கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஆசி.கந்தராஜாவின் 'கள்ளக் கணக்கு'

Monday, December 31, 2018


சி.கந்தராஜாவின் புதிய தொகுப்பான 'கள்ளக்கணக்கில்'  பதின்மூன்று கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே  வெளியான அவரின் சிறுகதைத் தொகுப்புக்களான 'பாவனை பேசலன்றி' (2000), 'உயரப்பறக்கும் காகங்கள் (2003) ஆகியவற்றிலிருந்து ஆறிற்கும் மேலான கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இளவயதில் எழுதிவிட்டு, நீண்ட காலத்திற்கு எழுதாமல் இருந்து பிறகு மீண்டும் எழுதத்தொடங்கியமை மற்றும் பல நாடுகளுக்கு தொழில் நிமித்தம் பயணஞ்செய்தவை என்பவற்றில் தனக்கும் அ.முத்துலிங்கத்திற்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றதென ஆசி.கந்தராஜா  குறிப்பிடுகின்றார்.

இத்தொகுப்பில் இருக்கும் கதைகள் பல பல்வேறு நாடுகளின் பின்னணியில் நிகழ்கின்றன. எனினும் இலங்கையோ அல்லது ஆஸ்திரேலியாவோ ஓர் இணைநாடாக இந்தக் கதைகள் ஒவ்வொன்றிலும் வந்தபடியும் இருக்கின்றன. இத்தொகுப்பில் இருப்பவற்றில் 'அன்னை', 'யாவரும் கேளிர்', 'புகலிடம்', 'காதல் ஒருவன்', 'மிருகம்' மற்றும் 'வெள்ளிக்கிழமை விரதம்' ஆகிய கதைகள் அதன் பேசுபொருளாலும், நடையாலும் முக்கியமாகின்றன.

'அன்னை'யும், 'வெள்ளிக்கிழமை விரதமும்' ஆபிரிக்கா நாடுகளில் நடைபெறுகின்றவை.  இரண்டு கதைகளிலும், வரும் பாத்திரங்களும் கிட்டத்தட்ட ஒரேவிதமான சிக்கல்களைச் சந்திக்கின்றன. 'அன்னை'யில் ஒரு கொலையோடு அந்தச் சிக்கல் தீர்க்கப்படுகின்றது. 'வெள்ளிக்கிழமை விரதத்தில்' உடலை நுகர்வாக்கி வேறொருவகையில் அந்தச் சிக்கலிருந்து முக்கிய பாத்திரங்கள் தப்பிக்கொள்கின்றன.

ஆபிரிக்காக் கண்டத்தில் பல்வேறு பழங்குடிகள் (tribes) இன்னமும் உயிர்ப்புடன் இருந்துகொண்டிருக்கின்றன. அதை அதன் மானிடவியல்தன்மையுடன் விளங்காதவரை நமக்கு அவர்களின் மரபுகள்/பண்பாடுகள் என்பவை ஆச்சரியத்தையும், திகைப்பையும் தரக்கூடியவையாக இருக்கும். சினுவா ஆச்சுபேயின் நாவல்களை, முக்கியமாய்  Things Fall Apart, No Longer At Ease போன்றவற்றை வாசித்திருப்பவர்க்கு ஆபிரிக்கக் குழுமங்களை எப்படி விளங்குவதென்ற ஒரு வரைபடம் கிடைக்கக்கூடும். எனினும் தமிழ்ச்சூழலில்  இலத்தீன் அமெரிக்கக் கலாசாரம் அறியப்பட்டவளவுக்கு, இன்னும் ஆபிரிக்கப் பழங்குடி இனங்களின் பண்பாட்டு வரைவியல்கள் விரிவாகப் பேசப்படவில்லை. அந்தவகையில் ஆசி.கந்தராஜாவின் இந்தக் கதைகள்- ஒருவகையில் நேரடிச்சாட்சியாக இருப்பதாலும்- வாசிக்கும் நமக்குச் சுவாரசியமாகத் தெரிகின்றன.

