கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மஞ்சள் கடித உறை (Yellow envelope) - பயணம்

Wednesday, June 12, 2019

The Yellow Envelope by Kim Dinan

'ஞ்சள் கடித உறை' (Yellow envelope) என்ற நூல், நாளாந்த அமெரிக்கா வாழ்க்கை முறையில் சலித்து ஒரு சோடி தமது சொத்துக்களை விற்றுவிட்டுப் பயணிப்பதைப் பற்றியது. நெடுங்காலப் பயணங்களுக்குரிய பயங்களோடும், பதற்றங்களோடும், எதிர்காலம் எதை மறைத்து வைத்திருக்கின்றது என்ற ஆவலோடும் அவர்கள் புறப்படுகின்றார்கள். இப்படி நெடும்பயணத்தை தென்னமெரிக்காவில் ஈக்குவாடார், பெருவில் தொடங்கி தென்னாசியாவரை கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகச் செய்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் தாம் வாழ்ந்த நகரத்தைவிட்டு விலகும்போது நண்பர்களிடம் விடைபெறுகின்றனர். அப்போது ஒரு நண்பர் மஞ்சள் அஞ்சலுறையைக் கொடுக்கின்றார். அதற்குள் பணமிருக்கின்றது. இந்த இணை அவர்களின் பயணத்தில் சந்திக்கும் மனிதர்களிடம் ஏதாவது வித்தியாசமாகக் காணும்போது, எந்த யோசனையுமில்லாது அதைக் கொடுக்கலாம் என்கின்றார் அந்த நண்பர். இப்படி மஞ்சள் கடித உறையில் இருக்கும் பணத்தைப் கொடுக்கும்போது அது குறித்து தனக்குத் தெரியப்படுத்த வேண்டியதில்லை எனவும் சொல்லப்படுகின்றது.

தென்னமெரிக்காவில் பயணிக்கும்போது, இந்த இணையின் பெண்ணுக்கு அவரது வாழ்வு குறித்த தேடல் குறுக்கிடுகின்றது. என்னவாக தான் ஆக விரும்புகின்றார் என்பதில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. இருபதுகளில் துணையைக் கண்டுபிடித்து, இப்போது முப்பதுகளில் இருக்கும் கிம், உலகத்தைத் தன்னியல்பில் பார்க்க முடியாது இருப்பதற்கு அவரது கணவன் பிரையனே காரணமென நினைக்கின்றார். ஆகவே அவர்கள் உறவு சிக்கலாகின்றது.

தென்னமெரிக்காவிலிருந்து ஜேர்மனியைப் பார்த்து, இந்தியா செல்லும்போது, கிம்மும் பிரையனும் தனித்தனியாகக் கொஞ்சக் காலம் இந்தியாவில் கழிப்போமெனத் தீர்மானிக்கின்றனர். கிம், பிற இரண்டு பெண்களோடு சேர்ந்து புனேயிலிருந்து கேரளாவுக்கு ஆட்டோ வாடகைக்கு எடுத்து ஓடிச் செல்கின்றார். கிட்டத்தட்ட 1500 மைல்கள் இருக்கும் பயணத்தில் பல்வேறுவகையான அனுபவங்களை அவர் சந்திக்கின்றார். ஒருவகையில் அது கிம் பிற பெண்களோடு தனித்துச் செய்யும் வீரதீரப் பயணம் எனச் சொல்லவேண்டும்.

பிரையனோ தனியே கொஞ்சக்காலம் வடக்கில் திரிந்துவிட்டு, கோவாவிற்குப் போய்ச் சேருகின்றார். கிம் தனது ஆட்டோப் பயணத்தில் மிக வறிய மக்களின் மிகத் தாராளமான மனதைப் பார்க்கின்றார். அது அவருக்குப் பல விடயங்களைத் திறக்கின்றன மட்டுமில்லாது, இந்தத் தனிமை பிரையனைப் பற்றியும், பிரையனுடான உறவைப் பற்றியும் ஆறுதலாக இருந்து யோசிக்கவும் வைக்கின்றது.


