும் தடுமாற்றம் தொடங்குகிறது.

சிலவேளைகளில் நிரோமியை விட அஜந்திதான் போராடுவதற்கான உண்மையான அர்ப்பணிப்போடு இருந்திருக்கின்றார் என வாசிக்கும் ஒருவர் நினைத்தாலும், தவறாகவும் இருக்காது. மேலும் இன்று அஜந்தி உயிரோடிருந்தால், அவர் சொல்லும்/எழுதும் 'நினைவுகள்' நிச்சயம் நிரோமியைப் போன்றிருக்காதென உறுதிபடக் கூறமுடியும். நிரோமி இங்கே தன்னைப் பற்றி கட்டமைக்கும் விம்பங்கள் பலதை உடைக்கக் கூடியதாய்க் கூட அந்தப் பிரதி இருந்திருக்கவும் கூடும்.

யக்கப் பயிற்சி பெற்று வீட்டுக்குப் போகும் நிரோமி மீண்டும் பாடசாலைக்குப் போக விரும்புகிறார். மிகுந்த கட்டுப்பாடுகளையுடைய பாடசாலை நிர்வாகம் நிரோமியை மீண்டும் பாடசாலையில் சேர்த்துக் கொள்ள மறுக்கிறது. எனினும் புலிகளின் மாணவர் அமைப்புக்குப் பொறுப்பாயிருக்கும் முரளியின் செல்வாக்கால் நிரோமி மீண்டும் பாடசாலையில் சேர்க்கப்படுகிறார்.. பாடசாலைக்குப் போய்க்கொண்டிருந்தாலும், புலிகளின் வாத்திய அணியில் ஒருவராகவும், மாணவர்கள்/புலிகள் இணைந்து யாழில் செய்யும் ஊர்வலங்களில் முன்னணியில் கலந்துகொள்ளும் ஒருவராகவும் அவர் இருக்கின்றார்.

இதே காலத்தில் இந்திய இராணுவம் 'அமைதிப்படை' என்ற பெயருடன் வந்திறங்குகின்றது. புலிகளுக்கு இந்திய இராணுவத்துடன் முறுகல் நிலை வர  நிறைய ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.. மாணவர்கள் பங்குகொள்ளும் போராட்டமொன்றில் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு மனுக்கொடுக்கப்படும்போது முரளி ஆங்கிலம் பேசக்கூடியவர் என்பதால் நிரோமியை முன்னுக்குப் போகச் சொல்கிறார். அந்நிகழ்வு யாழ்ப் பத்திரிகைகளில் படத்துடன் வெளிவர நிரோமிக்கு புலிகள் அமைப்போடு இருக்கும் தொடர்பு பலருக்குத் தெரிய வருகின்றது.

இப்படிச் சம்பவங்களை வரிசைக்கிரமமாய்க் கூறிக்கொண்டிருக்கும்போது, மலையக(இந்திய வம்சாவளி) பின்புலத்திலிருந்து வந்த தாயாரையும் தம்மையும் தகப்பன் வழி உயர்சாதியினர் எப்படி யாழ்ப்பாணத்தில் கீழ்மைப்படுத்துகின்றனர் என்பதையும் நிரோமி விரிவாக எழுதுகின்றார். மேலும் பயிற்சியின் நிமித்தம் யாழ் கோட்டைப் பகுதியில் சென்றிக்கு விடப்படும்போது அங்கே நிற்கும் ஆண்கள் சிலருக்கு அவரோடு முகிழும் காதல் பற்றியும் (அதிலொருவர் நிரோமி இயக்கத்தை விட்டு விலகியபின் கூட அவரைப் பின் தொடர்ந்து வந்தது பற்றியும்) சிறு சிறு சம்பவங்கள் மூலம் கூறுகிறார். அதேவேளை இயக்கத்தில் காதல் தடைசெய்யப்பட்டிருக்கின்றது என்ற எச்சரிக்கையை மீறி இதெல்லாம் நடக்கிறதென்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். நிரோமி சென்றிக்காய் நிற்கும்போது தன் கரங்களில் இருக்கும் துப்பாக்கியும், கழுத்தில் தொங்கும் சயனைட்டும் தனக்கு அதிக பலத்தையும்,  எதற்கு அஞ்சாத மனோநிலையையும் தந்திருக்கிறதெனவும் குறிப்பிடுகிறார்.

திலீபனின் அகிம்சைப் போராட்டமும் ஈற்றில் அவரின் மரணமும், ஈழப்போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வு.  திலீபனின் இழப்போடே பெண்கள் பெருந்தொகையாக புலிகளின் இயக்கத்தில்  போராளிகளாக இணைந்தும் இருக்கின்றனர். அதுவரை 'சுதந்திரப் போராளி'களிலும் இன்னபிற அமைப்புக்களிலும் தலைமறைவாய் இயங்கிய பெண்களை திலீபனின் மரணம் முழுநேரப் போராளிகளாக மாற உந்தித் தள்ளியிருக்கின்றது. திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட  வானதி, கஸ்தூரி போன்றவர்கள் பின்னாளில் சிறந்த படைப்பாளிகளாகவும் மாறிய நிகழ்வுகள் நாமெல்லொரும் ஏற்கனவே அறிந்ததே.