'புகலிடம்' என்கின்ற கதை, அகதிகளாக உலகெங்கும் பரவிய நம்மைப்போன்றவர்க்கு மிக அணுக்கமாக உணரக்கூடிய கதையாகும். கதை லெபனானில் நிகழ்கின்றது. சிரிய உள்நாட்டு யுத்தத்தினாலும் பெற்றோரை இழந்து அகதிகளான சகோதரர்கள் இருவர் ரோஸாப்பூக்களை விற்பதால், அவர்களோடு நெருக்கமாகப் பழகும் சந்தர்ப்பம் இந்தக் கதையில் வரும் கதைசொல்லிக்கு கிடைக்கின்றது. இவ்வாறு ரோஸாப்பூக்களை ஐரோப்பாவின் தெருக்களில் விற்கும் ஈழத்தமிழர்களைப் பற்றி  வி.என்.நைபால் தனது 'Magic Seeds' நாவலில்  எழுதியதும் நினைவுக்கு வருகின்றது. அலி என்கின்ற சிரியாவிலிருந்து அகதியாகிய பதின்மவயதினன், தனது பத்து வயதுத் தங்கையோடு லெபனானின் பெய்ரூட் தெருக்களில் அலைந்துதிரிகின்றான். இவ்வளவு சிறுவனாக இருந்தாலும் அலிக்கு சிரிய உள்நாட்டுப் பிரச்சினை குறித்து தெளிவான புரிதல்கள் இருக்கின்றன. அதைக் கதைசொல்லிக்குப் பகிரும் அலி தனது தந்தையார் ஒரு பாடசாலையில் அதிபராக இருந்தபோது கொல்லப்பட்டார் என்கின்றான். பின்னர் தாயாரோடு ஒரு அகதிமுகாமில் இருந்தபோது,  தங்கள் தலையில் துப்பாக்கி அழுத்தப்பட தாயும் தங்களின் முன்நிலையில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிச் சுட்டுக்கொல்லப்பட்டார் என்கின்றான். எந்தக் குழந்தையாலும் தாங்கமுடியாத, பார்க்கவே கூடாத  சம்பவங்களை அனுபவித்த  அலியும், அவனது சகோதரியும் பெரும் மன அழுத்ததோடும் துயரத்தோடும் வாழ்வதை கதைசொல்லி புரிந்துகொள்கின்றார்.

ஒருநாள் அகதிகளாக அலையும் அவர்களுக்கு லெபனானிலும் நிம்மதியில்லாது போகின்றது. சிறுமியான சகோதரி மீது தெருவில் போகும் ஒருவன் பாலியல் அத்துமீறல் செய்கின்றான். தங்கையைக் காப்பாற்றுவதற்காக கொலை செய்கின்ற நிலைக்குப் போகின்றான் அலி. இனி பொலிஸ் வந்து அலியைக் கைதுசெய்து அலியின் வாழ்வு சிதையப்போகின்றது என்று நினைக்கும் தருணத்தில் ஒரு முஸ்லிம் பெரியவர் வந்து அந்தக் குழந்தைகளை கூட்டத்திலிருந்து பிரித்தெடுத்து எங்கேயாவது தப்பிப்பிழையுங்கள் என தப்பவைப்பதோடு கதை முடிகின்றது.

அகதிகளுக்கு அவர்கள் சொந்தமண்ணில் இருந்த விரட்டப்பட்ட துயரத்தோடு, அவர்கள் அடைக்கலம் புகுந்த நாடுகளிலும் ஒரு எளிதான வாழ்வு அமையாததையும் இந்தக்கதையினூடு நாம் புரிந்துகொள்ளலாம். இலங்கையிலிருந்து போர்க்காலங்களில் 'தொப்பூள்கொடி உறவு' எனக் காலம் காலம் சொல்லப்படுகின்ற இந்தியாவுக்கு படகுகளில் போய் அங்கே கவனிக்கப்படாத மானிடர்களாய் அகதிமுகாங்களில் முடக்கப்பட்ட ஏதிலித்தமிழர்களின் வரலாறும் நம்முன்னே நிகழ்ந்துகொண்டிருப்பதை அசையாய்ச் சாட்சிகளாய்ப் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் நாமல்லவா?