வ்வாறு தனிப்பட்ட உறவுச்சிக்கலுடன், எப்படி இந்த இணை அவர்களின் நண்பர் கொடுத்த 'மஞ்சள் கடித உறையை' எங்கே,யார் யாருக்குக் கொடுக்கின்றனர் என்பது இதில் சுவாரசியமாகச் சொல்லப்படுகின்றது. ஆட்டோவில் நெடும்பயணம் முடித்த கிம், கோவாவிற்குச் சென்று பிரையனோடு இணைந்துகொள்கின்றார். பின்னர் அவர்கள் இருவரும் நேபாளுக்குச் சென்று அன்னபூரணா சேர்க்கிட்டில் வாரக்கணக்கில் ஹைக்கிங் (hiking) செய்கின்றார்கள். அதனோடு அங்கே அவர்கள் செல்லும் புத்தமடலாயங்கள் பற்றி விபரிப்பும் அவர்கள் பெறும் அனுபவங்ககளும் மிகுந்த சுவாரசியமானவை.

அந்த கால்நடைப் பயணத்தை முடித்தபின், எழுந்தமானமாக முடிவெடுத்து இந்தோனேசியாவின் பாலிக்குப் போகின்றார்கள். முதலில் சுற்றுலாப் பயணிகள் நிறைந்திருக்கும் தீவிற்குச் சென்று அந்த அனுபவம் கசப்பாக மாறினாலும், பிறகு சுற்றுலாப்பயணிகள் குறைந்த இன்னொரு தீவில் தங்குகின்றனர். அது ஒரு அற்புதமான அனுபவமாக இவர்களுக்குள் விரிகின்றது. பாலிப் பயணத்தை முடித்தபின், வியட்னாமில் நூற்றுக்கணக்கான மைல்கள் சைக்கிளில் பயணிக்கின்றனர். ஒரு நாட்டை, நகரத்தைப் பார்க்க இரண்டு சில்லுகளும், மூன்று சில்லுகளுமே மிகச் சிறந்த சாதனங்கள் எனக் கிம் சொல்கின்றார்.

ஒருவகையில் கிம் இந்தியாவை முச்சக்கர வண்டியான ஆட்டோவாலும், நேபாளத்தை தனது இரண்டு கால்களாலும், வியட்நாமையை இரு சக்கரங்களுள்ள சைக்கிளாலும் சுற்றிப் பார்க்கின்றார்வியட்னாமிய சைக்கிள் பயணத்தை முடித்தபின் மெக்ஸிக்கோவில் சில மாதங்கள் தங்கவும், கிம்மின் பயணந் தொடங்கி மூன்று வருடங்கள் ஆகின்றன. இந்தப் பயணம் அவருக்கு பலவற்றைக் கற்றுக் கொடுத்ததோடு, வாழ்க்கையில் நழுவிப்போயிருக்கும் சந்தர்ப்பங்களையும், வேறொரு திசையில் இருந்து கொண்டு வந்து அவருக்குச் சேர்க்கின்றது.

இவர்களைப் போல இப்படி வருடக்கணக்கில் நீண்டகாலத்துக்குப் பயணம் செய்யவில்லை என்றாலும், சில மாதங்களாவது இப்படிப் பயணித்திருக்கின்றேன் என ஒருவகையில் சின்னச் சந்தோசம் எனக்குள் எட்டிப்பார்த்தது. என்றாவது ஒருகாலத்தில் backpacker ஆக உலகம் முழுவதும் அலைந்து திரிவதான ஒரு கனவை அவ்வளவு எளிதில் கைவிடத் தேவையில்லை என்கின்ற நம்பிக்கையையும் இந்த 'மஞ்சள் கடித உறை' தந்திருக்கிறது.
..........................................................

