கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அனிச்சம்பூ குறிப்புகள்

Thursday, July 30, 2015


Alejandro Zambra

"She knows that very soon Ernesto won't come back. She imagines herself disconcerted, then furious, and finally invaded by a decisive calm. It's all right, there was no commitment, as it should be: one loves in order to stop loving, and one stops loving in order to start loving others, or to end up alone, for a while or forever. That is the law. The only law."

(The Private Lives of Trees, P 75)

Alejandro Zambra சிலியின் முக்கியமான ஒரு எழுத்தாளராக - ரொபர்தோ பாலானோவிற்குப் பிறகு- குறிப்பிடப்படுகின்றார். அவரது எழுத்துக்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. 1975ல் பிறந்த Alejandro Zambra தொடக்கத்தில் கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டு இப்போது நாவல் உலகினுள் நுழைந்திருக்கின்றார். Bonsai, The Private Lives of Trees, Ways of Going Home என்பவை அவர் எழுதிய நாவல்கள். நான் அவரின் நாவல்களில் Bonsai தவிர மிகுதி இரண்டையும் வாசித்திருக்கின்றேன். Alejandroவின் நாவல்களில் பாத்திரங்கள் அதிகம் இருப்பதில்லை என்பதோடு அநேகமான பாத்திரங்கள் தமக்குள்ளேயே உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கும்.

Secondary Characters தனக்குப் பிடித்தமானது எனச் சொல்லும் Alejandroவின் புனைவுகளில் கதைகளுக்குள் கதைகளென நீண்டபடியிருக்கும். போர்ஹேஸ் மீதும் பாலானோ மீதும் மதிப்புடைய Alejandroவின் நாவல்கள் நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட பெரும் நாவல்களுமில்லை. ஒருவகையில் சொல்வதென்றால் அவை நாவல்லா (Novella) வகையைச் சேர்ந்தவை. ஆயிரம் பக்கங்களைத் தொடுமளவில் எழுதினாலே சிறந்த நாவல்களென தற்காலத்தில் 'பிரமை' பிடித்தலையும் தமிழ்கூறும் நல்லுலகம், புதிய கதை சொல்லல் முறையால் சுருங்கச் சொல்லி உலகின் கவனத்தைக் கோரும் Alejandro Zambra போன்றவர்களையும் கவனிக்கக் கடவுக.


SAAAC Art Exhibition

தியிறுக்கம் எனப்படும் ஆட்டிசம் (Autism) குறித்து நம்மிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை. ஆகவேதான் அது ஒருவகையான tabooவாய் இன்னமும் நம் சமூகத்தில் இருக்கின்றது. ஆனால் இன்றைய காலத்தில் முன்னரைவிட மிக அதிகமான குழந்தைகள் ஆட்டிசத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆட்டிசத்தில் பல்வேறு நிலைகள் இருக்கின்றன. இதனால் பாதிக்கப்படும் பிள்ளைகளை 24 மணித்தியாலமும் பராமரிக்கவேண்டிய தேவை பெற்றோருக்கு இருக்கின்றது. எனவே பெற்றோர் எத்தகை மனவுளைச்சல்களுக்கும் தத்தளிப்புக்களுக்கும் போகவேண்டியிருக்கும் என்பதை மேலும் விரித்துச் சொல்லத்தேவையில்லை.

சென்றமுறை 'உயிர்ப்பு' நிகழ்வில் சுமதியின் நாடகமும் இப்படியான ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் பெற்றோர்களைப் பற்றியது. இந்நாடகத்தில் பாதிக்கபப்ட்ட குழந்தை எந்த நேரமும் ஒரு டிரமை அடித்துக்கொண்டே இருக்கும். அந்த தொடர்ச்சியான சப்தங்களுக்கிடையிலேயே நாடகம் நிகழ்ந்துகொண்டிருந்தது. நாடகம் நிகழும் கொஞ்ச நேரமே உரையாடல்களுக்கிடையில் ஒலிக்கும் டிரம் எங்களை தொந்தரவுபடுத்தியபடி இருக்கிறதென்றால் எப்போதும் அப்படியான ஒரு நிலைமையில் வாழ்பவர்களைப் பற்றி சற்று யோசித்துப் பார்க்கலாம். டிரம் இங்கே ஒரு படிமம். சுமதியின் முக்கியமான பிரதி. பொதுவெளியில் ஆட்சிசம் பற்றிய உரையாடல்களை தொடங்கிவைக்கின்ற ஒரு புள்ளியது.

அண்மையில் பாலபாரதி தமிழகத்தில் 'சந்துருவுக்கு என்னாச்சு' என்ற தலைப்பில் வெளியிட்ட நூலும் ஆட்டிசம் பற்றியே உரையாடுகின்றதென நினைக்கின்றேன் (நானின்னும் அதை வாசிக்கவில்லை).

இன்று நடத்த கண்காட்சியில் வைக்கப்பட்ட ஓவியங்களையே நீங்கள் பார்க்கின்றீர்கள். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளும், வேறு ஓவியர்களும் வரைந்த ஓவியங்கள் இவை. கறுப்பு வெள்ளையில் தெரிகின்ற முக்கிய ஆளுமைகளின் ஓவியங்கள் இயற்கையிலிருந்து எடுத்த மண்ணால் வரையப்பட்டவை. வித்தியாசமான முயற்சி. வான்கோவின் நட்சத்திர இரவையும், மங்கின் ஓலத்தையும் வேறு விதமாய் வரைந்து பார்த்திருக்கின்றார் செந்தூரன். கடைசிப் புகைப்படத்தில் இருப்பவர் அவர்.
*South Asian Autism Awareness Centre (SAAAC)


Boyhood

ரு நல்ல படைப்புக்காய் எத்தனை வருடங்கள் என்றாலும் காத்திருக்கலாம் என்பதற்கிணங்க ஒரு சிறுவனின் பன்னிரண்டுகால வாழ்வை பின் தொடர்கின்ற படம். அதற்காகவே ஒரு 6 வயதுச் சிறுவனை முக்கியபாத்திரமாக்கி, யதார்த்தத்தில் 12 வருடங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் அவரைத் தொடர்ந்து சென்று திரைப்படமாக்கியிருக்கின்றனர். எல்லாத்துயரங்களின் பின்னாலும், எல்லா குழப்படிகளின் பின்னாலும் திளைத்துப் பெருகும் வாழ்வை நாம் இந்தப் படத்தில் தரிசிக்கமுடியும்.

எல்லாம் நமக்காய்ச் செய்யும் அம்மாக்களை விலத்தி நடக்கின்ற பருவம் வருகையில் நம்மைவிட அம்மாக்களே நிறையக் கவலைப்படுகின்றார்கள். வளாகத்திற்கு புறப்படும் மேசனிடம் 'இனியென்ன, எல்லாம் முடிந்துவிட்டது, இனி என் மரணவீட்டுக்குத்தானே வரப்போகின்றாய்?'  என அழத்தொடங்குகின்ற மேசனின் அம்மாவின் விழிகளைத் தாண்டி நாம் அவ்வளவு எளிதாய் வெளியேறவிடவும் முடியாது.

மேசனிற்குப் பிடித்த காதலி முரண்களின் நிமித்தம் விலகிப்போய்விட, வளாக வாழ்வு தொடங்கும் நாளில் நண்பியொருத்தியுடன் மலையேற்றம் செய்யயும்போது, seize the moment என்பதல்ல சரியானது, moment seizes us என்பதே சரி என்று இருவரும் மாற்றி யோசிப்பார்கள். ஒருவகையில் பார்த்தால் அதுதான் உண்மை அல்லவா? நமக்கான கடந்தபருவங்களை ஏதோ ஒருவகையில் நிச்சயம் ஞாபகப்படுத்தும் இத்திரைப்படம், தவறவிடப்படக்கூடாத ஒன்று.

"It's not a documentary, it's a story!"


தேர்தல் - அல்பேர்ட்டா

ழமைவாதகட்சியின் (Progressive Conservative) கோட்டையாக நெடுங்காலமிருந்த (44 வருடங்கள்) அல்பேர்டா மாகாணத்தை புதிய ஜனநாயக் கட்சி (New Democratic Party) பெரும்பான்மை இருக்கைகளுடன் (53/87) சுவீகரித்திருக்கின்றது. இந்த வெற்றியைப் பார்த்து, கொன்சர்வேடிவ் ஆதரவாளர்கள் எல்லாம் தமது நம்பிக்கைகளிலிருந்து மாறிவிட்டார்கள் என்றெல்லாம் எடுத்துக்கொள்ளமுடியாதெனினும், மாற்றத்தை விரும்பியிருக்கின்றார்கள் என்பது மட்டும் தெரிகின்றது. பழமைவாதக் கட்சியைவிட இன்னும் அடிப்படைவாதக் கட்சியான WildRose, தாராளவாத கட்சியான Liberal போன்ற கட்சிகளைத் தேர்ந்தெடுக்காமல் ஏன் என்டிபியைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது வியப்புத் தருகின்ற விடயம்.

