கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்
Showing posts with label பத்தி - 'அம்ருதா'. Show all posts
Showing posts with label பத்தி - 'அம்ருதா'. Show all posts

இலங்கையில் தமிழ்ப் பெளத்தம்

Tuesday, November 19, 2024


1.

லங்கையில் எப்போதிருந்து சிங்களப் பெளத்தம் இருந்ததோ அப்போதிருந்தே தமிழ்ப் பெளத்தமும் இருந்தது என்கின்ற ஆய்வுக்கட்டுரைகள் இப்போது நிறைய எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் பெளத்தம் இந்தியாவில் அசோகர் காலத்தில் அவரின் மகனான மகிந்தரால் கொண்டு வரப்பட்டது என்று 'மகாவம்சம்' கூறுகின்றது. மகாவம்சத்தின்படி சிங்கள இனம் விஜயனின் வருகையோடு கி.மு 5ம் நூற்றாண்டில் இலங்கையில் குடியேறியது.  அதன்பிறகு பெளத்தம் கி.மு 3ம் நூற்றாண்டில் மகிந்த தேரரால், அன்று இலங்கை மன்னனாக இருந்த தேவனம்பிய தீசன் காலத்தில் அறிமுகப்படுத்தப்படது.

 

இவ்வாறு
மகாவம்சத்தின் பிரகாரம், இலங்கையில் பெளத்தம் மகிந்ததேரரால் கி.மு 3ம் நூற்றாண்டில் பரப்பப்பட்டது என பொதுச்சூழலில் ஆழமாக விதைக்கப்பட்டாலும் அது அவ்வாறுதான் உண்மையில் நடந்ததா என்பதை நாம் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாம். இன்று பலர் (சிங்கள ஆய்வாளர்கள் உட்பட) பெளத்தம் அசோகரின் காலத்துக்கு முன்னர், புத்தரின் காலத்திலேயே இலங்கைக்கு வந்துவிட்டதெனச் சொல்கின்றார்கள். புத்தரின் ஆளுமை திராவிட மொழிக்குடும்பமான தெலுங்கை (ஆந்திரப் பிரதேசம்) முதலில் அடைந்து நிறையப் பேர் புத்தரைப் பின் தொடரச் செய்கின்றார்கள். அவர்களினூடாக புத்தரும் அவரின் போதனைகளும் தமிழ்நாட்டுக்கு/தமிழுக்கு வந்தடைகின்றது. ஆந்திரா/தமிழ்நாட்டுக்கு வந்த பெளத்தமே இலங்கையை முதலில் வந்தடைந்திருக்கின்றது என்பதை இப்போது பல ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றார்கள்.

 

இப்போது எப்படி தமிழ்ப் பெளத்தம் இலங்கைக்கு வந்தது என்பதைச் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, இது தொடர்பாக வாசித்தபோது சிங்கள ஆய்வாளர்களின் எழுத்தில் உறுத்திய சில புள்ளிகளைப் பார்ப்போம். தமிழ்ப் பெளத்தம் குறித்து பேசுகின்ற பெரும்பாலான சிங்கள ஆய்வாளர்கள் தமிழர்கள் சோழப் படையெடுப்பால்தான் ஆதியில் இலங்கைக்கு வந்தவர்கள் என்று நம்புகின்றார்கள். அதே போல அவ்வாறு படையெடுத்து வந்து இலங்கையைக் கைப்பற்றி அரசாண்ட எல்லாளன் தவிர்ந்த எல்லாத் தமிழ் அரசர்களும் பெளத்தத்தைத் தழுவியவர்கள் என்பதில் உறுதியாய் நிற்கின்றார்கள். ஏனெனில் இலங்கையானது அனுராதபுரத்தை ஆண்டு பாண்டுகாபாயமன்னனில் இருந்து பிரித்தானியர்கள் முற்றுமுழுதாக கைப்பற்றும் காலம்வரை, பெளத்தத்தை தழுவிக்கொண்ட மன்னர்களாலேயே ஆளப்பட்டிருக்கின்றது எனச் சொல்கின்றனர். அதாவது கி.மு 4ம் நூற்றாண்டிலே இலங்கை முற்றுமுழுதான பெளத்த (சிங்கள) அரசாக இருந்திருக்கின்றது என நிரூபிக்க கடுமையாக முயற்சிக்கின்றனர்.

 

அதன் நம்பகத்தன்மை/விதிவிலக்குகள் என்பவற்றை இப்போது ஒருபுறத்தில் வைத்துவிட்டு நாம் இப்போது சில கேள்விகளை எழுப்பிப் பார்க்கலாம். சிங்கள இனம் விஜயனின் வருகையோடு கி.மு 5ம் நூற்றாண்டில் இலங்கையில் ஆரம்பிக்கின்றது என மகாவம்சம் சொல்கின்றது. அப்போது வந்த விஜயனின் மதம் என்னவாக இருந்தது. அதைப் பற்றி ஏன் மகாவம்சம் உள்ளிட்ட சிங்கள ஆய்வாளர்கள் எவரும் பேசுவதில்லை. அது மட்டுமின்றி விஜயன் வந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் பெளத்தம் இலங்கைக்கு வருகின்றது என்று மகாவம்சம் கூறுகின்றது. அந்த இரண்டு நூற்றாண்டுகளில் வாழ்ந்தமக்கள் மதமற்ற நாத்திகர்களாவா இருந்தார்கள்? விஜயன் வருவதற்கு முன்னர் இயக்கர், நாகர் என்பவர்கள் இருந்தார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. நாகர்களின் கல்வெட்டுக்கள் பல, தமிழ்ப் பிரதேசங்களில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் கல்வெட்டுக்கள் தமிழ் (தமிழ்நாட்டில் இருக்கும்) பிராமி எழுத்துக்களோடு ஒத்து வருகின்றது என்பதைப் பல சிங்கள் ஆய்வாளர்களே ஒப்புக்கொள்கின்றனர்.

 

இரண்டாவது விடயம், இலங்கையில் தமிழர்களின் வரவு சோழர்களின் படையெடுப்போடு தொடங்குகின்றது எனறு 'அடித்துக் கூறுகின்ற' எந்தச் சிங்கள ஆய்வாளரும், விஜயன் முதலில் குவேனியை மணந்து அவரைக் கைவிட்டு மணம்புரிந்த பாண்டிய இளவரசியையும், அவரோடு அனுப்பி வைக்கப்பட்ட தமிழர்களைப் பற்றியும் ஏன் பேசுவதில்லை. சிங்களவர்களின் வாதப்படி சொல்வதென்றால் கூட, சோழப் படையெடுப்பால் தமிழர்கள் முதலில் முதலில் இலங்கைக்கு வரவில்லை. சிங்கள இனம் இலங்கைக்கு வந்த கி.மு 5ம் நூற்றாண்டிலேயே நீங்களாகவே தமிழர்களை பாண்டிய இளவரசியை மணமுடிந்ததன் மூலம் இலங்கைக்கு விரும்பி அழைத்துவிட்டீர்கள் அது மறந்துவிட்டதா என நாம் கேட்கலாம். மேலும் ஏற்கனவே பல இடங்களில் சொல்லியது போல,  சிஙகள் இனம் (சிங்கள இனம் மட்டுமில்லை, எந்த இனமும், தமிழர் உட்பட) தூயதல்ல. எனவே இனப்பெருமை பேசுவதில் எவ்வித தர்க்கங்களும் இருக்கப்போவதில்லை எனத்தான் எல்லோருக்கும் பொதுவாகச் சொல்ல வேண்டியிருக்கின்றது. 

 

 

2.

 

லங்கையில் பெளத்தம் பரவியபோது  சிங்களப் பெளத்தம் போல தமிழ்ப் பெளத்தமும் இருந்தது. அது பின்னாளில் அழிந்துபோனதும், பிரித்தானியர்கள் வரமுன்னரே தமிழர்கள் சைவத்தையும், சிங்களவர்கள் பெளத்தத்தையும் தமக்குரிய மதங்களாகக் கொண்டு பிரிவினைகளை உருவாக்கிவிட்டார்கள் என்பது தெளிவு.  பிறகான காலத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியுள்ள காலனித்துவவாதிகளான ஆங்கிலேயர்களால் கச்சிதமாக இன்னும் இவ்விரு இனங்களிடையே இன/மதத்தை முன்வைத்து வேற்றுமைகளை உருவாக்கவும்  முடிந்திருக்கின்றது.