(நன்றி: அம்ருதா வைகாசி, 2019)

சுகுமாரனின் உரை

கனடாவில் நிகழ்ந்த 'பேயாய் உழலும் சிறுமனமே' வெளியீட்டு விழாவில் சுகுமாரனின் சிறப்புரை



நேசத்தை இசைத்த பறவை பற்றிய குறிப்புகள்

Tuesday, June 11, 2019

சிறகசைப்பு – 01

னியுறைந்து பாளங்களாய் மரங்களிலிருந்து விழுகின்ற பொழுதை வெறித்தபடி இருக்கின்றேன். காற்று ஊளையிட்டபடி சுழன்று சுழன்று அடித்தபடியிருக்க குளிர் கால்களின் நரம்புகளுக்குள்ளும் ஊடுருவுகிறது. உறைந்துகிடக்கும் பனித்திடலில் ஒரு மிருகத்தின் பாதங்கள் வளைந்து வளைந்து நீண்டபடி வந்துகொண்டேயிருக்கின்றன. ஏதோ ஒன்றிற்கான அழைப்பைப்போல நான் அவற்றை உருவகித்துக்கொள்கிறேன். இன்னமும் என் பின்வாசல் அறையை எட்டிவிடாத அந்தச் சுவடுகள், நானின்னும் வாழ்வதற்கான காலக்கடிகாரத்தின் விந்தை எண்ணிமங்களாக இருக்கவும்கூடும்.
உருவழித்து, உருவங்கள் அழித்து, சொற்களை இணைத்தும் பிளந்தும் எதைத் தேடிக் கொண்டிருக்கின்றேன். நாம் நடந்துகொண்டிருக்கும் இருண்ட பாதையின் முடிவில் சிறு ஒளி எஞ்சுமென எம்மை நாமே உந்தித் தள்ளிக்கொண்டிருப்பதை, கேலி செய்வதுபோலத்தான் காற்று ஊளையிட்டுக்கொண்டிருக்கின்றதோ? கனவுகளுக்குள் எப்போதும் சுழன்றபடியிருக்கும் ஊதாநிறச் சுவாலைகள், அதன் உச்சியில் தலைவிரித்தபடி நாக்குச் சுழன்றியபடியிருக்கும் காளியின் உக்கிர கண்களைத் தாண்டிப் போகும்போது எஞ்சுவது எதுவாக இருக்கும்?
மரம்பட்டது நன்குதெரிந்தும், அடிவேரில் நீரூறிஞ்சி பச்சையம் விரிக்குமெனும் கானல் நம்பிக்கையைப்போல, எதன் வருகையிற்காய் நான் காத்திருக்கின்றேன். கருணையின் கடைசித் துளியை எதன்பொருட்டோ அல்லது எவர் பொருட்டோ கைவிடவேண்டியிருப்பது எவ்வளவு துயரமானது என்பதை நீங்கள் அறிதல் கூடுமோ?
னிப்பாளத்தின் தெறிப்புடன், புத்தரின் ஆழ்கடல் அமைதியுடன் நீ வந்துகொண்டிருந்தபோது, நான் எவருக்காகவோ, மீளவரக்கூடுமென கடைசிவரை பதுக்கி வைத்த பச்சையமும், கருணையின் பெருந்துளியும் விடைபெற்றுக்கொண்டுபோவதைப் பார்த்தேன். எவரெவராலோ எதன் எதனாலோ முதுகில் செருகப்பட்ட வன்மத்தின் ஆணிகள் துருப்பிடித்து என்னிலிருந்து உதிர்ந்து போகக்கண்டேன். கண்களுக்கு தென்படாத பிசாசுகளோடும், பிடரியின் பின் குசுகுசுக்கும் குரல்களோடும் போரிட்டு நான் தோற்றுக்கொண்டிருந்த எண்ணற்ற களங்கள் சூரிய ஒளியில் கரைந்துகொண்டிருந்தன.
இப்படி ஒருவரால் சிரிக்கவைக்கமுடியுமாவென, இவ்வளவு ஒருவரால் நேசிக்கமுடியுமாவென, இத்தனைக்கும் அப்பால் இன்னுமின்னும் பெருங்காதலின் பைத்தியக்காரத்திற்குள் நுழையமுடியுமாவென வியக்கவைத்துக்கொண்டிருக்கும் உன்னை ஒரு சொட்டு விசம்போல காயப்படுத்தும் திமிரின் கொடுக்குகள் என் வசத்தும் உரித்து. நீலம் பாரித்த கடலில் நீ நீந்திவந்து என்னை அரவணைக்கும்போதெல்லாம் இந்தத் திமிரின் கொடுக்குகள் என் உடலின் தசைகளை ஊடறுத்துச் சென்று எனக்கான மன்னிப்புக்களைக் கோரக்கூடாதோவென ஏங்கி நிற்கின்றேன்.
எல்லாவற்றையும் கைவிடவே விரும்புகின்றேன்; ஆனால் எதனையும் கைவிடாத துயரங்களுடன் தினமும் பாடுகளைச் சுமந்துகொண்டிருப்பவனாக அலைந்தபடியிருக்கின்றேன்.
இந்தப்பனிக்காலம் கடந்துபோகும்வரையாவது என் கொடுக்குகளை ஓர் ஓரத்தில் விட்டுவிட்டு அரவணைப்பின் கதகதப்பிற்குள் பதுங்கிக்கொள்ள விரும்புகிறேன். எண்ணற்ற வருடங்களின்பின் எதன்பொருட்டோ/எவர் பொருட்டோ தொலைத்துவிட்ட பேரமைதியை உன் மூச்சுக்காற்றில் நான் கண்டுகொள்கின்றேன்.