இவ்வாறான ஒரு பெரும் அலை ஜாக் லேய்ட்டன் தலைவராக மத்தியில் இருந்தபோது கியூபெக் மாகாணத்தில் நிகழ்ந்திருக்கின்றது. அதற்கு ஜாக்கின் தலைமைப்பண்பு மீதிருந்த வசீகரமும் ஒரு முக்கிய காரணம். கியூபெக்கில் கூட தனிநாட்டுக் கோரிக்கையுடன் தொடங்கிய Parti Québécois இருந்தபோதும் பெருந்தொகையாக என்டிபியினரை கியூபெக் மக்கள் அன்று மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தனர்.

இவ்வாறு பழமைவாதக் கட்சி பலமாக இருக்கும் அல்பேர்டாவிலும், தனிநாட்டுக்குக் கோரிக்கை/விரிவான சுயாட்சி என்பது எப்போதும் தேர்தல்களத்தில் முக்கியபுள்ளியாக வைக்கும் அதை பெரும்பான்மையினர் ஆதரிக்கும் கியுபெக்கிலும் என்டிபியினரைத் தேர்ந்தெடுக்கும்போது, ஏன் இன்னும் குடிவரவாளர்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒன்ராறியோவில் என்டிபியினரை நீண்டகாலமாய் மாகாண/மத்தியரீதியில் தேர்ந்தெடுக்காது இருக்கின்றனர் என்பது சுவாரசியமான ஒரு கேள்வி.

அல்பேர்ட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 53 என்டிபியினரில் 27பேர் பெண் வேட்பாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கனடா அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கிய புள்ளி.

-----------------

மூன்று திரைப்படங்கள்

Wednesday, July 29, 2015

'நினைவு' பெறுமதியானது

'Still Alice' படத்தை நண்பரொருவருடன் சேர்ந்து பார்த்தேன். என்னால் இவ்வாறான நோய்களின் பாதிப்பைச் சொல்லும் படங்களைப் பார்க்க முடிவதில்லை. நண்பரோ இது நாளை உன்க்கோ அல்லது எனக்கோ நடக்கவும் கூடியது, ஒஸ்காரிலும் விருதுபெற்ற படம் நீ பார்க்கத்தான் வேண்டுமென இழுத்துச்சென்றார். அவர் பணிபுரிவதும் இவ்வாறான நோயாளிகளுடன் சம்பந்தப்பட்டது. எப்படி Alzheimer ஆல் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் குழந்தைத்தன்மைக்குப் போய்க்கொண்டிருப்பார்கள் என்பது பற்றியும், நாங்கள் கூறுவதை நம்பாது, தங்கள் 'ஞாபகத்தில்' இருப்பதே சரியென்று அடம்பிடிப்பார்களென்றும் கூறிக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அவர்களைச் சமாளிக்கமுடியாது role play செய்யவேண்டியிருக்குமென படத்தோடு ஒன்றிப்போன அவர் எனக்கும் இது பற்றி மேலும் விரித்துச் சொல்லிக் கொண்டு போனார்.

என்னைப் போன்ற இந்நோயைப் பற்றிய அவ்வளவு அறிதலற்ற எளிய பார்வையாளரும் விளங்கும்படியாக (ஆழமாகப் போகாவிட்டாலும்) இப்படத்தை எடுத்திருக்கின்றார்கள். இப்படி 'நினைவு' மெல்ல மெல்ல அழிந்து போகும்போது இங்கே வளர்ந்து பிறந்தவர்க்கும், எம்மைப் போன்ற இரண்டு வெவ்வேறு நிலப்பரப்புக்களில் வாழ்ந்தவர்க்கும் இருக்கும் வித்தியாசங்கள் பற்றியும் நண்பர் விளக்கிக்கொண்டிருந்தார் (அவரின் அனுபவத்தில் நம்மவர்களின் நிலை மோசமானது, முக்கியமாக நம்மிடையே இதுகுறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாததால், அவ்வாறானவர்களை விளங்கிக்கொள்வது மிகச் சிக்கலாக இருக்கிறது. அத்துடன் இந்நோய் பராமரிப்பில் தாக்கம் செலுத்தும் பொருளாதார வசதி, வாழ்ந்த/வளர்ந்த விதம்). அதுவும் நாம் சிறுவயதில் ஏதாவது வகையில் oppressed செய்யப்பட்டிருந்தால் அது இந்நோயின் பாதிப்பில் தெளிவாகத் தெரியும் என்றும் சொன்னார்.

படம் எப்படியென்று நண்பர் படம் முடிந்தபோது கேட்டார்.

கடந்தகாலத்தின் 'நினைவு'களை அழிப்பதுதான் கஷ்டமானது, அதற்கு எதிராகத்தான் இன்றையபொழுது நிறைய போராடிக்கொண்டிருக்கின்றேன். ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கும்போது நினைவுகளோடு வாழும் நாம் ஒருவகையில் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் போலத் தோன்றுகினறது எனச் சொன்னேன்.

Alzheimer நோயோடு தத்தளித்துக்கொண்டிருப்பவர்க்கு, நினைவு/நினைவுபடுத்தல் என்பது எவ்வளவு பெரிய கொடுப்பினையாக இருக்கும் 
(Feb 27, 2015)


து குறித்து அஞ்சியதோ அல்லது எவை குறித்து விமர்சனம் வைத்து எள்ளல் செய்ததோ, இறுதியில் எதிர்த்த பாதையிற்கே திரும்பிச் செல்லவேண்டியதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை.

...அல்லது எதை எதிர்க்கின்றோமே, அதன் மீதே நமக்கு தீரா விருப்பு ஒருவகையில் வந்துவிடுகின்றது, ஆகவே அதையதை அதன் இயல்பில் விட்டுவிடலாம் என்று ஒரு கருத்தை மறைமுகமாய்ச் சொல்ல வருகின்றதெனில் அதைப் பாராட்டலாம்.எனக்கு செல்வராகன் முன்வைக்கும் காதல்களே அநேகமாய்ப் பிடித்திருக்கின்றன. மணி ரத்னமும், கெளதம் வாசுதேவனும் சித்தரிக்கும் காதல்களில் அழகியல் இருப்பினும் பார்க்கும்போது ஏதோ ஒருவகையான விலகல் வருவதுண்டு.துல்ஹருக்கும் நித்யாவிற்குள்ளும் முகிழும் உறவைவிட, பிரகாஷ் ராஜிற்கும் அவரது துணைவியாருக்கும் இருக்கும் காதல் நெகிழ்வாகவும் நெருக்கமாகவும் இருந்தது. 
(apr 19)


ண்மையில் ஒரு குறும்படம் பற்றி நிறையப்பேர் சிலாகித்து எழுதுவதைப் பார்க்கின்றேன். இப்படம் பல மாதங்களுக்கு முன் கருத்தையறிவதற்காய் எனக்கும் அனுப்பப்பட்டடது. இதில் நிறைய விமர்சனங்கள் இருக்கிறது. ஆனால் இப்படம் பொதுவெளியில் எல்லோருக்குமாய்ப் பகிரப்படும்போது அதை முன்வைக்கின்றேன். எனினும் முயற்சியிற்கு வாழ்த்துச் சொல்லி அந்த நண்பருக்குப் பதில் அனுப்பியிருந்தேன்.

அந்தப் படத்தின் கதை சொல்லும் பின்னணியைப் பற்றி சிறிது அறிந்தவர்கூட அதிலிருக்கும் பல வழுக்கள் பற்றி எளிதாய்ச் சொல்லிவிடமுடியும். மேலும் துயரத்தை ஓவென்று தொடர்ச்சியாக அழுதுதான் சொல்லவேண்டும் என்கின்ற எந்த அவசியமுமில்லை. அப்படி திரையில் கண்ணீர் சிந்தாமலே நமக்குக் கண்ணீர் வரச்செய்த எத்தனையோ படங்கள் இருக்கின்றன.