 

இலங்கையில் இன்று தேரவாத பெளத்தமே அதிகம் ஆதிக்கம் செய்கின்றது. மகாசேன மன்னன் காலத்தில் அதில் பிரிவினை வந்து அபயகிரி விகாரைப் பிரிவு தோன்றுகின்றது. தமிழ்ப் பெளத்தம் தேரவாத பெளத்தமாகவும், மகாயான பெளத்தமாகவும் இரண்டு பிரிவுகளையும் தனக்குள் கொண்டிருந்திருக்கின்றது. தொடக்கத்தில் தமிழகத்தில் ஊடு பரவிய தமிழ்ப்பெளத்தம் (யாழ்ப்பாணம்,மன்னர், நெடுந்தீவு போன்றவை தமிழ்நாட்டுக்கு மிக அண்மையாக இருந்தமையால்) சிங்களப் பெளத்தத்தின் எந்தச் செல்வாக்குக்கும் உட்படாதிருக்கச் சாத்தியம் அதிகம் இருக்கின்றது. மகிந்தரின் வருகையால் பரவிய தேரவாத பெளத்தம் பின்னர் தமிழ்ப் பெளத்ததிலும் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம். ஒருவகையில் ஒரு நாட்டின் மன்னர் முழுமையாக மதம் மாறும்போது அந்த நாடும் முழுதாய் ஒரு தனி மதத்துக்குரிய நிலப்பரப்பாக மாறுவதும் இயல்பானதென எடுத்துக் கொள்ளலாம்.

 

அவ்வாறு பல்வேறு நாடுகளில் பல மன்னர்கள் மதம் மாறியிருக்கின்றனர். ஏன் டொச்சுக்காரர் வந்தபோது கொழும்பு மன்னனாகிய தர்ம்பாலா கத்தோலிக்கத்துக்கு மதம் மாறி தன் பெயரையும் அவரின் மனைவிகளையும் டொனா இஸபெல்லா, டொனா மார்கடீட்டா என மாற்றவில்லையா? இவ்வாறெல்லாம்,  எதிரியுடன் போரிட்டு வெல்ல முடியாதபோது மதம் மாறுகின்ற சிங்கள் மன்னர்களை, இன்னமும் தமக்குரியவர்களாகக் கொள்ளும் சிங்களப் பேரினவாதிகள், எல்லாள மன்னனை அதுவும் முழு இலங்கையை 44 ஆண்டுகள் சுமூகமாக எந்தப் பிளவுகளும் வராது ஆண்ட ஒருவனை, அந்நியராகவும், படையெடுப்பாளராகவுமே தமது நினைவுகளிலும், எழுத்துக்களிலும் முன்வைத்தபடி இருக்கின்றார்கள்  என்பதுதான் வியப்பானது. அத்துடன் எல்லாளனுக்கு முன்னர் இலங்கையை அரசாண்ட சேனன்/குத்திகன், ஏழு வணிகர்கள் (சில சிங்கள ஆய்வாளர்களின்படி ஏழு குண்டர்கள்) போன்ற மன்னர்கள் தமிழர்கள் என்றாலும், அவர்கள் பெளத்தத்தைத் தழுவாமல் ஒருபோதும் இலங்கையை ஆண்டிருக்க முடியாதென ஒற்றைக்காலில் நிற்கின்றனர்.

 

ஒருவகையில் அதுவும் நல்லதுதான். சிங்களப் பெளத்தம் என்கின்ற ஒற்றை அதிகாரத்தை (Hegemony) இது தகர்க்க உதவும் என்பதால், ஆம் அவர்கள் பெளத்தர்கள்தான், ஆனால் அவர்கள் தழுவிய பெளத்தம் உங்களதல்ல, அது தமிழ்ப் பெளத்த மரபில் வந்ததெனச் சொல்லலாம். மற்றும்படி இப்படியான வம்புகளுக்கு எதிர் ம்புகளை நாம் பேசுவதைத் தவிர்த்து, ஆம், எங்களிடையே தமிழ்ப் பெளத்தம் இருந்தது ஆதாரபூர்வமானது என்று நிரூபிக்க நம்மிடம்  உள்ள ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.

 

யாழ்ப்பாணத்தில் கந்தரோடையில் இன்று சிங்களவர்கள் தமது சிங்களப் பெளத்தம் என்று உரிமை கொள்கின்ற பெளத்தம் தமிழ்ப் பெளத்ததிற்கு உரியது. எனினும் அங்கு இருக்கும் சிறு விகாரைகள் போன்றவைகள் இலங்கையின் எந்தப் பகுதியோடும் தொடர்புடையது அல்ல. அவ்வாறு எந்தக் கட்டட அமைப்பும் இலங்கையில் இல்லை. ஆய்வாளர்களின் கூற்றுப்படி இது தெலுங்குப் பகுதியில் இருக்கும் கட்டட அமைப்பை நிகர்த்தது. அதேபோன்று வல்லிபுரக் கோயில் பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட செப்புப்பட்டயத்தில் செதுக்கப்பட்டவையும் தெலுங்குப் பகுதியைச் சேர்ந்தது. அது யாழ்ப்பாணத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எந்த பெளத்தக் கல்வெட்டு எழுத்துக்களோடும் தொடர்புபடாதவை. வல்லிபுரத்தில் அகழ்ந்தெடுக்கப்ப்ட்ட அழகான புத்தர் சிலையை அன்றைய பிரித்தானிய அரசு தாய்லாந்து மன்னருக்கு அனுப்பி வைத்தும் இருந்தது.

 

ஒருவகையில் வல்லிபுரம் ஆழ்வார் கோயில், தமிழ்ப்பெளத்த ஆலயத்திலிருந்து பின்னாளில் எழுந்திருக்கவே சாத்தியம் அதிகமிருக்கின்றது. இன்றைக்கு ஆதாரபூர்வமாக யாழில் ஒன்பதுக்கு மேற்பட்ட புத்த மடாலயங்கள் இருந்ததெனனவும், அவற்றில் நான்கு பின்னர் அய்யனார் கோயில்களாக மாற்றப்பட்டன எனவும் சொல்கின்றனர்.

 

நான் அறிந்து யாழில் போரின் நிமித்தம் ஒவ்வோரு ஊர் ஊராக அகதியாக அலைந்தபோது சுன்னாகத்தில் (அல்லது மல்லாகத்தில்) ஒரு அய்யனார் கோயில் வயலில் நடுவில் இருந்தமை ஞாபகத்திலுண்டு. சுன்னாகம்/மல்லாகம்/தெல்லிப்பளை போன்ற இடங்களில் தமிழ்ப் பெளத்தம் ஒருகாலத்தில் தளைத்திருந்தமை குறிப்பிடப்படுகின்றது. அவ்வாறே நெடுந்தீவில் வெடியரசன் கோட்டைக்கு அருகிலும் பெளத்த மடாலயம் இருந்திருக்கின்றது. அதற்கான அடித்தளம் நமக்கு அது ஒரு பெளத்த ஆலயம் என்பதை எளிதாகக் காட்டி விடுகின்றது. ஒருவகையில் நாகதீபம்/மணிபல்லவம் என்று பழங்காலத்தில் குறிப்பிடும் தீவு நயினாதீவு என்று தமிழர்க்கும்/சிங்களவர்க்கும் பொதுவானநம்பிக்கையாகஇருக்கின்றது. ஆனால் ஆதாரங்களை வைத்துப் பார்த்தால் அப்படி நாகதீபமாய் இருக்க நெடுந்தீவே பெரும்பாலும் சாத்தியமென பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் போன்றவர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழகத்தோடு மிக அருகில் மற்ற இடங்களைவிட மிக அருகில் இருப்பது நெடுந்தீவேயாகும். எனவே அவ்வாறிருக்கச் சாத்தியமும் அதிகம்.