தேபோன்று இலங்கையில் இன்னும் துயரமான வாழ்வைக் கொண்டிருக்கும் இந்திய வம்சாளியினரின் கதையை 'யாவரும் கேளிர்' கூறுகின்றது. எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் இலங்கை சென்ற பரம்பரையைச் சேர்ந்த முத்துசாமியின் வாழ்க்கை 1983ம் ஜூலைக் கலவரத்தின்போது திசைமாறுகின்றது. ஏற்கனவே தொழில்சங்க நடவடிக்கைகளால் சிங்களவரின் வெறுப்பைச் சம்பாதித்த முத்துச்சாமியை, கலவரத்தை முன்வைத்து அவரின் வீட்டைக் கொளுத்துவதுடன், முத்துசாமியின் தங்கையையும் காடையர் குழு பாலியல் வன்புணர்ந்து செய்து கொலைசெய்கின்றது. அந்தத் துயரத்தோடு நாடுவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பும் முத்துச்சாமியும் அவரின் தாயும் ஏற்காட்டுத் தேயிலைத் தோட்டத்திற்குள் அடைக்கலம் புகுகின்றனர்.

அங்கேயும் 'சாதி தெரியாத சிலோன்காரர்' என ஏற்காடு தேயிலைத்தோட்டங்களைச் சொந்தமாக வைத்திருக்கும் ஆதிக்க சாதிகளால் முத்துச்சாமியைப் போன்றவர்கள் விலத்தி வைக்கப்பட்டுப் பலிவாங்கப்படுகின்றனர். இலங்கையிலும் நிம்மதியாக இருக்கமுடியாது இந்தியாவிற்கு வந்தும், இயல்பான வாழ்க்கை வாழமுடியாத பலரின் வாழ்க்கை இந்தக் கதையினூடு காட்டப்படுகின்றது. எப்போதும் விளிம்புநிலையாகவே வைக்கப்பட்டிருக்கும் மலையகத்தமிழரை நமது எந்த அரசியல் கட்சிகள் மட்டுமின்றி இலக்கியம் சார்ந்தும்  புறமொதுக்கும் நிலையே இன்னும் இருக்கின்றதென்பதையும் நாமனைவரும் நன்கு அறிவோம்.

'காதல் ஒருவன்' கதை, ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்தாலும் அதனூடு ஈரானின் கலாசாரம் பற்றிய ஒரு குறுக்குவெட்டுப் பரப்பு நமக்கு காட்சிப்படுத்தப்படுகின்றது. தனது மனைவி தனக்குத் 'துரோகம்' செய்துவிட்டாள் என்பதற்காக வாழ்க்கை இழக்கும் ஒரு தம்பதியினர் கதை. தனிமனிதருக்கான சுதந்திரம் பல்வேறு புலம்பெயர்ந்த நாடுகளில் -இலங்கைத்தமிழர் உட்பட- பல இனங்களுக்கு இருந்தாலும்,  ஏதோ ஒருவகையில் சமூகத்தளைகளிலிருந்து அவர்களில் பலரால் வெளிவரமுடியாமல் சிக்கல்படுவதையே, இந்த ஈரானியத் தம்பதிகள் நமக்கு வெளிப்படுத்துகின்றனர். காலம் அதன்பாட்டில் நகர்ந்தாலும், வாழ்வின் மீது நம்பிக்கை இழக்காது தனது முதல் இரண்டு பிள்ளைகளை தனது விவாகரத்துப் பெற்ற கணவனுக்கு - முஸ்லிம் முறைப்படி- விட்டுக்கொடுக்கவேண்டி வந்தாலும், மூன்றாவது பிள்ளையைத் தன்சொந்தக் காலில் நின்று வளர்த்து பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் றொற்நொக் என்னும் பெண்ணின் உறுதி நம்மை அதிசயக்க வைக்கின்றது.

புலம்பெயர்ந்த வாழ்வென்பென்பதை பல ஆண்கள் தாம் 'இழந்து வந்த சொர்க்கமென' நனவிடைதோய்ந்து கவலையுறும்போது, பெரும்பாலான பெண்கள் அதை வசந்தி ராஜா தனது கவிதையொன்றில் கூறியதுமாதிரி 'தங்கத்தாம்பாளத்தில் வைத்துத் தரப்பட்ட சுதந்திரம்' எனக்கொண்டாடுவதையும் நாம் நினைவில் கொள்ளலாம். அந்தக் கவிதையிற்குப் பொருத்தமான ஒரு கதையாக 'காதல் ஒருவனை'க் கொள்ளலாம்.