சரி ஆகக்குறைந்தது திரையில் அழுகின்ற காட்சியைத் தவிர்க்கத்தேவையில்லை, ஆனால் அளவுக்கதிகமாக அழுவது நாம் கூறவந்த விடயத்தை நீர்த்துவிடச் செய்துவிடும் என்பதை அறிவதும் கூட கலையல்லவா? அவ்வாறு ஒரு முக்கியமான விடயத்தை நீர்த்துவிடச்செய்ததற்கு உதாரணமாக இங்கு நடந்த திரைப்படவிழாவிற்கு நடுவராக இருந்தபோது பார்த்த 'கிளிநொச்சி' என்ற ('நிழல்கள்' ரவி நடித்த) படம் நினைவுக்கு வருகின்றது.

இந்தப்படம் மோசமான படம் என்றல்ல நான் கூறவருவது. இதைவிட சிறந்த குறும்படங்களைப் பார்த்தவன் என்றவகையில் இதிலிருக்கும் பலவீனங்களைத் தெளிவாகக் கண்டடைய முடிகிறது என்பதையே குறிப்பிட விழைகிறேன். இன்னொருவிடயம், இந்தப் படத்தை இயக்கியவரின் நண்பர்கள் அல்லது புதியவர்கள் பாராட்டுவதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் திரைப்படங்கள் மீது பித்தமுள்ள, நான் மதிப்பவர்கள் பலர் கூட இதை விதந்து பாராட்டுவதைத்தான் சகித்துக்கொள்ள சற்று முடியாதிருக்கின்றது. அதிலும் ஒருவர் நீண்டகாலம் திரைப்படங்கள் பற்றி நீண்ட கட்டுரைகள் எழுதி வருபவர், இப்படத்தின் வழுக்கல்/அதீத உணர்ச்சி குறித்து எதுவுமே கவனிக்காது பாராட்டியதை வாசிக்கும்போது இவர்கள் எல்லாம் இதற்காகவா இவ்வளவு காலம் எழுதித்தீர்த்தார்கள் என்ற சலிப்பே வருகிறது.

மேலும் விருதுகள் நிறைய கிடைப்பதாலோ, பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டாலோ மட்டும் ஒரு படம் நல்ல படமாகிவிடும் என்றுமில்லை. அத்ற்கு 'செங்கடல்' உட்பட நிறைய உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு புதியவர், இளைஞர் என்றவகையில் இந்தப் படத்தை எடுத்தவரைப் பாராட்டுவதில் பிரச்சினையில்லை. ஆனால் துருத்திக்கொண்டிருக்கும் வழுக்களை முன்வைக்காத விமர்சனமில்லாத பதிவுகளால் நாம் அவரை முன்னகர்த்துவதற்குப் பதிலாக, புதைகுழியிற்குள் இறக்கிவிடும் ஆபத்தே உண்டு.

கடந்த சில வருடங்களில் கலை இலக்கியங்களில் கொஞ்சம் நம்பிக்கை தந்தவர்களையே அதீதமாய்ப் புகழ்ந்து அவர்களை ஒரே வட்டத்திற்குள் பரிதாபமாய்ச் சுழலவிட்ட உதாரணங்கள் நம்மிடையே நிறைய உள்ளன. மேலும் படைப்பிலக்கியங்கள் மீது காதல் கொண்டவர்கள் காத்திரமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாமல் ஒருபோதும் கடந்து செல்லவும் போவதில்லை. ஒரு படைப்பாளி இன்னும் சிறந்த படைப்புக்களைத் தரவேண்டும் என்று விரும்பினால் உரிய விமர்சனங்களை உரிய காலத்தில் தெளிவாய் முன்வையுங்கள். அதுவே ஒருவகையில் நீங்கள் அவர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கவும்கூடும்.
(feb 25)

வினோதினியின் 'முகமூடி செய்பவள்'

Tuesday, July 28, 2015


ப்போது தத்தளிக்கும், எப்போது நிதானமாகும் என்று அறியா மனது எனக்கு உரித்து. என்றும் போல விளிம்பில் சிதறத்துடிக்கும் கணங்களை வாசிப்புடன் தாண்டிச் செல்லவே இம்முறையும் முயற்சித்திருந்தேன்.

அண்மைக்காலமாய் கவிதைகளை நிதானமாய் இரசித்து முழுமையாய் வாசிக்கும் மனதையும் தொலைத்தே விட்டதாகவே உணர்ந்திருந்தேன். தமிழில்தான் இப்படித் தோன்றுகின்றதோ என யோசித்து, ஆங்கிலத்தில் வந்த தொகுப்புக்களையோ அல்லது சஞ்சிகைகளான American poetry review போன்றவற்றையோ வாசித்தாலும் அவற்றை வார்த்தைகளாய் மட்டும் இயந்திரத்தனமாய் வாசித்துக்கொண்டுபோகின்றேன் போன்ற நினைப்பே வந்தது. தற்செயலாய் இன்று சென்னைப்புத்தகக்கண்காட்சியில் வாங்கியிருந்த வினோதினியின் 'முகமூடி செய்பவள்' ஐ எடுத்து வாசிக்கத் தொடங்கியபோது சட்டென்று உற்சாகமான மனோநிலைக்கு வந்ததைப் பார்க்க அதிசயமாயிருந்தது. எப்போதும் ஒரு தொகுப்பை வாசிக்கும்போது அதில் ஐந்தோ/பத்தோ கவிதைகள் என் மனதிற்கு நெருக்கமானதாய் மாறிவிட்டால் அதை ஒரு முக்கிய தொகுப்பாய் நினைத்துக்கொள்கின்றவன், நான். இதில் இப்படி நிறையக் கவிதைகள் இருந்ததால் சோர்ந்த மனது குதூகல நிலையை அடைந்ததோ தெரியவில்லை.

இப்போது சில கவிதைகள்:

அடையாளம்

பிறந்த நாள் முதல்
இன்று வரை
எனக்கான அடையாளங்கள் பல.
அறிமுகங்கள் நிகழ்தலும்
அவற்றின் மூலமே

மகள் மருமகள் பெறாமகள் பேத்தி என
நீண்ட பட்டியல் இன்னும் நீள்கிறது
இற்றை வரை

பள்ளிக்கூடத்தில் ஒன்றல்ல இரண்டல்ல பல
அலுவலகத்தில் கறுப்பழகி
தலை நகரில்
பலர் இந்தியாக்காரி
சிலர் பறைத் தமிழச்சி என்றும் வியக்க
ஊரிலோ வேறு வழக்கு
திமிர் பிடித்தவள்
பெண்ணா இவள் என்றனர்

பெண்ணே என்றேன் உரத்து

(2001)


தமிழன்

மழை தொடாத வானம்
வெயில் சுகித்த நேரம்
நெடுந்தூரம் நடந்த களை
அலுவலக நண்பன் ஜோனும் நானுமாக
அவக்காடோ பழச்சாறு ருசிக்கையில்
அருகே வந்தான் அவன்

தமிழனுடையது கிடைக்கவில்லையோ
என்ற முணுமுணுப்புடன் காதுக்குள்

ஒரு கணம் உலகப் பெண்களின் கோபமெல்லாம்
என்னுள் ஊறியதை உணருமுன்
அவன் போய்விட்டிருந்தான்

இந்திரன் போல் உடலெங்கும் குறிகளோடு
அவனைப் படைத்து
ஒவ்வொன்றாய்ச் சீவி எறிதல் வேண்டும் நான்

(2003)

மேலே 'அடையாளம்' என்றெழுதப்பட்ட் கவிதை ஆழியாளின் 'பிறந்தவீட்டில் நானொரு கறுப்பி' எனத் தொடங்கும் கவிதையை ஞாபகமூட்டியது. இது ஒன்றின் பாதிப்பில் மற்றதில் இருக்கிறதென அதிகம் ஆராயாமல் எந்த ஒரு பெண்ணும் தனக்குரிய 'அடையாளம்' எதுவெனத் தேடும்/திணறும் வெவ்வேறு தனித்துவமான கவிதைகளாய் இவையிரண்டையும் நாம் பார்க்கமுடியும்.

ஒரு பெண்ணை எந்த ஒரு ஆணும் அடக்கிவிடமுடியும். ஆனால் அவளுக்கு மறைமுகமாய்ப் பழிவாங்கவும் தெரியும் என்பதை நுட்பமாய்ச் சொல்லும் ஒரு நீள்கவிதையில் முதற்பகுதி இவ்வாறாக...

அவன் அவளுக்கு ஒரு பொருட்டல்ல

காதலித்த நாட்களில்
பகிர்ந்த முத்தங்களும்
பேசிய பல கதைகளும்
இருவருமாக நட்சத்திரங்களை வியந்ததும்
கடலைப் பாடியதும்
அவன் நினைவினிலில்லை.