சிறகசைப்பு - 02

நான் எடுத்த, உனது நெற்றியில் திலகமிட்ட புகைப்படத்தைப் பார்க்கின்றேன். எவ்வாறோ எப்போதோ நிகழ்பவைதானே அதிசயங்கள் எனப்படுகின்றன. அவ்வாறு ஒரு அரிய புகைப்படம் அது. அவ்வளவு அமைதி தவழும் முகம் உனது.  சடங்குகள் சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாதபோதும் அவற்றிலிருக்கும் aesthetic எப்பவும் என்னைக் கவர்ந்தபடியிருக்கும். இவற்றை உதறித்தள்ளிய மிகச்சிக்கலான நவீன மனிதன் என என்னை நினைத்துக்கொண்டாலும் இவ்வாறான அழகியலில் மனம் அவ்வப்போது திளைத்தும்விடுகின்றது.

சிலவேளைகளில் இந்தக் கொண்டாட்டங்கள் என்பதே நமது நாளாந்த விடயங்களின் அலுப்பிலிருந்து நம்மை மீட்கத்தான் ஆதிகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவையாக இருந்திருக்கலாம். நாம்தான் பிறகு சடங்கு சம்பிரதாயங்கள் என இறுக்கி, சக மனிதர்களைப் பிரிக்கும் இறுக்கமான விடயங்களாக மாற்றிவிட்டோம் போலும். தன் விருப்பின் நிமித்தம், ஒருவர் தன்னை அழகுபடுத்தும்போது அவருக்கு ஒரு விகசிப்பு வந்துவிடுகின்றது. அந்த ஒளி அருகில் இருப்பவர்களையும் பற்றிக்கொள்ள அஃதொரு இனிதான அனுபவமாய் ஆகிவிடுகின்றது. இப்போது நான் உன் அழகில் இலயித்து மனம் விரிந்து உணர்வுகள் கிளர்ந்து இப்படி எழுதுவதைப்போல.

நீ எவ்வளவு அழகு என இன்னமும் எவரும் உணர்த்தாத அளவிற்கு நீ பேரழகி. மிக நெருங்கி நின்று பார்த்தால் ஓவியங்கள் தம் அழகைக் காண்பிப்பதில்லை என்பதுபோல உன்னை விட்டு விலகி நிற்கும்போதே உனது வனப்பு இன்னும் விளங்குகின்றது. அதைவிட இந்த எழிலுக்குள் புதைந்துகிடக்கும் அன்பு பேரண்டமாய் விரிவதையும் கண்டிருக்கின்றேன். நேசம் எல்லோருக்குள்ளும் நிறைய இருந்தாலும், அரிதாகவே சிலரால்மட்டுமே அதை வெளிப்படுத்த முடிகின்றது. நீ அவ்வாறான ஒருத்தி. இந்த அன்பு சிலவேளைகளில் மூச்சுத்திணற வைத்தாலும், அதன் கதகதப்பில் நான் இதுவரை நுழைந்துவிடா உலகைக் காண்பதையும் மறைத்துவிடமுடியாது.