இந்திய இராணுவத்தோடு யுத்தம் எழ, நிரோமி மீண்டும் புலிகளோடு இணைகின்றார். யாழ் பல்கலைக் கழகத்தில் நிலையெடுத்து நிற்கின்ற போராளிகளோடு சண்டைக்கு ஆயத்தமாகின்றார். அஜந்தியைப் போல, அகிலா என்கின்ற போராளியோடும் நிரோமி அதிக நெருக்கமாகின்றார். நிரோமி இயக்கத்தைவிட்டு வெளியேறும்வரை அகிலா அவரது நெருங்கிய தோழியாக இருக்கின்றார் (இவரே ராஜீவ்காந்தியின் கொலையில்  3வது முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டவர், பின்னர் 95 யாழ் முற்றுகை எதிர்த்தாக்குதலில் பலியானவர்). யாழ் வளாகம் கைப்பற்றப்பட புலிகள் சிறு சிறு கெரில்லா அணிகள்காகப் பிரிக்கப்பட்டு தலைமறைவு இயக்கமாகின்றனர்.

பெரிய அணிகளாகத் திரிவதைத் தவிர்ப்பதன் நோக்கில் பல போராளிகள் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். நிரோமி, அஜந்தி போன்றவர்களை -அவர்கள் இயக்கத்திலிருப்பவர்கள் என்று அறிந்து இந்திய இராணுவம் அவர்களைத் தேடுவதால்- வீட்டுக்கு அனுப்பப்பட முடியாமல் முரளியின் அணியில் இருக்கின்றார்கள். இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் எல்லாப்பிரதேசங்களிலும் முற்றுகையை இறுக்க, முரளியின் அணியினர் ஒவ்வொரு இடமாய் தப்பியோடுகின்றனர். நீர்வேலியில் இவர்களுக்கும் இந்திய இராணுவத்திற்கும் நேரடி மோதல் நடக்கின்றது. முரளி, அஜந்தி உட்பட இன்னும் பலர் அத்தாக்குதலில் கொல்லப்படுகின்றனர். மீண்டும் கடல்நீரேரி கடந்து காடுகளுக்குள் வாழும் குறுகியகால வாழ்வோடும், அங்கிருந்து இயக்கத்தை விட்டு வெளியேறுவதோடும் நிரோமியின் நினைவுகளின் தொகுப்பு நூல் முடிவடைகின்றது. நிரோமி நேரடியாக இயக்கத்தோடு களத்தில் நின்றது எனப்பார்த்தால் ஆறு மாதங்களுக்கும் குறைவானது என்று வாசிக்கும் நாமனைவரும் எளிதாக அறிவோம்.

ந்த நூலில் முக்கிய பகுதிகளில் ஒன்றாய் நான் மதிப்பிடுவது, இந்திய இராணுவ காலத்தில் புலிகள் கெரில்லா அணியாக இயங்கிய காலங்களைப் பதிவு செய்திருப்பது என்பது.  இந்திய இராணுவ காலத்தில் சிறுவனாய் இருந்த என்னைப் போன்றவர்களும் அல்லது இயக்கத்தோடு நேரடியாகச் சம்பந்தப்படாதவர்களும், ஒழுங்கைகளில் அவ்வப்போது வந்துபோகும் போராளிகளை மட்டும் அநேகம் அறிந்திருப்போம். ஆனால் அவர்களின் 'ஒருநாள் உயிர் தப்பியிருக்கும் வாழ்வு' என்பதே எவ்வளவு நெடிய போராட்டம் என்பதை இந்நூலை வாசிக்கும்போது விரிவாக அறியமுடிகிறது. மேலும் உதிரப்பெருக்கின்போது ஒழுங்கான மாற்றுடைகளில்லாது தவிர்க்கும் பெண்போராளிகளின்  கடினவாழ்வையெல்லாம் நாம் வாசிக்கும்போது நாமறியாத் அல்லது நாமறிய விரும்பாத தடைகளையெல்லாம் பெண் போராளிகள் தாண்டவேண்டியிருக்கின்றது என்றறிகிறபோது நெகிழ்வே ஏற்படுகின்றது. அதுபோலவே வன்னிக்காட்டுக்குள் முகாம் அமைத்து காட்டு விலங்குகளுக்கும், உடல் நோய்களுக்கும், அவ்வப்போது முகாங்களைத் தாக்கும் இந்திய இராணுவத்திற்கும் எதிராகத் தப்பிப் பிழைப்பது பற்றியும் இந்நூலில் விபரிக்கப்பட்டிருக்கின்றது.