அவன் அவளுக்கு ஒரு பொருட்டல்ல.
இருளில் அவள் மீது படரும் அவன் மூச்சும்
அவள் விருப்பின்றித் தொடைகளைப் பிரிக்கும் விரல்களும்
அவளுக்கு ஒரு பொருட்டல்ல

நடு இரவில் தீச்சுடர்களென ஒளிரும்
இமைக்காத அவள் கண்களும்
தொடுகையில் நெகிழாத அவள் உடலும்
அவனை மறுதலிக்க
பெருமூச்சுடன் மறுபக்கம்
திரும்பித் துயில்கிறான் அவன்

புன்னகைத்தபடி யன்னலூடாகத் தெரியும்
நட்சத்திரங்களை எண்ணத் தொடங்குகின்றாள் அவள்.

.............

இத்தொகுப்பிலேயே எனக்கு மிக நெருக்கமாய் ஆன கவிதை ஒன்றிருக்கிறது, அது...

ஒரு நாள் ஒரு மனிதன் ஒரு கவிதை

கடந்த நாட்கள் போலவே
இதுவும் இன்னொரு நாள்
மழையோ பனியோ அன்றி உணர்வோ
அதை மாற்றவோ பிற்போடவோ முடியாது.

அவன் எப்போதும் போலவே விழிக்கிறான்
யன்னலில் படிந்திருக்கும் பனியை முதன் முதலாகப்
பார்ப்பது போலப் பார்க்கின்றான்

அறையைச் சுற்றிவர அளவெடுக்கின்றன அவன் கண்கள்
ஒரு மெழுகுவரத்தியோடு கேக் இருக்குமா என்ற ஆவலில்
அன்றி ஒற்றை மலராவது,
இல்லை, இல்லவே இல்லை. அதற்கு வாய்ப்பில்லை.

அவன் உடைகளையும் இரவு படித்த புத்தகத்தையும்
பியர்க் குவளையும் தவிர வேறென்ன?

தன் தனிமையை உணர்ந்துகொள்கிறான்
ஒற்றை வாழ்த்துக்கூட இல்லை.
அவனது அறைக்குள் வர அவை எதற்கும் அனுமதியில்லை.
ஒரு சிறு பரிவுக்கேனும் விதியின்றி
வெறுமை சூழந்ததாகவே அந்நாளும்.
இருந்தும் அது அவனது வாழ்க்கை
கண்களைத் துளைத்தபடி துளிர்த்து விழுகின்றன துளிகள்
அவனால் அந்த நாளையும் வரவேற்க முடியவில்லை
பதிலாக அவன் தனக்கான
வாழ்த்துப்பாவைப் புனையத் தொடங்குகின்றான்.


உண்மையில் இந்தக் கவிதை முடிகின்ற இடந்தான் இன்னும் பிடித்திருந்தது. இவ்வளவு தனிமையுடனும் துயரத்துடனும் இருக்கும் ஒருவன் பெரும்பாலும் தனக்கான சாவுப்பாடலைத்தான் பாடக்கூடியவனாக இருப்பான் என நாம் நினைக்கும்போது, வினோதினி அந்த 'ஒருவனுக்கு' வாழ்வதற்கான நம்பிக்கையைக் கொடுக்கின்றார். வாழ்தல் என்பது நம்மை நாமே நேசிப்பதிலிருந்தும் தொடங்கலாமென்கின்ற ஒரு சிறுவிதையை வாசிக்கும் நம்மிடையே ஊன்றவும் செய்கின்றார்.

பெண் என்கின்ற தனக்கான அடையாளத்தைத் தேடும், வேற்றின ஆணோடு பழகுவதைப் பிடிக்கவில்லையெனச் சொல்கின்றவனுக்கு சாபமிடுகின்ற, தன்னை உதாசீனம் செய்கின்ற ஆணை நுட்பமாய் பழிவாங்குகின்ற பெண் மனதுதான், தனித்து துயரத்தோடு இருக்கும் ஒரு ஆணைப் பரிவுடனும் அணுகச் செய்கின்றது. அந்த ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான கவிதையை நீயே புனையென அவனுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.


( Mar 23, 2015)

The Theory of Everything

Thursday, July 23, 2015


லகில் தம் திறமைகளினால் பிரபல்யமடைந்தவர்கள் நமது கவனத்தை எப்போதும் ஈர்த்தபடியிருப்பார்கள். புகழ் வெளிச்சத்தில் எமக்குத் தெரிவது அவர்களின் ஒருபக்க வாழ்க்கையென்றால், இன்னொருபுறம் அவர்களுடன் நெருங்கிப்பழகியவர்களுக்கு அவர்களைப்பற்றிய வேறொருவிதமான வாழ்க்கை தெரியவும் கூடும். முக்கியமாய், பிரபல்யம் அடைந்தவர்களின் துணைகள் அவர்களைப் பற்றி மனந்திறந்து பேசும்போது/ எழுதும்போது சிலவேளை நாம் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் விம்பங்கள் உடைந்து நொறுங்கிவிடவும் கூடியவை. அந்த 'உடைத்தல்' எழுத்துலகத்திலிருந்து, விஞ்ஞான உலகம் வரை எல்லாப் பக்கங்களிலும் விரியக்கூடியது. 'The thory of everything' என்கின்ற இப்படம் ஸ்ரிபனின் (Stephen Hawking) முன்னாள் மனைவி ஜேன் எழுதிய 'Travelling to Infinity – My Life with Stephen' என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதால், ஸ்ரிபனின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை விட அவரின் தனிப்பட்ட வாழ்வையே அதிகம் இந்தப்படம் ஊடுருவிச் செல்கிறது.

முக்கியமாய் motor neuron நோயினால் 20களிலேயே பாதிக்கப்பட்டு  2 ஆண்டுகள் மட்டுமே அவரால் வாழமுடியும் எனச் சொல்லப்பட்ட ஸ்ரிபனைக் காதலித்து திருமணமும் செய்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஜேன் சேர்ந்து வாழ்ந்துமிருக்கின்றார். கடவுளை மறுத்து பிரபஞ்சம் கருந்துளைகளிலிருந்து உருவாகியதென நம்பும் ஒருவரும், கடவுளிடமும் தேவாலயத்திலும் நம்பிக்கை கொள்கின்ற இன்னொருவரும் சேர்ந்து வாழ்வதற்கு காதலின்றி வேறெது காரணமாய் இருந்திருக்கக் கூடும்.

ஸ்ரிபனோடு வாழுங்காலத்திலே ஜேனுக்கு இன்னொருவருடன் காதல் வருவதும், அதை ஸ்ரிபன் ஒருவகையில் ஏற்றுக்கொள்வதுமென யதார்த்தத்தை உணர்ச்சித்தளத்திற்குள் அதிகம் கொண்டு செல்லாது படம் விரித்துச்செல்கின்றது. பிறகு அவரைப் பராமரிக்கும் தாதியோடு சேர்ந்து வாழ்வதற்காய் ஸ்ரிபன் ஜேனை விட்டுப் பிரிந்து போகின்றார். நிஜவாழ்வில் (படத்தில் இக்காட்சிகளில்லை) இதன்பிறகு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளின் பின் ஜேனும் ஸ்ரிபனும் விவாகரத்துப் பெற்று, இருவரும் தமக்குப் பிடித்தவர்களை திருமணஞ்செய்தும் கொள்கின்றனர்.