ருஞ்சாம்பல் வானத்தைப் பார்த்தபடி உன்னோடு பயணித்துக் கொண்டிருக்கின்றேன். இலையுதிர்காலத்திற்குரிய melancholy உணர்வுகள் உள்ளத்தில் உருகி வழிகின்றன.  வழமையாய் வரும் இந்தப் பருவத்திற்குரிய மன அழுத்தமாய் அது இல்லை. சங்ககாலத்தில் காதலன் தன்னருகில் இருக்கின்றான் என உணர்கின்ற மகிழ்ச்சியும் அதேசமயத்தில் அவன் தன்னைவிட்டு இன்னும் கொஞ்ச நேரத்தில் பிரிந்துபோய்விடுவானே எனக் கவலையும் இணைந்த, பெண்னொருத்தி கொள்ளும் உணர்ச்சிக்குவியல்தானோ இது.

மலைகள் நிரம்பிய நகரம். அதே நீர்வீழ்ச்சி. சில வருடங்களின் முன் மனம் சோர இருட்டறையிலிருந்து மீட்டெடுத்து நண்பன் கூட்டிச்சென்ற இடம். ஒரு கணமும் நின்றுவிடாது கொட்டிக்கொண்டிருந்த நீரைப்போலத்தான் என் துயரமும் இனியொருபொழுதும் நிற்காதோ என உளம் வெம்பிய இலையுதிர்காலம் அது. எப்போதும் உணர்ச்சிகள் உருண்டுபிரண்டு அடம்பிடித்தாலும், அவற்றை மாற்றி இதமாக்கும் இயற்கை கூட கைவிட்டதொரு பருவம்.  முகத்தில் தெறித்த சாரல் கூட ஊசிகளைப் போல குத்துவதான பாவனையில் நின்றுகொண்டிருக்கின்றேன்.

நாம் யார்? நாடகம் ஒன்றில் நமக்குத் தரப்பட்ட கதாபாத்திரமொன்றில் நடித்துக்கொண்டிருப்பவர்கள்தானா? திரை விலகும்போதும் திரை மூடியபின்னும் ஏதோதோ உணர்ச்சிகள் உருட்டப்பட்டுக்கொண்டிருக்கும் நாம் எதை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றோம். புதிய புதிய நாடகங்கள். புதிய புதிய கதாபாத்திரங்கள்.

இப்போது முகத்தில்படும் சாரல் இனிதாகத்தோன்றுகின்றது. ஊசிக் கூர்மை போய், மயிலிறகின் வருடல் போலத்தான் தோன்றுகின்றது. இந்த நீர்வீழ்ச்சி இரவும் பகலுமென ஒரேமாதிரியாகத்தான் வீழ்ந்துகொண்டிருக்கின்றது. நான் தான் எனக்கிருக்கும் மனோநிலைக்கு ஏற்ப மாற்றி மாற்றி உணர்ந்துகொண்டிருக்கின்றேன் போலும். இதமோ, வலியோ இல்லாத எந்தவொரு உணர்நிலைக்கும் அப்பாற்பட்ட ஒரு எல்லைக்குப்போவதற்குத்தான் இந்தளவு பிரயத்தனப்பட்டிருக்கின்றேனோ தெரியாது.

இலைகள் மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பாக மாறிக்கொண்டிருக்கின்றன. இன்னும் சில நாட்களில் இலைகள் அனைத்தும் உதிரும். பிறகு பச்சையாக துளிர்க்கும். இதுதான் இயற்கையெனில் இப்படித்தான் இல்லாதவற்றை யோசித்து யோசித்துக் குழம்புவதுதான் என் இயல்பும் போலும்,

இப்போது நீ இருக்கின்றாய். அணைத்துக்கொள்கின்றேன்.
………………………………………………………………….

(நன்றி: 'அம்ருதா' ‍ ஆனி 2019, ஓவியங்கள்: ரெனே & கிளிம்ட் )