'அந்நியமாதல்' கதை பங்களாதேஷில் நிகழ்கின்ற கதை. எப்படி இன்னமும் முதலாளிகள் என்ற மமதை கொண்டு, தம் சக பணியாளரை அடக்குவதையும், அதேவேளை வெள்ளை நிறத்தைக் கண்டு மண்டியிட்டு அடிபணியும் இன்னமும் போகாத 'காலனித்துவ மனோபாவத்தை'யும் இந்தக் கதையில் வரும் யூசூப் என்கின்ற அப்பாவி மனிதனின் பாத்திரத்தினூடு நமக்கு விவரித்துக் காட்டப்படுகின்றது.

பலர் பல்வேறு நாடுகளுக்கு தொழில் நிமித்தமோ அல்லது புதிய நாடுகளைத் தரிசிக்கவேண்டுமென்கின்ற அளப்பரிய காதலினாலோ போய்க்கொண்டிருப்பார்கள். எனினும் மிகச்சிலரே அந்த அனுபவங்களைச் சேகரமாக்கி புனைவாக்கும் பொறுமையும், திறமையும் கொண்டிருப்பவர்கள். அந்தவகையில் ஆசி.கந்தராஜாவின்  இந்தத்தொகுப்பிலுள்ள கதைகள் பல மிகச்சிறப்பாகவே இருக்கின்றன. நம்மில் பலருக்கு பிற மனிதர்களை/அவர்களின் கலாசாரங்களை புரிந்துகொள்வதில் மிகுந்த சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் ஆசி.கந்தராஜா,வெவ்வேறு நாட்டுப் பின்புலங்களில் வரும் கதாபாத்திரங்களை எழுதும்போது, அவர்களின் பண்பாட்டுப் பின்புலங்களில் வைத்து அப்பாத்திரங்களை விளங்கிக்கொள்ளவே விரும்புகின்றார்.

சமகாலத்திற்கோ அல்லது நமது விழுமியங்களுக்கோ உடன்படாத விடயங்கள் நடக்கின்றபோதும், தனக்கான தனிப்பட்ட தீர்ப்புக்களை அளிக்கவோ, வாசகர்களை ஒற்றைத்தன்மையில் விளங்கிக்கொள்ளும் புள்ளிகளையோ தராது, அவரவர் அவரவர்க்கு விரும்பியமாதிரி புரிந்துகொள்வதற்கான வெளிகளை கந்தராஜா தனது கதைகளில் தருவதைக் குறிப்பிட்டாக வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு என்றாலும், அண்மையில் வந்தவற்றில் தவிர்க்காது வாசிக்கவேண்டிய ஒரு தொகுப்பென இதைத் தயக்கமின்றிக் கூறலாம்.

---------------------------------------------
(நன்றி: 'காலம்' சஞ்சிகை, 2018)

பிள்ளையானின் (என்.சந்திரகாந்தன்) 'வேட்கை'