2008 திருத்தி/திருப்பி எழுதப்பட்ட ஜேனின் நினைவுகளின் நூலையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டபோதும், ஜேன் 1999ல்எழுதிய 'Music to Move the Stars: A Life with Stephen' நூலில் தன் திருமணம் குறித்து சற்று கர்ரசாரமாகவும் எழுதியதாகவும், பின்னர் சிலவற்றை மென்மையாக -திருத்திய நூலில்- மாற்றி எழுதியதாகவும் கூறப்படுகின்றது. ஆக, இரண்டாவது நூல் வெளிவந்தபோது ஜேனுக்கும் ஸ்ரிபனுக்கும் இடையில் ஒரு சுமுகமான உறவு மீண்டும் முகிழ்ந்திருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
 
ன்னுடைய நோய் பற்றியோ அதன் வலியோ எதையும் தன் குடும்பத்திடம் மட்டுமின்றி, தன் நெருங்கிய துணையான ஜேனிடம் கூட ஸ்ரிபன் மனந்திறந்து பேசியதில்லை எனப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதுபோலவே ஜேன் நிறையக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எழுதிய Music to Move the Stars: A Life with Stephen பற்றிக் கருத்துக்கேட்டபோது, தான் தன்னைப் பற்றி எழுதப்படும் எந்த biography யையும் வாசிப்பதில்லை என்றே
ஸ்ரிபன் கூறியிருக்கின்றார். ஆனால் இந்தப் படத்தை ஸ்ரிபன் பார்த்ததோடு சில இடங்களில் தனது சொந்தக்குரலைப் பாவிக்கவும் அனுமதி கொடுத்திருக்கின்றார் என்றால், இத்திரைப்படம் அவரது சொந்தவாழ்க்கையிற்கு நெருக்கமாகத் திரைப் படமாக்கப்பட்டிருக்கிறதெனவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

The Beautiful Mind ற்குப் பிறகு பிரபல்யமான ஒருவரைப் பின் தொடர்ந்து எடுக்கப்பட்ட படங்களில் கவனிக்கத்தக்கதொரு படமிது. The Beautiful Mindல் நாஷ் தொடக்க காலத்தில் அவரைப் பராமரித்த தாதியொருவருடன் நெருங்கிப் பழகியதும், பின்னர் அந்தப் பெண் தான் கர்ப்பமெனக் கூறியபோது தன் குடும்ப வரலாறு/அந்தஸ்து காரணமாக அந்தப் பெண்ணை விட்டு நாஷ் விலகியவர் எனவும், ஆனால் அதைப் படமாக்கியபோது நேர்மையாகத் திரையில் காட்டவில்லை என்ற விமர்சனம் பின்னர் அப்படத்திற்கு வைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு The Thory of Everythingல் முக்கியமான எதுவும் மறைக்கப்பட்டிருக்காதெனவே நம்புகிறேன்.

(Dec 17,2014)

நயோமி முனவீராவின் 'Island of a Thousand Mirrors'

Wednesday, July 22, 2015

குறிப்பு 01:

யோமி முனவீராவின் Island of a Thousand Mirrors வாசித்துக் கொண்டிருக்கின்றேன். 1983ல் நடந்த ஜூலைக் கலவரம் பற்றி மிகுந்த வலியுடன் இந்நாவலில் அவர் பதிவு செய்திருக்கின்றார். அதிலும் அந்தக் கொடுங்காலத்தில் கர்ப்பிணியான தன் மனைவியை காரில் கூட்டிச்செல்லும்போது, கொல்லப்படுவதற்கு தயாரான நிலையிலிருக்கும் ஒரு தமிழ்ச்சிறுவனைக் காடையர்களிடம் இருந்து காப்பாற்ற முயல்வதில் தன்னுயிரை இழக்கும் ஒரு சிங்கள ஆண் பற்றி விபரிக்கப்படுகின்ற இடத்தை அவ்வளவு எளிதில் தாண்டிச் செல்லமுடியாது.. இந்த நாவலில் கதையைச் சொல்வதாய்க் கூறும் பாத்திரத்தின் மாமா/மாமியாக அவர்கள் இருக்கின்றார்கள்.

ஜூலைக் கலவரத்தின்போது, குழந்தைகளையும் முதியவர்களையும் கூடக்கொல்லும் நாட்டில் தன் பிள்ளைகளை வளர்க்கமாட்டேன என்று கூறி, இந்தக் கதைசொல்லியின் தாய் வெளிநாடொன்றுக்கு குடும்பத்தினருடன் வெளியேறுகின்றார். நாவலில் சிங்களக் குடும்பங்களும் தமிழ்க்குடும்பங்களும் ஒன்றாய் வாழ்ந்த, அவர்களின் பிள்ளைகள் தமிழும் சிங்களமும், ஆங்கிலமும் கலந்த ஒரு கலப்புமொழியைப் பேசிய காலங்கள் இனி என்றைக்குமே வராதா என்பதைப் பற்றியே நிறைய யோசித்துக்கொண்டிருந்தேன்.

1983 நிகழ்வுகளால் மிகுந்த குற்றவுணர்வு அடைந்த ஒரு சிங்களச் சமூகம் இருந்ததை, இப்போதும் அதற்காய் வருந்திக்கொண்டிருப்பவர்களை அவர்களின் எழுததுக்களினூடாகப் பார்க்கலாம். இந்த நாவல், முன்பொருமுறை (2007) தமிழாக்கம் செய்த சிங்களக் கவிதையொன்றை வாசிக்க மீண்டும் நினைவுபடுத்தியது.


வன்மையான பிரார்த்தனை

சுருள்சுருளான இதமான ஊதுவர்த்திப்புகை
அமைதியான நினைவில் நீந்துகின்றது;.
கரங்கள் குவிந்தும் தலைகள் குனிந்தும்
பிரார்த்திக்கின்றன.

கண்ணியத்துடன் அல்லது மிகுந்த பயபக்தியுடன்
தாமரைப்பூக்களுடன் பாதச்சுவடுகள் மணலில்....
பாதச்சுவடுகள் *டகோடாவை சுற்றியென....
தோன்றுவதும் மறைவதுமாய்
தோன்றுவதும் மறைவதுமாய்

போரால் சிதைந்த நாட்டில்
அமைதி இன்னும் கொஞ்சமிருக்கிறது
பூக்களின் நறுமணம்
சாம்பிராணிக்குச்சிகள்
சாந்தக்குணங்களுடைய ஒரு பிக்கு -
அமைதி.

இங்கே கோபப்படுவது ஒருபோதும் புத்திசாலித்தனமல்ல
கோபத்துடன் பிரார்த்திப்பது நல்லதுமல்ல
இருந்தும் உறைந்துபோன நினைவுகள்
சடுதியான மழையாய் பொழிந்து அணையை உடைக்கின்றது

இந்த பாழாய்ப்போன அரசியல்வாதிகள் - யாருக்கோ பிறந்த பிசாசுகள்
விசர்த்தனமான அளவுகோல்களுடன்
22 வருடங்களாய் நாட்டை முட்டாளாக்கினர் -
83லிலிருந்து, மலட்டுப்போரை நியாயப்படுத்துவன்மூலம்
நாங்கள் மூடர்களாக்கப்பட்டோம்.

எனக்கு ஞாபகத்திலுண்டு
'களு ஜூலைய' -
கறுப்பு ஜூலை

கருமை கருமை கருமை.
நாங்கள் தடித்ததோல் இனவாதிகள்
கருமை, கருமை
நாங்கள் கொலைகாரர்கள்.
கறுப்பு
நான் கோயிலொன்றில் உள்ள மறு.

நான் கோபமடையமாட்டேன், நான் கோபமாயில்லை.
ஞாபகமுண்டு; இது ஒரு விகாரை
பாராளுமனறம் அல்ல.
எனினும்
இங்கேயிருப்பது இனியும் உவப்பானதல்ல,
அற்புதமான காட்சிகள் சுவையற்றதாயின; எனது
கோபம் அந்த அழகை நொடிகளில் கரைத்துச்சென்றது.


-ருக்சன் பெரேரா (From the collection, Elysium & Other Poems)
*Dagoda


(mar 11)


குறிப்பு 02:

Island of a Thousands Mirrors ஐ இப்போது வாசித்து முடித்தாலும், அதில் கடந்துபோக முடியாத பகுதிகள் எனப் பல இருக்கின்றன. முக்கியமான ஒரு தமிழ்ப்பெண் இராணுவத்தால் கூட்டாய் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்குவதை சில வரிகளால் கடந்துசெல்லாது, விபரமாக எழுதிய பகுதி மனதுக்கு மிகவும் அழுத்ததைக் கொண்டுவந்திருந்தது. நாவலை அப்படியே நிறுத்திவிட்டு நண்பரொருவருக்கு தொடர்ந்து வாசிக்கவே கஷ்டமாயிருக்கிறதென text செய்திருந்தேன். அவருக்கும் தொடக்கத்தில் இலங்கையில் நிகழ்ந்தது பற்றி அறியவிரும்புகின்றவர் என்பதால் இதை பரிந்துரைக்கலாமென நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு அழுத்தமான பகுதிகளையெல்லாம் தாங்குவாரா என இப்போது யோசிக்கிறேன்.

நாவலின் முற்பகுதியில் ஒரு தற்கொலைப்போராளியின் சம்பவம் விபரிக்கப்பட்டு எப்படி இவர்களால் எளிதாய் உயிரைத் துறக்கமுடிகிறதென கேள்வி எழுப்பப்படும். அதன் காரணங்களைத் தேடிப்போகின்ற ஒருபுள்ளியாக பாலியல் வன்புணர்வு இருப்பதை வாசிப்பவர்கள் கண்டுணரமுடியும்.