 

இன்று இலங்கையில் தமிழ்ப் பெளத்தம் பற்றிப் பேச கஷ்டப்படும் சிங்களவர்கள் புத்தகோஷா, புத்த தேரோ, தர்ம்பால வஜ்ஜிரபோதி உள்ளிட்ட பல தமிழ்ப் பெளத்த அறிஞர்கள் தமிழகத்தில் இருந்து வந்து இலங்கையில் தங்கி கற்பித்ததை மறந்து விடுகின்றார்கள். ஒருவகையில் இன்று தேரவாத பெளத்தம் இலங்கையில் இந்தளவுக்கு வேரூன்றி நிற்பதற்கு தமிழ்ப் பெளத்தரான புத்தகோஷா இலங்கையில் தங்கி நின்று பாளியில் இருந்த பிரதிகளை சிங்கள மொழிக்கு எழுதிக் கொடுத்ததே முக்கிய காரணமாகும். அதுவே 'விசுத்திமகா' (பரிநிர்வாணமடைவதற்கான வழி) என்ற ஒரு முக்கிய பிரதியாக சிங்களவரிடம் இப்போதும் இருக்கின்றது. அத்தோடு எப்போதெல்லாம் இலங்கையில் அரசியல் ஸ்திரமற்று குழப்பம் வந்து விகாரைகளை மன்னர்கள் ஒடுக்குகின்றார்களோ, அப்போதெல்லாம் பெளத்த பிக்குகள் தமிழ்நாட்டில் இருந்த புத்த மடலாயங்களிலேயே தஞ்சம் புகுத்திருக்கின்றார்கள். சிலர் அவ்வாறு தஞ்சமடைந்த காலங்களில் சிங்களத்தில் பெளத்த பிரதிகளைக் கூட எழுதியிருக்கின்றார்கள்.

 

3.

ப்போது மீண்டும் தமிழ்ப் பெளத்தத்திற்கு வருவோம். ஏன் இலங்கையில் தமிழ்ப் பெளத்தம் அழிந்தது என்பதற்கு இரண்டு காரணிகளை முக்கியமாகச் சொல்கின்றார்கள். அனுராதபுரத்தை ஆண்ட சிங்கள மன்னர்கள் தமது அரசியல் அதிகாரத்தை யாழ்ப்பாணம் போன்ற தமிழர் பிரதேசங்களில் பிரயோகிக்க முயன்றமை ஒன்று. மற்றது சிங்கள பெளத்தர்கள் தமிழ்ப் பெளத்தர்களோடு தொடர்பாடலைத் துண்டித்துக் கொண்டமை. அத்தோடு தமிழ்நாட்டில் எப்படி பக்தி இயக்கங்கள் பெளத்தத்தையும், சமணத்தையும் விழுங்கிக் கொண்டனவோ அவ்வாறே அதன் பாதிப்பு தமிழர்கள் இருந்த வடக்கு கிழக்குகளையும் சென்றடைந்தன என்கின்றார்கள். இன்னொருவகையில் இப்படிப் பார்க்கலாம். தமிழ்ப் பெளத்தத்திற்கு பெருமளவில் உதவிகள் சிங்கள மன்னர்களிடம் இருந்து ஒருபோதும் கிடைத்ததில்லை. ஆகவே அது இலங்கையில் இருந்த தமிழ் சிற்றரசர்களையும், தமிழ்நாட்டு மன்னர்களையும், புரவலர்களையும் நம்பியிருந்திருக்கலாம். தமிழ்நாட்டிலே பெளத்தம் தன்னிருப்பை அடையாளமற்று கைவிட்டபோது இலங்கையிலும் தமிழ்ப் பெளத்தம் மறையத்தொடங்கி சைவத்தோடு தன்னிருப்பைக் கரைத்திருக்கலாம்.

 

ஆகவே எப்படி விஜயன் இரண்டாவது மனைவியாக பாண்டிய அரசியை மணந்ததன் முலம் தமிழர்களின் வரவு இலங்கையில் தொடங்கிவிட்டதெனச் சொல்ல சிங்களவர்களின் மகாவம்சமே நமக்கு ஆதாரம் எடுத்துத் தருவதுபோல, சிங்களப் பெளத்தம் மட்டுமில்லை தமிழ்ப் பெளத்தமும் சமாந்திரமாக இலங்கையில் தொடங்கியிருக்கின்றது என்று சொல்வதற்கும் நமக்குப் பல ஆதாரங்கள்  இருக்கின்றன. இதன் மூலம் சிங்களவரோ/தமிழரோ தனிப்பட்டு உரிமைகொள்ள இலங்கை என்கின்றநாடோ, அரச மதமாக சிங்களப் பெளத்தமோ ஒருபோதும் அமைய முடியாது.  இலங்கையில் பிறந்தநம் அனைவருக்கும் இலங்கை என்கின்றநாட்டிலும், இலங்கையின் இறையாண்மையின் முக்கிய பகுதியாககட்டமைக்கப்பட்டிருக்கும் பெளத்தமதத்திலும், சமபங்கிருக்கின்றது என்று உறுதியாக உரையாடல்களை நிகழ்த்த முடியும்.

 

*************

 

(நன்றி: 'அம்ருதா' - கார்த்திகை)

வீழ்ந்து போனவர்களின் ஒலிக்கும் குரல்கள்

Saturday, February 16, 2013



-'வன்னி யுத்தம்' என்கின்ற நேரடிச் சாட்சியின் நூலைப் பற்றிய பதிவு-

1.
யுத்தங்களில் நியாயமாய் நடந்த போர்கள், நியாயமற்று நடந்த போர்கள் என்கின்ற வரலாறே இல்லை. போர் என்பது எப்போதுமே அழிவுகளேயே தரக்கூடியயையே. போர் ஒன்றில் வென்றவர்களாய் இருந்தாலென்ன தோற்றவர்களாய் இருந்தாலென்ன யுத்தத்தின் நினைவுகளிலிருந்து அவ்வளவு எளிதில் எவருமே வெளியேறி விடமுடியாது. வென்றவர்கள் தம் வெற்றிக்களிப்பின் போதையில் அது நிகழ்த்திய அழிவுகளை மறந்தமாதிரி ஒரு நாடகத்தை நிகழ்த்தலாம். ஆனால் அது உண்மையல்ல, ஒரு மாயத் தோற்றம் மட்டுமே. தோற்றவர்கள் இந்த வலிகளோடும் வடுக்களோடும் மிஞ்சியுள்ள காலங்களை வாழத்தான் வேண்டியிருக்கின்றது.  'வன்னி யுத்தம்' என்கின்ற இந்நூல் ஈழத்தில் இறுதியாய் நடந்து முடிந்த ஆயுதப்போராட்டத்தில், ஒரு நேரடிச் சாட்சியாய் முள்ளிவாய்க்கால் முடிவுவரை நின்ற ஒருவரால் எழுதப்பட்டிருக்கின்றது. இவர் ஓர் சாதாரணப் பொதுமகனாகவும், செயற்பாட்டாளராகவும் இருந்ததால் இந்நூல் இதுவரை சொல்லப்படாத புதியதொரு எழுத்துச் சாட்சியமாய் நம் முன்னே வைக்கப்ப்ட்டிருக்கிறது.