-எல்லோருக்கும் சொல்வதற்கு கதைகள் இருக்கின்றது. எனவே பிள்ளையானாகிய சந்திரகாந்தனுக்கும் தனது கதையைச் சொல்வதற்கும் எம் எல்லோரையும் போல ஒரு வெளி இருக்கின்றது. எமக்கும் எவ்வகையான அரசியல் தெரிவுகள் இருப்பினும், அதை நிதானமாகக் காழ்ப்பின்றி கேட்பதற்கும் நிதானம் வேண்டும்.
-சந்திரகாந்தன், குழந்தைப் போராளியாக தனது பதினாறாவது வயதில் புலிகள் இயக்கத்தில் 90களில் சேர்ந்தவர். கருணாவின் பிளவு உருவாகிய 2004 வரை, 14 வருடங்கள் புலிகள் அமைப்பில் இருந்திருக்கின்றார். 2008-2012 காலப்பகுதியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சரும் ஆகியிருக்கின்றார்.
-சிறையில் தற்போது இருக்கும் சந்திரகாந்தன் மட்டக்களப்பிலிருந்து கைவிலங்கிடப்பட்டு திருகோணமலையிலிருக்கும் மாகாணசபை அமர்வுகளில் பங்குபெறுவதற்காய்ப் போகும்போது அவர் கடந்து சென்ற இடங்களைப் பற்றிய நினைவுகுறிப்புகள் மட்டுமே இதில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 'சிறைப் பயணக் குறிப்புகள்' என்றாலும் அதில் சிறை பற்றிய விபரங்கள் அரிது. ஒருவகையில் இல்லையென்றே சொல்லிவிடலாம்.
-இந்த நூலில், ஏன் தான் சிறைக்குள் வைக்கப்பட்டிருக்கின்றார் என்ற குறிப்பு எதுவுமே இல்லை என்பது முக்கிய பலவீனம். ஒருவர் சிறையிலிருந்தால் அவர் எதன் பொருட்டு சிறைக்குள் வைக்கப்பட்டிருக்கின்றார் என்று தெரிவித்திருக்கவேண்டும். ஒரிடத்தில் மட்டும், தாங்கள் ஆயுதங்களை இலங்கை அரசிடம் கையளித்தபோது தமக்கு பொதுமன்னிப்புத் தரப்பட்டதாய் சொன்னார்கள், அதை அவர்கள் பின்பற்றவில்லை என மட்டும் குறிப்பிடுகின்றார்.
-இன்னொரு பலவீனம், அவர் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சசராக இருந்தவர். கிழக்கு மாகாணம் என்பது மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை என்கின்ற மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியது. அவரது பணிகளும், குறிப்புகளும் மட்டக்களப்போடு மட்டும் அடங்கிவிடுகின்றது. யாழ்ப்பாணியத்திற்கு எதிராக போராடுவதாய் அலுப்புத்தருமளவிற்கு சொல்கின்றவர் அவர்.  சிலவேளை இதைவாசித்துவிட்டு திருகோணமலைக்காரரோ  அல்லது அம்பாறைக்காரரோ கிழக்கு மாகாணத்தில் நாங்கள் வரமாட்டோமா என்று கேட்டால் சந்திரகாந்தன் என்ன விடை வைத்திருக்கின்றாரோ தெரியாது.
-முஸ்லிம் மக்கள் மீது தான் பரிவுள்ளவர் என்றாலும் அதை மீறி கிழக்கு மாகாணத்து தமிழ்மக்கள் மீது அக்கறை என்று சொல்லிக்கொண்டு முஸ்லிம்கள் மீது ஒருவகையான வெறுப்பு உமிழப்படுகின்றது. முக்கியமாய் இறால் பண்ணைகளை யாழ்ப்பாணக்காரனும், ஓட்டமாவடிக்காரனும் மட்டக்களப்பில் எடுத்துவிட்டான் என்று சொல்வதிலிருந்து, இன்றைய முஸ்லிம் முதலமைச்சர் பற்றிக் கூறும் இடத்திலெல்லாம் அந்தக் காழ்ப்பு கண்கூடு. இறுதி அத்தியாயத்தில் தன்னை முஸ்லிம் வெறுப்பாளன் என்று எவரும் சொல்லிவிடக்கூடும் எனத் தற்பாதுகாப்பு எடுத்துக்கொண்டவுடன் முன்னர் சொல்லதெல்லாம் இல்லையென்றாகிவிடாது. ஒரு முதலமைச்சராக இருந்தவர்,  இப்படி இரு இனங்களுக்கிடையில் எரியும் பிரச்சினைகளையெல்லாம் எழுந்தமானமாய்க் கையாள்வது அவ்வளவு அழகுமல்ல.