(mar 12)


குறிப்பு 03:

நீங்கள் வாசிக்குமொரு நாவல் உங்களைப் பாதிக்கிறது. உங்கள் பதின்மக் காலங்களையும், போர் பற்றிய ஞாபகங்களையும் கிளறும் அந்த எழுத்தின் வீரியத்தை வியக்கின்றீர்கள். நாவலாசிரியருடன் உங்கள் வாசிப்பையும் நெகிழ்வையும் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றீர்கள். அவர் உடனேயே உங்களுக்குப் பதிலளித்தால் எப்படியிருக்கும்? அவ்வாறான ஒரு சந்தர்ப்பம்...

Hi Elanko,

I am so happy to hear from you and that you liked the book. I was very scared when I was writing it that I didn't know anything about the war zone and what you all went through. So it makes me very happy to hear that you connected with what I wrote.


-Nayomi


(apr 03)

ரொபர்டோ பாலானோவின் 'Woes of the True Policeman'

Sunday, July 19, 2015

ரொபர்டோ பாலானோவின் இந்த நாவல் ஓரினப்பாலினர் பற்றி அதிகம் பேசுகிறது. சிலேயில் பிறந்த பேராசிரியர், பார்சிலோனாவில் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும்போது அங்கே படிக்கும் மாணவன் ஒருவனோடு தற்பால் உறவில் ஈடுபட்டதால் வளாகத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றார். துணையை ஏற்கனவே இழந்த இந்தப் பேராசிரியர், தன் மகளைக் காப்பாற்றும் பொருட்டு, மெக்சிக்கோவின் (அமெரிக்க எல்லையிலுள்ள) ஒரு நகருக்கு இடம்பெயர்கின்றார்.
கதை பிறகு மெக்சிக்கோவிற்கும், ஸ்பெயினுக்குமென பேராசிரியர் - மாணவர் எழுதும் கடிதங்களினூடு நீளுகின்றன.

பேராசிரியருக்கு மெக்சிக்கோவிலும் ஒரு மாணவனோடு உறவு முகிழ்கிறது. ஒருகட்டத்தில் அவரது மகள் பேராசிரியரின் தற்பால் உறவைக் கண்டும் கொள்கிறார். இதற்கிடையில் மெக்சிகோவில் பேராசிரியர் இருக்கும் நகரில் இளம் பெண்கள் பலர் கொல்லப்படுகின்றார்கள். அதற்கான காரணங்களைத் தேடும் பொலிஸார் ஒருகட்டத்தில் பேராசிரியரின் கடந்தகால வாழ்க்கையை அறியும்பொருட்டு அவரையும் பின் தொடர கதை பல்வேறு திசைகளில் பிரிந்து போகின்றது.

போர்ஹேஸ் மீது மிகுந்த ஈர்ப்பிருக்கும் ரொபர்டோவை இந்த நாவலில் இன்னும் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். பேராசிரியர் மொழிபெயர்த்திருக்கும் பிரான்ஸ் எழுத்தாளர் பற்றியே ஒரு தனிக்கதை இந்நாவலில் நகர்கின்றதென்றால், இன்னொரு புறத்தில் மெக்ஸிக்கோவின் ஒருபகுதியை பெல்ஜியத்தினரும் பிரான்ஸ்சுக்காரரும் தாக்கும்போது அங்கிருந்த மக்களால் துரத்தியடிக்கப்படுகின்ற பல நூற்றாண்டுகள் பின்னாலுள்ள வரலாற்றுக் கதையும் சொல்லப்படுகின்றது. ரொபர்டோ நமக்கு அறிமுகமான எழுத்தாளர்களோடு எப்படி தனது கற்பனை கதாசிரியர்களையும் உலாவ விடுகின்றாரோ, அவ்வாறே அவர் கூறும் வரலாறுகளும் உண்மையில் நிகழ்ந்தவைதானா என்ற சந்தேகம் இந்நாவலை வாசித்துக்கொண்டு போகும்போது வருவதும் இயல்பானது.

ந்நாவலில் வரும் பேராசிரியர் பாத்திரமே ரொபர்டோவின் புகழ்பெற்ற 2666ல் வேறொருவராக வருகின்றார். ஸ்பெயினில் இருக்கும் பாஹதியா தான் எழுதுவதாய்க் கூறும் god of homosexuals ஐ பற்றி வரும் விவரிப்புக்கள், குறிப்புக்கள், குழப்பங்கள், இடையில் தொடரமுடியாத் தவிப்புக்கள் எல்லாமே ரொபர்டோ எழுதிய 2666 பற்றியதுதானோ என்று ஒரு நேர்கோட்டில் வைத்துப் பார்ப்பது கூட சுவாரசியம் தரக்கூடிய விடயம்.

இந்நாவலை ரொபர்டோ 1980களில் எழுதத்தொடங்கி அவர் இறக்கும் வரை  (2003)  தொடர்ந்து முடிவுறாத ஒரு நாவலலென, இந்நாவலின் பிற்பகுதியில் ரொபர்டோவின் மனைவி குறிப்பிடுகின்றார். ஆனால் இது நாவலே அல்ல, ரொபர்டோ தான் எழுதிய மற்றும் எழுத நினைத்த நாவல்களிற்கான பெருங்குறிப்புக்களே இவ்வாறு ஐந்து பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டு அவரது கணனியிலும் கையெழுத்துப் பிரதியிலும் இருந்ததென, ரொபர்டோ எப்படி தன் நூல்களை வெளியிடவேண்டும் என உரையாடிய இன்னொரு எடிட்டர் குறிப்பிடுகின்றார். ரொபர்டோ பிற்காலத்தில் அவரின் மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்தவர் என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்.
ஒருவரின் எழுத்து பெரும்புகழ் அடையும்போது, அவர்களின் முடிக்கப்படாத எழுத்துக்கள் பிரசுரமாவது கடந்தகாலங்களில் நிகழ்ந்து வந்திருக்கின்றன. ஆனால் அப்படி வெளிவருபவை எழுத்தாளரின் விருப்பாய் இருந்திருக்குமா அல்லது எழுதியவரின் முழுமையான ஆக்கங்களை இவ்வாறு முழுமையடையாத படைப்புக்கள் வெளிவரும்போது பாதிக்கச் செய்யாதா என்பவை விவாதத்திற்குரியவை.

என்னைப் பொறுத்தவரை, ரொபர்டோ எப்படி தன் நாவல்களை எழுதியிருக்கின்றார், எவ்வாறு பல்வேறுவகைகளில் திருத்தித் திருத்தி வேறு திசைகளில் புனைவுகளை மாற்றியிருக்கின்றார் என்பதை அறிவதும், ரொபர்டோவின் நாவல்கள் எந்தப் புள்ளிகளில் முழுமையடைகின்றன என தெரிந்து கொள்வதும் கூட ஒருவகையில் சுவாரசியந் தரக்கூடிய ஒரு விளையாட்டுப் போல இருக்கிறது.

(நன்றி: எதுவரை)

வீடு திரும்புவதற்கான வழிகள்

Monday, July 06, 2015

Alejandro Zambraன் 'Ways of Going Home' நாவலை முன்வைத்து...

ந்நாவல் சிலியில் 1985ல் நிகழும் பூகம்பத்துடன் ஒரு ஒன்பது வயதுச் சிறுவனின் நினைவுகளுடன் தொடங்குகின்றது.  நகரொன்றில் தமக்கான தனித்துவங்களுடனும் தனிமையுடனும் இருக்கும் மனிதர்களை பூகப்பம் ஒரேயிடத்தில் கொண்டுவந்து சேர்க்கின்றது. அப்போது சிலியில் பினோச்சேயின் இருண்ட ஆட்சி நடக்கின்றது. இந்தவேளை ஒன்பது வயதுச் சிறுவன், தன்னிலும் மூன்று வயது மூத்த கிளாடியாவைச் சந்திக்கின்றார். அவர் மீது வயதுக்கு மீறிய மெல்லிய ஈர்ப்பு சிறுவனுக்கு இருக்கின்றது. கிளாடியாவை ஈர்க்கும் நோக்கில், கிளாடியாவின் வேண்டுகோளிற்கிணங்க, அவரின் மாமா ஒருவரை இந்தச் சிறுவன் உளவு பார்க்கச் சம்மதிக்கின்றார். தனியே வசிக்கும் கிளாடியாவின் மாமாவின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காய், தன் பெற்றோரிடம் வயிற்றுக்குப்பிரச்சினை எனப் பொய்சொல்லி பாடசாலைக்குக் கூடச் செல்லாது, தீவிரமாய் வேவு பார்க்கின்றார்.