ஒரு நிழல் அரசாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வன்னி நிலப்பரப்பு நீண்டகாலமாய் இருந்திருக்கின்றது. மன்னாரிலிருந்து தொடங்கிய இலங்கை இராணுவத்தின் முன்னேற்றம் புலிகளையும் மக்களையும் மிகச் சிறிய நிலப்பரப்ப்பான வட்டுவாகல், புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதியிற்குள் முடக்கி பெரும் அழிவுகளைக் கொணர்ந்ததை அப்பு (புனைபெயர்) நேரடிச் சாட்சியமாய் இருந்து எழுதியிருக்கின்றார். இந்நூலில் தொடக்கப்பகுதியிலும், இடையிலும் அவ்வப்போது வலிந்து குறிப்பிட்ட சிலர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மீது ஒருவகையில் விமர்சனமிருக்கின்றது. அத்தோடு நடந்ததைக் கூறுவதையே முக்கியமாய் எடுத்துக்கொண்ட இந்நூலிற்கு அந்தப் பகுதிகள் அவசியமும் அற்றது. எனெனில் நடந்ததே என்ன என்பது சரியான முறையில் பதியப்படாமல் இருக்கும் காலகட்டத்தில் நடந்ததற்கு இவர்கள்/இவைகள்தான் காரணங்களென அவ்வளவு எளிதில் ஒரு பகுதியினரை மட்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது இன்னும் அபத்தமாகிவிடும் ஆபத்தும் இருக்கிறது. மேலும் நடந்தவற்றை அலசுவதும் ஆராய்வதும்,  அரசியல் ஆய்வாளர்களுக்கும், வரலாற்றாசிரியர்களுக்கும் உரியதே தவிர, இன்னமும் இரத்தத்தின் வர்ணம் காயவோ, இழப்பின் அழுகுரல்கள் ஓயாமல் இருப்பதாகவோ நினைக்கும் ஒருவர் செய்யக்கூடியதல்ல..

நூலை வாசித்து முடிக்கும்போது வரும் வெறுமையையும் விரக்தியையும் எழுத்தில் முன்வைக்கவே முடியாது. ஈழத்தில் இறுதி யுத்தத்தில் நடந்தவற்றை எழுத்தில் ஒருவர் முன்வைக்கும்போது, அதை வாசிக்கும்போதே இவ்வளவு மன உளைச்சல் ஏற்படுகின்றதென்றால், இப்போர் நிகழ்ந்தபோது இறந்துபோனவர்களும், இப்போது மிஞ்சியிருப்பவர்களும் எவ்வளவு துயரங்களை அனுபவித்திருப்பார்கள்/ அனுபவித்துக்கொண்டிருப்பார்கள் என எண்ணிப் பார்த்தாலே நாம் இன்னொரு ஆயுதப்போராட்டம் பற்றிய கதையாடல்களைத் தொடங்கவே மறுதலிப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும்.. அருகில் இருக்கும் மனிதர்கள் கொத்துக் கொத்துக்காய் எறிகணை வீச்சாலும் துப்பாக்கிக் குண்டாலும், விமானக்குண்டு வீச்சாலும் இறந்துகொண்டிருக்கும்போது, இந்த நூலை எழுதிய ஆசிரியர் அடிக்கடி எல்லோருக்கும் நினைவுபடுத்தியபடி இருக்கும் ஒருவிடயம், 'மரணத்தை விட மரண பயந்தான் மிகவும் பயங்கரமானது. எனெனில் மரணம் ஒருபொழுது மட்டும் நிகழக்கூடியது. மரணபயம் அவ்வாறில்லை' என்கிறார். அதே மாதிரித்தான், இந்த யுத்தம் முடிந்தபின் இன்னமும் அதன் வடுக்களோடு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் பற்றி நாம் ஒரு கணம் நினைத்துப் பார்க்கவேண்டும். அவ்வாறு யோசித்தோமானால் -அவர்களின் நிலையைப் புரிந்துகொள்வோமானால்- இன்று எழுந்தமானமாய் கருத்துக்களை உதிர்த்துக்கொண்டோ, யுத்த களத்திலிருந்தவர்களை குற்றவாளிக் கூண்டிலேற்றி இன்னொருமுறை இறக்கும்படியான மனோநிலையை ஏற்படுத்திக்கொண்டோ இருக்கமாட்டோம் என்பது மட்டும் உறுதி.


2.
மனிதர்கள் கண்முன்னே விழுந்து இறக்க இறக்க அதைப் பார்த்துக்கொண்டு தப்பித்தவர்களின் பிறகான வாழ்வு என்பது எவ்வாறு இருக்கும்? இறந்துகொண்டிருக்கும் மனிதர்கள் எழுந்தமானமாய் இறக்கின்றார்கள் என்கின்றபோது எப்படித் தப்பிப் பிழைத்தோம் என்பதே அவர்களுக்குப் பெரும் புதிராகத்தான் இருக்கும். இந்த நூலை எழுதியவர் எறிகணைகள் வீழ்ந்து ஓய்ந்த சொற்ப இடைவெளியில் தரப்பாள் கொட்டகைகளைக் கடந்து போய்க்கொண்டிருக்கின்றார்.  ஒரு கொட்டகையில் அந்தச் சிறிய காலப்பகுதியிற்குள் -சேமிப்பிலிருந்த உணவைப் பகிர்ந்தபடி- ஒரு குடும்பம் சற்றுச் சிரித்துக் கதைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இவ்வளவு அவதியிற்குள்ளும் மனிதர்கள் இன்னமும் சிரிப்பதை மறக்கவில்லையென நினைத்தபடி நடக்கின்றார். இந்நூலின் ஆசிரியர், சற்றுத் தூரம் போயிருப்பார், திடீரரென்று எறிகணையொன்று வீழ்ந்து -சிரித்துச் சாப்பிட்டபடி இருந்த- முழுக்குடும்பமே சிதறிப் பலியாகின்றது. இவ்வாறாக மிகுந்த கொடூரத்துடன் போர் நிகழ்கிறது. இன்னொரு சமயத்தில் இந்தச் நேரடிச் சாட்சியிருக்கும் பதுங்குகுழியிற்கு இவரது நண்பர் வந்து கவனமாக இருக்கும்படி கூறிவிட்டு அந்த நண்பர் தான் பதுங்கியிருந்த பதுங்குகுழிக்குப் போகின்றார். அந்த இடைவெளிக்குள் எறிகணை வீழ்ந்து இவரின் நண்பர் இறந்து போகின்றார். இந்நூல் முழுக்க இப்படிக் கண்ணெதிரே சிதறி இறக்கும் மனிதர்களைப் பற்றியே நிறையக் குறிப்புக்கள் இருக்கின்றன. குழந்தையைப் பற்றியபடி தலை சிதறி இறந்த தாய் முதல், சாப்பிடுவதற்கு உரலில் எதையோ இடித்துக்கொண்டிருந்த சிறுமி தசைகளாகிப் போவது வரை இந்நூலே இரத்தத்தின் சாட்சியாகவே எழுதப்பட்டிருக்கின்றது.  வாசித்து முடிக்கும்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் நாகரீகமானதா என்ற கேள்வியையும், நம் மனச்சாட்சி அதிர்வதையும் ஒருபோதும் நிறுத்தவே முடியாது.

ஆக இவ்வாறான எத்தனையோ அழிவுகளிலிருந்து தப்பி இறுதி யுத்தத்திலிருந்து வெளிவந்திருப்பவர்களின் வாழ்க்கை என்பது எந்த விதிகளினாலும்/நம்பிக்கைகளாலும் சமனப்படுத்திவிடமுடியாது. இவ்வளவு உயிரிழப்புக்களின் பின்னும் ஒருவர் தப்பியிருக்கின்றார் என்றால் அதொரு அதிசயமாய்த்தானிருக்கவேண்டும் என்பது இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணரவே செய்வர். அதே போன்று இது தப்பிவந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளிலிருந்து வந்த ஒருவரினது சாட்சியம் மட்டுமே என்கின்றபோது முழு மக்கள் கூட்டத்தினரும் தம் ஒவ்வொருவரினதும் கதையைச் சொல்ல/எழுதத் தொடங்கினால் நம்மால் அவற்றின் அதிர்வுகளைத் தாங்கவே முடியாதிருக்கக் கூடும்.