-தான் 2004ல் முதலமைச்சராக இருந்தபோது தமிழர்கள் பெரும்பான்மையாக மாகாணசபையில் இல்லையென்று சொல்லி தன் மீது முஸ்லிம்கள் எதிர்ப்பைக்காட்டினர் என்று சொல்லும் அதே சந்திரகாந்தன், இன்றைய மாகாணசபையில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தும், முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சர் கொடுத்தற்காய் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைத் திட்டித்தீர்க்கின்றார். இது எவ்வளவு பெரும் முரண் என்பது சந்திரகாந்தனுக்கோ அல்லது அவரைச் சுற்றியிருப்பவர்க்கோ தெரியவில்லையா?
-முதலமைச்சராக இருந்த சந்திரகாந்தன் செய்கின்ற அபிவிருத்தி எல்லாம் மக்கள் தேர்ந்தெடுக்கின்ற ஒரு அரசியல்வாதி செய்வதில்லையா? இதில் அவர் சொந்தம் கொண்டாட  என்ன இருக்கின்றது என்பதும் எனக்கு விளங்கவில்லை. ஏன் மகிந்த காலத்தில் செய்யப்பட்ட நெடுஞ்சாலை உள்ளிட்ட அபிவிருத்திகள் எல்லாம், போர்க்காலத்தில் ஏனையநாடுகளால் கொடுக்கப்பட்டு நிதியிலிருந்தே மகிந்தா எடுத்துச் செய்திருந்தார். போர் முடிந்துவிட்டது, பணம் இருந்தது. கொஞ்சத்தை அபிவிருத்தியிற்கு புல்லுக்குத் தேவையானதை எடுத்து நெல்லுக்கு இறைத்தமாதிரியானது. இதை இந்த அபிவிருத்திக்குப் பொறுப்பான உயர்பதவியில் இருந்த ஒருவரே நேரடியா எனக்குச் சொல்லியிருந்தார். ஒரு அரசியல்வாதி இன்று மக்கள் வரிப்பணத்தில்/பிறநாடுகளின் நிதியுதவியில் செய்யவேண்டியதைச் செய்துவிட்டாலே ஆஹா அற்புதம் என்று பாராட்டவேண்டும் என்று மனோநிலையை யார் உருவாக்கியது?
-இந்த 'வேட்கை' முழுதும் தமிழ்க் கூட்டமைப்பு (எனக்கும் அவர்களைப் பிடிக்காது என்பது வேறுவிடயம்)மீதும், 'வன்னிப்புலிகள்' மீதும் குற்றச்சாட்டு வாசிக்கப்படுகின்றது. இலங்கை அரசு மீது ஒருதுளி விமர்சனமும் இல்லை. என்ன பெளத்த பேரினவாத அரசு எமக்கு எல்லா உரிமைகளையும் தந்துவிட்டதா? இல்லை, எமக்கு எல்லாம் கிடைத்தபோது நான் தான் இதையெல்லாம் அறியாது தூங்கிவிட்டேனா?
-16 வயதில் சந்திரகாந்தன், பிள்ளையான் ஆகப் போய் தன் 14 அருமையான வருடங்களை எதற்காக இழந்தாரோ அதன் சிறுதுளிகூட இன்னமும் நமக்கு எட்டவில்லை என்பதை சந்திரகாந்தன் வெளியில் சொல்ல மறுத்தாலும் அவரது மனச்சாட்சி அதையறியும். அதைப் பேசும்போதுதான் ஒரு நேர்மையான சந்திரகாந்தனை நாமறியமுடியும். இனிவரும் காலத்தில் அவர்க்குக் கிடைத்த புதிய அனுபவங்களையும் வைத்து, இவற்றைப் பேசுவார் என்று நம்புவோமாக.
-கிழக்கு மாகாணத்திற்கு யாழ்ப்பாணிகளாக நாம் செய்த/செய்யும் அட்டூழியங்களை  நாம் மறுக்கமுடியாது. நாம் எப்படி முஸ்லிம்களை வடமாகாணத்தில் இருந்து விரட்டினோமோ, அப்படியே நாம்தான் கிழக்கு மாகாணத்தவர்களை எங்களிடமிருந்தும் விலக்கிவைத்தோம் என்பதும் உண்மை. தமிழர்களாகிய நாம் எனக்குரிய உரிமைகளைப் பெற ஆயுதமேந்திப் போராடியதற்கு சிங்களப் பேரினவாதமே காரணம் என்று எப்படிக் கூறுகின்றோமோ, அந்தளவிற்கு கிழக்கு மாகாண மக்கள் எங்களை விட்டு விலகிப் போவதற்கும் நாம்தான் காரணம் என்பதையும் ஒப்புக்கொண்டு, அவர்களது தனித்துவங்களோடு தனியே இருக்கவேண்டும் என்று கேட்டால் அதை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.