ஒருமுறை கிளாடியாவின் வீட்டில் ஒரு இளம்பெண் தங்கியிருப்பதைக் கண்டுபிடித்து அந்தப் பெண் எங்கே போகின்றார் என பின் தொடர்ந்து தொலைதூரத்திற்கு பஸ்சில் இச்சிறுவன் போகின்றார். பின்னாளில் கிளாடியா இன்னொரு பதின்மரை தன் நண்பராக அறிமுகப்படுத்துகின்றார். இனிமேல் கிளாடியா தன்னைத் திரும்பிப் பார்க்கப் போவதில்லை என்கின்ற பொறாமை காரணமாக,  இந்த உளவு பார்க்கும் வேலை, தானாகவே இல்லாமற்போகின்றது.

ரண்டாவது அத்தியாயம், இந்நாவலை எழுதும் எழுத்தாளரை நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. இன்னும் சொல்லப்போனால் மேலே கூறப்பட்ட முதலாவது அத்தியாயம், இந்த நாவலாசிரியரால் எழுதப்படும் ஒருநாவலின் பகுதியே ஆகும், இவ்வாறாக ஒரு நாவலிற்குள் இன்னொரு நாவலாக கதை வளர்கின்றது. நாவலாசிரியருக்கு எமெ என்கின்ற பெண்ணோடு நீண்டகால உறவு இருந்து இப்போது பிரிவு ஏற்பட்டுவிட்டது. ஆனால் நாவலாசிரியருக்குள் இன்னும் எமெ மீதான காதல் இருக்கின்றது.

இந்த இரண்டாம் பாகத்தில், அவர்கள் மீண்டும் நீண்ட இடைவெளியின் பின், சந்தித்துக் கொள்கிறார்கள். நாவலாசிரியர் வீட்டுக்கு வந்து, தங்கிவிட்டும் எமே போகின்றார். எனினும் இருவருக்குமிடையில் ஏதோ குறிப்பிட்டுச்சொல்ல முடியா புள்ளிகளில் விலகலும் இருக்கின்றது. நாவலாசிரியர் தன் நாவலை வாசிக்கச் சொல்லிக்கேட்கும், ஒவ்வொருமுறையும் ஏதாவது காரணங்களைச் சொல்லி எமெ அதை நிராகரித்தபடியே இருக்கின்றார். ஒருகட்டத்தில் எமேயிற்கு தான் எழுதிக்கொண்டிருக்கும் நாவலை வாசிக்க விருப்பமில்லை என்பதை இந்நாவலாசிரியர் அறிந்துகொள்கின்றார். எனினும் எமே, 'உனக்கு நாவல் எழுதுவதே பிடித்தமானது, தொடர்ந்து எழுதி நாவலை முடி' என்று உற்சாகப்படுத்துகின்றார். எனெனில் நாவலாசிரியர் தன் நாவலை எழுதுவதும் இடைநடுவில் நிறுத்துவதுமான மனோநிலையுடன் எப்போதும் போராடிக்கொண்டிருப்பவர்.

மூன்றாம் பாகம், மீண்டும் நாவலாசிரியர் எழுதும் நாவலிற்குள் போகின்றது. முதலாம் பாகத்தில் சிறுவனாக இருக்கும் சிறுவன், தற்செயலாக தன் குழந்தைமைக்கால நண்பியான கிளாடியாவை நீண்ட வருடங்களின் பின் சந்திக்கின்றார். கிளாடியா இப்போது நியூ யோக்கில் வசிக்கின்றார். அவருக்கு ஆர்ஜென்ரீனா காதலர் ஒருவரும் இருக்கின்றார். கிளாடியா, தன் தகப்பனின் மறைவிற்காய் சிலியிற்குத் திரும்பி வருகின்றார்.

அப்போது கிளாடியா தன் சிறுவயது இரகசியத்தை இந்த -வளர்ந்துவிட்ட- சிறுவனுக்குச் சொல்கிறார். பினோச்சேயின் ஆட்சிக்காலத்தில் கிளாடியாவின் மாமா எனப்பட்டவர் பினோச்சேயின் ஆட்சியைக் கவிழ்க்க விரும்பும் இயக்கத்திற்காய் ஒரு தலைமறைவுப் போராளியாகச் செயற்படுகின்றார். அத்துடன் கிளாடியாவின் மாமா எனப்பட்ட ராகுல், உண்மையில் கிளாடியாவின் தந்தையாகிய ரொபர்டோவே.

அன்றைய இருண்டகாலத்தில் கிளாடியாவின் மாமாவான ராகுலை ஆர்ஜென்ரீனாவிற்கு அனுப்பிவிட்டு, அவரின் அடையாளத்தில் ரொபர்டோ தலைமறைவாக சிலியில் இயங்குகின்றார். ஆகவே இயக்க இரகசியங்கள் அரசால் கண்டுபிடிக்கப்படக்கூடாது என்பதற்காய், அவர் கிளாடியாவின் குடும்பத்தைப் பிரிந்து தனியே வாழ்கின்றார். இப்படி ஒரு தலைமறைவு வாழ்வை தன் தகப்பனார் வாழ்கிறார் என்று கிளாடியாவிற்கு அவரின் தாயாரின் கூறப்பட்டாலும், அதை இரகசியமாக வைத்திருக்கச் சொல்லப்படுகின்றது. முதல்பாகத்தில் சிறுவனாக இருக்கும்போது அவர் பின் தொடர்ந்து பஸ்சில் போகின்ற இளம்பெண் வேறு யாருமல்ல, கிளாடியாவின் மூத்த சகோதரியே அது.

இந்த நாவலின் ஓரிடத்தில், 'நாம் யாரோ ஒருவரின் கதையை சொல்லத் தொடங்குகின்றோம், ஆனால் இறுதியில் நாம் நமது கதையையே சொல்லி முடிகின்றோம்' எனச் சொல்லப்படுவதைப் போல இந்நாவலாசிரியர் முதல் அத்தியாயத்தில் எழுதுவதாய்க் கூறும் கதையும், இரண்டாம் அத்தியாயத்தில் அவரைப் பற்றிய நிகழ்வுகள் சித்தரிக்கப்படுவதும்.... எது நிஜம் எது புனைவு என்கின்ற இரண்டும் கலக்கப்பட்ட  ஓர் இடத்திற்கு  இந்நாவலை வாசிக்கும் நாங்கள் மூன்றாம் பாகத்தில் வந்தடைகின்றோம்.

கப்பனின் மறைவிற்காய் நாடு திரும்பும் கிளாடியாவிற்கும் அவரின் மூத்த சகோதரிக்கும் -பூர்வீக வீடு யாருக்கு உரித்து என்பதில்- சச்சரவு வருகின்றது. கிளாடியா நமக்குக் கதையைச் சொல்பவரோடு வந்து தங்குகின்றார். பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் அவருக்கும் கிளாடியாவிற்குமிடையில் உடல்சார்ந்த உறவும் இயல்பாய் மலர்கிறது. ஒருநாள் சடுதியாய் கிளாடியா கதைசொல்லியின் பெற்றோரைச் சந்திக்கவேண்டும் எனவும், தான் சிறுவயதில் கழித்த நகருக்குப் போகவேண்டும் எனவும் பிரியப்படுகின்றார். கதை சொல்லியிற்கு இதில் அவ்வளவு உடன்பாடில்லை. எனெனில் தன் இருபதாவது வயதில் வீட்டை விட்டு விலகியோடி, பகுதிநேரமாய் தானே உழைத்து பல்கலைக்கழகப் படிப்பையும் முடித்தவர். பெற்றோருக்கும் அவருக்குமிடையில் விலகல் வந்தற்கு, சொல்லப்படாத நிறையக் காரணங்கள் இருக்கின்றன.

மீண்டும் பெற்றோரிடம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு திரும்பும், கதைசொல்லியிற்கும் அவரின் தந்தையிற்கும் அரசியல் குறித்த புள்ளிகளில் முரண் உரையாடல் நிகழ்கின்றது. தந்தை  பினோச்சேயின் மறைமுகமான ஒரு  ஆதரவாளரென கதைசொல்லி குற்றஞ்சாட்டுகின்றார். அரசியல் சூடாகும் இரவுணவு வேளையில் எல்லோரும் ஒவ்வொரு தனித் தீவுகளாகின்றார்கள். கிளாடியா ஒரு பினோச்சே எதிர்ப்பாளரின் மகள் என கிளாடியா இல்லாத சமயத்தில் கோபத்துடன்  கதைசொல்லி பெற்றோரிடம் கூறுகின்றார். மகனுக்கும் தந்தையிற்கும் விரிசல் வந்ததைப் பார்த்த தாய், தாங்கள் அலெண்டேயின் ஆதரவாளரோ எதிர்ப்பாளரோ இல்லாததுபோல, பினோச்சேயின் ஆதரவாளரோ எதிர்ப்பாளரோ இல்லை என்கின்றார்.