இவ்வளவு கொடும் அனுபவங்களினூடு தப்பி வந்தவர்களின் வடுக்களுக்கு என்னமாதிரியான ஆறுதலை நாம் வழங்கப்போகின்றோம். இந்நூலின் ஆசிரியர், மரணத்தைவிட மரணபயமே இன்னும் கொடூரமானது என்பதுபோல யுத்தத்தைப் போலவே யுத்தம் நடந்தபின் அதன் அனுபவங்களோடு இருப்பதென்பது இன்னும் அவலமானது. இரண்டு தலைமுறையே போருக்கு காவு கொடுத்த நாம், இன்னொரு தலைமுறையை போரின் வடுக்களுக்கு  காவு கொடுக்கவேண்டியிருக்கின்றதோ என அஞ்ச வேண்டியிருக்கின்றது. யுத்தம் முடிந்த மூன்று வருடங்களான பின்னும், இன்னும் உருப்படியான காயங்கள் ஆற்றும்  எந்தவொரு  வேலைத்திட்டமும் செய்யப்படவேயில்லை என்பதுதான் இன்றைய யதார்த்தம். மேலும் இன்னுமே இராணுவக் கண்காணிப்பும், கண்களுக்குப் புலப்படாத நுண்ணிய ஒடுக்குமுறையும் இருக்கும் ஈழத்தில் எப்படி ஆகக்குறைந்தது அங்கிருக்கும் பாதிக்கபப்ட்ட மக்கள், தம் சக உறவுகளோடோ அயலவர்களோடு நடந்தவற்றை மனம் விட்டுக் கதைக்க முடியும்? எதைக் கதைத்தாலும் எவரைப் பார்த்தாலும் சந்தேகிக்கவேண்டிய நிலையில் சூழ்நிலையில் வாழும்போது எந்தவகையில்தான் யுத்ததிற்குள் வாழ்ந்த மக்கள் தம் மனதிலுள்ள பாரங்களை இறக்கிவைக்க முடியும்?


3..
இந்நூல் எழுதப்பட தொனி குறித்து சில விமர்சனங்கள் இருக்கின்றன, சாதாரண மக்கள் கூட்டத்திலிருந்து வரும் முக்கியமான ஒரு சாட்சியத்தின் முன், விமர்சனத்தை வைக்கவேண்டுமா என்கின்ற தயக்கங்களும் இருக்கின்றன.  இந்த ஆசிரியர் தொடக்கத்திலிருந்தே ஒரு குறிப்பிட்டவரைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டிக் கொண்டேயிருக்கின்றார். அவர்களை வன்னிக்குள் இருந்த வலதுசாரிகளாகவும், அறிவுஜீவிகளாகவும் அடையாளப்படுத்துகின்றார். அது எந்தவகையிலும் இச்சாட்சிய நூலிற்கு அவசியமில்லையெனவே நினைக்கின்றேன். எனெனில் யாரை யாரையெல்லாம் இத்தகைய அழிவுகளுக்குக் குற்றஞ்சாட்டவேண்டுமென்பதை வாசிப்பவர்கள் தாங்களாகவே அறிந்து கொள்வதற்கான வெளியை விட்டிருக்கலாம். மேலும் இந்த அழிவுகளுக்கு நாமெல்லோருமே முதலில் கூட்டுப் பொறுப்பை ஏற்றாக வேண்டும்.  இப்பொறுப்பு ஈழத்தில் யுத்த பிரதேசத்திலிருந்தவர்க்கு மட்டுமில்லை, போரின் நிமித்தம் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஈழம் பற்றிய பிரக்ஞையுடன் தமிழ்நாட்டில் இருந்தவர்கள் என அனைவரையும் சேரும். அந்தக் கூட்டுப்பொறுப்பை எடுக்காத எந்த ஒருவரிடமிருந்தும் இனி ஈழம் பற்றி வரும் கருத்துக்களை நாம் சந்தேகத்துடனேயே பார்க்கவேண்டியிருக்கிறதென்பதையும் ஒரு கவனக்குறிப்பாக சொல்ல விழைகிறேன்.

வெவ்வேறு ஆயுதப்போராடங்கள் நடந்த நாடுகளின் வரலாற்றை மானுடவியலூடாக கற்கின்ற நண்பர் ஒருவர் கூறியது போல, புலம்பெயர்ந்தோ அல்லது அந்த யுத்தப்பகுதியிலிருந்து வெளியே இருக்கும் நமக்கு, வெளியிலிருந்து எதையும் சொல்லும்/செய்யும் பல்வேறு தெரிவுகள் இருக்கின்றன. ஆனால் ஈழத்தில் யுத்ததிற்குள் அகப்பட்டு இன்று உயிரோடு எஞ்சியிருக்கும் மக்களுக்கு அவ்வாறான எந்தத் தேர்வுகளுமில்லை (There is no luxury of choices). அவர்கள்,  தங்களுக்கு வாய்க்கக்கூடிய வளங்கள்/சூழலோடு தொடர்ந்து வாழ்ந்து  போகத்தான் வேண்டியிருக்கும். அவ்வாறான அவர்களின் வாழ்க்கை முறையை, தெரிவுகள் பல உள்ள சூழலில் வாழும் என்னைப்போன்ற புலம்பெயர்ந்தவர்கள் கட்டாயமாக விளங்கிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தாயகத்திலிருப்பவர்க்கும் புலம்பெயர்ந்தவர்க்கும் இடையே விழுந்துகொண்டிருக்கும் இடைவெளி இன்னும் பெரிதாக விரிசலாவதை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது போய்விடும்.

இந்த நூலை வாசித்து முடித்தபோது இரண்டு விடயங்கள் என் முன்னே தாண்டிப்போக முடியாத கேள்விகளாய் முன்னே விழுந்தன. ஒன்று  இனியெந்தக் காலத்திலும் ஆயுதம் கொண்டு தொடக்கப்படும் எந்தப் போராட்டத்திற்கும் மனமுவந்து ஆதரவு கொடுக்கமுடியுமா என்பது.  இரண்டாவது இவ்வளவு கோரமான அழிவுகளைக் கொடுத்த ஒரு அரசோடு மக்களால இணைந்து வாழமுடியுமா? என்பது. ஆனால் இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டியவர்கள் அந்த மக்களே. அவர்களே எல்லாவற்றையும் அனுபவித்தார்கள். இனி தம் வாழ்வை எப்படிக் கொண்டு போவது என்பதைத் தீர்மானிக்கவேண்டியவர்களும் அவர்களேயன்றி நாமல்ல. எனெனில் இவ்வளவு அழிவுகள் நிகழ்ந்த சமகாலத்தில் நாம் கையறு நிலையில்தான் இருந்தோம் என்ற குற்றவுணர்விலிருந்தே அவ்வளவு எளிதாக எம்மால் தப்பிப் போய், எதைத்தான் பேசிவிடமுடியும்?

இந்நூலை மிகுந்த துயரத்தோடு வாசித்துக்கொண்டிருந்தாலும், இந்நூலின் ஆசிரியர் காயப்பட்டு காலை நகர்த்தமுடியாது, இனி தானும் தன் மனைவியும் சாகப்போகின்றோம் என எண்ணி மனைவிக்குத் தாம் வாழ்ந்த காலங்களை நினைவுபடுத்திக்கொண்டிருந்த இடத்தில் கண்கள் தானாகக் கலங்கியதைத் தடுக்கவேமுடியவில்லை. அவ்வாறாறு இறந்துபோன/காயப்பட்ட ஒவ்வொருவருக்குமாய் கலங்கினால் கடல்களைத்தான் நாம் கடன்வாங்கவேண்டியிருக்கும்.  ஈழத்தின் இன்றும் நடந்ததைச் சொல்லி அழவும் முடியுமால், மறக்கவும் முடியாமல் தம மனதில் ஆழமனப்படிமங்களாய் நினைவுகளை வைத்திருக்கும் மக்களின் ஒவ்வொரு பெருமுச்சின் பின்னும் சொல்லப்படாத ஆயிரமாயிரம் கதைகள் உறங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை நாம் என்றென்றைக்கும் மறந்துவிடவும் முடியாது.


நன்றி: அம்ருதா - மாசி/2013

நாமிருக்கும் நாட்டில்...