நிரோமி போராட்டத்தை விட்டு விலகியது பற்றி தெளிவாய் ஒரு காரணமே வைக்கப்படுகின்றது. புலிகளில் இரு போராளிகள் காதலிப்பதை அறிந்து மாத்தையா ஆண் போராளியை பலரின்  முன்னிலையில் 'மண்டையில்' போடுகிறார். அதுவே இயக்கத்தைவிட்டு விலத்த வைத்ததென நிரோமி எழுதுகிறார். ஆனால் வாசிக்கும் நமக்கு இந்த இடத்தில் குழப்பம் வருகின்றது.

நிரோமி புலிகள் ஏனைய இயக்கங்களை அழித்தது தெரிந்தே புலிகளில் சேருகின்றார். இயக்கத்தில் இருக்கும்போதே புலிகளின் மனிதவுரிமை மீற்ல்கள் பற்றியும் அறிகிறார். அப்போதெல்லாம் இயக்கத்தை விட்டு விலக நினைக்காதவர் - தமிழீழம் பெறுவதே இலககென நினைத்தவர் - ஒரு கொலையோடு மட்டும் ஏன் விலகுகின்றார் என்பது சற்று யோசிக்கவேண்டிய விடயம். சிலவேளைகளில் பல்வேறு காரணங்கள் இருந்து, இந்தக் கொலையோடு திரண்டு வந்து விலத்த வைத்திருக்கலாம். ஒரு பக்கம் புலிகள் தம் எதிரிகளையும் துரோகிகளையும் கண்மூடித்திறப்பதற்குள் போட்டுத்தள்ளுபவர்களாக இருப்பினும் நிரோமி இயக்கத்தை விட்டு விலகப்போகின்றேன் என்றதும் உடனே அவரைப் போக அனுமதிக்கின்றனர். காட்டுக்கு வெளியே இன்னொரு இரகசிய இடத்தில் அவரது தாயார் வந்து பொறுப்பெடுக்கும்வரை அவரைப் பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர் என்பதையும் கவனித்தாக வேண்டும்.

நிரோமியின் இந்த நினைவுகளின் தொகுப்பில் வரும் அனுபவங்கள் போலியானது என்கின்ற சில குரல்களைக் கேட்டுக்கொண்டே இதை வாசித்திருக்கின்றேன். இந்நூலை நிதானமாக வாசிக்கும் ஒருவர் -தகவல்கள் சில இடங்களில் பிழையாக இருப்பினும்- அந்தக் காலத்தில் புலிகளுக்குள் இருக்காத ஒருவர் இதை எழுதியிருக்கவே முடியாது என்ற முடிவுக்கு எளிதாக வந்துவிடவே செய்வார். சில சம்பவங்களில் உயர்வுநவிற்சியும், வேறு சில இடங்களில் தகவல் பிழைகளும் இருப்பது உண்மையே.

மேலும் இது 20 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தவற்றை எழுதும்போது பல தவறுகள் ஏற்படுவதும் இயல்பானதே.  A Long Way Gone என்கின்ற மிகவும் கவனிப்புப்பெற்ற குழந்தை இராணுவ்த்தினனின் நூலே இன்று போலியென கடுமையான விமர்சனம் வைக்கப்படும்போது இப்படியான விமர்சனங்கள் வருவது விதிவிலக்குமல்ல.  உண்மை என்பது ஒன்றா? என்பதே கேள்விக்குள்ளாக்கப்படும்போது ஒருவர் நூற்றுக்கு நூறு சரியாக எழுதிவிடத்தான் முடியுமா என்ன? . மேலும் இது 'நினைவுகளின் தொகுப்பு', எனவே விடுபடல்களும் மறதியும், தவிர்ப்புக்களும் சாதாரணமாக நிகழக்கூடியதே.

இந்நூலின் கடைசி அத்தியாயத்தில் புலிகளைப் பற்றி மட்டுமின்றி இன்றைய இலங்கையின நிலைமையும் பற்றியும் நிரோமி கொடுக்கும் தகவல்களும், ஆதாரங்களும் ஒரு முக்கியமான அரசியல் அறிக்கையே. அந்தக் கடைசி அத்தியாயம் எப்படி தீவிர புலி ஆதரவாளர்களை கோபப்படுத்த வைக்குமோ அவ்வாறே புலியெதிர்ப்பாளர்களையும் எரிச்சலுறச் செய்யும். ஆனால் போராட்டத்தின் பெயரால் எல்லாச் சுமைகளும் சுமந்த மக்கள் என்கின்ற மூன்றாவது தரப்பும் இருக்கின்றது.. அதைப் பற்றியே நாமின்று நிறையக் கவலை கொள்ளவேண்டியிருக்கின்றது. அந்த அக்கறை இந்நூலை எழுதிய நிரோமியிடம் ஏதோ ஒருவகையில் இருப்பதை இந்நூலை வாசிக்கும்போது நாமும் அறிவோம்.

(Jun 19, 2013)
(நன்றி: 'காலம்' - இதழ் 43, Mar 2014)