உண்மையில் இது இவ்வாறான சர்வாதிகார/கொடூர ஆட்சியில் வாழ்ந்த தலைமுறையினருக்கும், அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கும் இடையில் வரும் -அவ்வளவு எளிதில் தீர்க்கமுடியாத- மிகப்பெரும் சிக்கல். ஹிடலரின் ஆட்சியில் இருந்த ஜேர்மனியின் தலைமுறையிற்கும், அத்ற்குப் பிறகு வந்த தலைமுறையினருக்கும் வந்த முரணும் இதுவே. அதைப் போன்றே சிலேயின் பினோச்சேயின் காலங்களில் தப்பிப்பிழைத்த தலைமுறையினர், பினோச்சேயின் காலங்களின் பின்னாலும் கேள்விகளையும், விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாவலின் ஓரிடத்தில் 'நாம் போர் முடிந்துவிட்டதென மீண்டும் வீடு திரும்புகின்றோம். ஆனால் உண்மை என்னவென்றால், போர் இன்னும் எங்களின் மனங்களில் முடியவே இல்லை என்பதாகும்' எனச் சொல்லப்படுகின்றது. அதேபோல ஒவ்வொரு பெரும் அழிவின் பின்னாலோ/கொடுங்கோல் ஆட்சியின் பின்னாலும் அவற்றின் வடுக்கள் அவ்வளவு எளிதில் மறைவதுமில்லை, மறைக்கவும் முடியாது.

ஒருநாள் தங்கலே இனிதாய் அமையாத நிகழ்வாய் கதைசொல்லியிற்கும் பெற்றோருக்கும் இடையில் ஏற்பட்டுவிடுகின்றது. மீண்டும் தமது சொந்த நகருக்கு  கதைசொல்லியும் கிளாடியாவும் திரும்புகின்றனர். கிளாடியாவும் சிலநாட்களுக்குள், சண்டைபிடித்த தன் சகோதரியோடு போய்ச் சேர்ந்ததோடு, சிலியில் தனக்கு எதுவுமில்லை அமெரிக்கா மீளப்போகின்றேன் என்கின்றார். 'என்னை விட்டு உனக்கு இன்னொருத்தன் மீது பிடிப்பு வந்துவிட்டதா?' என கிளாடியாவின் ஆர்ஜென்ரினாக காதலரை நினைவில் வைத்து கதைசொல்லி கேட்கின்றார். 'என் மனதில் இப்போது எந்தக் காதலரும் இல்லை. ஆனால் அப்படியொருவர் இருப்பதாய் நீ நினைத்துக்கொள்வதுதான் நல்லது. எனென்றால் அப்போதுதான் என்னை உன்னால் மறக்கமுடியும்' என்கின்றார்.

றுதி அத்தியாயத்தில், நாவலாசிரியர் எமெயிடம் 'நான் உன்னைப் பற்றித்தான் என் நாவலில் எழுதிக்கொண்டிருக்கின்றேன். நீ வாசிக்கவேண்டும்' என்கிறார். அந்தப் பிரதியை வாசிக்கும் எமெ, 'நீ நன்றாக நாவல் எழுதியிருக்கின்றாய். ஆனால் என்னைப் பற்றி நீ எழுதியதைவிட, நீ  உனக்கான கதையைத்தான் இதில் எழுதியிருக்கின்றாய்' என்கின்றார். இப்படி முன்னர் கணவன்-மனைவியாய் இருந்த இவர்கள் பிரிந்து மீண்டும் இணைந்தாலும், எந்த இடத்திலும் தாங்கள் பிறரைப் பற்றி விமர்சிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார்கள். எனெனில் அந்தத் திசையில் மீண்டும் போனால் இன்னொரு பிரிவே வரும் என்பதை இருவரும் நன்கு அறிந்திருக்கின்றனர் ஆனால் அதேசமயம் ஒரு இயல்பான உறவு தங்களுக்கிடையில் இப்போது இருக்கவில்லை என்பதையும் உணர்கின்றார்கள். ஒருநாள் எமெ -மீண்டும்- நாவலாசிரியரை விட்டுப் பிரிந்து போகின்றார்.

நாவலாசிரியர் மீண்டும் தனிமையுடனும், எழுதி முடியா நாவலின் பிரதியுடனும் இருக்கின்றார். சிறுவயதில் வந்த பூகம்பத்தைப் போன்று திரும்பவும் ஒரு பூமியதிர்ச்சி நகரத்தில் ஏற்படுகின்றது. 'எல்லோரும் நலமாக இருக்கின்றார்களா?' என விசாரித்தபடி நாவலாசிரியர் வீதிகளினூடாகச் செல்கின்றார். எமெயின் வீட்டிற்குள் சென்று எமெ எவ்வித ஆபத்துமில்லாது இருக்கின்றாரா எனக் கேட்க விரும்புகின்றார். ஆனால் எமெ நண்பர்களோடு உரையாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுவிட்டு எமெயைச் சந்திக்காது அவரது வீட்டைத் தாண்டிச் செல்கின்றார். எமெயிடம் அவருக்கு இன்னும் அன்பும் பரிவும் இருந்தாலும் அவர்களுக்கிடையில் இனி காதல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதாக நாவல் முடிகின்றது.

நாவல், நாவலுக்குள் இன்னொரு நாவல், பிறகு இந்த இரண்டு நாவல்களைச் சேர்ந்த மூன்றாவது நாவலை வாசகர்களான நாங்கள் என வாசிப்பதென மாயச்சுழல் நிறைந்த வாசிப்பைத் தருகின்ற புதினம் இது. கிளாடியாவும், எமெயும் ஒரே பாத்திரத்தின் வெவ்வேறு வடிவங்கள் என்று தோன்றச் செய்வது போல கதைசொல்லியும், நாவலாசிரியரும் ஒருவரோ எனச் சந்தேகத்தையும் வாசிக்கும்போது இது தரக்கூடியது.

இந்நாவலில் வரும் நாவலாசிரியர், கிளாடியாவின் பாத்திரத்தை உருவாக்கி நாவலொன்றை எழுதத்தொடங்குவது, அவர் தன் நடைமுறைவாழ்வில் தன்னைவிட்டுப் பிரிந்துபோய்விட்ட மனைவியான எமெயுடன் மீண்டும் இணைந்துகொள்வதற்கான முயற்சியேயாகும். ஆகவேதான் தான் எழுதிக்கொண்டிருக்கும் நாவலை எமெ வாசிக்கவேண்டுமென ஒவ்வொருபொழுதும் விரும்பிக்கொண்டிருக்கின்றார். ஆனால் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த நாவலை வாசிப்பதை எமெ ஒத்திவைப்பதுடன் இறுதியாய் வாசிக்கும்போதுகூட நீ என்னைப் பற்றி எழுதியிருக்கின்றாய். அது உன் பார்வையினூடு பார்க்கும் நானே தவிர, உண்மையான நான் அல்ல எனத்தான் சொல்லவும் செய்கின்றார்.

இறுதியில், நாவலாசிரியரால் அந்த நாவல் பூர்த்தியாக்கப்படவுமில்லை. எமெ மீண்டும் திரும்பி வந்து அவருடன் சேரவுமில்லை. ஆனால் பினோச்சே காலத்தின் இருண்ட பக்கங்களும், அமைதியாக்கப்பட்ட குரல்களும், மனச்சாட்சிகளின் குற்ற வாக்குமூலங்களும் முடிக்கப்படாத பிரதியிலிருந்து வாசிக்கும் நமக்கு கடத்தப்படுகின்றன. அதுவும் முக்கியமானதே.

வீடு திரும்புதல் என்பது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. அவ்வாறு வீடு திரும்பியவர்களுக்கும், அவர்கள் விட்டு விலகிச் சென்றதைப் போல, அந்தப் பழைய சூழ்நிலைகள் அப்படியே திரும்பவும் வாய்ப்பதுமில்லை. எவரெனினும் வீடு திரும்புகின்றார்களோ, இல்லையோ, அவர்களால் நினைவுகள் என்றென்றைக்குமாய் சுமந்துகொண்டிருக்கும் வரலாறு எனும் வீடுகளிலிருந்து அவ்வளவு எளிதில் தப்பியோடவும் முடிவதில்லை.


(நன்றி: 'அம்ருதா' - 2015, ஜூன் இதழ்)