-ஆனால் என்ன சிக்கலென்றால்,  சந்திரகாந்தன் வென்ற 2004-2008 தேர்தலில் தமிழ்க்கூட்டமைப்பு போட்டியிடவில்லை. அதற்குப் பிறகு நடந்த எந்தத் தேர்தலிலும் கிழக்கின் தனித்துவத்தை வலியுறுத்தும் சந்திரகாந்தனால் முதலமைச்சராக ஆகவோ, அவர் சார்ந்தவர்களோ குறிப்பிட்ட ஆசனங்களை வெல்லவோ முடியவில்லை. தமிழ்க்கூட்டமைப்பு இன்றும் வடக்கு கிழக்கு இணைப்பைக் கைவிடாத ஓர் அரசியல் அமைப்பென்றால் கிழக்குத் தமிழ் மக்கள், வடக்கு மக்களோடு இணைந்து அரசியல் உரிமைகளைப் பெற விரும்புகின்றார்கள் என எடுத்துக்கொள்ளலாமா?
-சந்திரகாந்தன் தொடர்ந்து தமிழரசு கட்சியிலிருந்து, தமிழ்க்கூட்டமைப்பிலிருந்து இன்றைய தமிழ்ப்பேரவை வரை கிழக்கு மாகாணத்தவர் எவரும் தலைமையேற்கவில்லை என்று கூறுகின்றார். அப்படியெனில் சம்பந்தர் எந்த இடத்தைச் சேர்ந்தவர்? இல்லை திருமலை கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேறிவிட்டதா?
-16 வயதில் விடுதலைப் போருக்காய்ப் போன ஒருவர் 34 வயதில்,  மாகாண முதலமைச்சராவாது வரவேற்கத்தக்கதே. ஆனால் விடுதலைப் புலிகள் மீது இவ்வளவு விமர்சனமும், அந்த 'வன்னிப்புலிகள்' சந்திரகாந்தனுக்கும் அவரது நண்பர்களுக்கும் நிறையச் செய்ததன்பிறகும்  'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்' என்ற பெயரைத் தன் கட்சியின்பெயரில் காவிக்கொண்டிருப்பது எதற்கு? அந்த அரசியலிலிருந்து விடுபட்டு தன்னை புத்துயிர்ப்பாக்க எது அவரைத் தடை செய்கிறது அல்லது பெயரில் விடுதலைப் புலிகள் என்று இருப்பது வாக்குகள் ஏதோ ஒருவகையில் கிடைக்கும் என்பதற்காகத்தான் என்றால் இது அரசியல் வியாபாரம் அல்லவா?
-இத்தனைக்கும் அப்பால் சந்திரகாந்தன் தன்னுடைய அனுபவத்தில் இருந்து இதை எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது.  இதன் மூலம் எப்படியெனினும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வேன் என்று ஒருவர் முன்வருவது பாராட்டத்தக்கது. ஏனெனில் எமது சூழலில் ஆயுதப்போராட்டம் முடிந்தபின் அரசியல் செய்கின்ற எல்லோரும் தம்மைப் புனிதர்களாக உருவகித்துக்கொண்டு அரசியல்/செயற்பாட்டுக்களத்தில் இறங்குகின்றார்கள். அவ்வாறு இறங்கும் அனைவரும் செய்யவேண்டியது முதலில் சுயவிமர்சனமே. சந்திரகாந்தன் இதை எழுதினாலும் இதில் எந்த சுயவிமர்சனமும் இல்லை என்பதும் ஒரு குறைப்பாடு.
-கருணாவின் பிளவோடு 'வன்னிப்புலிகள்' செய்த படுகொலைகள் பதியப்பட்டிருப்பது முக்கியமானது. இன்னமும் வெருகலில் படுகொலைகள் நடைபெறவில்லை என்பதைச்  சொல்லிக்கொண்டுதான் நம்மில் பெரும்பான்மையோர் இருக்கின்றோம். ஒரு கொலையா இருந்தாலென்ன, பத்து, நூறு கொலைகளாய் இருந்தாலென்ன? அவை கொலைகள்தான். வெளிப்படையாகவும் உரத்தும் பேசுவதே அவ்வாறு பலியானவர்கட்கு நாம் கொடுக்கும் குறைந்தபட்ச மரியாதையாக இருக்கும்.
-அதேகாலத்தில் கருணாவும், சந்திரகாந்தனும் நிகழ்த்திய வேட்டைகளையும் வரலாற்று பார்த்துக்கொண்டல்லவா இருந்தது. சந்திரகாந்தன் அவற்றை எழுதாது தவிர்த்துவிடுவது அதுவும் 'எல்லோருக்குமான' முதலமைச்சராக இருந்த ஒருவர்க்கான அறமாகாது.  வன்னிப்புலிகளுக்கு ஆதரவான ஆயுதம் ஏந்தியவர்களை மட்டுமின்றி,  பாராளுமன்ற உறுப்பினராக இருந்தஜோசப் பரராஜசிங்கம் முதல் ரி.ஆர். மனிதாபிமானப் பணியாளர் உள்ளிட்ட ஆயுதம் ஏந்தாதவர்களையும் கொன்றது யாரென்பதையும் சந்திரகாந்தனினதும், கருணாவினதும் மனச்சாட்சிகள் அறியுமல்லவா?