Saturday, December 15, 2012



னடாவிலிருந்து ஏறத்தாள 20ற்கு மேற்பட்ட தமிழ்ப்பத்திரிகைகள் வெளிவருகின்றன. வாரப் பத்திரிகையாக ஆகக்குறைந்தது பத்திற்கு மேற்பட்ட பத்திரிகைகளை வெள்ளி மாலைகளில் அநேக தமிழ்க்கடைகளில் காணமுடியும். கனடாவில் தமிழ்மக்கள் செறிவாக வாழும் ரொறொண்டோ பெரும்பாகத்தில் இருந்தே இப்பத்திரிகைகளில் அநேகம் வெளிவருகின்றன. இப்பத்திரிகைகள் அனைத்துமே இலவசமாக விநியோகிக்கப்படுவதால் பத்திரிகையின் பக்கங்களை விளம்பரங்கள் ஆக்கிரமிப்பதை அதன் இயல்புகளில் ஒன்றேயெனத்தான் எடுத்துக் வேண்டியிருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட நூறு இதழ்களுக்கு மேலே வந்த சில வருடங்களுக்கு முன் நின்று போன 'வைகறை' பத்திரிகை ஒரு முக்கியமான  பதிவு என்பேன். ஈழத்தமிழர்களால் எப்போதும் முன்னிலைப்படுத்தும் அரசியலை அது முக்கியமாய்த் தாங்கி வந்திருந்தாலும் பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டோர் அதிலே எழுத முடிந்திருக்கின்றது. மேலும் நல்ல பல விவாதங்களை நடத்த அந்தப் பத்திரிகை இடங்கொடுத்துமிருக்கிறது. தமிழர்கள் மத்தியில் இன்னும் வெளிப்படையாகப் பேசத் தயக்கமுள்ள தற்பாலினர் பற்றி மிக நீண்ட ஒரு நேர்காணலை 'சிநேகித'ன் என்கின்ற தற்பாலின நண்பர்களை சுமதி மூலம் நேர்கண்டு அதை எவ்விதத் தயக்கமோ தணிக்கையோ இன்றி வெளியிட்டுமிருக்கிறது.

இவ்வாறாக பல்வேறு பத்திரிகைகள் வாராந்தம் வருகின்றதாலோ என்னவோ, இலக்கிய சஞ்சிகைகள் தொடர்ந்து வெளிவருவதென்பது கனடாவில் மிக அரிதாகவே இருக்கின்றது. அவ்வாறாக கலை இலக்கிய சஞ்சிகைகள் சில வெளிவந்திருந்தாலும் அவற்றின் ஆயுள் சொற்பகாலத்திலேயே முடிந்துவிடுகின்றன. கனடாவில் பல்வேறு விடயங்களில் ஆளுமையுள்ள படைப்பாளிகள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் இருந்தாலும் அவர்களின் பங்களிப்பும் ஈடுபாடும் பிற புலம்பெயர் தேசங்களோடு ஒப்பிடுகையில் ஓப்பிட்டளவில் குறைவாக இருக்கின்றது என்பதை ஒரு பலவீனமாகக் கொள்ளவேண்டியிருக்கிறது. தீவு நாடொன்றிலிருந்து எல்லோரும் வந்ததாலோ என்னவோ ஒவ்வொருவரும் தனக்குரிய சிறிய சிறிய இலக்கிய/அரசியல் குழுக்களோடு தனித்துப் போய் இருந்துவிடுகின்றனர் போலும்.

இவ்வாறான விடயம் ஒருபக்கமிருந்தாலும் கனடாவிலிருந்து 'காலம்' சஞ்சிகை தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருப்பதை - இலக்கியம்/கலை சார்ந்து இயங்குபவர்களுக்கு- ஒரு முக்கிய நிகழ்வெனத்தான் கூறவேண்டும். விரைவில் காலம் தன் 40 வது இதழை வெளியிட உள்ளது. 'காலம்' தன் காலத்தின் அச்சில் மிக நீண்டகாலமாக தொண்ணூறுகளில் தொடங்கி இன்றுவரை இயங்கிக்கொண்டிருக்கின்றது. கிட்டத்தட்ட 20 வருடப் பயணத்தில் 40 இதழ்கள் மட்டுந்தானா என்று ஒருவருக்குக் கேள்வி எழும்பக் கூடுமெனினும் -எண்ணிக்கையில் அல்ல  தரத்தில்தான்- சிறுசஞ்சிகைகளில் முக்கியத்துவம் இருக்கின்றதென மீண்டுமொரு நினைவூட்ட வேண்டியிருக்கின்றது. இல்லாதுவிட்டால் பத்துப் பதினொரு இதழ்கள் மட்டுமே வந்த 'நிறப்பிரிகை' இதழ்கள் பற்றியோ அல்லது 'புதுசு' இதழ்கள் பற்றியோ நாமெல்லோரும் மீண்டும் மீண்டும் விதந்து பேசுகின்ற அவசியம் வந்திருக்காது.

'காலம்' சஞ்சிகை பற்றி என்னைப் போன்ற பலர் முன்வைத்த விமர்சனமானது காலம்' ஈழ/புலம்பெயர் படைப்பாளிகளை விட இந்திய படைப்பாளிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பது பற்றியது. இதை நானும் வேறு பல நண்பர்களும் 'காலம்' ஆசிரியரான செல்வத்திடம் நேரடியாகச் சொல்லியுமிருக்கின்றோம். எமக்கு எப்படி இது குறித்து விமர்சனமிருக்கிறதோ அப்படியே செல்வத்திடம், 'படைப்புச் சார்ந்து ஈழம்/தமிழகம்/புகலிடம் எனப்பிரிப்பதில் உடன்பாடில்லை. அவர்கள் எவரும் உயர்ந்தவருமல்ல, நம்மில் எவரும் தாழ்ந்தவருமல்ல என்ற அடிப்படையிலேயே படைப்புக்களை தேர்ந்தெடுக்குக் கொள்கின்றேன்' என்று தனக்கான விளக்கத்தை எம்மிடம் கூறியிருமிருக்கின்றார். அவரளவில் அது நியாயமான கருத்தே. இவ்வாறாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தபின்னரோ என்னவோ அதிக ஈழத்து/புலம்பெயர் படைப்புக்கள் காலத்தில் வருகின்றன என்பதைச் சில நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அந்தளவில் செல்வத்தோடு நம் விமர்சனங்களை முன்வைத்து வெளிப்படையாக உரையாடலாம் என்பது மகிழ்ச்சியான விடயமே.

காலம் இதழின் ஒரு முக்கியமான விடயம் என்னவெனில் பல படைப்பாளிகளுக்கு சிறப்பிதழ் வெளியிடுவது. ஈழத்தின் ஆளுமைகளான ஏஜே கனகரத்தின, கா.சிவத்தம்பி, மாற்கு, மு.தளையசிங்கம், குமார் மூர்த்தி என்பபலருக்கு சிறப்பிதழ்களை வெளியிட்டிருக்கின்றது. பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் படைப்பாளி என்றளவில் என்னைக் கவர்கின்ற அசோகமித்ரனுக்கும் அண்மையில் காலம் சிறப்பிதழ் வெளியிட்டுக் கெளரவப்படுத்தி இருக்கின்றது.

'காலம்' இதழ் போன்று அடிக்கடி வராமல் விட்டாலும், தேவகாந்தனை ஆசிரியராகவும், டானியல் ஜீவா இணையாசிரியராகவும் கொண்டு 'கூர்' தொகுப்பு ஆண்டு இதழாக 2008ல் இருந்து வெளிவரத்தொடங்கியுள்ளது. இத்தொகுப்பு கனடாவிலிருக்கும் படைப்பாளிகள் மட்டும் எழுதுவதற்குரிய தொகுப்பு என்பது சிறப்பம்சமும், சிலவேளைகளில் மற்றொரு விதத்தில் பலவீனமாகவும் தெரியக்கூடும். அண்மைய வருடங்களில் 'கூர்' பல்வேறு துறைசார்ந்தவர்களின் படைப்புக்களைத் தாங்கி தனக்குரிய ஓர் அடையாளத்துடன் வெளிவரத் தொடங்கியுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமே.
  