-புலிகள் விலகிப்போகும் தம் உறுப்பினர்க்கே என்ன தண்டனை கொடுப்பார்கள் என்பதைச் சாதாரண மக்களே அறிவார்கள். மாத்தையா போன்றோருக்கு என்ன செய்தார்கள் என்பதையும் நாடே அறியும்.மேலும் தமக்குப் போட்டியென நினைத்த சகோதர இயக்கங்களையும் எவ்வாறு இல்லாமல் ஆக்கினார்கள் என்பதையும் வரலாறு நினைவில் வைத்திருக்கின்றது. இவ்வளவையும் ஒரளவு அறிந்திருக்கக்கூடிய 14 வருடங்கள் அதே அமைப்பில் இருந்த சந்திரகாந்தன், தங்களின் பிளவோடு நடந்த சகோதரப்படுகொலையைப் பேசும்போது, இந்த நீண்டவரலாற்றை மறந்துவிட்டுப் பேசுவது நியாயமில்லையல்லவா? அந்த 14 வருடகால இயக்க வாழ்வில் அவர் சார்ந்திருந்த இயக்கத்தோடு கூட்டுப்பொறுப்பையும், அதில் தனிப்பட்ட ஒருவராக தனிப்பட்ட பொறுப்பையும் கட்டாயம் எடுத்திருக்கவேண்டும். அதையெல்லாம் செய்யாமல் கருணாவின் பிளவோடு நடந்ததை மட்டும் எழுதுவது இந்த நூலின் அடிப்படை விடயத்தையே கேள்விக்கு உட்படுத்துவதாக இருக்கின்றது.
-எந்த இயக்கமாயிருந்தால் என்ன அல்லது ஆயுதம் ஏந்தாமல் இருந்த எங்களைப் போன்றவர்களாய் இருந்தாலென்ன, எங்கள் எல்லோர்க்கும் கூட்டுப்பொறுப்புணர்வு இருக்கின்றது. மக்களாக இருந்துகொண்டு எவரையும் கொலைசெய்யாதுவிட்டதால் நாமொன்றும் உயர்வானவர்களும் அல்ல. மற்றவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி கேள்வி கேட்கும் அதிகாரமும் அதனால் எங்களுக்கு வந்துவிடவும் முடியாது. ஆனால் ஒருவர் அரசியல்தளத்தில் இயங்கப்போகின்றார் என்றால் இந்தக் கேள்விகளுக்குப் பதில் கூறவேண்டியது அவசியம்.  முக்கியமாய் தன்னை சுயவிமர்சனம் செய்யாதவிடத்து அவரின் அரசியல் பயணம் அவ்வளவு சிறப்பாகப் போவதில்லை என்பதை சந்திரகாந்தனைப் போன்றவர்கள் அறியவேண்டும்.
-இறுதியாக இன்று சட்டத்தரணிகளாய் சொகுசாக வாழ்ந்துவிட்டு அரசியல்வாதிகளாகவும், பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு செயற்பாட்டாளர்களாவும்/ஆய்வாளர்களாகவும் இருப்பவர்களையும் விட, சந்திரகாந்தன் போன்று தமது இளமையை, தாம் நம்பிய கொள்கையிற்காய் இழந்தவர்களுக்கு அரசியல் செய்வதற்கு பலமடங்கு நியாயங்கள் உள்ளன என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான்வேண்டும்.
-அதேவேளை ஒருவர், தான் கடந்தகாலத்தில் செய்த தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு பொதுவெளியிற்கு வரும்போதே, நிச்சயம் ஒரு பெரும் மக்கள்திரள் அவர்கள் பின் வரும். அதை சந்திரகாந்தன் மட்டுமில்லாது, இறுதி யுத்தத்தில் பல துன்பங்களை அனுபவித்த பிற முன்னாள் போராளிகளும் உணரவேண்டும். ஒருவகையில் பார்த்தால், தமது உயிரைக்கூட இழக்கத் தயங்காது, ஒரு போராட்டதிற்காய்ச் சென்ற அவர்களைத்தான் நாம் உயரிய இடத்தில் வைத்துப் பார்க்கவேண்டும். அதுவே ஒரு பொறுப்பான சமூகத்தின் முக்கிய கடமையாகவும் இருக்கும்.
------------------------------------------------------------------
(நன்றி: 'அம்ருதா' - ஆனி, 2018)