ண்மையில் English Vinglish மற்றும் Barfi ஆகிய இரண்டு இந்திப் படங்களைப் பார்த்திருந்தேன். இங்கிலீஷ் விங்கிலீஷில் நீண்டநாளைக்குப் பிறகு சிறிதேவியின் வரவு என்பதால் அவரின் ஒருகாலத்தைய இரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும். இங்கிலீஷ் விங்கிலீஷ் கதையைப் போல நிறையக் கதைகள் ஏற்கனவே வந்திருக்கின்றன. அநேக புலம்பெயர் சமூகங்களுக்கு தொடக்க காலத்திலிருக்கும் மொழிப்பிரச்சினையே இப்படத்தின் கதைக்களம். அதை நகைச்சுவையாகக் கூறியிருக்கின்றார்கள் என்பதை விட விதந்துரைக்க வேறொன்றுமில்லை. இன்றைய வெள்ளையின அரசுக்கள் (இங்கிலாந்து/அமெரிக்கா/கனடா/அவுஸ்திரேலியா) தம் நாட்டுக்குப் புலம்பெயர்கின்றவர்களைக் கட்டுப்படுத்த தமது தேசிய மொழிகளில் பேசவும் எழுதவும் கூடியவராகவும் ஒருவர் இருக்கவேண்டும் என்கின்ற சட்டங்களை இறுக்கிக் கொண்டு வருகின்றதை நாமெல்லோரும் அறிந்திருப்போம். கனடா போன்ற நாடுகளுக்கு சனத்தொகை குறைவாக இருப்பதால், புதிய குடிவரவாளர்கள் அதன் பொருளாதாரத்திற்கு இன்றியமையாது தேவைப்படுகின்றனர். அதேசமயம் இங்கு பெரும்பான்மையாக வாழும் வெள்ளையினத்தவர்களுக்கு, இவ்வாறான குடிவரவாளர்களால் அவர்களின் வசதியான தொழில்கள் இல்லாமற் போகின்றது என்ற கற்பிதமான எண்ணமும் உண்டு. ஆனால் அரசுக்கு குடிவரவாளர்களும் தேவை அதேசமயம் இவ்வாறான வலதுசாரி சிந்தனையுள்ளவர்களைச் சமாளிக்கவும் வேண்டும். அவ்வாறான நிலையிலேயேதான் குடிவரவாளர்களுக்கான புதிய சட்டங்களை இந்நாடுகளில் இயற்றியபடி வருகின்றனர்.

இங்கிலிஷ் விங்கிலீஷ் ஆங்கில மொழி தெரியாமையை நகைச்சுவையாக்கினாலும் ஒரு புதிய மொழியை இயன்றால் கற்றுவிட முடியும் என்கின்ற நல்ல செய்தியைச் சொல்வதால் நாம் அதை வரவேற்கலாம். ஆனால் அதேசமயம் நகைச்சுவை என்றரீதியில் இப்படத்தில் ஆணாதிக்கத்தை வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதைப் போல ஏற்றுவதைத்தான் சகிக்க முடியாதிருக்கின்றது. தனது மனைவிக்கு ஆங்கிலம் தெரியாதென்பதால் பொது இடங்களில் பிறரின் முன் தாழ்த்திப் பேசுகின்ற கணவர், அவருக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்தவுடன், இதுவரை காலமும் தான் செய்த எந்தத் தவற்றுக்கும் மன்னிப்புக் கேட்காமல் 'நீ என்னை (இன்னமும்) காதலிக்கின்றாயா?' எனக் கேட்டு எல்லாவற்றையும் மழுங்கடிப்படிப்பது என்பது ஒருபுறம். இன்னொரு புறம் ஆங்கிலம் கற்ற அவரது மனைவி மீண்டும் இந்தியா திரும்பும்போது, விமானத்தில் வாசிப்பதற்காய் ஆங்கிலப் பேப்பரைக் கேட்டுவிட்டு அதை மறைத்து இந்திப் பேப்பர் இருக்கிறதா எனத் திருத்திக் கேட்பது என்பதுஅவர் எப்படி இந்தியாவிலிருந்து புறப்படும்போது எப்படி இருந்தாரோ அவ்வாறே அவர் மீண்டும் பழைய நிலைக்குப் போகின்றார் என்பதாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம். அப்படியாயின் கணவரின் எல்லாப் பேச்சுக்களையும் கேட்டு ஒடுங்கிய மனைவியாகத்தான் ஒரு பெண் இருக்கவேண்டுமா என இந்தப்படம் நம்மிடம் கோருமா என்கின்ற கேள்வி எழும்புவதைத் தவிர்க்கவும் முடியவில்லை. இதனால்தான் சிலவேளைகளில் (நகைச்சுவை போன்ற) வேறு முலாம் பேசிக்கொண்டு வரும் படைப்புக்களில் நாம் கவனமாக இருக்கவேண்டியிருக்கின்றது. இந்தக் கணத்தில்தான் கமலின் மிக மோசமான திரைப்படமான 'உன்னைப் போல ஒருவன் (இந்திப்படமான A Wednesday ) எவ்வித சண்டைக்காட்சிகளுமில்லாததால் அது ஒரு முக்கிய படமென விதந்துரைத்த ஒரு படைப்பாளியின் கருத்து நினைவுக்கு வருகின்றது. அண்மைக்கால மற்றொரு உதாரணம் ஒரு குறிப்பிட்ட சாதியை விதந்துரைந்துக் கொண்டு வந்த படமான சுந்தரபாண்டியன் என்கின்ற தமிழ்ப்படம்.

Barfi படத்தைப் பார்க்கும்போது தமிழ்ச்சூழலில் இதைப் போல ஒரு திரைப்படம் வர  இன்னும் எத்தனை காலம் எடுக்குமோ எனதோன்றியது. அய்யோ இவ்வாறான படத்தை எடுத்தால் யார் பார்க்க வருவார், காசைத் தொலைக்கவேண்டி வருமே எனத்தான் உடனேயே தமிழ்ச்சூழலில் குரல்கள் எழும் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் Barfi படத்தைக் கூட எல்லாவிதமான வணிகச் சமரசங்களோடுதான் சினிமாவாக எடுத்திருக்கின்றார்கள். ஆனால அதில் எந்த அலுப்பும் எம்மில் தொற்றவிடாது, தேவையற்ற காட்சிகளால் நெளியவிடாது, அழகாக எடுத்திருக்கின்றார்கள் என்பதுதான் முக்கிய விடயம். வாய் பேசவோ காது கேட்கவோ முடியாத ஒரு பாத்திரத்தையும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இன்னொரு பாத்திரத்தை முக்கிய பாத்திரங்களாகக் கொண்டு முழுநீளப்படத்தையும் எடுப்பதென்பது அவ்வளவு எளிதில்லை. படம் முடியும்வரை அதனோடு ஒன்றிப்போகச் செய்தது என்றால் அதனது திரைக்கதை வடிவம். திரைக்கதையின் முக்கியத்தைத் தமிழில் உணர்ந்தவர்கள் என்பது மிக அரிதானவர்களே. தமிழ்ச்சூழலில் அநேகர் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டுத்தான் திரைக்கதையை எழுதத் தொடங்குகின்றார்களோ என்பது அவர்களின் படங்களைப் பார்க்கும்போது தோன்றுகின்றது.

சாதாரணப் படங்களில் வரும் முக்கோணக் காதல் தான் Barfi படத்தின் கதை. அதை எப்படி நெகிழ்ச்சியான சிற்சில தருணங்களால் கட்டி எழுப்புகின்றார்கள்  என்பதுதான் இப்படத்தின் சிறப்பு. இதுவரை பார்த்த எந்தப் படத்திலும் என்னைக் கவரவே செய்யாத இலீயானாவைக்கூட இப்படத்தில் பிடித்திருக்கின்றது என்றால் படத்தின் திரைக்கதையையும் அதன் இயக்குநனரையும் தான் பாராட்ட வேண்டும். பிரியங்கா சோப்ராவிற்கு இருக்கும் 'இமேஜிற்கு' அவர் இந்தப் படத்தில் ஏற்று நடிக்கும் பாத்திரத்தை தமிழில் நடிக்கும் நடிகைகள் அல்ல, கதாநாயகர்கள் முதலில் பார்த்துக் கற்கவேண்டும். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சிறு சிறு செய்கைகளைக் கூட பிரியங்கா அவ்வளவு தத்ரூபமாகக் கொண்டுவருகின்றார்.

நடைமுறையில் ஆட்டிசத்தால் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளை மூன்ற மடங்களவில் பாதிப்படைகின்றனர் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறான திரைப்படங்களில் ஒரு விமர்சனமாக நான் நினைப்பது சிலவேளைகளில் ஆட்டிசம் போன்ற உக்கிரமான ஒரு பிரச்சினையை சற்று கூட அழகியல்படுத்தி அதன் உண்மைத்தன்மையை வலுவிழக்கச் செய்கிறதோ என்பது. எனெனில் ஆட்டிசத்திலேயே பல்வேறு நிலைகள் உள்ளன. எனவே சிலவேளைகளில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான மனோநிலையையும் அவர்களைச் சுற்றியிருப்பவர்கள் நாளாந்தம் அனுபவிக்கும் அல்லாடல்களையும் சிலவேளைகளில் அழகியல்படுத்தும் இவ்வாறான படங்களில் இல்லாமற் செய்துவிடுகின்ற அச்சம் எனக்குண்டு. எனினும் இவ்வாறான disorder னால் பாதிக்கப்பட்டவர்களும் நம்மைப் போன்ற சக மனிதர்களே என்கின்ற பார்வையை பொதுப்புத்தியில் ஏற்படுத்த  Barfi  போன்ற திரைப்படங்களை நாம் வரவேற்க வேண்டும். இப்படம் சிலவிடயங்களை சற்று அழகியல்படுத்துகிறதே தவிர அபத்தமாகவோ ஆபாசமாகவோ மாற்றுத்திறனாளிகளைச் சித்தரிக்கவில்லை என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்.

ண்மையில் 'உதவி' நிறுவனத்திற்காய் உதவுவதற்காய் ரொறண்டோவில் 'உதவி' பற்றிய அறிமுக விழாவும் சில புத்தங்களின் வெளியீடும் நடைபெற்றது. 'உதவி' அமைப்புப் பற்றிய விபரங்களை அவர்களின் இணையத்தளத்தில் சென்று பார்க்கலாம் (www.uthavi.net). 'உதவி' ஏன் உருவாக்கப்பட்டது?' என்பதற்கு அவர்கள் 'இலங்கையில் யுத்தத்தினாலும், வேறு காரணிகளாலும் தமது பெற்றோர், உறவினர்களை இழந்து அல்லது வருமானம் பெறும் குடும்ப உறுப்பினரை இழந்து, சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு உதவ 'உதவி' உருவாக்கப்பட்டுள்ளது.' எனக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். எப்போதும் பெரியளவிலேயே எதிர்பார்க்கும் தமிழ்ச்சமூகம் பெருந்தொகையாக இந்நிகழ்விற்கு சமூகமளிக்க இல்லையெனினும் அங்கே உரையாற்றியவர்களின் உரை சிறப்பாக இருந்தது.  இன்றைய மலையகத்தின் நிலைமைகள் (எவ்வாறு மலையகத் தமிழர்களின் சனத்தொகைச் செறிவு திட்டமிட்டுக் குறைக்கப்படுகின்றது, தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன) என்பது குறித்து புகைப்படங்களுடன் ஒரு உரையும் சேர்க்கப்பட்டிருந்தது. பொது ஊடகங்களாலும் தமிழ் பேசும் சமூகங்களாலும் அதிகம் கவனிக்கப்படாது கைவிடப்படுகின்ற மலையக மக்களின் நிலை -இலங்கையில் போர் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகின்ற காலத்தில் கூட- எவ்வித முன்னேற்றத்தைக் காணமுடியவில்லை என்பது நாம் அனைவரும் கவலை கொள்ளவேண்டிய  ஓர் விடயமாகும். 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டிப்பளை என்னும் அடிப்படை வசதிகள் மிகவும் குறைந்த கிராமத்திலிருந்து பல புத்தகங்களை - முக்கியமாய் மாணவர்களின் படைப்புக்களை- அவர்கள் வெளியிட்டிருக்கின்றார்கள். நாமாக அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கூறுவதை விட அவர்கள் தங்கள் குரல்களிலேயே பேசியிருப்பது முக்கியமாய் இருந்தது. ஒரு பெரும் பயணத்திற்கு, முதல் காலடி என்பது எவ்வளவு முக்கியமானதோ அவ்வாறே 'உதவி'க்கும் ஒரு சிறு விதை ரொறொன்டோவில் இந்நிகழ்வு மூலம் தூவப்பட்டிருக்கின்றது. விரும்பியவர்கள் இதனோடு இணைந்து பல்வேறு வழிகளில் உதவலாம். வளர்த்து எடுத்துக் கொள்ளலாம் அதற்கு இவ்வாறாக உதவும் மனப்பான்மையுள்ளவர்கள் ரொறொன்டோவில் மட்டுந்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. உலகில் எங்கிருந்தாலும் ஈழத்திலிருக்கும் சிறார்களுக்கு எவரும் 'உதவி' ஊடாக தம் பங்களிப்பைச் செய்யமுடியும்.

னடாவிலிருக்கும் மீராபாரதி 'பிரக்ஞை: ஓர் அறிமுகம்' என்கின்ற கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட்டிருக்கின்றார். சமூக மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரும் தத்தம் தனிமனித வாழ்விலிருந்தே அனைத்தையும் தொடங்கவேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்நூலில் கட்டுரைகள் பல எழுதபப்ட்டிருக்கின்றன. 'பிரக்ஞை'யை எப்படி மேற்குலகில் ஆய்வாளர்கள் பார்கின்றார்கள் என்பதை பல்வேறுபட்ட ஆளுமைகளின் கட்டுரைகளைத் தொகுத்து தனது கருத்துக்களை மீராபாரதி இந்நூலில் முன்வைக்கின்றார். ஒரு காலத்தில் தீவிர அரசியலில் ஈழத்திலும் புலம்பெயர்தேசத்திலிருந்து  முழுமையாக இயங்கி, எமது அரசியலில் தளங்களில் எங்கோ தவறிருக்கின்றதென்பதை உணர்ந்து பின்னர் அரசியலில் இருந்து விலகி, தன் சுயம் பற்றித் தொடங்கிய தேடலின் ஒருபகுதியாக இந்நூல் வெளிவந்திருக்கின்றதுஅவர் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கின்ற மாதிரி அடுத்த நூலாக கீழைத்தேய பார்வையில் பிரக்ஞை குறித்து எழுதுவதை நானும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன். அதுமட்டுமின்றி எவ்வாறு அவர் ஒருகாலத்தில் தீவிரமாக இயங்கிய கூட்டு அரசியலிலிருந்து விடுபட்டு இவ்வாறான தியானம், பிரக்ஞை போன்றவற்ற்குப் போனார் என்பதையும் இதன்மூலம் அவர் அடைந்த மற்றும் கற்றுக்கொள்கின்ற விடயங்கள் எவை என்பதையும் விரிவாகஎழுதவேண்டும்

அவர் கூறுகின்றபடி சமூக மாற்றமானது தனி மனித மாற்றத்திலிருந்து தொடங்காதவிடத்து எங்கோ ஓரிடத்தில் தேங்கித் தத்தளித்தபடியே இருக்கும் என்பது நாம் இன்றைய காலத்தில் பல்வேறு உதாரணங்களுடன் விளங்கிக் கொள்ள முடியும். எல்லாமே முடிவடைந்து ஒரு பாழ் சூழ்நிலையிலிருந்து எல்லாவற்றையும் மீண்டும் தொடங்க வேண்டியிருக்கின்ற ஈழத்தமிழ்ச் சமூகம், இவ்வாறான புதிய முயற்சிகளை - எவ்வித முன்முடிவுகளும் இல்லாது- கற்றுக்கொள்ளவோ தேடவோ செய்வது அவசியமாக இருக்கின்றது. புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும், பயணிக்கவும் விரும்பும் சமூகமாக நாம் மாறும்போது நாம் விரும்பிய மாற்றங்களையும் மாறுதலையும் என்றேனும் ஒருகாலத்தில் இழப்புக்களின்றி எளிதாய் அடையவும் கூடும்..


நன்றி: 'அம்ருதா' (மார்கழி)